Friday, February 06, 2009

சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்


ஐரோப்பா பிற கண்டங்கள் மீது புனிதப்போரை ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போரின் நோக்கம் மதம் பரப்புவதல்ல, மாறாக லிபரலிசம்(அல்லது தாராளவாதம்) என்ற சித்தாந்தத்தை பரப்புவது. அதற்கு காரணம், தாம் மட்டுமே உலகில் சிறந்த நாகரீகத்தை கொண்டிருப்பதாக நம்புவது. இந்தக் கருத்து, முதலில் நவநாசிகள், நவபாசிஸ்டுகள் என்று ஆரம்பித்து, வலதுசாரி ஜனநாயக கட்சிகளிலும் எதிரொலிக்கின்றது. சில புத்திஜீவிகள், வெகுஜன ஊடகங்கள் தனது வாத திறமையால் பெரும்பான்மை மக்களை கவர்கின்றனர்.

ஐரோப்பாவின் பூர்வீகம் என்ன? அவர்கள் கூறும் ஐரோப்பிய நாகரீகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது? அத்தனை காலம் தனித்துவத்தை பேணி வருகின்றதா? பல வரலாற்று உண்மைகள் இன்றைய மக்களுக்கு தெரிவதில்லை. ஐரோப்பிய கலாச்சாரத்தின் தோற்றுவாய் என்று காட்டப்படும் கிரேக்க நாகரீகம், அன்று தனக்கு மேற்கில் இருந்த ஐரோப்பாவை கணக்கெடுக்கவில்லை. அவர்களின் வர்த்தக தொடர்பு முழுவதும் மத்தியகிழக்கை சார்ந்தே இருந்தது. இன்று ஐரோப்பிய மொழிகள் பயன்படுத்தும் எழுத்துகள் பினீசியரிடம்(இன்று லெபனான்) கடன்வாங்கியவை. அரேபியர்கள் ஒன்றுக்கு முன்னாள் பூச்சியம் உண்டு என்று கற்றுக்கொடுத்தார்கள். கூடவே இலக்கங்களையும் இரவல் கொடுத்தனர்.

முதலில் சிலுவைப்போர்களில் இருந்து தொடங்குவோம். அத்ற்கு முன்பும் மதத்தின் பெயரால் நடந்த போர்கள் பல இருந்த போதும், உலகம் தற்போது ஐரோப்பிய மையவாத கல்வியை கற்பதால், சிலுவைப்போர்கள் முதன்மைப்படுகின்றன. அன்றைய பாப்பரசர் சிலுவைப்போரை தொடங்கியதற்கு, ஜெருசலேம் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக காரணம் கூறினார். அன்று அரசன் தொட்டு ஆண்டி வரை மத நம்பிக்கையில் ஊறிப்போயிருந்த காலத்தில், அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பாப்பரசரின் அறைகூவலுக்கு பின்னால் இருந்த அரசியல் பற்றி பிற்காலத்திலேயே ஆராயப்பட்டது.

ஜெருசலேமும், பிற கிறிஸ்தவ புனிதஸ்தலங்களையும் கொண்ட பாலஸ்தீனா ரோமர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த காலத்தில், குறிப்பாக சொன்னால் ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த காலத்தில் தான், கிறிஸ்தவ மதம் பரவியது. கொன்ஸ்டான்திநோபிலை (இன்று துருக்கியில் உள்ள இஸ்தான்புல்) தலைநகராக கொண்டிருந்த கிழக்கு ரோமப் பேரரசு தான் முதன் முதலில் கிறிஸ்தவத்தை அரசமதமாக்கியது. இருப்பினும் அது கிரேக்க வழிபாட்டு முறையை பின்பற்றியது. இதனால் அன்று இன்றைய கிரேக்கம், துருக்கி, பாலஸ்தீனம், எகிப்து போன்று அவர்களின் அரசியல் ஆதிக்கம் நிலவிய இடங்களில் கிறிஸ்தவம் பரவியிருந்தது. மேற்கு ரோமப் பேரரசில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டு முறையை பின்பற்றும் கிறிஸ்தவ மதம் அரச மதமாகியது.

இதற்கிடையே அரேபியாவில் இருந்து புதிதாக தோன்றிய இஸ்லாம் என்ற மதம், அரசியல் சக்தியாகி அண்டை நாடுகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. அவ்வாறு பரவிய இஸ்லாமிய சாம்ராஜ்யம் பாலஸ்தீனத்தையும், துருக்கியையும் கைப்பற்றியதால், ரோமர்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளுடன் செய்து வந்த வர்த்தகம் தடைப்பட்டது. அது ஐரோப்பாவில் பாரிய பொருளாதார பிரச்சினையை உருவாக்கியது. உதாரணமாக குளிர்சாதனப்பெட்டி இல்லாத அன்றைய காலத்தில், இறைச்சியை பதனிட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமண சரக்கு தூள்கள் பயன்படுத்தப்பட்டன. அடுத்தது சீனாவில் இருந்து வந்து கொண்டிருந்த பட்டு போன்ற பொருட்கள் யாவும் தற்போது அரிதாகி, விலையும் பலமடங்கு அதிகரித்து விட்டது.


அரசியல் தளத்தில் ஒரு உண்மை சரித்திர ஆசிரியர்களால் நீண்ட காலமாக மறைக்கப்பட்டு வந்தது. ரோம சாம்ராஜ்யம் ஒருபோதும் வீழ்ச்சியுற்று மறையவில்லை! அது அரச-மதகுருவான பாப்பரசரால் கிறிஸ்தவ மதம் என்ற சித்தாந்தத்தால் மறுவார்ப்பு செய்யப்பட்டது. நமது காலத்தில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒப்பானது. அந்த வகையில் முன்னாள் ரோம ராஜ்யத்தின் மாகாணமான பாலஸ்தீனம், துருக்கி, எகிப்தை போன்றே எதிரிப்படைகளால் கைப்பற்றப்பட்ட அரசியல் நிகழ்வாக இருந்த போதும், கிறிஸ்தவ புனித ஸ்தலங்கள் இருப்பதை காரணமாக காட்டி, அனைத்து ஐரோப்பிய கிறிஸ்தவர்களையும் ஒன்று திரட்டுவது இலகுவாக இருந்தது. மேலும் அன்று ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள் யாவரும், வத்திகானில் இருக்கும் பாப்பரசருக்கு கீழ்படிந்தே ஆட்சி செய்தனர்.

பாப்பரசரின் கோரிக்கைக்கு செவிமடுத்து பல்வேறு விதமான படைகள், அரச இராணுவம், தனியார் இராணுவம், ஆயுதக்குழு இவ்வாறு பலவகை படைகள் அன்று ஜெருசலேமை கைப்பற்ற சென்றன. அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்காக போர் புரிய சென்றாலும், பல இடங்களில் ஒழுங்கற்ற காடையர் கூட்டமாக தான் நடந்து கொண்டனர். ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், சிலுவைப் போர்வீரர்களை புனிதப்போராளிகள் போன்று சித்தரித்தாலும், மறுபக்கத்தில் அரேபிய வரலாற்றாசிரியர்கள் அவர்களை கொள்ளைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் விபரித்தனர். அது ஒன்றும் ஆதாரமற்ற கூற்றல்ல. கிரேக்க கிறிஸ்தவர்கள் கூட சிலுவைப்போர் படையெடுப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் ரோமன் கத்தோலிக்க மதமே சிறந்தது என்ற மதவெறியால் வழிநடத்தப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள், முஸ்லிம்களை மட்டுமல்ல கிரேக்க கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தனர்.

அப்போது இஸ்லாமிய சுல்தான்கள் ஒற்றுமையின்றி தமக்குள் சண்டையிட்டதால், சிலுவைப்போர் படைகள் இலகுவாக தோற்கடிக்க முடிந்தது. இஸ்லாமியர்கள் சலாவுதீன் என்ற குர்திய இனத்தை சேர்ந்த தீரமிக்க தளபதியின் கீழ் ஒன்றிணைந்த பின்னர் தான் ஜெருசலேமை ஒரு நூற்றாண்டாக கைப்பற்றி வைத்திருந்த ஐரோப்பிய கிறிஸ்தவ படைகளை வெளியேற்ற முடிந்தது. இன்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கியவர்கள், ஐரோப்பிய யூதர்கள் என்பதால், சிலுவைப்போர் ஞாபகங்கள் அரேபியாவில் மீண்டும் வருவதில் வியப்பில்லை.

துருக்கியில் ஒஸ்மான் அலி தலைமையிலான துருக்கி இஸ்லாமியப்படைகள், சீனாவில் இருந்து புதிதாக தருவிக்கப்பட்ட வெடிமருந்து பொருட்களின் துணை கொண்டு, துருக்கியை கைப்பற்றியதுடன் நில்லாது இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். பெரும்பாலும் அரசியல் வெற்றிகளைப் பற்றியே எழுதப்பட்டு வந்தாலும், சாதாரண மக்களின் நிலை அதனோடு இழுபட்டே செல்கின்றது. ஒரு காலத்தில் கிரேக்கர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருந்த மேற்கு துருக்கி மக்கள், பின்னர் மொங்கோலிய படையெடுப்பாளர்களின் துருக்கி மொழியை தமது தாய் மொழியாக்கியதுடன், மன்னர் வழியை பின்பற்றி இஸ்லாமியராகினர். அதே போன்று பொஸ்னிய முஸ்லிம்கள் கூட ஒரு காலத்தில் செர்பிய மொழி பேசும் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள் தான்.

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியராவதும், இஸ்லாமியர் கிறிஸ்தவராவதும் அந்த இடத்தில் யாருடைய ஆதிக்கம் நிலவுகின்றது என்பதைப் பொறுத்தது. ஒரு காலத்தில் அரேபியராகவும், முஸ்லிம்களாகவும் இருந்த தெற்கு இத்தாலியில் இருக்கும் சிசிலி, சின்னஞ்சிறு மால்ட்டா தீவு மக்கள் பின்னர் கத்தோலிக்க மதத்தை தழுவிக்கொண்டனர். மதம் மாற்றுவதில் கிறிஸ்தவ ராஜ்யத்திற்கும், இஸ்லாமிய ராஜ்யத்திற்குமிடையில் சில வேறுபாடுகள் இருந்தன. கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை,(யூதர்களையும்) வாழ விட்டனர். ஆனால் அதிக வரிச்சுமை, அல்லது பாகுபாடுகள் காரணமாக, பலர் முஸ்லிம்களாக மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர். முரண்நகையாக அன்றைய இஸ்லாமிய அரசாட்சியில் இருந்த "சகிப்புத்தன்மை கொள்கை" இன்றைய ஐரோப்பிய நாடுகளின் அரச நிர்ணய கொள்கையாகி உள்ளது.

ஐரோப்பியர்கள், அரபு-இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து கற்றுக் கொண்டவை நிறைய இருக்கின்றன. ஒரு வகையில் சிலுவைப்போர்களின் எதிர்மறையான, அதே நேரம் அனைவருக்கும் நன்மையளித்த விளைவுகள் அவை.
இஸ்லாமிய சாம்ராஜ்ய தலைநகரான பாக்தாத்தில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், வானசாஸ்திரம், தத்துவவியல், இலக்கியம் போன்ற பலவற்றை கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் அரச உதவியில் பல நூல்களை எழுதினார்கள். அதே நேரம் ஐரோப்பாவில் அரசர்க்கரசனான காரல் சக்கரவர்த்தி தனது பெயரைக் கூட எழுதத் தெரியாதவராக இருந்தார். அந்தக்காலத்தில் அனேகமாக பாப்பரசர் உட்பட கிறிஸ்தவ மதகுருக்கள் மட்டும், எழுதப்படிக்க தெரிந்தவர்களாக அதுவும் லத்தீன் மொழியில் பைபிளை மட்டும் படித்துக் கொண்டிருந்தனர்.

சிலுவைப்போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த சமுதாயத்தை கண்டு வியந்தனர். அவ்வாறு தான் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது. குறிப்பாக நவீன மருத்துவம் அரேபியரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதால், ஐரோப்பிய மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதுவரை சாதாரண தலைவலி என்றாலும், மண்டைக்குள் இருக்கும் "அசுத்த ஆவியை" ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது. கிறஸ்தவ மதம் பரவ முன்னர், மூலிகை வைத்தியம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதம் அவ்வாறு வைத்தியம் செய்வோரை எல்லாம், "சூனியக்காரிகள்" என்று கூறி உயிரோடு எரித்து, மூலிகை மருத்துவர்களை இல்லாமல் செய்து விட்டது.

ஸ்பெயின் நூறாண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய நாடாக இருந்தது. அதன் ஆட்சியாளர்கள் இன்றைய மொரோக்கோவில் இருந்து வந்த "மூர்கள்". (இலங்கையில் சோனகர்களை குறிக்கும் "மூர்கள்" என்ற சொல் போர்த்துகேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது.) அன்று கல்வியறிவில் பின்தங்கியிருந்த ஐரோப்பியக் கண்டத்தில், "இஸ்லாமிய ஸ்பெயினில்" பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் கிரேக்க மொழியில் இருந்து அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. ஸ்பெயினில் மூர்களை அடித்து விரட்டிய கிறிஸ்தவப்படைகள் இந்த நூல்களை கைப்பற்றி ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்த்ததால் தான் நாம் தற்போது காணும் நவீன மருத்துவம் தோன்றியது.


கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கும், இஸ்லாமிய அரேபியாவுக்கும் இடையேயான உறவு எப்போதுமே பகைமையாக இருக்கவில்லை. கத்தோலிக்க மதத்திற்கெதிராக கிளர்ச்சி செய்து புரடஸ்தாந்தினராக மாறிய ஒல்லாந்துக்காரர்கள், தம்மை ஸ்பானிய நுகத்தடியில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக 80 ஆண்டு காலம் போர் புரிந்த காலத்தில், மூர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். அத்லாந்திக் சமுத்திரத்தில் ஒல்லாந்து கப்பல்களும், அரேபியரின் கப்பல்களும் ஒன்றிணைந்து ஸ்பானிய கடற்படையுடன் போரிட்டன. மொரோக்கோவின் காசாபிளாங்கா நகரம் அப்போது ஐரோப்பிய கடலோடிகளின் புகலிடமாக இருந்தது. இந்தக் கடலோடிகளில் சிலர் கடற்கொள்ளைக்காரர்கள். அவர்களோடு முன்பு ஸ்பெயின் கிறிஸ்தவ படைகள் வெளியேற்றிய முஸ்லீம் அகதிகளும்(ஸ்பானிய முஸ்லிம்கள்), தமது தாயக மீட்பு போராட்டத்தின் ஒருபகுதியாக, ஸ்பானிய கப்பல்களை தாக்கும் கடற்கொள்ளையராக மத்தியதரைக் கடலில் ஆதிக்கம் செலுத்தினர்.

சிலுவைப்போர்கள் தொடர முடியாமற் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஐரோப்பாவில் புரட்டஸ்தாந்து மதத்தின் தோற்றம், பின்னர் நெப்போலியனின் லிபரல் சாம்ராஜ்யம் பாப்பரசரின் மத ஆதிக்கத்தை முற்றாக அடக்கியமை போன்ற காரணங்கள் குறிப்பிடத்தக்கவை. பிரேஞ்சுப்புரட்சியும், நெப்போலியனின் நாஸ்திக இராணுவமும் கத்தோலிக்க தேவாலயங்களின் சொத்துகளை பறிமுதல் செய்தன. அதுவரை பெரும் நிலவுடமையாளராக இருந்த தேவாலயங்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டதால், அவற்றோடு கட்டுண்டிருந்த உழைக்கும் மக்களும் விடுதலை பெற்றனர்.


ஐரோப்பாவை கிறிஸ்தவமதம் இருண்ட கண்டமாக வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. இங்குள்ள சரித்திர பாடப் புத்தகங்களும் அப்படித் தான் கூறுகின்றன. உலகம் முழுவதும் "கண்டுபிடித்து", காலனியாக்கிய காலங்களை தான், "பொற்காலம்" என்கின்றனர். உண்மையில் நாம் வாழும் நவீன காலம், பின்காலனித்துவ தொடர்ச்சி தான். காலனிகளால் தான் ஐரோப்பா முன்னேறியது. அறிவைப் வளர்த்தது. செல்வத்தை பெருக்கியது. இன்று தாம் பெற்ற அறிவை விற்று பொருளீட்டுகின்றனர். சேர்த்த செல்வத்தை முதலீடு செய்து பணமாக்குகின்றனர்.

உலகம் எப்போதும் நாம் விரும்புவது போல சுழல்வதில்லை. ஐரோப்பியரின் வருகைக்கு பின்னர் தான் வெளி உலகம் பற்றி, செல்வத்தை பெருக்கும் கலை பற்றி, அறிந்து கொண்ட காலனி நாடுகளின் மக்கள், தாமும் ஐரோப்பியர் அடிச்சுவட்டை பின்பற்றுவது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் ஒரு வித்தியாசம். ஐரோப்பியர்கள் நமது நாடுகளுக்கு ஆட்சியாளராக வந்தார்கள். நமது மக்களோ ஐரோப்பிய நாடுகளுக்கு உழைப்பாளிகளாக செல்கின்றனர். இரண்டுக்குமிடையில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் உண்டு. ஆதிக்கவாதிகள் விரும்பிய எதையும் அபகரிக்கலாம். ஆனால் உழைப்பாளிகள், தமது உழைப்பை வாங்குபவனை பணக்காரனாக்குகின்றனர்.

இருப்பினும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களை, "காலனியவாதிகள்" என்று குற்றம்சாட்டும் போக்கு இன்றைய ஐரோப்பிய வலதுசாரி அரசியலில் சகஜம். குறிப்பாக முஸ்லிம்களின் வருகை அவர்களுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்று, ஐரோப்பியர்கள் தமது காலனிகளில் வாழ்ந்த மக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதமாற்றம் செய்தனர். நான் முன்பு கூறியபடி நெப்போலியன் காலத்தில் நாஸ்திகவாதம் கோலோச்சிய பிரான்ஸ் கூட தனது காலனிகளில் கிறிஸ்தவமதத்தை பரப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த "கிறிஸ்தவமயமாக்கல்" உலகம் முழுவதும் ஐரோப்பாவுக்கு விசுவாசமான மக்கள் கூட்டத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது.

ஒரு காலத்தில் தமது காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், பிரத்தியேகமாக உலகின் இரண்டாவது பெரிய மதமான இஸ்லாமை பின்பற்றும் மக்கள், எதிர்காலத்தில் ஐரோப்பாவில் கலாச்சார மாற்றங்களை கொண்டுவரலாம்? இவ்வாறு தீவிர வலதுசாரிகள் மத்தியில் மட்டுமல்ல, அரசாங்க மட்டத்திலும் ஒரு கருத்து நிலவுகின்றது. இதனால் பல்வேறு "அகதி தடுப்பு", "குடியேற்ற தடுப்பு" சட்டங்கள் மூலம், வெள்ளை-கிறிஸ்தவ இன அடையாளத்தை பேண விளைகின்றனர். எப்போதும் ஒரு திருடன் பிறரை நம்பமாட்டான் தானே? ஒரு காலத்தில், தாம் உள்நோக்கத்துடன் செய்த வேலைகளை, தம்மிடமே கற்றுக்கொண்ட வித்தைகளை, தமக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவ்வாறு நீங்கள் நினைக்காமல் இருக்கலாம். ஆனால் ஐரோப்பிய ஆளும்வர்க்க சிந்தனை அதுதான்.

இந்தக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியுள்ளபடி, சிலுவைப்போர்கள் எவ்வாறு ஐரோப்பாவை நாகரீகப்படுத்தியது என்ற உண்மை இன்றைய/நாளைய தலைமுறைகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றது. இளம்சமுதாயம் வரலாறு பற்றிய அக்கறை இன்றி இருப்பதும் அதற்கு உதவுகின்றது. ஐரோப்பிய நாகரீகத்தில் பல மேன்மையான அம்சங்கள் இருந்தாலும், அதன் வேர்கள் பிற கலாச்சாரங்களில் இருந்து தான் வருகின்றன. உலக கலாச்சாரங்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று கற்றுக்கொள்கின்றது. பல சிறந்த கலாச்சாரங்களின் கலப்பால் நாகரீகம் உருவாகின்றது. அது தம்மால் மட்டுமே சாத்தியம் என்று எந்த இனமும் ஏகபோக உரிமை பாராட்ட முடியாது. இதனை நவீன ஐரோப்பிய சமுதாயம் உணராவிட்டால், உலகில் வேறொரு கோடியில், ஐரோப்பிய கலாச்சாரத்தை விட மேம்பட்ட பிறிதொரு நாகரீகம் உருவாகுவதை தவிர்க்க முடியாது. அது இயற்கை நியதி. உலகில் எந்தவொரு சாம்ராஜ்யமும், நாகரிகமும் நிலைத்து நின்றதில்லை. இது பைபிள் நினைவு கூறும் சாட்சியம்.
******************************************************************

22 comments:

தெய்வமகன் said...

உங்கள் கட்டுரைகள் மிகவும் அருமையாக உள்ளன.ஆனால் மற்ற மத்திய கிழக்கின் அதரவு எழுத்தாளர்களை போலவே உங்களின் எழுத்தும் இஸ்லாமிய சார்புள்ளனவாகவே உள்ளன.
நீங்கள் எழுதிய கட்டுரையின் மூலம் எதில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது என்பதை பொருத்தே உங்கள் கட்டுரையின் தாக்கம் இருக்கும்.

நன்றி

Kalaiyarasan said...

உங்கள் கருத்துக்கு நன்றி, தெய்வமகன். ஆனால் நான் மத்திய கிழக்கு ஆதரவு எழுத்தாளரல்ல. துரதிர்ஷ்டவசமாக தமிழில் எழுதுபவர்களில் பெரும்பான்மையானோர், ஐரோப்பிய/அமெரிக்க நலன்களில் இருந்து எழுதப்படுபவை. மூன்றாம் உலகைச் சேர்ந்த தமிழர்க்கு எந்த வகையில் உதவப்போகின்றன? ஐரோப்பிய-அமெரிக்கர்கள் மத்திய கிழக்கை சேர்ந்தவர்களை மட்டுமல்ல, இந்தியா போன்ற ஆசிய நாட்டை சேர்ந்தவர்களையும் தான் மோசமாக சித்தரிக்கின்றனர். இவ்வாறு மூன்றாம் உலகைச் சேர்ந்த சமூகங்களை பிரித்து வைப்பதில் ஐரோப்பிய மையவாதக் கண்ணோட்டம் வெற்றி பெற்றுள்ளது.

Anonymous said...

The numbers system went from India thru arabia. There are proofs available. I disagree about the numerals are from Arabs.

Kalaiyarasan said...

Of course, the number system went from India. But the written form of the numerals (1,2,3...) are similar to arab numerals. Besides the Europeans call it the "Arabic numerals"(in all European languages). I refer you to read this:

http://en.wikipedia.org/wiki/Arabic_numerals

fifufi said...

nowdays i am more an more glue to ur blog
KALAIY KING very interesting

thank you

fifufi said...

Nowdays iam more n more glue to blog
its very interesting
mr KALIY KING
thank you

Anonymous said...

cq;fs; fUj;ij vd;dhy; KOikahf vw;Wf;nfhs;s KbahkYs;sJ. vij Mjhukhf itj;J ,ij vOjpdph;fNsh> mj;Jld; Nkw;Fyf ehLfspy; vkf;F ,d;Ws;s ntWg;gpd; gpujpgypg;Gk; tuyhw;iwg; gf;frhh;ghf rpy ,lq;fspy; ntspf;fhl;l Kidfpd;wPh;fs;.
neg;Nghypadpd; eh];jpf Ml;rp vd;fpwPh;fs; gpd;G mth;fs;$l fpwP];jt kiwiag; gug;gj;jtwtpy;iy vd;fpwPh;fs;. ,];yhkpa Ml;rpahsh;fs; kw;w kjjq;fis thotpl;ldh; vd;fpwPh;fs;> ,J ek;gj;jFe;jitAk; Vw;Wf;nfhs;sf; $baJkd;W.
(bamini)

Kalaiyarasan said...

//உங்கள் கருத்தை என்னால் முழுமையாக எற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. எதை ஆதாரமாக வைத்து இதை எழுதினிர்களோ, அத்துடன் மேற்குலக நாடுகளில் எமக்கு இன்றுள்ள வெறுப்பின் பிரதிபலிப்பும் வரலாற்றைப் பக்கசார்பாக சில இடங்களில் வெளிக்காட்ட முனைகின்றீர்கள்.
நெப்போலியனின் நாஸ்திக ஆட்சி என்கிறீர்கள் பின்பு அவர்கள்கூட கிறீஸ்தவ மறையைப் பரப்பத்தவறவில்லை என்கிறீர்கள். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மற்ற மததங்களை வாழவிட்டனர் என்கிறீர்கள், இது நம்பத்தகுந்தவையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமன்று.//

நண்பரே நீங்கள் பாமினியில் பின்னூட்டமிட்டதை எழுத்துரு மாற்றித் தந்திருக்கிறேன்.

மேற்குலக நாடுகளில் மேல் உள்ள வெறுப்பின் பிரதிபலிப்பாக இதனை எழுதவில்லை. நீங்கள் எந்த மேற்குலக நாட்டை சொன்னாலும், அங்கேயுள்ள வரலாற்று நூல்களில் நான் எழுதியுள்ள விடயங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களை என்னால் காட்ட முடியும். இருப்பினும் மேற்குலக அரசுகள் தமது பக்கச் சார்பான கதைகளை (இவற்றை நீங்கள் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்) பரப்பி வந்துள்ளன. மேற்குலக நாட்டு பாடசாலைகளும், ஊடகங்களும் இந்த ஒரு பக்க சார்பான வரலாற்றை பொதுக் கருத்தாக்கி உள்ளன. அதற்கு மாறாக பல்கலைக்கழகங்கள், நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளைக் கொண்ட நூல்களை மாணவர்களுக்கு பரிந்துரைக்கின்றன. அதன் அர்த்தம் நான் இந்த கட்டுரையில் எழுதிய உண்மைகள் யாவும், குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டுமே அறியப்பட்டுள்ளன. இதனால் அரசின் கொள்கைக்கு எந்த ஆபத்துமில்லை.

நெப்போலியன் பற்றி விரிவாக கூறியுள்ளேன். அவர்களுக்கு பிற நாடுகளை காலனிப்படுத்துவதற்கு கிறிஸ்தவ மதம் பரப்புவது தேவைப்பட்டது. இஸ்லாமிய ஆட்சியின் கீழ் யூத, கிறிஸ்தவ மக்கள் வாழ உரிமை இருந்தது. ஆனால் ஒரு நிபந்தனை. அவர்கள் இரண்டாம்தர பிரசைகளாக அதிக வரி கட்டி வர வேண்டும். இதற்கு பல ஆதாரங்களை என்னால் காட்ட முடியும். சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களது மனதுக்கு இல்லை என்றால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

சோழன் said...

//அரேபியர்கள் ஒன்றுக்கு முன்னாள் பூச்சியம் உண்டு என்று கற்றுக்கொடுத்தார்கள். கூடவே இலக்கங்களையும் இரவல் கொடுத்தனர்.//

All Islamic and Arabic professionals openly said to me along with evidence.They are using numeric system taughted from south Indians.But they also forget whats the meaning for Hindi or Hindu ?Who spreads this word in south Asia.
So Please chage in your blogs ASAP.

Kalaiyarasan said...

சோழன்,
Thank you for your comment. This article was written from European point of view. For Europeans, it was Arabs who introdused zero and numbers. They still call them " Arabic numerals".

மனிதன் said...

கலை நண்பரே,

சிந்தனையை தூண்டும் பதிவுகளுக்கு நன்றி.

ஐரோப்பியர்களும் அரேபியர்களும் அவர்களின் கண்ணோட்டத்தில் வரலாற்றை பதிவு செய்துள்ளனர் அதேபோல் நீங்களும் உங்களின் கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளீர்கள். ஐரோப்பியர்களை எதிர்க்கும் உங்கள் கட்டுரைகள் கூட ஐரோப்பியர்கள் எழுதிய வரலாற்றை படித்துதான் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மேலும் இன்றைய உலகில் அனைத்து நவீன கண்டுபிடிப்புகளும் ஐரோப்பியர்களாலேயே கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கல்வியிலும், நாகரீகத்திலும், செல்வத்திலும் முன்னேறியுள்ள சமூகம் உலகை ஆள்வதும் அச்சமூகத்தை மற்ற சமூகங்கள் பின்பற்ற முயல்வதும் வரலாற்றில் உள்ளதுதானே.

மற்றொரு சிறந்த சமூகம் வரும் வரை இவர்களின் ஆட்டம்தான் உலகில் நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

பின்பு ஏன் ஐரோப்பியர்களுக்கு எதிராக இந்த கட்டுரைகள் எல்லாம்?

J.P Josephine Baba said...

Dear Kalaiyarasan fantastic article. But you so objectionable to Muslims and non catholics. I think never a ruler could change religious desire . for instance The India ruled by foreigners for more than 500 years . But only the 2% people only converted to Christianity now also the same proportion of people being as Christians. Also the Kerala people more populated as christians is more literate cultured than any other state in India, .You see the Christian villages in Tamilnadu Nazareth,mudaloore more planned ,developed and hyginic , than other Hindu populated village. You accept the Hindus worship water as holy ,the same water polluted by them very badly , also the christanity gave awareness to widow ,child marriage and devadasi system.You please see 'water' movie in hindi .

Unknown said...

varalaatrai meettalukku nanry,inru islamiya mattumalla ulaka varalaare maraikkppattullathu,aththodu muslimkalaathhu kalaikal,kandu pidipppukal noolkal enpana thamakkkuriyathu ena vaathaadukinranar europiar,ivatrai muslimkal koorinaal oththukkolla maattarkall,so,vetru mathaththavaraana ungalukku vilangum unmai ulakil muthal thara arivu padaiththavarkal ennaa allahhvaal adaiyaalappaduththappatta joes ariyaadirukka mudiyuma?allathu unmaiyaana joes avargalaaka irukka mudiyaathu thaane?
islaamiya aatchiyil ariviyal valarchchy kandathu abbaasiya kaalathil thaan thatpothu kooda irak iran vinjjaanikale ariviyalil valarchchy petrullanar, uuromarkall paaarrasseekkathhai aanda oru kaalamum undu adhaanaaal paaraseekam yooda theasamaaka irundirukka mudiyaada?

sound design said...

very nice and intresting your articles ir,keep it up

univerbuddy said...

கலை அவர்களுக்கு,

உங்கள் தளத்தில் இதுதான் எனது முதல் பின்னூட்டம். கிட்டத்தட்ட ஒராண்டாக இங்கே அடிக்கடி வருகிறேன். புதியவைகளை படித்துவிடுகிறேன். பழையவற்றில் இதுவரை 100க்கும் மேலான பதிவுகளை படித்திருக்கிறேன். நான் பொதுவுடமைவாதி. வினவை தொடர்ந்து படித்து விவாதம் செய்பவன். நீங்கள் கவனித்திருக்கலாம்.

உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. ஆனால், முகமதியர்களைப்பற்றிய உங்கள் பதிவுகளில் சில பல தவறுகளைக் காண்கிறேன். சில பதிவுகள் வரிக்குவரி விவாதம் செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றன. அதனாலேயே மலைத்துக்கொண்டு தவிர்த்து வந்தேன். நேரமும் ஒரு காரணம்.

இந்த பதிவிட்டு 5 ஆண்டுகளாகி விட்டது. இருந்தாலும் பதிவை அலசலாம் என்று இருக்கிறேன். விரைவில் அடுத்த பின்னூட்டத்தில் செய்யவிருக்கிறேன். நன்றி.

univerbuddy said...

கலை அவர்களுக்கு,



//இந்தப்போரின் நோக்கம் மதம் பரப்புவதல்ல, மாறாக லிபரலிசம்(அல்லது தாராளவாதம்) என்ற சித்தாந்தத்தை பரப்புவது.//


நோக்கம் மதம் பரப்புவதல்ல. உன்மைதான். யாரும் அப்படிச்சொல்லவில்லையே. ஆனால் தாராளவாதத்தை பரப்புவது என்பதை எங்கிருந்து கண்டறிந்தீர்கள் என்று தெரியவில்லை. முகமதிய சமூகங்களைக் கண்டபிறகுதான் அவர்களின் காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்து நாகரீகமடைந்தார்கள் என்று இந்த பதிவின் கீழே சொல்கிறீர்கள். அப்படியிருக்க அவர்கள் எந்த தாராளவாதத்தை பரப்புவதற்காக படையடுத்தார்கள்?

இந்த போர்கள் ஜெருசலேம் போன்ற இடங்கள் முகமதியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவும். முகமதியர்களின் பரவலைத் தடுக்கவும் தான் நடத்தப்பட்டது.


//முதலில் சிலுவைப்போர்களில் இருந்து தொடங்குவோம்.//

என்று எழுதிவிட்டு பின்னர்

//இதற்கிடையே அரேபியாவில் இருந்து புதிதாக தோன்றிய இஸ்லாம் என்ற மதம்//

என்று எழுதுவது எது முன்னர் எது பின்னர் என்பதில் ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகிறது. சிலுவைப்போர்கள் 11 நூற்றாண்டின் இறிதியில் தொடங்குகிறது. முகமதியத்தின் பரவல் 7 ம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. முன்னது பின்னதை விட கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகள் பின் வருகிறது.


//குளிர்சாதனப்பெட்டி இல்லாத அன்றைய காலத்தில், இறைச்சியை பதனிட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமண சரக்கு தூள்கள் பயன்படுத்தப்பட்டன//

ஐரோப்பியர்கள் இறைச்சியை பதனிட புகை போடுதல் போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ‘நறுமண சரக்கு தூள்கள்’ ஐ பயன்படுத்தவதில்லை. ஐரோப்பியர்கள் இந்தியாவில் இருந்து வேண்டியது மிளகைத்தான். இதை தங்கள் உணவுக்கு சுவையை மணத்தையும் கூட்டத்தான் வாங்கினார்கள். பதனிடுவதற்காக இல்லை.


//அரேபிய வரலாற்றாசிரியர்கள் அவர்களை கொள்ளைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் விபரித்தனர்.//

முகமதியர்கள் எப்படிச் செய்தார்களோ அப்படித்தானே அவர்களுக்குச் செய்யமுடியும்.

//சலாவுதீன் என்ற குர்திய இனத்தை சேர்ந்த தீரமிக்க தளபதி//

‘தீரமிக்க’ என்ற வார்த்தை வலிந்து திணிக்கப்பட்டதைப் போல் இருக்கிறது.


//ஒரு காலத்தில் கிரேக்கர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருந்த மேற்கு துருக்கி மக்கள், பின்னர் மொங்கோலிய படையெடுப்பாளர்களின் துருக்கி மொழியை தமது தாய் மொழியாக்கியதுடன், மன்னர் வழியை பின்பற்றி இஸ்லாமியராகினர்.//

பரவாயில்லையே. தானாகவே எந்த வன்முறைக்கும் உட்படாமல் ஏற்றுக்கொண்டார்களா ?


//ஒரு காலத்தில் அரேபியராகவும், முஸ்லிம்களாகவும் இருந்த தெற்கு இத்தாலியில் இருக்கும் சிசிலி, சின்னஞ்சிறு மால்ட்டா தீவு மக்கள் பின்னர் கத்தோலிக்க மதத்தை தழுவிக்கொண்டனர்.//

அரேபியராக எப்படி இருந்தார்கள் ? முஸ்லிம்களாக இருப்பதற்கு முன்னர் அவர்கள் என்னவாக இருந்தனர்?

//கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர்.//

ரோமப் பேரரசு மக்களில் பெரும்பாலானவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டவுடன் தான் ஆளும் வர்க்கம் அல்லது பேரரசன் தன்னை கிருத்துவனாக ஏற்றுக் கொள்கிறான். சில ஐரோப்பிய நாடுகளின் அரசர்கள் இளவரசர்களின் மதமாற்றத்தைத் தொடரந்து தங்கள் மக்கள் எல்லோருமே கிருத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை அண்ணல் அம்பேத்தகர் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். இது வன்முறையின் மூலம் நடந்ததா என்பது தெரியவில்லை. தேவையிருந்திருக்காது என்றே தோன்றுகிறது. ஒரு காரணம், அரசனும் மக்களும் ஒரே இனத்தவர்.

தொடரும்...

univerbuddy said...

கலை அவர்களுக்கு,

பகுதி 2.

//மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை,(யூதர்களையும்) வாழ விட்டனர்.//

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கிருத்துவ பகுதிகளைத்தாக்கி முதல் மூன்று நாட்கள் கிடைக்கும் ஆண்களையெல்லாம் கொன்று வலக்கரத்தில் கைப்பற்றிய பெண்களை அடிமைப்படுத்திய பிறகு மீதமுள்ளவர்களுக்கு இந்த தெரிவை கொடுத்தார்கள். மீதமுள்ளவர்களில் பலர் அதிக வரிச்சுமை, பாகுபாடுகள் வன்முறைகள் கடத்தல்கள் காரணமாக, முஸ்லிம்களாக மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர்.


//"அசுத்த ஆவியை" ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது.//

இது அளவுகடந்த மிகைப்படுத்தலாக தெரியவில்லையா?


//சிலுவைப்போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த சமுதாயத்தை கண்டு வியந்தனர். அவ்வாறு தான் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது.//

முகமதியர்கள் நீங்கள் கூறம் பகுதிகளை கிருத்தவர்களிடமிருந்துதான் அதாவது ரோமப் பேரரசினிடமிருந்து தான் கைப்பற்றினார்கள் என்பதை மறைத்துவிட்டுப் பேசும் பேச்சு இது. சிரயா ஈராக் எகிப்து போன்ற பகுதிகள் முகமதியர்கள் கைப்பற்றும் முன் கிருத்தவப் பகுதிகளாக இருந்தது என்பதை எப்படி மறக்கமுடிந்தது. முகமதியர்களின் பங்காக நீங்கள் கூறுவதின் பெரும்பகுதி கிருத்தவ துறவிகளின் பங்குகள். ஐரோப்பா நாகரீகமடைந்தது சிலுவைப்போர்களின் விளைவாக முகமதியர்களிடமிருந்து கற்றுக்கொண்டதால் என்பது மிகப்பெரிய மோசடி. முகமதியர்கள் தங்கள் வசம் வந்த புத்தகங்களை எரிப்பதில் தான் முன்னனியில் இருந்தனர். சில விதவிலக்குகள் இருந்திருக்கின்றன. அவர்களில் சிலரை முகமதியர்களே முகமதியர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

//ஸ்பெயின் நூறாண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய நாடாக இருந்தது.//


நூறாண்டுகளல்ல. கிட்டத்தட்ட 700 ஆண்டுகள்.

//"இஸ்லாமிய ஸ்பெயினில்" பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் கிரேக்க மொழியில் இருந்து அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.//

கிரேக்க மொழி நூல்கள் மொராக்கர்களுக்கு அதாவது மூர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? கிருத்துவ ஸ்பெயினில் இருந்துதானே ?

ஒரு சிறு பதிவில் இத்தனை தவறுகளா ? முரண்பாடுகளா ?

முற்றும்.

univerbuddy said...

To follow-up

Kalaiyarasan said...

//நோக்கம் மதம் பரப்புவதல்ல. உன்மைதான். யாரும் அப்படிச்சொல்லவில்லையே. ஆனால் தாராளவாதத்தை பரப்புவது என்பதை எங்கிருந்து கண்டறிந்தீர்கள் என்று தெரியவில்லை. முகமதிய சமூகங்களைக் கண்டபிறகுதான் அவர்களின் காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்து நாகரீகமடைந்தார்கள் என்று இந்த பதிவின் கீழே சொல்கிறீர்கள். அப்படியிருக்க அவர்கள் எந்த தாராளவாதத்தை பரப்புவதற்காக படையடுத்தார்கள்?//

முழுப் பந்தியில், ஒரு வசனத்தை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு விவாதிக்கிறீர்கள். நான் எழுதியதற்கும், நீங்கள் பேசுவதற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. நான் இன்று ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் நடத்திக் கொண்டிருக்கும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" பற்றிப் பேசுகின்றேன். ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் நடந்த நேரம், அவற்றின் பின்னணியில் எழுதப் பட்ட கட்டுரை இது.

Kalaiyarasan said...

//முதலில் சிலுவைப்போர்களில் இருந்து தொடங்குவோம்.//

என்று எழுதிவிட்டு பின்னர்

//இதற்கிடையே அரேபியாவில் இருந்து புதிதாக தோன்றிய இஸ்லாம் என்ற மதம்//

என்று எழுதுவது எது முன்னர் எது பின்னர் என்பதில் ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகிறது. சிலுவைப்போர்கள் 11 நூற்றாண்டின் இறிதியில் தொடங்குகிறது. முகமதியத்தின் பரவல் 7 ம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. முன்னது பின்னதை விட கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகள் பின் வருகிறது.//

மீண்டும் சொல்கிறேன். நீங்கள் எனது கட்டுரையை திரிக்கப் பார்க்கிறீர்கள். இந்தக் கட்டுரை சிலுவைப் போர்களைப் பற்றியது தான். ஆனால், அது ஏன் நடந்தது என்பதை புரிந்து கொள்வதற்கு, இஸ்லாத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ளக் கூடாதா?

//ஐரோப்பியர்கள் இறைச்சியை பதனிட புகை போடுதல் போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ‘நறுமண சரக்கு தூள்கள்’ ஐ பயன்படுத்தவதில்லை. ஐரோப்பியர்கள் இந்தியாவில் இருந்து வேண்டியது மிளகைத்தான். இதை தங்கள் உணவுக்கு சுவையை மணத்தையும் கூட்டத்தான் வாங்கினார்கள். பதனிடுவதற்காக இல்லை.//

இல்லை. அது தவறானது. சரக்குத் தூள்கள் பாவித்த இறைச்சி கெடாமல் இருக்கும் என்பதால், அதன் விலை ஐரோப்பாவில் மிகவும் அதிகமாக இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே வாங்கிப் பாவித்தார்கள். நான் ஐரோப்பிய வரலாற்று நூல்களில் எழுதி இருந்ததை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறேன்.

////ஒரு காலத்தில் அரேபியராகவும், முஸ்லிம்களாகவும் இருந்த தெற்கு இத்தாலியில் இருக்கும் சிசிலி, சின்னஞ்சிறு மால்ட்டா தீவு மக்கள் பின்னர் கத்தோலிக்க மதத்தை தழுவிக்கொண்டனர்.//

அரேபியராக எப்படி இருந்தார்கள் ? முஸ்லிம்களாக இருப்பதற்கு முன்னர் அவர்கள் என்னவாக இருந்தனர்?//

அங்கே கிரேக்கர்கள், பினீசியர்கள், மற்றும் சில பழங் குடிகள் இருந்தன. ஆனால், அரேபியர் வந்து குடியேறி அவர்களோடு கலந்து விட்டனர். இன்றுள்ள மக்கள் பெரும்பாலும் அரேபிய வம்சாவளியினர்.

////கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர்.//

ரோமப் பேரரசு மக்களில் பெரும்பாலானவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டவுடன் தான் ஆளும் வர்க்கம் அல்லது பேரரசன் தன்னை கிருத்துவனாக ஏற்றுக் கொள்கிறான். சில ஐரோப்பிய நாடுகளின் அரசர்கள் இளவரசர்களின் மதமாற்றத்தைத் தொடரந்து தங்கள் மக்கள் எல்லோருமே கிருத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை அண்ணல் அம்பேத்தகர் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். இது வன்முறையின் மூலம் நடந்ததா என்பது தெரியவில்லை. தேவையிருந்திருக்காது என்றே தோன்றுகிறது. ஒரு காரணம், அரசனும் மக்களும் ஒரே இனத்தவர்.//

எல்லோரும் ஒரே இனத்தவர்கள் அல்ல. அந்தக் காலத்தில் ஒரே நாட்டுக்குள் பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் இருந்துள்ளன. இன்று இந்து இந்தியா எப்படி இருக்கிறதோ, அதே மாதிரித் தான் அன்றைய ரோம சாம்ராஜ்யம் இருந்தது. கிறிஸ்தவர்கள் எல்லோரையும் கட்டாயப் படுத்தி மதம் மாற்றினார்கள். மதம் மாற மறுத்தவர்களை படுகொலை செய்தார்கள். பிற மதத்தவரின் கோயில்களை இடித்து அங்கே தேவாலயங்கள் கட்டினார்கள். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

Kalaiyarasan said...

///மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை,(யூதர்களையும்) வாழ விட்டனர்.//

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கிருத்துவ பகுதிகளைத்தாக்கி முதல் மூன்று நாட்கள் கிடைக்கும் ஆண்களையெல்லாம் கொன்று வலக்கரத்தில் கைப்பற்றிய பெண்களை அடிமைப்படுத்திய பிறகு மீதமுள்ளவர்களுக்கு இந்த தெரிவை கொடுத்தார்கள். மீதமுள்ளவர்களில் பலர் அதிக வரிச்சுமை, பாகுபாடுகள் வன்முறைகள் கடத்தல்கள் காரணமாக, முஸ்லிம்களாக மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர்.//

அப்படி எந்தவொரு சரித்திர நூலிலும் எழுதப் படவில்லை. இது சில அரசியல்வாதிகளின் கூற்றாக இருக்கலாம்.

////"அசுத்த ஆவியை" ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது.//

இது அளவுகடந்த மிகைப்படுத்தலாக தெரியவில்லையா?//

உங்களுக்கு ஐரோப்பியரின் வரலாறு தெரியாது என்பதைத் தான் நிரூபிக்கிறீர்கள். இதெல்லாம் வரலாற்று நூல்களில் எழுதப் பட்ட ஆதாரங்கள். பாடசாலை மாணவர்களின் பாடப் புத்தகத்திலும் அவ்வாறு எழுதப் பட்டுள்ளது. வேண்டுமானால் அதற்கான ஆதாரம் காட்ட முடியும்.

////சிலுவைப்போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த சமுதாயத்தை கண்டு வியந்தனர். அவ்வாறு தான் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது.//

முகமதியர்கள் நீங்கள் கூறம் பகுதிகளை கிருத்தவர்களிடமிருந்துதான் அதாவது ரோமப் பேரரசினிடமிருந்து தான் கைப்பற்றினார்கள் என்பதை மறைத்துவிட்டுப் பேசும் பேச்சு இது. சிரயா ஈராக் எகிப்து போன்ற பகுதிகள் முகமதியர்கள் கைப்பற்றும் முன் கிருத்தவப் பகுதிகளாக இருந்தது என்பதை எப்படி மறக்கமுடிந்தது. முகமதியர்களின் பங்காக நீங்கள் கூறுவதின் பெரும்பகுதி கிருத்தவ துறவிகளின் பங்குகள். ஐரோப்பா நாகரீகமடைந்தது சிலுவைப்போர்களின் விளைவாக முகமதியர்களிடமிருந்து கற்றுக்கொண்டதால் என்பது மிகப்பெரிய மோசடி. முகமதியர்கள் தங்கள் வசம் வந்த புத்தகங்களை எரிப்பதில் தான் முன்னனியில் இருந்தனர். சில விதவிலக்குகள் இருந்திருக்கின்றன. அவர்களில் சிலரை முகமதியர்களே முகமதியர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.//

கிறிஸ்தவப் பகுதிகளாக இருந்தது உண்மை. ஆனால், அங்கே நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், கிரேக்கர், ரோமர் காலத்தில் இருந்த நாகரிக வளர்ச்சியை விட பின்தங்கி இருந்தது. உதாரணத்திற்கு, பூமி சூரியனை சுற்றுகின்றது என்ற அறிவியல் கண்டுபிடிப்பு கிறிஸ்தவத்திற்கு முன்பிருந்த அலெக்சாண்ட்ரியா நகரில் (இன்று எகிப்து) தத்துவம் பயின்ற சிலருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், கிறிஸ்தவர்கள் அவர்களை கொன்று, அறிவியல் நூல்களை கொளுத்தினார்கள். இப்படித் தான், நாகரிகத்தில் பின்னோக்கிப் போனார்கள்.

அதற்கான ஆதாரங்கள், வரலாற்று நூகளில் உள்ளன. நீங்கள் அது எதையும் படிப்பதில்லை. படித்தவர்கள் சொன்னாலும் நம்புவதில்லை. நீங்கள் தெரிந்து வைத்திருப்பவை அரைகுறை உண்மைகள் ஆகும்.

////"இஸ்லாமிய ஸ்பெயினில்" பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் கிரேக்க மொழியில் இருந்து அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.//

கிரேக்க மொழி நூல்கள் மொராக்கர்களுக்கு அதாவது மூர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? கிருத்துவ ஸ்பெயினில் இருந்துதானே ?//

இல்லை. பாக்தாத் நகரில் பல கிரேக்க அறிவியல் நூல்களை அரபியில் மொழிபெயர்த்தார்கள். அங்கிருந்து தான் ஸ்பெயினுக்கு கொண்டு வந்தார்கள்.

//ஒரு சிறு பதிவில் இத்தனை தவறுகளா ? முரண்பாடுகளா ?//

நீங்கள் இந்த உண்மைகள் எதையுமே படிக்கவில்லை, அறிந்து கொள்ளவில்லை என்றால், அதை "தவறுகள், முரண்பாடுகள்" என்று தட்டிக் கழிக்கக் கூடாது. கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்பது ஒரு பழமொழி. உலகில் உங்களுக்கு தெரியாத விடயங்கள் நிறைய இருக்கும். உங்களுக்கு தெரியாது என்ற காரணத்திற்காகவே, அவற்றை நிராகரிப்பது தவறு.

இந்தப் பதிவு ஆதாரங்கள் இல்லாமல் எழுதப் படவில்லை. ஐரோப்பாவில் சாதாரணமாகவே ஓரளவு படித்தவர்களுக்கு தெரிந்த விடயங்கள் என்பதால் அவற்றை நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால், உங்களைப் போன்று பலர் இன்னமும் அறியாமை இருளில் உள்ளனர் என்பது தெரிந்திருந்தால், ஏராளமான உசாத்துணை நூல்களில் இருந்து ஒவ்வொன்றுக்கும் வரிக்கு வரி ஆதாரம் காட்டி எழுதி இருப்பேன். அது இந்தப் பதிவை இன்னும் நீளமாக்கி இருக்கும்.

மீண்டும் இதே மாதிரியான கருத்துக்களை கொண்டு வர விரும்பினால், நான் சில நூல்களின் பட்டியலைத் தருகிறேன். அவற்றை முழுவதுமாக வாசித்து விட்டு வாருங்கள் பேசுவோம்.

univerbuddy said...

கலை அவர்களுக்கு,

அவ்வளவு தானா நீங்க என்று கேட்க தோன்றுகிறது.

எனது முந்தைய பின்னூட்டம் உங்கள் பதிவில் மற்றும் பதில்களில் இருந்த கருத்துக்களுக்கு பதிலாக இருந்தது. ஆனால் நீங்கள் அதை அனுமதிக்கவில்லை. நீங்கள் என்னைப்போல அநாநியில்லை என்பதை அறிவேன். நீங்கள் முகமதியர்களுக்கு மத்தியில் வாழ்கிறீர்கள் என்றும் தெரிகிறது. உங்கள் பாதுகாப்பும் முக்கியம்.

ஒன்றை கழுகாக காட்டிவிட்டு மற்றொன்றை அமைதிப்புறாவாக காட்டுவது சரியல்ல. இனிவரும் காலங்களிலாவது எனது கேள்விகளைப்போன்ற கேள்விகளுக்கு இடமளிக்காவண்ணம் பதிவுகளை எழுதுவீர்கள் அல்லது தவிர்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இனி நான் உங்கள் தளத்திற்கு வருகிறேனோ இல்லையோ, பின்னூட்டமிடுவதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவு. நமது குறும்பரிமாற்றத்தை எனது தளத்தில் பதியலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.