Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, June 26, 2021

மேதகு - திரைக்கதைக்கு பின்னால் உள்ள நிஜக்கதை

 


மேதகு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். ஜகமே தந்திரம் போன்ற குப்பைப் படங்களை விட இது பல மடங்கு மேலானது. குறிப்பாக நாட்டுக்கூத்துடன் கதை சொல்லும் பாணி அருமை. சிறந்த படப்பிடிப்பு. எந்த இடத்திலும் தொய்வில்லாத அளவுக்கு தரமான எடிட்டிங்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையில் சில மிகைப் படுத்தல்கள் இருந்தாலும், அவை படம் பார்ப்பதற்கு உறுத்தலாக இருக்கவில்லை. பெருமளவு சம்பவங்கள், களம் சார்ந்து கதை நகர்கிறது. பாடல்கள் கேட்டு இரசிக்கும் படி உள்ளன. தமிழாராய்ச்சி மகாநாட்டு நடனமும் அருமை. குறைந்த பட்ஜெட்டில் எடுத்த ஒரு படத்திற்கு இவையெல்லாம் அதன் மதிப்பைக் கூட்டுகின்றன.

இருப்பினும் படத்தில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. பொதுவாக இந்தப்படம் தமிழ்தேசிய கொள்கை சார்ந்த பார்வையாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், ஆங்காங்கே கிளம்பும் பிரச்சார வாடையை குறைத்திருக்கலாம். முடிந்த அளவு தவிர்த்திருக்கலாம். இது ஓர் ஆவணப்படம் இல்லைத் தான். ஆனால், வரலாற்றைப் பதிவு செய்யும் படம்.

படம் தொடங்கும் போதே சொல்லப்படும் குமரிகண்டம் பற்றிய புனைகதை ஒரு தேவையற்ற காட்சி. தமிழினவாத கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இது போன்ற பிரச்சாரங்கள், படத்தின் நம்பகத்தன்மையை பாதித்து விடும். இந்தப் படத்தை எடுத்தவர்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்தக் கட்சியினருக்கு மட்டுமே உவப்பானதாக இருக்கும்.

இலங்கை என்ற தமிழ்ச் சொல் எப்போதும் பாவனையில் இருந்து வந்த போதிலும், படத்தில் எதற்காக சிலோன் என்று வலிந்து திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ்காரரின் பட்டியில் கூட சிலோன் போலிஸ் என்று இருக்கிறது. அப்படி எந்தக் காலத்திலும் வந்த சீருடையிலும் இருக்கவில்லை.

இந்தப் படத்தில் சிறிலங்கா போலிஸ் என்றால் அது சிங்களவர்கள் என்பது போன்று காட்சிப் படுத்தி உள்ளனர். அது தவறு. எழுபதுகளில் வட மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தமிழ்ப் போலீஸ்காரர்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர். சிங்களவர்கள் அனேகமாக அதிகாரிகளாக இருந்தனர். (தமிழ் அதிகாரிகளும் இருந்தார்கள்.) ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்ததும் தமிழ்ப் போலீசார் தான். அதனால், அந்தக் காலங்களில் நடந்த கெரில்லாத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களும் (பெரும்பாலும்) தமிழ்ப் போலீஸ்காரர்கள் தான்.

படத்தில் பிரபாகரனின் முதலாவது வன்முறைத் தாக்குதலாக ஒரு பஸ்ஸை எரிப்பது காட்டப் படுகின்றது. அந்தக் காலங்களில் பஸ் கொளுத்தும் போராட்டம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒருபோதும் பிரபாகரன் அதில் ஈடுபட்டிருக்கவில்லை. வேறு சில இளைஞர் குழுக்கள் அதைச் செய்தன. ஆனால், புலிகள் இயக்கத்தில் இது போன்ற போராட்டத்தை நிராகரிக்கும் போக்கு காணப்பட்டது. (காரணம்: பஸ் எரிப்பதும் வழமையான "அஹிம்சைப் போராட்டம்" என்ற கருத்து நிலவியது.)

பொன் சிவகுமாரன் போலிஸ் ஜீப் மீது தாக்குதல் நடத்த முனைந்த சம்பவம் சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. அந்த வரலாறு சரியானது தான். இருப்பினும் அந்த சம்பவத்தில் அவர் போலிஸ் ஜீப் மீது கையெறி குண்டை வீசியெறிந்தார் என நினைக்கிறேன். அது வெடிக்கவில்லை. உண்மையில் பிரபாகரனுக்கு முன்னர், சிவகுமாரன் தான் பல தாக்குதல்களை நடத்தி இருந்தார். அவற்றில் பல வெற்றி அளிக்கவில்லை என்பது வேறு விடயம். இறுதியில் போலிஸ் தேடுதலில் சிக்காமல் ஓடிய பொழுது புகையிலைத் தோட்டத்தில் தான் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். படத்தில் அந்த சம்பவம் ஒரு தெருவில் நடப்பது போன்று காட்டுவது தவறு.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் புத்த பிக்குகள் என்பது போலவும், அவர்கள் தான் தேசத்தை ஆள்கிறார்கள் என்பது போலவும் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களை கொடூரமான வில்லன்களாக காட்டுகிறார்கள். உண்மையில் புத்த பிக்குகளில் இனவாதிகள் (எல்லோரும் அல்ல) இருந்த போதிலும், அவர்கள் எப்போதும் அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார், நித்தியானந்தா மாதிரி அரசியலில் தலையிட்டுக் கொண்டிருக்கும் பௌத்த மதகுருக்கள் இன்னும் உள்ளனர். ஆனால், படத்தில் காட்டப் படுவது போன்று அவர்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக இல்லை.

இலங்கையில் புத்த பிக்குகளை, பேரினவாத அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியது. அப்படியானால் ஒரு பிரதமரான பண்டாரநாயக்கவை சுட்டதும் புத்த பிக்கு தானே என்று கேட்கலாம். அது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட சதி. அதன் பின்னணியில் சிஐஏ இருந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. இன்று வரையில் பண்டாரநாயக்க கொலை தொடர்பான மர்மங்கள் துலங்கவில்லை. அது தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.

மேதகு படத்தில் வரும் புத்த பிக்குகள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. நிச்சயமாக அது சிங்களம் அல்ல! படத் தயாரிப்பாளர்கள் சிங்களம் மாதிரி ஒரு புதிய மொழியை உருவாக்கி விட்டிருக்கிறார்கள்!! அது என்ன? பாளியா? தெலுங்கா? சமஸ்கிருதமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்! பண்டாரநாயக்கவுக்கு ஆங்கிலம் முதல் மொழி தான். ஆனால், அவரது மனைவி சிறிமாவோவும் ஆங்கிலத்தில் உரையாடுவது மாதிரிக் காட்டி இருப்பது படத்துடன் ஒட்டவில்லை.

பண்டா - செல்வா ஒப்பந்தம் ஸ்ரீ எதிர்ப்பு கலவரத்திற்கு பிறகு வந்தது. இங்கே அவை இரண்டும் கால வரிசை மாற்றிக் காண்பிக்கப் படுகின்றன. 1958 ம் ஆண்டு பிரதமராக தெரிவான பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தார். தமிழரசுக் கட்சியினர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். சிங்கள சிறியை தார் பூசி அழித்தனர். அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் ஸ்ரீ பாதுகாப்பு கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கலவரக் காலத்தில் தமிழரின் முதுகில் கத்தியால் ஸ்ரீ எழுதியமை, தமிழ்க் கடைகளை உடைத்தமை போன்ற கொடுமைகள் தென்னிலங்கையில் மட்டுமே நடந்துள்ளன. அப்போது வடக்கு அமைதியாக இருந்தது.

வடக்கு- கிழக்கில் தமிழை நிர்வாக மொழியாக்கும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க தானாக கிழித்தெறியவில்லை. அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக புத்த பிக்குகள் மட்டுமல்லாது, எதிர்கட்சியான யு.என்.பி. யும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தன. படத்தில் எதிர்க்கட்சி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்தியா மாதிரி, இலங்கையும் ஆளும் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் பாதிக்கப்பட்ட நாடு தான்.

பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் பற்றி இந்தப் படத்தில் எதுவுமே பேசப் படவில்லை. ஆளும் வர்க்கம் தவறாக கையாண்ட பிரச்சினைகள் பற்றியும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அனைவரும் தமிழர்களை ஒடுக்குவதில் மட்டும் குறியாக இருந்ததாக ஒரே முனைப்பான அரசியல் பேசுகின்றது. இலங்கை அரசியல் நிலவரம் அந்தளவு கருப்பு - வெள்ளை அல்ல. இது குறித்த புரிதல்கள், இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு இருந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சிங்களம் மட்டும் சட்டம் முதல், தரப்படுத்தல் வரை பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப் படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டன. அதிலும் தரப்படுத்தல் மாவட்ட வாரியாக செயற்படுத்தப் பட்டது. இந்தியாவில் இட ஒதுக்கீடு போன்று பின்தங்கிய மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனால் தமிழர்களில் ஒரு பகுதியினரும் நன்மை அடைந்தனர். இருப்பினும் பெரும்பான்மை சிங்களவர்கள் அதிக இலாபம் அடைந்தனர் என்பதை மறுக்க முடியாது.

துரையப்பா பற்றிய காட்சிகளிலும் அதீத மிகைப்படுத்தல்கள் உள்ளன. அவர் மேயர் வேலையை விட்டு விட்டு தமிழரசுக் கட்சியை ஒழிப்பது தான் தனது இலட்சியம் போன்று நடந்து கொண்டதாக காட்டுகிறார்கள். தமிழாராய்ச்சி மகாநாட்டில் போலிஸ் கரண்ட் கம்பிகளை அறுத்து விட்டு சிலரை சுட்டுக் கொன்று விட்டு, அந்தக் கொலைகளை விபத்து மாதிரி நடத்தி இருந்தது. அது திட்டமிடப்பட்ட கொலைகள் தான். ஆனால் படத்தில் காட்சிப் படுத்தப் பட்டது மாதிரி போலிஸ் சுற்றிவளைத்து பிடித்து அடித்துக் கொல்லவில்லை.

துரையப்பா சிறிமாவோவின் SLFP கட்சிக்காரர் தான். ஆனால், தமிழரசுக் கட்சியை இல்லாதொழிக்கும் நோக்கம் எதுவும் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அதற்கு மாறாக தமிழரசுக் கட்சியினர் துரையப்பாவை துரோகி என்று சாடி வந்தனர். அதற்குக் காரணம் தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கொலைகள் மட்டுமல்ல. தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலும் காரணம். 

அன்றைய காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்ட பிரபாகரன் போன்ற இளைஞர்கள், தமிழரசுக் கட்சியினரின் கையாட்கள் போன்றே செயற்பட்டனர். துரையப்பா கொலையில் அந்தக் கட்சிக்கும் பங்கிருந்தது. ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட சில வருடங்கள், தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதபாணி இளைஞர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தன. அவர்கள் அரசியல் தலைமைத்துவம் கொடுப்பதென்றும், இவர்கள் இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதென்றும், எழுதப்படாத ஒப்பந்தம் இருந்து வந்தது.

Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் - ஈழத்தமிழர்களையும், புலிகளையும் கொச்சைப் படுத்தும் படம்!

 


நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தமிழ் இன உணர்வாளர்களை குஷிப் படுத்தும் நோக்கில் வைக்கப் பட்ட வசனங்கள்:

"இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பி காப்பாற்றும்...!"

"எதற்கு இவ்வளவு ஆயுதங்கள்?" "தலைவன் மீண்டும் வருவான்... மக்களுக்காக போராடுவான் என்று நம்பினோம்... இன்னும் நம்புறம்!"

ஜெகமே தந்திரம் படத்தை The Family Man - 3 என்று சொல்லலாம். இது அதை விட மோசமான படம். புலிகளையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் கேவலப் படுத்தி உள்ளது.

"புலிகள் போதைவஸ்து கடத்தினார்களா?" இந்த சர்ச்சையை திமுக சார்பு அரக்கர் குழுவினர் ஆரம்பித்து வைத்திருந்தனர். ஒரு கிளப் ஹவுஸ் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. அரக்கர் கூட்டத்தினர் பத்திரிகை செய்திகள் அடிப்படையில் பேசுவதாக சொன்னார்கள். அப்போது மே- 17காரர் ஒருவர் அதை மறுத்துப் பேசினார். "புலிகள் போதைவஸ்து கடத்தவில்லை என்பதற்கு ஐ.நா. ஆதாரம்(?) இருக்கிறது" என்றார்.

ஜகமே தந்திரம் படம் புலிகளை ஒரு சர்வதேச மாபியாக் குழு என்ற மாதிரி கொச்சைப் படுத்தி உள்ளது. சில நேரம் கவனிக்காமல் விட்டு விடுவோமோ என்ற நினைப்பில் "புலிகள்... தலைவன்... புனிதப் போராட்டம்... இயக்கம்..." போன்ற சொற்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த புதுமாத்தளன் பகுதியை காட்டுகிறார்கள்.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவுவதாக காட்டப்படும் மாபியாக் குழுவினர், லண்டனில் இருந்து கொண்டு பிற நாடுகளுக்கு தங்கமும், ஆயுதங்களும் கடத்துகிறார்கள். அதனால் வெள்ளையினத்தவரின் மாபியாக் குழுவுடன் மோதல் ஏற்படுகிறது. இது தான் படக்கதை. இந்தப் படத் தயாரிப்பில் "தீவிர புலி ஆதரவாளர்கள்" பங்களித்துள்ளனர்.

ஜகமே தந்திரம், தமிழர்கள் காதில் முழம் முழமாக பூச்சுற்றும் தந்திரம்! லண்டனில் இயங்கும் ஒரு மாபியாக் குழு "தனது சொந்த செலவில்", ஈழப்போரில் பாதிக்கப்பட்ட அகதிகளை ஐரோப்பாவுக்கு கடத்திக் கொண்டு வருகிறதாம். அந்த செலவுக்காக தான் தங்கம், ஆயுதங்களை கடத்துகிறார்களாம். இப்படிப் போகிறது கதை...

நான் அறிந்த வரையில், இதுவரையில் எந்தவொரு கிரிமினல் கேங், அல்லது மாபியாக் குழுவும் (ஸாரி... "இயக்கம்" என்று சொல்லணுமாம்!) இப்படி நடந்து கொண்டதில்லை. அவர்களைப் பொருத்தவரையில் சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதும் ஒரு வருமானம் ஈட்டும் தொழில் தான். யாரும் இங்கே கொடை வள்ளல் அல்ல. இலவச தொண்டூழியம் அல்லது தான, தருமம் செய்யவில்லை.

அவர்கள் யாரையும் ஐரோப்பாவுக்கு "இலவசமாக" கூட்டி வந்ததாக நான் கேள்விப் படவில்லை. விதிவிலக்காக தமது உறவினர், நண்பர்கள், வேண்டப் பட்டவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே தமது செலவில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை விரல் விட்டு எண்ணலாம். இல்லாவிட்டால் புலிகள் இயக்கத்தால் தமது தேவைகளுக்காக அனுப்பப்பட்ட அவர்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்படி "இலவசமாக" வெளிநாட்டுப் பயணம் செய்து வந்த சிலர் இன்றைக்கும் கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள். இங்கே நான் இப்படியானவர்கள் பற்றிப் பேசவில்லை. சாதாரணமான அகதிகளைப் பற்றி பேசுகிறேன்.

ஜகமே தந்திரம் சித்தரிக்கும் கிரிமினல் குழுக்களைப் பொருத்தவரையில், ஆட்களைக் கடத்துவதும் அதிக இலாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் தான். சில நேரம், தங்கம், ஆயுதம் கடத்துவதை விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஒருவரை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கு 10000 - 20000 யூரோக்கள் அறவிடுகிறார்கள்! இத்தனைக்கும் அவர்களுக்கு அந்தளவு அதிக செலவு எடுக்காது. அதிக பட்சம் சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லை கடப்பதற்கு மட்டும் தான் அதிக பணம் செலவாகும். அதையும் ஒரு பெரிய குழுவாக கூட்டிச் செல்வதன் மூலம் செலவைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

ஆமாங்க! நான் பொய் சொல்லலீங்க!! இன்று ஐரோப்பா வரும் தமிழ் அகதிகள் பத்தாயிரம், இருபதாயிரம் யூரோ கட்டித் தான் வருகிறார்கள். அதுவும் ஜகமே தந்திரம் படத்தில் காட்டுவது மாதிரியான "தமிழர்களின் கேங்" தான் அந்தளவு பணம் வாங்குகிறது. பொதுவாக ஆட்கடத்தும் கிரிமினல் குழுக்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் அகதிகளிடம் அதிக பட்சம் ஐயாயிரம் யூரோக்கள் அறவிடுகிறார்கள். இவர்கள் எதற்காக பத்தாயிரம், இருபதாயிரம் கேட்கிறார்கள்? வேறென்ன? பேராசை தான். இது தமிழனை தமிழனே சுரண்டும் கொடுமை.

இந்த இலட்சணத்தில் "இது கள்ளக் கடத்தல் இல்லையாம்... அரசியல் போராட்டமாம்...!" அடி செருப்பாலே! கிரிமினல்களுக்கு வெள்ளை அடிப்பதற்கு இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?

ஈழ அரசியலின் பெயரால் தமிழர்களின் காதுல நல்லாத் தான் பூச் சுத்துகிறீங்க!

Wednesday, June 09, 2021

The Family Man - 2 விமர்சனம்: "தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது?"

 

அமேசன் தொலைக்காட்சித் தொடர் பேமிலி மேன் பற்றிய விமர்சனம். சுருக்கமாக சொன்னால் ஒரு மொக்கைத் தொடரை சர்ச்சைக்குள்ளாக்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இறுதியில் அமேசன் தளத்திற்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்தது தான் மிச்சம். சில நேரம் எதிர்ப்புக் கூட, ஒரு படத்திற்கு விளம்பரமாகி விடும் என்பதற்கு பேமிலி மேன் ஒரு சிறந்த உதாரணம்.

இதுவும் வணிக நோக்கில் தயாரிக்கப்படும் பிற திரைப்படங்கள் போன்று, ஹிந்தி பேரினவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய தேசபக்தி படம் தான். இந்தத் தடவை குறிப்பாக தமிழர்கள் மீது இனவாத வன்மம் காட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதிலும் காஷ்மீரிகளுக்கு எதிரான வன்மம், பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு (லவ் ஜிகாத்) என்று வழமையான இனவாத மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப் பட்ட ஒரு குப்பைப் படம். இதற்கு இந்தளவு ஆரவாரம் செய்யத் தேவையில்லை. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலே தோல்வி அடைந்திருக்கும்.

இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில், so called "புலி ஆதரவாளர்கள்", அல்லது வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள், கொஞ்சம் ஓவராகவே பொங்கிப் படைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதப் பிம்பம் உடைக்கப் படும் போது ஏற்பட்ட வலி காரணமாக கதறி இருக்கிறார்கள். "புலிகளைப் பற்றி உனக்கென்ன தெரியும்?" என்ற கணக்காக பொரிந்து தள்ளி விட்டார்கள். ஒருவர், ஹிந்திக்காரர்களுக்கு தமிழ் புரியாதே என்ற ஆதங்கத்தில், யூடியூப்பில் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டு இருந்தார்.

பேமிலி மேன் தொடர் புலிகளை கொச்சைப்படுத்தி உள்ளது என்பது உண்மை தான். ஏற்கனவே காஷ்மீர் போராளிகளை கொச்சைப் படுத்தியவர்கள் புலிகளை மகிமைப் படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது எமது மடமைத்தனம். ஆனால், பார்வையாளர்கள், (தமிழர் அல்லாத வேற்றின) மக்கள், இந்தப் படத்தை பார்த்து தான் புலிகளை மதிப்பிடப் போகிறார்கள் என நினைப்பது வேடிக்கையானது.

உண்மையில் பேமிலி மேன் தொடர் புலிகளை சித்தரித்துள்ள விதம் சிறுபிள்ளைத்தனமானது. நகைப்புக்குரியது. தொடக்கத்தில் இருந்து "குறிப்பிட்ட ஐந்து நபர்களைத் தான்" படம் முடியும் வரை காட்டுகிறார்கள். ஒரு சிறு குழுவின் சாகசக் காட்சிகளை பார்த்தால், அதை ஒரு போராட்டம் என்று எவனும் நம்ப மாட்டான். சுருக்கமாக சொன்னால், ஒரு மாபியாக் குழு மாதிரி சித்தரித்து இருக்கிறார்கள். இதை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்? புலிகளை மறந்து விட்டு பார்த்தால், இதுவும் அரைத்த மாவை அரைத்த அரைவேக்காட்டு படம் தான்.

ஏற்கனவே செய்திகளில் கேள்விப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு படக்கதை எழுதப் பட்டிருந்தாலும், யதார்த்த அரசியலில் இருந்து வெகுதூரம் சென்று விடுகின்றது. அதனால் ஒரு செயற்கைத்தன்மை உண்டாகின்றது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வெளியான மெட்ராஸ் கபே திரைப்படம், ஓரளவு வரலாற்று உண்மைகளுடன் ஒத்துப் போகின்றது. அதனுடன் ஒப்பிட்டால் பேமிலி மேன் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்ட சராசரி மொக்கைப் படம். 

உண்மையில், வட இந்திய ஹிந்திக்காரர்கள் என்றாலும், அன்றாடம் செய்தி வாசிப்பவர்களுக்கு புலிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்களுக்கு, சிறு குழந்தைக்கு கதை சொல்வது மாதிரி, புலிகள் இந்தப் பேமிலி மேன் படத்தில் வருவது மாதிரி இருப்பார்கள் என்று சொல்லி ஏமாற்ற முடியாது. அரசியலில் நாட்டமில்லாத மக்கள் மட்டும், இதையும் இன்னொரு "காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய படம்" என்பது மாதிரி பார்த்து விட்டு கடந்து செல்வார்கள். (அவர்களில் பலருக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்றும் தெரியாது.) அதற்கு ஏற்றவாறு கதாசிரியர் காஷ்மீர், ISI பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் பொதுவாக புலிகளை ஆதரிக்கும் தமிழர்களின் விகிதாசாரம் மிகக் குறைவாகத் தான் இருக்கும். நாற்பது சதவீதம் ஆதரிக்கிறார்கள் என்பதே ஒரு மிகைப்படுத்தல் தான். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களிடமும் புலிகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இருப்பினும் அதே மக்கள் வெளியுலகில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு வழங்குவது போன்று காட்டிக் கொள்வார்கள். இது அவர்களது இருப்பு சார்ந்த விடயம்.

குறிப்பாக சிங்கள அல்லது ஹிந்தி பெரும்பான்மையினத்தின் அடக்குமுறையை, பேரினவாத மேலாண்மையை எதிர்கொள்ளும் போதெல்லாம், தமிழர்கள் தமது முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஓரினமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் இந்த ஒற்றுமை உணர்வு தான் பேமிலி மேன் படத்தில் மிகுந்த வெறுப்புடன் அணுகப் படுகின்றது. அதை நெறியாளர் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார். 

கவனிக்கவும்: "தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை" என்று தமிழினவாதிகள்(வலதுசாரிகள்) மட்டும் தான் சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர்களது வழமையான அரசியல் பிரச்சாரம். ஆனால், வெளியுலகம் தமிழர்களை அப்படிப் பார்ப்பதில்லை. சிங்களவர்களை அல்லது ஹிந்திக்காரர்களை கேட்டால், தமிழர்களிடம் உள்ள ஒற்றுமை தமது மக்களிடம் இல்லை என்பார்கள்!

இதை "ஆரிய - திராவிட முரண்பாடு" என்று சொல்லலாம். அதை ஏற்க மறுப்பவர்கள் "சிங்கள - தமிழ் முரண்பாடு" அல்லது "ஹிந்தி - தமிழ் முரண்பாடு" என்று சொல்லலாம். அது அவரவர் அடையாள அரசியல் குறித்த பிரச்சினை. எது எப்படி இருப்பினும் ஹிந்தி மொழி பேசும் வட இந்தியர்களுக்கும், தமிழ் மொழி பேசும் தென்னிந்தியர்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பரம்பரைப் பகை இருந்து வருவது மட்டும் உண்மை. இந்த இன முரண்பாட்டை பேமிலி மேன் படம் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே காட்டி விடுகின்றது.

இந்தப் படத்தில் வட இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளாக வரும் கதாபாத்திரங்கள் (திவாரி, ஜேகே, மிலிந்த்) வாழும் இடங்களைப் பார்த்தால் ஐரோப்பா மாதிரி இருக்கிறது. அவர்களது வீடுகளும், வேலை செய்யும் இடங்களும் மிக நவீனமாக உள்ளன. அவர்களது நடை, உடை, பாவனை, கலாச்சாரமும் மேற்கத்திய நாட்டவர் போன்றிருக்கிறது. நிச்சயமாக, குடும்பக் காட்சிகளை பார்க்கும் ஐரோப்பியர்கள் அதில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அந்தளவு மேற்கத்திய வாடை அடிக்கிறது.

ஆனால், கதை சென்னைக்கு நகர்ந்ததும் காட்சியமைப்புகள் தலைகீழாக மாறி விடுகின்றன. அப்போது தான் சன நெருக்கடியும், இரைச்சலும் மிக்க, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஒரு மாநிலத்தை பார்க்கிறோம். "இதுவும் இந்தியாவிலா இருக்கிறது?" என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். பேமிலி மேன் படம் தமிழ்நாட்டை சித்தரிக்கும் காட்சிகளை பார்ப்பவர்கள், அது எங்கோ ஆப்பிரிக்காவில் இருப்பதாக நினைப்பார்கள். அந்தளவு மோசமாகக் காட்டி இருக்கிறார்கள்.

பேமிலி மேன் காட்டும் தமிழ்நாடு எந்த வித மாற்றமும் இல்லாமல் எழுபது வருடங்களுக்கு முந்திய பழைய வீடுகளுடன் உள்ளது. தமிழர்களின் உடுத்துவதிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே "பழைய பஞ்சாங்கம்" தானாம்! காலனிய காலத்தில் வெள்ளையர்கள் தமக்கு கருப்பர்களை நாகரிகமயப் படுத்தும் கடமை இருப்பதாக கருதிய மாதிரித் தான், வட இந்தியர்கள் தமிழர்களை பார்க்கிறார்கள். 

தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தெருவில் மக்கள் குடங்களுடன் குழாயடியில் தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்க முடியவில்லை என்று வட இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி புலம்புகிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது!

இதெல்லாம் படத்தில் எந்தளவு தூரம் தமிழர்களுக்கு எதிரான இனவாதம் கட்டமைக்கப் படுகின்றது என்பதற்கான உதாரணங்கள். இந்தக் காட்சியமைப்புகளுக்கு பின்னால் ஒரு மேட்டுக்குடி மனப்பான்மை மட்டுமல்லாது, தமிழர்களுக்கு எதிரான இனவாத வெறுப்புணர்வும் காணப்படுகின்றது. இது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய விடயம்.

பொதுவாகவே வட இந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. இருப்பினும், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் ஹிந்தி மொழி மேலாதிக்கம் தீவிரமாக எதிர்க்கப் பட்டு வருகின்றது. அரசியல் களத்தில் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்கள் மத்தியில் கூட தமிழ் மொழி பேசுவதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்த விடயத்தில் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் கட்சி வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு வேற்றுமை கூட அங்கே மறைந்து விடும். தமிழர்களின் இந்த ஒற்றுமை உணர்வு வட இந்தியர்களுக்கு மிகுந்த எரிச்சல் ஊட்டி வருகின்றது.

இதனை என்னுடன் பேசிய சில வட இந்திய நண்பர்கள் நேரடியாகவே தெரிவித்துள்ளனர். அதிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் "தொப்புள்கொடி உறவு பாசம்" கண்டு அவர்கள் இன்னும் பல மடங்கு எரிச்சல் அடைகிறார்கள். இந்த வெறுப்புணர்வை பேமிலி மேன் படத்தில் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஈழத்தவர் என்றாலும், தமிழ்நாட்டவர் என்றாலும் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்று இந்திய நடுவண் அரசுக்கு "போட்டுக்" கொடுக்கிறது. தமிழ்நாட்டில் பேரினவாத மொழியான ஹிந்தியும் பேசத் தெரிந்த அதிகார வர்க்கத்தினரை நம்பலாம். ஆனால், தமிழ் மட்டுமே பேசும் மக்களை நம்ப முடியாது. ஆகவே, தமிழ்நாட்டை விரைந்து ஹிந்தி மயப் படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு. இது தான் இந்திய அரசுக்கும், பார்வையாளர்களுக்கும் பேமிலி மேன் தெரிவிக்கும் செய்தி.

உதாரணத்திற்கு புலனாய்வுத்துறை அதிகாரியாக வரும் முத்து அரசுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதே மாதிரி இயக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டே காட்டிக் கொடுக்கும் இன்போர்மர் செல்லமும் ஹிந்தி பேசுகிறார். துரோகிகள் ஆட்சியாளர்களின் நண்பர்கள் என்பது உண்மை தானே? இதன் இன்னொரு வடிவம் தான், லண்டனில் இயங்கும் நாடுகடந்த ஈழ அரசின் தலைவராக காட்டப்படும் தீபன் என்ற பாத்திரம். அவரும் தனக்குத் தெரிந்த இரகசியங்களை எல்லாம் இந்திய அரசுக்கு தெரிவித்து விடுகிறார். படத்தின் முடிவில் இவர்களுக்கு மெடல் கொடுத்து கௌரவிக்காதது மட்டுமே குறை.

எப்போதும் இந்திய மத்திய அரசுடன், அதாவது ஹிந்தி பேரினவாதத்துடன் ஒத்தோடிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளை இந்த பேமிலி மேன் படம் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதைத் தான் அவர்களது கதறல்களும் வெளிப்படுத்துகின்றன. தங்களுக்கு "தமிழீழம் பிரிவது மட்டுமே முக்கியம் என்றும், தமிழ்நாடு எப்போதும் போல இந்திய இறையாண்மையை ஏற்று நடக்கும் என்றும்..." வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் சொல்லி வருகின்றனர்.

அதற்கு பேமிலி மேன் சொல்லும் பதில் என்ன? "நீங்கள் இலங்கையின் இறையாண்மையை எதிர்க்கிறீர்கள் என்றால், இந்தியாவின் இறையாண்மையையும் எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம்! அதனால் நாங்கள் உங்களை பாகிஸ்தான் ISI உடனும், காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் சேர்த்துத் தான் பார்ப்போம்!"

இங்கே சில உதாரணங்களை பார்ப்போம்: 
- இந்தப் படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் ராஜி என்ற பெண் போராளியை, ஒரு கட்டத்தில் வேதாரணியத்தில் (பெயர் மாற்றி இருக்கிறார்கள்) பிடித்து உள்ளூர் போலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் இயக்கத்திற்கு ஆதரவானவர்கள். அதனால் உளவுத்துறையினரின் விசாரணையில் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மாறாக, மக்கள் ஒன்று சேர்ந்து புலனாய்வுத்துறை அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். போலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி பெண் போராளி ராஜியை விடுவித்து விடுகிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது ஒரு காஷ்மீர் போராளி!

- லண்டனில் மறைந்து வாழும் "புலிகள்"(?) இயக்கத் தலைவருக்கு உற்ற நண்பனாக வருபவர் ஒரு ISI அதிகாரி. யாருக்கும் தெரியாமல் இயக்கத் தலைவர் பாஸ்கரனை பாதுகாப்பாக பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த இயக்கத்தின் "உப தலைவர்" தீபனை கூட நம்ப முடியாது. ஏனென்றால் அவர் இந்திய அரசுடன் ஒத்துழைப்பவர். இறுதியில் தீபனின் காட்டிக்கொடுப்பால் தலைவர் பாஸ்கரன் சயனைட் கடித்து தற்கொலை செய்து கொள்கிறார். அதாவது, பாகிஸ்தானிகளும், காஷ்மீரிகளும் ஈழத்தமிழர்களுடன் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால், இந்தியர்களை (ஹிந்தி பெரும்பான்மையினரின் அரசு) வெறுக்கிறார்கள்.

இப்படிப் போகிறது கதை!

Monday, June 07, 2021

James Bond முதல் Family Man வரை

- ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சோவியத் ரஷ்யாவையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் வில்லன்களாக காட்டி எடுத்திருந்தார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் ரஷ்யர்களும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- வியட்கொங் விடுதலைப் போராளிகளால் தென் வியட்நாம் விடுதலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட ராம்போ போன்ற திரைப்படங்களில் வியட்நாமிய போராளிகளை வில்லன்களாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை ஹீரோக்களாகவும் காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் வியட்நாமியரும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ராம்போ-2 வில் சோவியத் செம்படையினரை கொடூரமான வில்லன்களாக காட்டினார்கள். ஆப்கான் இஸ்லாமியவாத ஜிகாதிகளை ஹீரோக்களாக காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ரோஜா என்ற தமிழ்த் திரைப்படத்தில் காஷ்மீர் விடுதலைப் போராளிகளை இஸ்லாமிய மதவெறி பிடித்த கொடூரமான வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் காஷ்மீரிகளும் அல்ல, இஸ்லாமியரும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- உயிரே எனும் தமிழ்த் திரைப்படத்தில் அசாமிய விடுதலைப் போராளிகளை வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் அசாமியர் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- கடந்த இருபது வருட காலமாக பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாதிகளை வில்லன்களாக காட்டும் திரைப்படங்கள் ஏராளம் வந்து விட்டன. ஹாலிவூட் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப் பட்ட ஏராளமான ஹிந்தி, தமிழ்ப் படங்கள் அது போன்ற கதைக்கருவை கொண்டிருந்தன.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பிராந்திய வல்லரசும் தமது நலன்களுக்கு எதிரான இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்து தடைசெய்திருந்தன. அப்போதெல்லாம் எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல் நடந்து கொண்டோம். உலகத்தை அல்லது பூகோள அரசியலை புரிந்து கொள்வதற்கு, எமது குறுகிய சிந்தனை கொண்ட தமிழ்த்தேசியம் அனுமதிக்கவில்லை. அதைக் கூட ஒரு குறைபாடாக நினைக்காமல், பெருமையாக நினைத்துக் கொண்டோம்.

நாங்கள் தொடர்ந்தும் அமெரிக்க- இந்திய நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டோம். இப்போதும் காட்டிக் கொள்கிறோம். எஜமானின் காலடியில் விழுந்து கிடந்தோம். ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மகாநாட்டில் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழர்கள் பக்கம் நிற்பதாக எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம். தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, கியூபாவை மட்டும் தேர்ந்தெடுத்து திட்டித் தீர்த்தோம். அப்போது தான் அமெரிக்காவின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று உண்மையிலேயே நம்பினோம்.

அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காக நாங்களும் சீனாவை திட்டினோம். இலங்கையில் சீன மொழித் திணிப்பு நடக்கிறது, சீனாவின் காலனி உருவாகிறது என்று பிரச்சாரம் செய்தால் இந்தியா தமிழர்களை ஆதரிக்கும் என்று நம்பினோம். சர்வதேச மட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை கண்டித்தோம். "இஸ்லாமியர்களை நம்ப முடியாது... குண்டு வைப்பார்கள்..." என்று ஏகாதிபத்தியம் சொல்லித் தந்த பாடத்தை மனனம் செய்து ஒப்புவித்தோம். அத்துடன் இஸ்ரேலை இருக்க விடாமல் அரபு- இஸ்லாமியர்கள் தாக்குகிறார்கள் என்று சொல்லி, பாலஸ்தீனர்களின் போராட்டத்தை எதிர்த்து வந்தோம். இஸ்ரேலை நிபந்தனை இன்றி ஆதரித்தோம். இதன் மூலம் அமெரிக்க எஜமான் மனத்தைக் குளிர வைத்தோம்.

இவ்வாறு எந்தவிதமான அரசியல் புரிதலுமற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் குறுந் தேசியவாதிகளின் பலவீனத்தை பயன்படுத்தி Family Man - 2 சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்:

1. இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பி விட்டதாகவும் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தமிழ்த் தேசியவாதிகள் தான் கதைகளை கட்டி விட்டார்கள். அனைத்து தமிழர்களும் தாம் சொல்வதை உண்மை என்று நம்ப வேண்டும் என அடம்பிடித்தார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. பாஸ்கரன் என்ற பாத்திரப் பெயருடன் வரும் பிரபாகரன் போர்க்களத்தில் இருந்து உயிருடன் தப்பி விட்டதாக சொல்கிறது.

2. வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகளை "உண்மையான தமிழினப் பற்றாளர்கள்" என்று தமிழர்கள் பலர் (இன்றும்) நம்புகிறார்கள். அன்று புலிகளும் அவர்களை நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. ஆரம்பத்திலேயே வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இந்தியப் புலனாய்வுத்துறையின் தொடர்பில் இருப்பவர்களாக காட்டப் படுகின்றனர். அவர்கள் புலிகளின் தலைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது விசுவாசம் இந்திய இறையாண்மை மீதே இருக்கிறது. (இந்த உண்மையை சீமானும் மறுக்கவில்லை.)

3. இறுதிப்போரில் புலிகளின் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாத தமிழ்த் தேசியவாதிகள், "இருபது சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்து விட்டன" என்று சொல்லித் திரிந்தார்கள். இப்போது கேட்டாலும் அதைத் தான் சொல்வார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. புலிகளை அழித்த இந்த சர்வதேச நாடுகள் எல்லாம்,  இஸ்லாமியவாதிகளுக்கும் எதிரி நாடுகள் தான். ஆகவே லண்டனுக்கு தப்பிச் சென்ற புலிகளின் தலைவர் அங்கிருந்த படியே ISI உடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதாக கதை அமைத்திருக்கிறார்கள்.

4. அமெரிக்காவில் ஸ்தாபிக்கப் பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபதிபத்திய, அல்லது இந்திய பிராந்திய வல்லரசின் நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறது. இதை அவர்கள் எந்த ஒளிவுமறைவும் இன்று நேரடியாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எந்தக் கட்டத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளாது. மாறாக, இந்திய அரசுடன் ஒத்துழைப்பார்கள் என்று கதை அமைத்திருக்கிறார்கள். 

 *****

சரி, இனிமேல் Family Man - 2 சர்ச்சைக்கு பிறகாவது இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்த்தேசியவாதிகள் திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இப்போதும் கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் அவர்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான நிலைமையில், Family Man - 2 க்கு எதிரான எதிர்ப்புகள் அதற்கான விளம்பரமாக அமையுமே தவிர வேறெந்த பலனையும் தரப் போவதில்லை. இனி வருங்காலத்தில் இது போன்ற படங்கள் தயாரிப்பதற்கான ஊக்குவிப்பாகவே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை கருதிக் கொள்வார்கள்.

Tuesday, October 20, 2020

800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்!

கிரிக்கட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் 800 திரைப்படத் தயாரிப்பு தொடங்கும் பொழுதே தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது. புதிய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் என்று அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களான பாரதிராஜா, தாமரை, வைரமுத்து, திருமுருகன் காந்தி, சீமான் இன்னும் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இதனால் தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமல்லாது, விவாத நிகழ்ச்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு இந்த சர்ச்சை வளர்ந்து வந்தது.

தமிழகத்தின் புதிய தமிழ்த்தேசியவாதிகளால் "துரோகி" முத்திரை குத்தப்பட்ட முத்தையா முரளிதரன் வரலாற்றுத் திரைப்படத்தில், அரசியல் உணர்வுள்ள குணச்சித்திர நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். முத்தையா முரளிதரன் "இனப்படுகொலையை நியாயப் படுத்தி வந்தார், சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக பேசி வந்தார்", அதனால் அப்படியானவரின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று "அன்புக் கட்டளை" இட்டனர். பகிரங்க மிரட்டல்களுக்கு "வேண்டுகோள்", "அறிவுரை" என்றும் அர்த்தம் இருப்பதாக இப்போது தான் தெரிகிறது.

இங்கே உலகப் புகழ் பெற்ற கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் விளையாட்டு சாதனைகள் பின்னுக்கு தள்ளப் பட்டு, அவர் பேசிய அபத்தமான அரசியல் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழ் உணர்வாளர்கள், ஒரு திரைப்படத் தயாரிப்பில் தலையிடுவது மட்டுமல்லாது, கருத்து சுதந்திர மறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தமிழகத்தில் இன்னமும் ஜனநாயக சூழல் வளரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் குறைந்த பட்ச கருத்துச் சுதந்திரத்தை கூட எதிராளிக்கு தர மறுப்பதையும், சகிப்புத்தன்மை இன்றி நடந்து கொள்வதையும் கண்கூடாகக் காணக் கூடியதாக உள்ளது.

இந்த தமிழ்த்தேசிய அடிப்படைவாதிகள், தாம் ஈழத் தமிழர்களின் பெயரால் பேசுவதாக காட்டிக் கொண்டாலும், இவர்களது போராட்டத்தால் ஈழத் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது என்பது தெரியவில்லை. இவர்களிடம் அது பற்றிக் கேட்டால், தாம் இனப்படுகொலைக்கு நீதிகோருவதாகவும், இந்த செய்தி சிறிலங்கா அரசை பிடித்து உலுக்கி விடும் என்றும் கூறுகிறார்கள். நான் அறிந்த வரையில், இலங்கையில் யாரும் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.

பொதுவாகவே தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை  இலங்கையில் வாழும் தமிழர்கள் கூட பெரிது படுத்துவதில்லை. அதற்குக் காரணம், ஒரு பொழுதுபோக்கு சினிமாப் படத்திற்காக உணர்ச்சிகரமாக பொங்கியெழும் யாரும், உண்மையான பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. அத்துடன், தமிழ்நாடு மாதிரி, ஈழத்தில் சினிமா அரசியல் பெருமளவு தாக்கம் செலுத்துவதில்லை. ஒரு சினிமா நடிகரோ அல்லது விளையாட்டு வீரரோ அரசியல் கருத்துக் கூற வேண்டும் என்று இலங்கையில் யாரும் எதிர்பார்ப்பதில்லை.

அந்த வகையில் அன்று முரளிதரன் தெரிவித்த "அரசியல்" கருத்துக்களையும் யாரும் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் ஓர் அரசியல்வாதி அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். பெட்டைக் கோழி கூவி பொழுது விடிவதில்லை. ஒரு தடவை முரளிதரனின் சகோதரன் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் தேர்தல் பிரச்சாரம் செய்தும், அவர் வெல்லவில்லை. இன்னொரு தடவை, கொழும்பில் UNP ஆதரவுடன் தேர்தலில் நின்ற மனோ கணேசனுக்கு எதிராக, மகிந்த ராஜபக்சேவின் கட்சியான SLFP முரளிதரனை கொண்டு எதிர்ப்பிரச்சாரம் செய்வித்தது. அப்படி இருந்தும் மனோகணேசன் வென்றார். இதை அவரே தனது முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.  அந்தளவுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் அரசியலையும், விளையாட்டையும் பிரித்துப் பார்க்கிறார்கள்.

முரளிதரன் தனது அரச ஆதரவுக் கருத்துக்களை இலங்கையில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் மட்டும் சொல்லி இருந்திருந்தால், அது இந்தளவு தூரம் சர்ச்சையை கொண்டு வந்திருக்காது. அங்கு ஏற்கனவே பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தத்துப் பித்து என்று உளறி இருக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் கணக்கெடுக்கவில்லை. ஆனால், அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் கூர்ந்து கவனிப்பார்கள். அவர்கள் ஒரு சொல் தவறாக சொன்னாலும், அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். ஏனென்றால் அரசியல்வாதிகள் கருத்துருவாக்கிகள். விளையாட்டு வீரர்கள் அப்படியானவர்கள் அல்ல. அவர்களிடம் விளையாட்டை தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.

சிங்களவர்கள் பொதுவாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ன சொல்கிறார் என்று தான் கூர்ந்து கவனிப்பார்கள். முன்பு ஜெயலலிதா, அதற்கு முன்னர் கருணாநிதி ஆகியோர் இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சிங்கள ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படும். அவை பொது மக்கள் மத்தியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படும். தீவிர இனவாதம் பேசும் சிங்களக் கட்சிகளும், அமைப்புகளும் "இந்திய விஸ்தரிப்புவாதிகளுக்கு" எதிரான தமது எதிர்ப்பை பதிவு செய்வார்கள். ஆனால், சீமான், தாமரை, பாரதிராஜா போன்ற தீவிர தமிழினப் பற்றாளர்களை யாரும் கணக்கெடுப்பதில்லை. அவர்கள் யார் என்பதே சிங்கள மக்களுக்கு தெரியாது.

இலங்கையில் எந்தவொரு சிங்களவரும், இது போன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை கண்டுகொள்வதில்லை. காரணம் மிக இலகு. தற்போதைய 800 திரைப்பட சர்ச்சை தொடர்பாக ஒரு சிங்கள ஊடகம் எப்படி தெரிவிக்கும்?  "தமிழ்நாட்டில் தமிழர்கள் முரளிதரன் என்ற ஒரு தமிழனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் தமிழ்ப் படத்தை எதிர்க்கிறார்கள்!" சுருக்கமாக, இது தமிழர்களின் உள்வீட்டுப் பிரச்சினை. இவ்வாறு தான் அந்த செய்தி வெளிவரும். இதைப் பார்க்கும் ஒரு சராசரி சிங்களவர், "தமிழர்கள் தங்கள் இனத்தில் ஒருவன் முன்னுக்கு வருவதை விரும்பாத அளவுக்கு பொறாமை மிக்கவர்கள் போலிருக்கிறது..." என்று நினைத்து விட்டு நகர்ந்து சென்று விடுவார்.

"அப்படி அல்ல, தமிழர்கள் ஒன்று திரண்டு இனப்படுகொலைக்கு நீதி கோருகிறார்கள்" என்று சிங்கள ஊடகங்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். யுத்தம் நடந்த காலங்களில், இராணுவத்தால் கொல்லப் பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருந்த ஊடகங்களிடம் இதை விட வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்? சில நேரம், இராணுவத்தால் பொது மக்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தால், அவை புலிகளின் தாக்குதலின் எதிர்வினையாக நடந்தவை என்றும் குறிப்பிடத் தவறுவதில்லை. தமது தேசத்தை பாதுகாக்கும் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடும் என்பதற்காக போர்க்குற்றம் பற்றிக் கூட பேச மறுத்து வருகின்றனர். 

முரளிதரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளில் பாரதூரமானது, காணாமல்போனவர்களை தேடி போராட்டம் நடத்தியவர்களை கொச்சைப் படுத்தியது தான். இதனை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி கூட விமர்சித்து இருந்தது. அவர்கள் தவறாக வழிநடத்தப் பட்டிருக்கலாம் என்ற பதில் எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத கூற்று. இது பாதிக்கப் பட்ட மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் தான் ஆதரிக்கும் அரசை நியாயப் படுத்த நினைத்தாலும், இது போன்ற பதில்களை தவிர்ப்பது புத்திசாலித்தனம். அநேகமாக அரசியல் அனுபவமின்மை காரணமாக அந்தக் கூற்று அவரது வாயில் இருந்து வந்திருக்கலாம். இருந்தாலும் தவறு தவறு தான்.

அதற்காக, அன்று முரளிதரன் தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைகளை கண்டித்திருக்க வேண்டும், இனப்படுகொலை பற்றிப் பேசி இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. உண்மையில் அவர் அப்படி ஏதாவது பேசியிருந்தாலும், அது தேசத்துரோகமாக கருதப்பட்டு, இனிமேல் கிரிக்கெட் விளையாடவே முடியாமல் தடைசெய்திருப்பார்கள். அன்றைய காலத்தில், அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, அதிக பட்சம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.

ஈழப் போர் முடிந்தது தொடர்பாக முரளிதரன் தெரிவித்த கருத்தானது, "இனப்படுகொலையை ஆதரித்தார்" என்பதாக திரிபுபடுத்தி பரப்பப் படுகின்றது. தமிழ்நாட்டில் சில அரசியல் அறிஞர்கள் கூட கண்ணை மூடிக் கொண்டு இப்படி ஒரு பொய்யை பரப்புரை செய்து வருகின்றனர். முரளிதரன் அவ்வாறு சொன்னதாக நான் எங்கேயும் கேள்விப் படவில்லை. இவர்களே அப்படி ஒன்றை கற்பனை செய்து கொள்கிறார்கள்.

அன்று அவர் போர் முடிந்ததால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து இருந்தாலும், அது ஒரு சாமானியனின் கூற்றாக கருதப் பட வேண்டும். ஏனெனில் அன்று சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் முப்பதாண்டு கால போர் முடிவுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். உலகில் எந்த நாடாக இருந்தாலும், போர் முடிந்தால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவது சாதாரண விடயம். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிந்த நேரம் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கவில்லையா? அதைக் கொண்டாடவில்லையா? ஜெர்மனியிலும் பலருக்கு போரின் முடிவு திருப்திகரமாக இருக்கவில்லை.

உண்மையில் இறுதிப் போர்கூட தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகத் தான் நடந்தது. அதிகம் பேசுவானேன். புலிகள் இயக்கப் போராளிகளே இந்தப் போர் போதும் என்ற கட்டத்திற்கு வந்து விட்டிருந்தனர். அந்தளவுக்கு எல்லோரும் போரினால் களைத்துப் போயிருந்தனர். அன்று அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் போர் முடிவுக்கு வந்து விடும் என்று நம்பினார்கள். அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. இது சாதாரண மக்களின் மனநிலை. நீண்ட காலப் போரினால் உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும், வார்த்தையில் வடிக்க முடியாத அளவுக்கு துன்பங்களையும் அனுபவித்த மக்களிடம் இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்?

இது போன்ற விவாதங்களில் மிகுந்த மனச்சோர்வை தரும் விடயம் என்னவென்றால், பலரிடம் வர்க்கப் பார்வை மருந்துக்கும் கிடையாது. ஒரு சில இடதுசாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மூலதனம் நூலை தமிழில் மொழிபெயர்த்த முன்னாள் மார்க்சிஸ்ட் தியாகு கூட தட்டையான இனவாத கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார் என்பது வருத்தத்திற்குரியது. இந்தியாவில் நடப்பது வர்க்கப் போராட்டம் என்பவர்கள் கூட, ஈழம் என்று வந்து விட்டால் மட்டும் சிங்களவர் எதிர் தமிழர் என்று இன அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் முரண்நகையை புரிந்து கொள்ள முடியவில்லை.

முரளிதரனின் குடும்பம், இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான கண்டியில் வாழ்ந்து வருகின்றது. அவரது தந்தை முத்தையா, லக்கிலேன்ட் பிஸ்கட் கம்பனி நடத்திய ஒரு முதலாளி. அப்படியானால் முரளிதரனின் வர்க்கம் என்னவென்று நான் சொல்லியா புரிய வேண்டும்? அவர் கல்விகற்றதும் மத்தியதர வர்க்க பிள்ளைகள் செல்லும் தனியார் பாடசாலை ஒன்றில் தான். அதனால் தான் கிரிக்கெட் விளையாட்டில் முன்னுக்கு வந்து, தேசிய அணியில் இடம்பெற முடிந்தது. இலங்கையில் இன்றைக்கும் சாதாரண அரசு பாடசாலைகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தேசிய அணியில் இடம்பெறுவது ஒரு கனவாக மட்டுமே உள்ளது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, இலங்கையிலும் கிரிக்கெட் எப்போதும் மேட்டுக்குடியினரின் விளையாட்டாகவே இருந்து வந்துள்ளது.

நீண்ட காலமாகவே, தேசிய கிரிக்கெட் அணியில் தமிழ் விளையாட்டு வீரர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை என்ற குறைபாடு இருந்து வந்தது. இதுவும் இனப் பிரச்சினையின் ஓரங்கம் தான் என்பதை பலர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். எப்போதாவது ஓரிருவர் சேர்க்கப் பட்டாலும், அவர் நிச்சயம் ஏதாவதொரு மேட்டுக்குடி பாடசாலையில் கல்வி கற்றிருப்பார். அந்த வகையில் முரளிதரன் தமிழனாக இருந்தாலும், அவரது வர்க்க அடிப்படை தான் கிரிக்கெட்டில் முன்னுக்கு வர உதவியது எனலாம். நிச்சயமாக இதெல்லாம் திரைப்படத்தில் பேசப் படப் போவதில்லை. நமது பெரு மதிப்புக்குரிய தமிழின உணர்வாளர்களும் வாய் திறக்க மாட்டார்கள்.

இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் போது முத்தையா குடும்பத்திற்கு சொந்தமான வணிக நிறுவனம் சிங்களக் காடையரினால் கொளுத்தப் பட்டது. முரளியின் தந்தைக்கு வெட்டு விழுந்தது. ஆகவே அவர்களும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் தான். இருப்பினும், இழந்த செல்வத்தை மீண்டும் திரட்டிக் கொண்டதும் தமது மேட்டுக்குடி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டனர். கிரிக்கெட்டால் நிறைய சம்பாதித்த முரளிதரனும் தனது பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலிட்டுள்ளார். ஆகையினால், முதலாளிகளின் இடத்தில் இருந்து பார்த்தால், அரசுக்கு ஆதரவாக இருப்பது அவர்களது வர்க்க நலன்களுக்கு அனுகூலமானது.

தென்னிலங்கையில் தொழிற்துறையில் சிறந்து விளங்கும் தமிழ் முதலாளிகள் எல்லோரும் அரசுக்கு ஆதரவாகத் தான் நடந்து கொள்வார்கள். இந்த விடயத்தில், தென்னிலங்கையில் வாழும் வட மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலதிபர்களும் விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு யாழ்ப்பாணத் தமிழ் கோடீஸ்வரரான மகாராஜா நிறுவனத்தின் உரிமையாளரை எடுத்துக் கொள்வோம். அவர் நீண்ட காலமாக UNP அனுதாபி. UNP எனும் வலதுசாரி பேரினவாதக் கட்சி தான் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தியது. பேரழிவு தந்த ஈழப்போரை தொடங்கி வைத்த பெருமைக்குரியது.

அமெரிக்காவில் ரிப்பப்ளிக்கன், டெமோக்கிராட்டிக் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்கும். அதனால் அந்நாட்டில் உள்ள முதலாளிகளும் இவ்விரு கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பார்கள். அதே மாதிரியான நிலைமை தான் இலங்கையிலும் நிலவுகிறது. மகாராஜா முதலாளி UNP அனுதாபி என்றால், முத்தையா முரளிதரன் SLFP அனுதாபி. அவ்வளவு தான் வித்தியாசம். அதிகம் பேசுவானேன். போர் முடியும் வரை தீவிர புலி விசுவாசிகளாக வெளிநாடுகளில் நிதி சேகரித்து மூலதனம் திரட்டியவர்கள், இன்று இலங்கைக்கு சென்று ராஜபக்சே ஆசீர்வாதத்துடன் முதலிட்டுள்ளனர். அதிலென்ன ஆச்சரியம்? இனம் இனத்தோடு தான் சேரும். முதலாளிகள் எப்போதும் அதிகார வர்க்கம் சார்ந்து நிற்பார்கள். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் நிழல் அரசை ஆதரித்த அதே முதலாளிகள், பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும் அரச ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். அது முதலாளிகளின் இயற்கையான வர்க்கக் குணாம்சம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

இன்னும் தயாரிக்கப் படாத திரைப்படம் ஒன்றுக்காக, இல்லாத எதிரிக்காக காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் திடீர் தமிழின உணர்வாளர்களுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் புரியப் போவதில்லை. முதலில், முரளிதரன் போன்ற முதலாளித்துவவாதிகள் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பதே மடமைத்தனம். "ஐயா, இது காளை மாடு, பால் தராது" என்கிறேன். அவர்களோ "இல்லை இல்லை, மாடென்றால் பால் தரத் தானே வேண்டும்?" என்று அடம் பிடிக்கிறார்கள். எல்லாவற்றையும் தமிழின ஆதரவு, தமிழினத் துரோகம் என்று தட்டையாக பார்த்து பழகி விட்டனர். அவர்களிடம் சென்று வர்க்க அரசியலை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் காதில் போட்டுக் கொள்வார்களா? இந்த விடயத்தில் முத்தையா முரளிதரன் மட்டுமல்லாது, அவரை எதிர்ப்பவர்களும் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்கின்றனர்.

 

- கலையரசன் - 

20-10-2020

Wednesday, March 11, 2020

Crash Landing on You: ஒரு வட கொரிய - தென் கொரிய காதல் கதை

Crash Landing on You - அவசியம் பார்க்க வேண்டிய Netflix தொலைக்காட்சித் தொடர். வட கொரியாவில் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் கண்டு களிக்கலாம். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப் பட்டுள்ளது.

இது ஒரு தென் கொரிய தொலைக்காட்சித் தொடர். கதையின் பெரும் பகுதி வட கொரியாவில் நடப்பதைப் போன்று ஸ்டூடியோவில் படமாக்கப் பட்டது. இதற்காகவே வட கொரிய மாதிரிக் கிராமம் ஒன்றை அமைத்திருந்தனர். தென் கொரியாவில் வாழும் வட கொரிய அகதிகளும் தமது தாயகத்திற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டதாக பாராட்டி உள்ளனர்.

இந்தத் தொடரின் கதையும், அதில் வரும் பாத்திரங்களும் கற்பனை தான். சுருக்கமாக ஒரு வழமையான காதல் கதை. மென்மையான காதல் உணர்வுகள், நகைச்சுவைக் காட்சிகள், வில்லனின் சூழ்ச்சிகள், மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் அடங்கிய ஒரு சாதாரண தொலைக்காட்சித் தொடர். சிலநேரம் ஒரு தமிழ்த் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தென் கொரியாவில் ஒரு பெரிய குடும்ப வணிக நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபரின் மகளான கதாநாயகியை சுற்றி கதை நகர்கிறது. அவள் ஒரு தடவை பொழுதுபோக்காக பாரசூட்டில் பறக்கும் போது அடித்த சூறாவளிக்குள் மாட்டிக் கொண்டதால் வாழ்க்கை திசை மாறுகிறது. தற்செயலாக வட கொரியாவுக்குள் வந்து இறங்கி விடுகிறாள். அங்கு எல்லைக் காவல் பணியில் இருக்கும் கதாநாயகனான வட கொரிய இராணுவ கேப்டன் மேல் வந்து விழுகிறாள்.

அங்கிருந்து தப்பி தென் கொரியாவுக்கு சென்று விட வேண்டும் என்பதற்காக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப் பட்ட சூனியப் பிரதேசத்தின் ஊடாக ஓடுகிறாள். இருப்பினும் வழி தவறி திரும்பவும் வட கொரியாவுக்குள் வந்து விடுகிறாள். அதுவும் கதாநாயகன் குடியிருக்கும் கிராமத்திற்கே நேரே வந்து விடுகிறாள்! கதாநாயகன் அவளைத் தனது வீட்டில் மறைத்து வைத்திருக்க உடன்படுகிறான். அவனது படைப்பிரிவில் பணியில் உள்ள வீரர்களும் அந்த இரகசியத்தை பாதுகாக்கிறார்கள்.

காதாநாயகன் ஒரு சாதாரணமான கடைநிலை இராணுவ கேப்டன் போன்று காட்டப் பட்டாலும், அவனும் அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு வட கொரிய தலைவரின் மகன் தான். முன்பொரு தடவை எல்லைப்புற பகுதியில் நடந்த தனது சகோதரனின் மர்ம மரணத்திற்கு காரணம் யார் என்று துப்புத் துலக்குவதற்காக எல்லைப் படையில் சேர்ந்திருக்கிறான். சகோதரனின் கொலைக்குக் காரணமான இராணுவ அதிகாரி தான் வில்லன். மாபியாக் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கிறான்.

ஒரு தடவை எல்லைப் பகுதி கிராமத்தில் நடக்கும் வழமையான தேடுதலின் பொழுது வீட்டிற்குள் மறைந்திருந்த கதாநாயகி கண்டுபிடிக்கப் படுகிறாள். அந்நேரம் தலைநகர் பியாங்கியாங் சென்றிருந்த கதாநாயகன் விடயத்தை கேள்விப் பட்டு உடனே அங்கே வருகிறான். கதாநாயகி தென் கொரியாவில் இரகசிய உளவு வேளைகளில் ஈடுபட்டு நாடு திரும்பி இருப்பதாகவும், அவள் தனக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் என்றும் பொய் சொல்லி காப்பாற்றுகிறான். இருப்பினும் வில்லனான இராணுவ அதிகாரிக்கு சந்தேகம் தீரவில்லை. தொடர்ந்து ஆராய்கிறான். இதற்கிடையில் பியாங்கியாங் நகரில் இருந்து கதாநாயகனுக்கு பெற்றோரால் நிச்சயிக்கப் பட்ட முறைப்பெண் அவனைத் தேடி வருகிறாள்.

கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையிலான காதல் நிறைவேறியதா? கதாநாயகி தென் கொரியாவுக்கு திரும்பிச் சென்றாளா? மிகுதியை தொலைக்காட்சி தொடர் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற கதை வேறொரு இடத்திலும் நடக்கலாம். தற்செயலாக வழிதவறிச் செல்லும் ஒரு பணக்கார வீட்டுப் பெண், திக்குத் தெரியாத கிராமத்தில் மாட்டிக் கொள்வதும், மாளிகை போன்ற வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்தவள் ஏழையின் குடிசையில் எளிமையாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும், ஏற்கனவே பல தமிழ்த் திரைப்படங்களில் வந்த கதை. அதே தான் இந்த தென் கொரிய படத்தின் கதையும்! வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான கலாச்சார வேறுபாடுகள் மட்டும் இதில் உள்ள சிறப்பம்சம் எனலாம்.

வட கொரிய கிராமத்தில் வந்து சேரும் முதல் நாளில் இருந்து, கதாநாயகி கலாச்சார அதிர்ச்சிக்கு பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுகிறது. அங்கு யாரிடமும் மொபைல் போன் கிடையாது. (ஆனால் தலைநகர் பியாங்கியாங்கில் வசிப்பவர்கள் மொபைல் போன் பாவிக்கிறார்கள்.) வீட்டில் குளிர் சாதனப் பெட்டி கிடையாது. அதற்குப் பதிலாக, காய்கறிகளை ஒரு கிடங்கிற்குள் போட்டு மூடும் (kimchi) பாரம்பரிய குளிரூட்டும் முறையை பயன்படுத்துகிறார்கள். (கதாநாயகி அதை இயற்கை வழியிலான "Organic" முறை என்று புரிந்து கொள்கிறாள்.) அத்துடன் குளிப்பதற்கு சுடு நீர் கிடையாது. தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு தொட்டிக்குள் ஊற்றி விட்டு, நீராவி வெளியேற விடாமல் சுற்றிவர பொலிதீன் திரையால் மூடிக் கொண்டு குளிக்க வேண்டும்.

கொரிய மொழி ஒன்று தான் என்றாலும், வடக்கிலும் தெற்கிலும் பேசப்படும் மொழயில் வேறுபாடு இருக்கிறது. அது பிராந்திய பேச்சு மொழி வேறுபாடு என்பதற்கும் அப்பால், சில சொற்களின் பயன்பாடும் மாறுபடுகின்றது.(படத்தில் தென் கொரிய நடிகர்கள் வட கொரிய வட்டார மொழி பேசுகின்றனர்.) அதனால் கதாநாயகி தென் கொரியாவில் இருந்து வந்தவள் என்பதை அனைவரும் எடுத்த உடனே புரிந்து கொண்டு விடுவார்கள். அவளும் தான் "தென் கொரியாவில் வசிக்கும் இரகசிய உளவாளி" என்று சொல்லித் தான் ஊர் மக்களுடன் பழகுகிறாள். அதை அவர்களும் நம்புகிறார்கள். வட கொரிய பெண்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகக் காட்டப் படுகின்றது. பெண்கள் ஊர் வம்பளப்பது எங்கும் உள்ள வழக்கம் தான். தமிழ்நாட்டுப் பெண்கள் எப்படியோ, அப்படித் தான் வட கொரியப் பெண்களும் இருக்கிறார்கள்.

கிராமிய மக்களின் கள்ளங்கபடம் அற்ற மனப்பான்மையும், நகரத்து மனிதர்களின் சூது வாது கொண்ட மனமும் தொடரில் சிறப்பாகக் காட்டப் படுகின்றது. உதாரணத்திற்கு, தென் கொரியாவில் கதாநாயகி காணாமல்போன நாள் முதல் அவளது சகோதரர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதும், நிறுவனத்தில் அவளின் பெயரில் உள்ள பங்குகள் தமக்குச் சேர வேண்டும் என்று சண்டை பிடிப்பதும் தத்ரூபமாக காட்டப் படுகின்றது. வட கொரிய கிராமத்தில் வசிப்பவர்களுக்கு பங்கு என்றால் என்னவென்று தெரியாது. அதைப் பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு எளிமையாக வாழ்கிறார்கள்.

இன்றைய வட கொரியா சோஷலிச நாடும் அல்ல, அதே நேரம் முதலாளித்துவ நாடும் அல்ல. அது இரண்டும் கலந்த சமூக பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ளது. பியாங்கியாங் நகரில் தனியார் நிறுவனங்களை நிர்வகிக்கும் வட கொரிய தொழிலதிபர்கள் வசதியாக வாழ்கிறார்கள். அவர்களது நுகர்வுக்கு தேவையான நவீன பாவனைப் பொருட்கள் அனைத்தும் அங்கு கிடைக்கின்றன. கடத்தல் மூலம் கொண்டுவரப்படும் தென் கொரிய பாவனைப் பொருட்கள் கிராமிய சந்தைகளிலும் விற்கப் படுகின்றன. அது எல்லோருக்கும் தெரிந்த "இரகசியம்"! அத்துடன் தென் கொரிய தொலைக்காட்சி டிராமா சீரியல்களும் வட கொரியர்களால் விரும்பிப் பார்க்கப் படுகின்றன. அரசாங்கம் இவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறது.

நீங்கள் இதுவரை காலமும் வட கொரியா பற்றி கேள்விப் பட்ட கட்டுக்கதைகள் எல்லாம் இந்தத் தொடரை பார்த்த பின்னர் விலகி விடும். வேண்டுமென்றே வட கொரியா பற்றிய பொய்ச் செய்திகளை பரப்பி வரும் விஷமிகள் இதைப் பார்த்தாலும் திருந்தப் போவதில்லை. தென் கொரியாவில் இந்த தொலைக்காட்சித் தொடர் வெளியானதும், வலதுசாரி கிறிஸ்தவ லிபரல் கட்சி அதற்கு எதிராக வழக்குப் போட்டது. அதாவது, வட கொரியா பற்றி நல்லபடியாக பேசுவது தென் கொரியாவில் ஒரு குற்றமாம்! அந்நாட்டில் அப்படியும் ஒரு சட்டம் உள்ளது!! அதனால் தான் பலர் வட கொரியா பற்றி இல்லாத பொல்லாத கதைகளை எல்லாம் மனம்போன போக்கில் அடித்து விடுகிறார்கள். 


Thursday, June 20, 2019

நாஸிகளுடன் ஒத்துழைத்த "யூத ஒட்டுக் குழு" பற்றிய திரைப்படம்


கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, "சவுலின் மகன்" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை விபரமாக சித்தரிக்கின்றது. போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் தடுப்பு முகாமில், யூதர்கள் வகை தொகையின்றி, நச்சு வாயு கொடுத்து படுகொலை செய்த சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்போம். இந்தத் திரைப் படம் அதனை மிகவும் விரிவாக எடுத்துக் காட்டுகின்றது என்பது, அதன் சிறப்பம்சம்.

ஜெர்மன் நாஸிகள், யூதர்களை படுகொலை செய்வதற்கு, யூதர்களையே பணியில் ஈடுபடுத்தினார்கள்! கொஞ்சம் பலசாலிகளான யூதர்களை தேர்ந்தெடுத்து, "சொன்டர் கமாண்டோ" (Sonder Kommando) என்று பெயரிட்டார்கள். தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப் படும் யூதர்களின், ஆடைகளைக் களைவது, அவர்களது உடைமைகளை வகைப் படுத்தி, தனித் தனியாக அடுக்கி வைப்பதில் இருந்து அவர்களது பணிகள் ஆரம்பமாகின்றன.

நிர்வாணமாக்கப் பட்ட யூதர்களை, நச்சு வாயு ஊட்டி கொலை செய்வது மட்டுமல்ல, சடலங்களை இழுத்துச் சென்று நிலக்கரி போட்டு எரிப்பதும், சாம்பலை ஆற்றில் கரைப்பதும், சொன்டர் கமாண்டோவின் பணிகள். இறந்த யூதர்களின் உடல்களை இழுத்துச் சென்று ஓரிடத்தில் குவித்து வைக்க வேண்டும். நச்சு வாயுக் குளியல் நடந்த இடத்தில், நிலத்தை சுத்தம் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்களை, வேறெந்த திரைப்படமாகிலும் இந்தளவு விபரமாக எடுத்துக் காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

திரைப்படத்தின் கதை மிகச் சிறியது. அவுஷ்வித்ஸ் முகாமில், சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும், ஹங்கேரி நாட்டை சேர்ந்த சவுலின் மகனும் நச்சு வாயு ஊட்டி படுகொலை செய்யப் படுகிறான். தனது மகனின் உடலை, யூத மத அனுஷ்டானங்களின் படி, அடக்கம் செய்ய வேண்டும் என்பது சவுலின் விருப்பம். அதனால், சடலங்களை பரிசோதிக்கும் மருத்துவர் (மருத்துவர்களும் யூதக் கைதிகள் தான்) ஒருவரின் உதவியுடன், மகனின் சடலத்தை தனது வதிவிடத்தில் மறைத்து வைக்கிறான்.

சொன்டர் கமாண்டோக்களில் யூத ராபி (மத குரு) இருக்கிறாரா என்று, சவுல் பல இடங்களிலும் தேடுகிறான். ஆனால், ராபிக்கள் யாரும் தம்மை அடையாளப் படுத்த அஞ்சுகின்றனர். இறந்த யூதர்களின் சாம்பலை ஆற்றில் கரைக்கும் இடத்தில், ஒரு கிரேக்க யூத ராபியை கண்ட சவுல், அவரை தன்னோடு வருமாறு கெஞ்சுகிறான். ஆனால், அவர் எதுவும் பேசாமல், தான் அடையாளம் காணப் பட்டதால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அசம்பாவிதம் நடக்கும் இடத்திற்கு வரும் நாஸி இராணுவ அதிகாரி, அந்த ராபியை சுட்டுக் கொல்கிறான்.

இறுதியில், எரிப்பதற்காக கொண்டு செல்லப் பட்ட பிரெஞ்சு யூதர்களில் ஒரு ராபியை கண்டுபிடித்த சவுல், அவரை தன்னோடு வருமாறு கூட்டிச் செல்கிறார். நாஸிகளின் கெடுபிடிகளை மீறி, சொன்டர் கமாண்டோக்கள் தாங்கும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும், அங்கே வரும் பிற யூத பணியாளர்கள், சவுலின் மகனின் பிரேதம் கிடப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அப்போது "எங்களை எல்லாம் கொல்லப் பார்க்கிறாய்..." என்று சொல்லும் பொழுது, "நாங்கள் எப்போது இறந்து விட்டோம்..." என்று சவுல் பதில் கூறுகின்றான்.

அதே நேரம், நாஸிகளுக்கு எதிரான ஆயுதமேந்திய எழுச்சிக்கு, பிற சொன்டர் கமாண்டோக்கள் தயாராகிறார்கள். அவர்களுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வந்து சேருகின்றன. ஒரு தருணத்தில், தங்களில் ஒருவனை நாஸிகள் எரித்து விட்டார்கள் என்று அறிந்த சொன்டர் கமாண்டோக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்.

முகாமில் ஆயுத மோதல் நடக்கிறது. அங்கு நடக்கும் கலவரத்தை பயன்படுத்திக் கொண்டு, சவுல் தனது மகனின் சடலத்தை தூக்கிக் கொண்டு, ராபியுடன் தப்பி ஓடுகின்றான். காட்டுப் பகுதி ஒன்றில், மத அனுஷ்டானங்களுடன் சிறுவனின் சடலத்தை புதைக்கும் முயற்சி தோல்வியடைகின்றது.

ஏனெனில், முகாமை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நாஸி படையினரிடம் இருந்து தப்பியோடும், சொன்டர் கமாண்டோக்கள் அந்த வழியாக வருகின்றனர். ஓர் ஆற்றைக் கடக்கும் நேரம், சவுல் தனது மகனின் சடலத்தை பறிகொடுக்கிறான்.

காட்டுக்குள் இன்னும் சில மைல் தூரம் ஓடினால் போதும். அப்போது, ஏற்கனவே போலந்தின் சில பகுதிகளை விடுதலை செய்து விட்ட, சோவியத் செம்படையினரிடம் தஞ்சம் கோரலாம். இல்லாவிட்டால், காடுகளுக்குள் மறைந்திருக்கும் கெரில்லாக் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.

ஓடி வந்த களைப்பில், சவுலும், யூத கிளர்ச்சியாளர்களும் ஒரு குடிசைக்குள் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால், வேட்டை நாய்களுடன் வரும் நாஸி படையினர், அந்த இடத்தை அண்மித்து விடுகின்றனர். இறுதியில் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் படுவதுடன் படம் முடிவடைகின்றது.

யூதர்களை அழித்தொழிக்கும் பணிக்கு, நாஸிகளால் ஈடுபடுத்தப் பட்ட சொன்டர் கமாண்டோக்களின் வரலாறு ஏற்கனவே தெரிந்த விடயம் தான். உண்மையில், அவர்களது ஆயுட்காலமும், வேலை செய்யும் சிறிது காலம் தான் நீடித்தது. தேவை முடிந்தவுடன், நாஸிகள் அவர்களையும் கொன்றனர்.

நாஸிகளின் காட்டாட்சியில் நடந்த கொடூரங்களை விரிவாக எடுத்துரைக்கும் இந்தத் திரைப்படம், வெளியில் அதிகம் அறியப் படாத பக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும் யூதர்கள், தமது சொந்த இனத்தவர்களை எரிக்கும் பொழுது, எந்தளவு வேதனையுடன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருப்பார்கள்? படத்தில் ஓரிடத்தில் கதாநாயகன் சொல்வதைப் போன்று, "எப்போதோ இறந்து விட்ட", நடைப்பிணமாகத் தான் வாழ்ந்திருப்பார்கள்.

இரண்டாம் போரின் முடிவில் இனப்படுகொலையில் அகப்படாமல் உயிர் தப்பிய யூதர்களில் பலர், நாஸிகளுடன் ஒத்துழைத்த "சொன்டர் கமாண்டோக்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின்  படையினர் அவர்கள் மீது அனுதாபம் காட்டவில்லை.  அந்த யூதர்களை நாஸிகளின் ஒட்டுக் குழுவாகவே கருதினார்கள். அதனால் சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது.


Wednesday, February 20, 2019

அல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்குத் த‌டை!


அல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்குத் த‌டை! 

1945 - 1991 வ‌ரையில் அல்பேனியா ஒரு சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌து. ஸ்டாலின் ம‌றைவுக்குப் பின்ன‌ர், சோவிய‌த் முகாமில் இருந்து வில‌கி, மாவோயிச‌ சீனாவுட‌ன் ம‌ட்டுமே ந‌ட்பாக‌ இருந்த குட்டி நாடான‌‌ அல்பேனியா, ஐரோப்பாவில் த‌னிமைப் ப‌டுத்த‌ப் ப‌ட்டிருந்த‌து.

த‌லைந‌க‌ர் டிரானாவில் உள்ள‌ தேசிய‌ திரைப்ப‌ட‌ க‌ள‌ஞ்சிய‌ அறைக‌ளில் இன்ன‌மும் ப‌ழைய‌ க‌ம்யூனிச‌ கால‌த்து சினிமாச் சுருள்க‌ள் பாதுகாக்க‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. அவ‌ற்றின் வ‌ர‌லாற்று முக்கிய‌த்துவ‌ம் க‌ருதி, டிஜிட்ட‌லில் ப‌திவுசெய்து ம‌க்க‌ளுக்கு போட்டுக் காண்பிக்க‌ முடிவெடுக்க‌ப் ப‌ட்டிருந்த‌து.

அன்றைய‌ கால‌த்தில் த‌யாரிக்க‌ப் ப‌ட்ட‌ எல்லாத் திரைப்ப‌ட‌ங்களையும் "க‌ம்யூனிச‌ப் பிர‌ச்சார‌ம்" குற்ற‌ம்சாட்ட‌ முடியாது. உதார‌ண‌த்திற்கு, "மாவீர‌ன் Skenderbeu" திரைப்ப‌ட‌ம், துருக்கிய‌ருக்கு எதிராக‌ போரிட்ட‌ ச‌ரித்திர‌ நாய‌க‌னின் வ‌ர‌லாற்றைக் கூறுகின்ற‌து.

இருப்பினும், க‌ம்யூனிச‌ கால‌க‌ட்ட திரைப்ப‌ட‌ங்களை மீள் வெளியீடு செய்தால், அவை ம‌க்க‌ளை "மூளைச் ச‌ல‌வை" செய்து விடும் என்று அர‌சிட‌ம் முறைப்பாடு செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. இதிலே வேடிக்கை என்ன‌வென்றால், அன்றைய‌ க‌ம்யூனிச‌ அர‌சு த‌ணிக்கை செய்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையும் காண்பிக்க‌க் கூடாதாம்!

ICC (க‌ம்யூனிச‌ குற்ற‌ ஆய்வு மைய‌ம்) என்ற‌ நிறுவ‌ன‌ம் தான் இந்த‌ த‌டையுத்த‌ர‌வை கோரியுள்ள‌து. அது அர‌ச‌ நிதியில் இய‌ங்கும் க‌ம்யூனிச‌ எதிர்ப்பு நிறுவ‌ன‌ம் ஆகும். அத‌னால் செல்வாக்கு மிக்க‌தாக‌ உள்ள‌து.

அந்த‌க் கால‌ திரைப் ப‌ட‌ங்க‌ளை பார்வையிடும் ம‌க்க‌ள், "க‌ம்யூனிச‌ க‌ட‌ந்த‌ கால‌த்தை சிற‌ந்த‌தாக‌க் க‌ருத‌த் தொட‌ங்கி விடுவார்க‌ள்..." என்று குற்ற‌ப் ப‌த்திர‌த்தில் தெரிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அர‌சு அந்த‌ நிறுவன‌த்தின் முறைப்பாட்டை ப‌ரிசீலித்து க‌ம்யூனிச‌ப் ப‌ட‌ங்க‌ளுக்கு த‌டை போடுமா என்று தெரிய‌வில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.

அந்த‌க் கால‌த்து ந‌ட்ச‌த்திர‌ ந‌டிகை Monika Lubonja (பிற‌ந்த‌ ஆண்டு 1968) இது ப‌ற்றிக் குறிப்பிடும் பொழுது: "க‌லைஞ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரையில் அது ஒரு பொற்கால‌ம். க‌லை என்ப‌து ஆத்மார்த்த‌மான‌தாக‌, உண‌ர்வுக‌ளை வெளிப்ப‌டுத்த‌க் கூடிய‌தாக‌, அன்பை ப‌ர‌வ‌ச்செய்வ‌தாக‌, அர்ப்ப‌ணிப்புக் கொண்ட‌தாக‌ இருந்த‌து." என்றார்.

(த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி: NRC Handelsblad, 31- 5- 2017)

Wednesday, March 28, 2018

அரபு தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் வர்க்கப் போராட்டம்


Secret of the Nile - எகிப்தில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றிய அரபு மொழி தொலைக்காட்சித் தொடர். இது Netflix இணைய வீடியோ சேவையில் வெளியாகியுள்ள டிவி நாடகம். ஒரு துப்பறியும் மர்மக் கதையாக விறுவிறுப்பாக செல்லும் இந்தத் தொடர், எகிப்திய சமூகத்தில் ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகளை மிக எளிமையாக விளக்குகிறது. படக் கதை ஐம்பதுகளில் நடக்கிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் உடை, உடை, பாவனைகள் தத்ரூபமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

 எகிப்தின் தென் பகுதியில், நைல் நதியோரம் அமைந்துள்ள அஸ்வான் நகரில் உள்ள Grand Hotel தான் கதைக் களம். அங்கு பணிப்பெண்ணாக வேலை செய்யும் தங்கை டோஹாவை தேடி ரயிலில் வரும் கதாநாயகன் அண்ணன் அலியுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒழுங்காக கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருந்த தங்கையிடம் இருந்து மாதக் கணக்காக எந்தப் பதிலும் இல்லாத படியால் தேடி வருகிறான்.

அஸ்வான் நகரை வந்தடைந்த பின்னர், ஹோட்டல் நிர்வாகம் நகை திருடிய குற்றச்சாட்டில் தங்கையை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக அறிகிறான். தனது சகோதரி திருடி இருக்க மாட்டாள் என்று நம்பும் அண்ணன் அலி, ஹோட்டலில் வேலை செய்யும் அமீனின் நட்பைப் பெற்று, உணவு பரிமாறுபவர் வேலையில் சேர்ந்து கொள்கிறான்.

டோஹா எதையும் திருடவில்லை என்பதும், அவள் காணாமல் போனதிற்கு வேறு காரணம் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது. அது பற்றி ஆராயும் அலி, ஹோட்டல் மனேஜருக்கும் டோஹாவுக்கும் இடையிலான காதல் உறவை கண்டறிகிறான். கதாநாயகியான நஸ்லி என்ற மைத்துனியை திருமணம் செய்யவிருக்கும், மனேஜர் மூராட், ஏற்கனவே ஹோட்டலில் வேலை செய்யும் இன்னொரு பணிப்பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கி விடுகிறான்.

படத்தின் தொடக்கத்தில் காணாமல் போன டோஹா அப்போது கொலை செய்யப் படவில்லை. அவள் பின்னர் ஒரு கட்டத்தில் திரும்பி வந்து ஹோட்டேல் உரிமையாளர் பற்றிய இரகசியக் கடிதத்தை பகிரங்கப் படுத்த நினைக்கையில் தான் கொல்லப் படுகிறாள். இதற்கிடையே கதாநாயகன் அலியுடன் நட்பாகப் பழகும் கதாநாயகி நஸ்லியுடன் காதல் உண்டாகிறது. ஆனால், ஆழமான வர்க்க வேறுபாடு இருவரும் ஒன்று சேரத் தடுக்கிறது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது போன்ற கதை பல தமிழ் சினிமாக்களில் வந்துள்ளன. ஆனால், பணக்கார வீட்டுப் பெண்ணை ஏழைக் கதாநாயகன் காதலிப்பதாக வரும் தமிழ்ப் படங்களில், அதை "அதிர்ஷ்டமாக", அல்லது "காதலின் மகத்துவமாக" காட்டி திசைதிருப்புவார்கள். தப்பித் தவறிக் கூட வர்க்கம் என்ற சொல் படத்தில் இடம்பெறாது.

ஆனால், இந்த அரபி மொழி பேசும் படத்தில் வர்க்கப் பிரச்சினை பற்றிய உரையாடல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. கதாபாத்திரங்கள், சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் வர்க்க முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றார்கள். உதாரணத்திற்கு சீமாட்டி நஸ்லியை காதலிக்கும் ஏழை அண்ணனுக்கு தங்கை அறிவுறுத்துகிறாள். "இந்த மேட்டுக்குடி வர்க்கத்தில் அவள் ஒருத்தி மட்டும் நல்லவளாக இருக்கலாம்... ஆனால் அவள் பிறந்து வளர்ந்த வர்க்கம் எதுவென்பதையும், அதன் குணங்குறிகளையும் மறந்து விடாதே!"

ஆடம்பரமாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினுள், ஹோட்டேல் உரிமை சம்பந்தமாக நடக்கும் சூழ்ச்சிகள், கழுத்தறுப்புகள், காழ்ப்புணர்வுகள் வெளிப்படும் தருணங்களில் அவர்களது நாகரிக முகமூடி கிழிகிறது. மேட்டுக்குடியினர் தமது கௌரவத்தை காப்பாற்ற கொலை செய்வதற்கும் அஞ்சாதவர்கள். போலிஸ் சட்டப் படி கைது செய்தாலும் பணத்தை வீசியெறிந்து வழக்காடி வெல்கிறார்கள். அரசாங்கத்தை வளைத்துப் போடும் செல்வாக்கும் இருக்கிறது.

அதே நேரம், அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களிடையே நிலவும் தூய்மையான அன்பும், பாசமும், காதலும் அவர்களை உயர்ந்த இடத்தில் தூக்கி நிறுத்துகிறது. உதாரணத்திற்கு மனேஜருடனான உறவால் கர்ப்பம் உண்டாகி வஞ்சிக்கப் பட்ட பணிப்பெண்ணை, தனது மனைவியாக ஏற்றுக் கொள்ளும் சக தொழிலாளி அமீன். அதே மாதிரி, மனேஜர் அனுப்பிய கொலையாளியால் கத்தியால் குத்தப் பட்ட பணிப்பெண் டோஹாவை காப்பாற்றி, தனது வீட்டில் மறைத்து வைக்கும் சக தொழிலாளி மஹேர். இத்தகைய கதாபாத்திரங்கள், பணமில்லாத இடத்தில் தான் அன்பிருக்கும் என்பதை நிரூபிக்கின்றன.

வர்க்கப் போராட்டம் என்பது சமூக யதார்த்தம். அது ஒன்றும் "நடைமுறைக்கு உதவாத", "மார்க்சியத் தத்துவம்" அல்ல. வர்க்கப் போராட்டம், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. அதை நாங்கள் காண மறுக்கிறோம். உணர மறுக்கிறோம்.

தமிழ் சினிமாக்கள், தமிழ் சீரியல்கள் வேண்டுமென்றே வர்க்க முரண்பாடுகளை மூடி மறைத்து அல்லது திரிபுபடுத்தி தயாரிக்கப் படுகின்றன. அந்த வகையில், வர்க்க முரண்பாட்டு உண்மையை நேரடியாகக் கூறும் இந்த அரபிப் படம் யதார்த்தத்தை தொட்டு நிற்கிறது.

Secret of the Nile என்ற அரபி மொழி டிவி சீரியல் மிக நீளமாக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும் அவிழும் மர்ம முடிச்சுகளால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இருந்த இடத்தை விட்டு எழும்ப விடாமல், ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டும் படம். அனைவரும் அவசியம் பாருங்கள். தமிழ் சமூகத்திற்கும், அரபு சமூகத்திற்கும் இடையில் அடிப்படையில் எந்த வித்தியாசம் இல்லை என்பதை கண்டுகொள்வீர்கள். உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மனிதர்களின் குணம் மாறுவதில்லை. வர்க்கக் குணாம்சமும் மாறுவதில்லை.

- கலையரசன்

Wednesday, June 08, 2016

சோமாலி சிறுமிக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலக ஓநாய்கள் - சினிமா விமர்சனம்


சினிமா எனும் கலை ஒரு வகையில் அரசியல் பிரச்சாரம் தான். ஹாலிவூட் திரைப்படங்கள், மேற்கத்திய அரசியலை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உதவுகின்றன. தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் Eye in the Sky (http://www.imdb.com/title/tt2057392/) எனும் திரைப்படம், அமெரிக்காவின் ட்ரோன் யுத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றது.

தென்னாபிரிக்க டைரக்டர் Gavin Hood இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளார். அவரும் அதில் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தென்னாபிரிக்காவில் படமாக்கப் பட்டாலும், ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பாக இருக்கலாம். 

எது எப்படி இருப்பினும், இந்தத்  திரைப்படத்தின் நோக்கம் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களுக்கு பிரிட்டன் வக்காலத்து வாங்குவதாக உள்ளது.

இது தான் கதைச் சுருக்கம்: 

கென்யாவில் அல்ஷஹாப் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கதை நடக்கிறது. (அது சோமாலியாவாகவும் இருக்கலாம்) அங்கே ஒரு அமெரிக்க பிரஜையும், இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளும் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதில் ஒருவர் மதம் மாறிய வெள்ளையின ஆங்கிலேய பெண்மணி, மற்றய இருவரும் சோமாலிய பூர்வீகம் கொண்ட இளைஞர்கள்.

கென்யா இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இயங்கும், பிரிட்டிஷ் படையினர், அவர்களை ட்ரோன் மூலம் தாக்கியழிக்க திட்டமிடுகின்றனர். சோமாலிய உளவாளிகளை வைத்து தகவல் திரட்டுகின்றனர். கமெரா பொருத்திய இயந்திரப் பறவைகளை பறக்க விட்டு மறைவிடங்களை கண்காணிக்கின்றனர்.

எதிர்பாராத விதமாக, சதித்திட்டம் தீட்டும் தீவிரவாத குழுவினர் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் ஒரு சிறுமி இருக்கிறாள். அந்த வீட்டின் மதிலருகில், தெருவில் கடை போட்டு, பாண் (பிரெட்) விற்றுக் கொண்டிருக்கிறாள்.

ட்ரோன் தாக்குதலுக்கு தயாராகும் பிரிட்டிஷ் படை அதிகாரிகள், தமது நாட்டு அமைச்சர்கள் மட்டுமல்லாது, அமெரிக்க அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு அனுமதி கோருகின்றனர். "அமெரிக்க பிரஜையாக இருந்தாலும் அல்ஷஹாப் இயக்கத்தில் சேர்ந்து விட்டால் எங்கள் எதிரி..." என்று அமெரிக்க அமைச்சர் கூறுகின்றார்.

சோமாலிய உளவாளி இயக்கிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய இயந்திர வண்டு ஒன்றில் வீடியோக் கமெரா பொருத்தப் பட்டுள்ளது. அதன் வீடியோவில் இருந்து, அல்ஷஹாப் உறுப்பினர்கள் அந்த வீட்டிற்குள் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிடுவது தெரிய வருகின்றது. பிரிட்டிஷ் படை அதிகாரிகள், அதைக் காட்டி ட்ரோன் தாக்குதலை நியாயப் படுத்துகின்றனர்.

"தற்கொலைக் குண்டுதாரி வெளியே போனால் ஏராளமான பொது மக்களை கொல்லப் போகிறான். அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக, ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி கொல்லப் பட்டாலும் பரவாயில்லை" என்கின்றனர். அப்படி இருந்தும் பிரிட்டிஷ் அமைச்சர் அனுமதி தர மறுக்கிறார். "அல்ஷஹாப் தாக்குதலில் ஏராளமான  பொதுமக்கள் கொல்லப்  பட்டால், அது எமக்கு பிரச்சார  வெற்றி. அதே  நேரம், எமது ட்ரோன் தாக்குதலில் சிறுமி கொல்லப் பட்டால், அது அல்ஷஹாப் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி" என்று வினோதமான காரணம் ஒன்றைக்  கூறுகின்றார்.

கடைசியில் எப்படியோ, அமைச்சர்கள் அனைவரையும் ஒத்துக் கொள்ள வைத்து, மேலதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தாலும்,  ட்ரோன் விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும் படைவீரர்கள் குண்டு வீசத் தயங்குகின்றனர். அதற்குக் காரணம் "அந்த இடத்தில் இருக்கும் அப்பாவி சிறுமியும் கொல்லப் பட்டு விடுவாள்"!

இதற்கிடையே, அவர்களது உத்தரவின் படி சிறுமியிடம் செல்லும் சோமாலிய உளவாளி, அவளிடம் இருந்த பாண் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறான். ஆனால், தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் அல்ஷஹாப் போராளிகள், அவன் "கென்யா இராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பவன்" என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர். அதனால் சிறுமியை காப்பாற்றும் திட்டம் பாழாகின்றது.

இருப்பினும், குண்டு வீச்சின் தாக்குதல் திறனை குறைக்கலாம் என திட்டமிடுகின்றனர். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்ற நிலையில், அல்ஷஹாப் சதிகாரர்கள் இருக்கும் வீட்டின் மீது ட்ரோன் குண்டு வீசுகின்றது. அந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற சிறுமி, மருத்துவமனையில் இறக்கிறாள். வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்தாலும், சம்பந்தப் பட்ட எல்லோரும் தாக்குதலில் பலியான சிறுமிக்காக அழுகிறார்கள்! அத்துடன் படம் முடிகின்றது.

படம் முழுவதும் ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, அரசுத் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் மனம் இரங்குவது நம்பும் படியாக இல்லை. ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்திகளை கேள்விப் பட்டவர்களுக்கு, அது வெறும் பாசாங்கு. சினிமா எமக்குக் காட்டுவது உண்மையான கண்ணீர் அல்ல, அது நீலிக் கண்ணீர். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை இது தான்.

அது சினிமாப் படம். நிஜ வாழ்வில் உலகம் எப்படி இருக்கின்றது? அமெரிக்க படையினர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, யேமன் போன்ற பல நாடுகளில் இன்று வரைக்கும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வருவது போலில்லாமல், பல தாக்குதல்கள் இரவு நேரத்தில் நடக்கின்றன. இருட்டுக்குள் துல்லியமாகப் பார்க்கும் கமெரா பொருத்தப் பட்டாலும், ஆயுதபாணிகளுக்கும், பொது மக்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

பெரும்பாலும் ஆயுதபாணி இயக்கங்களின் முக்கிய தலைவர்களை குறி வைத்துக் கொல்வதற்கு ட்ரோன்கள் பயன்படுகின்றன. எல்லா நேரத்திலும் உளவுத் தகவல்கள் சரியாக அமைந்து விடுவதில்லை. எல்லா நேரத்திலும் குண்டுகள் ஆயுதபாணிகளை மட்டும் கொல்வதில்லை. பொது மக்களின் வீடுகள் மீதும் குண்டுகள் போடப் பட்டுள்ளன. தெருவில் சென்ற பொதுமக்களும் கொல்லப் பட்டுள்ளனர். அதில் பிள்ளைகளும் அடங்குவார்கள். 

பொது மக்களின் இழப்புகளை ஏற்றுக் கொள்ளும் அமெரிக்க அரசு, ஒப்பீட்டளவில் மிகக் குறைவு என்று சொல்கின்றது. ஆனால், ட்ரோன் தாக்குதல் நடத்திய படையினர் தாம் அப்பாவிப் பொது மக்களை, அதிலும் குழந்தைகளையும் கொன்ற குற்றவுணர்ச்சி காரணமாக வருந்துகின்றனர். ஆனால், எல்லோரும் அப்படியான மனோபாவத்துடன் இருப்பதில்லை. 

"பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டி விட்டோம்" என்று குதூகலிப்பவர்கள் தான் அதிகம். குறிப்பாக, அரச மட்டத்தில் யாரும் வருந்துவதில்லை. பொதுமக்கள், குழந்தைகள் கொல்லப் பட்டதாக தகவல் வந்தாலும், தாங்கள் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம் என்று சாதிப்பார்கள். சினிமாவில் காட்டுவது மாதிரி அவர்கள் யாரும் மனச்சாட்சியுடன் நடப்பதில்லை. பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து என்றைக்குமே கவலைப் பட்டதில்லை.

Friday, February 13, 2015

உன்னைப் போல் ஒருவன் : உலகமயமாகும் புலி எதிர்ப்பு சினிமா


சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த, கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை பலர் பார்த்து இரசித்திருப்பார்கள். கதையின் கரு வழமையான தீவிரவாதிகள் பற்றிய கதை தான். ஆயினும், எதற்காக தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கமல் அந்தப் படத்தில் ஒரு லெக்சர் அடிப்பார். அதைப் பார்த்து இரசித்த தமிழர்கள், குறிப்பாக புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள், "அது முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே எதிரான படம்" என்று நினைத்தால் ஏமாந்து போவார்கள்.

கமல்ஹாசன் நடித்து வெளியான சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் படம் வெளியான நேரம், கமல் அதே கதையில் தாலிபானுக்கு பதிலாக புலிகளை வைத்துக் கூட எடுத்திருக்கலாம். விஸ்வரூபம் புலிகளுக்கும் எதிரானது என்று, அந்தத் திரைப்படம் தொடர்பான விமர்சனக் கட்டுரையில் எழுதி இருந்தேன். அன்று விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்த, புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கு அது உவப்பானதாக இருந்திராது. (பார்க்க: விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்  http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_16.html ) என்ன செய்வது? உலக யதார்த்தம் அவர்கள் நினைப்பதற்கு மாறாகவே இருக்கின்றது.

உன்னைப் போல் ஒருவன் திரைப்படம், வேறொரு இந்தியப் படத்தின் (A Wednesday) ரீமேக் தான். அதை இன்னொரு தடவை ரீமேக் செய்து, ஆங்கிலத்தில் எடுத்திருக்கிறார்கள். "A Common Man" (http://www.imdb.com/title/tt2104837/) என்ற பெயரில், இலங்கையில் தயாரிக்கப் பட்டு 2013 ம் ஆண்டு வெளியானது.

ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகர் Ben Kingsley நடித்த அந்தத் திரைப்படம், முழுக்க முழுக்க கொழும்பு நகரில் படமாக்கப் பட்டுள்ளது. படத்தை தயாரித்ததும் இலங்கையை சேர்ந்த நிறுவனம் தான். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் ஆகியவற்றுக்கான சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

உன்னைப்போல் ஒருவன், இந்தியாவில் குண்டு வைத்த முஸ்லிம் தீவிரவாதிகளைப் பற்றிய கதையை சொல்கிறது. அதற்கு மாறாக, A Common Man தமிழ்த் தீவிரவாதிகள் பற்றிய கதையை சொல்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம், படம் முழுவதும் உன்னைப் போல் ஒருவனை நினைவுபடுத்துகின்றது.

A Common Man படத்தின் தொடக்கத்திலேயே, 1996 ம் ஆண்டு, கொழும்பு நகர மத்தியில் புலிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலான, மத்திய வங்கி குண்டு வெடிப்பை காட்டுகிறார்கள். உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி, "காமன் மேன்" ஆக வரும் பென் கிங்ஸ்லி, படத்தின் இறுதிக் கட்டத்தில், தென்னிலங்கையில் புலிகள் நடத்திய முக்கியமான குண்டுவெடிப்பு சம்பவங்களை பட்டியலிடுவார்.

அமெரிக்க நடிகரான Ben Kingsley யும், பிரிட்டிஷ் நடிகரான Ben Cross உம் பிரதானமான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அவர்களைத் தவிர ஏனையோர் இலங்கை நடிகர்கள். சிறிலங்கா பொலிஸ், சிறிலங்கா இராணுவம் படத் தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. அமெரிக்க, இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்று சொல்லப் பட்டாலும், இந்தியக் கலைஞர்களும் படத் தயாரிப்பில் பங்களித்துள்ளார்கள்.

சிறிலங்கா அரசின் புலி எதிர்ப்புக் கருத்துக்களை சர்வதேசியமயப் படுத்தி இருக்கும், A Common Man திரைப்படத்திற்கு இன்று வரையில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதது ஆச்சரியத்திற்குரியது. சென்னையில் சிறிலங்கா அரசை விமர்சிக்கும் பிரசன்ன விதானகேயின் சிங்களத் திரைப்படம் காண்பிக்கப் பட்ட நேரம், அதை "நுணுக்கமான இனப்படுகொலை" என்று சிலர் உளறிக் கொண்டு திரிந்தனர்.

ஹிந்தி, சிங்கள மொழிகளில் கூட, புலிகளை கொச்சைப் படுத்தும் சினிமா வரக்கூடாது என்று தடுக்கும் போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு, இந்த ஆங்கிலத் திரைப்படம் வெளியானது தெரியாதா? மெட்ராஸ் கபே, கத்திக்கு எதிராக பொங்கி எழுந்தவர்கள், காமன் மேனை எதிர்க்க முடியாமல் பெட்டிப் பாம்பாக அடங்கிய மாயம் என்ன? அமெரிக்கா சம்பந்தப் பட்டிருப்பதால் எல்லோருக்கும் நடுக்கம் வந்து விட்டது போலும்.

கமலின் உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் போன்ற முஸ்லிம் தீவிரவாத எதிர்ப்புப் படங்கள், அடிப்படையில் தமிழ்த் தீவிரவாதத்திற்கும் எதிரான அரசியலைத் தான் பேசுகின்றன. அத்தகைய படங்களை வரவேற்று, ஆதரிக்கும் தமிழர்கள் புலி ஆதரவாளர்களாக இருந்தாலும், இந்திய - இலங்கை அரசுக்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

போலித் தமிழ் தேசியவாதிகளின் மொழியில் சொன்னால், "நுணுக்கமான இனப்படுகொலை" இது தான். புலிகளை அழிக்கப் பட வேண்டிய பயங்கரவாத சக்தியாக சித்தரிக்கும் A Common Man, உலகம் முழுவதும் சினிமா இரசிகர்களின் மனங்களில் நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டிய முக்கியமான படம் இது தான்.

இன்றைக்கும் சில இந்து, அல்லது கிறிஸ்தவ அடிப்படைவாத தமிழர்கள், இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வு காரணமாக, "முஸ்லிம் பயங்கரவாதம் அழிக்கப் பட வேண்டும்" என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது முஸ்லிம் வெறுப்பு அரசியல், புலிகளுக்கும் எதிரானது என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. அது எப்படி சாத்தியமாகும் என்று அறிய விரும்புவோர், உன்னைப்போல் ஒருவன், A Common Man ஆகிய இரண்டு திரைப் படங்களையும் பார்க்க வேண்டும்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, November 01, 2014

கத்தி சினிமாவின் "இட்லி கம்யூனிசம்!" - ஒரு கார்பரேட் கனவுப் புரட்சி!!


"கத்தி கம்யூனிசப் படமா?" என்று, மீண்டும் வர்க்க வெறுப்புடன் சிலர் பேசி வருகின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அநீதியை தட்டிக் கேட்கும் கதாநாயகனின் தனி நபர் சாகசப் படங்கள் எல்லாம் "கம்யூனிசப்" படங்கள் தான். 

சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிரான, உழைக்கும் மக்களின் கோபாவேச உணர்வுகளை கட்டுப்படுத்துவதே, இது போன்ற தனி நபர் சாகச திரைப் படங்களை தயாரிப்பதன் நோக்கம். சினிமாவில் தமிழீழம் கிடைக்கும் என்று நம்பும் காலத்தில் இது ஒன்றும் புதினம் அல்ல.

கத்தி முருகதாசின் முன்னைய படமான ஏழாம் அறிவு, ஒரு "தமிழ் தேசியப் படம்". டி.எஸ்.சேனநாயக்க காலம் தொடங்கி மகிந்த வரைக்கும், இலங்கைத் தமிழ் தேசியவாதிகள் கூடிக் குலாவி அமைச்சர்களாக இருந்து இருக்கிறார்கள். ஜி.ஜி. பொன்னம்பலம் தொடக்கம் டக்லஸ், கருணா வரையில் பல தமிழ் தேசியவாதிகள் அரசுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. அது ஏனுங்கோ? என்ன இருந்தாலும், தமிழ் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி, எளிதில் விட்டுப் போகுமா?

கத்தி திரைப்படம் மூலம் பிரபலமான "இட்லி கம்யூனிசம்", எனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகின்றது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, எனது வீட்டிருக்கு அருகில் இருந்த அகதி முகாம் ஒன்றுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அந்த முகாமில் பல ஈழத் தமிழ் அகதிகள் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அப்போது எனக்கு இந்தியாவில் இருந்து அஞ்சலில் வந்து கொண்டிருந்த, "புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம்" போன்ற சஞ்சிகைகளை கொண்டு சென்று வாசிக்கக் கொடுப்பது வழக்கம்.

ஒரு தடவை, இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞன், அந்த முகாமிற்கு மாற்றலாகி வந்திருந்தான். அவன் முன்பு ஒரு காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியாக இருந்தவன். பல யுத்த களங்களில் போராடி இருக்கிறான்.

வறுமையான குடும்பப் பின்னணியை கொண்ட போராளி என்ற காரணத்தால், பொதுவாக இடதுசாரிக் கருத்துக்கள் மீது கவர்ச்சி இருந்தது. ஆனால், எதையும் சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. (இப்படி நிறைய புலிப் போராளிகளை சந்தித்திருக்கிறேன்.)

அந்த புதிய வாலிபனும், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களை ஆர்வமாக வாங்கி வாசித்து வந்தான். தான் வன்னியில் போராளியாக இருந்த காலத்தில், முகாம்களில் அந்த சஞ்சிகைகளை பார்த்ததாக கூறினான். தமிழ்நாட்டில் சில நக்சலைட் இயக்கங்களும், ஈழப் போராட்டத்தை ஆதரிப்பதால், புலிகள் இயக்கத் தலைமை, அந்த சஞ்சிகைகளை முகாம்களில் வாழ்ந்த போராளிகளும் வாசிக்க அனுமதித்ததாக தெரிவித்தான்.

சில வாரங்களுக்குப் பின்னர், மீண்டும் அந்த முன்னாள் போராளி இளைஞனை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவன் என்னிடம் கேட்டான்: - "அண்ணே, நீங்க கம்யூனிஸ்டா?"

- "இருக்கலாம்.... உங்களைப் பொறுத்த வரையில், கம்யூனிசம் என்றால் அர்த்தம் என்ன?" என்று ஒரு விவாதத்தை தொடங்கும் ஆர்வத்துடன் நான் கேட்டேன். 

அதற்கு அந்த இளைஞன் கூறிய பதில் என்னை தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பதில் இது தான்: 
- "பிச்சை எடுப்பதென்றாலும், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டும்...!" 
- "கம்யூனிச சமுதாயத்தில் பணக்காரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதன் அர்த்தம் மற்றைய மக்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள் என்பதல்ல. அவர்கள் உழைப்பாளிகள். கம்யூனிசம் என்றால் எல்லோரும் ஒன்றாக பிச்சை எடுப்பதல்ல. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உழைத்து முன்னேறுவது." என்று சொன்னேன்.

வன்னியில் வாழ்ந்த காலத்தில், தனக்கு இப்படி யாரும் தெளிவாக விளக்கவில்லை என்று, மேலும் அறியும் ஆர்வத்துடன் கூறினான்.

இப்படித் தான், விஜய்-முருகதாஸ் சினிமாக்காரர்களின் "இட்லி கம்யூனிசம்", மக்கள் மனதில் தவறான புரிதல்களை உண்டாக்கி வருகின்றது.

Saturday, September 13, 2014

சினிமா, காசு, பணம், துட்டு... இது தான் போலித் தமிழ் இன உணர்வு!


பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், மணிரத்தினம் இயக்கிய "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படம் வெளியாகியது. அது, இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டிருந்த காலத்தில், புலிகளின் போராட்டத்தை மையப் படுத்தி எடுக்கப் பட்ட படமாகும். அதனை இயக்கிய மணிரத்தினம் ஓர் இந்திய தேசியவாதி, இந்திய அரச ஆதரவாளர் என்பது இரகசியம் அல்ல. கன்னத்தில் முத்தமிட்டால் படமும் ஓர் அப்பட்டமான புலி எதிர்ப்புப் படம் ஆகும். அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் வருவது போன்றே, ஈழப் போரின் இறுதி யுத்தமும் அமைந்தது ஒரு தற்செயலாக இருக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் வெளியான நேரம், அதனை எல்லாத் தமிழர்களும் பார்க்க வேண்டும் என்று, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் கூட கூறி வந்தனர். கனடாவில், டொரோண்டோ திரைப்பட விழாவில் காட்டப் பட்ட பொழுது, "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப் படும் டொரோண்டோ மாநகரில் இருந்து எந்த எதிர்ப்புக் குரலும் எழவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளில் "ஹவுஸ் புல்" காட்சிகளாக காண்பிக்கப் பட்டது. அதன் வீடியோ டிவிடிக்கள் அமோகமாக விற்பனையாகியது. ஐரோப்பா, கனடாவில் கன்னத்தை முத்தமிட்டால் படத்தை விநியோகம் செய்தவர்கள், விற்றவர்கள், அனேகமாக புலி ஆதரவாளர்கள் தான். இது குறித்து எந்தவொரு போலித் தமிழ் இன உணர்வாளரும் விமர்சிக்கவில்லை. எந்தவொரு "மாற்றுக்"கருத்தாளரும் எதிர்ப்புக் காட்டவில்லை. ஏனென்றால், நாய் விற்ற காசு குரைக்காது என்பது போல புலி விற்ற காசும் கடிக்காது.

தமிழ் சினிமா என்பது, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த நாடுகளிலும் வணிக ரீதியாக அதிக இலாபம் தரும் தொழிற் துறையாக கருதப் படுகின்றது. கடந்த இருபதாண்டு காலமாக, தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாயகர்களின் புதுப் படம், அதே காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திரையிடப் படும். அவை எல்லாம் வணிகப் படங்கள் தான்.

தமிழகத்தில் வெளியான ஒரு சில நல்ல தரமான படங்களை, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் திரையரங்குகளில் கண்டு களிக்க முடியாது. எத்தனை வருடம் காத்திருந்தாலும், அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், எந்தவொரு விநியோகஸ்தருக்கும் அதிலே அக்கறை கிடையாது. என்ன செய்வது? தரமான தமிழ்ப் படங்களை, டிவிடியில் அல்லது இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் பலர் ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் யாரும் அந்த நல்ல படங்களின் பெயர்களைக் கூட கேள்விப் பட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது. மேற்கத்திய நாடுகளில், தமிழகப் படங்களை காசு கொடுத்து பார்க்கும் இரசிகர்களில் பெரும்பான்மையானவர்களும் ஈழத் தமிழர்கள் தான்.

ஒரு தசாப்த காலமாகவே, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் செல்வந்தர்கள் பலர், தமிழ்ப் படத் தயாரிப்புகளில் முதலிட்டு வருகின்றனர். அவை எல்லாம் வணிகப் படங்கள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. அந்த முதலீட்டாளர்கள் எவராவது, ஈழத் தமிழரின் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக் காட்டும் கலைப் படம் ஒன்றில் முதலிட்டிருக்க முடியும். ஆனால், செய்யவில்லை. அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான தமிழர்களால், ஒரு காலத்தில் "அடுத்த தேசியத் தலைவர்" ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்ட சீமான் ஒரு பிரபலமான சினிமா இயக்குனர். அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர், தமிழ் தேசிய அரசியலை மிகச் சரியாக சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. சீமான் அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

ஒரு சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகமில்லாதவராக இருக்கலாம். ஆனால், ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும், புலி ஆதரவு அரசியலை ஏற்றுக் கொண்ட பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். புலி ஆதரவு ஊடகங்களில் அவரது திரைப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் எழுதப் பட்டதும் ஒரு காரணம்.

பிரசன்ன விதானகே சிங்களத் திரைப்படங்களை மட்டும் தயாரிக்கும் ஒரு சிங்கள இயக்குனர் என்பதால், சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் ஒரு திரைப் படத்தை தயாரிப்பார். அந்த உண்மையை புலிகளும் புரிந்து கொண்டிருந்தனர். அதனால், அவரிடம் இருந்து அதிகமாக எதையும் எதிர்பார்க்கவில்லை.

பிரசன்ன விதானகேயின் திரைப்படம் தமிழ்நாட்டில் காட்டப் பட்ட உடனே, போலித் தமிழ் தேசியர்கள் பலருக்கு திடீர் தமிழ் இன உணர்வு பொங்கி எழுந்தது. பிரசன்ன விதானகே இப்படித் தான் படம் எடுக்க வேண்டும் என்று, ஆளாளுக்கு அறிவுரை சொல்லத் தொடங்கி விட்டனர். இது, "ஒருவர் தனது அரசியல் கருத்துக்களை இன்னொருவரின் தலைக்குள் திணித்து, தன்னை மாதிரியே பேச வேண்டும் எனும் எதிர்பார்ப்பு" ஆகும். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவர்கள் சொல்வது போல யாருமே படம் எடுக்க முடியாது. குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் அப்படி ஒரு படம் ஓட முடியாது.

சிறிலங்கா அரசு உடனே அதனை "புலி ஆதரவு படம்" என்று கூறி முத்திரை குத்தி தடை செய்து விடும். சுதந்திரமாக ஓட விட்டாலும், அது சிங்கள சினிமா இரசிகர்களினால் ஏற்றுக் கொள்ளப் படும் என்று கூற முடியாது. குறிப்பாக, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பதும், தமிழீழம் என்ற தனிநாடு பிரிவதை ஆதரிப்பதும், பெரும்பான்மை சிங்கள மக்களினால் இன்றைக்கும் நிராகரிக்கப் பட்டு வரும் கருத்துக்களாக உள்ளன. ஆகவே, அப்படி எந்த எண்ணமும் தோன்றாதவாறு திரைப் படம் தயாரிக்க வேண்டும். முடியுமா? இது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது.

தமிழ் நாட்டில் நிறைய "தீவிரவாதிகள்" பற்றிய சினிமாக்கள் வெளியாகி உள்ளன. இன்று வரையில், ஏதாவது ஒரு திரைப் படத்திலாவது, "தீவிரவாதிகள்" பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப் படவில்லை. அவர்களது அரசியல் அபிலாஷைகள் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளது. அந்த சமூகத்தின் அரசியல் கோரிக்கைகள் கூட தெரிவிக்கப் படுவதில்லை. விஜயகாந்த், அர்ஜுனின் படங்கள் மட்டுமல்லாது, மணிரத்தினத்தின் ரோஜா, கமலின் விஸ்வரூபம் ஆகியன அரசுக்கு சார்பான பிரச்சாரப் படங்களாகவே வெளிவந்தன.

அரச படைகள் புரிந்த போர்க்குற்றங்களை மறைத்து, விடுதலைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வந்தன. அந்த திரைப்படங்கள் வெளியான நேரம், இலட்சக் கணக்கான தமிழ் இரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். போலித் தமிழ் இன உணர்வாளர் யாரும், அந்தத் திரைப்படங்கள் வெளியான நேரம் கண்டனம் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல, அவர்களின் நண்பர்கள், உலகம் முழுவதும் அந்தத் திரைப்படங்களை விநியோகித்த போதிலும், ஒரு தடவையேனும் எதிர்ப்புக் காட்டவில்லை.

சினிமா என்பது பல கோடி பணம் புரளும் இலாபகரமான வியாபாரம். அதிலே போட்டி பொறாமைகளும் அதிகம். தமிழ்நாட்டில் தயாரிக்கப் படும் சினிமாக்கள் இலங்கையில் காண்பிக்கப் படும் அளவிற்கு, இலங்கையில் தயாரிக்கப் பட்ட சினிமா எதுவும் தமிழ்நாட்டில் ஓடவில்லை. ஈழத்துக் கலைஞர்கள் எந்தளவு திறமையானவர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் மதிக்கப் படுவதில்லை. இது போன்ற ஏராளமான குறைகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்களில் வசதி படைத்த பிரிவினர், ஈழத்தில் வாழும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து திரைப் படம் தயாரிக்க முன்வரவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே துணிந்து களத்தில் இறங்கினார்கள்.

பெரும்பாலான புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் முதலீட்டாளர்கள், திரும்பத் திரும்ப தமிழ் நாட்டில் தயாராகும் வணிகப் படங்களில் மட்டுமே முதலிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் பணம், பணம், பணம் மட்டுமே. தமிழக சினிமாத் தொழிற் துறையினுள் நடக்கும் வர்த்தகப் போட்டிகள், பொறாமைகள், காட்டிக் கொடுப்புகள், கவிழ்ப்புகள், சுத்துமாத்துகளை மறைப்பதற்காக, பலர் "தமிழ் தேசிய" அரசியல் பேசுகின்றார்கள். இது வணிகம் சார்ந்த அரசியல். தமிழ் இனத்தின் நலன்களை விட, தமது வணிக நலன்களே தமிழ் முதலாளிகளுக்கு முக்கியமானவை. போலித் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பல "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும் இந்த உண்மை தெரியும். சமூகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் அப்படித் தான் வாழ வேண்டும்.

ஒரு திரைப்படம் தயாரித்து தமிழீழப் புரட்சியை உண்டு பண்ணி விடலாம் என்ற நம்பிக்கை யாரிடமும் கிடையாது. பெரும்பாலான தமிழ் இரசிகர்களும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்த்து இரசிக்கிறார்கள். சினிமாவில் இருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளும் எண்ணமும் அவர்களிடம் கிடையாது. பிறகு எதற்காக, சில குறிப்பிட்ட சினிமாப் படங்களைப் பற்றி மயிர் பிளக்கும் விவாதம் நடத்துகிறார்கள்?

வேறொன்றுமில்லை. "இது நம்ம ஏரியா, இதற்குள் நுளையாதே!" என்பதை கொஞ்சம் "நாகரிகமாக" எடுத்துக் கூறுகிறார்கள். பல தசாப்தங்களாக, சினிமாத் தொழிற் துறை, தமிழ்நாட்டு மாநிலத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தருகின்றது. பலருக்கு அதனால் ஆதாயம் கிடைப்பது புரிந்து கொள்ளத் தக்கது. வலதுசாரி தமிழ் தேசியவாதத்திற்கும், தமிழ் முதலாளியத்திற்கும் இடையிலான உறவு அந்த இடத்தில் மிகவும் இறுக்கமாக உள்ளது. அந்த உறவு தான், இன்று சமூகத்தில் பரப்பப் படும் பல அரசியல் கருத்துக்களின் ஊற்றுக்கண்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்
2. உழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசியம் போலியானது
3.அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்!