Monday, February 24, 2014

யார் இந்த கார்ல் மார்க்ஸ்?

Marx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டுள்ளது. இன்று பல தமிழர்கள், பல்கலைக்கழக கலைப் பட்டதாரிகள் கூட, மார்க்சையும், மார்க்சியத்தையும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கல்வி நிலையங்கள், ஒன்றில் மார்க்ஸ் பற்றி எதுவும் கற்பிப்பதில்லை அல்லது தவறாக சொல்லிக் கொடுக்கின்றன. இன்று தவறான வழியில் வழி நடத்தப் படும் இளைய தலைமுறையினருக்கு, Marx for Beginners நூல் பயன் மிக்கதாக இருக்கும்.

_________________________________________________________________________________________________

- சார்லி (கார்ல் என்ற ஜெர்மன் சொல்லின் ஆங்கில வடிவம்) மார்க்ஸ், ஒரு யூத- ஜெர்மன் தத்துவ ஞானி. அவர் 1818 - 1883 காலப் பகுதியில் வாழ்ந்து வந்தார், அல்லது போராடிக் கொண்டிருந்தார். உலகம் முழுவதும், கம்யூனிசத்தை கண்டுபிடித்தமைக்காக அவரைக் குற்றஞ் சாட்டினார்கள். "ஐயோ, ஏசுவே! அவர் ஒரு கிறிஸ்துவின் எதிரி!"

- மனித சமுதாயத்தில் மூன்றில் ஒரு பகுதி, அவரது எழுத்துக்களையும், கருத்துக்களையும் நடைமுறைப் படுத்த விரும்புகின்றது. மிகுதி மூன்றில் இரண்டு பங்கினர், அவரைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

- நீங்கள் எங்கே சென்றாலும், போல்ஷெவிக், மார்க்சிஸ்ட், சோஷலிசம், லெனினிசம், மாவோயிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற சொற்களை பிழையாக புரிந்து கொள்ளும் மக்களைக் காணலாம்.
 "மூலதனம், வர்க்கப் போராட்டம், தொழிலாளர் சக்தி, பாட்டாளி வர்க்கம்... " 
 "இவர் என்ன சொல்றாரு? ஒண்ணுமே புரியலையே?"

- உண்மையில், மார்க்சியம் இன்றைய உலகத்தை இரண்டு முகாம்களாக்கி உள்ளது. ஒரு தரப்பினர், அவர் மேல் தங்களது நம்பிக்கையை வைத்துள்ளனர். மறு தரப்பினர் அவரை வெறுக்கிறார்கள்.
அத்தோடு, மூன்றாவதாக ஒரு குழு இருக்கிறது.
…… அவர்களுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது.

- பைபிள், குரான் மாதிரி, மார்க்ஸ் சொன்னதை பலர் மேற்கோள் காட்டப் பேசுகின்றார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே அவரைத் தெரியும். இன்னும் கொஞ்சப் பேர் தான் அவரைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

- கார்ல் மார்க்ஸ், உலகில் உள்ள எல்லாத் துறைகளிலும் ஆர்வம் காட்டியுள்ளார். தோழர் மார்க்ஸ் செல்வாக்கு செலுத்தாத துறை எதுவும் இல்லை. கடந்த நூறு வருடங்களாக அந்த நிலைமை பெருமளவிற்கு மாறவுமில்லை. பொருளாதாரம், இலக்கியம், விண்வெளி ஆராய்ச்சி, நாடகவியல், வரலாறு, கல்வி, மனித உறவுகள், சமூக மாற்றங்கள், புரட்சிகள், மருத்துவம், தொழிற்துறை, விவசாயம், ஊடகவியல்….. எல்லா இடங்களிலும் அந்த மனுஷன் தலை முடியை உதிர்த்துள்ளார்…. ஆனால், அவரின் தலையில் வழுக்கை மட்டும் விழவில்லை!

- மார்க்சின் கோட்பாட்டு அறிவும், நடைமுறையும், இருபது நூறாண்டுகளாக சாத்தியமில்லாதிருந்த பல விடயங்களை சாத்தியமாக்கியுள்ளது. அதாவது, மனிதனை மனிதன் சுரண்டும் முறையில் இருந்து விடுதலை…. சுருக்கமாக: நாம் இன்று வசதியாக வாழ்கிறோம் என்றால், அதற்கு நாங்கள் மார்க்சிற்கு கடமைப் பட்டுள்ளோம். சமூகக் காப்புறுதி, ஓய்வூதியம், விடுமுறைகள், தொழிற்சங்கம், புலமைப் பரிசில்… நாம் அனுபவிக்கும் இன்னும் பல சலுகைகளில் மார்க்ஸ் மறைமுகமாகப் பங்களித்துள்ளார். உடனே ஒரு முதலாளிய ஆதரவாளர் சொல்வார்: “அது உண்மை அல்ல. நான் எனது முதலாளிக்கு கடமைப் பட்டுள்ளேன்!”

- அரசமைப்பு சட்டங்களை கணக்கில் எடுக்காமல் விட்டால், உலகில் முன்னொருபோதும் இல்லாத தன்னெழுச்சி, என்று கருதப் படும் புரட்சிகள் உட்பட, எல்லாப் புரட்சிகளும் மார்க்சிய மூலத்தைக் கொண்டுள்ளன.

போப்பாண்டவர்: “அந்த _ _ _ _ மார்க்ஸ் பற்றி, வத்திகான் சபைக் கூட்டங்களிலும் பேசுகிறார்கள்!”

- லத்தீன் அமெரிக்க நாடுகளில், உழைக்கும் மக்களின் நலனுக்காக பாடுபடும் கிறிஸ்தவ பாதிரிகள் மார்க்ஸ் பற்றி கதைக்கிறார்கள். இராணுவ ஜெனரல்கள் கதைக்கிறார்கள். எசுயிஸ்ட் சபையில் மார்க்ஸ் பற்றி படிக்கிறார்கள். சொந்த நாட்டில் மார்க்சியம் பேச முடியாதவர்கள், லத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சிய நாடான கியூபாவுக்கு தப்பியோடி இருக்கிறார்கள்.

... இருந்தாலும், உலகில் யாருக்குமே மார்க்சியத்தில் அக்கறை இல்லை என்று, இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள்.

- ஜெர்மனியில் உள்ள Trevirorum (தற்போது: Trier) எனும் ரோமர்களின் பண்டைய நகரம் ஒன்றில் கார்ல் மார்க்ஸ் பிறந்தார். அவரின் தந்தையார் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த வழக்கறிஞர். அதனால், தனது மகனையும் சட்டம் பயில்வதற்காக, பொன் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பினார். 19 வயது இளைஞனுக்கு உரிய, அனைத்து பருவ வயது கோளாறுகளும் மாணவனான மார்க்சையும் பாதித்தன. பொன் பல்கலைக்கழகத்தில் இருந்து, பெர்லின் பல்கலைக்கழகத்திற்கு மாற்றலாகி, அங்கே தனது கல்வியை முடித்துக் கொண்ட மார்க்ஸ், ஒரு ஆசிரியராக வேலை செய்வதற்காக பொன்னுக்கு திரும்பி வந்தார்.ஒரு நாஸ்திகனாக, அரச எதிர்ப்பாளராக திரும்பி வந்த கார்ல் மார்க்சிற்கு வேலை கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

- கார்ல் மார்க்ஸ் ஒரு பரம்பரை யூத குடும்பத்தில் பிறந்தாலும், யூத மத நம்பிக்கைகளுடன் வளர்க்கப் படவில்லை. அவரது தந்தை, லுதேர்ன் மதத்திற்கு (புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம்) மாறியிருந்தார். இளம் வயதில் மார்க்சும், கிறிஸ்தவ மத நம்பிக்கையாளராக தான் வளர்ந்தார்.

- பெர்லின் பல்கலைக்கழகம் மார்க்சின் மத நம்பிக்கையை அடியோடு மாற்றியது. அவரை ஒரு நாத்திகர் ஆக்கியது. அன்று, பெர்லின் பல்கலைக்கழகத்தில் புதிய புதிய சிந்தனைகள் பரவி இருந்தன. மனிதன், உலகம் பற்றிய மத நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின. சிந்தனையாளர்கள் மனித சமுதாயம் குறித்த தேடுதலில் இறங்கியிருந்தனர்.
“கடவுள் என்பது என்ன?” 
“வாழ்க்கையே ஒரு புதிர்." 
“வாழ்க்கை என்றால் என்ன?” 
“நாம் ஏன் வாழ்கின்றோம்?”

- “என்ன செய்ய வேண்டும்?” கார்ல் மார்க்ஸ் சிந்தித்தார். ஒரு வருமானத்தை தேடிக் கொள்வதற்காக, அவர் அந்தக் கேள்வியை கேட்கவில்லை. “வாழ்க்கையின் அர்த்தம் என்ன? எந்த நோக்கத்தை ஈடேற்றுவதற்காக நான் வாழ்கிறேன்?”

- வாழ்க்கை குறித்த தேடுதலுக்கு விடை கிடைக்க வேண்டுமென்றால், தத்துவவியல் படிக்க வேண்டுமென்று மார்க்ஸ் முடிவெடுத்தார். நிச்சயமாக, தந்தை அதனை விரும்பவில்லை. (தத்துவம் படித்தால் வேலை கிடைக்குமா?) பிரெடெரிக் ஹெகல் என்ற ஜெர்மன் தத்துவஞானியின் நூல்களை மார்க்ஸ் விரும்பிக் கற்றார். அந்தக் கால ஜெர்மனியில், ஹெகலை ஆதரித்தும், எதிர்த்தும் ஒரு குழு உருவாகி இருந்தது.

- ஹெகலின் முன்னோடியான இமானுவேல் கான்ட் கடவுளின் இருப்புக் குறித்து கேள்வி எழுப்பக் கூடாதென்றார். கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதனை எதுவும் நிரூபிக்க முடியாது. ஆனால், “கடவுள் எனும் கோட்பாடு" ஹெகலினால் கேள்விக்குட்படுத்தப் பட்டது. அதற்கு அவர் “பான்லோகிசம்" என்ற கோட்பாட்டு அடிப்படையை பயன்படுத்தினார். Panlogism என்ற கிரேக்க சொல்லின் அர்த்தம், எல்லாவற்றிற்கும் காரணம் கண்டுபிடித்தல்.

- ஹெகலின் தத்துவங்கள் மார்க்சை நன்றாகக் கவர்ந்து விட்டன. ஹெகலின் தத்துவப் படி, “யுத்தம், போராட்டம், புரட்சி, இவற்றின் ஊடாகத் தான், மனித இனம் வளர்ச்சி அடைகின்றது.” அதாவது அடக்குமுறையாளர்களுக்கு எதிரான, அடக்கப் பட்டவர்களின் போராட்டம். சமாதானம், நல்லிணக்கம் எந்தவொரு முன்னேற்றத்தையும் கொண்டு வருவதில்லை.

- ஹெகலின் தத்துவ விசாரம், சமூகப் போராட்டம் பற்றியது அல்ல. அது ஆன்மீகப் போராட்டம் சம்பந்தமானது. முதலாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும் இடையிலான போராட்டம் குறித்து ஹெகல் சிந்திக்கவில்லை. ஹெகல் இறந்த பின்னர், அவரது சீடர்கள் வலது, இடது என இரண்டு பிரிவுகளாக பிளவு பட்டனர். ஹெகலின் மதம், ஆன்மிகம் பற்றிய தத்துவங்களை முக்கியமாக கருதிய வலதுசாரிகள் ஒரு புறம். அவரது தத்துவத்தை முற்போக்கான பாதையில் கொண்டு செல்ல விரும்பிய இடதுசாரிகள் மறுபுறம்.

- லுட்விக் பொயர்பாக் என்ற இன்னொரு தத்துவஞானி இடதுசாரி ஹெகலிய குழுவை சேர்ந்தவர். ஹெகலின் தத்துவங்களை நடைமுறைப் படுத்த எண்ணினார். கார்ல் மார்க்ஸ் அவரை நூறு சதவீதம் ஆதரித்தார்.

- ஹெகலிய ஆதரவாளர்கள், முடிவுறாத விவாதங்களில் ஈடுபட்டனர். அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இதற்கிடையே கார்ல் மார்க்ஸ் ஒரு ஊடகவியலாளராக ரைன் மாநில பத்திரிகையில் (Neue Rheinische Zeitung) வேலைக்கு அமர்ந்தார். மிக விரைவில், மார்க்சின் திறமை காரணமாக ஆசிரியர் குழுவிற்கு பதவி உயர்த்தப் பட்டார். அந்தப் பத்திரிகை மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததால், அரசாங்கம் அலுவலகத்தை இழுத்து மூடி விட்டது. மக்கள் விரோத அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும், அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கும், பத்திரிகை ஊடகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை கார்ல் மார்க்ஸ் நிரூபித்தார்.

- இதற்கிடையில், ஒரு சாதாரண மனிதனான கார்ல் மார்க்ஸ், குடும்பம் பந்தத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வசதியான மேட்டுக்குடி குடும்பத்தை சேர்ந்த ஜென்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், எந்த வேலையுமற்ற, எந்த வருமானமுமற்ற மார்க்சினால், ஜென்னியை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள முடியுமா? அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த ஜென்னியின் தந்தை, தனது மகளின் எதிர்காலத்தை எண்ணி கவலைப்பட்டதில் வியப்பில்லை.

- 1843 ம் ஆண்டு, மார்க்ஸ், ஜென்னி தம்பதிகள் பாரிஸ் நகரில் சென்று குடியேறினார்கள். அன்று பிரான்ஸ் நாட்டில் தான், ஐரோப்பாவின் பிரபலமான புரட்சியாளர்கள் வாழ்ந்து வந்தனர். பிராங், புருடொன், லெரூ, பொட்கின், பகுனின் இன்னும் பலர். அவர்களது சிநேகிதம் கிடைக்கப் பெற்ற மார்க்ஸ், இன்னும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார்.

- மார்க்ஸ் பாரிசில் வாழ்ந்த காலத்தில், முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களான ஆடம் சிமித், ரிக்கார்டோ ஆகியோரின் எழுத்துக்களை படித்தார். மேற்கொண்டு பொருளியல் துறையில் கல்வி கற்க விரும்பினார்.

- பிரெடெரிக் எங்கெல்ஸ் எனும் ஒரு புலம்பெயர்ந்த ஜெர்மானியர், இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார். மார்க்சிற்கு எங்கெல்சின் நட்புக் கிடைத்தது. எங்கெல்ஸ், ஒரு இடது ஹெகலியவாதி. ஒரு ஆடைத் தொழிற்சாலை முதலாளியின் மகன். மான்செஸ்டர் நகரில், தந்தையின் தொழிலகத்தை நிர்வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலன் குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். (ஒரு முதலாளியான தந்தை உழைத்த பணத்தை, தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவிய நூல்களை எழுதுவதில் செலவிட்ட பொதுநலவாதி.)

- அந்தக் காலங்களில், உழைப்பாளிகளின் ஏழ்மை பற்றி வெளியுலகிற்கு எடுத்துரைப்பதற்கு, நிறைய எழுத்தாளர்கள், கலைஞர்கள் முன்வந்தனர். எங்கெல்ஸ் எழுதிய “இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் அவல நிலை” என்ற நூல், மார்க்சை கவர்ந்து விட்டது. மார்க்சும், எங்கெல்சும் இணைபிரியாத் தோழர்கள் ஆனார்கள்.

- கார்ல் மார்க்ஸ் பிரான்சில் வாழ்ந்து வந்த போதிலும், அவரது எழுத்துக்கள் ஜெர்மன் அரசை சங்கடத்திற்கு உள்ளாக்கின. ஜெர்மன் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்திற்கு தூண்டிக் கொண்டிருப்பதாக, ஜெர்மன் அரசு மார்க்ஸ் மீது குற்றஞ்சாட்டியது. ஜெர்மனியின் அழுத்தம் காரணமாக, பிரான்ஸ் அவரை வெளியேற்றியது. கார்ல் மார்க்ஸ் எல்லை கடந்து பெல்ஜியம் சென்று, அரசியல் அகதியாக தஞ்சம் கோரினார். ஆனால், அங்கிருந்து வெளியேறி, இங்கிலாந்தில் புகலிடம் கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சாகும் வரையில் இங்கிலாந்தில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாத அகதியாக காலம் கழித்தார்.

- இறுதிக் காலத்தில், லண்டனில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், ஜென்னி தம்பதிகள் வறுமையில் வாடினார்கள். மார்க்சிற்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை. அவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகள், மருத்துவ வசதி இன்றி இறந்து விட்டன. பணத் தேவைக்காக, உறவினர்கள், நண்பர்களிடம் இரந்து வாழ வேண்டிய நிலைமை. ஒரு தடவை, குழந்தையின் உணவுக்காக, ஒரு நண்பரிடம் இரந்து வாங்கிய இரண்டு பவுன்கள், அந்தக் குழந்தையின் சவப் பெட்டி வாங்குவதற்காக செலவிட வேண்டி இருந்ததை, ஜென்னி எழுதி வைத்துள்ளார்.

- கார்ல் மார்க்ஸ், மாற்றி உடுக்க உடை இல்லாமல், வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கிய காலங்களும் உண்டு. இந்த நிலைமையில், எழுதுவதற்கு தாள் வாங்குவதை நினைத்துப் பார்க்க முடியாது. அத்தகைய கொடிய வறுமையின் மத்தியில் தான், மார்க்ஸ் மூலதனம் என்ற நூலின் மூன்று பாகங்களையும் எழுதிக் கொண்டிருந்தார். நிச்சயமாக, உற்ற நண்பரான எங்கெல்ஸ் மார்க்ஸ் குடும்பத்திற்கு உதவிக் கொண்டிருந்தார். இல்லாவிட்டால், உழைக்கும் வர்க்கத்தின் விவிலிய நூலாக கருதப் படும், காலத்தால் அழியாத காவியங்களான மூலதனம் என்ற நூலை நாம் இன்று வாசிக்க முடிந்திராது.

- கார்ல் மார்க்ஸ் உயிருடன் வாழ்ந்த காலங்களில், அவரது எழுத்துக்கள் குறித்து பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் அறிந்திருக்கவில்லை. ஒரு சிறிய புத்திஜீவிகள் வட்டத்திற்குள் தான் அவை வாசிக்கப் பட்டன. மார்க்ஸ் எந்த உழைக்கும் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காக எழுதினாரோ, அவர்களில் யாருக்கும் யார் அந்த கார்ல் மார்க்ஸ் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால், மார்க்ஸ் இறந்த பின்னர், அவரது எழுத்துக்கள் பல்வேறு தொழிற் சங்கங்களில் வாசிக்கப் பட்டன. பலர் அதைப் பற்றி விவாதித்தார்கள்.

- கார்ல் மார்க்ஸ் பெல்ஜியத்தில் வாழ்ந்த காலத்தில், “கம்யூனிஸ்ட் லீக்” எனும் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் எங்கெல்சுடன் சேர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற சிறிய கைநூலை வெளியிட்டார். இன்று அது, விவிலிய நூலுக்கு அடுத்த படியாக, அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

(நன்றி: Marx for Beginners)

6 comments:

kavignar said...

essential post to introduce the youngsters.

Unknown said...

நல்ல முயற்சி நன்று,வாழ்த்துகள்.

Kalaiyarasan said...

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி, நண்பர்களே. இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை மூலம், இந்த சமூகத்திற்கு என்னால் முயன்ற ஒரு சிறு உதவி செய்திருக்கிறேன் என்ற திருப்தி கிடைத்திருக்கிறது.

SaraK said...

அய்யா, இந்த புத்தகம், தமிழ்ல இருக்கா...

Kalaiyarasan said...

//அய்யா, இந்த புத்தகம், தமிழ்ல இருக்கா...// நான் அறியவில்லை. யாராவது ஒரு பதிப்பகத்தார் இதனை தமிழில் கொண்டு வர முயற்சிக்கலாம்.

சி பழனி said...

தோழர் PDF பதிவு இருந்தால் கொடுக்கவும்