Showing posts with label நோர்வே. Show all posts
Showing posts with label நோர்வே. Show all posts

Friday, August 04, 2023

நோர்வேயில் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டதா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், வன்னியில் இருந்து நோர்வே சென்ற புலிகளின் பிரதிநிதிகளுக்கு அங்குள்ள இராணுவ முகாமொன்றில் பயிற்சி அளிக்கும் வீடியோ பார்க்க கிடைத்தது. எப்படியான பயிற்சிகள் என்பதை நோர்வீஜிய படையினர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அது கலவரங்களை தடுப்பதற்கான காவல்துறை (மிலிட்டரி பொலிஸ்) பயிற்சி.

அதாவது, சமாதான உடன்படிக்கையின் பின்னர் ஒரு தீர்வு எட்டப்பட்டால் புலிகள் இராணுவ ரீதியாக இயங்க முடியாது. ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டி இருக்கும். அதற்குப் பின்னர் ஒரு அரசியல் கட்சியாக மட்டுமே இயங்கலாம். முன்னாள் போராளிகள் புதிதாக உருவாகப் போகும் வட - கிழக்கு மாகாண பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் படுவர். தற்போதைய நிலையில் இது அனுமானமாக தெரியலாம். ஆனால் அது மட்டும் தான் நடைமுறைச் சாத்தியமான விடயம். அதை நிரூபிக்கும் வகையில் பயிற்சியில் ஈடுபட்ட பொலிசாரின் கைகளில் இருந்த கவசங்களில் "KFOR" என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது நேட்டோவின் கொசோவோ சமாதானப் படையின் குறியீடு.

உண்மையில் புலிகள் அல்லது தமிழர்களுக்கு பூரண திருப்தி அளிக்கக் கூடிய ஒரு தீர்வு எட்டப் பட்டாலும், பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று அர்த்தம் அல்ல. இங்கு தீர்க்கப் பட்டது இனப் பிரச்சினை மட்டுமே. ஏனைய பிரச்சினைகள் அப்படியே இருக்க போகின்றன. அவற்றுக்காக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து போராட்டங்கள் வெடிக்கலாம். ஏன் கலவரங்கள் கூட நடக்கலாம். அவற்றை அடக்கும் பொறுப்பு புலிகளின் அரசாங்கத்திற்கு உள்ளது. அவர்கள் தமது பொலிஸ் படையை அனுப்பி மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். சுருக்கமாக சொன்னால் சிங்கள பொலிஸ் செய்த அதே வேலையை இனி தமிழ்ப் பொலிஸ் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி தான் நோர்வேயில் அளிக்க பட்டது.

நோர்வேயில் மட்டுமல்ல, பிற மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ் கையாண்ட வன்முறை நடவடிக்கைகள் உலகறிந்த விடயம். இதனால் பலர் காயமடைந்த, கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், தமிழீழமே வந்தாலும் அது ஏகாதிபத்திய நலன் காக்கும் இன்னொரு சிறிலங்காவாகத் தான் இருக்கும். 100%. தமிழர்களின் அரசாக இருந்தாலும், அதுவும் ஒரு அரசு தான். அரசு என்பதே ஒரு அடக்குமுறை இயந்திரம் தான். 



நோர்வேயில் இராணுவப் பயிற்சி வீடியோ:

Friday, March 16, 2018

நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்"

சோவியத் யூனியனுக்குள் நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்".

ஒரு நோர்வே நாட்டு உளவாளியின் வாக்குமூலம்.

பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியத்திற்குள் உளவு பார்ப்பதற்கும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், நேட்டோ நாடுகளை சேர்ந்த உளவாளிகள் ஈடுபடுத்தப் பட்டனர். 

ஊடுருவல் குறித்து, பல தடவைகள் சோவியத் ஒன்றியம் முறையிட்டு வந்த போதிலும், அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும், அந்தக் குற்றச்சாட்டுகளை "கம்யூனிச பிரச்சாரம்" என்று நிராகரித்து வந்தன. தற்போது, நோர்வே நாட்டு சி.ஐ.ஏ. உளவாளி ஒருவர், மரணப் படுக்கையில் இருக்கையில் அந்த இரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

வடக்கு நோர்வேயில் வாழ்ந்த, ஒரு சாதாரண பாடசாலை ஆசிரியரான Arne Lund, தான் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற தகவலை, தனது ஆறு மகள் மாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இறுதியாக, இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்கு அந்த இரகசியத்தை தெரிவித்தார். இவரைப் போன்ற நேட்டோ உளவாளிகள் பலர் இருந்த போதிலும், முன்னாள் உளவாளி ஒருவர் தனது செயல்கள் பற்றிய வாக்குமூலம் கொடுத்துள்ளமை, இதுவே முதல் தடவை.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த Arne Lund, தனது நடவடிக்கைகள் பற்றி, மனைவியிடம் கூட கூறாமல் மறைத்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருப்பதைக் கண்ட மனைவி, விஷயம் தெரியாமல், அவர் மேல் சந்தேகப் பட்டிருக்கிறார். 

சி.ஐ.ஏ. இவரை ஊடுருவல் பணியில் ஈடுபடுத்திய காலத்தில் எல்லாம், வேறு இடத்திற்கு படிக்கச் செல்வதாக கூறியுள்ளார். Arne Lund, வட நோர்வேயில் உள்ள Hammerfest எனுமிடத்திற்கு கப்பலில் சென்று, சி.ஐ.ஏ. தொடர்பாளரை சந்திப்பார்.

அவர்கள் பின்லாந்து எல்லையோரம் உள்ள, Karasjok எனும் நகரத்திற்கு செல்வார்கள். அங்கிருந்து சாதாரண பேரூந்து வண்டியில் ஏறி, பின்லாந்தில் உள்ள Ivalo என்ற இடத்தை சென்றடைவார்கள். 

இவாலோ நகரில் இருந்து தான், சோவியத் யூனியனுக்குள் ஊடுருவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். சோவியத் நாட்டு எல்லையோரம் உள்ள Virtaniemi, மற்றும் Raja-Jooseppi ஆகிய பின்னிஷ் நகரங்கள், நேட்டோவின் ஊடுருவல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப் பட்டு வந்தன.

அவர்கள் சட்டவிரோதமாக எல்லை கடந்து செல்வதற்கு, பின்லாந்து நாட்டு உளவாளி ஒருவர் உதவுவார். தான் சி.ஐ.ஏ. இடம் இருந்து எவ்வளவு சம்பாதித்தேன் என்று சொல்லாத ஆர்னே லுண்ட், பின்னிஷ் உளவாளிக்கு ஒரு வருட, அல்லது இரு வருட சம்பளப் பணம் கொடுக்கப் பட்டதாக தெரிவித்தார். ஆயுதங்களுடனும், தொலைத்தொடர்புக் கருவிகளுடனும், சோவியத் யூனியன் பிரதேசத்திற்குள் ஊடுருவும் நேட்டோ அணியினர், உளவறிந்த பின்னர் திரும்பி வருவது வழக்கம்.

குறைந்தது ஏழு தடவைகள், அவ்வாறு சோவியத் நாட்டுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாக, ஆர்னே லுண்ட் தெரிவித்தார். ஆனால், கடைசித் தடவையாக நடந்த ஊடுருவலில் தவறு நேர்ந்து விட்டது. தற்செயலாக சோவியத் பாதுகாப்புப் படையினரின் கண்களில் சிக்கியுள்ளனர். 

அதனால், நேட்டோ ஊடுருவல் அணியினர், எதிரில் வந்த மூன்று சோவியத் படையினரை சுட்டுக் கொன்று விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். ஆர்னே லுண்ட், தன்னிடம் இருந்த சைலன்சர் பூட்டிய துப்பாக்கியால், அவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆர்னே லுண்ட் விவரித்த இரகசிய ஊடுருவல்கள் யாவும், ஐம்பதுக்களில், அறுபதுகளில் இடம்பெற்றவை. எண்பதுகளில் ஒரு தடவை, நேட்டோ ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்ததாக சோவியத் அரசு அறிவித்திருந்தது. அப்போது அதனை யாரும் பொருட் படுத்தவில்லை. அமெரிக்க ஆதரவாளர்கள், அந்த செய்தியை "வழமையான சோவியத் பிரச்சாரம்" என்று புறக்கணித்து வந்தனர்.

பனிப்போர் காலத்தில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, ஆர்னே லுண்ட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், "Agentens skriftemål" என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வீஜிய NRK1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆவணப் படத்திற்கான இணைப்பு:
Brennpunkt , Agentens skriftemål
https://tv.nrk.no/serie/brennpunkt/mdup11001913/29-10-2013

Sunday, April 23, 2017

நோர்வேயில் ஏழைத் தமிழர்களும் தமிழ் முதலாளிகளின் சுரண்டலும்


நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோ, "ஏழைகளின் பகுதிகள், பணக்காரர்களின் பகுதிகள்" என்று இரண்டாக பிரிந்துள்ளதாக, Aftenposten பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்." என்ற தலைப்பிட்டு, பல புள்ளிவிபரங்களை ஆதாரமாக கொண்டு கட்டுரை எழுதியுள்ளது. (Aftenposten Osloby, 24 oktober 2013)

இதிலே சுவாரஸ்யமான விடயம், நமது தமிழர்களைப் பற்றியது. நோர்வேயில் வாழும் தமிழர்களில் முக்கால்வாசிப் பேர், ஒஸ்லோவில் தான் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர், ஒஸ்லோ நகரின் ஒரு பிரிவான Stovner என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அது தான் ஒஸ்லோ முழுவதிலும், மிகவும் வறுமையான பகுதி என்று Aftenposten பத்திரிகை குறிப்பிடுகின்றது. அதாவது, பெரும்பான்மையான நோர்வே வாழ் தமிழர்கள், ஏழைகள் என்ற தரத்திற்குள் அடங்குகின்றனர்.

Stovner தேர்தல் தொகுதியில் பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர். அவர்கள் அனேகமாக, இடதுசாரிக் கட்சியான Arbeiderpartiet சார்பாக நிறுத்தப் பட்ட வேட்பாளர்கள். ஒஸ்லோ தமிழர்கள் மத்தியில், "தீவிர வலதுசாரி தமிழ் தேசியக் கருத்தியல்" செல்வாக்கு செலுத்துகின்றது. இருப்பினும், தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள்.

வர்க்கப் பிரச்சினை போன்ற சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்கு நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. நமது தமிழ்ச் சமூகத்திலேயே அதற்கான தரவுகள் நிறைய கிடைக்கின்றன.

நோர்வே, ஒஸ்லோ நகரில், "தமிழ் முதலாளிகள், தமிழ் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும், சில நேரம் கூலி கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும்," ஒரு வானொலி நிகழ்ச்சியில் அறிவித்திருந்தனர்.

ஒஸ்லோ "தமிழ் 3" வானொலியில் ஒலிபரப்பான ஒலிப்பதிவின் வீடியோவினை, நானும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். (Tamil workers abused by Tamil petty businessmen;https://youtu.be/awq-Jn1k0Zw)எதிர்பார்த்த மாதிரி, அது தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை உருவாக்கியது. "தமிழ் முதலாளிகளை விமர்சிக்கும் தகவல்களை எதற்கு பகிர்ந்தீர்கள்?" என்று சிலர் என்னிடம் நேரடியாகவே கேட்டார்கள்.

உலகில் யாரையும் விமர்சிக்கலாம். அடித்தட்டு தமிழர்களை பற்றி குறை சொல்லி திட்டலாம். ஆனால், தமிழ் முதலாளிகள் "விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள்" எனக் கட்டமைக்கப் படும் விம்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு முதலாளி தமிழ் பேசினாலும், சிங்களம் பேசினாலும், முதலாளிக்கு உரிய சுரண்டும் தன்மை மாறப் போவதில்லை. அவர்களால் சுரண்டப் படுபவர்கள், தமிழ் தொழிலாளர்களாக இருந்தாலும் இரக்கம் காட்டப் படுவதிலை. அப்படி இருக்கையில், "தமிழ் முதலாளிகளை விமர்சிக்காதீர்கள்" என்பவர்களின் வர்க்க குணம், அப்போது தான் வெளிப்படுகின்றது. இதனைப் புரிந்து கொள்வதற்கு, ஒருவர் மார்க்சியம் மண்ணாங்கட்டி எதுவும் படிக்கக் தேவையில்லை. சுயமாக சிந்திக்கும் பகுத்தறிவு இருந்தால் போதும். அந்த ஒலிப்பதிவில், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலாளர்களை மட்டும் பேட்டி எடுத்திருந்தார்கள்.

ஒஸ்லோவில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும்பாலான முதலாளிகள், ஈழத் தமிழ் பூர்வீகத்தை கொண்டிருந்த போதிலும், நூற்றுக் கணக்கான ஈழத் தமிழ் தொழிலாளர்களும் அதே மாதிரியான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பலர் இந்த நாட்டில் விசா இன்றி தங்கி இருப்பவர்கள் தான். சட்டப் படி வேலை செய்வதற்கு அனுமதி இன்மை, கூடவே மொழிப் பிரச்சினையும் இருப்பதால், தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை உருவாகின்றது.

அதை மட்டுமே சுட்டிக் காட்டி, "இதனை தமிழர்களுக்கு உதவும் செயலாக பார்க்க வேண்டும்" என்று முதலாளிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை. ஆனால் அந்த "சமூக சேவை செய்யும் முதலாளிகள்" கோடி கோடியாக சொத்துக் குவிப்பது மட்டும் எங்ஙனம்?

அவர்கள் ஆடம்பர கார்கள், மாளிகை போன்ற வீடுகளை வைத்திருப்பதுடன், வெளிநாடுகளுக்கு "வர்த்தக சுற்றுலா" போவதையும், காசினோக்களில் பணத்தை இறைப்பதையும் செய்யாமல் இருந்தாலே போதும். அப்படி மித மிஞ்சி சேர்ந்த பணத்தை, தொழிலாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம். அப்போது, நாங்கள் அவர்களது சமூக சேவையை மெச்சலாம்.

உண்மையில் என்ன நடக்கிறது? தொழிலாளர்களை சுரண்டி, அரசுக்கு வரி ஏய்ப்புச் செய்து, சேர்க்கப் பட்ட செல்வம், இறுதியில் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப் படுகின்றது. அதன் பின்னர், அந்த தமிழ் முதலாளிகளுக்கு கிரிமினல் முத்திரை குத்தப் படுகின்றது. அவர்களது கிரிமினல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள், நோர்வே ஊடகங்களில் வெளியாகி சந்தி சிரிக்கிறது.

எனக்குத் தெரிந்த வரையில், இந்த வருடத்தில் மாத்திரம், பத்துக்கும் குறையாத தமிழ் முதலாளிகளின் வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. அவர்கள் இருபது, முப்பது வருடங்களாக நோர்வேயில் வாழ்ந்த போதிலும், அவர்களது குடியுரிமை பறிக்கப் பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டுள்ளனர்.


Saturday, April 22, 2017

நோர்வீஜிய பேரினவாத வெறியும் சாமி இனவழிப்பும் - ஓர் ஆவணம்

தேசியவாதம் என்ற கொள்கை, முதன்முதலாக ஐரோப்பாவில் தோன்றியது. இன்று நமது தமிழ் தேசியவாதிகள், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மொழி அடிப்படையிலான தேசிய அரசுக்களை, அடிக்கடி உதாரணமாகக் காட்டுவார்கள். ஆனால், உண்மையில் அவற்றை தேசியவாத அரசுகள் என்று அழைப்பதை விட, பேரினவாத அரசுகள் என்று அழைப்பதே பொருத்தமானது.

ஒரு காலத்தில், ஐரோப்பிய தேசியவாதிகள், சிங்களவர்களை விட படு மோசமான பேரினவாதிகளாக இருந்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும், ஏதாவதொரு சிறுபான்மை மொழி பேசும் இனம் ஒடுக்கப் பட்டது, இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டது. இன்று, சிறந்த மனிதநேய வாதிகள் என்று காட்டிக் கொள்ளும், ஸ்கன்டிநேவிய நாடுகளும் அதற்கு விதி விலக்கல்ல.

நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய மூன்று நாடுகளும், எவ்வாறு "சாமி" என்ற மொழிச் சிறுபான்மையின மக்களை ஒடுக்கினார்கள் என்பதை விபரிக்கும் ஒரு ஆவணப் படத்தை பார்க்க கிடைத்தது.

எழுபதுகளில், இலங்கையின் சிறுபான்மை தமிழ் இனத்தின் ஈழப்போராட்டம் தொடங்கி விட்டது. அதே கால கட்டத்தில், "நாகரீகமடைந்த" வட ஐரோப்பாவில், ஒரு கொடுமையான இனச் சுத்திகரிப்பு நடந்து கொண்டிருந்தது. ஐரோப்பியக் கண்டத்தின், வட முனைப் பகுதியில் வாழ்ந்த சாமி இன மக்கள், பேரினவாதிகளின் ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள்.

சாமிகள், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த, பனிப்பிரதேசத்திற்கு உரிய பூர்வீக மக்கள் ஆவர். சாமி மொழி பேசும் மக்கள், நோர்வே, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். சர்வதேச எல்லைகள், அவர்களின் வாழ்விடங்களை ஊடறுத்துச் செல்கின்றன.

நோர்வே, சுவீடன், பின்லாந்தை சேர்ந்த பேரினவாத ஆட்சியாளர்கள், சாமி இன குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து, பிரித்தெடுத்துக் கொண்டு சென்றார்கள். அவர்களது கிராமங்களில் இருந்து, குறைந்தது ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விடுதிப் பாடசாலையில் தங்க வைக்கப் பட்டார்கள்.

அங்கே மழலைகளின் மூளைக்குள், ஆக்கிரமிப்பாளர்களின் மொழி, கலாச்சாரம் என்பன திணிக்கப் பட்டன. தாய் மொழியில் பேசுவது தடுக்கப் பட்டது. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், பணியாளர்களைத் தவிர வேறெந்த பெரியவர்களையும் பிள்ளைகள் சந்திக்க வாய்ப்பிருக்கவில்லை.

நோர்வே நாட்டு எல்லைக்குள் வாழ்ந்த சாமி இன பிள்ளைகள், நோர்வீஜியர்களின் மொழி, பண்பாடு, நடை, உடை, பாவனைகளை பின்பற்ற வேண்டுமென கட்டாயப் படுத்தப் பட்டனர். அது போன்று, சுவீடனில் வாழ்ந்த சாமிகள், சுவீடிஷ் மொழியையும், பின்லாந்தில் வாழ்ந்த சாமிகள் பின்னிஷ் மொழியையும் பேச வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

பின்னிஷ் மொழிக்கும், சாமி மொழிக்கும் இடையில் மட்டுமே சில ஒற்றுமைகள் உள்ளன. (தமிழும், மலையாளமும் போல நினைத்துக் கொள்ளுங்கள்.) ஆனால், சாமி மொழிக்கும், நோர்வீஜிய, சுவீடிஷ் மொழிகளுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் கிடையாது. (தமிழும், சீன மொழியும் போல என்று நினைத்துக் கொள்ளுங்கள்.) எந்த வித சம்பந்தமும் இல்லாத, அந்நிய மொழியை பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்த குழந்தைகள், கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டனர். கூடவே பெற்றோரை, உறவினரை பிரிந்து வாழும் வேதனை வேறு.

ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை இலகுவில் கிரகிக்க முடியாத குழந்தைகள், முட்டாள்கள் என்று சிறுமைப் படுத்தப் பட்டனர். சாமி இன மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. சாமி மக்கள் ஐரோப்பிய மனித இனங்கள் எல்லாவற்றிலும் தாழ்ந்தவர்கள் என்று, அறிஞர்கள் "ஆராய்ச்சிகள்" செய்து "கண்டுபிடித்தனர்." ஹிட்லர் பாணியிலான இனவெறி ஆராய்ச்சிக் குறிப்புகள், இன்றைக்கும் சுவீடனில் உள்ள ஊப்சலா பல்கலைக்கழகத்தில் உள்ளன.

நோர்வேயிலும், இன ஒதுக்கல் கொள்கை உச்சத்தில் இருந்ததாக, எழுபதுகளில் சாமி மக்களிடையே பணியாற்றியவெளிநாட்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். அந்தக் காலங்களில், பெரும்பாலான சாமி இன மக்கள், தமது மொழியைக் கூட, எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருந்தனர்.

பொது இடங்களில், நோர்வீஜியர்கள் சாமி மக்களை தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்தி வந்தனர். கடைகளில் வரிசையில் நிற்கும் பொழுது, சாமி ஒருவர் முன்னுக்கு நின்றாலும், பின்னால் நிற்கும் நோர்வீஜியர் முதலில் செல்ல முடிந்தது. ஒரு பேரூந்து வண்டியில், முதலில் நோர்வீஜியர்கள் ஏறிய பின்னர் தான், சாமி இன மக்கள் ஏற முடியும். நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும், தற்போது சாமி இன மக்களுக்கு உரிமைகள் வழங்கப் பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: "சாப்மி" : சாமிகளின் நாடு - ஓர் அறிமுகம்

Monday, May 04, 2015

நோர்வீஜிய இளம் கம்யூனிஸ்டுகளுடன் சில நாட்கள்


வட ஐரோப்பிய நாடான நோர்வேயில், அரசியல் கட்சிகள் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடியும். எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அப்படி அனுமதிப்பதில்லை. அங்குள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான Tjen folket (மக்கள் சேவையாளர்கள்) அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. அதனால், இன்று அந்தக் கட்சியின் எழுபது சதவீத உறுப்பினர்கள் முப்பது வயதிற்கும் குறைவான இளையோர் என்பது குறிப்பிடத் தக்கது.

நோர்வேயில் ஒரு பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சி (Norges Kommunistiske Parti) இருக்கிறது. அது இப்போதும் இயங்கி வருகின்றது.  ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் குருஷேவ் ஆதரவு நிலைப்பாடு எடுத்தமையினால், அந்த நாட்டில் புதியதொரு கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது.

எழுபதுகளில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த மாணவர் எழுச்சிக்குப் பின்னர், மாவோ சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. நோர்வேயில் அது Arbeidernes Kommunistparti (AKP) என்ற பெயரில் கட்சியாக இயங்கியது. ஆயிரக் கணக்கான உறுப்பினர்களுடன் வளர்ந்து வந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின்னர் பின்னடவை எதிர்நோக்கியது.

முன்னாள் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து உருவான Rødt (சிவப்பு), தற்போது ஒரு தீவிர இடதுசாரிக் கட்சியாக மட்டும் இருக்கிறது. கோட்பாடுகளை கைவிட்டு விட்டு, இடதுசாரி அரசியல் பிரச்சாரங்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகின்றது. அதனால், அவர்களுடன் முரண்பட்ட கொள்கைப் பற்றுக் கொண்ட பிரிவினர், Tjen folket கட்சியை ஸ்தாபித்தார்கள். Tjen folket தேர்தல் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. இனவெறிக்கு எதிரான வெகுஜன அமைப்பு போன்றவற்றின் ஊடாக, மக்கள் மத்தியில் வேலை செய்து வருகின்றது.

ஒரு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக தன்னை அடையாள படுத்தும் Tjen folket, இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் சித்தாந்தம் போதித்து வருகின்றது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அரசியல் வகுப்புகளில் ஆயிரக் கணக்கான இளையோர் பங்குபற்றுகின்றனர். கார்ல் மார்க்சின் மூலதனம் முதல், மாவோவின் மேற்கோள்கள் வரை அனைத்து மார்க்சிய நூலகளையும் கற்று விவாதித்து வருகின்றனர். தாம் கற்றறிந்த விடயங்களை புதிதாக சேரும் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் எடுத்துக் கூறி வருகின்றனர். இதன் மூலம் கட்டுக்கோப்பான, கொள்கைப் பிடிப்பு கொண்ட கட்சியாக இருந்து வருகின்றது.

2011 - 2012 காலப் பகுதியில், நான் நோர்வேயில் உள்ள Tromsø எனும் நகரில் வசித்து வந்தேன். அங்கு வேலை செய்த காலத்தில், Tjen folket கட்சியுடன் தொடர்பேற்பட்டது. அரசியல் பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக, Tromsø வில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்த நேரம் எடுத்த படம் மேலே உள்ளது.

அந்தப் பாடசாலையில் உள்ள உணவுச்சாலைக்கு அருகில், Tjen folket கட்சியின் துண்டுப்பிரசுரங்கள், சஞ்சிகைகள், மற்றும் மார்க்சிய- லெனினிச தத்துவார்த்த நூல்கள் காட்சிக்கு வைத்திருந்தோம். பெருமளவு மாணவர்கள் வந்து பார்த்து, அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அரச பாடத் திட்டத்தில், கம்யூனிசம் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப் பட்ட போதிலும், மாணவர்களுக்கு அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் இருந்துள்ளது. அதனால், பல வகையான கேள்விகளை கேட்டு, தமது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்.

இங்கேயுள்ள படத்தில் எனக்கு அருகில் நிற்கும் இரண்டு இளைஞர்களுக்கும், வயது 17 க்கு மேலே இருக்காது. இருவரும் மிக இளம் வயதிலேயே புரட்சிகர அரசியலுக்கு வந்தவர்கள். மிகத் தீவிரமான கம்யூனிச ஆர்வலர்கள். பிரச்சாரம் மட்டுமல்லாது, சுவரொட்டிகள் ஓட்டுவது, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற வெளி வேலைகளிலும் ஈடுபடுவதுண்டு.

அநேகமாக, நோர்வே அரசு எம் மீது எந்த அடக்குமுறையும் பிரயோகிப்பதில்லை. ஆனால், தீவிர வலதுசாரி இளைஞர்கள் தெருவில் சண்டைக்கு வருவார்கள். பல சமயங்களில், நாஸிகளுடன் கைகலப்புக்கு செல்லாமல் தவிர்ப்பதே பெரிய பாடாக இருக்கும். கட்சியில் புதிதாக சேரும், 14, 15 வயதும் ஆகாத இளைஞர்கள் கூட, பாசிஸ்டுகளுக்கு எதிரான  போராட்ட உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். 

இந்தப் படத்தில், எனக்கு இடதுபுறத்தில் நிற்கும் இளந் தோழர், நோர்வேயின் உச்சியில் உள்ள பின்மார்க் என்ற மாகாணத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர் நோர்வீஜிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள். 2 ம் உலகப்போர் நடந்த காலத்தில், நோர்வே முழுவதும் ஜெர்மன் நாஸி படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டது. அவர்களை எதிர்த்து போரிட்ட சோவியத் படைகள், அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் வருவதற்கு முன்னரே, பின்மார்க் பகுதியை விடுதலை செய்திருந்தன. அதனால், பொதுவாகவே பின்மார்க் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளனர். இதனை அந்த இளந் தோழருடனான உரையாடலின் போது அறிந்து கொள்ள முடிந்தது. 



இது தொடர்பாக Tjen folket கட்சியின் இணையத் தளத்தில் வந்த தகவலின் இணைப்பு: 


Tuesday, October 29, 2013

"தமிழரை சுரண்டும் தமிழ் முதலாளிகள்" - நோர்வே தமிழ் வானொலி

நோர்வேயில் தமிழ் ஊழியர்கள் சிறு தமிழ் முதலாளிகளால் மோசமாக 
சுரண்டப்படும் நிலைமை பற்றிய வானொலி நிகழ்ச்சி:




நோர்வே, ஒஸ்லோ நகரில், "தமிழ் முதலாளிகள், தமிழ் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும், சில நேரம் கூலி கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும்," ஒரு வானொலி நிகழ்ச்சியில் அறிவித்திருந்தனர். ஒஸ்லோ "தமிழ் 3" வானொலியில் ஒலிபரப்பான ஒலிப்பதிவின் வீடியோவினை, நானும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். எதிர்பார்த்த மாதிரி, அது தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது. "தமிழ் முதலாளிகளை விமர்சிக்கும் தகவல்களை எதற்கு பகிர்ந்தீர்கள்?" என்று சிலர் என்னிடம் நேரடியாகவே கேட்டார்கள். உலகில் யாரையும் விமர்சிக்கலாம். அடித்தட்டு தமிழர்களை பற்றி குறை சொல்லி திட்டலாம். ஆனால், தமிழ் முதலாளிகள் "விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள்" எனக் கட்டமைக்கப் படும் விம்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு முதலாளி தமிழ் பேசினாலும், சிங்களம் பேசினாலும், முதலாளிக்கு உரிய சுரண்டும் தன்மை மாறப் போவதில்லை. அவர்களால் சுரண்டப் படுபவர்கள், தமிழ் தொழிலாளர்களாக இருந்தாலும் இரக்கம் காட்டப் படுவதிலை. அப்படி இருக்கையில், "தமிழ் முதலாளிகளை விமர்சிக்காதீர்கள்" என்பவர்களின் வர்க்க குணம், அப்போது தான் வெளிப்படுகின்றது. 
இதனைப் புரிந்து கொள்வதற்கு, ஒருவர் மார்க்சியம் மண்ணாங்கட்டி எதுவும் படிக்கக் தேவையில்லை. சுயமாக சிந்திக்கும் பகுத்தறிவு இருந்தால் போதும்.

அந்த ஒலிப்பதிவில், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலாளர்களை மட்டும் பேட்டி எடுத்திருந்தார்கள். ஒஸ்லோவில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும்பாலான முதலாளிகள், ஈழத் தமிழ் பூர்வீகத்தை கொண்டிருந்த போதிலும், நூற்றுக் கணக்கான ஈழத் தமிழ் தொழிலாளர்களும் அதே மாதிரியான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பலர் இந்த நாட்டில் விசா இன்றி தங்கி இருப்பவர்கள் தான். சட்டப் படி வேலை செய்வதற்கு அனுமதி இன்மை, கூடவே மொழிப் பிரச்சினையும் இருப்பதால், தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை உருவாகின்றது. அதை மட்டுமே சுட்டிக் காட்டி, "இதனை தமிழர்களுக்கு உதவும் செயலாக பார்க்க வேண்டும்" என்று முதலாளிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை. ஆனால் அந்த "சமூக சேவை செய்யும் முதலாளிகள்" கோடி கோடியாக சொத்துக் குவிப்பது மட்டும் எங்ஙனம்? அவர்கள் ஆடம்பர கார்கள், மாளிகை போன்ற வீடுகளை வைத்திருப்பதுடன், வெளிநாடுகளுக்கு "வர்த்தக சுற்றுலா" போவதையும், காசினோக்களில் பணத்தை இறைப்பதையும் செய்யாமல் இருந்தாலே போதும். அப்படி மித மிஞ்சி சேர்ந்த பணத்தை, தொழிலாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம். அப்போது, நாங்கள் அவர்களது சமூக சேவையை மெச்சலாம்.

உண்மையில் என்ன நடக்கிறது? தொழிலாளர்களை சுரண்டி, அரசுக்கு வரி ஏய்ப்புச் செய்து, சேர்க்கப் பட்ட செல்வம், இறுதியில் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப் படுகின்றது. அதன் பின்னர், அந்த தமிழ் முதலாளிகளுக்கு கிரிமினல் முத்திரை குத்தப் படுகின்றது. அவர்களது கிரிமினல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள், நோர்வே ஊடகங்களில் வெளியாகி சந்தி சிரிக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில், இந்த வருடத்தில் மாத்திரம், பத்துக்கும் குறையாத தமிழ் முதலாளிகளின் வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. அவர்கள் இருபது, முப்பது வருடங்களாக நோர்வேயில் வாழ்ந்த போதிலும், அவர்களது குடியுரிமை பறிக்கப் பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டுள்ளனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோ, "ஏழைகளின் பகுதிகள், பணக்காரர்களின் பகுதிகள்" என்று இரண்டாக பிரிந்துள்ளதாக, Aftenposten பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்." என்ற தலைப்பிட்டு, பல புள்ளிவிபரங்களை ஆதாரமாக கொண்டு கட்டுரை எழுதியுள்ளது. இங்குள்ள படத்தில் சிவப்பு மையால் காட்டப் பட்டுள்ள பகுதி "ஏழைகளின் ஒஸ்லோ", நீல மையினால் காட்டப்படுள்ளது "பணக்காரர்களின் ஒஸ்லோ". (Aftenposten Osloby, 24 oktober 2013)

இதிலே சுவராஸ்யமான விடயம், நமது தமிழர்களைப் பற்றியது. நோர்வேயில் வாழும் தமிழர்களில் முக்கால்வாசிப் பேர், ஒஸ்லோவில் தான் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர், ஒஸ்லோ நகரின் ஒரு பிரிவான Stovner என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அது தான் ஒஸ்லோ முழுவதிலும், மிகவும் வறுமையான பகுதி என்று Aftenposten பத்திரிகை குறிப்பிடுகின்றது. அதாவது, பெரும்பான்மையான நோர்வே வாழ் தமிழர்கள், ஏழைகள் என்ற தரத்திற்குள் அடங்குகின்றனர்.

Stovner தேர்தல் தொகுதியில் பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர். அவர்கள் அனேகமாக, இடதுசாரிக் கட்சியான Arbeiderpartiet சார்பாக நிறுத்தப் பட்ட வேட்பாளர்கள். ஒஸ்லோ தமிழர்கள் மத்தியில், "தீவிர வலதுசாரி தமிழ் தேசியக் கருத்தியல்" செல்வாக்கு செலுத்துகின்றது. இருப்பினும், தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். வர்க்கப் பிரச்சினை போன்ற சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்கு நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. நமது தமிழ்ச் சமூகத்திலேயே அதற்கான தரவுகள் நிறைய கிடைக்கின்றன.

Wednesday, June 06, 2012

லெனினிச பார்வையில், ஈழத்திற்கான சுயநிர்ணய உரிமை

இடதுசாரிகளை, தேசியவாதிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சில 'முற்போக்கு தமிழ்த் தேசியவாதிகள்', இரண்டு நாடுகளின் உதாரணங்களை அடிக்கடி எடுத்துக் காட்டுவார்கள். லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை ஆதரித்ததையும், கார்ல் மார்க்ஸ் அயர்லாந்தின் சுதந்திரத்தை ஆதரித்ததையும் சுட்டிக்காட்டி மடக்கப் பார்ப்பார்கள். ஆகவே, இவ்விரு நாடுகளின் சுயநிர்ணய உரிமை பற்றிய மார்க்சிய- லெனினிசப் பார்வை அவசியமாகின்றது.


லெனின், மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளை எடுத்துக் காட்டி தத்துவார்த்த விளக்கம் கொடுப்பதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த காலத்திய பூகோள அரசியல் நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு தேசியத்தின் சுதந்திர உரிமையை அங்கீகரித்த லெனினும், மார்க்சும், தாம் சார்ந்த பிற தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது புறக்கணித்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? அயர்லாந்து, நோர்வேயின் சுயநிர்ணய உரிமையையும், அவர்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரித்தார்களா? இவற்றை ஆராயாமல், 'லெனின் நோர்வீஜிய தேசியத்தையும், மார்க்ஸ் ஐரிஷ் தேசியத்தையும் ஆதரித்தார்கள், ஆகவே அனைத்து இடதுசாரிகளும் தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும்,' என்று வாதிடமுடியாது.


"நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான பொருளாதார, மொழியியல் பிணைப்புகள், ரஷ்ய, ஸ்லாவிய தேசங்களைப் போல நெருக்கமானது. ஆனால், நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான ஒன்றியம், (நோர்வேயின்) விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவல்ல.... நெப்போலியனின் யுத்த காலத்தில், நோர்வே மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மன்னர்களால் நோர்வே சுவீடனுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. நோர்வேயை பணிய வைப்பதற்காக, சுவீடன் படையனுப்ப வேண்டியிருந்தது." - லெனின் (தேசங்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பாக)


போலந்து மார்க்சியவாதியும், லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டவருமான ரோசா லக்சம்பேர்க்கின் கட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் முகமாக, லெனின் அந்த பத்தியை எழுதினார். இதிலே லெனின், நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை, அந்தக் காலத்திய ஐரோப்பிய சரித்திரப் பின்னணியுடன் விளக்குவதை கவனிக்க வேண்டும். சுமார் நானூறு வருடங்கள், நோர்வே டென்மார்க் அரச பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தது. நோர்வே மக்கள் பேசிய "பழைய நோர்வீஜிய" மொழியின் மேல், டேனிஷ் மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதனை சிலர் "டேனிஷ் ஏகாதிபத்தியம்" என்று அழைக்கின்றனர்.

இன்றைக்கும், டேனிஷ் மொழி, சில திருத்தங்களுடன் நோர்வேயின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. உண்மையில், டென்மார்க்கின் கலாச்சார ஆதிக்கத்திற்கு பழக்கப் பட்ட நோர்வீஜியர்கள், சுவீடனின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பின்னரும், டென்மார்க்கின் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவரைத் தான், நோர்வேயின் மன்னனாக முடி சூட்டினார்கள். நோர்வீஜிய மத்தியதர வர்க்கத்திற்கும், டேனிஷ் மத்தியதர வர்க்கத்திற்கும் இடையிலான நெருக்கம், சுவீடிஷ் மத்தியதர வர்க்கத்துடன் இருக்கவில்லை. இத்தகைய முரண்பாடுகளையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த நெப்போலியனின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புப் போர்களும், ஐரோப்பியக் கண்டத்தின் அரசியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. டென்மார்க்-நோர்வே அணி, பிரான்சின் பக்கம் நின்றதால், நெப்போலியனின் தோல்வி, அவர்களையும் பாதித்தது. பிரிட்டன், ரஷ்யா, சுவீடன் போன்ற போரில் வெற்றி பெற்ற நாடுகள், தாம் விரும்பிய படி, தேசங்களை மறுசீரமைத்தன. அதன்படி, டென்மார்க், நோர்வேயை சுவீடனுக்கு தாரை வார்க்க வேண்டியேற்பட்டது.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், மிகவும் பின்தங்கிய வறிய நாடான நோர்வேக்கு, வேறு தெரிவு ஏதும் இருக்கவில்லை. ஒன்று, சுவீடனின் ஒரு பகுதியாக மாறுவது, அல்லது, டென்மார்க்குடன் சேர்ந்து தண்டப்பணம் செலுத்துவது. மேலும், நோர்வீஜியர்கள், சுவீடனிடம் இருந்து விடுதலை அடைவதற்கு முன்னரே, தமக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றி இருந்தனர். இதற்கென நாடு முழுவதிலும் இருந்து, நிலப்பிரபுக்களினதும், பூர்ஷுவாக்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய லெனின், சுதந்திரத்தின் பின்னர் நோர்வே குடியரசாக மாறும் என்று எதிர்பார்த்தார். ஆனால், நோர்வீஜியர்கள் முடியாட்சிக்கு உட்பட்ட பாராளுமன்ற முறையை தெரிந்தெடுத்தனர். 1917 , போல்ஷெவிக் புரட்சி நடப்பதற்கு முன்னரே, லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தார். அதே போன்று, புரட்சியின் பின்னர், ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்திற்கு சுதந்திரம் வழங்கினார். பிற்காலத்தில், இவ்விரண்டு நாடுகளும், அமெரிக்க சார்பு அணியில் சேர்ந்தமை குறிப்பிடத் தக்கது.

லெனின் எதிர்பார்த்த, பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஊக்குவிக்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, நடைமுறையில் பலிக்கவில்லை. அது லெனின் விட்ட தவறா? அல்லது நோர்வே, பின்லாந்து நாடுகளின் பாட்டாளி மக்கள் விட்ட தவறா? இதற்கான விடை, தத்துவார்த்த நடைமுறைகளை மேவும், பூகோள அரசியல் சதுரங்கம் விளையாட்டினுள் மறைந்திருக்கின்றது. அதனை, லெனினோ அல்லது கார்ல் மார்க்சோ எழுதியிருக்கப் போவதில்லை. ஏனெனில், இவை எல்லாம் சராசரி அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள். அவற்றை காலத்தால் அழியாத புரட்சிகர சித்தாந்தமாக குறிப்பிட முடியாது.

முதலாம் உலகப்போரின் முடிவில், பெர்லின் நகரில் ஜெர்மன் சோவியத் அரசமைத்த புரட்சியாளர்களுக்கு உதவும் நோக்குடன், லெனின் செம்படைகளை அனுப்பி வைத்தார். ஜெர்மனி செல்வதற்கு முன்னர், இடையில் இருந்த போலந்தில் ஒரு பாட்டாளி வர்க்க அரசை நிறுவ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், போலந்து தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பினால், லெனினின் நோக்கம் நிறைவேறவில்லை.

தேசியவாதிகளின் வலதுசாரி சார்புத் தன்மையும், வர்க்க விரோத மனப்பான்மையும், பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தடைக் கல்லாக இருக்கும் என்பதை, லெனின் மிகத் தாமதமாகத் தான் உணர்ந்து கொண்டார். அல்லா விட்டால், தேசியங்கள் குறித்த கோட்பாட்டை எழுதும் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பாரா? ஸ்டாலின் தனது சொந்த நாடான ஜோர்ஜியாவில், வலதுசாரி ஜோர்ஜிய தேசியவாதிகளை போரிட்டு அடக்க வேண்டியேற்பட்டது. ஒரு வருட காலமே பூரண சுதந்திரத்தை அனுபவித்த ஜோர்ஜியா, சோவியத் யூனியனின் குடியரசானது.

பின்லாந்து போன்று, ஜோர்ஜியாவையும் வலதுசாரித் தேசியவாதிகளின் போக்கில் விட்டிருந்தால், அங்கே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படைகளைக் குவித்திருக்கும். ஒரு தேசியத்தின் (உதாரணம்: பின்லாந்து) பூரண சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டதற்காக இடதுசாரிகளைப் புகழ்வதும், இன்னொரு தேசியத்தின் சுதந்திரத்தை (உதாரணம்: ஜோர்ஜியா) மட்டுப் படுத்தியதற்காக இடதுசாரிகளை இகழ்வதும் வாடிக்கையாகி விட்டது. ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் நோக்கம், அதனை பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசாக்குவதாகும். பின்லாந்தும், நோர்வேயும் அமெரிக்க சார்பு அணியில் இருந்தாலும், சோவியத் யூனியனுடன் சிறந்த நட்புறவைப் பேணி வந்துள்ளன.

கம்யூனிஸ்டுகளின் தேசிய சுயநிர்ணயக் கொள்கை, ஒரு குறிப்பிட்ட தேசியத்தின் மொழிக்கு, கலாச்சாரத்திற்கு எதிரானதல்ல. மாறாக, பெரும்பான்மை இனத்தின் பேரினவாத வெறி அடக்கப் பட்டு, சிறுபான்மை இனங்களின் கலாச்சார சுதந்திரத்தை உறுதிப் படுத்தியதே வரலாறு. சோவியத் யூனியனில் ரஷ்ய பேரினவாதிகள் அடக்கி வைக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவில், செர்பிய பேரினவாதிகள் வாலாட்ட முடியவில்லை. சோவியத் யூனியனில் ஜோர்ஜிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலினும், யூகோஸ்லேவியாவில் குரோவாசிய சிறுபான்மையினத்தை சேர்ந்த டிட்டோவும் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் தான் சுயநிர்ணய உரிமை கோட்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழி பொது மொழியாக இருந்தது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி பொது மொழியாக இருந்தது. ஆனால், அதற்கு காரணம் பேரினவாத அடக்குமுறை அல்ல. நாம் எவ்வாறு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அது போன்று பல்வேறு இனங்கள் தொடர்பாடக் கூடிய பொது மொழி ஒன்றின் தேவை காரணமாக இருந்தது. சோவியத் யூனியனிலும், யூகோஸ்லேவியாவிலும் சிறுபான்மை மொழி பேசும் இனங்களுக்கு வழங்கப் பட்ட சுதந்திரம், இன்று வரை அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை அழிய விடாமல் காப்பாற்ற உதவியிருக்கிறது. முதலாளித்துவம் கோலோச்சிய மேற்கத்திய நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது?

அயர்லாந்து மக்கள் தமது மொழியை மறந்து விட்டார்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆங்கில மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். நோர்வேயிலும் அது தான் நிலைமை. பழைய நோர்வீஜிய மொழி, தொலை தூரத்தில் தனித்திருக்கும் தீவான ஐஸ்லாந்தில் மட்டுமே, இன்று வரை பேசப் பட்டு வருகின்றது. இன்று டென்மார்க்கினால் ஆளப்படும் பேரோ தீவு மக்கள், டேனிஷ் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, பண்டைய நோர்வீஜிய மொழியை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பழைய நோர்வீஜிய மொழியை பேசத் தெரிந்தவர்கள் யாரும், இன்று நோர்வேயில் இல்லை. டேனிஷ் மொழி மட்டுமே பேசத் தெரிந்த தற்கால நோர்வீஜியர்கள், தமக்கென தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட சுவீடிஷ்காரரைப் போன்று வர விரும்பியதில் என்ன தவறு? லெனினின் மனதில் அத்தகைய எதிர்பார்ப்பு இருந்ததை, ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அளித்த விளக்கத்தில் பார்க்க முடிகின்றது. ரஷ்ய, ஸ்லாவிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமையை, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகளுடன் லெனின் ஒப்பிடுவதைக் கவனிக்கவும். தமிழும், மலையாளமும் போல, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகள் ஒரே வேர்களைக் கொண்டுள்ளன. லெனினின் எதிர்பார்ப்பு பிழைக்கவில்லை. சுவீடனிடம் இருந்து விடுதலை பெற்ற நோர்வே, தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.


"நோர்வீஜிய, சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை காரணமாக, நோர்வேயின் பிரிந்து செல்லும் உரிமைக்கு ஆதரவாக, சுவீடிஷ் பாட்டாளி மக்களின் ஒப்புதலைப் பெற முடிந்தது. சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், சுவீடிஷ் தேசியவாதத்தினால் பீடிக்கப் படவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகின்றது. ஸ்வீடிஷ் அரச பரம்பரை,பூர்ஷுவாக்கள் வழங்கிய சலுகைகளை விட, நோர்வீஜிய பாட்டாளி மக்களுடனான சகோதரத்துவம் உயர்வாகப் பட்டது." - லெனின்

இடதுசாரிகள், தமிழ் தேசியக் கோட்பாட்டை ஆதரிக்க வேண்டும், என்று வற்புறுத்தும் தமிழ்த் தேசியவாதிகள், லெனின் முன்மொழிந்த பாட்டாளிவர்க்க சகோதரத்துவம் என்ற நிபந்தனையை கண்டு கொள்ள மறுக்கிறார்கள். சில இடதுசாரி வேஷம் போட்ட தமிழ்த் தேசிய அபிமானிகள் கூட நுனிப்புல் மேய்கின்றனர். நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த லெனினின் கூற்றுக்களை, ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்ப்போம். பண்டைய வரலாற்றுடன் ஒப்பிட வேண்டுமானால், நோர்வேயை தமிழீழத்துடனும், சுவீடனை சிறி லங்காவுடனும், இந்திய- சோழ சாம்ராஜ்யத்தை டென்மார்க்குடனும் ஒப்பிடலாம். பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தை, நெப்போலியன் போர்களுடன் ஒப்பிடலாம்.

அந்த வகையில், சிறிலங்காவிடம் இருந்து பிரிந்து, இந்தியாவுடனும் சேராமல் தனித்து அரசமைக்க விரும்பும் தமிழீழம், தனக்கென ஒரு அரசமைப்பு சட்டத்தை எழுதியுள்ளதா? இந்தியாவுடன் அடையாளம் காண விரும்பாத, தனித்துவமான மொழி, அல்லது கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சகோதரத்துவத்தை பேணி வருகின்றதா? இது போன்ற கேள்விகள் எழுப்புவதையே விரும்பாதவர்கள் தான், இடதுசாரிகளுக்கு வகுப்பு எடுக்கின்றனர். லெனின் நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார். அதற்கான வாதங்களையும் முன் வைத்தார். ஆனால், அந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, இடதுசாரிகள் எல்லோரும் குருட்டுத்தனமாக தேசியவாதத்தை நிபந்தனை இன்றி அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது?


"ஒடுக்கப் படும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகள், ஒடுக்கும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேண வேண்டும்," என்பது, ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு மார்க்சியவாதிகள் முன்வைக்கும் நிபந்தனையாகும். ஏற்கனவே, பல சர்வதேச இடதுசாரிகள் தமிழ்த் தேசிய எழுச்சியை ஆதரித்துள்ளனர். எந்த நிபந்தனையின் பேரில், எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்த ஆதரவு வழங்கப் பட்டது, என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். "சிறி லங்கா ஆட்சியாளர்களை, பிரிட்டிஷ் நவ-காலனிய கைக்கூலிகளாகவே," சர்வதேச இடதுசாரிகள் கருதுகின்றனர். "ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானது," என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டே இடதுசாரிகள் ஆதரவு வழங்க முடியும்.

அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த மார்க்சும், நோர்வேயின் விடுதலையை ஆதரித்த லெனினும், மேலைத்தேய ஏகாதிபத்தியத்தை பலவீனப் படுத்துவதை கருத்தில் கொண்டிருந்தனர், என்பது இங்கே நினைவுகூரத் தக்கது. தொன்னூறுகளில், சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா போன்ற கம்யூனிச வல்லரசுகளை உடைக்கும் நோக்குடன், மேற்குலகம் புதிய குடியரசுகளை அங்கீகரித்தது. அதே நேரம், பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்), போன்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை நசுக்கி வந்துள்ளது. இந்த முரண்பாடுகளை, தத்துவார்த்த, அல்லது பூகோள அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியம்.

Thursday, April 19, 2012

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் நோர்வே ! - ஓர் ஆய்வு



"இந்தியா, இலங்கை இலிருந்து புலம்பெயர்ந்து, நோர்வே நாட்டில் வாழும்  பெற்றோருக்கு, தமது  குழந்தைகளை சரியாக வளர்க்கத் தெரியாது!" 
இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்து, நோர்வே அரச அலுவலர்கள், அவர்களது பிள்ளைகளை பிரித்துச் சென்று, குழந்தைகள் நல காப்பகத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர். இந்தச் செய்தி , அண்மையில் இந்திய, தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. இந்தச் சம்பவம் ஏற்கனவே, பல தடவைகள் நோர்வேயில் நடந்துள்ளன. கடந்த வருடம், மூன்று சோமாலியக் குடும்பங்களை சேர்ந்த ஆறு பிள்ளைகள், இவ்வாறு குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். ஆனால், வேற்றின சமூகத்தில் நடந்த சம்பவம் என்பதால், தமிழ் ஊடகங்கள் அதையிட்டு அக்கறை காட்டவில்லை. இந்த வருடம் ஒரு இந்திய குடும்பமும்,  ஒரு இலங்கைத் தமிழ் குடும்பமும், குழந்தை  உரிமைகள் சட்டத்தினால் பாதிக்கப் பட்ட பின்னர் தான், நமது ஊடகங்கள் அதிலே கவனம் எடுத்தன. 

நோர்வேயில், Stavanger நகரில் வாழ்ந்த ஒரு இந்தியக் குடும்பத்தின் கதை, அனைத்து இந்திய ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப் பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்திய ஊடகங்களைப் பொறுத்த வரையில், அது ஒரு "அரசு நடத்திய ஆட் கடத்தல்".  ஊடகங்களுக்கு பேட்டியளித்த பெற்றோர்கள், "கலாச்சார  வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளாத  நோர்வீஜிய அரசுப் பணியாளர்களின் செயல்." என்று சாடினார்கள். "இது கலாச்சார வித்தியாசம் காரணமாக எழுந்த பிரச்சினையல்ல. குழந்தைகளின் உரிமைகள் சம்பந்தமானது." என்று நோர்வே அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், குழந்தைகளை பறிகொடுத்த இந்திய பெற்றோர்கள், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஊடக பலம் காரணமாகவும், அரசு நேரடியாக தலையிட்டதாலும், குழந்தைகளை மீளப் பெற்றுக் கொண்டனர். ஆனால், இந்தளவு ஆதரவற்ற பெற்றோரின் குரல்கள் வெளியே கேட்பதில்லை. 

தமது குழந்தைகளை பறிகொடுத்த இலங்கைத் தமிழ்ப் பெற்றோரின் கதை, பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பானது. Bergen நகரில் வாழும் அந்த தமிழ்த் தாயும், "கலாச்சார வேறுபாடு காரணமாகவே, குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்ததாக," தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களாக குழந்தைகளை இழந்து தவிப்பதாகவும், நித்திரை கொள்ள முடியாமல் தூக்க மாத்திரைகளை பாவிப்பதாகவும்," நோர்வீஜிய பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்தார்.  "கையால் உணவூட்டுவது, மடியில் இருத்தி வைப்பது, ஒரே கட்டிலில் படுப்பது" போன்றன குழந்தைகள் உரிமைகளை மீறும் செயல் என்று தமக்கு தெரிவிக்கப் பட்டதாக அந்த தாய் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார். இந்தியப் பெற்றோரும் இதே போன்ற கருத்துகளைத் தான் கூறினார்கள். அப்படியானால், நமது நாடுகளில் சாதாரணமானது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பழக்க வழக்கங்கள், மேலைத்தேய நாட்டவர் கண்களுக்கு காட்டுமிராண்டித் தனமாக தெரிகின்றதா? இது கலாச்சார வேறுபாட்டால் எழும் பிரச்சினையா? 

 குழந்தைகளை பறிகொடுத்த இந்திய, இலங்கை, சோமாலியப் பெற்றோர் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு விடயத்தைக் கூறுகின்றனர். நோர்வேயில் வாழ வந்த தமக்கு, அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி அறிவுறுத்தப்படுவதில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். எழுதப்படிக்கத் தெரியாத சோமாலியப் பெற்றோர் முதல், பன்னாட்டுக் கம்பனியில் வேலை செய்த, இந்திய பெற்றோர் வரை அந்த விமர்சனத்தை தான் முன்வைக்கின்றனர்.  ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய சட்டங்கள் கடுமையானவை என்பதை மறுப்பதற்கில்லை. அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக சட்டம் இறுக்கப் படவில்லை. "நடுநிலை பேண விரும்பிய" பிபிசி தமிழோசையும், அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பது, பேட்டி எடுத்தவரின் கேள்விகளில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. 

மேலைத்தேய நாடுகளின் அரசாங்கங்கள், குழந்தை வளர்ப்பிலும், பராமரிப்பிலும் தலையிட்டு, தாமே  பெற்றோரின் பொறுப்பையும்  ஏற்றுக் கொள்ளும்   காரணம் என்ன?

“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…” - கார்ல் மார்க்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து)

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒரு பாரிய கலாச்சாரப் புரட்சி நடந்தது. குடும்ப உறவுகள்  இப்படித் தான் இருக்க வேண்டும், குழந்தைகளை இப்படித் தான் வளர்க்க வேண்டும்  என்று அரசு தீர்மானித்து சட்டம் இயற்றியது. அதன் அர்த்தம், ஒரு குழந்தையை வளர்ப்பது அதன் தாய், தந்தையர் மட்டுமல்ல. குழந்தை வளர்ப்பில் அரசின் பங்களிப்பும் கணிசமான அளவு இருக்க வேண்டும். உண்மையில், பெற்ற தாய், தந்தையை விட, அரசு அதிக பொறுப்பை எடுத்துக்  கொண்டுள்ளதோ என சில நேரம் நினைக்கத் தோன்றும். அந்தளவுக்கு ஒரு குடும்பத்தினுள் அரசின் தலையீடுகள் அதிகம். இதுவே ஒரு சோஷலிச நாட்டில் நடந்திருந்தால், "மனித உரிமை மீறல்கள்" குறித்து  இன்று எல்லோரும் பேசியிருப்பார்கள். "கம்யூனிச அரசுகள் குடும்பங்களை சிதைத்து, பிள்ளைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்கின்றனர்." என்று பிரச்சாரம் முடுக்கி விடப் பட்டிருக்கும். பனிப்போர் காலத்தில் அப்படியான கதைகள், ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்தன. அது வேறு விஷயம். 

இப்போது நோர்வேக்கு வருவோம். இன்றுள்ள குழந்தைகள் நல உரிமைகள், நோர்வீஜிய சமூகத்தில் ஆதி காலத்தில் இருந்தே நிலவி வந்துள்ளதா?  அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட, வைகிங் கால  குடிமனைகளில், ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வாழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது. கூட்டுக்  குடித்தனம் அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாக இருந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில், பொருளாதார வசதிகள் பெருகிய பின்னர், வீட்டு வசதிகளும் பெருகின. பிள்ளைகளுக்கென தனியான அறைகள் ஒதுக்கப் பட்டன. . அதே போன்று, கரண்டியால் உணவுண்ணும் பழக்கம் கூட 19 ம் நூற்றாண்டில் அறிமுகமான  கலாச்சாரம் தான். தீவிர கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களான நோர்வீஜியர்கள் வீடுகளில், குழந்தைகளை அடித்து வளர்ப்பது  பெற்றோரின் கடமையாக கருதப் படுகின்றது. (பார்க்க: Vår gude gitte rett å slå barn) ஆகவே நோர்வீஜியர்கள் (அல்லது ஐரோப்பியர்கள்) தமது பாரம்பரிய கலாச்சாரத்தை எம் மீது திணிக்கிறார்கள் என்று பொருள்கொள்ள முடியாது. குழந்தை வளர்ப்பு பற்றிய பிரச்சினை, கலாச்சார முரண்பாடுகளால் எழுந்த பிரச்சினை அல்ல. துரதிர்ஷ்டவசமாக, நோர்வேயில் வாழும் இந்திய/இலங்கைப் பெற்றோர் நிலைமையை அவ்வாறு தான் புரிந்து கொள்கின்றனர்.

ஐரோப்பாவில் லிபரல் சமுதாயத்தை படைத்த முதலாளித்துவம், அதற்கான கலாச்சாரத்தையும் புதிதாக அறிமுகப் படுத்தியது. இந்த முதலாளித்துவ-லிபரல் சமுதாயம் குடும்ப உறவுகளில் இருந்தே ஆரம்பிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து, அதனை வளர்த்து, கல்வி புகட்டுவது எல்லாமே ஒரு முதலாளித்துவ அரசின் கடமைகள். அந்தக் குழந்தைக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்ட நாளில் இருந்து, அது தேசத்தின் சொத்தாக கருதப் படுகின்றது. அரை நிலப்பிரபுத்துவ   சமுதாய அமைப்பில் இருந்து புலம்பெயரும் இந்திய/இலங்கைப் பெற்றோர் இந்த முரண்பாட்டை புரிந்து கொள்வதில்லை. "குழந்தைகளை கீழ்ப்படிய வைத்து, அடித்து வளர்க்க வேண்டும்" என்ற நிலப்பிரபுத்துவ போதனையும், "குழந்தைகளை அடிக்காமல், சுதந்திரமாக வளர விட வேண்டும்" என்ற முதலாளித்துவ போதனையும், நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளில் மோதிக் கொள்கின்றன. சுருக்கமாக, இது கலாச்சாரங்களின் மோதல் அல்ல, மாறாக, சித்தாந்தங்களின் மோதல். 

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், குழந்தைகள் தாய், தந்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். குடி மக்கள் மன்னனுக்கும், கடவுளுக்கும்  கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். முதலாளித்துவ-லிபரல் சமுதாயத்தில் தனி நபரின் உரிமைகள் முக்கியமானவை. அது சமுதாயத்தை "சுதந்திரமான தனி நபர்களின் கூட்டமைப்பாக" கருதுகின்றது. சுதந்திரமான தனி நபர்களை, அரசும், முதலாளிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கல்வி ஒன்றின் ஊடாக நடைமுறைப் படுத்துகின்றனர். ஐரோப்பிய நாடுகளில், ஒரு பிள்ளை, ஐந்து வயதில் இருந்து பதினாறு வயது வரையில், கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும். 

பெற்றார் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்தால், தண்டப்பணம் அறவிடப்படும். நெதர்லாந்தில் வாழும், மொரோக்கோ, துருக்கி போன்ற இஸ்லாமியப் பின்னணியைக் கொண்ட பெற்றோர்கள் சிலர், தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப விரும்பாமல், வீட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அரசினால் கடுமையாக எச்சரிக்கப் பட்டனர். பெரும்பாலும் கிராமங்களில் இருந்து வந்த, பழமைவாத கலாச்சாரம் பேணும் பெற்றோர், தமது பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று, "சீரழிந்த ஐரோப்பிய கலாச்சாரத்தை" கற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. மறு பக்கத்தில் ஐரோப்பிய கல்வி நிலையங்கள், ஒரு பிள்ளை எந்த நாட்டில் இருந்து வந்திருந்தாலும், தமது நாட்டுக் கலாச்சாரத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றன. ஐரோப்பியர்கள் தமது நாகரீகம்  உலகில் சிறந்தது என்று நம்புகின்றனர். 

கையால் உணவூட்டல் போன்ற கலாச்சார வேறுபாடுகளே, குழந்தைகளை தம்மிடம் இருந்து பிரிப்பதற்கு காரணம் என்று, இந்திய/இலங்கைப் பெற்றோர் நம்புகின்றனர். நோர்வீஜிய அதிகாரிகள் மீதும் அத்தகைய குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஆனால், நோர்வீஜிய அரசும், குழந்தைகள் காப்பக ஊழியர்களும் முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை பெற்றோர் மீது சுமத்துகின்றனர். நோர்வேயில் குழந்தைகளை அடிப்பதற்கு சட்டத்தால் தடை செய்யப் பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டுக் குடியேறிகள் சமூகத்தில் குழந்தைகளை அடித்து வளர்ப்பது சர்வசாதாரணம். இலங்கை, இந்தியா, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள பெற்றோர் தம் பிள்ளைகளை வளர்ப்பதைப் போன்று, நோர்வேயில் செய்ய முடியாதுள்ளது. 

சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு (Nursury) செல்லும் பிள்ளைகள், வீட்டில் தாயாரிடம் அடிவாங்கியதாக முறைப்பாடு செய்துள்ளன. இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, தாம் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்ததாக, குழந்தைகள் நல காப்பக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் நல காப்பகத்தில், பணியாளர்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளை பெற்றோர் பார்க்க முடியாது.  இந்த "பறிமுதல் நடவடிக்கைக்கு" பின்னர், சம்பந்தப்பட்ட பெற்றோர்  மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டுமென  அறிவுறுத்துகின்றனர்.  Gjøvik எனும் இடத்தில், பிள்ளைகளை பறிகொடுத்த சோமாலியத் தாய்மார், வாரந்தோறும் நகரசபை கட்டிட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். "எங்கள் குழந்தைகளை எம்மிடம் திருப்பித் தாருங்கள்" என்ற கோஷத்தை முன்வைத்து போராடினார்கள். அவர்களது போராட்டத்திற்கு, பத்து மாதங்களுக்குப் பின்னர் பலன் கிடைத்தது. இறுதியில் பிள்ளைகள், தாய்மாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். 

சோமாலியர்கள் போன்று, தமிழர்களும் போராட்டம் நடத்தியதாக நான் கேள்விப்படவில்லை. நோர்வேயில் இயங்கும் பத்துக்கும் குறையாத தமிழர் அமைப்புக்கள் எவையாவது மத்தியஸ்தம் வகிக்க முன் வந்தனவா, என்று தெரியவில்லை. ஆனால், சோமாலியர்களின் அமைப்பொன்று (Internasjonal Somalisk Forum i Norge), பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி, சுமுகமான தீர்வைக் காண உதவியது. தாய்மாருக்கும், குழந்தைகள் நல காப்பகத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகித்தது. அவர்கள் இரண்டு பக்க தவறுகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தனர். சோமாலியப் பெற்றோர் தமது குழந்தைகளை அடித்து வளர்ப்பதை கண்டிக்க வேண்டும். அதே சமயம், நோர்வீஜிய அதிகாரிகள் தகவல்களை வழங்கி, எச்சரிக்கை விடுத்த பின்னர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

குழந்தைகள் நல காப்பக பணியாளர்கள், சில நேரம் வேண்டுமென்றே வெளிநாட்டவர் சமூகங்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப் படுகின்றது. நிர்வாகத்தில் உள்ளோரின் ஊழல், ஊடகங்களில் எதிர்மறையான செய்திகளை வழங்கும் உள்நோக்கம், என்று பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன. சோமாலியச் சமூகமும் சில மாற்றங்களுக்குட்பட வேண்டும். குறிப்பாக, பிள்ளைகளை அதிகம் வெளியே செல்ல விடாமல், வீட்டுக்குள்ளே அடைத்து வைக்கப் படுகின்றனர். நண்பர்களை வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. பிள்ளைகள் மீது பெற்றோர் தமது அபிலாஷைகளை திணிப்பதால் எழும் முரண்பாடுகள். இவை போன்ற செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என சோமாலிய நலன் பேணும் அமைப்பு கேட்டுக் கொண்டது. பல குடும்பங்களில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெறுவதாக, சோமாலிய-நோர்வீஜிய எழுத்தாளர் Amal Aden சுட்டிக் காட்டினார். இந்தப் பிரச்சினைகள் எல்லாம், சோமாலிய சமூகத்தில் மட்டும் நடைபெறுகின்றதா? இந்தியா, இலங்கையை சேர்ந்த குடும்பங்களிலும் அது தான் நிலைமை. 

குழந்தைகள் நல காப்பகத்தில், வெளிநாட்டு குடிவரவாளர்களின் குழந்தைகளை மட்டுமே தடுத்து வைத்திருப்பது போன்று, ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எங்காவது ஒரு வெளிநாட்டவரின் குழந்தையை எடுத்துச் செல்வது மட்டுமே அவர்களுக்கு செய்தி. குழந்தைகள் நல காப்பகத்தில், பெருமளவு நோர்வீஜியக் குழந்தைகள் தங்க வைக்கப் பட்டுள்ளன. இதெல்லாம் அவர்கள் கண்களுக்கு செய்தியாக தெரிவதில்லை. உண்மையில் குழந்தைகள் நல காப்பகங்கள், முதன் முதலாக நோர்வீஜிய குடும்பங்களில் தான் கைவைத்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பல அங்கே தங்க வைத்து, "நாகரீகம்" சொல்லிக்  கொடுத்தனர். தற்பொழுது, போதைவஸ்து பாவிக்கும், அல்லது நோயாளிகளான பெற்றோரின் பிள்ளைகள் குழந்தைகள் நல காப்பகத்தில் தான் வளர்கின்றன. ஆனால், அந்நிய கலாச்சாரப் பின்னணியில் இருந்து வந்து குடியேறிய மக்களையும், அவ்வாறான பிரிவுக்குள் அடக்குவது கொஞ்சம் நெருடலான விடயம். 

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தை அவசியமாகின்றது. வெளிநாட்டுக் குடியேறிகளின் சமூகங்களும், அரசு அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். புதிதாக பிரஜாவுரிமை பெற்றவர்களை, "அண்மைய வரவாளர்கள்" பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களும் நோர்வீஜியர்களின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற, தேசியவாத சிந்தனை அரச மட்டத்திலும் காணப்படுகின்றது. நோர்வேயில் பன்முகக் கலாச்சாரம் ஒரு மாயை என்பதையே, குழந்தைகள் மீதான அரசின் ஆளுமை எடுத்துக் காட்டுகின்றது. 

Monday, April 16, 2012

நோர்வே சோஷலிச இயக்கத்தின் தோற்றம்

உழைக்கும் மக்களின் போராட்டம் நடைபெறாத, குறைந்தது நிறுவனமயமாக்கல் ஏற்படாத ஐரோப்பிய நாடுகள் எதுவும் கிடையாது. ஆனால், அதே போன்ற மக்கள் எழுச்சிகள், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றாததற்கு பலரும் பல வகையான காரணங்களை கூறுகின்றனர். பல சமூகப் புரட்சிகள் தோன்றிய 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், தமது நாடுகளில் நடந்த சம்பவங்களைப் பற்றிய தகவல்கள், காலனிகளில் வாழ்ந்த மக்களைப் போய்ச் சேராதவாறு இருட்டடிப்புச் செய்து வந்துள்ளனர். பிரான்ஸில் ஏற்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சி தோல்வியடைந்த போதிலும், அது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சித் தீயை மூட்டி விட்டது. ஐரோப்பிய கண்டத்தின் வட முனையில் அமைந்துள்ள, நோர்வே நாட்டில் கூட பிரெஞ்சுப் புரட்சி தாக்கம் செலுத்தியுள்ளது. அந்த நாட்டில் முதன் முதலாக தொழிலாளர் அமைப்பை ஸ்தாபித்த மார்குஸ் திரானே (Marcus Thrane) பற்றிய பதிவு இது. 


இன்றைய நோர்வேயின் ஆளும் கட்சியும், சமூக ஜனநாயக கட்சியுமான, தொழிலாளர் கட்சி (Arbeiderspartiet), தன்னை "மார்குஸ் திரானே இயக்கத்தின்" நீட்சியாக கூறிக் கொள்கின்றது. இருப்பினும், 1880 முதல் 1890 வரையில், நோர்வேயின் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமைப்பு இன்று இல்லை. நோர்வேயின் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட் கட்சி, எல்லாவற்றுக்கும் அதுவே முன்னோடி. 1849 ம் ஆண்டளவில், ஒரு மாணவனாகவிருந்த மார்குஸ் திரானே, நோர்வேயின் முதலாவது தொழிலாளர் அமைப்பை நிறுவினார். ஆரம்பத்தில் அந்த அமைப்பில் 160 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அந்த அமைப்பின் புரட்சிகரமான கருத்துகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் அணி திரண்டனர். 1850 ம் ஆண்டளவில், நோர்வே முழுவதும் 300 தொழிற்சங்கங்களும், அவற்றில் 30000 உறுப்பினர்களும் இருந்தனர். சாதாரண தொழிலாளர்கள் மட்டுமல்லாது, சிறு வணிகர்கள், கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள், ஆகியோரும் உறுப்பினர்களாக சேர்ந்திருந்தனர். அன்று அவர்கள் எல்லோரும் "திரானியர்கள்" (Thranittere) என்று அழைக்கப் பட்டனர்.

திரானியர்கள், நோர்வீஜிய மக்கள் சகலருக்குமான சம உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். அன்று பிரபுக்களும், வசதிபடைத்தோரும், நிலவுடைமை விவசாயிகளும் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கலாம் என்ற நிலைமை இருந்தது. அதனால், அனைத்துப் பிரஜைகளுக்குமான வாக்குரிமைக்காகவும் போராடினார்கள். அரசு, அனைவருக்கும் பொதுவான கல்வித் திட்டத்தில் முதலிட வேண்டுமெனவும், உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும் கோரி வந்தனர். மேலும், நிலமற்ற ஏழை மக்களுக்கு, அரசாங்கமே நிலம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தது. திரானியர்கள் நடைமுறைப் படுத்தக் கோரிய, பொருளாதார மாற்றங்களைத் தவிர, சமூக மாற்றங்களும், அதிகாரத்தை கையில் வைத்திருந்த வர்க்கத்தினர் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது.

அன்றைய கால கட்டத்தில், சொந்தமாக, ஆயிரக்கணக்கான பரப்பளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகள் மட்டுமே இராணுவ சேவையிலும் ஈடுபடுத்தப் பட்டனர். மத்திய காலங்களில், போரில் அந்நிய நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் இராணுவம், போர் முடிந்த பின்னர் ஆக்கிரமித்த நிலங்களை தமக்குள் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வர்க்கம், அல்லது சாதியை சேர்ந்த மக்கள், விவசாயிகளாகவும், இராணுவ வீரர்களாகவும் இருப்பது, அன்றைய ஐரோப்பாவில் சர்வ சாதாரணம். ஒரு நாட்டின் வளங்கள் யாவும் அந்த வர்க்கத்தின்/சாதியின் ஆதிக்கத்திற்குள் அடங்கி விடும். இதனால், அனைத்து பிரஜைகளும் இராணுவ பயிற்சி பெற வேண்டும் என்ற கோரிக்கை, அந்த வர்க்கத்தின் இருப்புக்கு விடுக்கப் பட்ட அச்சுறுத்தலாக பார்க்கப் பட்டது.

நோர்வீஜிய நிலப்பிரப்புக்கள், அரச அதிகாரிகளின் கண்களுக்கு, மார்குஸ் திரானே ஒரு "பயங்கரவாதி" போன்று தோற்றமளித்தார். 1851 ம் ஆண்டு, திரானேயும், பிற தொழிற்சங்க தலைவர்களும் கைது செய்யப் பட்டனர். இறுதியில், அவர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து செல்ல சம்மதித்தார். உண்மையில், அவர் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், திரானே இயக்கத்தின் நீட்சி என்று கூறிக் கொள்ளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சியிலும், புரட்சிகர அமைப்புகள் அடக்கப் பட்டன. அதற்கு காரணம், சமூக ஜனநாயக கட்சி, தனது அடித்தளமான தொழிலாளர் வர்க்கத்தை காட்டிக் கொடுத்து, ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. இது நோர்வேயில் மட்டும் நடக்கவில்லலை, அநேகமான ஐரோப்பிய நாடுகளில் இது தான் நிலைமை. இதனால், அதிலிருந்து பிரிந்து சென்ற நோர்வீஜிய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை கட்சிக் கொள்கையாக வரித்துக் கொண்டது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நோர்வே ஜேர்மனிய நாஜிப் படையினரினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய கட்சி என்பதால், மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தது. போர் முடிந்த பின்னர் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. 12 சதவீத வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானது. ஆளும் வர்க்கத்திற்கு அதைக் கூட சகிக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அரசால் அச்சுறுத்தப் பட்டனர். அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப் பட்டது. இதனால், நோர்வீஜிய கம்யூனிச கட்சி பலவீனமடைந்தது. நோர்வேயில் உழைக்கும் வர்க்க மக்களின் போராட்டத்தை ஒடுக்கி விட்டோம் என்று, ஆளும் வர்க்கம் நம்பியது. 1973 ம் ஆண்டு, புதியதொரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அவதரித்தது. வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்காவின் அட்டூழியங்களை கண்ட இளந் தலைமுறையினர், தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி (Arbeidernes kommunistparti) என்ற புதிய மாவோயிச கட்சியை உருவாக்கினார்கள். ஆனால், காலப்போக்கில் அதுவும் சீரழிந்து, சின்னாபின்னமாகி விட்டது.


மார்குஸ் திரானே யின் வாழ்க்கைக் குறிப்புகளும், அவர் எழுதிய நூல்களும் (நோர்வீஜிய மொழியில்) :
Marcus Thrane


 *********************************************** 
 பிற்குறிப்பு: தமிழுலகம் அறிந்திராத ஐரோப்பிய இடதுசாரி சிந்தனையாளர்கள், அவர்களின் படைப்புகளைப் பற்றிய அறிமுகத் தொடர் இது. 

 இதோடு தொடர்பான முன்னைய பதிவுகள்: முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!

Thursday, July 28, 2011

வலதுசாரி- தேசியவெறிக்கு எதிரான போர்

22 ஜூலை, நோர்வேயின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக பிரகடனப் படுத்தப் படலாம். உலகச் செய்திகளில் அரிதாக இடம்பிடிக்கும் "அமைதிப்பூங்காவில்" குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் என்பது பதின்ம வயது நோர்வீஜிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். படுகொலைக்கு காரணமான அண்டெர்ஸ் பிறேவிக் (Anders Breivik) என்ற வெள்ளையின நோர்வீஜிய வாலிபன் கைது செய்யப்பட்டான்.

அன்று நடந்த பயங்கரவாத செயலை விட, கொலைகாரனின் கொள்கையை விளக்கும் அறிக்கை உலகம் முழுவதும் சலசலப்பை தோற்றுவித்தது. மேற்குலகில் வளர்ந்து வரும் வலதுசாரித் தீவிரவாதிகளை கவனத்தில் எடுக்காததால் வந்த வினைப்பயன் இது. நோர்வீஜிய பயங்கரவாதியின் அறிக்கையில் இருந்து பின்வரும் உண்மைகள் தெரிய வந்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதிகள் தமது போரை ஆரம்பித்துள்ளனர். வெள்ளையரல்லாத குடிவரவாளர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிக் கொள்கை கொண்டோர், இவர்கள் எல்லோரும் எதிரிகளாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளனர்.

வெள்ளையின இனவெறி கொண்ட அண்டெர்ஸ் பிறேவிக் நினைத்திருந்தால், நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களை குறி வைத்து தாக்கி இருக்கலாம். ஆனால், அவன் தனது சொந்த இன மக்களைத் தான் கொன்று குவித்துள்ளான். இது குடிவரவாளர்களுக்கு வழங்கப் பட்ட எச்சரிக்கை. "உங்களை இந்த நாட்டிற்குள் தங்க அனுமதித்தவர்கள் எமது இனத்தை சேர்ந்தவர் ஆயினும் கொலை செய்யத் தயங்க மாட்டோம். ஆகவே உங்களது நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள்." நினைக்கவே குலைநடுங்கும் எச்சரிக்கை, எதிர்கால ஐரோப்பாவில் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய சவால்.

உலகம் முழுவதும் சமாதானத்திற்கு நோபல் பரிசு கொடுத்த நாடு இன்று தலை குனிந்து நிற்கின்றது. எம்மவர் மத்தியில் மட்டுமல்ல, பொதுவாக உலகம் முழுவதும் நோர்வேக்கு நல்ல பெயர் உண்டு. "அமைதியை விரும்பும் மக்களைக் கொண்ட நாட்டின்" பிரஜைகள் மாறி வருகின்றனர். அவர்கள் ஓரிரவில் மாறவில்லை. மக்கட்தொகையால் சிறிய நாடான நோர்வேயில் (மொத்த சனத்தொகை ஐந்து மில்லியனும் இல்லை), வெளிநாட்டு குடிவரவாளர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருகின்றது.

வெளிநாட்டவர் மீது துவேஷத்தை கக்கும் வலதுசாரிக் கட்சியான Frp (Fremskrittspartiet) யின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். 90 உயிர்களைப் பலி கொண்ட கொலைகாரன் அண்டெர்ஸ் கூட அந்தக் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். இன்று அந்தக் கட்சி படுகொலைகளை கண்டித்து, தனக்கு சம்பந்தம் இல்லாதது போலக் காட்டிக் கொள்கின்றது. இருப்பினும், உலகம் முழுவதும் பிரபலமான பயங்கரவாதியான அண்டெர்ஸ் பிறேவிக்கை ஆதர்ச நாயகனாகப் பார்க்கும் அடிமட்ட உறுப்பினர்கள் இல்லாமலில்லை.

நெதர்லாந்தின் "இஸ்லாமிய விரோத" அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ் (Gert Wilders), அண்டெர்ஸ் இனால் போற்றப்பட்டுள்ளார். ஆனால் வில்டர்ஸ் "ஒரு மனநோயாளியின் செயல்" என்று இணையத்தில் மட்டும் (டிவிட்டரில்) பதில் சொல்கிறார். நோர்வீஜிய கொலைகாரன் மட்டுமா ஒரேயொரு வில்டர்ஸ் இரசிகன்? ஒஸ்லோ படுகொலைகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், நெதர்லாந்தில் ஒரு ஆயுததாரி பொதுமக்களை சுட்டுக் கொன்றான். அவன் கூட வில்டர்சின் இஸ்லாமிய விரோத கருத்துகளால் கவரப்பட்ட "மனநோயாளி" தான். (கொலையாளியின் அரசியல் கருத்துகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ஏனென்றால் "இடதுசாரி" முத்திரை குத்தி விடுவார்கள் என்ற அச்சம்!)

சமாதானத் தலைநகரமான ஒஸ்லோவில் என்பது பேரைக் கொன்று குவித்த அன்டெர்ஸ் பிறேவிக் ஒரு மனநோயாளியாக இருக்க சாத்தியமில்லை. இதனை பல மனநல மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 1500 பக்கம் கொண்ட அறிக்கையை தயாரித்த புத்திஜீவி எவ்வாறு மனநலம் குன்றியவராக இருக்க முடியும்? அன்டெர்ஸ் பிறேவிக் கொள்கை ரீதியாகவும், தாக்குதலுக்கான இலக்கை தேர்வு செய்வதிலும் பற்றுறுதியுடன் நடந்துள்ளான். அவனை மனநோயாளியாக சித்தரிப்பதன் மூலம், எதிர்கால அபாயத்தை மூடி மறைக்கப் பார்க்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர், பின்லாடனை மனநோயாளியாக சித்தரித்திருந்தால், பொது மக்களும் "அல்கைதா பயங்கரவாதம்" குறித்து விழிப்புடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், "அல்கைதா வகையறாக்கள் நம்மினத்தவர்கள் அல்ல. எங்கோ மத்திய ஆசியாவில் வாழும் காட்டுமிராண்டி சமூகத்தை சேர்ந்தவர்கள். நம்மவர்கள் நாகரீகத்தில் சிறந்தவர்கள். அதனால் தான் எம்மை வெறுக்கிறார்கள்...." இவ்வாறு தான் மேற்குலக அரசுகள் தமது மக்களுக்கு பிரச்சாரம் செய்து வந்தன. நாகரீகமடைந்த வெள்ளையினத்தவர்கள் மத்தியிலும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் இருக்கின்றது என்ற உண்மையை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

மேற்குலகம் எவ்வாறு உலகிலேயே நாகரீகமடைந்த சமூகமாக கருதப்படுகின்றது? நிச்சயமாக அவர்களது ஜனநாயகமோ, மனித உரிமைகளோ, அல்லது மனிதாபிமான கொள்கையோ காரணமல்ல. இனப்படுகொலை, பயங்கரவாதம், கொள்ளை, நில ஆக்கிரமிப்பு, இவை போன்ற மனித குலத்திற்கு விரோதமான செயல்களை செய்து தான் "நாகரீகமடைந்தார்கள்". நோர்வே உட்பட ஸ்கண்டிநேவிய நாடுகளும் 20 நூற்றாண்டில் தான் நிரந்தர அமைதியைக் கண்டன. அது வரையும் போரினால் அல்லல் பட்டுக் கொண்டிருந்த தேசங்கள் அவை. நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பொதுவான கலாச்சாரம் உண்டு. பொதுவான மொழி உண்டு. (மூன்று மொழிகளும் சிறிதளவே வேறுபடுகின்றன.) சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தான், மத்திய கால நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறை நிலைநாட்டப்பட்டது. அந்தக் காலத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயம் முற்போக்கானதாக கருதப்பட்டது.

கிறிஸ்தவ மதத்தின் வருகையும், மன்னர்கள் புதிய மதத்தை தழுவியதும், ஸ்கண்டிநேவிய மக்களை நாகரீகமடைய வைத்தது. அதற்கு முன்னர், "வைகிங் கொள்ளையர்களாக" பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து நாசம் விளைவிப்பது, "காட்டுமிராண்டி சமூகத்தினரின்" தொழிலாக இருந்தது. ஸ்கண்டிநேவிய மக்களின் கிறிஸ்தவ மதத்தின் மீதான பற்றுறுதிக்கு காரணம், அவர்களின் கடந்த கால வரலாற்றில் தேட வேண்டும். இன்றும் கூட இந்நாடுகளின் தேசியக் கொடிகளில் சிலுவை பொறிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. முழு ஐரோப்பியக் கண்டத்திலும் பரவிய கிறிஸ்தவ மதம், மிகத் தாமதமாகத் தான் ஸ்கண்டிநேவிய நாடுகளை வந்தடைந்தது. எப்போதும் சமீப காலத்தில் மதம் மாறியவர்கள் தான், அதிகளவு மதப்பற்று உள்ளவர்களாக காட்டிக் கொள்வார்கள்.

நோர்வேயில் பயங்கரவாத கொலைகளை செய்த அன்டெர்ஸ் பிறேவிக் கூட ஒரு கிறிஸ்தவ மத அடிப்படைவாதி தான். அதனை அவனது அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளான். மத்திய காலத்தில் வத்திகானின் கத்தோலிக்க திருச்சபை தலைமையில் நடந்த சிலுவைப்போர் மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகின்றான். அதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு இரகசிய குழுவை அமைத்துள்ளார்கள். அந்தக் குழுவின் நோர்வேக் கிளையின் செயலாகவே நடந்து முடிந்த பயங்கரவாத வன்முறை பார்க்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவது அவர்களின் குறிக்கோளாக உள்ளது.

"முஸ்லிம்கள்" என்பது வெள்ளையரல்லாத வெளிநாட்டு குடிவரவாளர்களையும் குறிக்கும். ஆசிய, ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தோர் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்களாக இருந்தாலும் அவர்கள் பார்வையில் முஸ்லிம்கள் தான். 

இறுதியில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் வெள்ளயினத்தவர்களை மட்டுமே கொண்ட ஐரோப்பாவை உருவாக்குவது தான் அவர்களது இலட்சியம். அவர்களது இலட்சியத்திற்கு தடையாகவிருப்பது, "கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகள்", மற்றும் பல இடதுசாரி சிந்தனை கொண்டோர். அதனால் தான், நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக கட்சியான தொழிற்கட்சியின் இளைஞர் முகாமிற்கு சென்றோர் படுகொலை செய்யப்படனர்.

இன்று எழுந்துள்ள வலதுசாரித் தீவிரவாதம், நவ-நாஜிகளிடம் இருந்து வேறுபடுகின்றது. மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள நவ- நாஜிகள் ஹிட்லர் காலத்து இனவெறிக் கொள்கைகளை இன்றும் பின்பற்றுகின்றனர். குறிப்பாக ஹிட்லரின் "யூத வெறுப்பு", "பாசிசக் கட்டுப்பாடுகள்", "தலைமை மீதான விசுவாசம்" போன்ற கொள்கைகளை மாற்றமேதுமின்றி பின்பற்றும் "பழமைவாத பாசிஸ்டுகள்". ஆனால் நமது காலத்தில் தோன்றியுள்ள நவீன பாஸிசம் ஜனநாயக முகமூடியை பயன்படுத்திக் கொள்கின்றது. அவர்கள் தமது இனவெறிக் கருத்துகளை, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நியாயப் படுத்துகின்றனர். "வெளிநாட்டுக் கிரிமினல்கள்", "மசூதி கட்டும் முஸ்லிம்கள்", இவ்வாறு ஜனரஞ்சகமான விடயங்களை வைத்து அரசியலை கொண்டு செல்கின்றனர்.

அதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவின் அல்கைதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர், அவர்களுக்கு பெருமளவு உதவியுள்ளது. அமெரிக்காவை போன்றே, நவீன பாசிஸ்டுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், "இஸ்ரேல் ஐரோப்பா சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது." அதாவது "முஸ்லிம் படையெடுப்பை தடுக்கும் எல்லைப்புறக் காவல் அரண் போன்று" இஸ்ரேல் செயற்படுகின்றது. தமிழர்கள் மத்தியில் உள்ள "இஸ்ரேலிய ஆதரவாளர்களும்" தெரிந்தோ தெரியாமலோ, வெள்ளையின பேரினவாதிகளினால் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர்.

தேசியவாதத்தின் தோற்றத்தை எடுத்துப் பார்த்தால், அது என்றென்றும் பேரினவாதமாகவே செயற்பட்டு வந்துள்ளமை புலனாகும். ஐரோப்பாவில் தேசியவாத வெறியூட்டப்பட்ட மக்களின் ஆதரவு, ஹிட்லரின் பேரழிவு விளைவித்த இரண்டாம் உலகப்போர் வரை இட்டுச் சென்றது. அதற்குப் பிந்திய காலங்களில், லிபரல்களும், "கலாச்சார மார்க்சியர்களும்" ஐரோப்பாவை சீரழித்து விட்டதாக நவீன பாசிஸ்டுகள் கவலைப் படுகின்றார்கள். அதனால் அவர்கள், வெள்ளயினத்தை சேர்ந்த "கலாச்சார மார்க்சியர்கள்" மீதும் போர்ப் பிரகடனம் செய்துள்ளனர்.

"வலதுசாரி- தேசியவாத சக்திகள்" ஐரோப்பிய சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ள. ஐரோப்பிய அரசுகள் இவர்களை இனங்கண்டு அடக்க வேண்டும். ஐரோப்பிய சமுதாயம் வர்க்க அடிப்படையில் இரண்டாகப் பிரிவதை எவராலும் தடுக்க முடியாது. பிற்போக்கான தேசியவாதக் கொள்கைகளால் வசீகரிக்கபப்டும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இது சோதனைக் காலம். வெள்ளையின- தேசியவாதிகள் அவர்களை அழித்தொழிக்க கிளம்புவார்கள். அந்த நேரத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களும் இடதுசாரி சக்திகளுடன் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.


நோர்வே தொடர்பான முன்னைய பதிவுகள்:
2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!
நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

Sunday, July 24, 2011

2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!


"எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி."- Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.

வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும், தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.

"வெள்ளையினத்தவர்கள் பயங்கரவாதியாகவோ, அல்லது குற்றவாளியாகவோ இருக்க வாய்ப்பில்லை," என்று கருதும் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கை வெள்ளையின- பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். 1995 ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரில் குண்டு வைத்தது ஒரு வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி என்பது தெரிந்த பிறகும், மேற்குலகம் இன்னும் விழிப்படையவில்லை.

நோர்வேயில், கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம் குடியேற்றவாசிகளை உளவறிந்த அளவிற்கு, வெள்ளையினத் தேசியவெறியர்களை கண்காணிக்கவில்லை. அந்த மாபெரும் தவறுக்காக நோர்வே கொடுத்த விலை மிகப் பெரியது. இனிமேல் உலகம் முழுவதும், தீவிர வலதுசாரித் தேசியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மக்கள் விரோதிகளாக கருதப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

Anders Breivik என்ற கொலைகாரன், ஒஸ்லோ படுகொலைக்கு முன்னர், தனது கொள்கைகளை விளக்கும் பிரகடனம் ஒன்றை தயாரித்து பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அதனை சுருக்கமாக வீடியோ பிரதியாக பதிவு செய்து Youtube பில் வெளியிட்டுள்ளான். மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை நடத்தக் கிளம்பியிருக்கும் இரகசிய அமைப்பொன்றின் விபரம் கொடுக்கப் பட்டுள்ளது.

2002 ல், லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar அமைப்பில், ஐரோப்பா முழுவதும் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். "பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால், சில காலத்தின் பின்னர், மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்." - இவ்வாறு அந்தக் கொலைகாரனின் வாக்குமூலம் அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அதன் குறிக்கோளாக உள்ளன. (நவீன கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள், வெள்ளயினத்தவர்களை மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பினும், "முஸ்லிம்கள்" என்று தான் குறிப்பிடுவார்கள்.)

"2083 , ஐரோப்பாவின் சுதந்திரப் பிரகடனம்" (2083: A European Declaration of Independence)என்று தலைப்பிடப் பட்டுள்ள அறிக்கை, இரகசிய இயக்கத்தின் திட்டங்களை விபரிக்கின்றது. மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை அறிவித்துள்ள இந்த அமைப்பு, "கலாச்சார மார்க்சியம்" ஐரோப்பாவை இஸ்லாமிய மயப் படுத்தி வருவதாக அச்சுறுத்துகின்றது. மத்திய கால வத்திகானின் சிலுவைப்போரை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றது. சக ஐரோப்பிய குடிமக்களை, நவீன சிலுவைப்போரில் பங்குபற்ற வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. அறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், உலகில் "கம்யூனிஸ்டுகளால் விளைந்த தீமைகளை" எடுத்துக் காட்டுகின்றது. 

இரண்டாவது பகுதி, "ஐரோப்பியரை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருக்கும் முஸ்லிம் குடியேறிகளைப்" பற்றி எச்சரிக்கை செய்கின்றது. மூன்றாவது பகுதி, மீண்டும் ஒரு சிலுவைப்போரின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. பண்டைய கால சிலுவைப்போரின் வீர புருஷர்களை, ஆதர்ச நாயகர்களாக போற்றுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவைப் பார்க்கும் பொழுது, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், எந்தளவு கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் வெறுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட தொழிற்கட்சியை, இன்று ஒரு இடதுசாரிக் கட்சியாக கருத முடியாது. ஆயினும், ஆசிய,ஆப்பிரிக்க குடியேற்றவாசிகள் அந்தக் கட்சிக்கே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்த இளைஞர் முகாமில் கூட, பன்னாட்டு இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர். "வெளிநாட்டவர்களுக்கு சம உரிமை வழங்குவது, நாட்டை சீரழிக்க விரும்பும் இடதுசாரிகளின் சூழ்ச்சி..." என்று தான், வலதுசாரிக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. 90 பேரைக் கொன்ற வெள்ளையின பயங்கரவாதி அன்டெர்ஸ் ப்ரேவிக் கூட, வெளிநாட்டவரை வெறுக்கும் Frp கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான்.

"வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தான் எமது எதிர்காலம்..." என்று தெரிவித்தார் ஒரு நோர்வீஜிய மூதாட்டி. வலதுசாரிப் பாதையில் போய்க் கொண்டிருக்கும் முன்னாள் "இடதுசாரிக் கட்சிகள்" என்ன செய்யப் போகின்றன? மீண்டும் சமூக- ஜனநாயகப் பாதைக்கு திரும்பப் போகின்றனவா? அல்லது வெள்ளையினப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போகின்றனவா? மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், பிற வெளிநாட்டவர்களும் என்ன செய்யப் போகின்றனர்? இனிமேலும் பிற்போக்கு வலதுசாரிகளுக்கு பின்னால் அணிதிரள்வார்களா? அல்லது நவ- நாஜிசப் பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பிய வர்க்கப் போராட்டக் களத்தில் இறங்கப் போகிறார்களா? தீவிர வலதுசாரிகள் தங்கள் எதிரிகள் யார் என்று, பிரகடனப் படுத்தி விட்டார்கள். உங்கள் நண்பர்கள் யார் என்பதை, நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நோர்வே குண்டு வெடிப்பு பற்றிய விரிவான கட்டுரை:நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

நிறவெறியர்களின் சிலுவைப்போர் திட்டங்கள் குறித்த முழுமையான ஆவணத்தை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்:2083: A European Declaration of Independence

வெள்ளையின நிறவெறிப் பயங்கரவாதிகளின் கொள்கைப் பிரகடனம், வீடியோ வடிவில்:


மேலதிக தகவல்களுக்கு:
1.Oslo Suspect Wrote of Fear of Islam and Plan for War
2.Drapsmannen la ut detaljert «terrordagbok»
3.Breivik Called on Conservatives to 'Embrace Martyrdom'

Saturday, July 23, 2011

நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

22 ஜூலை 2011, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகை உலுக்கி விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல், நகர மத்தியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களை இலக்கு வைத்து கார்க் குண்டு வெடித்துள்ளது. பிரதமர் அலுவலகமும், சில அமைச்சு அலுவலகங்களும், குண்டுவெடிப்பால் சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள் தகர்ந்துள்ள போதிலும், இரு வழிப்போக்கர்கள் மட்டுமே அகால மரணமடைந்துள்ளனர். அரச ஊழியர்களின் இழப்பு குறித்த தகவல்கள் தெரியவில்லை. பிரதமர் இரகசியமான இடத்தில் பத்திரமாக இருப்பதாக அறிக்கைகள் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், நோர்வேயில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் இதுவாகும். சமாதான விரும்பிகளின் நாடு என்ற விம்பத்தை தகர்த்த, குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் யார், என்ற ஊகங்கள் நாலாபக்கமும் இருந்து கிளம்பின. ஊடகங்கள் வழமை போல அல்கைதாவை குற்றம் சுமத்தின. "நோர்வே ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருப்பதால் பழிவாங்கத் துடித்த அல்கைதா..." "ஈராக்கிய இஸ்லாமிய மதத் தீவிரவாதி முல்லா நாடுகடத்தப்படவிருந்ததால், நோர்வே அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்..." "லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சில் நோர்வே பங்கெடுப்பதால், எச்சரிக்கை விடுத்த கடாபியின் கைக்கூலிகள்..." இவ்வாறு அனைவரின் கவனமும் மத்திய கிழக்கு, அல்கைதா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பக்கமே குவிந்திருந்தது. "உள்ளூர் பயங்கரவாதிகள்" என்று பல தசாப்தங்களாக நோர்வேயில் வாழும் பாகிஸ்தானிய சமூகமும் குற்றம் சாட்டப்பட்டது.

பி.பி.சி. உலகச் சேவையில் தோன்றிய, நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவர், "சந்தேகத்திற்கிடமின்றி இது அல்கைதாவின் செயல் தான்." என்று பிதற்றினார். உலகில் இதற்கு முன்னர் இடம்பெற்ற "அல்கைதா குண்டுவெடிப்புகள்" அதிகளவு பொதுமக்களின் இழப்புகளை ஏற்படுத்திய "மென்மையான இலக்குகள்" என்ற உண்மை அந்த நிபுணருக்கு தெரியவில்லை. ஓரிரு மணிநேரத்தின் பின்னர், நோர்வேயில் இருந்து இன்னொரு தகவல் வந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. ஆளும்கட்சியின் கூட்டம் ஒன்றில், சரமாரியாக சுட்டுத்தள்ளிய நபர், போலிஸ் உடையில் வந்த நோர்வீஜிய தோற்றம் கொண்ட வெள்ளையினத்தவர். பிபி.சி. அந்த செய்தியை அறிவித்ததும், மீண்டும் "பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்" என்ற பைத்தியம் உளற ஆரம்பித்து விட்டது. "அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை இனத்தவர்களை சேர்த்து வருகின்றனர். பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக, அத்தகைய நபர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்."

ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன? தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார். வெளிநாட்டுக் குடியேறிகளை கட்டுப்படுத்துமாறு, வலதுசாரிகள் நோர்வே அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். தற்போது உள்நாட்டை சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் தான் இந்த பயங்கரவாத செயலை புரிந்துள்ளமை நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கும், நேரமும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களில் பணிபுரிவோர், மற்றும் பிரதமரை கொலை செய்யும் நோக்கில் குண்டு வெடிக்கப் பட்டிருக்கலாம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் என்பதால் மட்டுமல்ல, நோர்வேயில் தற்போது கோடை கால விடுமுறைக் காலம் என்பதாலும், தெருவில் சன நடமாட்டம் குறைவு.
ஆகையினால், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சாதாரண பொதுமக்களின் இழப்பை குறைக்க விரும்பியுள்ளனர். அல்கைதா பாணி தீவிரவாதிகள் என்றால், "மத நம்பிக்கையற்ற எல்லோரும் பரலோகம் போக வேண்டும்..." என்று விரும்பியிருப்பார்கள். பிற்காலத்தில் மக்கள் ஆதரவை இழக்க விரும்பாத உள்நாட்டு அரசியல் சக்தி ஒன்று தான் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கும். உள்நாட்டில் வளர்ந்து வரும் நவ-நாஜிச அல்லது தீவிர வலதுசாரிக் குழுக்கள் மீது தான் இயல்பான சந்தேகம் திரும்புகின்றது.

நோர்வேயில் நவ நாசிச கொள்கை கொண்ட குழுக்கள் தடை செய்யப் பட்டிருந்த போதிலும், "வெகுஜன அரசியல்" செய்யும் Fremskrittspartiet போன்ற கட்சிகள் வளர்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், "நோர்வேயின் பிற நகரங்களும் ஒஸ்லோ போன்று மாறி வருகின்றன... வெளிநாட்டவர் தொல்லை அதிகரிக்கின்றது... கிரிமினல்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், அகதிகள் பெருகி வருகின்றனர்." என்று உள்ளூர் நாளிதழ் ஒன்றில் ஒப்பாரி வைத்தது. அவர்களைப் பொறுத்த வரையில், இந்த தீமைகளுக்கெல்லாம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Arbeiderpartiet) தவறான கொள்கை காரணமாகும். குறிப்பாக "முஸ்லிம் குடியேற்றவாசிகள் பெருகி வருவதால், நோர்வேயில் குண்டு வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை..." என்று இனவாதக் கருத்துகளை பரப்பி வருகின்றது.

தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு தீவிர வலதுசாரி கொள்கை கொண்டோரே காரணம் என்பதால், நோர்வே மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு குறையலாம். ஆனால், நீண்ட கால நோக்கில், தீவிரவாத எண்ணம் கொண்டோருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம். எப்படியும் "வீர சாகசங்களைப் புரியும் செயல்வீரர்கள்" மீது மக்கள் மதிப்பு வைக்கலாமல்லவா? பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தாக்குதலில் ஈடுபட்ட Anders Behring Brevik என்ற 32 வயது இளைஞனின் கொள்கையும் அதுவாக இருந்துள்ளது. அந்த நபரின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் காணப்பட்ட வாசகங்கள் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளன. "ஒரு மத நம்பிக்கையாளன், வெறும் நலன்களை மட்டுமே பேணும் ஒரு இலட்சம் படைவீரருக்கு சமமானவன்." என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரேயொரு வாசகம் மட்டுமே டிவிட்டரில் காணப்பட்டது. இதை விட, இணைய விவாதங்களில் கலந்து கொண்டு, கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கருத்துகளை உதிர்த்துள்ளார். நெதர்லாந்தின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ், மறைந்த பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் ஆகியோரின் அபிமானியாக இருந்துள்ளார். முகநூலில் சிறந்த நூலுக்கான இவரது தெரிவாக ஆர்வேல் எழுதிய "1984" காணப்படுகின்றது. இவர் தன்னை ஒரு நோர்வீஜிய தேசியவாதியாக இனங்காட்டியுள்ளார். தற்காலத்தில் நடப்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போர் இல்லை. மாறாக, சர்வதேசியத்திற்கு எதிரான தேசியவாத சக்திகளின் போர்." என்று அந்த வெள்ளையின பயங்கரவாதி தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளார்.

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, அங்கிருந்து 40 கி.மி. தூரத்தில் உள்ள "உத்தேயா" (Utøya) என்னும் தீவில் தான் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் அந்தத் தீவில் நடந்து கொண்டிருந்தன. நாடு முழுவதிலும் இருந்து, இளம் வயது கட்சி உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் கட்சி இன்று ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சியாக மாறி விட்டாலும், வெளிநாட்டவர் மத்தியில் மத்திய-இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டது. இதனால் பல அந்நிய குடியேறிகளின் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் கட்சியின் கோடைகால முகாம் நடைபெற்ற இடத்திற்கு, கொலைகாரன் பொலிஸ் உடையில் சென்றுள்ளான். "ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அனுப்பப் பட்டதாக..." கூறியுள்ளான். தொடர்ந்து, கண்மூடித் தனமாக சுட்டதில் 90 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினர், Anders Brevik என்ற கொலைகாரனை மடக்கிப் பிடித்துள்ளனர். இருப்பினும், ஒரேயொரு நபர், ஒரு தானியங்கி துப்பாக்கி மூலம், 90 பேரை சுட்டுக் கொன்றமை நம்புவதற்கு கடினமானது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்னொரு நபரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பிறிதொரு இடத்தில் கைது செய்ததாகவும் அறிவித்தார்கள். ஆரம்பத்தில், தாக்குதல்கள் "ஒரு மனநோயாளியின்" செயல் என்று தெரிவித்தார்கள். போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.

தாக்குதல்கள் யாவும், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை குறி வைத்தே இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த சம்பவம் காரணமாக தொழிலாளர் கட்சிக்கு வருங்கால தேர்தல்களில் அனுதாப வாக்குகளை பெற்றுத் தரலாம். இருப்பினும், இளைஞர் அணியை சேர்ந்த 90 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை தோற்றுவிக்கலாம். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இதனால், தூர நோக்கில் தொழிலாளர் கட்சியை நோர்வேயில் இல்லாதொழிக்கும் நோக்கம் தெரிகின்றது. தொழிலாளர் கட்சியின் மீது யாருக்கு அவ்வளவு கோபம்? தொழிலாளர் கட்சி வலதுசாரி சந்தர்ப்பவாதப் பாதையில் சென்ற போதிலும், இளைஞர் அணியினர் மத்தியில் இடதுசாரிப் போக்கும் காணப்படுகின்றது. சமீப காலமாக,"பாலஸ்தீன சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும்." என்பன போன்ற குரல்கள் கேட்கின்றன. மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த தினத்தன்று, முன்னாள் நோர்வே பிரதமர் வருகை தருவதாக ஏற்பாடாகியிருந்தது. இன்றைய பிரதமர் அப்பட்டமான வலதுசாரி என்பதும், முன்னை நாள் பிரதமர் ஓரளவு இடதுசாரி பக்கம் சாய்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னர் குறிப்பிட்ட தீவிர வலதுசாரியினர், நவநாஜிகள் மட்டுமல்லாது, வேறு சக்திகள் சம்பந்தப் பட்டுள்ளனவா? நோர்வே வட அட்லாண்டிக் இராணுவக் கூட்டில் (நேட்டோ) அங்கம் வகிக்கின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நோர்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசி வந்துள்ளன. நேட்டோ இராணுவ நடவடிக்கையின் ஓரங்கமாக நோர்வே செயற்பட்டு வந்தாலும், இந்த வாரம் குண்டுவீச்சை நிறுத்திக் கொள்வதென்று தன்னிச்சையாக அறிவித்தது. அதாவது, வருகிற ஆகஸ்ட் முதலாம் தேதியில் இருந்து, நோர்வே விமானங்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட மாட்டா. இதனால், நோர்வே அரசுக்கும், பிற நேட்டோ உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தாக்குதல் நடந்திருக்கலாம். நேட்டோ, அல்லது நோர்வே அரச மட்டத்தை சேர்ந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தாக்குதலில் சம்பந்தப் பட்டிருக்கலாம். நேட்டோ ஐரோப்பாவில் இரகசியமாக ஒரு பயங்கரவாத அமைப்பை (Gladio) உருவாக்கி வைத்துள்ளது. அந்த இரகசிய அமைப்பு இத்தாலி போன்ற நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. இதுவரை குண்டுகளை வைத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதே போல, ஒஸ்லோ குண்டுவெடிப்பை நடத்திய சூத்திரதாரிகள், அவர்களின் நோக்கங்கள் என்பன இனி ஒரு காலமும் வெளிவராமல் போகலாம்.


மேலதிக விபரங்களுக்கு:
Olso Attacks Suspect Is 'Conservative Christian'
Pågrepet 32-åring kalte seg selv nasjonalistisk
Anders Behring Breiviks kommentarer hos Document.no
Terrorsiktet kjøpte seks tonn kunstgjødsel
TERRORAKSJON I OSLO