Showing posts with label ஸ்டாலின். Show all posts
Showing posts with label ஸ்டாலின். Show all posts

Saturday, December 21, 2019

சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு

ஜோர்ஜியா பயணக் கதை - இரண்டாம் பாகம்


ஸ்டாலின் பிறந்த காலத்தில் ஜோர்ஜியா என்ற தேசம் இருக்கவில்லை. பெரும்பாலான ஜோர்ஜியர்களுக்கும் தேசிய இன உணர்வு இருக்கவில்லை. கருங்கடலுக்கும், கஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை காவ்காசாஸ் பிரதேசம் என்று அழைப்பார்கள். அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை வாழ் மக்கள். இன்றைக்கும் பல்வேறு மொழிகளை பேசுகிறவர்கள். ஜோர்ஜிய மொழியுடன் தொடர்புடைய மிங்கேறிலியன், ஸ்வான் ஆகிய மொழிகள் இன்று அழிந்து வருகின்றன. தற்போது நாற்பதாயிரம், அல்லது எண்பதாயிரம் பேர் தான் அந்த மொழிகளைப் பேசுகிறார்கள்.  ஜோர்ஜியாவின் மொத்த மக்கட்தொகை நான்கு மில்லியன் கூட இல்லை.

ஜோர்ஜியாவில் ஸ்டாலின் பிறந்த கோரி (Gori) எனும் சிறு நகருக்கு அருகில், ஒசெத்தியர் எனும் ஈரானிய மொழி ஒன்றைப் பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. தொண்ணூறுகளில் ஜோர்ஜியா தனியான சுதந்திர நாடானாதும், ஒசெத்தியர் தமக்கென தனிநாடு கோரினார்கள். ஆனால் அது சாத்தியப் படவில்லை. 2008 ஆம் ஆண்டு அங்கு பெரியதொரு யுத்தம் நடந்தது. ஜோர்ஜிய இராணுவத்தின் படையெடுப்பை எதிர்த்து நிற்க முடியாத ஒசேத்திய கெரில்லாப் படையினர் ரஷ்யாவை உதவிக்கு அழைத்தார்கள்.

அந்த நேரம் ஜோர்ஜியாவை ஆண்ட சாகாஷ்விலி தனது மேற்கத்திய சார்பு அரசியல் நிலைப்பாடு காரணமாக ரஷ்யாவை பகைத்திருந்தார். ரஷ்யாவும் இது தான் சாட்டு என்று "ஒசேத்திய சிறுபான்மை இன மக்களை பாதுகாப்பதற்காக" இராணுவத்தை அனுப்பியது. ஜோர்ஜிய இராணுவத்தை ஓட ஓட அடித்து விரட்டிய ரஷ்யப் படைகள், கோரி வரை வந்து விட்டன. அப்போது கோரியை விட்டு ஜோர்ஜியர்கள் வெளியேறியதும், நகர மத்தியில் ரஷ்யப் படையினர் நின்றதும் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக பேசப் பட்டன.

உண்மையில் அன்று ரஷ்யப் படையினர் தமது பலத்தைக் காட்டுவதற்காகவே கோரியை கைப்பற்றி இருந்தனர். சில நாட்களின் பின்னர் தாமாக வெளியேறி ஒசேத்திய தனிநாட்டு எல்லையோடு நின்று விட்டனர். இந்த நிலைமை இப்போதும் தொடர்கிறது. ஆனால், முன்பிருந்த பதற்றம் தணிந்து சமாதானம் நிலவுகிறது. அப்போது தொலைக்காட்சிகளில் கோரி நகர சபைக் கட்டிடமும், அதற்கு முன்னால் நின்ற துப்பாக்கி ஏந்திய ரஷ்யப் படையினரையும் காட்டினார்கள். அப்போது அங்கே ஒரு பிரமாண்டமான ஸ்டாலின் உருவச் சிலை இருந்தது.


கோரி நகர மத்தியில் இருந்த ஸ்டாலின் சிலை, 2010 ம் ஆண்டு "சோவியத் நீக்கம்" என்ற பெயரில் அகற்றப் பட்டது. பகலில் செய்தால் ஊர் மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பயத்தில், இரவோடிரவாக வந்து சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று நகருக்கு வெளியே வீசி விட்டனர். தற்போது பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று சிலையை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகின்றார். இது தொடர்பாக நகரசபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அனேகமாக அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கும் ரஷ்யாவில் இருந்து பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதை விட போலந்து, (தென்) கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்தும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருவதாக அங்கு வேலை செய்யும் ஊழியர் தெரிவித்தார். நான் அங்கே சென்றிருந்த நேரத்திலும், ரஷ்யர்கள், ஈரானியர்கள் ஒரு பெரிய குழுவாக வந்து பார்வையிட்டனர். 


பத்து வருடங்களுக்கு முன்னர், கோரி சுற்றுலாத் துறை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. தற்போது நிறைய புதிய ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. நான் தங்கிருந்த ஹோட்டேல் கட்டி ஒரு வருடம் தானாகிறது என்றார்கள். கோடை காலத்தில் எல்லா அறைகளும் நிரம்பி விடுமாம். நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அறை வாடகை ஐம்பது லாரிகள். ஸ்டாலின் மியூசியத்தில் இருந்து இருநூறு மீட்டர் தூரத்தில் இருந்தது. ஸ்டாலின் நினைவுச் சின்னங்கள் உட்பட, தற்போது அங்கே எல்லாம் வணிக மயமாகி விட்டது. வழமையாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த கோரி நகருக்கு ஸ்டாலின் மியூசியத்தால் பெருமளவு வருமானம் கிடைக்கிறது எனலாம்.

(ஸ்டாலின் பிறந்த வீட்டின் முன்புறத் தோற்றம்)

1937 ம் ஆண்டு, அதாவது சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியில் இருந்த காலத்தில், அவரது பிறந்த வீடு மியூசியமாக்கப் பட்டது. அதைச் சுற்றி தூண்களை எழுப்பி, மேலே கொங்கிரீட் கூரை போடப் பட்டது. இந்த நினைவுச்சின்னம் இப்போதும் பேணிப் பாதுக்கப் பட்டு வருகின்றது. ஸ்டாலின் பிறந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய ஸ்டாலினின் சிலையும் மியூசியக் கட்டிடமும் அமைந்துள்ளன. 


ஐம்பதுகளின் தொடக்கத்தில் தான் தற்போதுள்ள நூதனசாலைக் கட்டிடம் கட்டிமுடிக்கப் பட்டது. அப்போது ஸ்டாலின் மறைந்து, குருஷேவ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. "ஸ்டாலினிச எதிர்ப்பாளர்" குருஷேவ் அங்கு ஒரு நூதனசாலை வருவதை விரும்பி இருக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மக்களும் விட்டுக் கொடுக்கவில்லை. அப்போது திறக்கப் பட்ட மியூசியம் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.


ஸ்டாலின் மியூசியம் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு மாடிக் கட்டிடத்தின் மேல் பகுதியில் தான் மியூசியம் உள்ளது. அதற்கு செல்லும் படிக்கட்டின் நடுவிலும் மார்பிளால் செய்யப் பட்ட ஸ்டாலின் சிலை உள்ளது. உள் நுழைந்தவுடன் வாயில் அருகில் சிறு வயது ஸ்டாலின், மற்றும் அவரது தாய், தந்தையின் புகைப்படங்கள் உள்ளன. அதற்கு அருகில் அவர் பள்ளிக்கூடத்தில் படித்த புத்தகங்கள் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டுள்ளன. மேலே கற்பித்த ஆசிரியர்களின் படங்கள் உள்ளன. ஸ்டாலின் சிறு வயதில் எழுதிய கவிதைகளும் பெரிதாக்கி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

ஒரு கிறிஸ்தவ பாதிரியாக வேலை செய்வதற்கு படித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், அரசியல் ஈடுபாடு காரணமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அதற்குப் பின்னர் அவர் புரட்சிகர சமூக ஜனநாயகக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவில் இயங்கிய காலங்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. நகர்ப்புற தொழிலாளர்களின் கூட்டங்கள், மேதின ஊர்வலம் போன்றவற்றை ஒழுங்கமைத்து நடத்திய ஸ்டாலினின் ஓவியங்கள் வைக்கப் பட்டுள்ளன. 
 
அடுத்த பகுதியில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் எடுத்த படங்கள், மற்றும் ஸ்டாலின் எழுதிய நூல்களின் தொகுப்புகள் வைக்கப் பட்டுள்ளன. இறுதியாக இன்னொரு பகுதியில் உலகம் முழுவதிலும் இருந்து ஸ்டாலினுக்கு கிடைத்த அன்பளிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளன. திரும்பி வரும் வழியில், மாடியில் இருந்து கீழிறங்கும் போது, படிகளில் வலது பக்கத்தில் ஸ்டாலின் கிரெம்ளினில் பயன்படுத்திய அலுவலக மேசை, நாற்காலிகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. 


மேலும் வெளியே மியூசியக் கட்டிடத்திற்கு அருகில் ஸ்டாலின் தனது அலுவலகமாக பயன்படுத்திய ரயில் பெட்டி உள்ளது. ரஷ்யப் புரட்சியின் ஆரம்ப காலங்களில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது புரட்சியை நடத்திய தலைவர்கள் இது போன்ற ரயில் பெட்டிகளை தமது அலுவலகமாக வைத்திருந்தனர். அதாவது விடுதலைப் போருக்கு தலைமை தாங்கவும், போர் முனைக்கு சென்று செம்படையினரை ஊக்குவிக்கவும், அன்றைய தலைவர்கள் ரயில்களை பயன்படுத்தினார்கள்.

கோரி நகரில் இன்னொரு மியூசியமும் ஆர்வத்தை தூண்டியது. ஜோர்ஜிய இன மக்களின் பூர்வீகம் தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள நூதனசாலை அது. நுழைவுக் கட்டணம் மூன்று லாரிகள். மேலதிகமாக ஐந்து லாரிகள் கொடுத்தால் ஒரு ஆங்கிலம் பேசும் வழிகாட்டி கிடைப்பார். அது மிகவும் பிரயோசனமாக இருந்தது. அங்கிருந்த பொருட்கள் பற்றிய விளக்கத்தில் ஆங்கிலத்திலும் குறிப்புகள் இருந்த போதிலும், வழிகாட்டி மூலம் அதிக விளக்கம் கிடைத்தது.


சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் நாகரிகம் தொடர்பாக கண்டெடுத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் அங்கே உள்ளன. அந்தக் காலத்திலேயே தானியம் அரைப்பதற்காக பயன்படுத்திய அம்மிக் குழவி அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. நமது நாட்டில் உள்ள அதே மாதிரியான அம்மிக் குழவி தான். கல் கொஞ்சம் வளைந்திருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்த மக்கள் ஒரே மாதிரியான உபகரணங்களை பாவித்துள்ளமை மிகப் பெரிய ஆச்சரியம்.

ஆதி கால மக்கள் களிமண்ணால் கட்டப் பட்ட வீடொன்றில் வாழ்ந்துள்ளனர். கூரையும் களிமண்ணால் செய்யப் பட்டது. கூரை நடுவில் புகை போவதற்கான ஓட்டை இருந்தது. வீட்டுக்கு நடுவில் அடுப்பு மாதிரி கட்டி இருந்தனர். அதில் எந்த நேரம் நெருப்புத் தணல் இருந்து கொண்டிருக்கும். அதை அடுப்பு மாதிரி சமைப்பதற்கும் பயன்படுத்தலாம். அதே நேரம், குளிரை தாக்குப் பிடிக்க வெப்பம் தருவதற்கும் பயன்பட்டது. இது போன்ற வீடுகள் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் இருந்துள்ளன. தற்போதும் மத்திய ஆசியாவில் வாழும் நாடோடி மக்கள் இது போன்ற வீடுகளை அமைக்கும் கலையை அறிந்து வைத்திருக்கின்றனர்.

ஆதி கால மனிதர்கள் பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்ததும், வெண்கலம், இரும்பால் செய்த கருவிகளை வேட்டையாட பயன்படுத்தினார்கள். அப்போது பயன்படுத்திய ஈட்டிகள், கத்திகள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அப்போது பயன்பாட்டில் இருந்த மான் வடிவில் செய்யப்பட்ட வைன் குடிக்கும் கிண்ணம், ஒரு சில மாற்றங்களுடன் இன்றைய காலத்திலும் பயன்பாட்டில் உள்ளது. அன்றிருந்த ஆதி கால மக்களும் மலை வாழ் மக்கள் தான். வேட்டையாடுவோராக, கால்நடைகள் மேய்ப்பவர்களாக இருந்துள்ளனர். குளிர் நேரத்தில் வெப்பம் தரும் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டார்கள். அது ஆட்டுத் தோலால் செய்யப் பட்டது. அந்த மணத்திற்கு பாம்புகளும் கிட்ட நெருங்காதாம்.

மியூசியத்தின் இறுதிப் பகுதியில் ஜோர்ஜிய மொழியின் தோற்றம், கிறிஸ்தவ மதத்தின் வருகை போன்ற விபரங்கள் உள்ளன. ஜோர்ஜியாவில் இன்றைக்கும் கிறிஸ்தவ மதத்தலைவர் பாவிக்கும் தொப்பியின் பெயர் "மித்ரா". தற்செயலாக, மித்ரா என்பது ஈரான், இந்தியாவில் வேதகால ஆரியர்கள் வழிபட்ட ஒரு கடவுளின் பெயர். அநேகமாக ஒரு காலத்தில் அந்தப் பிரதேசத்திலும் மித்ரா வழிபாடு இருந்திருக்கலாம்.

அந்த மியூசியத்தில் வரவேற்பளராக இருந்த பெண், தன்னுடைய பெயர் "தமிழ்" என்றும், அது பற்றித் தெரியுமா என்றும் கேட்டார். மிகுந்த ஆச்சரியத்துடன் நானும் ஒரு தமிழர் தான், உங்களுக்கு அந்த மொழி பற்றிய விபரங்கள் தெரியுமா என்று கேட்டேன். அவர் அது பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். ஜோர்ஜியாவில் நிறையப் பெண்களுக்கு தமிழ் என்று பெயர் இருக்கிறதா என்று நான் கேட்டேன். பெருமளவில் இல்லையென்றாலும், சில பெண்களுக்கு தமிழ் என்ற பெயர் இருப்பதாக பதில் அளித்தார். அங்கிருந்து விடை பெறும் முன்னர் "தமிழும், தமிழும் சந்தித்துக் கொண்ட தருணத்தை" செல்பி எடுத்துக் கொண்டேன்.

ஜோர்ஜிய மொழியின் பூர்வீகம் எதுவென்பது யாருக்கும் தெரியாது. தாங்கள் ஆயிரமாயிரம் வருட காலமாக அந்தப் பிராந்தியத்தில் வாழ்வதாக ஜோர்ஜியர்கள் சொல்லிக் கொள்வார்கள். அவர்களது மொழியின் எழுத்து வடிவம் ஆச்சரியப் படத் தக்கவாறு தென்னிந்திய மொழிகளின் வரி வடிவத்தை ஒத்திருக்கிறது. பெருமளவு வளைவுகளும், சுழிகளும் கொண்ட எழுத்துக்கள். பண்டைய ஜோர்ஜிய எழுத்துக்கள் இதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். அதிலும் ஓர் அதிசயம் என்னவென்றால் இந்தியாவின் பிராமி எழுத்துக்கள் போலுள்ளன. ஜோர்ஜிய மொழி எழுத்துக்கள் அரேமிய அல்லது, கிரேக்க மொழிகளை பின்பற்றி உருவாக்கப் பட்டிருக்கலாம் என மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கோட்பாடு கூட தவறாக இருக்கலாம்.

உலகில் இன்னமும் அறிந்து கொள்ளப்படாத பல அதிசயங்களை ஜோர்ஜியா கொண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அங்கிருந்து திரும்பும் பொழுது ஒரு ஜோர்ஜிய மொழி திரைப்பட டிவிடி வாங்கிக் கொண்டு வந்தேன். "தேதே"(அம்மா) என்ற பெயரிடப் பட்ட படம், நவீன நாகரிகம் ஊடுருவி இருக்காத மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் பேசுகின்றது. குளிர்காலத்தில் பனி மூடிய பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்கு குதிரைகளில் தான் செல்ல வேண்டும்.

அந்தப் படத்தில் காட்சிக்கு காட்சி எவ்வாறு பழைய சம்பிரதாயங்கள் தனி மனித வாழ்வைப் பாதிக்கின்றன என்பதை சிறப்பாக காட்டி இருந்தார்கள். அந்த சமுதாயத்தில் இன்னமும் பெண்களுக்கென்று தெரிவுகள் இருக்க முடியாது. குடும்பத்தில் பெரியவர்கள் சிறுவயதில் நிச்சயர்தார்த்தம் செய்த ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும். ஓர் ஆண் ஒரு இளம் பெண்ணை கடத்திச் சென்று விட்டால், அவள் அவனோடு தான் காலம் முழுவதும் வாழ வேண்டும். இல்லாவிட்டால் இரு குடும்பங்களுக்கும் இடையில் பகை மூண்டு இரத்தக்களரி ஏற்படும். அதை விட சாமிப் படத்தின் மீது சத்தியம் செய்வது, நோயை குணப்படுத்துவதற்கு முன்னோர்களின் ஆவிகளை துணைக்கு அழைப்பது எனப் பல சம்பிரதாயங்கள் இன்னமும் பின்பற்றப் படுகின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது ஜோர்ஜியர்களின் கலாச்சாரம், கீழைத்தேய மரபுகளை கொண்டுள்ளமை தெரிய வந்தது.

ஜோர்ஜியா பயணம் முடித்து வந்ததும், பல நண்பர்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பினார்கள். நான் ஏற்கனவே ஐரோப்பாவின் மேற்கிலும், கிழக்கிலும் பல நாடுகளுக்கு பயணம் செய்திருப்பதால் வித்தியாசங்களை உணர முடிந்தது. எல்லா நாடுகளிலும் பெரும் நகரங்களில் திருட்டுக்கள் நடப்பதுண்டு. ஆனால் கிராமங்கள் பாதுகாப்பானவை.நான்பார்த்த அளவில் பெரும்பாலான ஜோர்ஜியர்கள் நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். யாரும் எம்மை வெளிநாட்டவர் தானே என்று ஏமாற்ற நினைக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விடயம். "எங்களிடம் பணம் இருக்கிறது" என்று ஆடம்பரம் காட்டுவோரை தான் திருடர்கள் குறிவைக்கிறார்கள். "ரோமாபுரியில் ஒரு ரோமனாக இருக்க வேண்டும்" என்று சொல்வது மாதிரி, எந்த நாட்டுக்கு சென்றாலும் உள்ளூர் மக்களில் ஒருவராக மாறிவிட வேண்டும். அவர்களது நடை, உடை, பாவனைகளை மேலெழுந்த வாரியாக அவதானித்து விட்டு, நாமும் அப்படியே நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் வராது. சுருக்கமாக, எங்கிருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ வேண்டும். 

 (முற்றும்) 

முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு:
"ஸ்டாலின் பிறந்த மண்" - ஜோர்ஜியா பயணக் கதை  


Tuesday, December 17, 2019

"ஸ்டாலின் பிறந்த மண்" - ஜோர்ஜியா பயணக் கதை

உலகில் அதிகம் அறியப்படாத நாடுகளில் ஒன்று ஜோர்ஜியா. அறிந்தவர்களும் அதை ஒரு "ஐரோப்பிய நாடு" என நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஆசியாக் கண்டத்தில் இருக்கிறது! அதன் பூகோள அமைவிடம் காரணமாக அயலில் உள்ள வல்லரசுகளின் மேலாதிக்க வெறிக்குள் அகப்பட்டு நசுக்கப் பட்டு வந்தது. இப்போது தனிநாடாக இருந்தாலும் அயலில் உள்ள ரஷ்யாவுடன் பகைத்துக் கொண்டு, தொலைதூரத்தில் உள்ள அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. நேட்டோ படைகளையும் வரவேற்று வைத்திருக்கிறது. இதன் விளைவாக 2008 ம் ஆண்டு நடந்த போர் ஜோர்ஜியா மீது சர்வதேச நாடுகளின் கவனத்தை குவிக்க வைத்தது. 


சோவியத் யூனியன் இருந்த காலத்தில், ஜோர்ஜியாவும் ஒரு சோவியத் குடியரசாக பிரகடனப் படுத்தப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் உலகில் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சோவியத் அதிபர் ஸ்டாலின் ஒரு ஜோர்ஜிய இனத்தவர் என்பது பலருக்குத் தெரியாது. சார் மன்னன் காலத்து ரஷ்ய சாம்ராஜ்யத்தில் பிறந்த, அங்கிருந்த சிறுபான்மை மொழிகளில் ஒன்றான ஜோர்ஜிய மொழி பேசும் ஒருவரை, பெரும்பான்மை ரஷ்யர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம் தான். ஆனால், உலக வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. அதற்குக் காரணம், ஸ்டாலினே ஓரிடத்தில் எழுதியது மாதிரி, "இன்றுள்ள தேசிய இன உணர்வுகள் யாவும் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளே!" அந்த விளைவுகள் என்னவென்பதையும், அவற்றின் இன்றைய நிலைப்பாடுகளையும் இந்தப் பயணக் கட்டுரையில் ஓரளவு அலசி இருக்கிறேன்.
ஜோர்ஜியாவுக்கு சுற்றுலாப் பயணியாக செல்வதற்கு பெருமளவு பணம் வைத்திருக்கத் தேவையில்லை. ஹங்கேரியின் மலிவு விலை விமான நிறுவனமான விஸ் எயர், ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் பயண சேவைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எனக்கு ஏற்பட்ட டிக்கட் செலவு வெறும் ஐம்பது யூரோக்கள் மட்டுமே! பொதுவாக டிசம்பர் மாதத் தொடக்கம் சுற்றுலாக் காலம் இல்லையென்பதால் விலைகள் குறைக்கப் படுவது வழமை.

ஜோர்ஜியாவில் தங்குவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் அதிக செலவு பிடிக்காது. கடந்த பத்து வருடங்களில் தான் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனை பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஹோட்டல்களை தவிர்த்து, ஹொஸ்டலில் தங்குவதற்கு நாளொன்றுக்கு சராசரி பத்து யூரோ போதும். பதிவு செய்வதற்கும் அதிக கேள்விகள் கேட்பதில்லை. ஒரு தடவை, கூட்டைசி எனும் நகரில் ஒரு குடும்பம் நடத்தும் சிறிய ஹொஸ்டல் அறையில் தங்கி இருந்தேன். "பதிவு செய்வீர்களா?" என்று கேட்டதற்கு "அப்படி என்றால் என்ன?" என்று திருப்பிக் கேட்டார்கள். இந்த விடயத்தில் அரசு அதிக கட்டுப்பாடுகள் விதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். 


முதலில் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன். ஜோர்ஜியா பயணம் செய்பவர்கள் கையில் யூரோ, டாலர், பவுன் நாணயத் தாள்களை வைத்திருக்க வேண்டும். மூலைக்கு மூலை உள்ள நாணய மாற்று கடைகளில் கொடுத்து உள்ளூர் நாணயமான லாரிக்கு மாற்றிக் கொள்ளலாம். ஒரு யூரோ/டாலர் மூன்று லாரிகள் என்று அண்ணளவாக கணக்குப் போடலாம். அங்குள்ள வங்கி ATM களில் கிரெடிட் கார்ட் தவிர வங்கி அட்டையையும் பாவிக்க முடியாது. சர்வதேச வங்கித் தொடர்புகளில் ஜோர்ஜிய வங்கிகள் இணைக்கப் படவில்லை போலிருக்கிறது. எயர்போர்ட்டில் வந்திறங்கியவுடனேயே குடிவரவு அலுவலகர்கள் எம்மிடம் பணம் இருக்கிறதா என்று விசாரிக்கிறார்கள். 


பல நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட்களுக்கு விமான நிலையத்தில் இறங்கியவுடன் இலவச விசா அடித்துக் கொடுக்கிறார்கள். இந்தியா, இலங்கையில் இருந்து வருபவர்களுக்கும் விசா கட்டுப்பாடுகள் குறைவு. தலைநகர் திபிலிசியில் பல இந்திய சுற்றுலாப் பயணிகளை காணக் கூடியதாக இருந்தது. குறைந்த செலவில் படிக்கலாம் என்பதற்காக மாணவர் விசாவில் வந்தவர்களையும் சந்தித்தேன். 


திபிலிசி நகர மத்தியில் இருந்த இந்திய உணவு விடுதிக்கு முன்னால், இரண்டு இந்திய, பங்களாதேஷ் இளைஞர்கள் வாடிக்கையாளர்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த நேரம், அவர்கள் அந்நாட்டில் படிக்கவென வந்து வேலை செய்வதை அறிந்து கொண்டேன். நாளொன்றுக்கு நாற்பது லாரிகள் சம்பளமாக கிடைக்கிறதாம். அந்த ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஒரு கேரளாக் காரர். அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் அவரும் வந்து கதைத்தார்.

ஜோர்ஜியாவில், அதுவும் மொழி தெரியாத ஒரு நாட்டில் தனியாகப் பயணம் செய்வது ஒரு பெரிய சாகசம் எனலாம். இங்கே நான் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றிக் கூறவில்லை. பலர் நினைப்பதற்கு மாறாக பாதுகாப்பாக பயணம் செய்யலாம். நாம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருந்தால் போதும். அது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. லண்டன், பாரிஸ் நகரம் என்றாலும், நாம் தான் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

நான் சென்று இறங்கிய கூட்டைசி (Kutaisi) சர்வதேச விமான நிலையம் பெரும்பாலும் மலிவு விலை விமான சேவைக்காக கட்டப் பட்டிருக்க வேண்டும். அங்கே பெரும்பாலும் ஹங்கேரியின் விஸ் எயர் (Wizz air) தான் வருகின்றது. விமான நிலையத்தில் இருந்து தலைநகர் திபிலிசிக்கு (Tbilisi) எந்நேரமும் பேருந்து சேவைகள் உள்ளன. ஒவ்வொரு விமானமும் வந்திறங்கும் நேரம் பார்த்து பஸ் ஓடுகிறது. திபிலிசி செல்வதற்கு சுமார் நான்கு மணி நேரம் எடுக்கிறது. இடையில் அரை மணித்தியாலம் சாப்பாட்டு இடைவேளை விடுகிறார்கள். டிக்கட் விலை இருபது லாரிகள்.

மொபைல் பாவனையாளர்கள் ரோமிங் செலவுகளை தவிர்க்கும் பொருட்டு, உள்ளூர் சிம் கார்ட் வாங்கிப் போடுவது நல்லது. அதை விமான நிலையத்திலேயே வாங்க முடியும். சிம் காரட்டுடன் 2GB இன்டர்நெட் ஐந்து லாரிக்கு கிடைக்கிறது. Bee line நிறுவனம் வழங்கும் சேவை சிறந்தது என்று சொல்கிறார்கள். மொபைல் தொலைபேசி வணிகத்தை பொறுத்த வரையில் ஜோர்ஜியா மிகவும் பின்தங்கியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் பாவனையில் இருந்த தொலைபேசிகளை தான் இப்போதும் அங்கே பலர் பாவிக்கிறார்கள். பெரும்பாலான ஜோர்ஜியர்களின் வாங்கும்திறனும் குறைவு தான்.

மேற்கு ஐரோப்பாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் மூன்று மணிநேர வித்தியாசம். நான் திபிலிசி போய்ச் சேர்ந்த நேரம் அதிகாலை ஏழு மணி. இருப்பினும் ஒன்றரை மில்லியன் சனத்தொகை கொண்ட அந்த நகரம் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு டாக்சியை பிடித்து நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலையில் உள்ள ஹொஸ்டல் ஒன்றில் சென்று தங்கினேன். புஷ்கின் சாலை சார் மன்னன் காலத்தில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கும் சுறுசுறுப்பான வீதி. அதற்கு அருகில் தான் திபிலிசி பழைய நகரம் உள்ளது. 


திபிலிசி செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாரும் பழைய நகரத்தை பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். மிகவும் அழகான இடம். பழைய கோட்டை ஒன்றின் இடிபாடுகளை கொண்ட குன்றின் உச்சியை நோக்கி கேபிள் கார் செல்கிறது. நரிகலா (Narikala) எனும் பெயருடைய கோட்டை ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையானது. அடிப்படை கட்டுமானம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த ஈரானிய- சசானிய சாம்ராஜ்ய காலத்தில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் ஈரான் பாக்தாத்தை தலைநகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த காலத்திலும், ஆட்சியாளர்களின் கைமாறிய போதிலும் நரிகலா கோட்டை பாவனையில் இருந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பாவனையில் இருந்த கோட்டைக்கு நீர் விநியோகம் செய்வதற்கு ஒரு இரகசிய சுரங்க வழி இருந்ததாம். 

நரிகலா கோட்டைக்கு அருகில், நவீன காலத்தில் கட்டப்பட்ட "சுதந்திர தேவி" சிலை உள்ளது. ஒரு கையில் வாளுடன் குன்றின் உச்சியில் நின்று கொண்டே திபிலிசி நகரை பார்க்கும் வகையில் கட்டப் பட்ட சிலை, ஜோர்ஜிய தேசியவாதத்தை பிரதிபலிப்பதை வேறெந்த விசேடமும் அதில் இல்லை. குன்றின் மறு பக்கத்தில் கீழே இறங்கிச் சென்றால் தாவரவியல் பூங்கா இருக்கிறது. அதிலிருந்து நடந்து சென்றால் மீண்டும் திபிலிசி பழைய நகரத்தை அடையலாம். 


இந்த இடத்தில் திபிலிசி நகரம் பற்றி சில குறிப்புகளை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஜோர்ஜியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள திபிலிசி நகரமும், அதை அண்டிய பிரதேசங்களும் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் சுதந்திரமான மன்னராட்சியாக இருந்து வந்தது. அப்போது ஜோர்ஜியாவை ஆண்ட கடைசி மன்னன் இரண்டாம் இராக்லி, இஸ்லாமிய ஓட்டோமான் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கு அஞ்சி, கிறிஸ்தவ ரஷ்ய சாம்ராஜ்யத்தின் உதவியை நாடினான். அப்போது மதம் தான் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது. எது எப்படியோ அன்றிலிருந்து ஜோர்ஜியா ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகி விட்டது. 

அயல் நாடான ஆர்மேனியா மாதிரி, ஜோர்ஜியாவில் உள்ளவர்களும் தாமே ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்று பெருமை பேசுவதுண்டு. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. கிரேக்க அல்லது ரஷ்ய ஒர்தொடக்ஸ் பாணி கிறிஸ்தவத்தை பின்பற்றும் ஜோர்ஜியாவில், தனித்துவமான திருச்சபை உள்ளது. அதாவது ஜோர்ஜியாவை மட்டும் மையமாகக் கொண்ட மத நிறுவனம். அன்றிருந்த கிறிஸ்தவ மடாதிபதிகள் ஜோர்ஜிய மொழியை மட்டும் வளர்க்கவில்லை. ரஷ்ய மொழிக்கும் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அன்றைய ஜோர்ஜியா ரஷ்ய சக்கரவர்த்தியின் ஆளுகையின் கீழ் இருந்தாலும், பிற பிரதேசங்களில் நடந்த மாதிரி அதை ஒரு காலனியாக்கி, ரஷ்யர்களை அங்கு கொண்டு சென்று குடியேற்றவில்லை. ரஷ்ய படையினரை வைத்திருந்து பராமரித்ததை தவிர, ஜோர்ஜியாவின் அரசியலிலோ, அல்லது பொருளாதாரத்திலோ ரஷ்யர்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தவில்லை. "ரஷ்ய மயமாக்கல்" என்று சொல்லக் கூடிய அளவுக்கு, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழியை படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியவர்கள் ஜோர்ஜிய கிறிஸ்தவ மடாதிபதிகள் தான். அதற்குக் காரணம், அன்றைய காலகட்டத்தில் ரஷ்யன் ஒரு வளர்ச்சி அடைந்த, சர்வதேச தொடர்புகளுக்கு உதவும் மொழியாகக் கருதப் பட்டது. அதாவது, இந்தியர்கள், இலங்கையர்கள் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்த மாதிரி, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அன்றிருந்த ரஷ்ய சாம்ராஜ்யம் மன்னராட்சியாக இருந்தாலும், அதற்குள் முதலாளித்துவ பொருளாதாரம் சுதந்திரமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் மூலதனத்தை குவித்த பெரும் முதலாளிகள் பெரும்பாலும் ஆர்மேனியர்கள், அல்லது யூதர்களாக இருந்தார்கள். இப்போதும் திபிலிசி நகரில் இலட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் வசிக்கிறார்கள். நான் ஒரு முடிதிருத்தும் கடைக்கு சென்றிருந்த நேரம், எனக்கு முடி வெட்டிய பையன் ஓர் ஆர்மேனியன். தனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாம் ஜோர்ஜியாவில் பிறந்து வளர்ந்ததாக கூறினான். அதாவது, தாங்கள் அண்மையில் ஆர்மேனியாவில் இருந்து வந்த வந்தேறுகுடிகள் அல்ல, ஜோர்ஜியாவின் பூர்வ குடிகள் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்பினான்.

அந்த ஆர்மேனிய முடி திருத்தும் தொழிலாளியுடன் பேச்சுக் கொடுத்த நேரம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. ஓரளவு சமாளிக்கும் அளவுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்து வைத்திருந்தான். தனக்கு ஆங்கிலத்தை தவிர, ஆர்மேனியன், ஜோர்ஜியன், ரஷ்யன் ஆகிய நான்கு மொழிகளும் தெரியும் என்றான். தானும் வேறு சிலரும் சேர்ந்து அந்தக் கடையை நடத்துவதாகவும், நாளொன்றுக்கு பதின்மூன்று மணிநேரம் வேலை செய்வதாகவும், அப்போது தான் ஓரளவு சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தான். ஜோர்ஜிய இனத்தவர்கள் எப்போது பார்த்தாலும் இந்நாட்டில் வேலை இல்லை என்று முறையிடுகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடுவதையும், வைன் குடிப்பதையும் தவிர வேறெந்த வேலையும் தெரியாது. பலர் இங்கே வேறு நாடுகளில் இருந்து வந்து வேலை செய்து நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஜோர்ஜியர்களுக்கு அந்தத் திறமை இல்லை. இவை அந்த ஆர்மேனிய பையனின் கருத்துக்கள்.

மேற்குறிப்பிட்ட உரையாடலில் தெரிவிக்கப் பட்ட விடயங்கள், நான் அடுத்து எழுதப் போகும் திபிலிசி தேசிய நூதனசாலையின் அரசியலை புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நினைக்கிறேன். அங்கு பல அருமையான ஆவணங்கள் சேகரிக்கப் பட்டு பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஜோர்ஜிய மக்களின் ஆடை, அணிகலன்கள், வீட்டில் பாவித்த உடைமைகள் போன்றனவற்றை கண்டு களிக்கலாம். அத்துடன் அன்று வாழ்ந்த மக்களின் பாரம்பரிய வீடுகள், மற்றும் தொழிலகங்களின் மாதிரிகளும் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றை நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர்.


இந்த நூதனசாலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரம் ஓர் உண்மை மூளைக்குள் பளிச்சிட்டது. இவற்றில் ஏதோ ஓர் ஒற்றுமை அல்லது சிறப்பம்சம் உள்ளது. என்ன அது? அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த பொருட்கள், ஆடைகள் எல்லாமே வசதியான மேல்தட்டு வர்க்கத்தினர் பாவித்தவை. அதாவது, அந்தக் காலத்திலேயே ஜோர்ஜிய மேட்டுக்குடியினர் எந்தளவு சிறப்பாக வாழ்ந்தனர் என்பதை காட்டுகிறார்கள். உண்மையில், ஜோர்ஜிய இனத்தவர்களில் வசதி படைத்தவர்கள் ஒன்றில் சிறிய தொழிலதிபராக அல்லது கடை வியாபாரி போன்றவர்கள் தான். அதாவது, இடைத்தர முதலாளித்துவ வர்க்கம். மார்க்சிய சொல்லாடலில் குட்டி பூர்ஷுவா எனப்படுவோர்.

இடைத்தர முதலாளிகள் பெரும்பாலும் தளபாடங்கள் செய்வது, ஆடை தைப்பது, ஆபரணங்கள் செய்வது, நிலவிரிப்பு (Carpet) பின்னுவது போன்ற தொழிற்துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அனேகமாக இவர்களது தொழிலகமும், கடையும் ஒரே இடத்தில் இருக்கும். அவர்களுக்கு கீழே இரண்டு, மூன்று பேர் வேலை செய்வார்கள். அவர்களில் சிலர் நன்றாக சம்பாதித்து பணக்காரர்களாக இருப்பார்கள். "அதிர்ஷ்டம் இல்லாத" பலர் ஏழைகளாக இருப்பார்கள். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்த தனது தந்தையும், இது போன்று தனியாக தொழிலகம் நடத்தும் கனவுடன், குட்டி முதலாளித்துவ சிந்தனையுடன் வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

அதிகம் பேசுவானேன். நமது இன்றைய சூழலிலேயே இதற்கு உதாரணம் காட்டலாம். தமிழர்களில் தொழில் முனைவோராக உள்ளவர்கள், ஒரு கடை போட்டு, இரண்டு பேரை வேலைக்கு வைத்திருப்பதால் தம்மை முதலாளிகளாக கருதிக் கொள்வார்கள். அப்படித் தான் அன்றிருந்த ஆரம்ப காலகட்ட முதலாளித்துவம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட, பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அப்படியான சிறு தொழில் முனைவோர் பிற்காலத்தில் பெரும் தொழிலதிபர்களாக வந்ததிருந்தனர். அதே பாணியை பின்பற்றி தாமும் ஒரு வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடாக வந்திருப்போம் என்ற செய்தியை, இந்த நூதனசாலை மூலமாக இன்றுள்ள ஜோர்ஜிய அரசு நமக்கு தெரிவிக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் ஜோர்ஜியாவில் வாழ்ந்த சிறு தொழில் முனைவோரும் தமது நலன் பேணும் சங்கங்களை உருவாக்கி வைத்திருந்தனர். அந்தப் புகைப் படங்கள் எல்லாம் திபிலிசி நூதனசாலையில் வைக்கப் பட்டுள்ளன. கவனிக்கவும், அவை தொழிற் சங்கங்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்களின் சங்கம் அல்ல. அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளின் சங்கங்கள். அதே நூதனசாலையில் இன்னொரு பக்கத்தில் பங்குச் சந்தை இருந்தமைக்கான ஆதாரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியதற்கான சான்றிதழ். அதில் ரஷ்யன், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. அதாவது, அவை இரண்டும் வர்த்தகத் தொடர்புகளுக்கான சர்வதேச மொழிகளாக கருதப் பட்டன. அதைத் தவிர ஜோர்ஜிய, ஆர்மேனிய, அசேரி மொழிகளில் சுருக்கமான விபரமும் அந்த சான்றிதழில் எழுதப் பட்டுள்ளது. 


எனது பயணத் திட்டத்தில் மிகக் குறைந்த நாட்களே இருந்த படியால், அடுத்த நாளே திபிலிசியை விட்டு வெளியேறத் தீர்மானித்தேன். குறிப்பாக ஸ்டாலின் பிறந்த இடமான கோரிக்கு செல்வதே நோக்கம். அங்கு எப்படிப் போகலாம் என்று ஹொஸ்டல் வரவேற்பளராக இருந்த பெண்ணிடம் விசாரித்து விபரங்களை பெற்றுக் கொண்டேன். அருகிலேயே "சுதந்திர சதுக்கம்" எனப்படும் ஐந்து சாலைகள் சந்திக்கும் பெரிய சந்தி உள்ளது. அதில் ஒரு பக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. மெட்ரோ ரயில் பிடித்து, டிடுபே (Didube) எனும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கு தான் பல நகரங்களுக்கும் செல்லும் மினிபஸ் சேவை நடக்கிறது. கோரி எனும் சிறிய நகரம், திபிலிசி மாகாணத்தை சேர்ந்த பகுதி தான். சுமார் எழுபது கிலோ மீட்டர் தூரம். மினிபஸ் கட்டணம் ஐந்து லாரிகள் மட்டுமே. 


ஜோர்ஜியாவில் ஸ்டாலின் வாழ்ந்த காலத்திலும் கோரியில் இருந்து வரும் வண்டிகள் டிடுபே தரிப்பிடத்திற்கு தான் வந்து நிற்கும். ஸ்டாலின் கோரியில் பிறந்து வளர்ந்தாலும், பருவ வயதை அடைந்ததும் தந்தையுடன் திபிலிசிக்கு வந்து செருப்புத் தைக்கும் தொழில் செய்துள்ளார். பிற்காலத்தில், ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் பாதிரியாவதற்காக மதக் கல்வி கற்ற காலத்திலும், அங்கிருந்து வெளியேறி புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுதும் திபிலிசியில் தங்கி இருந்துள்ளார். 


அப்போது ஸ்டாலின் புஷ்கின் சாலையில் தான் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார். ஸ்டாலின் படித்த மடாலயம் இப்போதும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பழைய நகரத்தில் உள்ளது. அது தற்போது மியூசியமாக மாறிவிட்டது. அந்தக் காலகட்டத்தில், திபிலிசி நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலை, ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்ந்த அழுக்கான கட்டிடங்களை கொண்ட தெருவாக இருந்தது. இன்று அவையெல்லாம் திருத்தப்பட்டு பணக்காரர்கள் குடியிருக்கும் ஆடம்பர கட்டிடங்களாக மாற்றப் பட்டு விட்டன.

ஜோர்ஜியாவில் "மாட்ரூஷ்கா" என அழைக்கப் படும் மினி பஸ், அல்லது ஷெயர் டாக்சியில் பயணம் செய்வது மிகவும் மலிவானது. நம்ப முடியாத அளவுக்கு செலவு குறைவு. ஆனால், ஒரு பிரச்சினை. இடத்தின் பெயரைக் குறிப்பிடும் மட்டைகளில் ஜோர்ஜிய மொழி மட்டுமே எழுதப் பட்டிருக்கும். கோரி, பாதுமி, கூட்டைசி போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் மினி பஸ்களில் சிலநேரம் ஆங்கில(லத்தீன்) எழுத்துக்கள் காணப்படும். ஆகவே, எந்த இடத்திற்குப் போவது என்றாலும் முன்கூட்டியே அங்கு நிற்கும் டிரைவர்களிடம் விசாரிப்பது நல்லது. இங்கேயும் மொழிப்பிரச்சினை எழும். அவர்களில் யாருக்கும் பெரும்பாலும் ஒரு சொல் கூட ஆங்கிலம் தெரியாது. கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் சமாளிக்கலாம். இருப்பினும், நாங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரை அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களது பாஷையில் ஏதோ சொல்லி எங்களை கூட்டிச் சென்று அந்த இடத்திற்கு செல்லும் மினி பஸ்ஸில் ஏற்றி விடுவார்கள். எம்மூரில் நடப்பது மாதிரி, மினி பஸ் தரிப்பிடத்தில் கூவிக்கூவி ஆட்களை சேர்ப்பதற்கும் சிலர் அங்கே நிற்பார்கள். ஆகவே நாங்கள் எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாக தனியாகப் பயணம் செய்யலாம்.

(தொடரும்) 


Saturday, May 25, 2019

"ஸ்டாலின் விழுங்கிய போலந்து" - நடந்தது என்ன?

இன்றும் பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் "போலந்து படுகொலைகள்" பற்றிக் குறிப்பிட்டுப் பேச மறுப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் வழமை போலவே பல பிழையான வரலாற்றுத் தகவல்களையும், மிகைப்படுத்தல்களையும் உள்ளடக்கியுள்ளன. அத்துடன் இன்றைய லிபரல்-ஜனநாயகவாதிகள் கூட அன்றைய நாஸி பிரச்சார ஊடகங்களில் தெரிவிக்கப் பட்ட தகவல்களை நம்பிப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட "கட்டின் காட்டில் நடந்த மர்மப் படுகொலைகள்" பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் இன்றைக்கும் பல 'அறிவுஜீவிகளால்" ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப் படுகின்றன. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் போலந்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக அலசுவது அவசியம்.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்னர், அதாவது 1939 ம் ஆண்டிலிருந்து 1941 வரையில் நடந்த சம்பவங்கள் தான் இங்கு பேசுபொருளாக உள்ளன. அன்றைய காலகட்டத்தில் நாஸி ஜெர்மனி அயலில் இருந்த நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்து விட்டு சோவியத் யூனியன் மீதான படையெடுப்புக்கு தயாராக இருந்தது. ஜெர்மனியின் இராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு சோவியத் யூனியன் பலமாக இருக்கவில்லை. ஆகையினால் தற்காலிகமாக மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் பெயரால் அழைக்கப்படும் மொலோடோவ் - ரிப்பன்டாப் உடன்படிக்கை குறித்த சர்ச்சைகளை தவிர்த்து விட்டு அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை இங்கு பார்ப்போம். அந்த உடன்படிக்கையில் போலந்தை பங்குபோடுவதற்கான "இரகசிய ஒப்பந்தம்" இருந்ததாக மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டமைக்கான ஆதாரம் எதுவுமில்லை. இது அன்றைய கள நிலவரத்தை கணக்கில் எடுக்காத முற்சாய்வான எண்ணக்கருவாக கருத இடமுண்டு.

ஒப்பந்தம் போட்டவுடனே ஜெர்மனி போலந்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தது. வார்சோ வரையிலான போலந்தின் மேற்குப் பகுதிகளை இரண்டு வாரங்களில் கைப்பற்றி ஆக்கிரமித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் ஜெர்மன் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, சோவியத் செம்படை படையெடுத்து சென்று கிழக்கு போலந்து பகுதிகளை கைப்பற்றி ஆக்கிரமித்தது.

இந்த இடத்தில் ஓர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் படையெடுப்புக்கு எதிராக போலந்து இராணுவம் தீவிரமாகப் போரிட்டது. தலைநகர் வார்சோ கடும் இழப்புகளுடன் சரணடைந்தது. அதற்குக் காரணம் போலந்தின் மேற்குப் பகுதி போலிஷ் இனத்தவரின் தாயகப் பகுதியாக கருதப் படக் கூடியது. அதற்கு மாறாக, கிழக்குப் பகுதியில் போலந்து இராணுவம் மிகக் குறைந்தளவு எதிர்ப்பைக் காட்டியது. பெருமளவு இழப்புகள் ஏதுமின்றி சோவியத் செம்படை அந்தப் பகுதிகளை கைப்பற்றியது. அதற்கு என்ன காரணம்? அதைப் புரிந்து கொள்ள வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான போலந்து ராஜ்ஜியத்தின் எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. அதற்குள் பல சிறுபான்மை இனங்களது பிரதேசங்களும் அடங்கி இருந்தன. முதலாம் உலகப்போர் வரையில் போலந்து ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. லெனின் தலைமையிலான கம்யூனிச அரசு உள்நாட்டுப் போர்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தது. அதே நேரம் மேற்கில் இருந்து ஜெர்மனியும் படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தியது.

1919 ம் ஆண்டு, முதலாம் உலகப்போர் இன்னமும் முடிந்திராத காலகட்டத்தில், ஜெர்மனியின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து, ரஷ்யா தனது பல்லாயிரம் சதுரமைல் பரப்புடைய பிரதேசங்களை விட்டுக் கொடுத்தது. குறிப்பாக இன்றைய பெலாரஸ், உக்ரைனின் மேற்குப் பகுதிகள் அதற்குள் அடங்கும். பிற்காலத்தில் ஜெர்மனி போரில் தோற்கடிக்கப் பட்டதால், போலந்து என்ற புதிய தேசம் உருவானது. புதிய போலந்து குடியரசில் ரஷ்யா விட்டுக் கொடுத்த பகுதிகள் உள்ளடக்கப் பட்டிருந்தன.

இப்போது மீண்டும் 1939 ம் ஆண்டுக்கு வருவோம். முதலாம் உலகப்போர் முடிந்து இருபது வருடங்களுக்குப் பின்னர், ரஷ்யா பறிகொடுத்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் நம்பினார். பெலாரஸ், உக்ரைனிய சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில், கிழக்குப் போலந்தை கைப்பற்றியதாக படையெடுப்புக்கு காரணம் கூறப்பட்டது. உண்மையில் நடந்ததும் அது தான்.

அந்தக் காலகட்டத்தில் சோவியத் செம்படையினர் ஆக்கிரமித்த கிழக்குப் போலந்து பிரதேசத்தில் 13 மில்லியன் போலந்து பிரஜைகள் வாழ்ந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே போலிஷ் இனத்தவர்கள். சுமார் 8 மில்லியன் மக்கள் பல்வேறு மொழிகளை பேசும் சிறுபான்மை இனத்தவர்கள். குறிப்பாக பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள். அவர்கள் சோவியத் செம்படையினரின் படையெடுப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்கள். போலிஷ் பேரினவாத நுகத்தடியில் இருந்து தம்மை விடுதலை செய்ய வந்தவர்களாக கருதி சோவியத் படைகளை வரவேற்றனர்.

1939-1941 வரையில், ஓரிரு வருடங்கள் நீடித்த சோவியத் இராணுவத்தின் போர்க்கால நிர்வாகத்தின் கீழ் நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. குறிப்பாக, போலிஷ் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். ஒரு காலத்தில் மேலாதிக்கம் செலுத்திய பெரும்பான்மை இனமாக இருந்த போலிஷ்காரர்கள், திடீரென ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாக மாறிவிட்டனர். அதற்கு மாறாக, முன்னர் போலிஷ் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டு வந்த சிறுபான்மை இனங்கள், தற்போது மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கின.

சோவியத் படையெடுப்புக்கு முன்னர் இருந்த போலந்து குடியரசில், உரிமைகள் மறுக்கப் பட்ட சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருந்த பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள், தற்போது விடுதலை பெற்று விட்டதாக உணர்ந்தார்கள். அதனால், சோவியத் செம்படையினருடன் ஒத்துழைத்தனர். முன்னர் தம்மை ஒடுக்கி வந்த போலிஷ் அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களை காட்டிக் கொடுத்தனர்.

முன்பிருந்த போலந்து குடியரசின் நிர்வாகம், இராணுவம், போலிஸ், நீதிமன்றம் ஆகிய அரச நிறுவனங்கள் அனைத்திலும் போலிஷ்காரர்களே அமர்த்தப் பட்டிருந்தனர். அப்போது போலந்தை ஒரு சர்வாதிகாரி ஆண்டு வந்தார். ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. சிறுபான்மையினத்தவரின் உரிமைகள் மதிக்கப் படவில்லை. 

ஆகவே, போலிஷ் பேரினவாதக் கொள்கை அடிப்படையில் போலந்தை ஆண்ட, வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவரின் வெறுப்புக்கு உள்ளானதில் வியப்பில்லை. அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலிஷ் அரச நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் சோவியத் செம்படையினரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

மேலும், ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கிழக்குப் போலந்தில் இயங்கிய சோவியத் புலனாய்வுத்துறைப் பிரிவுகள், போலிஷ் வர்க்க எதிரிகளை தேடிப் பிடித்து கைது செய்து கொண்டிருந்தன. முதலாளித்துவக் கட்சிகள் மட்டுமல்லாது, போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் கூட, தீவிர போலிஷ் தேசியவாதிகளாக சந்தேகிக்கப் பட்டனர். அவர்கள் எல்லோரும் பிற்போக்கான எதிர்ப்புரட்சியாளர்களாக கருதி கைது செய்யப் பட்டனர். 

அது மட்டுமல்ல, நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், செல்வந்தர்கள் எல்லோரும் பெரும்பாலும் போலிஷ் ஆதிக்க இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அத்தனை போரையும் ஒருவர் விடாமல் கைது செய்து சைபீரிய குலாக் முகாம்களுக்கு அனுப்பப் பட்ட சம்பவங்களை தான் இன்று பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் இரைமீட்கிறார்கள். அவர்களில் பலருக்கு விசாரணையின் பின்னர் மரணதண்டனை விதிக்கப் பட்டிருக்கலாம். அதை மிகைப் படுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், கட்டின் காட்டில் நடந்த போலிஷ் இராணுவ வீரர்களின் படுகொலை பற்றிய தகவலையும் பார்க்க வேண்டும். சோவியத் செம்படையினர் வருவதற்கு முன்னரே பெரும்பாலான போலிஷ் படையினர் வெளியேறி விட்டனர். அவர்கள் ருமேனியா ஊடாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்று விட்டனர். 

எஞ்சியிருந்த போலிஷ் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் செம்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டனர். அவர்களைத் தான், பிற்காலத்தில் ஜெர்மன் படையெடுப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கட்டின் காட்டில் சுட்டுக் கொன்று புதைத்ததாக சொல்கிறார்கள். அதுவும் நாஸி ஜெர்மனி வழங்கிய தகவல் தான். அந்தக் காலத்திலும் எதிரிப் படையினரின் மனித உரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது சர்வசாதாரணமான விடயம்.

22-06-1941 அன்று, அப்போது யாரும் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. சோவியத் யூனியன் மீது போர் தொடுப்பதாக நாஸி ஜெர்மனி அறிவித்தது. கிழக்குப் போலந்திற்கு ஜெர்மன் படைகள் வருவதற்கு முன்னர், செம்படையினர் அவசர அவசரமாக வெளியேறி விட்டனர். குறிப்பிட்ட காலம் அங்கு யாருடைய நிர்வாகமும் இருக்கவில்லை. அதாவது, சோவியத் இராணுவமோ, ஜெர்மன் இராணுவமோ இல்லாத காலகட்டம் ஒன்று கிழக்கு போலந்தில் ஏற்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் போலிஷ் மொழி பேசும் மக்கள் ஜெர்மன் இராணுவம் வருவதை எதிர்பார்த்து மகிழ்ச்சியாக காத்திருந்தார்கள். அதற்கிடையில், அவர்கள் "ரஷ்யர்களுக்கு காட்டிக் கொடுத்த" யூதர்களை பழிதீர்க்க எண்ணினார்கள். உண்மையில் சில யூதர்கள் ரஷ்யர்களுடன் ஒத்துழைத்தனர். அன்று சோவியத் போல்ஷேவிக் கட்சியின் தலைமையில் பல யூதர்கள் இருந்த படியால், போலந்து யூதர்கள் செம்படையினர் மீது அனுதாபம் கொண்டிருந்தமை ஒரு சாதாரணமான விடயம். அதற்காக எல்லா யூதர்களும் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், ரஷ்யர்கள் மீதிருந்த போலிஷ் மக்களின் வெறுப்புணர்வு யூதர்கள் மீது திரும்பியது. பல போலிஷ் கிராமங்களில் இருந்த யூதர்கள் போலிஷ்காரர்களால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். அங்கிருந்த கத்தோலிக்க பாதிரியார்களும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தனர். போலிஷ்காரர்களால் கொல்லப் பட்ட யூதர்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஏனெனில் பல தசாப்த காலமாக இந்த விபரங்கள் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. அண்மைக் காலமாகத் தான் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சில தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. குறிப்பாக Jedwabne எனும் கிராமத்தில் பல நூறு யூதர்கள் கொல்லப் பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையால், அது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. (பார்க்க: Neighbors, The Destruction of the Jewish Community in Jedwabne, Poland)

ரஷ்யப் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்த நேரம், அதனை பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் போல்ஷெவிக்குகள் மத்தியில் இருந்தது. அருகில் இருந்த போலந்திலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடிக்க வேண்டும் என்று லெனின் எதிர்பார்த்தார். அதற்காக செம்படையை அனுப்பி வைத்தார். ஆனால், ஸ்டாலினிடம் போலந்து குறித்து மாறுபட்ட கருத்து இருந்தது. "பொதுவாக போலிஷ்காரர்கள் பிற்போக்கான தீவிர தேசியவாதிகள், கத்தோலிக்க மத அடிப்படைவாதிகள்... அவர்களிடமிருந்து தற்போதைக்கு ஒரு வர்க்கப் புரட்சியை எதிர்பார்க்க முடியாது..." என்பது ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்தது. இன்று வரையிலான போலந்து வரலாறும் அதையே நிரூபித்து வருகின்றது.

இன்று வரையில் போலிஷ் சமூகம் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. நீண்ட காலமாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாத அளவிற்கு எதிர்ப்பு இருந்தது. எண்பதுகளின் இறுதியில் கம்யூனிச ஆட்சி கவிழ்ந்த பின்னர், அனைவரும் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 

அத்துடன் ரஷ்ய எதிர்ப்பு என்பது போலந்தில் ஒரு தேசியக் கலாச்சாரமாக உள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் முரண்பாடு போன்று அயல் நாடுகளுக்கு இடையிலான தேசியப் பகை உணர்வு. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட, "ஸ்டாலின் நடத்திய போலிஷ் படுகொலைகள்" பற்றிய கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பரப்புரைகளும், போலந்து தேசியவாதிகளால் தான் உற்பத்தி செய்யப் படுகின்றன.

Monday, February 19, 2018

ஸ்டாலின் பற்றி பலர் அறிந்திராத தகவல்கள்


எதற்காக எல்லோரும் ஸ்டாலினை "சர்வாதிகாரி" என்று சொல்கிறார்கள்? ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப் பட்ட உண்மைக் கதை இது:

ஸ்டாலினின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர், பொது மக்களின் பணத்தை சுருட்டி வந்தார். அந்தப் பணத்தில், மாஸ்கோ நகருக்கு வெளியே ஆடம்பரமான பங்களா வீடொன்றை கட்டி வந்தார். வீடு கட்டி முடிந்ததும், ஸ்டாலின் அவரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார்.

"அமைச்சரே! உங்களுக்கு பிள்ளைகள் என்றால் விருப்பமா?"
"ஆமாம், எனக்குப் பிள்ளைகள் மீது கொள்ளைப் பிரியம் உள்ளது." என்றார் அமைச்சர் ஆர்வத்துடன்.
"நல்லது. அப்படி என்றால் நீங்கள் புதிதாக கட்டிய அந்தப் பெரிய வீட்டை, சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு தானமாக கொடுத்து விடுங்களேன்?" என்றார் ஸ்டாலின் அமைதியாக. 
(நன்றி: The Red Executive, by David Granick (1960))

ஸ்டாலின் கால சோவியத் யூனியன், இன்றைய அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பல மடங்கு முற்போக்கானதாக இருந்துள்ளது. தனி நபர் சுதந்திரத்தை மதிப்பதில் சிறந்து விளங்கியது. இந்த 21 ம் நூற்றாண்டிலும், மேற்குலகம் அதை எட்டிப் பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

1920 ம் ஆண்டில், ரஷ்யாவின் முஸ்லிம் பிரஜைகள் விரும்பினால் ஷரியா சட்டம் வைத்திருப்பதற்கு, ஸ்டாலின் அனுமதி வழங்கி இருந்தார். இன்று மேற்குலக "ஜனநாயக நாடுகள்" செய்வதைப் போன்று, ஷரியா நடைமுறைப் படுத்தக் கேட்டவர்கள் மீது குண்டு போடவில்லை. தாராள மனதுடன் நடந்து கொண்டார்.

அதன் அர்த்தம், ஷரியா சட்டத்தின் பிற்போக்குத் தனங்களை எல்லாம், ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. ஸ்டாலின் ஒரு பக்கம், பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு மதிப்புக் கொடுத்த போதிலும், மறுபக்கம் நவீன கல்வி புகட்டுவதன் மூலம் அந்த மக்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்க திட்டமிட்டார்.

அதனால், காலப்போக்கில் சோவியத் முஸ்லிம்கள் தாமாகவே ஷரியாவை கைவிட்டு விட்டு, நவீன உலகிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டார்கள். கல்வியறிவு பெற்ற மக்கள் பழமைவாதத்தில் இருந்து தம்மைதாமே விடுவித்துக் கொண்டார்கள். மேலும், பெண்களுக்கும் சம உரிமை கிடைத்த படியால், கணவனின் வன்முறைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும், உடலை மூடும் மேலங்கியை எடுப்பதற்கான உரிமை கோரவும் முடிந்தது.

இன்றைக்கும் "சுதந்திரம், ஜனநாயகம்" பேசும் மேற்கத்திய நாடுகளில், ஷரியா சட்டம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயமாக கருதப் படுகின்றது. பல இலட்சக் கணக்கில் முஸ்லிம் பிரஜைகளை கொண்டுள்ள நாடுகள் கூட, "ஷரியா என்றாலே தீவிரவாதம்" என்று, தமது மக்களுக்கு தவறான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், சோவியத் யூனியன் தோன்றிய காலத்தில், அங்கே ஷரியா சட்டம் தடை செய்யப் பட்டதாக மேற்குலகில் பிரச்சாரம் செய்யப் பட்டது. ரஷ்யாவின் டாகெஸ்தான் மாநிலத்திற்கான சுயாட்சி வழங்குவது பற்றிய பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் பின்வருமாறு தெரிவித்தார்:

"டாகெஸ்தான் பிரதேசத்திற்கு உரிய தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசாட்சி நடக்க வேண்டும். டாகெஸ்தான் மக்களுக்கு ஷரியா சட்டம் முக்கியமானது என்று எமக்குக் கூறப் பட்டது. நாம் ரஷ்யாவில் ஷரியாவை தடை செய்து விட்டதாக, சோவியத்தின் எதிரிகள் வதந்திகள் பரப்பித் திரிவதையும் நாம் அறிவோம். அந்த வதந்திகள் பொய்யானவை. ரஷ்ய அரசு தனது மக்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய சட்டங்கள், மரபுகளின் அடிப்படையில் ஆள்வதற்கான முழு உரிமையும் கொடுக்கிறது. ஷரியா ஒரு பொதுவான சட்டம் என்பதை சோவியத் ஏற்றுக் கொள்கின்றது. டாகெஸ்தான் மக்கள் தமது சட்டங்களையும், மரபுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால், அவற்றை அப்படியே விட வேண்டும்."

ஸ்டாலினின் முழுமையான உரையை வாசிப்பதற்கு: 
Congress of the Peoples of Daghestan
https://www.marxists.org/reference/archive/stalin/works/1920/11/13.ht

"நான் இறந்த பிறகு, எனது சமாதியின் மேல் குப்பைகளை வாரிக் கொட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், வரலாறு எனும் காற்று அவற்றையெல்லாம் கூட்டித் தள்ளி விடும்." - ஸ்டாலின்


Friday, December 08, 2017

ஜனநாயகம் என்பது ஒரு பெரும்பான்மையின் சர்வாதிகாரமே!


(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - நான்கு)

ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே ட்ராஸ்கி மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்ததாகவும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே ட்ராஸ்கியை நாடுகடத்தி, பின்னர் கொலை செய்து விட்டதாகவும் ட்ராஸ்கிஸ்டுகள் கற்பனைக் கதை புனைந்து பரப்பி வருகின்றனர். அதில் எள்ளளவு உண்மையும் கிடையாது. தற்பெருமை கொண்ட ட்ராஸ்கி அவமானம் தாங்காமல் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்துள்ளார். அதையே இன்று ட்ராஸ்கி ஆதரவாளர்களும் காவித் திரிகின்றனர்.

அக்டோபர் புரட்சி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் போல்ஷெவிக் கட்சி புனரமைக்கப் பட்டது. அப்போது லெனின் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தார். அவருக்கு பதிலாக, ரஷ்யாவில் இருந்த ஸ்டாலின் தான் கட்சியை பொறுப்பேற்று நிர்வகித்து வந்தார். அப்போது ட்ராஸ்கி ஸ்டாலினுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். அன்று பல போல்ஷெவிக் தலைவர்கள் கைது செய்யப் பட்டிருந்த நிலையில் ஸ்டாலின் தலையில் பொறுப்புகள் குவிந்தமை ஏற்கத்தக்கதே. இந்த உண்மையை ட்ராஸ்கி கூட மறுக்கவில்லை.

அக்டோபர் புரட்சியின் முதலாம் ஆண்டு நினைவுகூரல் தொடர்பாக பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடத் தயங்கவில்லை.
//"மக்கள் எழுச்சிக்கான நடைமுறை வேலைகள் தோழர் ட்ராஸ்கி தலைமையில் நடந்துள்ளன. பெத்ரோகிராட் நகர இராணுவ முகாம்களில் இருந்த போர்வீர்கள் மத்தியில் புரட்சிகர கமிட்டி அமைத்து அவர்களை சோவியத் ஆதரவாளர்களாக வென்றெடுத்த ட்ராஸ்கிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்."// (Source: Histoire du phénoméne Stalinien/Geschiedenis van het Stalinisme, Jean Elleinstein, பக்கம் 39)

அக்டோபர் புரட்சியை நேரில் கண்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோன் ரீட் எழுதிய "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" நூலை, ஸ்டாலின் தடை செய்ததாக ட்ராஸ்கிஸ்டுகள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அந்த நூலில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு குறித்து எழுதப் பட்டிருந்த படியால் காழ்ப்புணர்வு கொண்ட ஸ்டாலின் தடை செய்தார் என்பது தான். இது எந்த உண்மையும் இல்லாத வெறும் வதந்தி. பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி இருக்கிறேன். அதில் எந்தக் காழ்ப்புணர்வும் இன்றி ஸ்டாலின் ட்ராஸ்கியை புகழ்ந்து எழுதி இருப்பதைக் காணலாம்.

தமது வதந்தியை நிரூபிக்க முடியாத ட்ராஸ்கிசவாதிகள், ஸ்டாலினின் பேச்சு ஒன்றை ஆதாரமாக காட்டுகின்றனர். "ட்ராஸ்கிசமா அல்லது லெனினிசமா" என்ற தலைப்பின் கீழ் November 19, 1924 அன்று ஸ்டாலின் பேசிய உரையில் "ஜோன் ரீட் தனது நூலில் ட்ராஸ்கி பற்றி எழுதிய ஒரு பகுதியை பிரதியெடுத்து ட்ராஸ்கிச ஆதரவாளர்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர்" என்று தான் சொல்லப் பட்டுள்ளது.

அன்று கட்சிக்குள் நடந்த நீண்டதொரு விவாதத்தில் தோல்வியுற்ற ட்ராஸ்கியின் தத்துவார்த்த குறைகளை சுட்டிக் காட்டும் விதமாகத் தான், ஸ்டாலினின் மேற்படி உரை அமைந்திருந்தது.சிலநேரம், குறிப்பிட்ட அந்த துண்டுப் பிரசுரம் தடை செய்யப் பட்டிருக்கலாம். அதற்குக் காரணம், அன்று நாட்டுக்குள் குறிப்பிட்ட அளவு ட்ராஸ்கி ஆதரவாளர்கள் இருந்தனர். அவர்களது அரச விரோத செயற்பாடுகள் தடுக்கப் பட்டன. அதைத் தான் ஸ்டாலின் "ஜோன் ரீட் நூலைத் தடைசெய்தார்" என்று திரித்து ட்ராஸ்கிசவாதிகள் விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர்.

"ஒரே நாட்டில் சோஷலிசம் கட்டுவதுவது" தொடர்பான விவாதங்கள் ஆண்டுக் கணக்காக நடந்து முடிவில் ட்ராஸ்கி தோற்கடிக்கப் பட்டார். இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். 1923 ம் ஆண்டு, ஸ்டாலினுக்கு எதிரான மத்தியகுழு உறுப்பினர்கள் இரகசியமான ஒரு இடத்தில் கூடி போட்டிக் குழு அமைக்க முடிவெடுத்தனர். அந்தக் குழுவில் சினோவியேவ், ட்ராஸ்கி ஆகியோரும் இருந்தனர். அதில் பங்கெடுத்த ஒருவர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்த படியால், அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.

இதற்கிடையே, கட்சியின் பதினான்காவது வருடாந்த மகாநாட்டின் முடிவில் கட்சி மறுசீரமைக்கப் பட்டது. இதனால் ட்ராஸ்கி போன்ற எதிராளிகளின் ஆதரவுத் தளம் சுருங்கியது. 1925 ம் ஆண்டு, ட்ராஸ்கியின் "யுத்தத்திற்கான மக்கள் அதிகாரி" பதவி பறிக்கப் பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்தும் கட்சி உறுப்பினராக இருக்க அனுமதிக்கப் பட்டார். கமனேவ், சினோவியேவ் ஆகியோர் முன்னர் ட்ராஸ்கியை விமர்சித்து வந்தாலும், பதினான்காம் கட்சி மகாநாட்டில் அவர்களும் ஸ்டாலினை எதிர்த்தனர்.

அந்தக் காலத்தில் கட்சிக்குள் குழுவாத அரசியல் மேலோங்கிக் காணப்பட்டது. பல்வேறு குழுக்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டவுடன், அவர்களது ஆதரவாளர்களும் களையெடுக்கப் பட்டனர். குறிப்பாக, அறிவுஜீவிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் குழுவாத அரசியல் நிலவியது. அதாவது ஆசிரியர்களும், மாணவர்களும் ஸ்டாலினிச குழு, ட்ராஸ்கிச குழு எனப் பிரிந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. பொதுவான ஜனநாயகம் என்ற ஒன்று உலகில் கிடையாது. மேற்கத்திய பாராளுமன்ற - பல கட்சி முறையானது இன்னொரு வகையான ஜனநாயகம் மட்டுமே. சோஷலிச நாடுகளில் இருப்பதை "ஜனநாயக மையவாதம்" என்று குறிப்பிடுவார்கள். அதாவது, "வேற்றுமையில் ஒற்றுமை காண்பது". எந்தப் பிரச்சினை பற்றியும் கட்சிக்குள் விவாதம் நடத்தலாம். ஒரு கோரிக்கை, அல்லது திருத்தம் கூட விவாதிக்கப் படலாம்.

ஒரு குறிப்பிட்ட விடயம் நாட்கணக்காக விவாதிக்கப் பட்ட பின்னர், முடிவில் அது வாக்கெடுப்புக்கு விடப் படும். பெரும்பான்மையாக எத்தனை பேர் கையை உயர்த்துகிறார்கள் என்று பார்த்து அது ஏற்றுக் கொள்ளப் படும். அதை எதிர்த்த சிறுபான்மை வாக்காளர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கோரிக்கையானது கட்சியின் முடிவாக வெளியுலகிற்கு அறிவிக்கப்படும். இது ஜனநாயகம் அல்லாமல் வேறென்ன?

பிரச்சினை எங்கே இருக்கிறது என்றால், எதிர்த்து தோற்கடிக்கப் பட்ட சிறுபான்மையினர் அதற்குப் பிறகு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. "உண்மையில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் சர்வாதிகாரம்" என்று இன்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அன்று ட்ராஸ்கி பெரும்பான்மை ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, குழுவாதமே ஜனநாயகம் என்று வாதாடிக் கொண்டிருந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன், கட்சிக்குள் தனிக் குழுவாக இயங்க விரும்பினார். ட்ராஸ்கி மட்டுமல்ல, புகாரின், கமனேவ், சினோவியேவ் என்று பலரும் தமக்கான குழுக்களை வைத்திருந்தனர்.

பாராளுமன்றத்தில் அல்லது கட்சிக்குள், ட்ராஸ்கி குழு போன்ற பல குழுக்களை இயங்க அனுமதித்திருந்தால், ட்ராஸ்கி ஸ்டாலினின் தலைமைக்கு கட்டுப்படத் தயாராக இருந்தார். ஆனால், அதை ஸ்டாலின் விரும்பவில்லை. கட்சிக்குள் குழுவாதத்தை ஏற்றுக் கொள்வதானது, பிசாசை கூப்பிட்டு பக்கத்தில் வைத்திருப்பதற்கு சமமானது. எந்த நேரம் எப்படிக் கவிழ்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது தான் ஸ்டாலின் - ட்ராஸ்கி முரண்பாட்டின் ஆரம்பப் புள்ளி.

1927 ம் ஆண்டு, அக்டோபர் புரட்சியின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. அப்போது ஸ்டாலின் எதிர்ப்பாளர்களான ட்ராஸ்கி, கமேநேவ், சிமில்கா, ராடெக், பியத்தகோவ், ராகொவ்ஸ்கி ஆகியோர் கூட்டுச் சேர்ந்து தனியான ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர். அதனால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப் பட்டனர். அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

1924 ம் ஆண்டு, சோவியத் நிறைவேற்றுக் கமிட்டியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் படி, அரச எதிரிகள், வர்க்க எதிரிகள் ஆகியோர் நாடுகடத்தப் படலாம் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. அந்த வகையில் நாடு கடத்தப் பட்டவர் ட்ராஸ்கி மட்டுமல்ல. 1927 வரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நாடுகடத்தப் பட்டுள்ளனர். அதே சட்டம் பலரைக் கைது செய்யவும் உதவியுள்ளது. அப்போது, ஆரம்ப கால கட்சி உறுப்பினர்களும் களையெடுக்கப் பட்டதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில், ஒரு முக்கியமான விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியானது ஒரு பாட்டாளி வர்க்க கட்சி என்று சொல்லிக் கொண்டாலும், அதில் மத்தியதர வர்க்க பின்னணி கொண்டவர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் அவர்கள் தான் பெருமளவில் அரசியல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்லாது, சுயநலக் காரணங்களுக்காக, குறிப்பாக பதவிக்காக வந்து சேர்வோரும் இருப்பார்கள்.

1927 ம் ஆண்டு, கட்சிக்குள் நடந்த மறுசீரமைப்பில் பலர் வெளியேற்றப் பட்டனர். அதில் பலர் மத்தியதர வர்க்க மனப்பான்மை கொண்டவர்கள், அல்லது பதவிக்காக கட்சியில் ஒட்டிக் கொண்டவர்கள். அந்த இடத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அவர்கள் ஒன்றில் தொழிலாளர்களாக இருந்தனர், அல்லது அவ்வாறான குடும்பப் பின்னணியை கொண்டிருந்தனர். இவ்வாறு தான் வர்க்கப் போராட்டம் ஆரம்பமாகியது.

(முற்றும்)

Thursday, December 07, 2017

ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் சாத்தியமா?

(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - மூன்று)

ட்ராஸ்கி, ஸ்டாலினுக்கு இடையிலான கொள்கை முரண்பாடு, ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் கட்டி எழுப்புவது பற்றியது என்று பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். அதை விரிவாக ஆய்வு செய்தால் தான், பிற்காலத்தில் ட்ராஸ்கி சொல்லித் திரிந்த பொய்கள் வெளிச்சத்திற்கு வரும். அன்று ட்ராஸ்கி கூறிய பொய்களை, இன்றும் பல ட்ராஸ்கிசவாதிகள் கண்ணை மூடிக் கொண்டு நம்புகிறார்கள்.

பலர் தவறாக நினைப்பதற்கு மாறாக, ரஷ்யப் புரட்சி தான் உலகின் முதலாவது பாட்டாளிவர்க்கப் புரட்சி அல்ல. இதற்கு முன்னரும் பல புரட்சிகள் நடந்து தோல்வியடைந்துள்ளன. ஒரு புரட்சியை நடத்துவதை விட அதை தக்க வைத்துக் கொள்வது தான் பெரிய விடயம். அந்த வகையில், தொழிலாளர், விவசாயிகளின் செம்படை ஒன்றை உருவாக்கி, பலமுனைத் தாக்குதல் தொடுத்த எதிரிகளுடன் போரிட்டு வெல்ல வேண்டி இருந்தது.

உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் சோஷலிச மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை. அதற்குப் பல தடைகள் இருந்தன. ஆகவே, லெனினால் புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) அறிமுகப் படுத்தப் பட்டது. அது சந்தைப் பொருளாதாரத்தை உள்ளடக்கி இருந்தது. அரசு மேற்பார்வையின் கீழான முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் புதிய முதலாளிகள், புதிய பணக்காரர்கள் தோன்றி இருந்தனர். மக்கள் அவர்களை "NEP காரர்" என்று அழைத்தனர். ஊடகங்களில் NEP காரருக்கு எதிரான கட்டுரைகளும், கார்ட்டூன்களும் வெளியாகின. அதில் அவர்கள் செல்வத்தில் மிதப்பதை வர்ணனை செய்திருந்தார்கள்.

லெனின் காலமாகி, ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்த பின்னரும், சோவியத் நாட்டில் சந்தைப் பொருளாதாரம் நிலவியது. அப்போது உள்நாட்டுப் போர் முடிந்து அமைதியான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. ஆகவே, இனிமேலும் சந்தைப் பொருளாதாரத்தை தொடர்வதா, அல்லது சோஷலிச கட்டுமானப் பணிகளை தொடங்குவதா என்ற கேள்வி எழுந்தது. உலகம் அன்றிருந்த நிலையில் சோஷலிசம் இறுதி வெற்றி பெறும் என்று யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். அதற்குக் காரணம், உலக வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் சோஷலிசம் கட்டப் படவில்லை. அது எப்படி இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது.

1925 ம் ஆண்டு, ஸ்டாலின் "ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் கட்டப் பட வேண்டும்" என்று தனது திட்டத்தை தெளிவாக முன்வைத்தார். ட்ராஸ்கி, கமனேவ், சினோவியேவ் போன்றவர்கள் அந்த யோசனையை எதிர்த்தனர். உடனடியாக சோஷலிசத்தை கட்டுவது சாத்தியமில்லை என்றும், அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றும் நம்பினார்கள். அதற்கு மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களையும் எடுத்துக் காட்டினார்கள். ஆனால், அவர்களது வாதமானது வெறும் "புத்தக அறிவு" என்பதற்கப்பால் எதுவுமில்லை. அதாவது, "புனித நூலில் எழுதியுள்ள படி தான் நடக்க வேண்டும்" என்பது மாதிரியான மனப்பான்மை கொண்டிருந்தனர்.

ஸ்டாலினின் நிலைப்பாட்டை ஆதரித்தவர்களும், ட்ராஸ்கியின் நிலைப்பாட்டை ஆதரித்தவர்களும் இது தொடர்பான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். இந்த விவாதம் வருடக் கணக்காக நடந்தது! அதுவும் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள்!! கட்சிக் கூட்டங்களில் மட்டுமல்லாது, காணுமிடமெங்கும், இரவு பகலாக, மூலை முடுக்கெல்லாம் பலர் கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். சுருக்கமாக சொன்னால், ஒரே நாட்டில் சோஷலிசம் கட்டுவது தொடர்பான விவாதங்கள் முழுக்க முழுக்க ஜனநாயகபூர்வமாக நடந்து கொண்டிருந்தன.

இரண்டு தரப்பினரதும் வாதங்கள் துண்டுப் பிரசுரங்களாக அல்லது நூல்களாக அச்சிடப் பட்டு, கட்சியின் மேல்மட்ட, அடிமட்ட உறுப்பினர்கள் எல்லோருக்கும் விநியோகிக்கப் பட்டன. பத்திரிகைகளிலும் வாதங்கள் தொடர்ந்தன. அன்றைய காலத்தில் பேஸ்புக் போன்ற இணைய வழி சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. அந்த இடத்தை பத்திரிகைகளே நிரப்பின. 

நான்கு வருடங்களாக, நாடு முழுவதும் நடந்த அந்த முக்கியமான விவாதங்களின் முடிவில் தான் ட்ராஸ்கி தோல்வியைத் தழுவினார். இறுதியில், தனது தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பாத, திமிர் பிடித்த ட்ராஸ்கி, நாடுகடத்தப் பட்ட பின்னர் "புரட்சி காட்டிக் கொடுக்கப் பட்டது" என்று புலம்பித் திரிந்தார். அந்த நாடுகடத்தல் விவகாரம் கூட சோவியத் சட்ட விதிகளுக்கு அமையவே நடந்ததே அன்றி, ஸ்டாலினின் சுய விருப்பின் பேரில் எடுக்கப் பட்ட முடிவல்ல.

நிச்சயமாக, சோவியத் அரசு பிற உலக நாடுகளில் போராடும் பாட்டாளிவர்க்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய கடமையை மறந்து விட முடியாது. அதே நேரம், ஒரே நாட்டிற்குள் சோஷலிசத்தை கட்டுவதும் முக்கியம் தான். வேறு வழி கிடையாது. ட்ராஸ்கி முன்மொழிந்த யோசனைகளின் படி ஒரு "சோஷலிச சோவியத் யூனியன்" நடைமுறைக்கு வந்திருந்தால், அது இன்றுள்ள சீனா மாதிரி இருந்திருக்கும். 

அதாவது, விசேட வரிகள் விதிப்பதன் மூலம் சந்தைப் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மூலதனத்தை குவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. (அதையே தான் இன்று மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அரசுக்களுக்கு சில இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.)

"சோஷலிச மூலதன திரட்டல் என்றால் என்ன?" ட்ராஸ்கி சார்ந்திருந்த குழுவை சேர்ந்த பிரயோபிராஜென்ஸ்கி அது குறித்து விரிவாக பல கட்டுரைகள் எழுதினார். "நோவயா எகொனோமிக்கா" (புதிய பொருளாதாரம்) இதழில் பிரசுரமான கட்டுரைகளின் சாராம்சத்தை இங்கே தருகிறேன்.
//முதலாளித்துவ மூலதனக் குவிப்புடன் அவர் இதனை ஒப்பிடுகிறார். அதாவது, மேற்குலகில் உள்ள முதலாளித்துவ மூலதனமானது காலனிகளை சுரண்டியதன் மூலம் குவிக்கப் பட்டது. அத்துடன் கைத்தொழில் புரட்சியால் உருவான நிறுவனங்களின் உபரி மதிப்பும், அரசு வரிகளும், அரசு கடன்களும் சேர்ந்து மூலதனத்தை திரட்டியுள்ளன. ஆனால், சோவியத் யூனியன் எந்தக் காலனியையும் சுரண்ட முடியாது. அது சாத்தியமில்லை. ஆகவே, எஞ்சி இருக்கும் நடைமுறைகளை பிரயோகிக்கலாம். குட்டி பூர்ஷுவா வர்க்கம் இல்லாத விவசாயப் பொருளாதாரத்தை கட்ட முடியும் என நினைப்பது நடைமுறைச்சாத்தியமில்லாத கனவு.// ட்ராஸ்கி மேற்படி ஆலோசனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரித்தானியாவில் இருந்த ஆரம்பகால முதலாளித்துவம், குறைந்தது நூறாண்டுகளுக்குப் பிறகு தான் தொழிற்புரட்சியை நடத்தும் அளவிற்கு வளர்ந்திருந்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் அடுத்து வந்த பத்து வருடங்களுக்குள் தொழிற்புரட்சியை நடத்த திட்டமிட்டார். அதுவும் முதலாளித்துவம் இல்லாமல், சோஷலிச மூலதனத்தை திரட்ட வேண்டி இருந்தது. சோவியத் யூனியன் அன்றிருந்த நிலைமையில், அதாவது பொருளாதார வளர்ச்சியில் மேற்குலகை விட பல வருடங்கள் பின்தங்கி இருந்த ஒரு நாட்டில் இது சாத்தியப் படுமா? நிச்சயமாக, அன்று பலரது கேள்வியும் அதுவாகத் தான் இருந்திருக்கும்.

சோஷலிச மூலதனத்தை திரட்டுவதற்காக, நாடு முழுவதும் கூட்டு விவசாயப் பண்ணைகள் அமைப்பதற்கு திட்டமிடப் பட்டது. இதில் விவசாயிகளை சுய விருப்பின் பேரில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது. இருப்பினும், சில இடங்களில் கட்டாயப் படுத்தி சேர்த்த சம்பவங்களும் நடந்துள்ளன. அது பெரும் போராட்டமாக நடந்தது. நாட்டுப்புறங்களில் கூட்டுப் பண்ணைத் திட்டத்தை எதிர்த்து நின்ற பணக்கார விவசாயிகள் கைது செய்யப் பட்டனர். அதே நேரம், கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்களை எதிர்த்தும் போராட வேண்டி இருந்தது.

இங்கே ஓர் உண்மையை நாங்கள் மறந்து விடக் கூடாது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளில் "ஸ்டாலினிச அடக்குமுறை" தேவைப் பட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தேவையான மூலதனத்தை ஈவிரக்கமின்றி காலனிகளை சுரண்டுவதன் மூலம் திரட்டிக் கொண்டனர். அதாவது, ஸ்டாலின் காலத்தில் நடந்ததை விட பத்து மடங்கு அதிகமான கைதுகள், படுகொலைகள் ஐரோப்பிய காலனிகளில் நடந்துள்ளன.

ஆகையினால், குலாக் என்ற பணக்கார விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறையையும், அங்கு நடந்த தொழிற்புரட்சியுடன் சேர்த்துப் பார்க்கப் பட வேண்டும். அது நடந்திருக்கா விட்டால், தொழிற்துறை வளர்ச்சி கண்டிருக்க முடியாது. உண்மையில் கட்சிக்குள் யாருமே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதில் கருத்து முரண்பாடு இருந்தது. ட்ராஸ்கி, புகாரின் ஆகிய எதிர்தரப்பினர் குலாக் மீது கடும் வரி விதிக்கலாம் என்று பிரேரித்தனர். குறைந்தது ஒரு வருட காலம் அது பற்றி விவாதிக்கப் பட்டது. இறுதியில் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்கள் அந்த யோசனையை நிராகரித்தனர்.

"ஸ்டாலினின் கொடுங்கோன்மை" பற்றி பக்கம் பக்கமாக எழுதுவதும், "கம்யூனிசம் என்றால் இப்படித் தான் கொலைகள் நடக்கும்" என்று பயமுறுத்துவதும் சிறுபிள்ளைத்தனமான செயல். அது அன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் அவசியம். அதுவே எல்லா நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் நடக்கும் என்று நினைப்பது சுத்த அபத்தம். "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" கொண்டு வந்த தொழிற்புரட்சியின் விளைவாக கிடைத்த பயன்பாடுகளைத் தான் இன்றைய ரஷ்யர்கள் அறுவடை செய்கின்றனர். தொழிற்துறை வளர்ச்சி கண்ட ஒவ்வொரு நாட்டிலும் ஒரு காலத்தில் "ஸ்டாலினிச காலகட்டம்" இருந்திருக்கும்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

Wednesday, December 06, 2017

ட்ராஸ்கியின் கரங்களிலும் இரத்தக் கறை படிந்திருந்தது!


(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - இரண்டு)

"ட்ராஸ்கி எந்தக் கொலை பாதகச் செயலையும் செய்திராத, எப்போதும் எழுதிக் கொண்டிருந்த அப்பாவி" என்பது போன்றதொரு மாயையை ட்ராஸ்கிசவாதிகளும், மேற்குலகமும் சேர்ந்து உண்டாக்கி வைத்துள்ளன. அதில் எந்த உண்மையும் இல்லை. இன்னொரு விதமாக சொன்னால், ட்ராஸ்கியின் கையில் அதிகாரம் இருந்த காலத்தில் அவர் "இன்னொரு ஸ்டாலினாக" இருந்தார். அக்டோபர் புரட்சியின் பின்னர் இடம்பெற்ற முதலாவது அரசியல் கைது ட்ராஸ்கியின் உத்தரவின் பேரில் நடந்தது.

ரஷ்யாவில் விளாடிமிர் பூர்த்சாவ் (Vladimir Burtsav) என்ற பிரபலமான இடதுசாரி எழுத்தாளர் இருந்தார். சார் மன்னன் காலத்தில் ஊடுருவலாளர்கள், உளவாளிகள், போன்றவர்களை அம்பலப் படுத்தி எழுதி வந்தார். இதனால் ஒரு தடவை நாடுகடத்தப் பட்டு திரும்பி வந்திருந்தார். சிறிது காலம் போல்ஷெவிக் கட்சியை ஆதரிப்பதாக போக்குக் காட்டி விட்டு, பின்னர் தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர்களை ஜெர்மன் கைக்கூலிகள் என்று தூற்றி வந்தார். அத்துடன், யூதர்களுக்கு எதிரான "சியோன் ஞானிகளின் அறிக்கை" நூல் வெளியிடவும் காரணமாக இருந்தவர்.

அக்டோபர் புரட்சிக்கு முன்னர், போல்ஷெவிக் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று நினைத்து அதில் சேர்ந்து கொண்ட மாற்று இயக்கத்தவர் பலர் இருந்தனர். பூர்த்சாவ் அப்படியான கட்சி மாறிகளை தோலுரித்துக் கொண்டிருந்தார். ட்ராஸ்கியும் அப்படியானவர் தானே? அதனால் தானோ என்னவோ புரட்சி நடந்த அன்றிரவே பூர்த்சாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். ஒரு வருட சிறைவாசத்தின் பின்னர், எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி போட்ட கருணை மனுவிக்கிணங்க விடுதலை செய்யப் பட்டு நாடுகடத்தப் பட்டார்.

1917 ம் ஆண்டு புரட்சி நடந்திருந்தாலும், அதற்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போர் தான் முக்கியமானது. அந்த யுத்தத்தில் நடந்த பேரழிவுகள், மனிதப் படுகொலைகள் ஏராளம். மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் "வெண் படைப் பயங்கரத்திற்கு எதிரான செம்படைப் பயங்கரம்" பற்றியும் விவரித்து எழுதி இருக்கிறார்கள்.

இதை நாம் "புரட்சிகர வன்முறை" என்று அழைப்பதே பொருத்தமானது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் பிரான்ஸில் இரத்த ஆறு ஓடியது. அப்போது நடந்த படுகொலைகள், சொத்தழிவுகள், தேவாலய இடிப்புகள் எண்ணிலடங்காதவை. அதே மாதிரியான நிலைமை தான் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் ஏற்பட்டிருந்தது.

அப்போது போல்ஷெவிக்குகள் அதை "போர்க்கால கம்யூனிசம்" என்று அழைத்தனர். அதாவது, புரட்சியின் குறிக்கோளான சோஷலிச சமுதாய மாற்றத்தை உடனடியாக கொண்டு வர முடியாத நிலைமை. ஏனெனில், நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்ட நேரத்தில் போரை நடத்துவதே முதன்மையானது. இருப்பினும், செம்படை கைப்பற்றும் பகுதிகளில் தற்காலிக ஏற்பாடாக சில மாற்றங்களை நடைமுறைப் படுத்தலாம். அதற்கு வன்முறை பாவிக்கலாம்.

ட்ராஸ்கி தலைமை தாங்கிய செம்படை, தான் கைப்பற்றிய இடங்களில் "போர்க்கால கம்யூனிச அதிகாரத்தை" நிலைநாட்டியது. அதன் அர்த்தம், நிலவுடமையாளர்கள், பணக்கார விவசாயிகள், உள்ளூர் முதலாளிகள் போன்றவர்கள், எந்த வித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப் பட்டனர். கூட்டுப் பண்ணைத் திட்டம் அமுல் படுத்தப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன.

செம்படைக்கு எதிரானவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட கொல்லப் பட்டனர். அதாவது பிற்காலத்தில் ட்ராஸ்கி எதையெல்லாம் "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" என்று சொல்லித் திரிந்தாரோ, அவை எல்லாம் அன்றே ட்ராஸ்கியால் நடைமுறைப் படுத்தப் பட்டன! அதாவது மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

அன்று ரஷ்யாவில் யார் யாரை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்று தெரியாத குழப்ப நிலை. செம்படைக்கும், வெண்படைக்கும் இடையில் போர் நடந்தது என்பது மிகவும் இலகுபடுத்தப் பட்ட பதில். சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படை மட்டுமல்லாது, சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி என்ற போல்ஷெவிக்குகளுக்கு எதிரான இன்னொரு இடதுசாரி கட்சியும் தனியே ஆயுதக்குழு அமைத்து செம்படையை போரிட்டது. குறிப்பாக சைபீரியா பகுதிகளில் இருந்த விவசாயிகள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. இறுதிப் போரில் அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்.

புரட்சியின் ஆரம்ப காலத்தில், சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி போல்ஷெவிக் கட்சியுடன் சேர்ந்து அரசமைத்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப் பட்டநேரம், போல்ஷெவிக் கட்சியினர் மட்டுமல்லாது, சிறிய அளவில் சோஷலிச புரட்சியாளர் கட்சியினரும், பெருமளவில் அனார்க்கிஸ்டுகளும் (நிர்ப்பந்தத்தின் பேரில்) சேர்க்கப் பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் லெனினின் போல்ஷெவிக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஒன்று கலந்தவர்கள். (இதுபற்றி உத்தியோகபூர்வ வரலாற்று நூல்களில் எழுதப் படவில்லை. இருப்பினும் அவ்வாறு தான் நடந்தது என்பது மக்களில் பலருக்கும் தெரிந்திருந்தது.)

அதே நேரம் சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி தனியாக இயங்கி வந்தது. முதலாம் போரை நிறுத்துவதற்காக, லெனின் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் போட்டதை காரணமாகக் காட்டி சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி போல்ஷெவிக் அரசைக் கவிழ்க்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. அப்போது தான் அவர்களது ஆயுதக் குழுவும், வெண் படையுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டது.

இதே நேரம், தலைநகரில் லெனினைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப் படுத்தியவர் சோஷலிச புரட்சியாளர்கள் கட்சியை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர். லெனின் கொலை முயற்சியின் எதிரொலியாக, சோஷலிச புரட்சியாளர்கள் கட்சியை சேர்ந்த அனைவரும் வேட்டையாடப் பட்டனர். அதன் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் ஒன்றில் சிறையில் அடைக்கப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.

சோஷலிச புரட்சியாளர்கள் கட்சிக்கு எதிரான அழித்தொழிப்பு நடவடிக்கை நடந்து கொண்டிருந்த நேரம், ட்ராஸ்கி அதிகாரத்தில் இருந்தார். அன்று அவர் இதையெல்லாம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ஸ்டாலினின் சர்வாதிகாரம் பற்றிப் பேசுவது உள்நோக்கம் கொண்டது. இது ட்ராஸ்கியின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது. "லெனின் மீதான கொலை முயற்சிக்கு பின்னர் யாரும் கைது செய்யப் படவில்லை" என்று, இன்றைய ட்ராஸ்கிஸ்டுகள் பரப்பும் கதைகளில் உண்மை இல்லை. அது வழமையாக ட்ராஸ்கியின் குற்றங்களை மறைப்பதற்காக சொல்லப்படும் பொய்களில் ஒன்று.

"வெண் படைக்கு சற்றும் குறையாத வகையில் செம்படையினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்" என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவார்கள். அதில் உண்மை இல்லாமலில்லை. எதிரிக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை சுட்டுக் கொன்றமை, கட்டாய ஆட்சேர்ப்புகள், தானியங்களை பறிமுதல் செய்தல், என்று பல போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பிலும் நடந்துள்ளன.

சில இடங்களில் போர் வன்முறைகளால் வெறுப்படைந்த விவசாயிகள் கலகம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளது. நகரங்களுக்கு உணவு கொண்டு செல்லும் வழிகளை விவசாயிகள் தடுத்தனர். போரினால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக பல இடங்களில் பட்டினிச் சாவுகளும் நடந்துள்ளன. இவை எல்லாம் ட்ராஸ்கி செம்படைக்கு தலைமை தாங்கிய காலத்தில் நடந்தவை! ஆனால், மேற்கத்திய அல்லது ட்ராஸ்கிச பரப்புரையாளர்கள் அதை எல்லாம் தந்திரமாக ஸ்டாலினின் கணக்கில் போட்டு விட்டனர். எல்லாப் பழியும் ஸ்டாலினுக்கே!

ட்ராஸ்கி செய்த படுகொலைகளின் உச்சகட்டம் குரோன்ஸ்டாட் தீவில் இடம்பெற்றது. குரோன்ஸ்டாட் (Kronstadt: ஒரு ஜெர்மன் பெயர்) என்பது பின்லாந்துக்கு கீழே, சென் பீட்டர்ஸ்பெர்க் அருகில் அமைந்துள்ள ஒரு தீவு. அங்கு ஒரு கடற்படைத் தளம் இருந்தது. (இப்போதும் இருக்கிறது) குரோன்ஸ்டாட் கடற்படையினர், அக்டோபர் புரட்சியில் முக்கிய பங்காற்றினார்கள். அதைப் பற்றி ட்ராஸ்கியும் "புரட்சியின் மகிழ்ச்சியும், பெருமையும்" என்று புகழ்ந்து பேசி இருந்தார். அப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய குரோன்ஸ்டாட் கடற்படையினர், அதே ட்ராஸ்கியால் படுகொலை செய்யப் படுவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

உண்மையில், உள்நாட்டுப் போர்க் காலத்தில் நடந்த அளவுகடந்த வன்முறைகள், அதனால் ஏற்பட்ட பஞ்சத்திற்கு ட்ராஸ்கியும் பொறுப்பேற்க வேண்டும். அன்று நடந்த போரின் விளைவாக, நாடு முழுவதும் உணவுத் தட்டுப்பாடும், பஞ்சமும் நிலவியது. அதனால், குரோன்ஸ்டாட் தீவுக்கு உணவு விநியோகம் நடக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த கடற்படையினரும் மக்களும் போல்ஷெவிக் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அங்கு அனார்க்கிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களது சோவியத் அமைப்பு போல்ஷெவிக் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் தனித்து இயங்கியது.

பிற்காலத்தில் "ஸ்டாலின் மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்கினார்" என்று புலம்பித் திரிந்த ட்ராஸ்கி 1921 ம் ஆண்டு செய்தது என்ன? போல்ஷெவிக் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து கலகம் செய்த குரோன்ஸ்டாட் சோவியத் மீது குண்டு போட உத்தரவிட்டார். ஏற்கனவே பஞ்சத்தால் பாதிக்கப் பட்டிருந்த குரோன்ஸ்டாட் கடற்படையினர் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ட்ராஸ்கி தலைமையிலான செம்படை வீரர்கள் குரோன்ஸ்டாட் சோவியத்தை கலைத்ததுடன், கிளர்ச்சியில் சம்பந்தப் பட்டவர்களைப் பிடித்து சுட்டுக் கொன்றனர். எஞ்சியவர்களை சிறைப் பிடித்தனர். குறிப்பிட அளவினர் பின்லாந்திற்கு தப்பியோடி விட்டனர். அன்று நடந்த படுகொலைகளில் குறைந்தது பத்தாயிரம் பேர் பலியாகி இருப்பார்கள். ஆம், அவை ட்ராஸ்கி செய்த படுகொலைகள்!

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

Wednesday, March 23, 2016

ஸ்டாலினை மிரட்டுவதற்காக ஜப்பான் மீது அணு குண்டு போட்ட அமெரிக்கா


உலக வரலாற்றில் முதல் தடவையாக, அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு போட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பானை சரணடைய வைப்பதற்காகவே அணுகுண்டு போட்டதாக, அமெரிக்கா ஒரு நியாயத்தை சொல்லிக் கொண்டது. ஆயினும் அந்த "நியாயம்" அப்போதே சந்தேகிக்கப் பட்டது. 

அமெரிக்கா அணுகுண்டு போடுவதற்கு முன்னரே, ஜப்பான் சரணடையத் தயாராக இருந்தது. உண்மையில், அப்போது வளர்ந்து வரும் உலக வல்லரசாக கருதப்பட்ட, சோவியத் யூனியனை மிரட்டும் நோக்கில் ஜப்பானில் அணுகுண்டு போடப் பட்டது. ஏனெனில், சோவியத் செம்படைகள் ஜப்பானை பிடிப்பதற்கு தயாராக இருந்தன. அதற்கு முதல் அமெரிக்கா முந்திக் கொண்டது.

1945 ம் ஆண்டு, ஹிரோஷிமா, நாகசாகி மீது, எந்தத் தேவையுமில்லாமல் அணுகுண்டு போடப் பட்டது. இதனை அமெரிக்க மரைன் உளவுத்துறை அதிகாரி அட்மிரல் Ellis Zacharias, மற்றும் அமெரிக்க ஜனாதிபதி Dwight D. Eisenhower ஆகியோர் தமது நினைவுக்குறிப்புகளில் எழுதி உள்ளனர்.

"அணுகுண்டு போட்டிருக்காமலே 15 செப்டம்பர் 1945 அன்று ஜப்பான் சரணடைந்து இருக்கும்" என்று எல்லிஸ் சகாரியாஸ் எழுதி உள்ளார். "ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல் முற்றுமுழுதாக தேவையற்ற விடயம். ஏனெனில் நாங்கள் ஏற்கனவே ஜப்பானை வென்று விட்டோம்." என்று ஐசன்ஹோவர் எழுதினார்.

"100 வருட கால உலக சரித்திரம் 1870-1970" (100 jaar Wereldgeschiedenis 1870-1970) என்ற நூலில் பேராசிரியர் A. Stam பின்வருமாறு எழுதி இருக்கிறார்:"ஜூலை 1945 ஜப்பான் அரசு சரணடைவதற்கு தயாராக இருந்தது. ஏற்கனவே ஜப்பானிய ரகசியத் தகவல்களை உளவறிந்த அமெரிக்கர்கள் அதைத் தெரிந்து கொண்டனர். இருப்பினும், அணு குண்டு போடுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. அதன் மூலம், சோவியத் யூனியன் உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவுடன் போட்டியிட முடியாத நிலை உருவாகும்." 

பிப்ரவரி மாதம் நடந்த யால்ட்டா உச்சி மகாநாட்டில், ஐரோப்பாவில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முரண்பாடுகள் தோன்றின. ஸ்டாலின் ஒரு பக்கம், ரூஸ்வெல்ட், சர்ச்சில் ஆகியோர் மறுபக்கம் முரண்பட்டனர். ஸ்டாலின் யால்ட்டா ஒப்பந்தத்தை தனக்கு விரும்பியவாறு மொழிபெயர்க்கப் பார்க்கிறார் என்று ரூஸ்வெல்ட் குற்றம் சுமத்தினார். ரூஸ்வெல்ட்டை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்த ட்ரூமன் அணுகுண்டு போடும் முடிவை எடுத்தார். அமெரிக்காவிடம் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை ஸ்டாலினுக்கு காட்ட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

ஆகவே, ஜப்பான் சரணடைய தயாராக இருந்த போதிலும், 5 - 9 ஆகஸ்ட் 1945, ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப் பட்டன. அதன் விளைவாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகளாக, 250.000 ஜப்பானியர்கள் கொல்லப் பட்டனர். அடுத்து வந்த வருடங்களில், மேலும் இலட்சக் கணக்கானோர் கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்ட புற்றுநோயால் இறந்தனர். அமெரிக்கா, இங்கிலாந்தின் மேலாதிக்க வெறிக்காக, ஸ்டாலினை தமக்கு கீழே அடிபணிய வைப்பதற்காக அந்த உயிர்கள் பலி கொடுக்கப் பட்டன.

அணுகுண்டு வீச்சாளர் ட்ரூமன் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னரே தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜூன் 1941 ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்தது. அப்போது The New York Times பத்திரிகை பேட்டியில் பின்வருமாறு கூறினார்: 
"ஜெர்மனி வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யா வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். இந்த வகையில் அவர்கள் முடிந்த அளவு மக்களை கொன்று குவிக்கட்டும் என்று விட்டு விடுவோம்."

இலங்கையில் முப்பதாண்டு காலமாக நடந்த ஈழப்போரிலும், அமெரிக்கா இதே மாதிரியான அணுகுமுறையை தான் கடைப்பிடித்தது. சிறிலங்கா இராணுவம் வெல்லப் போகிறது என்று தெரிந்தால் புலிகளுக்கு உதவினார்கள். புலிகள் வெல்லப் போகிறார்கள் என்று தெரிந்தால், சிறிலங்கா இராணுவத்திற்கு உதவினார்கள்.

அந்த வகையில் முடிந்த அளவு அதிக எண்ணிக்கையிலான தமிழர்களும், சிங்களவர்களும் செத்து மடியட்டும் என்று வேடிக்கை பார்த்தார்கள். அப்படியான அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக நீதியாக நடந்து கொள்ளும் என்று நம்பும் அப்பாவிகள் இன்றைக்கும் உள்ளனர்.