Showing posts with label லெனின். Show all posts
Showing posts with label லெனின். Show all posts

Saturday, May 07, 2022

அன்டன் பாலசிங்கம் திரிபுபடுத்திய சுயநிர்ணயம் பற்றிய லெனினின் மேற்கோள்

 

"தமிழ் மொழியின் பெயரில் ஈழம் பிரிவதையும் லெனின் எழுதிய கோட்பாடு அங்கீகரிக்கின்றது" என்பது மாதிரி தமிழ்த்தேசியம் பேசும் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, லெனின் எழுதிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசும் இனங்கள், ஆயிரம் தேசங்களாக பிரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதைப் போன்று பிதற்றுகிறார்கள். முதலில் உலகில் இவ்வாறு ஆயிரம் மொழிவாரி தேசங்களை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமா என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

லெனின் வாழ்ந்த ரஷ்யாவில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசமான மொழிகளைப் பேசும் வேற்றின மக்கள் வாழ்கிறார்கள். அப்படியானால் லெனின் எதற்காக ரஷ்யாவை நூறு துண்டுகளாக உடைத்து தனித்தனி தேசங்களாக பிரித்து விடவில்லை? எல்லாவற்றையும் இணைத்து சோவியத் யூனியன் என்ற ஒரே நாடாக்க வேண்டும்? சோவியத் குடியரசுகளுக்குள் தனித்தனி பாஸ்போர்ட் நடைமுறை இருந்தது வேறு விடயம். அதைக் கொண்டு யாரும் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாது. அதற்கு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட USSR பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

அது போகட்டும். லெனின் தமிழீழம் பிரிவதையும் ஆதரித்திருப்பார் என்றால், அதற்கு என்ன ஆதாரம்? இதற்கு தமிழ்த்தேசியம் பேசும் புலி விசுவாசிகள் அவர்களது தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்த ஒரு கூற்றை கொண்டு வந்து காட்டினார்கள். அதில் அவர் லெனின் சொன்னதாக ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.

//"எந்தவொரு ஒடுக்கும் தேசத்தையும் சேர்ந்த ஒரு சோஷலிஸ்ட் ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுயநிர்ணய (பிரிவதற்கான) உரிமையை அங்கீகரிக்காமல், அதற்காக போராடாமல் இருப்பாரேயானால் அவர் ஒரு பேரினவாதியாக இருக்கலாமே தவிர ஒரு சோஷலிஸ்டாக இருக்க முடியாது."//

லெனின் இதை எந்த நூலில் எந்த இடத்தில் கூறியுள்ளார்? ஆதாரம் என்ன? அதற்கு அவர்கள் கொடுத்த ஆதாரத்தை இங்கே இணைத்துள்ளேன். லெனின் எழுதிய சமாதானம் குறித்து என்ற தலைப்பிலான கட்டுரை. (The Question of Peace, V.I. Lenin, July-August 1915) இது 1915ல் எழுதப்பட்ட காலனிய நாடுகளின் விடுதலை பற்றிய கட்டுரை. மிகத் தெளிவாக இருக்கிறது.

லெனின் இதை எழுதிய காலத்தில், 1ம் உலகப்போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அப்போது இன்றுள்ள மாதிரியான வரைபடத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அன்று உருவாகி இருக்கவில்லை. ஐரோப்பா, வட அமெரிக்கா தவிர உலகின் பிற நாடுகள் ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டின் காலனிகளாக இருந்தன. ஐரோப்பாவிலேயே பல நாடுகள் ஏதாவதொரு சாம்ராஜ்யத்தின் மாகாணங்களாக இருந்தன. இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் லெனின் அந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்.

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் போன்ற ஏகாதிபத்தியங்கள் தமக்குள் நிலவிய முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக முதலாம் உலகப்போரில் ஈடுபட்டன. இந்த ஏகாதிபத்திய நாடு ஒவ்வொன்றும், தனக்குள்ளே பல நாடுகளை கொண்டிருந்தன. இவற்றை தான் ஒடுக்கும் தேசங்களாகவும், ஒடுக்கப்படும் தேசங்களாகவும் லெனின் வரையறுக்கிறார். (கட்டுரையை பார்க்கவும்.)

முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் அவை தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட போராடிக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு செர்பியா தவிர்ந்த முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசுகள், மற்றும் செக்(மற்றும் ஸ்லாவாக்கியா) ஆகியன அந்தக் காலத்தில் ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தன. போலந்து ஜெர்மனிக்குள் இருந்தது.

பிரான்ஸ் ஆப்பிரிக்காவில் பல காலனிகளை வைத்திருந்தது. பிரித்தானியா ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல காலனிகளை வைத்திருந்தது. பிரிட்டன், பிரான்சினால் காலனிப் படுத்தப்பட்ட நாடுகளும் (உதாரணம்: இந்தியா) விடுதலைக்காக அல்லது சுயநிர்ணயத்திற்காக அல்லது பிரிவதற்காக போராடிக் கொண்டிருந்தன. இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை நினைத்துப் பார்க்கவும். இது போன்று காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதைத் தான் லெனின் ஆதரித்து எழுதி இருக்கிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம், அன்டன் பாலசிங்கம் மேற்கோள் காட்டிய கூற்றில் உள்ள "சோஷலிஸ்ட்" என்ற வார்த்தை கம்யூனிஸ்டுகளை அல்லது மார்க்சியவாதிகளை குறிப்பிடவில்லை. அது சமூக ஜனநாயகவாதிகளை குறிப்பிடுகிறது. உதாரணமாக பிரிட்டனில் தொழிற் கட்சி, பிரான்சில் சோஷலிஸ்ட் கட்சி, ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி. இவற்றைத் தான் லெனின் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

அன்று லெனின் "பேரினவாதிகள்" எனக் குற்றஞ்சாட்டிய சமூக ஜனநாயகக் கட்சிகள் இப்போதும் பல ஐரோப்பிய நாடுகளில் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவை முற்றுமுழுதாக முதலாளிகளை ஆதரிக்கின்றன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல. வழமையான முதலாளித்துவக் கட்சிகள். அவை எதுவும் இன்று மார்க்சியம் பேசுவதுமில்லை.

பாலசிங்கம் குறிப்பிடும் ஒடுக்கும் தேசங்களாக, உதாரணத்திற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இருந்தன. ஒடுக்கப்பட்ட தேசங்களாக போலந்து, ஸ்லோவேனியா, குரோவேசியா ஆகிய பல ஐரோப்பிய நாடுகள் இருந்தன. இவை அப்போது ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய சாம்ராஜ்யங்களின் மாகாணங்கள். அவற்றின் விடுதலைக்கு ஜெர்மனி, ஆஸ்திரியாவை சேர்ந்த சோஷலிச அல்லது சமூக ஜனநாயக (Social Democratic) கட்சிகள் ஆதரிக்கவில்லை.

சோஷலிஸ்டுகள் அல்லது சமூக ஜனநாயகவாதிகள், முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன்/பிரிட்டிஷ்/ஆஸ்திரிய அரசுக்களை ஆதரித்தார்கள். அதைத்தான் "ஒடுக்கப்பட்ட தேசங்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணயத்தை ஆதரிக்காத சோஷலிஸ்டுகள் பேரினவாதிகள்" என்று லெனின் சாடினார். லெனின் எழுதியதை அன்டன் பாலசிங்கம் பிழையாக திரித்துள்ளார். தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்ட புலி விசுவாசிகள் அரசியல் அறிவற்ற தற்குறிகள். அவர்களை எப்படியும் ஏமாற்றலாம் என்பது அன்டன் பாலசிங்கத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

1915 ல் லெனின் எழுதிய மாதிரி, அன்று காலனிகளாக ஒடுக்கப்பட்ட இந்தியாவும், இலங்கையும், ஒடுக்கிய பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்து விட்டன. இது நடந்தது 1947ல். அப்போது லெனின் உயிரோடு இல்லை. இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்து காலனிய தேசங்கள் சுதந்திரம் பெறப்போகின்றன என்ற விடயம், 1924 ம் ஆண்டு காலமான லெனினுக்கு எப்படித் தெரியும்? ஞானக் கண்ணால் பார்த்தாரா? அல்லது இறந்த பிறகு அவரது ஆவி எழுதியதா?

வரலாறு தெரியாத பாஸிஸ்ட்கள் தமிழ்தேசியம் பேசக் கூடாது. இப்படித் தான் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

 


Thursday, December 28, 2017

"கம்யூனிஸ்டுகள் மதத்தை தடை செய்வர்" எனும் பொய்ப் பிரச்சாரம் குறித்து...


இன்று வ‌ரை ப‌ல‌ரால் ந‌ம்ப‌ப் ப‌டும் பொய் ஒன்றுள்ள‌து. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்த நாடுகளில் மதம் தடைசெய்யப் பட்டதாகவும், ஆலயங்கள் மூடப் பட்டதாகவும் இன்னமும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டில் புரட்சி நடக்கும் காலத்தில், மக்கள் அதிகார மையங்களை நொறுக்கும் பொழுது, மத நிறுவனங்களும் தாக்கப்படுவது வழமை. 

மதத்திற்கு எதிரான கிளர்ச்சி பிரெஞ்சுப் புரட்சியுடன் ஆரம்பமானது. அதன் விளைவாக மதச்சார்பற்ற அரசுகள் தோன்றின. இன்று பல மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். இது போன்ற சமூக மாற்றத்தை தான் கம்யூனிஸ்டுகள் ஆண்ட நாடுகளில் கொண்டு வர விரும்பினார்கள். 

ஆனால், முதலாளித்துவ எதிரிகளால் வேண்டுமென்றே தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப் படுகின்றன. "கம்யூனிஸ்டுகள் மதத்திற்கும், கடவுளுக்கும் எதிரானவர்கள்" என்று கூறி, மத நம்பிக்கை கொண்ட பாமர மக்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளானர்.

இந்த விடயத்தில், மதம் தொடர்பான கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரையை வாசித்தால் தெளிவு பிறக்கும். 13 மே 1909, புரெலேடார்ட் பத்திரிகையில் லெனின் எழுதியது. லெனின் நூல் திரட்டில் இருந்து எடுத்த கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகிறேன். தமிழ் வாசகர்களுக்கு தெளிவு ஏற்படுவதற்காக நான் சில இடங்களில் மேலதிக விளக்கம் கொடுத்திருந்தாலும், லெனினின் மூலப்பிரதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

பிரான்ஸ், ஜெர்மனியில் மதத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுள்ளதையும், ரஷ்யாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார். அந்த நாடுகளில் இருந்த பூர்ஷுவா வர்க்கத்தினரின் மத எதிர்ப்பு பாரம்பரியம், சோஷலிச இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்துள்ளது. 

பிரான்ஸில் என்சீக்லோபீடியர்கள் (Encyclopedists) எனும் தத்துவ அறிஞர்களின் குழு, தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டிருந்தது. தமிழகத்தில் உள்ள திராவிடர் க‌ழ‌க‌ம் முன்னெடுக்கும் நாஸ்திக இயக்கத்துடன் அதை ஒப்பிடலாம். அதே மாதிரி, ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் (Feuerbach) கூட தீவிர மத எதிர்ப்பாளராக இருந்துள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் தோன்றிய பூர்ஷுவா வர்க்கத்தினர் எந்தவொரு மத எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. லெனினின் கூற்றுப் படி, "அந்தப் பொறுப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தின் தலையில் சுமத்தப் பட்டது." அந்தக் காலகட்டத்தில் (19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி) ரஷ்ய விவசாயிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அமைப்பான நரோட்னிக்குகள் (லெனின் அவர்களை "குட்டி முதலாளிய ஜனநாயகவாதிகள்" என்று குறிப்பிடுகிறார்.) கூட பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. 

ஆகவே, கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த "மத எதிர்ப்பு இயக்கம்", அந்தக் கால கட்டத்தில் (முதலாளித்துவ) மேற்கு ஐரோப்பாவில் நடந்த சமூக- அரசியல்  மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கருதப் பட வேண்டும். சுருக்கமாக சொன்னால், பிரான்ஸில் நடந்த முதலாளித்துவ புரட்சியின் தொடர்ச்சியாகத் தான், ரஷ்யாவில் நடந்த சோஷலிசப் புரட்சியும் மத நிறுவனங்களின் அரசியல் மேலாதிக்கத்தை இல்லாதொழித்தது.

லெனின் கூறியதாவது: 
//மார்க்சியத்தின் தத்துவார்த்த அடிப்படையானது இயங்கியல் பொருள்முதல்வாதமே. அதையே மார்க்ஸ், எங்கெல்சும் பிரகடனம் செய்தனர். அது 18 ம் நூற்றாண்டில் பிரான்ஸில் தோன்றிய பொருள் முதல்வாத தத்துவத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. 19 ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஜெர்மன் தத்துவஞானி போயர்பாக் அதை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருந்தார். பொருள்முதல்வாதமானது முற்றுமுழுதாக நாஸ்திக வாதமே என்பதுடன், அது மதத்துடன் பகைமை கொண்டுள்ளது.//

பொருள்முதல்வாத தத்துவம் நாஸ்திகமே என்பதைக் கூறும் லெனின், எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்கிற்கு மறுப்பு" நூலையும் வாசிக்கக் கோருகின்றார். டூரிங் (Düring) என்பவர் ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு சோஷலிச தத்துவ அறிஞர். ஆனால் மார்க்சியவாதி அல்ல. (அதாவது மார்க்சுடன் கொள்கை முரண்பாடு கொண்டவர்). அப்போது கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூல் எழுதுவதில் மும்முரமாக இருந்த படியால், டூரிங்கின் வாதங்களை மறுக்கும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றிருக்கிறார். "டூரிங்கிற்கு மறுப்பு"(இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை இப்போதும் வாங்கலாம்.) நூலில் தீவிர நாஸ்திகம் எதிர்மறையான விளைவுகளை தரும் என்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார். அதை லெனின் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேற்கொண்டு லெனின் எழுதியதை நான் இங்கு இலகுபடுத்தி தருகிறேன். மதத்திற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்வதன் மூலம், அதை தொழிலாளர் கட்சியின் முக்கிய செயற்பாடாகுவதன் ஊடாக, "இடதுசாரிகளாக", "புரட்சியாளர்களாக" காட்டிக் கொள்வோரை எங்கெல்ஸ் கண்டித்துள்ளார். 1874 ம் ஆண்டு, பிரான்ஸில் பிளாங் என்ற சோஷலிச அறிஞர் வழிகாட்டலில் நடந்த பாரிஸ் கம்யூன் புரட்சி தோற்கடிக்கப் பட்டது. அப்போது பலர் லண்டனில் அகதிகளாக தஞ்சம் கோரி இருந்தனர். அந்த "பிலாங்கிஸ்ட் அகதிகள்" வெளியிட்ட அறிக்கையை எங்கெல்ஸ் விமர்சித்திருந்தார். இது போன்ற மதத்திற்கு எதிரான போர்ப் பிரகடனம் மதத்திற்கு புத்துயிர் கொடுப்பதுடன், அது தானாகவே அழிந்து போவதைத் தடுத்து விடும் என்று கண்டித்துள்ளார்.

உழைக்கும் மக்களின் பெரும்பகுதியை புரட்சிகரமாக்கும் வர்க்கப் போராட்டம் மட்டுமே, ஒடுக்கப் பட்ட மக்களை மதத்தின் நுகத்தடியில் இருந்து விடுதலை செய்யும். மதம் ஒரு கருத்துமுதல்வாதம் என்பதைக் கூறிய தத்துவ அறிஞர் டூரிங்கை பாராட்டிய அதே எங்கெல்ஸ், டூரிங்கின் "சோஷலிச நாட்டில் மதத்தை தடை செய்யும் புரட்சிகர கொள்கையை" கடுமையாக கண்டிக்கத் தயங்கவில்லை. எங்கெல்ஸ் அதை "பிஸ்மார்க் செய்தது போன்று முட்டாள்தனமான எதிர்விளைவுகளை தரும்" என்று குறிப்பிடுகிறார். "கலாச்சாரப் போராட்டம்"(Kulturkampf) என்ற பெயரில் அன்றைய ஜெர்மன் அதிபர் பிஸ்மார்க் கத்தோலிக்க மத நிறுவனத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அதைப் பலப்படுத்துவதில் முடிந்தது என்பதை லெனின் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டி உள்ளார்.

பிஸ்மார்க் மதத்திற்கு எதிராக தடுப்புச் சுவர் எழுப்பியமை, பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியின் கவனத்தை திசை திருப்பியதுடன், பூர்சுவா வர்க்கத்தின் "மத எதிர்ப்பு போலித்தனத்தையும்" வெளிப்படுத்தியது. பிஸ்மார்க் செய்தது போன்று, டூரிங் வேறு வடிவில் செய்ய நினைக்கிறார் என எங்கெல்ஸ் குற்றம் சாட்டினார். பாட்டாளிவர்க்கம் அதற்காக தயார்படுத்தப் பட வேண்டும் என விரும்பினார். பாட்டாளிவர்க்கத்தை பொறுமையாக ஒழுங்குமுறைப் படுத்தி, தெளிவுபடுத்துவதன் மூலம் மதத்தை தானாக அழிய வைக்கலாம். ஆனால், அது மதத்திற்கு எதிரான அரசியல் போராக மாற்றப் படக் கூடாது.

மார்க்சியம் என்பது பொருள்முதல்வாதம் தான். அது மதத்துடன் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் பகைமை கொண்டுள்ளது. என்சீக்லோபீடியர்கள், போயர்பாக் போன்றோரின் நிலைப்பாடும் அது தான். ஆனால், மார்க்ஸ், எங்கெல்சின் இயங்கியல் பொருள்முதல்வாதம் அதற்கும் அப்பால் செல்கிறது. அது பொருள்முதல்வாத தத்துவத்தை சரித்திர தளத்துடனும், சமூகவியல் தளத்துடனும் இணைக்கிறது. நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அது பொருள்முதல்வாதத்தினதும், மார்க்சியத்தினதும் தொடக்கமாக உள்ளது.

ஆனால், மார்க்சியம் பொருள்முதல்வாதத்துடன் மட்டும் நின்று விடவில்லை. அதற்கும் மேலே செல்கிறது. அதாவது நாங்கள் மதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கும் முதல், மக்களினதும், நம்பிக்கையினதும் மூலமாக உள்ள பொருள் வாதமாக வெளிப்படுத்தப் பட வேண்டும். மதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு சித்தாந்தப் பிரச்சாரமாக குறுக்கக் கூடாது. ஆனால், மதத்தின் சமூக வேர்களைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ள வர்க்கப் போராட்டத்தின் தீர்க்கமான நடைமுறையாக பிணைக்கப் பட வேண்டும்.

எதற்காக நகர்ப்புற பாட்டாளிகள், விவசாயிகள் மத்தியில் மதம் நிலைத்திருக்கிறது? "அதற்குக் காரணம் மக்களின் அறியாமை" என்று ஒரு முதலாளிய பொருள்முதல்வாதி கூறுவார். "மதம் ஒழிக, நாஸ்திகம் வாழ்க, எமது முக்கிய கடமை நாஸ்திகத்தை பரப்புவது தான்" என்று ஒரு முதலாளித்துவ முற்போக்குவாதி மேலும் கூறுவார். ஆனால், மார்க்சியர்கள் அதைத் தவறு என்கிறார்கள். ஏனென்றால், இது போன்ற கருத்தானது, மேலோட்டமான, முதலாளிய கலாச்சாரத்திற்கு உட்பட்ட பரப்புகை ஆகும்.

அது போன்றதொரு கருத்து மதத்தின் வேர்களை போதுமான அளவு வெளிப்படுத்துவதில்லை. அதாவது, கருத்தியல் பூர்வமானதே தவிர பொருள்முதல்வாதம் அல்ல. நவீன முதலாளிய நாடுகளில் இந்த வேர்கள் சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ளன:
  • முதலாளித்துவத்தின் உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறை. 
  • மிகப் பலமான முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத உழைக்கும் மக்களின் கையாலாகத்தனம். 
  • ஒவ்வொரு நாளும் பல தடவைகள் வருத்தி,காயப்படுத்தும் மனிதாபிமற்ற செயல்கள். 
  • அசாதாரணமான நிகழ்வுகளான யுத்தம், நிலநடுக்கம் போன்றன.

பயம் தான் கடவுளரை முன்னுக்கு கொண்டு வந்தது. கண்ணுக்கு புலப்படாத மூலதனத்தின் செயற்பாடுகள் குறித்த அச்சம் காரணமாக இருந்தது. "கண்ணுக்கு புலப்படாத" என்று சொல்வதற்கு காரணம், மனிதர்களின் வாழ்வில் ஒரு கட்டத்தில், அவர்களை ஏழைகளாக, பிச்சைக்காரர்களாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் மூலதனத்தின் சக்தி பற்றிய புரிதல் சாதாரண மக்களிடம் இல்லை. இது தான் தற்காலத்தில் ஒரு மதத்தின் வேர். ஒரு பொருள்முதல்வாதி அதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத, நாசமாக்கும் சக்தி படைத்த முதலாளித்துவத்தில் தங்கியுள்ள மதத்தின் வேரைக் கண்டறியாமல், நாஸ்திக பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களிடம் இருந்து மதத்தை அகற்ற முடியாது.

(பிற்குறிப்பு: "மதம் குறித்து தொழிலாளர் கட்சியின் தொடர்பு பற்றி" என்ற தலைப்பில் லெனின் எழுதிய மூலப்பிரதியை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டது.)

Friday, January 06, 2017

தமிழின விவசாய - முதலாளிகளை புரிந்து கொள்வதற்கான லெனினின் நூல்


லெனின் எழுதிய "குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும்" நூலை வாசித்தல்.

சோஷலிசம் பேசுவோர் எல்லாம் மார்க்சியவாதிகளோ அல்லது பொதுவுடைமைவாதிகளோ அல்ல! படித்தவர்கள் பலருக்கும் இந்த உண்மை தெரிவதில்லை. மேற்கு ஐரோப்பாவில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளும் சோஷலிசம் பேசின. ஆனால் அது முதலாளித்துவத்திற்கு கீழ் அடங்கியது. அதனால், அன்று சோஷலிசம் பேசிய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகள், காலப்போக்கில் வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சிகளாக மாறிவிட்டன.

ஐரோப்பாவில் மார்க்சியவாதிகள் அல்லாத, சமூக ஜனநாயகவாதிகளும் இல்லாத சோஷலிஸ்டுகள் இருக்கின்றனர். பொதுவாக அனார்க்கிஸ்டுகள் என்றழைக்கப் படுகின்றனர். அதற்குள் பல தத்துவ ஆசிரியர்களை பின்பற்றும் சிறு குழுக்கள் உள்ளன. மார்க்சியத்தின் மூலவர்களாக கருதப்படும் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில், அவர்களுடன் முரண்பட்ட வேறு சில தத்துவ அறிஞர்களும் இருந்தனர்.

பிரான்ஸில் புருதோன், பிளாங்கி போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். பாரிஸ் கம்யூன் புரட்சியில் முக்கிய பங்காற்றியவர்கள். பிற ஐரோப்பிய நாடுகளிலும் அவர்களது ஆதரவாளர்கள் இருந்தனர். ரஷ்யாவை சேர்ந்த பகுனின் என்ற அனார்க்கிச தத்துவ அறிஞர், கார்ல் மார்சுடன் அடிக்கடி முரண்பட்டு வந்தார். அவருக்கும் பெருமளவு ஆதரவாளர்கள் இருந்தனர். நெதர்லாந்தை சேர்ந்த டொமேலா நியூவன்ஹைஸ் போன்றோர் தத்தம் நாட்டுக்குள் பிரபலமாக இருந்தனர்.

அராஜகம் என்ற சொல் அன்றாட மொழிப் பாவனையில் தவறான அர்த்தத்துடன் பிரயோகிக்கப் படுகின்றது. கிரேக்க மொழியில் "அனார்க்கி" என்றால் அரசு இன்மை என்று அர்த்தம் வரும். தமிழில் "அராஜகம்" (ராஜ்ஜியம் இல்லை) என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆகையினால், அரசு என்ற அமைப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் "அராஜகவாதிகள்". (அந்த அர்த்தத்துடன் தான் மார்க்சிய நூல்களில் குறிப்பிடப் படுகின்றனர்.) பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் "அனார்க்கிஸ்டுகள்" என்று அழைக்கப் படுகின்றனர்.

ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, அந்நாட்டில் அராஜகவாதிகள் செயற்பட்டு வந்தனர். "நரோட்னிக்குகள்" என்ற பெயரில் அமைப்பு வடிவம் பெற்றிருந்தனர். ரஷ்ய மொழியில் "நரோட்னி" என்றால் மக்கள் என்று அர்த்தம். 1880 ம் ஆண்டளவில் நரோட்னிக்குகளின் செயற்பாடுகள் உச்சத்தில் இருந்தன. ரஷ்ய சக்கரவர்த்தி சார் அலெக்சாண்டர் நரோட்னிக்குகளின் குண்டுவெடிப்பில் கொல்லப் பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக லெனினின் அண்ணனும் (ஒரு நரோட்னிக்) கைதாகி, சிறை வைக்கப் பட்டிருந்தார்.

நரோட்னிக்குகள் மார்க்சியவாதிகள் அல்லர். அவர்கள் அனார்க்கிஸ்டுகள். சார் மன்னனின் இரகசியப் பொலிஸ் அடக்குமுறை காரணமாக பலவீனப் பட்டிருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 1901 ம் ஆண்டு, சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் என்ற கட்சி தோன்றியது. ரஷ்யா முழுவதும் பரவியிருந்த சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சி, பழைய நரோட்னிக்குகளின் கொள்கைகளை பெருமளவில் பின்பற்றி வந்தது.

சோஷலிஸ்ட் புரட்சியாளர் கட்சி, ஓரளவு மார்க்சிய சார்பானதாகவும் காட்டிக் கொண்டது. ஆனால், மார்க்சியத்தை திரிபு படுத்தி வந்தது. அதாவது, மார்க்ஸ் சொன்ன தொழிற்துறை பாட்டாளிவர்க்கத்தை புறக்கணித்தது. அதற்குப் பதிலாக விவசாயிகள் மத்தியில் வேலை செய்து, அவர்களை அணிதிரட்டியது. அவர்கள் ரஷ்யாவில் விவசாயிகளின் புரட்சியை உண்டாக்குவதை குறிக்கோளாக கொண்டிருந்தனர்.

இந்த வரலாற்றுப் பின்னனியில் தான், லெனின் எழுதிய "குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும்" என்ற நூலை வாசித்து அறிய வேண்டும். ஆரம்ப கால மார்க்சிய மாணவர்கள் வாசிப்பதற்கு இலகுவான நூல் அது. இருபது பக்கங்கள் மட்டுமே. மேற்படி பின்னணி அறிவிருந்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

//நரோடியவாதம் ஓரளவுக்கு ஒருங்கிணைப்பான, முரணில்லாத தத்துவமாகும். அது ரஷ்யாவில் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுத்தது. மொத்த பாட்டாளி வர்க்கத்தின் முன்வரிசைப் போர்வீரர்களாக தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் வகிக்கும் பாத்திரத்தை அது மறுத்தது. அரசியல் புரட்சி மற்றும் முதலாளித்துவ  அரசியல் சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அது மறுத்தது. விவசாயக் கம்யூன், அதன் வேளாண்மையின் அற்பமான வடிவங்களிலிருந்து உடனடியான சோஷலிஸ்ட் புரட்சி ஏற்பட வேண்டும் என்று அது போதித்தது.// - லெனின், (குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும் நூலில் இருந்து.)

இன்றைக்கும் மேற்கு ஐரோப்பாவில் வாழும் அனார்க்கிஸ்டுகள் அப்படித் தான் இருக்கிறார்கள். அதாவது, முதலாளித்துவ கட்டமைப்பை முழுவதுமாக நிராகரிக்கிறார்கள். சோஷலிச அரசு என்ற அமைப்பையும் எதிர்க்கிறார்கள். நேரடியாக கம்யூனிச காலகட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்கள் எல்லோரும் சிறு சிறு குழுக்களாக, விவசாயக் கம்யூன் அமைப்பில் சேர்ந்திருக்க வேண்டும். அன்றைய ரஷ்யாவில் விவசாயப் பொருளாதாரம் முக்கியமாக இருந்தது. அதனால், நரோட்னிக்குகள், அதற்குப் பின்னர் சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சியும், விவசாயிகள் மத்தியில் ஆதரவை தேடிக் கொண்டதில் வியப்பில்லை.

இருப்பினும், மேற்கு ஐரோப்பாவில் உள்ள அனார்க்கிஸ்டுகள் தொழிலாளர் மத்தியில் வேலை செய்வதை, நாம் இந்த இடத்தில் மறுக்க முடியாது. ரஷ்யாவிலும் அந்த வேறுபாடு இறந்தது. ரஷ்யப் புரட்சியின் தொடக்கக் காலத்தில், சில சோவியத்துகள் அனார்க்கிச தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளன. லெனினின் இந்த நூலானது, அனார்க்கிஸ்டுகள் என்று பொத்தாம்பொதுவாக குறிப்பிடவில்லை. நரோட்னிக் அமைப்பு, மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியாளர் கட்சியை மட்டும் தனியாக விமர்சிக்கிறது.

அது சரி. லெனின் தலைமையிலான மார்க்சிஸ்டுகளுக்கும், நரோட்னிகளுக்கும் (அல்லது சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள்)என்ன வித்தியாசம்? 
//நரோட்னிக்குகள் விவசாயியை ரஷ்யாவின் எதிர்காலத்தை படைக்கப் போகும் மனிதனாக கருதினார்கள்.... மார்க்சியவாதிகள் தொழிலாளியை ரஷ்யாவின் எதிர்காலத்தை படைக்கப் போகும் மனிதனாக கருதினார்கள்....// - லெனின் (மேற்படி நூலில்)

அதாவது, தொழிலாளர் வர்க்கமே புரட்சியின் முன்னிலை போர்வீரர்கள் என்பது மார்க்சியம். கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில், ரஷ்யா ஒரு பின்தங்கிய விவசாய நாடாக இருந்தது. மேற்குடன் ஒப்பிடும் பொழுது, அங்கு முதலாளித்துவத்தின் வளர்ச்சி குறைவாக இருந்தது. அதனால், இப்போதைக்கு அந்த நாட்டில் புரட்சி நடக்காது என்று கார்ல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார். ரஷ்யாவில் மார்க்சியத்தை விரிவு படுத்திய லெனின், விவசாயிகளின் போராட்டத்தையும் அத்துடன் இணைத்திருந்தார். (பிற்காலத்தில் லெனினிசம் என்ற கோட்பாடு உருவாக அதுவும் ஒரு காரணம்.) அது அனேகமாக லெனின் நரோட்னிக்குகளிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடமாக இருக்கலாம் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு தாம் முக்கியத்துவம் கொடுப்பதை, லெனினும் இந்த நூலில் உறுதிப் படுத்துகின்றார். மார்க்சிய நூல்களை ரஷ்யாவுக்கு அறிமுகப் படுத்திய பிலேக்கனோவ் (பிற்காலத்தில் லெனினுக்கு எதிராக மென்ஷெவிக் சமூக ஜனநாயக கட்சியில் இருந்தார்.) காலத்திய பிரசுரம் ஒன்றை லெனின் மேற்கோள் காட்டுகிறார். 

//பழைய முரணில்லாத நரோடியவாதக் கருத்துக்களை எடுத்துக் கூறி, நமக்கிடையே உள்ள உண்மையான வேறுபாடு, விவசாயப் பிரச்சினையை கணக்கிலெடுத்துக் கொள்வதில் விருப்பம் காட்டுவதிலோ, அல்லது விருப்பம் காட்டாதிருப்பதிலோ, அதை அங்கீகரிப்பதிலோ அல்லது அங்கீகரிக்கத் தவறுவதிலோ அடங்கியிருக்கவில்லை. ரஷ்யாவில் இன்றைய விவசாய இயக்கம் மற்றும் இன்றைய விவசாயப் பிரச்சினை பற்றிய வேறுபட்ட மதிப்பீடுகளில் தான் இருக்கிறது.... பிளேஹானவ் எழுதிய நமது வேறுபாடுகள் என்ற பிரசுரத்தில் இருந்து தொடங்கி ருஷ்ய மார்க்சியவாதிகளின் முக்கியமான எழுத்துக்கள் அனைத்துமே பிரதானமான ருஷ்ய விவசாயப் பிரச்சினையில் நரோடியவாதக் கருத்துக்களின் தவறுகளை விளக்குவதற்காகவே எழுதப் பட்டிருக்கின்றன.// - லெனின் (மேற்படி நூலில்)

அன்றிருந்த சோஷலிஸ்ட் புரட்சியாளர் கட்சி, விவசாய இயக்கத்தை முன்னெடுப்பதால் தாம் மட்டுமே உண்மையான சோஷலிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால், லெனின் அது சோஷலிஸ்ட் இயக்கம் அல்ல, மாறாக ஒரு "ஜனநாயக - முதலாளித்துவ இயக்கம்" என்கிறார். அதற்கான காரணங்களை அடுக்குகிறார். 
//இன்றைய விவசாய இயக்கத்தை ஜனநாயக முதலாளித்துவ இயக்கம் என்று ஏன் சொல்கிறோம்? ஏனென்றால் அதிகார வர்க்கம் மற்றும் நிலப்பிரபுக்களின் ஆட்சியை ஒழித்த பிறகு அது சமூகத்தில் ஜனநாயக அமைப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த ஜனநாயக சமூகத்தின் முதலாளித்துவ அடிப்படையை மாற்றாது. மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிக்காது.// - லெனின் (மேற்படி நூலில்)

இந்தக் கருதுகோள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கும் முக்கியமானது. அவை இன்றைக்கும் விவசாய பொருளாதாரத்தை முக்கியமாகக் கொண்ட நாடுகளாக உள்ளன. பழைய நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்கள் இன்னமும் அங்கே காணப்படுகின்றன. அதே நேரம், பணக்கார விவசாயிகள் அல்லது விவசாய முதலாளிகள் என்ற புதிய வர்க்கமும் உருவாகி உள்ளது. அது நிலப்பிரபுத்துவத்தை அல்ல, முதலாளித்துவ பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. மேலும் பழைய நிலப்பிரபுக்களுக்கும், புதிய பணக்கார விவசாயிகளுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

//ருஷ்யாவின் இன்றைய நிலப்பிரபுத்துவப் பொருளாதாரம் முதலாளித்துவம், பண்ணையடிமை முறை ஆகிய இரண்டின் கூறுகளையும் இணைத்துக் கொண்டிருக்கிறது.// - லெனின்

லெனினின் கூற்றை மெய்ப்பிப்பது போன்று, ஈழத்தமிழ் விவசாயிகளும் அவர்களது பிள்ளைகளும் இன்று தீவிர முதலாளித்துவ ஆதரவு சக்திகளாக வளர்ந்துள்ளதை கண்கூடாகக் காணலாம். எழுபதுகளில் கூட, நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களை தன்னகத்தே கொண்டிருந்த யாழ்ப்பாண விவசாய சமூகத்தில், லெனின் கூறுவது போன்ற விவசாய - முதலாளிகள் பெருமளவில் தோன்றினார்கள். முதலாளித்துவ பொருளாதாரத்தால் நன்மை அடைந்த அவர்களது பிள்ளைகள், வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்ட பின்னர், கம்யூனிசத்தை வெறுப்பவர்களாக, இடதுசாரி எதிர்ப்பாளர்களாக காட்சியளிக்கின்றனர். இதனை நான் எனது சொந்த அனுபவத்தில் பல தடவைகள் கண்டிருக்கிறேன். கம்யூனிசத்தை எதிர்த்து என்னுடன் வாதம் செய்தவர்களின் சமூகப் பின்னணி, எப்போதும் விவசாய - முதலாளி வர்க்க குடும்பமாக இருப்பது ஒரு தற்செயல் அல்ல.

இந்தியா, மேற்கு வங்காளத்தில் நடந்த நக்சல்பாரி கிராம விவசாயிகளின் எழுச்சி பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். அங்கிருந்த நிலவுடையாளர்கள், பண்ணையார்களுக்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்தெழுந்து அவர்களை விரட்டி அடித்தார்கள். அந்த எழுச்சியானது பிற்காலத்தில் நக்சலைட் இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. 

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் அங்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர், நக்சல்பாரி கிராம மக்கள் இன்று முதலலாளித்துவ நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று எழுதி இருந்தார். நக்சல்பாரி இயக்கம் வெறுமனே விவசாயிகள் இயக்கம் அல்ல என்ற உண்மையை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். நக்சலைட்டுகள் இன்று, இந்திய முதலாளித்துவத்திற்கு எதிராக, விவசாயிகளுடன், கிராமப் புற பாட்டாளி வர்க்கத்தையும் அணிதிரட்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

//அதிகார வர்க்கத்தினருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிரான போராட்டத்தை, எல்லா விவசாயிகளையும் வசதியுள்ளவர்கள் மற்றும் நடுத்தர விவசாயிகளையும் கூடச் சேர்ந்து நடத்த முடியும், அவ்வாறு தான் நடத்த வேண்டும். மறு பக்கத்தில் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான, ஆகவே வசதியுள்ள விவசாயிகளுக்கும் எதிரான போராட்டத்தைக் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு மட்டுமே சரிவர நடத்த முடியும்.// - லெனின் (மேற்படி நூலில்)

ஆகவே, விவசாயிகளின் போராட்டத்தையும், பாட்டாளிகளின் போராட்டத்தையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தை லெனின் வலியுறுத்துகிறார். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நகர்ப்புற பாட்டாளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, விவசாய பண்ணைகளில் வேலை செய்யும் கிராமப்புற பாட்டாளிகளுக்கும் கொடுக்க வேண்டும். அவர்களை ஒரே வர்க்கமாக நிறுவன மயப் படுத்த வேண்டும்.

நிலப்பிரபுக்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் ஒரு புரட்சிகரமான போராட்டம் தான். ஆனால், அது ஒரு ஜனநாயகப் (வெகுஜன) போராட்டம் மட்டுமே. அதுவே ஒரு வர்க்கப் போராட்டம் ஆகி விடாது. 


மார்க்சிய நூல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள்: 

Monday, August 03, 2015

"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின்


இந்தக் காலத்திற்கும் வழிகாட்டும் லெனின் எழுதிய சிறு நூல்: "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு". தற்காலத்திற்கும் பொருந்தும் பல ஆலோசனைகள் அந்த நூலில் உள்ளன. (1920 ம் ஆண்டு எழுதப் பட்டது.)

இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் இயங்கும் முற்போக்கான நண்பர்களுக்கும் இந்த ஆலோசனை தேவையானது. மக்களை எப்படி அணுகுவது? இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தளங்களில் பிரச்சாரம் செய்வது ஆரோக்கியமானது தான். அதை விட, நாங்கள் பிற்போக்காளர்களின் ஒன்றுகூடல் என்று ஒதுக்கும், மத நிறுவனங்கள் மற்றும் பிழைப்புவாத அரசியல் கட்சிகள் மத்தியிலும் வேலை செய்ய வேண்டும்.

"ஏன் பெரும்பான்மையான மக்கள், பாராளுமன்ற பிழைப்புவாதிகளை நம்பி இருக்கிறார்கள்? பிற்போக்கான அரசியல் கட்சிகள் தங்களை ஏமாற்றுவது தெரிந்தும் அவற்றை நம்புகிறார்கள்?" 

இன்றைக்கு இருக்கும் தொழிற்சங்கங்கள், பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு ஆகியன, எந்தளவு பிற்போக்கானதாக, முதலாளித்துவ பிழைப்புவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போதிலும், நாங்கள் அவற்றிற்குள் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை லெனின் வலியுறுத்துகிறார். ஏனென்றால், மக்கள் அங்கே தான் இருக்கிறார்கள்.

லெனின் இந்த நூலில், ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி விட்ட தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். வழமையான தொழிற்சங்கங்களில் இருந்து விலகி நின்று, தூய்மையான தொழிற்சங்கம் கட்டுவதும், பாராளுமன்ற தேர்தல்களை முற்று முழுதாக நிராகரிப்பதும் "தீவிர இடதுசாரி தன்மை" ஆகும்.


ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தது. ஒரு பக்கம், இரகசியமான சட்டவிரோதமான வேலைகளை செய்து கொண்டிருந்தது. மறு பக்கம், வெளிப்படையான சட்டபூர்வமான பிரச்சார வேலைகளிலும் ஈடுபட்டது. இவை இரண்டும் அவசியம் என்று லெனின் வலியுறுத்துகிறார்.

லெனின் இந்த இடத்தில், மலினோவ்ஸ்கி என்ற போல்ஷெவிக் கட்சி உறுப்பினரின் உதாரணத்தை எடுத்துக் காட்டுகின்றார். கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்த மலினோவ்ஸ்கி, சார் அரசினால் அனுப்பப் பட்ட ஊடுருவலாளர். அவர் கட்சிக்குள் இயங்கிய பல செயலூக்கம் கொண்ட உறுப்பினர்களை காட்டிக் கொடுத்து வந்தார். அவரது காட்டிக்கொடுப்புகள் கட்சிக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருந்தது. அவரால் பல தோழர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும், கட்சியின் நன்மதிப்பை பெறுவதற்காக, மலினோவ்ஸ்கி ஏற்கனவே சட்டபூர்வமான பிரச்சார வேலைகளை செய்ய வேண்டி இருந்தது. சார் அரசின் அனுமதி பெற்ற சட்டபூர்வ ஊடகமான பத்திரிகை ஒன்றை ஸ்தாபித்ததன் மூலம், ஆயிரக் கணக்கான புதிய உறுப்பினர்கள் சேரவும் காரணமாக இருந்தார். உலகின் பல நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூட, அரசு பல உளவாளிகளை அனுப்பி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஊடுருவ வைக்கும். இந்த அபாயத்தை எதிர்த்துப் போராட ஒரே வழி, சட்டபூர்வமான வேலைகளையும், சட்டவிரோதமான வேலைகளையும் திறமையாக கையாள வேண்டும்.

இன்றைக்குள்ள தமிழ் மக்களை, அன்றைக்கிருந்த ரஷ்ய, ஜெர்மனிய மக்களுடன் ஒப்பிடலாம். எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கிறார்கள். பிற்போக்கான அரசியல் செய்பவர்களுக்கு பின்னால் தான் செல்கிறார்கள். அது அவர்களது அறியாமை.

அறியாமையில் கிடக்கும் மக்களுக்கு கற்பிப்பதற்கும், அவர்கள் நம்பும் அதே பாராளுமன்ற அமைப்பின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதற்கும் அங்கே தான் போக வேண்டும். அதன் அர்த்தம் நாங்கள் பிற்போக்காளர்களின் தரத்திற்கு இறங்கிச் செல்வது என்பதல்ல. ஆனால், மக்களை அங்கிருந்து தான் வென்றெடுக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறி வழிக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த நூல் எழுதப் பட்ட காலகட்டத்தை மேலெழுந்தவாரியாக பார்ப்பது, இன்னும் அதிக தெளிவைக் கொடுக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய நாடுகளில் அப்போது தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக ஆரம்பித்தன. அதற்கு முன்னர் இருந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் தான் மார்க்சியக் கட்சிகளாக இருந்தன. ஆனால், அவை நடைமுறையில் உள்ள, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக அமைப்பிற்குள், புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரலாம் என்று நம்பின, இப்போதும் நம்புகின்றன.

சர்வதேச அமைப்பான இரண்டாம் அகிலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. அதற்கு மாறாக லெனின் தலைமையில் உருவான மூன்றாம் அகிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. முதலாளித்துவ அரசுக்களுக்கு முண்டு கொடுத்து வந்த சமூக ஜனநாயகக் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் தனியாக கம்யூனிஸ்ட் கட்சிகளை ஸ்தாபித்தார்கள். அதனால், அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாராளுமன்ற முறைமை குறித்து அதிருப்தி காணப்பட்டது. 

முதலாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் போரை ஆதரித்தன. லெனின் அவர்களை "சமூக - பேரினவாதிகள்" (சோஷல் - ஷோவினிஸ்ட்) என்று சாடுகின்றார். ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவுட்ஸ்கி, லெனினால் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றார். சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையானது "வலதுசாரியம்" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

வலதுசாரிய சமூக - பேரினவாதிகளை நாங்கள் இன்றைக்கும் பல நாடுகளில் காணலாம். இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான போரை ஆதரித்த வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச போன்றவர்களை, சமூக- பேரினவாதிகள் என்ற பிரிவுக்குள் அடக்கலாம். (ஈழத்தில் வலதுசாரி தமிழ் தேசியர்கள், இவர்களை வேண்டுமென்றே "இடதுசாரிகள்" என்று தவறாக விளிப்பதன் மூலம் இடதுசாரியத்தை கொச்சைப் படுத்துகின்றனர்.)

சமூக ஜனநாயகவாதிகளின் வலதுசாரிய கொள்கை எந்தளவு ஆபத்தானது என்பது தெரிந்தது தான். ஆகவே, லெனின் இந்த நூலில், கம்யூனிஸ்டுகள் மத்தியில் உள்ள தீவிர இடதுசாரிய போக்கை மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். வலதுசாரியத்துடன் ஒப்பிடும் பொழுது, இடதுசாரிய குறைபாடு மிகவும் சிறியது. அது இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது. ஆகவே, இந்த நோயை குணப்படுத்துவது இலகுவானது என்பது தான் லெனினுடைய வாதம். அதற்காகத் தான் இந்த நூலுக்கு "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு" தலைப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜெர்மனியில், கவுட்ஸ்கி போன்றோரின் சமூக - பேரினவாத நிலைப்பாட்டை எதிர்த்து தான் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அதன் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் போன்றோர் "இடதுசாரிய" நிலைப்பாடு எடுத்தனர். (அவர்கள் இருவரும் லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தனர்.) "ஜெர்மன் தொழிலாளர்கள் பெருமளவில், பிற்போக்குவாத கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள். ஆகவே, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பது பிரயோசனமற்றது, நேரடியாக தொழிலாளர் சோவியத்துகள் அமைப்பது பற்றி ஆராய வேண்டும்" என்பது அவர்களது வாதம். அதையே லெனின் இங்கு "இடதுசாரியம்" என்று சாடுகின்றார்.

லெனின் அந்த வாதத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு கேட்கிறார்:"இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்புரட்சியாளர்களான கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள் என்றால், ஜெர்மனியில் பாராளுமன்ற முறைமை இன்னும் காலாவதியாகவில்லை என்று தானே அர்த்தம்? பாராளுமன்ற முறைமை வரலாற்று ரீதியாக காலாவதியாகி விட்டது, அரசியல் ரீதியாக அல்ல. அதனை உலக வரலாற்றுக் காலகட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான சகாப்தம் ஆரம்பமாகி விட்ட காலத்தில், முதலாளித்துவ பாராளுமன்ற முறைமை முடிந்து விடும். ஆனால் அது இன்று அரசியல் ரீதியாக காலாவதியாகி விட்டதா என்பதே கேள்வி."

பாராளுமன்ற முறைமை அரசியல் ரீதியாக காலாவதியாகாமல் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், மக்களுக்கு அறிவு புகட்டுவதற்கு தேர்தல்களில் பங்கெடுப்பது அவசியமாகின்றது. மதகுருக்களால் முட்டாள்கள் ஆக்கப்பட்ட மக்களை, பிற்போக்கு நிறுவனங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நடைமுறையில் உள்ள பாராளுமன்ற அமைப்பையும், அது சார்ந்த பிற்போக்கான நிறுவனங்களையும், எம்மால் கலைக்க முடியாமல் உள்ள இன்றைய நிலையில் இது அவசியமானது. அவற்றிற்குள் ஊடுருவி வேலை செய்தால் தான், அங்குள்ள மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூற முடியும்.

லெனின் தனது வாதத்திற்கு வலுச் சேர்பதற்காக, பாரிஸ் கம்யூன் காலத்தில் எங்கெல்ஸ் எழுதியதை மேற்கோள் காட்டுகிறார். உண்மையில், பாரிஸ் கம்யூன் புரட்சி தோல்வியடைந்த பின்னர் தான் மார்க்சிய காலகட்டம் தோன்றியது. அதாவது, பாரிஸ் கம்யூனை ஆதரித்தவர்களிடையே கருத்து முரண்பாடு தோன்றியது. பிளாங்கிஸ்டுகள் எனப்படுவோர் பிற்காலத்தில் அனார்க்கிஸ்டுகள் (அராஜகவாதிகள்) என்று அறியப் பட்டனர். 

பிளாங்கிஸ்டுகள் கூட தம்மை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால், இடையில் உள்ள எந்தவொரு அமைப்பையும் சார்ந்திராமல், நேரடியாக கம்யூனிச காலகட்டத்திற்கு செல்ல விரும்புகின்றனர். அதாவது, இன்றைக்குள்ள பாராளுமன்ற அமைப்பு முறையை அவர்கள் கணக்கில் எடுக்காமல் கடந்து செல்லப் பார்க்கின்றனர். இதனை சிறுபிள்ளைத்தனம் என்று சாடும் எங்கெல்ஸ், நடைமுறை அமைப்புகளை புறக்கணித்து விட்டு, நாளைக்கே கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கி விட முடியாது என்று கூறியுள்ளார். 
(Fr. Engels, "Programme of the Communists- Blanquists)

மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால், மக்களின் ஆதரவையும், நன்மதிப்பையும் பெற விரும்பினால், எதிர்நோக்கும் தடைகளையும், கஷ்டங்களையும் எண்ணி நாம் அஞ்சக் கூடாது. "மக்களின் தற்போதைய தலைவர்கள்", எங்களைப் பார்த்து ஏளனமாக பேசினாலும், அவமானப் படுத்தினாலும், எதற்கும் கலங்காமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். எங்கெங்கு மக்கள் கூடுகின்றார்களோ, அங்கெல்லாம் சென்று மக்களுக்கு உண்மைகளை கூற வேண்டும். எந்த விதமான அர்ப்பணிப்புக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். மக்களை எழுச்சியடைய வைக்கும் பரப்புரைகளை படிப்படியாக கொண்டு செல்ல வேண்டும்.

நாம் செல்லுமிடம் மிக மோசமான, படு பிற்போக்கான ஸ்தாபனமாக இருந்தாலும், அங்கெல்லாம் பாட்டாளி வர்க்க மக்களைக் காணலாம். பாட்டாளி வர்க்க மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியிருக்கும். அதாவது பாட்டாளி வர்க்கத்தில் உள்ள வசதி படைத்த பிரிவினர் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக நின்று, எங்கள் கொள்கைகளை எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் மக்களை ஏமாற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கும், சமூக - பேரினவாதிகளுக்கும் எதிராக போராடி, உழைக்கும் வர்க்க மக்களை எமது பக்கத்திற்கு கவர்ந்திழுக்க வேண்டும்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, May 07, 2015

என்ன செய்ய வேண்டும்? சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...


கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், "புத்தகம் புத்தகமாக வாசிக்க எமக்கு நேரமில்லை" என்றும், "எங்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை, சாதாரண மக்களுக்கு எதுவுமே புரியப் போவதில்லை" என்றும், மூலதனம் நூல் பற்றி அறிவுஜீவித் தனமாக நையாண்டி செய்வோர் பலருண்டு.

19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில், மூலதனத்தின் மூலப்பிரதி ஜெர்மன் மொழியில் வெளியான காலத்திலும், அதிகார வர்க்கத்தினர் அப்படித் தான் கருதி வந்தனர். 1872 ம் ஆண்டு, அதன் முதலாவது மொழிபெயர்ப்பு ரஷ்ய மொழியில் வெளியானது.

மூலதனம் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல், சார் மன்னனின் தணிக்கை சபையினர் பார்வைக்கு சென்றது. அவர்கள் அந்த நூலை தடை செய்யாமல் விற்க அனுமதித்தார்கள். அதற்குக் காரணம், "அன்றைய ரஷ்யாவில் படிப்பறிவுள்ள மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் சிறிய எண்ணிக்கையிலான படித்தோர் மட்டுமே மூலதனம் நூலை வாசிக்கப் போகிறார்கள். அப்படியே வாசித்தாலும், அது ஒரு சிலருக்கு மட்டுமே புரியப் போகின்றது."

அப்படி வாசித்துப் புரிந்து கொண்ட "ஒரு சிலர்" மிகப் பெரிய புரட்சியை நடத்துவார்கள் என்று, அன்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது ஒரு பழமொழி.

"தொழிலாளர்கள், கடின உழைப்பின் மூலம், தமது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கு, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிலேயே வாய்ப்புகள் உள்ளன. அதனால், புரட்சி அவசியமானது அல்ல!" இவ்வாறு கூறும் பலரை நமது சுற்றாடலில் கண்டிருப்போம். புரட்சிக்கு முந்திய ரஷ்யாவிலும் அப்படியானோர் இருந்தனர். சில மார்க்சியவாதிகளும், குறிப்பாக சமூக- ஜனநாயகவாதிகள், அத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். அன்று அவர்கள் "பொருளாதாரவாதிகள்" (Economists) என்று அழைக்கப் பட்டனர்.

அன்று லெனின் கூட ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியில் தான் இருந்தார். அதுவே அன்று சார் மன்னராட்சிக்கு எதிரான, பிரதானமான மார்க்சியக் கட்சியாக இருந்தது. அதன் தலைவர்கள் பலர், பிற ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர்.1903 ம் ஆண்டு, லண்டனில் நடந்த இரண்டாவது கட்சி மகாநாட்டில், ஒரு முக்கியமான பிளவு ஏற்பட்டது.

மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற அரசமைப்பை விரும்பிய பிரிவினர், மிகத் தெளிவான சமூக- ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மென்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். ஏற்கனவே, பொருளாதாரவாதிகளும் மேற்கத்திய ஜனநாயகப் பாதை சிறந்தது என்று நம்பினார்கள். மேற்கத்திய ஜனநாயக அமைப்பே சிறந்தது. அதற்குள், தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களது கொள்கை.

லெனின் தலைமையில் பிரிந்தவர்கள் போல்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். அவர்கள் தொழிலாளர் வர்க்கம் அரசியல் தலைமைத்துவத்தை கைப்பற்ற வேண்டும். அதற்கு ஒரு புரட்சிகர கட்சி அவசியம் என்று நம்பினார்கள். இது தொடர்பாக நடந்த விவாதங்களை, லெனின் "என்ன செய்ய வேண்டும்?" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

"என்ன செய்ய வேண்டும்?" இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்ற நூலாகும். "தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள், தேர்தல் ஜனநாயகம் மூலம் சில சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியாதா?" "மேற்கத்திய நாடுகளில் இருக்கும் கருத்துச் சுதந்திரம் சிறந்தது அல்லவா?" இது போன்ற சந்தேகங்களை எழுப்புவோருக்கான பதில்கள் அந்த நூலில் உள்ளன. மின் நூலை இணையத்தில் தரவிறக்கிக் கொள்வதற்கு: http://www.padippakam.com/document/M_Books/m000016.pdf

ரஷ்யாவில் 1917 அக்டோபரில் நடந்த போல்ஷெவிக் கட்சியினரின் புரட்சி, ஒரு சதிப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு என்றே மேற்கத்திய பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அதே ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்தது தான், உண்மையான புரட்சி என்றும் கூறுகின்றன. பாடசாலைகளில் சரித்திர பாடம் படிக்கும் மாணவர்கள், பரீட்சையில் கேட்கப் படும் கேள்விகளுக்கு அப்படித் தான் விடை எழுத வேண்டும். மேற்குலக நாடுகள், அக்டோபர் புரட்சியை நிராகரித்து விட்டு, பெப்ரவரி புரட்சியை வரவேற்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.

ஜனநாயகம் மாதிரி, புரட்சி என்ற சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு நாட்டில் நடக்கும் மக்கள் எழுச்சி மட்டுமே பலரால் புரட்சி என்று புரிந்து கொள்ளப் படுகின்றது. அவ்வாறாயின், அண்மைக் காலத்தில் துனீசியாவிலும், எகிப்திலும் நடந்த மக்கள் எழுச்சிகளும் புரட்சிகள் தான். ஆனால், அதற்குப் பின்னர், அந்த நாடுகளில் ஆட்சியாளர் மாறியதைத் தவிர, பெரியளவு சமூக மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ரஷ்யாவில் 1917 பெப்ரவரியில் நடந்த புரட்சியில், சார் மன்னனின் எதேச்சாதிகாரம் வீழ்த்தப் பட்டது. (எகிப்து, துனீசியா சர்வாதிகாரிகளின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.) அப்போதே சோவியத் அமைப்புகள் தோன்றி விட்டன. தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து, கணிசமான அளவு வெற்றிகளையும் பெற்றிருந்தார்கள். 

அது மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் கணிசமான அளவு மார்க்சியர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆயினும், அந்த மார்க்சியர்கள் மேற்கு ஐரோப்பிய சமூக- ஜனநாயகக் கட்சியினர் ஆவர். மென்ஷேவிக்குகள், சோஷலிச புரட்சியாளர்கள் போன்ற கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிவுஜீவிகளாக இருந்தனர். அதனால், அவர்கள் இன்றுள்ள பல முற்போக்கு பூர்ஷுவாக்கள் போன்றே காணப் பட்டனர்.

சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்றம், சார் மன்னனை பெயரளவில் பாதுகாத்து வைத்திருந்தது. சோஷலிசம் தோன்றுவதற்கு முன்னர், முதலாளித்துவ வளர்ச்சி அவசியம் என்று கருதியதால், ஏற்கனவே இருந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அது மட்டுமல்ல, தொழிலாளர்களின் சோவியத் என்ற அமைப்பு தனியாக இயங்கிய போதிலும், அதற்கு எந்த அதிகாரங்களையும் கொடுக்கவில்லை.

அத்தகைய நிலைமையில் தான், அக்டோபர் மாதம் போல்ஷெவிக் கட்சியினர் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அன்றைய தலைநகரான பெட்ரோகிராட்டில் (சென் பீட்டர்ஸ்பேர்க் என்பது ஜெர்மன் மொழிப் பெயர் என்தால், ரஷ்ய தேசியவாதிகளினால் அந்தப் பெயர் மாற்றப் பட்டிருந்தது.), அந்த ஆட்சிமாற்றம் நடைபெற்ற நேரம், பெரும்பான்மை மக்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது என்று சொல்லப் படுகின்றது. சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள குளிர்கால அரண்மனை மீதான தாக்குதலில், பெரியளவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த அரண்மனையில் இருந்தது, கெரன்ஸ்கி தலைமையிலான சமூக- ஜனநாயக அரசாங்கம் தான்.

உண்மையில், அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் புரட்சி ஆரம்பமானது. செம்படையின் முன்னோடி அமைப்பான செம் பாதுகாவலர் படையில் தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். பாராளுமன்றத்தினுள் நுளைந்த செம் பாதுகாவலர்கள், அறிவுஜீவி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியே விரட்டினார்கள். அதன் மூலம், அன்று வரையில் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்திடம் இருந்த அரசு அதிகாரம், தொழிலாளர்களின் அமைப்பான சோவியத்திற்கு மாற்றப் பட்டது.

அக்டோபர் புரட்சியின் பின்னர் என்ன நடந்தது? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த மேட்டுக்குடியினர் ஒன்றுமில்லாதவர் ஆக்கப் பட்டனர். கொள்ளைக்காரரக்ளிடம் கொள்ளையடிப்பது தவறில்லை என்று உணர்ந்த மக்கள், பணக்காரர்களின் வீடுகளை சூறையாடினார்கள். காலங்காலமாக செல்வத்தில் வாழ்ந்து வந்த பிரபுக்கள், நிலவுடைமையாளர்கள், தங்களது மாளிகை போன்ற வீடுகளில் ஏழை, எளிய மக்களை குடியமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு காலத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த மேட்டுக்குடியினர், தம்மிடம் இருந்த சொத்துக்களை விற்று வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உழைக்காமல் சொகுசாக வாழ்ந்தவர்கள், புரட்சிக்குப் பின்னர் கடினமான வேலைகளை செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சில இடங்களில், அவர்களைப் பிடித்து மலசல கூடம் கழுவ வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. செல்வந்தர்கள் தம்மிடம் இருந்த வைரங்களை விற்று குடும்பத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யுமளவிற்கு கஷ்டம் ஏற்பட்டது. பல பணக்காரர்கள், சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு வெளிநாடுகளுக்கு ஓடினார்கள்.

அக்டோபர் புரட்சிக்குப் பிறகு தான், கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய ஸ்தாபனம் அரசு நிர்வாகத்தை பொறுப்பேற்றது. வழமையான அரசியல் கட்சிகளுக்கு மாறாக, அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி உறுப்புரிமை வழங்கப் பட்டது. அது வரை காலமும் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த, ஆலைத் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், போன்றவர்களுக்கு உறுப்பினராவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டது. மேட்டுக்குடியினரால் "தோட்டக் காட்டான்கள்" என்று இழிவு படுத்தப் பட்டவர்கள், பாராளுமன்ற ஆசனங்களில் சென்றமர்ந்து கொண்டார்கள்.

இது போன்றதொரு வர்க்கப் போராட்டத்தை தான் லெனின் கனவு கண்டார். அதைச் செயற்படுத்துவதற்கு பல கோட்பாடுகளை எழுதினார். அதனால் தான், அது இன்றைக்கும் மார்க்சிய- லெனினிச சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றது. லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சியினர், வர்க்கப் போராட்டம் தற்போது தேவையில்லை என்று நினைத்திருந்தால், இன்றைக்கும் ரஷ்ய பாராளுமன்றத்தில் ஒரு கட்சியாக அமர்ந்திருப்பார்கள். ரஷ்யாவும் இத்தாலி, ஸ்பெயின் மாதிரி, ஒரு பின்தங்கிய முதலாளித்துவ நாடாக இருந்திருக்கும்.

Tuesday, April 08, 2014

லெனினின் புரட்சிக்கு ஜெர்மனி நிதி வழங்கியதா?

"ஜெர்மனி வழங்கிய நிதியில் தான், ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி நடந்தது" என்ற வதந்தி, நீண்ட காலம் நிலவி வந்துள்ளது. அந்த வதந்தியில் உண்மை இருக்கிறதா? அன்றும் இன்றும், பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள், லெனின் மீது அந்தக் குற்றச்சாட்டை, அடிக்கடி சுமத்தி வந்துள்ளனர். அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? தனது சித்தாந்த எதிரிக்கு, ஜெர்மனி உதவ வேண்டிய காரணம் என்ன?

அண்மையில் கிடைத்த, பழைய ஜெர்மன், சுவிஸ், ரஷ்ய ஆவணங்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள், அந்தக் கேள்விக்கு விடை தேடியுள்ளனர்.  பல ஐரோப்பிய மொழிகளில் வெளியாகும் Historia சஞ்சிகை, அந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுதப் பட்ட கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது. அதில் இருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

முதலாம் உலகப்போரின் முடிவில், போல்ஷெவிக்குகள் ஜெர்மனியிடம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அதற்குக் காரணம், லெனின் உட்பட முக்கியமான போல்ஷெவிக் கட்சி உறுப்பினர்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி இருந்தனர். முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், ரஷ்யாவில் சார் மன்னராட்சி, ஒரு புரட்சி மூலம் தூக்கியெறியப் படும் என்று சொன்னால், அன்று யாரும் எளிதில் நம்பியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு, சார் மன்னரின் அரசு மிகப் பலமாக இருந்தது. உள்நாட்டில் அரசுக்கு எதிரான சக்திகள் மூச்சு விடக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. இதனால், பல அரச எதிர்ப்பாளர்கள் பிற ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி இருந்தனர். 

ரஷ்யாவில், விளாடிமிர் இலியானோவிச்சின் (லெனின்) குடும்பம், ஒரு வசதியான மத்தியதர வர்க்க குடும்பம் தான். அவரது மூத்த சகோதரன் அலெக்சாண்டர் ஒரு அராஜகவாதி (அனார்க்கிஸ்ட்). சார் மன்னன் நிக்கொலாயினை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார். தோல்வியைத் தழுவிய கொலை முயற்சியில், அலெக்சாண்டர் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டார். அந்தச் சம்பவம் காரணமாக, லெனினின் குடும்பம் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானது. 

விளாடிமிர் வளர்ந்து பெரியவனாகி, தமையனின் வழியில் புரட்சிக்கான ஆயுதப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டான். லெனின் என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டான். கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்களை படித்த லெனின், சோஷலிசப் புரட்சிகர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அன்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்கள், பல ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப் பட்டிருந்தன. ஆனால், ரஷ்யாவில் அவை தடை செய்யப் படவில்லை. "அந்த நூல்கள், தனது இருப்பிற்கு ஆபத்தானவை அல்ல" என்ற எண்ணத்தில், சார் அரசு அவற்றை உதாசீனப் படுத்தி வந்தது. 

சார் மன்னராட்சிக்கு எதிராக, பல்வேறு எதிர்ப்பியக்கங்கள் இயங்கி வந்தாலும், அவை எல்லாம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தன. 1905 ல் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்ற, லிபரல் அரசியல் கட்சிகளுக்கு சிறிதளவு அரசியல் சுதந்திரம் கிடைத்திருந்தது. ஆனால், சோஷலிசக் கட்சிகள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வந்தன.

லெனின் போன்ற தலைவர்கள், சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். ரஷ்யாவுடன் கூட்டணி அமைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், அந்த அரசியல் அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்தன. அதனால், தவிர்க்கவியலாது, ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு நடுநிலை நாடாக இருந்த, சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோர வேண்டி இருந்தது. அந்த நிலைமையை, ஜெர்மனி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணியது. 

அன்றைய ரஷ்யாவை ஒரு சக்கரவர்த்தி ஆண்டது போல, அன்றைய ஜெர்மனியும் சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்தது. ரஷ்ய சக்கரவர்த்தி நிக்கோலாஸ், ஜெர்மன் சக்கரவர்த்தி வில்லெம், இருவரும் நெருங்கிய உறவினர்கள்! இருவரும் மைத்துனர் முறையானவர்கள். என்ன தான் தாயும், பிள்ளையும் என்றாலும், வாயும் வயிறும் வேறு தானே? அதனால், பிராந்திய வல்லரசுப் போட்டி, இரண்டு மைத்துனர்களுக்கு இடையில் பகைமையை வளர்த்து விட்டிருந்தது. 

ரஷ்ய சாம்ராஜ்யம், நாற்திசைகளிலும் தன்னை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மேற்குத் திசையில், இன்னொரு சாம்ராஜ்யமான ஜெர்மனியுடன் மோத வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அன்றைய ஜெர்மனி, பிருஷிய சாம்ராஜ்யம் என்று அழைக்கப் பட்டது. இன்றைய போலந்தின் வட பகுதியில், இன்றைய ரஷ்யாவின் மேற்குப் பகுதியில், அதன் தலைமையகம் அமைந்திருந்தது. ஆனால், ரஷ்ய சாம்ராஜ்யமானது அந்தப் பகுதிகளை விழுங்கி விட்டிருந்தது. 

ரஷ்யாவுடனான ஏகாதிபத்திய போர்களில், தனது புராதனப் பழைமை வாய்ந்த பகுதிகளை இழந்த ஜெர்மனி, அவற்றை மீட்பதற்கு கடுமையாக முயற்சித்தது. அன்றிருந்த ஐரோப்பிய வல்லரசு நாடுகளின், நாடு பிடிக்கும் போட்டி தான், முதலாம் உலகப் போருக்கு வித்திட்டது. முதலாம் உலகப்போரில், ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனாலும், ஜெர்மனி தனது பிராந்தியத்திற்கான உரிமை கோரலை கை விடவில்லை. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னரும், கிழக்குத் திசையில் முன்னேறிய ஜெர்மன் படைகள், எஸ்தோனியா, லாட்வியா போன்ற பால்ட்டிக் கடலோர நாடுகளை ஆக்கிரமித்தன.

ரஷ்யாவில் சார் அரசு பலமாக இருந்தாலும், அது பல்வேறு அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. அரசு விரும்பினாலும், ஜெர்மனியுடனான போரை நிறுத்த முடியாத அளவுக்கு, ரஷ்ய பேரினவாதிகளின் கை ஓங்கி இருந்தது. மறுபக்கத்தில், நகரங்களில் தொழிலாளர்களும், கிராமங்களில் விவசாயிகளும் போர் காரணமாக கடுமையான விலை கொடுக்க வேண்டி இருந்தது. அதனால், ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. ரஷ்ய அரசு, ஒரு புறம் உள்நாட்டு கலகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிக் கொண்டே, மறுபுறம் ஜெர்மனியுடன் போரிட்டுக் கொண்டிருந்தது. 

ஜெர்மனியும் அதே மாதிரியான நெருக்கடிக்குள் சிக்கி இருந்தது. மேலும் அதன் எதிரி ரஷ்யா மட்டுமல்ல. பிரிட்டன், பிரான்சை எதிர்த்தும் போரிட வேண்டி இருந்தது. இந்தக் கட்டத்தில் தான், எப்படியாவது சார் மன்னனின் ஆட்சி கவிழ்ந்தால் போதும், ரஷ்யாவுடனான யுத்தம் முடிந்து விடும் என்ற நிலைப்பாட்டிற்கு ஜெர்மனி வந்தது. 1915 ம் ஆண்டு, பார்வுஸ் என்ற ரஷ்ய வர்த்தகர் ஒருவர், ஜெர்மன் சக்கரவர்த்தியை சந்தித்துப் பேசினார். ரஷ்யாவில் சார் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு, தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக கூறினார். அதற்குத் தேவையான ஆயுதங்கள், நிதியை வழங்கினால் போதும், மிச்சத்தை தான் பார்த்துக் கொள்வதாக கூறினார். 

அலெக்சாண்டர் ஹெல்ப்ஹான்ட் என்ற இயற்பெயர் கொண்ட பார்வுஸ், சட்டவிரோத ஆயுதக் கடத்தல்கள் மூலம் பிரபலமான வர்த்தகர் ஆவார். சார் மன்னருக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தார். இவரது வீட்டில் இருந்த அச்சுக்கூடத்தில் தான், லெனின் எழுதிய நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப் பட்டன. அதனால், லெனினுக்கும் பழக்கமானவர்.

லெனின் உட்பட பல சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள், பார்வுஸ் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை. கடைசி வரைக்கும், பார்வுஸ் தனக்கு பழக்கமானவர் என்று லெனின் காட்டிக் கொள்ளவில்லை. பார்வுஸ் ஒரு சாதாரண வணிகர் மட்டுமல்ல, கள்ளக்கடத்தல்கள், டாம்பீகம், ஊதாரித்தனம், பெண் பித்து போன்ற கெட்ட பழக்கங்களையும் கொண்டிருந்தார். அவரைத் தெரிந்ததாக காட்டிக் கொண்டால், தங்களுக்கும் கெட்ட பெயர் வந்து விடும் என்று சோஷலிஸ்டுகள் அஞ்சினார்கள். 

என்ன இருந்தாலும், பார்வுஸ்ஸிடம் ஒரு நல்ல குணம் இருந்தது. அவர் முதலாளித்துவ நலன்களை பயன்படுத்தி செல்வந்தராக வாழ்ந்த ஒருவர் தான். ஆனாலும், அவருக்குள் ஒரு சோஷலிஸ்ட் இருந்தார். ஒரு பொருளாதாரப் பட்டதாரி. மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர். அவரது சொந்த வாழ்க்கைக்கும், அவரது அரசியல் சித்தாந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. ஆனால், ரஷ்யாவின் எதிர்காலம் சோஷலிசப் புரட்சியில் தங்கியிருப்பதாக, உறுதியாக நம்பினார்.    

ரஷ்யாவில் சார் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு, ஜெர்மனி ஆயுதங்களும், நிதியும் வழங்க காத்திருக்கிறது என்ற செய்தியுடன், பார்வுஸ் சுவிட்சர்லாந்துக்கு பயணமானார். பேர்ன் நகரில், லெனினை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது திட்டத்திற்கு இணங்க லெனின் மறுத்து விட்டார். "பார்வுஸ் ஒரு ஜெர்மன் சோஷலிச- பேரினவாதி" என்று திட்டிய லெனின், கதவைத் திறந்து வெளியே அனுப்பி விட்டார். "கல்லடி பட்ட நாய் மாதிரி, பார்வுஸ் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியதாக..." பிற்காலத்தில் லெனின் அந்த சம்பவம் பற்றி விபரித்திருந்தார். 

ஜெர்மன் வெளிவிவகார அமைச்சின் இரகசிய ஆவணம் ஒன்றில், "பார்வுஸ் 20 மில்லியன் ரூபிள்கள் (இன்றைய பெறுமதி 25 மில்லியன் யூரோ) கேட்டிருந்ததாக..." எழுதப் பட்டுள்ளது. ஜெர்மன் அரசு வழங்கிய பணம், டென்மார்க்கின் தலைநகரம் கோபன்ஹெகன் ஊடாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது. அன்றைய கோபன்ஹெகன் கள்ளக் கடத்தல்காரர்கள், பங்குச்சந்தை சூதாடிகள், ஆகியோரின் சொர்க்கமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களை பயன்படுத்தி, சட்டவிரோத வியாபாரம் செய்து, கொள்ளை இலாபம் அடித்த வர்த்தகர்கள் எல்லோரும் அங்கே தான் பதுங்கி இருந்தார்கள். 

ஜெர்மன் அரசிடம் இருந்து நிதியுதவி பெற்ற பார்வுஸ், கோபன்ஹெகன் நகரை தளமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஏராளமான ஆயுதங்கள், வெடி குண்டுகளை ரஷ்யாவுக்கு கடத்திச் சென்றார். ரஷ்யாவில் தலைமறைவாக இருந்த சோஷலிசப் புரட்சியாளர்களுக்கு அவற்றை விநியோகம் செய்தார். உண்மையில், ஜெர்மனியின் நிதியுதவி, நேரடியாக லெனினின் ஆதரவாளர்களிடம் மட்டும் சென்றது என்று சொல்ல முடியாது. பல்வேறு போராளிக் குழுக்கள், அந்த உதவியைப் பயன்படுத்தி இருக்கலாம். அன்று ரஷ்யாவில் இருந்த எல்லா எதிர்ப்பியக்கங்களுக்கும், ஜெர்மன் சக்கரவர்த்தி நிதி வழங்கியுள்ளமை, ஆவணங்களில் இருந்து தெரிய வருகின்றது. அவற்றில் சில, லெனினின் போல்ஷெவிக் கட்சிக்கு எதிரான குழுக்கள் ஆகும். 

1917 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டது. இம்முறை சார் மன்னர், அதிகாரத்தை விட்டுக் கொடுக்க முன்வந்தார். மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற, பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும், இடைக்கால அரசு அமைப்பதற்கும் ஒத்துக் கொண்டார். மென்ஷெவிக் போன்ற சமூக ஜனநாயகவாதிகளும், ரஷ்ய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடிந்தது. இந்தத் தருணத்தில், அவர்களுக்கும், லெனினின் போல்ஷெவிக் ஆதரவாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு விரிவடைந்தது. லெனின் இடைக்கால அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். அதே நேரம், ஏகாதிபத்திய போர்களை நிறுத்தி, சமாதானம் நிலைநாட்டப் பட வேண்டும் என்றார். 

அன்று சார் மன்னரின் அதிகாரம் வெகுவாக குறைக்கப் பட்டிருந்தாலும், இடைக்கால அரசாங்கம், சக்கரவர்த்தி சாரின் ஏகாதிபத்திய போருக்கு ஆதரவாக இருந்தது. லெனின் தலைமையிலான குழுவினர், போருக்கு எதிராக இருந்ததைக் காரணமாகக் காட்டி, மக்கள் மத்தியில் அவர்களை தனிமைப் படுத்த எண்ணியது. போரை எதிர்த்த போல்ஷெவிக்குகள், தேசத் துரோகிகளாக சித்தரிக்கப் பட்டனர். லெனின் குழுவினருக்கு, ஜெர்மனியிடம் இருந்து நிதி கிடைப்பதாக பிரச்சாரம் செய்யப் பட்டது. அன்று, இடைக்கால அரசாங்கம் ஆரம்பித்து வைத்த, "ஜெர்மன் நிதி பற்றிய பிரச்சாரம்" இன்று வரையில் தொடர்கின்றது. "லெனினுக்கு ஜெர்மனி நிதி வழங்கியது" என இன்றைக்கும் பரப்பப்படும் தகவல்கள், பெரும்பாலும் அன்றைய இடைக்கால அரசின் பிரச்சாரத்தை ஆதாரமாக கொண்டுள்ளன. 

ஜெர்மன் நிதியுதவி பற்றி இடைக்கால அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்த போதிலும், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. இதற்கிடையே, ரஷ்யா இன்னொரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருந்தது. அரசு மீது அதிருப்தியுற்ற மக்கள் பரவலாக கிளர்ச்சி செய்தனர். முதலாளிகள் மாதக் கணக்காக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்த படியால், தொழிலாளர்கள் வீட்டு வாடகையை கூட கட்ட முடியாமல் கஷ்டப் பட்டனர். பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நிர்வாகத்தை கைப்பற்றினார்கள். நாட்டுப்புறங்களில், விவசாயிகள் நிலங்களை தமது உடமையாக்கிக் கொண்டார்கள். இராணுவத்தினர், கடற்படை வீரர்கள் கூட கிளர்ச்சி செய்தனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட எண்ணிக்கையில் குறைவாக இருந்த போல்ஷெவிக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது.  

இந்தத் தருணத்தில், சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த லெனின் குழுவினர், தாயகம் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கு ஜெர்மனியின் உதவி தேவைப் பட்டது. லெனின் குழுவினர் ரஷ்யாவின் ஆட்சியை கைப்பற்றினால், சமாதானம் ஏற்படும் என்று ஜெர்மன் அரசு நம்பியது. அதனால், லெனின் குழுவினரை ஒரு புகைவண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தது. ரயில் பயணத்திற்கான நிதியை, ஜெர்மன் அரசு வழங்கி இருந்தது. தங்களது கடவுச்சீட்டுகள், உடமைகளை சோதனையிடக் கூடாது என்று நிபந்தனை போட்ட பின்னர் தான், லெனின் அந்த ரயில் வண்டியில் செல்ல சம்மதித்தார். அந்த ரயில் வண்டியில், வேறெந்தப் பயணியும் அனுமதிக்கப் படவில்லை. போல்ஷெவிக் உறுப்பினர்களின் ரயில் பயணம் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. 

சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி ஊடாக சென்று, பின்னர் கடல் தாண்டி, சுவீடன், பின்லாந்து வழியாக சென்ற ரயில், ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க் நகரை சென்றடைந்தது. லெனினை வரவேற்கவும், நேரில் பார்ப்பதற்குமாக, ஏராளமான மக்கள் ரயில் நிலையத்தில் ஒன்று கூடினார்கள். லெனின் சென் பீட்டர்பெர்க் நகருக்கு வந்து சேர்ந்த பின்னரும், நிம்மதியாக இருக்க முடியவில்லை. இடைக்கால அரசாங்கம் அவரைக் கைது செய்ய முயன்றது. அதனால், மீண்டும் தலைமறைவாகி பின்லாந்துக்கு சென்றார். இதற்கிடையே நவம்பர் 7 ம் தேதி, ஒக்டோபர் புரட்சி வெடித்தது. ஆயுதபாணிகளான போல்ஷெவிக் தொழிலாளர்கள், கடற்படை வீரர்கள், அரசு அலுவலகங்களை கைப்பற்றினார்கள். ரஷ்யாவின் புதிய தலைவராக லெனின் தேர்ந்தெடுக்கப் பட்டார். 

இப்போது ஒரு சோதனைக் காலம் தொடங்கியது. ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உள்நாட்டுப் போரைக் காரணமாகக் காட்டி, லெனின் ஒரு வருடம் பின் போட்டார். ஆனால், புதிய சோவியத் ஒன்றியம் ஏகாதிபத்திய போரில் இருந்து விலகிக் கொள்ளும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை. 3-3-1918 அன்று, ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில், பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் (Brest - Litovsk)  சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. அதன் படி, ரஷ்யா முதலாம் உலகப் போரில் இருந்து உத்தியோகபூர்வமாக விலத்திக் கொண்டது.  

பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னர், புதிய சோவியத் அரசாங்கத்திற்கு, ஜெர்மன் அரசு மில்லியன் கணக்கான ரூபிள்களை நிதியாக வழங்கி இருந்தது. அந்தப் பணம் உண்மையில் ஒரு நஷ்டஈடாகத் தான் வழங்கப் பட்டது. ஏனெனில், அந்த ஒப்பந்தத்தினால், சோவியத் அரசு இழந்தது அதிகம். இன்றைய உக்ரைனின் மேற்குப் பகுதி பறிபோனது. எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகள், ஜெர்மனியின் பகுதிகளாகின. 

அன்று, சோவியத் யூனியன், வெறும் நிலப் பகுதிகளை மட்டும் பறிகொடுக்கவில்லை. நிலத்தோடு சேர்த்து, கோடிக்கணக்கான பெறுமதியான தொழிலகங்களும் பறி போயின. சமாதான ஒப்பந்தம் போட்டிருக்கா விட்டால், மீண்டும் ஜெர்மனியுடன் போர் வெடித்திருக்கும். ஜெர்மனியை எதிர்த்து நிற்கும் அளவிற்கு, சோவியத் அரசிடம் பலமில்லை, என்ற நிலைப்பாட்டில் தான் அந்த ஒப்பந்தம் போடப் பட்டது. லெனினின் புரட்சிக்கு ஜெர்மனி நிதி வழங்கியது என்று குற்றம் சாட்டுவோர், அதனால் லெனின் இழந்தது எவ்வளவு என்பது பற்றிப் பேசுவதில்லை. 

எதற்காக ஒரு முதலாளித்துவ நாடான ஜெர்மனி, தனது சித்தாந்த எதிரிகளுக்கு உதவி செய்ய வேண்டும்? அதனை ஒரு சித்தாந்தப் பிரச்சினையாக, அன்றைய ஜெர்மன் அரசு கருதவில்லை. உலகில் எந்த நாட்டிலும், ஒரு சோஷலிசப் புரட்சி சாத்தியம் என்று அது நம்பவில்லை. இன்றைய உலகில், சோஷலிசம், கம்யூனிசம், புரட்சி பற்றிப் பேசுவோரை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? "இதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்ற கொள்கைகள்." என்று சொல்வார்கள். அவற்றை நம்புவோரை பைத்தியக்காரர்கள் போன்று பார்ப்பார்கள். உலகில் எந்தவொரு அரசாங்கமும், அவர்களை தனது இருப்புக்கு ஆபத்தானவர்களாக கருதுவதில்லை. 

இப்போது, ரஷ்யப் புரட்சிக்கு முந்திய உலகத்தை மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். உலகில் எங்குமே சோஷலிசப் புரட்சி ஏற்பட்ட வரலாற்றைக் கண்டிராத காலகட்டத்தில், யாராவது லெனின் போன்றவர்களை பொருட்படுத்தி இருப்பார்களா? சோவியத் யூனியன் உருவாகி பத்து வருடங்கள் ஆகியும், அங்கே சோஷலிசப் பொருளாதாரம் கொண்டு வரப் படவில்லை. "புதிய பொருளாதாரத் திட்டம்" (NEP) என்ற பெயரில், பெருமளவு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு தொடர்ந்திருந்தது. 

உலக வரலாற்றில் பல தடவைகள் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. லெனின், ஜெர்மனியிடம் இருந்து நிதி பெற்று புரட்சி செய்ததாக குற்றம் சாட்டுவோரில் சிலர், புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள் ஆவர். ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில், புலிகளுக்கு இந்தியா நிதி வழங்கியதை, அவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்தில், இந்திய அரசு புலிகளுக்கு ஆயுதம், நிதி, பயிற்சி வழங்கியது தெரிந்ததே. இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட பின்னரும், இந்திய மத்திய அரசு, கோடிக் கணக்கான ரூபாய்களை புலிகள் அமைப்பிற்கு கொடுத்திருந்தது. 2002 ம் ஆண்டு, ரணில் - பிரபா ஒப்பந்தம் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலத்திலும், ஜப்பான், நோர்வே ஆகிய மேற்குலக நாடுகள், புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கி இருந்தன. 

கியூபப் புரட்சிக்கு முன்னரும், அதற்குப் பிறகு சில வருடங்களும், அமெரிக்கா காஸ்ட்ரோ குழுவினருக்கு உதவி வழங்கிக் கொண்டிருந்தது. சேகுவேரா என்ற ஆர்ஜெந்தீன கம்யூனிஸ்ட் காஸ்ட்ரோ குழுவில் இருந்த விடயம், அமெரிக்காவுக்கும் தெரியும். ஆனால், கியூபாவில் சோஷலிசப் புரட்சி ஏற்படுவது, ஒரு  நடைமுறைச் சாத்தியமான விடயம் என்று அமெரிக்கா நம்பவில்லை. காஸ்ட்ரோவின் இயக்கமும், அன்று எந்த சந்தர்ப்பத்திலும் கம்யூனிசம் பேசவில்லை. 

அநேகமாக, காஸ்ரோ- சேகுவேரா குழுவினர், கியூபாவில் ஒரு ஜனநாயக- முதலாளித்துவ ஆட்சியை கொண்டு வருவார்கள், என்று தான் அமெரிக்கா நம்பியது. காஸ்ரோ குழுவினரும், தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அமெரிக்க நிறுவனங்களை தேசியமயப் படுத்திய பின்னர் தான், பிரச்சினை தொடங்கியது. அத்துடன் அமெரிக்காவுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப் பட்டது. கியூபா சோஷலிசப் பொருளாதாரத்தை முழு வீச்சுடன் நடைமுறைப் படுத்தியது. 

ரஷ்ய போல்ஷெவிக் கட்சியினருக்கு, ஜெர்மனி வழங்கிய நிதி உள்நோக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை. பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் கைச் சாத்திடப் பட்ட பொழுது, ஜெர்மனியின் நோக்கம் பகிரங்கமாக தெரிய வந்தது. ஆயினும், பிற்காலத்தில் ஸ்டாலின் ஆட்சியில், நாஸி ஜேர்மனியோடு நடந்த போரில், சோவியத் யூனியன் இழந்த பகுதிகள் யாவும் திரும்பப் பெறப் பட்டன. பால்ட்டிக் நாடுகள், உக்ரைனின் மேற்குப் பகுதி, பெலாரஸ் மேற்குப் பகுதி என்பன ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றப் பட்டன. 

உண்மையில், இரண்டாம் உலகப்போரின் முடிவில், சோவியத் ஒன்றியம் இழந்ததை விட அதிகமாகவே எடுத்துக் கொண்டது. முன்னாள் புருஷிய சாம்ராஜ்யத்தின் பாரம்பரிய பிரதேசமான, கேனிக்ஸ்பேர்க் (Königsberg, இன்று: காலினின் கிராட்) பகுதியும், சோவியத் வசமானது. அங்கு வாழ்ந்த ஜெர்மன் மொழி பேசும் மக்கள் அனைவரும், இன்றைய ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். அந்த மாநிலம், இன்று முழுக்க முழுக்க ரஷ்ய மயமாகி உள்ளது. ஜெர்மனியைப் பொறுத்தவரையில், இது போன்ற தோல்விகளை ஜீரணிக்கும் நிலையில் இல்லை. ஜெர்மன் பேரினவாதிகள், இழந்த சொர்க்கத்தை நினைத்து இன்றைக்கும் ஏங்குகின்றனர். 


இதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:

Wednesday, June 06, 2012

லெனினிச பார்வையில், ஈழத்திற்கான சுயநிர்ணய உரிமை

இடதுசாரிகளை, தேசியவாதிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சில 'முற்போக்கு தமிழ்த் தேசியவாதிகள்', இரண்டு நாடுகளின் உதாரணங்களை அடிக்கடி எடுத்துக் காட்டுவார்கள். லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை ஆதரித்ததையும், கார்ல் மார்க்ஸ் அயர்லாந்தின் சுதந்திரத்தை ஆதரித்ததையும் சுட்டிக்காட்டி மடக்கப் பார்ப்பார்கள். ஆகவே, இவ்விரு நாடுகளின் சுயநிர்ணய உரிமை பற்றிய மார்க்சிய- லெனினிசப் பார்வை அவசியமாகின்றது.


லெனின், மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளை எடுத்துக் காட்டி தத்துவார்த்த விளக்கம் கொடுப்பதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த காலத்திய பூகோள அரசியல் நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு தேசியத்தின் சுதந்திர உரிமையை அங்கீகரித்த லெனினும், மார்க்சும், தாம் சார்ந்த பிற தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது புறக்கணித்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? அயர்லாந்து, நோர்வேயின் சுயநிர்ணய உரிமையையும், அவர்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரித்தார்களா? இவற்றை ஆராயாமல், 'லெனின் நோர்வீஜிய தேசியத்தையும், மார்க்ஸ் ஐரிஷ் தேசியத்தையும் ஆதரித்தார்கள், ஆகவே அனைத்து இடதுசாரிகளும் தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும்,' என்று வாதிடமுடியாது.


"நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான பொருளாதார, மொழியியல் பிணைப்புகள், ரஷ்ய, ஸ்லாவிய தேசங்களைப் போல நெருக்கமானது. ஆனால், நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான ஒன்றியம், (நோர்வேயின்) விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவல்ல.... நெப்போலியனின் யுத்த காலத்தில், நோர்வே மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மன்னர்களால் நோர்வே சுவீடனுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. நோர்வேயை பணிய வைப்பதற்காக, சுவீடன் படையனுப்ப வேண்டியிருந்தது." - லெனின் (தேசங்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பாக)


போலந்து மார்க்சியவாதியும், லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டவருமான ரோசா லக்சம்பேர்க்கின் கட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் முகமாக, லெனின் அந்த பத்தியை எழுதினார். இதிலே லெனின், நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை, அந்தக் காலத்திய ஐரோப்பிய சரித்திரப் பின்னணியுடன் விளக்குவதை கவனிக்க வேண்டும். சுமார் நானூறு வருடங்கள், நோர்வே டென்மார்க் அரச பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தது. நோர்வே மக்கள் பேசிய "பழைய நோர்வீஜிய" மொழியின் மேல், டேனிஷ் மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதனை சிலர் "டேனிஷ் ஏகாதிபத்தியம்" என்று அழைக்கின்றனர்.

இன்றைக்கும், டேனிஷ் மொழி, சில திருத்தங்களுடன் நோர்வேயின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. உண்மையில், டென்மார்க்கின் கலாச்சார ஆதிக்கத்திற்கு பழக்கப் பட்ட நோர்வீஜியர்கள், சுவீடனின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பின்னரும், டென்மார்க்கின் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவரைத் தான், நோர்வேயின் மன்னனாக முடி சூட்டினார்கள். நோர்வீஜிய மத்தியதர வர்க்கத்திற்கும், டேனிஷ் மத்தியதர வர்க்கத்திற்கும் இடையிலான நெருக்கம், சுவீடிஷ் மத்தியதர வர்க்கத்துடன் இருக்கவில்லை. இத்தகைய முரண்பாடுகளையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த நெப்போலியனின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புப் போர்களும், ஐரோப்பியக் கண்டத்தின் அரசியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. டென்மார்க்-நோர்வே அணி, பிரான்சின் பக்கம் நின்றதால், நெப்போலியனின் தோல்வி, அவர்களையும் பாதித்தது. பிரிட்டன், ரஷ்யா, சுவீடன் போன்ற போரில் வெற்றி பெற்ற நாடுகள், தாம் விரும்பிய படி, தேசங்களை மறுசீரமைத்தன. அதன்படி, டென்மார்க், நோர்வேயை சுவீடனுக்கு தாரை வார்க்க வேண்டியேற்பட்டது.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், மிகவும் பின்தங்கிய வறிய நாடான நோர்வேக்கு, வேறு தெரிவு ஏதும் இருக்கவில்லை. ஒன்று, சுவீடனின் ஒரு பகுதியாக மாறுவது, அல்லது, டென்மார்க்குடன் சேர்ந்து தண்டப்பணம் செலுத்துவது. மேலும், நோர்வீஜியர்கள், சுவீடனிடம் இருந்து விடுதலை அடைவதற்கு முன்னரே, தமக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றி இருந்தனர். இதற்கென நாடு முழுவதிலும் இருந்து, நிலப்பிரபுக்களினதும், பூர்ஷுவாக்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய லெனின், சுதந்திரத்தின் பின்னர் நோர்வே குடியரசாக மாறும் என்று எதிர்பார்த்தார். ஆனால், நோர்வீஜியர்கள் முடியாட்சிக்கு உட்பட்ட பாராளுமன்ற முறையை தெரிந்தெடுத்தனர். 1917 , போல்ஷெவிக் புரட்சி நடப்பதற்கு முன்னரே, லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தார். அதே போன்று, புரட்சியின் பின்னர், ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்திற்கு சுதந்திரம் வழங்கினார். பிற்காலத்தில், இவ்விரண்டு நாடுகளும், அமெரிக்க சார்பு அணியில் சேர்ந்தமை குறிப்பிடத் தக்கது.

லெனின் எதிர்பார்த்த, பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஊக்குவிக்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, நடைமுறையில் பலிக்கவில்லை. அது லெனின் விட்ட தவறா? அல்லது நோர்வே, பின்லாந்து நாடுகளின் பாட்டாளி மக்கள் விட்ட தவறா? இதற்கான விடை, தத்துவார்த்த நடைமுறைகளை மேவும், பூகோள அரசியல் சதுரங்கம் விளையாட்டினுள் மறைந்திருக்கின்றது. அதனை, லெனினோ அல்லது கார்ல் மார்க்சோ எழுதியிருக்கப் போவதில்லை. ஏனெனில், இவை எல்லாம் சராசரி அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள். அவற்றை காலத்தால் அழியாத புரட்சிகர சித்தாந்தமாக குறிப்பிட முடியாது.

முதலாம் உலகப்போரின் முடிவில், பெர்லின் நகரில் ஜெர்மன் சோவியத் அரசமைத்த புரட்சியாளர்களுக்கு உதவும் நோக்குடன், லெனின் செம்படைகளை அனுப்பி வைத்தார். ஜெர்மனி செல்வதற்கு முன்னர், இடையில் இருந்த போலந்தில் ஒரு பாட்டாளி வர்க்க அரசை நிறுவ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், போலந்து தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பினால், லெனினின் நோக்கம் நிறைவேறவில்லை.

தேசியவாதிகளின் வலதுசாரி சார்புத் தன்மையும், வர்க்க விரோத மனப்பான்மையும், பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தடைக் கல்லாக இருக்கும் என்பதை, லெனின் மிகத் தாமதமாகத் தான் உணர்ந்து கொண்டார். அல்லா விட்டால், தேசியங்கள் குறித்த கோட்பாட்டை எழுதும் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பாரா? ஸ்டாலின் தனது சொந்த நாடான ஜோர்ஜியாவில், வலதுசாரி ஜோர்ஜிய தேசியவாதிகளை போரிட்டு அடக்க வேண்டியேற்பட்டது. ஒரு வருட காலமே பூரண சுதந்திரத்தை அனுபவித்த ஜோர்ஜியா, சோவியத் யூனியனின் குடியரசானது.

பின்லாந்து போன்று, ஜோர்ஜியாவையும் வலதுசாரித் தேசியவாதிகளின் போக்கில் விட்டிருந்தால், அங்கே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படைகளைக் குவித்திருக்கும். ஒரு தேசியத்தின் (உதாரணம்: பின்லாந்து) பூரண சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டதற்காக இடதுசாரிகளைப் புகழ்வதும், இன்னொரு தேசியத்தின் சுதந்திரத்தை (உதாரணம்: ஜோர்ஜியா) மட்டுப் படுத்தியதற்காக இடதுசாரிகளை இகழ்வதும் வாடிக்கையாகி விட்டது. ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் நோக்கம், அதனை பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசாக்குவதாகும். பின்லாந்தும், நோர்வேயும் அமெரிக்க சார்பு அணியில் இருந்தாலும், சோவியத் யூனியனுடன் சிறந்த நட்புறவைப் பேணி வந்துள்ளன.

கம்யூனிஸ்டுகளின் தேசிய சுயநிர்ணயக் கொள்கை, ஒரு குறிப்பிட்ட தேசியத்தின் மொழிக்கு, கலாச்சாரத்திற்கு எதிரானதல்ல. மாறாக, பெரும்பான்மை இனத்தின் பேரினவாத வெறி அடக்கப் பட்டு, சிறுபான்மை இனங்களின் கலாச்சார சுதந்திரத்தை உறுதிப் படுத்தியதே வரலாறு. சோவியத் யூனியனில் ரஷ்ய பேரினவாதிகள் அடக்கி வைக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவில், செர்பிய பேரினவாதிகள் வாலாட்ட முடியவில்லை. சோவியத் யூனியனில் ஜோர்ஜிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலினும், யூகோஸ்லேவியாவில் குரோவாசிய சிறுபான்மையினத்தை சேர்ந்த டிட்டோவும் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் தான் சுயநிர்ணய உரிமை கோட்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழி பொது மொழியாக இருந்தது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி பொது மொழியாக இருந்தது. ஆனால், அதற்கு காரணம் பேரினவாத அடக்குமுறை அல்ல. நாம் எவ்வாறு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அது போன்று பல்வேறு இனங்கள் தொடர்பாடக் கூடிய பொது மொழி ஒன்றின் தேவை காரணமாக இருந்தது. சோவியத் யூனியனிலும், யூகோஸ்லேவியாவிலும் சிறுபான்மை மொழி பேசும் இனங்களுக்கு வழங்கப் பட்ட சுதந்திரம், இன்று வரை அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை அழிய விடாமல் காப்பாற்ற உதவியிருக்கிறது. முதலாளித்துவம் கோலோச்சிய மேற்கத்திய நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது?

அயர்லாந்து மக்கள் தமது மொழியை மறந்து விட்டார்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆங்கில மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். நோர்வேயிலும் அது தான் நிலைமை. பழைய நோர்வீஜிய மொழி, தொலை தூரத்தில் தனித்திருக்கும் தீவான ஐஸ்லாந்தில் மட்டுமே, இன்று வரை பேசப் பட்டு வருகின்றது. இன்று டென்மார்க்கினால் ஆளப்படும் பேரோ தீவு மக்கள், டேனிஷ் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, பண்டைய நோர்வீஜிய மொழியை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பழைய நோர்வீஜிய மொழியை பேசத் தெரிந்தவர்கள் யாரும், இன்று நோர்வேயில் இல்லை. டேனிஷ் மொழி மட்டுமே பேசத் தெரிந்த தற்கால நோர்வீஜியர்கள், தமக்கென தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட சுவீடிஷ்காரரைப் போன்று வர விரும்பியதில் என்ன தவறு? லெனினின் மனதில் அத்தகைய எதிர்பார்ப்பு இருந்ததை, ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அளித்த விளக்கத்தில் பார்க்க முடிகின்றது. ரஷ்ய, ஸ்லாவிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமையை, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகளுடன் லெனின் ஒப்பிடுவதைக் கவனிக்கவும். தமிழும், மலையாளமும் போல, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகள் ஒரே வேர்களைக் கொண்டுள்ளன. லெனினின் எதிர்பார்ப்பு பிழைக்கவில்லை. சுவீடனிடம் இருந்து விடுதலை பெற்ற நோர்வே, தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.


"நோர்வீஜிய, சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை காரணமாக, நோர்வேயின் பிரிந்து செல்லும் உரிமைக்கு ஆதரவாக, சுவீடிஷ் பாட்டாளி மக்களின் ஒப்புதலைப் பெற முடிந்தது. சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், சுவீடிஷ் தேசியவாதத்தினால் பீடிக்கப் படவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகின்றது. ஸ்வீடிஷ் அரச பரம்பரை,பூர்ஷுவாக்கள் வழங்கிய சலுகைகளை விட, நோர்வீஜிய பாட்டாளி மக்களுடனான சகோதரத்துவம் உயர்வாகப் பட்டது." - லெனின்

இடதுசாரிகள், தமிழ் தேசியக் கோட்பாட்டை ஆதரிக்க வேண்டும், என்று வற்புறுத்தும் தமிழ்த் தேசியவாதிகள், லெனின் முன்மொழிந்த பாட்டாளிவர்க்க சகோதரத்துவம் என்ற நிபந்தனையை கண்டு கொள்ள மறுக்கிறார்கள். சில இடதுசாரி வேஷம் போட்ட தமிழ்த் தேசிய அபிமானிகள் கூட நுனிப்புல் மேய்கின்றனர். நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த லெனினின் கூற்றுக்களை, ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்ப்போம். பண்டைய வரலாற்றுடன் ஒப்பிட வேண்டுமானால், நோர்வேயை தமிழீழத்துடனும், சுவீடனை சிறி லங்காவுடனும், இந்திய- சோழ சாம்ராஜ்யத்தை டென்மார்க்குடனும் ஒப்பிடலாம். பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தை, நெப்போலியன் போர்களுடன் ஒப்பிடலாம்.

அந்த வகையில், சிறிலங்காவிடம் இருந்து பிரிந்து, இந்தியாவுடனும் சேராமல் தனித்து அரசமைக்க விரும்பும் தமிழீழம், தனக்கென ஒரு அரசமைப்பு சட்டத்தை எழுதியுள்ளதா? இந்தியாவுடன் அடையாளம் காண விரும்பாத, தனித்துவமான மொழி, அல்லது கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சகோதரத்துவத்தை பேணி வருகின்றதா? இது போன்ற கேள்விகள் எழுப்புவதையே விரும்பாதவர்கள் தான், இடதுசாரிகளுக்கு வகுப்பு எடுக்கின்றனர். லெனின் நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார். அதற்கான வாதங்களையும் முன் வைத்தார். ஆனால், அந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, இடதுசாரிகள் எல்லோரும் குருட்டுத்தனமாக தேசியவாதத்தை நிபந்தனை இன்றி அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது?


"ஒடுக்கப் படும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகள், ஒடுக்கும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேண வேண்டும்," என்பது, ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு மார்க்சியவாதிகள் முன்வைக்கும் நிபந்தனையாகும். ஏற்கனவே, பல சர்வதேச இடதுசாரிகள் தமிழ்த் தேசிய எழுச்சியை ஆதரித்துள்ளனர். எந்த நிபந்தனையின் பேரில், எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்த ஆதரவு வழங்கப் பட்டது, என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். "சிறி லங்கா ஆட்சியாளர்களை, பிரிட்டிஷ் நவ-காலனிய கைக்கூலிகளாகவே," சர்வதேச இடதுசாரிகள் கருதுகின்றனர். "ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானது," என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டே இடதுசாரிகள் ஆதரவு வழங்க முடியும்.

அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த மார்க்சும், நோர்வேயின் விடுதலையை ஆதரித்த லெனினும், மேலைத்தேய ஏகாதிபத்தியத்தை பலவீனப் படுத்துவதை கருத்தில் கொண்டிருந்தனர், என்பது இங்கே நினைவுகூரத் தக்கது. தொன்னூறுகளில், சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா போன்ற கம்யூனிச வல்லரசுகளை உடைக்கும் நோக்குடன், மேற்குலகம் புதிய குடியரசுகளை அங்கீகரித்தது. அதே நேரம், பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்), போன்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை நசுக்கி வந்துள்ளது. இந்த முரண்பாடுகளை, தத்துவார்த்த, அல்லது பூகோள அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியம்.