Sunday, September 25, 2011

அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஏழு )

அரபுலகில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, இலங்கையில் 1953 ம் ஆண்டு ஏற்பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இலங்கையில் நடந்த முதலாவது வர்க்கப் போராட்டம், இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டது. கொழும்பு, காலி முகத் திடலில், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. சுமார் இரண்டு லட்சம் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில், இடதுசாரிக் கட்சிகள் தலைமை தாங்கின. அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, எதிர்கட்சிகள் பல்லின மக்களை திரட்டி இருந்தனர்.

அதே நேரத்தில் தான், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில், பண்டாரநாயக்கவும் அவரது விசுவாசிகளும் பிரிந்து சென்று, தனிக்கட்சி கண்டிருந்தனர். பண்டாரநாயக்க ஸ்தாபித்த சுதந்திரக் கட்சியும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது. புதிய கட்சியினர், ஆரம்பத்தில் தம்மை, ஐரோப்பிய சமூக-ஜனநாயக கட்சிகளைப் போலக் காட்டிக் கொண்டனர். விரைவிலேயே அமெரிக்க "ஜனநாயக கட்சி" போன்று கொள்கைகள் மாறி விட்டிருந்தன. ஆனால், "சிங்கள தேசியவாதம்" கட்சியின் அடிநாதமாக விளங்கியது. 1953 ம் ஆண்டு, காலி முகத் திடல் பொதுக் கூட்டத்திலும், பண்டாரநாயக்க "சிங்கள தேசியத்தின் எழுச்சி" பற்றி மட்டுமே பேசினார். பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கு, அரசியல்வாதிகளுக்கு தேசியவாதம் உதவுகின்றது.

கடந்த அறுபதாண்டுகளாக, சிங்கள-தமிழ் அரசியல்வாதிகள், மக்களுக்கு தேசியவாத வெறி ஊட்டுவதன் மூலம், உழைக்கும் வர்க்கத்தை பிளவு படுத்தியுள்ளனர். அன்று பண்டாரநாயக்க காட்டிய பாதையில், இன்று சீமான் வரையிலான தலைவர்கள் பலர் வெற்றிநடை போடுகின்றனர். காலிமுகத்திடல் பொதுக்கூட்டத்தில், "மக்களுக்கு வயிற்றுப்பாடு முக்கியமல்ல, மொழி மீதான பற்றும், இன மான உணர்வுமே முக்கியமானது." என்று பண்டாரநாயக்க ஆற்றிய உரை, இன்று தமிழ் தேசியவாதிகள் வாயிலும் எதிரொலிக்கின்றது. அன்று, உழைக்கும் மக்களின் எழுச்சியை, "சிங்கள இன எழுச்சியாக" காட்ட விரும்பிய பண்டாரநாயக்கவின் எண்ணம் ஈடேறவில்லை. ஆனால், சிங்கள தேசியவாதிகளுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிட்டியது. "கம்யூனிச அபாயம்" கண்டு அஞ்சிய இலங்கை அரசு, பொலிஸ் அடியாட்களை ஏவி விட்டு, தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கியது. முதலாளித்துவ நலன் பேணும் அரசு, சிங்கள பெருந்தேசியவாதிகளினதும், தமிழ் குறுந் தேசியவாதிகளினதும் ஒத்துழைப்புடன், இலங்கையின் முதலாவது வர்க்கப் போராடத்திற்கு முடிவு கட்டியது.

இடதுசாரிக் கட்சிகளின் அழைப்பை ஏற்று, நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள் ஒற்றுமையாக வேலை நிறுத்தத்தில் குதித்ததால், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. 12 ஓகஸ்ட், ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட தினங்களில் அனைத்து வர்த்தக ஸ்தாபனங்களும் பூட்டப்பட்டிருந்தன. அரசு கவிழும் அபாயம் தோன்றினாலும், அது மிகைப் படுத்தப் பட்ட எதிர்பார்ப்பாகவே தோன்றியது. உண்மையில், கண்மூடித்தனமான வன்முறை பிரயோகித்து, சொந்த மக்களை கொலை செய்த அரசின் செயல் அதிர்வலைகளை தோற்றுவித்தது.

கொழும்பு முதல் காலி வரையிலான நகர்ப்புற பிரதேசங்கள் எங்கும், அரச அலுவலகங்கள் எரிக்கப் பட்டன. அரச பேரூந்து வண்டிகள் தாக்கப்பட்டன, ரயில் தண்டவாளங்கள் சேதமாக்கப் பட்டன. கலவரத்தை அடக்க கண்ணீர் குண்டுப் பிரயோகம் செய்தும் கட்டுப் படுத்த முடியாத பொலிஸ், துப்பாக்கிச் சூடு நடத்தியது. இரண்டு நாட்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமுற்றனர். 380 பேர் கைது செய்யப் பட்டனர். அரசாங்க திணைக்களத்தின் ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி ஒருவர் கூட பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மனமுடைந்து போன பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஜோன் கொத்தலாவல, "இலங்கையில் இருந்து கம்யூனிசத்தை வேரோடு அழிப்பதே எனது இலட்சியம்." என்று பிரகடனம் செய்தார். இலங்கை அரசு அஞ்சிய, கம்யூனிச பூதம் உருவாவதற்கு காரணமாக அமைந்த, உழைக்கும் மக்களின் எழுச்சிக்கான பின்னணி என்ன?

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து, இலங்கைக்கு "சுதந்திரம்" கிடைப்பதற்கு முன்பிருந்தே, ஆளும் வர்க்கம் கம்யூனிச அபாயம் கண்டு அஞ்சியது. ரஷ்யாவில் வென்ற போல்ஷெவிக் புரட்சி சோவியத் யூனியன் ஸ்தாபித்த நாளில் இருந்தே, இலங்கையிலும் அதன் எதிரொலிகள் கேட்டன. முதலாவது பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் அபார வெற்றி, அரசின் அச்சத்தை அதிகரித்தது. இதனால், பிரிட்டனின் சம்மதத்துடன், இலங்கை அரசு சமூக நலன் பேணும் திட்டங்களில் முதலிட்டது. குறிப்பாக, அனைத்துப் பிரஜைகளுக்குமான இலவச கல்வி, இலவச மருத்துவம் போன்றனவற்றுடன்; அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மானியமும் வழங்கப் பட்டன. கடந்த அறுபதாண்டுகளாக இலங்கை மக்கள் அனுபவித்து வரும் உரிமைகள் இவை. இத்தகைய சமூக நலன் பேணும் திட்டங்கள் இன்றைக்கும் சிறப்பாக செயற்படுகின்றன.

தேயிலை, ரப்பர் போன்ற ஏற்றுமதிப் பொருட்களால் கிடைத்த அதிக லாபம் காரணமாக, இலங்கை அரசின் பொருளாதாரத் திட்டத்தில் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இலங்கை அரசு, ஒரு பக்கம் இலவச கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுத்து உழைக்கும் மக்களை திருத்திப் படுத்தியது. மறு பக்கம், குறைந்த அளவு வருமான வரி அறவிட்டு நடுத்தர வர்க்கத்தை திருப்திப் படுத்தியது. கார்ப்பரேட் வரியும் குறைவாக இருந்ததால், பன்னாட்டு நிறுவன முதலாளிகளும் லாபமடைந்தனர். சமுதாயத்தின் அனைத்து வர்க்கங்களையும் திருப்திப் படுத்த, இலங்கை அரசினால் எவ்வாறு சாத்தியமானது? தேயிலை, இறப்பர் போன்ற ஏற்றுமதிப் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக விலை கிடைத்தது. 1952 ம் ஆண்டு, சந்தையில் விலை சரிந்தது. குறிப்பாக, செயற்கை இறப்பர் கண்டுபிடிக்கப் பட்டமை, இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முற்று முழுதாக பெருந்தோட்ட பயிர்ச் செய்கையில் தங்கியிருந்த இலங்கைப் பொருளாதாரத்திற்கு இது மிகப் பெரிய அடியாகும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக, அரசுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று: கார்பரேட் வரி, வருமான வரி ஆகியனவற்றை அதிகரிப்பது. இரண்டு: அத்தியாவசிய பொருட்கள் மீதான மானியங்களை குறைப்பது. பெருந்தோட்ட உரிமையாளர்களான ஐரோப்பிய முதலாளிகள், வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினரதும் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாத அரசு, முதலாவது யோசனையை கைவிட்டது. என்ன இருந்தாலும், அரச நிர்வாகத்தில் இருப்பவர்களும் பூர்ஷுவா வர்க்கப் பிரதிநிதிகள் அல்லவா? இலங்கை மக்களின் அத்தியாவசிய உணவான அரிசியின் மீது வெட்டு விழுந்தது. வருடாந்தம் 150 மில்லியன் ரூபாக்கள் அரிசிக்கான மானியமாக ஒதுக்கப் பட்டது. அது விலக்கிக் கொள்ளப்பட்டதும், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கலவரம் ஏற்படுவதும், அதனால் சாம்ராஜ்யங்கள் கவிழ்ந்துள்ளதையும் உலக வரலாறு நெடுக காணலாம். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. அரிசி கேட்டு அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இலங்கை மக்களை, இன ரீதியாக பிரித்து, நீண்டதொரு இனப்போருக்குள் தள்ளி விட்ட சூழ்ச்சி மட்டுமே புதிது.

தொழிலாளர் இன, மத பேதங்களை கடந்து ஒன்று சேர்ந்து போராடிய நேரம், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்ட அரசு, சிங்கள இனவாதிகளின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டது. 1955 ம் ஆண்டு, நாட்டில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் தேசிய மொழியாக்க வேண்டுமென்று, கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பொதுக் கூட்டம் குழப்பப் பட்டது. கூட்டத்தை குழப்பிய இனவாதப் பிக்குகள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை தாக்கியது மட்டுமல்ல, நகரில் இருந்த தமிழ், முஸ்லிம் கடைகள் மீதும் கல் வீசினார்கள். இலங்கையின் முதலாவது சிங்கள இனவெறி வன்முறையை, பொலிஸ் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது. என்ன இருந்தாலும், நாட்டை ஆள்வது ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் அல்லவா? இனவெறியர்கள் கம்யூனிஸ்டுகளை தாக்குவதை அவர் ஏன் தடுக்கப் போகிறார்?

இலங்கையின் மூன்றாவது பிரதமராக பதவி வகுத்த சேர். ஜோன் கொத்தலாவல, லத்தீன் அமெரிக்க நாடுகளின் வலதுசாரி சர்வாதிகாரிகளோடு ஒப்பிடத் தக்கவர். அத்தகைய ஆட்சியாளர் பற்றி, இலங்கை வரலாறு பற்றி கூறும் நூல்கள் அதிகம் பேசுவதில்லை. "சேர்.ஜோன் கொத்தலாவல இத்தனை வருடங்கள் பிரதமராக பதவி வகித்தார்." என்று ஒற்றை வரியில் அந்த தகவல் முடிந்து விடுகின்றது. தமிழ் தேசிய எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகளில் கூட அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை. அதற்குக் காரணம், வர்க்கப் பாசம். ஒரு உலகம் அறிந்த கம்யூனிச எதிர்ப்பாளரின் ஆட்சிக் காலத்தில் தான், "சிங்களம் மட்டும்" இயக்கம் வீறு கொண்டெழுந்தது. சிங்கள மக்களின் இனவுணர்வை தட்டி எழுப்பும் வகையில், உணர்ச்சிமயமாக பேசும் இனவாத அரசியலின் காலகட்டம் ஆரம்பமாகியது. தொன்னூறுகளில் சோஷலிச கட்டுமானம் உடைக்கப் பட்ட பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இனத்-தேசியவாத சக்திகள் முளைத்துக் கிளம்பின. இலங்கையைப் பொறுத்த வரையில் ஐம்பதுகளிலேயே அத்தகைய மாற்றங்கள் ஏற்படலாயின.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

6.ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5.ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4.மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3.உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

2 comments:

அம்பலத்தார் said...

நல்லதொரு பதிவு தொடருங்கள்

aotspr said...

உங்கள் பதிவுக்கு நன்றி....
தொடர்ந்து எழுதுங்கள்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com