Wednesday, December 01, 2021

ஈழத்தமிழரை கேவலப்படுத்தும் மே 17 இயக்க அயோக்கியர்கள்

மே 17 இயக்கத்தினர், தங்களை எப்போதும் நாம் தமிழர் கட்சியிடம் இருந்து பிரித்துப் பார்ப்பார்கள். தங்களை "நாலும் தெரிந்த அறிவுஜீவிகள்"(?) மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆனால் புலிகளுக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்றால் மட்டும் எந்தளவு பொறுக்கித்தனத்திற்கும் கீழிறங்கி செல்வார்கள். அவர்கள் பக்க தவறுகளை சுட்டிக் காட்டி விட்டால் "ராஜபக்சே கைக்கூலி" என்று நாம் தமிழர் பாணியில் இவர்களும் திட்டுவார்கள். கடைசியில் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நிரூபித்து விடுவார்கள்.


ஆதாரம் ஒன்று: 

பேஸ்புக்கில் ஒரு தடவை அன்பே செல்வா என்பவர் டெலோ அழிப்பை நியாயப் படுத்தும் காணொளிப் பதிவை பகிர்ந்திருந்தார். அதில் நிறைய தவறான, கற்பனையான தகவல்கள் சொல்லப் பட்டிருந்தன. நான் இதை சுட்டிக் காட்டியும் அன்பே செல்வா நம்ப மறுத்தார். நான் நேரில் கண்ட சாட்சி சொல்கிறேன் என்று கூறியும் ஒத்துக் கொள்ள மறுத்தார். அன்பே செல்வா திரும்பத் திரும்ப தான் சொல்வதையே நானும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி மாதிரி சித்திரவதை செய்து பொய்யை உண்மை என சொல்ல வைக்கும் அடக்குமுறையை பிரயோகித்துக் கொண்டிருந்தார். 

யாழ்ப்பாணத்தில் டெலோ அழித்தொழிக்க பட்ட பின்னர் தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர், இன்று வரையில் யாழ்ப்பாணம் எப்படி இருக்கும் என்பதை கண்டு கேட்டிராத ஒருவர், அங்குள்ளவர்களுக்கு வரலாற்றுப் பாடம் எடுப்பது எத்தனை பெரிய அபத்தம்? அதுவும் நேரடியாக கண்ணால் கண்ட சாட்சியத்தையும் ஏற்றுக் கொள்ள மறுப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? இது தானா இவர்கள் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு கொடுக்கும் மரியாதை?

இன்று வரையில் மகிந்த ராஜபக்சே கூட அன்பே செல்வா அளவிற்கு நடந்து கொள்ளவில்லை. இன்று யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படையினர் கூட இந்தளவு மோசமாக தமது கருத்தை எம் மீது திணிக்கவில்லை. அண்மையில் மாவீரர் தினத்தன்று காரைநகரில் முன்பு மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் தமது பக்க நியாயங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும், அவர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர், நீங்கள் இப்படித் தான் பேச வேண்டும் என்று அன்பே செல்வா மாதிரி பாடம் எடுக்கவில்லை.



ஆதாரம் இரண்டு: 

கிளப் ஹவுசில் மே 17 காரர்கள் நடத்திய கூட்டத்தில் கார்த்தினி ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு ஆதரவாக பேசுவது என்ற பெயரில் அவர்களை கேவலப் படுத்திக் கொண்டிருந்தார். அதாவது தற்போதும் இலங்கையின் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படையினர் அங்குள்ள தமிழர்களின் வீடுகளுக்கு சென்று பெண்களை இழுத்து வன்புணர்வு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பொய்யான தகவலை சொன்னார். இவர் என்ன சொல்ல வருகிறார்? "ஈழத்தில் வாழும் எந்தவொரு தமிழ்ப் பெண்ணுக்கும் கற்பு கிடையாது... எல்லோரும் சிங்கள இராணுவத்தினரால் பலாத்காரமாக உறவு கொள்ளப் பட்டவர்கள்..." என்று கொச்சையாக பேசுவது தானா தமிழ்த் தேசியம்? இத்தனைக்கும் கார்த்தினியும் ஒரு பெண். அதையும் விட தன்னை ஒரு பெண்ணியவாதி என்று சொல்லிக் கொள்பவர்.

இதற்குப் பிறகு நடந்த கிளப் ஹவுஸ் கூட்டங்களில் கார்த்தினியிடம் அது குறித்து விளக்கம் கேட்க முயன்ற போதெல்லாம் அவர் அகப்படவில்லை. வேண்டுமென்றே கேள்வி கேட்க வந்தவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்தார். நேற்று கிசாமி கூட்டிய "நீங்கள் பேசும் அரசியலுக்காக பெண்களை கொச்சைப் படுத்தாதீர்கள்" என்ற தலைப்பிலான கூட்டத்தில் கார்த்தினியும் மொடறேட்டராக இருந்தார். நீண்ட நேரம் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தவர், அவரிடம் ஒரு கேள்வி என்று தொடங்கியதும் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப் பிறகு அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.

மே 17 நண்பர்களே, நீங்கள் புலிகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிப்பது உங்களது தனிப்பட்ட பிரச்சினை. அதற்காக ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கேவலப் படுத்துவீர்களா? இதுவரையில் மகிந்த ராஜபக்சவோ, சிங்கள இராணுவமோ ஈழத்தமிழர் மீது செய்திராத கருத்து வன்முறைகளை, நீங்கள் "தமிழர்கள்" என்ற பெயரில் செய்வது எந்த வகையில் நியாயம்? இதற்குப் பிறகும் உங்களை நீங்களே தமிழ்த் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொண்டால், உங்களைப் போன்ற அயோக்கியர்கள் உலகில் இருக்க முடியாது.

பிற்குறிப்பு: 
இதற்கு அவர்களிடமிருந்து எந்தவொரு தர்க்கரீதியான பதிலும் வராது. வழமை போல "சிறிலங்கா அரச கைக்கூலி" என்பன போன்ற வசைச் சொற்களை வீசி விட்டு செல்வார்கள். வாதத்தில் தோற்றவன் அவதூறை ஒரு ஆயுதமாக கையில் எடுப்பான்.

No comments: