Showing posts with label வேலை நிறுத்தப் போராட்டம். Show all posts
Showing posts with label வேலை நிறுத்தப் போராட்டம். Show all posts

Sunday, September 09, 2018

ஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்


ஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் பொது மக்களால் முற்றுகையிடப் பட்டு தீக்கிரையாக்கப் பட்டன.


கடந்த ஐந்து நாட்களாக, ஈராக்கின் எண்ணை வளம் நிறைந்த பஸ்ரா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகள், வேலை வாய்ப்புகள் கோரியும் துறைமுகத் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் குதித்தனர். 

இரண்டு மில்லியன் மக்கட்தொகை கொண்ட பஸ்ரா நகருக்கு அருகில் உள்ள, அல்கசார் துறைமுகத்திற்கு செல்லும் பாதையில் தொழிலாளர் நடத்திய மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத அரசு, ஏவல் நாய்களான காவல்துறையை  ஏவி போராட்டத்தை அடக்கப் பார்த்தது. 

ஆரம்பத்தில், பொலிசார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டு, போராட்டக்காரரை கலைந்து செல்ல வைத்தனர். ஆனால், பொலிஸ் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஆர்ப்பாட்டக் காரர்கள் இடத்தை விட்டு நகரவில்லை. பல இடங்களில் மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இதேநேரம், பஸ்ரா நகர விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்த படியால் விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டது. விமான நிலையத்தின் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் ஐந்து கதூஷ்யா ஏவுகணைகள் வந்து விழுந்து வெடித்துள்ளன. இந்தத் தாக்குதலின் போது யாரும் பலியாகவில்லை, காயமடையவுமில்லை.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பொது மக்களின் ஆதரவைப் பெற்றதும் வன்முறைப் போராட்டமாக மாறியது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பஸ்ரா நகரும், அதை அண்டிய பகுதிகளிலும் குழாயில் வரும் தண்ணீர் மாசடைந்து காணப்படுவதாக பொது மக்கள் புகார் கூறி வந்தனர். 

அது மட்டுமல்லாது மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதால், கோடை காலத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினார்கள். அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத படியால், பொங்கி எழுந்த மக்கள் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தெருவுக்கு வந்து போராடினார்கள்.

அமைதியான வழியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் முடிந்தன. அரசின் பல வருட கால புறக்கணிப்பால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ரா நகரில் உள்ள அரச அலுவலகங்களை தாக்கி எரித்துள்ளனர். இதனால் அரச நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பதினாறு பேர் மரணமடைந்தனர். பலர் கைது செய்யப் பட்டு, தெருவில் இழுத்துச் செல்லப் பட்டனர்.

இதே நேரம், ஈராக் அரசுக்கு முண்டு கொடுக்கும் ஈரானின் தூதுவராலய கட்டிடமும் தாக்கி கொளுத்தப் பட்டது. இலங்கையில் இந்தியாவின் தலையீடு மாதிரி, ஈராக்கில் ஈரானின் தலையீடு அமைந்துள்ளது. ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஈராக் ஆட்சியாளர்களை விலைக்கு வாங்கி இருந்தது. 

இதனால் தமது ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு ஈரானும் பொறுப்பு என்று பொது மக்கள் கருதுகின்றனர். தமது தாய்நாடு ஈரானின் காலனியாவதை ஈராக்கிய மக்கள் விரும்பவில்லை. அதன் எதிரொலி தான் ஈரானிய தூதுவராலயம் கொளுத்தப் பட்ட சம்பவமும். 

ஈராக்கில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில், ஈராக்கி கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளன. அதனுடன் கூட்டுச் சேர்ந்த பிற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி, தேர்தல் காலத்தில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளன. அதாவது, ஈரானின் தலையீடு, ஊழலுக்கு எதிரான இயக்கமாக தமது தேர்தல் பரப்புரைகளில் கூறி வந்துள்ளனர். அதனால் தான் பெருமளவு வாக்காளர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு தெரிவு செய்துள்ளனர். 

மேலும் ஒரு பொதுவுடைமைக் கட்சியானது, அடிப்படையில் மதப் பிரிவுகளுக்கும், இன வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்ட கட்சியாகும். அதனால் தான் ஈராக்கி உழைக்கும் மக்களை இனம், மதம் கடந்து ஒன்றிணைக்க முடிந்துள்ளது. பிற இடதுசாரிக் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை பின்பற்றியதால் தேர்தலில் வெற்றி பெற்றன.

"சதாம் ஹுசைனின் சர்வாதிகாரத்தில் இருந்து ஈராக் மக்களை மீட்க வந்த" அமெரிக்கர்கள், எண்ணை வளம் நிறைந்த ஈராக்கை ஊழல் மலிந்த ஏழை நாடாக்கி விட்டுச் சென்றனர். கடந்த தசாப்த காலமாக, இஸ்லாமிய மத அடிப்படைவாதம், ஷியா- முஸ்லிம் தேசியவாதம் போன்ற கோட்பாடுகள் ஈராக் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரும் அந்த மதவாத சக்திகளை மறைமுகமாக ஊக்குவித்து வந்தனர்.

எதிரும் புதிருமான சுன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் ஒருவர் மற்றவரைக் கண்டால் கொன்று இரத்தம் குடிக்கும் அளவிற்கு வன்மம் பாராட்டினார்கள். இதன் விளைவுகளில் ஒன்று தான் பிற்காலத்தில் "டேஷ்" அல்லது "இஸ்லாமிய தேசம்(IS)" என அறியப் பட்ட ISIS இயக்கத்தின் தோற்றமும், அதைத் தொடர்ந்த யுத்தங்களும். 

இலங்கையில் "சிங்களவர்- தமிழர் இனப்பகை" மாதிரி, ஈராக்கில் "சுன்னி - ஷியா இனப்பகையை" உயிர்ப்புடன் வைத்திருப்பதே அமெரிக்கா மற்றும் ஈராக் அரசின் நோக்கமாக இருந்துள்ளது. "மக்களை பிரித்து வைத்தால் இலகுவாக ஆள்வது இலகு" என்பதே, உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலேயர் முதல் அமெரிக்கர் வரையில் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் மத்தியில் மத அடிப்படையிலான தேசியவாதமும் இருந்து வந்தது. ஷியாக்களின் தலைமையகமாக கருதப்படும் ஈரானும் பின்புலத்தில் இருந்து ஊக்குவித்து வந்தது. அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேறியதும், அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட ஈரானின் நேரடித் தலையீடு சகல துறைகளிலும் பல மடங்கு அதிகரித்தது.

அரசியலில் மட்டுமல்லாது, பொருளாதாரத்திலும் ஈரானிய தலையீட்டை நேரடியாக உணரக் கூடியதாக இருந்தது. ஈராக் கடைகளில் பெருமளவு ஈரானிய உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும்.  

இது போன்ற காரணங்களினால், ஈராக்கிய பொது மக்கள் ஈரான் மீது வெறுப்புற்று இருந்ததில் வியப்பில்லை. ஆனால், ஷியா சகோதர இனத்தின் மனமாற்றத்தை ஏற்க மறுக்கும் ஈரானிய அரசு, "அந்நிய சக்திகள் (ஷியா) இன ஒற்றுமையை குலைக்கின்றன" என்று அலறுகின்றது. 

அதாவது, ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை பின்பற்றும், ஈராக்கிய மக்களை "ஷியா - சுன்னி" என்று இன அடிப்படையில் பிரித்து வைப்பதில் தவறில்லையாம். ஆனால், அவர்கள் வர்க்க உணர்வு கொண்டு விட்டால், "ஐயகோ, இன ஒற்றுமையை குலைக்க சதி நடக்கிறது" என்று ஓலமிடுவார்கள். ஈரானிய அரசின் அரசியல் நிலைப்பாட்டைத் தான், நம்மூர் தமிழ்த் தேசியவாதிகளும் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் உழைக்கும் மக்களே! 
ஈராக்கிய சகோதரர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். மதவாதம், தேசியவாதம் பேசி, எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதற்கு, ஈராக் பொது வேலைநிறுத்த போராட்டம் ஒரு சிறந்த உதாரணம். மதம், தேசியத்திற்கு அப்பால், வர்க்க உணர்வு தான் மக்களை தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராட வைக்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவர்கள் மனதில் மதவாத, இனவாதக் கருத்துக்கள் விதைக்கப் படுகின்றன.  மக்கள் எப்போதும் மத அல்லது இன உணர்வு கொண்ட முட்டாள்களாக இருக்க மாட்டார்கள்.

- கலையரசன் -
  9-9-2018


மேலதிக தகவல்களுக்கு:
Curfew in Iraq's Basra lifted as calm returns 
 

Sunday, August 20, 2017

ஒரு முதலாளித்துவ நாட்டில் முற்றுப்பெறாத சோஷலிசத்திற்கான போராட்டம்


வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ள் மூல‌மே தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து உரிமைக‌ளை பெற்றுக் கொள்ள‌ முடியும். நான் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தில் வசிப்பதாலும், அந்நாட்டின் வரலாறு படித்திருப்பதாலும், அங்கு நடந்த உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நெதர்லாந்து வரலாற்றில், முதன்முறையாக 1823 ம் ஆண்டு கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அது, வேலைநிறுத்தம், தொழிற்சங்கம் போன்றன தடைசெய்யப்பட்டிருந்த  காலகட்டம். அதனால் வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு பகிரங்கமாக சவுக்கடி தண்டனை கொடுக்கப் பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேலைநிறுத்தம் செய்வதால் தொழிலாளர்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. சம்பளம் கிடைக்காதது மட்டுமல்லாது, வேலை பறிபோகும் அபாயம் இருந்தது. அத்துடன் வேறெந்த முதலாளியும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப் போவதில்லை.அரச உதவி எதுவும் கிடைக்காத காலத்தில், குடும்பம் முழுவதும் பட்டினி கிடந்தது வாட வேண்டிய கட்டாயம் இருந்தது.

வைரக் கல் பட்டை தீட்டும் தொழில் செய்த கைவினைஞர்கள் மத்தியில் வலுவான தொழிற்சங்கம் இருந்தது. தொழிலாளர் நலன்களுக்காக உருவான (மார்க்சிய) சமூக ஜனநாயகக் கட்சி (SDP), அதனை முன்மாதிரியாகக் கொண்டு தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் அமைத்தது. அதனால், ஒரு தொழிலகத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் பொழுது, அவர்களுக்கான வாழ்க்கை செலவுகளை ஈடுகட்ட முடிந்தது. 

ஐரோப்பாவில் தோன்றிய மார்க்சிய சமூக ஜனநாயகக் கட்சிகள், ஆரம்ப காலத்தில் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்தன. அதனால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர் மத்தியில் கருத்தொற்றுமை நிலவியது. சகோதர உணர்வு ஏற்பட்டிருந்தது. 

முதலாம் உலகப்போருக்கு முன்னர் பாட்டாளிவர்க்க சர்வதேசிய உணர்வு மிகவும் தீவிரமாக இருந்தது.அதனால், ஐரோப்பிய அரசுகள் தேசிய உணர்வை தூண்டி விட்டுக் கொண்டிருந்தன. அது பேரழிவு தந்த உலகப்போருக்கு இட்டுச் சென்றது.

1889 ம் ஆண்டு, ல‌ண்ட‌ன் துறைமுக‌த் தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். போராட்ட‌ முடிவில், துறைமுக‌ முத‌லாளிக‌ள் இற‌ங்கி வ‌ந்து கோரிக்கைக‌ளை ஏற்றுக் கொண்ட‌ன‌ர். வேலைநேர‌த்தை குறைக்க‌வும், ச‌ம்ப‌ள‌த்தை கூட்ட‌வும் ச‌ம்ம‌தித்த‌ன‌ர். முத‌லாளிக‌ள் தொழிலாள‌ர்க‌ளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் எவ்வாறு உருவான‌து?

ல‌ண்ட‌ன் துறைமுக‌த்தில் வேலைநிறுத்த‌ம் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ நேர‌ம், இங்கிலாந்து முத‌லாளிக‌ள் த‌ம‌து க‌ப்ப‌ல்க‌ளை, ரொட்ட‌ர்டாம் துறைமுக‌த்திற்கு அனுப்பினார்க‌ள். ல‌ண்ட‌ன் வேலைநிறுத்த‌ம் ப‌ற்றிக் கேள்விப்ப‌ட்ட‌ ரொட்ட‌ர்டாம் தொழிலாள‌ர்க‌ள், பொருட்க‌ளை இற‌க்கி ஏற்ற‌ ம‌றுத்து விட்ட‌ன‌ர்.

இந்த‌ ச‌ர்வ‌தேச‌ ஒருமைப்பாடு அத்துட‌ன் நின்று விட‌வில்லை. ல‌ண்ட‌ன் தொழிற்ச‌ங்க‌த் த‌லைவ‌ர்க‌ள் ரொட்ட‌ர்டாம் துறைமுக‌த்திற்கு வ‌ந்த‌ன‌ர். எவ்வாறு போராட வேண்டும் என்று ட‌ச்சுத் தொழிலாள‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடுத்த‌ன‌ர்.

இந்த‌த் த‌ட‌வை ரொட்ட‌ர்டாம் தொழிலாள‌ரின் முறை. அவ‌ர்க‌ளும் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். வேலை நேர‌த்தை குறைக்குமாறும், ச‌ம்ப‌ள‌த்தை கூட்டுமாறும் கோரிக்கை வைத்த‌ன‌ர். அர‌சு பொலிஸ் அனுப்பி வேலைநிறுத்த‌த்தை த‌டுக்க‌ப் பார்த்த‌து. தொழிலாள‌ர்க‌ள் பாதுகாப்பு அர‌ண் அமைத்து எதிர்த்து நின்ற‌ன‌ர். அங்கு ந‌ட‌ந்த‌ மோத‌லில் சில‌ருக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து.

இறுதியில் துறைமுக‌ முத‌லாளிக‌ள் இற‌ங்கி வ‌ந்த‌ன‌ர். தொழிலாள‌ரின் கோரிக்கைக‌ளை நிறைவேற்ற‌ ச‌ம்ம‌தித்த‌னர். இவ்வாறு க‌டுமையான‌ போராட்ட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் தான் ஐரோப்பிய‌ தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து உரிமைக‌ளைப் பெற்றுக் கொண்ட‌ன‌ர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அதிலும் துருக்கிப் பெண்கள் வேலை நிறுத்தம் செய்த வரலாறு நெதர்லாந்தில் நடந்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பொருளாதாரம் வளர்ந்தது. உள்நாட்டு தொழிலாளருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், துருக்கி, மொரோக்கோ ஆகிய நாடுகளில் இருந்து மலிவான ஒப்பந்தக் கூலிகளை இறக்குமதி செய்தனர்.

முதலாளிகள் அவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து, உழைப்பை சுரண்டி வந்தனர். தற்போது வளைகுடா அரபு நாடுகளில், தெற்காசியத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதே மாதிரித் அன்றைய ஐரோப்பாவிலும் நடந்து கொண்டிருந்தது.

அல்மேலோ நகரில் அமைந்திருந்த B.J.ten Dam என்ற தொழிற்சாலையின் உரிமையாளர் துருக்கிப் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தார். கோழி இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்த பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப் பட்டனர்.

அந்தப் பெண் தொழிலாளர்கள் வாரத்திற்கு அறுபது மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். நெதர்லாந்தின் அடிபப்டை சம்பளத்தை விடக் குறைவாக கொடுக்கப் பட்டது. அத்துடன், விடுமுறை இல்லை. சுகயீன விடுப்பு எடுத்தால் சம்பளம் கிடையாது.

அவர்கள் FNV என்ற தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த பின்னர் தான் நிலைமை மாறியது. 1978 ம் ஆண்டு, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக நியாயமான ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு போன்றவற்றை பெற்றுக் கொண்டனர். போராடாமல் எதுவும் கிடைக்காது.

நெத‌ர்லாந்தில் இதுவ‌ரை கால‌மும் ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ளை ஒருவ‌ர் ஆய்வு செய்துள்ளார். ஷாக் வ‌ன் டெர் வெல்ட‌ன் (Sjaak van der Velden) ஒரு முன்னாள்‌ ம‌ர‌வேலைத் தொழிலாளி. த‌ற்போது ம‌துபான‌சாலை ந‌ட‌த்துகிறார். அவ‌ரிட‌ம் எடுக்க‌ப் ப‌ட்ட‌ தொலைக்காட்சி பேட்டியில் இருந்து:

கேள்வி: க‌ட‌ந்த‌ 150 வ‌ருட‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ளால் கிடைத்த‌ ப‌ய‌ன்க‌ள் என்ன‌?

ப‌தில்: ஏராள‌ம் உள்ள‌ன‌. வேலைநிறுத்த‌ங்க‌ள் ந‌ட‌ந்திரா விட்டால், இன்றுள்ள‌ வாழ்க்கை வ‌ச‌திக‌ளை நாங்க‌ள் அனுப‌வித்திருக்க‌ முடியாது.

நெத‌ர்லாந்தில், க‌ட‌ந்த‌ 150 வ‌ருட‌ங்க‌ளில் 15000 வேலைநிறுத்த‌ங்க‌ள் இட‌ம்பெற்றுள்ள‌ன‌. அவ‌ற்றில் பெரும்பாலான‌வை 20ம் நூற்றாண்டில் ந‌ட‌ந்துள்ள‌ன‌.

4000 வேலைநிறுத்த‌ங்க‌ள் எதிர்பார்த்த‌ வெற்றிக‌ளை த‌ந்துள்ள‌ன‌. 3500 வேலைநிறுத்த‌ங்க‌ள் இறுதியில் முத‌லாளிக‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌ ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ வைத்த‌ன‌.

வேலைநிறுத்த‌ம் செய்வதால் ந‌ன்மை உண்டாகின்ற‌து என்ப‌தை வ‌ர‌லாறு நிரூபித்துள்ள‌து. வேலையை இடை நிறுத்துவ‌து அல்ல‌ இங்கே முக்கிய‌ம். தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து ச‌க்தியை உண‌ர்ந்து கொள்வ‌தும், ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ரும் போது ப‌ல‌த்தைக் காட்டுவ‌துமே முக்கிய‌ம்.

மேற்கு ஐரோப்பாவில், இரண்டாம் உலகப்போருக்கு முன்னரும், பின்னருமான நிலைமை இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கது. போருக்கு முன்னர் வர்க்கப் போராட்டம் மூர்க்கமாக நடந்து கொண்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியில் பல குறைபாடுகள் இருந்தாலும், அது தொழிலாளர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதாக காட்டிக் கொண்டது. அதன் தலைவர்கள், முதலாம் உலகப்போர் காலத்திலேயே விலைக்கு வாங்கப் பட்டு விட்டனர். இருப்பினும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களை தடுக்கவில்லை.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து கொண்டதுடன் மட்டுமல்லாது, முதலாளித்துவ அரச இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த சம்பவங்களை ஓர் உதாரணமாக எடுத்துப் பார்க்கவும். இப்படித் தான் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

1940 ம் ஆண்டு, நெதர்லாந்து நாஸி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டது. நாஸி ஆக்கிரமிப்பாளர்கள் நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியை (CPN) தடை செய்தனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியை (SDAP) தம்முடன் சேர்ந்து வேலை செய்ய வருமாறு அழைத்தனர். தாங்கள் "இடதுசாரிகளும் அல்ல, வலதுசாரிகளும் அல்ல, தேசப் பற்றாளர்கள்..." என்று நாஸிகள் சொல்லிக் கொண்டனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியினர் சேர்ந்து வேலை செய்ய மறுத்து விட்டனர். அதனால் அந்தக் கட்சியும் தடை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே SDAP இயங்குவதை நிறுத்திக் கொண்டது.

நாஸிகள் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்த யூதர்களை கைது செய்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பும் வேலையை ஆரம்பித்தனர். அப்போது எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ஒட்டுமொத்த ஆம்ஸ்டர்டாம் நகரமும் வேலைநிறுத்தம் செய்தது. அதற்குப் பின்னணியில் நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள்.

நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடொன்றில் நடந்த முதலாவது வேலைநிறுத்தப் போராட்டம் அது தான். முதல் நாள் செய்வதறியாது திகைத்து நின்ற நாஸிகள், அடுத்தநாள் அடக்குமுறையை ஏவி விட்டனர். டச்சு தொழிற்சங்க தலைவர்கள், கம்யூனிஸ்டுகள் கைதுசெய்யப் பட்டு, ஆஸ்திரியாவில் இருந்த தடுப்பு முகாமுக்கு அனுப்பப் பட்டனர். குறைந்தது அரைவாசிப் பேராவது அங்கிருந்து மீளவில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், நெதர்லாந்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டுகளுக்கு பெருமளவு ஆதரவு இருந்தது. பெரும்பான்மையான நெதர்லாந்து பிரஜைகள் கம்யூனிஸ்டுகளை உண்மையான நாட்டுப் பற்றாளர்களாக பார்த்தனர். நாஸி ஆக்கிரமிப்புக் காலத்தில், அரச குடும்பமும், பிற கட்சிகளின் தலைவர்களும் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடி விட்டனர். ஆனால் விடுதலைக்குப் பின்னர் அவர்களது கையில் தான் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது!

முன்னாள் SDAP கட்சியினரும், கிறிஸ்தவ கட்சி ஒன்றும் சேர்ந்து, புதிய சமூக ஜனநாயகக் கட்சியான தொழிற்கட்சி (PvdA) உருவானது. அதன் தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மறுத்தனர். அதற்குப் பதிலாக லிபரல் கட்சிகளுடன் கூட்டு வைத்தனர்.  இந்த "இடது - வலது கூட்டரசாங்கம்" இன்று வரை தொடர்கின்றது.

1955 - 1959 காலப் பகுதியில், சமூக ஜனநாயகவாதிகளின் நீண்ட கால சோஷலிசக் கோரிக்கைகள், "நலன்புரி அரசு" என்ற பெயரில் அமுல்படுத்தப் பட்டன. உதாரணத்திற்கு, அனைவருக்கும் ஓய்வூதியம், மணமுறிவு பெற்ற தாய்மார், வேலையற்றோர், நிரந்தர நோயாளிகளுக்கான அரச கொடுப்பனவுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். பாராளுமன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளும் இந்த மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்தன. கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கட்சியான SGP மட்டும், "அபாயகரமான அரசு சோஷலிசம்" என்று கூறி எதிர்த்தது.

அதே காலகட்டத்தில் (1955), ஆம்ஸ்டர்டாம் நகரில் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அரசால் அங்கீகரிக்கப் படாத கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் அவர்களது போராட்டத்தை ஆதரித்தது. அந்தப் போராட்டத்தை பொது மக்களும் ஆதரித்தமை குறிப்பிடத் தக்கது. அரசு கருங்காலி சாரதிகளை கொண்டு சில டிராம் வண்டிகளை ஒட்டிய போதிலும், பொது மக்கள் அவற்றில் ஏற மறுத்தனர்.

ஆம்ஸ்டர்டாம் நகரின் பொதுப்போக்குவரத்து துறை ஓர் அரச நிறுவனம் ஆகும். அப்போது ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி, "வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதம்" என்றது! "தற்போதுள்ளது ஒரு புதிய சகாப்தம். முன்பிருந்த வர்க்கப் போராட்டம் மறைந்து, வர்க்க சமரசம் உருவாகி உள்ளது. அப்படியான நிலைமையில் வேலைநிறுத்தம் செய்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல..." என்று வாதிட்டது.

போருக்கு முன்னர் அடக்குமுறை அரசுக்கு எதிராக போராடிய அதே சமூக ஜனநாயகவாதிகள், தற்போது தாமே அடக்குமுறை அரசாக மாறி இருந்தனர். வேலைநிறுத்தப் போராட்டத்தை அடக்குவதற்காக பொலிஸ் படையை ஏவி விட்டனர். வேலைநிறுத்தம் செய்த குற்றத்திற்காக, ஆயிரக் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்ற தடைச்சட்டம், முப்பதுகளில் இருந்த முதலாளித்துவ அடக்குமுறை அரசினால் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். அப்போது அதற்கு எதிராகப் போராடிய சமூக ஜனநாயகவாதிகள், பின்னர் அதே சட்டத்தைக் காட்டி அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்! அதற்கு அவர்கள் கூறிய ஒரே காரணம்: "வர்க்கங்களுக்கு இடையில் நல்லிணக்கம் பேணப்பட வேண்டும்! நீங்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தம் செய்தால், கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து தேசத்துரோகக் குற்றம் புரிகிறீர்கள்!! உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், ஜனநாயகத்திற்கும் துரோகம் செய்கிறீர்கள்!!!" என்றது அன்றைய சமூகஜனநாயக அரசாங்கம்.

முன்னொரு காலத்தில் போராட்டக் குணாம்சம் கொண்டதாக இருந்த சோஷலிச தொழிற்சங்கமும் (NVV: தற்போது FNV) அரசுடன் ஒத்துழைக்கத் தொடங்கியது. நலன்புரி அரசு என்ற பெயரில் முதலாளிகளுடனும், அரசுடனும் சேர்ந்து கூட்டு ஒப்பந்தங்கள் போடுவதில் பங்கெடுத்தது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில், சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவதில்லை என்ற நிபந்தனைக்கு தொழிற்சங்க தலைவர்கள் சம்மதித்தனர்.

அன்றிலிருந்து இன்றுவரை, இந்தத் துரோகம் தொடர்கதையாக உள்ளது. அண்மைக்காலமாக, அரசு கொண்டு வரும் சிக்கனப் பொருளாதார திட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றன. ஆனால், சமூக ஜனநாயக் கட்சியினரும், தொழிற்சங்கமும் அதற்கு ஒப்புதல் வழங்கி வருகின்றனர்.

Tuesday, September 06, 2016

சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிறுத்தப் போராட்டம்

2 செப்டம்பர் 2016, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக பெருந்தொகையான உழைப்பாளிகள் கலந்து கொண்ட மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. 

இந்தியா முழுவதும் நடந்த வேலைநிறுத்தத்தில், தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு செய்தனர். உலக சனத்தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நாடென்பதால், பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் இதுவாக இருக்க வேண்டும். (The Labour Story that Big Media is Not Telling You; http://thewire.in/63622/labour-trade-unions-strike/
நரேந்திர மோடியின் அரசு, வெளிநாட்டு முதலீடுகளை கவரும் நோக்கில் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதனால் தமது வேலை பறிபோகும் என்று இந்தியத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். சம்பள உயர்வு தொடர்பாக, அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்தது. அதற்குப் பிறகு தான், தொழிற்சங்கங்கள் கூட்டாக வேலைநிறுத்த அறிவிப்பு விடுத்தன. கடைசி நேரத்தில், வேலைநிறுத்தத்தை கைவிடச் செய்வதற்காக, அரசு மிகக் குறைந்த தொகை சம்பளம் கூட்டுவதற்கு முன்வந்தது. ஆனால், தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒபாமாவின் நாய்க்குட்டி சுகவீனமுற்றாலும் தலைப்புச் செய்தியாக வெளியிடும் சர்வதேச ஊடகம் எதுவும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி அறிவிக்கவில்லை. உலகில் சிறந்த ஜனநாயக நாடான அமெரிக்காவில், சொல்லி வைத்தால் போல் எல்லா ஊடகங்களும் மௌனம் சாதித்தன. CNN இன் சர்வதேச ஒளிபரப்பில் மட்டும் சில நிமிடங்கள் காட்டினார்கள். அமெரிக்காவில் யாரும் அதைப் பார்ப்பதில்லை. அதனால், இந்தியாவில் நடந்த வேலைநிறுத்தம் தெரியுமா? என்று யாரும் ஓர் அமெரிக்கரைப் பிடித்துக் கேட்டு விடாதீர்கள்.

உலகிற் சிறந்த ஜனநாயக நாட்டில் அப்படியொரு நிலைமை என்பதால், பிற உலக நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தெரிந்தாலும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருப்பார்கள். வெனிசுவேலா நாட்டின் Telesur தொலைக்காட்சி மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது. அதைத் தவிர, ஐரோப்பாவிலும் எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. அப்படியே சொன்னாலும் போனால் போகிறதென்று முக்கியத்துவம் குறைந்த செய்தியாக தெரிவித்தார்கள்.

அயல்நாடான இலங்கையில், தமிழ் ஊடகங்கள் எதுவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரச ஊடகம், தனியார் ஊடகம் எதுவானாலும் இந்த விடயத்தில் ஒன்று தான். 

இலங்கையில் வீரகேசரி, உதயன் ஆகிய பத்திரிகைகள் தனியார் நிறுவனங்களால் வெளியிடப் படுவதால், பெரும்பான்மையான தமிழ் வாசகர்களை கொண்டுள்ளன. ஆனால்,  இந்திய சுதந்திர தினத்திற்கு விசேட பதிப்பு வெளியிடும் வீரகேசரியும், தமிழ்த் தேசியர்களின் இதயகீதமான உதயனும், இந்திய வேலைநிறுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் தமது வலதுசாரி சுயரூபத்தையும், முதலாளிய விசுவாசத்தையும் இப்படியான தருணங்களில் வெளிப்படுத்த தயங்குவதில்லை. அது தானாம் நடுநிலைமை. 

இந்திய வேலைநிறுத்தம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், அதாவது ஆகஸ்ட் 30 அன்று, கொழும்பு நகரில் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. அதிலும் பெருந்தொகையான மாணவர்கள் கலந்து கொண்டதால், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. கூட்டத்தை கலைப்பதற்கு பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்து தடியடிப் பிரயோகம் செய்தது. தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவும், இலவசக் கல்விக்கு ஆதரவாகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? சொன்னால் வெட்கக்கேடு. நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். 

அதே நாளில், ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் யாழ் நகருக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது யுத்தகாலத்தில் காணாமல்போனவர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நூறு பேரளவில் இருக்கும். அன்று பலரை வரச் சொல்லிக் கேட்டதாகவும், நல்லூர்த் தேர்த் திருவிழா நடப்பதால் வர மறுத்து விட்டதாகவும் சமூகசேவகி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் செப். 2 பொது வேலைநிறுத்த‌ம், காட்டிக்கொடுக்கும் தொழிலாள‌ர் வ‌ர்க்க‌த் துரோகிக‌ளை க‌ல‌ங்க‌ வைத்துள்ள‌து. அன்று ப‌ல‌ர் வ‌க்கிர‌ங்க‌ளை கொட்டித் தீர்த்து த‌ம‌து கைக்கூலித் த‌ன‌த்தை வெளிப்ப‌டுத்தினார்கள்.

அண்மைக் கால‌ உல‌க‌ வ‌ர‌லாற்றில், ப‌ல‌ கோடி உழைப்பாளிக‌ள் ப‌ங்குப‌ற்றிய‌ வேலை நிறுத்த‌ப் போராட்ட‌ம் இந்தியாவில் ந‌ட‌ந்துள்ள‌து. ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ளே அத‌ன் முக்கிய‌த்துவ‌த்தை குறிப்பிட்டு பேசியுள்ள‌ன‌.

நிலைமை இப்ப‌டியிருக்கையில், த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ள் ம‌த்தியில் உள்ள‌, முத‌லாளிக‌ளுக்கு காட்டிக் கொடுக்கும் துரோகிக‌ள், வ‌ழ‌மை போல‌ எதிர்ப் பிர‌ச்சார‌ங்க‌ளை ந‌ட‌த்தின‌ர். உலகின் எந்த நாடாக இருந்தாலும்,வேலை நிறுத்தமானது தொழிற்சங்க நடவடிக்கையாகவே அறிவிக்கப் படுகின்றது. அந்த உண்மையை மறைத்த வலதுசாரிகள் வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர். 

"இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டம்...", "வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது...", "பொது மக்களுக்கு இடையூறு செய்யும் கம்யூனிஸ்டுகள்..." இது போன்ற வதந்திகளை பரப்பி விட்டனர். சமூக வலைத்தளங்களில் இந்து மதவெறியர்களும், வலதுசாரிகளும், அது போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் உழைக்கும் மக்களின் எதிரிகள் தாங்களே என வெளிப்படுத்திக் கொண்டனர்.

அமெரிக்கா சிக்காக்கோ ந‌க‌ரில் தொட‌ங்கிய‌ தொழிலாளர்க‌ளின் உரிமைப் போராட்ட‌ம், 21ம் நூற்றாண்டிலும் தொட‌ர்கின்ற‌து. அமெரிக்கா, ர‌ஷ்யா, பிரித்தானியா, என்று தொழிலாள‌ர் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ நாடுக‌ளில் எல்லாம், அதை ந‌க்க‌ல் அடித்த‌, எதிர்ப் பிர‌ச்சார‌ம் செய்து வ‌ந்த‌ துரோகிக‌ள் இருந்திருக்கிறார்க‌ள். அவர்க‌ள‌து வ‌ர்க்க‌த் துவேஷ‌ ம‌ர‌ப‌ணு, க‌ண்ட‌ம் க‌ட‌ந்து சில த‌மிழ‌ர்க‌ளுக்கும் க‌ட‌த்த‌ப் ப‌ட்டிருக்க‌லாம்.

Monday, June 06, 2016

ஐரோப்பாவில் வேலையற்றோர் நவீன அடிமைகளாக சுரண்டப் படுகின்றனர்!


மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள நலன்புரி அரசின் திட்டங்களில் ஒன்று, வேலையற்றவர்களுக்கும் அரசு உதவித் தொகை வழங்கப் படுவது. வேலையிழந்தவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட காலம், முன்பு அவர்கள் கட்டி வந்த காப்புறுதிப் பணத்தில் இருந்து மாதாந்த உதவித் தொகை வழங்குவார்கள். தொடர்ந்தும் வேலையில்லாமல் இருந்தால், அரசு நிதியில் இருந்து பணம் கொடுப்பார்கள்.

இதைப் பற்றிக் கேள்விப் படும் பலர், "வேலைக்குப் போகாமல் சும்மா இருந்து சாப்பிடுகிறார்கள்..." என்று நினைக்கலாம். ஆனால், உண்மை நிலைமை அதுவல்ல. நீண்ட காலம் உதவித் தொகை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கூடிய சீக்கிரமே ஏதாவதொரு வேலைக்கு அனுப்புவது தான் அரசின் நோக்கமாக இருக்கும். அதற்காக எல்லா வகையான முயற்சிகளையும் செய்வார்கள்.

அது மட்டுமல்ல, ஒருவரது முன்னைய தொழில் அனுபவம், கல்வித்தகைமை எப்படியானதாக இருந்தாலும் பரவாயில்லை. எந்த வேலையையும் ஏற்றுச் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் முன்பு மருத்துவராக அல்லது ஆசிரியராக வேலை செய்திருப்பார். அவருக்கு துப்பரவுப் பணி வேலை கிடைத்தாலும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாதாந்த உதவித்தொகை வெட்டப் படும்.

குறைந்தது பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்னரான நிலைமை வேறு. அந்தக் காலங்களில் தனியார் நிறுவனங்களை விட, ஏராளமான அரசு நிறுவனங்களும் இருந்தன. ஆகையினால், தனியார் நிறுவனத்தில் தட்டிக் கழிக்கப் பட்ட ஒருவருக்கு அரசு நிறுவனத்தில் வேலை கொடுக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், கடந்த காலத்தில் அரசு தனது நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டது அல்லது அரசு செலவினக் குறைப்பை சாட்டாக வைத்து மூடி விட்டது.

பாதுகாப்புப் படைகள், அரசு அலுவகங்களை தவிர, அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் திட்டம் மெல்ல மெல்ல செயற்படுத்தப் பட்டு வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து விட்டன. அதனால் வேலையற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. தற்போதுள்ள பிரச்சினை என்னவெனில், பொருளாதாரம் வளர்வதாக சொல்லப் பட்டாலும், சாதாரண பொதுமக்கள் அதை உணரக் கூடியதாகவில்லை. தனியார் துறை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறி விட்டது.

இதனால் ஒரு பக்கம் வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை குறையவில்லை. குறிப்பாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டோர், வெளிநாட்டவர்கள் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். எந்த முதலாளியும் அவர்களை வேலைக்கு எடுக்க தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில், அவர்கள் வருடக் கணக்காக அரசு உதவித் தொகையில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அரசு அவர்களை நவீன அடிமைகளாக பயன்படுத்திக் கொள்கின்றது!


நெதர்லாந்தில் நான் நேரில் கண்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

வேலையற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் பொறுப்பேற்றுள்ள நகர சபை நிர்வாகம், அவர்களுக்கு வேலை தேடிக் கொடுக்கும் முயற்சிகளில் இறங்குவதில்லை. (வேலை வாய்ப்பு இருந்தால் தானே?) அதற்குப் பதிலாக "வேலை பழகும் நிலையங்களுக்கு" அனுப்புகின்றது. இந்தத் திட்டத்தை மேம்போக்காக பார்த்தால் தொழிற்கல்வி போன்று தோற்றமளிக்கும். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல.

அதாவது, வேலை இல்லாதவர்கள் "தொழிற்கல்வி" படிப்பதற்கு பாடசாலைக்கு செல்கிறார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அங்கே எதையும் படிப்பதில்லை. மாறாக, வாரத்திற்கு 32 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் போடுவார்கள். அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் நீடிக்கலாம். ஆனால், நான் சந்தித்த சிலர் இரண்டு வருடங்களாக இலவச வேலை செய்கிறார்கள்.

"வேலை பயிலும் நிலையங்களிலும்" விருப்பமான தெரிவுகள் மிகவும் குறைவு. அனேகமாக, துப்பரவுப் பணி, உணவுச்சாலை (கேட்டரிங்) வேலை, தோட்ட வேலை, பொருள் உற்பத்தி போன்ற அடித்தட்டு தொழிலாளர்கள் செய்யும் வேலைகள் தான் கிடைக்கும். இதற்கு முன்னர் ஆசிரியராக, எஞ்சினியராக வேலை செய்திருந்தாலும், அவர் அடித்தட்டு தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.
கார்ட்டூன்: "தாழ்த்தப் படுதலுக்கு
அடங்கி வாழப்  பழகி விட்டோம்."

தொழிலகங்களுக்கு பொறுப்பாக ஒரு மனேஜர் இருப்பார். அவர் "வேலை பழகும் ஒப்பந்தம்" செய்வதவுடன் மறைந்து விடுவார். அதற்குப் பிறகு அவரைப் பிடிக்க முடியாது. ஏதாவது தேவைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தாலும் கிடைக்க மாட்டார். குறைந்தது இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தலைகாட்டுவார். 

ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்குவார். "தவறுகளை" திருத்திக் கொள்வதற்கு இன்னொரு மாதம் சந்தர்ப்பம் தருவதாகவும், அதற்குப் பின்னரே வெளியில் சம்பளத்துடன் கூடிய வேலைக்கு பரிந்துரை செய்வதாகவும் சொல்வார். ஆனால், எத்தனை மாதங்கள் சென்றாலும் அது மட்டும் நடக்காது. "ஒழுங்காக" வேலை செய்பவர்களுக்கும், அங்கே வேலை இருக்கிறது, இங்கே வேலை இருக்கிறது என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

தொழிலகங்களில் வேலையாட்களை மேற்பார்வை பார்ப்பதற்கு இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் இருப்பார்கள். உண்மையில் அங்கே அவர்கள் மட்டும் தான் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். ஏனையோர் எல்லோரும் இலவசமாக வேலை செய்யும் நவீன அடிமைகள்! ஒவ்வொரு வாரமும் புதிய புதிய அடிமைகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள். வேலைப்பளு, சுரண்டலை எதிர்க்க முடியாத கையாலாகத்தனம் காரணமாக, பலர் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுக்கின்றனர். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே வீட்டில் நிற்பதாக மனேஜர் குற்றம் சாட்டுவார்.

வேலையற்றவர்களின் உழைப்பை அரசு இலவசமாக சுரண்டுகின்றது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஒரு தடவை நான் பூந் தோட்டம் ஒன்றில் வேலை செய்தேன். கூடாரங்களுக்குள் பூஞ் செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும். வளர்ந்த செடிகளை கொண்டு சென்று சந்தையில் விற்பார்கள். கடைகளில் பூஞ்செடிகளை வாங்கிச் சென்று வீடுகளில் அழகிற்கு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அது அடிமைகளின் உழைப்பால் உருவானது என்ற உண்மை தெரியாது.

நான் இன்னொரு தடவை கேன்டீன் ஒன்றில் கேட்டரிங் வேலை செய்தேன். தினசரி காலையில் சான்ட்விச் தயாரிக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், அந்த உணவுச் சாலைக்கு மதியம் சாப்பிட வரும் அத்தனை பேரும் நகர சபைக்கு வேலை செய்யும் அரசு ஊழியர்கள்! நாங்கள் அங்கே சம்பளத்திற்கு வேலை செய்வதாக அவர்கள் அப்பாவித்தனமாக நினைக்கிறார்கள். ஏனென்றால், அங்கே வைக்கப் பட்டிருக்கும் சான்ட்விச்களை அவர்கள் சாதாரண சந்தை விலைக்கே வாங்கிச் செல்கிறார்கள்.

அது மட்டுமல்ல, அந்த இடத்தில் சில நேரம் ஒன்றுகூடல்கள் நடக்கும். பெரிய பெரிய அரசு அதிகாரிகள் அங்கே சாப்பிட வருவார்கள். அங்குள்ள மண்டபத்தில் கூட்டங்கள் நடக்கும். சிலநேரம், வெளியாரும் மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருப்பார்கள். அவர்கள் தமக்கான கேட்டரிங் சேவைக்கு பணம் கொடுக்கிறார்கள். அதுவும் சந்தை மதிப்பின் படியே தீர்மானிக்கப் படுகின்றது. ஒன்று கூடல், கூட்டங்களுக்கு ஐம்பது பேர் சமூகமளித்தாலும், அவர்களுக்கான உணவை நாங்கள், அதாவது நவீன அடிமைகள் தான் தயார் படுத்த வேண்டும்.

நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை என்றால், ஓய்வொழிச்சல் இல்லாத வேலையாக இருக்கும். அரை மணிநேர இடைவேளை உண்டு. அப்போது தான் சக தொழிலாளர்களுடன் (அடிமைகளுடன்) மனம் விட்டுப் பேசலாம். அங்குள்ள நிலைமை பற்றி யாரும் நல்லதாக பேச மாட்டார்கள். "கட்டாய வேலை வாங்குகிறார்கள்... உழைப்பை சுரண்டுகிறார்கள்...ஏமாற்றுகிறார்கள்..." இப்படிப் பல முறைப்பாடுகளை கேட்கலாம்.

கேட்டரிங் வேலை செய்பவர்களாக இருந்தாலும், விற்பனைக்கு வைக்கப் படும் சான்ட்விச் எதையும் எடுத்து சாப்பிட முடியாது. இறைச்சிப் பதார்த்தங்களை சாப்பிட முடியாது. விலை குறைந்த தரமற்ற பாண் (பிரெட்), பாவனை நாள் முடியும் நிலையில் உள்ள சீஸ், பால் இவற்றை மட்டும் உண்ணலாம்.

எல்லா தொழிலகங்களிலும், மதிய இடைவேளையின் போது மாத்திரம் தொலைபேசி பாவிக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒருவேளை வேலைக்கு விண்ணப்பித்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தால்? பிள்ளைக்கு சுகமில்லை என்று அழைப்பு வந்தால்? இந்தக் குறைகளை யாரிடம் சொல்வது? விதியை நொந்து கொள்ள வேண்டியது தான்.

மேற்படி கட்டுப்பாடுகள் எல்லாம், இலவசமாக உழைக்கும் நவீன அடிமைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அவர்களின் மேற்பார்வையாளர்கள், அதாவது சம்பளத்திற்கு வேலை செய்வோர், நிறைய சலுகைகளை அனுபவிப்பார்கள். அரை மணிநேரத்திற்கும் அதிகமாக, சிலநேரம் இரண்டு மணித்தியாலங்கள் உணவு இடைவேளை எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, காலையில் ஓரிரு மணிநேரம் வேலை செய்வதோடு சரி. அதற்குப் பிறகு அவர்களை காணக் கிடைக்காது. எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? யாருக்குத் தெரியும்?

இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஏன் அடிமை வேலை செய்ய வேண்டும்? வேறு வழி? தனியார் துறை தவறு செய்தால் அரசிடம் முறையிடலாம். அரசே அந்த தவறை செய்தால்? யாரிடம் முறையிடுவது? அதனால் பலர் இதனை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அது மட்டுமல்ல, கட்டாய வேலை செய்ய மறுத்தால், உதவித் தொகையை வெட்டி விடுவார்களே என்று அஞ்சுகிறார்கள். உண்மையில் அப்படியும் நடந்துள்ளது.

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக, அரச உதவித் தொகையில் தங்கி இருப்பவர்கள், அந்நாட்டின் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். மாதாந்தம் கிடைக்கும் சொற்பத் தொகை அன்றாட செலவுக்கே கட்டுப்படியாகாது. எப்படியும், வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு முக்கால்வாசி தொகை செலவாகிடும். அதையும் வெட்டிக் குறைத்தால் கடனாளியாக வேண்டியிருக்கும். தலைக்கு மேல் எவ்வளவு கடன் ஏறினாலும் அரசு அக்கறைப் படப் போவதில்லை. மீண்டும் கட்டாய வேலை வாங்கும் தொழிலகம் சென்று அவர்களது கட்டுப்பாடுகளுக்கு அடங்கி ஒழுங்காக வேலை செய்யச் சொல்வார்கள்.

உண்மையில் அரசால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். அவர்களுக்கு அடிப்படை சம்பளம் கொடுத்தாவது வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும். ஆனால் செய்யப் போவதில்லை. 

வேலையற்றோரின் உழைப்பை இலவசமாக சுரண்டுவதால், அரசுக்குக் கிடைக்கும் இலாபம் மிகவும் அதிகமாகும். உண்மையில், அரசு மில்லியன் கணக்கான யூரோக்களை அடிமை உழைப்பாளிகளிடம் இருந்து திருடியுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று ஆதாரங்களுடன் எழுதி உள்ளது. (பார்க்க: Gemeenten verdienen half miljoen aan 'dwangarbeid'http://www.gelderlander.nl/regio/achterhoek/aalten/gemeenten-verdienen-half-miljoen-aan-dwangarbeid-1.4879591

அடிமை உழைப்பாளிகளிடம் இருந்து சுரண்டப் பட்ட பணம் எங்கே போகின்றது? ஏன் அதில் ஒரு பகுதியாவது இலவசமாக உழைத்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப் படுவதில்லை?

தொழிலகங்களில் சம்பளம் இல்லாத தொழிலாளர்களை வைத்திருந்து, இலவசமாக உழைப்பை சுரண்டுவதால் இரண்டு தரப்பினர் பாதிக்கப் படுகின்றனர். ஒன்று, அடிமை வேலை செய்யும் நபர் சம்பளத்துடன் வேலை செய்யும் தொழில் வாய்ப்பை இழக்கிறார். மற்றது, அப்படி ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கவிருக்கும் இன்னொருவருக்கான வேலை வாய்ப்பு பறிக்கப் படுகின்றது. இதனால் நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லுமே தவிர குறையப் போவதில்லை.

சமீபத்தில் இந்தப் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துள்ள FNV என்ற தொழிற்சங்கம், பல முனைப் போராட்டங்களை நடத்தி வருகின்றது. கடதாசிப் பூக்கள் தயாரிக்கும் தொழிலகம் அமைந்துள்ள Aalten என்ற ஊரில் உள்ள நகர சபை அலுவகத்தினுள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். நகர சபைக்கு வெளியே, ஊடகவியலாளர்கள், ஊர் மக்களை கூட்டி, பொதுக் கூட்டம் நடத்தினார்கள். சோஷலிஸ்ட் கட்சி (SP) பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் (Sadet Karabult; https://twitter.com/sadetkarabulut?lang=nl) அங்கு வந்து உரையாற்றி, போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் உடன்...  

நானும் FNV தொழிற்சங்க உறுப்பினர் என்ற படியால், தொடர்ச்சியாக இது தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறேன். ஏற்கனவே நான் வழங்கிய பல தகவல்கள், அதாவது இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பவை, பாராளுமன்ற உறுப்பினர் சாடேத் காதுக்கு எட்டியுள்ளன. அவர் பாராளுமன்றத்தின் உள்ளே இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Wednesday, February 24, 2010

கிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது

மேலைத்தேய அரசியல் அகராதியில், "பால்கன் (Balkan ) நாடுகள்" என்பது ஏறக்குறைய கெட்ட வார்த்தை. தென்-கிழக்கு ஐரோப்பிய நாடுகளான, முன்னாள் யூகோஸ்லேவியா, அல்பேனியா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு இடையில் பொதுவான குணாம்சம் உள்ளது. லஞ்சம், ஊழல், தரம் குறைந்த நிர்வாகம், கிரிமினல் குழுக்கள், மாமூல் வாங்கும் போலிஸ்... சுருக்கமாக ஒரு மூன்றாம் உலக நாட்டிற்கான அத்தனை அம்சங்களும் கொண்டது. கிரீஸ் மட்டும் இதிலே விதிவிலக்கு என்று, எல்லோரும் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். பனிப்போர் காலத்தில், சுற்றியிருந்த சோஷலிச நாடுகளுக்கு மத்தியில் கிரீஸ் மட்டுமே முதலாளித்துவ பொருளாதாரத்தை கொண்டிருந்தது. இதனால் முன்னேறிய, அபிவிருத்தியடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக கிரீஸ் கருதப்பட்டது. இப்போது அந்த மாயத்திரை விலகி வருகின்றது.

கிரீஸ்: ஆரம்ப கால ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர். முதன் முதலில் 'ஐரோ' நாணயத்தை புழக்கத்தில் விட்ட நாடுகளில் ஒன்று. பணக்கார மேற்கு ஐரோப்பிய சமூகத்தை சேர்ந்த கிரீஸ் பொருளாதாரம் இன்று பாதாளத்தை நோக்கி சரிந்து செல்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அதி கூடிய அந்நிய நாட்டு கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றது. வெள்ளம் தலைக்கு மேலே போன பின்னர் தான், கடனில் மூழ்கிய கதைகளை சொல்கிறார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் இரு வருடங்களுக்கு முன்னரே கிரேக்க மக்களை பாதிக்கத் தொடங்கி விட்டன.

கிரீசில் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்வது சர்வசாதாரணம். மொத்த தேசிய உற்பத்தியில் 10 % பணம் இவ்வாறு பதுக்கப்படுகின்றது. அரச அலுவல்களை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது வாடிக்கை. 18 % பொது மக்கள் தாம் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டன. ஆனால் பணம் கட்டவில்லை. நிர்வாகம் போலியான கணக்குகளை காட்டி ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தது. பொருளாதார வளர்ச்சி, குறைந்த வட்டி விகிதம், ஐரோப்பாவின் தாராளமான நிதி ஒதுக்கீடு என்பன இந்த குறைகளை வெளியே தெரிய விடாமல் தடுத்தன. ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, பதினைந்து வருடங்களாக கணக்காளர்கள் பொய்களை புனைந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். இன்னும் எத்தனை வருடத்திற்கு இப்படி ஏமாற்றலாம்?


பதினைந்து வருடங்களாக புழுத்துப் போன பொருளாதாரத்தை மக்களுக்கு எப்படி மறைத்தார்கள்? எதற்காக பொதுத் தேர்தல் என்ற ஒன்று நடைபெறுகின்றது? வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி, இடதுசாரி சோஷலிசக் கட்சி, என்று இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆண்டு வந்தன. மக்கள் எப்போதும் இரண்டில் ஒன்றுக்கு தானே வாக்குப் போடுவார்கள்? ஜனநாயகக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, சோஷலிசக் கட்சி சில பொருளாதார சீர்திருத்தங்களை செய்யும். அடுத்த முறை அவர்களின் ஊழலை சுட்டிக் காட்டி ஜனநாயக் கட்சி ஆட்சியை பிடிக்கும். நிரந்தர ஏமாளிகளான மக்களும் தங்கள் வாக்குச் சீட்டுகளை வீணாக்கி விட்டு முழிப்பார்கள். கவனிக்கவும், கிரீசில் ஒருவர் கட்டாயமாக வாக்குப் போட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

20 ம் நூற்றாண்டுடன் மாபெரும் மக்கள் எழுச்சிகளும் விடைபெற்று விட்டன என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள். ஏதென்ஸ் நகரில் பற்றிய புரட்சித் தீ அதனைப் பொய்யாக்கியது. டிசம்பர் 2008 ல், பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானதை காரணமாக வைத்து, இளைஞர்கள் கொதித்து எழுந்தனர். ஒரு சில நாட்கள் ஏதென்ஸ் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமளவிற்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸ், எழுச்சி தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. தன் எழுச்சியாக தோன்றிய இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஆளும் வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியை தேர்தலில் தோற்கடித்தது.

கடந்த வருட பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிசக் கட்சியின் போதாத காலம். உள்ளுக்குள்ளே உக்கிப் போன கிரீஸ் பொருளாதாரத்தை பற்றிய உண்மைகள் யாவும் இப்போது தான் அம்பலமாகின்றன. கிரீஸ் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்பதால், பிற பலவீனமான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் சரியலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. கிரீசை அடுத்து போர்த்துக்கல் தலைக்கு மேல் ஏறிவிட்ட அந்நிய நாட்டு கடன்களை கண்டு அஞ்சுகின்றது. இதனால் இன்னும் அதிக நிதியை கிரீஸ் பொருளாதாரத்திற்குள் பாய்ச்சுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பணக்கார நாடான ஜெர்மனி கிரீசுக்கு கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான வட்டி எவ்வளவு? நிபந்தனைகள் என்ன? எதுவுமே வெளி வரவில்லை.


நிபந்தனைகளை பற்றி கிரீஸ் அரசு வெளியே சொல்லா விட்டாலும் மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். வயதானவர்களின் ஓய்வூதியப் பணம், ஊழியர்களின் சம்பளம், இவற்றைக் குறைத்து தானே கடனை அடைக்க வேண்டும்? இத்தகைய "பொருளாதார சீர்திருத்தங்கள்" நாடாளாவிய வேலை நிறுத்தங்களை தூண்டி விட்டன. பெப்ரவரி மாதம் சுங்க திணைக்கள ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளார்கள். அவர்களது வேலை நிறுத்தம் வாரக்கணக்காக நீடிப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் இழுத்து மூடி விட்டார்கள். எங்காவது பெட்ரோல் கிடைக்கிறது என்று தெரிந்தால், அங்கெல்லாம் மக்கள் முண்டியடித்துக் கொண்டு கேன்களில் நிரப்பிச் செல்கின்றனர்.

கிரீசில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்த "குற்றத்திற்காக", சின்னச்சிறு சைப்பிரசிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. "பெட்ரோல் நிலையங்களின் யூனியன்" தலைவரான Kiousis 85 % வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 'காய்ந்து' போய் விட்டதாக தெரிவிக்கிறார். நிதி அமைச்சின் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனுக்கு அடிமை சாசனத்தில் கையெழுத்திட்ட நிதி அமைச்சர் தனது அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதே நேரம் கிரீஸ் மீண்டும் இடதுசாரி தீவிரவாத இளைஞர்களின் விளையாட்டுத் திடலாக மாறி விட்டது. ஏதென்ஸ் நகரில் வழக்கமான வீதித் தடைச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் இருவரின் துப்பாக்கிகளை காரில் வந்தவர்கள் பறித்துச் சென்றார்கள். ஏதென்ஸ் நகருக்கு அருகில் உள்ள விரோனாஸ் நகரில் உள்ள வங்கியொன்று கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்த போலீசாருக்கும், கொள்ளையருக்கும் இடையில் சிறிது நேரம் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. வழிப்போக்கரான 18 மாத குழந்தையின் தந்தை ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு உயிரிழந்தார். இது மேலும் அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை கிளறி விட்டது. அன்றிரவு தொலைக்காட்சியில் தோன்றிய ஏதென்ஸ் போலிஸ் மாஅதிபர் Leuteris Oikonomou : "வெற்றிகரமான நடவடிக்கை" என்று தெரிவித்தார். ஏதென்ஸ் பொது மக்கள் போலீசாரை "ஆயுதமேந்திய மனநோயாளிகள்" என்று திட்டுவதை காணக் கூடியதாக இருந்தது. போலிஸ் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.

கிரேக்க அரசுக்கு பொருளாதார சீர்திருத்தத்தை சொல்லிக் கொடுக்கும் JP Morgan வங்கி தலைமை அலுவலகம் குண்டுவெடிப்பினால் சேதமானது. (Tuesday, February 16, 2010 ) குண்டு வைத்தவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்த படியால் எவரும் காயமடையவில்லை. இதற்கிடையே லாரிசா நகரில் ஊர்வலம் சென்ற பாசிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், இடதுசாரி இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அண்மையில் கிரீஸ் அரசு, இரண்டாம் தலைமுறை குடியேறிகளுக்கு பிரஜாவுரிமை கொடுக்க முன்வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாசிஸ்ட் கட்சி ஊர்வலம் ஒழுங்கு செய்திருந்தது. தெருச் சண்டையில் ஈடுபட்டதற்காக நான்கு இடதுசாரி இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்குமாறு கோரி, ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலிஸ் அனுமதி வழங்காததால், ஊர்வலமாக சென்ற இளைஞர்கள் வன்முறையில் இறங்கினர். வங்கி கட்டிடங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு பெரிய வணிக நிறுவனத்திற்கு சொந்தமான புத்தகக் கடை உடைக்கப்பட்டது. வழியால் போவோர் வருவோருக்கு எல்லாம் நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

(குறிப்பு: ஊடக நிறுவனங்களின் ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் வணிக ஊடகங்களில் செய்திகள் வருவதில்லை. கிரீசில் இருந்து ஆர்வலர்கள் அனுப்பும் இணையத் தகவல்களை தொகுத்து தந்துள்ளேன்.)

மேலதிக தகவல்களுக்கு:
Second Strike Paralyzes Greece
Bomb Explodes at Athens Offices of JPMorgan Chase