Tuesday, September 18, 2012

இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்

[தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!]
(இரண்டாம் பாகம்)

"சீமான், வைகோ ஆகிய தமிழினக் காவலர்கள், ராஜபக்சவின் தீவிர எதிரிகள். இவர்களுக்கு இடையில் தொடர்பு ஏற்பட வாய்ப்பேயில்லை. அதனை நாங்கள் நம்ப மாட்டோம்." என்று பலர் பிடிவாதமாக மறுக்கலாம். இப்படி மறுப்பவர்கள், பாஸிசத்தின் தனித் தன்மையை தவறாக மதிப்பிட்டுள்ளார்கள். உலகம் முழுவதும், ஒவ்வொரு நாட்டினதும் பாஸிச சக்திகள், ஒன்றை மற்றது எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும். ஏனெனில் இது அடிப்படையில் தேசியவாதங்களுக்கு இடையிலான முரண்பாடு ஆகும். ஆனால், சந்தர்ப்பம் வாய்த்தால், அனைத்து நாடுகளிலும் உள்ள பாஸிச சக்திகள் ஒன்று சேர்ந்து விடும். இதற்கு சிறந்த உதாரணம், இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஐரோப்பா. ஜெர்மனிக்கும், பிரான்சுக்கும் இடையில் நடந்த நூறாண்டு கால போரின் விளைவாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் வெறுப்புணர்வு உச்சத்தில் இருந்தது. இருப்பினும், பிரான்ஸ் நாசிகளினால் ஆக்கிரமிக்கப் பட்ட பின்னர், தென் பிரான்ஸில் "வீஷி அரசு", நாஜிச நட்பு நாடாக இயங்கவில்லையா? 

இன்று சில தீவிர வலதுசாரி தமிழர்கள், ஹிட்லரை ஆராதிப்பதுடன், நாஜி கொள்கைகளை நியாயப் படுத்தி வருகின்றனர்.  அதே நேரம், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள வெள்ளையின நவ-நாஜி இயக்கங்கள், தமது நாடுகளில் வாழும் தமிழர்களை விரட்டியடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன. இந்த உண்மை நமது தமிழ் நாஜிகளுக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டும், ஏன் நாஜிசத்தை ஆதரிக்கிறார்கள்? அங்கே தான் நாம் உணர மறுக்கும், பன்னாட்டு பாஸிச சக்திகளுக்கு இடையிலான தொடர்பு மறைந்திருக்கிறது. அதாவது, இந்த பாஸிச சக்திகள், தமது நாட்டில், தம்மின மக்களை  தாமே ஆள விரும்புகின்றன. தமது இனத்தை சேர்ந்தவர்கள், பிற நாடுகளில் இனப்படுகொலை செய்யப்பட்டு, அகதியாக அடித்து விரட்டப் பட்டால், அது அவர்களது தேசிய அரசு கொள்கைக்கு உரம் சேர்க்கும். 19 ம் நூற்றாண்டில், போலந்திலும், ரஷ்யாவிலும் வாழ்ந்த ஜெர்மன் சிறுபான்மையினம் இனப்படுகொலைகளுக்காளாகி அடித்து விரட்டப் பட்டனர். ஜெர்மனியில் அந்தப் பேரவலம் பற்றி இடையறாது பிரச்சாரம் செய்து வந்த நாசிக் கட்சி, 20 ம் நூற்றாண்டில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா?  ஒவ்வொரு மொழி பேசும் இனத்தையும், அதற்கென்று ஒதுக்கப் பட்ட நாடுகளில் வாழ வைப்பது, தீவிர தேசியவாதிகளின்  அடிப்படை தத்துவம் என்பதை நாம் மறந்து விடலாகாது. 

சீமான், வைகோ போன்றவர்களைக் கண்டு, ராஜபக்ச அன் பிரதர்ஸ் லிமிட்டட் அஞ்சுவதாக, தமிழ் நாட்டில் ஒரு மாயையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆனால், சிங்கள அரசியல்வாதிகளோ, சிங்கள ஊடகங்களோ, இவர்களை கண்டு கொள்வதில்லை என்பது தான் உண்மை. சீமான், வைகோ கோஷ்டியினரின் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதனை ஒரு அச்சுறுத்தலாக கணக்கெடுப்பதில்லை. ஆனால், முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, சிறிலங்காவுக்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தால், உடனே சிங்கள அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வரிந்து கட்டிக்  கொண்டு எதிர்க்கத் கிளம்பி விடுவார்கள். அவர்கள் சீமான், வைகோ வகையறாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணம் என்ன? இலங்கையில் ஆளும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும், தமிழகத்தின் பாஸிச சக்திகளுக்கும் இடையிலான நுண்ணரசியல், எமது கண்ணுக்குப் புலப்படாது.  தமக்கு உண்மையான நண்பர்கள் யார், உண்மையான எதிரிகள் யார் என்பதில், அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். 

தமிழ் நாட்டில் மட்டுமே அதிகளவு சினிமாக்காரர்கள் அரசியலில் குதிக்கின்றனர். இதனை உலகில் வேறெங்கும் காணமுடியாது. நாம் அடிக்கடி திட்டிக் கொண்டிருக்கும், "மொக்கு  சிங்களவர்கள்"  கூட, அரசியலில் நுழைந்த சினிமாக் காரர்களை, தேர்தலில்  வெல்ல வைக்கவில்லை.  தமிழகத்தில், சினிமாத் துறையை சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து முதலமைச்சராக இருந்துள்ளனர். 21 ம் நூற்றாண்டு தமிழ் தேசிய இயக்கத்திற்கும், சினிமாத் துறையை சேர்ந்த ஒருவர் தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று யாராவது நினைத்திருக்கலாம். அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கு சீமான் கிடைத்தார். ஒரு காலத்தில் பெரியாரிசம், நாஸ்திகம் பேசிக் கொண்டிருந்த சீமான், 180 பாகை கோணத்தில் திரும்பி தமிழ் தேசியத்திற்குள் குதித்தார்.  அப்போதெல்லாம் சீமானின் தலைகீழான கொள்கை மாற்றம் குறித்து, யாரும் கேள்வி எழுப்பவில்லை.

தமிழீழத் தேசியத்தில், "பெரியாரிசம் அல்லது நாஸ்திகம்  சிறிதளவு தாக்கத்தைக் கூட செலுத்தவில்லை," என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சீமான், பெரியாரிசத்தில் இருந்து தமிழ் தேசியத்தில் குதித்தவர். நாளைக்கே இந்துத்துவா இயக்கத்தில் குதிக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? இறுதியில் அது தான் நடந்தது. மும்பை சென்று, இந்து மதவெறி பாசிஸ்டுகளான சிவ சேனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னால், "நாடு கடந்த தமிழீழ அரசு" க்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார். இதன் மூலம், அமெரிக்காவில் சி.ஐ.ஏ.யின்  கண்காணிப்பின் கீழ் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கும், தனக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தினார். மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியும், சிறிலங்கா அரசின் புனர்வாழ்வுத் திட்டத்தின் அறங்காவலருமான கே.பி. உருவாக்கியது தான், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்பதை பலர் மறந்து விட்டனர். புலிகள் இயக்கத்தில், தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்த, சர்வதேச தொடர்பாளரான கே.பி.,  2007 ம் ஆண்டளவில், தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.('KP arrested' in Thailand, http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/09/070911_kp_arrested.shtml) ஆனால், பின்னர் கைது செய்யப்படவில்லை என்ற அறிவிப்பும் வந்தது. ஒன்றுக்குப் பின் முரணான தகவல்கள் சந்தேகத்தைக் கிளப்புகின்றன.  அன்றிலிருந்து சி.ஐ.ஏ., மற்றும் சிறிலங்கா புலனாய்வுத் துறையின் உளவாளியாக செயற்பட்டு வந்திருக்க வேண்டும். 

வைகோ, சீமான் ஆகியோருக்கும், சிறிலங்கா அரசுக்கும் தொடர்பிருப்பதாக, எந்தவொரு தமிழ் உணர்வாளரும் கற்பனை பண்ணக் கூட  மாட்டார். ஆனால், மேற்குறிப்பிட்ட தரவுகள், அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை தெரிவிக்கின்றன. தமிழகத்தில், ஈழத் தமிழர் பெயரால் அரசியல் நடத்தும் எந்தவொரு தலைவரும், இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான செயலிலும் இறங்கவில்லை. மாறாக, இனவாதக்  கருத்துகளை பரப்புவதிலும்,  இனவெறி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துகின்றனர். தமிழகத்திற்கு சுற்றுலா வந்த சிங்களவர்களை விரட்டி அடிப்பதை, இன மானம் காத்த வீரச் செயலாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். ஏற்கனவே, "சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்கள், தமிழர்களை கொன்ற கொடியவர்கள்." என்பன போன்ற கருத்துக்கள் வெகுஜன ஊடகங்களாலேயே பரப்பப் பட்டு வந்துள்ளன.

சிறிலங்கா இராணுவம், புலிகளையும், தமிழ் மக்களையும் வேறு படுத்தி பாராமல் கொன்று குவித்தது.  தமிழினவாதிகளும், "சிங்கள இராணுவத்தையும், சிங்கள மக்களையும் தம்மால் வேறு படுத்தி பார்க்க முடியாது," என்று வாதாடுகின்றனர்.   தனது வாழ்நாளில் ஒரு சிங்களவனைக் கூட கண்ணால் கண்டிராத தமிழக மக்களை, தம் பக்கம் இழுப்பது சுலபம் என்று தமிழினவாதிகள் நம்புகின்றனர். அந்த வகையில், சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்கள், ஊடக அவதானத்தைப் பெறுவதுடன், நிறைய ஆதரவாளர்களையும் தேடித் தரும் என்று கணக்குப் போட்டுள்ளனர். ஐம்பது வருடங்களுக்கு முன்னர், சிங்கள இனவாதிகளும் இதே மாதிரியான அரசியலை கடைப்பிடித்தனர். சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை தாக்கும் இனவாத அரசியல் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணினார்கள். ஆனால், தமிழகத்தில் இனவாதிகள் ஆட்சிக்கு வருவது, இன்றைய நிலையில் நடக்க முடியாத ஒன்று. அதனால், பாஜக போன்ற இந்து பேரினவாதிகளுடன் கூட்டுச் சேருவதன் மூலம், எதிர்காலத்தில் அகில இந்திய பாஸிச அரசு அமைப்பதற்கு துணை போகலாம். 

ஏற்கனவே சிறிலங்காவில் பாஸிச ஆட்சி நடத்தும் ராஜபக்சவுக்கும், இந்தியாவில் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கும் இடையில் சிறந்த நட்புறவு காணப்படுகின்றது. விஷ்வ இந்து பரிஷத்தின் கிளை ஒன்று, பல தசாப்தங்களாக கொழும்பு நகரில் இயங்கி வருகின்றது. விஷ்வ ஹிந்து பரிஷத் தூதுவர்கள், சிங்கள அரசையும், விடுதலைப் புலிகளையும், ஒரே இந்துத்துவா கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளனர். பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள், சைவ சமயத்தை பின்பற்றும் இந்துக்களாக இருப்பதால், புலிகளை ஒரு இந்து விடுதலை இயக்கமாக மாற்ற முயன்றுள்ளனர். மறு பக்கத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு எதிரான புத்த பிக்குகளின் "புனிதப் போருக்கும்" ஆதரவு தெரிவித்துள்ளனர். கொழும்பில் கிறிஸ்தவ சபை, தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னால், இந்துத்துவா வாதிகளின் கரங்களும் மறைந்திருக்க வாய்ப்புண்டு.
The VHP, an affiliate of the Rashtriya Swayamsewak Sangh (RSS), India's most influential Hindu group, has already opened about a dozen units across Sri Lanka in a bid to build up unity among the country's Tamil-speaking Hindu minority....  Vigyananand, 38, dressed in giveaway saffron robes like a wandering monk, attended the April 10 press conference of LTTE leader Velupillai Prabhakaran as an accredited representative of a VHP publication. Although he has been to Sri Lanka 10 times since 1999, this was the first time he went to LTTE-held areas....   Vigyananand, who knows only Hindi and English, seemed to have no objection to Buddhism and sought to emphasise that Buddhism was also facing threats from the clergy. "I advised Buddhist monks to go to villages to spread their religion and to counter Christianity like we have done in India," he said. "As a religion nobody is suppressing Hinduism in Sri Lanka. But with the exodus of Tamils and Christian influence growing, Hindus here face problems." He also accused the clergy of playing a major role in fuelling the Tamil separatist conflict that has claimed around 60,000 lives in Sri Lanka since 1983 and blamed it for causing a military showdown between the Tigers and India in 1987-90. 
(VHP now building up Hindu unity in Sri Lanka, http://india.indymedia.org/en/2002/04/1069.shtml)  

பத்து வருடங்களுக்கு முன்னர், இந்துத்துவா நிதியில், மலையகத்தில் ஒரு இராமர் கோயில் கட்டப்பட்டது. அங்கே பிரமாண்டமான அனுமார் சிலை ஒன்றும் கட்டப்பட்டது. சீதையை இராவணன் சிறை வைத்திருந்த  இடத்தை அனுமான் வந்து பார்த்த கதையை நினைவு கூறுகிறார்கள் போலும்.  அண்மைக் காலமாக, இலட்சக் கணக்கான வட இந்திய உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் எவரும், இராமாயணக் கதை நடந்த இடத்தை பார்க்காமல் திரும்புவதில்லை. அந்தளவுக்கு சுற்றுலா நிறுவனங்கள், இந்தியாவில் பிரச்சாரம் செய்கின்றன. வருங்காலத்தில், அகண்ட இந்து சாம்ராஜ்யம் உருவாவதற்கு, இந்த சுற்றுலாத் திட்டம் உதவலாம். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் நடந்தால், அதனால் இரண்டு தரப்பும் இலாபமடைய வேண்டாமா? இலங்கையும் தனது பிரஜைகளை இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது, இந்துத்துவா வாதிகளின் அன்பான வேண்டுகோள்.

முன்பெல்லாம் எண்ணிக்கையில் குறைந்த சிங்களவர்கள் தான் இந்தியாவுக்கு சுற்றுலா செல்வார்கள். அவர்களும், வட இந்தியாவில் புத்த மதம் சம்பந்தமான இடங்களைத் தான் பார்வையிட்டு திரும்புவது வழக்கம். தமிழ் நாட்டுக்கும் சிங்களவர்கள் வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும், மாணவர்களாக அல்லது வர்த்தக நோக்கோடு வந்திருப்பார்கள். அவர்களுக்கு இது வரையில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை.  புலிகளை இழிவுபடுத்தும், "பிரபாகரன்" என்ற சிங்களத் திரைப்படம் எடுத்த தயாரிப்பாளருக்கு அடித்த சம்பவத்தை தவிர, வேறெந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 2012, செப்டம்பர் மாதம், பூண்டி மாதா கோயிலுக்கு விஜயம் செய்த யாத்திரீர்கள் கூட, தாம் கடந்த 15 வருடங்களாக வந்து செல்வதாக கூறினார்கள். இந்த விபரம் எல்லாம், தமிழகத் தமிழினவாதிகளுக்கு தெரியாது என்று கூற முடியாது. கண்ணுக்குப் புலப்படாத சக்தி ஒன்று, "சிங்களவர்கள் எப்போது, எங்கே வருகிறார்கள்?"  என்பன போன்ற விபரங்களை கொடுக்கின்றது. சிங்கள யாத்திரீகர்கள் மேல் தாக்குதல் நடத்துமாறு தூண்டி விடுகிறது.

(இன்னும் வரும்)

மூன்றாம் பாகம்:
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

இந்தக் கட்டுரையின் முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு: 
1. தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!

10 comments:

சிவக்குமார் said...

//180 பாகை கோணத்தில் திரும்பி தமிழ் தேசியத்திற்குள் குதித்தார். அப்போதெல்லாம் சீமானின் தலைகீழான கொள்கை மாற்றம் குறித்து, யாரும் கேள்வி எழுப்பவில்லை.//
சீமான் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கிய போதே சீமான் ஸ்ரீமான் ஆகிவிட்டார் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன். நாம் தமிழர் கொள்கை ஆவணம் வெளியிட்ட போது படு பக்காவான இந்துத்துவாக் கொள்கை என்று பச்சையாகவே தெரிந்தது. பெரியாரியத்துடன் நேரடியாக மோதி வெல்ல முடியாது இந்துத்வா தமிழ்தேசியத்தின் பெயரால் வருகிறது. தமிழ்நாட்டில் பெரியாரியத் தாக்கத்தின் விளைவாக பல ஈழ் ஆதரவு அல்லது தமிழ்தேசிய இயக்கங்கள் இந்துத்துவா எதிர்ப்பைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஆனால் ஈழத் தமிழ்தேசியம் என்பது இந்துத்துவாவுக்கு மிக நெருக்கமானது. ஈழத் தமிழ்த்தேசியர்கள் இந்தியாவைத் தமது தந்தை நாடு என்றவர்கள்.

இவர்கள் இஸ்ரேலை கூச்சமின்றி ஆதரிப்பவர்கள். அதே போல் இந்தியாவின் ஆர் எஸ் எஸ் காரர்களும் இஸ்ரேல் ஆதரவாளர்கள். பிராமணரும், யூதரும் பழைய பெருமை வாய்ந்த இனத்தவர்கள், என்று கருதுகிறவர்கள். அதே நேரம் ஆர் எஸ் எஸ் ஹிட்லரின் ஆதரவாளர்கள் என்பதும் முரண் நகை. அதாவது ஹிட்லரை மறைமுகமாக, இஸ்ரேலை நேரடியாக ஆதரிக்கும் தமிழர்களைப் போலவே. இப்படி தமிழ்த் தேசியர்களும், இந்துத்துவாக்களும் ஒன்று படுகிறார்கள்.

அடுத்ததாக சிங்களர் புத்த வெறியர்கள் எப்படி இந்துத்துவாக்களுடன் ஒன்றாகிறார்கள் என்றால், தேரவாத புத்தம் இவர்கள் பின்பற்றுவது. இந்துமதம் அல்லது வைதீகப்பார்ப்பணிய மதம் இந்தியாவில் செல்வாக்குடன் இருந்த புத்தமதத்தை ஆரியமயமாக்கி அதை அழித்தது, கடவுள் இல்லை என்ற புத்தரை(விஷ்ணுவின் அவதாரமாக) கடவுளாக்கி வணங்கும் இலங்கையிலிருக்கும் புத்தமதம் இந்து மதத்தில் அடங்க வல்லது. மஹிந்தர் போன்றோர் திருப்பதி போன்ற இந்துக் கடவுள்களையும் வணங்கிச் செல்வது இதனால்தான்.

சீமான் 1970 களில் பிரபலமான தமிழர்களுக்கு எதிரியாகச் சித்தரித்து இனவெறி அரசியலைத் துவக்கி வைத்த பால் தாக்கரேவை வெட்கமின்றி பெருமைப்படுத்திய தமிழினக்காவலர். 1980 களில் ஈழத்தில் நிலவிய தமிழ்த்தேசிய அரசியலை இப்போது தமிழகத்தில் பரப்பு முனைகிறார். யார் தமிழர் யார் தமிழரல்ல என்பது இவர்கள் அரசியல். பெரியாரைக் கன்னடர் என்றும், கருணாநிதியைத் தெலுங்கர் என்றும் சாடுவாரகள். ஆனால் ஜெயலலிதா கன்னடப் பார்ப்பனர் என்றோ பிரபாகரன், மகோ ராமச்சந்திரன்(MGR) ஆகியோர் மலையாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதை மட்டும் வாய்திறக்கமாட்டாரகள். ஒரு வேளை வைகோவின் சதிகள் எதிர்காலத்தில் அம்பலமானால் அவரைத் தெலுங்கர் என்று வசை பாடுவார்கள்.

/இந்துத்துவா இயக்கத்தில் குதிக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?/ ஏற்கெனவே அதில்தான் இருக்கிறார். இந்துமக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தமிழீழ மாநாடு நடத்த முயன்றார், தற்போது தமது பதாகைகளில் பிரபாகரன் படத்தைப் பயன்படுத்துகிறார். ஈழப்பிரச்சனை இந்துக்களின் பிரச்சனை என்கிறார். முருக பக்தரான பிரபாகரனின் அருகில் பெரியாரின் படமா என்று பொங்குகிறார். சீமானும் தனது பெரியார் எதிர்ப்பைப் பல வகைகளில் பதிவு செய்து விட்டார்.

சிவக்குமார் said...

தமிழ்த்தேசிய வாதிகள் எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். இந்துத்துவா பதிவர் டோண்டு ராகவன் நெத்தியடியாக ஒரு இடுகையைப் போட்டுள்ளார். அதைப் படித்த பின்தான் நான் சொல்ல மறந்தது நினைவுக்கு வந்தது. நேரமிருப்பின் இடுகையையும் கருத்துக்களையும் படித்துப் பாருங்கள்.

http://dondu.blogspot.in/2012/09/blog-post_18.html

நாம் தமிழர் இயக்கம் வெளியிட்ட கொள்கை ஆவணத்தில் (அதன் உள்ளடக்கம் மறைமுகமான ஆனால் தீவிரமான திராவிட எதிர்ப்பு (பெரியாரிய எதிர்ப்பு)) சிங்களர்களை திராவிடர் என்று சொல்லியிருந்தனர். இதே இன்னொரு தமிழ்தேசியவாதியான ததேபொக யின் பெ. மணியரசன், வங்காளிகள் (வங்காளப் பார்ப்பனர்கள்) சிங்களரை சகோதரராகக் கருதுகிறவர்கள் என்கிறார். அதாவது ஆரியர்களான வங்காளிகள், சிங்களர்கள் தமிழர்க்கு எதிரிகள் என்கிற பாணியில் பிரணாப் முகர்ஜியை விமர்சித்து ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். இப்படித் தமிழ்த்தேசிய முரண்பாடுகள் தலை சுற்றுகிறது.

ஆரியரான பார்ப்பனர்கள், தமிழ்த்தேசியவாதிகள் இருவருமே வெவ்வேறு இடங்களில் நாஜிக்களையும் ஆதரிப்பவர்கள். அதிதீவிரமாக இஸ்ரேல் யூதர்களை ஆதரிப்பவர்கள். அதன் மூலம் அவர்களைப் போலவே பழம்பெருமை, இனப்பெருமை, இனத்தூய்மை தேடிக்கொள்பவர்கள்.

ஈழத்தமிழ்தேசியர்கள் இந்தியாவைத் தந்தை நாடு என்பவர்கள். இந்தியா போரை நடத்திய பின்பும் நாங்கள் இந்தியாவிற்கு நண்பனென்றும், சீனாவிடமிருந்து இந்தியாவை நாங்கள் காப்போம் என்றும் கூறுகிறவர்கள்.
அதே போல் புலிகளும் (இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட பிறகும், ராஜீவைக் கொன்ற பிறகும் கூட) இந்திய எதிர்ப்பாளராக இருக்க வில்லை, தாம் இந்தியாவின் நண்பன் என்றே கூறினர், இறுதிப்போரை நடத்துவது இந்தியா என்று தெரிந்தும் இறுதி வரை இந்தியா எமது நண்பன் என்றே நம்பினர். முடிவு நமக்குத் தெரியும். இத்தனைக்கும் பிறகும் இந்தியாவின் தமிழ் வெறுப்பு அடங்கவில்லை. கருணாநிதி டெஸோ மாநாடு நடத்த முனைந்த போது ஈழம் என்ற சொல்லையே தடை செய்து வெறுப்பைக் காட்டியது. ஆனால் இதை ஈழத்தமிழ்தேசியம் புரிந்து கொள்ளாது இந்தியாவின் காலைச் சுற்றியே வருவார்கள். இவர்கள் (தமிழ்தேசியர்கள்) இந்துத்துவாவாதிகளாக இருந்தும், இந்தியாவை நண்பன் என்று சொன்னாலும், பிரபாகரனே முருக பக்தனாக இருந்தாலும் பார்ப்பனர்கள் (பார்ப்பன இந்தியா) இவர்களை (தமிழர்களை) எட்டி உதைத்தார்கள் உதைப்பார்கள் என்பதுதான் வரலாறு.

டோண்டுவின் ஒரு கருத்து எனக்கு பிடித்தது.
//புலிகளை இஸ்ரவேலர்களுடன் ஒப்பிடுவதா? வாயைக் கழுவுங்கள். அவர்களை பாலஸ்தீனியருடன் வேண்டுமானால் கம்பேர் செய்வேன்,//

Kaththukutti Communist said...

பிரகரகன் அவர்கள் மலையாள வம்ச வழி சார்தவரா? அவர் தமிழர் என்று கேள்வி பட்டேன்.MGற் மலையாள வம்ச வ்ழியை வந்தவர் என்று தெரியும். ஆனால் பிரபகரன் மலையாளி எப்படி?

Kaththukutti Communist said...

பிரபாகரன் அவர்கள் மலையாளியா? அவர் தமிழ்ர் என்று தான் கேள்வி பட்டேன் நீங்கள்( தமிழானவன்) சொல்லுவது சரியா? ம.கோ.ரா அவர்கள் மலையாளி என்பது தெரியும் ஆனால் பிரபாகரன் எப்படி?

சிவக்குமார் said...

http://articles.economictimes.indiatimes.com/2009-05-18/news/28467165_1_prabhakaran-poonthalathazham-kks-road
பிள்ளை என்பது மலையாள நாயர் ஜாதியின் ஒரு பிரிவு. பிரபாகரனின் மூதாதையர் கேரளத்தின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர்கள். பிரபாகரன் மலையாளி என்று சொல்வதல்ல என் நோக்கம். மலையாள மொழி அல்லது இனம் என்பது மிகவும் அண்மையில் தோன்றியது அதாவது 700 வருடங்கள் கூட இல்லை. ஒருவரை விமர்சிக்கும்போது, அவர் அரசியலைத்தான், நேர்மையைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, அவரது பூர்வீகத்தை வைத்து அவரை சாடக்கூடாது என்று சொல்ல வருகிறேன். இது போலத்தான் இது போலத்தான் பிரபாகரனை அவர் பூர்விகம் சார்ந்து சொல்லாமல் பெரியாரை மட்டும் கன்னடர் என்கிறார்கள், அதுதான் நான் சொல்ல வருவது. அவர் கன்னடத்தை பூர்விகமாகக் கொண்டது அவரது தவறல்ல. அவர் என்ன செய்தார் என்பதையே பார்க்க வேண்டும். ஆனால் இனவாதிகள் தமது எதிரிகளை விமர்சிக்கும்போது மட்டுமே இதை செய்கிறார்கள். சிங்களப் பேரினவாதிகள் தமிழர்களை இந்திய வந்தேறிகள் என்று சொல்வதைப் போல. இலங்கையில் இருக்கும் சிங்களர்கள் முற்காலத்தில் தமிழர்களாக இருந்தவர்கள், சிங்களருடன் இணைந்து வாழ்ந்ததன் மூலமாகவோ, சிங்களருடன் மண உறவு காரணமாகவோ சிங்களராக மாறியிருக்கின்றனர். இதே போல் சிங்களராக இருந்து காலப்போக்கில் தமிழராகவும் மாறியிருக்கலாம். பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலிருந்து மன்னர்கள் இலங்கைக்குப் படையெடுத்துள்ளனர், அதே போல் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் படையெடுத்துள்ளனர். இப்படிப் படையெடுப்பின் பின்னர் அவர்கள் அங்கேயே தங்கி வாழும் போது மண உறவின் காரணமாக அவர்களது பழைய இனம் அடையாளம் இன்றி புதிய அடையாளத்தை ஏற்றுக் கொள்வர். இதற்கு ஒரு உதாரணம் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தன மதுரையைச் சார்ந்த ஒரு செட்டியார் ஜாதியின் பூர்வீகம். இது போன்ற இடப்பெயர்வுகள் அடையாள மாற்றங்கள் நிகழ்ந்த போது இனம் என்ற பிரிவினையே இல்லை. இப்போதுதான் அது பிரச்சனையாகிறது. ஒருவரின் முன்னோர்க்கும் தற்போதைய வாழ்க்கைக்கும் தொடர்பு ஒன்றுமே இல்லாமல் போன பின்பு அதை வைத்து ஏன் அடையாளப்படுத்த வேண்டும்.

Kalaiyarasan said...

ஒருவரை தமிழர் என்பதும், சிங்களவர் என்பதும் அவர் பேசும் மொழியைப் பொறுத்தது. சிங்களவர் தமிழராக மாறியதும், தமிழர் சிங்களவராக மாறியதும் வரலாறு நெடுகிலும் நடந்துள்ளன. இப்போதும் தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள் பலர் சிங்களவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஜே.ஆர். ஜெயவர்த்தன மட்டுமல்ல, பண்டாரநாயக்கவின் பூர்வீகமும் தமிழ்நாடு தான்.

களம் ... said...

ஜே.ஆர். ஜெயவர்த்தன மட்டுமல்ல, பண்டாரநாயக்கவின் பூர்வீகமும் தமிழ்நாடு தான். பாஸ் சிலதிருதம் மதுரை விஜய நகரை அரசாண்ட நாயக்கர் மரபை சேர்த்தவர்கள் தான் நாயகே (சிங்களம்)
கண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம் மரபில் வந்த கண்டியரசர்களில் பட்டியலைக் http://en.wikipedia.org/wiki/Kingdom_of_Kandy

Kalaiyarasan said...

பண்டாரநாயக்கவுக்கும், கண்டியின் நாயக்கர் அரச பரம்பரைக்கும் தொடர்பில்லை. டச்சுக்காரர் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து, செட்டியார்களும், முதலியார்களும் குடியேறினார்கள். அவர்களில் பலர் இன்று சிங்களவர்களாக மாறி விட்டனர். ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்கவும் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து குடியேறிய பரம்பரையை சேர்ந்தவர்கள். எல்லா சமூகத்திலும் ஒரு உண்மையை அவதானிக்கலாம். தனது சொந்தக் குடும்பத்தில் இனத்தூய்மை இல்லாதவர்கள் தான் அதிகமாக இனவாதம் பேசுவார்கள்.

PUTHIYATHENRAL said...

Good article.... Have lot of message. Thanks kalaiyarasan.

Pandiaraj Jebarathinam said...

மூன்று வருடத்திற்கு பிறகு படிக்க கிடைத்திருக்கிறது உங்களது பதிவுகள்.