Friday, June 05, 2009

நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திரக் கட்சியானது, ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய சிங்கள கட்சிகளிடமிருந்து பல அரசியல் கொள்கைகளை கற்றுக் கொண்டுள்ளது. தமிழீழ கோரிக்கை எழுந்த பிரிவினைக்கான காரணிகளை இனங்கண்டு அழித்து, இலங்கையில் ஒற்றையாட்சியை வலுப்படுத்துவதும், அந்தக் கட்சிகள் முன்வைத்த அரசியல் திட்டமாகும். பல்வேறு தேசிய இனங்களின் நலன் பேணும், அல்லது பிராந்தியக் கட்சிகள் பிரிவினைவாத சக்திகளாக கருதி தடை செய்யப்படும். ("தமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்." - பாதுகாப்பு செயலதிபர் கோத்தபாய ராஜபக்ஷ) அனைத்து இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட உள்ளன. இந்த பாசிச நடைமுறையின் பரிணாம வளர்ச்சியாக,ஒரே கட்சியின் (Sri Lanka Freedom Party) சர்வாதிகார ஆட்சியின் கீழ் வருவதற்கான அறிகுறிகள் தற்போது தெரியவாரம்பிக்கின்றன.

சிங்கள இனவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய, மற்றும் ஜே.வி.பி. போன்றன இதுவரை காலமும், ஆயுதபாணி புலிகளையும், தமிழ்தேசிய கட்சிகளையும், (தமிழ்) "இனவெறி அமைப்புகள்" என்றே சித்தரித்து வந்துள்ளன. சிங்களப் பொதுமக்கள் கொல்லப்படும் வன்முறைச் சம்பவங்களை அதற்கு உதாரணமாக காட்டப்படுவது வழமை. இலங்கை பிரச்சினையைப் பொறுத்த வரை, தமிழ் ஊடகங்கள் என்றாலும், சிங்கள ஊடகங்கள் என்றாலும் பிரச்சாரத் தொனியில் அமைந்த, மிகைப் படுத்தப் பட்ட செய்திகளையே வெளியிட்டு வருகின்றன. பெரும்பான்மை தமிழர்கள் தமிழ் ஊடகங்கள் சொல்வதை தமது சொந்தக் கருத்தாக்கியுள்ளதைப் போல, சிங்களவர்களும் சிங்கள ஊடகங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றனர். சுருக்கமாக சொன்னால், தனது இனம் பாதிக்கப்படும் போது மட்டும் அவலக்குரல் எழுப்புவதும், மற்ற இனம் பாதிக்கப்பட்டால் அடக்கி வாசிப்பதும் வழமையாகி விட்டது. உலகில் எந்த நாட்டிலும், இனப்பிரச்சினை தீர்க்க முடியாத சிக்கலாக இழுபடுவதற்கு, இனப்பெருமிதம் சார்ந்த பிரச்சாரம் முக்கிய தடையாக உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புலிகள் சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றதை சாட்டாக வைத்து தடை செய்யப்போவதாக கோத்தபாய காரணம் கூறியுள்ளார். அன்று த.தே.கூ. பெருமளவு கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றதாக தேர்தல் சமயத்தில் முறைப்பாடுகள் வந்த போதும் அதனை விசாரிக்காத, அல்லது அந்தக் குற்றச்சாட்டுக்காக தேர்தலை இரத்து செய்யாத இலங்கை அரசு, தக்க தருணம் வரும் வரை காத்திருந்தது போல தெரிகின்றது. இது போன்றதே, த.தே.கூ. உறுப்பினர்களின் புலிகளுடன் தொடர்பு சம்பந்தமான குற்றச்சாட்டும். புலிகளுடனான தொடர்பை குற்றமாக காட்டி, அரசுக்கெதிரான எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட இருப்பதையே இது கோடி காட்டுகின்றது.

சமாதான பேச்சுவார்த்தை நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நடந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததை மறுப்பதற்கில்லை. இலங்கைத் தேர்தல்களில் கள்ள வாக்குப் போடுவதென்பது சர்வசாதாரணமாக அனைத்துக் கட்சிகளும் தெரிந்தே செய்யும் குற்றமாகும். இருப்பினும், பெருமளவு வட-கிழக்கு மாகாண தமிழ் மக்கள் த.தே.கூ. கட்சிக்கு தமது வாக்குகளை வழங்கியதையும் மறுப்பதற்கில்லை. த.தே.கூ. வெற்றி பெற்றால், புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சமாதானம் மலரும், என்பது அப்பாவி தமிழ் மக்களின் நப்பாசையாக இருந்தது. வட-கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சமாதானத்திற்கான அபிலாஷைகளை, புலிகள் பின்னர் புறக்கணித்து போருக்கு தயாரானது வேறு கதை.

சமாதான ஒப்பந்தத்தை பயன்படுத்தி, வட-கிழக்கு மாகாணத்தில் அரசியல் வேலை செய்த புலிகள், த.தே.கூ.ப்பிற்கு மக்கள் வாக்குப் போட வேண்டுமென்று பிரச்சாரம் செய்திருந்தனர். புலிகள் தம்மை எப்போதும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அமைப்பாக காட்டி வந்துள்ளனர். "சாத்வீக போராட்டங்களால் எந்தப் பலனும் இல்லை, ஆயுதப் போராட்டமே சிறந்தது" என்ற கோட்பாட்டின் படி நடந்து கொண்டனர். இலங்கை அரசு நடத்தும் தேர்தல்களில் பங்குபற்றுவது, அரசை வலுப்படுத்த உதவும் என்று சரியாகவே கணிப்பிட்டிருந்தனர். 1981 ம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கட்சி உறுப்பினர்களை கூட சுட்டுக் கொன்று, தேர்தலை குழப்ப முயற்சித்தனர்.

பிற்காலத்தில், புலிகளால் துரோகக் குழுக்கள் என அழைக்கப்படுவோர் தேர்தலில் வென்று அதிகாரத்திற்கு வரத்தொடங்கினர். அரசும் இவர்களை தமிழர் பிரதிநிதிகளாக வெளி உலகிற்கு காட்டி வந்தது. தமது அரசியல் சார்ந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என்பதை, புலிகள் சற்று காலந் தாழ்த்தியே புரிந்து கொண்டனர். இந்திய இராணுவத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த 1988 காலத்தில் நடந்த பொதுத் தேர்தலில்,தம்முடன் நட்புறவைப் பேணிய ஈரோஸ் உறுப்பினர்களின் தெரிவுக்கு புலிகள் மறைமுக ஆதரவு வழங்கினர்.

ஈரோஸ் அமைப்பினர் ஒரு காலத்தில் ஆயுதமேந்திய ஈழப்புரட்சி பற்றி பேசியவர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் போது, ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தவர்கள். த.தே.கூ. வைப் போலன்றி,சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இருந்தனர். இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகுபவர்கள், "ஈழம் கோரும் பிரிவினைவாதத்திற்கு எதிராக" சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் படி அரசாங்க அதிகாரிகள் கூட பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிப்பதில்லை என்று சத்தியப்பிரமாணம் எடுத்து விட்டு தான் பதவி நாற்காலியில் அமர வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் அன்று (ஈழத்திற்கு எதிரான) சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்து, பாராளுமன்ற பதவிகளை தியாகம் செய்தனர். கொள்கைக்காக பதவியை பறிகொடுத்த ஈரோஸ் உறுப்பினர் ஒருவர், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார். சுவிஸ் அரசு குறுகிய காலத்திலேயே அவருக்கு அகதி அந்தஸ்து கொடுத்து கௌரவித்தது.

தற்போதுள்ள த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழீழப் பிரிவினைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் எடுத்து விட்டு, பாராளுமன்றப் பதவியில் அமர்ந்திருந்ததை காரணமாக காட்டியே, அரச அடக்குமுறை சட்டம் அவர்கள் மேல் பாய வாய்ப்புள்ளது. இதே நேரம், வெளி நாடுகளுக்கு பயணம் செய்து தமிழீழ ஆதரவு பிரச்சாரம் செய்ததற்காக, ஏற்கனவே சில உறுப்பினர்கள் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். புலனாய்வுத்துறை பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவர்களது பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தது. அரச புலனாய்வுத்துறை இதற்கென பெரும் பிரயத்தனப்படத் தேவையில்லை. புலிகள் சார்பான ஊடகங்கள் பகிரங்கமாகவே இத்தகைய பேச்சுகளை ஒலி/ஒளி பரப்புகின்றன.

சமாதான பேச்சுவார்த்தையில் கூட்டாளியான இலங்கை அரசும், த.தே. கூ. பாராளுமன்றத்தில் புலிகளை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என எதிர்பார்த்தது. சர்வதேசமும் இதே காரணத்திற்காக கள்ள வாக்குகள் குறித்த முறைப்பாடுகளை புறக்கணித்தது. அரசும், புலிகளும் அதிகாரத்தை பங்குபோட்டுக் கொள்ள வேண்டும் என அவை எதிர்பார்த்தன. த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழத்தை அல்லது புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசி வந்த போதும், இலங்கை அரசு அப்போது அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹெல உறுமைய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் பிரிவினைவாத த.தே.கூ. உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தி வந்தன. அப்போதெல்லாம் த.தே.கூ.பின் பிரசன்னம் தனக்கு அவசியம் என்றே அரசு எண்ணியது. இதற்கு சர்வதேச அழுத்தம் காரணம், எனக் கூறுவதை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

ஆயுதமேந்தியுள்ள காரணத்திற்காக, அல்லது பயங்கரவாத செயல்களைப் புரிந்த காரணத்திற்காக, புலிகள் இயக்கத்தோடு அரசு பேச மறுத்தாலும், த.தே.கூ.வுடன் பேச மாட்டேன் என தட்டிக் கழிக்க முடியாது. பல நாடுகளின் பிரச்சினைகள் அரசியல் கட்சிகளின் மத்தியஸ்தத்தின் ஊடாக தான் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வட அயர்லாந்து பிரச்சினை தீர்க்கப்பட்ட விதம். தலைமறைவு ஆயுதக்குழுவான ஐ.ஆர்.ஏ., "சின் பெயின்" என்ற கட்சியை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்க விட்டபோது, பிரிட்டிஷ் அரசால் தடை செய்ய முடியவில்லை.(இலங்கை அரசைப் போலவே, பிரிட்டிஷ் அரசும் பயங்கரவாத அமைப்புடன் பேசுவதில்லை என்ற கொள்கையை கொண்டிருந்தது.) இறுதியில் சின் பெயினுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்த பின்னர் தான், ஐ.ஆர்.ஏ. ஆயுதப் போராட்டத்தை கைவிட முன்வந்தது.

2002 ம் ஆண்டு முதல், இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட காலங்களில், இலங்கை சென்ற பிரிட்டிஷ், அயர்லாந்து இராஜதந்திரிகள் "வட-அயர்லாந்து தீர்வை" மேற்கோள் காட்டி பேசி வந்துள்ளனர். இப்போதும் சில இடதுசாரிகள் நேபாள தீர்வை உதாரணமாகக் காட்டும் போது, தமிழ் தேசியவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. எவராவது வட-அயர்லாந்து தீர்வை எடுத்துக் காட்டும் போது மட்டும், அவர்கள் அதேயளவு ஆக்ரோஷத்தோடு எதிர்ப்பதில்லை. இதற்கெல்லாம் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடு தான் காரணம்.

2002 ம் ஆண்டு, பிராபாகரனும், அன்றைய பிரதமர் ரணிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த சம்பவத்தை வெளியிட்ட சண்டே டைம்ஸ் பத்திரிக்கை "D-day" என்று தலைப்பிட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க-ஆங்கிலேய படைகள் பிரெஞ்சுக் கடற்கரையில் தரையிறங்கிய நிகழ்வே D-day என அழைக்கப்படுகின்றது. அதற்குப் பின்னர் இறுதித் தீர்வு எட்டப்படும் காலம் தொடங்கி விட்டது எனக் குறிப்பிட, D-day என்ற சொற்பதம் பாவிக்கப்படுகின்றது. இலங்கையின் மேற்குல சார்பு பத்திரிகையான சண்டே டைம்ஸ், இலங்கையின் இருபதாண்டு போரை எப்படியேனும் நிறுத்துவதென்று சர்வதேச நாடுகள் களமிறங்கி விட்டன என்பதை மறைமுகமாக தெரிவித்தது.

சமாதான காலத்தில், புலிகள் அமைப்பு த.தே.கூ.வின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை. புலிகளைத் தவிர வேறு எந்த தமிழ் அமைப்பிற்கும் பேச்சுவார்த்தை மேடைக்கு வருமாறு அழைப்பு விடப்படவில்லை. இது புலிகள் பெரிதும் விரும்பிய ஏக பிரதித்துவ கோட்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி. இருப்பினும், "பயணம் செய்ய ஹெலி காப்டர் தரவில்லை" என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகவெல்லாம் பேச்சுவார்த்தை தடைப்பட்டது. சர்வதேச நாடுகளுக்கு பேச்சுவார்த்தையில் ஆர்வம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

நோர்வேயின் அனுசரணையாளர் எரிக் ஸொல்ஹைம் தனது விசனத்தை இவ்வாறு தெரிவித்தார்:"இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது சர்வதேச சமூகம் முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை இழந்தால், உலகின் பிற பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளை கவனிக்கப் போய் விடுவார்கள். தமிழரின் பிரச்சினை முழுமையாக புறக்கணிக்கப்பட்டு விடும்." இது ஒன்றும் எரிக் சொல்ஹைமின் தீர்க்கதரிசனம் அல்ல. உலக நாடுகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கும் தீர்ப்பதற்கும் என பாண்டித்தியம் பெற்ற மேலைநாட்டு ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைப் படி தான் மேற்கத்திய அரசுகள் செயல்படுகின்றன. ஒரு பிரச்சினையை முகாமைத்துவம் செய்வது சம்பந்தமாக, எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு வைத்திருப்பார்கள்.

த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களின் தேவைகள் குறித்து எப்போதாவது பேசியதாக எனக்கு நினைவில்லை. 2004 ம் ஆண்டு, சுனாமி அலைகள் தாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்த இயற்கை அனர்த்தத்தின் போதும், அண்மையில் மனிதப் பேரவலத்தை தோற்றுவித்த இனவழிப்பு யுத்ததின் போதும், தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் தமது தொகுதி மக்களை சென்று பார்க்கவில்லை. அதற்கு மாறாக ஒரு குழுவினர் மேலைத்தேய நாடுகளிலும், இன்னொரு குழுவினர் இந்தியாவிலுமாக "லாபி"(Lobby) வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த போது, ஏகாதிபத்தியத்திடம் தமிழீழத்தை யாசித்துக் கொண்டிருந்தார்கள்.

சுமார் இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், வைகுந்தவாசன் என்ற புலம்பெயர்ந்த ஈழத்து புத்திஜீவி ஒருவர், ஐ.நா.மன்றக் கூட்டத்தில் திடீரென நுழைந்து தமிழீழத்தின் பிரதிநிதியாக உரையாற்றினார். அப்போது இந்த "சர்வதேச ஸ்டண்ட்" புலிகளிற்கு உவப்பானதாக இருக்கவில்லை. "நாடுகடத்தப்பட்ட நிலையில் தமிழீழம்" என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தனர். தாயகத்தில் போராடும் மக்களிடம் அந்நியப்பட்ட எந்தவொரு தமிழீழப் பிரகடனமும் செல்லாக்காசாகி விடும் என்று மிகச் சரியாகவே கணித்திருந்தனர். ஈழப் போரின் இறுதி முடிவும் தற்போது அதே போன்ற நிலையை தோற்றுவித்துள்ளமை ஒரு கசப்பான முரண்நகை.

ஈழத்தில் மக்கள் அடுத்த வேளை சாப்பாடு எப்படிக் கிடைக்கும் என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். அந்த மக்கள் உணவு,வீடு,வேலை என்று தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமக்கான அரசியல் தலைமையைப் பொறுத்த வரை, "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கென்ன", என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள். தாயகத்தின் யதார்த்தத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்கள், மேலைத்தேய நகரத் தெருக்களில் தமிழீழம் வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் யாரும் ஈழம் சென்று போராடப் போவதில்லை. இலங்கை அரசோ, "ஈழம்" என்ற சொல்லையே அடுத்த தலைமுறை நினைத்துப் பார்க்க முடியாதவாறு நடவடிக்கை எடுத்து வருகின்றது.


______________________________________________________________________

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

~புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்
~சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்

_______________________________________________________________________

15 comments:

பனையூரான் said...

புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகள் என்பதை உலகுக்கு பறை சாற்றவே ஈழத்தமிழர்கள். த.தே.கூ விற்கு வாக்களித்தனர். மேலும் குரல் கொடுத்ததால் பறிக்கப்பட்ட த.தே.கூ உறுப்பினர்களை உமக்கு தெரியாதா??

sen said...

உங்களைப் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
வெறுமனே புலம் பெயர் தமிழர்களையும் மற்றவர்களையும் விமர்சனம் செய்வதை விட்டு தற்போதைய சூழ்நிலையில் ஈழத்தில் உள்ள தமிழர்களின் அவலத்தை குறைத்து அவர்கள் கொல்லப்படுவதை தடுக்க என்ன செய்யலாம் என்று கருத்துக்களையும் செயல் திட்டங்களையும் எங்கள் போன்ற சாமானியத் தமிழர்களுக்கு கூற முடியுமா?
உங்களைப் போன்றவர்கள் புலம் பெயர் மற்றும் ஈழத்தமிழர்களை ஏதோ மூளை இல்லாத மதி கேட்டவர்கள் மாதிரி நக்கல் அடித்து விமர்சனம் செய்து வருவதை இப்போது கூடுதலாக அவதானித்து வருகிறேன்.
இந்தத் தமிழர்கள் உங்களைப் பொறுத்தவரையில் முட்டாள்களாக இருக்கலாம்,ஆனால் அவர்கள் உண்மையானவர்கள், மனிதாபிமானம் உள்ளவர்கள் , அங்கு இருப்பாவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள்.
நீங்களும் மற்றைய தோழர்களும் உங்கள் உப்பரிகைகளில் இருந்து இறங்கி வந்து எங்கள் போன்ற மக்குகளுக்கு வழி காட்டினால் நன்றாக இருக்கும்.

மதிபாலா said...

தமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்." - பாதுகாப்பு செயலதிபர் கோத்தபாய ராஜபக்ஷ

**

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவெறீக் கட்சியென்றால் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜேவிபி?????


***

பொதுவாக நண்பரே உங்கள் பல பதிவுகளைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன்.

ஆனால் இந்தக் கட்டுரை மிக மேலோட்டமான தகவல்களை வைத்து வடிவமைக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.



///சமாதான பேச்சுவார்த்தையில் கூட்டாளியான இலங்கை அரசும், த.தே. கூ. பாராளுமன்றத்தில் புலிகளை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என எதிர்பார்த்தது.//

புலிகளைத் த.தே.கூ பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று இலங்கை அரசு எதிர்ப்பார்த்ததா? எதன் அடிப்படையில்?

//ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த போது, ஏகாதிபத்தியத்திடம் தமிழீழத்தை யாசித்துக் கொண்டிருந்தார்கள்.//

சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் எம்.பிக்கள் இலங்கைக்கு போனாலே கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற சூழலில் என்னதான் அவர்கள் செய்ய முடியும்? குரல் கொடுத்ததற்காகவே அரசால் கொல்லப்பட்ட த.தே.கூ பாராளுமன்ற எம்.பிக்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் நண்பரே?

Kalaiyarasan said...

கருத்துரைத்தமைக்கு நன்றி மதிபாலா.

//தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவெறீக் கட்சியென்றால் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜேவிபி?????//

நிச்சயமாக அவையும் இனவெறிக் கட்சிகள் தாம். சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் இன்று இனவாதம் மேலோங்கி காணப்படுகின்றது. எங்காவது ஒரு தமிழர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இனவெறிக் கட்சி என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதே போலத் தான் சிங்களவர்கள் ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற கட்சிகளை இனவெறிக் கட்சிகள் என்று சொல்வதில்லை. இது பெரும்பான்மை மக்களின் கருத்து. இனப்பிரச்சினை இலங்கையின் இரண்டு இனங்களை எந்தளவுக்கு பிரித்து வைத்திருக்கின்றன என்பதற்கு இது சாட்சி. மேலும் நான் இங்கே பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயாவின் கூற்றை சுட்டிக்காட்டி, சிங்களவர்களும் அரசும் எப்படி சிந்திக்கின்றன என எடுத்துக் காட்டியிருக்கிறேன். இது தமிழருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் மற்றப் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளக் கூடாதா?

//ஆனால் இந்தக் கட்டுரை மிக மேலோட்டமான தகவல்களை வைத்து வடிவமைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். //

தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரை இப்படித் தான் ஒரு தகவல் சொல்லப்பட வேண்டும் என்று சுயதணிக்கை வைத்துக் கொள்கின்றனர். வலைப்பதிவுலக நண்பர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். இலங்கையில் நடப்பனவற்றை உள்ளதை உள்ளபடியே சொல்பவர்கள் அருகிவிட்டனர். இப்படியான பின்னணியில் இங்கே கூறப்பட்ட பல தகவல்கள் மேலோட்டமானவையாக தோன்றலாம். உண்மையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரின் நேரடி வாக்குமூலங்களை, அவர்களது உள்ளக்குமுறல்களை, இங்கே கட்டுரையாக வடித்துள்ளேன். இல்லாத ஒன்றை புனைந்து, ஒன்றைப் பத்தாக மிகைப்படுத்தும் "ஊடக தர்மம்" எனக்குத் தெரியாது. அப்படியான செய்திகளைத் தான் தமிழர்கள் அறிய விரும்புகிறார்கள் என்றால், அது அவர்கள் விருப்பம். ஆனால் இந்தப் போக்கு பிரச்சினையை அதிகரிக்க மட்டுமே உதவும்.

//புலிகளைத் த.தே.கூ பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று இலங்கை அரசு எதிர்ப்பார்த்ததா? எதன் அடிப்படையில்?//

இலங்கை அரசு கூட்டமைப்பின் மத்தியஸ்தத்தை எதிர்பார்த்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் தடவையல்ல. புலிகளுடன் நேரடியாக பேச விரும்பாத அரசு, தமிழ் கட்சிகளின் மத்தியஸ்தத்தின் ஊடாக பேசியுள்ளது. நோர்வேயின் மத்தியஸ்தம் எல்லாம் பிற்காலத்தில், பிரச்சினை சர்வதேசமயப்பட்ட பின்னர் ஏற்பட்டவை.

//சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் எம்.பிக்கள் இலங்கைக்கு போனாலே கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற சூழலில் என்னதான் அவர்கள் செய்ய முடியும்?//

இலங்கையிலேயே தொடர்ந்து இருந்து வரும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பற்றிய செய்தி வெளி வருவதில்லை. நான் இங்கே குறிப்பிட விஷயம் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் தொகுதி மக்களின் குறைகள் சம்பந்தமானது. வட-கிழக்கு மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தேர்தலுக்குப் பின்னர் தனது தொகுதி மக்களை சந்தித்ததாக நான் அறியவில்லை. அவர்கள் சார்ந்த தொகுதியின் குறைகளை பாராளுமன்றத்தில் விவாதித்ததாக எங்குமே பதியப்படவில்லை. ஈழத் தமிழ் மக்கள் (ஈழத்தில் வாழும் மக்கள்) பகிரங்கமாக முன்வைக்கும் குற்றச்சாட்டு இது. இந்த உண்மையை சொல்லாமல் மறைப்பது நான் அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

//குரல் கொடுத்ததற்காகவே அரசால் கொல்லப்பட்ட த.தே.கூ பாராளுமன்ற எம்.பிக்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் நண்பரே?//

இலங்கையின் நிலைமை முன்னர் எப்போதும் இல்லாதவாறு தீவிரமடைந்து வருகின்றது. புலிகள் இயக்கம் தமக்கு எதிராக பேசுவோரை, அது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், "இனத் துரோகி" பட்டம் சூட்டி சுட்டுக் கொன்றார்கள். அந்தச் செயலை இன்று வரை நியாயப்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் அதே பாணியை பின்பற்றி வருகின்றது. அரசுக்கு எதிராக பேசுவோரை, அது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், "தேசத் துரோகி" பட்டம் சூட்டி விட்டு சுட்டுக் கொல்கின்றனர். இந்த இடத்தில் (ஈழத்தில் வாழும்) தமிழ் மக்கள் அடிக்கடி தமக்குள்ள சொல்லிக்கொள்ளும் புத்திமதியை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். "நாம் சாப்பிடுவதற்கும், சுவாசிப்பதற்கும் மட்டுமே வாயைத் திறக்க வேண்டும்." கடந்த முப்பது வருடங்களாக தமிழ் மக்கள் அப்படியான வாழ்க்கைக்கு பழகி விட்டார்கள். இந்த யதார்த்தம் இலங்கைக்கு வெளியில் எத்தனை பேருக்கு தெரியும்?

Anonymous said...

TNA should be banished from the parliament -Gota

(Lanka-e-News, 30.May.2009, 6.00PM) Defense Secretary Gotabhaya Rajapakse says that Tamil National Alliance (TNA) must be banished from the parliament.

In an interview with a weekend newspaper, he said that everybody knew the TNA was elected to the parliament by LTTE’s rigging. He charged that the organization spoke against the constitution in the parliament as well as abroad. He emphasizes the TNA that spoke to divide the country must be expelled from the parliament at least at the next parliament.

He said that the Tamils could come to politics through political parties like Sri Lanka Freedom Party and United National Party but not through the racist parties.

Kalaiyarasan said...

Dear Sivanesan,

இந்தக் கட்டுரையை தவறான கண்ணோட்டத்தில் வாசித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட படி, இலங்கை அரசானது தமிழ் தேசிய சக்திகளை தமிழ் இனவெறியர்களாக காட்டுவதன் மூலம் தடை செய்ய விரும்புகின்றது. இவ்வாறு தான் பாசிசம் தன்னை நிலைப் படுத்திக் கொள்கின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் நியாயமானது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரம் அனைத்து சிங்கள மக்களுக்கெதிரான தமிழ் இனவாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் தேசிய அரசியலை தமிழ் இனவாதத்தில் இருந்து பிரித்தெடுக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நாம் செய்யும் ஒவ்வொரு தவறையும் எதிரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். தமிழ் தேசியவாதிகள் எங்காவது இனவெறிச் செயல் புரிந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும். மாறாக அதனை நியாயப்படுத்துவது தவறானது. அப்படிச் செய்வது எதிரிக்கே சாதகமானது.

இது இலங்கையில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. இந்திய அரசு, இஸ்லாமிய மத அரசியல் சக்திகளை, "மத அடிப்படைவாதிகள்", "மதவெறியர்கள்" என்று முத்திரை குத்தி ஒடுக்கப் பார்க்கின்றது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதையே செய்து வருகின்றன. அதற்கு மாறாக பல ஜிகாதி இயக்கங்கள் தாம் மதவெறியர்கள் அல்ல என்றும்,தாம் முஸ்லீம் மக்களின் விடுதலைக்காக போராடுவதாக சொல்கின்றன.

ஹெல உறுமய, ஜே.வி.பி. போன்றன சிங்கள இனவெறி அரசியல் நடத்தி வருகின்றன என்று தான் நானும் சொல்கிறேன். அதே நேரம் சிங்கள இடதுசாரிகளைத் தவிர, பெரும்பான்மை சிங்கள மக்கள் அப்படிப் பார்ப்பதில்லை என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நீங்கள் காட்டிய உதாரணத்தைப் போல, TNA உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து 40000 சவப்பெட்டிகளை (இராணுவ வீரர்கள்) அனுப்புவோம் என்ற கூற்று, தென்னிலங்கையில் இனவெறிப் பேச்சாக கருதப்படுகின்றது.

சிங்களக் கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புகள் அப்பாவி சிங்கள மக்களை குறி வைத்து கொன்றுள்ளன. இப்படியான சம்பவங்கள் நடக்கும் ஒவ்வொரு தடவையும், தென்னிலங்கை ஊடகங்கள் இதை தமிழரின் இனவெறித் தாக்குதலாக காட்டுகின்றன. இதையெல்லாம் நீங்கள் இனவாதம் இல்லை என்று மறுக்கலாம். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதை இனவெறியாக தான் புரிந்து கொள்கின்றனர்.

தமிழர்களும், சிங்களவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மாட்டோம். ஒருவரின் வேதனையை மற்றவர் பகிர்ந்து கொள்ள மாடோம் என்று அடம்பிடித்தால் இனப்பிரச்சினை ஒரு போதும் தீரப் போவதில்லை. முதலில் நீங்கள் ஒரு மனிதர், அதற்குப் பிறகு தான் தமிழர். அப்பாவித் தமிழரின் கொலைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதை சாதாரண சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதே போன்று தமிழர்களும் அப்பாவி சிங்களவரின் கொலைகளை கண்டிக்க முன்வர வேண்டும்.

ஹெல உறுமைய போன்ற கட்சிகள் அல்லது எந்த சிங்களவராவது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை சரி என்று வாதிட்டால் அது இனவெறி தான். அதே போல TNA அல்லது எந்த தமிழராவது அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்படுவதை சரி என்று வாதிட்டால் அதுவும் இனவெறி தான்.

சிங்கள, தமிழ் பொது மக்கள் தம் மத்தியில் இருக்கும் இனவெறியர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும். இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தால், அது கோத்தபாயா போன்ற பாசிஸ்டுகளை வலுப்படுத்தவே உதவும்.

Anonymous said...

அருமையான பதிவு.

//தாயகத்தின் யதார்த்தத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட புலம்பெர்ந்த தமிழர்கள், மேலைத்தேய நகரத் தெருக்களில் தமிழீழம் வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் யாரும் ஈழம் சென்று போராடப் போவதில்லை.//

முழு உண்மை.
இந்த புலம்பெர்ந்த தமிழர்களினால் 5ம்கட்ட ஈழபோர் தொடங்க போவதாக தமிழ்நாட்டு பதிவர்கள் பலர் கனவு காண்கின்றனர்.

Anonymous said...

TNA extends olive branch to TULF, PLOTE, EPRLF

In a strange turn of events, the Tamil National Alliance (TNA), which was earlier firmly behind the LTTE, has now made overtures to the moderate Tamil parties like the TULF, the PLOTE and the EPRLF (Padmanabha wing) in the run-up to the Municipal elections in Jaffna and Vavuniya.

TNA Parliamentarian N. Srikantha told The Nation yesterday, that they have already held informal discussions with the Democratic Tamil National Alliance (DTNA), comprising the TULF, PLOTE and the EPRLF, to arrive at a common position, on a viable and just political solution to the ethnic problem.
Asked whether the exact aim was to form an electoral pact for the forthcoming local election, Srikantha claimed they had not thought of it.

The TNA Jaffna District Parliamentarian, said they would go for formal talks with the DTNA after their leader R. Sampandan, and two other Parliamentarians who are now in Chennai, return in the next few days.
The DTNA members in general, however, are hostile to having any dealing with the TNA, with TULF Leader V. Anandasangaree, who is the secretary of DTNA vowing “not to touch them with a bamboo pole. I don’t want to have anything to do with them.”

Anandasangaree contacted in this regard, said he would rather quit politics than have anything to do with, “the worst traitors to the Tamil community.”

He said despite all his pleadings, the TNA was the only party that did not call on the LTTE to release the Tamil civilians it was holding as human shields. “Because of them we have to now watch 10-year-old Tamil boys being fingerprinted like common criminals. Those children are scarred for life,” he said.

When pressed from PLOTE Leader Dharmalingam Sithadthan whether it is not better to forget the past for the sake of the people, he said they could not ignore the past. “What we have to see is whether we can redeem the past or not. In any case there is no need to rush.”

Indrajith said...

உங்கள் கட்டுரைகள் எல்லா வற்றியும் வாசித்து வருகிறேன் , உங்கள் ஆழ்ந்த அறிவு எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது .

இன வாதம் சரியானது அல்ல அது எந்த இனத்துக்கு எதிராகஇருந்தாலும் அதை எம் சிந்தனையில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும் .

and எமக்காகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் பல அர்ப்பணிப்புகள் தியாகங்களுடன் ஓர் உன்னதமான இலட்சியத்திற்காக போரடிகொண்டிருக்கிறார்கள்.

Kalaiyarasan said...

பனையூரான், Sen, மதிபாலா, Sivanesan, Indirajith... மற்றும் அனாமதேயமாக பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

Anonymous said...

நான் தமிழகத்தில் உள்ளவன்,
உங்கள் கட்டுரைகள் நிறைய வாசித்திருக்கிறேன். உங்களுடைய ஆராய்ச்சி மற்றும் அறிவார்ந்த கட்டுரைகள் ஆகியவற்றை குறைத்து மதிப்பிடுவதிற்கில்லை. ஆனால் இவை மட்டுமே ஒடுக்கப்படும் அந்த ஈழத் தமிழருக்கு தீர்வாகாது. நீங்கள் ஒருபுறம் கட்டுரைகளாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள், மறுபுறம் தோழர் இரயாகரன் இணையத்திலே புரட்சி செய்து கொண்டிருக்கின்றார். இத்ன் மூலம் என்ன சாதிக்கிறீர்கள் என்று தான் புரியவில்லை. நீங்கள் சொல்வது எல்லாம் சரியானது தான், ஆனால் செயல் தந்திரம் வேண்டுமே. மக்களை அணி திரட்டியிருக்கின்றீர்களா?
ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலைக்கு ஈழத் தமிழர் வந்து விட்டதாக கூறுகிறீர்கள். இப்போதைக்கு இருக்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் போராட்ட பாதைக்கே தள்ளப்படுவர். ஏனென்றால் சிங்களவனின் அடக்குமுறை அப்படிபட்டது. சமீப காலமாக சிங்கள நீதிபதி மற்றும் அதிகாரிகளின் கருத்துகளை பார்த்தாலே புரியும்.
இணையத்திலே களமாடும் உங்களைப் போன்றோர்களை விட, போர்க்களத்திலே களமாடி உயிர் நீத்த அந்த புலிகள் எவ்வளவோ மேல் என்றே நினைக்கின்றேன்

Kalaiyarasan said...

உங்கள் கருத்துக்கு நன்றி அஸ்கர்.
இன்று நொந்து போயிருக்கும் ஈழத்தமிழர்களிடம் தமிழ் தேசியவாதம் பற்றி பேச்செடுத்தாலே காத தூரம் ஓடுகிறார்கள். அவ்வளவு தூரம் அனுபவித்து விட்டார்கள். தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக்கொடுக்காத தமிழ் தேசியவாதம் அவமானகரமான தோல்வி அடைந்துள்ளதை ஈழத்தில் அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர். தமிழ் தேசியவாதத்தின் குறைபாடுகளில் இருந்து படிப்பினை பெற்று, மாற்று என்ன என்று யோசிப்பதே சிறந்த வழியாகும். சிங்கள அரச அதிகாரிகள் இனவாதம் பேசுகிறார்கள் என்பதற்காக, தமிழ் அரசியல் தலைவர்களும் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதம் பேசுவது சரியானதா? இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினம், அரசால் ஒடுக்கப்படுவது உண்மை. ஆனால் அதற்கு இஸ்லாமிய தீவிரவாதமே ஒரே தீர்வு என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா? தமிழகத்தில் இருப்பவர்கள் இதுவரை காலமும் தமிழ் தேசியவாதத்தை வளர்த்து விட்டதால் கண்ட பலன் என்ன?
ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது, எப்படி போராட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். தயவுசெய்து, ஈழத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பலியாடுகளாக ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம்.

Anonymous said...

நண்பரே,
முஸ்லிம்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு இஸ்லாமிய தீவிரவாதம் சரியென்று நான் கூறவில்லை. அது மேலதிகமான‌ அடக்குமுறைக்கே வழிவகுக்கும் என்றே நினைக்கின்றேன். நான் இங்கு மகஇக என்ற அமைப்பின் ஆதரவாளன்.
ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது, எப்படி போராட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். தயவுசெய்து, ஈழத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பலியாடுகளாக ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம், உங்களின் இந்த கருத்தைத்தான் நாங்களும் இங்கே வலியுறுத்துகின்றோம். தமிழகத்தில் இருக்கும் இந்த பிழைப்புவாதிகள் ஈழப்பிரச்சினையை தங்களின் சுய இலாபத்திற்காகவே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் இதிலும் இப்போது இவர்களுக்கு தோல்விதான். இம்முறை தமிழக மக்களை இவர்களால் ஈழ‌ ஆதரவாளர்களாக அணி திரட்ட முடியவில்லை. தமிழக மக்கள் இம்முறை வெறும் பார்வையாளனாகவே இருந்தனர். சிலர் போரை நியாயப்படுத்தினர். ஏனென்றால் தமிழகம் எப்போதோ நுகர்வு கலாச்சாரத்தில் சீரழிந்துவிட்டது.
ஈழத்தில் இருப்பவர்களிடமிருந்தே ஒரு மார்க்சிய‍‍‍ லெனினிய அமைப்பு தோன்ற வேண்டும். அதற்கு தாங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். நீங்கள் ஒரு ஈழத்தமிழன் என்பதினாலேயே இந்த கோரிக்கையை வைக்கின்றேன்.

Kalaiyarasan said...

தோழர் அஸ்கர்,
பொறுமையாக தெளிவாக பதிலளித்தமைக்கு நன்றி. தங்களது நிலைப்பாடு தான் எனதும். எமக்கிடையே சில முரண்பாடுகள் எழுந்திருக்கலாம். நான் ஈழத்தில் இருக்கும் தமிழ் உறவுகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருவதால், அவர்களது நாடித்துடிப்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். ஈழப்பிரச்சினைக்கு குறுந்தேசியவாதம் தீர்வாகாது என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறோம்.
//ஈழத்தில் இருப்பவர்களிடமிருந்தே ஒரு மார்க்சிய‍‍‍ லெனினிய அமைப்பு தோன்ற வேண்டும். அதற்கு தாங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். நீங்கள் ஒரு ஈழத்தமிழன் என்பதினாலேயே இந்த கோரிக்கையை வைக்கின்றேன்.//
இதையே தான் நானும் எதிர்பார்க்கிறேன். உங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். குறிப்பாக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பல (இதில் ஈழத்தமிழர்கள் இனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்கள்) பின்னுக்கு தள்ளப்படடிருந்தன. இதுவரை காலமும் போர்ச் சூழ்நிலை இவற்றைப் பற்றி பேசுவதை பின்போட்டது. இன்று அவை பரவலாக பேசப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இன்றைய இலங்கையின் நிலைமை எப்படி இருக்கிறதென்றால், (தமிழ்) தேசியவாதம் பற்றி பேசுவது உயிருக்கு ஆபத்தாகலாம். ஆனால், மக்கள் தங்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அது குறித்த விழிப்புணர்வு மட்டும் இன்னும் ஏற்படவில்லை.

எஸ் சக்திவேல் said...

>ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது, எப்படி போராட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். தயவுசெய்து, ஈழத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பலியாடுகளாக ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம்

100 % உடன்படுகிறேன்.