Showing posts with label இரண்டாம் உலகப்போர். Show all posts
Showing posts with label இரண்டாம் உலகப்போர். Show all posts

Saturday, January 04, 2020

நாஸிகளின் "கிரிமினல் படைப்பிரிவு"!


பொதுவாக நாஸிகள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் தான். ஆனால், நாஸிகளின் வரலாற்றில் உண்மையிலேயே ஒரு கிரிமினல்களின் படைப்பிரிவு இயங்கியது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், நாஸிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு இந்த கிரிமினல்களின் படைப்பிரிவு பெரிதும் உதவியது.

இந்த துணைப்படையின் தலைவர் Diriewanger இன் பெயரால் அந்தக் குழு அழைக்கப் பட்டது. நாசிகளே கண்டு முகம் சுழிக்கும் அளவுக்கு அந்தக் குழுவினரின் கொடூரங்கள் அமைந்திருந்தன. சாதாரண கிரிமினல்களான கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி, சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், மற்றும் மனநோயாளிகள் போன்றவர்களே இந்தப் படைப்பிரிவில் சேர்க்கப் பட்டிருந்தனர். இந்தக் குற்றங்களுக்காக சிறைத்தண்டனைஅனுபவித்தவர்கள் மன்னிப்பு வழங்கப் பட்டு துணைப்படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

இதன் தளபதி Diriewanger கூட ஒரு கிரிமினல் குற்றவாளி தான். தென் ஜெர்மனியில் Wuersburg எனும் இடத்தில் பிறந்த தீவிர வலதுசாரியான Diriewanger ஒரு பேராசியராக பணியாற்றியவன். முதலாம் உலப்போர் முடிந்த காலத்தில் எழுந்த கம்யூனிசப் புரட்சியை ஒடுக்கிய Freikorps இயக்கத்தில் இருந்தவன். அவன் 1922 ம் ஆண்டே நாஸிக் கட்சியில் உறுப்பினராக சேர்ந்திருந்த பொழுதிலும், ஒரு 13 வயது சிறுமியை சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றச்சாட்டில் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருந்தான். பிற்காலத்தில் நாஸிகளின் SS படையில் ஒரு இராணுவ ஜெனரல் நண்பராக இருந்த காரணத்தால், ஹிட்லரின் வலதுகரமாக இருந்த அமைச்சர் ஹிம்லரின் செல்வாக்கில் சேர்த்துக் கொள்ளப் பட்டான்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் நாஸிப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்ட போலந்தின் பகுதிகளில் Diriewanger தலைமையிலான கிரிமினல்களின் துணைப்படை உருவாக்கப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் கெட்டோ எனும் தனியான பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தனர். (அதற்குள் மட்டும் யூதர்கள் தாம் விரும்பிய படி வாழ அனுமதிக்கப் பட்டது.) கெட்டோவுக்குள் நுழைந்த Diriewanger கொலைப்படையினர், யூதர்களின் மதச் சம்பிரதாயமான கோஷர் முறையில் இறைச்சி தயாரிக்கும் (முஸ்லிம்கள் இதனை ஹலால் என்பார்கள்) முறையை சாட்டாக வைத்து பல யூதர்களை பிடித்துச் சென்று துன்புறுத்தினார்கள். பின்னர் பெருமளவு கப்பப் பணம் வாங்கிக் கொண்டு விடுவித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் Diriewanger குழுவினரின் கொடூரச் செயல்கள் நாசிகளையே முகம் சுழிக்க வைத்தன. ஒரு தடவை, யூதப் பெண்களை பிடித்துச் சென்று நஞ்சூட்டிக் கொல்லும் "பரிசோதனை" பற்றி ஹிட்லரிடமே முறைப்பாடு செய்யப் பட்டது. கெட்டோ குடியிருப்புகளில் பிடித்த யூதப் பெண்களுக்கு strychnine நஞ்சு செலுத்தி, அவர்கள் மெல்ல மெல்ல துடிதுடித்து இறப்பதை பார்த்து இரசிப்பார்கள். பின்னர் அவர்களது இறந்த உடல்களை துண்டு துண்டாக வெட்டி குதிரை இறைச்சியுடன் சேர்த்து சூப் தயாரித்து குடிப்பார்கள். ஹிட்லர் இது போன்ற கொடூரக் கதைகளை பற்றிக் கேள்விப் பட்டிருந்த போதிலும் Diriewanger குழுவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு மென்மேலும் சுதந்திரம் வழங்கப் பட்டது.

நாஸிகள் ஆக்கிரமித்த வெள்ளை ரஷ்யாவில் கம்யூனிச கெரில்லாக்களை அடக்குவதற்கு Diriewanger துணைப்படை பெரிதும் உதவியது. எங்காவது ஒரு கிராமத்தில் கெரில்லாத் தாக்குதல் நடத்தினால், அந்தக் கிராமத்தையே அழிப்பதற்கு முதலில் Diriewanger படையினர் தான் அனுப்பப் பட்டனர். பெண்கள், குழந்தைகள் என்று எந்தப் பாகுபாடும் காட்டாமல் கொன்று குவித்தனர். ஆயிரக்கணக்கான கம்யூனிச கெரில்லாக்கள் உயிரோடு கொளுத்தப் பட்டனர். Diriewanger குழுவினரின் கொலைவெறியாட்டம் காரணமாக, அப்போது வெள்ளை ரஷ்யாவில் மட்டும், சுமார் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப் பட்டனர்.

Diriewanger குழுவில் சாதாரண கிரிமினல்கள் சேர்க்கப் பட்டிருந்தாலும், அவர்களை மேலிடத்து உத்தரவுக்கு அடிபணிய வைப்பது சிரமமாக இருந்தது. அதனால் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட்டன. உத்தரவை மீறுவோர் சவப்பெட்டி மாதிரியான ஒரு பெட்டிக்குள் அடைக்கப் பட்டனர். அதற்குள் நாட்கணக்காக நின்ற நிலையில் இருக்க வேண்டும். அந்த சித்திரவதையை அனுபவித்த ஒருவர், பெட்டி திறக்கப் பட்டதும் ஒரு நடைப்பிணமாக அல்லது கொலைவெறியுடன் பாயக் கூடியவராக இருப்பார். இந்தக் கிரிமினல் படைபிரிவு உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றுடன் வோட்கா குடிக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள். அந்தப் போதையுடன் வெளியே செல்பவர்கள் குறைந்தது நான்கு பேரைக் கொன்று விட்டுத் தான் திரும்பி வருவார்கள்.

உலகப்போர் முடிந்த பின்னர், நேச நாட்டுப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெர்மனியில், Diriewanger வேறொரு பெயரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தான். இருப்பினும் எப்படியோ மோப்பம் பிடித்த பிரெஞ் படையினர் தென் ஜெர்மனியில் கைது செய்து விட்டனர். தம்மோடு சேர்ந்து போரிட்ட போலிஷ் படையினரிடம் அவனை ஒப்படைத்தனர். போலிஷ் படையினர் அவனை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்பாகவே அடித்துக் கொன்று விட்டனர். முன்பு நாஸிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து வார்சோ நகரை மீட்பதற்காக நடந்த விடுதலைப் போராட்டம் நசுக்கப் பட்ட காலத்தில் Diriewanger குழுவினர் நடத்திய கொலைவெறியாட்டத்திற்கு பழி தீர்த்துக் கொண்டனர்.


Friday, January 03, 2020

ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதைகள்


ப‌வ்லோவின் வீடு - ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை


இர‌ண்டாம் உல‌க‌ப்போரில் முன்னேறிக் கொண்டிருந்த‌ ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டைக‌ள் ர‌ஷ்யாவின் உள்ளே ஸ்டாலின்கிராட் நக‌ர‌ம் வ‌ரை வ‌ந்து விட்டிருந்த‌ன‌. சோவியத் அதிபர் ஸ்டாலின் பெயர் சூட்டப்பட்டதால் மட்டும் அந்த நகரம் முக்கியத்துவம் பெறவில்லை. தெற்கே க‌வ்காஸ் பிராந்திய‌த்தில் இருந்து, வடக்கே ர‌ஷ்ய நகரங்களுக்கான எண்ணை விநியோக‌ம் ஸ்டாலின்கிராட் ஊடாக‌ ந‌ட‌ந்த‌ ப‌டியால் அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இட‌மாக‌வும் இருந்த‌து.

நாஸிகள் இதனை "எலிகளின் போர்" என்று அழைத்தனர். ஏனெனில் எதிரி எங்கே இருக்கிறான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த எல்லாக் கட்டிடங்களும் குண்டுவீச்சுகளால் அழிக்கப் பட்டு விட்டன. இருந்தாலும் ஒரு சதுரங்க ஆட்டம் போன்று எல்லா இடங்களிலும் எதிரிகள் இருந்தனர். நாஸிப் படையினர் ஒரு வீட்டின் சமையலறையை கைப்பற்றி இருந்தால், அதே வீட்டில் உள்ள படுக்கையறையை கைப்பற்றுவதற்கு நாட்கணக்கில் சண்டை நடந்தது. செம்படை வீரர்கள் ஒவ்வொரு வீடு வீடாக, சுவர்களுக்கு பின்னால் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர். ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் மூன்றாம் நாடியிலும் கீழேயும் நாஸிப் படையினரும், இரண்டாம் மாடியில் செம்படையினரும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஸ்டாலின்கிராட் போரின் ஆரம்ப நாட்களில், நாஸிப் ப‌டைக‌ளுட‌னான‌ யுத்த‌த்தில் ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த‌ செம்ப‌டைக‌ள் பெரும்பாலும் வெளியேற்ற‌ப் ப‌ட்டு விட்ட‌ போதிலும், இருபது அல்லது முப்பது வீரர்களைக் கொண்ட 62 ம் ப‌டைப்பிரிவு ம‌ட்டும் உள்ளே சிக்கிக் கொண்ட‌து.

முற்றுகைக்குள் சிக்கிக் கொண்ட படையினர் "பின்வாங்காம‌ல் க‌டைசி ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும் வ‌ரை போரிட‌ வேண்டும்" என்ற‌ ஸ்டாலினின் க‌ட்ட‌ளைப் ப‌டி இறுதி மூச்சு உள்ள வ‌ரை போராடுவ‌து என்று முடிவெடுத்த‌ன‌ர். அவர்கள் ந‌க‌ர‌ ம‌த்தியில் இருந்த‌ நான்கு மாடிக் க‌ட்டிட‌ம் ஒன்றை த‌ம‌து க‌ட்டுப்பாட்டில் வைத்திருந்த‌ன‌ர். சுற்றிலும் பாதுகாப்பு அர‌ண்க‌ளை அமைத்து த‌ற்காப்பு யுத்த‌ம் ந‌ட‌த்திக் கொண்டிருந்த‌ன‌ர். அந்தப் போராட்டம் இரண்டு மாதங்கள் நீடித்தது. இறுதியில் மேலதிக படைகள் வந்து ஸ்டாலின்கிராட்டை விடுதலை செய்யும் வரையில் தாக்குப் பிடித்தனர்.

அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62 ம் ப‌டைப்பிரிவுத் த‌ள‌ப‌தி யாகோவ் ப‌வ்லோவின் பெய‌ரால் "ப‌வ்லோவின் வீடு" என்று அழைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌னை நாஸிப் ப‌டைக‌ள் கைப்ப‌ற்ற‌ முடியாம‌ல் போன‌த‌ற்கு இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள் இருந்த‌ன‌. ஆர்ட்டில‌ரி போன்ற‌ க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ளை பாவித்தால் ம‌றுப‌க்க‌ம் இருந்த‌ ஜேர்ம‌ன் ப‌டையின‌ர் மீதும் குண்டு விழ‌லாம்.

அந்த வீட்டை நாஸிப் ப‌டைக‌ள் மூன்று ப‌க்க‌ங்க‌ளில் சுற்றிவ‌ளைத்திருந்த‌ன‌. ஒரு ப‌க்க‌ம் வோல்கா ஆறு ஓடியது. அத‌ன் ம‌று க‌ரையில் நின்ற‌ செம்ப‌டையின‌ர் தாக்குத‌ல் ந‌ட‌த்திக் கொண்டிருந்தார்க‌ள். அத்துட‌ன் ம‌று க‌ரையில் இருந்து ப‌வ்லோவின் வீட்டுக்கு உண‌வு, ம‌ருந்து, ஆயுத‌ங்க‌ள் விநியோக‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌. அதுவும் ஜேர்ம‌ன் விமான‌ங்க‌ளின் குண்டு வீச்சுக்கு த‌ப்பிச் செல்ல‌ வேண்டும்.

ப‌வ்லோவின் வீட்டினுள் ஆயுத‌ங்க‌ள், தோட்டாக்க‌ள், உண‌வு, த‌ண்ணீர் எல்லாவ‌ற்றுக்கும் த‌ட்டுப்பாடு நில‌விய‌து. ப‌டைவீர‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது, உரிய‌ நேர‌த்தில் வெளியேற‌ முடியாம‌ல் மாட்டிக் கொண்ட‌ பொது ம‌க்க‌ளும் அத‌ற்குள் இருந்த‌ன‌ர்.

அங்கிருந்த‌ ஒரு நிறைமாத‌க் க‌ர்ப்பிணி ஒரு பெண் குழ‌ந்தையை பிர‌ச‌வித்தாள். குழ‌ந்தையின் த‌ந்தை ஏற்க‌ன‌வே ந‌ட‌ந்த‌ போரில் கொல்ல‌ப் ப‌ட்டு விட்டார். அநேக‌மாக‌ அப்போதிருந்த‌ நிலைமையில் குழ‌ந்தையும் உயிர் பிழைப்ப‌து க‌டின‌ம் என்றே ந‌ம்ப‌ப் ப‌ட்ட‌து. ஆனால் செம்ப‌டை வீர‌ர்க‌ள் த‌ம‌து உயிரைத் துச்ச‌மாக‌ ம‌தித்து அத்தியாவ‌சிய‌ பொருட்களை கொண்டு வ‌ந்து சேர்த்து குழ‌ந்தையை காப்பாற்றி விட்ட‌ன‌ர்.

ப‌வ்லோவின் வீடு புக‌ழ் பெற்ற‌மைக்கு அன்று சோவிய‌த் அர‌சு ஊட‌க‌ங்க‌ளில் செய்ய‌ப் ப‌ட்ட‌ பிர‌ச்சார‌மும் ஒரு கார‌ண‌ம். ஸ்டாலின்கிராட் முற்றுகைக்குள் அக‌ப்ப‌ட்ட‌ செம்ப‌டைப் பிரிவின் வீர‌ஞ்செறிந்த‌ போராட்ட‌ம் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் உட‌னுக்குட‌ன் தெரிவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌. பிற்கால‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்டாலின்கிராட் யுத்த‌ம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ங்க‌ளிலும் இந்த‌ ப‌வ்லோவின் வீடு த‌வ‌றாம‌ல் இட‌ம்பெற்ற‌து.

*********

ஸ்டாலின்கிராட் டைரிக் குறிப்புக‌ள்: "60 வ‌ய‌து பெண் போராளி"!

இது ஸ்டாலின்கிராட் யுத்த‌த்தில் ப‌ங்கெடுத்த‌ ஒரு நாஸிப் ப‌டைவீர‌ர் எழுதிய டைரிக் குறிப்புக‌ளில் இருந்து ஒரு ப‌குதி.

//அனேகமாக ஒவ்வொரு நாளும் தவறாமல் எங்க‌ள‌து வாக‌ன‌ங்க‌ள் க‌ண்ணி வெடிக்கு அக‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தன. யாரோ இரவில் புதைத்து வைத்த கண்ணிவெடிகளுக்குள் சிக்கிய வாகனங்கள் வெடித்து எமக்கு பெருமளவு பொருட்சேதம் உண்டானது. அதனால் இந்த நாசவேலைகளுக்கு காரணமான முரட்டு ஆசாமி யார் என்பதைக் கண்டுபிடிக்க கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டு திரிந்தோம்.

இந்த‌க் க‌ண்ணிவெடிக‌ளை புதைப்ப‌து யாரென‌க் க‌ண்டுபிடிக்க‌த் திட்ட‌மிட்டோம். ஒரு நாள் இரவு காத்திருந்து ஆளைப் பிடித்து விட்டோம். அது ஒரு 60 வ‌ய‌து மதிக்க‌த்த‌க்க‌ முதிய‌ பெண். ஒரு ப‌ட்டியில் க‌ண்ணி வெடியும், ம‌ண்வெட்டியும் கொண்டு வ‌ந்திருந்தார். அவ‌ரை கையும் மெய்யுமாக பிடித்து விட்ட ப‌டியால் எமக்கு விசாரிக்க‌ எதுவும் இருக்க‌வில்லை.

அடுத்த‌ நாள் காலை அவ‌ரைத் தூக்கில் போடுவ‌த‌ற்கு த‌யார்செய்ய‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ப் பெண்ணின் இறுதி ஆசை என்ன‌வென‌க் கேட்டோம். தான் சிறுவ‌ய‌தில் வாழ்ந்த‌ வோல்கா ந‌தியை பார்க்க‌ வேண்டும் என்றார். ஒரு கொண்டாட்ட‌த்திற்கு செல்வ‌து போல‌ ந‌தியில் இற‌ங்கிக் குளித்து விட்டு வ‌ந்தார்.

அந்த இடத்தில் ஒரு தூக்கு மரம் ந‌தியை நோக்கிய ப‌டி அமைக்கப் ப‌ட்ட‌து. ஒரு துளி கூட அச்சமின்றி தூக்குக் கயிறை நோக்கிச் சென்றார். அந்த‌ப் பெண்ணை ஒரு தோட்டாக்கள் வைக்கும் மர‌ப் பெட்டியின் மேல் ஏறி நிற்க சொன்ன அவ‌ர‌து காவலாளி, க‌ழுத்தில் தூக்குக் க‌யிறு மாட்டி விட‌ நெருங்கினார். அது தேவையில்லை என்று சைகையால் காட்டிய‌ மூதாட்டி, தானாக‌வே தூக்குக் க‌யிறை பிடித்து தனது கழுத்தில் மாட்டிக் கொண்டார்.

அங்கே சில‌ நிமிட‌ நேர‌ம் நிச‌ப்த‌ம் நில‌விய‌து. ஒரு க‌ண‌ம் வோல்கா ந‌தியை பார்த்த‌ அந்த‌ப் பெண் பின்ன‌ர் த‌லையை குனிந்து எங்க‌ளைப் பார்த்தார். எங்க‌ளை நோக்கி காறித் துப்பி விட்டு கோஷ‌ம் எழுப்பினார்: "ஊத்தை நாஸிக‌ள்... நீங்க‌ள் மனநோயாளிகள்... இந்த‌ பூமியில் கொள்ளை நோய் ப‌ர‌ப்ப‌ வ‌ந்த‌ கிருமிக‌ள்... புர‌ட்சி நீடூழி வாழ்க‌! லெனின் நீடூழி வாழ்க‌!" அத்துடன் காவ‌லாளி காலுக்கு கீழே இருந்த‌ பெட்டியை த‌ட்டி விட்டார். அந்த 60 வ‌ய‌து பெண் போராளியின் உயிரற்ற உட‌ல் தூக்கும‌ர‌த்தில் தொங்கிய‌து.//

(ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டையில் டாங்கி ஓட்டுன‌ராக‌ ப‌ணியாற்றிய‌ Henry Metelman எழுதிய‌ அனுப‌வ‌க் குறிப்புக‌ள். Through Hell for Hitler என்ற‌ பெயரில் நூலாக‌ வந்துள்ள‌து.)


ஸ்டாலின்கிராட் போரில் தான் புதிய சோவியத் கண்டுபிடிப்பான கத்யூஷா ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப் பட்டது. ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்ட பதினாறு குழாய்களில் இருந்து ஒரே நேரத்தில் ஷெல் வீச்சு நடந்தது. நாஸிகள் இதனை "ஸ்டாலின் ஓர்கன்" (ஓர்கன் எனும் குழாய் இசைக்கருவி போன்றிருந்த படியால்) என்று அழைத்தனர். 1943 ம் ஆண்டு தொடக்கத்தில் கடும் குளிர்காலத்தில் ஸ்டாலின்கிராட் நகரை மீட்பதற்கான செம்படையினரின் இறுதி யுத்தம் இடம்பெற்றது. அதற்குள் பட்டினியாலும், கடும் குளிராலும் செத்து மடிந்து கொண்டிருந்த நாஸிப் படையினர் இறுதியில் சரணடைந்தனர். ஸ்டாலின்கிராட் வெற்றியானது இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். இன்றைக்கும் ஸ்டாலின்கிராட் யுத்தத்தை விவரிக்கும் பல நூல்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகின்றன.

Tuesday, December 31, 2019

சோவியத் செம்படையில் சேர்ந்து வரலாறு படைத்த பெண்கள்

ந‌வீன‌ போரிய‌ல் வ‌ர‌லாற்றில் முத‌ல் த‌ட‌வையாக‌, இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட சோவிய‌த் செம்ப‌டையில் ம‌ட்டும் தான் பெண்க‌ள் பெருமளவில் (சுமார் 800.000 பேர்.) போரிட்ட‌ன‌ர். 

போர் உக்கிர‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ 1943 ம் ஆண்டு, செம்ப‌டை வீர‌ர்க‌ளில் ப‌த்தில் ஒருவ‌ர் பெண். அதாவது மொத்த படையினரில் 10%. அதை விட‌ நாஸிக‌ள் ஆக்கிர‌மித்த‌ பிர‌தேச‌ங்க‌ளில் இய‌ங்கிய‌ கெரில்லா குழுக்க‌ளில் ஏராள‌மான‌ பெண் போராளிக‌ள் இருந்த‌ன‌ர். அன்று அவ‌ர்க‌ள் செம்ப‌டை வீர‌ர்க‌ளாக‌ க‌ண‌க்கெடுக்க‌ப் ப‌ட‌வில்லை. அதையும் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். 

செம்ப‌டையில் ப‌ல‌ பெண்க‌ள் லெப்டின‌ன்ட் போன்ற‌ உய‌ர் ப‌த‌விக‌ளிலும் இருந்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ர்க‌ளாக‌ அல்ல‌து தாதிக‌ளாக‌ ப‌ணியாற்றிய‌ பெண்க‌ள் கூட‌ இராணுவ‌ப் ப‌யிற்சி பெற்றிருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளும் ஆயுத‌ம் வைத்திருந்த‌ன‌ர். 

சோவிய‌த் வான் ப‌டையின் மூன்று ப‌டைய‌ணிக‌ள் முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளை ம‌ட்டுமே கொண்டிய‌ங்கின. பெண் விமானிக‌ள் செலுத்திய‌ குண்டு போடும் விமான‌ங்க‌ள் போர் முனையில் நாஸிப் ப‌டையின‌ரை துவ‌ம்ச‌ம் செய்த‌ன‌. 

சினைப்ப‌ர் துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவ‌தில் பெண்க‌ளே வ‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌ன‌ர். அந்த‌ள‌வுக்கு சினைப்ப‌ர் ப‌டைப்பிரிவில் பெண்க‌ள் தான் பெரும்பான்மையாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் லியூட்மிலா ப‌விஷென்கோ. 309 நாஸிப் ப‌டையின‌ரை கொன்று உலக சாத‌னை ப‌டைத்தவர்.

Saturday, May 25, 2019

"ஸ்டாலின் விழுங்கிய போலந்து" - நடந்தது என்ன?

இன்றும் பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் "போலந்து படுகொலைகள்" பற்றிக் குறிப்பிட்டுப் பேச மறுப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் வழமை போலவே பல பிழையான வரலாற்றுத் தகவல்களையும், மிகைப்படுத்தல்களையும் உள்ளடக்கியுள்ளன. அத்துடன் இன்றைய லிபரல்-ஜனநாயகவாதிகள் கூட அன்றைய நாஸி பிரச்சார ஊடகங்களில் தெரிவிக்கப் பட்ட தகவல்களை நம்பிப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட "கட்டின் காட்டில் நடந்த மர்மப் படுகொலைகள்" பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் இன்றைக்கும் பல 'அறிவுஜீவிகளால்" ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப் படுகின்றன. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் போலந்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக அலசுவது அவசியம்.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்னர், அதாவது 1939 ம் ஆண்டிலிருந்து 1941 வரையில் நடந்த சம்பவங்கள் தான் இங்கு பேசுபொருளாக உள்ளன. அன்றைய காலகட்டத்தில் நாஸி ஜெர்மனி அயலில் இருந்த நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்து விட்டு சோவியத் யூனியன் மீதான படையெடுப்புக்கு தயாராக இருந்தது. ஜெர்மனியின் இராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு சோவியத் யூனியன் பலமாக இருக்கவில்லை. ஆகையினால் தற்காலிகமாக மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் பெயரால் அழைக்கப்படும் மொலோடோவ் - ரிப்பன்டாப் உடன்படிக்கை குறித்த சர்ச்சைகளை தவிர்த்து விட்டு அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை இங்கு பார்ப்போம். அந்த உடன்படிக்கையில் போலந்தை பங்குபோடுவதற்கான "இரகசிய ஒப்பந்தம்" இருந்ததாக மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டமைக்கான ஆதாரம் எதுவுமில்லை. இது அன்றைய கள நிலவரத்தை கணக்கில் எடுக்காத முற்சாய்வான எண்ணக்கருவாக கருத இடமுண்டு.

ஒப்பந்தம் போட்டவுடனே ஜெர்மனி போலந்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தது. வார்சோ வரையிலான போலந்தின் மேற்குப் பகுதிகளை இரண்டு வாரங்களில் கைப்பற்றி ஆக்கிரமித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் ஜெர்மன் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, சோவியத் செம்படை படையெடுத்து சென்று கிழக்கு போலந்து பகுதிகளை கைப்பற்றி ஆக்கிரமித்தது.

இந்த இடத்தில் ஓர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் படையெடுப்புக்கு எதிராக போலந்து இராணுவம் தீவிரமாகப் போரிட்டது. தலைநகர் வார்சோ கடும் இழப்புகளுடன் சரணடைந்தது. அதற்குக் காரணம் போலந்தின் மேற்குப் பகுதி போலிஷ் இனத்தவரின் தாயகப் பகுதியாக கருதப் படக் கூடியது. அதற்கு மாறாக, கிழக்குப் பகுதியில் போலந்து இராணுவம் மிகக் குறைந்தளவு எதிர்ப்பைக் காட்டியது. பெருமளவு இழப்புகள் ஏதுமின்றி சோவியத் செம்படை அந்தப் பகுதிகளை கைப்பற்றியது. அதற்கு என்ன காரணம்? அதைப் புரிந்து கொள்ள வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான போலந்து ராஜ்ஜியத்தின் எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. அதற்குள் பல சிறுபான்மை இனங்களது பிரதேசங்களும் அடங்கி இருந்தன. முதலாம் உலகப்போர் வரையில் போலந்து ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. லெனின் தலைமையிலான கம்யூனிச அரசு உள்நாட்டுப் போர்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தது. அதே நேரம் மேற்கில் இருந்து ஜெர்மனியும் படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தியது.

1919 ம் ஆண்டு, முதலாம் உலகப்போர் இன்னமும் முடிந்திராத காலகட்டத்தில், ஜெர்மனியின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து, ரஷ்யா தனது பல்லாயிரம் சதுரமைல் பரப்புடைய பிரதேசங்களை விட்டுக் கொடுத்தது. குறிப்பாக இன்றைய பெலாரஸ், உக்ரைனின் மேற்குப் பகுதிகள் அதற்குள் அடங்கும். பிற்காலத்தில் ஜெர்மனி போரில் தோற்கடிக்கப் பட்டதால், போலந்து என்ற புதிய தேசம் உருவானது. புதிய போலந்து குடியரசில் ரஷ்யா விட்டுக் கொடுத்த பகுதிகள் உள்ளடக்கப் பட்டிருந்தன.

இப்போது மீண்டும் 1939 ம் ஆண்டுக்கு வருவோம். முதலாம் உலகப்போர் முடிந்து இருபது வருடங்களுக்குப் பின்னர், ரஷ்யா பறிகொடுத்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் நம்பினார். பெலாரஸ், உக்ரைனிய சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில், கிழக்குப் போலந்தை கைப்பற்றியதாக படையெடுப்புக்கு காரணம் கூறப்பட்டது. உண்மையில் நடந்ததும் அது தான்.

அந்தக் காலகட்டத்தில் சோவியத் செம்படையினர் ஆக்கிரமித்த கிழக்குப் போலந்து பிரதேசத்தில் 13 மில்லியன் போலந்து பிரஜைகள் வாழ்ந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே போலிஷ் இனத்தவர்கள். சுமார் 8 மில்லியன் மக்கள் பல்வேறு மொழிகளை பேசும் சிறுபான்மை இனத்தவர்கள். குறிப்பாக பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள். அவர்கள் சோவியத் செம்படையினரின் படையெடுப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்கள். போலிஷ் பேரினவாத நுகத்தடியில் இருந்து தம்மை விடுதலை செய்ய வந்தவர்களாக கருதி சோவியத் படைகளை வரவேற்றனர்.

1939-1941 வரையில், ஓரிரு வருடங்கள் நீடித்த சோவியத் இராணுவத்தின் போர்க்கால நிர்வாகத்தின் கீழ் நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. குறிப்பாக, போலிஷ் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். ஒரு காலத்தில் மேலாதிக்கம் செலுத்திய பெரும்பான்மை இனமாக இருந்த போலிஷ்காரர்கள், திடீரென ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாக மாறிவிட்டனர். அதற்கு மாறாக, முன்னர் போலிஷ் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டு வந்த சிறுபான்மை இனங்கள், தற்போது மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கின.

சோவியத் படையெடுப்புக்கு முன்னர் இருந்த போலந்து குடியரசில், உரிமைகள் மறுக்கப் பட்ட சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருந்த பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள், தற்போது விடுதலை பெற்று விட்டதாக உணர்ந்தார்கள். அதனால், சோவியத் செம்படையினருடன் ஒத்துழைத்தனர். முன்னர் தம்மை ஒடுக்கி வந்த போலிஷ் அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களை காட்டிக் கொடுத்தனர்.

முன்பிருந்த போலந்து குடியரசின் நிர்வாகம், இராணுவம், போலிஸ், நீதிமன்றம் ஆகிய அரச நிறுவனங்கள் அனைத்திலும் போலிஷ்காரர்களே அமர்த்தப் பட்டிருந்தனர். அப்போது போலந்தை ஒரு சர்வாதிகாரி ஆண்டு வந்தார். ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. சிறுபான்மையினத்தவரின் உரிமைகள் மதிக்கப் படவில்லை. 

ஆகவே, போலிஷ் பேரினவாதக் கொள்கை அடிப்படையில் போலந்தை ஆண்ட, வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவரின் வெறுப்புக்கு உள்ளானதில் வியப்பில்லை. அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலிஷ் அரச நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் சோவியத் செம்படையினரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

மேலும், ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கிழக்குப் போலந்தில் இயங்கிய சோவியத் புலனாய்வுத்துறைப் பிரிவுகள், போலிஷ் வர்க்க எதிரிகளை தேடிப் பிடித்து கைது செய்து கொண்டிருந்தன. முதலாளித்துவக் கட்சிகள் மட்டுமல்லாது, போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் கூட, தீவிர போலிஷ் தேசியவாதிகளாக சந்தேகிக்கப் பட்டனர். அவர்கள் எல்லோரும் பிற்போக்கான எதிர்ப்புரட்சியாளர்களாக கருதி கைது செய்யப் பட்டனர். 

அது மட்டுமல்ல, நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், செல்வந்தர்கள் எல்லோரும் பெரும்பாலும் போலிஷ் ஆதிக்க இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அத்தனை போரையும் ஒருவர் விடாமல் கைது செய்து சைபீரிய குலாக் முகாம்களுக்கு அனுப்பப் பட்ட சம்பவங்களை தான் இன்று பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் இரைமீட்கிறார்கள். அவர்களில் பலருக்கு விசாரணையின் பின்னர் மரணதண்டனை விதிக்கப் பட்டிருக்கலாம். அதை மிகைப் படுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், கட்டின் காட்டில் நடந்த போலிஷ் இராணுவ வீரர்களின் படுகொலை பற்றிய தகவலையும் பார்க்க வேண்டும். சோவியத் செம்படையினர் வருவதற்கு முன்னரே பெரும்பாலான போலிஷ் படையினர் வெளியேறி விட்டனர். அவர்கள் ருமேனியா ஊடாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்று விட்டனர். 

எஞ்சியிருந்த போலிஷ் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் செம்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டனர். அவர்களைத் தான், பிற்காலத்தில் ஜெர்மன் படையெடுப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கட்டின் காட்டில் சுட்டுக் கொன்று புதைத்ததாக சொல்கிறார்கள். அதுவும் நாஸி ஜெர்மனி வழங்கிய தகவல் தான். அந்தக் காலத்திலும் எதிரிப் படையினரின் மனித உரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது சர்வசாதாரணமான விடயம்.

22-06-1941 அன்று, அப்போது யாரும் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. சோவியத் யூனியன் மீது போர் தொடுப்பதாக நாஸி ஜெர்மனி அறிவித்தது. கிழக்குப் போலந்திற்கு ஜெர்மன் படைகள் வருவதற்கு முன்னர், செம்படையினர் அவசர அவசரமாக வெளியேறி விட்டனர். குறிப்பிட்ட காலம் அங்கு யாருடைய நிர்வாகமும் இருக்கவில்லை. அதாவது, சோவியத் இராணுவமோ, ஜெர்மன் இராணுவமோ இல்லாத காலகட்டம் ஒன்று கிழக்கு போலந்தில் ஏற்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் போலிஷ் மொழி பேசும் மக்கள் ஜெர்மன் இராணுவம் வருவதை எதிர்பார்த்து மகிழ்ச்சியாக காத்திருந்தார்கள். அதற்கிடையில், அவர்கள் "ரஷ்யர்களுக்கு காட்டிக் கொடுத்த" யூதர்களை பழிதீர்க்க எண்ணினார்கள். உண்மையில் சில யூதர்கள் ரஷ்யர்களுடன் ஒத்துழைத்தனர். அன்று சோவியத் போல்ஷேவிக் கட்சியின் தலைமையில் பல யூதர்கள் இருந்த படியால், போலந்து யூதர்கள் செம்படையினர் மீது அனுதாபம் கொண்டிருந்தமை ஒரு சாதாரணமான விடயம். அதற்காக எல்லா யூதர்களும் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், ரஷ்யர்கள் மீதிருந்த போலிஷ் மக்களின் வெறுப்புணர்வு யூதர்கள் மீது திரும்பியது. பல போலிஷ் கிராமங்களில் இருந்த யூதர்கள் போலிஷ்காரர்களால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். அங்கிருந்த கத்தோலிக்க பாதிரியார்களும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தனர். போலிஷ்காரர்களால் கொல்லப் பட்ட யூதர்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஏனெனில் பல தசாப்த காலமாக இந்த விபரங்கள் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. அண்மைக் காலமாகத் தான் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சில தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. குறிப்பாக Jedwabne எனும் கிராமத்தில் பல நூறு யூதர்கள் கொல்லப் பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையால், அது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. (பார்க்க: Neighbors, The Destruction of the Jewish Community in Jedwabne, Poland)

ரஷ்யப் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்த நேரம், அதனை பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் போல்ஷெவிக்குகள் மத்தியில் இருந்தது. அருகில் இருந்த போலந்திலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடிக்க வேண்டும் என்று லெனின் எதிர்பார்த்தார். அதற்காக செம்படையை அனுப்பி வைத்தார். ஆனால், ஸ்டாலினிடம் போலந்து குறித்து மாறுபட்ட கருத்து இருந்தது. "பொதுவாக போலிஷ்காரர்கள் பிற்போக்கான தீவிர தேசியவாதிகள், கத்தோலிக்க மத அடிப்படைவாதிகள்... அவர்களிடமிருந்து தற்போதைக்கு ஒரு வர்க்கப் புரட்சியை எதிர்பார்க்க முடியாது..." என்பது ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்தது. இன்று வரையிலான போலந்து வரலாறும் அதையே நிரூபித்து வருகின்றது.

இன்று வரையில் போலிஷ் சமூகம் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. நீண்ட காலமாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாத அளவிற்கு எதிர்ப்பு இருந்தது. எண்பதுகளின் இறுதியில் கம்யூனிச ஆட்சி கவிழ்ந்த பின்னர், அனைவரும் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 

அத்துடன் ரஷ்ய எதிர்ப்பு என்பது போலந்தில் ஒரு தேசியக் கலாச்சாரமாக உள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் முரண்பாடு போன்று அயல் நாடுகளுக்கு இடையிலான தேசியப் பகை உணர்வு. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட, "ஸ்டாலின் நடத்திய போலிஷ் படுகொலைகள்" பற்றிய கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பரப்புரைகளும், போலந்து தேசியவாதிகளால் தான் உற்பத்தி செய்யப் படுகின்றன.

Wednesday, March 23, 2016

ஸ்டாலினை மிரட்டுவதற்காக ஜப்பான் மீது அணு குண்டு போட்ட அமெரிக்கா


உலக வரலாற்றில் முதல் தடவையாக, அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு போட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பானை சரணடைய வைப்பதற்காகவே அணுகுண்டு போட்டதாக, அமெரிக்கா ஒரு நியாயத்தை சொல்லிக் கொண்டது. ஆயினும் அந்த "நியாயம்" அப்போதே சந்தேகிக்கப் பட்டது. 

அமெரிக்கா அணுகுண்டு போடுவதற்கு முன்னரே, ஜப்பான் சரணடையத் தயாராக இருந்தது. உண்மையில், அப்போது வளர்ந்து வரும் உலக வல்லரசாக கருதப்பட்ட, சோவியத் யூனியனை மிரட்டும் நோக்கில் ஜப்பானில் அணுகுண்டு போடப் பட்டது. ஏனெனில், சோவியத் செம்படைகள் ஜப்பானை பிடிப்பதற்கு தயாராக இருந்தன. அதற்கு முதல் அமெரிக்கா முந்திக் கொண்டது.

1945 ம் ஆண்டு, ஹிரோஷிமா, நாகசாகி மீது, எந்தத் தேவையுமில்லாமல் அணுகுண்டு போடப் பட்டது. இதனை அமெரிக்க மரைன் உளவுத்துறை அதிகாரி அட்மிரல் Ellis Zacharias, மற்றும் அமெரிக்க ஜனாதிபதி Dwight D. Eisenhower ஆகியோர் தமது நினைவுக்குறிப்புகளில் எழுதி உள்ளனர்.

"அணுகுண்டு போட்டிருக்காமலே 15 செப்டம்பர் 1945 அன்று ஜப்பான் சரணடைந்து இருக்கும்" என்று எல்லிஸ் சகாரியாஸ் எழுதி உள்ளார். "ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல் முற்றுமுழுதாக தேவையற்ற விடயம். ஏனெனில் நாங்கள் ஏற்கனவே ஜப்பானை வென்று விட்டோம்." என்று ஐசன்ஹோவர் எழுதினார்.

"100 வருட கால உலக சரித்திரம் 1870-1970" (100 jaar Wereldgeschiedenis 1870-1970) என்ற நூலில் பேராசிரியர் A. Stam பின்வருமாறு எழுதி இருக்கிறார்:"ஜூலை 1945 ஜப்பான் அரசு சரணடைவதற்கு தயாராக இருந்தது. ஏற்கனவே ஜப்பானிய ரகசியத் தகவல்களை உளவறிந்த அமெரிக்கர்கள் அதைத் தெரிந்து கொண்டனர். இருப்பினும், அணு குண்டு போடுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. அதன் மூலம், சோவியத் யூனியன் உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவுடன் போட்டியிட முடியாத நிலை உருவாகும்." 

பிப்ரவரி மாதம் நடந்த யால்ட்டா உச்சி மகாநாட்டில், ஐரோப்பாவில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முரண்பாடுகள் தோன்றின. ஸ்டாலின் ஒரு பக்கம், ரூஸ்வெல்ட், சர்ச்சில் ஆகியோர் மறுபக்கம் முரண்பட்டனர். ஸ்டாலின் யால்ட்டா ஒப்பந்தத்தை தனக்கு விரும்பியவாறு மொழிபெயர்க்கப் பார்க்கிறார் என்று ரூஸ்வெல்ட் குற்றம் சுமத்தினார். ரூஸ்வெல்ட்டை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்த ட்ரூமன் அணுகுண்டு போடும் முடிவை எடுத்தார். அமெரிக்காவிடம் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை ஸ்டாலினுக்கு காட்ட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

ஆகவே, ஜப்பான் சரணடைய தயாராக இருந்த போதிலும், 5 - 9 ஆகஸ்ட் 1945, ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப் பட்டன. அதன் விளைவாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகளாக, 250.000 ஜப்பானியர்கள் கொல்லப் பட்டனர். அடுத்து வந்த வருடங்களில், மேலும் இலட்சக் கணக்கானோர் கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்ட புற்றுநோயால் இறந்தனர். அமெரிக்கா, இங்கிலாந்தின் மேலாதிக்க வெறிக்காக, ஸ்டாலினை தமக்கு கீழே அடிபணிய வைப்பதற்காக அந்த உயிர்கள் பலி கொடுக்கப் பட்டன.

அணுகுண்டு வீச்சாளர் ட்ரூமன் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னரே தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜூன் 1941 ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்தது. அப்போது The New York Times பத்திரிகை பேட்டியில் பின்வருமாறு கூறினார்: 
"ஜெர்மனி வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யா வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். இந்த வகையில் அவர்கள் முடிந்த அளவு மக்களை கொன்று குவிக்கட்டும் என்று விட்டு விடுவோம்."

இலங்கையில் முப்பதாண்டு காலமாக நடந்த ஈழப்போரிலும், அமெரிக்கா இதே மாதிரியான அணுகுமுறையை தான் கடைப்பிடித்தது. சிறிலங்கா இராணுவம் வெல்லப் போகிறது என்று தெரிந்தால் புலிகளுக்கு உதவினார்கள். புலிகள் வெல்லப் போகிறார்கள் என்று தெரிந்தால், சிறிலங்கா இராணுவத்திற்கு உதவினார்கள்.

அந்த வகையில் முடிந்த அளவு அதிக எண்ணிக்கையிலான தமிழர்களும், சிங்களவர்களும் செத்து மடியட்டும் என்று வேடிக்கை பார்த்தார்கள். அப்படியான அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக நீதியாக நடந்து கொள்ளும் என்று நம்பும் அப்பாவிகள் இன்றைக்கும் உள்ளனர். 

Sunday, April 26, 2015

25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் குறிப்பிடத் தக்க தினம்


ஒரு மேற்கு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லில், 1974 ம் ஆண்டு, ஒரு துளி இரத்தம் சிந்தாமல், ஒரு வெற்றிகரமான சோஷலிசப் புரட்சி நடந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

அதற்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. பல தசாப்த காலமாக, பாசிஸ சர்வாதிகாரி சலசாரின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்ற விடயமாவது தெரியுமா?

கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் புரட்சிக்குப் பின்னர், சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, போர்த்துக்கல்லில் ஜனநாயக பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப் பட்டன என்ற உண்மை தெரியுமா? இன்றைக்கும் மறைக்கப் பட்டு வரும் ஐரோப்பாவின் வரலாற்று உண்மைகளில் செவ்வரத்தம் பூ புரட்சியும் ஒன்று.

போர்த்துக்கல் இராணுவத்திற்குள் இருந்த கம்யூனிச, சோஷலிச அல்லது ஜனநாயக ஆதரவு சக்திகள், இரகசியமான சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். வெறும் நான்கு உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டன. சலசாரின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது.

படையினர் தமது துப்பாக்கி முனைகளில், செவ்வரத்தம்பூ செருகி வைத்திருந்த படியால், அது இன்றைக்கும் செவ்வரத்தம் பூ புரட்சி என்றே அழைக்கப் படுகின்றது. அதற்கு பெருமளவு மக்கள் ஆதரவு இருந்தது.

புரட்சிக்குப் பின்னர், அரசமைப்பு, பொருளாதாரம் தொடர்பாக, வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் கை ஓங்கியிருந்த சில இடங்களில் நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன.

அதே நேரம், போர்த்துக்கல் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக குற்றஞ் சாட்டி, நேட்டோ படையெடுக்கப் போவதாக மிரட்டியது. அட்லாண்டிக் கடலில் நேட்டோ கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப் பட்டிருந்தன.

இறுதியில், 1976 ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து, சமூக ஜனநாயகக் கட்சியும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும் கூட்டரசாங்கம் அமைத்த பின்னர், நேட்டோ அழுத்தம் விலக்கிக் கொள்ளப் பட்டது.


******


25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்டத்தில் குறிப்பிடத் தக்க சரித்திர தினம். இன்று அது இத்தாலியின் சுதந்திர தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. முசோலினியின் இருபதாண்டு கால பாசிஸ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. இறுதிக்காலத்தில், ஜெர்மன் நாஸிப் படைகள் உதவிக்கு வந்த போதிலும், முசோலினியின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.

இத்தாலியின் வட பகுதி மாகாணங்களை, தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்த கம்யூனிசப் போராளிகள், 25 ஏப்ரல் சுதந்திர தினமாக பிரகடனப் படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வந்திறங்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள், தென் இத்தாலி பகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

2ம் உலகப் போர் முடிந்த பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்காவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வத்திக்கானுடன் சேர்ந்து சதி செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டுப் போடுவோர், கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்கள். திரும்பவும் தேர்தல் நடத்தினார்கள். அதில் வத்திக்கான் ஆதரித்த கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி வென்றது. அதற்குப் பிறகு இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியை தலையெடுக்க விடவில்லை.

மேலும், மேற்குலகின் கடுமையான ஸ்டாலின்/ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. தற்போது இருப்பது சீர்திருத்தப்பட்ட, சமூக- ஜனநாயக கம்யூனிஸ்ட் கட்சி.

Sunday, April 06, 2014

நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய ஜெர்மன் கம்யூனிச அகதிகள்


ஜெர்மனியின் எல்லையோரம் அமைந்துள்ள, நெதர்லாந்து நாட்டின் வட மாகாணமான குரோனிங்கன், கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக திகழ்ந்தது. நெதர்லாந்து நாஸிகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த காலத்தில், முதன்முதலாக நாஸி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். முதன்முதலாக, யூதர்களின் உரிமை மறுப்புக்கு எதிராக, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராக போராடியவர்களும், கம்யூனிஸ்டுகள் தான். அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது. பல நூறு டச்சுக் கம்யூனிஸ்டுகள், யூதர்களைப் போன்று தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டனர். பலர் அங்கிருந்து உயிருடன் திரும்பி வரவில்லை.

இந்த தகவல்கள் எல்லாம், இதனை வாசிக்கும் உங்களுக்கு புதிதாக இருப்பதைப் போன்று தான், பெரும்பான்மையான நெதர்லாந்து பிரஜைகளுக்கும் இந்த உண்மைகள் தெரியாது. எழுபதாண்டு காலமாக, இருட்டடிப்பு செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளின் நாசிஸ எதிர்ப்பு போராட்டம் பற்றிய தகவல்களை தாங்கிய நூல் ஒன்று இந்த வாரம் வெளியாகியுள்ளது. நூல் பற்றிய விமர்சனங்கள், நெதர்லாந்து வானொலி, தொலைக்காட்சிகளில் இடம்பெற்று வருகின்றன.

"Het communistische verzet in Groningen" (குரோனிங்கனில் நடந்த கம்யூனிச கிளர்ச்சி) என்ற தலைப்பிலான நூல், இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஸி ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்டுகள் பற்றிய விபரங்களை பதிவு செய்துள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பலரின் பேட்டிகள், ஆவணங்கள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. நெதர்லாந்தில் கடந்த பல தசாப்த காலமாக ஜனநாயக ஆட்சி நடந்த போதிலும், யாராலும் இப்படி ஒரு ஆய்வு நூலை எழுத முடியவில்லை. ஒரு நூல் கூட எழுத முடியவில்லை என்றால், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நெதர்லாந்து ஜனநாயக அரசின் அடக்குமுறை, எந்தளவு நுணுக்கமாகவும், அழுத்தமாகவும் இருந்திருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

1933 ம் ஆண்டு, அயல் நாடான ஜெர்மனியில் நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன், நாஸி அரசாங்கம் செய்த முதல் வேலை, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) யை தடை செய்தது தான். அதனால், பல்லாயிரக் கணக்கான ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், எல்லை தாண்டி நெதர்லாந்திற்குள் நுழைந்து, அகதியாக அரசியல் தஞ்சம் கோரினார்கள். நெதர்லாந்து அரசு, அந்த அகதிகள் கம்யூனிஸ்டுகள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை வரவேற்கவில்லை. அதற்கு மாறாக, வேண்டாத விருந்தாளிகளாக புறக்கணித்தது. "தேசப் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கக் கூடிய, ஆபத்தான பேர்வழிகளுக்கு, எமது நாட்டிற்குள் புகலிடம் அளிக்க முடியாது..." என்று நெதர்லாந்து அரசு வெளிப்படையாகவே அறிவித்தது.

நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (CPN)யும், அதனோடு சேர்ந்த தொழிற்சங்கமும் இணைந்து, Roode Hulp (செம் உதவி)என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தன. அதன் பெயரில் டச்சு மக்களிடம் நிதி திரட்டி, ஜெர்மன் கம்யூனிச அகதிகளுக்கு உதவியது. அந்த உதவி சில வருடங்களே நீடித்தது. 1941 ம் ஆண்டு, நாஸி இராணுவம் நெதர்லாந்து மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. அதனால், டச்சு கம்யூனிஸ்டுகளும் நாஸி அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. டச்சு கம்யூனிஸ்டுகளின் முதலாவது எதிர்ப்பு நடவடிக்கையாக, ஒரு சட்டவிரோத பத்திரிகையை அச்சடித்து வெளியிட்டனர். "Noorderlicht" (வடக்கத்திய வெளிச்சம்) என்ற நாஸி எதிர்ப்பு பத்திரிகை, பொது மக்கள் மத்தியில் விரும்பி வாசிக்கப் பட்டது.

1941 ம் ஆண்டு, நாஜி ஆக்கிரமிப்புப் படையினர், ஆம்ஸ்டர்டாம் நகரை சுற்றி வளைத்து தேடி, நானூறு யூதர்களை கைது செய்து கொண்டு சென்றனர். யூதர்கள் கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி பொது வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அன்று நடந்த வேலை நிறுத்தம், ஒவ்வொரு வருடமும் நினைவுகூரப் படுகின்றது.

1941 பெப்ரவரி வேலை நிறுத்தத்தின் நினைவாக கட்டப்பட்ட தொழிலாளியின் சிலை.
வேலைநிறுத்தப் போராட்டத்தினால், நாஜிகளின் யூத எதிர்ப்பு நடவடிக்கையை தடுக்க முடியா விட்டாலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு சான்றாக விளங்கியது. நெதர்லாந்தை நாஜிகள் ஆக்கிரமித்த காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருந்தது. கட்சி தலைமறைவாக இயங்கிய போதிலும், பெருமளவு மக்கள் ஆதரவு இருந்ததால், நாஜி ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. தொழிற்சங்க நடவடிக்கை மட்டுமல்ல, ஆயுதப் போராட்டமும் கம்யூனிஸ்டுகளின் வழிநடத்தலின் கீழ் நடந்தது.

இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டாலும், சில வருடங்களுக்குப் பின்னர், பனிப்போர் ஆரம்பமாகியது. முன்பு ஜெர்மனியர்கள் மேலிருந்த வெறுப்பு, பின்னர் ரஷ்யர்களுக்கு எதிராக திரும்பியது. "(சோவியத்)ரஷ்யர்கள் படையெடுப்பார்கள்..." என்று நெதர்லாந்து அரசு, அடிக்கடி மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது. உள்நாட்டில் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக காட்டியது. 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஸி ஆட்சியில் பல்வேறு இன்னல்களை அனுபவித்த டச்சுக் கம்யூனிஸ்டுகள், ஜனநாயக ஆட்சியிலும் ஒடுக்கப் பட்டனர். நெதர்லாந்தின் புதிய ஜனநாயக ஆட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகளின் உயிரை வாங்கவில்லை. ஆனால், அவர்களை ஏறக்குறைய நடைப்பிணம் ஆக்கினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழில் வாய்ப்புக் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. பலருக்கு அரசின் சமூகநல கொடுப்பனவுகள் கூட மறுக்கப் பட்டன.



நெதர்லாந்து கம்யூனிஸ்டுகளின் போராட்டம் பற்றிய தகவல்கள் அடங்கிய Het communistische verzet in Groningen நூலை வாங்குவதற்கு: 

கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தை அங்கீகரிப்பது பற்றி, உள்ளூர் தொலைக்காட்சி தயாரித்தளித்த நிகழ்ச்சி: 

Wednesday, March 05, 2014

சோவியத் யூனியனுக்கு ஆதரவாக அமெரிக்கா தயாரித்த ஆவணப் படம்!

ரஷ்யா : உலகிலேயே மிகப் பெரிய நாடு. "சூரியன் மறையாத சாம்ராஜ்யம்" என்ற பெருமை, இன்றைக்கும் ரஷ்யாவை மட்டுமே சேரும். மேற்கே சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சூரியன் மறையும் நேரம், கிழக்கே விலாடிவாஸ்டொக் நகரில் சூரியன் உதிக்கும்.

ஐரோப்பா முழுவதையும் வெற்றி கொண்ட நெப்போலியனின் படைகள், ரஷ்யா மீது படையெடுத்து பெரும் நாசம் விளைவித்தன. ஆனால், ரஷ்யர்களின் எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோற்றோடின. அதற்குப் பின்னர், ஜெர்மன் சக்கரவர்த்தியின் படைகள், இன்றைய உக்ரைனில் இருக்கும் கிரீமியா பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆமாம், இன்று சர்வதேச அரங்கில் பேசப் படும் அதே கிரீமியா தான். ஆனால், ஐரோப்பிய வரலாற்றில், "கிரீமியா போர்" என்று அழைக்கப்பட்ட அந்தப் போரிலும், ரஷ்யர்களே வென்றார்கள். இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தில், ரஷ்யா மீது படையெடுப்பது, ஹிட்லரின் மிகப் பெரிய போர் நடவடிக்கையாக இருந்தது. ரஷ்யாவை கைப்பற்றி விட்டால், உலகம் முழுவதையும் ஆள்வதற்கு சமமானது என்று நம்பினான். ஏன் எல்லா ஏகாதிபத்திய சக்திகளும் ரஷ்யா மீது படையெடுக்க விரும்புகின்றன ?

உலகிலேயே அதிகளவு எண்ணை வளம் ரஷ்யாவில் தான் உள்ளது. தற்போது இருப்பில் உள்ள ரஷ்ய எண்ணையின் அளவு, சவூதி அரேபியாவை விட அதிகம். பெட்ரோல் மட்டுமல்ல, உலகில் முக்கியமான இன்னொரு எரிபொருளான எரிவாயு கூட தாராளமாக கிடைக்கிறது. அமெரிக்காவில் உள்ளதை விட பல மடங்கு அதிகமான எரிவாயுவை கையிருப்பில் கொண்டுள்ளது. அதை விட, தங்கம், வெள்ளி,இரும்பு, மங்கனீஸ், மற்றும் பல கனிம வளங்கள் அளவிட முடியாத அளவு கொட்டிக் கிடக்கின்றன. மக்கட்தொகையும் அதிகமென்பதால், உழைப்புச் சக்திக்கு தேவையான தொழிலாளர்களுக்கும் குறைவில்லை. நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும், பல வேறுபட்ட இனங்கள், கலாச்சாரங்களை கொண்ட நாடு.

இயற்கை வளம் நிறைந்த ரஷ்யாவை கைப்பற்றுவதே, காலங்காலமாக படையெடுத்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கமாக இருந்துள்ளது. ஹிட்லரும் அந்தக் காரணத்திற்காகவே, என்ன விலை கொடுத்தென்றாலும், ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமிக்க எண்ணினான். ஹிட்லரின் நாஜிப் படைகள், லெனின்கிராட் நகரை சுற்றி வளைத்தன. பல மாதக் கணக்காக, அங்கு வாழ்ந்த மக்களை பட்டினி போட்டன. ஆனால், ரஷ்யர்கள் சரணடையவில்லை. ஜெர்மன் படைகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். அதற்குப் பின்னர், நாஸிப் படைகள் ஸ்டாலின்கிராட்டில் படுதோல்வி அடைந்து பின்வாங்கின. அதுவே நாஸிஸத்தின் வீழ்ச்சியாக அமைந்தது.

ரஷ்யாவுக்கு ஆதரவான இந்த ஆவணப் படத்தை, அமெரிக்க அரசு தயாரித்திருந்தது என்பது, இன்று பலருக்கு அதிசயமாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகியன ஓரணியில் நின்று, நாஜி ஜெர்மனியை எதிர்த்துப் போரிட்டன என்பது குறிப்பிடத் தக்கது. ரஷ்யாவின் போர் பற்றி, அமெரிக்க மக்களுக்கு அறிவிப்பதற்காக இந்த ஆவணப் படத்தை (The Battle of Russia) தயாரித்துள்ளார்கள்.

இன்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஓரணியில் நின்று, ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. தற்போது உக்ரைனில் மேற்கத்திய ஆதரவு அரசு ஆட்சியமைத்துள்ளது. எல்லோரும் "உக்ரைனிய நெருக்கடி" பற்றியே பேசுகின்றனர். ஆனால், மேற்குலகின் இலக்கு உக்ரைன் அல்ல. ரஷ்யாவை ஆக்கிரமிப்பதே அவர்களின் இறுதியான குறிக்கோள். இந்த உண்மை, இன்றைய ரஷ்ய அரசுக்கும் தெரியும். அதனால் தான், உக்ரைன் விவகாரத்தில் விட்டுக் கொடாத போக்கை கடைப்பிடிக்கின்றது. ஏனென்றால், உக்ரைனை விட்டுக் கொடுத்தால், அடுத்தது ரஷ்யா தான்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட்டாளிகள். ஜெர்மனி எதிரி. இன்று, அமெரிக்காவும், ஜெர்மனியும் கூட்டாளிகள். ரஷ்யா எதிரி. அரசியல் கூட்டு இடம்மாறி இருந்தாலும், மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் குறிக்கோள் மட்டும் மாறவில்லை.



The Battle Of Russia Full Movie

Sunday, November 13, 2011

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர்மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர்மன் நாட்டின் தெருக்கள் பலவற்றிற்கு இவர் ஞாபகார்த்தமாக பெயரிடப் பட்டுள்ளது. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய்ய எத்தனித்தது. 1939 ம் ஆண்டு. இரண்டாவது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம்பமாகியிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்கமாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன்று வருகை தந்திருந்தார். NSDAP கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரையாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, பிற்பகல் 9 .20 க்கு ஒரு குண்டு வெடிக்கின்றது. அந்த மண்டபத்தில் அரைவாசி சேதமாகியது. எட்டுப் பேர் கொல்லப் பட்டனர். ஹிட்லர் எங்கே? குண்டு வெடிப்பதற்கு பத்து நிமிடம் முன்பு, புறப்பட்டு சென்று விட்டான். திட்டமிட்ட படி, அன்று ஹிட்லர் மட்டுமல்ல, கோயபல்ஸ் கூட கொல்லப் பட்டிருந்தால், ஒரு உலகப்போர் தடுக்கப் பட்டிருக்கும்.

மிகவும் துணிச்சலாக நாட்டு வெடிகுண்டை தயாரித்து, நேரம் கணித்து பொருத்திய மாவீரனின் பெயர் யொஹன் கெயோர்க். 4 -1 -1903 அன்று, ஒரு ஏழை உழைக்கும் வர்க்க குடும்பத்தில் பிறந்த தச்சுத் தொழிலாளி. ஒரு கம்யூனிஸ்ட். கடிகாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த யொஹான், அங்கே தான் நேரக் கணிப்பு வெடிகுண்டு செய்யும் கலையை கற்றுக் கொண்டான். மியூனிச் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தி விட்டு தப்பி ஓடும் பொழுது, சுவிட்சர்லாந்து எல்லையில் வைத்து பிடிபட்டான். கெஸ்டபோ இரகசியப் பொலிசாரின் சித்திரவதை காரணமாக, குண்டு வைத்ததை ஒப்புக் கொண்டான். அதன் பிறகு, டாஷவ் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டு சிறை வைக்கப் பட்டான். நேச நாடுகளின் படையணிகள் ஜெர்மனியை கைப்பற்றிய நேரம், ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர், யொஹான் சுட்டுக் கொல்லப் பட்டான்.

யொஹான், தலைமறைவாக இயங்கிய சிவப்பு முன்னணி போராளிகளின் அமைப்பு (Rotfrontkämpferbund) என்ற ஆயுதபாணி இயக்கத்தின் உறுப்பினர். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவு அது. நாஜிக் கட்சிக் குண்டர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர். "நாஜிக் கட்சிக் கூட்டத்தில் ரகளை செய்த, தெருச் சண்டையில் ஈடுபட்ட மார்க்சிஸ்டுகள்" பற்றி, ஹிட்லரும் தனது "மைன் கம்ப்" நூலில் எழுதியுள்ளான். ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றதும் செய்த முதல் வேலை, நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகளை பிடித்து சிறையில் அடைத்தது தான். ஜெர்மன் நாடாளுமன்றம், இனந் தெரியாதவர்களால் எரிக்கப் பட்ட சம்பவத்தை அதற்கு சாட்டாக பயன்படுத்தினான். பெர்லினில் தங்கியிருந்த வெளிநாட்டு கம்யூனிஸ்டுகளும் கைது செய்யப் பட்டனர். பிற்காலத்தில் பல்கேரியாவின் ஜனாதிபதியான, டிமித்ரோவும் அவர்களில் ஒருவர்.

ஹிட்லரை கொலை செய்யும் நோக்குடன் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. பிற்காலத்தில், இராணுவத்திற்குள் நடந்த சதியை மையமாக வைத்து, Valkyrie என்ற ஹாலிவூட் திரைப்படம் வெளியானது. உலகப்போர் முடியும் தறுவாயில், 1944 ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு பற்றி உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளது. ஆனால், 1939 ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி எந்தவொரு சரித்திர நூலிலும் நீங்கள் வாசித்திருக்க சந்தர்ப்பமில்லை. ஹிட்லரின் காலத்தில் நடந்த சம்பவங்களை இன்றைக்கும் அசைபோடும் ஊடகங்களும் அது பற்றிப் பேசுவதில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், (முதலாளித்துவ) மேற்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால், கம்யூனிஸ்டுகளின் ஹிட்லர் மீதான தாக்குதல் பற்றிய தகவல்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

சரித்திர ஆசிரியர்களினதும், ஊடகங்களினதும் ஒட்டுமொத்த புறக்கணிப்புக்கு காரணம் என்ன? தாக்குதல் நடத்திய யொஹான் எல்சர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதாலா? நாசிஸ கொடுங்கோன்மைக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் நடத்திய ஆயுதப் போராட்டம் குறித்து, உலகம் அறிந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வா? எது எப்படி இருந்த போதிலும், சமூகப் பொறுப்புணர்வு இதனால் மறைக்கப் படுகின்றது. யொஹான் எல்செர் எதற்காக ஹிட்லரை கொலை செய்யத் திட்டமிட்டான்? "எனது செயல் மூலம், மேலதிக இரத்தக் களரியை, மனிதப் பேரழிவை தடுத்து நிறுத்த விரும்பினேன்." இது யொஹான் எல்சரின் வாக்குமூலம். அந்த தீர்க்கதரிசனம் வெகுவிரைவில் சரியென மெய்ப்பிக்கப் பட்டது. குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் தப்பிய ஹிட்லரினால், இரண்டாம் உலகப்போர் வெடித்தது. அதுவரை உலகம் காணாத மனிதப் பேரழிவு ஏற்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவான சோஷலிச நாடுகளில்,"எதிர்கால உலகில் போர்களை இல்லாது ஒழிப்பதற்காக, நாம் இன்று போராடுகின்றோம்" என்று பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கப் பட்டது. "Ich habe den krieg verhindren wollen" (நான் யுத்தம் வருவதை தடுக்க விரும்புகிறேன்.)- Johann Georg Elser

யொஹான் எல்சர் பற்றிய விபரங்கள் ஜெர்மன் மொழியில் மட்டுமே காணப்படுகின்றன.

Monday, September 19, 2011

ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஆறு)

இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தியும், அறவழியிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. "பிரிட்டிஷ்காரர்கள் இந்தியப் பெருநிலப்பரப்பிற்கு சுதந்திரம் கொடுத்த வேளை, போனால் போகிறதென்று இலங்கைக்கும் சுதந்திரம் கொடுத்தார்கள்," என்று பலர் இன்னமும் நம்புகின்றார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, இலங்கைக்கு தன்னாட்சி வழங்கும் திட்டம் மெல்ல மெல்ல நடைமுறைப் படுத்தப் பட்டு வந்துள்ளது. கோல்புறூக், டொனமூர், சோல்பரி என ஆங்கிலேய பிரபுக்கள் தலைமையில் அமைக்கப் பட்ட குழுக்கள், இலங்கைத் தீவுக்கென விசேடமான யாப்புகளை எழுதின. இந்த அரசியல் யாப்புகளின் பிரகாரம், "சிங்கள-தமிழ் மேட்டுக்குடிக்கு" ஆட்சியில் பங்கு பெறும் சந்தர்ப்பம் வாய்த்தது. 1948 ல் "சுதந்திரம்" கிடைப்பதற்கு முன்னரே, உள் நாட்டில் சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினரின் அரசு செயற்படத் தொடங்கியிருந்தது. வெளிநாட்டு விவகாரம், இராணுவம், பெருந்தோட்டப் பொருளாதாரம் போன்ற துறைகளை மட்டும் பிரிட்டிஷ்காரர்கள் நிர்வகித்து வந்தனர். 1948 க்கு பின்னரும், நிலைமை பெருமளவு மாறவில்லை. புதிதாக பதவியேற்ற "சிங்கள அரசு", பிரிட்டிஷ் ஆளுநருடன் ஒத்துழைத்தது. ஆளுநர் மட்டுமல்ல, அரசியல் யாப்பு வரைந்த சோல்பரி பிரபு கூட அடிக்கடி உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருந்தார். மன்னராட்சி நிலவும் ஐரோப்பிய நாடுகளில், அமைச்சரவையும், அரச குடும்பமும் கூட்டுச் சேர்ந்து முடிவுகளை எடுப்பது போலத்தான் அன்றைய நிலைமை இருந்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்தமனத்தின் ஆரம்பமான, இரண்டாம் உலகப் போர் இலங்கை நிலவரத்திலும் தாக்கத்தை உண்டுபண்ணியது. போர் ஆரம்பிக்க முன்னரே, "ஆசியாவில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக, பிரிட்டிஷ் முடியாட்சிக்கு உறுதுணையாக இருப்போம்...." என்று, சிங்கள அமைச்சர்கள் ஜால்ரா அடிக்கத் தொடங்கி விட்டனர். பல காலமாக, சிங்கள அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும், '"யார் சிறந்த ஆங்கிலேய விசுவாசி?" என்பதைக் காட்டுவதில் போட்டி போட்டனர். அப்படி இருந்தும், ஆங்கிலேயர்கள் இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். "பிரிட்டனின் எதிரி நாடான ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து விடுதலை பெறும் எண்ணம் உள்ளதா?" என்ற சந்தேகம் அன்றைய சூழ்நிலையில் சாத்தியமானதே. இந்தியாவில், நேதாஜி ஜப்பானியரின் உதவியுடன் பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்து போரிட்டு வந்தார். 1942 ம் ஆண்டு, பிரிட்டிஷ் காலனிகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகள் ஜப்பானியரால் ஆக்கிரமிக்கப் பட்டன. அந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர். இலங்கைத் தீவையும் ஜப்பானியர்கள் கைப்பற்றக் கூடிய அபாயம் தோன்றியது. கொழும்பிலும், திருகோணமலையிலும் குண்டுகள் வீசப் பட்டன. இருந்த போதிலும், இலங்கையின் ஆளும் வர்க்கம், பிரிட்டனுக்கு விசுவாசமாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரை, "ஏகாதிபத்தியப் போர்" என்று இடதுசாரிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். மலையகத்தில், இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழ் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்குப் பெற்று விளங்கின. போர் தொடங்கியவுடன், உலகச் சந்தையில் இரப்பரின் விலை அதிகரித்ததால், ரப்பர் ஏற்றுமதி காரணமாக, இலங்கைப் பொருளாதாரம் வளர்ந்தது. அதேநேரம், இடதுசாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரித்து வந்தன. 1940 ல், மலையகத்தில் பொலிசாருடனான முறுகல்நிலை, தொழிலாளர் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இரப்பர் தோட்டங்களில் வேலைநிறுத்தங்கள் இடம்பெறலாம் என ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அதனால், உலகப்போரை காரணமாகக் காட்டி, பல இடதுசாரிகள் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். குறிப்பாக, சமசமாஜக் கட்சிப் பிரமுகர்கள், "போர் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தமைக்காக" சிறைப் பிடிக்கப் பட்டனர். சமசமாஜக் கட்சி தோழர்கள், சிறைச்சாலைக்கு சென்ற பின்னரும் சும்மா இருக்கவில்லை. கூட இருந்த கைதிகளுக்கும், காவலர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வு ஊட்டினார்கள். ஒரு தடவை, சிறைக்காவலாளியின் ஒத்துழைப்புடன், சிறை உடைத்து தப்பித்து விட்டனர். தப்பியவர்கள் யாழ்ப்பாணம் சென்று, அங்கிருந்து பாதுகாப்பாக இந்தியா செல்லும் அளவுக்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. சிறை உடைப்பினால் ஆத்திரமுற்ற பிரிட்டிஷ் காலனிய அரசு, கண்ணில் பட்ட இடதுசாரிகளை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தது.

இரண்டாம் உலகப்போர் வெடிக்கும் தறுவாயில், உலக இடதுசாரி இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரச்சினை, இலங்கையிலும் எதிரொலித்தது. சமசமாஜக் கட்சி ட்ராஸ்கியை பின்பற்றி நான்காம் அகிலத்தில் இணைந்து கொண்டது. இதனால் அதிருப்தியுற்ற ஸ்டாலினிசவாதிகள், "இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி" யை ஸ்தாபித்தனர். இவ்விரு கட்சிகளும், இன்றைக்கும் அதே கொள்கையுடன் தொடர்கின்றன. யாழ்ப்பாணத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல வரவேற்பிருந்தது. தமிழ் உழைக்கும் மக்கள், அதனை தமது கட்சியாக கருதினார்கள். தாழ்த்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப் படுத்திய வெகுஜன அமைப்பான, "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" யிலும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் ஊடுருவி இருந்தனர்.

சர்வதேச மட்டத்தில், ஸ்டாலினின் சோவியத் யூனியன், நேச நாடுகளின் அணியில் பிரிட்டனுடன் கூட்டுச் சேர்ந்தது. சோவியத் சார்பு நிலையெடுத்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, "பாசிசத்திற்கு எதிரான போர் நீதியானது" என்று கூறி வந்தது. இதனால், பல நூற்றுக் கணக்கான தமிழ் தலித் இளைஞர்கள், இலங்கை காலனிய இராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் சென்றனர். உற்சாகமாக கட்சிக்கு பாடுபட்ட இளைஞர்களும் இராணுவத்தில் சேர்ந்ததால், கட்சியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தில், உயர்சாதி தமிழர்கள் மிகவும் அரிதாகவே சேர்ந்திருந்தனர். வேளாள நிலவுடமைச் சமூகத்தில், இராணுவத்தில் பணியாற்றுவது கீழ்த்தரமாகக் கருதப் பட்டது. பிற்காலத்தில், ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்த பொழுது, "உயர்சாதி மனப்பான்மையினால் ஏற்பட்ட பின்னடைவு" பெரிதும் உணரப் பட்டது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பொறுத்த வரையில், இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாகும். ஆசியாக் கண்டத்தில் ஆங்கிலேயரின் மிகப்பெரும் குடியேற்ற நாடான, அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் கப்பல்கள் யாவும், இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று செல்வது வழக்கம். இலங்கைத் தீவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், பிரிட்டனால் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கி ஓரிரு ஆண்டுகளில், சிங்கப்பூரும், மலேசியாவும், ஜப்பானால் கைப்பற்றப் பட்டன. அந்த அவமானகரமான தோல்வியின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. ஜப்பான் சரணாகதி அடையும் வரையில், தூர கிழக்காசியாவுக்கான இராணுவ கட்டளைப் பணியகமாக இலங்கை திகழ்ந்தது. போர்க்களத்திற்கு அனுப்பப்படும் படையினரை பராமரிக்கும் மையமாகவும் இலங்கையை தேர்ந்தெடுத்தார்கள். இதனால், நாடு முழுவதும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் கட்டப்பட்டன. அன்று இரண்டாம் உலகப்போருகாக்காக கட்டப்பட்ட மருத்துவமனைகள் இன்றைக்கும் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் போது, இலங்கையில் பிரிட்டிஷ் படைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள், நீண்ட காலமாக இரகசியமாக வைக்கப்பட்டன. குறிப்பாக கொழும்பு நகருக்கு அருகாமையில் உள்ள, இரத்மலானை விமான நிலையம், ஜப்பானிய விமானக் குண்டுவீச்சினால் சேதமடைந்தது. விமான நிலையத்திற்கு அருகில் இருந்த கட்டிடங்கள் நாசமடைந்த செய்தி மட்டுமே வெளியில் சொல்லப்பட்டது. உண்மையில், அன்றைய தாக்குதலில் (5 ஏப்ரல் 1942) முப்பதுக்கும் அதிகமான பிரிட்டிஷ் போர் விமானங்கள் நாசமாக்கப் பட்டன! நான்கு நாட்கள் கழித்து, திருகோணமலை துறைமுகம் தாக்கப்பட்டது. கேமிஸ், வம்பயர் என்ற இரண்டு யுத்தக் கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டன. சீனன்குடா எண்ணெய்க் குதம் தீப்பற்றி எரிந்தது. உண்மையில், பிரிட்டிஷ் இலங்கையின் விமானப் படை, கடற்படை என்பன பெருமளவு அழிக்கப்பட்டன. இலங்கையில் பிரிட்டிஷ் படைகள் பலவீனப் பட்டிருக்கும் தகவல்கள் வெளியே கசிந்தால், எதிரிக்கு சாதகமாக அமைந்து விடும். நிலைமையை பயன்படுத்தி, இலங்கை அரசியல் தலைவர்கள் யாராவது ஜப்பானியருக்கு அழைப்பு விடுப்பார்கள், என்று பிரிட்டிஷ் காலனிய அரசு அஞ்சியது. இதைத் தடுப்பதற்காக, மந்திரி சபையில் இருந்த இலங்கையருக்கு அதிக அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப் பட்டன. இலங்கை ஆட்சியாளர்களும், பிரிட்டனுக்கு விசுவாசமான சமர்த்துப் பிள்ளைகள் என்பதை நிரூபித்தார்கள். உண்மையில், இலங்கைக்கு வழங்கப்பட்ட "சுதந்திரம்", மேற்கத்திய விசுவாசிகளான மேட்டுக்குடியினருக்கு கொடுக்கப்பட்ட பரிசாகும்.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

Thursday, November 26, 2009

1939 ல் ஹிட்லருடன் போருக்கு தயாரான ஸ்டாலின்

1939 ம் ஆண்டு, ஹிட்லரின் ஜெர்மனி மீது படையெடுக்க ஸ்டாலின் முன்வந்தார். கிரெம்ளினில் பிரிட்டிஷ்,பிரான்ஸ் பிரதிநிதிகளை அழைத்துப் பேசப்பட்டது. ஆனால் அவர்கள் ஸ்டாலினின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. லட்சக்கணக்கான துருப்புகளை போலந்தின் எதிர்ப்பையும் மீறி ஜெர்மன் எல்லைக்கு அனுப்புவது ஸ்டாலினின் திட்டம். முன்கூட்டியே போலந்து, நாசி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஸ்டாலினின் போர்த் திட்டத்திற்கு பிரிட்டனும், பிரான்சும் முன்வராத காரணத்தால் தான், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது தான், செக்கோஸ்லாவாக்கியவை ஹிட்லர் ஆக்கிரமிப்பதற்கு பிரிட்டன் அனுமதித்திருந்தது. அன்றைய நிலையில் பிரிட்டனோ, பிரான்சோ ஸ்டாலினுடன் சேர்ந்து ஜெர்மனி மீது போர் தொடுக்க முன்வரவில்லை. இந்த தகவல்கள் யாவும் அண்மையில் பகிரங்கப்படுத்தப் பட்ட சோவியத் ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இதுவரை காலமும், எமக்கு திரிபுபடுத்தப்பட்ட வரலாறே போதிக்கப்பட்டு வந்துள்ளது.

Monday, September 01, 2008

உலகப்போரில் மறைக்கப்பட்ட கறுப்பு வீரர்கள்

2 ம் உலகப்போரில் லட்சக்கணக்கான இந்திய,அரேபிய,ஆப்பிரிக்க வீரர்களின் உதவியின்றி, பிரிட்டனும், பிரான்சும் போரில் வென்றிருக்க முடியாது. ஆனால் அவர்கள் இராணுவத்திற்குள் இனவாத பாகுபாட்டுக்கு உள்ளாகினர். வெற்றி கிடைத்தவுடன் வெகு விரைவில் புறக்கணிக்கப்பட்டனர். வெற்றிவிழா அணிவகுப்பில் "கறுப்பு வீரர்கள்" தவிர்க்கப்பட்டனர். ஊடக ஒளிப்படக்கருவிகள் வெள்ளையின வீரர்களை மட்டுமே படம் பிடித்தன. போர் முடிந்தவுடன், காலனிய நாடுகளின் வீரர்கள் அவரவர் தாயகங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். முன்னாள் படையினருக்கான ஓய்வூதியப்பணம் கொடுக்கப்படவில்லை, அல்லது வெள்ளை வீரருக்கு கொடுப்பதின் 70 வீதம் மட்டுமே வழங்கப்பட்டது.

2 ம் உலகயுத்தத்தில், பிரிட்டிஷ் கொடியின் கீழ் போரிட்ட 11 மில்லியன் படைவீரர்களில், அரைவாசிப்பேர் இந்திய உபகண்டத்தை சேர்ந்த சிப்பாய்கள். குறிப்பாக வட ஆப்பிரிக்காவில் இவர்களது உதவியினால் தான் நாஸி- ஜெர்மன் படைகளை விரட்ட முடிந்தது. அல்லாவிட்டால் அன்று ஜெர்மனி எண்ணைவள வளைகுடா நாடுகளை கைப்பற்றியிருப்பதுடன், யுத்தம் வேறுவிதமாக முடிந்திருக்கும். ஆரம்பத்தில் இந்தியப்படையினரை பயன்படுத்த, அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் விரும்பவில்லை. என்ன இருந்தாலும், "இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதால் வெறுப்பதாக" கூறியவர் ஆயிற்றே, எப்படி விரும்புவார். பிரான்சாவது தனது படையில் பணிபுரிந்த அரேபியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இன்றுவரை ஓய்வூதியமாவது (70 வீதமாகிலும்) வழங்கி வருகின்றது. பிரிட்டன் பெரும்பாலும் எதுவுமே கொடுக்கவில்லை. காயமடைந்தவர்களுக்கு 10 பவுன் (அதுவும் ஒரு முறை) மாத்திரம் கொடுத்தது !

படைநகர்த்தல்களில் எடுக்கப்பட்ட உயர்மட்ட முடிவுகள் பல இனவாத அடிப்படையில் இருந்தன. பிரித்தானியாவை பாதுகாக்க வந்த அமெரிக்க படைகளில் கறுப்பு வீரர்களை அனுப்ப வேண்டாம் என்று, பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது. இத்தாலியின் பல பகுதிகளை முசோலினியின் பாசிச படையினரிடமிருந்து மீட்டெடுத்த, மொரோக்கோ வீரர்களை கொண்டிருந்த பிரெஞ்சு படைப்பிரிவு, ரோமை நோக்கி முன்னேறாதவாறு தடுக்கப்பட்டது. பின்னர் வெள்ளையின வீரர்களை கொண்ட பிரெஞ்சுபடை மட்டுமே ரோம் நகரவீதிகளில் வெற்றி உலா வந்தது. காரணம், கத்தோலிக்க தலைநகரான ரோமை முஸ்லிம்கள் விடுவித்ததாக சரித்திரத்தில் எழுதப்பட்டுவிடக் கூடாது என்பதாம்.

2 ம் உலகயுத்தத்தில் போரிட்ட பிரெஞ்சு இராணுவத்தில், 23 வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த வீரர்கள் அனைவரும் அப்போதிருந்த பிரெஞ்சு காலனிகளை சேர்ந்தவர்கள். போர்க்களத்தில் அவர்கள் தான், பெரும்பாலும் பீரங்கிக்கு இரையாகினர். பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்து, ஐரோப்பாவில் நடந்த யுத்தத்திற்கு போக அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. பலருக்கு வறுமை காரணமாக இருந்தது, அல்லது பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வற்புறுத்தல் காரணமாக இருந்தது. அதேநேரம் கணிசமான தொகையினர், குறிப்பாக அல்ஜீரியர்கள், பிரான்சுக்கு உதவி செய்வதன் மூலம் தமது தாயகத்தின் விடுதலையும் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பினர். ஆனால் போர் முடிந்த உடனேயே அவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்தது. 1945 ம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது, அல்ஜியர்ஸ் நகரில் அல்ஜீரிய தேசியக்கொடிகளை பறக்கவிட்டதன் காரணமாக, ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்களை பிரெஞ்சு இராணுவம் கொன்று குவித்தது. அதன் பின்னர் தொடர்ந்த நீண்ட ஆயுதப்போராட்டம் மூலமே அல்ஜீரியர்கள் தமது விடுதலையை பெற்றுக்கொண்டனர்.

போருக்குப் பின்னரான காலகட்டத்தில் வந்த திரைப்படங்கள் யாவும் வெள்ளையின வீரர்களையே பெரும்பாலும் காட்டுகின்றன. அண்மையில் கூட அமெரிக்க தயாரிப்பாளர் ஈஸ்ட்வூட் "Letters from Iwo Jima" என்ற தலைப்பில், ஜப்பான் தீவொன்றை அமெரிக்கவீரர்கள் கைப்பற்றிய சம்பவத்தை வைத்து எடுத்த படத்தில், கறுப்பு முகங்களை காணாததை பற்றி கண்டனக்குரல்கள் எழுந்தன. ஏனெனில் அந்த தீவை கைப்பற்றிய அமெரிக்க கடற்படைபிரிவில் 90 வீதமானவர்கள் கறுப்பின வீரர்கள்.

2006 ம் ஆண்டு, பிரான்சில் வெளியிட்ட "Indigénes" என்ற திரைப்படம், அந்நாட்டில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக ஒரு திரைப்படம், 2 ம் உலகயுத்தத்தில் பங்குபற்றிய அல்ஜீரிய, மொரோக்கோ வீரர்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அவர்களின் பங்களிப்பை கண்டுகொள்ளாது விட்ட பிரெஞ்சு அரசாங்கம், புத்திஜீவிகள், ஊடகங்கள் என்பன அதற்கு பின்னர் உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொள்ள நேர்ந்தது. இந்த திரைப்படம் வந்ததன் விளைவாக, முன்னாள் காலனிய வீரர்களின் ஓய்வூதியம் பிரெஞ்சு(வெள்ளையின) வீரர்களின் அளவு சமமாக்கப்பட்டது.

"எமது பாட்டன்மார் பிரான்சிற்காக சண்டையிட்டு மடிந்தனர், எமது தந்தைமார் பிரான்சை கட்டி எழுப்பினர். எமது தலைமுறையின் கடமை இந்தக்கதைகளை சொல்வது." என்று கூறுகிறார் அந்தப்படத்தின் முன்னனி நடிகர் Jamel Debbouze. இந்தப்படத்தை பிரெஞ்சு அரசாங்கத்தின் ஒப்புதல் இன்றி, பெரும் பணச்செலவில் தயாரித்திருக்க முடியாது. ஏனெனில் "பிரான்ஸ் என்ற தாயகத்தில், எல்லோரும் இந்நாட்டு மக்கள்." என்ற கருத்தை கொண்டிருப்பதால், அந்தப்படத்திற்கு தீவிர வலதுசாரிகளைத் தவிர பிறரின் ஆதரவு கிடைத்ததில் வியப்பில்லை.

Les Indigènes (Days of Glory)




Tell a Friend
______________________________________________________