Showing posts with label நாஸிகள். Show all posts
Showing posts with label நாஸிகள். Show all posts

Saturday, January 04, 2020

நாஸிகளின் "கிரிமினல் படைப்பிரிவு"!


பொதுவாக நாஸிகள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் தான். ஆனால், நாஸிகளின் வரலாற்றில் உண்மையிலேயே ஒரு கிரிமினல்களின் படைப்பிரிவு இயங்கியது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், நாஸிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு இந்த கிரிமினல்களின் படைப்பிரிவு பெரிதும் உதவியது.

இந்த துணைப்படையின் தலைவர் Diriewanger இன் பெயரால் அந்தக் குழு அழைக்கப் பட்டது. நாசிகளே கண்டு முகம் சுழிக்கும் அளவுக்கு அந்தக் குழுவினரின் கொடூரங்கள் அமைந்திருந்தன. சாதாரண கிரிமினல்களான கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி, சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், மற்றும் மனநோயாளிகள் போன்றவர்களே இந்தப் படைப்பிரிவில் சேர்க்கப் பட்டிருந்தனர். இந்தக் குற்றங்களுக்காக சிறைத்தண்டனைஅனுபவித்தவர்கள் மன்னிப்பு வழங்கப் பட்டு துணைப்படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

இதன் தளபதி Diriewanger கூட ஒரு கிரிமினல் குற்றவாளி தான். தென் ஜெர்மனியில் Wuersburg எனும் இடத்தில் பிறந்த தீவிர வலதுசாரியான Diriewanger ஒரு பேராசியராக பணியாற்றியவன். முதலாம் உலப்போர் முடிந்த காலத்தில் எழுந்த கம்யூனிசப் புரட்சியை ஒடுக்கிய Freikorps இயக்கத்தில் இருந்தவன். அவன் 1922 ம் ஆண்டே நாஸிக் கட்சியில் உறுப்பினராக சேர்ந்திருந்த பொழுதிலும், ஒரு 13 வயது சிறுமியை சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றச்சாட்டில் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருந்தான். பிற்காலத்தில் நாஸிகளின் SS படையில் ஒரு இராணுவ ஜெனரல் நண்பராக இருந்த காரணத்தால், ஹிட்லரின் வலதுகரமாக இருந்த அமைச்சர் ஹிம்லரின் செல்வாக்கில் சேர்த்துக் கொள்ளப் பட்டான்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் நாஸிப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்ட போலந்தின் பகுதிகளில் Diriewanger தலைமையிலான கிரிமினல்களின் துணைப்படை உருவாக்கப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் கெட்டோ எனும் தனியான பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தனர். (அதற்குள் மட்டும் யூதர்கள் தாம் விரும்பிய படி வாழ அனுமதிக்கப் பட்டது.) கெட்டோவுக்குள் நுழைந்த Diriewanger கொலைப்படையினர், யூதர்களின் மதச் சம்பிரதாயமான கோஷர் முறையில் இறைச்சி தயாரிக்கும் (முஸ்லிம்கள் இதனை ஹலால் என்பார்கள்) முறையை சாட்டாக வைத்து பல யூதர்களை பிடித்துச் சென்று துன்புறுத்தினார்கள். பின்னர் பெருமளவு கப்பப் பணம் வாங்கிக் கொண்டு விடுவித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் Diriewanger குழுவினரின் கொடூரச் செயல்கள் நாசிகளையே முகம் சுழிக்க வைத்தன. ஒரு தடவை, யூதப் பெண்களை பிடித்துச் சென்று நஞ்சூட்டிக் கொல்லும் "பரிசோதனை" பற்றி ஹிட்லரிடமே முறைப்பாடு செய்யப் பட்டது. கெட்டோ குடியிருப்புகளில் பிடித்த யூதப் பெண்களுக்கு strychnine நஞ்சு செலுத்தி, அவர்கள் மெல்ல மெல்ல துடிதுடித்து இறப்பதை பார்த்து இரசிப்பார்கள். பின்னர் அவர்களது இறந்த உடல்களை துண்டு துண்டாக வெட்டி குதிரை இறைச்சியுடன் சேர்த்து சூப் தயாரித்து குடிப்பார்கள். ஹிட்லர் இது போன்ற கொடூரக் கதைகளை பற்றிக் கேள்விப் பட்டிருந்த போதிலும் Diriewanger குழுவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு மென்மேலும் சுதந்திரம் வழங்கப் பட்டது.

நாஸிகள் ஆக்கிரமித்த வெள்ளை ரஷ்யாவில் கம்யூனிச கெரில்லாக்களை அடக்குவதற்கு Diriewanger துணைப்படை பெரிதும் உதவியது. எங்காவது ஒரு கிராமத்தில் கெரில்லாத் தாக்குதல் நடத்தினால், அந்தக் கிராமத்தையே அழிப்பதற்கு முதலில் Diriewanger படையினர் தான் அனுப்பப் பட்டனர். பெண்கள், குழந்தைகள் என்று எந்தப் பாகுபாடும் காட்டாமல் கொன்று குவித்தனர். ஆயிரக்கணக்கான கம்யூனிச கெரில்லாக்கள் உயிரோடு கொளுத்தப் பட்டனர். Diriewanger குழுவினரின் கொலைவெறியாட்டம் காரணமாக, அப்போது வெள்ளை ரஷ்யாவில் மட்டும், சுமார் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப் பட்டனர்.

Diriewanger குழுவில் சாதாரண கிரிமினல்கள் சேர்க்கப் பட்டிருந்தாலும், அவர்களை மேலிடத்து உத்தரவுக்கு அடிபணிய வைப்பது சிரமமாக இருந்தது. அதனால் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட்டன. உத்தரவை மீறுவோர் சவப்பெட்டி மாதிரியான ஒரு பெட்டிக்குள் அடைக்கப் பட்டனர். அதற்குள் நாட்கணக்காக நின்ற நிலையில் இருக்க வேண்டும். அந்த சித்திரவதையை அனுபவித்த ஒருவர், பெட்டி திறக்கப் பட்டதும் ஒரு நடைப்பிணமாக அல்லது கொலைவெறியுடன் பாயக் கூடியவராக இருப்பார். இந்தக் கிரிமினல் படைபிரிவு உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றுடன் வோட்கா குடிக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள். அந்தப் போதையுடன் வெளியே செல்பவர்கள் குறைந்தது நான்கு பேரைக் கொன்று விட்டுத் தான் திரும்பி வருவார்கள்.

உலகப்போர் முடிந்த பின்னர், நேச நாட்டுப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெர்மனியில், Diriewanger வேறொரு பெயரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இருப்பினும் எப்படியோ மோப்பம் பிடித்த பிரெஞ் படையினர் தென் ஜெர்மனியில் கைது செய்து விட்டனர். தம்மோடு சேர்ந்து போரிட்ட போலிஷ் படையினரிடம் அவனை ஒப்படைத்தனர். போலிஷ் படையினர் அவனை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்பாகவே அடித்துக் கொன்று விட்டனர். முன்பு நாஸிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து வார்சோ நகரை மீட்பதற்காக நடந்த விடுதலைப் போராட்டம் நசுக்கப் பட்ட காலத்தில் Diriewanger குழுவினர் நடத்திய கொலைவெறியாட்டத்திற்கு பழி தீர்த்துக் கொண்டனர்.


Thursday, June 20, 2019

நாஸிகளுடன் ஒத்துழைத்த "யூத ஒட்டுக் குழு" பற்றிய திரைப்படம்


கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, "சவுலின் மகன்" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை விபரமாக சித்தரிக்கின்றது. போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் தடுப்பு முகாமில், யூதர்கள் வகை தொகையின்றி, நச்சு வாயு கொடுத்து படுகொலை செய்த சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்போம். இந்தத் திரைப் படம் அதனை மிகவும் விரிவாக எடுத்துக் காட்டுகின்றது என்பது, அதன் சிறப்பம்சம்.

ஜெர்மன் நாஸிகள், யூதர்களை படுகொலை செய்வதற்கு, யூதர்களையே பணியில் ஈடுபடுத்தினார்கள்! கொஞ்சம் பலசாலிகளான யூதர்களை தேர்ந்தெடுத்து, "சொன்டர் கமாண்டோ" (Sonder Kommando) என்று பெயரிட்டார்கள். தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப் படும் யூதர்களின், ஆடைகளைக் களைவது, அவர்களது உடைமைகளை வகைப் படுத்தி, தனித் தனியாக அடுக்கி வைப்பதில் இருந்து அவர்களது பணிகள் ஆரம்பமாகின்றன.

நிர்வாணமாக்கப் பட்ட யூதர்களை, நச்சு வாயு ஊட்டி கொலை செய்வது மட்டுமல்ல, சடலங்களை இழுத்துச் சென்று நிலக்கரி போட்டு எரிப்பதும், சாம்பலை ஆற்றில் கரைப்பதும், சொன்டர் கமாண்டோவின் பணிகள். இறந்த யூதர்களின் உடல்களை இழுத்துச் சென்று ஓரிடத்தில் குவித்து வைக்க வேண்டும். நச்சு வாயுக் குளியல் நடந்த இடத்தில், நிலத்தை சுத்தம் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்களை, வேறெந்த திரைப்படமாகிலும் இந்தளவு விபரமாக எடுத்துக் காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

திரைப்படத்தின் கதை மிகச் சிறியது. அவுஷ்வித்ஸ் முகாமில், சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும், ஹங்கேரி நாட்டை சேர்ந்த சவுலின் மகனும் நச்சு வாயு ஊட்டி படுகொலை செய்யப் படுகிறான். தனது மகனின் உடலை, யூத மத அனுஷ்டானங்களின் படி, அடக்கம் செய்ய வேண்டும் என்பது சவுலின் விருப்பம். அதனால், சடலங்களை பரிசோதிக்கும் மருத்துவர் (மருத்துவர்களும் யூதக் கைதிகள் தான்) ஒருவரின் உதவியுடன், மகனின் சடலத்தை தனது வதிவிடத்தில் மறைத்து வைக்கிறான்.

சொன்டர் கமாண்டோக்களில் யூத ராபி (மத குரு) இருக்கிறாரா என்று, சவுல் பல இடங்களிலும் தேடுகிறான். ஆனால், ராபிக்கள் யாரும் தம்மை அடையாளப் படுத்த அஞ்சுகின்றனர். இறந்த யூதர்களின் சாம்பலை ஆற்றில் கரைக்கும் இடத்தில், ஒரு கிரேக்க யூத ராபியை கண்ட சவுல், அவரை தன்னோடு வருமாறு கெஞ்சுகிறான். ஆனால், அவர் எதுவும் பேசாமல், தான் அடையாளம் காணப் பட்டதால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அசம்பாவிதம் நடக்கும் இடத்திற்கு வரும் நாஸி இராணுவ அதிகாரி, அந்த ராபியை சுட்டுக் கொல்கிறான்.

இறுதியில், எரிப்பதற்காக கொண்டு செல்லப் பட்ட பிரெஞ்சு யூதர்களில் ஒரு ராபியை கண்டுபிடித்த சவுல், அவரை தன்னோடு வருமாறு கூட்டிச் செல்கிறார். நாஸிகளின் கெடுபிடிகளை மீறி, சொன்டர் கமாண்டோக்கள் தாங்கும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும், அங்கே வரும் பிற யூத பணியாளர்கள், சவுலின் மகனின் பிரேதம் கிடப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அப்போது "எங்களை எல்லாம் கொல்லப் பார்க்கிறாய்..." என்று சொல்லும் பொழுது, "நாங்கள் எப்போது இறந்து விட்டோம்..." என்று சவுல் பதில் கூறுகின்றான்.

அதே நேரம், நாஸிகளுக்கு எதிரான ஆயுதமேந்திய எழுச்சிக்கு, பிற சொன்டர் கமாண்டோக்கள் தயாராகிறார்கள். அவர்களுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வந்து சேருகின்றன. ஒரு தருணத்தில், தங்களில் ஒருவனை நாஸிகள் எரித்து விட்டார்கள் என்று அறிந்த சொன்டர் கமாண்டோக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்.

முகாமில் ஆயுத மோதல் நடக்கிறது. அங்கு நடக்கும் கலவரத்தை பயன்படுத்திக் கொண்டு, சவுல் தனது மகனின் சடலத்தை தூக்கிக் கொண்டு, ராபியுடன் தப்பி ஓடுகின்றான். காட்டுப் பகுதி ஒன்றில், மத அனுஷ்டானங்களுடன் சிறுவனின் சடலத்தை புதைக்கும் முயற்சி தோல்வியடைகின்றது.

ஏனெனில், முகாமை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நாஸி படையினரிடம் இருந்து தப்பியோடும், சொன்டர் கமாண்டோக்கள் அந்த வழியாக வருகின்றனர். ஓர் ஆற்றைக் கடக்கும் நேரம், சவுல் தனது மகனின் சடலத்தை பறிகொடுக்கிறான்.

காட்டுக்குள் இன்னும் சில மைல் தூரம் ஓடினால் போதும். அப்போது, ஏற்கனவே போலந்தின் சில பகுதிகளை விடுதலை செய்து விட்ட, சோவியத் செம்படையினரிடம் தஞ்சம் கோரலாம். இல்லாவிட்டால், காடுகளுக்குள் மறைந்திருக்கும் கெரில்லாக் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.

ஓடி வந்த களைப்பில், சவுலும், யூத கிளர்ச்சியாளர்களும் ஒரு குடிசைக்குள் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால், வேட்டை நாய்களுடன் வரும் நாஸி படையினர், அந்த இடத்தை அண்மித்து விடுகின்றனர். இறுதியில் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் படுவதுடன் படம் முடிவடைகின்றது.

யூதர்களை அழித்தொழிக்கும் பணிக்கு, நாஸிகளால் ஈடுபடுத்தப் பட்ட சொன்டர் கமாண்டோக்களின் வரலாறு ஏற்கனவே தெரிந்த விடயம் தான். உண்மையில், அவர்களது ஆயுட்காலமும், வேலை செய்யும் சிறிது காலம் தான் நீடித்தது. தேவை முடிந்தவுடன், நாஸிகள் அவர்களையும் கொன்றனர்.

நாஸிகளின் காட்டாட்சியில் நடந்த கொடூரங்களை விரிவாக எடுத்துரைக்கும் இந்தத் திரைப்படம், வெளியில் அதிகம் அறியப் படாத பக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும் யூதர்கள், தமது சொந்த இனத்தவர்களை எரிக்கும் பொழுது, எந்தளவு வேதனையுடன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருப்பார்கள்? படத்தில் ஓரிடத்தில் கதாநாயகன் சொல்வதைப் போன்று, "எப்போதோ இறந்து விட்ட", நடைப்பிணமாகத் தான் வாழ்ந்திருப்பார்கள்.

இரண்டாம் போரின் முடிவில் இனப்படுகொலையில் அகப்படாமல் உயிர் தப்பிய யூதர்களில் பலர், நாஸிகளுடன் ஒத்துழைத்த "சொன்டர் கமாண்டோக்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின்  படையினர் அவர்கள் மீது அனுதாபம் காட்டவில்லை.  அந்த யூதர்களை நாஸிகளின் ஒட்டுக் குழுவாகவே கருதினார்கள். அதனால் சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது.


Saturday, March 30, 2019

"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்" - இது ஒரு ஜெர்மன் கதை!

இது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: 
  • அரசியல் படுகொலைகள். 
  • இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். 
  • ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். 
  • ஏக‌ பிர‌திநிதி உரிமை கோர‌ல். 
  • தேசியவாத கொள்கை உட‌ன்பாடு கொண்ட‌ பிற‌ இய‌க்க‌ங்க‌ள் மீதான‌ த‌டை. 
  • ஏக பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாத மாற்று இயக்கத்தவர் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை. 

இவை இருப‌துக‌ளில், முப்ப‌துக‌ளில் ஜேர்ம‌ன் வ‌ர‌லாற்றில் இட‌ம்பெற்ற‌ அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ள் அல்ல‌து ச‌ம்ப‌வ‌ங்க‌ள். ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இன்றைய உலக நடப்புகளை நினைவுபடுத்துகின்றன. இந்தத் தகவல்கள் வெளியுலகில் அதிகமாக அறியப் படவில்லை.

முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி தனது ஜென்ம விரோதியான பிரான்சிடம் தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், நட்பு நாடுகளுடன் சேர்ந்து சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு ஜெர்மனியை அழைத்தது. பிரான்சில் வெர்சேய் எனும் இடத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு சென்ற ஜெர்மன் அரசுப் பிரதிநிதிகள், புகையிரதம் மூலம் அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்கள் போகும் வழியில் இருந்த பிரெஞ்சுக் கிராமங்களில் ஜெர்மன் படைகள் நடத்திய பேரழிவுகளை பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

சமாதான ஒப்பந்தம் கூட வெற்றி பெற்ற நாடுகளின் உத்தரவுகளுக்கு அடிபணிவதாகத் தான் எழுதப் பட்டிருந்தது. உதாரணத்திற்கு சில: ஜெர்மனி பில்லியன் டாலர் கணக்கான பணத்தை வெற்றி பெற்ற நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். ஜெர்மனி தனக்கென இராணுவம், விமானப்படை எதுவும் வைத்திருக்க முடியாது. அல்சாஸ், லொரேன் ஆகிய மாகாணங்களை பிரான்ஸிற்கு கொடுக்க வேண்டும். அதைவிட ஜெர்மனிக்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தந்த நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப்படும். ஜெர்மனிக்கு சொந்தமான ஆப்பிரிக்க காலனிகளை பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மேற்படி சமாதான ஒப்பந்தம் அந்நியருக்கு தேசத்தை அடமானம் வைக்கும்செயல் என்பது தெரிந்த போதிலும், ஜெர்மன் அரசுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திட மறுத்தால் மீண்டும் போர் மூண்டு ஜெர்மனி முழுவதும் ஆக்கிரமிக்கப் படும் அபாயம் இருந்தது. அதற்கு மாறாக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், தேசத்தை மறுசீரமைப்பதற்கு சிறிது கால அவகாசம் கிடைக்கும். இதனால் ஜெர்மன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.

தற்போது ஜெர்மன் அரசுக்கு புதிய நெருக்கடிகள் உருவாகின. அதுவரை காலமும் அரசுக்கு விசுவாசமாக போரிட்டு வந்த தேசியவாத இராணுவ அதிகாரிகள் இதை மிகப் பெரிய துரோகமாகப் பார்த்தனர். "அந்நியருக்கு நாட்டை அடகு வைத்த ஜெர்மன் இனத் துரோகிகள்" மீதான வெறுப்புணர்வு அன்று சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவி இருந்தது. இத்தகைய பின்னணியில், தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி இருந்தன. முதல் கட்டமாக, "இனத் துரோகிகளை களையெடுப்பது" அந்த தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக இருந்தது.

நாஸிகளின் SA இயக்கம் மட்டுமல்லாது, Stahlhelm, Jungdo என்று பல தீவிர தேசியவாத இயக்கங்கள் இரகசியமாக இயங்கி வந்தன. அவற்றின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையாளும் பயிற்சி பெற்றிருந்தனர். பல இடங்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. பவாரியா மாநிலத்தின் பொலிஸ் மா அதிபர், வலதுசாரி தீவிரவாதக் குழுக்களை ஆதரித்த படியால், அங்கிருந்து தான் பல அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன.

முதலாம் உலகப்போரின் முடிவில் ரஷ்யா மாதிரி, ஜெர்மனியிலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடித்தது. ஆனால், ஜெர்மன் அரசு Freikorps எனும் கூலிப்படையை அனுப்பி புரட்சியை நசுக்கியது. அதன் பிறகு, கம்யூனிஸ்டுகள் நீண்டதொரு ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்த படியால் அரசுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அதற்கு பதிலாக, தீவிர வலதுசாரி- தேசியவாதிகள் மத்தியில் இருந்து அரசுக்கு அச்சுறுத்தல் வந்தது.

ஒரு காலத்தில் அரசின் கூலிப்படையாக செயற்பட்ட Freikorps படையினர், திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றுப் போயினர். அதன் விளைவாக, Freikorps தடைசெய்யப் பட்ட படியால்,OC என்றொரு இரகசிய இயக்கம் உருவாக்கப் பட்டது. சுருக்கமாக OC என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் பெயர் "அமைப்புக் குழு". தேசப்பற்று, வெர்சேய் ஒப்பந்த எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு, இனவுணர்வு போன்றவற்றை கொள்கைகளாக கொண்டிருந்த OC இயக்கம், அரசியல் படுகொலைகள் மூலம் தனது இலக்கை அடைய எண்ணியது.

அவர்கள் ஜெர்மன் இனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், துரோகிகளை களையெடுப்பது அவசியம் என்று கருதினார்கள். பண்டைய ஜெர்மன் சொல்லான பெமே(Feme) என்ற சொல்லின் மூலம் தமது செயல்களை நியாயப் படுத்தினார்கள். பண்டைய ஜெர்மன் சமுதாயத்தில் காணப்பட்ட பெமே நீதிமன்றம், நம்மூர் பஞ்சாயத்து போன்றது. அங்கு வரும் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப் படும். அவை சிலநேரம் கொடூரமான தண்டனைகளாகவும் இருக்கலாம். அது மாதிரி, "துரோகிகளுக்கு மரணதண்டனை" என்பது தான் OC அமைப்பினரின் கோஷமாக இருந்தது.

1921 - 1922 ஆகிய இரண்டு வருடங்களுக்குள், ஜெர்மனியில் 350 க்கும் மேற்பட்ட "எதிரிகள்" அல்லது "துரோகிகள்" OC இயக்கத்தால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று பலர் OC வன்முறைக்கு பலியானார்கள். அவர்களில் சிலர் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள். சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கம்யூனிசப் புரட்சியில் பங்கெடுத்த USPD தலைவர்கள் இருவர் தெருவில் சுட்டுக் கொல்லப் பட்டனர். USPD என்பது, அன்று ஆளும் கட்சியாக இருந்த சமூக ஜனநாயகவாத SPD இலிருந்து பிரிந்த மார்க்சியவாத குழுவினர் ஆவர்.

அதைவிட சில வலதுசாரி அரசியல்வாதிகளும், வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியானார்கள்! அவர்களில் ஒருவர் மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர்(Mathias Erzberger). கத்தோலிக்க மதப்பற்றாளர். (வலதுசாரி) மத்திய கட்சியின் தலைவர். அவர் போருக்கு எதிராக குரல் கொடுத்த படியாலும், சமாதான தீர்வுத் திட்டத்தை ஆதரித்த படியாலும், தீவிர ஜெர்மன் தேசியவாதிகளால் ஒரு துரோகியாகக் கருதப் பட்டார். அவர் தனது நண்பருடன், மலைப் பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த இரண்டு கொலையாளிகளும் வேறு பெயரில் போலிப் பாஸ்போர்ட் செய்து ஹங்கேரிக்கு சென்று பதுங்கி இருந்தனர்.

இருப்பினும், OC வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியான இன்னொரு வலதுசாரி அரசியல்வாதியின் படுகொலை அதுவரை காலமும் நடந்து கொண்டிருந்த அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரபல தொழிலதிபராகவும் அமைச்சராகவும் இருந்த வால்டர் ராதேனவ் (Walther Rathenau) வெர்சேய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமைக்காக தீர்த்துக் கட்டப்பட்ட "துரோகிகளில்" முக்கியமானவர். அத்துடன் அவர் ஒரு பணக்கார யூதராகவும் இருந்த படியால் மேலதிக வெறுப்புக்கு ஆளாகி இருந்தார்.

ராதேனவ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பெரும் பணம் சம்பாதித்து இருந்தாலும், அவரது அரசியல் இடதுசாரி தன்மை கொண்டதாக இருந்தது. தானும் ஒரு முதலாளி என்ற மமதை இன்றி, நலன்புரி அரசை உருவாக்கி அடித்தட்டு மக்களையும் முன்னேற்றும் வகையில் செல்வத்தை பங்கிட விரும்பியவர். இதற்காக பணக்காரர்கள் மீது அதிகளவு வரி விதிக்கும் திட்டத்தையும் முன்மொழிந்தார். ஐரோப்பிய சந்தைகளை ஒன்று சேர்க்கும் பொருளாதார ஒன்றியம் பற்றிய சிந்தனை கூட அவரிடம் இருந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. அத்தகையதொரு அரசியல்வாதி அன்றைய ஜெர்மன் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததில் வியப்பில்லை.

ஒரு நாள், பெர்லின் நகரில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள தெருவொன்றில், காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் ராதேனவ்  சுட்டுக் கொல்லப் பட்டார். பட்டப் பகலில் இன்னொரு காரில் இருந்த படியே பிஸ்டலால் சுட்டுக் கொன்ற கொலையாளிகள், சம்பவத்தை கண்டு அங்கு கூடிய மக்கள் வெள்ளத்திற்குள் கலந்து தப்பிச் சென்று விட்டனர். ராதேனவ் கொலை செய்யப்பட செய்தி நாடு முழுவதும் எதிரொலித்தது. பெர்லின் நகர மத்தியில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜெர்மன் மக்களின் எதிர்ப்புணர்வு தங்களுக்கு எதிராக திரும்பி இருப்பதை கண்டுகொண்ட கொலையாளிகள் வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சித்தார்கள். அது நிறைவேறாத படியால், தீவிர வலதுசாரி நண்பர்களின் வீடுகளில் அடைக்கலம் கோரினார்கள். ஆனால், யாருமே அவர்களுக்கு உதவவில்லை. அவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இலட்சக்கணக்கான பணம் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனால் ஊருக்குள் செல்லப் பயந்து காடுகளுக்குள் சுற்றித் திரிந்தார்கள்.

இறுதியில் ராதேனவ் கொலையாளிகள் ஹல்லே நகருக்கு அருகில் இருந்த பாழடைந்த கோட்டை ஒன்றுக்குள் ஒளிந்திருந்தனர். அந்த இடத்தில் வெளிச்சத்தை கண்ட ஊர் மக்கள் பொலிசிற்கு அறிவித்து விட்டனர். அதையடுத்து பெரும் பொலிஸ் படை வந்து கோட்டையை முற்றுகையிட்டது. தாம் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கொலையாளிகள் துப்பாக்கியுடன் வெளியே வந்து, அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் அரசியல் கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து பொலிசாருடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். ஒருவன் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானான். மற்றவன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான்.

இந்தச் சம்பவம் நடந்து பதினொரு வருடங்களுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். நாஸிகள் அந்த இரண்டு கொலையாளிகளையும் "தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள்" என்று கௌரவித்தனர். அவர்கள் கொல்லப் பட்ட கோட்டையில், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நினைவுகூரும் வைபவம் நடைபெற்றது. ஹிட்லரின் அரசில் அமைச்சராக இருந்த ஹிம்லர், "மாவீரர்களின்" சமாதியில் மலர் வளையம் வைத்து விட்டு உரையாற்றினார். "தாயகத்திற்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களின் தியாகம் வீண்போகவில்லை என்றும், தற்போதைய ஜெர்மன் தேசிய இராணுவத்தினர் அவர்களது ஆன்மாவை கொண்டிருப்பதாகவும்" புகழாரம் சூட்டினார்.

முப்பதுகளின் தொடக்கத்தில், அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியையும் பாதித்தது. முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் கூட எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத ஜெர்மன் பணக்கார வர்க்கத்தினர், நிதி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். பலரது செல்வம் ஒரே நாளில் மறைந்து ஏழைகள் ஆனார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜெர்மனியில் பல்வேறு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போராடின.

ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகளின் இடதுசாரி சிவப்பு முன்னணிப் படையினர் மீண்டும் தெருக்களில் நடமாடினார்கள். ஹிட்லரின் கீழ் இயங்கிய SA, மற்றும் பல வலதுசாரி ஆயுதக் குழுக்கள், ஒரு பக்கம் சிவப்பு முன்னணிக்கு எதிராகவும், மறுபக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். இந்தத் தருணத்தில் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்ற நாஸிக் கட்சியை அரசமைக்க வருமாறு ஜெர்மன் ஜனாதிபதி அழைத்தார்.

ஹிட்லர் தேர்தல் ஜனநாயகப் பாதையில் தெரிவுசெய்யப் பட்டிருந்தாலும், அதிகாரத்தை கைப்பற்றியவுடன் பிற கட்சிகள் அனைத்தையும் தடை செய்தார். அதே நேரம் நாஸிக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் நிலவின. நீண்ட காலமாக தனித்து இயங்கி வந்த பல்வேறு வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் நாஸிக் கட்சியுடன் பொது உடன்பாட்டைக் கொண்டிருந்தாலும் ஒரே கட்சியாக கலந்து விடவில்லை. குறிப்பாக, பழைய Freikorps உறுப்பினர்கள் ஹிட்லரின் தலைமையை ஏற்க மறுத்தனர்.

அதுவரை காலமும் ஜெர்மனியில் இருந்து வந்த ஜனநாயக அமைப்புகள், தேர்தல்கள் எல்லாவற்றையும் நாஸிகள் தடைசெய்து விட்டனர். ஜனாதிபதி, பிரதமர் முறைமை ஒழிக்கப் பட்டு, ஹிட்லர் தேசியத் தலைவர் (Führer) ஸ்தானத்திற்கு உயர்த்தப் பட்டார். நாஸிகள் மட்டுமே ஜெர்மன் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், ஹிட்லர் மட்டுமே ஜெர்மனியரின் தேசியத் தலைவர் என்பதையும், ஏனைய தேசியவாத அமைப்புகள் ஏற்றுக் கொள்ள மறுத்தன.

"நீளமான கத்திகளின் இரவு" (Nacht der langen Messer, 30 June - 2 July 1934) என்று அழைக்கப்படும் நாட்களில் ஹிட்லரின் தலைமைத்துவத்திற்கு சவாலாக விளங்கிய மாற்று இயக்கத்தினர் களையெடுக்கப் பட்டனர். அவர்கள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதாக குற்றம் சுமத்தப் பட்டது. மாற்று இயக்கத் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள், ஹிட்லரின் கையாட்களால் வீடு வீடாக தேடிச் சென்று தீர்த்துக் கட்டப் பட்டனர். குறைந்தது நூறு பேராவது அன்று நடந்த களையெடுப்பில் கொல்லப் பட்டனர்.

ஜெர்மன் தேசியவாதம் ஹிட்லருடன் தொடங்கவில்லை. ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன. தேசாபிமானம், இனவுணர்வு போன்ற கொள்கை அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை கொண்டிருந்தன. தேர்தல் அரசியலில் மட்டுமல்லாது, ஆயுத வன்முறைகளிலும் ஈடுபட்டன. அரசியல் படுகொலைகளை புரிந்தன.

நாஸிகள் அல்லாத ஏனைய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆயுதப் போராட்டம் தனிநபர் பயங்கரவாதம் என்ற அளவில் தான் இருந்தது. அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஜெர்மன் தேசியத்தின் பேரில் போராடிய பல நூறு இளைஞர்களின் தியாகங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் ஹிட்லர் மட்டும் தான். SA, OC போன்ற வலதுசாரி தீவிரவாதக் குழுக்களின் போராட்டங்களின் விளைவாகாத் தான் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார். 

அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை தமது மீட்பராகக் கண்ட பல்வேறு  வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள், ஹிட்லரின் நாஸிக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆர்வம் காட்டின. அவற்றிற்கு இடையில் ஐக்கிய முன்னணி கூட ஏற்பட்டிருந்தது. ஆனால், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து ஜெர்மன் மக்களுக்கும் தானே தேசியத் தலைவர், தனது நாஸி கட்சியே ஏக பிரதிநிதிகள் என்றும் அறிவித்துக் கொண்டார். அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களை துரோகிகளாக்கி தீர்த்துக் கட்டினார். காலப்போக்கில் அதையெல்லாம் மறந்து விட்ட ஜெர்மன் மக்கள், ஹிட்லரை தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

இது ஒரு ஜெர்மன் கதை.

Wednesday, April 04, 2018

கட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன?

இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில், இருபதாயிரம் போலிஷ் இராணுவத்தினர் கட்டின் என்ற காட்டுப் பகுதியில் கொன்று புதைக்கப் பட்ட விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. இது பற்றி ஏற்கனவே ஒரு பக்கச்சார்பான ஹாலிவூட் திரைப்படமும் வெளியாகி உள்ளது.

வழமையாக, ஸ்டாலினின் படுகொலைக் கணக்கில் வரவு வைக்கப் படும் கதைகளில் இதுவும் ஒன்று. தமிழர்களிலும் சிலர், குறிப்பாக, நவ- நாஸிகள், தமது மேற்கத்திய எஜமானர்களின் பணிப்புரைக்கு ஏற்றவாறு திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆகவே, கட்டினில் (Katyn: சரியான போலிஷ் மொழி உச்சரிப்பு "கட்டின்", கேய்டின் அல்ல.) நடந்தது என்ன என்பதை, தமிழ் பேசும் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. அதற்காக, வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுமுள்ளது.

1939 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி அயல்நாடான போலந்தின் மீது படையெடுத்தது. அதற்கு முன்னர், செக்கோஸ்லாவாக்கியா ஜெர்மனியின் வசமாகி இருந்தது. அப்போது மேற்கைரோப்பிய வல்லரசு நாடுகளான பிரித்தானியாவும், பிரான்ஸும் செக்கோஸ்லாவாக்கியா மீதான படையெடுப்பை கண்டுகொள்ளவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லின், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி எடுவார்ட் டலாடியே ஆகியோர் ஏற்கனவே ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டிருந்த படியால் ஹிட்லரின் ஆக்கிரமிப்புப் பசிக்கு மௌனமான அங்கீகாரம் வழங்கி இருந்தனர்.

ஆனால், போலந்து மிகவும் சிக்கலான விடயமாக இருந்தது. போலந்து அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் இடையில் இராணுவ ஒப்பந்தம் போடப் பட்டிருந்தது. அதன் அர்த்தம் போலந்து தாக்கப் பட்டால் பிரான்ஸ் உதவிக்கு வர வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. நாஸி இராணுவம் போலந்து மீது படையெடுத்த நேரம், பிரான்ஸ் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருந்தது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஆகவே, பிரான்ஸ், பிரித்தானியாவின் துரோகத்தை மூடி மறைக்கும் நோக்கில், இன்று மீண்டும் கட்டின் படுகொலை விவகாரம் பரப்புரை செய்யப் படுவதாக எண்ண இடமுண்டு.

இதிலே இன்னொரு துரோகமும் இடம்பெற்றிருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் பகுதியாகவிருந்த டான்சிக் (தற்போது: Gdansk,கிடான்ஸ்க்)போலந்தின் பெயரில் ஐ.நா. சபையால் நிர்வகிக்கப் பட்டது. (அப்போது அதற்கு வேறு பெயர். இலகுவான புரிதலுக்காக "ஐ.நா." என்ற சொற்பதம் பயன்படுத்தி உள்ளேன்.) பால்டிக் கடல் துறைமுக நகரமான டான்சிக்/கிடான்ஸ்க் தனியான பிரதேசமாக சர்வதேச நிர்வாகத்தின் கீழ் இருந்தது. ஹிட்லரின் படைகள் தாக்குதல் நடத்தி, அந்த நகரத்தை கைப்பற்றும் வரையில் ஐ.நா. பேசாமல் இருந்தது.

முதலாம் உலகப்போரின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப் படுவதையும், மேற்கத்திய வல்லரசுகள் பாராமுகமாக இருப்பதையும், சோவியத் யூனியன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அத்துடன் பிரித்தானியாவும், பிரான்ஸும் நாஸி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்த பின்னர், எஞ்சியுள்ள ஒரேயொரு எதிரி சோவியத் யூனியன் மட்டும் தான். போலந்து மீது படையெடுத்த ஜெர்மன் படைகள், அடுத்ததாக சோவியத் யூனியனுக்கும் வராதென்பதற்கு என்ன நிச்சயம்?

அன்றைய சூழ்நிலையில், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்வது தவிர்க்க முடியாதது. அத்துடன் ஜெர்மனியின் எதிர்கால படையெடுப்பை தடுப்பதற்காக, போலந்தை ஒரு பாதுகாப்பு அரணாக மாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது. உலக வரலாற்றில் இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 19 ம் நூற்றாண்டில், சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் ஈடுபட்ட ரஷ்யாவும், பிரித்தானியாவும் ஆப்கானிஸ்தானை எல்லையாக பயன்படுத்திக் கொள்ள இணக்கம் கண்டன.

அந்த வகையில், முந்திய ஜார் மன்னனின் சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த, முதலாம் உலகப்போர் முடிவில் பறிகொடுத்த போலந்துப் பிரதேசத்தின் மீது படையெடுத்த சோவியத் யூனியன் அதை இணைத்துக் கொண்டது. அன்றிருந்த போலந்தின் ஆட்சியாளர்கள் தீவிர தேசியவாதிகள். கத்தோலிக்க மதவாதிகள். அந்நாட்டு தேசிய இராணுவமும் போலிஷ் இனவெறியூட்டப் பட்டிருந்தது. ஆகையினால், சோவியத் படைகள் கைப்பற்றிய போலந்துப் பிரதேசத்தில் இருந்த போலிஷ் இராணுவத்தினர் ஒருவர் விடாமல் கைது செய்யப் பட்டனர். ஆயிரக் கணக்கான போலிஷ் இராணுவ அதிகாரிகள், போர்வீரர்கள் பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப் பட்டனர்.

அந்தப் பிரதேசம் மிகக் குறுகிய காலமே சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு வருடத்திற்குள் நாஸி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது போர்ப் பிரகடனம் செய்தது. திடீரென நடந்த அதிரடித் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத சோவியத் செம்படை பின்வாங்கிக் கொண்டிருக்க, அந்த இடங்களை ஜெர்மன் நாஸிப் படை கைப்பற்றியது. பிளிட்ஸ் கிரீக் (Blitz krieg) எனப்படும் மின்னலடிப் போரில் ஜெர்மன் படைகள் போலந்தையும் தாண்டி சோவியத் யூனியனுக்குள் பிரவேசித்திருந்தன.

நிலைமை மோசமடைவதை உணர்ந்து கொண்ட சோவியத் செம்படையினர், தாம் ஏற்கனவே பிடித்து அடைத்து வைத்திருந்த போலிஷ் இராணுவ வீரர்களை விடுதலை செய்தனர். அவர்களை தம்முடன் சேர்ந்து போராட வருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக போலிஷ் துணைப் படை ஒன்றும் அமைக்கப் பட்டது.

இதற்கிடையில், லண்டனில் இருந்த "நாடு கடந்த போலிஷ் அரசு" மாறிவரும் போர்ச் சூழல் கருதி சோவியத் யூனியனை நட்பு நாடாகக் கருத வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தது. அப்படியானதொரு நிலைமையில், சோவியத் செம்படையினர் தம்மிடமிருந்த இருபதாயிரம் போலிஷ் இராணுவவீரர்களை கட்டின் காட்டுக்குள் கொண்டு சென்று ஆறுதலாக சுட்டுக் கொன்றனர் என்றால் நம்ப முடிகின்றதா? அதுவும் இதற்காக இரண்டு நாட்கள் ரயிலில் கொண்டு சென்று, ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் நகருக்கு அருகில் இருந்த காட்டுக்குள் சுட்டுக் கொன்று புதைத்தனர் என்கிறார்கள்.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. 13-4-1943 அன்று, நாஸி ஜெர்மனி சர்வதேச ஊடகங்களை அழைத்து பின்வரும் தகவலை தெரிவித்தது. தமது படையினர் கைப்பற்றிய கட்டின் காட்டுப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அங்கு புதைக்கப் பட்டவர்கள் போலிஷ் வீரர்கள் என்றும் அறிவித்தனர். அதற்கு ஆதாரமாக போலிஷ் இராணுவ சீருடைகளையும் காட்டினார்கள். அன்று, "ரஷ்யப் படைகளால் நிகழ்த்தப் பட்ட போர்க்குற்றம்" என்று நாஸி ஜெர்மனி வழங்கிய தகவலைத் தான் இன்று வரையில் பலர் காவித் திரிகின்றனர்.

சர்வதேச சமூகத்தின் மத்தியில், நாஸிகள் தெரிவித்த "கட்டின் மனிதப் புதைகுழிகள்" என்ற அறிவிப்பு எதிர்பார்த்த பலனைத் தந்தது. அதாவது, சர்வதேச ஊடகங்கள் இதை பரபரப்பு செய்தியாக்கியதன் மூலம், நாஸிகள் எதிர்பார்த்த பிரச்சார வெற்றி கிடைத்தது. அதிலும், தீய வழியில் புகழ்பெற்ற நாஸி ஜெர்மனியின் அமைச்சர் கெபெல்ஸ் (சிலர் அதை கோயபல்ஸ் என்று தமிழில் உச்சரிக்கிறார்கள்.) பொய் சொல்வதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்தவர்.

நாஸிகளின் அழைப்பை ஏற்று கட்டின் மனிதப் புதைகுழிகளுக்கு சென்று ஆராய்ந்த மேற்கத்திய தடயவியல் அறிஞர்கள், அந்தக் குற்றத்தை இழைத்தவர்கள் ரஷ்யர்களா அல்லது ஜெர்மனியர்களா என்பதை தம்மால் உறுதிப் படுத்த முடியாதுள்ளது என்றனர். மேலும், அது சமீபத்தில் தோண்டப்பட்ட புதைகுழிகளாக காணப் பட்டதாகவும் தெரிவித்தனர். அதன் அர்த்தம், நாஸிப் படைகளே போலிஷ் இராணுவ வீரர்களை கொன்று புதைத்து விட்டு சோவியத் யூனியன் மீது பழி போட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டது. அதற்கான காரணங்களும் வெள்ளிடை மலையாக தெரிகின்றன.

ஹிட்லரின் இனவாதக் கோட்பாட்டின் படி, போலிஷ் இனத்தவர்கள் "உன்ட்டர் மென்ஷன்"(Untermenschen- தாழ்ந்த மக்கள்) என இழிவாகக் கருதப் பட்டனர். போலந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் இனவெறிப் படையினர் கண்ணில் கண்ட போலிஷ் காரர்களை வகை தொகையின்றி கொன்று குவித்தனர். அதற்காக அவர்கள் வருந்தவில்லை. மேலும் போலந்தை ஜெர்மனியர்களின் காலனி ஆக்குவதும் ஹிட்லரின் நோக்கமாக இருந்தது. அதை "லேபென்ஸ் ரவும்"(Lebensraum- வாழிடம்) என்று நாஸிகள் நியாயப் படுத்தினார்கள்.

வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த  செவ்விந்திய மக்களை வகைதொகையின்றி படுகொலை செய்த இடங்களில், குடியேறிய ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதே மாதிரி, போலந்தில் வாழும் போலிஷ் மக்களை படுகொலை செய்து ஒழித்துக் கட்டி விட்டு, அந்தப் பிரதேசங்களை ஜெர்மனியுடன் இணைப்பதே ஹிட்லரின் குறிக்கோளாக இருந்தது. கட்டின் படுகொலைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலி மனிதாபிமானவாதிகள், நாஸிகளால் கொல்லப் பட்ட கோடிக்கணக்கான போலிஷ் மக்களை கண்டுகொள்ளாத மர்மம் என்ன? அதைச் சொல்வதால் தமக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதாலா?

பனிப்போர் காலம் முழுவதும் கட்டின் படுகொலைகளுக்கு காரணம் நாஸி ஜெர்மன் படைகள் என்றே வெளியுலகில் நம்பப் பட்டது. பலர் அதை யார் செய்தது என்று நிரூபிக்க முடியாது என்ற நிலையெடுத்தனர். தொண்ணூறுகளுக்கு பிறகு தான் கட்டின் படுகொலை விவகாரம் மறுபடியும் சூடு பிடித்தது. போலந்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய போலிஷ் தேசியவாத சக்திகள், ரஷ்யாவை பகை நாடாக காட்டத் தொடங்கின. இந்திய-பாகிஸ்தான் பகைமை மாதிரி, போலந்து - ரஷ்யாவுக்கிடையிலான பகைமைக்கும் நீண்ட வரலாறுண்டு. அந்த வகையில், போலிஷ் மக்கள் மனதில் இன வெறுப்பை உண்டாக்கும் நோக்கில், ஒவ்வொரு வருடமும் கட்டின் படுகொலை நினைவுகூரப்படுகின்றது.

Saturday, January 14, 2017

"நாஸிகளும் தேசியவாதிகளே!" வலதுசாரி பயங்கரவாதிகள் பற்றிய ஆவணப்படம்



ஐரோப்பாவை பொருத்த‌வ‌ரையில் தேசிய‌வாத‌ம், இன‌வாத‌ம், நிற‌வாத‌ம் மூன்றுக்கும் இடையில் பெரிய‌ வித்தியாச‌ம் இல்லை. நாங்க‌ள் யாரை எல்லாம் இன‌வாதிக‌ள் என்று அடையாள‌ம் காண்கிறோமோ, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை தேசிய‌வாதிக‌ள் என்று அழைத்துக் கொள்கிறார்க‌ள். இது தான் உல‌க‌ ய‌தார்த்த‌ம்.

ஜேர்ம‌னியில் இய‌ங்கிய‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌மான‌ "National Socialist Underground" (NSU) ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. (NSU-Complex: Nazi German Underground)

அதிலிருந்து சில‌ முக்கிய குறிப்புக‌ள்: 

-  நாஸிக‌ளும் தங்க‌ளை "தேசிய‌வாதிக‌ள்" என்று தான் சொல்லிக் கொண்ட‌ன‌ர்.  ஜேர்ம‌னியில் ந‌ட‌ந்த‌ ந‌வ‌ - நாஸிக‌ளின் ஊர்வ‌ல‌த்தில் எடுத்த‌ வீடியோக் காட்சியில், ஒரு ப‌தாகையில் "தேசிய‌வாத‌த்திற்கு ஆர்வ‌ல‌ர்கள் தேவைப் ப‌டுகின்ற‌ன‌ர்" என‌ எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து. 

- முன்னாள் சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னியில் நடந்த "கம்யூனிச அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி" பற்றி மேற்கத்திய நாடுகளில் பரவலாக பிரச்சாரம் செய்யப் பட்டது. "அது மக்கள் எழுச்சி அல்ல... நாஸி ஆதரவாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்." என்று கிழக்கு ஜெர்மன் அரசு அறிவித்திருந்தது. ஆனால், அன்று யாரும் அதை நம்பவில்லை.

- உண்மையில், ந‌வ‌ நாஸிக‌ள் அல்ல‌து தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளே, அன்று கிழக்கு ஜெர்மன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட‌ங்க‌ளில் ஈடுப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌ ஜேர்ம‌னி ஒன்று சேர்ந்த‌து. அந்தத் தகவலை, ஆவணப் படத்தில் பேட்டி கொடுக்கும் முன்னாள் ந‌வ‌ நாஸி த‌ன‌து வாக்குமூல‌த்தில் குறிப்பிடுகின்றான்.

- முன்ன‌ர் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் தம் மீது மிகக் கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப் பட்டதாக, நவ நாஸி தனது வாக்குமூலத்தில் குறிப்பிடுகின்றான். இர‌க‌சிய‌ப் பொலிஸ்அடிக்கடி தமது வீடுகளை சோதனையிட்டு கைது செய்து சிறையில் அடித்ததாக தெரிவித்தான். ஆனால், ஒன்றிணைந்த‌ ஜேர்ம‌னியிலும் தாம் வ‌ர‌வேற்க‌ப் ப‌ட‌வில்லை என்றும் குறிப்பிட்டான்.

- ந‌வ‌ நாஸி அமைப்புக‌ளில் சேர்பவர்கள், பெரும்பாலும் இட‌துசாரிக‌ளுக்கு எதிரான‌ வெறுப்புண‌ர்வு கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள்.  தெருக்க‌ளில் காணும் இட‌துசாரிக‌ளுக்கு அடிப்ப‌தென்றால் அல்வா சாப்பிடுவ‌து மாதிரி.பல தடவைகள் கைகலப்புகள் நடந்துள்ளன.

- ஜேர்ம‌ன் நாஸிக‌ள், இங்கிலாந்து, அமெரிக்காவிலும் தொட‌ர்புக‌ளை ஏற்ப‌டுத்திக் கொண்டுள்ளன‌ர். இங்கிலாந்தின் Blood and Honour என்ற நவ நாஸி இயக்கத்தின் ஜெர்மன் கிளை, வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் தடை செய்யப் பட்டது.

- ந‌வ‌ நாஸிக‌ள் மிகவும் இர‌க‌சிய‌மாக‌ இராணுவ‌ப் ப‌யிற்சி எடுக்கிறார்க‌ள். கிழக்கு ஜெர்மனியில் கைவிடப் பட்ட முன்னாள் சோவியத் படை முகாம்களில் பயிற்சி எடுப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டது. அவர்கள் இராணுவப் பயிற்சியுடன் நின்று விடாது, ஆயுத‌ங்க‌ளையும் சேக‌ரிக்கிறார்க‌ள்.

- எதிர்கால‌த்தில் இன‌ப் பிர‌ச்சினை தீவிர‌ம‌டைந்து இன‌ங்க‌ளுக்கு இடையில் உள்நாட்டுப் போர் ந‌ட‌க்கும் என்று நவ நாஸிகள் ந‌ம்புகிறார்க‌ள்.அதாவது, அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் இடையில் போர் நடக்கும். அதே மாதிரி,ஜெர்மனியில் துருக்கியர்களுடன் போர் நடக்கும்.இது அவர்களது எதிர்பார்ப்பு.

- இன்றைய‌ ஜேர்ம‌ன் அர‌சு, நாஸிக‌ளை க‌ண்காணிப்ப‌த‌ற்காக‌ த‌ன‌து ஆட்க‌ளை ஊடுருவ‌ வைத்துள்ள‌து. நவ நாஸிகளை அரசுக்கு வேலை செய்ய வைப்பது மிகவும் இலகுவானது என்று ஓர் அரச அதிகாரி ஒத்துக் கொள்கிறார். பல அரச உளவாளிகள், பிரதானமான நவ நாஸி செயற்பாட்டாளர்களாக உள்ளனர். அரசுக்கும் அது தெரியும். ஆனால், இயக்கத்தின் தலைவர்களை கைது செய்யும் வரையில் பொறுமையாக இருப்பதாக கூறுகின்றது.

- த‌லைம‌றைவாக‌ இய‌ங்கும் ந‌வ‌ நாஸிக‌ளில் ஏராள‌மான‌ அர‌ச‌ உளவாளிக‌ள் உள்ள‌ன‌ர். இருப்பினும், அர‌சுக்கு வேலை செய்த‌ அதே ந‌வ‌ நாஸிக‌ள் தான், த‌லைம‌றைவாக‌ இய‌ங்கிய‌ NSU உறுப்பின‌ர்க‌ள் என்ற‌ விட‌ய‌ம் த‌சாப்த‌ கால‌மாக‌ அர‌சுக்கு தெரிய‌வில்லையாம்! (ந‌ம்ப‌ முடியுமா?)

- NSU உறுப்பின‌ர்க‌ள் மூன்று பேர் ம‌ட்டுமே என்று சொல்ல‌ப் ப‌டுகின்ற‌து. NSU ப‌ல‌ த‌ட‌வைக‌ள் வங்கிக‌ளை கொள்ளைய‌டித்தும் பிடிப‌ட‌வில்லை. குறைந்தது பத்து வருடங்கள் கொள்ளைப் பணத்தில் சொகுசாக வாழ்ந்தனர். கண்காணிப்புக் கமெராக்கள் இருந்தும், கொள்ளையர்களை பிடிப்பதற்கு பொலிசிற்கு துப்புக் கிடைக்கவில்லையாம். 

-  இரண்டு ஆண் உறுப்பினர்கள், பட்டப் பகலில் நடந்த வ‌ங்கிக் கொள்ளை ஒன்றில் பொலிஸ் கண்காணிப்பில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் ஒரு    பொலிஸ் ஹெலிகாப்டரால் விரட்டப் பட்டனர். பொலிஸ் தம்மை பின்தொடர்கிறது என்பது கொள்ளையர்களுக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் தப்பிச் சென்ற வாகனத்தினுள்  ம‌ர்ம‌மான‌ முறையில் இற‌ந்து கிட‌ந்த‌ன‌ர். 

- சம்பவ இடத்தில் இருந்திராத,  மூன்றாவ‌து ந‌ப‌ரான‌ ஒரு பெண் உறுப்பின‌ர், மறைவிடமாக பயன்படுத்தப்பட்ட வீட்டிற்க்கு நெருப்பு வைத்து விட்டு போலீஸில் ச‌ர‌ண‌டைந்தார்.(அதாவது ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப் பட்டு விட்டன.)

- அந்த‌ மூவ‌ரைத் த‌விர‌ வேறு யாராவ‌து இருக்கிறார்க‌ளா? யாருக்கும் தெரியாது. அது தொட‌ர்பான‌ விசார‌ணை முடிவுக‌ள் இன்ன‌மும் மூடும‌ந்திர‌மாக‌ உள்ள‌ன‌. விசாரணையாளர்கள் சுதந்திரமாக இயங்க முடியாதவாறு மேலிடத்து உத்தரவுகள் வருகின்றன.

-  NSU பயங்கரவாதிகள், நாடு முழுவ‌தும் குறைந்தது பத்து அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்துள்ள‌னர். கொல்ல‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் ஒரு பொலிஸ் பெண்ம‌ணியை த‌விர‌ ஏனையோர் வெளிநாட்டு குடியேறிக‌ள். பெரும்பாலும் துருக்கிய‌ர்க‌ள், மற்றும் ஒரு கிரேக்க‌ர். 

- கொலை ச‌ம்ப‌ந்த‌மாக‌ துப்புத் துல‌க்கிய‌ பொலிஸ், "கிரிமின‌ல்க‌ளின் க‌ண‌க்குத் தீர்க்கும் கொலைக‌ள்" என்று அல‌ட்சிய‌ப் ப‌டுத்திய‌து. அதாவது, ஜெர்மனியில் வலதுசாரி பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்ற உண்மையை பொலிஸ் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. 

- ஒரு த‌ட‌வை கொலை ந‌ட‌ந்த‌ இட‌த்தில், அரச உளவாளி ஒருவரும்  "த‌ற்செய‌லாக‌" இருந்திருக்கிறார். கொலையை நேரில் கண்ட அந்த அர‌ச‌ உள‌வாளியிடம் பொலிஸ் சாட்சிய‌ம் எடுக்க‌வில்லை. விசேட‌ விசார‌ணைக் குழு இந்த‌ விட‌ய‌த்தை வெளிக் கொண்டு வ‌ந்த‌து. இருப்பினும், அப்போதும்  அந்த‌ நேர‌டி சாட்சி விசாரிக்க‌ப் ப‌டாத‌து ம‌ட்டும‌ல்ல‌, வேறு ப‌த‌வி கொடுத்து இட‌ம் மாற்ற‌ப் ப‌ட்டார்.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Sunday, January 08, 2017

ஹிட்லரின் கம்யூனிச விரோத கொலைவெறி இனப்படுகொலையின் ஆரம்பம்


க‌ம்யூனிச‌ வெறுப்புக் கார‌ண‌மாக‌, ஹிட்ல‌ர் சோவிய‌த் யூனிய‌னை ஆக்கிர‌மித்து அந்நாட்டு ம‌க்க‌ளை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவிக்க‌ திட்ட‌மிட்டிருந்தான்!

 "அவுஷ்விட்ஸ்" எனும் நாஸி த‌டுப்பு முகாம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. ( Auschwitz: The Nazis and the 'Final Solution'; http://www.imdb.com/title/tt0446610/) அதிலிருந்து கிடைத்த‌ சில‌ முக்கிய‌ த‌க‌வ‌ல்க‌ளை இங்கே தருகிறேன். இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ யூதர்களை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவித்த‌ ப‌டியால் தீய‌ வ‌ழியில் பிர‌ப‌ல‌ம‌டைந்த‌ முகாம் அது.

அங்கு யூத‌ர்க‌ளை அங்கு கொண்டு செல்வ‌த‌ற்கு முன்ன‌ரே ர‌ஷ்ய‌ர்க‌ள் மீது ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவது ஜெர்மன் யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு முன்னரே, "கம்யூனிஸ்டுகள்" என்ற குற்றச்சாட்டில் இலட்சக் கணக்கான ரஷ்யர்கள் அல்லது ரஷ்ய யூதர்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.

போலந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பிரமாண்டமான தடுப்பு முகாமான அவுஷ்விட்ஸ் கட்டப்பட்டதன் பிரதானமான நோக்கம், தாழ்வான இனமாக கருதப் பட்ட சோவியத் மக்களை அழித்தொழிப்பது. (யூத இன அழிப்பு சில வருடங்களுக்குப் பிறகு நடந்தது.)நாஸிகளின் சோவியத் யூனியன் படையெடுப்பில் கைது செய்யப் பட்ட பத்தாயிரம் போர்க் கைதிகளை கொண்டு தான் அந்த முகாம் கட்டப் பட்டது. அந்தப் பத்தாயிரம் கைதிகளில் சில நூறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். பட்டினியாலும், தோற்று நோய்களாலும் கைதிகள் மரணித்தனர்.

IG farben என்ற‌ ஜேர்ம‌ன் ப‌ன்னாட்டுக் கம்பனி கண்டுபிடித்த செயற்கை இரப்பர் உற்பத்திக்கு அவசியமான மூல‌ப் பொருட்க‌ள் அவுஷ்விட்ஸ் சுற்றாட‌லில் கிடைத்த‌ன‌. நிலக்கரி சுரங்கங்களும் அருகில் இருந்தன. அடிமை உழைப்பாளிக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி, அதிக இலாபம் சம்பாதிக்கும் நோக்க‌ம் IG farben க‌ம்ப‌னிக்கு இருந்த‌து. அந்த‌ முத‌லாளித்துவ‌ சுர‌ண்ட‌லுக்கு உத‌வுவ‌த‌ன் மூல‌ம் நாஸிக‌ளும் ப‌ல‌ன‌டைந்த‌னர்.

சோவிய‌த் ப‌டையெடுப்புக்கு வ‌ச‌தியாக‌த் தான், போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் எனும் இட‌த்தில் முகாம் அமைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து சோவிய‌த் எல்லையில் இருந்து சில‌ நூறு கி.மீ. தொலைவில் அந்த‌ இட‌ம் இருந்த‌து. இதன் மூலம் சோவியத் யூனியன் மீது படையெடுக்கும் திட்டமும், அதற்குப் பிறகும் சோவியத் மக்களை இனப்படுகொலை செய்யும் திட்டமும் நாஸிகளிடம் இருந்துள்ளமை உறுதியாகின்றது.

ஹிட்ல‌ரும், நாஸிக‌ளும் யூத‌ர்க‌ளை வெறுத்த அளவிற்கு க‌ம்யூனிஸ்டுக‌ளையும் வெறுத்தார்க‌ள். ர‌ஷ்ய‌ யூத‌ர்க‌ள் ப‌ல‌ர் போல்ஷேவிக் க‌ட்சியில் இருந்த‌னர். அதனால், நாஸிகளை பொறுத்தவரையில் கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஒன்று தான். "கம்யூனிசம் என்றால் அது ரஷ்யா" தான் என்பது நாஸிகளின் பிரச்சாரமாக இருந்தது. (இன்றைக்கும் தமிழ் பேசும் நாஸி ஆதரவாளர்களுக்கு, கம்யூனிசம் என்றால் ரஷ்யா தான் மனதில் தோன்றும்.)


போலந்து எல்லையில் இருந்த பெலார‌ஸ் போன்ற‌ சோவிய‌த் யூனிய‌னின் ப‌குதிக‌ள் நாஸிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்ட‌தும், அங்கிருந்து 3 மில்லிய‌ன் பேர‌ள‌வில் போர்க் கைதிக‌ளாக‌ சிறைப் பிடிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர், குறைந்தது 2 மில்லிய‌ன் பேரள‌வில் கொன்று குவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஆர‌ம்ப‌த்தில் க‌ம்யூனிஸ்டுக‌ள், யூத‌ர்க‌ள் அல்ல‌து போரிடும் வ‌ய‌தில் இருந்த‌ ஆயிர‌க் க‌ண‌க்கான‌ ர‌ஷ்ய‌ர்க‌ளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற‌ன‌ர். ஆனால், அவ்வாறு அழித்தொழிப்பது அதிக நேரம் எடுப்பதாகவும், தமது போர்வீரர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்குவதாகவும் நாஸிகள் நினைத்தார்கள்.

அதற்குப் பதிலாக, பெருந்தொகையான ர‌ஷ்ய‌ர்க‌ளை இல‌குவான‌ முறையில் கொன்றொழிப்ப‌து எப்ப‌டி என்று யோசித்தார்க‌ள். அவுஷ்விட்ஸ் முகாமில் கார்ப‌ன் மொனோக்சைட் ந‌ச்சு வாயு பிர‌யோகித்து ப‌ரிசோத‌னை செய்த‌ன‌ர். அதன் மூலம் பலரை சில நிமிடங்களில் கொன்று குவிக்க முடிந்தது. ரஷ்யர்கள் மீதான நச்சுவாயு பரிசோதனை வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் தான், ஐரோப்பிய‌ யூத‌ர்க‌ள் அங்கு கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

1941 ம் ஆண்டில் கூட, யூதர்கள் அவுஷ்விட்ஸ் முகாமுக்கு அனுப்பப் பட்டிருக்கவில்லை. அந்த வருடம், வட ஜெர்மன் நகரமான ஹம்பூர்க் மீது, பிரிட்டிஷ் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. அப்போது வீடுகளை இழந்த ஜெர்மன் இனத்தவர்களுக்கு புது வீடுகள் கொடுக்கும் திட்டத்தின் கீழ், ஹம்பூர்க் யூதர்கள் போலந்தில் உள்ள லொட்ஸ் என்ற நகரில் உள்ள கெட்டோவில் (Ghetto) குடியமர்த்தப் பட்டனர்.

அந்தக் காலத்தில், போலந்து முழுவதும் யூதர்கள் நெருக்கமாக வாழ்ந்த நகர்ப்  பகுதிகள், "கெட்டோ" என்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப் பட்டிருந்தன. சேரிகள் போன்று காட்சியளித்த கெட்டோவில், ஏற்கனவே அங்கிருந்த போலிஷ் யூதர்கள், மிகவும் வறுமையான நிலையில் அவல வாழ்க்கை வாழ்ந்தனர்.

ஜெர்மனியில் ஓரளவேனும் வசதியான வாழ்க்கை வாழ்ந்த ஜெர்மன் யூதர்களுக்கு அந்த இடம் அதிர்ச்சியாக இருந்தது. பொருளாதார வேறுபாடு காரணமாக, ஜெர்மன் யூதர்கள் போலிஷ் யூதர்களை தாழ்வாகக் கருதும் வழக்கம் இருந்தது. திடீரென எல்லா யூதர்களும் ஒரே நிலைமையில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் குண்டுபோட்ட பின்னர் அமெரிக்காவும் யுத்தத்தில் குதித்தது. அப்போது ஹிட்லர் "சோவியத் யூனியன் யூதர்கள் மாதிரி, அமெரிக்க யூதர்களும் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுத்துள்ளதாக..." குற்றம் சாட்டினான். அன்றிலிருந்து யூதர்களையும் அழித்தொழிக்கும் திட்டம் ஆரம்பமானது.

Tuesday, August 23, 2016

தமிழ் நாஜிகள் : மக்களை பிரித்தாள அரசு வளர்க்கும் வேட்டை நாய்கள்


கலாச்சாரக் காவலர்கள்:
நாஸிகள் ஆட்சிக் காலத்தில், ஜெர்மன் பெண்கள் பாரம்பரிய கலாச்சார உடையில் அணிவகுத்துச் செல்கின்றனர். நமது தமிழ் கலாச்சாரக் காவலர்கள், ஜெர்மன் நாஸிகளிடம் படித்த சீடர்கள் போலிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஹிட்லரை ஆராதிப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு தீவிர வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் வேறெப்படி சிந்திக்க முடியும்? இங்கே ஒருவர் "ஹிட்லர் ஒரு தேசியவாதி" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே? ஹிட்லரும், நாஜிக் கட்சியினரும் தீவிர ஜெர்மன் தேசியவாதிகள் தானே?

நான் அடிக்கடி "நாம் நாஜித் தமிழர்" என்று குறிப்பிட்டு எழுதுவதை கண்டிக்கும் சில நண்பர்கள், அதற்கு "அறிவுபூர்வமான" விளக்கம் கொடுக்கிறார்கள். நாம் தமிழர் "தமிழ் இனத்தின் நலன் காக்க உருவான தேசியவாதக் கட்சி" என்கிறார்கள்.

அப்படியா? ஜெர்மன் நாஜிக் கட்சி ஆரம்பிக்கப் பட்ட நோக்கமும் அது தானே? அரசியல் கொள்கையும் ஒன்றுதானே? மறுக்க முடியுமா?

ஹிட்லரின் நாஜிக் கட்சி (Nationalsozialistische Deutsche Arbeiterpartei) ஜெர்மன் இனத்தின் நலன் காக்க உருவான ஜெர்மன் தேசியவாதக் கட்சி தான். அதன் பெயரிலேயே தேசியம் இருக்கிறது. National என்ற சொல்லை ஜெர்மன் மொழியில் "நாற்சியோனல்" என்று உச்சரிப்பார்கள். அது தான் சுருக்கமாக நாஸி என்று அழைக்கப் பட்டது.

"ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கும், ஈழத்தமிழரின் பேரழிவுக்கும் காரணம் தமிழ்நாட்டை ஆளும் தெலுங்கர்கள்" என்று சொல்கிறார் சீமான். "முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மன் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும் காரணம் ஜெர்மனியை ஆண்ட யூதர்கள்." என்றான் ஹிட்லர். என்ன வித்தியாசம்?

உருது தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல என்று சீமான் சொல்லி இருக்கிறாராம். அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு ஒரு கூட்டம் அலைகிறது. ஒரு காலத்தில், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், ரியூனியன், சீஷெல்ஸ், பிஜி போன்ற நாடுகளில் தமிழர்கள் குடியேற்றப் பட்டனர். அந்த மக்கள், மூன்று தலைமுறைகளாக, ஆங்கிலம், அல்லது பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா?

உருது, இந்தி, இரண்டும் ஒரே மொழி தான் என்ற உண்மையை பலர் அறியவில்லை. உருது அரபி எழுத்துக்களையும், இந்தி சம்ஸ்கிருத கிரந்த எழுத்துக்களையும் பாவிப்பது மட்டுமே வித்தியாசம். ஹிந்துஸ்தானி மொழியும், பாரசீக மொழியும், பிற உள்ளூர் மொழிகளும் கலந்து உருவான புதிய மொழி தான் உருது அல்லது இந்தி. மொகலாயர் காலத்தில் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.

தேசியவாதத்தை இனவாதமாக சிறுமைப் படுத்த நினைப்பவர்கள் தான், "அவன் தமிழனா, இவன் தமிழனா?" என்று கேட்கிறார்கள். தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் உருது பேசினாலும் அவர்கள் தமிழர்கள் தான்.

மேற்கத்திய நாடுகளில் ஐந்து வருடங்களுக்கும் மேல் வசித்திருந்தால், பிரஜாவுரிமை கொடுப்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாட்டுடன் ஒன்றித்து விட்டதற்காக, அந் நாட்டு மொழியை பேசுவதற்காக கொடுக்கப் படும் நியாயமான வெகுமதி.

இந்த விடயங்களை, முதன்முதலாக ஹிட்லர் தான் கேள்விக்குட்படுத்தினான். ஜெர்மன் தவிர்ந்த வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஜெர்மனியர்கள் அல்ல என்று வாதிட்டான். இட்டிஷ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்ல என்று சொன்னான். ஆதாரம் தேவைப்படுவோர் ஹிட்லர் எழுதிய மெயின் காம்ப் நூலை வாசிக்கவும்.


மேலே உள்ள படம், சீமான் ஆதரவாளர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தது. சீமானும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளும், பேரினவாத அரச கைக்கூலிகள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்? "மலையாள மாவோயிஸ்டுகள்" என்று அவதூறு பரப்புவதில் இருந்தே இவர்களது அரச அடிவருடித்தனம் வெளிப்படுகின்றது. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள், தமிழ் நாட்டுக்கு விடுதலை கேட்க மாட்டார்களாம். நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க. 

சீமானை உளவுத்துறை பின்னால் நின்று இயக்க வேண்டிய அவசியமில்லை. முன்னால் நின்றே இயக்கலாம். தமிழ்நாட்டில் மாவோயிச அபாயம் வரவிடாமல் தடுப்பதற்கு தயார் படுத்தப் பட்டிருக்கலாம். அயல் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மூன்றிலும் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விடாமல் தடுப்பதற்கு சீமான் போன்ற கைக்கூலிகள் உளவுத்துறைக்கு அவசியம். 

திடீரென தோன்றிய ஒரு தீவிர வலதுசாரி அரசியல்வாதி, மிகக் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தால், அது எப்போதும் சந்தேகத்திற்குரியது. தமிழ் நாட்டில் ஏற்கனவே பல தசாப்த காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய கட்சிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. 

நக்சல்பாரி வழி வந்த கம்யூனிச அமைப்புகள் மட்டுமல்ல, தீவிர தமிழ்தேசியக் கட்சிகள் கூட ஊடகங்களின் கண்களுக்கு தட்டுப் படுவதில்லை. அதே நேரம், இன்றைக்கும் மிகக் குறைந்தளவு ஆதரவாளர்களை கொண்ட சீமானுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தது எப்படி? 

அமெரிக்காவிலேயே வெகுஜன ஊடகங்களுக்கு, உளவுத்துறையின் உத்தரவுகள் வருவது வழமை. எல்லாக் கட்சிகளிலும் உளவுத்துறைக்கு தகவல் கொடுப்பதற்கு ஆட்களை வைத்திருப்பார்கள். இந்தியாவில் தாராளமான சுதந்திரம் தந்து விடுவார்களா? அதிலும் "உலகம் முழுவதும் தமிழன் ஆண்டான்..." என்று இன- அடிப்படைவாதம் பேசும் கட்சியை சும்மா விட்டு விடுவார்களா?

Friday, April 17, 2015

ஊழல் மலிந்த ஹிட்லரின் ஆட்சி



ஹிட்லர் அனுதாபிகளான அனைத்து பாசிஸ்டுகளுக்கும்: 
"உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். தவழவும் முடியா விட்டால் தற்கொலை செய்து கொள்ளுங்கள். அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது."


ஜெர்மன் நாஸிகள் "ஊழலற்ற ஆட்சி" நடத்தியதாக புளுகித் திரியும், தமிழ் பேசும் நாஸி அபிமானிகள் பலர் இருக்கின்றனர். "வெள்ளை ஐரோப்பியர்கள் ஊழல் செய்வதில்லை" என்று அப்பாவித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் பாமர மக்கள் அதை நம்பலாம்.

ஜெர்மன் வரலாற்றிலேயே நாஸிகளின் ஆட்சிக் காலம் தான் ஊழல் மலிந்திருந்த காலகட்டம். ஹிட்லர் முதல் அடிமட்ட அதிகாரி வரையில் மிகப்பெரிய ஊழல் பெருச்சாளிகளாக இருந்தனர்.

 ஹிட்லர், 1933 ம் ஆண்டு, ஆட்சியைக் கைப்பற்றும் நேரம், ஜெர்மன் அரசுக்கு பல இலட்சம் வரி இன்னும் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது. அவரது "மைன் கம்ப்" நூலுக்கான வரியே கட்டப் படாமல் இருந்தது. பதவிக்கு வந்த ஹிட்லர், வருமான வரித் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வரியை இல்லாதாக்கினார். அது மட்டுமல்ல, அடுத்து வந்த வருடங்களில் விற்கப் பட்ட மைன் கம்ப் நூல் பிரதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப் பட்டது. அந்தப் பணத்தை எல்லாம் ஹிட்லர் தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

ஐரோப்பாவில் போர் நடந்து கொண்டிருந்த காலங்களிலும், நாஸி அதிகாரிகள் ஊழலில் திளைத்தார்கள். போர்முனையில் நின்ற ஜெர்மன் படையினருக்கு அனுப்ப வேண்டிய பெட்ரோல், உணவுப் பொருட்களை திருடி கறுப்புச் சந்தையில் விற்றார்கள். 1944 ஆம் ஆண்டு, நார்மாண்டி கடற்கரையில் நின்ற யுத்த தாங்கிகளுக்கு பெட்ரோல் இல்லாத காரணத்தால், படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில், பாரிஸ் கள்ளச் சந்தையில் பெட்ரோல் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது.

யூதர்கள் அவர்கள் வசித்த வீடுகளில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்ட நேரம், யூதர்களின் சொத்துக்களை திருடுவதில் ஜெர்மன் அதிகாரிகள் மும்முரம் காட்டினார்கள். தமது வாழ்நாளில் இது போன்ற தளபாடங்களை காணவில்லை என்று, அவற்றை தமது வீடுகளுக்கு திருடிச் சென்ற அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

ஹிட்லரின் வலதுகரமாக விளங்கிய இராணுவத் தளபதி ஹெர்மன் கெரிங், ஒரே நேரத்தில் பல பதவிகளை வகித்து வந்தார். பிரைசன் மாநில முதலமைச்சர், பொருளாதார அமைச்சர், பாராளுமன்றத் தலைவர்... இப்படிப் பல பதவிகள் காகிதத்தில் மட்டும் இருந்துள்ளன. அதற்கெல்லாம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். 

அது மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் வாகன தயாரிப்பாளர்களான BMW, Benz நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி வைத்திருந்தார். கெரிங்கின் அன்றைய வருட வருமானம் 1250000 மார்க்குகள். அதே நேரம், ஜெர்மனியில் ஒரு தொழிலாளரின் வருடாந்த வருமானம் 5000 மார்க்குகளுக்கு மேலே கூடவில்லை.

ஜெர்மன் அரசாங்கத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு, நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் தான் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது. பெரும்பாலும் அதிகாரத்தில் இருந்தவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்குத் தான் அரசுப் பதவிகள் கொடுக்கப் பட்டன. ஜெர்மனி முழுவதும் வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டுமானால் மேலிடத்தில் உள்ளவரைத் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.

(நன்றி : Historia, Nr.1/2015)



கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் எப்படியானவர்கள்? 
- பாசிஸ்டுகள் 
 - நாஸிகள் 
 - இனவெறியர்கள் 
 - மதவெறியர்கள் 
 - இனப்படுகொலையாளிகள் 
 - போர்க்குற்றவாளிகள் 
அல்லது அப்படியானவர்களை ஆதரிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்.

Sunday, April 06, 2014

நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய ஜெர்மன் கம்யூனிச அகதிகள்


ஜெர்மனியின் எல்லையோரம் அமைந்துள்ள, நெதர்லாந்து நாட்டின் வட மாகாணமான குரோனிங்கன், கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக திகழ்ந்தது. நெதர்லாந்து நாஸிகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த காலத்தில், முதன்முதலாக நாஸி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். முதன்முதலாக, யூதர்களின் உரிமை மறுப்புக்கு எதிராக, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராக போராடியவர்களும், கம்யூனிஸ்டுகள் தான். அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது. பல நூறு டச்சுக் கம்யூனிஸ்டுகள், யூதர்களைப் போன்று தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டனர். பலர் அங்கிருந்து உயிருடன் திரும்பி வரவில்லை.

இந்த தகவல்கள் எல்லாம், இதனை வாசிக்கும் உங்களுக்கு புதிதாக இருப்பதைப் போன்று தான், பெரும்பான்மையான நெதர்லாந்து பிரஜைகளுக்கும் இந்த உண்மைகள் தெரியாது. எழுபதாண்டு காலமாக, இருட்டடிப்பு செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளின் நாசிஸ எதிர்ப்பு போராட்டம் பற்றிய தகவல்களை தாங்கிய நூல் ஒன்று இந்த வாரம் வெளியாகியுள்ளது. நூல் பற்றிய விமர்சனங்கள், நெதர்லாந்து வானொலி, தொலைக்காட்சிகளில் இடம்பெற்று வருகின்றன.

"Het communistische verzet in Groningen" (குரோனிங்கனில் நடந்த கம்யூனிச கிளர்ச்சி) என்ற தலைப்பிலான நூல், இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஸி ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்டுகள் பற்றிய விபரங்களை பதிவு செய்துள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பலரின் பேட்டிகள், ஆவணங்கள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. நெதர்லாந்தில் கடந்த பல தசாப்த காலமாக ஜனநாயக ஆட்சி நடந்த போதிலும், யாராலும் இப்படி ஒரு ஆய்வு நூலை எழுத முடியவில்லை. ஒரு நூல் கூட எழுத முடியவில்லை என்றால், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நெதர்லாந்து ஜனநாயக அரசின் அடக்குமுறை, எந்தளவு நுணுக்கமாகவும், அழுத்தமாகவும் இருந்திருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

1933 ம் ஆண்டு, அயல் நாடான ஜெர்மனியில் நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன், நாஸி அரசாங்கம் செய்த முதல் வேலை, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) யை தடை செய்தது தான். அதனால், பல்லாயிரக் கணக்கான ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், எல்லை தாண்டி நெதர்லாந்திற்குள் நுழைந்து, அகதியாக அரசியல் தஞ்சம் கோரினார்கள். நெதர்லாந்து அரசு, அந்த அகதிகள் கம்யூனிஸ்டுகள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை வரவேற்கவில்லை. அதற்கு மாறாக, வேண்டாத விருந்தாளிகளாக புறக்கணித்தது. "தேசப் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கக் கூடிய, ஆபத்தான பேர்வழிகளுக்கு, எமது நாட்டிற்குள் புகலிடம் அளிக்க முடியாது..." என்று நெதர்லாந்து அரசு வெளிப்படையாகவே அறிவித்தது.

நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (CPN)யும், அதனோடு சேர்ந்த தொழிற்சங்கமும் இணைந்து, Roode Hulp (செம் உதவி)என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தன. அதன் பெயரில் டச்சு மக்களிடம் நிதி திரட்டி, ஜெர்மன் கம்யூனிச அகதிகளுக்கு உதவியது. அந்த உதவி சில வருடங்களே நீடித்தது. 1941 ம் ஆண்டு, நாஸி இராணுவம் நெதர்லாந்து மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. அதனால், டச்சு கம்யூனிஸ்டுகளும் நாஸி அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. டச்சு கம்யூனிஸ்டுகளின் முதலாவது எதிர்ப்பு நடவடிக்கையாக, ஒரு சட்டவிரோத பத்திரிகையை அச்சடித்து வெளியிட்டனர். "Noorderlicht" (வடக்கத்திய வெளிச்சம்) என்ற நாஸி எதிர்ப்பு பத்திரிகை, பொது மக்கள் மத்தியில் விரும்பி வாசிக்கப் பட்டது.

1941 ம் ஆண்டு, நாஜி ஆக்கிரமிப்புப் படையினர், ஆம்ஸ்டர்டாம் நகரை சுற்றி வளைத்து தேடி, நானூறு யூதர்களை கைது செய்து கொண்டு சென்றனர். யூதர்கள் கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி பொது வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அன்று நடந்த வேலை நிறுத்தம், ஒவ்வொரு வருடமும் நினைவுகூரப் படுகின்றது.

1941 பெப்ரவரி வேலை நிறுத்தத்தின் நினைவாக கட்டப்பட்ட தொழிலாளியின் சிலை.
வேலைநிறுத்தப் போராட்டத்தினால், நாஜிகளின் யூத எதிர்ப்பு நடவடிக்கையை தடுக்க முடியா விட்டாலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு சான்றாக விளங்கியது. நெதர்லாந்தை நாஜிகள் ஆக்கிரமித்த காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருந்தது. கட்சி தலைமறைவாக இயங்கிய போதிலும், பெருமளவு மக்கள் ஆதரவு இருந்ததால், நாஜி ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. தொழிற்சங்க நடவடிக்கை மட்டுமல்ல, ஆயுதப் போராட்டமும் கம்யூனிஸ்டுகளின் வழிநடத்தலின் கீழ் நடந்தது.

இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டாலும், சில வருடங்களுக்குப் பின்னர், பனிப்போர் ஆரம்பமாகியது. முன்பு ஜெர்மனியர்கள் மேலிருந்த வெறுப்பு, பின்னர் ரஷ்யர்களுக்கு எதிராக திரும்பியது. "(சோவியத்)ரஷ்யர்கள் படையெடுப்பார்கள்..." என்று நெதர்லாந்து அரசு, அடிக்கடி மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது. உள்நாட்டில் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக காட்டியது. 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஸி ஆட்சியில் பல்வேறு இன்னல்களை அனுபவித்த டச்சுக் கம்யூனிஸ்டுகள், ஜனநாயக ஆட்சியிலும் ஒடுக்கப் பட்டனர். நெதர்லாந்தின் புதிய ஜனநாயக ஆட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகளின் உயிரை வாங்கவில்லை. ஆனால், அவர்களை ஏறக்குறைய நடைப்பிணம் ஆக்கினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழில் வாய்ப்புக் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. பலருக்கு அரசின் சமூகநல கொடுப்பனவுகள் கூட மறுக்கப் பட்டன.



நெதர்லாந்து கம்யூனிஸ்டுகளின் போராட்டம் பற்றிய தகவல்கள் அடங்கிய Het communistische verzet in Groningen நூலை வாங்குவதற்கு: 

கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தை அங்கீகரிப்பது பற்றி, உள்ளூர் தொலைக்காட்சி தயாரித்தளித்த நிகழ்ச்சி: 

Saturday, March 29, 2014

நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு




உண்மையில், யூத வெறுப்பை விட, மார்க்சிய வெறுப்பு தான், ஹிட்லரும், நாஸி கட்சியும் ஜெர்மனியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பெரிதும் உதவியுள்ளது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், ஜெர்மனியின் மேற்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது.

முதலாம் உலகப்போரானது, ஜெர்மன் தேசியவாதிகளுக்கும், பிரெஞ்சு தேசியவாதிகளுக்கும் இடையிலான போராக நடந்தது. முதலாளிகளும், தேசிய வெறியர்களும், சாதாரண மக்களை படைவீரர்களாக போருக்கு தீனியாக்கினார்கள். முதலாம் உலகப்போரின் முடிவில், தேசியவாத மாயையில் இருந்து விடுபட்ட படையினர் கிளர்ந்தெழுந்தனர்.

மியூனிச், பெர்லின், ஹம்பூர்க் நகரங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெடித்தது. அந்த நகரங்களில் உருவான சோவியத் குடியரசுகள், சில வாரங்கள் தாக்குப் பிடித்தன. அப்போது ஜெர்மனியில் ஜனநாயக அரசமைப்பு ஏற்பட்டிருந்தது. ஆயினும், கம்யூனிசத்தை வெறுத்த "ஜனநாயக" அரசாங்கம், தொழிலாளர்களின் சோவியத் புரட்சியை கொடூரமாக நசுக்கியது.

பழமைவாதிகளின் மாநிலமான பவாரியாவில், ஹிட்லரின் நாஸிக் கட்சியும், அது போன்ற வேறு சில அமைப்புகளும் சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சிய வெறுப்பு, அந்த அமைப்புகளின் அடிநாதமாக விளங்கியது: "முதலாம் உலப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் மார்க்சிஸ்டுகள். அனைத்துலக தொழிலாளர் வர்க்க ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டு, ஜெர்மன் மக்களின் முதுகில் குத்தினார்கள். பிரெஞ்சு படைகள் ஜெர்மன் மக்களை (இனப்) படுகொலை செய்த போது, கம்யூனிஸ்டுகள் எனப்படுவோர் அதற்கு எதிராக முணுமுணுக்கக் கூட இல்லை.... "

இந்த உண்மைக்கு மாறான பொய்ப் பிரச்சாரம், ஜெர்மன் மக்கள் மனதில் கம்யூனிசத்திற்கு எதிரான விஷக் கருத்துக்களை விதைக்கும் நோக்கில் பரப்பப் பட்டது. ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சியில், பெருமளவு யூதர்கள் பங்குபற்றி இருந்தனர். நாஸிகள் அதைச் சுட்டிக் காட்டி, "கம்யூனிஸ்டுகளும் யூதர்களும் ஒன்று தான். உலக யூத சதிகாரர்களின் கொள்கை தான் கம்யூனிசம்." என்று பிரச்சாரம் செய்தனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், யூதர்களின் ஜெர்மன் குடியுரிமை பறிக்கப் படும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் படும் என்றும், நாஸிகள் பகிரங்கமாக கூறி வந்தனர்.

ஹிட்லரின் நாஸிக் கட்சி குண்டர்கள், அடிக்கடி மார்க்சிஸ்டுகளை தெருச் சண்டைக்கு அழைத்தார்கள். கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நடத்திய பொதுக் கூட்டங்களில் நுழைந்து குழப்பம் விளைவித்தார்கள். அங்கிருந்த பேச்சாளர்களையும், பார்வையாளர்களையும் தாக்கினார்கள். நாஸிக் காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தை, "மார்க்சியர்களுக்கு எதிரான வீரப் போர்" போன்று, ஹிட்லர் தனது Mein Kampf (எனது போராட்டம்) நூலில் எழுதி இருக்கிறான்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியில் எதிரொலித்தது. பல வங்கிகள் திவாலாகின. பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வந்த காலத்தில், பெரும்பான்மை ஆளும் கட்சிகளின் செல்வாக்கு குறைந்தது. மக்கள் மாற்று வழி தேடினார்கள். அவர்கள் ஒன்றில் தீவிர இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தனர், அல்லது தீவிர வலதுசாரிகளான நாஸிக் கட்சியை ஆதரித்தனர்.

பெர்லின் நகரத் தெருக்களில், நாஸிக் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமது பலத்தைக் காட்டும் வகையில் சுற்றித் திரிந்தனர். இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், எங்கே, எந்த சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொண்டாலும், அங்கே வாய்த் தர்க்கம் முற்றி, அடி தடியில் முடியும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.

"சிவப்புகள், இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளை அடித்து நொறுக்குவோம்..." என்று கோஷமிட்ட படி, நாஸிக் காடையர்கள் கத்தி, பொல்லுகளுடன் தெருக்களில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் கையில் அகப்பட்ட மார்க்சிஸ்டுகள்/கம்யூனிஸ்டுகளுக்கு, மண்டை உடைத்து விட்டுத் தான் மறு வேலை பார்த்தார்கள்.

"மார்க்சியம் ஒழிக!" பதாகை ஏந்திய படி பேரணியில் நடந்து வரும் சீருடை அணிந்த நாஸிகள். (1926) ஹிட்லர் அணிவகுப்பை பார்வையிடுவதை காணலாம். (வட்டத்திற்குள்)  

"சிவப்பு முன்னணியை (Red Front) நொறுக்குவோம்." என்றொரு நாஸிப் பிரச்சார பாடல் தெருவெங்கும் ஒலித்தது. அன்றைய தேர்தலில் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் "சிவப்பு முன்னணி" என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிட்டார்கள். நாஸிக் காடையர்கள் இடதுசாரிகளுக்கு எதிரான கோஷம் எழுப்பிய படி, பெர்லின் தெருக்களில் சாரிசாரியாக வண்டிகளில் சென்றனர். 1926 ம் ஆண்டிலேயே, "மார்க்சியம் ஒழிக" என்ற பதாகை தாங்கிய நாஸிகளின் பேரணிகள் நடந்துள்ளன.

30-01-1933, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளால் வென்ற,  ஹிட்லரின் நாஸிக் கட்சி உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளும் நாஸிக் கட்சி உறுப்பினர்கள், அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறாக பேசி வந்தனர். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பதிலடி கொடுக்க எழும் நேரம், நாஸிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அது சிலநேரம், பாராளுமன்றத்திற்கு வெளியே கைகலப்பில் முடிந்தது.

பெர்லின் நகரில், பாராளுமன்ற கூட்டம் நடைபெற்ற தினங்களில் எல்லாம், நாஸிகளும், கம்யூனிஸ்டுகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். பாராளுமன்ற விவாதங்களில் நாட்டமற்ற, அல்லது கம்யூனிஸ்டுகளுடன் வாதாடி வெல்ல முடியாது என்று கண்டு கொண்ட நாஸிகள், இரகசியமாக ஒரு திட்டம் தீட்டினார்கள். அதுவே, பிற்காலத்தில் வரப் போகும்  நாசிஸ  சர்வாதிகாரத்திற்கு கட்டியம் கூறியது.

நாஸிகள் பாராளுமன்ற அரசியலுக்குள் பிரவேசித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. 27-02-1933 அன்று, Reichstag (றைஷ்டாக்)  எனப்படும் ஜெர்மன் பாராளுமன்றம் தீப்பற்றி எரிந்தது. நெருப்பு வைத்தது யாரென்று கடைசி வரை தெரிய வரவில்லை. இருப்பினும், நாஸி அரசாங்கம் நான்கு கம்யூனிஸ்டுகளை கைது செய்தது. அந்தக் காலகட்டத்தில், நாசிஸ சர்வாதிகாரம் ஏற்பட்டிருக்கவில்லை. ஓரளவு ஜனநாயகம் நிலவியது. அதனால் தான், குற்றஞ் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகள் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர்.

நாஸி தலைவர்களில் ஒருவரான கேரிங், "ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி ஆரம்பமாகி விட்டது" என்று பயமுறுத்தினார். "கம்யூனிஸ்ட் புரட்சியை தடுப்பதற்காக" என்றொரு சாட்டைக் கூறி, நாஸி அரசாங்கம் நாடு முழுவதும் பல கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜெர்மனியில், நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதும், நாசிஸ பயங்கரவாதத்திற்கு முதன்முதலாக பலியானவர்கள் யூதர்கள் அல்ல, மாறாக ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

கைது செய்யப்பட்ட நான்கு கம்யூனிஸ்டுகளில், பின்னாளில் பல்கேரியா அதிபராக பதவியேற்ற டிமித்ரோவ்வும் ஒருவர். இறுதியில் டிமித்ரோவும் மற்றவர்களும் விடுதலை செய்யப் பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, வன் தே லுப்பே என்ற புத்தி சுவாதீனமற்ற டச்சு கம்யூனிஸ்ட் நாஸிகளின் சூழ்ச்சிக்கு பலியானார். பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்டார்.

பெர்லின் நீதிமன்றத்தில் நடந்த டிமித்ரோவின் வழக்கு, இன்றைக்கும் சட்டத் துறையில் சிலாகித்துப் பேசப் படுகின்றது. புத்திசாலியான டிமித்ரோவ், தனது வாதத் திறமையால் நீதிமன்றத்தை திணறடித்தார். "கேரிங்கின் நாஸி கட்சியினர் தான் பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்தார்கள்." என்று டிமித்ரோவ் நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நேரம் அங்கிருந்த கேரிங், "இங்கு வந்து நெருப்பு வைத்து விட்டு, ஜெர்மன் மக்கள் மேல் பழி சுமத்துகிறீர்கள் ..." கூச்சலிட்டார்.

இங்கே கவனிக்கப் பட வேண்டிய விடயம் "ஜெர்மன் மக்கள்" (Deutsche Volk). நாஸிகளின் ஆட்சிக் காலம் முழுவதும், தங்களது கட்சியை யாராவது குறை கூறினால், அதனை "ஜெர்மன் மக்களுக்கு எதிரான அபாண்டம்" என்று கூறி, எதிராளியின் வாயை அடைக்கப் பண்ணினார்கள். இன்றைக்கும் தமிழர்களில் சிலர், நாஸிகளின் அதே  தந்திரோபாயத்தை பயன்படுத்துவதை காணலாம்.

நாஸிஸக் கொள்கை, ஒரு கடந்த கால வரலாறு அல்ல. ஜெர்மனிக்கு மட்டுமே உரிய தோற்றப்பாடும் அல்ல. நாஸிகளின் சித்தாந்தம் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளது. நாஸிகள் உலகம் முழுவதும் உள்ளனர். தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கிறார்கள். நாஸிஸம் எந்த நோக்கத்திற்காக தொடங்கியதோ, அதனை நிறைவேற்றுவதற்கு துடிக்கின்றனர்.

"சிவப்பைக் கண்டால் பதறும், மார்க்சியத்தை வெறுக்கும்," கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலர், நாஸிக் கருத்துக்களை எதிரொலிக்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னர், இணையமும், சமூக வலைத் தளங்களும் இருக்கவில்லை. இருந்திருந்தால், நாஸிகள் அங்கேயும் தமது மார்க்சிய வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்தி இருப்பார்கள்.


நாஸிகள் தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.நாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்
2.நவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராமம்

Monday, March 24, 2014

நாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்

ஜெர்மனியில் நாஸிகள் கால கட்டத்தில் நடந்த யூத இனப்படுகொலை பற்றி, உலகம் முழுவதும் ஏராளமானோர் அறிந்து வைத்திருக்கின்றனர். அதே நேரம், நாஸிகளால் படுகொலை செய்யப் பட்ட, ஜிப்சிகள், ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் பற்றி சிலர் அறிந்திருக்கிறார்கள். ஆனால், நாஸிகளால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் பற்றி அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு.

பிற ஐரோப்பிய காலனியாதிக்க வல்லரசுகள் போன்று, ஜெர்மனியும் ஆப்பிரிக்க கண்டத்தில் சில காலனிகளை வைத்திருந்தது. கமெரூன், நமீபியா, தான்சானியா போன்ற நாடுகள், முன்னொரு காலத்தில் ஜெர்மன் காலனிகளாக இருந்தன. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுப் போனது. அதனால், ஆப்பிரிக்க காலனிகளும் பறி போயின. போரில் வென்ற நாடான பிரிட்டன் அவற்றை எடுத்துக் கொண்டது. 

அதற்குப் பிறகு, ஜெர்மனி ஆப்பிரிக்க காலனிகளுக்கு உரிமை கோருவதை கைவிட்டு விட்டது. அதற்கு, ஹிட்லரின் பூகோள அரசியல் கொள்கையும் ஒரு முக்கிய காரணம். "ஜெர்மனி கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக பிடித்து வைத்திருக்க வேண்டும்." என்பது ஹிட்லரின் அவா. இன்றைய ஜெர்மனி, கிழக்கு ஐரோப்பிய நாட்டு அரசியல்- பொருளாதார விடயங்களில், பெருமளவு தலையிட்டு வருவது வேறு கதை.

ஜெர்மனியின் தொழிற்துறை நகரமான ஹம்பூர்க்கில், சில நூறு ஆப்பிரிக்கர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் அங்கத்தவர்களாக இருந்தனர். 1930 ம் ஆண்டு, ஜெர்மனியில் கறுப்பினத்தவருக்கு எதிராக வளர்ந்து வரும் இனவாதம் பற்றி உரையாடுவதற்காக, ஒரு சர்வதேச மகாநாடு கூட்டப் பட்டது. ஹம்பூர்க் நகரில், கம்யூனிச தொழிலாளர்களால் கூட்டப்பட்ட மகாநாட்டில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கரீபியன் நாடுகளில் இருந்து பேராளர்கள் வந்து கலந்து கொண்டனர்.

நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர், ஜெர்மனி இரண்டு துருவங்களாக பிரிந்திருந்தது. வலதுசாரிகளான ஒரு பகுதி மக்கள் நாஸிக் கட்சியை ஆதரித்தார்கள். அதே நேரம், இடதுசாரிகளான இன்னொரு பகுதி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்கள். ஜெர்மனியில் வாழ்ந்த கறுப்பினத்தவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தமை எதிர்பார்க்கத் தக்கதே. அதனால், நாஸிகளின் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டவுடன், ஆப்பிரிக்கர்களும் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டு, பின்னர் படுகொலை செய்யப் பட்டனர்.

நாஸிகள் ஜெர்மன் பொது மக்கள் மத்தியில், கறுப்பினத்தவருக்கு எதிரான நிறவெறியை புகுத்துவதற்கு இலகுவாக, முதலாம் உலகப்போரின் முடிவு அமைந்திருந்தது. அயல் நாடான பிரான்ஸ், வெற்றி பெற்ற நாடுகளில் ஒன்றென்பதால், வெர்சேய் ஒப்பந்தப் பிரகாரம் ஜெர்மனியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. நெதர்லாந்து, பெல்ஜியம் எல்லையோரம் இருக்கும் ரைன் நதிப் பகுதி முழுவதும் பிரெஞ்சுப் படைகள் ஆக்கிரமித்தன.

ஜெர்மனியில் சனத்தொகை அடர்த்தி அதிகமான, தொழிற்துறை வளர்ச்சி கண்ட ரைன் மாநிலத்தில், எண்பதாயிரம் பிரெஞ்சுப் படையினர் குவிக்கப் பட்டனர். ஏற்கனவே, உணவுக்கு வழியின்றி, பஞ்சத்தில் அடிபட்டு நொந்து போயிருந்த ஜெர்மன் மக்களை, பிரெஞ்சுப் படையினர் மேலும் துன்புறுத்தினார்கள். வெற்றி பெற்ற மமதையில் மிதந்த பிரெஞ்சு இராணுவம், தோற்றுப் போன மக்களை தனது மேலாதிக்கத்தின் கீழ் பணிய வைத்தது.

அன்று ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த பிரெஞ்சுப் படையில் கடமையாற்றிய வீரர்கள், பிரெஞ்சுக் காலனிகளில் இருந்து வந்திருந்தனர். செனகல், மடகஸ்கார், மொரோக்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வியட்நாம், கம்போடியா போன்ற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு இராணுவ சீருடை அணிந்திருந்த பெரும்பான்மையான வீரர்கள், ஆப்பிரிக்க கறுப்பர்களாக இருந்தனர்.

அவர்களில் பலர் உள்ளூர் ஜெர்மன் பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தனர். அதனால், குறைந்தது ஒரு ஆயிரம் கலப்பினப் பிள்ளைகள் பிறந்திருந்தன. நாஸிகளின் தூண்டுதலின் பேரில், கறுப்பின போர் வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்த பெண்களை, ஜெர்மன் சமூகம் ஒதுக்கி வைத்தது. அவர்களை பாலியல் தொழிலாளிகள் போன்று நடத்தியது. அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட, சமூகத்தில் ஒதுக்கி வைக்கப் பட்டனர். "ரைன்லாந்து வேசிகளின் மக்கள்" என்று, சமூகம் அவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டியது.

ஜெர்மனியில் நாஸிகளின் சர்வாதிகாரம் ஏற்பட்டதும், கறுப்பின பிரெஞ்சுப் போர்வீரர்களின் பிள்ளைகள் பலர் இரவோடிரவாக காணாமல்போனார்கள். அவர்களில் பலர் மலடாக்கப் பட்டனர், அல்லது தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டு, பின்னர் யூதர்களோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்டனர். 

ஏற்கனவே, நாஸிகள் கறுப்பின பிரெஞ்சு வீரர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வந்தனர். பிரெஞ்சு யூதர்கள், ஜெர்மானியர்களை வேண்டுமென்றே அவமானப் படுத்துவதற்காக, கறுப்பின போர்வீரர்களை கொண்டு வந்ததாக குற்றஞ்சாட்டினார்கள். ஜெர்மன் பாமர மக்கள், நாஸிகளின் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பினார்கள். அதனால், கறுப்பின- ஜேர்மனிய சமூகம் அழிக்கப்பட்ட பொழுது, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

பிற்காலத்தில் நாஸிகள் படையெடுத்து ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளிலும், பல கறுப்பர்கள் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் கொல்லப் பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு, நெதர்லாந்தில், அன்டன் கொம் என்ற சுரினாம் நாட்டவர் ஒருவர், பிரபலமான நாஸி எதிர்ப்பு போராளியாக இன்றைக்கும் கௌரவிக்கப் படுகின்றார். அவர் ஒரு கறுப்பின - கம்யூனிஸ்ட். தென் அமெரிக்காவில் டச்சுக் காலனியான சுரினாமில் பிறந்தவர்.

அன்டன் கொம், சுரினாமில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யத் தூண்டுகிறார், என்ற குற்றச் சாட்டில் நெதர்லாந்திற்கு நாடு கடத்தப் பட்டிருந்தார். அன்டன் கொம் நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தவர். நெதர்லாந்து நாட்டை, நாஸிப் படைகள் ஆக்கிரமித்த காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த இரகசிய கெரில்லா இராணுவத்தில் இயங்கி வந்தார். ஆனால், யாரோ காட்டிக் கொடுத்ததால், நாஸிப் படைகளால் கைது செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டார்.

இனவெறியர்களான நாஸிகள், ஆப்பிரிக்க கறுப்பர்களை, மனித இனப் படி நிலையில், மிகவும் கீழானவர்களாக கணித்து வந்தனர். ஏற்கனவே, ஆப்பிரிக்கர்களை குரங்குகள் போன்று சித்தரிக்கும் படங்களையும் நாஸிப் பிரச்சார பிரசுரங்களில் வரைந்து வந்தனர். ஜெர்மனியர்கள், ஆப்பிரிக்கர்களுடன் திருமணம் செய்வதையும் எதிர்த்து வந்தனர். முன்னாள் ஜெர்மன் காலனிகளில் பணியாற்றிய ஜெர்மனியர்களுக்கு, ஆப்பிரிக்க வைப்பாட்டிகளும், பிள்ளைகளும் இருந்தன.

ஆப்பிரிக்க காலனிகள் பறி போன பிற்பாடு, ஜெர்மனியர்களுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான தொடர்பு முற்றாக அறுந்து போனது. அதனால் அந்தக் கலப்பின பிள்ளைகள், பெரிதும் பாதிக்கப் பட்டனர். நாஸிகளின் ஆட்சிக் காலத்தில், அப்படி ஒரு வரலாறு இருந்த சுவடே தெரியாமல் மூடி மறைக்கப் பட்டது. இதிலே ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால், நாஸிகள் ஜெர்மனியின் வரலாற்றை எவ்வாறு மாற்றி எழுத வேண்டும் என்று நினைத்தார்களோ, அது இன்றளவும் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றது.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: