Showing posts with label தமிழ்த்தேசியம். Show all posts
Showing posts with label தமிழ்த்தேசியம். Show all posts

Thursday, September 07, 2023

Victim card- ஒரு தேசியவாதக் கோளாறு

 😇

யாராவது தமிழ்த் தேசியவாதிகள் மீது விமர்சனம் வைத்தால், அவர்கள் உடனே victim card தூக்கி பிடிக்க தொடங்கி விடுவார்கள். அதை அவர்கள் பாதுகாப்பு கவசமாக மட்டுமல்லாது, மற்றவர்கள் மீது ஆளுமை செலுத்தவும், ஏன் அத்துமீறவும் கூட பயன்படுத்துவார்கள். அதாவது victim என்ற கொடியை பிடித்துக் கொண்டு எதுவும் செய்யலாம். அத்துமீறல்களை நியாயப் படுத்தலாம். தம்மின மக்களை தமது தலைமையின் கீழே அடக்கி ஒடுக்கி வைக்கலாம். ஏனென்றால், குற்றமே ஆனாலும் அதை victim செய்தால் தவறில்லை அல்லவா?

அவர்களால் பாதிக்கப்பட்ட யாராவது உரிமைக்குரல் எழுப்பினால், "victim blame பண்ணாதே!" என்று மிரட்டி வைக்கலாம். இது தான் victim card play பண்ணுவது எனப்படும். இதைப் பல தமிழ்த் தேசியவாதிகள் சிறப்பாக செய்கின்றனர். கவனிக்க: சிங்களத் தேசியவாதிகள், யூத தேசியவாதிகள், ஆங்கிலத் தேசியவாதிகள், எவராக இருந்தாலும் கொள்கை ஒன்று தான். Victim card play பண்ணுவது, ஒரு தேசியவாதக் கோளாறு.

Victim card play பண்ணுவது வழமையாக எல்லா தேசியவாதிகளுக்கும் உரிய குணாம்சம். சிங்களத் தேசியவாதிகளும் அதே தான். குறிப்பாக அண்மையில் கூட போர்குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச அழுத்தம் வந்த நேரம், victim card தூக்கி பிடித்தார்கள். இதையே தான் இஸ்ரேலியர்கள், செர்பியர்கள் கூட செய்தார்கள். தமக்கு மேலே உள்ள சக்தி அழுத்தம் கொடுக்கும் போதெல்லாம் victim card play பண்ணுவார்கள்.

இப்போது மீண்டும் தமிழ்த்தேசியவாதிகள் பக்கம் வருவோம். Victim card play பண்ணுவது பொதுவாக தேசியவாதிகளின் சிறப்பம்சம் என்பதை பார்த்தோம். இதற்கு தமிழ்த்தேசியவாதிகளும் விதிவிலக்கல்லவே? ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள் தமக்கு கீழே உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரை ஒடுக்கும் பொழுது, முஸ்லிம்களை victim ஆக கருத மாட்டார்கள். (இரட்டை வேடம்) மாறாக மறுபடியும் தாமே victim என்பார்கள். முஸ்லிம் ஊர்காவல் படை செய்த படுகொலைகளை ஆதாரமாக காட்டுவார்கள். மீண்டும் மீண்டும் அதைச் சொல்லிக் காட்டி, "பார்த்தீர்களா? இப்போதும் தமிழர்கள் தானே victim?" என்று கேட்பார்கள்.

சிங்களத் தேசியவாதிகளும் அதே தான். தமக்கு கீழே உள்ள தமிழ்ச் சிறுபான்மையினரை ஒடுக்கும் பொழுது, அவர்களை victim ஆக கருத மாட்டார்கள். (இரட்டை வேடம்) மாறாக மறுபடியும் தாமே victim என்பார்கள். புலிகள் செய்த படுகொலைகளை ஆதாரமாக காட்டுவார்கள். மீண்டும் மீண்டும் அதைச் சொல்லிக் காட்டி, "பார்த்தீர்களா? இப்போதும் சிங்களவர்கள் தானே victim?" என்று கேட்பார்கள்.

தமிழ்த்தேசியவாதிளும், சிங்கள தேசியவாதிகளுக்கும் இடையிலான ஒற்றுமை அது மட்டுமல்ல. தத்தமது சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களை சாதிரீதியாகவும், வர்க்கரீதியாகவும் ஒடுக்குவார்கள். அப்போது அந்த மக்கள் சார்பில் யாராவது உரிமைகளுக்காக போராடினால் victim blame பண்ண தயங்க மாட்டார்கள்.

ஏனென்றால் இப்போது இவர்கள் தான் ஒடுக்கும் வர்க்கமாக உள்ளனர். அதை மறைப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்குவார்கள். இது தான் தேசியவாதம். தமிழ்த்தேசியம் அல்லது சிங்களத் தேசியம், எதுவாக இருந்தாலும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

Monday, June 05, 2023

"சோத்துக்கு திரண்ட கூட்டம்!"- சுகாஷுக்கு ஒரு திறந்த மடல்

சைக்கிள் கட்சி என அழைக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலைமுன்னணி (TNPF) தையிட்டி விகாரைக்கு எதிராக நடத்தும் போராட்டம் குறித்த தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் அந்த கட்சியின் பிரமுகர் சுகாஷ் இவ்வாறான கூற்றை வெளியிட்டிருந்தார்:

//இது சோத்துக்காகவோ போத்தலுக்காகவோ திரண்ட கூட்டமல்ல...// இந்தக் கூற்று ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க தமிழ் மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதற்கு எனது கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏற்கனவே இதே சுகாஷ் தான் வட்டுகோட்டை சாதிய வன்முறையில், (பார்க்க:யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!  ) ஆதிக்க சாதியினர் பக்கம் நின்றார். இவர் ஒரு வழக்கறிஞராக இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இவரது தேர்தல் வெற்றிக்காக உழைத்திருந்த போதிலும், நீதிமன்றத்தில் அந்த மக்களுக்காக வாதாட மறுத்தார். வாளால் வெட்டி வன்முறையாட்டம் போட்ட ஆதிக்க சாதி வெறியர்களுடன் சமரசமாக போகும் படி அறிவுரை கூறினார்.  தற்போது மறுபடியும் தனது "உயர்சாதி", மேட்டுக்குடி மனப்பான்மையை வெளியிட்டிருக்கிறார்.

அடித்தட்டு தமிழ் மக்களை இப்படி கேவலமாக சித்தரிக்கும் மேட்டுக்குடி கனவான்கள் தான் தமிழினத் தலைவர் வேஷம் போடுகிறார்கள். 😡😡😡 

இவர்கள் என்ன அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டு விட்டதால், உண்ட களை தீர தினவெடுத்து வந்த கூட்டமோ? ஒருவேளை இந்த கூட்டம் சோத்துக்காக திரண்டால் அதில் என்ன பிரச்சினை? "சோத்துக்கு வழியில்லை" என்பதும் எம் மக்களது அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினை தான். அந்த பிரச்சினை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு 3 நேரமும் தவறாமல் சோறு கிடைக்கிறது என்பதற்காக, அதற்கும் வழி இல்லாத மக்களை அவமானப் படுத்துவீர்களோ? நாவடக்கம் வேண்டும் கனவானே! 

Shame on you. 

உங்கள் மேட்டுக்குடித் திமிரை வீட்டுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒரு நேர சோற்றுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப் படுகிறார்கள். அவர்கள் சோத்துக்காக ஒன்று திரளக் கூடாதா? அது தப்பா? அதென்ன "போத்திலுக்காக"? உங்களிடம் பணமிருக்கிறது. வீட்டில் ஒரு முழுப் போத்தில் வெளிநாட்டு விஸ்கி வாங்கி வைத்து யாருக்கும் தெரியாமல் குடிப்பீர்கள். அவர்களிடம் கால் போத்தில் உள்நாட்டு சாராயம் கூட வாங்க காசில்லாமல் இருக்கலாம். அதற்காக வெட்கத்தை விட்டு "போத்திலுக்காக" வரலாம். இது கிண்டல் அடிக்கும் விடயமா? உங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு மாதாந்த வருமானம் கிடைத்தால், அவர்கள் ஏன் சோத்துக்கும், போத்திலுக்கும் திரளப் போகிறார்கள்? முதலில் அதற்காக அல்லவா தாங்கள் போராட வேண்டும்?

Saturday, May 07, 2022

அன்டன் பாலசிங்கம் திரிபுபடுத்திய சுயநிர்ணயம் பற்றிய லெனினின் மேற்கோள்

 

"தமிழ் மொழியின் பெயரில் ஈழம் பிரிவதையும் லெனின் எழுதிய கோட்பாடு அங்கீகரிக்கின்றது" என்பது மாதிரி தமிழ்த்தேசியம் பேசும் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, லெனின் எழுதிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசும் இனங்கள், ஆயிரம் தேசங்களாக பிரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதைப் போன்று பிதற்றுகிறார்கள். முதலில் உலகில் இவ்வாறு ஆயிரம் மொழிவாரி தேசங்களை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமா என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

லெனின் வாழ்ந்த ரஷ்யாவில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசமான மொழிகளைப் பேசும் வேற்றின மக்கள் வாழ்கிறார்கள். அப்படியானால் லெனின் எதற்காக ரஷ்யாவை நூறு துண்டுகளாக உடைத்து தனித்தனி தேசங்களாக பிரித்து விடவில்லை? எல்லாவற்றையும் இணைத்து சோவியத் யூனியன் என்ற ஒரே நாடாக்க வேண்டும்? சோவியத் குடியரசுகளுக்குள் தனித்தனி பாஸ்போர்ட் நடைமுறை இருந்தது வேறு விடயம். அதைக் கொண்டு யாரும் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாது. அதற்கு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட USSR பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

அது போகட்டும். லெனின் தமிழீழம் பிரிவதையும் ஆதரித்திருப்பார் என்றால், அதற்கு என்ன ஆதாரம்? இதற்கு தமிழ்த்தேசியம் பேசும் புலி விசுவாசிகள் அவர்களது தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்த ஒரு கூற்றை கொண்டு வந்து காட்டினார்கள். அதில் அவர் லெனின் சொன்னதாக ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.

//"எந்தவொரு ஒடுக்கும் தேசத்தையும் சேர்ந்த ஒரு சோஷலிஸ்ட் ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுயநிர்ணய (பிரிவதற்கான) உரிமையை அங்கீகரிக்காமல், அதற்காக போராடாமல் இருப்பாரேயானால் அவர் ஒரு பேரினவாதியாக இருக்கலாமே தவிர ஒரு சோஷலிஸ்டாக இருக்க முடியாது."//

லெனின் இதை எந்த நூலில் எந்த இடத்தில் கூறியுள்ளார்? ஆதாரம் என்ன? அதற்கு அவர்கள் கொடுத்த ஆதாரத்தை இங்கே இணைத்துள்ளேன். லெனின் எழுதிய சமாதானம் குறித்து என்ற தலைப்பிலான கட்டுரை. (The Question of Peace, V.I. Lenin, July-August 1915) இது 1915ல் எழுதப்பட்ட காலனிய நாடுகளின் விடுதலை பற்றிய கட்டுரை. மிகத் தெளிவாக இருக்கிறது.

லெனின் இதை எழுதிய காலத்தில், 1ம் உலகப்போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அப்போது இன்றுள்ள மாதிரியான வரைபடத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அன்று உருவாகி இருக்கவில்லை. ஐரோப்பா, வட அமெரிக்கா தவிர உலகின் பிற நாடுகள் ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டின் காலனிகளாக இருந்தன. ஐரோப்பாவிலேயே பல நாடுகள் ஏதாவதொரு சாம்ராஜ்யத்தின் மாகாணங்களாக இருந்தன. இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் லெனின் அந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்.

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் போன்ற ஏகாதிபத்தியங்கள் தமக்குள் நிலவிய முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக முதலாம் உலகப்போரில் ஈடுபட்டன. இந்த ஏகாதிபத்திய நாடு ஒவ்வொன்றும், தனக்குள்ளே பல நாடுகளை கொண்டிருந்தன. இவற்றை தான் ஒடுக்கும் தேசங்களாகவும், ஒடுக்கப்படும் தேசங்களாகவும் லெனின் வரையறுக்கிறார். (கட்டுரையை பார்க்கவும்.)

முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் அவை தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட போராடிக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு செர்பியா தவிர்ந்த முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசுகள், மற்றும் செக்(மற்றும் ஸ்லாவாக்கியா) ஆகியன அந்தக் காலத்தில் ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தன. போலந்து ஜெர்மனிக்குள் இருந்தது.

பிரான்ஸ் ஆப்பிரிக்காவில் பல காலனிகளை வைத்திருந்தது. பிரித்தானியா ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல காலனிகளை வைத்திருந்தது. பிரிட்டன், பிரான்சினால் காலனிப் படுத்தப்பட்ட நாடுகளும் (உதாரணம்: இந்தியா) விடுதலைக்காக அல்லது சுயநிர்ணயத்திற்காக அல்லது பிரிவதற்காக போராடிக் கொண்டிருந்தன. இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை நினைத்துப் பார்க்கவும். இது போன்று காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதைத் தான் லெனின் ஆதரித்து எழுதி இருக்கிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம், அன்டன் பாலசிங்கம் மேற்கோள் காட்டிய கூற்றில் உள்ள "சோஷலிஸ்ட்" என்ற வார்த்தை கம்யூனிஸ்டுகளை அல்லது மார்க்சியவாதிகளை குறிப்பிடவில்லை. அது சமூக ஜனநாயகவாதிகளை குறிப்பிடுகிறது. உதாரணமாக பிரிட்டனில் தொழிற் கட்சி, பிரான்சில் சோஷலிஸ்ட் கட்சி, ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி. இவற்றைத் தான் லெனின் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

அன்று லெனின் "பேரினவாதிகள்" எனக் குற்றஞ்சாட்டிய சமூக ஜனநாயகக் கட்சிகள் இப்போதும் பல ஐரோப்பிய நாடுகளில் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவை முற்றுமுழுதாக முதலாளிகளை ஆதரிக்கின்றன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல. வழமையான முதலாளித்துவக் கட்சிகள். அவை எதுவும் இன்று மார்க்சியம் பேசுவதுமில்லை.

பாலசிங்கம் குறிப்பிடும் ஒடுக்கும் தேசங்களாக, உதாரணத்திற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இருந்தன. ஒடுக்கப்பட்ட தேசங்களாக போலந்து, ஸ்லோவேனியா, குரோவேசியா ஆகிய பல ஐரோப்பிய நாடுகள் இருந்தன. இவை அப்போது ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய சாம்ராஜ்யங்களின் மாகாணங்கள். அவற்றின் விடுதலைக்கு ஜெர்மனி, ஆஸ்திரியாவை சேர்ந்த சோஷலிச அல்லது சமூக ஜனநாயக (Social Democratic) கட்சிகள் ஆதரிக்கவில்லை.

சோஷலிஸ்டுகள் அல்லது சமூக ஜனநாயகவாதிகள், முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன்/பிரிட்டிஷ்/ஆஸ்திரிய அரசுக்களை ஆதரித்தார்கள். அதைத்தான் "ஒடுக்கப்பட்ட தேசங்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணயத்தை ஆதரிக்காத சோஷலிஸ்டுகள் பேரினவாதிகள்" என்று லெனின் சாடினார். லெனின் எழுதியதை அன்டன் பாலசிங்கம் பிழையாக திரித்துள்ளார். தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்ட புலி விசுவாசிகள் அரசியல் அறிவற்ற தற்குறிகள். அவர்களை எப்படியும் ஏமாற்றலாம் என்பது அன்டன் பாலசிங்கத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

1915 ல் லெனின் எழுதிய மாதிரி, அன்று காலனிகளாக ஒடுக்கப்பட்ட இந்தியாவும், இலங்கையும், ஒடுக்கிய பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்து விட்டன. இது நடந்தது 1947ல். அப்போது லெனின் உயிரோடு இல்லை. இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்து காலனிய தேசங்கள் சுதந்திரம் பெறப்போகின்றன என்ற விடயம், 1924 ம் ஆண்டு காலமான லெனினுக்கு எப்படித் தெரியும்? ஞானக் கண்ணால் பார்த்தாரா? அல்லது இறந்த பிறகு அவரது ஆவி எழுதியதா?

வரலாறு தெரியாத பாஸிஸ்ட்கள் தமிழ்தேசியம் பேசக் கூடாது. இப்படித் தான் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.