Showing posts with label தொழிலாளர் பிரச்சினை. Show all posts
Showing posts with label தொழிலாளர் பிரச்சினை. Show all posts

Tuesday, May 08, 2018

இணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்

இன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கைத்தொலைபேசியில் சொடுக்கி வாங்கி விடலாம். நாம் வாங்கிய பொருள் அடுத்த நாளே வீடு தேடி வரும்.

முந்திய காலங்களைப் போல வெளியே கடைக்கு செல்லாமல், வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்கும் தொழில்நுட்ப அதிசயத்தை எண்ணி வியக்கிறோம். வருங்காலத்தில் தெருக்களில் கடைகளை காண முடியாமல் போகலாம். இணையக் கடைகளின் பெருக்கம் காரணமாக, பல பெரிய நிறுவனங்களின் அங்காடிகள் கூட விற்பனையின்றி மூடப் படுகின்றன.

மறுபக்கத்தில் இணையக் கடைகளுக்கான களஞ்சிய அறைகள், விநியோக மையங்கள் என்பன திறக்கப் படுகின்றன. அவை நகரத்திற்கு வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப் படுகின்றன. இணைய சேவை காரணமாக இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தூங்காமல் இரவிரவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பற்றியது இந்தக் கட்டுரை. என்ன தான் நவீன தொழில்நுட்பம் வாழ்க்கை வசதிகளை பெருக்கினாலும், உழைப்புச் சுரண்டல் மட்டும் மாறுவதில்லை. கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தை விட, அது இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தக் கட்டுரையை எனது சொந்த அனுபவத்தில் இருந்து எழுதுகிறேன். நான் குறைந்தது ஒரு வருடமேனும் தபால் துறையில் வேலை செய்திருக்கிறேன். சில மாதங்கள், விநியோக மையத்தில் பார்சல் தரம் பிரிப்பவராக செய்த வேலை தான் மிகவும் கடினமானது. அடிமை வேலைக்கு ஒப்பானது.

2012 ம் ஆண்டளவில், நான் வசிக்கும் நெதர்லாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. எல்லா இடங்களிலும் வேலையில்லாப் பிரச்சினை. வேலை எங்கே தேடியும் கிடைக்காத நிலைமை. நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு எடுப்பதை விட, இருப்பவர்களின் வேலையை பறிப்பதில் ஆர்வமாக இருந்தன.

அத்தகைய பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும், பார்சல் தரம் பிரிக்கும் நிலையத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு இருந்தது. அப்போது அது வளர்ந்து வரும் நவீன தொழிற்துறை என ஊடகங்களால் புகழப் பட்டது. அங்கே சென்ற பிறகு தான், எதற்காக அந்த தொழிற்துறையில் மட்டும் வேலையாள் பற்றாக்குறை நிலவுகின்றது என்பது தெரிய வந்தது.

நெதர்லாந்து நாட்டின் தபால்துறை முழுக்க முழுக்க PostNL என்ற தனியார் நிறுவனத்தினால் நடத்தப் படுகின்றது. இது முன்பிருந்த அரசுத் தபால்துறையின் தொடர்ச்சி ஆகும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த நூறு சதவீத தனியார்மயமாக்கல் காரணமாக, ஆயிரக் கணக்கான தபால்துறை ஊழியர்கள் வேலையிழந்தனர்.

முந்திய காலங்களைப் போல தற்போது யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. இன்று உலகம் முழுவதும் அப்படித்தான். கடிதப் போக்குவரத்து மின்னஞ்சல் ஆகி, அது பின்னர் வாட்ஸ் ஆப் வரை வந்து விட்டது. கடிதங்களை மட்டுமல்ல, முத்திரைகளை கூட கண்ணால் கண்டிராத தலைமுறை ஒன்று உருவாகி விட்டது.

தனியார் மயப் படுத்தப் பட்ட தபால் நிறுவனம், அதைக் காரணமாகக் காட்டியே தபால்காரர்களின் வேலை நேரத்தைக் குறைத்து விட்டது. நான் சுமார் ஒரு வருடமாவது தபால்காரர் வேலை செய்துள்ளேன். தற்காலத்தில் அது ஒன்றும் பெருமைக்குரிய வேலை அல்ல. நிச்சயமற்ற தன்மை காரணமாக பலர் அந்த வேலையை தெரிவு செய்வதில்லை.

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வீடுகளுக்கு தபால் போடும் வேலை செய்து, வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியாது. ஏனெனில், வேலை நேரம் மிகக் குறைவு. மொத்தம் வாரத்திற்கு பன்னிரண்டு மணித்தியாலம் மட்டுமே. எப்போதும் அது ஒரு பகுதி நேர வேலை தான். அதனால் கிடைக்கும் வருமானம் வீட்டு வாடகை கட்டுவதற்கு கூடப் போதாது.

சைக்கிள் கேரியரில் இரண்டு பக்கமும் ஐம்பது கிலோ பொதிகளை சுமந்து கொண்டு, உறை பனியில் நடுங்கிய படியும், அடை மழையில் நனைந்த படியும் செய்யும் வேலையை எண்ணிப் பாருங்கள். நாம் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், சம்பளம் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட தொகை தான் கிடைக்கும். தபால்கள் அதிகளவில் வரும் சனிக்கிழமைகளில் இரண்டு மணிநேரம், குறைவாக வரும் புதன்கிழமைகளில் அரை மணிநேரம் மட்டுமே சம்பளம் போடுவார்கள். அதுவும் மிகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் தான்.

சிலநேரம், சாதாரண தபால்களை மட்டுமல்லாது, விளம்பரப் பத்திரிகைகளையும் சேர்த்துப் போடுமாறு கொடுத்து விடுவார்கள். அதை விட, மாதமொருமுறை நகரசபை வெளியிடும், குடி மக்களுக்கான தகவல் தெரிவிக்கும் பத்திரிகையையும் நாமே விநியோகிக்க வேண்டும். அதற்காக மேலதிக கொடுப்பனவு எதுவும் கிடையாது.

இந்த மேலதிக விளம்பர சேவைக்காக நகர சபையும், விளம்பர நிறுவனங்களும் கொடுக்கும் பணம் முழுவதையும் தபால் நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. அதில் ஒரு துளி கூட வேலையாட்களுக்கு கொடுப்பதில்லை. அதற்கான காரணம் கேட்ட பொழுது, "தபால் சேவை நட்டத்தில் இயங்குவதாகவும், அதை ஈடுகட்டுவதற்காக கம்பனி விளம்பரப் பத்திரிகை போடும் சேவையை நடத்துவதாகவும்" தெரிவித்தார்கள்.

தபால்துறையில் ஒரு அரச நிறுவனம் ஏகபோக ஆதிக்கம் செலுத்திய காலம் எப்போதோ மலையேறி விட்டது. இன்று கூரியர் நிறுவனங்கள் என்ற பெயரில், ஒரு டசினுக்கும் குறையாத தனியார் தபால் நிறுவனங்கள் சந்தையில் போட்டி போடுகின்றன. இணைய வணிகம் காரணமாக பார்சல் விநியோகத்தில் கடும் போட்டி நிலவுகின்றது. இதனால் "பாரம்பரிய" தபால் நிறுவனம், முடிந்தளவுக்கு தொழிலாளர்களை சுரண்டி இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றது.

இணைய வணிகத்தின் வருகை காரணமாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக சொல்லப் படுகின்றது. ஆயிரம் பேரின் வேலை காணாமல் போன இடத்தில், சில பத்துப் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதற்குப் பெயர் பொருளாதார வளர்ச்சி அல்ல. பொருளாதார வீழ்ச்சி. இதனால் முதலாளிகளின் இலாபம் மட்டுமே கூடியுள்ளது.

இணையத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்னர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாள் வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அது மந்திரத்தால் நடக்கும் விடயமா? அதற்காக சில மனிதர்கள் இரவிரவாக வேலை செய்ய வேண்டும். அப்போது தான் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம்.

நானும் பார்சல்கள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்துள்ளேன். அது வழமையாக இரவு வேலை தான். இரவு பன்னிரண்டு மணி முதல் அதிகாலை ஆறு மணி வரையில் தூங்காமல் கண் விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இரவு வேலை செய்து வந்தால், நீரிழிவு வருத்தம் வரும். இதய நோய் கூட உண்டாகலாம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தரம் பிரிக்கும் வேலை இரண்டு ஷிப்டுகளாக நடக்கும். மாலை ஆறு மணியில் இருந்து பன்னிரண்டு மணி வரையில் ஒரு ஷிப்ட். அது மாலை நேர வேலை. அதை அங்கு நீண்ட காலம் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். புதிதாக வேலைக்கு சேருவோரும், தற்காலிகத் தொழிலாளர்களும் இரவு வேலை மட்டுமே செய்யலாம். நடுநிசி பன்னிரண்டு மணியில் இருந்து அதிகாலை ஆறு மணி வரை வேலை செய்ய வேண்டும்.

அதை விட, தரம் பிரிக்கும் நிலையத்தில் உள்ள இராட்சத இயந்திரங்கள் போடும் இரைச்சலில் காது செவிடாகி விடும். பக்கத்தில் நிற்பவர் சத்தமாகப் பேசினாலும் கேட்காத அளவிற்கு பேரிரைச்சல். தொழிலகங்களில் சத்தம் 80 டெசிபெல் அளவுக்கு மீறினால், காதுக்கு பாதுகாப்புக் கவசம் போட வேண்டும் என்று தொழிற்துறை பாதுகாப்பு விதி கூறுகின்றது. ஆனால், அதையெல்லாம் யார் பின்பற்றுகிறார்கள்?

அந்தக் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டாலும், வேலை இயந்திரகதியில் இருக்க வேண்டும். அதாவது, ஒரு மெஷின் போல இயங்க வேண்டும். இது ரோபோவுக்கும் மனிதனுக்கும் இடையிலான போட்டி. ஒரு தொழிற்சாலையில் இருப்பதைப் போன்று, ரப்பர் பட்டி ஓடிக் கொண்டிருக்கும். ஒரு ரோபோ இயந்திரம் அதை இயக்கிக் கொண்டிருக்கும்.

இணையக் கடைகளில் வாங்கப் பட்ட பொருட்களின் பார்சல்கள், வண்டி வண்டியாக வந்து குவிந்து கொண்டே இருக்கும். சிறிதும் பெரிதுமான பார்சல்களை (அதிக பட்ச நிறை இருபது கிலோ) ஒவ்வொன்றாக எடுத்து பட்டியில் போட வேண்டும்.

மறுபக்கத்தில் தானாகவே தரம் பிரித்து வரும் பார்சல்களை எடுத்து, பிரதேச வாரியாக அடுக்க வேண்டும். முகவரிகளை ஸ்கேன் பண்ணி தரம் பிரிப்பதை மட்டுமே ரோபோ இயந்திரம் செய்கிறது. மற்றதை எல்லாம் மனிதர்கள் தான் செய்ய வேண்டும்.

ஒரு நிமிடத்தில் எத்தனை பார்சல்கள் போடுகிறோம் என்பதை நேரக் கணிப்பு மணிக்கூடு வைத்து அளப்பார்கள். நிமிடத்திற்கு சராசரி ஐம்பது பார்சல்கள் தூக்கிப் போட வேண்டும். எமது செயற்படும் வேகம் குறைந்தால் பட்டி ஓடுவது நின்று விடும். அப்படி நின்றால் மேற்பார்வையாளரிடம் திட்டு வாங்க வேண்டும்.

அதனால், நாம் ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி இயந்திரம் மாதிரி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். எம்மிடம் இருந்து கூடிய அளவுக்கு உழைப்பை பிழிந்து எடுப்பதற்காக, வேண்டுமென்றே ரப்பர் பட்டி வேகமாக ஓட விடப் படுவதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

இது எனது அனுபவம். அண்மையில் பத்திரிகையில் ஒரு தகவலைக் கண்டேன். தரம் பிரிக்கும் நிலையத்தில் எட்டு வருடங்களாக மேற்பார்வையாளர் வேலை செய்து வந்த ஒருவர் வேலையை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், தான் அங்கு வேலை செய்யும் பொழுது "அடிமை மேய்ப்பர்" போன்று உணர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவில் அடிமைகள் வைத்திருந்த காலத்தில், அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க விடாமல் விரட்டி விரட்டி வேலை வாங்க ஒரு மேற்பார்வையாளர் இருந்தார். அவரை "அடிமை மேய்ப்பவர்" என்று சொல்வார்கள். அது நூறாண்டுகளுக்கு முந்திய வரலாறு என்று தான் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நினைக்கிறார்கள்.

இந்தக் காலத்தில் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யாரையும் சவுக்கால் அடிப்பதில்லை. உண்மை தான். ஆனால், எட்டு மணி நேரமென்றாலும், ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் இயந்திரத்தனமாக செய்யும் வேலையை அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பதாம்?

ஒரு நிமிடம் கூட இடத்தை விட்டு நகர முடியாது. இடையில் சிறுநீர் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை கேட்கவே வேண்டாம். எமது இடத்திற்கு இன்னொரு தொழிலாளியை பிடித்து விட்டுத் தான் கழிவறைக்கு செல்ல வேண்டும். அதுவும் எப்போதும் சாத்தியமில்லை.

இதனால் வேலை நேரத்தில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்வோம். ஓய்வில்லாத வேலை காரணமாக வியர்த்துக் களைப்படைந்து, உடலில் நீர்த் தன்மை வற்றி, தாகம் அதிகமாக இருக்கும். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்.

நிச்சயமாக இப்படியான இடங்களில் பலர் நீண்ட காலம் வேலை செய்வதில்லை. அடிக்கடி சுகயீன விடுப்பில் நிற்கிறார்கள். அதனால் தான் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை நிலவும் காலத்திலும் அங்கே வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்பவர்களில் அரைவாசிப் பேராவது, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த தொழிலாளர்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையின் கீழ், மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக வைத்திருக்கின்றன. குறைந்த கூலிக்கு அதிக உழைப்பை செலுத்தத் தயாரான மலிவு விலை தொழிலாளர்கள் அங்கிருந்து வருகிறார்கள்.

தபால் தரம் பிரிக்கும் நிலையத்தில் ஆள் பற்றாக்குறையா? போலந்தில் உள்ள முகவருக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பார்கள். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு வந்து, திங்கட்கிழமை வேலை தொடங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வேலைக்கு வருவோர் மாடு மாதிரி உழைப்பார்கள். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்தவர்கள், இந்நாட்டு சட்ட விதிகளை அறிந்து கொள்ள சிறிது காலம் எடுக்கும். அதற்குள் வேண்டியளவு சுரண்டி விடலாம். இணைய வணிகம் என்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால், நவீன அடிமைத்தனம் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கமும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றது.

தற்காலத்தில் தபால் சேவையால் இலாபம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, முத்திரை விலையை கூட்டி வைத்திருக்கிறார்கள். பார்சல் அனுப்பும் கட்டணமும் மிக அதிகம். இருந்த போதிலும் தபால் நிறுவனம் இலாபம் சம்பாதிப்பது மட்டும் குறையவில்லை. ஒரு பக்கம் தொழிலாளர்களை சுரண்டி, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். மறுபக்கம் தலைமை நிர்வாகிகளின் ஊதியமும், இலாபத்தில் அவர்களது பங்கும் அதிகரிக்கின்றது.

பொது மக்கள் தபால்கள் அனுப்புவது குறைந்து விட்டதால், "நட்டத்தில்" இயங்குவதாக எதிர்பார்க்கப் படும், தபால் நிறுவனம் சம்பாதிக்கும் நிகர இலாபம் வருடத்திற்கு ஐந்து சதவீதமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அடிமைத் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப் படும் உழைப்பு தான் இலாபமாக மாறுகின்றது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

- கலையரசன்

Saturday, May 14, 2016

எல்லோரும் முதலாளிகள் ஆகலாம் என்பது ஒரு நவீன உழைப்புச் சுரண்டல்


"எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்" என்பது ஒரு பித்தலாட்டம். மிகப் பெரிய பொய். அது ஒரு நவீன உழைப்புச் சுரண்டல். சிலநேரம், தொழிலாளர்களை விட, சிறு "முதலாளிகள்" தான் அதிகமாக சுரண்டப் படுகின்றனர். தொழிலாளர் நலச் சட்டத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. 

"முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர் என்று சொல்லுங்கள்! ஏனென்றால் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்!" இவ்வாறு பிதற்றிக் கொண்டு திரியும், முதலாளித்துவத்தை ஆதரிக்கும் தற்குறிகளுக்கு இந்த ஆவணப்படம் சரியான பதிலடி கொடுக்கிறது. 

நெதர்லாந்து நாட்டில், எல்லோரையும் தொழில் முனைவோர் ஆகுமாறு அரசு ஊக்குவித்து வருகின்றது. ஆனால், நடைமுறையில் பெரிய நிறுவனங்கள் அவர்களை தொழிலாளர்களை விட மிகவும் மோசமாக சுரண்டி வருகின்றன. இதனால் பல "சுதந்திரமான" "தொழில் முனைவோர்", தம்மை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று கோரிப் போராடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது! 

தபால் துறையை தனியார்மயமாக்கியதால் ஏற்படும் அவலங்களை பற்றிய ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. "Baas in eigen bus" (சொந்த வாகனம் வைத்திருக்கும் முதலாளி) என்ற தலைப்பிலான ஆவணப் படம், எவ்வாறு சிறுதொழில் முனைவோர்கூட பெரும் முதலாளிகளால் சுரண்டப் படுகின்றனர் என்பதை விளக்குகின்றது.

தொண்ணூறுகள் வரையில் அரச நிறுவனமாக இருந்த PTT Post (தந்தி, தொலைபேசி, தொலைத்தொடர்பு நிறுவனம்) அவ்வளவு காலமும் ஊழியர்களுக்கு முழுநேர வேலை கொடுத்து வந்தது. தனியார்மயமாக்கிய பின்னர், பெருந்தொகை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர் அல்லது பகுதி நேர வேலையில் வைத்திருந்தனர். மின்னஞ்சல் வந்த பின்னர் கடிதப் போக்குவரத்து குறைந்துள்ளமையை அதற்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது.

தற்போது, தபால் தொழில்துறையை PostNL என்ற தனியார் நிறுவனம் நடத்துகின்றது. (அதன் பெயரில் "மன்னருக்குரிய" என்ற அடைமொழியும் இருப்பதால், அரச குடும்பத்தின் பங்குகளும் இருக்க வேண்டும்.) இன்றைய நவீன யுகத்தில், கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டாலும், மறுபக்கத்தில் பார்சல்கள் அனுப்பவது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம், இன்றைக்கு நிறையப் பேர் இணையக் கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர்.

அதனால் PostNL நிறுவனத்திற்கு நிறைய பார்சல் விநியோகஸ்தர்கள் தேவைப் பட்டனர். அதற்காக யாரையும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, "தனியார் தொழில்முனைவோர்களுடன்" ஒப்பந்தம் செய்து கொள்கின்றது.

யார் இந்த "தனியார் தொழில் முனைவோர்"? ஒரு தனி நபர் தன்னை ஒரு நிறுவனமாக பதிவு செய்து கொள்கிறார். அவர் குறிப்பிட்ட சேவையை செய்து கொடுப்பதற்கு பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறார். இது தான் "சுதந்திரமான", தனியார்", "தொழில்முனைவோர்" என்பதன் அர்த்தம்.

ஆனால், PostNL நிறுவனத்தை பொறுத்த வரையில், அவர்களுக்கு சுதந்திரம் கிடையாது. சாதாரண தொழிலாளர்கள் போன்று PostNL க்கு மட்டுமே வேலை செய்ய முடியும். இது சட்டப்படி தவறாகும். விநியோகஸ்தர்களுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த கமிஷன் காரணமாக, அவர்கள் PostNL க்கு மட்டும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஒரு பக்கம் அனுப்பப் படும் பார்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகையில், மறு பக்கம் கமிஷன் தொகை குறைக்கப் பட்டுள்ளது.

PostNL க்கு வேலை செய்யும் தனியார் தொழில் முனைவோர் சொந்தமாக வாகனம் வைத்திருக்க வேண்டும். அதாவது பார்சல்கள் எடுத்துச் செல்வதற்கான சிறிய வேன் இருந்தால் தான் ஒப்பந்தம் செய்வார்கள். பெரும்பாலான தொழில் முனைவோரிடம் கையில் பணம் இருப்பதில்லை. அவர்கள் குறைந்தது இருபதாயிரம் யூரோ பெறுமதியான வாகனத்தை, லீசிங் கடனில் வாங்குகிறார்கள். 

அதனால், வருமானத்தில் ஒரு தொகை கடனுக்கான மாதாந்த தவணைப்பணம் கட்டுவதற்கு செலவாகின்றது. நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்தாலும், கையில் சிறு தொகையே மிஞ்சுவதால் தமது ஓய்வூதிய கட்டுப்பணத்தை கூட செலுத்த முடியாமல் கஷ்டப் படுகிறார்கள்.

அது மட்டுமல்லாது, பார்சல் விநியோகஸ்தர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றும் கண்காணிக்கப் படுகின்றனர். "லைசன்ஸ் இருக்கிறதா? சீருடை அணிந்துள்ளனரா? பேட்ஜ் குத்தி இருக்கிறதா? வாகனத்தின் கதவு மூடப் பட்டுள்ளதா?" என்றெல்லாம் கண்காணிக்கிறார்கள். பத்து தடவைக்கு மேல் குற்றம் கண்டுபிடிக்கப் பட்டால் ஒப்பந்தம் இரத்து செய்யப் படும். ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மட்டுமே இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். ஆகவே, "தனியார் தொழில் முனைவோர்", உண்மையில் பதிவு செய்யப் படாத தொழிலாளர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகும்.

கடந்த வருடம் (2015ல்) கொடுமைகளை தாங்க முடியாத தொழில் முனைவோர் பொங்கி எழுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அமைச்சரிடம் மனுக் கொடுத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதனால் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்தனர். இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர். அதற்குப் பிறகு தான் PostNL இறங்கி வந்தது. 12% தொழில் முனைவோரை, நிரந்தர தொழிலாளர்களாக சேர்த்துக் கொள்ள முன்வந்தது. அதற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

ஆயினும், தமக்கு எந்த அறிவித்தலும் வரவில்லை என்று, பார்சல் விநியோகஸ்தர்கள் குறைப் படுகின்றனர். அது மட்டுமல்லாது, வேலை நிறுத்தத்தை ஒழுங்கு படுத்தியவர்களின் ஒப்பந்தமும் முறித்துக் கொள்ளப் பட்டது. "விரும்பத் தகாத நடவடிக்கை காரணமாக" ஒப்பந்தத்தை முறிப்பதாக, PostNL அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

"சேவை வழங்குனர்" தன்னுடன் ஒப்பந்தம் செய்யும் "தொழில் முனைவோருடனான" உறவை எந்நேரமும் துண்டித்துக் கொள்ளலாம் என்பது ஒரு பாதகமான அம்சம். இதனால் சாதாரண தொழிலாளிக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு கூட கிடைப்பதில்லை. ஒப்பந்தம் இழந்தவர்கள், PostNL நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால், நீதிபதி அவர்களை தொழிலாளர்களாக கருதாமல், "முதலாளி அல்லது தொழில் முனைவோர்" என்று குறிப்பிட்டு தீர்ப்புக் கூறியதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.


ஆவணப் படத்தை பார்வையிடுவதற்கு:

Friday, July 03, 2015

மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே சம்பளம்!


மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே அளவான சம்பளம் கிடைக்கிறது! சோஷலிசம் என்பது சமநீதி. இந்த உண்மையை அடித்தட்டு மக்களுக்கு மறைப்பது அநீதி. சோஷலிசம் மார்க்சியத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. மேற்கு ஐரோப்பாவில், சமூக ஜனநாயக கட்சிகள் அதற்காக போராடின.

இறுதியில், பல மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில், "நலன்புரி அரசு" என்ற பெயரில், முதலாளித்துவத்தின் கீழ் மக்களுக்கு  நன்மை பயக்கும்  திட்டங்களை கொண்டு வந்தனர்.அதாவது, முதலாளித்துவமும், அதன் இலாபவெறியும் அப்படியே இருக்கும். சுரண்டலும் இருக்கும். அதே நேரம், மக்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப் படும்.

நெதர்லாந்தில் அதை "Polder Model" என்று அழைக்கிறார்கள். அது உண்மையில் வர்க்க சமரசம் ஆகும். அதாவது, முதலாளிகளும், தொழிலாளர்களும் சமரசம் செய்து கொள்வதால், இரண்டு தரப்புக்கும் ஆதாயம் என்று நினைக்கும் சீர்திருத்தவாதக் கொள்கை.

வசதியாக வாழும் மத்திய தர வர்க்கத்தினர், சோஷலிசத்தை வெறுப்பதற்கு முக்கிய காரணம், அவர்களது வர்க்க மேலாண்மை சிந்தனை தான். தமது போலியான சமூக அந்தஸ்துக்கு பங்கம் வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள். சாதாரண கூலித் தொழிலாளர்களுடன், உணவுவிடுதியில் அருகருகே அமர்ந்து சாப்பிடும் நிலைமையை வெறுக்கிறார்கள். வர்க்க மனப்பான்மை, நவீனமயப் படுத்தப்பட்ட சாதிய மனப்பான்மையாக உள்ளது.

முன்னாள் சோஷலிச நாடுகளில், எல்லோருக்கும் சமமான சம்பளம் என்ற கொள்கையை பரிகசித்தவர்கள் பலர். அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டுபிடித்த பொருளாதாரப் புலிகளும் இருக்கிறார்கள். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நியாயமானது என்றும், முன்னுக்கு வர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் வாதிட்டார்கள்.

மத்தியதர வர்க்கத்தினரின் கனவுலகமான மேற்கு ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது? இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், சோஷலிச நாடுகளுக்குப் போட்டியாக, தமது மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்த்தப் பட வேண்டும் என்று நினைத்து செயற்பட்டார்கள்.

அதில் முக்கியமானது, சம்பள வேறுபாடுகளில் உள்ள ஏற்றத்தாழ்வை முடிந்த அளவிற்கு குறைப்பது. ஏனென்றால், அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே போதாத சம்பளம் பெறுவதால் தான், ஒரு சாதாரண தொழிலாளியால் வசதியாக வாழமுடியாமல் உள்ளது. ஆகவே, அவர்களது சம்பளம் உயர்த்தப் பட வேண்டும்.

சோஷலிச நாடுகளில் பின்பற்றப் பட்ட அதே நடைமுறை தான், மேற்கு ஐரோப்பாவிலும் பின்பற்றப் பட்டது. குறிப்பாக நெதர்லாந்தில், ஒரு தொழிற்துறையின் சம்பளம் எந்தளவு இருக்க வேண்டும் என்பதை, தொழிற்சங்கங்களும், தொழிலதிபர்களும் கூடி முடிவெடுக்க வேண்டும்.  அது அங்கே "Polder Model"  என்று அழைக்கப் படுகின்றது. (முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்த தொழிலதிபர்கள் அரசு ஊழியர்கள். ஆனால், முதலாளித்துவ நாடுகளில் அவர்கள் முதலாளிகள்.)

ஒரு தொழிற்துறையில் கிடைக்கும் சராசரி வருமானம் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அந்தளவுக்கு தொழிலாளரின் சம்பளமும் உயர்வாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, போர் முடிந்த பின்னர் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப் பட்டதால், கட்டிடத் தொழில் நிறுவனங்களின் வருமானமும் அதிகமாக இருந்தது. இப்போதும் இருக்கின்றது. அதனால், சாதாரண கூலியாளின் சம்பளமும் அதிகரித்தது. இன்றைக்கும் அவர்கள் எடுக்கும் சம்பளம், ஒரு வங்கி ஊழியரின் சம்பளத்தை விட அதிகமாகும்.

தமிழ்நாட்டில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், நெதர்லாந்தில் கட்டிடத் தொழிலாளரின் நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். தமிழ்நாட்டில் அவர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவது மட்டுமல்ல, மேலாளர்கள் கூலித் தொழிலாளரை அடிப்பது, கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது போன்ற கொடுமைகளும் நடக்கின்றன. நெதர்லாந்திலும், பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்களை அந்தளவு மோசமாக நடத்துவதில்லை. அடித்தால் அது வன்முறையாக கருதப்பட்டு, பொலிஸ் தலையிட்டு, நீதிமன்றம் வரை சென்று தண்டம் கட்ட வேண்டியிருக்கும். கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது கூட, ஒரு மனிதரை கண்ணியக் குறைவாக நடத்துவது என்ற கட்டத்திற்கு போகாத அளவிற்குத் தான் இருக்கும்.

மேற்கு ஐரோப்பாவிலும், கட்டிடத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதுண்டு. பொதுவாகவே உள்நாட்டு வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். நெதர்லாந்து போன்ற நாட்டில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளியின் சம்பளம் அதிகமாகும். சிலநேரம், அலுவலக ஊழியரை விட இரண்டு மடங்கு கிடைக்கும். ஏனென்றால், அது மிகவும் கடினமான வேலை. கட்டிடத் தொழில் நிறுவனங்கள், அதிகப்படியான சம்பளத் தொகையை குறைப்பதற்காக, கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை முகவர்கள் மூலம் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். சில இடங்களில் போர்த்துகீசிய தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்டில் தீர்மானிக்கப் பட்ட மிகக் குறைந்த அடிப்படை சம்பளம் மட்டும் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.

எது எப்படி இருப்பினும், தொழில்களில் பாகுபாடு காட்டாமல், எல்லோருக்கும் வாழ்க்கையை கொண்டு நடத்தும் அளவிற்கு சம்பளம் கொடுப்பது முக்கியமாகக் கருதப் படுகின்றது. நெதர்லாந்தில், அரசும், முதலாளிகளும், தொழிற்சங்கங்களும் அடிக்கடி இது குறித்து வாக்குவாதப் படுவதுண்டு. ஆனால், இன்று வரையில் ஒரு மூன்றாமுலக நாட்டில் இருப்பதைப் போன்று, சம்பளத்தில் பெரியளவு ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரவில்லை. 

இன்றைக்கும், மேற்கு ஐரோப்பாவில் வாழும் சாதாரண கூலித் தொழிலாளி கூட, ஒரு வசதியான வீட்டிற்கு வாடகை கட்டி, வருடத்திற்கு ஒரு தடவை வெளிநாட்டு சுற்றுலா சென்று வர முடிகின்றது. எல்லோருக்கும், தொழில் பாகுபாடு பார்க்காமல், சமமான சம்பளம் கொடுப்பதன் நோக்கமும் அது தான். இந்த பூமியில் பிறந்த மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். வருடம் முழுவதும் உழைத்தாலும், வறுமையில் வாட வேண்டும் என்றால் அந்த வாழ்க்கையில் ஓர் அர்த்தம் இல்லை. ஏழைகள் வாழ்வதில்லை. உயிரைக் காப்பாற்ற தப்பிப் பிழைக்கிறார்கள்.

நெதர்லாந்து நாட்டில், என்னென்ன வேலைக்கு எந்தளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற விபரத்தை இங்கே தருகிறேன். அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்கள் மட்டுமே பல மடங்கு அதிகமான சம்பளம் பெறுகிறார்கள். முதலாளித்துவ அமைப்பில் என்றும் மாறாமல் தொடர்ந்திருக்கும், அந்த ஏற்றத் தாழ்வு பற்றி இந்தப் பதிவு பேசவில்லை. 

அரசு, தனியார் துறையாக இருந்தாலும், மூளை, உடல் உழைப்பாளியாக இருந்தாலும், யார் என்ன வேலை செய்தாலும், அடிப்படை சம்பளத்தில் வித்தியாசம் இருப்பதில்லை. ஒருவர் என்ன வேலை செய்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வருமானம் மட்டுமே முக்கியம்.

உதாரணத்திற்கு, தெருவில் குப்பை அள்ளும் தொழிலாளியின் (Vuilnisman) ஒரு வருட ஊதியம் (23.500), ஒரு சாதாரண அலுவலகப் பணியாளரின் (Datatypiste) ஒரு வருட ஊதியத்தை (18.500) விட அதிகமாகும்.

Gemiddeld salaris per beroep 
http://www.gemiddeld-inkomen.nl/gemiddeld-salaris-per-beroep/

Tuesday, October 29, 2013

"தமிழரை சுரண்டும் தமிழ் முதலாளிகள்" - நோர்வே தமிழ் வானொலி

நோர்வேயில் தமிழ் ஊழியர்கள் சிறு தமிழ் முதலாளிகளால் மோசமாக 
சுரண்டப்படும் நிலைமை பற்றிய வானொலி நிகழ்ச்சி:




நோர்வே, ஒஸ்லோ நகரில், "தமிழ் முதலாளிகள், தமிழ் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும், சில நேரம் கூலி கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும்," ஒரு வானொலி நிகழ்ச்சியில் அறிவித்திருந்தனர். ஒஸ்லோ "தமிழ் 3" வானொலியில் ஒலிபரப்பான ஒலிப்பதிவின் வீடியோவினை, நானும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். எதிர்பார்த்த மாதிரி, அது தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது. "தமிழ் முதலாளிகளை விமர்சிக்கும் தகவல்களை எதற்கு பகிர்ந்தீர்கள்?" என்று சிலர் என்னிடம் நேரடியாகவே கேட்டார்கள். உலகில் யாரையும் விமர்சிக்கலாம். அடித்தட்டு தமிழர்களை பற்றி குறை சொல்லி திட்டலாம். ஆனால், தமிழ் முதலாளிகள் "விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள்" எனக் கட்டமைக்கப் படும் விம்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு முதலாளி தமிழ் பேசினாலும், சிங்களம் பேசினாலும், முதலாளிக்கு உரிய சுரண்டும் தன்மை மாறப் போவதில்லை. அவர்களால் சுரண்டப் படுபவர்கள், தமிழ் தொழிலாளர்களாக இருந்தாலும் இரக்கம் காட்டப் படுவதிலை. அப்படி இருக்கையில், "தமிழ் முதலாளிகளை விமர்சிக்காதீர்கள்" என்பவர்களின் வர்க்க குணம், அப்போது தான் வெளிப்படுகின்றது. 
இதனைப் புரிந்து கொள்வதற்கு, ஒருவர் மார்க்சியம் மண்ணாங்கட்டி எதுவும் படிக்கக் தேவையில்லை. சுயமாக சிந்திக்கும் பகுத்தறிவு இருந்தால் போதும்.

அந்த ஒலிப்பதிவில், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலாளர்களை மட்டும் பேட்டி எடுத்திருந்தார்கள். ஒஸ்லோவில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும்பாலான முதலாளிகள், ஈழத் தமிழ் பூர்வீகத்தை கொண்டிருந்த போதிலும், நூற்றுக் கணக்கான ஈழத் தமிழ் தொழிலாளர்களும் அதே மாதிரியான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பலர் இந்த நாட்டில் விசா இன்றி தங்கி இருப்பவர்கள் தான். சட்டப் படி வேலை செய்வதற்கு அனுமதி இன்மை, கூடவே மொழிப் பிரச்சினையும் இருப்பதால், தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை உருவாகின்றது. அதை மட்டுமே சுட்டிக் காட்டி, "இதனை தமிழர்களுக்கு உதவும் செயலாக பார்க்க வேண்டும்" என்று முதலாளிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை. ஆனால் அந்த "சமூக சேவை செய்யும் முதலாளிகள்" கோடி கோடியாக சொத்துக் குவிப்பது மட்டும் எங்ஙனம்? அவர்கள் ஆடம்பர கார்கள், மாளிகை போன்ற வீடுகளை வைத்திருப்பதுடன், வெளிநாடுகளுக்கு "வர்த்தக சுற்றுலா" போவதையும், காசினோக்களில் பணத்தை இறைப்பதையும் செய்யாமல் இருந்தாலே போதும். அப்படி மித மிஞ்சி சேர்ந்த பணத்தை, தொழிலாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம். அப்போது, நாங்கள் அவர்களது சமூக சேவையை மெச்சலாம்.

உண்மையில் என்ன நடக்கிறது? தொழிலாளர்களை சுரண்டி, அரசுக்கு வரி ஏய்ப்புச் செய்து, சேர்க்கப் பட்ட செல்வம், இறுதியில் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப் படுகின்றது. அதன் பின்னர், அந்த தமிழ் முதலாளிகளுக்கு கிரிமினல் முத்திரை குத்தப் படுகின்றது. அவர்களது கிரிமினல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள், நோர்வே ஊடகங்களில் வெளியாகி சந்தி சிரிக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில், இந்த வருடத்தில் மாத்திரம், பத்துக்கும் குறையாத தமிழ் முதலாளிகளின் வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. அவர்கள் இருபது, முப்பது வருடங்களாக நோர்வேயில் வாழ்ந்த போதிலும், அவர்களது குடியுரிமை பறிக்கப் பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டுள்ளனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோ, "ஏழைகளின் பகுதிகள், பணக்காரர்களின் பகுதிகள்" என்று இரண்டாக பிரிந்துள்ளதாக, Aftenposten பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்." என்ற தலைப்பிட்டு, பல புள்ளிவிபரங்களை ஆதாரமாக கொண்டு கட்டுரை எழுதியுள்ளது. இங்குள்ள படத்தில் சிவப்பு மையால் காட்டப் பட்டுள்ள பகுதி "ஏழைகளின் ஒஸ்லோ", நீல மையினால் காட்டப்படுள்ளது "பணக்காரர்களின் ஒஸ்லோ". (Aftenposten Osloby, 24 oktober 2013)

இதிலே சுவராஸ்யமான விடயம், நமது தமிழர்களைப் பற்றியது. நோர்வேயில் வாழும் தமிழர்களில் முக்கால்வாசிப் பேர், ஒஸ்லோவில் தான் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர், ஒஸ்லோ நகரின் ஒரு பிரிவான Stovner என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அது தான் ஒஸ்லோ முழுவதிலும், மிகவும் வறுமையான பகுதி என்று Aftenposten பத்திரிகை குறிப்பிடுகின்றது. அதாவது, பெரும்பான்மையான நோர்வே வாழ் தமிழர்கள், ஏழைகள் என்ற தரத்திற்குள் அடங்குகின்றனர்.

Stovner தேர்தல் தொகுதியில் பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர். அவர்கள் அனேகமாக, இடதுசாரிக் கட்சியான Arbeiderpartiet சார்பாக நிறுத்தப் பட்ட வேட்பாளர்கள். ஒஸ்லோ தமிழர்கள் மத்தியில், "தீவிர வலதுசாரி தமிழ் தேசியக் கருத்தியல்" செல்வாக்கு செலுத்துகின்றது. இருப்பினும், தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். வர்க்கப் பிரச்சினை போன்ற சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்கு நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. நமது தமிழ்ச் சமூகத்திலேயே அதற்கான தரவுகள் நிறைய கிடைக்கின்றன.

Monday, April 12, 2010

வேலை பறிபோகிறதா? முதலாளியை கடத்துங்கள்!

தொழிலகத்தை மூட நினைக்கும் முதலாளியைக் கடத்தி பணயக் கைதியாக வைத்திருப்பது, அண்மைக் காலமாக பிரான்ஸ் நாட்டின் புதிய நாகரீகமாகி விட்டது. "உலக பொருளாதார நெருக்கடி காரணமாக திவாலாகிறது," என்று காரணம் கூறி பல தொழிலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் அவற்றில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டு நடுத்தெருவுக்கு வருகின்றனர். அவ்வாறு மூடப்படும் நிறுவனங்கள், தொழிலாளருக்கு குறிப்பிட்ட காலத்துக்கு போதுமான நஷ்டஈட்டுத் தொகை தர வேண்டும். ஆனால் நிர்வாகம் அதைக் கூட தராமல் ஓடி விட நினைக்கின்றது. வேலை பறிபோனதால் சீற்றமடைந்த தொழிலாளர்கள், தமக்கான நஷ்டஈட்டை போராடித் தான் பெற வேண்டியுள்ளது.

பிரான்சில் திவாலான சில நிறுவனங்களின் தொழிலாளர்கள், முதலாளிகளை கடத்தி தமது உரிமைகளை பெற்றுக் கொள்கின்றனர். பிரான்சின் முன்னணி நிறுவனங்களான Molex, Sony, 3M, Hewlett-Packard தொழிலகங்களில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பல நாட்களாக பணயக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அடுத்து வரும் வேலையில்லாத வருடத்திற்கு கொடுப்பனவு வழங்குவதாக உறுதி அளித்த பின்னரே விடுவிக்கப்பட்டனர். ஜெர்மனியை சேர்ந்த வளர்ந்து வரும் இடதுசாரிக் கட்சித் தலைவர் Oskar Lafontaine, ஜேர்மனிய தொழிலாளர்கள் பிரெஞ்சுத் தொழிலாளரின் உதாரணத்தை பின்பற்றுமாறு கூறியிருந்தார். (WDR வானொலியில் நேர்காணல்) "தொழிலாளர் பிரச்சினைக்கு அரசு தீர்வொன்றைக் காணா விட்டால், அது தீவிர வலதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்." என்று அவர் மேலும் எச்சரித்தார். 'Kidnap the boss,' says German left-wing politician

கடந்த ஏப்ரல் 9 ம் திகதி, ஏதென்ஸ் நகரில் உள்ள கூரியர் நிறுவனமான INTERATTICA வின் தொழிலாளர்கள் தமது பிரெஞ்சு தோழர்களின் உதாரணத்தை பின்பற்றி, தமது உரிமைகளை பெற்றுக் கொண்டனர். அன்று தொழிலாளர்களை கூட்டிய நிர்வாகம், நிறுவனம் திவாலாகி விட்டதாகவும், வேலை செய்து கொண்டிருந்த 205 தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்து விட்டதாக அறிவித்தது. உடனடியாக தொழிலாளர்கள் கம்பனி கட்டிடங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். தொழிலகத்தின் வெளியேறும் வழிகள் யாவும் அடைக்கப்பட்டன. தலைமை நிர்வாக அதிகாரிகள் யாவரும் கைதிகளாக அலுவலகத்தினுள் அடைத்து வைக்கப்பட்டனர்.

சிறிய போலிஸ் படை ஒன்று வருவிக்கப் பட்ட போதிலும், அவர்கள் பின்னர் பின்வாங்கி விட்டனர். இரவு ஏழு மணியளவில், தொழிலாளரின் கோரிக்கைக்கு இணங்க நிர்வாகம் சம்மதித்தது. ஒரு திவாலான கம்பெனி, குறைந்த நேரத்திற்குள் மில்லியன் யூரோ நஷ்டஈட்டுக்கான நிதியை பெற்றுக் கொள்ள முடிந்தது ஆச்சரியமே. நம்புங்கள், அந்த அதிசயம் நடந்தது. அடுத்த மாதம் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறிப்பட்ட அளவு தொகைப் பணம் நஷ்டஈடாக கிடைக்கும், என்று நிர்வாகம் எழுத்து மூலம் அறிவித்தது. அனைவருக்கும் ஈட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும் வரையில், தொழிலாளர்கள் தொழிலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.