Wednesday, June 10, 2009

ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்


1983 ம் ஆண்டு இனக்கலவரத்திற்கு பின்னரான காலகட்டம். யாழ் மாவட்டத்தில் புதிதாக வியாபாரம் தொடங்குவது போல, விடுதலை இயக்கம் தொடங்குவது "fashion" ஆகிப் போன காலகட்டம் அது. "கடிதத் தலைப்பு வர்த்தக ஸ்தாபனம்" போல, "துண்டுப் பிரசுர இயக்கங்கள்" பல தோன்றியிருந்தன. பஸ் தரிப்பு நிலையங்களில், சந்தைகளில், பாடசாலைகளில், அல்லது தெருக்களில் திடீரென தோன்றும் ஓரிரு இளைஞர்கள் சில நிமிஷங்களுக்குள் துண்டுப் பிரசுரங்களை கொடுத்து விட்டு மறைந்து விடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு இயக்கத்திற்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்த அதே இளைஞர்கள், இன்னொரு நாள் வேறொரு இயக்கத்தின் பிரசுரங்களைக் கொடுப்பார்கள்.

ஒவ்வொரு பிரசுரத்திலும் "சிறி லங்காப் பேரினவாத அரசுக்கு எதிராக போராடி, தாம் சரியெனக் கருதும் பாதையில் ஈழம் கிடைக்கும்" என்று மக்களுக்கு கொள்கை விளக்கம் அளித்திருப்பார்கள். சாதாரண மக்களுக்கு இத்தனை இயக்கங்கள் எங்கேயிருந்து முளைக்கின்றன என்று குழப்பம். ஒரு காலத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் இயங்கி வருவதாக, யாழ் மத்திய பஸ் நிலையத்தில் போஸ்டர்கள் காணப்பட்டன. எல்லா இயக்கங்களும் "ஈழம்", "தமிழீழம்", "விடுதலை", "புரட்சி", "இயக்கம்", "முன்னணி" போன்ற வார்த்தைகளில் இருந்து பெயர் தெரிவு செய்திருந்தனர்.

இத்தனை இயக்கங்களுக்கும் தேவையான பணம் எங்கேயிருந்து வந்தது? ஆட்பலம், ஆயுதபலம் கொண்ட பெரிய இயக்கங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து நிதித் தேவையை பூர்த்தி செய்தன. இதைப் பார்த்த சிறிய இயக்கங்கள் தபால் நிலையங்களை கொள்ளையடிக்க தொடங்கின. இதனால் வங்கிகள், தபால் நிலையங்களில் பணப் புழக்கத்தை அரசு குறைத்துக் கொண்டது. பெயர் குறிப்பிடாத சிறிய இயக்கம் ஒன்று யாழ் நகர வங்கிக் கிளை ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிட்டது. வாசலில் இருந்த காவலாளியை துப்பாக்கி முனையில் கட்டிப் போட்டு விட்டு, உள்ளே நுழைந்தனர். எப்படியோ வங்கியினுள் பணம் வைத்திருக்கும் இரும்புப் பெட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அங்கேயிருந்து உடைத்துக் கொண்டிருப்பது நேர விரயம் என்று கருதியதாலோ என்னவோ, இரும்புப் பெட்டியை டிராக்டரில் ஏற்றி புறநகர்ப் பக்கமாக கொண்டு சென்று உடைத்தனர். கடும் பிரயத்தனப் பட்டு பெட்டியை உடைத்துப் பார்த்த போது ஏமாற்றம் காத்திருந்தது. பெட்டிக்குள் இருந்த சில்லறைகளையும் சேர்த்து கணக்குப் பார்த்தாலும் நூறு ரூபாய்க்கு மேல் தேறவில்லை!

இலங்கையின் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க பிரபல வங்கிக் கொள்ளையர் ஒருவர் இருந்தார். சிறையில் இருந்து தப்பியதால் "பனாகொட மகேஸ்வரன்" என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டவர். இவர் தலைமையிலான குழுவொன்று பல வங்கிகளைக் கொள்ளையடித்து கோடிக்கணக்கான ரூபாய்களை சேர்த்து விட்டிருந்தது. கொள்ளையடித்த பணத்தில், "தமிழீழ இராணுவம்" என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்கள். அந்த இயக்கத்தில் சேர்ந்த போராளிகளுக்கு மாத சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. சிறிது காலம் யாழ் நகரில் லொத்தர் சீட்டுக் குலுக்கி பணம் சேர்த்தார்கள். கடைசியில் "விடுதலை வியாபாரத்தை" மூட்டை கட்டி வைத்து விட்டு, முக்கிய உறுப்பினர்கள் யாவரும் வெளிநாடு சென்று விட்டனர்.

கடவுளின் அருள் பெற்ற ஞானி என்றால், அற்புதம் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று சாதாரண மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஈழத்திற்காக ஆயுதப்போராட்டம் நடத்தும் இயக்கம் என்றால், குறைந்தது பொலிஸ் நிலையம் மீது என்றாலும் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த காலமது. ஏற்கனவே பல முறை தாக்குதலுக்கு உள்ளான சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கி தனது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கு சிறிய இயக்கம் ஒன்று திட்டமிட்டது.

நள்ளிரவுக்கு சற்று முன்னர், அமைதியைக் கிழித்துக் கொண்டு "டமார்" என்ற வெடிச் சத்தம் கேட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வசித்த மக்களுக்கு ஒரேயொரு "டமார்" தான் கேட்டது. அதைத் தொடர்ந்து "பட, பட" வென துப்பாக்கியால் சுடும் சத்தம் ஒரு மணி நேரமாக கேட்டுக் கொண்டிருந்தது. துப்பாக்கிச் சூடுகள் கூட ஒரே திசையில் இருந்து வந்ததை உணரக் கூடியதாக இருந்தது. விடிந்த பிறகு பொலிஸ் நிலைய பக்கமாக சென்றவர்கள், அங்கே தாக்குதல் நடந்ததற்கான தடயம் எதையும் காணவில்லை. வழக்கமாக எங்காவது தாக்குதல் நடந்தால், பாதையில் போகும் மக்கள் மீது ஆத்திரத்தைக் தீர்த்துக் கொள்ளும் அரச படைகள், அன்று அமைதியாக நின்றமை வேறு ஆச்சரியமளித்தது.

சில மணி நேரங்களில், முதல் நாளிரவு நடந்த தாக்குதலின் தார்ப்பரியம் தெளிவானது. முதலில் கேட்ட டமார் சத்தத்திற்கு காரணம் வெடி குண்டு அல்ல. ஒரு கிரனேட் கூட அன்று வீசப்படவில்லை. காலி அலுமினிய டின்னிற்குள் பட்டாசு கொளுத்தி போட்டிருக்கிறார்கள், தாக்குதல் நடத்திய வீரர்கள். அதைத் தொடர்ந்து, நாய் வீட்டைச் சுற்றி குரைப்பதைப் போல, திகிலடைந்த போலீஸ்காரர்கள் காவல் நிலையத்தை சுற்றி சுற்றி வந்து சுட்டிருக்கிறார்கள். சுட்டுக் கொண்டே ஓடிய போலீஸ்காரர் ஒருவர் முள்ளுக் கம்பி மேல் விழுந்து காயமுற்றதைத் தவிர வேறு எந்த பாதிப்பும் அன்று ஏற்படவில்லை. ஆனால், அடுத்த நாள் தாக்குதலுக்கு உரிமை கோரி போஸ்டர் ஒட்டிய இயக்கம், "பொலிஸ் நிலையத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்து விட்டதாகவும், 10 பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டதாகவும்" அறிவித்தது.

முன்னொருபோதும் கேள்விப்படாத இயக்கம் ஒன்றின் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் மக்கள் அதை புறக்கணித்தார்கள். ஆட்பலம், ஆயுதபலம் கொண்ட பெரிய இயக்கங்கள் செய்யும் தாக்குதல்கள் கூட சில நேரம் தோல்வியடைவதுண்டு. இராணுவ முகாமை தாக்கச் சென்ற இயக்கமொன்றின் போராளிகள், கடுமையான எதிர்த் தாக்குதல் காரணமாக பின்வாங்கி விட்டனர். இருந்தாலும் போஸ்டர் பிரச்சாரம் மட்டும் குறைவில்லாமல் 40 அரச படையினர் கொல்லப்பட்டதாக கணக்குக் காட்டியது. சம்பந்தப்பட்ட இயக்கம் தாக்குதலுக்கு போவதற்கு முன்பே அந்தப் போஸ்டரை அடித்து விட்டதாக, மக்கள் பேசிக் கொண்டனர்.

போஸ்டர்கள், துண்டுப்பிரசுரங்கள் அச்சடிப்பதற்கு "றோணியோ இயந்திரங்கள்" பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள் பாடசாலைகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன. பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் வினாத்தாள்களையும், பாடக்குறிப்புகளையும் றோணியோ மெஷின் மூலமே அச்சிட்டு வந்தது. பாடசாலைகளின் விஞ்ஞான பரிசோதனைக்கூடங்களும் இயக்க வன்முறைக்கு தப்பவில்லை. பரிசோதனைச் சாலைகளில் களவாடப்பட்ட இரசாயனப் பதார்த்தங்களை கொண்டு எவராவது வெற்றிகரமாக குண்டு தயாரித்தார்களா என்ற விபரம் எதுவும் கிடைக்கவில்லை. பாடசாலைக் கொள்ளைகள் தொடர்ந்ததால் குடா நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட விளைவு மட்டும் பலரால் உணரப்பட்டது. சிறிய இயக்கங்களின் அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் யாவும் அவற்றின் பலத்திற்கேற்ப மட்டுப்படுத்தபட்டிருந்தன. "அரசாங்க சொத்துகளை நாசமாக்குவது" என்ற பெயரில், பேரூந்து வண்டிகளை வழிமறித்து, பயணிகளை இறக்கி விட்டு தீயிட்டார்கள். அரசாங்கமும் புதிய பஸ்களை அனுப்பாமல் புறக்கணித்து வந்ததால், பாதிக்கப்பட்டதென்னவோ பொது மக்கள் தான்.

காலப்போக்கில் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள் யாவும் அரங்கில் இருந்து மறையத் தொடங்கின. பலவற்றிக்கு எப்படி இயங்குவது என்பது பற்றிய எந்த வித திட்டமிடலும் இருக்கவில்லை. ஓரளவிற்கு தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டிருந்தவையும், பல்வேறு எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருந்தது. சிறிய மீன்களை பெரிய மீன்கள் பிடித்துச் சாப்பிடுவதைப் போல, பெரிய இயக்கங்கள் பல நெருக்குவாரங்கள் மூலம் சிறிய இயக்கங்களை அழித்து விட்டன. சில நேரம் தலைமை தாங்குபவர் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் இயக்கம் தானாகவே கலைந்தது.

3 comments:

Anonymous said...

தமிழீழ விடுதலை அமைப்புகளின் ஆரம்ப வரலாற்றை அப்படியே தந்துள்ளீர்கள். பாராட்டுகள் கலையரசன்.

Anonymous said...

சிறுபிள்ளை வேளாண்மை
வீடு வந்து சேரவில்லை

Kalaiyarasan said...

நண்பர்களே, கருத்துகளை தெரிவித்தமைக்கு நன்றி.