Showing posts with label நாம் தமிழர். Show all posts
Showing posts with label நாம் தமிழர். Show all posts

Saturday, March 27, 2021

சீமானுக்கும் ஹிட்லருக்கும் இத்தனை ஒற்றுமைகளா?

 


அதிசயம் ஆனால் உண்மை! 
சீமானுக்கும் ஹிட்லருக்கும் இடையிலான ஒற்றுமைகள்

  • ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின. அடோல்ப் ஹிட்லரின் தாத்தா பெயர் யாருக்கும் தெரியாது. அவரது பாட்டி ஒரு யூத செல்வந்தர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். ஆகையினால் அடோல்ப் ஹிட்லரின் தந்தை ஆலோயிஸ் ஹிட்லர் உண்மையில் திருமணத்திற்கு புறம்பான உறவில் பிறந்திருக்கலாம். அவரது தந்தை ஒரு யூதராக இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் ஹிட்லரின் உறவினர்களின் DNA எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில், வட ஆப்பிரிக்க அரேபியர்கள், அல்லது மத்திய கிழக்கை பூர்வீகமாக கொண்ட அஷ்கனாசி, செபெர்டிம் யூதர்களின் DNA உடன் ஒத்துப் போவது தெரிய வந்தது. ஆகவே உண்மையில் யூதக் கலப்பில் பிறந்த ஹிட்லர் தான் தீவிரமாக ஜேர்மனிய இனத்தூய்மை பேசி வந்தார். ஒருவேளை அவர் இதன் மூலம் தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொள்ள நினைத்திருக்கலாம். உண்மையில் அந்தக் காலத்தில் யூத இனக்கலப்பு கொண்ட ஜெர்மனியர்கள் ஏராளம் பேர் இருந்தனர். 

  • சீமான் குடும்பத்தில் மலையாளிக் கலப்பு இருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. ஏற்கனவே சிலர் இது குறித்த ஆதாரங்களை தேடி உள்ளனர். உண்மையில் DNA சோதனை செய்து பார்த்தால், சீமானும், அவரது நாம் தமிழர் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் தமிழர்கள் அல்ல என்பது நிரூபிக்கப் படும். ஆனால் அவர்கள் தான் இன்று மிகத் தீவிரமாக தமிழினத் தூய்மை குறித்து பேசி வருகின்றனர். 

  • ஹிட்லரின் கொள்கை ஜெர்மனிய இனத்தை மட்டும் தூய்மைப் படுத்துவதோடு நின்று விடவில்லை. ஜெர்மன் மொழியையும் தூய்மைப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். ஜெர்மன் மொழியில் அன்றாட பாவனையில் இருந்த யூதர்களின் ஹீபுரு மொழிச் சொற்கள் அகற்றப் பட்டன. அத்துடன் நவீன ஜெர்மன் மொழியில் ஏராளமான பிரெஞ்சு சொற்கள் கலந்திருந்தன. அவற்றிற்கு பதிலாக தூய ஜெர்மன் சொற்கள் கொண்டு வரப் பட்டன. 

  • சீமானின் கொள்கை தமிழ் இனத்தை மட்டும் தூய்மைப் படுத்துவதோடு நின்று விடவில்லை. தமிழ் மொழியை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். தமிழ் மொழியில் அன்றாட பாவனையில் இருந்த சம்ஸ்கிருத, ஆங்கில சொற்களுக்கு பதிலாக தூய தமிழ்ச் சொற்கள் கொண்டு வரப் பட்டன. 

  • ஹிட்லர் இளம் வயதில் எந்த விதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. அவர் எதிர்காலத்தில் ஓர் ஓவியக் கலைஞராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக வியன்னா சென்று கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். சிறிது காலம் ஓவியங்கள் வரைந்து விற்று வருமானம் ஈட்டினார். 

  • சீமான் இளம் வயதில் எந்தவிதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. எதிர்காலத்தில் ஒரு சினிமா டைரக்டராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக சென்னைக்கு சென்று சிறிது காலம் சினிமாத் துறையில் வேலை செய்து வந்தார். அதன் மூலம் வருமானம் ஈட்டினார். 

  • ஹிட்லர் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். ஆனால் பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தை ஆதரித்தார். மரபுவழி கிறிஸ்தவ மதம் யூதர்களின் கதைகளை கூறும் பழைய ஏற்பாட்டை பைபிளின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். அதனால் "யூதக் கலப்பு" இல்லாத புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் மட்டுமே ஜெர்மனியர்களின் மதம் என்பது ஹிட்லரின் கொள்கையாக இருந்தது. 

  • சீமான் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். திராவிடர் கழக கூட்டங்களிலும் உரையாற்றினார். ஆனால், பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் இந்து மதத்தை ஆதரித்து முப்பாட்டன் முருகன் என்று கொண்டாடினார். "ஆரியக் கலப்பு" இல்லாத சைவ சமயம் மட்டுமே தமிழர்களின் மதம் என்பது சீமானின் கொள்கையாக இருந்தது. 

  • ஹிட்லர் அரசியலுக்கு வந்த காலத்தில் ஜேர்மனிய தேசியவாதிகளின் ஆயுதப்போராட்ட கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவை ஆதரித்த குற்றத்திற்காக மியூனிச் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனை குறைக்கப் பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயக பாதையைத் தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட "ஜெர்மன் தேசிய சோஷலிச தொழிலாளர் கட்சி" (NSDAP) என்ற அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார். 

  • சீமான் அரசியலுக்கு வந்த காலத்தில் தமிழீழ தேசியவாதிகளின் ஆயுதப்போராட்ட கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவை ஆதரித்த குற்றத்திற்காக வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனை குறைக்கப் பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட "நாம் தமிழர் கட்சி" (NTK) எனும் அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார். 

  • ஹிட்லர் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப்பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் "எனது போராட்டம்" என்ற பெயரில் நூலாக வெளியானது. நாசிக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர். 

  • சீமான் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப்பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் "திருப்பி அடிப்பேன்" என்ற பெயரில் நூலாக வெளியானது. நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர். 

  • நாஸிக் கட்சியான NSDAP ஹிட்லர் உருவாக்கியது அல்ல. ஹிட்லர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அது போன்று பல ஜெர்மன் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப் படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த NSDAP கட்சியை ஹிட்லர் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் ஹிட்லரின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், NSDAP கட்சி பவாரியா மாநிலத்தில் பிரபலமானது. 

  • நாம் தமிழர் கட்சி சீமான் உருவாக்கியது அல்ல. அது சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய இயக்கம். சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, தமிழகத்தில் அது போன்ற பல தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப் படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த நாம் தமிழர் கட்சியை சீமான் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் சீமானின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், நாம் தமிழர் கட்சி தமிழ் நாடு மாநிலத்தில் பிரபலமானது. 

  • நாசிக் கட்சி கொடியில் உள்ள ஸ்வஸ்திகா சின்னம் கூட ஹிட்லரின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தூலே கேமைன்ஷாப் போன்ற சில அமைப்பினரால் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப் பட்டது. ஹிட்லர் ஸ்வஸ்திகா சின்னத்தை மறு பக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். நாஸிக் கொடியில் உள்ள கருப்பு, வெள்ளை, சிவப்பு வர்ணங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஜெர்மன் சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது. 

  • நாம் தமிழர் கட்சிக் கொடியில் உள்ள புலிச் சின்னம் சீமானின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளினால் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் இயங்கிய சில தமிழ்த் தேசிய இயக்கங்களாலும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப் பட்டது. சீமான் புலிச் சின்னத்தை மறுபக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். புலிக்கொடி நூறாண்டுகளுக்கு முன்பிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது. 

  • ஹிட்லர் வாழ்ந்த காலத்தில், "சியோன் ஞானிகளின் இரகசியக் காப்புவிதிகள்" என்ற நூல் பிரபலமாக இருந்தது. அது இலுமினாட்டிக் கதை போன்று புனைவுகளால் எழுதப்பட்டது. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, யூதர்கள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப் பட்டன. அதை உண்மை என ஹிட்லர் நம்பினார். அதனால் யூதர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து ஜேர்மனிய மக்களை பாதுகாக்கப் போவதாக சொல்லிக் கொண்டார். 

  • சீமான் வாழும் காலத்தில் இலுமினாட்டிகள் பற்றிய புனை கதைகள் பிரபலமாக இருந்து வருகின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, இலுமினாட்டிகள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப் பட்டன. அதை உண்மை என சீமான் நம்பினார். அதனால் இலுமினாட்டிகள் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கப் போவதாக சொல்லிக் கொள்கிறார். அன்று ஹிட்லர் யூதர்கள் என்று நேரடியாக சொன்னதை, இன்று சீமான் இலுமினாட்டிகள் என்று மறைமுகமாக சொல்கிறார். ஆனால், இருவரும் ஒரே விடயத்தை பற்றித் தான் பேசுகின்றனர்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

Friday, May 29, 2020

சீமானின் "சாப்பாட்டு ராமன் கதைகள்" - ஒரு புலி நீக்க அரசியல்!

சீமானின் "சாப்பாட்டு ராமன் கதைகள்", அநேகமாக புலி நீக்க அரசியல் செய்யும் நோக்கில் பரப்பப் பட வாய்ப்புண்டு. இந்தக் கதைகள் மூலம், புலிகளின் அரசியல் தலைமையை கேலி செய்து, புலிப் போராளிகளின் அர்ப்பணிப்பு, தியாகத்தை கொச்சைப் படுத்துவதே சீமானின் நோக்கமாக இருக்கிறது. இதற்கு ஈழத்து சைக்கிள் கட்சியும் ஒத்துழைக்கிறது. தமிழ் சமூகத்தில் புலி நீக்கம் செய்த பின்னர், தமது தனித்துவமான மேட்டுக்குடி அரசியலை திணிக்கும் உள்நோக்கம் மறைந்திருக்கிறது.

முன்பு புலிகளின் முகாமில் தங்கியிருந்த காலத்தில் அங்கிருந்த வாழ்க்கை முறை பற்றி பல முன்னாள் போராளிகள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். தினந்தோறும் ஒரே மாதிரியான "அடிப்படை உணவு" மட்டுமே கிடைத்து வந்ததாக கூறினார்கள். சோறுடன், பருப்பு, கத்தரிக்காய், மற்றும் கௌப்பி எனப்படும் அவரைக்காய் உணவு எப்போதும் கிடைக்கும். அன்று வன்னியில் பெருமளவு விவசாய நிலங்களில் கௌப்பி பயிரிடப் பட்டு வந்தது. அது ஒன்றே சத்தான உணவாக கருதப் பட்டது. 

அதை விட வாரத்திற்கு ஒரு தடவை இறைச்சி பெரும்பாலும் மாட்டிறைச்சி கொடுத்து வந்தனர். சில நேரம் புட்டு, இடியப்பம் ஆகியன சமைத்துப் பரிமாறுவார்கள். ஆனால், இட்லி, தோசை, வடை போன்ற, சீமான் விவரித்த உணவு வகைகள் மிக அரிதாகத் தான் கிடைக்கும். ஆமைக்கறியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  

இதற்கு இன்னொரு பக்கம் உள்ளது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், குறிப்பாக 2002 ம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான வெளிநாட்டு பிரமுகர்கள் வன்னிக்கு சென்று வந்தனர். ஊடகவியலாளர்கள், NGO பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் இப்படிப் பலர் சென்று வந்தனர். அவர்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து கொடுத்து உபசரிப்பது புலிகளின் வழக்கமாக இருந்தது. இதனை சீமான் கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்கிறார். என்னவோ தனக்கு மட்டுமே ராஜமரியாதை கிடைத்தது மாதிரிப் புளுகுகிறார். அவ்வளவு தான். 

அந்தக் காலகட்டத்தில் தென்னிலங்கையில் இருந்து சென்ற சிங்கள-தமிழ் ஊடகவியலார்களை விசாரித்தால் புலிகளின் விருந்தோம்பல் பற்றி கதை கதையாக சொல்வார்கள்.  தங்களுக்கு கிடைத்த விருந்து சாப்பாடு அங்கிருந்த மக்களுக்கு அல்லது போராளிகளுக்கு கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று சில ஊடகவியலாளர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். 

அந்தக் காலத்தில், அரசின் பொருளாதாரத் தடை காரணமாக, அடிப்படை உணவாகக் கருதப்படும் அரிசி, பருப்பு போன்றன கிடைப்பதே கஷ்டமாக இருந்தது. போஷாக்கின்மை காரணமாக குழந்தைகளும், சிறுவர்களும், கர்ப்பிணித் தாய்மாரும் பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தனர். 

சீமான் தனது புளுகுக் கதைகள் மூலம் சொல்ல விரும்புவது இது தான்:

  • - புலிகள் எப்போதும் சாப்பிடுவதில் மட்டுமே குறியாக இருந்தார்கள். அதனால் போரிடுவதில் கவனம் செலுத்தவில்லை.  
  • - வெளிநாடுகளில் இருந்து வந்த பிரமுகர்களை நன்றாக கவனித்த புலிகள், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை புறக்கணித்தார்கள்.
  • - புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், இயக்கத்தின் தலைமை உட்பட, ஒரு பிரிவினர் வசதியாக வாழ்ந்து வந்தனர். பொருளாதாரத் தடை, உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் இந்தப் பிரிவினர் அறுசுவை உணவு உண்டு களித்து சொகுசாக வாழ்ந்தனர். 

இது தான் புலி நீக்க அரசியல் எனப்படும். இதற்கு வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை காட்டலாம். நாற்பது வருடங்களுக்கு முன்பு, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தான் பெரும்பான்மையான ஈழத் தமிழர்களின் ஆதரவு கிடைத்து வந்தது. அப்போது வெறும் பத்துப் பேருடன் இயங்கிய புலிகள் போன்ற இயக்கங்கள், கூட்டணி பற்றியும், அதன் தலைவர் அமிர்தலிங்கம் பற்றியும் கேலி, கிண்டல் செய்து பேசி வந்தனர். தமது வெளியீடுகளில் நையாண்டி செய்தனர். அதே நேரத்தில், தாம் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்டிக்காக்கும் தமிழ்த்தேசியக் கொள்கையை பின்பற்றுவதாக கூறி வந்தனர். நிகழ்காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அமைப்பை தாமும் ஏற்றுக் கொள்வதாக காட்டிக் கொண்டு, தக்க தருணம் வந்தவுடன் அதைக் கைகழுவி விடுவது ஒரு அரசியல் தந்திரோபாயம். அரசறிவியலில் "மாக்கியவல்லித்தனம்" என்பார்கள். 

அது சரி, சீமான் தான் வேறு நாட்டிலிருந்து சென்று ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கியிருந்த படியால் தவறாக கருதிக் கொள்கிறார் என்று ஒரு காரணம் கூறலாம். ஏன் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரில் ஒரு சாரார் சீமானுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்? அதை விட, காலங்காலமாக ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சைக்கிள் கட்சி எனப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அங்கிருந்த உண்மை நிலவரம் தெரியாதா? 

உண்மையைச் சொன்னால், இவர்கள் யாருமே களத்தில் நின்று போராடியவர்கள் அல்ல! இவர்கள் ஒன்றில் வெளிநாடுகளுக்கு சென்று வசதியாக வாழ்பவர்கள். அல்லது உள்நாட்டிலேயே மருத்துவர், ஆசிரியர் என்று மத்தியதர வர்க்க தொழில் செய்து வசதியாக வாழ்பவர்கள். இவர்களது அரசியலும், சீமானின் அரசியலும் ஒன்று தான். ஒருபுறம் புலிகளை ஆதரிப்பதாக நடித்துக் கொண்டே, மறுபுறம் அவர்களை கொச்சைப் படுத்தி வருகின்றனர். இத்தகைய புலி நீக்க அரசியல் மூலம், சமூகத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகின்றனர். 

சீமானுக்கு முட்டுக் கொடுக்கும் ஈழத்தமிழர் குழுவில் உள்ள முன்னாள் போராளிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே இருந்தாலும், அவர்கள் தமது தற்போதைய வசதியான வாழ்க்கை காரணமாக கடந்த காலத்தை மறந்து விட்டவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு, முன்னொரு காலத்தில் ஏழைகளாக கஷ்டப் பட்டவர்கள், நிறையப் பணம் கைக்கு வந்ததும் திமிராக நடந்து கொள்வார்கள். ஏழைகளை மதிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த சமூக அமைப்பு அப்படித் தான் இருக்கிறது.

Tuesday, August 23, 2016

தமிழ் நாஜிகள் : மக்களை பிரித்தாள அரசு வளர்க்கும் வேட்டை நாய்கள்


கலாச்சாரக் காவலர்கள்:
நாஸிகள் ஆட்சிக் காலத்தில், ஜெர்மன் பெண்கள் பாரம்பரிய கலாச்சார உடையில் அணிவகுத்துச் செல்கின்றனர். நமது தமிழ் கலாச்சாரக் காவலர்கள், ஜெர்மன் நாஸிகளிடம் படித்த சீடர்கள் போலிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஹிட்லரை ஆராதிப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு தீவிர வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் வேறெப்படி சிந்திக்க முடியும்? இங்கே ஒருவர் "ஹிட்லர் ஒரு தேசியவாதி" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே? ஹிட்லரும், நாஜிக் கட்சியினரும் தீவிர ஜெர்மன் தேசியவாதிகள் தானே?

நான் அடிக்கடி "நாம் நாஜித் தமிழர்" என்று குறிப்பிட்டு எழுதுவதை கண்டிக்கும் சில நண்பர்கள், அதற்கு "அறிவுபூர்வமான" விளக்கம் கொடுக்கிறார்கள். நாம் தமிழர் "தமிழ் இனத்தின் நலன் காக்க உருவான தேசியவாதக் கட்சி" என்கிறார்கள்.

அப்படியா? ஜெர்மன் நாஜிக் கட்சி ஆரம்பிக்கப் பட்ட நோக்கமும் அது தானே? அரசியல் கொள்கையும் ஒன்றுதானே? மறுக்க முடியுமா?

ஹிட்லரின் நாஜிக் கட்சி (Nationalsozialistische Deutsche Arbeiterpartei) ஜெர்மன் இனத்தின் நலன் காக்க உருவான ஜெர்மன் தேசியவாதக் கட்சி தான். அதன் பெயரிலேயே தேசியம் இருக்கிறது. National என்ற சொல்லை ஜெர்மன் மொழியில் "நாற்சியோனல்" என்று உச்சரிப்பார்கள். அது தான் சுருக்கமாக நாஸி என்று அழைக்கப் பட்டது.

"ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கும், ஈழத்தமிழரின் பேரழிவுக்கும் காரணம் தமிழ்நாட்டை ஆளும் தெலுங்கர்கள்" என்று சொல்கிறார் சீமான். "முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மன் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும் காரணம் ஜெர்மனியை ஆண்ட யூதர்கள்." என்றான் ஹிட்லர். என்ன வித்தியாசம்?

உருது தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல என்று சீமான் சொல்லி இருக்கிறாராம். அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு ஒரு கூட்டம் அலைகிறது. ஒரு காலத்தில், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், ரியூனியன், சீஷெல்ஸ், பிஜி போன்ற நாடுகளில் தமிழர்கள் குடியேற்றப் பட்டனர். அந்த மக்கள், மூன்று தலைமுறைகளாக, ஆங்கிலம், அல்லது பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா?

உருது, இந்தி, இரண்டும் ஒரே மொழி தான் என்ற உண்மையை பலர் அறியவில்லை. உருது அரபி எழுத்துக்களையும், இந்தி சம்ஸ்கிருத கிரந்த எழுத்துக்களையும் பாவிப்பது மட்டுமே வித்தியாசம். ஹிந்துஸ்தானி மொழியும், பாரசீக மொழியும், பிற உள்ளூர் மொழிகளும் கலந்து உருவான புதிய மொழி தான் உருது அல்லது இந்தி. மொகலாயர் காலத்தில் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.

தேசியவாதத்தை இனவாதமாக சிறுமைப் படுத்த நினைப்பவர்கள் தான், "அவன் தமிழனா, இவன் தமிழனா?" என்று கேட்கிறார்கள். தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் உருது பேசினாலும் அவர்கள் தமிழர்கள் தான்.

மேற்கத்திய நாடுகளில் ஐந்து வருடங்களுக்கும் மேல் வசித்திருந்தால், பிரஜாவுரிமை கொடுப்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாட்டுடன் ஒன்றித்து விட்டதற்காக, அந் நாட்டு மொழியை பேசுவதற்காக கொடுக்கப் படும் நியாயமான வெகுமதி.

இந்த விடயங்களை, முதன்முதலாக ஹிட்லர் தான் கேள்விக்குட்படுத்தினான். ஜெர்மன் தவிர்ந்த வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஜெர்மனியர்கள் அல்ல என்று வாதிட்டான். இட்டிஷ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்ல என்று சொன்னான். ஆதாரம் தேவைப்படுவோர் ஹிட்லர் எழுதிய மெயின் காம்ப் நூலை வாசிக்கவும்.


மேலே உள்ள படம், சீமான் ஆதரவாளர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தது. சீமானும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளும், பேரினவாத அரச கைக்கூலிகள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்? "மலையாள மாவோயிஸ்டுகள்" என்று அவதூறு பரப்புவதில் இருந்தே இவர்களது அரச அடிவருடித்தனம் வெளிப்படுகின்றது. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள், தமிழ் நாட்டுக்கு விடுதலை கேட்க மாட்டார்களாம். நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க. 

சீமானை உளவுத்துறை பின்னால் நின்று இயக்க வேண்டிய அவசியமில்லை. முன்னால் நின்றே இயக்கலாம். தமிழ்நாட்டில் மாவோயிச அபாயம் வரவிடாமல் தடுப்பதற்கு தயார் படுத்தப் பட்டிருக்கலாம். அயல் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மூன்றிலும் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விடாமல் தடுப்பதற்கு சீமான் போன்ற கைக்கூலிகள் உளவுத்துறைக்கு அவசியம். 

திடீரென தோன்றிய ஒரு தீவிர வலதுசாரி அரசியல்வாதி, மிகக் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தால், அது எப்போதும் சந்தேகத்திற்குரியது. தமிழ் நாட்டில் ஏற்கனவே பல தசாப்த காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய கட்சிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. 

நக்சல்பாரி வழி வந்த கம்யூனிச அமைப்புகள் மட்டுமல்ல, தீவிர தமிழ்தேசியக் கட்சிகள் கூட ஊடகங்களின் கண்களுக்கு தட்டுப் படுவதில்லை. அதே நேரம், இன்றைக்கும் மிகக் குறைந்தளவு ஆதரவாளர்களை கொண்ட சீமானுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தது எப்படி? 

அமெரிக்காவிலேயே வெகுஜன ஊடகங்களுக்கு, உளவுத்துறையின் உத்தரவுகள் வருவது வழமை. எல்லாக் கட்சிகளிலும் உளவுத்துறைக்கு தகவல் கொடுப்பதற்கு ஆட்களை வைத்திருப்பார்கள். இந்தியாவில் தாராளமான சுதந்திரம் தந்து விடுவார்களா? அதிலும் "உலகம் முழுவதும் தமிழன் ஆண்டான்..." என்று இன- அடிப்படைவாதம் பேசும் கட்சியை சும்மா விட்டு விடுவார்களா?

Saturday, March 19, 2016

"தமிழ்நாட்டை ஹிட்லர் ஆள வேண்டும்!" - நாம் நாஜித் தமிழர் கட்சி

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - நான்கு] 

தெருவில் போகும் நாயைப் பார்த்துத் தான் இன்னொரு நாய் குரைக்கும். அதே நாய் மனிதர்களைக் கண்டு விட்டு பேசாமல் போகும். வெள்ளையின எஜமானர்களை பக்திப் பரவசத்துடன் வழிபடும் "நாம் போக்கிரித் தமிழர்" கட்சி ஆதரவாளர்கள், தம்மைப் போன்ற சகோதர இனமான கருப்பர்களிடம்  தான் வீரத்தைக் காட்டுகிறார்கள். 

"இதோ பாருங்கள்! வெள்ளையர்கள் தமிழ்ப் பாடல் பாடுகின்றார்கள்!" என்று ஒரு வீடியோவை இனையத்தில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்கள். (https://www.youtube.com/watch?v=sNHlOW5t5JI) "என்ன அதிசயம்! ஒரு ஜெர்மன் பெண் சரளமாகத் தமிழ் பேசுகின்றாள்...பாருங்கள்!" என்று இன்னொரு வீடியோவை பகிர்ந்து மகிழ்ந்தார்கள். (https://www.youtube.com/watch?v=UXbtqSB2MqE)

ஆனால்... ஆனால்... அதே தமிழ் இன உணர்வாளர்கள்(?), தமிழக தொலைக்காட்சியில் நடக்கும் சுப்பர் சிங்கர் போட்டியில், மலையாளிகளும், தெலுங்கர்களும் தமிழ்ப் பாடல் பாடி பரிசு பெற்றுக் கொண்டு செல்கிறார்கள்!" என்று அறச்(?) சீற்றம் கொள்கின்றனர்.

வெள்ளையன் தமிழ்ப் பாடல் பாடினால், "தமிழன்டா" என்று சொல்லிச் சொல்லி பெருமைப் படுகிறார்கள். ஆனால், ஒரு கன்னடன், தெலுங்கன், மலையாளி தமிழ்ப் பாடல் பாடினால் மட்டும் அது தமிழர்க்கு சிறுமையோ? இன்னொரு இனத்தவன் எமது தமிழ் மொழியை சரளமாகப் பேசி, பாடலும் பாடினால், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டுமல்லவா? இந்த இடத்தில் தான், நாயைப் பார்த்து குரைக்கும் நாய்களுடன், நாம் போக்கிரித் தமிழர்களை ஒப்பிட வேண்டியுள்ளது.

கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளை பேசும் மக்களும், தமிழர்களைப் போன்று கருப்பர்கள் தானே? அதனால் தான், வெள்ளையின எஜமான்கள் தமிழ்ப்பாட்டு பாடினால் பெருமைப் படுபவர்கள், கருப்பின சகோதரர்கள் தமிழ்ப் பாட்டு பாடினால் சிறுமைப் படுகிறார்கள்.

சீமானும் அவரது தம்பிகளும், 'தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருவதால், "யார் தமிழன்?" என்ற கேள்வி எழுகின்றது. தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்கள் தானே என்று யாராவது அப்பாவித்தனமாக கேட்டால் தொலைந்தீர்கள்? கன்னட ஜெயலலிதா, தெலுங்கு கருணாநிதி, மலையாள எம்ஜிஆர் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டார்கள் என்று வகுப்பெடுக்க வந்து விடுவார்கள். அப்படியா? சீமான் கூட ஒரு மலையாளி என்று சொல்கிறார்களே?

இன்றைய காலத்தில் யார் அசல் தமிழன்? ஒவ்வொருவருக்கும் மரபணு சோதனை செய்து பார்த்து சான்றிதழ் கொடுப்பார்களா? இது முப்பதுகளில் ஜெர்மனியில் ஹிட்லர் செய்த "தூய ஆரிய இன சோதனைகளை" நினைவுபடுத்துகின்றது.

முப்பதுகளில், ஹிட்லரும் சீமான் மாதிரித் தான் பேசி வந்தான். "வந்தேறுகுடிகளான யூதர்கள், இத்தாலியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போலிஷ்காரர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றுக் கொள்வதுடன், தூய ஜெர்மன் ஆரியர்களை ஆள்கிறார்கள் ... ஜெர்மனியை ஒரு ஆரியன் (தூய ஜெர்மனியன்) ஆள வேண்டும்..." என்று கூறினான். ஹிட்லர் எழுதிய மெய்ன் கம்ப் நூலில் நீங்கள் அதை வாசிக்கலாம்.

சீமான் போன்ற அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் வரலாறு தெரியாமல் உளறுவது மாத்திரம் அல்லாமல், தாம் நினைப்பதை வரலாறாக காட்ட முனைகின்றனர். ஆங்கிலேய காலனிய காலத்திற்கு முன்னர், மொழி வேறுபாடு பெரிதாக கருதப் படவில்லை.

ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏதோ ஒரு காரணத்திற்காக குடியேறி வாழ நேர்ந்தவர்கள் அந்தந்த பிரதேச மொழியை தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். வட இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மொகலாயர்களுக்கு எதிராக, கர்நாடகாவில் விஜய நகரம் என்ற இந்து சாம்ராஜ்யம் உருவானது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு விஜயநகர அரசாட்சிக்கு உட்பட்டிருந்தது.

தெலுங்கும், கன்னடமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோன்றும் நெருங்கிய மொழிகள். விஜய நகர ஆட்சிக் காலத்தில் தான் இரண்டாகப் பிரிந்தது. தமிழ்நாடு முழுவதும் விஜய நகர அரசின் நிர்வாகப் பொறுப்புக்களில் அமர்த்தப் பட்டவர்கள் அனைவரும் தெலுங்கர்கள் தான். 19 ம் நூற்றாண்டளவில் அவர்கள் தமிழர்களாக காட்டிக் கொண்டாலும், நிலவுடைமையாளர்களாக தொடர்ந்தும் இருந்தனர்.

இலங்கையில் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கன் தெலுங்கு பூர்வீகத்தை கொண்டவன். ஆனால், அவனது குடும்பத்தினர் தமிழ் பேசினார்கள். பௌத்த மதத்தை பின்பற்றினார்கள். அன்றைய காலத்தில் சாதாரணமாக கருதப்பட்ட இனக் கலப்புக்குக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே.

சீமான் கோஷ்டியினர் இது போன்ற வரலாறுகளை ஆதாரமாக காட்டி, இன்றைக்கும் தமிழ்நாட்டை தெலுங்கர்கள் தான் ஆள்கிறார்கள் என்று வாதிடுவது சிறுபிள்ளைத் தனமானது. நாங்கள் இப்போது 18 ம் நூற்றாண்டில் வாழவில்லை. இது 21 ம் நூற்றாண்டு. இடையில் வந்த நூறாண்டு கால ஆங்கிலேய காலனிய ஆட்சி, தமிழ்நாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் உண்டாக்கவில்லையா?

19 ம் நூற்றாண்டின் இறுதியில் கூட, தென்னிந்தியாவில் மொழி வேறுபாடு எழவில்லை. அதற்குக் காரணம், இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தார்கள். ஆனால், நிர்வாகப் பொறுப்புகளில் பிராமணர்கள் இருந்தார்கள்.

ஆங்கிலேய பிரபு மெக்காலே கொண்டு வந்த ஆங்கில வழி பொதுக் கல்வியை சரியாக பயனபடுத்தி முன்னேறியவர்கள் பிராமணர்கள் என்றால் மிகையாகாது. அதே நேரம், பிராமணர் அல்லாத பிற சாதியினர் மத்தியில் இருந்தும் படித்தவர்கள் உருவானார்கள். அவர்கள் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாக்கிய அமைப்பு தான் திராவிடர் இயக்கம்.

ஆரம்ப கால திராவிடர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் தமிழர்,தெலுங்கர், மலையாளிகள் போன்ற மூவினத்து அறிவுஜீவிகளின் பங்களிப்பு இருந்துள்ளது. "பிற மாநிலத்தவர்கள் தமிழர்களை ஆள்கிறார்கள்..." என்று கொந்தளிப்பவர்கள் அந்தக் காலத்து நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். காலங் காலமாக பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்கலாம் என்றிருந்த நிலைமையை, மெக்காலே கொண்டு வந்த ஆங்கில வழிக் கல்வி மாற்றி அமைத்தது.

ஆங்கிலேயர் காலத்தில், அனைவரும் சாதி, மொழி வேறுபாடின்றி கல்வி கற்க முடிந்தது. அதனால், கற்றவர்கள் எல்லோரும் ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்திருந்தார்கள். உண்மையில், அவர்களது சொந்த மொழியை விட ஆங்கில மொழி அறிவு அதிகமாக இருந்தது.

இலங்கையிலும் அது தான் நிலைமை. சிங்கள, தமிழ் மேட்டுக்குடியினர் ஆங்கிலம் மட்டுமே பேசி வந்த படியால், அவர்களுக்கு இடையில் திருமண பந்தங்களும் ஏற்பட்டிருந்தன. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், மொழி அடிப்படையிலான இனப்பிரச்சினை பிற்காலத்தில் தான் தோன்றியது.

தமிழ்நாட்டில் சென்னை மாநகரத்தில் தான் சனத்தொகை அடர்த்தி அதிகம். "இங்கே தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்று சென்னை வாசிகளை கேட்டால் சொல்வார்கள். அதற்கு காரணம் "ஆக்கிரமிப்பாளர்களான பிற மாநில வந்தேறுகுடிகள்" என்று சீமான் பாணியில் பதில் சொல்லித் தப்ப முடியாது.

வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் அது தவறாகும். உலகில் பல நாடுகளின் தலைநகரங்களில் பூர்வீக மக்களின் சனத்தொகை குறைந்து வருகின்றது. நாகரிக வளர்ச்சி காரணமாக ஏற்படும் நகரமயமாக்கலின் தவிர்க்க முடியாது விளைவு அது.

லண்டன் மாநகரில் ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை குறைந்து, வெளிநாட்டு குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையானோர் காலனிய காலத்தில் சென்று குடியேறினார்கள். அப்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், கென்யா, ஜமைக்கா எல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாகாணங்களாக இருந்தன.

ஆகவே, சென்னையில் பூர்வீக தமிழர்களை விட, வந்தேறுகுடிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி என்ற கேள்விக்கான பதிலை காலனிய காலத்தில் தான் தேட வேண்டும். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் சென்னை என்ற நகரமே இருக்கவில்லை. அது ஒரு சாதாரணமான மீன்பிடிக் கிராமமாக இருந்தது.

பிற்காலத்தில் தென்னிந்தியாவில் நிரந்தரமாக கால் பதித்த ஆங்கிலேயர்கள் அதைத் தமது இந்திய காலனியின் தலைநகரம் ஆக்கிக் கொண்டனர். (தெற்கில் சென்னை, வடக்கில் கல்கத்தா) சென்னையில் தளம் அமைத்திருந்து தான் தென்னிந்தியாவின் பிற பகுதிகளை கைப்பற்றினார்கள்.

ஆங்கிலேய காலனிய கால இந்தியாவிலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, மெட்ராஸ் (சென்னை) மாகாணம் என்ற நிர்வாகப் பிரிவு இருந்தது. அது இன்றைய தமிழ்நாடு மாநிலத்தையும், ஆந்திரா மாநிலத்தையும் உள்ளடக்கி இருந்தது. கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளும் அதற்குள் அடங்கின. அந்த மாகாணத்தின் தலைநகரம் மெட்ராஸ்/ சென்னை.

ஆகையினால், தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்கள் சென்னையில் சென்று குடியேறியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? மேலும் அது ஆந்திராவை அண்மித்த பகுதி என்பதால், தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. இப்போதும் தமிழ் நாட்டின் வடக்குப் பகுதி மாவட்டத்தில் நிறைய தெலுங்கு பேசும் கிராமங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் மீன்பிடிக் கிராமமாக இருந்த மெட்ராஸ் பட்டணத்தை, இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாக மாற்றியதற்கு தமிழர்கள் மட்டும் உரிமை கோர முடியாது. ஆங்கிலேய காலனிகளில் இருந்து அங்கு வந்து குடியேறிய, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் அனைத்து உழைக்கும் மக்களும் பெருமைப் பட வேண்டிய விடயம்.

மெட்ராஸ் தமிழர்களின் பிரதேசத்தில் அமைந்திருந்த படியால், அங்கு குடியேறிய பிறமொழிக் காரர்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழை பேசி வந்தனர். பிறகாலத்தில் அவர்கள் தமிழராக மாறி விட்டனர். இதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும். ஆனால், நாம் போலித் தமிழர் கட்சியினருக்கு மட்டும் இது கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

இன்று ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை கொடுப்பதற்கு முன் நிபந்தனையாக, அந்நாட்டு மொழியை எழுதப் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அங்கெல்லாம் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் அரசியலிலும் பிரகாசிக்கின்றனர்.

நோர்வீஜிய குடியுரிமை பெற்ற, அந்நிய வந்தேறுகுடி தமிழ்ப் பெண் ஒருவர், துணை மேயராக தெரிவு செய்யப் பட்டதை, நாம் தமிழர் பேர்வழிகள் பெருமையுடன் கொண்டாடினார்கள். அதே நேரம், தமிழர்களைப் போன்று சம காலத்தில் இந்திய குடியுரிமை பெற்ற தெலுங்கர்களும், மலையாளிகளும், அரசியல் தலைமைக்கு வந்தால் வெறுக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்திற்குப் பெயர் தமிழ் தேசியமாம்!

தகுதி, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த துறையிலும் பிரகாசிக்கலாம். அதைத் தடுப்பதற்கு இவர்கள் யார்? ஒருவர் பிறப்பால் எந்த இனம் என்று பார்த்து, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இனவாதம் ஆகாதா? இவர்கள் குறிப்பிடும் அரசியல் தலைவர்கள் தம்மை தமிழர்கள் என்று தான் காட்டிக் கொள்கிறார்கள். சரளமாக தமிழ் பேசுகிறார்கள். பொதுவாக தமிழர்கள் வைத்திருக்கும் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள். அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இதிலே இன்னொரு வேடிக்கையும் நடக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் அந்தந்த மொழிக் காரர்கள் ஆட்சி செய்வதாக ஒரு பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள். அதில் உள்ள முதல் அமைச்சர்களின் பெயர்கள், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் அமைந்துள்ளன. அதை மட்டும் வைத்துக் கொண்டு, அதாவது பெயர்களை மட்டும் வைத்து, அவர்கள் அந்தந்த இனத்தவர்கள் என்று தீர்மானிக்க முடியுமா?

வந்தேறுகுடி எதிர்ப்பு அரசியல் செய்யும் சீமான் ஒரு பூர்வீகத் தமிழன் என்பதற்கான ஆதாரம் என்ன? சைமன், செபஸ்டியான் போன்ற பெயர்கள், மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புழங்கும் பெயர்கள் ஆகும். சர்மா, ஐயர் போன்ற பெயர்களைக் கொண்டு பிராமணர்கள் அடையாளம் காணப் படுவதைப் போன்று, கேரளாவில் கிறிஸ்தவர்கள் தமது அடையாளமாக குடும்பப் பெயர்களை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் செபஸ்டியான் என்ற குடும்பப் பெயர் கேரள கிறிஸ்தவர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது.

இலங்கையை ஆண்ட சிங்களப் பேரினவாத பிரதமர்களான பண்டாரநாயக்க, ஜெயவர்த்தனே போன்றோருக்கும் சீமானுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் எல்லோரும் கிறிஸ்தவ மதத்தில் பிறந்தாலும், பெரும்பான்மை இனத்தின் மத அடையாளங்களை வலிந்து சூட்டிக் கொண்டவர்கள். தமது பூர்வீகத்தை மறைப்பதற்காக தீவிரமான இனவாதிகளாக காட்டிக் கொண்டவர்கள்.

பிறக்கும் போது பெற்றோர் வைத்த கிறிஸ்தவப் பெயர்களை வாழ்நாள் முழுவதும் மறைத்து வந்தனர். எதற்காக, நாய் வேஷம் போட்டால் குரைக்கத் தானே வேண்டும்? தேர்தல் வெற்றிகளுக்காக இனவாத அரசியல் பேசினால், சொந்த இனத்தையும் மறைக்க வேண்டி இருக்கும்.

உலகம் முழுவதும், இனவாதத் தலைவர்கள் மத்தியில் ஒரு பொதுவான ஒற்றுமை இருக்கிறது. ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது. பண்டாரநாயக்கவும், ஜெயவர்த்தனேயும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள். ஆனால், மூன்றாவது தலைமுறையாக இலங்கையில் வாழ்வதால், சிங்களவர்களாக மாறி விட்டனர்.

தமது சொந்த இன அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் பலர் இனவாதம் பேசுகின்றார்கள். தமிழகத்தின் வந்தேறுகுடி சீமானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. திருடனே, “திருடன் ஓடுறான்… பிடி… பிடி…” என்று கத்திக் கொண்டே ஓடுவானாம். அது போன்றது தான் சீமானின் வந்தேறுகுடி கோஷமும்.


பெரும்பாலான ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு, சீமான் இன்னொரு பந்தயக் குதிரை. கருணாநிதி, வைகோ வரிசையில் தற்போது சீமான், இந்தியாவில் தமது அரசியல் வர்க்க நலன்களை பிரதிதித்துவப் படுத்துகிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

சீமான் என்ற பந்தயக் குதிரை செய்யும் குரங்குச் சேஷ்டைகள் காரணமாக, பலரது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றார். சீமான் மீது பந்தயப் பணம் கட்டியவர்களுக்கு, இந்தக் குதிரையும் தோற்றுவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதனால், "ஈழத் தமிழர்களின் கடமைகள் என்ன? அவர்கள் எதைப் பற்றி பேச வேண்டும்? எதைப் பற்றி பேசக் கூடாது?" என்று அதிகாரத் தொனியில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாக, "சீமான் சரிப் பட்டு வர மாட்டான்.... இப்போதைக்கு மக்களின் கவனத்தை வேறு திசைக்கு திருப்ப வேண்டும்..." என்பது அந்த "அறிவு"ஜீவிகளின் எண்ணம்.

ஒரு காலத்தில், ஜெர்மனியில் ஹிட்லர் சொன்னதைக் கேட்டும் எல்லோரும் சிரித்தார்கள். பல ஜெர்மனியர்கள் அவரை ஒரு கோமாளியாக சித்தரித்து, கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். ஆகவே, இது போன்ற கோமாளிகளிடம் தான் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் சீமானின் நாம் தமிழர் இந்தத் தேர்தலில் அதிகளவு ஓட்டுக்களைப் பெறப் போவதில்லை. அந்த நிலைமை ஒரு காலத்தில் ஹிட்லரின் நாஸிக் கட்சிக்கும் இருந்தது. ஆனால், ஹிட்லர்களும், சீமான்களும், வருங்காலத்தில் பெரும் முதலாளிகளால் பயன்படுத்தப் படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.

இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீவிரமடையும் நேரத்தில், வட இந்திய பார்ப்பனிய பேரினவாதக் கைக்கூலியாக, தமிழ்நாட்டில் சீமான் செயற்படலாம். அந்த நேரத்தில், சீமான் ஈழத்தமிழ் தேசியவாதிகளின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பார். இது ஈழத் தமிழரின் பந்தயக் குதிரை அல்ல, பார்ப்பனியர்களின் வேட்டை நாய் என்பது அப்போது தெரியும். 

(முற்றும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
1. தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி
2. நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்
3. பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சீமானின் "வந்தேறுகுடி" கொள்கை

Sunday, March 13, 2016

பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சீமானின் "வந்தேறுகுடி" கொள்கை

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - மூன்று] 


போலித் தமிழ் தேசியவாதிகள்: பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பதற்காக, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றி இரட்டைவேடம் போடுவோர். இவர்களது செயற்பாடுகளும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.

சீமான் மற்றும் நாம் தமிழரின் அரசியல் அபிலாஷைகள், இந்துத்துவா - பார்ப்பனீய பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பதாக அமைந்துள்ளன. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. மும்பை சென்று, இந்து- பாசிஸ சிவசேனா இயக்கத்திற்கு ஆதரவாக பேசினார். தமிழகத்தில் பார்ப்பனர்கள் ஆதரித்த ஜெயலலிதாவை அவரும் ஆதரித்தார்.  இலங்கையில் ஒரு தமிழ்க் கட்சியின் தலைவர் இப்படிப் நடந்து கொண்டால், அவருக்கு எப்போதோ துரோகிப் பட்டம் சூட்டி இருப்பார்கள்.

சீமான் இந்துத்துவா வாதிகளின் மதவெறிக் கொள்கையை ஏற்று, "இஸ்லாமியர்கள் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும்" என்று சொன்னார். "தமிழ் பேசும் பார்ப்பனர்கள் அனைவரும் தமிழர்களே" என்று கூறி, வட இந்திய வந்தேறுகுடி பார்ப்பனர்களை தமிழர்களாக அங்கீகரித்தார். சீமானும், நாம் தமிழர் ஆதரவாளர்களும், இந்துத்துவா பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்?  (பார்க்க: சீமானின் பார்ப்பன பாசம்! https://www.facebook.com/tamizachi.Author/videos/926925790739311/ )

"தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும். தெலுங்கு நாட்டை தெலுங்கன் ஆள வேண்டும். கேரளாவை மலையாளி ஆள வேண்டும். கர்நாடகாவை கன்னடன் ஆள வேண்டும்." இதுவே தமது கொள்கை என்று சொல்லிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர், தமிழ்நாட்டிற்குள் வாழும் தெலுங்கு, மலையாள, கன்னட சிறுபான்மையின மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாது, அவர்களை வந்தேறுகுடிகள் என்று தூற்றவும் செய்கின்றனர்.

சீமானின் வந்தேறுகுடி கொள்கைக்கு முரணான விடயமாக, மலேசியாவின் வந்தேறுகுடி சீனர்கள் சிங்கப்பூர் தீவை பிரித்து எடுத்தார்கள். அதற்கு காரணமாக இருந்த லீகுவான் யூ மரணமடைந்த நேரம், சீமான் அஞ்சலி செலுத்தினார். இந்த இரட்டை வேடத்தை சுட்டிக் காட்டினால், நாம் தமிழர் விசுவாசிகள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ உளறிக் கொட்டுகிறார்கள்.

சிங்கப்பூரின் வரலாறு எதுவாக இருந்தாலும், சீமானின் கொள்கையின் அடிபப்டையில்,  சீனர்கள் மலேசியாவின் வந்தேறுகுடிகள் தான். மலேசியா மட்டுமல்லாது, மியான்மர் முதல் இந்தோனேசியா வரை வாழும் சீனர்கள், உள்ளூர் மக்களால் வந்தேறுகுடிகளாக கருதப் படுகின்றனர். பல நாடுகளில் நடந்த இனக் கலவரங்களால் சீனர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர்.

சீன வந்தேறுகுடி லீகுவான்யூவை ஆதரிப்பதற்கு நாம் போலித் தமிழர் சொல்லும் காரணங்கள் இவை தாம். ஒன்று, அவர் தமிழை ஆட்சி மொழியாக்கினார். நாம் போலித் தமிழர் பன்னாடைகளின் மனத்தைக் குளிர வைக்கும் வகையில், ராஜபக்சே சிங்களவர்களும் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அதற்காக நாம் போலித் தமிழர்கள் ராஜபக்சேவை கொண்டாடுவார்களா? (அதற்கு முன்னரே சிங்கப்பூர் மாதிரி சிறிலங்காவிலும் தமிழ் ஆட்சிமொழியாகி விட்டது.)

லீகுவான்யூ ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார். அதனால், அவர் நல்லவர் என்று நாம் போலித் தமிழர் கட்சியினர் சொல்லித் திரிகின்றனர். சொந்த நாட்டு மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சர்வாதிகார ஆட்சி நடத்திய லீகுவான்யூ, தமிழர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் நல்லவராகி விட்டாராம். சிங்கப்பூரில் மலே தேசியவாதிகளையும், சீனக் கம்யூனிஸ்டுகளையும் சிறையில் அடைத்து வருத்திய லீகுவான்யூ, நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராம்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய லீகுவான் யூ, அயலில் இருக்கும் அச்சே மக்களுக்கு ஆதரவாக பேசாத காரணம் என்ன? இந்தோனேசியாவின் அச்சே மாநிலம், சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கிறது. மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்ட அச்சே மக்கள், நீண்ட காலமாக தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அச்சே மாநிலத்தில், இந்தோனேசிய படையினர் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து, லீகுவான்யூ ஒரு வார்த்தை பேசி இருப்பாரா? 

ஒரு ஆட்சியாளர் நல்லவரா கெட்டவரா என்பதற்கு இவர் வைத்திருக்கும் அளவுகோல் "தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது" என்பது தான். ஒருவேளை ராஜபக்சே தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலும், இவர்கள் ராஜபக்சே நல்லவர் என்று சொல்லித் திரிவார்கள். ஏன் ராஜபக்சே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேசவில்லையா? அதனால் சிறிலங்காவின் சர்வாதிகாரி நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராகி விட்டாரா?

ஈழப்போர் நடந்து கொண்டிருந்த காலம் முழுவதும்,சிங்கப்பூரில் லீகுவான்யூ புலிகளை தடை செய்திருந்தார். புலிகளின் முகவர்களாக செயற்பட்டவர்களை, அல்லது ஆதரவாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தார். இந்தோனேசியாவில் இருந்து புலிகளுக்கு சென்று கொண்டிருந்த ஆயுதக்கப்பலை காட்டிக் கொடுத்தார். 

சிங்கப்பூரில் சில ஆர்வலர்கள், வன்னியில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப் பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி தெரிவிக்க கூட்டம் கூடினார்கள். அது தடைசெய்யப் பட்டது. அதை ஒழுங்கு படுத்திய சிங்கை வாசிகளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தார்கள். இவ்வளவும் செய்த லீகுவான்யூ, எல்லாம் முடிந்த பின்னர் தமிழர்களுக்கு ஆதரவானவராக நீலிக் கண்ணீர் வடித்தார். அதைக் கண்டு போலித் தமிழ் தேசியவாதிகள் பொருமுகிறார்கள்.

ஈழப்போர் முடிந்து ஐந்தாறு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இனி அதைப் பற்றி பேசி அரசியல் நடத்த முடியாது என்ற நிலைக்கு சீமானும், நாம் தமிழரும் வந்து விட்டனர். சிறிது காலம் "முப்பாட்டன் முருகன்" என்று கூறி, இந்துத்துவா அடிப்படைவாதிகளை குஷிப் படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள்.

நூறாண்டு காலமாக திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பிராமணர்களின் மனத்தைக் குளிர வைத்தார்கள். சோழர்கள் காலத்தில், வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய சமஸ்கிருத பிராமணர்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களை தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்று பிரித்துப் பேச ஆரம்பித்தார்கள்.

சீமானும், நாம் போலித் தமிழரும், "தமிழ்நாட்டை பிற மாநில வந்தேறுகுடிகள் நாசமாக்கி விட்டதாகவும், தமிழன் ஆண்டால் எல்லாம் சரிவரும்" என்றும் கொக்கரித்துக் கொண்டு திரிகின்றார்கள். தெலுங்கு, கன்னட, மலையாள பூர்வீகத்தை கொண்ட தமிழர்களை குறி வைத்துத் தாக்குகிறார்கள். அதே நேரம், மராட்டிய பூர்வீகத்தை கொண்ட மார்வாடிகள், சம்ஸ்கிருத பூர்வீகத்தை கொண்ட பிராமணர்கள் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்தை "உண்மையான தமிழ் இன உணர்வு" என்று பிதற்றித் திரிகின்றனர்.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
1. தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி
2. நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்

Saturday, March 12, 2016

நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - இரண்டு] 



சீமான் தமிழ் தேசியம் பேசுவதாக பலர் பிழையாக நினைத்துக் கொள்கிறார்கள். ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழ் தேசியவாதிகளும் சீமான் வைத்த பொறிக்குள் வசமாக மாட்டிக் கொண்டு, மீள வழி தெரியாமல் தத்தளிக்கிறார்கள். உண்மையில் சீமான் பேசுவது, "தமிழ் நாட்டுக்கேற்றவாறு மாற்றியமைக்கப் பட்ட சிங்கள பேரினவாதக் கருத்தியல்" ஆகும். இதனை நாம் தமிழர் கட்சி ஆர்வலர்களுடனான உரையாடலில் புரிந்து கொள்ள முடிந்தது.

இலங்கை பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்னர் இருந்தே சிங்கள தேசியவாதம் என்ற போர்வைக்குப் பின்னால் அபாயகரமான சிங்களப் பேரினவாதம் வளர்ந்து வந்தது. ஆங்கிலேய காலனிய காலத்தில், இந்தியாவும், இலங்கையும் ஒரே நாடாக இருந்தது. அதனால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிக் கொண்டிருந்தார்கள்.

பொருளாதார வளர்ச்சி காரணமாக, தமிழ் நாட்டில் சென்னை மாநகரம் மாதிரி, இலங்கையில் கொழும்பு மாநகரம், பல்லினக் குடியேறிகளை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. கொழும்பு துறைமுகத்திலும், நகர சுத்திகரிப்பு பணிகளிலும் பெரும்பாலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால், சிங்கள இனவாதிகளின் ஆரம்ப கால அரசியல் பிரச்சாரங்களும் "வந்தேறுகுடிகளுக்கு" எதிராக அமைந்திருந்ததில் வியப்பில்லை.

இன்று சீமானும், நாம் தமிழரும் பேசுவது போலத் தான், அன்று சிங்கள இனவாதிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். "தெலுங்கு, தமிழ், மலையாள வந்தேறுகுடிகள் தான் இலங்கையை ஆள்கிறார்கள். சிங்கள நாட்டை சிங்களவன் ஆள வேண்டும்." என்று நாம் தமிழர் பாணியில், நாம் சிங்களவர் கோஷம் போட்டனர். உண்மையில், அன்றைய ஆங்கிலேய நிர்வாகத்தில் பெருமளவு தமிழர்கள் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்கள், சிங்களப் பிரதேசங்களில் கூட அரசாங்க ஊழியர்களாக வேலை பார்த்தனர்.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் கொண்டால், அன்றைய இலங்கையில் தமிழரின் விகிதாசாரம் சனத்தொகையில் 40% இருந்திருக்கும். தமிழ் தேசிய தலைவர்கள் மத்தியில், தமிழர்கள் சிறுபான்மை இனம் என்ற உணர்வு இருக்கவில்லை. பாராளுமன்றக் கூட்டம் ஒன்றில், ஜி.ஜி. பொன்னம்பலம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக "ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை" வைத்ததும் அதனால் தான். 

இலங்கையில் தமிழரின் விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கில், சிங்கள இனவாதிகள் தந்திரமாக மலையக தோட்டத் தொழிலார்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். சாதி வேற்றுமை காரணமாக, யாழ் வேளாள மேட்டுக்குடியினரும் அதற்கு ஒத்துழைத்தனர். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், இலங்கையில் இன உணர்வை விட, சாதிய உணர்வு முக்கியமாகக் கருதப் பட்டது. 1911 ம் ஆண்டு, ஆங்கிலேய காலனிய ஆட்சியின் கீழ் படித்த இலங்கையருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒரு தமிழரான சேர் பொன் இராமநாதனும், ஒரு சிங்களவரான சேர் மார்குஸ் பெர்னாண்டோவும் ஒரே தொகுதியில் போட்டியிட்டனர். பெரும்பான்மை சிங்கள வாக்காளர்கள், இராமநாதனுக்கு ஓட்டுப் போட்டு வெல்ல வைத்தார்கள். என்ன காரணம்? மார்குஸ் பெர்னாண்டோ பிற்படுத்தப் பட்ட கரவா (தமிழில்: கரையார்) சாதியை சேர்ந்தவர். இராமநாதன் உயர்த்தப் பட்ட வெள்ளாள (சிங்களத்தில்: கொவிகம) சாதியை சேர்ந்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சிங்கள இனவாதிகளுக்கும் "யார் சிங்களவர்கள்? யார் தமிழர்கள்?" என்று தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இன்று சீமானுக்கும், நாம் (போலித்) தமிழருக்கும் ஏற்பட்டிருக்கும் அதே குழப்பம் தான். ஏனென்றால், ஆங்கிலேய காலனிய காலத்தில், இந்தியாவில் இருந்து வந்த பல்லினக் குடியேறிகள், இலங்கையில் வாழ்ந்த சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆயிரக் கணக்கான தெலுங்கர்கள், மலையாளிகள், மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், வடக்கே பருத்தித்துறை முதல், தெற்கே அம்பாந்தோட்டை வரை குடியேறி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் பேசப்பட்ட மொழி எதுவாகினும், அதை தமது தாய் மொழியாக்கிக் கொண்டனர். குறிப்பாக உயர் சாதியினர் இனக்கலப்பு செய்வதற்கு, சிங்களவர்களோ, தமிழர்களோ எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

ஏராளமான தென்னிந்திய செட்டியார்கள், முதலியார்கள், இரண்டு இனங்களிலும் சரி வரக் கலந்துள்ளனர். அதே மாதிரி, மலையாளிகளும் இன்று சிங்களவர்களாக, அல்லது தமிழர்களாக தம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். எழுபதுகள் வரையில், யாழ்ப்பாணத்தின் வந்தேறுகுடிகளான மலையாள வர்த்தகர்கள், யாழ் குடாநாட்டில் இருந்து கேரளாவுக்கு புகையிலை ஏற்றுமதி செய்து வந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பமும் கேரளாவில் இருந்து வந்து குடியேறிய மலையாள வம்சாவளியினர் தான்.

ஏராளமான தமிழ் பேசும் செட்டியார்களும், முதலியார்களும், சிங்கள இனத்திற்குள் கலந்து விட்ட நிலையில், "யார் சிங்களவர் அல்லாதவர்" என்று வரையறுக்க வேண்டிய தேவை, சிங்கள இனவாதிகளுக்கு ஏற்பட்டது. தமிழ் பேசிய உயர்சாதியினரை சிங்கள சமூகத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட சிங்கள இனவாதிகள், தமிழ் பேசிய தாழ்ந்த சாதியினரை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தனர்.  

கொழும்பு மாநகரில் வாழ்ந்த தீண்டாமை சாதியினரான பறையர்களும், சக்கிலியர்களும் வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசி வந்தனர். இவர்களில் கணிசமான தொகையினர் தெலுங்கர்களாக இருந்த போதிலும் தமிழ் பேசினார்கள். ஆனால், தாழ்த்தப் பட்ட சாதியினர் என்பதால், சிங்களப் பெரும்பான்மை இனம் அவர்களை தம்முடன் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தது.

உண்மையிலேயே சிங்களவர்கள் மத்தியில் பறையர் சாதி இருக்கிறது. சிங்களத்தில் அதை பெறவா என்று சொல்வார்கள். சிங்கள மொழியில் "பெற" என்பது பறை மேளத்தைத் குறிக்கும்.  சிங்கள பெறவா சாதியினரில் பெரும்பான்மையானோர் முன்னொருகாலத்தில் தமிழராக இருந்திருக்கலாம். குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசி வந்த பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச ஒரு தமிழர். தமிழ்நாட்டில் இருந்து வந்தேறிய தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ! 

சிங்கள இனவாதிகளின் கூச்சலான "பறத் தெமளோ", "சக்கிலித் தெமளோ" என்பன மேற்குறிப்பிட்ட சாதிய மனோபாவத்தில் இருந்து வந்த சொற்கள் தான். இன முரண்பாடுகள் கூர்மையடைந்த பின்னர், சாதிப் பாகுபாடு காட்டாமல் அனைத்துத் தமிழர்களுக்கும்  "பறத் தெமளோ" பட்டம் சூட்டப் பட்டது. 

அது மட்டுமல்ல, யாராவது ஒரு சிங்களவர் தமிழர்களுக்கு ஆதரவாக பேசினால், அவரும் "பறத் தெமளோ" என்று தூற்றப் படுகின்றார். ஆகையினால், அது ஒரு சாதியை குறிப்பதாக கருத முடியாது. அது ஒரு வசைச் சொல்லாக தாராளமாக பாவிக்கப் படுகின்றது. எதற்காக இவ்வளவு வியாக்கியானம்? 

நாம் சிங்களர் பாவிக்கும் வசைச் சொல்லான "பறத் தெமளோ"போன்று, நாம் தமிழர் ஒரு வசைச் சொல் வைத்திருக்கிறார்கள். "வடுகர்" என்பது அந்தச் சொல்.  சிறுபான்மைத் தெலுங்கர்களுக்கு எதிரான வசைச் சொல்லான வடுகர் என்பது, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தமிழர்களுக்கு எதிராகவும் பாவிக்கப் படுகின்றது. 

சிங்கள இனவாதிகள் "பறத் தெமளோ" என்று திட்டினால், தமிழ் இனவாதிகள் "வடுக தெலுங்கர்கள்" என்று திட்டுகிறார்கள். என்ன வித்தியாசம்?  இதற்கு முன்னர் சீமானை விமர்சித்து நான் எழுதிய விமர்சனக் கட்டுரைக்கு நாம் தமிழர் ஆர்வலர் ஒருவர் பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தார். "தமிழர்களிடையே நுழைந்துள்ள வடுக கூட்டம் பல வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றது." (கவனிக்கவும்: இனவாத வசைச் சொல்லான "வடுக கூட்டம்")

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மாதிரி, தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ள சிறுபான்மை இனம் ஆகும். கணிசமான அளவு நகர சுத்தி தொழிலாளர்கள் தெலுங்கர்கள் தான். அதாவது தாழ்த்தப் பட்ட சாதியினர். நாம் தமிழர் இனவாதிகளின் வடுகர் எதிர்ப்பு பிரச்சாரம், தெலுங்கு பேசும் தாழ்த்தப் பட்ட சாதி மக்களையும் குறி வைத்து நடக்கிறது. சிங்கள இனவாதிகளின் "பறத் தெமளோ" வும், தமிழ் இனவாதிகளின் "வடுக தெலுங்கர்களும்"  சாதிய மேலாதிக்க கருத்து அடிப்படையில் இருந்து வருகின்றது. 

நாம் சிங்களர் இயக்கம், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்து வந்த இனவாத பிரச்சார பாணியை பின்பற்றித் தான், நாம் தமிழர் இயக்கம் நடந்து கொள்கின்றது. நாம் சிங்களர் இயக்கத்தினர், "சிங்கள நாட்டை சிறுபான்மையான வந்தேறுகுடி தமிழர்கள் ஆள்கிறார்கள்" என்று சொன்னார்கள். நாம் தமிழர் இயக்கத்தினர், "தமிழ் நாட்டை சிறுபான்மையான வந்தேறுகுடி தெலுங்கர்கள் ஆள்கிறார்கள்" என்று சொல்கிறார்கள். இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? 


(தொடரும்) 
 
இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி

Friday, March 11, 2016

தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி


பகுதி - 1

 "சிங்கள சீமான்" ராஜபக்சேயும், 
"தமிழ் ராஜபக்சே" சீமானும்


சீமானும், அவரது தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும், ஈழப் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? குறைந்த பட்சம், அவர்களால் வழிபடப் படும் புலிகள் இயக்கத்திற்கு செய்த உதவிகள் எத்தனை? புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்திக் கொண்டு வந்து கொடுத்தார்களா? புலிகளுக்காக எங்காவது வெடி குண்டு வைத்தார்களா? வன்னி சென்று புலிகளின் பாசறையில் பயிற்சி பெற்றார்களா? அது போன்ற குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை சென்றவர்களா? 

தமது வாழ்க்கையில் இது போன்ற எதையுமே செய்யாதிராத போலிப் புலி ஆதரவாளர்கள் தான் இந்த நாம் தமிழர் கட்சியினர். ஆனால், அவ்வாறான அர்ப்பணிப்புகளை செய்தவர்களுக்கு எதிராகவே அவர்களது அரசியல் அமைந்துள்ளது. நாம் (போலித்) தமிழர் கட்சியினர், உண்மையிலேயே புலிகளுக்காக பாடுபட்டவர்களையும், ஈழப்போராட்டத்தில் பங்களித்தவர்களையும் அவமதிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈழப்போர் நடந்த முப்பதாண்டு காலத்தில், சீமானும், நாம் தமிழர் ஆதரவாளர்களும், ஈழத்தின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 2009 ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில், திடீரென முளைத்த நாம் (போலித்) தமிழர்கள், புலிகளின் அழிவை மூலதனமாக்கி அரசியல் செய்தனர். உண்மையாகவே புலிகளுக்கு உதவியவர்கள் மீது அவதூறு செய்வதும், வசை பாடுவதும், அவர்களது அன்றாட அரசியலாக உள்ளது. பார்ப்பன அடிவருடிக் கும்பலான சீமானும், நாம் (போலித்) தமிழர் கட்சியும், ஈழப் போராட்டத்திற்கு செய்த துரோகமும், ஏற்படுத்திய பின்னடைவுகளும் மிக மிக அதிகமாகும்.

இனிமேல் ஒரு ஈழப் போராட்டம் வர விடாமல் தடுப்பதும், தமிழ்நாட்டில் பொதுவாக உள்ள தமிழ் தேசிய உணர்வை இனவாதமாக குறுக்கி சிதைப்பதும், நாம் (போலித்) தமிழர் கட்சியின் குறிக்கோளாக உள்ளது. இந்த நுண்ணரசியலை, சீமானின் பேச்சுக்களில் இருந்தும், அவரது ஆதரவாளர்களின் அடாவடித்தனங்களில் இருந்தும் புரிந்து கொள்ளலாம்.

நாம் (போலித்) தமிழர் கட்சிக்கென நிரந்தரமான கொள்கை எதுவும் கிடையாது. அது காலத்திற்கு ஏற்றவாறு அடிக்கடி மாறுபடும். சீமானின் வாயில் இருந்து என்ன வந்தாலும் அது கொள்கை தான். சீமான் யாரையாவது "ங்கோத்தா" என்று திட்டினாலும், "லூசாடா நீ" என்று ஏசினாலும், அதை நியாயப் படுத்தி வாதிட ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 

சீமான் தனது முப்பாட்டன் முருகன் என்று வேல் தூக்கி ஆடினாலும் அதுவே ஒரு கொள்கையாகி விடும். உலகில் உள்ள தீவிர வலதுசாரி பாசிசக் கட்சிகளுக்கே உரிய பொதுவான குணாம்சம் அது. தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே. 

சிங்கள இனவாதத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் முப்பாட்டனும் முருகன் தான்! துட்டகைமுனு கதிர்காமக் கந்தனை வழிபட்டு விட்டு, எல்லாளனுடன் போருக்கு சென்றதாக மகாவம்சம் கூறுகின்றது. அதையே "நவீன துட்டகைமுனு" ராஜபக்சேவும் பின்பற்றுள்ளார். 

"ஈழத்தில் சிங்களவர்கள் எனது இனத்தை அழிக்கிறார்கள்..." என்று அனைத்து சிங்களவர்களையும் தமிழர்களின் எதிரிகளாக காட்டி அரசியல் செய்யத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள சுற்றுலாப் பயணிகளை தாக்கினார்கள். சிங்கள மாணவர்களை படிக்க விடாமல் விரட்டினார்கள்.

இதனால் யாருக்கு இலாபம்? நிச்சயமாக, இலங்கையை ஆளும் சிங்கள பேரினவாத அரசு சீமானுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை பற்றி எதுவும் தெரியாதவர்கள் மட்டும் தான், நாம் (போலித்) தமிழர் கட்சியினரின் செயல்களை நியாயப் படுத்துவார்கள்.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்கியதில், சிங்கள இனவாதிகள் காட்டிய வெறித்தனம் மறுக்க முடியாத உண்மை. உலகில் எந்தவொரு இனவாதியும், தான் இனவாதி தான் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு மாறாக எதிரி இனத்தவர்கள் தான் இனவாதிகள் என்று சொல்லிக் கொள்வார்கள். சிங்கள இனவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சே கூட, "இனவாதம் பேசாதீர்கள்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை கண்டித்து வந்தார். ஆனால், தனது ஆட்சிக் காலத்தில் ஒரு தடவை கூட, சிங்கள இனவாதக் கட்சிகளை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

ஒரு ஜனாதிபதிக்கே சிங்களவர்களும் இனவாதம் பேசுவார்கள் என்ற புரிந்துணர்வு இல்லை. இந்த இலட்சணத்தில் சாதாரண சிங்களவர்கள், தாங்கள் இனவாதம் பேசுவதாக ஒத்துக் கொள்வார்களா? அதெல்லாம் "இனப் பற்று" என்று தான் விளக்கம் சொல்வார்கள். அவ்வாறு தான் நாம் தமிழர் ஆதரவாளர்களும் நடந்து கொள்கிறார்கள். என்ன வித்தியாசம்? சிறிலங்காவில் "ராஜபக்சே ஒரு சிங்கள சீமான்". தமிழ்நாட்டில் "சீமான் ஒரு தமிழ் ராஜபக்சே" என்பது மட்டும் தான் வித்தியாசம்.

மொழி ஒரு தடையாக இருப்பதால், மற்ற இனத்தவர்களின் எண்ணம் பற்றி எதுவும் தெரிவதில்லை. தமிழர்களைப் பற்றி பெரும்பான்மை சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஈழத் தமிழர்கள், இந்தியர்களுடன் சேர்ந்து கொண்டு, சிறுபான்மையினரான சிங்கள இனத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில், இந்தியர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று சாதாரணமான சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது அந்த எண்ணம் பெருமளவு மாறி விட்டது. இருப்பினும், "தமிழர்கள் சிங்கள இனத்தை அழிக்கக் கிளம்பியுள்ளனர்..." என்ற கருத்து மட்டும் மாறவில்லை.

ஈழப்போர் காலத்தில், எல்லைப்புற சிங்கள கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை கொன்ற புலிகளின் விவேகமற்ற நடவடிக்கைகள், அவர்களது தப்பெண்ணத்தை சரியென வாதிட வைத்தன. சிங்கள பொதுமக்கள் கொல்லப் படும் ஒவ்வொரு தாக்குதலும், தென்னிலங்கையில் சிங்கள இனவாத சக்திகளின் தமிழர் விரோத பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. அதே மாதிரி, தமிழ்நாட்டில் சிங்கள சுற்றுலாப்பயணிகள் தாக்கப்பட்ட சம்பவங்களும் சிங்கள இனவாதிகளுக்கு நன்மையாக முடிந்துள்ளது.

நாம் போலித் தமிழர் கட்சி சித்தரிப்பது போல, "சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்களா"? சிங்கள இனவாதக் கட்சிகள் தமிழர்கள் எல்லோரையும் கெட்டவர்களாக சித்தரித்துக் காட்டுகின்றன. அதையே தான் தமிழ் இனவாதக் கட்சியான நாம் தமிழரும் செய்கின்றது. இனவாதிகள் பேசும் மொழிகள் மட்டுமே வேறு வேறு. கொள்கை, குறிக்கோள் ஒன்று தான். தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ, மக்கள் எல்லோரும் இனவாதிகள் அல்லர். இனவாதிகள் தம்மைப் போலவே, தம்மின மக்கள் அனைவரும் சிந்திப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். நாம் தமிழர் மட்டுமல்ல, நாம் சிங்களவரும் அப்படித் தான் கருதிக் கொள்கிறார்கள்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம்:
"சீமானும், அவரது தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும், ஈழப் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? குறைந்த பட்சம், அவர்களால் வழிபடப் படும் புலிகள் இயக்கத்திற்கு செய்த உதவிகள் எத்தனை? புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்திக் கொடுத்தார்களா? புலிகளுக்காக வெடி குண்டு வைத்தார்களா? வன்னி சென்று புலிகளின் பாசறையில் பயிற்சி பெற்றார்களா? அது போன்ற குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை சென்றவர்களா?"

ஈழப்போரின் இறுதிக் காலத்தில், ஜேவிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர், அதாவது இடதுசாரி சிங்களவர்கள், புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு புலிகள் வன்னியில் வைத்து இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். குறிப்பாக வெடி குண்டு வைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள், தென்னிலங்கையில் தலைமறைவாக இயங்கினார்கள். இறுதிப் போர் நடந்த காலத்தில், கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்புகள் அவர்களினால் மேற்கொள்ளப் பட்டிருந்தன.

இருப்பினும், புலனாய்வுத்துறை எப்படியோ துப்புத் துலக்கி சூத்திரதாரிகளை பிடித்து விட்டது. அரசு அவர்களுக்கு "சிங்களப் புலிகள்" என்று பட்டம் சூட்டியது. புலிகளுக்காக குண்டு வைத்த சிங்களவர்கள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து திரிந்த நண்பர்கள் கூட கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

அது மட்டுமல்ல, கைது செய்யப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் நிம்மதியாக வாழ முடியவில்லை. அயலவர்களின் ஏளனப் பேச்சுகள், பழிச் சொற்களை தாங்க முடியாமல், குடியிருந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "சிங்களப் புலிகளின்" குடும்பங்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப் பட்டனர். இந்த நிலைமை சீமானுக்கோ, அல்லது நாம் தமிழர் ஆதரவாளர்களுக்கோ ஏற்பட்டிருக்கிறதா?  

ஈழப்போரின் இறுதியில் சிறிலங்கா இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களுக்கான ஆவணங்களை வெளியிட்டவர்கள் யார்? சீமானா? அல்லது யாராவதொரு நாம் தமிழர் ஆதரவாளரா? இல்லவே இல்லை. புலிகளுக்கு ஆதரவான சிங்கள ஊடகவியலாளர்கள் தான், சனல் 4 தொலைக்காட்சிக்கு அந்த வீடியோவை அனுப்பினார்கள். 

"இலங்கையின் கொலைக்களம்" என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் பேட்டி கொடுக்கும் சிங்களவரான பாசனா யார் தெரியுமா? இலங்கையில் சிங்களப் புலி குற்றம் சாட்டப் பட்டு தேடப் படுபவர்களில் முதன்மையானவர். அவர் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து செல்வதற்கு, சில தமிழ் புலி ஆதரவாளர்கள் உதவி செய்துள்ளனர். 

இதை விட, எண்பதுகளில் சட்டர்டே ரிவியூ பத்திரிகையில் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதி வந்த காமினி நவரட்ன என்ற சிங்களவர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்பாணம் சென்று, யாழ் பொறுப்பாளர் கிட்டுவை சந்தித்து பேசி, கைதிகள் பரிமாற்றத்திற்கு உதவிய விஜய குமாரணதுங்க என்ற சிங்களவர். இறுதி வரையில் புலிகளையும், தமிழீழத்தையும் ஆதரித்து பேசி வந்த விக்கிரமபாகு கருணாரட்ன என்ற சிங்களவர். இப்படிப் பல சிங்களவர்கள் ஈழப் போராட்டத்திற்கு தம்மாலியன்ற பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளனர்.

புலிகளுக்கு ஆதரவான சிங்களவர்கள் செய்த தியாகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது, "செந்தமிழன்" சீமான், அல்லது நாம் "தமிழர்" கட்சியினர், ஈழப் போராட்டத்திற்கு செய்திருக்கிறார்களா? சொன்னால் வெட்கக் கேடு. ஒன்றுமேயில்லை. 

ஈழப் போராட்டத்தில் ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடாதவர்கள், சிங்களத் தோழர்கள் செய்த பங்களிப்பை அவமதிக்கும் வகையில், சிங்கள இன வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரைத் திருப்திப் படுத்துவதற்காக, இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? சிங்கள, ஹிந்திய ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள் தான், சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் என்பதில் எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

(தொடரும்)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்": சீமானின் பாசிசக் கோட்பாடு!
நாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்! இந்தியர்களை அவமதித்த இனப்படுகொலையாளி!
தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

Sunday, March 06, 2016

"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்": சீமானின் பாசிசக் கோட்பாடு!


"தமிழ் நாட்டை தமிழனே ஆள வேண்டும்... அதே மாதிரி, நோர்வே நாட்டை நோர்வீஜியனே ஆள வேண்டும்!" என்ற சீமானின் கொள்கைக்கு விரோதமாக, நோர்வேயில் ஒரு வந்தேறுகுடி தமிழச்சி, ஒஸ்லோ நகர துணை மேயராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். சீமான் அபிமானிகளும், நாம் தமிழர் ஆதரவாளர்களும் இந்த "அக்கிரமத்தை" கண்டிக்க முன்வருவார்களா? அல்லது வழமை போல இரட்டைவேடம் போட்டு தமது மடமையை பறை சாற்றுவார்களா?

முகநூலில் இந்தக் கேள்வியை எழுப்பியதும், ஒரு சீமான் அபிமானி பின்வரும் காரணத்தைக் கூறினார்:
 //எதுக்காக தமிழர் ஆட்சி தான் வேனும்னு கேக்குறாங்கனு தெரியாம தமிழன் தான் ஆளனும்னு சொல்ரது தப்புனு பேசர்து யார நியாயப்படுத்த? இந்த தேவையை உருவாக்கியதே திராவிட ஆட்சியில் நடந்த அநியாயங்கள் தான். இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை? மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்? மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்? தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது அவருக்கு நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

மேற்படி அநியாயங்கள் யாவும், "தமிழ் நாட்டை தமிழர் அல்லாதவர் ஆள்வதால்" தான் நடக்கின்றது என்று நினைப்பவர்களின் அறியாமை தான் சீமானின் பலம். கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத அறிவிலிகளும், அப்பாவிகளான இளைய தலைமுறையினரும் தான் அவரது ஆதரவாளர்கள்.

//இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை?// 

இது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற பொய்ப் பிரச்சாரம். சீமான் சினிமாத் துறையில் இருந்த காலத்தில் தான் ஈழப்போர் ஆரம்பமாகியது. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் அரசு, அதாவது சீமானின் மொழியில் "மலையாளியின் ஆட்சிக் காலத்தில்", அனைத்து ஈழத் தமிழ் போராளிக் குழுக்களும் சென்னையில் அலுவலகம் அமைத்துக் கொள்ள அனுமதித்தார்கள். அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடவும் தடை இருக்கவில்லை. 

விடுதலை இயக்கங்கள், தமிழக அரசியல் ஆர்வலர்களுடன் சேர்ந்து, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். போராளிக் குழுக்கள் எப்போதும் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. உட்கட்சிப் படுகொலைகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களுடனான அத்துமீறல்களும் ஆங்காங்கே நடந்து வந்தன. அப்போது கூட, நிலைமை எல்லை மீறிய பின்னர் தான், தமிழ்நாட்டு பொலிஸ் தலையிட்டது.

மலையாளி எம்ஜிஆர் ஆட்சியில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்கள் இயங்கின. யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகளில் வந்து சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு அங்கே இராணுவப் பயிற்சி வழங்கி போராளிகளாக்கி திருப்பி அனுப்பினார்கள். உண்மையில், இவை யாவும் இந்திய மத்திய அரசில் இருந்த, தமிழர் அல்லாத இந்திரா காந்தி அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடந்துள்ளன. புலிகளுக்கு எம்ஜிஆர் (மலையாளி) வழங்கிய நிதியும், டெலோவுக்கு கருணாநிதி (தெலுங்கர்) வழங்கிய நிதியும் மறக்கத் தக்கதல்ல.

எம்ஜிஆரின் மறைவுடன், யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்தக் காலங்களில் "இந்திய இறையாண்மையை" மீறி, திமுக தலைவர் கருணாநிதி புலிகளை ஆதரித்தார். அனேகமாக, புலிகளை பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் சந்தர்ப்பத்திற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் நோக்கில், இந்திய மத்திய அரசு திமுகவின் புலி ஆதரவை கண்டுகொள்ளவில்லை. வன்னியில் கடுமையாக சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில், திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர் வைகோ (தெலுங்கர்), இரகசியமாக வன்னி சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.

//தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

ம‌ஞ்ச‌ள் க‌ண்னாடி அணிந்தால் காண்ப‌தெல்லாம் ம‌ஞ்ச‌ளாக‌ தெரியும். இன‌வாத‌ க‌ண்ணாடி அணிந்த‌வ‌ர்க‌ள் நிலையும் அது தான். இந்தியாவில் அர‌சு இய‌ந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை. தமிழ் நாட்டு அரசு நிர்வாகமும் அதற்கு சளைத்தது அல்ல. மாபியாக் கும்பல்களை வைத்துக் கொண்டு, அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை அடக்கியொடுக்கி ஆட்சி செய்வது எம்ஜிஆர் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. தற்போது தமிழகத்தின் இரண்டு பெரும்பான்மை கட்சிகளான திமுக, அதிமுக, இரண்டும் தமெக்கென ரவுடிக் கும்பல்கள் வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் தெரிந்த உண்மை இது.

ஆந்திராவுக்கு அழைத்து செல்லப் பட்ட தமிழ் கூலித் தொழிலாளர்கள் இருபது பேர், செம் மரம் வெட்டிய குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கொலைகள் நடந்த இடம் தெலுங்கு பேசும் ஆந்திரா மாநிலம், தொழிலாளர்களை அழைத்துச் சென்றவர்களும் ஆந்திரா மாபியாக்கள். அதனால், தமிழினவாதக் கட்சிகள், அதனை தெலுங்கு வந்தேறுகுடிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். அதிலே எழுந்த கேள்வி தான்: "தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக  நியாயம் கேட்டு பேசாதது ஏன்?"

மாநில அரசுக்களுக்கும் மாபியாக் குழுக்களுக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு ஊரறிந்த இரகசியம். மேலும் செம்மரக் கடத்தலால் இலாபமடையும் பொலிஸ், முதலாளிகளின் நன்மை கருதி, தமிழ்நாட்டு அரசு பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஹைதராபாத் நகரில், தெலுங்கு மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், கொலைகளை கண்டித்து, அரசுக்கும், பொலிசுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனை இந்த தமிழினவாதிகள் மூடி மறைக்கும் நோக்கம் என்ன? தமிழர்களை முட்டாள்களாக வைத்திருப்பதை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?

இது குறித்து மேலதிக தகவல்களை வினவு இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்:

//மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்?//

ஆண்டவா! முதலாளித்துவ இலாபவெறி தான் இதற்குக் காரணம் என்று தெரியாத அளவுக்கு முட்டாள்களா இவர்கள்? மண்ணின் வளங்களை கொள்ளை அடிப்பதில் மாபியாக்கள், முதலாளிகளின் பங்கு பற்றி எதுவும் பேசமால், தமிழர் அல்லாத வந்தேறுகுடிகளால் தான் இது நடக்கிறது என்பது போலக் காட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத் தனம்? இந்தக் கொள்ளையில் தமிழ் முதலாளிகள்/மாபியாக்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? இது பற்றியும் பல கட்டுரைகள் ஏற்கனவே வினவு தளத்தில் வந்து விட்டன. சீமானுக்கு ஜால்ரா தட்டும் நண்பர்கள் அவற்றை ஒரு தடவை வாசித்து விட்டு உரையாட வாருங்கள். 

//தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்?//

தமிழ்நாடு அரசு, IMF, உலக வங்கியிடம் இருந்து கடன் உதவி பெறுகின்றது. அதனால் அவை சொல்வது போன்று நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. தமிழ்நாடு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் பொருந்தும் உண்மை இது. ஏன், இலங்கை உட்பட பிற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இது பொருந்தும். கடன் வழங்கும் நிறுவனங்கள், தனியார் மயத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன. தமிழ் நாட்டின் தண்ணீர் உட்பட இயற்கை வளங்கள், தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடப் பட வேண்டும். அரசுக்கு பல நெருக்குவாரங்களை கொடுத்து சம்மதிக்க வைக்கிறார்கள்.

"தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால்", உலகவங்கியும், IMF உம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்காமல் விட்டு விடுவார்களா? சீமான் முதல்வரானால் தனியார்மயத்திற்கு எதிராக நடந்து கொள்வாரா? தமிழகத்திற்கே இல்லாத தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல் தடுப்பாரா? தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி அடிப்பாரா? இது எதுவும் நடக்காத பட்சத்தில், எதற்காக "தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்" என்ற வெற்றுக் கூச்சல்?

//மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்?//

அதற்கு உங்களைப் போன்ற இனவெறியர்கள் தான் காரணம் கயவர்களே! மற்றைய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் ஓரளவு பலமாக இருக்கின்றன. அவற்றால் கட்டப் பட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அவற்றின் இடையறாத போராட்டங்கள் காரணமாக, மாநில அரசுகள் பின்வாங்குகின்றன. தமிழ் நாட்டில் அப்படியானதொரு நிலைமை வரக் கூடாது என்பதற்காகத் தான், இந்திய புலனாய்வுத் துறையினர் நாம் தமிழர் போன்ற இனவாதக் கட்சிகளை ஊக்குவிக்கிறார்கள்.

மற்ற மாநிலங்கள் ஆபத்தானது என்று ஒதுக்கிய திட்டங்களை, நாம் தமிழர் ஆளும் தமிழ்நாட்டு மாநில அரசு அனுமதிக்காது என்று, நாங்கள் எப்படி நம்ப முடியும்? ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்களை கொள்ளையடித்த வேதாந்தா நிறுவனம், மாவோயிஸ்டுகளின் கடும் எதிர்ப்புக் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே நேரத்தில், பாசிஸ மோடியின் குஜராத் அரசு, அதனை தனது மாநிலத்திற்கு வரவேற்றது. நாளைக்கு சீமான் முதல்வரானாலும் இது தான் நடக்கப் போகிறது. இது தான் "தமிழ் நாட்டை தமிழன் ஆளும்" இலட்சணம்!

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்ற கோஷத்தை சீமான் முன்னெடுப்பதற்கான காரணம் என்ன? வேறொன்றுமில்லை. ஐம்பதாண்டு கால தமிழ் தேசிய அரசியல் இன்று தோல்வியின் விளிம்பில் நிற்கின்றது. 

முன்னொரு காலத்தில் தமிழ் தேசியம் பேசிய கலைஞர் கருணாநிதி போன்ற "தமிழினத் தலைவர்கள்", இன்று மிகப் பெரிய தொழிலதிபர்களாக பணத்தில் புரள்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ் தேசியத்தை வெறுப்பதற்கு முன்னர் ஏதாவது செய்து காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், "தமிழ் சோறும் போடும், பணமும் கொடுக்கும்."


திராவிட‌க்க‌ட்சிக‌ள் கால‌த்தில் தான் மொழிவாரி மாநில‌ம் உருவான‌து. அப்போது திமுக‌ முன்வைத்த‌ நியாயம் பார்ப்ப‌னீய‌த்திற்கு எதிரான‌ தார்மீக‌ கோப‌ம்தான். அப்போது வ‌ட‌ இந்திய‌ர்க‌ளை குறை கூறினார்க‌ள். வ‌ட‌க்கு வாழ்கிற‌து தெற்கு தேய்கிற‌து. த‌னித் த‌மிழ் நாடு பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு என்றார்க‌ள்.ம‌த்திய‌ அர‌சு த‌மிழ் நாடு மாநில‌ ச‌ட்ட‌ ச‌பைக்கு கூடுத‌ல் அதிகார‌ம் கொடுத்து, த‌மிழ் நாடு எல்லை பிரித்துக் கொடுத்த‌து.

த‌மிழ‌ர்க‌ள் ஆளும் த‌மிழ் நாட்டில் எல்லாம் சிற‌ப்பாக‌ இல்லை. உண்மையில் இது ஒரு வ‌கையில் த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌லின் வ‌ங்குறோத்துத‌ன‌ம். அந்த‌ உண்மையை ம‌றைக்கும் சீமானும், அவ‌ர‌து துதிபாடிக‌ளும் இப்போது புதிய‌தொரு கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள். ம‌ர‌ப‌ணு சோத‌னை ந‌ட‌த்தி எவ‌ன் அச‌ல் த‌மிழ‌ன், எவ‌ன் போலித் த‌மிழ‌ன் என்று ஆராய்கிறார்க‌ள்.

அவ‌ர்க‌ள‌து ஆராய்ச்சியின்(?) முடிவு: "த‌மிழ் நாட்டை ஆண்ட‌வ‌ர்க‌ள், ஆள்ப‌வ‌ர்க‌ள் போலித் த‌மிழ‌ர்க‌ள். அச‌ல் த‌மிழ‌ர்க‌ள் ஆட்சி செய்தால் எந்த‌ப் பிர‌ச்சினையும் இல்லை. த‌மிழ் நாட்டில் தேனும் பாலும் ஆறாக‌ ஓடும்..." என்று குடுகுடுப்பைக் கார‌ன் மாதிரி ஜோஸ்ய‌ம் சொல்கிறார்க‌ள். ஐம்ப‌துக‌ளில் திமுக‌ அர‌ங்கேற்றிய‌ அதே நாட‌க‌ம் தான்.

ஆனால், ஒரு வித்தியாச‌ம் உள்ள‌து. திமுக‌ ந‌ட‌த்திய‌ போராட்ட‌த்தினால் ம‌த்திய‌ அர‌சின் அதிகார‌ம், ஹிந்தி பேரின‌வாத‌ மேலாதிக்க‌ம் க‌ணிச‌மான‌ அள‌வில் குறைக்க‌ப் ப‌ட்ட‌து. நாம் த‌மிழ‌ர் முன்வைக்கும் கோரிக்கைக‌ள் அதிகார‌ப் ப‌ர‌வலாக்க‌ல் ப‌ற்றிய‌து அல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில், திமுக‌ த‌மிழ் தேசிய‌ இய‌க்க‌த்திற்கு வ‌ழ‌ங்கிய‌ ப‌ங்க‌ளிப்புக்கு எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ வ‌கையில் சீமானின் கோரிக்கைக‌ள் அமைந்துள்ள‌ன‌.

Wednesday, May 27, 2015

நாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்! இந்தியர்களை அவமதித்த இனப்படுகொலையாளி!


தமிழ் நாஸிகள்? 
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! ஹிட்லரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள சீமானின் நாம் தமிழர்கள். எதிர்காலத்தில் ராஜபக்சவும் அவர்களின் வழிகாட்டியானால், ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. 

சீமானின், நாம் தமிழர் கட்சியின் மகாநாட்டில், பாஸிச அல்லது நாஸி வணக்கம் செலுத்தியுள்ளனர். அது "உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு" என்று நினைப்பவர்கள், வரலாறு தெரியாதவர்கள் ஆவார்கள். 

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள்

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள் உள்ளன. 
மேலே : பாசிஸ அல்லது நாஸிஸ பாணி. விரல்களை விரித்து, கையை நீட்டி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். சீசர் காலத்தில், ரோமானிய சக்கரவர்த்திகளால் பின்பற்றப்பட்ட வழக்கம், இருபதாம் நூற்றாண்டில் முசோலினியால் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டது. ஜெர்மன் நாசிகளால் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டது. நாஸி பாணியிலான வணக்கம் செலுத்தும் முறை, ஜெர்மனியிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் சட்டவிரோதமாக்கப் பட்டுள்ளது.

கீழே: சோஷலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் பாணி. விரல்களை மடித்து, முஷ்டியை உயர்த்தி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். 

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், ஹிட்லரை வழிகாட்டியாக காட்டும் பதாகை வைக்கப் பட்ட செயலானது, சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. அதற்கு, நாம் தமிழர் சார்பாக பதிலளித்த ஒருவர், "ஹிட்லர் யார் என்று தேட வைத்திருப்பதாக" தெரிவித்தார். ஹிட்லர் யாரென்று நாம் தேடத் தேவையில்லை. ஏற்கனவே உலகம் முழுவதும் நன்கு தெரிந்த இனப்படுகொலையாளி. நாம் தமிழர்கள் ஹிட்லர் யார் என்று தேடிச் சென்றால், ராஜபக்சவில் வந்து நிற்பார்கள். 

ஹிட்லரின் இனவாத கொள்கையின் படி, மேற்கைரோப்பிய ஜெர்மன் மொழியுடன் தொடர்புடைய மொழிகளை பேசும் ஆரிய இனம் மட்டுமே உலகில் சிறந்தது. ரஷ்ய மொழி போன்ற, ஸ்லாவிய மொழிகளை பேசும், கிழக்கைரோப்பிய மக்களும் கீழ்த்தரமானவர்கள் தான். அப்படி இருக்கையில், கறுப்பர்களான இந்தியர்களை சமமாக மதித்திருப்பார்களா?  

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் கொல்லப் படவில்லை என்றும், ரஷ்யாவில் (அன்று சோவியத் யூனியன்) புகலிடம் கோரியிருந்த நேரம் கொலை செய்யப்பட்டார் என்றும் வதந்திகள் பரப்பப் படுகின்றன. இந்த வதந்தியை உண்மையில் நடந்த சரித்திர சம்பவம் போன்று புனை கதைகள் சோடிக்கப் படுகின்றன.

இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தீவிரமடைந்துள்ள, இந்துத்துவா பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று. இந்தியர்களின் தேசிய நாயகனாக கருதப்படும் நேதாஜியின் மரணம் ரஷ்யாவில் சம்பவித்ததாக கூறுவதன் மூலம், கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டி விடுவதே அவர்களது நோக்கம். 

அந்த நோக்கத்திற்காக தொடங்கப் பட்டுள்ள புதிய இயக்கமானது, சுப்பிரமணிய சுவாமியால் வழிநடத்தப் படுகின்றது. ஆமாம், முன்னொரு காலத்தில் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்திய அதே சுப்பிரமணிய சுவாமி தான் இன்று கம்யூனிச எதிர்ப்பு புனிதப் போரில் குதித்துள்ளார். 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஹிட்லரின் உதவியுடன், ஜெர்மனியில் இந்திய வீரர்களைக் கொண்ட, இந்திய தேசிய இராணுவம் ஒன்றை அமைத்தார். வெளிநாட்டு தொண்டர் படைகளை நிர்வகிக்கும், நாஸிகளின் SS தலைமையின் கீழ் அது இயங்கியது. 

ஹிட்லரும், நாஸி அரசும், நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று, இந்திய விடுதலைப் படை அமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். இருப்பினும், "இந்தியர்கள், வெள்ளை இனத்தவரை விட, அறிவிலும், ஆற்றலிலும் குறைந்தவர்கள்..." என்ற இனவாத மனப்பான்மை அவர்களின் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை. இந்திய துணைப் படை பற்றி, ஹிட்லர் தெரிவித்த கருத்து அதனை நிரூபிக்கின்றது.

"இந்திய துணைப் படை என்பது கேலிக்குரியது. ஒரு மூட்டைப் பூச்சியை கூட கொல்வதற்கு தைரியமற்ற இந்தியர்கள், ஒரு ஆங்கிலேயனை கொல்வார்கள் என்று நம்ப முடியாது. அவர்களை உண்மையான சண்டைக்கு அனுப்புவது நகைப்புக்குரியது." - ஹிட்லர்
(ஆதாரம்: Hitler's Renegades: Foreign Nationals in the Service of the Third Reich )

இறுதிப் போரில், இந்திய துணைப் படையினர், பிரான்சில் நடந்த யுத்தத்தில், நாஸி இராணுவத்தோடு சேர்ந்து, நேச நாடுகளின் படைகளுக்கு எதிராக போராடியுள்ளனர். அந்த சண்டையில் சிலர் கொல்லப் பட்டனர். மிகுதிப் பேர் சரணடைந்தனர். பிரெஞ்சுப் படையினர், சரணடைந்த வீரர்கள் சிலரை சுட்டுக் கொன்றுள்ளனர். எஞ்சியோர் பிரிட்டிஷ் இராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டனர். பிரிட்டன் அவர்கள் மேல் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி தண்டித்தது.



****
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்
2. நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு
3.தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

Tuesday, August 19, 2014

புலிப் பார்வைக்குப் பின்னால் RAW இன் நரிப் பார்வை!


தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும், ஈழப் போராட்டத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை, அங்கு நடக்கும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், இன்று ஒரு பகுதி தமிழ் தேசியர்களினால் தூற்றப் படுகின்றார். புலிப்பார்வை, கத்தி போன்ற வணிகப் படங்களுக்கு சீமான் வழங்கிய ஆதரவு, அதற்கு எதிரான மாணவர் போராட்டம் என்பன, தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் ஒரு பெரிய பிளவை உண்டாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்கள், ஏற்கனவே ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்துள்ளன. ஈழப் போராட்ட வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களினால், இன்றைய தமிழக நெருக்கடியில் இருந்தும் மீள முடியாது. தமிழ் உணர்வாளர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்வோரின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக கணிக்கத் தெரிந்த RAW, அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஈழப் போரின் முடிவில், அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தமிழ் தேசிய எழுச்சி, ஈழத்தில் 1983 கலவரத்திற்குப் பின்னரான காலகட்டத்துடன் ஒப்பிடத் தக்கது. இரண்டுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. ஒரேயொரு வேறுபாடு, ஈழத்தில் ஆயுதங்கள் மூலம் முரண்பாடுகள் தீர்க்கப் பட்டன. தமிழகத்தில் அதற்கான தேவை இருக்கவில்லை.

எழுபதுகளில், ஈழ விடுதலைப் போராட்டம் மிகச் சிறிய குழுக்களாக இயங்கிய இடதுசாரிகளினால் வழிநடத்தப் பட்டது. பிற்காலத்தில் தீவிர தமிழ் தேசியவாத இயக்கங்களாக கருதப் பட்ட விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியனவையும், அவற்றின் அரசியல் பிரிவுகள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களினால் தலைமை தாங்கப் பட்டு வந்தன. 2009 க்கு முந்திய தமிழ் நாட்டிலும் அது தான் நிலைமை.

ராஜீவ் கொலைக்குப் பின்னர், தடா, பொடா சட்டங்களின் அடக்குமுறை காரணமாக, முந்திய ஈழ ஆதரவாளர்கள் அடக்கப் பட்டனர். பெரும்பான்மை தமிழர்களின் வாய்கள் அடைக்கப் பட்டன. அந்த தருணத்தில், மகஇக போன்ற கம்யூனிச அமைப்புகள் தான், ஈழ விடுதலைக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தன. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் மக்களின் கட்சியும், தனது ஆதரவாளர்கள் சிலரை வன்னிக்கு அனுப்பும் அளவிற்கு ஆதரவளித்தது.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினால் தெரிவு செய்து அனுப்பப் பட்ட இளைஞர்கள், வன்னி சென்று இராணுவப் பயிற்சி எடுத்து, போர்க் களத்திலும் நேரடியாக பங்காற்றி உள்ளனர். இந்தத் தகவல் இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. நக்சலைட் அமைப்புகள், தலித்திய அமைப்புகள் ஈழப் போராட்டத்தை ஆதரிப்பது, ஒரு பெரிய திருப்புமுனை. இந்திய அரசுக்கு அவற்றை அடக்க முடியாத அளவிற்கு நெருக்கடி தோன்றியது. ஏனெனில், கம்யூனிஸ்டுகள், தலித்தியவாதிகளை அடக்குவது, சில நேரம் எதிர்மறையான விளைவுகளை தரலாம். ஆந்திராக் காடுகளில், மாவோயிஸ்டுகளுக்கு முன்னாள் ஈழப் போராளிகள் சிலர் பயிற்சி அளித்தனர் என்ற தகவல் இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தப் பின்னணியில் தான், 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் பட்டனர். அதன் எதிர்வினையாக, தமிழ்நாட்டில் ஓர் மக்கள் எழுச்சி உண்டாகலாம் என்று RAW அஞ்சியது. அதனால், தீவிர தமிழ் தேசியம் பேசும், கம்யூனிசத்தை வெறுக்கும் வலதுசாரி கொள்கை கொண்ட அமைப்புகளை வளர்த்து விட வேண்டும் என்று திட்டமிட்டது. அதன் விளைவாக, நாம் தமிழர் கட்சியும், மே 17 இயக்கமும், குறுகிய காலத்திற்குள் அசுர வளர்ச்சி கண்டன.

இரண்டு தசாப்த காலமாக, ஈழ விடுதலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கம்யூனிச அமைப்புகள், இன்றைக்கும் அப்படியே தான் இருக்கின்றன. அப்படியான அமைப்புகள் இருப்பதே பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. ஆனால், 2009 ஆம் ஆண்டு திடீரென முளைத்த தீவிர தமிழ் தேசியவாத அமைப்புகள், ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பெற்று வளர்ந்தது எப்படி? இடதுசாரி அமைப்புகள் நடத்திய எந்தவொரு ஈழ ஆதரவுப் போராட்டத்தையும் கண்டுகொள்ளாத தமிழக வெகுஜன ஊடகங்கள், நாம் தமிழர், மே 17 க்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்த காரணம் என்ன?

ஈழத்தில் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர், குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே பெருமளவு ஆதரவை திரட்டிக் கொள்ள முடிந்தது. அன்றைய காலகட்டத்தில் புலிகளும், டெலோவும் முன்னணியில் நின்றன. டெலோவுக்கு இந்திய மத்திய அரசு நேரடியாக நிதியுதவி வழங்கியது. புலிகளுக்கு அன்றைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் நிதி வழங்கினார். எம்ஜிஆர் சுதந்திரமாக இயங்கவில்லை. அவரும் இந்திய அரசின் அனுசரணையின் பேரில் ஒரு முகவராக செயற்பட்டார்.

புலிகளையும், டெலோ வையும் இந்தியா முக்கியத்துவம் கொடுத்து ஆதரித்தமைக்கு ஒரு காரணம் இருந்தது. அந்த இயக்கங்களில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தது. மார்க்சிய- லெனினிசத்தை தமது சித்தாந்தமாக அறிவித்துக் கொண்ட பிற ஈழ விடுதலை இயக்கங்களை ஓரங் கட்ட வேண்டுமென்றால், இப்படியான தீவிர வலதுசாரி - தேசியவாத சக்திகளை வளர்த்து விட வேண்டும். இந்தியாவின் நோக்கம் எந்தளவு தூரம் நிதர்சனமாகி உள்ளது என்பதை, வரலாறு கூறுகின்றது.

1984 ஆம் ஆண்டு, ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில், LTTE, TELO, EPRLF, EROS ஆகிய நான்கு இயக்கங்கள் தமக்குள் ஒன்று பட்டு, ஒரே அமைப்பாக இயங்க விரும்பின. தமிழர்கள் ஒற்றுமையாக சேர்ந்து ஒரே அமைப்பாக போராடுவது, இந்திய, இலங்கை அரசுக்களைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட கனவு. எப்பாடு பட்டாவது அந்த ஒற்றுமையை குலைக்கவே முயற்சிப்பார்கள். ஈசாப்பின் நீதிக் கதைகளில் வருவதைப் போல, "ஒற்றுமையாக மேய்ந்த நான்கு மாடுகள், ஓநாயின் புத்திமதியை கேட்டு, பிரிந்து சென்று மேய்ந்த கதை" ஈழத்தில் நடந்தது. அதன் விளைவு என்னவென்று இன்று பலர் கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

தமிழ்நாட்டில், நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாக செயற்படுவதாக நடந்து கொண்டன. தமக்கிடையே எந்தவொரு கொள்கை முரண்பாடும் இல்லையென காட்டிக் கொண்டன. அன்று அவர்களின் பொது எதிரி மத்தியில் சோனியா அரசு, மாநிலத்தில் கருணாநிதி அரசாக இருந்தது. இதுவும் ஆரம்ப கால ஈழப் போராட்ட இயக்கங்களை நினைவுபடுத்துகின்றது. 

1983 ஆம் ஆண்டு ஈழ விடுதலை இயக்கங்கள் ஒற்றுமையாக இருப்பது போன்றும், தமக்கிடையே கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்றும் காட்டிக் கொண்டன. அவற்றின் பொது எதிரி, மத்தியில் ஆட்சியமைத்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் யு.ஏன்.பி. கட்சி, வடக்கு-கிழக்கு மாகாண பாராளுமன்ற பிரதிநிதிகளான அமிர்தலிங்கத்தின் த.வி.கூ. கட்சியாக இருந்தது. கருணாநிதியும் தி.மு.க.வும், தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது. அதே மாதிரி, அன்று ஈழத்தில் த.வி.கூ.வும், அமிர்தலிங்கமும் தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது.

ஈழத்தில் புலிகளும், டெலோவும் தமக்கு இடையிலான முரண்பாட்டை ஆயுதங்கள் மூலம் தீர்த்துக் கொண்டனர். அதனால், ஓர் இயக்கம் போராட்டத்தில் இருந்து முற்றாக ஒதுக்கப் பட்டது. தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் ஆயுதம் வைத்திருக்கவில்லை. அதனால், நாம் தமிழர், மே 17 க்கு இடையில் ஒரு "சகோதர யுத்தம்" நடப்பதற்கு, சில திரைப்படங்கள் குறித்த சர்ச்சை போதுமானதாக உள்ளது. மேலும், இலங்கை இறைமை கொண்ட இன்னொரு நாடு என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அங்கே இந்தியாவால் நேரடியாகத் தலையிட முடியாது. முதலில் ஈழ விடுதலையை ஆதரிப்பது போல நடிக்க வேண்டும். சிறிலங்கா அரசை அடிபணிய வைப்பதற்காக, போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும். இப்படி எத்தனை கஷ்டங்கள்?

ஆனால், தமிழ்நாட்டில் அந்தளவு சிரமப் படத் தேவையில்லை. RAW நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். சிறிய சந்தேகம் தோன்றினாலே, சுட்டுக் கொன்று விடும் அளவிற்கு எச்சரிக்கையாக இருந்த, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு உள்ளேயே RAW ஊடுருவ முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல் அமைப்புகளுக்குள் ஊடுருவுவது ஒரு கடினமான விடயமா? 

அது சரி, உளவாளிகளை எப்படி இனங்கண்டு கொள்ள முடியும்? ஏனென்றால், அவர்களும் மிகத் தீவிரமான தமிழ் தேசியம் பேசுவார்கள். புலிகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறுவார்கள். தமிழீழத்தை, புலிகளை விமர்சிக்கும் எல்லோரையும் பாய்ந்து குதறுவார்கள். இவர்களை கண்டுபிடிப்பது என்பது, நெல்லில் கல் பொறுக்குவது போன்றது.

புலிப்பார்வை திரைப்படம் குறித்த சர்ச்சைகள் எழுந்த நேரம் தான் இன்னொரு செய்தியும் வந்தது. அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, மாவோயிஸ்டுகள் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்குள் ஊடுருவி விட்டதாக உளவுத் தகவல்கள் கூறுகின்றன. மாநில காவல்துறை விழிப்புடன் இருக்குமாறு, இந்திய மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளது. தமிழ் நாட்டு மக்களை மாவோயிஸ்டுகள் பக்கம் திரும்ப விடாமல் தடுக்க வேண்டுமானால், இன்னும் இன்னும் தமிழ் தேசிய உணர்வை தூண்டி விட வேண்டும். புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப் படங்கள், RAW தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள பெரிதும் உதவியுள்ளன.

தமிழ் நாட்டில் "ரா"மையாவின் ஆட்டம் ஆரம்பம்.

*****

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்
இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்
ஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்