Wednesday, December 28, 2011

நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 12]
(பன்னிரண்டாம் பாகம்)


யூதம், கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மும்மதங்களும் ஒன்றுக்கொண்டு தொடர்பு கொண்டவை. ஒரே மாதிரியான கதைகள், மும்மதங்களுக்கு உரிய புனித நூல்களில் எழுதப் பட்டுள்ளன. ஆதி மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து, தீர்க்கதரிசிகளின் காலம் வரையில் எழுதப்பட்டுள்ள கதைகள், ஒரே இன மக்களுக்குரியவை, என்பது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றன. அதனால் தான், யூதர்களைப் பற்றிய தவறான கணிப்புகள், இன்றைய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. யூதர்கள் கூட, பாபிலோனியாவில் வாழ்ந்த காலத்தில் அந்தக் கதைகளை அறிந்து கொண்டதாக, அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்ட பாபிலோனிய களிமண் தட்டுகளில், பாபிலோனியரின் புராணக் கதைகள் எழுதப் பட்டுள்ளன. அவை, பைபிள் கதைகளை பெரிதும் ஒத்துள்ளன. பெயர்கள் மட்டுமே வித்தியாசம். பாபிலோனிய நாகரீகம், பைபிள் காலத்திற்கு முந்தியது. ஆகவே, விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ள கதைகள், யூதரல்லாத வேற்றினத்தவரின் கதைகளாகவும் இருக்க வாய்ப்புண்டு. ஆதி கால கிறிஸ்தவர்கள் பற்றிய, "குகை மனிதர்களின் கதை", பண்டைய கால இலங்கையுடன் தொடர்புடையதா?

கி.பி. 250 ம் ஆண்டளவில், ரோம ஆட்சியாளர்களால் கிறிஸ்தவர்கள் ஒடுக்கப் பட்ட காலத்தில், அந்தக் கதை நடந்ததாக கூறப் படுகின்றது. எபெசுஸ் என்ற நகரத்தில் வாழ்ந்த ஏழு கிறிஸ்தவ இளைஞர்கள், ரோம அதிகாரிகளின் கைக்குள் அகப்படாமல், ஒரு குகைக்குள் மறைந்து வாழ்ந்தனர். சுமார் இருநூறு வருடங்களாக, குகைக்குள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். கிறிஸ்தவ மதம் ஆட்சிபீடமேறிய பின்னர் தான், கண் விழிந்து எழுந்து வந்து வெளியுலகைத் தரிசித்தனர்.

ஆதிக் கிறிஸ்தவர்களின் மதப்பற்றுக்கும், ஓரிறைக் கொள்கைக்கும் சான்றாக கூறப்படும் இந்தக் கதை, வேறெங்கேயோ நடந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், கிறிஸ்தவத்திற்கு முந்திய மக்கள் மத்தியிலும் அது போன்ற கதைகள் நிலவின. பைபிளுக்கு பிந்திய, இஸ்லாமியரின் குர் ஆனில், இந்தக் கதை விரிவாக எழுதப்பட்டுள்ளது. நிச்சயமாக, அந்தக் கதையில் வருபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆனால், ஓரிறைக் கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள். "ஓரிறைக் கொள்கையில் பற்றுக் கொண்ட மனிதர்கள் சிலர், ஆட்சியாளர்களின் மத அடக்குமுறை காரணமாக நகரத்தை விட்டோடி, குகை ஒன்றினுள் தஞ்சம் புகுந்தனர். சுமார் 300 வருடங்கள் அங்கேயே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். அவர்களை சூழவுள்ள பகுதிகள் யாவும், ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பிற்பாடு, விழிப்படைந்தனர்." (Surat Al -Kahf, 9 – 26)

திருக்குரானில் வரும் Al -Kahf (குகை) என்ற அத்தியாயம், இலங்கை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இருப்பினும், சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அந்தக் குகை இலங்கையில் இருப்பதாக நம்புகின்றனர். இதே Al - Khaf அத்தியாயத்தில் வரும், இன்னொரு கதையான Al - Khidir என்ற ஞானி, கதிர்காமத்துடன் தொடர்பு படுத்திப் பேசப் படுகின்றார். மேற்கில் இருந்து கிழக்கே பயணம் செய்த, "அல்- கிதிர்" என்ற ஞானியினால் தான், "கதிர்காமம்" என்ற பெயர் வந்ததாக, இலங்கை முஸ்லிம்கள் நம்புகின்றனர். கதிர்காமத்தில் இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றுண்டு. ஒவ்வொரு வருடமும் கதிர்காமத் திருவிழாவின் கொடியேற்றம், பள்ளிவாசலில் நடைபெறும்! மத அடிப்படைவாத முஸ்லிம்கள் எதிர்த்தாலும், சாதாரண முஸ்லிம் மக்கள் இன்றைக்கும் கதிர்காமம் சென்று வழிபடுகின்றனர். ஆகவே, இஸ்லாமுக்கு முந்திய புராதன கால நம்பிக்கை ஒன்றை, இலங்கை முஸ்லிம்கள் பாதுகாத்து வைத்திருக்கலாம் என்றே நம்பப் படுகின்றது. குர் ஆனில் வரும் அல்- கிதிர் என்ற தீர்க்கதரிசிக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் என்ன தொடர்பு, என்று வேறொரு இடத்தில் பார்ப்போம்.

தம்புள்ள, இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் A9 பாதையில் இருக்கிறது. தம்புள்ளையில் ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், இன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளன. எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அந்தக் குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கி.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து, அதாவது பௌத்த மதம் பரவிய காலத்தில் இருந்து தான், குகையின் நவீன கால வரலாறு ஆரம்பிக்கின்றது. இன்றைக்கு அந்த குகைகளுக்குள் புத்தர் சிலைகளும், விஷ்ணு போன்ற இந்துக் கடவுளரின் சிலைகளும் மட்டுமே காணப்படுகின்றன.

இவை எல்லாம் பிற்காலத்தில், பௌத்த மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டவை. தம்புள்ள குகைகளை (அது இன்று குகைக் கோயில் என்று அழைக்கப் படுகின்றது.) யுனெஸ்கோ பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது. ஆசியக் கண்டத்திலேயே, இது போன்ற ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த விசாலமான குகைகள் மிக அரிது என்று கூறப் படுகின்றது. உண்மையில் அது ஒரு குகை அல்ல. குறைந்தது ஐந்து குகைகள் ஒன்றுக்கொன்று தொடர்பாக உள்ளன. இந்தக் குகைகளை இணைக்கும் சுரங்கப் பாதைகள் உள்ளன. ஒரு காலத்தில், அந்தக் குகைகள் எல்லாம் ஒரு நகரம் போன்று உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். அதாவது மனிதர்கள் வாழ்ந்த பாதாள உலகம்!

அந்த பாதாள உலகத்தில் யார் வாழ்ந்திருப்பார்கள்? இன்றைக்கு, அந்தக் குகைகளின் உள்ளே, பௌத்த மத சின்னங்கள் காணப்பட்டாலும், அவை அந்தக் குகைக்கு உரியன அல்ல. இவை எல்லாம் ஆதிக்கத்தின் குறியீடுகள். பண்டைய இலங்கை மக்களின் மத, கலாச்சார அடையாளங்கள் மீதான, வேற்று மத ஆக்கிரமிப்பு. பூர்வீக இலங்கையரின் மத நம்பிக்கைகள், இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. சில கலாச்சாரக் கூறுகள் மட்டுமே, புதிய மதத்துடன் ஒட்டிக் கொண்டுள்ளன. பௌத்த மதம் மட்டுமல்ல, இந்து மதமும் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதியான மதங்கள் தான். இலங்கையின் பூர்வ குடிகள் சிங்களவருமல்ல, தமிழருமல்ல. இவ்விரண்டு இனங்களும் தோன்றுவதற்கு முன்னரே, நாகர்கள், இயக்கர்கள் என்ற இரண்டு இனங்கள், இலங்கையை தமது தாயகமாகக் கொண்டிருந்தனர். (இயக்கர்களும், நாகர்களும், சிங்களவர், தமிழர் இரண்டு இனங்களிலும் கலந்துள்ளனர்.) அந்த மக்கள் பேசிய மொழிக்குப் பெயர் எலு. அது கூட அன்னியர்கள் இட்ட பெயர் தான். எலு என்ற மூலச் சொல்லில் இருந்து தான், ஈழம், சிங்களம் (ஹெல) ஆகிய சொற்கள் பிறந்தன.

வட இலங்கையில், நாகநாடு இருந்ததாக மணிமேகலை எனும் தமிழ்க் காப்பியம் கூறுகின்றது. நாகதீபத்தில் (இன்று: நயினா தீவு) இருந்த ஆலயம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், நாக தம்பிரான் கோயில்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் திருவிழா நடக்கும் பிரபலமான கோயில்கள் அவை. "இந்து மதத்தில் இல்லாத, இந்து மதம் அங்கீகரிக்காத," நாக வழிபாடு, நாகர்கள் என்ற இனத்திற்கு உரியது.

தற்கால நாக இனத்தவர்கள், இன்றைக்கு வட கிழக்கு இந்திய மாநிலங்களில் மட்டுமே வாழ்கின்றனர். ஆனால், ஒரு காலத்தில், வங்காளம், ஒரிசா, தமிழகம், போன்ற கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பரவி வாழ்ந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, இலங்கைத் தீவில் நாகர்களின் குடியேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய உப கண்டத்தை விட, சீனாவின் தென் பகுதி, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் நாகர் இன மக்கள் வாழ்ந்துள்ளனர். நாகர்கள் தோற்றத்தில், தாய்லாந்து, மலேய மக்களுக்கு நெருக்கமானவர்கள். சமூக- விஞ்ஞானிகள், நாகர்களை தீபெத்தோ- இந்திய இனம் என்று வகைப் படுத்தி உள்ளனர்.

கிறிஸ்தவர்களாலும், முஸ்லிம்களாலும் நம்பப் படும், "ஓரிறைக் கொள்கை மீது பற்றுக் கொண்ட குகை மனிதர்கள்" பற்றிய கதை, நாகர் இன மக்களின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றதா? இந்துப் புராணங்களிலும், நாகர்கள் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. விஷ்ணு சயனித்திருக்கும் ஆதி சேஷன், பாற்கடலைக் கடைய பயன்பட்ட வாசுகி போன்ற பிரபலமான நாகங்களைப் பற்றிய கதைகள் புராணங்களில் வருகின்றன. புத்தர் தியானம் செய்யும் பொழுது குடையாக விரிந்து பாதுகாப்பளித்த மூச்சலிந்தா நாகம், பௌத்த மதத்தில் பிரசித்தமானது.

பல கோயில்களில்,விகாரைகளில் நாக பாம்புப் படுக்கையின் மேல் படுத்திருக்கும் புத்தர் சிலையும், விஷ்ணு சிலையும் ஒரே மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளன. இலங்கையின் தென் முனையான, தேவேந்திர முனையில் ஒரு விஷ்ணு கோயில் இருந்தது. அந்த விஷ்ணு கோயில் ஆதி காலத்தில் நாகர்களின் கோயிலாக இருந்தது. பிற்கால இந்துக்கள் அதனை விஷ்ணு கோயிலாக மாற்றி விட்டனர். நீண்ட காலமாக, தமிழ் வணிகர்களால் பராமரிக்கப் பட்டு வந்தது. தேவேந்திர முனை விஷ்ணு கோயிலை, கத்தோலிக்க மத அடிப்படைவாத போர்த்துக்கேயர்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அதன் மூலம், இலங்கையின் தென் முனையில், தமிழர்கள் வாழ்ந்த தடயமும் அழிந்து விட்டது. தென் மாகாணத்தில், ஆயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வந்த தமிழ்க் குடும்பங்கள், இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி விட்டன.

பௌத்த மதத்தைப் பொறுத்த வரையில், புத்தரையும், வேறெவரையும் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. (புத்தரே தன்னை கடவுளாக வழிபடுமாறு கூறவில்லை என்பது வேறு விடயம்.) இருப்பினும், இலங்கையில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்பிருந்த மக்களின் மத நம்பிக்கைகளையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. அது இந்து மத நம்பிக்கையாக இருக்கலாம், அல்லது நாக மத நம்பிக்கையாக இருக்கலாம். அவர்களிற்கு விருப்பமான தெய்வங்களையும் வழிபட அனுமதித்தது. அந்த வகையில், நாகர்களின் கடவுள், விகாரைகளை காவல் காக்கும் தெய்வமாக மாற்றப் பட்டார்.

இன்றைக்கும், இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்னால், நாக தேவதை சிற்பங்கள் காணப் படுகின்றன. இங்கே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். பௌத்த மதம், இந்து மத தெய்வங்களை வழிபடும் சுதந்திரத்தைக் கொடுத்தாலும், ஓரிறைக் கொள்கையையும் வலியுறுத்தி வருகின்றது. இன்றைக்கும், மத அடிப்படைவாத பௌத்தர்கள், புத்தரைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை. பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் வாழ்ந்த நாகர்கள், இன்று பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்களவர்களாக மாறி விட்டனர். பௌத்த மதத்தினுள் முழுமையாக ஒன்று கலப்பதற்கு, நாகர்களின் ஓரிறைக் கொள்கை காரணமாக அமைந்திருக்குமா?

பொதுவாகவே, பல தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கும் இந்துக்கள் வாழ்ந்த பூமியில், ஒரே இறைவனை மட்டும் வழிபடும் மதத்தை பின்பற்றும் மக்கள் வாழ்ந்தனரா? இந்தியாவில், நாகலாந்து மாநிலத்தில் சேமே இன நாகர்கள் என்றொரு பிரிவுண்டு. சேமே இன நாகர்கள், பல தெய்வ வழிபாட்டைக் கைவிட்டு விட்டு, காலப்போக்கில் தாமாகவே ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். வட-கிழக்கு இந்தியாவில் வாழ்ந்த Bnei Menashe பழங்குடி இன மக்களை, "தொலைந்து போன யூத இனக் குடிகளில் ஒன்று" என யூதர்கள் நம்புகின்றனர். இன்று அந்த மக்கள், இஸ்ரேலில் குடியேறி முழுமையான யூதர்களாக மாறி விட்டனர். இந்த தகவலும், நாகர்களின் ஓரிறைக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கின்றது.

"ஓரிறைக் கோட்பாட்டை பின்பற்றிய நாகர்கள்", எதற்காக குகைகளில் வசித்தார்கள்? தொன்று தொட்டு நிலவி வரும் மூட நம்பிக்கை காரணமாகவே, நாகர்கள் குகை வாழ்வை தேர்ந்தெடுத்தனர் என்று, நாகர்கள் பற்றிய புராணக் கதைகள் கூறுகின்றன. அதாவது, வேட்டையாடும் கருடனிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்காக, நாகங்கள் பாதாள லோகத்தில் வாழ்வதாக ஐதீகம் ஒன்றுண்டு. கருடனும், பாம்பும் ஜென்ம விரோதிகள் என்பது எமக்கெல்லாம் தெரிந்தது தான். ஆனால், நாங்கள் இங்கே விலங்கினங்களைப் பற்றிப் பேசவில்லை. நாகர்கள் என்பது ஒரு மனித இனத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் பெயர். அப்படியானால், கருடன் என்பதும் இன்னொரு மனித இனத்தைக் குறிக்கும் பெயரா?

நாகர் இனம் போன்று, கருட இனத்தவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்களா? ஆதி காலத்தில், கருட இனத்தவருக்கும், நாக இனத்தவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றிருக்குமா? யுத்தத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கும், மறைந்திருந்து தாக்குவதற்கும் வசதியாக, நாகர்கள் குகைகளில் வசித்திருப்பார்களா? ஆன்னிய ஆக்கிரமிப்பாளர்களினால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள், காடுகளிலும், மலைகளிலும் புகலிடம் தேடுவது சரித்திர காலம் தொட்டு நடந்து வரும் நிகழ்வு ஆகும். இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த நாகர் இன மக்களை அழிக்கத் துடித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அவர்களுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு? யார் அந்தக் கருடர்கள்? அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?

(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு :
Al Kahf
Seven Sleepers
Dambulla cave temple
Zeme Nagas, from Polytheism to Monotheism
Bnei Menasche
Qur'an, Surat Al- Kahf

-----------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்

14 comments:

EKSAAR said...

திருக்குர் ஆனில் உள்ள குகைவாசிகள் பற்றிய அத்தியாயத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/al-kahaf/
{குகைவாசிகள் 9 - 26 வசனங்கள்
ஹிழ்ர் (அலை) பற்றிய விடயங்கள்60 - 82 வசனங்கள்}

வாசகர்களுக்கு மேலதிக தகவல்களுக்காக
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/271/
http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/savukasal_avanam/

Mohamed Faaique said...

7 குகைவாசிகளின் சம்பவம் தெளிவாக இருக்கிறதே!!!.. அந்த குகை, பஹ்ரைனில் இன்னும் இருக்கிறது. அவர்களின் எலும்பு, மற்றும் அவர்களுடன் சென்ற நாயின் எலும்பு கூட இன்னும் அந்தக் குகையிலேயே இருக்கிறது. யூ டியூபில் பார்க்கலாம்.

Mohamed Faaique said...

Sorry. Thats not Bahrain. It's Jordan

தர்ஷன் said...

தொடர்ந்து தொடர்கிறேன், உங்கள் சமகால அரசியல் நிகழ்வுகள் பற்றிய ஆக்கங்கள் போல் அல்லாமல் இது தொடர்பில் மேலதிக தகவல்களை நெட்டில் தேடிப் பெறுவது சிரமமாக இருக்கிறது. இப்படி இருக்குமா என ஆச்சரியமும் சந்தேகமும் ஒரு சேர வருகிறது.
ம்ம் அப்புறம் தம்புள்ள பொலன்னறுவை மாவட்டம் அல்ல,மாத்தளை மாவட்டம். A9 பாதையில் மாத்தளையிலிருந்து 44வது கிலோமீற்றரில் இருக்கிறது.

Kalaiyarasan said...

நன்றி, தர்ஷன். தவறை திருத்திக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரைத் தொடருடன் சம்பந்தப்பட்ட தகவல்கள் நெட்டில் கிடைக்கின்றன. பின்னர் ஒரு காலத்தில் நூல் வடிவில் வரும் பொழுது, முழுமையான உசாத்துணைப் பட்டியல் ஒன்றை தயாரிக்கவிருக்கிறேன்.

அரபுத்தமிழன் said...

குகைவாசிகளுடைய மற்றும் அவர்களுடன் சென்ற நாயின் எலும்புகளும்
ஜோர்டனில் இருக்கும் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டு வீடியோவில்
காட்டப்பட்டதே பார்த்தீர்களா. குர்ஆனில் வரும் குகை வாசிகள் நீங்கள்
சொல்லும் அளவுக்குப் பழையவர்கள் இல்லை என்பதே எனது அபிப்ராயம்.
(அவர்களின் குகை மூடப்பட்டு குகைவாசலில் கல்வெட்டு ஒன்று
எழுதப்பட்டதாகவும் அறியப்படுகிறது.)

நீங்கள் சொல்லும் குகைவாசிகள் 'சிலை வணங்கிகள்'.

iRFAN said...

"தாயகம்" இப்போதுதான் சூடுபிடிக்கிறது. குகைவாசிகளின் வரலாறு அல்லது அவர்கள் வாழ்ந்த பிரதேசம் ஜோர்தான் என்றுதான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இலங்கை என்பது அறிந்திராத விடயம். அத்தியாயம் குகை : வசனம் 9 குகைவாசிகளுடன் சாசனத்தையுடையோரும் வாழ்ந்ததாக சொல்கிறது. "சாவுக்கடல் சாசனச்சுருட்கள்" அல்லது Dead sea scrolls ஜோர்தானையொட்டிய பிரதேசத்திலேயே கண்டுபிடித்ததாக அறியமுடிகிறது. "எலு" சம்பந்தமாகவும் எழுதுங்கள். இரு விடயங்கள் மிகுந்த ஆச்சரியத்தையும் புன்னகையையும் வரவழைக்கின்றன. ஒன்று அரேபியாவில் வாழ்ந்த முஹம்மத்* என்ற கல்வியறிவு இல்லாத, இலங்கை எத்திசையில் இருக்கிறது என்றே தெரியாத மனிதர் குகைவாசிகளை பற்றி குறிப்பிட்டிருப்பது.

இன்னொன்று கலையரசன் என்ற மாற்று சிந்தனைவாதி அல்லது மாற்று ஊடகவியலாளன் மத நூல்களை உசாத்துணையாக முன்வைப்பது.

கண்டிப்பாக இத்தொடரை புத்தகமாக வெளியிடுங்கள் வாழ்த்துக்கள்.

*அவர்கள் மீது இறைவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

சார்வாகன் said...

இது குறித்து இன்னும் தகவல்கள் இங்கு பாருங்கள்.

Islamic Kataragama: The Timeless Shrine

http://kataragama.org/islamic.htm


http://kataragama.org/news/islamic-kataragama-letters.htm

Kalaiyarasan said...

நண்பர்களுக்கு,

குர் ஆனில் சொல்லப்படும் குகை வாசிகள், ஜோர்டானில் இருந்ததை நான் மறுக்கவில்லை. இந்தக் கட்டுரையின் மையக் கரு அதுவல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். இலங்கை பற்றி குர் ஆன் குறிப்பிடவில்லை என்பதை கட்டுரையில் தெளிவாக எழுதி இருக்கிறேன். எபெசுஸ் நகரத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ குகை வாசிகள் பற்றியும் எழுதி இருக்கிறேன். இலங்கையில் வாழ்ந்த குகைவாசிகள் (அவர்கள் சிலை வணங்கிகளாக இருக்கலாம்) பற்றி எழுதும் பொழுது, பிற குகை வாசிகள் பற்றிய கதைகளையும் நினைவு படுத்தி உள்ளேன். அவ்வளவு தான். நான் எழுதியதை மீண்டும் ஒரு தடவை வாசித்துப் பாருங்கள்.

Kalaiyarasan said...

குர் ஆனில் வரும் குகை வாசிகளுக்கும், எனது கட்டுரையின் மையக் கருவான தம்புள்ள குகை வாசிகளுக்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம். நான் சொல்ல வரும் செய்தி வேறு. பைபிள், குர் ஆன் எழுதப்படுவதற்கு முந்திய காலத்தில் வேறெங்காவது குகை வாசிகள் வாழ்ந்துள்ளனரா? அதற்கான சாத்தியம் உண்டா? கட்டுரையின் ஆரம்பத்திலேயே யூதர்களின் கதைகளுக்கும், பாபிலோனிய கதைகளுக்கும் இடையிலான ஒற்றுமையை குறிப்பிட்டுள்ளேன்.

பாஹிம் said...

குகைவாசிகள் பற்றிக் குர்ஆனிற் கூறப்பட்டிருந்தாலும் அவர்கள் வாழ்ந்த இடம், காலம், அவர்களது எண்ணிக்கை என்பன பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. சிலர் சில எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டாலும் அவற்றைக் குறித்துச் சரியாக அறிந்தவர் எவருமிலர். அவ்வாறே, அவர்கள் வாழ்ந்த இடமாக யோர்தான் நாட்டிலுள்ள ஒரு குகையைப் பிற்கால ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தி இருந்தாலும் அதுதானென்று யாராலும் கூற முடியாது. எனினும், அவர்கள் சிலை வணக்கம் புரியாதோர் என்பதைத் திருக்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது. நீங்கள் கூறும் நாகர்களிற் சிலரேனும் சிலை வணக்கம் செய்யாதோரும் ஓரிறைக் கொள்கையைக் கொண்டோராகவும் இருந்திருக்கலாம். அதற்குரிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. மேலும், கிள்ரு அவர்கள் மாஉல் ஹயாத் என்னும் உயிர் நீரைப் பருகிய இடம் இன்றைய உஸ்பெகிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தச் சுனை நீரினாலேயே ஐயூப் நபி, அதாவது பைபிளிற் குறிப்பிடப்படும் யோபு என்னும் தீர்க்கதரிசி நோய் நீங்கிக் குணமடைந்தார் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், கிள்ரு அவர்கள் மகா அலெக்சாந்தரின் படைத் தளபதியோ அல்லது ஆலோசகரோ ஆவார் என்றும் கூறப்படுகிறது. இதே கிள்ரு அவர்களிடம் தான் அறிவைக் கற்றுக்கொள்ளுமாறு மூஸா நபி, அதாவது பைபிள் குறிப்பிடும் மோசே என்னும் தீர்க்கதரிசியை அல்லாஹ் ஏவினான். அவருடன் அவரது சீடரான இல்யாஸ் நபி, அதாவது பைபிள் குறிப்பிடும் எலியா அவர்களும் கிள்ரு அவர்களிடம் சென்றனர். எது எப்படியிருப்பினும் அவரது இலங்கைத் தொடர்புகள் பற்றிக் கூறுவதற்குச் சரியான ஆதாரம் இல்லை. கதிர்காமத்தில் உள்ள பள்ளிவாசலில் அவரது பெயரைக் கூறிக்கொண்டு சிலர் பொய்ப் பிரச்சாரம் நடத்துகின்றனர்.

மேலும், உங்களது தொடர் மிக நன்றாக இருக்கிறது. இதற்கு இன்னும் வலுச் சேர்க்கத் தக்க ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. பாராட்டுக்கள்.

பாஹிம் said...

யூதர்களின் கதைகளிற் சிலவற்றுக்கும் பபிலோனியாவின் ஃககாமனீதுப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவிய கதைகளுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன. அவ்வாறே, 124000 தீர்க்கதரிசிகள் காலத்துக்குக் காலம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்ததாக இஸ்லாம் கூறுகிறது. அந்நிலையில் ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நின்ற (சிலை வணங்கிகளல்லாத) மக்கள் கூட்டங்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கலாம். மேலும், எந்தவொரு சமுதாயத்தினரும் அச்சமுதாயத்தினருக்கு தீங்குகள் பற்றி எச்சரிக்கை செய்வோரை அனுப்பாத வரையில் அழிக்கப்படவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இலங்கையிலும் சிலை வணக்கம் புரியாது ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நிலைத்திருந்த சமுதாயத்தினர் வாழ்ந்திருக்கலாம்.

கட்டுரையில் ஒரு தவறு நேர்ந்துள்ளது. அஃதாவது, பௌத்தர்கள் சித்தார்த்த குமாரரைக் கடவுளாகக் கருதி வழிபடுவதில்லை. நானும் எத்தனையோ பௌத்தத் துறவிகளிடம் உரையாடியிருக்கிறேன். அவர்கள் அவரை ஒரு வழிகாட்டியாகவே கருதுகின்றனர். பௌத்தர்களிடம் கடவுட் கொள்கை என்ற எதுவும் இல்லை.

ஆதித்த கரிகாலன் said...

எல்லாளன் என்னும் பெயர்கூட எலு + ஆளன் என்பதிலிருந்து வந்ததாக ஒரு கருத்துண்டு; மேலும் சிங்களத்திலும் எலாரா என்றே அழைப்பார்கள்;

elohim said...

எங்கே இந்து சமயம் நாக வழிபாட்டை எதிர்க்கிறது ?