Showing posts with label எண்ணை. Show all posts
Showing posts with label எண்ணை. Show all posts

Sunday, September 09, 2018

ஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்


ஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் பொது மக்களால் முற்றுகையிடப் பட்டு தீக்கிரையாக்கப் பட்டன.


கடந்த ஐந்து நாட்களாக, ஈராக்கின் எண்ணை வளம் நிறைந்த பஸ்ரா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகள், வேலை வாய்ப்புகள் கோரியும் துறைமுகத் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் குதித்தனர். 

இரண்டு மில்லியன் மக்கட்தொகை கொண்ட பஸ்ரா நகருக்கு அருகில் உள்ள, அல்கசார் துறைமுகத்திற்கு செல்லும் பாதையில் தொழிலாளர் நடத்திய மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத அரசு, ஏவல் நாய்களான காவல்துறையை  ஏவி போராட்டத்தை அடக்கப் பார்த்தது. 

ஆரம்பத்தில், பொலிசார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டு, போராட்டக்காரரை கலைந்து செல்ல வைத்தனர். ஆனால், பொலிஸ் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஆர்ப்பாட்டக் காரர்கள் இடத்தை விட்டு நகரவில்லை. பல இடங்களில் மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இதேநேரம், பஸ்ரா நகர விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்த படியால் விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டது. விமான நிலையத்தின் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் ஐந்து கதூஷ்யா ஏவுகணைகள் வந்து விழுந்து வெடித்துள்ளன. இந்தத் தாக்குதலின் போது யாரும் பலியாகவில்லை, காயமடையவுமில்லை.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பொது மக்களின் ஆதரவைப் பெற்றதும் வன்முறைப் போராட்டமாக மாறியது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பஸ்ரா நகரும், அதை அண்டிய பகுதிகளிலும் குழாயில் வரும் தண்ணீர் மாசடைந்து காணப்படுவதாக பொது மக்கள் புகார் கூறி வந்தனர். 

அது மட்டுமல்லாது மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதால், கோடை காலத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினார்கள். அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத படியால், பொங்கி எழுந்த மக்கள் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தெருவுக்கு வந்து போராடினார்கள்.

அமைதியான வழியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் முடிந்தன. அரசின் பல வருட கால புறக்கணிப்பால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ரா நகரில் உள்ள அரச அலுவலகங்களை தாக்கி எரித்துள்ளனர். இதனால் அரச நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பதினாறு பேர் மரணமடைந்தனர். பலர் கைது செய்யப் பட்டு, தெருவில் இழுத்துச் செல்லப் பட்டனர்.

இதே நேரம், ஈராக் அரசுக்கு முண்டு கொடுக்கும் ஈரானின் தூதுவராலய கட்டிடமும் தாக்கி கொளுத்தப் பட்டது. இலங்கையில் இந்தியாவின் தலையீடு மாதிரி, ஈராக்கில் ஈரானின் தலையீடு அமைந்துள்ளது. ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஈராக் ஆட்சியாளர்களை விலைக்கு வாங்கி இருந்தது. 

இதனால் தமது ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு ஈரானும் பொறுப்பு என்று பொது மக்கள் கருதுகின்றனர். தமது தாய்நாடு ஈரானின் காலனியாவதை ஈராக்கிய மக்கள் விரும்பவில்லை. அதன் எதிரொலி தான் ஈரானிய தூதுவராலயம் கொளுத்தப் பட்ட சம்பவமும். 

ஈராக்கில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில், ஈராக்கி கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளன. அதனுடன் கூட்டுச் சேர்ந்த பிற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி, தேர்தல் காலத்தில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளன. அதாவது, ஈரானின் தலையீடு, ஊழலுக்கு எதிரான இயக்கமாக தமது தேர்தல் பரப்புரைகளில் கூறி வந்துள்ளனர். அதனால் தான் பெருமளவு வாக்காளர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு தெரிவு செய்துள்ளனர். 

மேலும் ஒரு பொதுவுடைமைக் கட்சியானது, அடிப்படையில் மதப் பிரிவுகளுக்கும், இன வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்ட கட்சியாகும். அதனால் தான் ஈராக்கி உழைக்கும் மக்களை இனம், மதம் கடந்து ஒன்றிணைக்க முடிந்துள்ளது. பிற இடதுசாரிக் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை பின்பற்றியதால் தேர்தலில் வெற்றி பெற்றன.

"சதாம் ஹுசைனின் சர்வாதிகாரத்தில் இருந்து ஈராக் மக்களை மீட்க வந்த" அமெரிக்கர்கள், எண்ணை வளம் நிறைந்த ஈராக்கை ஊழல் மலிந்த ஏழை நாடாக்கி விட்டுச் சென்றனர். கடந்த தசாப்த காலமாக, இஸ்லாமிய மத அடிப்படைவாதம், ஷியா- முஸ்லிம் தேசியவாதம் போன்ற கோட்பாடுகள் ஈராக் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரும் அந்த மதவாத சக்திகளை மறைமுகமாக ஊக்குவித்து வந்தனர்.

எதிரும் புதிருமான சுன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் ஒருவர் மற்றவரைக் கண்டால் கொன்று இரத்தம் குடிக்கும் அளவிற்கு வன்மம் பாராட்டினார்கள். இதன் விளைவுகளில் ஒன்று தான் பிற்காலத்தில் "டேஷ்" அல்லது "இஸ்லாமிய தேசம்(IS)" என அறியப் பட்ட ISIS இயக்கத்தின் தோற்றமும், அதைத் தொடர்ந்த யுத்தங்களும். 

இலங்கையில் "சிங்களவர்- தமிழர் இனப்பகை" மாதிரி, ஈராக்கில் "சுன்னி - ஷியா இனப்பகையை" உயிர்ப்புடன் வைத்திருப்பதே அமெரிக்கா மற்றும் ஈராக் அரசின் நோக்கமாக இருந்துள்ளது. "மக்களை பிரித்து வைத்தால் இலகுவாக ஆள்வது இலகு" என்பதே, உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலேயர் முதல் அமெரிக்கர் வரையில் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் மத்தியில் மத அடிப்படையிலான தேசியவாதமும் இருந்து வந்தது. ஷியாக்களின் தலைமையகமாக கருதப்படும் ஈரானும் பின்புலத்தில் இருந்து ஊக்குவித்து வந்தது. அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேறியதும், அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட ஈரானின் நேரடித் தலையீடு சகல துறைகளிலும் பல மடங்கு அதிகரித்தது.

அரசியலில் மட்டுமல்லாது, பொருளாதாரத்திலும் ஈரானிய தலையீட்டை நேரடியாக உணரக் கூடியதாக இருந்தது. ஈராக் கடைகளில் பெருமளவு ஈரானிய உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும்.  

இது போன்ற காரணங்களினால், ஈராக்கிய பொது மக்கள் ஈரான் மீது வெறுப்புற்று இருந்ததில் வியப்பில்லை. ஆனால், ஷியா சகோதர இனத்தின் மனமாற்றத்தை ஏற்க மறுக்கும் ஈரானிய அரசு, "அந்நிய சக்திகள் (ஷியா) இன ஒற்றுமையை குலைக்கின்றன" என்று அலறுகின்றது. 

அதாவது, ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை பின்பற்றும், ஈராக்கிய மக்களை "ஷியா - சுன்னி" என்று இன அடிப்படையில் பிரித்து வைப்பதில் தவறில்லையாம். ஆனால், அவர்கள் வர்க்க உணர்வு கொண்டு விட்டால், "ஐயகோ, இன ஒற்றுமையை குலைக்க சதி நடக்கிறது" என்று ஓலமிடுவார்கள். ஈரானிய அரசின் அரசியல் நிலைப்பாட்டைத் தான், நம்மூர் தமிழ்த் தேசியவாதிகளும் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் உழைக்கும் மக்களே! 
ஈராக்கிய சகோதரர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். மதவாதம், தேசியவாதம் பேசி, எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதற்கு, ஈராக் பொது வேலைநிறுத்த போராட்டம் ஒரு சிறந்த உதாரணம். மதம், தேசியத்திற்கு அப்பால், வர்க்க உணர்வு தான் மக்களை தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராட வைக்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவர்கள் மனதில் மதவாத, இனவாதக் கருத்துக்கள் விதைக்கப் படுகின்றன.  மக்கள் எப்போதும் மத அல்லது இன உணர்வு கொண்ட முட்டாள்களாக இருக்க மாட்டார்கள்.

- கலையரசன் -
  9-9-2018


மேலதிக தகவல்களுக்கு:
Curfew in Iraq's Basra lifted as calm returns 
 

Tuesday, May 15, 2018

ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்!

ஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள இந்த அறிவிப்பு, ஒரு சாமானிய இந்தியக் குடிமகன் மீதும் தாக்கத்தை உண்டாக்க வல்லது. அத்துடன் மத்திய கிழக்கில் வரப்போகும் போர்களுக்கு கட்டியம் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அதிக அக்கறை செலுத்தாத சர்வதேச அரசியல் நிலவரம், எந்தளவு தூரம் நமது தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.

டிரம்பின் திடீர் அறிவிப்புக்கு முதலில் எதிர்வினையாற்றியது பங்குச்சந்தை வர்த்தகம் தான். இதனால் எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் விளைவாக பெட்ரோல் மட்டுமல்லாது அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப் படவுள்ளன. ஏனெனில், 2015 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப் பட்ட பின்னர், ஆசிய நாடுகள் தான் ஈரானிய எண்ணையை வாங்கி வந்தன.

இலங்கையில் இரவோடிரவாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டார்கள். அமைச்சர் மங்கள சமரவீர, டெய்லி மிரர் பத்திரிகை பெட்டியில், விலை உயர்வுக்கு ஈரான் பிரச்சினையை காரணமாகக் காட்டி இருந்தார். இருப்பினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வதேச பிரச்சினைகளுக்கும் தொடர்பிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில், முதலாளிய "அரசியல் ஆய்வாளர்கள்" மிகவும் அவதானமாக உள்ளனர். அவர்கள் "மைத்திரி அரசா, மகிந்த அரசா சிறந்தது?" என்று பட்டிமன்றம் நடத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பினார்கள்.

உண்மையில், ஈரானுடனான அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் தனியே அமெரிக்காவுடன் மட்டும் கைச்சாத்திடப் படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து அணுவாயுத வல்லரசு நாடுகளுடன், ஜெர்மனியும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருந்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்,ஈரானின் பரம வைரிகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் ஆரம்பத்தில் இருந்தே ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தன. அன்றிருந்த ஒபாமா நிர்வாகம், கடும்போக்காளர்களை ஓரங் கட்டி விட்டு ஒப்பந்தம் போட்டது.

டிரம்பின் ஒருதலைப்பட்சமான விலகலை கடுமையாக ஆட்சேபித்துள்ள ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், முடிவை மறுபரிசீலனைக்கு எடுக்குமாறும், புதிய ஒப்பந்தம் போடுமாறும் கேட்டு வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் எதிர்ப்பதற்கு காரணம், அந்நாடுகளின் வர்த்தக நலன்கள் என்று அமெரிக்க ஆதரவாளர்கள் வாதாடலாம். உண்மை தான். யாருக்கு தான் நலன்கள் இல்லை? அமெரிக்கா பொதுநலன் கருதி, உலகை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் செயற்படுவதாக சொன்னால், அது நகைப்புக்குரியது.

முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம்.

ஒப்பந்த விலகலைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் படுவதாக அறிவித்துள்ள டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறுவதற்கு மூன்று மாத தவணை கொடுத்துள்ளது. இதனால், எண்ணை ஏற்றுமதி மட்டுமல்லாது, அலுமினியம், இரும்பு, நிலக்கரி தொடர்பான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப் படும். பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களுக்கான நிறுவனங்களுக்கு மட்டும் 180 நாட்கள் தவணை கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானுடனான அமெரிக்க வர்த்தகம் மிகவும் அரிது என்பதால், டிரம்பின் முடிவால் அமெரிக்க வர்த்தகர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை.

ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஈரானுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகளை பேணி வருகின்றன. அதனால், அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் ஐரோப்பாவும் பாதிக்கப் படுகின்றது என்பது நிச்சயம். உலக சந்தையில் அமெரிக்காவுடன் போட்டி போடுவது எந்தளவு கடினமானது என்பது ஐரோப்பிய முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்காவின் நிழல் கூடப் படாத ஈரானில், ஏராளமான வணிக வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன. ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள், அந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. இது அவர்களுக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பம். அதை இலகுவில் இழக்க விரும்ப மாட்டார்கள்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா ஈராக் போரைத் தொடர்ந்து, ஈரான் மீது போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஏற்கனவே, அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானை சுற்றி வளைத்திருந்தன. இருப்பினும், அமெரிக்கா ஆழமறியாமல் காலை விட விரும்பவில்லை. அதனால், அரை மனதுடன் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதன் விளைவு தான் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம். இதனால் ஈரான் மீண்டும் சுதந்திரமாக சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடிந்தது.

தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவுக்குப் பின்னால் இஸ்ரேலின் நெருக்குவாரம் உள்ளது. சிரியாப் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஈரான் இரகசியமாக அணுகுண்டு தயாரிப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அறிவித்து வந்தார். அந்த நேரத்தில், அதை வெறும் இஸ்ரேலிய பிரச்சாரமாகக் கருதி, யாரும் பொருட்படுத்தவில்லை.

ஈரானில் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதை கண்காணித்துக் கொண்டிருக்கும் IAEA என்ற சர்வதேச அணு சக்தி முகாமைத்துவ நிறுவனம் அதை மறுத்துள்ளது. ஏற்கனவே ஈரானிய அணு உலைகளில் இருந்த யுரேனியம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப் பட்டு விட்டது. ஐ.நா. மன்றம் வரை சென்று படம் காட்டி பயமுறுத்திய, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவின் குற்றச்சாட்டு எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறுப் பிரச்சாரம்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டை உலகில் யாரும் நம்பாவிட்டாலும், தான் அதை நம்புவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது, ஈரான் இரகசியமாக அணுவாயுதம் வைத்திருக்கிறது என்ற ஒரேயொரு காரணத்தை சொல்லித் தான், ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டுள்ளது. இது முன்பு சதாம் ஹுசைன் பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய் கூறி ஈராக் மீது படையெடுத்த வரலாற்றை நினைவுபடுத்துகிறது. இது மீண்டும் மத்திய கிழக்கின் மீது போர் மேகங்கள் சூளுகின்றன என்பதை உணர்த்துகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு ஈரானிய படையினர் வசமிருந்த ஆயுதக் கிடங்கு தாக்கப் பட்டதாகவும், சில ஈரானியரும் கொல்லப் பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிய அரசு அதை மறுத்திருந்தது. சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை அதுவே முதல் தடவை அல்ல. ஆகையினால், இந்தத் தடவையாவது இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானிய அரசியல் களத்தில் விவாதிக்கப் பட்டது.

கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த சிரியாவின் உள்நாட்டுப் போர் தற்போது பிராந்தியப் போராக மாறியுள்ளது. ஒருவேளை இது மூன்றாம் உலகப் போராகவும் இருக்கலாம். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே, அது ஈரானுக்கு வைக்கப் பட்டுள்ள குறி என்பது பலருக்கும் தெரிந்திருந்தது. குறிப்பாக, ஈரானிய இராணுவ ஆலோசகர்களும், லெபனானிய ஹிஸ்புல்லா தொண்டர்களும், சிரியாப் போரில் தலையிடுவதற்கு அதுவே காரணமாக இருந்தது.

போரின் முடிவில் சிரியாவை ஆளும் ஆசாத் அரசு கவிழும் என்றும், ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் வெற்றிவாகை சூடுவார்கள் என்றும், இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விடயங்கள் நடந்தேறின. ரஷ்யாவின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், கிளர்ச்சிக் குழுக்கள் தோற்கடிக்கப் பட்டு, இறுதியில் ஆசாத் அரசு வெற்றி வாகை சூடியது.

இஸ்ரேலின் அயல்நாடுகளில் சிரியா மட்டுமே இதுவரையில் எந்தவித சமரசமும் செய்யாமல் எதிரி நாடாக உள்ளது. அத்துடன், அது லெபனான் மீதும் செல்வாக்கு செலுத்தி வந்தது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பதும் சிரியா மட்டும் தான். இதனால், சிரியாப் பிரச்சினையை ஒரு வழியாக முடித்து விட்டால், ஈரானை தாக்குவது இலகுவாகி விடும் என்று இஸ்ரேல் கணக்குப் போட்டிருந்தது.

அமெரிக்காவால் எதிரி நாடுகளாக நடத்தப் படும் ஈரான் போன்ற நாடுகள், கடந்த கால உலக வரலாற்றில் இருந்து படிப்பினைகளை பெற்றுள்ளன. ஈராக், லிபியா என்று ஒவ்வொன்றாக தீர்த்துக் கட்டிய அமெரிக்கா, சிரியாவையும் பிடித்து விட்டால் எஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே. ஆகையினால், தனது சொந்த நலன் கருதியாவது, ஈரான் சிரியாப் போரில் தலையிட வேண்டி இருந்தது. ஆசாத் அரசை வெல்ல வைப்பதன் மூலம், சிரியாவை தொடர்ந்தும் ஈரானின் பாதுகாப்புக் கவசமாக வைத்திருக்கலாம்.

அதே நேரம், சிரியாவின் உள்நாட்டுப் போரானது, "ஜென்ம விரோதிகளான" இஸ்ரேலையும், ஈரானையும் அருகருகே கொண்டு வந்து விட்டுள்ளது. தனது வடக்கு எல்லையில் ஈரானியப் படைகள் நிலை கொண்டிருப்பதால், இஸ்ரேலுக்கு எந்நேரமும் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கும். சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், தனது பலமடைந்துள்ள சிரியாவின் அரச இராணுவம், எதிர்காலத்தில் கோலான் குன்றுப் பகுதியை மீட்கும் யுத்தத்தை தொடங்கலாம். அதை ஈரானும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு எல்லைப்போர் மூண்டால், வடக்கே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தலாம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, "கடைசி ஐரோப்பிய காலனியான" இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளை அடிபணிய வைக்கும் திட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. அயல்நாடுகளான ஜோர்டான், எகிப்து போன்றவற்றை போரில் தோற்கடித்து நட்பு நாடுகளாக்கி விட்டார்கள். இதுவரை காலமும் கள்ள உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, தற்போது பகிரங்கமாகவே இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. இவை அனைத்தும் சன்னி- இஸ்லாமிய பிரிவை பின்பற்றும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்கு மாறாக, ஷியா- இஸ்லாமிய பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள லெபனான், சிரியா ஆகிய நாடுகள் இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டுகின்றன. அதற்கு மூல காரணம், ஷியாக்களின் கோட்டையாக கருதப்படும், பிராந்திய வல்லரசாக வளர்ந்துள்ள ஈரான். ஆகவே, பொருளாதாரத் தடைகள், யுத்தங்கள் மூலம் ஈரானை பலவீனப் படுத்தி, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை கேள்வி கேட்கும் சக்தி படைத்த நாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஐரோப்பா மட்டுமல்லாது, ரஷ்யா, சீனா கூட, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அனுசரித்து போன காலம் ஒன்றிருந்தது. அத்தகைய காலகட்டத்தில், இஸ்ரேலுக்கு ஈரானை ஒடுக்குவது இலகுவாக இருந்திருக்கும். எதிர்பாராத விதமாக, சிரியாவின் உள்நாட்டுப் போரில் ரஷ்யா தலையிட்ட பின்னர் நிலைமை சிக்கலாகியுள்ளது.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டால், ரஷ்யா எந்தப் பக்கத்தை ஆதரிக்கும்? உண்மையில், இது ரஷ்யாவுக்கும் ஒரு நெருக்கடியான நிலைமை. இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன ஜார் மன்னன் என அழைக்கப் படும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் கோஷத்தின் கீழ் தான் சிரியாப் போரில் ஈடுபட்டார். இது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் வெளிவிவகார கொள்கையாக இருந்தது.

இருப்பினும், இஸ்ரேலில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ரஷ்யர்களை புட்டின் புறக்கணிக்க முடியாது. இலட்சக்கணக்கான ரஷ்ய யூதர்கள் மட்டுமல்லாது, பொருளாதார காரணங்களுக்காக குடியேறிய ரஷ்யர்களும் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலிய தேர்தல்களில் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு பலமான வாக்கு வங்கியாக உள்ளனர். பிரதமர் நெத்தன்யாகு இஸ்ரேலிய ரஷ்யர்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகின்றார். அதாவது, ரஷ்யா சென்று புட்டினை சந்தித்து பேசிய பொழுது, மேற்குறிப்பிட்ட பிரச்சினையை சுட்டிக் காட்ட மறக்கவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கை, ஈரானை ஆளும் ஆயத்துலாக்களின் கரங்களை பலப்படுத்தும். அமெரிக்காவுக்கு ஆதரவான லிபரல் முகாமை பலவீனப் படுத்தும். அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறி வரும் கடும்போக்காளர்களின் கரம் உயரும். "அமெரிக்கர்கள் அயோக்கியர்கள் என்றால், ஐரோப்பியர்கள் கோழைகள்" என்று ஈரானில் பேசிக் கொள்கின்றனர்.

ஈரான் இன்று வரையில், ஷியா இஸ்லாமிய மத அடிப்படைவாத கருத்தியலை அரச கொள்கையாக கொண்டுள்ள போதிலும், சவூதி அரேபியா போன்ற "இஸ்லாமிய" நாடுகளே அதன் பிரதானமான எதிரிகளாக உள்ளன. அதனால், ஈரான் தவிர்க்கவியலாது, "கிறிஸ்தவ" ரஷ்யாவுடனும், "நாஸ்திக" சீனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டியுள்ளது. அரசியல்- பொருளாதாரக் காரணங்களுக்காக உருவான இந்தக் கூட்டணி, மதத்திற்கு அப்பாலும் கவனிக்கப் பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றது.

- கலையரசன் 14-05-2018 ******

Monday, July 14, 2014

பாலஸ்தீன பிரச்சினையால் உலக பொருளாதார நெருக்கடி உண்டாகும்

பாலஸ்தீன பிரச்சினை, எந்தளவு தூரம் உலகப் பொருளாதாரத்தை, தங்களது சொந்த வாழ்க்கையையும் பாதிக்க வல்லது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.

அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எண்ணை தர மாட்டோம் என்று பகிஷ்கரிப்பு செய்தால் என்ன நடக்கும்? அது உலகம் முழுவதும், இது வரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும். அந்த நிலைமை ஏற்கனவே ஒரு தடவை ஏற்பட்டிருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள்.

1967 ம் ஆண்டு நடந்த போரில் தான் இஸ்ரேல் இன்றுள்ள பாலஸ்தீன பிரதேசங்களை (காஸா, மேற்குக் கரை) ஆக்கிரமித்தது. அத்துடன் நில்லாது, சிரியாவின் கோலான் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும் ஆக்கிரமித்தது.

1973 ம் ஆண்டு, ஆறு வருடங்களுக்கு முன்னர் தாம் இழந்த பிரதேசங்களை மீட்பதற்காக, சிரியாவும், எகிப்தும், இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. இஸ்ரேலில் அது யொம் கிப்பூர் யுத்தம் என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் போரிலும், அதற்கு முன்னரும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. உண்மையில் அமெரிக்க உதவி காரணமாகவே இஸ்ரேல் போர்களில் வென்று வந்தது. 

இதனால், இஸ்ரேலுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளை தண்டிப்பதற்காக, அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எண்ணை தர மறுத்து விட்டன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், எண்ணை ஏற்றுமதித் தடையால் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தன. அந்தக் காலங்களில் வீதிகளில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை.

எண்ணைத் தடையானது, பல மேற்கத்திய நாடுகளை, அமெரிக்காவின் மத்திய கிழக்கு நிலைப்பாட்டில் இருந்து விலக வைத்தது. நேட்டோ கூட்டமைப்பில், அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிச் சென்றன. எண்ணைத் தடை இன்னும் சில மாதங்கள் நீடித்து இருந்தால், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கும்.

உண்மையில், அன்றைய நெருக்கடி காரணமாக மேற்குலக நாடுகள் நேரடியாக பாதிக்கப் பட்டாலும், பிற உலக நாடுகளிலும் அது பல பொருளாதாரப் பிரச்சனைகளை உண்டாக்கியது. அன்றிருந்த சோவியத் எதிர் முகாம் இன்று இல்லை. உலகில் அனேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தங்கி உள்ளன. அப்படியான நிலையில், இன்று ஓர் எண்ணைத் தடை ஏற்பட்டால்? விளைவுகளை கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

அன்றைய காலங்களில், மத்திய கிழக்கு முழுவதும் முற்போக்கு அரபு தேசியவாதம் பிரபலமாக இருந்தது. எகிப்து, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள், அரபு தேசியவாதத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டின. தாங்கள் ஒன்று பட்டால், உலக வல்லரசான அமெரிக்காவை கூட காலடியில் விழ வைக்கலாம் என்று உணர்ந்து கொண்டன. சவூதி அரேபியா போன்ற பிற்போக்கான மன்னராட்சி நாடுகள் கூட, வேறு வழியின்றி அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், அரபு நாடுகளின் ஒற்றுமையை குலைப்பதற்காக அமெரிக்கா பல சூழ்ச்சிகளில் இறங்கியது.

உலகில் இனியொரு தடவை எண்ணைத் தடை வரக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பல திட்டங்களை வகுத்தது. அதில் முக்கியமானது இஸ்லாமியவாதம். எண்ணைத் தடை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்தது. சவூதி அரேபியாவின் கஜானா நிரம்பி வழிந்தது. உலகம் முழுவதும் கடும்போக்கு இஸ்லாமியவாத வளர்ப்பதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்துமாறு அமெரிக்காவே ஆலோசனை வழங்கியது. இன்று பல உலக நாடுகளில் அட்டகாசம் செய்யும் வகாபிச தீவிரவாதக் குழுக்கள் பல, அன்றைய சவூதி பெட்ரோலிய டாலரில் உருவாக்கப் பட்டவை தான்.

யாரை எப்படி வளைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வஞ்சகப் புகழ்ச்சியில் அமெரிக்கர்களை வெல்ல ஆள் கிடையாது. முன்னொரு காலத்தில் இந்தியாவை காலனிப் படுத்திய பிரிட்டிஷ்காரர்கள், "நீங்கள் ஆன்மீகத்தில் சிறந்த மதத்தை கொண்டிருக்கிறீர்கள்" என்று இந்துக்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். "முன்தோன்றிய மூத்த குடி உங்களுடையது" என்று தமிழர்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். அமெரிக்கர்களும் அதே வழியை பின் பற்றி, இஸ்லாமியர்களின் "மதப் பெருமைகளை" மீட்டுக் கொடுத்தார்கள். இன்று எல்லா அரபு நாடுகளிலும், நாசர் முன்மொழிந்த முற்போக்கு அரபு தேசியவாதம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டது.

பாலஸ்தீன பிரச்சினையை "முஸ்லிம்களின் பிரச்சினை" என்று மதவாத நோக்கில் பார்ப்பவர்கள் தான் அதிகம். முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும் அப்படியான கருத்துக்களை பரப்புவதற்கு, தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். "உலகில் இத்தனை முஸ்லிம் நாடுகள் இருந்தும், எதற்காக பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியவில்லை?" என்று சிலர் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படையில் அவர்களும் மதவாதிகள் தான். "உலகில் இத்தனை கிறிஸ்தவ நாடுகள் இருந்தும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்ற கேள்வியை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலஸ்தீனர்களில் குறைந்தது பத்து சத வீதமானோர் கிறிஸ்தவர்கள். அது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹெம் உட்பட, விவிலிய நூலில் கூறப்படும் பல இடங்கள் பாலஸ்தீனத்தில் உள்ளன. அந்த இடங்களில் இப்போதும் வாழும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் பாலஸ்தீன அரேபியர்கள். எதற்காக உலக கிறிஸ்தவர்கள் யாரும் தமது புனித பூமியை பாதுகாக்க முன்வரவில்லை? கிறிஸ்துவின் காலத்தில் இருந்து அங்கு வாழும் கிறிஸ்தவ- பாலஸ்தீனர்களை காப்பாற்ற முன் வரவில்லை?

ஒரு காலத்தில் பாலஸ்தீன இயக்கங்கள், ஈழ விடுதலை அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கின. அந்தக் காலங்களில், ஈழத்திற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் பேணப் பட்டு வந்தன. அந்த உண்மையை இன்றைக்கு பலர் மறந்து விட்டார்கள். சிலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களையும், தமிழர்களையும் ஒன்று சேர விடாது பிரித்து வைத்ததில், மொசாட், சிஐஏ உளவாளிகளின் பங்கு இருந்ததை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றதன் பின்னணியில், அந்நிய கைக்கூலிகளின் ஏகாதிபத்திய ஆதரவு பிரச்சாரமும் இருந்துள்ளது. அதன் மூலம் பல தசாப்தங்களாக, தமிழர்கள் பாலஸ்தீனத்தை பற்றி நினைக்க விடாது தடுத்து வந்தனர். பழைய தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப் பட்டு விட்டன.

இன்று பாலஸ்தீனத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. ஈழப்போர் குறித்த செய்திகளுக்கு மேற்கத்திய ஊடகங்களே ஆர்வம் காட்டாத நிலையில், அரபு ஊடகங்களை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. பாலஸ்தீனம் மட்டும் அல்ல, இஸ்ரேலில் வாழும் மக்களுக்கும் இலங்கையில் நடந்த போர் பற்றி எதுவும் தெரியாது. பெரும்பான்மையான இஸ்ரேலிய யூதர்களுக்கு, தமிழர்கள் என்ற இனம் உலகில் வாழும் உண்மை கூடத் தெரியாது. இந்த நிலைமையில், பாலஸ்தீனர்களை மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான யூதர்கள் 

Wednesday, April 29, 2009

நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 4

முதன் முதல் ஐரோப்பிய வெள்ளையரைக் கண்ட ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “நீலக் கண்களைக் கொண்ட, வெண்ணிற மேனியரைப் பார்த்த ஆப்பிரிக்கர்கள் கடவுள்கள் வந்து விட்டதாக நினைத்தார்கள்.” என்று ஐரோப்பிய மையவாத வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அதை அப்படியே நாமும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் கடவுள் என்ற கற்பிதமே, அந்தந்த பிரதேச மக்களின் பிம்பமாக இருப்பது யதார்த்தம். வெள்ளையரின் கடவுள் வெள்ளையாக இருந்தார். அதே போல கறுப்பர்களின் கடவுளும் கறுப்பாக இருந்ததை, இப்போதும் காணப்படும் ஆப்பிரிக்க மத சிற்பங்கள் நிரூபிக்கின்றன. ஆகவே “கடவுளைக் கண்ட வரலாறு” ஒரு ஐரோப்பிய மையவாத கட்டுக்கதை.

முதன்முதல் கறுப்பின ஆப்பிரிக்க மக்களை கண்ட ஐரோப்பியர்கள், அவர்களை மனிதக் குரங்குகளாக கருதினார்கள். அதே நேரம் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையின ஐரோப்பியரை பன்றி வகையை சேர்ந்த விசித்திர மிருகமாக கருதினர். ஐரோப்பியர்கள், பன்றியின் தோல் நிறத்தை ஒத்த, செந்நிற மேனியைக் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்கள் உடலில் இருந்து வந்த நாற்றமும் அப்படி நினைக்க வைத்தது. “வெள்ளையர்கள் புதைகுழிகளில் இருந்து எழுந்து வந்த ஆவிகள்” என்ற அறியாமை, வெள்ளைக்காரரை கண்டவுடன் கறுப்பின மக்களை பீதியடைந்து ஓட வைத்தது.

நைஜீரியாவில் கால் பதித்த ஐரோப்பியர்கள், வர்த்தக நிலையங்களை ஸ்தாபித்து, அடிமைகளை வேட்டையாடத் தொடங்கிய காலம், இன்னொரு வதந்தி பரவியது. ஒரு பக்கம் அடிமைகளைப் பிடித்து ஏற்றுமதி செய்து கொண்டே, மறு பக்கம் துணி விற்று வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் விற்ற துணியின் நிறம் சிவப்பாக இருந்தது. வெள்ளையர்கள் அடிமைகளை கொன்று இரத்தம் எடுத்து துணிகளுக்கு சாயமிடுவதாக கறுப்பர்கள் நம்பினார்கள். பெருந்தொகை அடிமைகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்த விபரங்களை 1857 ல் நைஜீரியாவிற்கு கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜோன் டெயிலர் என்ற பாதிரியார் எழுதி வைத்துள்ளார்.

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் 19 ம் நூற்றாண்டில் தான் ஆப்பிரிக்க கண்டத்தை காலனிப்படுத்த தொடங்கியதை முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதன் அர்த்தம், அது வரை ஐரோப்பியர்கள் எவரும் அந்தக் கண்டத்தில் கால் பதித்திருக்கவில்லை என்பதல்ல. ஐரோப்பிய வர்த்தகர்கள், மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையோரமாக சிறு நிலத்தை கையகப்படுத்தி, அங்கே கோட்டை கட்டி தமது தேசங்கடந்த வர்த்தக கழகத்தை நடத்தி வந்தனர். இதனால் இன்றும் பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைநகரங்கள் கடற்கரையோரமாக அமைந்துள்ளதைக் காணலாம். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள், உள்ளூர் கறுப்பர்கள் சிலரை தமது முகவர்களாக அமர்த்திக் கொண்டனர். அவர்களது வேலை, நாட்டின் உட்பகுதிக் கிராமங்களை சுற்றிவளைத்து, திடகாத்திரமான உழைக்கும் வயதில் உள்ள (ஆகவே சிறுவர்களும், வயோதிபர்களும் தேவையில்லை) ஆண்களையும், பெண்களையும் அடிமைகளாக பிடித்து வந்து விற்பது. நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இவ்வாறு அடிமைகளாக அமெரிக்கா அனுப்பப்பட்டு விட்டதால், ஒரு காலத்தில் அந்நாட்டின் மத்திய பகுதியில் இளமையான உழைப்பாளிகளைக் காண்பது அரிதாக இருந்தது. ஆப்பிரிக்க நாடுகள் அபிவிருத்தியில் பின்தங்கியமைக்கு இதுவும் ஒரு காரணம்.

நைஜீரியாவில் ஐரோப்பியர்கள் மட்டும் வந்து அடிமைகளை வாங்கிச் செல்லவில்லை. அரேபியருக்கு தேவைப்பட்ட அடிமைகளை அன்று வடக்கு நைஜீரியாவில் இருந்த “கானெம்” இராச்சியம் பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தது. (ஒரு முஸ்லீமை அடிமையாக வைத்திருக்க முடியாது என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது). துனிசியாவில் இருந்த சந்தையில் நைஜீரிய அடிமைகள் விற்கப்பட்டனர். அல்ஜீரியாவை பிரான்ஸ் கைப்பற்றிய பின்னர், கானெம் தேசத்திற்கு பெருமளவு வருமானம் ஈட்டித்தந்த அடிமை வர்த்தகம் நெருக்கடிக்கு உள்ளானது. அடிமை வியாபாரம் மட்டுமல்ல, சாயப்பட்டறை, தோல் பதனிடும் தொழிலகங்கள் போன்ற தொழிற்துறை வளர்ச்சியினால், அன்று வடக்கு நைஜீரியாவில் பல நகரங்கள் தோன்றி இருந்தன. இந்த நகரங்களை ஒரு (கறுப்பின) சுல்த்தான் தலைமையிலான அதிகார மையம் நிர்வகித்து வந்தது. “கானெம்” முழுக்க முழுக்க ஒரு கறுப்பின அரசாட்சியாக இருந்தது. 13 ம் நூற்றாண்டில் இன்றைய லிபியாவின் பகுதிகளை உள்ளடக்கிய, மாபெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. இஸ்லாமிய அரேபியருடன் ஏற்பட்ட வர்த்தக தொடர்புகளால், புலானி மற்றும் ஹவுசா இன மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய பின்பு, அந்த இராச்சியத்தை உருவாக்கி இருந்தனர். அன்றும் இன்றும் அந்தப் பிராந்தியத்தில் ஹவுசா மொழியே பொது மொழியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் இஸ்லாமிய மதராசாக்கள் சுதந்திரமாக இயங்கி வந்தன. இதனால் பெரும்பாலான நைஜீரிய முஸ்லீம்கள் ஆங்கில மொழிப் புலமை பெற்றிருக்கவில்லை. இது பின்னர் கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகளில், ஆங்கிலத்தில் கல்வி கற்ற தெற்கத்திய இனங்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது.

ஐரோப்பியர் வருவதற்கு முன்னர், ஆப்பிரிக்கர்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவமோ, அல்லது துப்பாக்கிகளோ இருக்கவில்லை என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இன்னொரு கட்டுக்கதையை பரப்பி வந்துள்ளனர். 1823 ல் டிக்சன் டென்ஹம் என்ற பிரயாணி, கானேம் இராச்சியத்திற்கு சென்று வந்த முதலாவது ஐரோப்பியராவார். தன்னை வரவேற்க வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆயுதந்தரித்த, சீருடையணிந்த, குதிரைவீரர்களை கண்டு திகைப்படைந்ததாக குறிப்பெழுதி வைத்துள்ளார். ஐந்நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த கானோ நகரத்திற்கு செல்பவர்கள், இப்போதும் குதிரைப்படையினரின் அணிவகுப்பை பார்வையிடலாம். கானெம் இராச்சிய இராணுவவீரர்கள் தாங்கியிருந்த துப்பாக்கிகள் அரேபியரின் தொடர்பால் கிடைக்கப்பெற்றவை. ஐரோப்பியர்கள் துப்பாக்கிகள், பீரங்கிகள் பற்றி அறிந்தே இருக்காத காலத்தில், அரேபியர்கள் அவற்றை போரில் திறமையாக பயன்படுத்தி உள்ளனர். 1500 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய கண்டத்தில் இருந்த, மிகப்பெரிய கிறிஸ்தவ நகரமான கொன்ஸ்டாண்டிநொபெல் (இஸ்தான்புல்) வீழ்ச்சிக்கு (அன்றைய) நவீன கண்டுபிடிப்பான சுடுகருவிகள் காரணமாக இருந்தன.

பிரிட்டிஷாரின் நைஜீரியாவிலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், இராணுவத்தில் முஸ்லீம் அதிகாரிகள் அதிகமாக காணப்பட்டமைக்கு, கானெம் இராச்சிய பாரம்பரியமே காரணம். பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சிக்காலம் தொடங்கிய போது, வடக்கே இருந்த இஸ்லாமிய தேசத்தை, தெற்கில் பல்வேறு இனங்களின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசங்களுடன் இணைத்து, நைஜீரியா என்ற புதிய நாட்டை உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் நைஜீரியாவினுள் 250 மொழிகளைப் பேசும் இனங்கள் அடங்கின. இன்று மொத்த சனத்தொகையில் 50 வீதமாக உள்ள நைஜீரிய முஸ்லீம்கள் மத்தியிலும் இன இனவேறுபாடு இருந்த போதிலும், இஸ்லாம் என்ற மதம் அவர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது. அதற்கு மாறாக தெற்கில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளால் அடிக்கடி வன்முறை வெடிக்கின்றது. ஒவ்வொரு இனமும் தனது இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதும் போக்கு உள்ளது. (மத முரண்பாடுகளைப் பற்றி பின்னர் பார்க்கலாம்) சுதந்திரத்திற்கு பின்னர் நைஜீரியாவின் அரசியல் அதிகாரம் இன/மத முரண்பாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றது.

ஜனநாயகத் தேர்தல்கள் நடைபெறும் காலங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் தமது இன வாக்குகளை பெறுவதிலேயே அதிக அக்கறை காட்டுவார்கள். அதனால் அரசியல்வாதிகளின் நலன்களுக்காக இனங்களுக்கிடையில் வன்முறைகள் தூண்டிவிடப்படும். அந்த உணர்ச்சி அலையை வைத்து அவர்கள் வாக்குகளை அறுவடை செய்வர். பணத்தை வாரியிறைத்து வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு வேட்டையாடுவதும், எதிர்க்கட்சிக்கு ஆதரவானவர்களை அடியாட்படையை ஏவி மிரட்டுவதும், குறிப்பிட்ட அரசியல்வாதியின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும். வாக்குச் சாவடியில் நின்று கொண்டு வாக்களிக்க வரும் மக்கள் எந்த வேட்பாளருக்கு போட வேண்டுமென்று அடாவடித்தனம் பண்ணுவது அங்கே சாதாரண நிகழ்வு. பணபலம், ஆட்பலம் இல்லாத வேட்பாளர் தேர்தலில் நிற்க முடியாது. பாராளுமன்றத்திற்கோ, அல்லது மாநில சட்டசபைகளுக்கோ தெரிவாகும் இந்த வேட்பாளர்கள் பதவிக்கு வந்தால் செய்யும் ஒரேயொரு வேலை, பொது மக்கள் சொத்தை கொள்ளையடிப்பது மட்டுமே. இதனால் நாட்டில் ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று அறிவித்து விட்டு, அடிக்கடி இராணுவ அதிகாரிகள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை பறிப்பார்கள். அப்போது கூட ஊழல் ஒழியாது என்பது மட்டுமல்ல, பகைமை கொண்ட இனத்தை சேர்ந்த வேறொரு அதிகாரி, அந்த இராணுவ சர்வாதிகாரியை ஒழித்து விட்டு ஆட்சியை கைப்பற்றுவார்.

தெற்கே யொரூபா இனமும், இக்போ இனமும் பெரும்பான்மையாக உள்ளன. நைஜீரியா சுதந்திரம் பெற்று சிலவருடங்களில், இக்போ இனத்தின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசத்தில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் தமது பகுதியை “பயாபிரா” என்ற தனி நாடாக அறிவித்தனர். உடனடியாகவே நைஜீரிய இராணுவம் பயாபிரா சுதந்திர பிரகடனத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. பிரிட்டனும், சோவியத் யூனியனும் நைஜீரிய இராணுவத்திற்கு பக்கபலமாக நின்ற போதிலும், பயாபிரா போராளிகள் ஓரிரு வருடங்கள் தாக்குப் பிடித்தனர். முற்றுகைக்குள்ளான பயாபிரா மக்களை பணிய வைக்கும் நோக்கில் நைஜீரியா அரசு, திடீரென தேசிய நாணயத்தின் நோட்டுகளை மாற்றியது. இதனால் ஏற்கனவே பொருளாதாரத்தடை இருந்த காரணத்தால், மக்கள் உணவின்றி பட்டினி கிடந்தது சாகும் அவலம் நேர்ந்தது. சுமார் அரை மில்லியன் மக்களாவது பட்டினியால் செத்தனர். அப்போது தான் முதன்முதலாக அமெரிக்க விளம்பர நிறுவனமொன்று, எலும்பும் தோலுமாக ஒட்டிய வயிறோடு இருக்கும் ஆப்பிரிக்க மக்களின் காட்சிகளை படம் பிடித்து உலக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது.

2000 ம் ஆண்டு, வட நைஜீரிய முஸ்லீம் மாநிலமொன்று ஷரியா சட்டம் கொண்டு வந்த போது, நைஜீரியா மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றது. ஷரியா சட்டத்திற்கு மேற்கத்திய நாடுகள் காட்டிய எதிர்ப்பை நைஜீரிய முஸ்லீம்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் தான் ஷரியா சட்டம் நடைமுறைக்கு வந்தது. இஸ்லாமிய மத நிறுவனங்களின் தூண்டுதல் இருந்த போதிலும், பெரும்பாலும் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவே இஸ்லாமிய மத சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது நைஜீரியாவில் தெற்கே குற்றச் செயல்கள் மலிந்த லாகோஸ் நகரிற்கு எதிர்மாறாக, வடக்கே ஓரளவு பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகின்றது. மேலும் சுதந்திரத்திற்குப் பின்னர் மேற்கத்திய கலாச்சார சீர்கேடுகள் விரைவாகப் பரவி வந்தன. மக்களின் மேற்கத்தியமயமாகலைத் தடுத்து, காலனிய காலத்திற்கு முந்திய இஸ்லாமிய கடந்த காலப் பெருமையை மீட்டெடுப்பதுவுமே, ஷரியா சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள். மேற்கத்திய எதிர்ப்பிற்கு, நைஜீரிய முஸ்லீம்கள், ஒசாமா பின் லாடன் படம் பொறித்த டி-ஷேர்ட்களை அணிந்து எதிர்வினையாற்றினர். இப்போதும் அங்கே ஒசாமா ஒரு மாபெரும் வீரனாக கொண்டாடப்படுகின்றார்.

நைஜீரிய சனத்தொகையில் கிறிஸ்தவர்கள் 50 வீதம் (புராதன ஆப்பிரிக்க மதங்களைப் பின்பற்றும் சிறு தொகை தவிர) இருக்கலாம். கடந்த பத்தாண்டுகளாகவே கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்குமிடயிலான உறவு சீர்கெட்டு வருகின்றது. சில நேரம் அற்ப விடயம் கூட கலவரங்களை தூண்டி விடுகின்றது. கலவரத்தில் இருதரப்பிலுமே நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். சொத்துகள் அழிக்கப்படுகின்றன. மேற்குலக நாட்டு ஊடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே கலவரத்திற்கு காரணம் என்று, ஒரு தலைப்பட்சமாக செய்தி அறிவிக்கின்றனர். உதாரணத்திற்கு, உலக அழகிப் போட்டியை காரணமாக வைத்து முஸ்லீம்கள் கலவரத்தை தொடங்கியது உண்மை. ஆனால் கலவரத் தீயை பற்ற வைப்பதில் கிறிஸ்தவர்களும் சளைத்தவர்கள் அல்லர். இரண்டு மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் உள்ளனர். சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாத நிறுவனங்களை நிதி கொடுத்து பராமரிக்கின்றன. அதே நேரம் அமெரிக்க கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், நைஜீரிய புரட்டஸ்தாந்து அல்லது பெந்தேகொஸ்தே சபைகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

பிரிட்டிஷ் காலனிய காலத்தில், அதாவது 19 ம் நூற்றாண்டில், அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டதால், விடுவிக்கப்பட்ட அடிமைகள் சிலர் கிறிஸ்தவ பாதிரிகளாக பயிற்றுவிக்கப்பட்டனர். தென் நைஜீரியாவில் ஆப்பிரிக்க மதங்களை பின்பற்றிய மக்களை, கிறிஸ்தவர்களாக மாற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நேரம் சில கறுப்பின பாதிரிகள், பிரிட்டிஷ் பொருட்களை நைஜீரியாவில் சந்தைப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளாகவும் செயற்பட்டனர். கத்தோலிக்க, அங்க்லிக்கன் மதப்பிரிவுகள் இவ்வாறு முதலாளித்துவத்துடன் கைகோர்த்துக் கொண்டு தான் நைஜீரியாவில் காலூன்றின. இதனால் இன்றைக்கும் மத நம்பிக்கையுடன், கூடவே வியாபார மனோபாவமும் பெரும்பாலான நைஜீரியர்களின் இரத்தத்தோடு ஊறியிருப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவின் திறமையான தொழிலதிபர்கள் பலர் நைஜீரியர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க, அங்க்லிக்கன் திருச்சபைகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் சில நைஜீரிய மக்களை சங்கடத்திற்குள்ளாக்குகின்றது. உதாரணத்திற்கு, பலதார மணம் அந் நாட்டில் காலங்காலமாக இருந்து வரும் வழக்கங்களில் ஒன்று. அரசாங்கம் ஒரு முறை இதை தடுக்க சட்டம் கொண்டு வந்த போது, எதிர்பாராவிதமாக பெண்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. அனேகமாக சமூகத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பணக்கார ஆண்களுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாவதனால் குடும்ப பாரத்தை குறைக்க முடிகின்றது, என்பது அவர்களது வாதம். வறுமை காரணமாக மேற்கத்திய நாடுகளை நோக்கி பயணம் செய்யும் பெண்கள், மாபியாக் குழுக்களால் விபச்சார அடிமைகளாக்கப்படுகின்றனர். ஒருபுறம் செல்வத்தை குவித்து வைத்துள்ள சிறுபான்மை பணக்கார வர்க்கம், மறுபுறம் அன்றாட உணவுக்கே வழியில்லாத பெரும்பான்மை ஏழை மக்கள். இந்த சமூக ஏற்றத்தாழ்வு பல பிரச்சினைகளின் தோற்றுவாயாக உள்ளது. இருப்பினும் அங்கே “வர்க்கப் பிரிவினை” என்ற சொற்பதம் யாராலும் பாவிக்கப்படுவதில்லை. அதற்கு மதம் ஒரு காரணம்.

“இவ்வுலக வாழ்வில் கஷ்டப்படுபவர்கள், இறந்த பின் சொர்க்கத்தில் செல்வந்தர்களாகலாம்” என்று போதிக்கும் கத்தோலிக்க மதத்தை விட்டு பலர் விலகி வருகின்றனர். அதிருப்தியாளர்களை பல்வேறு பெந்தெகொஸ்தெ சபைகள் சேர்த்து வருகின்றன. அமெரிக்க மூலதனத்தில் இயங்கும் அந்த சபைகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தாவது மக்களை கவர்கின்றன. ஆரம்பத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவுவதாக காட்டிக் கொள்ளும் சபைகள், உறுப்பினர்களை சேர்த்துக் கொண்ட பின்னர் வருமானத்தில் பத்து வீதம், அங்கத்துவ பணமாக செலுத்த வேண்டும் என வற்புறுத்துகின்றன. நைஜீரியாவில் பெந்தெகொஸ்தெ சபைகளின் பாதிரிகள் ஆடம்பர பங்களாவில் வசிப்பதும், சொகுசு காரில் பயணம் செய்வதும், பிள்ளைகளை அமெரிக்கா அனுப்பி படிக்க வைப்பதும் சர்வசாதாரணம்.

நைஜீரியா ஆப்பிரிக்காவின் எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. பெற்றோலியத்தை இலகுவில் பிரித்தெடுக்கக் கூடிய அளவு, நைஜீரிய எண்ணை தரமானது. நெதர்லாந்து அரச குடும்பத்தின் முதலீட்டில் இயங்கும் ஷெல் நிறுவனம், பெருமளவு நைஜீரிய எண்ணையை அகழ்ந்து சர்வதேச சந்தையில் விற்று வருகின்றது. ஒரு பகுதி லாபம் ஆளும் வர்க்கத்தின் பாக்கெட்டுக்குள் போவதால், பொது மக்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. மொத்த உற்பத்தியில் பத்து சதவிகிதம் உள் நாட்டு பாவனைக்கு ஒதுக்கப்பட்டாலும், அங்கே பற்றாக்குறை நிலவுகின்றது. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நேருவதும், அடிக்கடி விலை உயர்வதும், நைஜீரியா உண்மையிலேயே எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடா? என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கும். நம்பினால் நம்புங்கள். உள்ளூர் பாவனைக்கு தேவையான பெரும் பகுதி பெட்ரோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. மோசமான முகாமைத்துவத்தை கொண்ட எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், அயல்நாடுகளுக்கு கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்றல், போன்ற காரணங்களால் இந்த தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

ஊழல் பெருச்சாளிகளால் ஆளப்படும் நாட்டில் சட்டம், ஒழுங்கை எதிர்பார்ப்பது முயல்கொம்பை தேடுவதற்கு ஒப்பானது. பொறுத்துப் பொறுத்து பார்த்த மக்கள் சட்டத்தை தமது கைகளில் எடுத்தனர். எண்ணை குழாய்களை துளையிட்டு, எண்ணை திருட தொடங்கினர். அல்லது குழாய்களை சேதமாக்கி விட்டு, கம்பெனி ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து அவர்களை பிடித்து சிறை வைத்தனர். சில நேரம் இது போன்ற அழிவு வேளைகளில் சிக்கி பொது மக்கள் மரணமடைவதும் உண்டு. ஆயினும் அவர்களுக்கு பகாசுர எண்ணைக் கம்பெனிகளை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எண்ணை வளம் அவர்களது வாழ்க்கையை வளம் படுத்த செலவிடப்பட வேண்டும், என்ற நியாயமான கோரிக்கையே அவர்களது போராட்டம். சில தன்னிச்சையான ஆயுதக் குழுக்கள், எண்ணை கம்பெனி ஊழியர்களைக் கடத்தி, தமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வைத்தனர். கென் சரவீவ என்ற காந்தீய வழயில் போராடிய ஒருவர், நைஜீரிய பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச மன்னிப்புச் சபை நைஜீரிய பிரச்சினையை உலகறிய வைத்தது. இந்தக் கொலையில் ஷெல் நிறுவனமும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை, ஒரு பத்திரிகையாளர் பேட்டி கண்ட போது, “அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பவர்களை தனக்குப் பிடிக்காது.” என்று கூறினார். ஆமாம், நைஜீரிய சர்வாதிகாரிகளுடன் கூடிக் குலாவுவது, லஞ்சம் கொடுப்பது, எதிர்ப்பவர்களை ஆள் வைத்து கொலை செய்வது, வரி ஏய்ப்பு செய்து கொள்ளையடிப்பது… இவ்வாறான கிரிமினல் வேலைகளை ஷெல் செய்து வருவது, நைஜீரியாவில் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஒரு பக்கம் எல்லா பாவ காரியங்களையும் செய்து கொண்டு, மறு பக்கம் தன்னை கொடை வள்ளலாக காட்டி புண்ணியம் தேடுகின்றது. பாடசாலைகள், வைத்தியசாலைகள், மற்றும் பல சமூக நல தொண்டு சேவைகளுக்கு ஷெல் “நன்கொடை” வழங்கி வருகின்றது. அதே நேரம் தனது இருப்பிற்கு ஆபத்து நேரா வண்ணம், முன்பு தன்னை எதிர்த்து போராடியவர்களை சேர்த்து, தனியார் பாதுகாப்புப்படை ஒன்றை உருவாக்கி உள்ளது.

உலக நாடுகளைப் பொறுத்த வரை, நைஜீரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் ஒரு பொருட்டல்ல. நைஜீரியா ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளில் ஒன்று மட்டுமல்ல, தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுமாகும். அது மட்டுமல்ல பயபிரா போருக்குப் பின்னர், போரியல் அனுபவத்தை பெற்ற இராணுவமானது, நாட்டின் இன்றியமையாத நிறுவனமாக வளர்ந்துள்ளது. இராணுவத்தின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே அங்கே ஜனநாயகம் நிலைக்க முடியும். நைஜீரியா, எல்லாம் வல்ல அமெரிக்காண்டவரின் அங்கீகாரம் பெற்ற நாடு. அதனால் ஐக்கிய நாடுகள் சபை தலையீட்டில் எந்தவொரு ஆப்பிரிக்க நாட்டிற்காவது சமாதானப்படை அனுப்ப நேர்ந்தால், அதிலே நைஜீரியா முக்கிய பங்காற்றும். ஆனால் சமாதானம் என்ற பெயரில் நைஜீரியா பிராந்திய வல்லரசு மனப்பான்மையுடன் செயற்படுகின்றது. யுத்த பிரபுக்களுக்கு சார்பாக நடந்து கொள்கின்றது. வேலியே பயிரை மேய்வது போல, மனித உரிமை மீறல்களைப் புரிகின்றது. சியாரா லியோனில் வைர வியாபாரத்தில் கூட ஈடுபட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. இத்தனை குறைபாடுகளுக்கு மத்தியில், நைஜீரிய ஆட்சியாளர்கள் இன்னமும் வல்லரசு கனவு காண்கின்றனர். பல்வேறு இனங்களும், மதங்களும் தமக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் அது ஒரு பகற்கனவாக மட்டுமே இருக்கும்.

– தொடரும் –

Saturday, March 21, 2009

சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்

பிரான்சிற்கு நிகரான பரப்பளவை கொண்ட, சூடான் நாட்டின் டார்பூர்(Darfur) மாநிலத்தில் இனப்படுகொலை நடப்பதாக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சூடான் நாட்டு அதிபர் பஷீரை கைது செய்ய உத்தரவிட்டது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, மனிதநேய நடவடிக்கையாக தோன்றும் அரசியல் வியூகத்தின் பின்னே, வல்லரசுகளின் எண்ணை வளத்திற்கான போட்டி மறைந்து கொள்கின்றது. டார்பூர் விடுதலை இயக்கத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பது இரகசியமல்ல. சூடானின் நட்பு நாடான சீனாவை வெளியேற்றி விட்டு, டார்பூர் எண்ணை வயல்களை அமெரிக்கா அபகரிக்கப் பார்க்கிறது. டார்பூர் பிரச்சினையின் பொருளாதார பின்னணியை ஆராய்கின்றது இந்த ஆவணப்படம்.

Darfur Conflict: It’s always for OIL