Showing posts with label ஈராக். Show all posts
Showing posts with label ஈராக். Show all posts

Sunday, September 09, 2018

ஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்


ஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் பொது மக்களால் முற்றுகையிடப் பட்டு தீக்கிரையாக்கப் பட்டன.


கடந்த ஐந்து நாட்களாக, ஈராக்கின் எண்ணை வளம் நிறைந்த பஸ்ரா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகள், வேலை வாய்ப்புகள் கோரியும் துறைமுகத் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் குதித்தனர். 

இரண்டு மில்லியன் மக்கட்தொகை கொண்ட பஸ்ரா நகருக்கு அருகில் உள்ள, அல்கசார் துறைமுகத்திற்கு செல்லும் பாதையில் தொழிலாளர் நடத்திய மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத அரசு, ஏவல் நாய்களான காவல்துறையை  ஏவி போராட்டத்தை அடக்கப் பார்த்தது. 

ஆரம்பத்தில், பொலிசார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டு, போராட்டக்காரரை கலைந்து செல்ல வைத்தனர். ஆனால், பொலிஸ் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஆர்ப்பாட்டக் காரர்கள் இடத்தை விட்டு நகரவில்லை. பல இடங்களில் மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இதேநேரம், பஸ்ரா நகர விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்த படியால் விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டது. விமான நிலையத்தின் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் ஐந்து கதூஷ்யா ஏவுகணைகள் வந்து விழுந்து வெடித்துள்ளன. இந்தத் தாக்குதலின் போது யாரும் பலியாகவில்லை, காயமடையவுமில்லை.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பொது மக்களின் ஆதரவைப் பெற்றதும் வன்முறைப் போராட்டமாக மாறியது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பஸ்ரா நகரும், அதை அண்டிய பகுதிகளிலும் குழாயில் வரும் தண்ணீர் மாசடைந்து காணப்படுவதாக பொது மக்கள் புகார் கூறி வந்தனர். 

அது மட்டுமல்லாது மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதால், கோடை காலத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினார்கள். அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத படியால், பொங்கி எழுந்த மக்கள் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தெருவுக்கு வந்து போராடினார்கள்.

அமைதியான வழியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் முடிந்தன. அரசின் பல வருட கால புறக்கணிப்பால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ரா நகரில் உள்ள அரச அலுவலகங்களை தாக்கி எரித்துள்ளனர். இதனால் அரச நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பதினாறு பேர் மரணமடைந்தனர். பலர் கைது செய்யப் பட்டு, தெருவில் இழுத்துச் செல்லப் பட்டனர்.

இதே நேரம், ஈராக் அரசுக்கு முண்டு கொடுக்கும் ஈரானின் தூதுவராலய கட்டிடமும் தாக்கி கொளுத்தப் பட்டது. இலங்கையில் இந்தியாவின் தலையீடு மாதிரி, ஈராக்கில் ஈரானின் தலையீடு அமைந்துள்ளது. ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஈராக் ஆட்சியாளர்களை விலைக்கு வாங்கி இருந்தது. 

இதனால் தமது ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு ஈரானும் பொறுப்பு என்று பொது மக்கள் கருதுகின்றனர். தமது தாய்நாடு ஈரானின் காலனியாவதை ஈராக்கிய மக்கள் விரும்பவில்லை. அதன் எதிரொலி தான் ஈரானிய தூதுவராலயம் கொளுத்தப் பட்ட சம்பவமும். 

ஈராக்கில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில், ஈராக்கி கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளன. அதனுடன் கூட்டுச் சேர்ந்த பிற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி, தேர்தல் காலத்தில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளன. அதாவது, ஈரானின் தலையீடு, ஊழலுக்கு எதிரான இயக்கமாக தமது தேர்தல் பரப்புரைகளில் கூறி வந்துள்ளனர். அதனால் தான் பெருமளவு வாக்காளர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு தெரிவு செய்துள்ளனர். 

மேலும் ஒரு பொதுவுடைமைக் கட்சியானது, அடிப்படையில் மதப் பிரிவுகளுக்கும், இன வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்ட கட்சியாகும். அதனால் தான் ஈராக்கி உழைக்கும் மக்களை இனம், மதம் கடந்து ஒன்றிணைக்க முடிந்துள்ளது. பிற இடதுசாரிக் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை பின்பற்றியதால் தேர்தலில் வெற்றி பெற்றன.

"சதாம் ஹுசைனின் சர்வாதிகாரத்தில் இருந்து ஈராக் மக்களை மீட்க வந்த" அமெரிக்கர்கள், எண்ணை வளம் நிறைந்த ஈராக்கை ஊழல் மலிந்த ஏழை நாடாக்கி விட்டுச் சென்றனர். கடந்த தசாப்த காலமாக, இஸ்லாமிய மத அடிப்படைவாதம், ஷியா- முஸ்லிம் தேசியவாதம் போன்ற கோட்பாடுகள் ஈராக் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரும் அந்த மதவாத சக்திகளை மறைமுகமாக ஊக்குவித்து வந்தனர்.

எதிரும் புதிருமான சுன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் ஒருவர் மற்றவரைக் கண்டால் கொன்று இரத்தம் குடிக்கும் அளவிற்கு வன்மம் பாராட்டினார்கள். இதன் விளைவுகளில் ஒன்று தான் பிற்காலத்தில் "டேஷ்" அல்லது "இஸ்லாமிய தேசம்(IS)" என அறியப் பட்ட ISIS இயக்கத்தின் தோற்றமும், அதைத் தொடர்ந்த யுத்தங்களும். 

இலங்கையில் "சிங்களவர்- தமிழர் இனப்பகை" மாதிரி, ஈராக்கில் "சுன்னி - ஷியா இனப்பகையை" உயிர்ப்புடன் வைத்திருப்பதே அமெரிக்கா மற்றும் ஈராக் அரசின் நோக்கமாக இருந்துள்ளது. "மக்களை பிரித்து வைத்தால் இலகுவாக ஆள்வது இலகு" என்பதே, உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலேயர் முதல் அமெரிக்கர் வரையில் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் மத்தியில் மத அடிப்படையிலான தேசியவாதமும் இருந்து வந்தது. ஷியாக்களின் தலைமையகமாக கருதப்படும் ஈரானும் பின்புலத்தில் இருந்து ஊக்குவித்து வந்தது. அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேறியதும், அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட ஈரானின் நேரடித் தலையீடு சகல துறைகளிலும் பல மடங்கு அதிகரித்தது.

அரசியலில் மட்டுமல்லாது, பொருளாதாரத்திலும் ஈரானிய தலையீட்டை நேரடியாக உணரக் கூடியதாக இருந்தது. ஈராக் கடைகளில் பெருமளவு ஈரானிய உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும்.  

இது போன்ற காரணங்களினால், ஈராக்கிய பொது மக்கள் ஈரான் மீது வெறுப்புற்று இருந்ததில் வியப்பில்லை. ஆனால், ஷியா சகோதர இனத்தின் மனமாற்றத்தை ஏற்க மறுக்கும் ஈரானிய அரசு, "அந்நிய சக்திகள் (ஷியா) இன ஒற்றுமையை குலைக்கின்றன" என்று அலறுகின்றது. 

அதாவது, ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை பின்பற்றும், ஈராக்கிய மக்களை "ஷியா - சுன்னி" என்று இன அடிப்படையில் பிரித்து வைப்பதில் தவறில்லையாம். ஆனால், அவர்கள் வர்க்க உணர்வு கொண்டு விட்டால், "ஐயகோ, இன ஒற்றுமையை குலைக்க சதி நடக்கிறது" என்று ஓலமிடுவார்கள். ஈரானிய அரசின் அரசியல் நிலைப்பாட்டைத் தான், நம்மூர் தமிழ்த் தேசியவாதிகளும் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் உழைக்கும் மக்களே! 
ஈராக்கிய சகோதரர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். மதவாதம், தேசியவாதம் பேசி, எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதற்கு, ஈராக் பொது வேலைநிறுத்த போராட்டம் ஒரு சிறந்த உதாரணம். மதம், தேசியத்திற்கு அப்பால், வர்க்க உணர்வு தான் மக்களை தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராட வைக்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவர்கள் மனதில் மதவாத, இனவாதக் கருத்துக்கள் விதைக்கப் படுகின்றன.  மக்கள் எப்போதும் மத அல்லது இன உணர்வு கொண்ட முட்டாள்களாக இருக்க மாட்டார்கள்.

- கலையரசன் -
  9-9-2018


மேலதிக தகவல்களுக்கு:
Curfew in Iraq's Basra lifted as calm returns 
 

Sunday, October 22, 2017

தனி நாடே மாயம்! தேசியம், தாயகம், வாக்கெடுப்பு எல்லாம் மாயம்!!

ஈராக்கில், அரேபிய‌ருக்கும், குர்திய‌ருக்கும் இடையில் சமீபத்தில் புதிய‌ போர் மூண்டுள்ள‌து. சுதந்திர குர்திஸ்தான் கோரி பொது வாக்கெடுப்பு நடந்து சில தினங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. தனி நாடு கோரும் குர்திஸ்தானின் எல்லைப் பகுதியான கிர்குக் பற்றிய சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்திருந்தது.

தொடக்கத்தில் குர்திய பெஷ்மேர்கா படையினருக்கும், துருக்மேன் ஆயுதக்குழுவுக்கும் இடையில் மோதல் நடந்திருந்தது. கிர்குக் பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் துருக்மேன் சிறுபான்மை இனமும், அயல்நாடான துருக்கியும் குர்திஸ்தான் பிரிவினையை எதிர்த்து வந்தன.

அது மட்டுமல்லாது, குர்திஸ்தான் பிரிவினைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்ட மறுநாளே அது செல்லாது என்று ஈராக் அறிவித்திருந்தது. விமான நிலையங்களையும், சர்வதேச எல்லைகளையும் ஈராக் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. அப்படி நடக்காவிட்டால் போர் மூளும் என்றும் பயமுறுத்தி இருந்தது.

குர்திஸ் ப‌டையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் ந‌க‌ரையும், அதை அண்டிய‌ பிர‌தேச‌ங்களையும் ஈராக்கிய‌ ப‌டைக‌ள் கைப்ப‌ற்றியுள்ள‌ன‌.

ஈராக் அர‌சின் ஆத‌ர‌வு பெற்ற‌ ஷியா துணைப் ப‌டையின‌ர், ஒரே ஒரு நாள் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில், கிர்குக் ப‌குதியை கைப்ப‌ற்றியுள்ள‌மை ப‌ல‌ரை விய‌ப்பில் ஆழ்த்தியுள்ள‌து.

ஈராக் எண்ணையில் க‌ணிச‌மான‌ அள‌வு ப‌ங்கு கிர்குக் ப‌குதியில் இருந்து கிடைக்கிற‌து. அத‌னாலேயே அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ பிர‌தேச‌மாக‌ உள்ள‌து. அத‌னால் எல்லோரும் அத‌ற்கு உரிமை கோருகிறார்க‌ள்.

கிர்குக் ஒரு கால‌த்தில் துருக்மேன் (துருக்கி மொழி பேசும் ம‌க்க‌ள்) இன‌த்த‌வ‌ர் பெரும்பான்மையாக‌ வாழ்ந்த‌ சிறிய‌ ந‌க‌ர‌ம். 1927ம் ஆண்டு, அங்கு எண்ணை க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌க் கால‌த்தில் கிர்குக், துருக்கியின் மொசூல் மாகாணத்திற்குள்‌ இருந்த‌து. இந்த‌க் கார‌ண‌ங்க‌ளினால், துருக்கியும் கிர்குக் த‌ன‌க்கு சொந்த‌ம் என்று உரிமை கோருகின்ற‌து.

குர்திய‌ர்க‌ள் அத‌னை த‌ம‌து குர்திஸ்தான் தாய‌க‌ப் ப‌குதி என்று உரிமை கோருகின்ற‌ன‌ர். குர்திஸ் தேசிய‌வாத‌ இய‌க்க‌ம் தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து, வ‌ருங்கால‌ குர்திஸ்தானின் த‌லைந‌க‌ராக‌ கிர்குக் இருக்கும் என்று அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து.

இது இல‌ங்கையில் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் திருகோண‌ம‌லையை வ‌ருங்கால‌ த‌மிழீழ‌த் த‌லைந‌க‌ர‌மாக‌ உரிமை கோரிய‌து போன்ற‌து. கிர்குக், திருகோண‌ம‌லை இர‌ண்டும் பொருளாதார‌க் கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே த‌லைந‌க‌ர‌மாக‌ ஏற்றுக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌.

எண்ணை உற்ப‌த்தி கார‌ண‌மாக‌ கிர்குக் ந‌க‌ர‌ம் பெரிதாக‌ வ‌ள‌ர்ந்த‌து. வ‌ட‌க்கில் இருந்து குர்திய‌ரும், தெற்கில் இருந்து அரேபிய‌ரும் வேலை தேடி வ‌ந்து குடியேறினார்க‌ள். 1957 க‌ண‌க்கெடுப்பின் ப‌டி, கிர்குக் ந‌க‌ர‌ ச‌ன‌த்தொகையில் 38% துருக்மேன், 33% குர்திய‌ர், எஞ்சியோர் அரேபிய‌ர்க‌ள். (இதில் க‌ணிச‌மான‌ அள‌வு கிறிஸ்த‌வ‌ அஸிரிய‌ர்க‌ள்.)

ச‌தாம் ஹுசைன் ஆட்சிக் கால‌த்தில் கிர்குக் அரேபிய‌ம‌யமாக்க‌ப் ப‌ட்ட‌து. பெரும‌ள‌வு குர்திய‌ர்க‌ள் ப‌ல‌வ‌ந்த‌மாக‌ வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதே நேர‌ம் அரேபிய‌ர்க‌ள் பெரும‌ள‌வில் குடியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். க‌ணிச‌மான‌ அள‌வு குர்திய‌ர்க‌ள், அர‌பு மொழியை தாய்மொழியாக்கி தாமும் அரேபிய‌ராகி விட்ட‌ன‌ர். ச‌தாம் ஆட்சி முடிவுக்கு வ‌ந்த‌ பின்ன‌ர், முன்பு வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ குர்திய‌ர்க‌ள் திரும்பி வ‌ந்த‌ன‌ர்.

இன்றைய‌ கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை 2014 ம் ஆண்டு தொட‌ங்கிய‌து. அது வ‌ரையும் கிர்குக் ஈராக் அர‌சின் நேர‌டி ஆட்சியின் கீழ் இருந்த‌து. ஆனால், மேற்கில் இருந்து வ‌ந்த‌ ஐ.எஸ். (ISIS) படையெடுப்பை ச‌மாளிக்க‌ முடியாம‌ல், ஈராக்கிய‌ இராணுவ‌ம் பின்வாங்கிய‌து. அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி குர்திய‌ ப‌டைக‌ள் கிர்குக்கை கைப்ப‌ற்றின‌. அப்போது பிர‌தான‌மான‌ எதிரி ஐ.எஸ். என்ப‌தால், ஈராக்கிய‌ அர‌சும் விட்டுக் கொடுத்த‌து.

ஐ.எஸ். தோற்க‌டிக்க‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர் கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை எழுந்த‌து. குர்திஸ்தான் அர‌சு கிர்குக் எண்ணையை திருடி விற்கிற‌து என்று ஈராக் அர‌சு குற்ற‌ம் சாட்டிய‌து. அதே நேரம், "எம‌து த‌லைந‌க‌ரான‌ கிர்குக்கை விட்டுக் கொடுக்க‌ மாட்டோம்..." என்ற‌ தேசிய‌வாத‌ கோரிக்கையை முன் வைத்து தான், குர்திஸ்தான் பிரிவினைக்கான‌ பொது வாக்கெடுப்பும் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து.

"த‌னிநாடு காண்ப‌து என்பது ஒரு ந‌டைமுறைச் சாத்திய‌ம‌ற்ற‌ க‌ற்ப‌னாவாத‌ம்!" ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிவினைக்காக‌ பொதுவாக்கெடுப்பின் பின்ன‌ர், பெரும்பான்மை குர்திய‌ர்க‌ள் இப்போது தான் ய‌தார்த்த‌ம் என்ன‌வென‌ உண‌ர்கிறார்க‌ள். இவ்வாறு, குர்திஸ்தான் போர்க்களத்தில் இருந்து செய்தியாளர்கள் அனுப்பிய தகவல்களை வைத்து, ட‌ச்சு செய்தி நிறுவ‌ன‌ம் NOS தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ('Het ziet er treurig uit voor de Koerden in Irak'; https://nos.nl/artikel/2199001-het-ziet-er-treurig-uit-voor-de-koerden-in-irak.html)

கடைசியாக நடந்த சண்டையில், குர்திஸ் க‌ட்டுப்பாட்டின் கீழ் இருந்த‌ கிர்குக் மாகாண‌த்தின் எஞ்சிய ப‌குதிக‌ளையும் ஈராக்கிய‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்றி விட்ட‌து. குர்திஸ் ப‌டைக‌ள் பின்வாங்கி ஒரு அவ‌மான‌க‌ர‌மான‌ தோல்வியை ச‌ந்தித்த‌தின் பின்ன‌ணியில் ஈரான் இருக்க‌லாம் என‌ ச‌ந்தேகிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

அதாவ‌து, ஈரானின் ம‌றைமுக‌ நெருக்குவார‌ம் கார‌ண‌மாக‌த் தான் குர்திஷ் ப‌டைய‌ணிக‌ள் பின்வாங்கியுள்ள‌ன‌. குர்திஸ்தானில் வ‌ட‌ ப‌குதி KDP இய‌க்க‌த்தின் க‌ட்டுப்பாட்டிலும், தென் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டிலும் உள்ள‌து. கிர்குக் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் அட‌ங்குகிற‌து.

PUK இத‌ற்கு முன்ன‌ரும் சுத‌ந்திர‌ குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை முழு ம‌ன‌துட‌ன் ஆத‌ரிக்க‌வில்லை. ஏனெனில் அதன‌து போட்டி இய‌க்க‌மான‌ KDP தான் பொது வாக்கெடுப்பை அறிவித்திருந்த‌து. இது அங்கு இரு தேசிய‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கு இடையில் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல் விளையாட்டு.

பொது வாக்கெடுப்புக்கு வ‌ரையும், KDP இன் பிர‌ச்சார‌ம் முழுவ‌தும் "ஹ‌லாப்ஜா இன‌ப்ப‌டுகொலை" ப‌ற்றியே இருந்த‌து. இந்த‌ உண‌ர்ச்சிக‌ர‌ அர‌சிய‌லுக்கு பின்னால் இர‌ண்டு க‌ட்சிக‌ளினதும் போட்டி அரசிய‌ல் ம‌றைந்து விட்ட‌து, அல்ல‌து ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து, ஹ‌லாப்ஜா என்ற‌ கிராம‌ம், ஈரான் எல்லைக்க‌ருகில், PUK க‌ட்டுப்பாட்டு பிர‌தேச‌த்தில் உள்ள‌து.

த‌ன‌து பிர‌தேச‌த்திற்குள் KDP பின்க‌த‌வால் நுழைய‌ப் பார்க்கிற‌து என‌ நினைத்து‌ PUK எச்ச‌ரிக்கையான‌து. ஆனால், சுத‌ந்திர‌ குர்திஸ்தான் கோரிக்கையை எதிர்த்தால் அதை சுட்டிக் காட்டியே தேசிய‌ அர‌சிய‌லில் இருந்து ஓர‌ங்க‌ட்ட‌ப் ப‌ட‌லாம். இந்த‌ப் ப‌ய‌த்தால் PUK உம் பொது வாக்கெடுப்பை ஆத‌ரித்த‌து.

இந்த இட‌த்தில் இன்னொரு உண்மையை ம‌ற‌ந்து விட‌க் கூடாது. PUK நீண்ட‌ கால‌மாக, ஆர‌ம்ப‌த்தில் இருந்தே ஈரானின் ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ந்த‌து. த‌ற்போது கிர்குக் பிர‌தேச‌த்தில் இருந்து பின்வாங்கிய‌தும் PUK ப‌டைய‌ணிக‌ள் தான். அத‌ற்கு ஈரானின் அழுத்த‌ம் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.

"பார்த்தீர்க‌ளா, த‌மிழ‌ருக்குள் ஒற்றுமை இல்லாத‌து தான் எல்லாப் பிர‌ச்சினைக்கும் கார‌ணம்" என்று சொல்வ‌து மாதிரி கிள‌ம்பி வ‌ராதீர்க‌ள். புலிக‌ள் கிழ‌க்கு மாகாண‌த்தில் க‌ருணா குழுவை அக‌ற்றிய‌ மாதிரி, "PUK துரோகிக‌ள்" என்று சொல்லி விட்டு KDP அங்கு வ‌ர‌ முடியாது. குர்திஸ்தானில், வ‌ட‌க்கு, தெற்கு பிராந்திய‌ மொழிக‌ளுக்கு இடையிலான‌ க‌லாச்சார‌ வித்தியாச‌ம் மிக‌வும் அதிக‌ம்.

த‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் இருந்து குர்திஸ் ம‌க்க‌ள் ஒரு ப‌டிப்பினையை பெற்றுள்ள‌ன‌ர். த‌னி நாடு கிடைக்கும் என்ப‌தெல்லாம் ப‌க‌ற் க‌ன‌வு. குர்திஸ் தேசிய‌வாதிக‌ள் சொல்வ‌து போல‌ எதுவும் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.

பூகோள‌ அர‌சிய‌ல் எம‌க்கு சாத‌க‌மாக‌ அமைய‌ப் போவ‌தில்லை. அமெரிக்கா ம‌ட்டும‌ல்லாது, எந்த‌வொரு அய‌ல்நாடும், குர்திஸ்தான் என்ற‌ த‌னிநாடு உருவாக‌ ச‌ம்ம‌திக்க‌ப் போவ‌தில்லை. மொத்த‌த்தில் எல்லாம் ஒரு மாயை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Sunday, October 01, 2017

அமெரிக்காவின் கதவைத் தட்டினால் தமிழீழம் கிடைக்கும், அல்லேலூயா!


"அமெரிக்காவை நம்பு தமிழினமே!"

"குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்" என்ற தலைப்பில், லண்டனில் வெளிவரும் ஒரு பேப்பர் ஊடகவியலாளர் அ. மாயூரன் முகநூலில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். (https://www.facebook.com/majura.amb/posts/1539005206138165?pnref=story) அதன் சாராம்சம் இது தான்:"அமெரிக்காவின் கதவை தட்டிக் கொண்டிருந்தால் தமிழீழம் சாத்தியமே!"

அவர் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இவ்வாறு உள்ளது: 
//இனி தனக்கு விடுதலை சாத்தியமற்றது எனத் தெரிந்திருந்தும் தமது விடுதலையை சாத்தியப்படுத்தியிருக்கும் குர்தீஸ் மக்களைப்பார்த்து ஈழத்தமிழர்கள் பாடங்களை கற்கத்தவறினால் என்றோ விடுதலை அடையவேண்டிய ஈழத்தமிழினமான நாம் இனி நடை பிணங்களே அத்துடன் தனக்குத் துரோகமிளைத்த அமெரிக்காவின் கதவுகளைத் தொடர்ச்சியாகத் தட்டி தமது விடுதலைக்கனியை பறித்திருக்கிறார்கள். இது ஈழத்தமிழர்களுக்கு 100 வீதம் பொருந்தும். எமக்கு விடுதலை வேண்டுமானால் துரோகியிடமாவது கூட்டுச்சேர்ந்து எமது விடுதலையை சாத்தியப்படுத்தவேண்டியதன் அவசியத்தை குர்தீஸ் மக்கள் ஈழத்தமிழர்களுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இவர்களின் பாடங்களிலிருந்து வேற்றுமைகளைக் களைந்து எமக்கான விடுதலையை சாத்தியப்படுத்துவோம்.// (அ.மாயூரன்)

இது தமிழர்களையும் அமெரிக்க அடிமைகளாக்கும் அடிவருடி அரசியல். ஒரு பேச்சுக்கு, ஈராக்கில் குர்திஸ்தான் சுதந்திரம் அடைய அமெரிக்கா தான் காரணம் என்று வைத்துக் கொள்வோம். அதே அமெரிக்கா துருக்கியில் குர்திஷ் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு துணை நின்றதை எப்படி நியாயப் படுத்துவீர்கள்?

துருக்கி- குர்திஷ் விடுதலை இயக்கமான PKK தலைவர் ஒச்சலானை, சிரியாவை விட்டு விரட்டியடித்து, உலகெல்லாம் சுற்ற வைத்து காட்டிக் கொடுத்த அமெரிக்கா, எப்படி குர்து மக்களின் நண்பன் ஆகியது? ஈராக் பொது வாக்கெடுப்பு விடயத்தில் அமெரிக்க நலன்களா அல்லது குர்து மக்களின் விடுதலையா முக்கியமாக இருந்திருக்கும்? இந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மைகள் தெரிய வரும்.

அ. மாயூரனின் கட்டுரையில் இருந்து:

//குர்தீஸ் இன மக்களின் தேசம் நான்கு துண்டுகளாக ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளால் துண்டாடப்பட்டிருக்கிறது. இதை லாண்ட் லொக் (Land Locked )என அழைப்பார்கள். இதுபோல் ஆசியாவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் என்பவையும்காணப்படுகிறது. எனவே ஒரு தேசம் நான்கு துண்டாடப்பட்ட நாடுகளிலிருந்தும் விடுதலை பெறுவது சாத்தியமின்மை என்பதாலேயே அரசியல் ஆய்வாளர்கள் அது சுதந்திர நாடாக விடுதலை அடைவது சாத்தியமில்லை என்றிருந்தனர்.// (அ.மாயூரன்)

யார் அந்த உலக வரைபடம் காணாத "அரசியல் ஆய்வாளர்கள்"? ஒரு சாதாரண பள்ளி மாணவன் உலக வரை படத்தை எடுத்துப் பார்த்தாலே, எத்தனை "நாலாபுறமும் மூடப் பட்ட தேசங்கள்" இருக்கின்றன என்பது தெரிந்து விடும். இவை எல்லாம் காலனிய காலத்தில் உருவாக்கப் பட்டு, காலனிய நீக்கம் என்ற பெயரில் சுதந்திரம் வழங்கப் பட்டவை. முன்னாள் காலனிய எஜமானும், அயல் நாடுகளும் அவற்றின் சுதந்திரத்தை அங்கீகரித்த படியால் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன.

குர்திஸ் இன மக்களை "ஒரே தேசம்" என்று கருதினால், உலகில் நூற்றுக் கணக்கான தேசங்கள் துண்டாடப் பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் அனேகமாக எல்லா நாடுகளின் எல்லைக் கோடுகளும் ஏதோவொரு தேசிய இனத்தை பிரிப்பதாக இருக்கும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைக் கோடு பஷ்டூன் இன மக்களின் தேசத்தை இரண்டு துண்டுகளாக்கியது. இப்படி நிறைய உதாரணங்களை காட்டலாம்.

//இருந்தும் குர்தீஸ் மக்கள் தமது விடுதலை நோக்கி நகர்ந்தனர். முதலில் ஈராக்கிடமிருந்தாவது விடுதலை பெற வேண்டும் என எண்ணி அதற்கான முயற்சிகள் செய்த போது தான்...// (அ.மாயூரன்)

இது ஒரு திரிபுபடுத்தல். குர்திய தேசியவாதம் ஒரு பிற்காலத்திய அரசியல் கோட்பாடு. இருபதாம் நூற்றாண்டில் தான் குர்திஸ் தேசிய இன அடையாளம் உருவானது. அதற்கு முன்பு பல சிற்றரசுக்கள் இருந்துள்ளன. ஆனால், அன்று யாரிடமும் நாம் குர்தியர் என்ற உணர்வு இருக்கவில்லை. 

மேலும், இனம் அல்ல, மொழி தான் அடையாளத்தை தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, கிர்குக், பாக்தாத் ஆகிய நகரங்களில் அரபி மொழியை தாய்மொழியாக பேசும் குர்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இனத்தால், பிறப்பால் குர்தியர்கள். இருந்தாலும், இன்றைய தேசிய இன அரசியல் அவர்களை அரேபியர்கள் என்று சொல்கிறது!

துருக்கி குர்தியருக்கும், ஈராக் குர்தியருக்கும் இடையில் வெளித்தெரியக் கூடிய முரண்பாடுகள் உள்ளன. துருக்கியில் வாழும் குர்தியர்கள் லத்தீன் வரி வடிவத்தையும், ஈராக்கில் வாழும் குர்தியர் அரபி வரி வடிவத்தையும் உபயோகிக்கிறார்கள்.அது மட்டுமல்லாது,குர்திய மக்கள் பேசும் பிராந்திய மொழிகளிலும் வித்தியாசம் இருக்கிறது. 

ஈராக்கி குர்திஸ்தானின் வட பகுதியில் குருமாஞ்சி கிளை மொழி பேசும் மக்களும், தெற்கில் சுராணி கிளைமொழி பேசும் மக்களும் வாழ்கிறார்கள். அந்த மொழிப் பிரிவினை நவீன கால அரசியலிலும் தாக்கம் செலுத்தியது. பர்சானி தலைமை தாங்கிய KDP இயக்கம், குருமாஞ்சி மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. தலபானி தலைமை தாங்கிய PUK இயக்கம், சுராணி மொழி பேசுவோரை பிரதிநிதித்துவப் படுத்தியது. 1994 - 1995 இரண்டு இயக்கங்களும் மோதிக் கொண்டன. அந்த சகோதர யுத்தத்தில் ஆயிரக் கணக்கானோர் பலியானார்கள்.

ஈரான், ஈராக், துருக்கி ஆகிய மூன்று நாடுகளிலும், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற குர்திஸ் விடுதலை இயக்கங்கள், மூன்று மாறுபட்ட வரலாற்றுக் காலத்தில் தோன்றியுள்ளன. அவை எல்லாம் பொதுவாக குர்திஸ்தான் விடுதலை பற்றிப் பேசினாலும், ஒன்றுக்கொன்று அரசியல் கொள்கை முரண்பாடு கொண்டவை. இவர்கள் எப்படி ஒன்றாக விடுதலையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்?

//அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தபோது குர்தீஸ் மக்கள் அமெரிக்காவிடம் தாம் ஈராக்மீது போர் தொடுப்பதற்கு தங்களுடன் துணை புரிவதாகவும் தமக்கு ஈராக்கிடமிருந்து விடுதலையை பெற்றுத் தருமாறும் கேட்டிருந்தனர்... அமெரிக்கா ஈராக் மீதான போரை முடித்ததன் பின்னர் குர்தீஸ் மக்களுக்கான விடுதலையை குடுக்க மறுத்தது.// (அ.மாயூரன்)

ஈராக்- குர்து மக்களின் சந்தர்ப்பவாத அரசியல் தலைமையை புறக்கணித்து விட்டு, அப்போது அங்கு நடந்த சம்பவங்களை புரிந்து கொள்ள முடியாது. அதற்கு முதலில் குர்திஸ்தான் உள்நாட்டு அரசியல் பற்றித் தெரிய வேண்டும். அது தெரியாமல், "ஈழத் தமிழினம் ஈராக்கி குர்திஸ் இனத்தை பின்பற்ற வேண்டும்" என்று தமிழர்களை படுகுழியில் தள்ளிவிடக் கூடாது.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சி நடத்திய காலத்திலேயே, குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசம் உருவாகி, அதற்கான தேர்தல்களும் நடத்தப் பட்டன. அப்போதே ஈராக்கிய இராணுவம் விலக்கிக் கொள்ளப் பட்டு விட்டது. அதற்கு காரணம், குவைத் போருக்குப் பின்னர் எழுந்த நெருக்கடி நிலைமை. ஐ.நா. மேற்பார்வையின் கீழ் ஈராக் மீது சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டது. அது மட்டுமல்லாது, வடக்கிலும், தெற்கிலும் ஈராக்கிய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப் பட்டது. அந்த வான் பரப்பில் மேற்கத்திய போர் விமானங்கள் ரோந்து சுற்றின.

இராணுவ ரீதியாக பலவீனமடைந்து, மத்திய ஈராக்கிய பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே பெரும்பாடு பட்ட சதாம் ஹுசைன் அரசு, குர்திஸ்தான் பகுதிகளை விட்டுக் கொடுத்ததில் வியப்பில்லை. அப்போது குர்திஸ் விடுதலை இயக்கத் தலைவர், சதாம் ஹுசைனுடன் கைகுலுக்கி ஒப்பந்தம் செய்து கொண்டார். "குர்திஸ் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டதாக" சதாம் அரசு பீற்றிக் கொண்டது.

வளைகுடா யுத்தம் நடந்த தொண்ணூறுகளில் தான், இன்றைய குர்திஸ்தான் பொது வாக்கெடுப்புக்கான அடித்தளம் போடப் பட்டது. அதாவது, ஈராக் எண்ணைக்காக சர்வதேச சமூகம் நடத்திய போரின் ஒரு பக்க விளைவு தான் அது. ஈராக்- குர்து மக்களைப் பொறுத்தவரையில், அது எதிர்பாராமல் கிடைத்த அரிய வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவு தான். அயல்நாடான துருக்கியில் வாழும் குர்து மக்களுக்கு கூட இன்று வரையில் அப்படி ஓர் அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. இதிலே ஈழத் தமிழினத்திற்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று ஜோசியம் சொல்வது ஒரு சுத்துமாத்து!

ஈராக் மீது அமெரிக்க படையெடுப்பு நடந்த நேரம், குர்திஸ்தான் விடுதலையை பெற்றுத் தருமாறு அமெரிக்காவை கேட்டது உண்மை தான். ஆனால், அதை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மிகவும் தந்திரமாகப் பேசி போருக்கு சம்மதிக்க வைத்தார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலம் சில வருடம் நீடித்தது. அப்போதே நினைத்திருந்தால், பிரித்துக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அமெரிக்கர்கள் அப்படிச் செய்யவில்லை. குர்தியரிடம் நைச்சியமாகப் பேசி, புதிதாக உருவான ஈராக் அரசாங்கத்தில் பங்கெடுக்க வைத்தார்கள். "அமெரிக்காவின் கதவை தட்டிக் கொண்டிருந்த படியால் தான் இவ்வளவும் நடந்தது" என்பது ஒரு வெகுளித்தனமான பார்வை.

பாக்தாத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசு அதிகாரம் செலுத்திய நேரம் தட்டியும் திறக்காத கதவு இப்போது தான் திறந்து கொண்டதாம்! ஏற்கனவே, குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை எதிர்த்துள்ள அமெரிக்கா, தான் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. இதற்குப் பிறகும், "ஈழத் தமிழினமே அமெரிக்காவின் கதவுகளை தொடர்ந்தும் தட்டிக் கொண்டிரு, தமிழீழம் கிடைக்கும்!" என்று அறிவுரை சொல்வது அயோக்கியத்தனம். "தட்டுங்கள் திறக்கப்படும்" என்று இயேசு சொன்னதாக, தமிழ்த்தேசிய- அல்லேலூயாகாரர் தினந்தோறும் பிரார்த்தனை செய்தாலும், அமெரிக்க ஆண்டவர் இறங்கி வரப்  போவதில்லை. 

இஸ்ரேல் மட்டும் தான் குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரித்துள்ள ஒரேயொரு நாடு ஆகும். அது தனி நாடாவதை ஆதரிக்குமா என்பது சந்தேகமே. ஆனால், இஸ்ரேலுக்கு ஒரு புதிய கூட்டாளி கிடைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அது தான் இங்கே முக்கியம். ஏற்கனவே, குர்திஷ் படையினருக்கு இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஈரானுடன் பொது எல்லையைக் கொண்டிருப்பதால், அங்கிருந்து ஈரானை வேவு பார்ப்பது இலகு. அது தான் நடக்கப் போகிறது. எதிர்காலத்தில் ஈரானுடன் யுத்தம் வெடிக்குமாக இருந்தால், குர்திஸ்தானில் இருந்து ஊடுருவ முடியும்.

இஸ்ரேல் மட்டுமல்லாது, அமெரிக்காவும் குர்திஸ்தானை தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், ஈராக் அவர்களது கையை விட்டுப் போய் விட்டது. இன்று ஈராக் அரசை பின்னால் இருந்து ஆட்டுவிப்பது ஈரான் தான். அது அனைவருக்கும் தெரிந்த உண்மை. சர்வதேச அரசியல் சூதாட்டத்தில் ஈராக்- குர்திஸ் மக்கள், வல்லரசுகளின் பகடைக் காய்களாக பயன்படுத்தப் படுகின்றனர். பெஷ்மேர்கா என அழைக்கப் படும் குர்திஸ் இராணுவம், ஏகாதிபத்திய ஒட்டுக்குழுவாகி ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு: 
25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா?

Sunday, September 24, 2017

25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா?


25 செப்டம்பர், திங்கட்கிழமை நடக்கவுள்ள, சுதந்திர குர்திஸ்தானுக்கான பொது வாக்கெடுப்பு பற்றிய சில குறிப்புகள்.

ஈராக்கில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் "ஆம்" என்று வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது பல தசாப்த கால குர்திய தேசியவாதிகளின் கனவு. இன்று நனவாகப் போகிறது. உண்மையிலேயே குர்திஸ்தான் தனி நாடாக இருக்க முடியுமா? அது ஐ.நா. அங்கத்துவம் பெற முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை.

கடந்த இருபதாண்டுகளாக குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசமாக இருந்து வருகின்றது. சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்த காலத்தில் இருந்து, ஐ.நா. மேற்பார்வையின் கீழான சர்வதேச விமானப் படையினரின் ரோந்து காரணமாக, ஈராக் இராணுவம் கட்டுப்பட்டை இழந்திருந்தது.

அமெரிக்க இராணுவமும் குர்திஸ்தானில் தரையிறங்கிய பின்னர் தான், சதாம் ஹுசைன் ஆண்ட ஈராக் மீது படையெடுத்தது. அதற்கான "நன்றிக் கடனாக", அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்திலும், குர்திஷ் பெஷ்மேர்கா படையணிகள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப் பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குர்திஸ்தான் பிராந்தியம் ஏறக்குறைய தனி நாடு போன்றே நிர்வகிக்கப் பட்டது. இருப்பினும், அது ஈராக்கின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருந்தது.

குர்திஸ்தான் பெயரில் தனிக்கொடி, தனியான நிர்வாக அமைப்புகளும், அரசாங்கமும் உருவாகி இருந்தன. அதற்கென தனியாக "குர்திஷ் தேசிய இராணுவம்" கூட இருந்தது. இருந்தாலும் அதை யாரும் தனிநாடாக கருதவில்லை, அல்லது அங்கீகரிக்கவில்லை. அங்கேயும் ஈராக் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடக்கும். குர்திஷ் பாரளுமன்ற உறுப்பினர்கள் பாக்தாத்தில் இருந்தனர். வெளிவிவகார கொள்கை உட்பட பல விடயங்களில் பாக்தாத்தில் உள்ள மத்திய அரசு மேலாண்மை செலுத்தியது.

குர்திஸ்தான் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு தேசியவாதிகளின் இறுதி இலக்கு என்றே பரப்புரை செய்யப் படுகின்றது. இருப்பினும் அதற்குமப்பால் சில விடயங்கள் உள்ளன. கிர்குக் எண்ணைக் கிணறுகள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை நீண்ட காலமாக தீர்க்கப் படவில்லை. ஈராக்கில் பெருமளவு எண்ணை எடுக்கப் படும் பிரதேசங்களில் அதுவும் ஒன்று. அதில் கிடைக்கும் வருமானத்தை பங்கிடுவதில் பிரச்சினைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், குர்திஸ்தான் அரசு எண்ணை உற்பத்தியை தடை செய்தது. அதற்கு பதிலடியாக, ஈராக் அரசு குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எழுபது சதவீதமாக குறைத்தது. இந்த இழுபறிப் போட்டி தான், பொது வாக்கெடுப்பில் வந்து நிற்கிறது.

இன்று வரைக்கும், ஈராக் மத்திய அரசு குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை. வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் சுதந்திரத்திற்காக வாக்களித்தால், அடுத்ததாக என்ன நடக்கும் என்பது கேள்விக்குறி? வாக்கெடுப்பின் முடிவை வைத்து, குர்திஸ்தான் தனி நாடாவதாக பிரகடனப் படுத்தப் படுமா? ஈராக்குடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் படுமா? சுதந்திர குர்திஸ்தானை ஏனைய நாடுகள் அங்கீகரிக்குமா?

குர்திஸ்தான் தனி நாடாக பிரகடனப் படுத்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என ஈராக் அரசு அறிவித்துள்ளது. அப்படியானால், அது மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய விடயம், ஈராக் தேசிய இராணுவம் எந்தளவு பலமானது என்பதே. இரண்டொரு வருடங்களுக்கு முன்பிருந்த ஈராக் இராணுவம் மிகவும் பலவீனமாக இருந்தது. 

2014 ம் ஆண்டுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் இருந்த, ஐ.எஸ்.(ISIS) என்ற இயக்கம், மிகக் குறுகிய காலத்திற்குள் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி பாக்தாத்தை நோக்கி முன்னேறி இருந்தது. குறிப்பாக, சுன்னி-முஸ்லிம் பிரிவை சேர்ந்த அரேபிய சமூகத்தவரின் "ஏக பிரதிநிதி" என்று அறிவித்துக் கொண்ட ஐ.எஸ்., ஈராக்கில் ஒரு தனிநாட்டை உருவாக்கி வைத்திருந்தது.

ஐ.எஸ். முன்னேறிக் கொண்டிருந்த நேரம், பின்வாங்கி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த ஈராக் இராணுவம் தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள சிறிது காலம் எடுத்தது. ஈரானின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்ற ஈராக் இராணுவம், தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஐ.எஸ். மீது தாக்குதல் தொடுத்து இழந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டது. இதிலே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். போரில் ஈடுபட்டது ஈராக் இராணுவம் மட்டுமல்ல.

ஷியா முஸ்லிம் அரேபியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் துணைப்படைகளின் உதவியின்றி ஈராக் இராணுவம் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்த துணைப்படைகள் ஈராக் அரசுக்கு கட்டுப்படுவதில்லை. அது மட்டுமல்ல, இலட்சிய வெறியுடன் போரிடுவார்கள். ஆகவே, குர்திஸ்தான் மீது படையெடுப்பு நடந்தால்,குர்தியர்கள் ஒரு பலமான எதிரியை சந்திக்க வேண்டி இருக்கும். அண்மைக்கால போரியல் அனுபவம் மிக்க ஈராக்கி இராணுவத்தை மட்டுமல்லாது, ஷியா துணைப் படைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்களுக்கு ஈரானின் ஆதரவு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரிக்க மாட்டோம் என அயல் நாடுகளான ஈரானும், துருக்கியும் அறிவித்து விட்டன. அந்த இரண்டு நாடுகளிலும் குர்திய மொழி பேசும் சிறுபான்மையினர் வாழ்வது மட்டுமல்லாது, அவர்களும் தனி நாட்டுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே ஈராக்கில் குர்திஸ்தான் தனிநாடானால், தமது நாட்டுக்குள்ளும் பிரச்சினை உண்டாகும் என்று அஞ்சுகின்றனர். அவற்றை விட "சர்வதேச சமூகம்" எனக் கருதப் படும் அமெரிக்காவும், பிரான்சும் கூட அங்கீகரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குர்திஸ்தானின் ஒரேயொரு நட்பு நாடு இஸ்ரேல் மட்டுமே. இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் குர்திய படையணிகளுக்கு பயிற்சியளிப்பது இரகசியம் அல்ல. அது நீண்ட காலமாக நடக்கிறது. குர்திஸ்தான் தேசியவாதிகளும், குர்திஷ் மக்களையும், யூதர்களையும் ஒப்பிட்டுப் பேசுவதும் புதிய விடயம் அல்ல. 

"யூதர்களுக்கும், குர்தியருக்கும் பொது எதிரிகளாக அரேபியர் இருப்பதாக" அரசியல் பேசுவது சகஜமானது. குர்தியர்கள் மத்தியில் யூத மதத்தை பின்பற்றுவோரும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும். என்ன தான் இருந்தாலும், இஸ்ரேலின் நட்புறவு குர்திஸ்தான் சுதந்திரத்திற்கு எந்தளவு உதவும் என்பது கேள்விக்குறி தான்.

அமெரிக்கா தனது வழமையான இரட்டை வேடத்தை இங்கும் அரங்கேற்றுகிறது. பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது மாதிரி நடந்து கொள்கிறது. ஒரு பக்கம் குர்திஸ்தான் தேசியத்தை ஆதரிப்பது போன்று நடந்து கொள்ளும். அதே நேரம், ஈராக் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும். இருபதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பதிலீடு செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்போது ஏற்பட்ட காலனிய குடியரசுகளின் எல்லைகளை மாற்ற விரும்பவில்லை. இதை அமெரிக்க அரசு வெளிப்படையாகவே அறிவித்து விட்டது.

ஈராக்- குர்திஸ்தான் தனி நாடானால், அங்கு சிறுபான்மை மொழி பேசும் இனங்களாக உள்ள அரேபியரும், துருக்கியரும் எதிர்காலம் குறித்து அச்சப் படுவது இயல்பு. அதே நேரம், மொழியால் குர்தியர் ஆனாலும் மதத்தால் மாறுபட்ட யேசிடி மக்களும் சுதந்திரத்திற்கு எதிராகவுள்ளனர். அனேகமாக பொது வாக்கெடுப்பில் விழும் எதிர் வாக்குகள் அவர்களுடையவையாக இருக்கும். குர்திஸ்தான் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குர்தியர்களும் பொது வாக்கெடுப்பை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், ஆட்சியாளர்கள் தமது ஊழலை மறைப்பதற்காக தேசிய வெறியை தூண்டி விடுகிறார்கள் என்பதே.

ஏற்கனவே, குர்து மொழி பேசும் மக்களுக்குள் பல உள்ளக முரண்பாடுகள் உள்ளன. தேசியவாதப் போர்வை முரண்பாடுகளை மூடி மறைப்பதால், அவை வெளியே தெரிய வருவதில்லை. அங்கேயும் பிரதேசவாதம் இருக்கிறது. சமூகப் பிரிவுகள் உள்ளன. இனக்குழு அரசியலும் நடக்கிறது. குர்திஷ் அரச தலைவராக உள்ள மசூத் பர்சானி, செல்வாக்கு மிக்க பர்சானி குலப் பிரிவை சேர்ந்தவர். அவர் தனது "இனத்தவருக்கு" மட்டும் பதவிகள் கொடுப்பதாக முறைப்பாடுகள் உள்ளன. 

இருபது வருடங்களுக்கு முன்னர், பர்சானி KDP என்ற இயக்கத்தின் தலைவர். அப்போது, KDP க்கும் அதற்கு அடுத்த பலமான இயக்கமான PUK க்கும் இடையில் சகோதர யுத்தம் நடந்தது. பின்னர் ஒரு மாதிரியாக சமரசம் செய்து கொண்ட பின்னர் தான், இன்றுள்ள குர்திஸ்தான் அரசு உருவானது. அப்போதும் இப்போதும் KDP இன் ஆதரவுத் தளம் பெரியது. குறிப்பாக, பழமைவாதிகள் அதை ஆதரிக்கிறார்கள். சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், பர்சானி சில விட்டுக் கொடுப்புகள் செய்து, ஈராக் அரசுடன் ஒத்துழைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.

தேசியவாதிகளின் உணர்ச்சி அரசியல் காரணமாக, அங்கு யாரும் குர்திஸ்தான் தனி நாடாவதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ முடியாத நிலைமை உள்ளது. ஹலாப்ஜா இனப்படுகொலையை சொல்லியே பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு திரட்டப் படுகின்றது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், 1988 ம் ஆண்டு, ஹலாப்ஜா என்ற குர்திஷ் பிரதேசத்தில் ஈராக்கிய படைகள் நச்சு வாயுக் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வருடமும் ஹலாப்ஜா படுகொலைகள் நினைவுகூரப் படுவதுண்டு. அன்று இனப்படுகொலையில் பலியான சொந்தங்களுக்கு இன்றைய பொது வாக்கெடுப்பு அர்ப்பணிக்கப் படுகின்றது. ஆனால், பொது வாக்கெடுப்பின் முடிவில் குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடு உருவாகும் என்பது நிச்சயமில்லை. சிலநேரம், பாக்தாத் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேலதிக உரிமைகளை பெற்றுக் கொள்வதாகவும் அமையலாம்.

Thursday, September 21, 2017

யேசிடி : சாதியம் பேணும் "ஈராக்கின் இந்துக்கள்", அழிந்து வரும் புராதன மதம்!

ஆர்மேனியாவில் உள்ள யேசிடி ஆலயம்
ஈராக்கில், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களுக்கு காலத்தால் முந்திய யேசிடி மதத்தை பின்பற்றும் மக்களைப் பற்றி, நீண்ட காலமாக உலகம் அறிந்திருக்கவில்லை. ஏன், மத்திய கிழக்கிலும், அந்த மக்களின் தேசமான ஈராக்கிலும் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியாது. 2014 ம் ஆண்டு, ஐ.எஸ். அல்லது ISIS என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்து யேசிடிக்களை படுகொலை செய்த பின்னர் தான், உலகின் கவனம் அவர்கள் மேல் திரும்பியது.

யார் இந்த யேசிடிக்கள்?

வட ஈராக்கில் வாழும், குர்திய மொழி பேசும் இந்தோ - ஆரிய இன மக்கள். அவர்கள் பின்பற்றும் யேசிடி மதம் இஸ்லாத்திற்கு முந்தியது. அரேபியப் படையெடுப்புகள் காரணமாக, இன்றைய ஈராக் முழுவதும் இஸ்லாமிய மயமாகிய போதிலும், யேசிடி மக்கள் புராதன மத நம்பிக்கைகளை கைவிடவில்லை. பெரும்பாலான குர்தியர்கள் காலப்போக்கில் இஸ்லாமியராக மதம் மாறிய போதிலும், இவர்கள் மட்டும் தமது பழைய மதத்தை பின்பற்றினார்கள். 

உதாரணத்திற்கு இப்படி ஒன்றைக் கற்பனை செய்து பார்ப்போம். தமிழர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக, அல்லது இஸ்லாமியராக மாறி விட்ட பின்னர், சில ஆயிரம் பேர் மட்டும் இந்துக்களாக தொடர்ந்தும் இருக்கின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் ஈராக்கி - குர்திஸ்தானில் உள்ளது. இதுவே அண்மைக் காலத்தில் அங்கு நடந்த அரசியல் பிரச்சினைகளின் அடித்தளமும் ஆகும்.

பொதுவாக, ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில், யேசிடிகள் பற்றிய அறியாமை நிலவுகின்றது. அவர்கள் பேய், பிசாசை வழிபடுவதாக பலர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. யேசிடி மதத்தில் பிசாசு, அல்லது சாத்தான் என்ற ஒன்று கிடையாது. அதை ஓரளவுக்கு இந்து மத நம்பிக்கையுடன் ஒப்பிடலாம். "இந்து" என்பது கூட, இந்தியாவில் இருந்த புராதன மதங்களுக்கான பொதுப் பெயர் தான். ஆகவே, யேசிடியையும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.

யேசிடிக்கள் தினந்தோறும் சூரிய வணக்கம் செய்ய வேண்டும். ஆகையினால், அவர்களை "ஒளியின் குழந்தைகள்" என்றும் அழைப்பார்கள். அதே நேரம், ஏழு அல்லது எட்டு தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். மயில் தெய்வம் மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி ஒரு புராணக் கதையும் உள்ளது. இறைவன் ஆதாம் என்ற முதல் மனிதனை படைத்து விட்டு, அனைத்து ஜீவராசிகளையும் வணங்குமாறு சொன்னாராம். ஆனால், மயில் மட்டும் மறுத்து விட்டதாம். அந்தக் கதை கூட பிற்காலத்தில் வந்ததாக இருக்கலாம். அதாவது, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதப் பரம்பலுக்கு எதிர்வினையாக உருவாகி இருக்கலாம். ஏனென்றால், "ஆதாமுக்கு அடிபணியாத மயில் தேவதைக் கதை" இன்றைக்கும் யேசிடிகளின் மதப் பெருமிதங்களில் ஒன்று.

ஆச்சரியப் படத் தக்கவாறு, யேசிடிக்கள் இன்று வரைக்கும் சாதியக் கட்டமைப்பை பேணி வருகின்றனர். இதுவும், அவர்களுக்கு இந்திய இந்துக்களுடன் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. திகைக்காதீர்கள்! நான் சரியாகத் தான் எழுதி இருக்கிறேன். அது சாதி அமைப்பு தான். குறிப்பாக மூன்று வகையான பெரிய சாதிப் பிரிவுகள் உள்ளன. பூசாரிகள் சாதி. இந்தியாவில் பிராமணர்கள் மாதிரி, யேசிடிகள் மத்தியிலும் பூசாரிகள் சாதியில் பிறந்த ஒருவர் மட்டுமே கோயில் பூசாரி ஆகலாம். அதற்கு அடுத்த படியாக கோயில்களுக்கான பல்வேறு பணிவிடைகள் செய்வோர் தனியான சாதியாக உள்ளனர். மூன்றாவது சாதியாக உடல் உழைப்பாளிகள் உள்ளனர்.

சாதிகளுக்குள் உட்பிரிவுகள் உள்ளன. அதாவது, இந்தியாவில் பிராமணர்களுக்கு இடையில் ஐயர், ஐயங்கார், ஆச்சாரி என்றெல்லாம் கோத்திரங்கள் இருப்பதைப் போன்றது. இவற்றை விட, வர்க்க வேறுபாடுகள் தனியானவை. அது எல்லா சாதிகளிலும் ஊடுருவி உள்ளது. வர்க்கப் பிரிவினையானது நவீன காலத்திற்கு உரியது என்பதால், ஒவ்வொரு சாதியிலும் இரண்டு வர்க்கங்கள் இருக்கலாம். 

இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம்: திருமணம். யேசிடிகள் தத்தமது சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள். அதற்குள்ளும் குலம், கோத்திரம், வர்க்க வேறுபாடுகளை பார்ப்பதுண்டு. மேலும் ஒருவர் யேசிடி தாய், தந்தையருக்கு பிறப்பதால் மட்டுமே அந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம். யாரும் மதம் மாறி வர முடியாது.

நான் மேலே குறிப்பிட்ட தகவல்களை நினைவில் வைத்திருங்கள். ஏனென்றால், அண்மைக் கால அசம்பாவிதங்கள், எவ்வாறு யேசிடி சமூகத்தை பாழ்படுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். மிகக் கடுமையான சமூக- மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றிய யேசிடிகள், யுத்த அனர்த்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்டனர். அண்மைய யுத்தமானது தீராத வடுக்களை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கத்தில் சமூக சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

ஈராக்கில் யேசிடிகளின் வாழ்விடமான சின்ஜார் மலைப் பிரதேசம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. வடக்கே இஸ்லாமிய குர்தியர்கள், தெற்கே இஸ்லாமிய அரேபியர்கள். இரண்டுக்கும் நடுவில் தனித் தன்மை பேணும் யேசிடிக்கள். இது எவ்வளவு கடினமான விடயம் என்று சொல்லத் தேவையில்லை. யேசிடிகள் மொழி அடிப்படையில் குர்தியர்கள். ஆகையினால், குர்திஸ்தான் பாதுகாப்புப் படையான பெஷ்மேர்கா வீரர்கள் தமது பிரதேசத்தை காவல் காப்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

அதே நேரம், யேசிடி பிரதேசத்தில் கணிசமான அளவு அரேபியர்கள் வாழ்ந்தனர். அவர்களது வீடுகளும் அருகருகே இருந்தன. யேசிடிகளும், அரேபியரும் ஒரே பள்ளிக்கூடங்களில் படித்தார்கள். ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்தார்கள். மற்றைய சமூக வணிகர்களின் கடைகளில் பொருட்களை வாங்கினார்கள். பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் உணவு பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு சகோதர உணர்வுடன், மிகவும் அன்னியோனியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், 2014 ம் ஆண்டு நடந்த ஐ.எஸ். படையெடுப்பு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.

அப்போது ஐ.எஸ். இயக்கம் ஈராக்கின் மொசுல் நகரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. குர்திய பெஷ்மேர்கா காவல் காப்பதால், தமது பிரதேசத்திற்கு ஐ.எஸ். வர மாட்டாது என்று யேசிடி மக்கள் நம்பினார்கள். ஆனால், நடந்ததோ வேறு. ஒரு நாள் இரவோடு இரவாக ஐ.எஸ். போராளிகள் யேசிடி கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். காலையில் எழுந்து பார்த்தால், காவல் கடமையில் இருந்த பெஷ்மேர்கா வீரர்களை காணவில்லை. தமது சொந்த இனத்தவர்களே தமக்கு துரோகம் செய்து விட்டனர் என்பதை உணர அதிக நேரம் எடுக்கவில்லை.

ஐ.எஸ்., யேசிடி கிராமங்கள், நகரங்களை கைப்பற்றியதும், சிலர் தற்காப்பு நடவடிக்கையாக தம்மிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சுட்டனர். இந்த சண்டைகள் நடந்து கொண்டிருந்த குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, ஏராளமானோர் சின்ஜார் மலைகளின் மேல் ஓடித் தப்பினார்கள். அங்கு உணவு, தண்ணீர் இன்றி பலர் உயிரிழந்தனர். நாட்கணக்காக எந்தவொரு உதவியும் வரவில்லை. பழமைவாதிகளின் குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறுதியில், சிரியாவில் இருந்த PKK/YPG குர்திய படையணிகள் வந்து தான் காப்பாற்றினார்கள். அவர்கள் ஒரு பாதை அமைத்து, அதன் வழியாக யேசிடி மக்களை சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்றனர். இங்கே ஒரு கேள்வி எழலாம். ஏன் ஈராக்கி குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஈராக்கி குர்திஸ்தான் அரசியல் தலைமையானது பழமைவாத- தேசியவாதிகளின் கைகளில் உள்ளது. ஆகவே, ஒரு  பிற்போக்கான- பழைமைவாத அரசாங்கம், "வேற்றினமாக நடத்தப்பட்ட" யேசிடிகளுக்கு உதவ மறுத்ததில் வியப்பில்லை.

சின்ஜார் மலையில் PKK/YPG போராளிகள்
ஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும், அவர்களுக்கு இடையில் மத வெறுப்புணர்வும் இருந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய குர்தியர்கள் யேசிடி குர்தியர்களை வெறுத்தனர். குர்தியர்கள் என்றால் இஸ்லாமியர் மட்டுமே என்பதும், ஒரே மொழி பேசினாலும் யேசிடிகள் வேறு இனம் என்பது போலவும் நடந்து கொண்டனர். இது ஈழத்தில் தமிழர் - முஸ்லிம் வெறுப்புணர்வு போன்றது.

அதற்கு மாறாக, PKK/YPG இயக்கத்தினர், மதச்சார்பற்ற சோஷலிசவாதிகள். அதனால் தான் தக்க சமயத்தில் வந்து உதவினார்கள். (பார்க்க: அமெரிக்காவின் "மனிதாபிமான வான் தாக்குதல்" - அம்பலமாகும் பொய்கள் ) இன்றைக்கும் சின்ஜார் மலைப் பகுதி, PKK போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால், யேசிடிகளின் பிரதேசம், எதிர்கால அரசியல் உரிமை கோரல்களுக்கு காரணமாக வாய்ப்புண்டு.

ஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர். இளம் பெண்கள் மட்டுமல்லாது, குழந்தைகளுடன் இருந்த திருமணமான பெண்களும் பண வசதி படைத்த ஐ.எஸ். முக்கியஸ்தர்களால் அடிமைகளாக வாங்கப் பட்டனர். அவர்கள் பாலியல் அடிமைகளாகவும், வீட்டு வேலையாட்களாகவும் கொடுமைப் படுத்தப் பட்டனர்.

அந்த வீடுகளில் இருந்த அரேபியப் பெண்களும் யேசிடி பெண்கள் மீது இரக்கப் படவில்லை. அவர்கள் உணவு கொடுக்காமல், தண்ணீர் கொடுக்காமல், இன்னும் அதிகமாக கொடுமைப் படுத்தினார்கள். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமது கணவன் பாலியல் அடிமையை வைத்திருப்பதால் ஏற்பட்ட பொறாமை. இரண்டு, யேசிடிகள் மனிதர்களே அல்ல என்ற மதம் சார்ந்த வெறுப்புணர்வு. 

தற்போது யுத்தம் முடிந்து, ஐ.எஸ். வசம் இருந்த பிரதேசங்களை ஈராக்கிய இராணுவம் கைப்பற்றி விட்டது. அதனால், ஆயிரக் கணக்கான யேசிடி பெண்களுக்கு விடுதலை கிடைத்தது. இருப்பினும் இன்னும் சிலர், குறைந்தது ஆயிரம் பேராவது, சிரியாவில் சுருங்கி வரும் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கலாம். சிலர் அடிமைகளாக சவூதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கலாம்.

ஐ.எஸ். எதற்காக யேசிடிகளை அடிமைகளாக்கியது? அதற்கு அவர்கள் பின்பற்றிய கடும்போக்கு மதவாதம் முக்கியமான காரணம். ஒரு  இஸ்லாமிய தேசத்தினுள், கிறிஸ்தவர்களும், யூதர்களும் மட்டுமே சிறுபான்மை மதத்தவராக அங்கீகரிக்கப் படலாம். அதற்காக அவர்கள் ஒரு வரியை கட்டி வந்தால் போதும் என்று குரான் சொல்கிறது. ஆனால், யேசிடி போன்ற "குரானுக்கு அப்பாற்பட்ட மதத்தவர்களை" என்ன செய்வது என்று சொல்லப் படவில்லை. 

இது குறித்து ஐ.எஸ். தனது இஸ்லாமிய அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டது. அவர்கள், இஸ்லாமிய மதம் தோன்றிய காலத்தில், புராதன மதங்களை பின்பற்றிய மக்கள் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். அதாவது, "அவர்கள் ஒன்றில் இஸ்லாமியராக மதம் மாற வேண்டும், அல்லது கொல்லப் படலாம், அடிமைகளாக விற்கப் படலாம்." 1500 வருடங்களுக்கு முந்திய அரேபியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை, ஐ.எஸ். நவீன உலகத்தின் கண்களுக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டியது.

தற்போது ஐ.எஸ். பிடியில் இருந்து மீட்கப் பட்டுள்ள யேசிடி பெண்கள், ஈராக்கி குர்திஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பலர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக மறு திருமணம் செய்வதற்கு அஞ்சுகின்றனர். மிகவும் பழைமைவாத கட்டுப்பாடுகளை கொண்ட யேசிடி சமூகத்தில் இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.

ஏனெனில், சிறுவயது முதலே கற்பை வலியுறுத்தி வரும் சமூகம் அது. திருமணம் செய்யும் வரையில் ஒரு பெண் (ஆணும் தான்) கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. திருமணம் முடித்த தம்பதிகள் மணமுறிவு பெறுவதை நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வாறான பழைமைவாத சமுதாயத்தில், ஐ.எஸ். கொடூரர்களால் பாலியல் அடிமைகளாக வைத்திருந்து கொடுமைப் படுத்தப் பட்ட பெண்களை என்ன செய்வது?

இது தொடர்பாக உள்ளூரிலும், வெளிநாடுகளில் இருந்தும் கடுமையான அழுத்தம் கொடுக்கப் பட்டது. இறுதியில் தலைமை மதகுருவானவர் பாதிக்கப் பட்ட பெண்களை மீண்டும் மதத்தில் சேர்த்துக் கொள்ள இணங்கினார். அதற்காக புனித நீர் தெளித்து தூய்மைப் படுத்தும் சடங்கு நடைபெற்றது. இது அந்த மதத்தைப் பொறுத்தவரையில், ஒரு நவீன தோற்றப்பாடு எனலாம். ஏனெனில், வழமையாக வேறு மதத்திற்கு மாறியவர்களை கூட மீண்டும் சமூகத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். 

ஒரு தடவை, 2007 ம் ஆண்டு, ஒரு பருவ வயது யேசிடி இளம்பெண், இஸ்லாமிய குர்திய இளைஞனுடன் காதல் வசப் பட்டு கூட்டிக் கொண்டு ஓடி விட்டாள். சில மாதங்களின் பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரிந்து வந்துள்ளாள். ஆனால், அவளை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினரே மறுத்து விட்டனர். அவளது மைத்துனர்களால், பட்டப் பகலில், பலர் கூடிப் பார்த்திருக்க, கல்லால் அடித்து கௌரவக் கொலை செய்யப் பட்டாள்.

ஐ.எஸ். பிரதேசத்தில், பாலியல் அடிமைகளாக சொல்லொணா கொடுமைகளை அனுபவித்த பெண்களில் சிலர், தாமாகவே முன்வந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்குக் காரணம், இஸ்லாமியராக மதம் மாறிய பின்னர் அவர்கள் அடிமைகளாக நடத்தப் படவில்லை. சாதாரண "இஸ்லாமிய தேசப் பிரஜையாக" வாழ முடிந்தது. 

இருப்பினும், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு, தப்பியோட முனையக் கூடாது என்றும், அவர்களுக்கு பொறுப்பான முல்லா சுட்டிக்காட்டும் ஒருவரைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு இருந்தது. இன்று இஸ்லாமியராக மதம் மாறிய யேசிடி பெண்கள், திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். சிலநேரம், அவர்களது பிள்ளைகளே "யேசிடிகள் பிசாசை வணங்குவோர்" என்று சொல்கின்றன.

யேசிடி சமூகத்தினரின் இன்னொரு பிரச்சினை, அது தற்போது விரைவாக அழிந்து கொண்டிருக்கும் மதமாக உள்ளது. கனடா உட்பட, பல மேற்கத்திய நாடுகள் ஆயிரக் கணக்கான யேசிடிகளுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துச் சென்றுள்ளன. ஏற்கனவே, ஜெர்மனியில் மிகப்பெரியதொரு புலம்பெயர்ந்த யேசிடிகள் சமூகம் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் பல வருடங்களுக்கு முன்னர் துருக்கியில் இருந்து சென்று குடியேறியவர்கள். அண்மைக் காலம் வரையில் ஈராக்கில் மட்டுமே குறிப்பிடத் தக்க யேசிடி சமூகம் பெரும்பான்மையாக இருந்து வந்துள்ளது. சிரியா, துருக்கி, ஆர்மேனியா, ஜோர்ஜியாவில், இன்னமும் யேசிடிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

யேசிடிகள் புலம்பெயர்வதற்கு முக்கிய காரணம், அந்தப் பிரதேசத்தில் யாரையும் நம்ப முடியாது என்பது தான். "ஒரே மொழி பேசும்", "சொந்த இனமான" (இஸ்லாமிய) குர்தியர்களைக் கூட நம்பத் தயாராக இல்லை. பெஷ்மேர்கா வீரர்கள் காட்டிக் கொடுத்த துரோகம் காரணமாகத் தான், அவர்களது பிரதேசத்தை ஐ.எஸ். ஆக்கிரமிக்க முடிந்தது. அதே காலத்தில், இன்னொரு அதிர்ச்சியையும் சந்தித்தனர். 

நேற்று வரையில் சகோதரர்கள் போன்று பழகிய அயலவர்களான அரேபியர்கள், ஐ.எஸ். வந்தவுடன் அவர்களுக்கு பின்னால் திரிந்தார்கள். ஒரு சில அரேபியர்கள் பாதுகாப்பு வழங்கியதை மறுக்க முடியாது. ஆனால், பெரும்பான்மையானோர் ஐ.எஸ்.க்கு காட்டிக் கொடுத்ததுடன், சொத்துக்களையும் சூறையாடினார்கள். அந்தப் பிரதேசத்தில், இனப் பிரச்சினை எந்தளவு ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதனால், எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை உணரும் யேசிடிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதே பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள்.

இதனுடன் தொடர்புள்ள முன்னைய பதிவுகள்: 

Saturday, November 14, 2015

பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்

"இந்த தடவை, இது ஒரு யுத்தம்!" பிரெஞ்சு தினசரி Le Parisien  தலையங்கம் 

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்து.

உதைபந்தாட்ட மைதானத்தில் கிரனேட் வீசப் பட்டது. கம்போடிய ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் பலியானார்கள். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு ஒன்றில் இருந்த பார்வையாளர்கள் தான் பெருமளவில் பலியாகி உள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்த ஆயுதபாணிகளை, நேரில் கண்ட சாட்சிகள் பல உள்ளன. முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு, கருப்பு உடையணிந்து, AK-47 தானியங்கி துப்பாக்கிகளால் பதற்றப் படாமல், ஆறுதலாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே மூன்று, நான்கு தடவைகள் ரவைக் கூடுகளை மாற்றினார்கள். நிலத்தில் படுத்திருந்த பார்வையாளர்களை, குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஆயுதபாணிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!

அதிகாலை வரையில், பிரெஞ்சு ஊடகங்கள், தாக்குதல் நடத்தியவர்களை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இனந்தெரியாத ஆயுதபாணிகள் என்றே பிற ஐரோப்பிய ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கிடையே, ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் சிலர், வழமை போல தமது இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

வழமை போலவே, சில தமிழ் வலதுசாரிகளும் ஐரோப்பிய நிறவெறியர்களின் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பென்று சொன்ன கதை இது. ஐரோப்பிய நிறவெறியர்கள் (தீவிர வலதுசாரிகள்), இஸ்லாமியருக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், அகதி முகாம்களுக்கு பலத்த பொலிஸ் காவல் போடப் பட்டுள்ளது.

பாரிஸ் தாக்குதலுக்கு முன்தினம், லெபனான், பெய்ரூட் நகரில் ISIS நடத்திய குண்டுத்தாக்குதலில், நாற்பது இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக நடக்கும் சிரியப் போரில், ISIS பயங்கரவாதிகளால் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

பாரிஸ் தாக்குதல் நடந்து பல மணி நேரமாகியும், யாரும் உரிமை கோரவில்லை. சமூக வலைத்தளத்தில் ISIS உரிமை கோரியிருப்பதாக, காலையில் யாரோ அறிவித்தார்கள். அதற்குப் பின்னர், சில நிமிடங்கள் கூடத் தாமதிக்காமல், பிரெஞ்சு அதிபர் ஹோலந்த் "இது ஒரு போர்ப் பிரகடனம்" என்று அறிவித்தார். ISIS கூட, "பாரிஸ் தாக்குதலானது பிரான்ஸ் மீதான போர்" என்று தான் அறிவித்திருந்தது. அதாவது, இரண்டு தரப்பினரும், வரிந்து கட்டிக் கொண்டு போரில் குதிக்கப் போகிறார்கள்.

சமீப காலமாக, ரஷ்யா தான் தனது பிரதான எதிரி என்று ISIS அறிவித்திருந்தது. எகிப்து, சினாய் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதற்கும், தாமே சுட்டு வீழ்த்தியதாக ISIS உரிமை கோரியது. அப்போது "விமானத்தில் குண்டு வைக்கப் பட்டிருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக...." பயமுறுத்திய மேற்குலக அரசுகள், தமது சுற்றுலா பயணிகள் எகிப்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தின.

"ரஷ்ய விமானத்தில் குண்டு இருந்தது தெரியும்" என்று அறிவித்துக் கொண்டிருந்த, அமெரிக்காவும், பிரிட்டனும், ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவில்லை! இருநூறுக்கும் அதிகமான பயணிகள் பலியான போதிலும், எந்த நாடும் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. (ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை பிரான்ஸ், அமெரிக்கா ஆதரிக்கவுமில்லை.)

இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ISIS தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறது. வாரக் கணக்காக நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய விமானக் குண்டுத் தாக்குதல்களால், ISIS நிலைகுலைந்து போயுள்ளது. ISIS நிர்வகிக்கும் நடைமுறை (de facto) "இஸ்லாமிய தேசத்தின்" மேற்குப் பகுதிகளை சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் தான், ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாக, ஈராக்- குர்திஸ்தான் படையணிகள் அறிவித்தன. சிரியா - ஈராக் எல்லையோரம் அமைந்துள்ள சிஞ்சார் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திய படைகள் அதைக் கைப்பற்றியதன் மூலம், ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நடுவில் ஊடுருவி உள்ளது. மேலும், அடுத்ததாக எண்ணை வளம் நிறைந்த மொசுல் நகரை கைப்பற்றப் போவதாக, குர்திய படைகள் அறிவித்தன.

முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ISIS பலவீனமடைந்துள்ள நிலையில், இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

ISIS தனது பிரதான எதிரிகளான ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளை விட்டு விட்டு, எதற்காக பிரான்ஸ் மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்? அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற மேற்குலக நாடுகளால் உருவாக்கப் பட்ட இயக்கம் தான் ISIS. இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே பலர் எடுத்துக் காட்டி விட்டார்கள். விக்கிலீக்ஸ் கூட அது சம்பந்தமான இரகசிய ஆவணங்களை பிரசுரித்திருந்தது. மேற்குலகம் ISIS என்ற பூதத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அது நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

"அரேபியர்களுக்கு உலகில் பத்துக்கும் குறையாத நாடுகள் உள்ளன... தமிழனுக்கு என்றொரு நாடில்லை...!" என்று வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த அறிவும் கிடையாது. உண்மையில், மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் யாவும், ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் படைப்புகள் ஆகும். பிரிட்டிஷ் காலனி ஈராக் என்றும், பிரெஞ்சுக் காலனி சிரியா (மற்றும் லெபனான்) என்றும் பிரிந்தன. அதை நினைவுபடுத்தும் வகையில் தான் ISIS தனது இயக்கத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.

தற்போது, சிரியாவையும், ஈராக்கையும், மீண்டும் பிரிப்பதற்கான திட்டம் மேற்குலக கொள்கை வகுப்பாளரிடம் உள்ளது. காலனிய கால பிரித்தாளும் தந்திரம் மீண்டும் அரங்கேறுகின்றது. ISIS தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரதேசம் "இஸ்லாமிய தேசம்" என்று அழைக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலர் அறியாத ஓர் உண்மை இருக்கிறது.

சிரியாவின் மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கே ஷியா அல்லது அலாவி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுடன் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினரின் பிரதேசம் உள்ளது. அதனை PKK-YPG போன்ற குர்திய இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

மத்தியில் உள்ள "இஸ்லாமிய தேசம்", சுன்னி - முஸ்லிம் சமூகத்தினரின் தாயகமாக உள்ளது. அதாவது, இஸ்லாமிய தேசத்தினுள் சுன்னி முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும். கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, ஷியா, அலாவி முஸ்லிம்களை கூட, ISIS இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டி விட்டது. ஈராக்கிலும் அதே கதை தான். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினர். தெற்கில் ஷியா முஸ்லிம்கள். மத்தியில் சுன்னி முஸ்லிம்கள்.

பாரிஸ் நகரில் நடந்த தாக்குதலின் மூலம், ISIS தனது மேற்குலக எஜமானர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது. பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு, சில தினங்களுக்கு முன்னர், CIA தலைமை நிர்வாகி John Brennan பாரிஸ் வந்திருந்தார். அவர் தன்னைப் போன்று, பிரெஞ்சு புலனாய்வுத் துறையான DGSE தலைமையில் உள்ள Bernard Bajolet உடன் சந்தித்துப் பேசி உள்ளார். மொசாட் பிரதிநிதி ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது. (இந்தத் தகவல் பெல்ஜியத்தில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளமான RTL info, 28 அக்டோபர் 2015 அன்று பிரசுரித்தது. (http://www.rtl.be/info/monde/international/-le-moyen-orient-d-avant-ne-reviendra-pas--766109.aspx#

"சிரியாவின் வரைபடம் இனி ஒருபோதும் முன்னரைப் போல இருக்கப் போவதில்லை..." என்று, புலனாய்வுத் துறை தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பின் போது Bernard Bajolet கூறினார். "தற்போது சிரியாவின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடக்கில் குர்தியர்கள் ஆட்சி செய்கிறார்கள். நாங்கள் சிரியாவின் மத்திய பகுதியை கைப்பற்ற வேண்டும்." என்று தெரிவித்தார்.

அனேகமாக, பிரான்ஸ் நடத்தப் போகும் புதிய போரானது, "இஸ்லாமிய தேசத்தை" தனி நாடாக்கும் போராக இருக்கலாம். அதற்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது அதை ISIS தான் ஆள வேண்டும் என்றோ, எந்தக் கட்டாயமும் இல்லை. மேற்கத்திய வல்லரசுகள் புதிதாக உருவாக்கப் போகும், "ஜனநாயக ISIS கட்சி" அந்தப் பிரதேசத்தை நிர்வகிக்கலாம். எது எப்படி இருப்பினும், மத்திய கிழக்கின் வரைபடம் மாற்றியமைக்கப் படவுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.


பிரான்சில் அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரம், பிரெஞ்சு தேசியக் கொடியை புரபைலில் மாற்றுவது நியாயமான செயலாகத் தெரியவில்லை. நூற்றுக் கணக்கான வருடங்களாக, ஏகாதிபத்திய வடிவில், காலனித்துவ எஜமானாக, பல உலக நாடுகளின் மக்களை ஒடுக்கிய சின்னமாக பிரெஞ்சுக் கொடி உள்ளது. முன்னாள் பிரெஞ்சுக் காலனி நாடுகள், இன்றைக்கும் பிரான்சுக்கு காலனிய வரி கட்டிக் கொண்டிருக்கின்றன.

பிரெஞ்சுக் கொடியை உயர்த்துவற்கும், உலகம் அறிந்த அமெரிக்க ஏகாதிபத்திய கொடியை உயர்த்துவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வியட்நாமிய யுத்தத்தில், பிரான்சின் இடத்தை தான் அமெரிக்கா பிடித்துக் கொண்டது. கடந்த பல தசாப்த காலமாக, பிரான்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளது.

யாராவது சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்தும் பொழுது, அது பெரும்பான்மை தமிழ் மக்களால், ஒரு அவமானச் சின்னமாக கருதப்படுகின்றது. அதே மாதிரி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொடிகளும், ஒடுக்கப் பட்ட மக்களை அவமதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாரிஸ் தாக்குதலில் கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிரெஞ்சுக் கொடியால் புரபைல் படத்தை போர்த்திக் கொள்வதை தவிர்ப்பதற்கும் அது தான் காரணம். பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசின் செயல்களை பற்றி எதுவும் அறியாமல், தமது உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களின் தியாகம் மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக தவிர்த்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவோர், பிரெஞ்சு அரச பயங்கரவாதிகளின் கொடியை உயர்த்துவதால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

இந்த இடத்தில், பிரான்சின் கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத காரணத்தால், தமது புரபைலில் பிரெஞ்சுக் கொடியை போட்டுக் கொண்ட அப்பாவி மக்களை குற்றஞ் சாட்டவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பிரான்ஸில் கொல்லப் பட்ட மக்களுக்காக மட்டுமல்லாது, பிரெஞ்சு அரசினால் கொல்லப் பட்ட ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

Friday, February 27, 2015

தொல்பொருட்களை நாசமாக்கிய ஐ.எஸ். மத அடிப்படைவாதிகளின் பண்பாட்டு அழிப்பு


ஈராக்கில் மொசுல் நகரில், 2500 வருடங்கள் பழமையான தொல்பொருட்கள், ISIS மத அடிப்படைவாதிகளால் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. மொசுல் மியூசியத்தில் நடந்த அராஜகத்தை தாங்களே வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அது தொடர்பான சில குறிப்புகள்.

ஈராக் நாட்டை ஆண்ட சதாம் ஹுசைன் எந்தளவு கொடுங்கோலனாக இருந்தாலும், தனது தாய்நாட்டின் பழம் பெருமை வாய்ந்த தொல்பொருட்களை பேணிப் பாதுகாத்து வந்தார். ஆனால், ஈராக்கிற்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்ய விரும்பிய அமெரிக்கா, சதாமை பதவியில் இருந்து அகற்றி விட்டு, தனது படைகளை அனுப்பி ஆக்கிரமித்தது.

அப்போதே ஈராக்கின் தொல்பொருட்களை நாசமாக்கும் அராஜக செயல்கள் தொடங்கி விட்டன. பாக்தாத், மற்றும் பல நகரங்களில் இருந்த மியூசியங்கள் சூறையாடப் பட்டன. திருடர்கள் தாம் கொண்டு செல்ல முடியாதவற்றை அடித்து நொறுக்கினார்கள். ஈராக்கில் திருடப் பட்ட பொக்கிஷங்கள், மேற்கத்திய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப் பட்டன.

ஈராக் மட்டுமல்ல, சிரியாவும் பல்லாயிரம் வருட காலம் பழமையான, அரும் பெரும் தொல்பொருட்களை கொண்ட நாடு தான். அங்கேயும் அமெரிக்கா வெறுத்த ஆசாத்தின் சர்வாதிகார அரசு தான், அந்தப் பொக்கிஷங்களை பாதுகாத்து வந்தது.

அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ஆசாத் அரசுக்கு எதிரான "விடுதலைப் போராளிகளை" ஆதரித்தார்கள். அந்த "விடுதலைப் போராளிகள்" வேறு யாருமல்ல. சன்னி இஸ்லாம் மத அடிப்படைவாதக் குழுக்கள் தான். மேற்குலகம் "மிதவாத" சாயம் பூசிய FSA கூட, ஒரு மத அடிப்படைவாத அமைப்பு தான். சிரியாவில் பல பகுதிகள் தீவிரவாத இயக்கங்களின் கட்டுப்பாட்டில் வந்த போதே, பழம் பெருமை வாய்ந்த கலைப் பொக்கிஷங்களை அடித்து நொறுக்கி நாசமாக்கும் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.

சன்னி இஸ்லாம் மத அடிப்படைவாதக் குழுக்கள், இஸ்லாத்திற்கு முந்திய நாகரிகங்களை காட்டும் சிலைகள், சிற்பங்கள், தொல்பொருட்களை மட்டும் அழிக்கவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இஸ்லாமிய தத்துவ அறிஞர்கள், கவிஞர்களின் சிலைகள், சமாதிகளையும் உடைத்தார்கள்.

சிரியா உள்நாட்டுப் போரில் ஆதிக்கம் பெறத் தொடங்கிய, ISIS, அல் நுஸ்ரா ஆகிய இரண்டும் ஏட்டிக்குப் போட்டியாக சிலை உடைப்புகளில் ஈடுபட்டன. உண்மையில், பாரம்பரிய தொல்பொருட்களை அழிக்கும் மரபு இஸ்லாம் எனும் மதத்திற்கு மட்டுமே உரிய விசேட அம்சம் அல்ல. 

17 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. குறிப்பாக புரட்டஸ்தாந்து மதப் பிரிவை ஸ்தாபித்த லூதரை பின்பற்றிய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், ஏசு, மரியாள் சிலைகளை உடைத்து நொறுக்கினார்கள். குறிப்பாக, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில், நிறைய சிலை உடைப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

ஒரு காலத்தில், பாக்தாத்தை தலைநகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யம், மத்திய கிழக்கில் மிகப் பெரிய பிரதேசத்தை ஆண்டது. இஸ்லாமிய கலீபாக்களின் காலத்தில் கூட, பண்டைய நாகரிகத்தை காட்டும் பொக்கிஷங்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை. இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கான படையெடுப்பு நடந்த காலத்தில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. 

மதம் பரப்பும் போரில், சில பழம் பெருமை வாய்ந்த நகரங்கள் அழிந்துள்ளன. ஆனால், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இஸ்லாம் ஆதிக்க மதமான பின்னர், அப்படி எதுவும் நடக்கவில்லை. குடிமக்களுக்கும், தேசத்தின் வளங்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கும் பொறுப்பு மன்னருடையது. அந்தக் கடமையை இஸ்லாமிய கலீபாக்கள் நிறைவேற்றி வந்தனர்.

ஆகையினால், கண்டிக்கப் பட வேண்டிய ஐ.எஸ். மத வெறியர்களின் செயலை, ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கும் எதிரானதாக திசை திருப்புவது உள்நோக்கம் கொண்டது. முஸ்லிம்கள் எல்லோரும் சிலை உடைப்பாளர்கள், அல்லது அதை ஆதரிப்பவர்கள் என்று கூறுவது அரசியல் பிரச்சாரமே தவிர, உண்மை அல்ல. 

எல்லா மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் இருப்பார்கள். அவர்கள் மத நூல்கள் கூறும் போதனைகளை தமது அரசியலுக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்துக் கொள்வார்கள். இன்றைக்கும் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் குழுக்களுக்கும், ஐ.எஸ்., அல்கைதா போன்ற இஸ்லாமிய அடிபப்டைவாத குழுக்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளில், நடைமுறையில் உள்ள அரசு அதிகாரம் மிகவும் பலமானது. அதனால், மத அடிப்படைவாதிகளினால் எதுவும் செய்ய முடியாதுள்ளது. ஆனால், சிரியா, ஈராக்கில் நிலைமை அப்படி அல்ல. அங்கேயுள்ள அரசு அதிகாரம் மிகவும் பலவீனமானது. தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை மீட்க முடியாமல் வருடக் கணக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த குழப்பகரமான சூழ்நிலையில், ஐ.எஸ். என்ற மிகவும் பலமான மத அடிப்படைவாத இயக்கம், தனது அராஜகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

ISIS இயக்கம், ஏற்கனவே பல தொல்பொருட்களை சூறையாடியுள்ளது. சிரியாவில் உள்ள மியூசியங்களில் திருடப் பட்ட தொல்பொருட்கள், பிரிட்டனில் கள்ளச் சந்தையில் விற்கப் பட்டுள்ளன. இதன் மூலம், ஐ.எஸ். இயக்கம் தனது நிதித் தேவையை பூர்த்தி செய்து கொண்டது. (Islamic State is selling looted Syrian art in London to fund its fight)

மேலும், மொசுல் அருங்காட்சியகத்தில் அடித்து நொறுக்கப் பட்ட பொக்கிஷங்கள் அசலானவை அல்ல! அவை காலனிய காலத்தில் பிளாஸ்டர் சீமெந்து கலந்து செய்யப் பட்ட போலிகள். ஒரிஜினல் பொக்கிஷங்கள் சில பாக்தாத்தில் உள்ளன. பெரும்பாலான தொல்பொருட்கள் காலனிய காலத்தில் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப் பட்டன. அவை இன்றைக்கும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. (Islamic State fighters smash historic statues in Iraq)

எது எப்படியிருப்பினும், ISIS போன்ற மத அடிப்படைவாத அல்லது பயங்கரவாத அமைப்புகளின் செயல்கள், மத்திய கிழக்கில் வாழும் பெரும்பான்மையான அரபு- இஸ்லாமியருக்கும் எரிச்சலூட்டுவதாகவே அமைந்துள்ளன. ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களில் குறைந்தது ஐந்து அல்லது பத்து சதவீதம் அவர்களை ஆதரிக்கலாம். மற்றவர்கள் எதிர்த்துப் பேசினால் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு பக்கம் ஈராக் அரசும், ஷியா ஆயுதபாணிக் குழுக்களும், ஈராக்கில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம், ஆசாத் அரசும், ஹிஸ்புல்லாவும் சிரியாவில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றன. மேற்குலகில் இருப்பவர்கள், உண்மையிலேயே சிரியா, ஈராக்கில் உள்ள தொல்பொருட்களை பாதுகாக்க விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்கப் போராடிக் கொண்டிருக்கும் அரச படைகளை ஆதரிப்பது தான். 

ஆனால், அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் நேரங்களில், மேற்குலகம் மெத்தனப் போக்கை காட்டி வருகின்றது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ளும் ISIS, ஈராக், சிரியா மக்களுக்கு எதிரான பண்பாட்டு அழிப்புப் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

Sunday, August 24, 2014

அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்மங்கள்


ஒரு ISIS ஜிகாதிப் போராளி, அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி (James Foley) இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப் படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. Google நிறுவனத்திற்கு சொந்தமான Youtube, அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது.

இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. Twitter நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர் கணக்கு இடைநிறுத்தப் படும் என்று அறிவித்தது. ஏற்கனவே பகிர்ந்து கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு டிவிட்டர் பக்கம் வர விடாமல் தண்டிக்கப் பட்டார்கள்.

இந்தத் தகவலை டிவிட்டரே நேரடியாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஏற்கனவே, ISIS சிரியாவில்  பலரது தலைகளை துண்டித்து, அவற்றை பகிரங்கமாக இணையத்தில் வெளியிட்டது. அவை டிவிட்டரில் பல தடவைகள் பகிர்ந்து கொள்ளப் பட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

ஜேம்ஸ் ஃபாலி கொலைக் காட்சிகளை காட்டும், அமெரிக்க அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்ட புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டன. அதைத் தான் தற்போது எல்லா ஊடகங்களும், சமூக வலையமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் ISIS ஏற்கனவே பல நூற்றுக் கணக்கானோரின் தலைகளை வெட்டிய பொழுது கவனிக்காத ஊடகங்கள், ஒரு அமெரிக்கரின் கொலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

2012 நவம்பர் மாதம் ஜேம்ஸ் ஃபாலி கடத்தப் பட்டு காணாமல்போயுள்ளார். அப்போது, சிரிய அரச படைகளே அவரைக் கடத்திச் சென்றதாக, வட அமெரிக்க ஊடகங்கள் சில அறிவித்தன. அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜேம்ஸ் ஃபாலி, இதே ISIS பயங்கரவாத நண்பர்கள் கொடுத்த தகவல்களைத் தான், செய்திகளாக சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஜேம்ஸ் ஃபாலி என்ற அமெரிக்க ஊடகவியலாளரின் கொலை, உண்மையிலேயே நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், அதைக் கொண்டு உலக மக்கள் முழுவதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்துவதற்கு, ஊடகங்கள் அயராது பாடுபட்டன. என்ன இருந்தாலும், அமெரிக்க இரத்தம் விலை மதிப்பற்றது அல்லவா?

அமெரிக்கா தானே வளர்த்து விட்ட இசிஸ் எனும் பூதத்துடன் போரிட்டு அடக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்றது. இது வரை காலமும், அமெரிக்க விமானங்கள் போட்ட குண்டுகள் இசிஸ் அமைப்பை நிலைகுலைய வைக்கவில்லை. யாருமற்ற பாலைவனத்தில் குண்டு போட்டால் என்ன பிரயோசனம்?

பெஷ்மேர்கா எனப்படும் ஈராக்கிய குர்திஷ் படையினர், இசிஸ் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும், தம்மிடம் அந்தளவு ஆயுத பலம் இல்லை என்றும் குறைப் பட்டனர். ISIS போராளிகள், அமெரிக்க ஹம்வீ கவச வாகனங்களை பயன்படுத்துகின்றனர். சிறிய ரக ஆயுதங்களினால் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது. டயர் பார்த்து சுட்டால் கூட, சில்லுக்கு காற்றுப் போன நிலையிலும் 80 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று நிற்கும் வல்லமை கொண்டது.

ஹம்வீ கவச வாகனங்களை எதிர்த்து நிற்க முடியாமல், பல இடங்களில் பெஷ்மேர்கா படையணிகள் பின்வாங்கி ஓடியுள்ளன. தற்போது அமெரிக்காவும், பிரிட்டனும் பெஷ்மேர்கா படையினருக்கு உதவி செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அவை கனரக ஆயுதங்களாக இருக்குமா என்று தெரியவில்லை.

கடைசியாக, "மனித குலத்திற்கு விரோதமான ISIS அமைப்பை முற்றாக அழிக்கப் போவதாக" அமெரிக்க அரசு சூளுரைத்துள்ளது. இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், ISIS இயக்கத்தை அழிக்க வேண்டுமானால், சிரியாவுகுள்ளே சென்றும் போரிட வேண்டி வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சிரியாவில் ஒரு பகுதியையும், ஈராக்கில் ஒரு பகுதியையும் தனது இஸ்லாமிய அரசு என்று ISIS அறிவித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.

ஆனால், எதற்காக சிரியாவுக்குள் அமெரிக்கப் படைகள் செல்ல வேண்டும்? மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஈராக் அரசுடன், சிரிய அரசை ஒப்பிட முடியாது. இசிஸ் போன்ற கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான போரில், சிரிய அரச படைகள் குறிப்பிடத் தக்க வெற்றிகளை பெற்றுள்ளன. முன்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களை விடுவித்துள்ளன. தற்போது, சிரியாவில் ISIS அமைத்துள்ள இஸ்லாமிய அரசின் தலைநகரம் என்று கருதப்படும், ராக்கா நகரினை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன. ராக்கா மீது, சிரியப் படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி, ISIS பாதுகாப்பு அரண்களை நிலைகுலைய வைத்துள்ளது. 

ராக்கா நகருக்கு அருகாமையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விமானத் தளம், தற்போது சிரிய அரச படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சிரியாவினுள் அமெரிக்கப் படை நடவடிக்கை எடுக்கப் படுமானால், அந்த விமானத் தளம் முக்கியமாக இருக்கும். ISIS பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தான், அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்றால், அதனை சிரிய அரசுடன் சேர்ந்து செய்யலாமே? சிரிய அரச படைகளுக்கு ஆயுதங்களை வழங்கலாமே?

ISIS என்பது யார்? அவர்களது கொள்கைகள் என்ன? குறிக்கோள் என்ன? இவை எல்லாம் அறியாமல், முன்னொரு காலத்தில் அமெரிக்கா அவர்களை ஆதரிக்கவில்லை. அமெரிக்கர்கள் அந்தளவு வெகுளிகளாக இருப்பார்கள் என்று நினைத்தால், நாங்கள் தான் அறிவிலிகள் ஆவோம். "அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் சுதந்திரமாக செயற்படுவதாக" நாங்கள் நம்பினாலும், அமெரிக்கர்களுக்கு அதனால் எந்த நஷ்டமும் இல்லை. சிரியாவை ஆக்கிரமிப்பதும், அதன் மூலம் ஈரானின் கழுத்தை இறுக்குவதும் தான், அமெரிக்காவின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, ISIS ஒரு சாட்டாக பயன் படுகின்றது. தேவை முடிந்த பின்னர் ISIS இயக்கத்தை முற்றாக அழித்து விடலாம். 

இருபது வருடங்களுக்கு முன்னர், அல்கைதாவும், தாலிபானும் அமெரிக்காவால் உருவாக்கப் பட்டன. பிறகு அவற்றை எதிர்த்துப் போராடப் போவதாகக் கூறி, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. அதையெல்லாம் நாங்கள் இப்போது மறந்து விட்டோம்.

"எல்லாம் அவன் செயல்!" 
"அவனன்றி ஓர் அணுவும் அசையாது!"

Thursday, August 14, 2014

அமெரிக்காவின் "மனிதாபிமான வான் தாக்குதல்" - அம்பலமாகும் பொய்கள்



வட ஈராக்கில், யேசிடி குர்திய மக்களை காப்பாற்றுவதற்காக,அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தியதாக மேற்குலக ஊடகங்களில் அறிவிக்கப் பட்டது. உண்மையில், இந்த "மனிதாபிமான நடவடிக்கை" காரணமாக அமெரிக்கா மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர், ஈராக்கில் குண்டு போடவில்லை. யேசிடி குர்திய மக்களை காப்பாற்றுவதை விட, எர்பில் நகரில் உள்ள எக்சன்-மொபில் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணைக் கிணறுகளை பாதுகாப்பதே, அமெரிக்க வான் தாக்குதல்களின் உண்மையான நோக்கமாக இருந்தது.

 "யேசிடி" என்பது இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் முந்திய புராதன கால மதம். அதற்கு சரதூசரின் மதத்துடன் சில தொடர்புகள் உள்ளன. ஆனால், யேசிடி அதிலிருந்து மாறுபட்ட வேறொரு மதம். யேசிடி மதத்திற்கும், முருக வழிபாட்டிற்கும் தொடர்பிருக்கலாம். இரண்டிலும் மயில் பிரதான பாத்திரம் வகிக்கின்றது. வட ஈராக்கில் வாழும் குர்து மொழி பேசும் மக்களில் ஒரு பிரிவினர், இன்றைக்கும் யேசிடி மதத்தை பின்பற்றி வருகின்றனர். 

மதவாத இயக்கமான ISIS, அந்த மக்கள் "பிசாசை வழிபடுபவர்கள்" என்று கூறி வெளியேற்றியுள்ளது. ISIS கையில் அகப்பட்ட பெண்கள் மானபங்கப் படுத்தப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். குறைந்தது 500 யேசிடிக்கள் கொன்று புதைக்கப் பட்டனர். ISIS ஆக்கிரமிப்பாளர்களின் இனப்படுகொலைக்கு தப்பிய யேசிடி குர்தியர்கள், மலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

வட ஈராக்கில் வாழ்ந்து வந்த சிறுபான்மை இனமான, யேசிடி மதத்தை பின்பற்றும் குர்து மக்கள், ISIS மதவெறியர்களினால் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். இனப்படுகொலைக்கு தப்பிய பத்தாயிரம் யேசிடி குர்தியர்கள், சின்ஜார் மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தணலாகக் கொதிக்கும் வெயிலில், உணவின்றி, நீரின்றி, சிறு குழந்தைகளுடன் பல மைல் தூரம் நடந்து சென்ற மக்களைப் பற்றிய துயரக் கதைகளுக்கு, மேற்கத்திய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பியதாகவும், மலைகளில் அகப்பட்ட மக்களை காப்பாற்றி கொண்டு சென்றதாகவும் சொல்லப் பட்டது. இந்த மனிதாபிமான நெருக்கடியை காரணமாகக் காட்டி, அமெரிக்க போர் விமானங்கள் ISIS நிலைகளின் மீது குண்டு வீசித் தாக்குவதாகவும் அறிவிக்கப் பட்டது.

ஆனால், உண்மையில் அங்கே நடந்தது என்ன?

அமெரிக்க வான் தாக்குதல் நடப்பதற்கு முன்னரே, சிரியாவில் நிலைகொண்டிருந்த PKK இயக்கப் போராளிகள் சின்ஜார் பகுதிக்குள் ஊடுருவினார்கள். அவர்கள் ஏற்கனவே, வட சிரியாவில் குர்து மொழி பேசும் மக்களின் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார்கள். ISIS மதவாத இயக்கத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருகிறார்கள். 

PKK போராளிகள், யேசிடி குர்தியர்களை, வட சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதற்குப் பிறகு தான், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த மக்களை தாமே மீட்டதாக ஊடகங்களுக்கு அறிவித்துக் கொண்டன. எத்தனை பெரிய பொய்? ஆனால், மேற்குலகம் எதைச் சொன்னாலும் உண்மை என்று நம்பும் மக்கள் உலகில் இருக்கும் வரையில், இந்தப் பொய்கள் அரங்கேறும்.

உண்மையில், பெரும்பான்மையான யேசிடி குர்திய மக்களை மீட்டவர்கள் PKK போராளிகளே! இன்று வரைக்கும் சின்ஜார் நகரம் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு ஆதாரமாக, யேசிடி மதத்தவரின் புனித ஸ்தலத்தை, PKK போராளிகள் பாதுகாப்பதை இங்கேயுள்ள படத்தில் பார்க்கலாம்.

இந்தத் தகவலை, மீட்பு நடவடிக்கைக்காக ஈராக் குர்திஸ்தனுக்கு சென்று வந்த ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர் Ulla Jelpke உறுதிப் படுத்தி உள்ளார். குர்திஸ்தானில் நின்ற நெதர்லாந்து ஊடகவியலாளர் ஒருவரும், தொலைக்காட்சி கமெராவுக்கு முன்னால் ஒரு தகவலைக் கூறினார். "யேசிடி மக்கள் சிரியாவை நோக்கி அகதிகளாக செல்வதாகவும், அவர்கள் ஏன் ஈராக் குர்திஸ்தான் பக்கம் வரவில்லை என்ற காரணம் தெரியவில்லை" என்று கூறினார்.


யேசிடி குர்து மக்கள் பற்றிய முன்னைய பதிவு:
யேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்

Thursday, July 03, 2014

"பாபிலோனின் புதல்வன்" : ஈழத்தின் துயரத்தை நினைவுபடுத்தும் ஈராக் திரைப்படம்


ஹாலிவூட்டில் செட் போட்டு, ஈராக் பற்றி செயற்கையான காட்சிப் படுத்தல்களுடன் தயாரிக்கப் படும் அமெரிக்கத் திரைப் படங்களுக்கு மத்தியில், ஓர் உண்மையான ஈராக் திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நெதர்லாந்தில் வாழும் ஈராக்கிய இயக்குனர் Mohamed Al Daradji தயாரித்து, 2009 ம் ஆண்டு வெளியான "பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon) திரைப்படம், பல சர்வதேச பரிசுகளை வென்றுள்ளது. 

"பாபிலோனின் புதல்வன்", ஈராக்கில் நடந்த சம்பவங்களை வைத்து பின்னப் பட்ட கதை என்றாலும், ஈழப் போரில் நடந்த சம்பவங்களுடனும் அது பொருந்துகின்றது.

நாம் வாழும் நாடுகளும், பேசும் மொழிகளும் மட்டுமே வேறு வேறு. உலகம் முழுவதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளும், அனுபவங்களும் ஒன்று தான். 

தமிழகத்தில், ஏராளமான ஹாலிவூட் குப்பைகளை டப் பண்ணி வெளியிடும் நேரத்தில், இது போன்ற நல்ல படங்களை தமிழில் டப் பண்ணி வெளியிட்டால், தமிழ் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும். ஒரு சினிமாவினால் சமூக விழிப்புணர்வை உண்டாக்கிய திருப்தியும் கிடைத்திருக்கும். கோடம்பாக்கம் சினிமாத் துறையினருக்கு இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.

Son of Babylon படத்தின் கதை இது தான்:

2003 ம் ஆண்டு, ஈராக்கில் சதாமின் ஆட்சி கவிழ்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடங்கிய சில வாரங்களில் இந்தக் கதை நடக்கிறது. அஹ்மத் என்ற 12 வயது சிறுவன், தனது பாட்டியுடன் காணாமல் போன தந்தையை தேடிப் பயணத்தை தொடங்குகிறான். பயணத்தின் நடுவில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகின்றனர்.

ஈராக்கின் வடக்கே உள்ள குர்திஸ்தானில் இருந்து, தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஸ்ரியாவை நோக்கி, அவர்களதுஆரம்பமாகின்றது.  அஹ்மத்தின் தாய் இறந்து விட்டாள். பாட்டியின் மகன் தான், அவனது தந்தை. மகனைத் தேடும் தாயினதும், தந்தையைத் தேடும் மகனினதும் உணர்வுகளுடன் நாங்களும் ஒன்று கலக்க முடிகின்றது.

1991 ம் ஆண்டு, குர்திஸ்தான் மீது தாக்குதல் நடத்திய சதாமின் ஈராக் இராணுவம், அஹ்மத்தின் தந்தையை கைது செய்து கொண்டு சென்றுள்ளது. அதற்குப் பிறகு அவர் காணாமல்போயுள்ளார். வட இலங்கையில் நடந்ததைப் போன்று, வட ஈராக்கில் வாழும் குர்து மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் நடத்திய காலகட்டம் அது. அன்றைய ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் இராணுவம், அரபு மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த படையினரைக் கொண்டிருந்தது. 

ஈராக் இராணுவத்தின் அடக்குமுறை காரணமாக, பெண்களும், குழந்தைகளுமாக பல ஆயிரம் குர்திஷ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதைவிட பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப் பட்டு, தெற்கு ஈராக்கிய சிறைகளில் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர் காணாமல்போயினர். அதாவது, இரகசியப் புதைகுழிகளுக்குள் கொன்று புதைக்கப் பட்டனர்.

ஈழப் போரிலும், அதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை, நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. வட இலங்கையில் கைது செய்யப் பட்டு கொண்டு செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள், தென்னிலங்கையில் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டனர். சிறி லங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல்போய், பின்னர் புதைகுழிகளுக்குள் கண்டெடுக்கப் பட்ட இளைஞர்கள் ஏராளம்.

இப்போது மீண்டும் படத்திற்கு வருவோம். அஹ்மத்தின் பாட்டி, நஸ்ரியாவில் உள்ள சிறையில் தனது மகன் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாக கேள்விப் பட்டு, பேரனையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்கிறாள். அவர்கள் வடக்கே குர்திஸ்தானில் வாழும், குர்திய சிறுபான்மை இனத்தவர்கள். பாட்டிக்கு குர்து மொழி மட்டுமே தெரியும். பெரும்பான்மை அரபி மொழி பேசும் பிரதேசத்தில் மொழி தெரியாது தவிக்கிறாள். அந்த நேரத்தில், அரபி பேசத் தெரிந்த சிறுவன் அஹ்மட் உதவுகிறான். 

அந்தக் காட்சிகள், வட இலங்கையில் வாழும் தமிழர்கள், தென்னிலங்கைக்கு சிறைப் பிடித்து கொண்டு செல்லப்பட்ட உறவுகளை தேடிச் செல்வதை நினைவு படுத்துகின்றன. அவர்களும் சிங்களம் மட்டும் பேசும் பிரதேசங்களில் மொழி தெரியாமல் தவிப்பதுண்டு. ஈராக்கில் அரேபியருக்கு குர்து மொழி தெரியாத மாதிரி, இலங்கையில் சிங்களவர்களுக்கு தமிழ் பேசத் தெரியாது. உலகின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றனர். இவ்வாறு திரைப்படக் காட்சிகள் முழுவதும், ஈழத் தமிழரின் இன்னல்களையும் நமது மனக் கண் முன்னால் கொண்டு வருகின்றது.

அஹ்மத்தும் பாட்டியும் பாக்தாத் செல்லும் வழியில், அமெரிக்கப் படையினரின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வழி நெடுகிலும் புகை மண்டலமும், இடிந்த கட்டிடங்களும் போர் இன்னும் ஓயவில்லை என்பதைக் காட்டுகின்றது. பாக்தாத் நகரில், ஒரு தனியார் பஸ் வண்டியை பிடித்து, நஸ்ரியா நோக்கிச் செல்கின்றனர். 

நீண்ட பயணத்திற்குப் பின்னர், நஸ்ரியா நகரை வந்தடையும் அஹ்மட்டும், பாட்டியும், அங்கேயிருந்த சிறைச்சாலை வெறுமையாக இருப்பதைக் காண்கின்றனர். ஒரு சில அதிகாரிகள் மட்டும் காணாமல்போனவர்களின் பட்டியலுடன் காத்திருக்கின்றனர். அந்த இடத்தில் அவர்களைப் போன்று, இன்னும் பல பெண்கள் தமது காணாமல்போன உறவுகளைத் தேடி வந்திருப்பதைக் காண்கின்றனர்.

காணாமல்போனவர்களை தேடி வரும் உறவினர்களுக்கு, அதிகாரிகள் தமது பட்டியலில் இல்லாத பெயர்கள், மனிதப் புதைகுழிகளுக்குள் புதைக்கப் பட்டிருக்கலாம் என அறிவுறுத்துகின்றனர். சதாம் ஆட்சிக் காலத்தில் கொன்று புதைக்கப் பட்டவர்களின் புதைகுழிகள் தற்போது தோண்டப் பட்டு வருகின்றன. 

அஹ்மத்தும், பாட்டியும், வழியில் கண்ட மற்றவர்களுடன், மனிதப் புதைகுழிகளை தேடிச் செல்கின்றனர். தமது கணவன் மாரை இழந்த பெண்கள், மகன் மாரை  இழந்த பெண்கள், இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு துயரக் கதை ஒளிந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக சிலர் தமது உறவுகளின் சடலங்களை கண்டெடுக்கிறார்கள். மற்றவர்கள் அடுத்த புதைகுழியை தேடிச் செல்கிறார்கள்.

இதற்கிடையே பயணத்தின் போது சந்திக்கும் ஓர் அந்நிய வாலிபன், வழியில் அஹ்மட்டுடன் நட்பு கொள்கிறான். அவனது தந்தையை கண்டுபிடிப்பதற்கு, புதைகுழிகள் இருக்குமிடத்தை கூட்டிக் கொண்டு சென்று காட்டுவதற்கு, தானாகவே உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பருக்கு கொஞ்சம் குர்து மொழி பேசத் தெரிந்திருக்கிறது. அவனுக்கு எப்படி குர்து தெரியும் என்று பாட்டி கேட்கிறாள்.

அதற்கு அவன், குர்திஸ்தானில் நடந்த போரில், சதாமின் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்தை சொல்கிறான். உடனே துணுக்குற்ற பாட்டி, அவன் குர்திஷ் மக்களை கொன்று குவித்த முன்னாள் போர்வீரன் என்பதை அறிந்து கொண்டு வெறுக்கிறாள். அஹ்மத்தையும் அவனோடு பேச வேண்டாம் என்று தடுக்கிறாள். ஆனால், அரசியலை விட அந்த அந்நிய ஆடவனின் தன்னலம் கருதாத உதவி, 12 வயது சிறுவனான அஹ்மத்தை பெரிதும் கவர்ந்து விடுகின்றது.

கடந்த கால இனக் குரோத போரினால் பாதிக்கப்பட்ட ஒருவரும், அடக்குமுறைக் கருவியாக செயற்பட்ட ஒருவரும், சந்திக்க நேரும் சந்தர்ப்பம், ஈராக்கில் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும் நடக்கலாம். ஒரு காலத்தில், தன்னால் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனையை, தற்போது சாதாரண மனிதனாக மாறியிருக்கும் முன்னாள் போர்வீரன் உணர்ந்து கொள்கிறான். "உண்மையில் குர்து மக்களை கொல்வதற்கு தான் மேலிடத்தால் நிர்ப்பந்திக்கப் பட்டதாகவும், போரில் நடந்த குற்றங்களுக்காக வருந்துவதாகவும்," அந்த முன்னாள் போர்வீரன் நடந்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருகிறான். ஆரம்பத்தில், அவனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள அஹ்மத்தின் பாட்டி மறுக்கிறாள். 

ஆயினும், எதிர்பாராமல் சந்தித்த அரபி நண்பனின் உதவியால் தான், அவர்களால் புதைகுழிகள் இருக்குமிடத்திற்கு செல்ல முடிகின்றது. படத்தின் முடிவில் அவன் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பாட்டி, போர் நடந்த காலத்தில் கட்டாயப் படுத்தப் பட்டதன் காரணமாக தவறிழைத்த முன்னாள் போர்வீரனை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவதாக கூறுகின்றாள். அந்த முன்னாள் அரபுப் படைவீரனின் இடத்தில், ஒரு சிங்கள படையினனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த குர்து மூதாட்டியின் இடத்தில், ஒரு ஈழத் தமிழ் மூதாட்டியை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்கே குர்திஸ்தான், இங்கே ஈழம். நாடுகள் தான் வேறு, கதை ஒன்று தான்.

காணாமல்போன உறவு தற்போது உயிருடன் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்ட அஹ்மத்தும், பாட்டியும் ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். அத்துடன் படம் முடிகின்றது. ஈராக்கில் கடந்த நாற்பது வருடங்களில் ஒரு மில்லியன் பேரளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. நாடு முழுவதும் சுமார் 250 மனிதப் புதைகுழிகள் உள்ளன. பலரது சடலங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இன்னமும் பலர் காணாமல் போனவர்களாக உள்ளனர்.

"பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon)படத்தின் வீடியோ: