Showing posts with label இஸ்லாமிய தீவிரவாதம். Show all posts
Showing posts with label இஸ்லாமிய தீவிரவாதம். Show all posts

Sunday, September 10, 2023

ஈஸ்டர் தாக்குதல் - சேனல் 4 சொல்லாத செய்திகள்

 

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சேனல் 4 ஆவணப்படம் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆனால் அது சொல்லாமல் மறைத்த விடயங்கள் பலவுள்ளன.

முதலாவதாக ஈஸ்டர் குண்டுவெடிப்புகளால் ஆதாயம் அடைந்தது கோத்தபாய ராஜபக்ச என்பது அப்போதே தெரிந்த விடயம். அரச புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விடயமும் அப்போதே வெளியான தகவல் தான். ஆனால் நிரூபிக்க ஆதாரம் இருக்கவில்லை. சேனல் 4 தெரிவித்த மாதிரி பொலிஸ் விசாரணையை தொடர விடாமல் இடை நிறுத்தியதும் உண்மை தான்.

அந்த சதித்திட்டத்தில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது மட்டுமே புதிய தகவல். அநேகமாக கோத்தபாயவுக்கு இருந்த அதே அரசியல் நோக்கம் பிள்ளையானுக்கும் இருந்த படியால் கூட்டுச் சேர்ந்திருக்கலாம். அதாவது சிங்கள- முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது கோத்தபாயவின் நோக்கம் என்றால், தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது பிள்ளையானின் நோக்கம்.

அதே நேரம் புலனாய்வுத்துறை நேரடியாக செயல்படுத்தியிருக்க திட்டத்தில் பிள்ளையானின் பங்களிப்பு பெரிதாக இருந்திருக்க போவதில்லை. அநேகமாக, ஆசாத் அலி மௌலானாவுக்கு, சேனல் 4 வுக்கு தெரிவித்ததை விட அதிக தகவல்கள் தெரிந்திருக்கும். அவற்றை மறைத்து விட்டு பிள்ளையான் அல்லது கோத்தபாய சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி மட்டுமே பேசலாம் ஐரோப்பிய புலனாய்வுத்துறை அனுமதித்து இருக்கலாம். இலங்கை அரசியல் களத்தில் என்ன குழப்பம் ஏற்பட்டாலும் மேற்கிற்கு கவலையில்லை.

மேற்குலகை பொறுத்தவரையில் பிள்ளையான்கள் மட்டுமல்ல, ராஜபக்சேக்களும் கருவிகள் தான். நவ காலனிய, தரகு முதலாளிய அதிகார வர்க்கம், மேற்குலகால் எப்போதும் கருவியாக தான் கருதப் படுகிறது. அது வேறு விடயம்.

ஆகவே சேனல் 4 வீடியோவின் விளைவாக யாரும் பிள்ளையான், கோத்தபாயவை தூக்கில் போடப் போவதில்லை. எந்த விசாரணையும் நடக்கப் போவதுமில்லை. சில நாட்கள், அல்லது அதிக பட்சம் ஒரு மாதம் அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கும். அவ்வளவு தான்.

இன்னொரு விடயம், தவ்ஹீத் ஜமாத் கட்சியிலிருந்து ஸஹ்ரான் தலைமையில் பிரிந்த சிறு குழு ஏற்கனவே முஸ்லிம் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்கள் புலனாய்வுத்துறையால் பயன்படுத்த பட்டிருந்தாலும், "கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக" தாக்குதல் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களை கோத்தபாய பயன்படுத்திக் கொண்டார். அது உண்மை.

ஏற்கனவே 2001 ம் ஆண்டு நடந்த 9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் சதித் திட்டம் என்று ஏராளமான ஆவணப்படங்கள் வந்து விட்டன. ஆனால் என்ன நடந்தது? குற்றத்தை ஒப்புக் கொண்டு அமெரிக்க அரசு மன்னிப்புக் கோரியதா? இல்லையே? அதே நிலைமை தான் இலங்கையிலும்.

இங்கே முக்கியமான விடயம், அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எத்தகைய எல்லைக்கும் செல்வார்கள். தமது சொந்த மக்களையும் கொல்லத் தயங்க மாட்டார்கள். அரசியல் அறிஞர் மாக்கியவல்லியும் அதை தத்துவமாக எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவர் பிறந்த இத்தாலி தேசத்தில் 1974 ம் ஆண்டு நடந்த பொலோய்ஞோ ரயில் நிலைய குண்டுவெடிப்பில் 85 பொதுமக்கள் கொல்லப் பட்டனர். அது தொடர்பாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவர்கள் தீவிர வலதுசாரி நவ நாஜிகள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இத்தாலி அரசு இருந்தது என்ற உண்மை பல வருடங்களுக்கு பின்னர் தெரிய வந்தது. நேட்டோவின் பங்கு பற்றி எல்லாம் பேசப் போனால் நீண்டு விடும்.

அதே மாதிரி பிரான்ஸில் ஐ.ஸ். பெயரில் படுகொலைகளை நடத்தியவர்கள் பிரெஞ்சு அரச புலனாய்வுத்துறையுடன் தொடர்பில் இருந்தனர். இதெல்லாம் பிற்காலத்தில் தெரிய வந்த உண்மைகள். ஆயினும் என்ன? பிரெஞ்சு வெள்ளையின மக்களுக்கும், முஸ்லிம் குடியேறிகளுக்கும் இடையிலான இன முரண்பாடு இன்னமும் அங்கே உள்ளது. இதைத் தான் கவனிக்க வேண்டும்.

அதாவது உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடக் கூடாது என்பதில் ஆளும் முதலாளிய வர்க்கம் மிகக் கவனமாக உள்ளது. அதற்காக இன/மத முரண்பாடுகளை தூண்டி விட்டு வளர்க்கிறார்கள். மக்களை இனரீதியாக அல்லது மதரீதியாக பிரித்து ஆண்டால் தான் இந்த அரசு நிலைத்திருக்க முடியும். அதன் அர்த்தம், முதலாளிய ஆதரவுத் தமிழ்த்தேசியம் கூட, என்ன தான் தன்னை முற்போக்கானதாக காட்டிக் கொண்டாலும், அதுவும் அரச நிகழ்ச்சிநிரலில் தான் இயங்குகிறது.

உண்மையில் சேனல் 4 ஆவணப்படம் பலரது கண்களை திறந்திருக்க வேண்டும். இப்படித் தானே இவ்வளவு காலமும் இந்த அரசு முஸ்லிம்களை மட்டுமல்லாது, சிங்களவர்களையும், தமிழர்களையும் பிரித்து வைத்து ஆள்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும். ஆனால் அந்த உண்மையை உணர விடாமல் தடுப்பதற்கு தான் சிங்களப் பேரினவாத அரசும் அதன் தமிழ்த்தேசிய கைக்கூலிகளும் விரும்புவார்கள். அதனால் தான் இப்போதும் அமைப்பில் உள்ள தவறுகளை பற்றி பேசாமல் தனி நபர்களை சுற்றி அரசியல் நடத்துகிறார்கள். 
 

இது தொடர்பான முந்திய பதிவு:

Thursday, July 11, 2019

"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்!" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்


"கடுமையான இஸ்லாமிய மதப்பற்று காரணமாக தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்பது ஒரு மாயை. ISIS போன்ற தீவிரவாத இயக்கங்களில் மத நம்பிக்கை இல்லாதிருந்தவர்களும் நிறையப் பேர் சேர்ந்திருந்தனர். குர்ஆனில் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அப்பாவிகளை கொல்லக் கூடாது என்று விளக்கம் அளிப்பதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினையின் வேர் கடந்த கால ஐரோப்பிய காலனிய வரலாற்றில் உள்ளது. தவிர்க்கவியலாமல், நாம் எல்லோரும் அதற்குப் பலியானவர்கள் தான். ஐரோப்பிய காலனிய காலத்தில் இருந்து நீடிக்கும் பிரச்சினைகள் தீர்க்கப் படா விட்டால், மீண்டும் ஐ.எஸ். போன்ற இயக்கம் உருவாவதை தடுக்க முடியாது." இவ்வாறு மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த முன்னாள் ISIS போராளி ஒருவர் பெல்ஜிய நாட்டு பத்திரிகை ஒன்றுடனான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் சிரியாவில் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு தப்பியோடி தாயகம் வந்து சேர்ந்திருந்தார். மொரோக்கோ அரசு கைது செய்து பதினான்கு மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்து விட்டு விடுதலை செய்துள்ளது. அதற்குப் பிறகு முன்னாள் தீவிரவாதிகளுக்கான புனர்வாழ்வு மையத்தில் சமூக சேவகராக செயற்பட்டு வருகிறார். 2017 ம் ஆண்டு, De Morgen பத்திரிகையில் பிரசுரமான பேட்டியை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்து தருகிறேன்.

கேள்வி: சிரியாவுக்கு சென்று IS இல் சேர்வதற்கு என்ன காரணம்?

பதில்: அயலவர் மூலம் ஐ.எஸ். இற்கு ஆள் சேர்க்கும் ஒருவரின் தொடர்பு கிடைத்தது.

அதில் சேர்வதற்கு முன்னர் மதத்தை பற்றுடன் பின்பற்றி வந்தாயா?

இல்லை. நான் முன்பு ஒரு கலாச்சார முஸ்லிம். பண்டிகை நாளன்று மட்டுமே பள்ளிவாசலுக்கு சென்று வந்தேன். சில நேரம் ரமலான் நோன்பு பிடித்திருப்பேன். நிச்சயமாக நான் மதத்தை தீவிரமாக பின்பற்றவில்லை. பொதுவாக ஒருவர் இஸ்லாமிய மதநெறிகளில் பற்றுக் கொண்டு தீவிரவாதியாவதில்லை. நானும் அதில் ஈடுபாடு காட்டவில்லை. எனது பிரதானமான நோக்கம் பணமாக இருந்தது. குடும்பத்தில் எனக்கான அங்கீகாரத்தை தேடினேன். நிச்சயமாக IS கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பல வகையான நாடுகளில் இருந்து வந்த பெருமளவு இளைஞர்கள், ஐ.எஸ். இல் மதச் சார்பற்ற காரணங்களுக்காக சேர்ந்துள்ளனர். கடும் மதப்பற்று காரணமாக முஸ்லிம் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்பது ஒரு மாயை.

என்ன காரணத்தால் அவர்கள் தீவிரவாதிகள் ஆனார்கள்?

IS இன் இயங்குதளம் என்னவென்று அப்போதே புரிந்து கொண்டேன். மேற்குலகு மீதான ஆத்திரம். இருப்பினும், மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக என்னை மாற்றிக் கொண்டேன். தினசரி தொழுகைகளிலும், அனைத்து வகை சடங்குகளிலும் கலந்து கொண்டேன். நான் சிரியா போகும் விடயத்தை வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும், தங்கைக்கும் சொல்லவில்லை. மொரோக்கோவின் இன்னொரு நகரத்தில் சுற்றுலா மையம் ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாக கூறினேன்.

அப்போது எனக்கு 28 வயது. பிரயாண முகவர் எமக்கான விசா, மொபைல் தொலைபேசி, கொஞ்சப் பணம் எல்லாம் கொடுத்திருந்தார். துனிசியா வழியாக பிரயாணம் செய்தோம். துருக்கி- சிரியா எல்லையை அடையும் வரையில் எல்லாம் நல்ல படியாக நடந்தது. எல்லையை அடைந்ததும் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அங்கு ஓர் ஐ.எஸ். போராளியும், கட்டார் எல்லைக் காவலரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை கண்டேன். துருக்கி படையினரும் ஐ.எஸ். இயக்கத்துடன் நல்ல நட்புறவில் இருந்தனர். அந்த நேரத்தில் ஐ.எஸ். இற்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கத்தில் ஐ.எஸ். உடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்தார்கள்.

நான் ராக்கா நகருக்கு வந்து சேர்ந்தேன். ஒரு பெரிய வீட்டில் பிற மொரோக்கோ நாட்டுக்காரருடன் சேர்ந்து தங்கி இருந்தேன். வாரத்திற்கு ஒரு தடவை ஊருக்கு தொலைபேசி எடுத்துக் கதைத்தேன். இரண்டு மாதங்களுக்கு நான் இத்தாலியில் இருப்பதாக பொய் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு உண்மையை சொல்லி விட்டேன். அதற்குக் காரணம், ஒரு துனிசிய போராளியின் தலையை வெட்டிய சம்பவத்தை கண்ட பின்னர் மனம் மாறி விட்டேன். IS கட்டுப்பாட்டை மீறி பொருட்களின் விலையை நிர்ணயித்த கடைக்காரர் ஒருவரின் கையை வெட்டுமாறு அந்தப் போராளிக்கு உத்தரவிட்டனர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே தலையை துண்டித்து விட்டார்கள். நான் சிரியாவில் நிற்கும் உண்மையை அம்மாவுக்கு சொன்ன பிறகு, அவர் கடும் நோய் வாய்ப்பட்டு விட்டார். அதற்காக இன்று வரையில் தங்கை என்னை மன்னிக்கவில்லை.


உங்களுக்கு அங்கே என்ன நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரியாதா? ராக்காவில் என்ன செய்தாய்?

இரண்டு மாதங்கள் முகாமில் தங்கியிருந்து இராணுவப் பயிற்சி பெற்றேன். அதற்குப் பிறகு கலாச்சாரக் கண்காணிப்புப் பொலிஸ் வேலையில் விட்டார்கள். அந்த வாழ்க்கை பரவாயில்லை. இரு மாதங்களுக்குப் பின்னர் எனக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்றில் தற்கொலைப் படையில் "விரும்பிச்" சேர்வது, அல்லது மரண தண்டனைக்கு உள்ளாவது. அதைக் கேள்விப்பட்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டேன். என்னிடம் இருந்த சம்பளப் பணத்தை வைத்து ஒரு மனிதக் கடத்தல்காரரை பிடித்தேன். அவர் என்னையும், வேறு சில சிரியாக்காரர்களையும் எல்லை கடந்து கூட்டிச் சென்றார். நான் 15 செப்டம்பர் 2015 தப்பியோடும் வரையில், அங்கிருந்த 1.500 மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த போராளிகளில் 250 பேர் போரில் கொல்லப் பட்டு விட்டனர். முப்பது பேர் தற்கொலைப் படையில் சென்று செத்துள்ளனர்.

நான் அல்ஜீரியா ஊடாக மொரோக்கோ வந்து சேர்ந்த நேரம் பொலிஸ் கைது செய்தது. பதினான்கு மாதங்கள் சிறையில் இருந்தேன். கொலைக்குற்றம் செய்திருந்தால் நீண்ட காலம் சிறைத்தண்டனை விதித்திருப்பார்கள். நான் அங்கு யாரையும் கொலை செய்யவில்லை. ஆனால், சவுக்கால் அடித்திருக்கிறேன்.


சிரியாவுக்கு போவதற்கும் பணம் தான் காரணம் என்றால், எவ்வளவு சம்பாதித்திருப்பாய்?

ராக்காவில் ஒரு ஐ.எஸ். போராளிக்கு 2.500 யூரோக்கள் சம்பளம் கொடுத்தார்கள். திருமணம் முடித்திருந்தால் மேலதிக கொடுப்பனவு உண்டு. அந்த சம்பளத்தை மொரோக்கோவில் எந்தக் காலத்திலும் சம்பாதிக்க முடியாது.


இளைஞர்கள் இஸ்லாமிய தேசம் என்று சொல்லப்படும் அமைப்பில் இணைவதற்கு பணம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. உன்னை உந்தித் தள்ளியது எது?

IS ஒரு மூடப்பட்ட மதக் குழு (sect) போன்று இயங்கியது. ஆரம்பத்தில் அதனை ஆயுதமேந்திப் போராடும் விடுதலை இயக்கம் என்று காட்டினார்கள். ஆனால், உண்மையில் அது ஒழுங்கமைக்கப் பட்ட கொடூரமான பயங்கரவாத இயக்கம் என்பது பின்னர் தெளிவாகத் தெரிந்தது.

சிரியாவில் உள்ள IS இயக்கப் போராளிகள், ஆதரவாளர்களின் கோபாவேசமும், வன்முறையும் வரலாற்றில் இருந்து பிறக்கின்றது. ஒரு பயங்கரவாதக் குழு, ஒரு சில தேர்ந்தெடுத்த குரான் வசனங்களை பிழையாக பாவிப்பதன் காரணமாக பலர் அதில் சேர்வதாக நினைப்பது தவறு. மத்திய கிழக்கில் மேற்குலகின் தலையீடு தான் பலர் IS சார்பு நிலை எடுப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

வரலாற்றை இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதியாக பார்க்கப் பட வேண்டும். அதன் மூலம் IS பல்லாயிரம் இளைஞர்களின் மனங்களை கவர்கிறது. ஏற்கனவே சரித்திரத்தில் நடந்த சம்பவங்களை தேர்ந்தெடுத்து அதை ஓர் இனத்தின் ஒட்டுமொத்த அவலமாக சித்தரிக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட "நாங்கள், அவர்கள்" எனும் பிரச்சாரம். அதாவது, தீவிரமான அடையாள அரசியல். ஆனால், அடிப்படையில் வரலாறு ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. உதாரணத்திற்கு, பிரான்சும், ஸ்பெயினும் மொரோக்கோவில் செய்த அட்டூழியங்களை எடுத்துப் பாருங்கள். ஸ்பானிஷ் சர்வாதிகாரி Primo de Rivera, பிரெஞ்சு ஜெனரல் Hubert Lyautey ஆகியோரின் பொறுப்பில் நடந்த இரசாயன தாக்குதல்கள் பற்றிய விபரங்களும் சரித்திர பாடநூல்களில் எழுதப் பட வேண்டும் அல்லவா?

உலகில் முஸ்லிம்கள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற வரலாற்றுக் கதைகள்  IS இயக்கத்திற்கு மிக முக்கியமானது. ஒரு குழுவாக சேர்ந்து இயங்கும் மனப்பான்மை, இதனுடன் ஐ.எஸ்.க்கு எதிராக போரிடும் அரசுகள், இராணுவங்களின் நடவடிக்கைகளும் மிகுதிக் காரணங்கள். அதாவது, ஒடுக்கப்பட்டோர் என்ற உணர்வு தான் எதிரிக்கு எதிராக போரிடுவதற்கு முக்கியமான தேவை. IS பார்வையில் மேற்கத்திய நாட்டவருக்கும், அந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. ஒன்றில் நீ எங்களுடன் இருக்கிறாய், அல்லது எங்களுக்கு எதிராக இருக்கிறாய். ஐ.எஸ். உடன் சேர்ந்து போரிடாதவர்கள் துரோகிகளாக கருதப் படுகின்றனர்.

இயக்கத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுப்பவரிடம் யுத்தத்தில் பாதிக்கப் பட்ட  அப்பாவி மக்களின் அவலங்களைக் காட்டும் வீடியோக்கள் இருக்கும். பொஸ்னியாவில் இரத்தக் காயங்களுடன் கிடக்கும் உடல்கள், ஈராக்கில் வன்புணர்ச்சிகுள்ளான சிறுவர்கள், அபு கிரைப் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப் பட்ட ஆண்கள், காசா மீதான குண்டுவீச்சுகள்... இவை என்னிலும் மன உளைச்சலை உண்டாக்கின. முஸ்லிம்கள் மீதான கொலை, சித்திரவதை, அழிவைக் காட்டும் படங்கள் எனது கண்களில் நிறைந்திருந்தன. அது என்னை ஆத்திரப்பட வைத்தது.

அது ஓர் உளவியல் சித்திரவதையாக இருந்தது. அத்துடன் உணர்வை தட்டி எழுப்பும் வகையில்; "அவர்கள் எங்களுக்கு என்ன கொடுமைகள் செய்கிறார்கள் என்று பார்த்தாயா? அதற்கு எதிராக நீ என்ன செய்யப் போகிறாய்? சும்மா பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா?" என்று கேட்டார்கள். அத்துடன் சொந்த நாட்டில் நிலவும் பின்தங்கிய சமூக- பொருளாதாரம் காரணமாக எதிர்காலம் சூனியமாக இருந்த நிலைமை, நல்ல குடும்பத்தில் வளர்ந்து, உயர்கல்வி கற்றிருந்த என்னையும் ஐ.எஸ். இல் சேர உந்தித் தள்ளியது. IS என்பது ஒரு பனிமலையின் வெளித்தெரியும் சிகரம் மட்டும் தான்.


மேற்குலகமும் மொரோக்கோ அரசும் ஐ.எஸ். இற்கு எதிரான போரில் சரியான பாதையில் செல்கின்றனவா?

குர்ஆனில் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அப்பாவிகளை கொல்லக் கூடாது என்று விளக்கம் அளிப்பதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. சில இளைஞர்களுக்கு மதத்தில் எந்த ஆர்வமும் கிடையாது. ஆனால், சமூகத்தில் தமக்கு ஓர் அந்தஸ்தை தேடுகிறார்கள். அவ்வளவு தான். அதை விட, தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மொரோக்கோ அரசு சரியான பாதையில் செல்வதாக நான் நினைக்கிறேன்.


இப்போது என்ன செய்கிறாய்?

முன்னாள் ஜிகாதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக இமாம், சமூகவியலாளர், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து செயற்பட்டு வருகிறோம். நாங்கள் மாதத்திற்கு ஒரு தடவை இரகசியமான இடத்தில் சந்திப்பதுடன், பெற்றோருக்கும், இளைஞர்களுக்குமான வேலைத் திட்டங்களையும் ஒழுங்கு படுத்துகிறோம். "இஸ்லாத்திற்கு ஆதரவு, ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு" எனும் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றோம். இளைஞர்களை சுயமாக சிந்திக்க வைக்கிறோம். சொர்க்கத்தில் எழுபது கன்னிகளின் கதை சாத்தியமானதா என்று யோசித்து அறிந்தால் அதையெல்லாம் யார் நம்பப் போகிறார்கள்?

ஆனால், சிரியா, ஈராக்கில் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், IS போன்ற இயக்கங்கள் அதை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது சொந்த நலன்களை பாதுகாக்கும் ஆட்சி அதிகாரம் நீண்ட காலம் நிலைக்காது என்பதை உணர வேண்டும். ஒரு புதியதொரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்டு வரப் பட வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மறுசீரமைக்கப் பட வேண்டும். 


(டச்சு மொழியில் உள்ள பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Ex-jihadi getuigt: "Veel jongeren hebben niet-religieuze motieven om zich bij IS aan te sluiten")

Sunday, April 28, 2019

இலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்

ஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்புக‌ளில் 250 அப்பாவி மக்கள் கொல்ல‌ப் பட்டனர். ஆயிர‌க்க‌ண‌க்கில் காய‌ம‌டைந்தோர் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் அனும‌திக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ஏராள‌மானோர் இன‌, ம‌த‌ பேத‌ம் க‌ட‌ந்து குருதிக் கொடை வ‌ழ‌ங்க‌ முன்வந்தனர்.

ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை வைத்துப் பார்க்கும் பொழுது, இது ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து. தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், இத‌னால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பின் விளைவுக‌ளை ஆராய்ந்து, த‌ம‌து இல‌க்குக‌ளை தெரிவு செய்துள்ள‌ன‌ர்.

இலங்கையில் ஏற்கனவே பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியிருந்தன. திட்டமிட்ட கலவரங்களும் நடந்துள்ளன. அப்படி இருந்தும் தாக்குதல் நடத்தியவர்கள் பௌத்த வழிபாட்டு ஸ்தலங்களை குறி வைக்காமல், கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியுள்ளனர். இலங்கையின் வரலாற்றில், இதுவரை காலத்தில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் எந்த வன்முறையும் நடக்கவில்லை. இரண்டு சமூகங்களும் இலங்கையில் சிறுபான்மை மதங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.

1) குண்டுவெடிப்பில் ப‌லியான‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் க‌த்தோலிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்கள். த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது பெருமளவு சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் இதில் அட‌ங்குவார்க‌ள். ஈஸ்ட‌ர் நாள் விசேட‌ பூஜை என்ப‌தால் பெருந்தொகையின‌ர் ப‌லியாகியுள்ள‌ன‌ர்.

2) கொழும்பு, நீர்கொழும்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று ஒரே நேர‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டுக‌ள் வெடித்துள்ள‌ன‌. ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல், ஆட்ப‌ல‌ம், ஆயுத‌ ப‌ல‌ம், நிதி போன்ற‌ வ‌ள‌ங்க‌ள் இல்லாம‌ல் இது சாத்திய‌மில்லை.

3) மேற்க‌த்திய‌ ப‌ண‌க்கார‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து த‌ங்கும் ஐந்து ந‌ட்ச‌த்திர‌ ஹொட்டேல்க‌ளில் குண்டுக‌ள் வெடித்து 30 க்கும் மேற்பட்ட  வெளிநாட்ட‌வ‌ரும் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அத‌னால் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தின், குறிப்பாக‌ மேற்க‌த்திய‌ நாட்ட‌வ‌ரின் க‌வ‌ன‌த்தை இல‌ங்கையின் ப‌க்க‌ம் ஈர்த்துள்ள‌து.

இந்த‌ குண்டுவெடிப்புக‌ளின் நேர‌டி விளைவுக‌ளை பார்த்தால், இத‌னால் ஆதாய‌ம‌டைவோர் யார் என அறிய‌லாம்.

- இல‌ங்கையில் போர் முடிந்து, க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ஒரு துப்பாக்கிச் சூடு கூட‌ ந‌ட‌க்காம‌ல் அமைதியாக‌ இருந்த‌ கால‌த்தில் மீண்டும் இந்த‌ப் ப‌டுகொலைக‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌. அண்மைக் கால‌த்தில் அர‌சு கொண்டு வ‌ந்த‌ புதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்பு ச‌ட்ட‌த்திற்கு க‌டும் எதிர்ப்பு கிள‌ம்பி இருந்த‌து. இனிமேல் அதை ந‌டைமுறைப் ப‌டுத்த எந்த‌த் த‌டையும் இல்லை.

- இல‌ங்கையில் மீண்டும் ஒரு போர்ச் சூழ‌ல் தோன்றினால், அது இந்தியாவையும் பாதிக்கும். டொமினோ க‌ட்டைக‌ள் விழுவ‌து மாதிரி தெற்காசிய‌ நாடுக‌ள் நீண்ட‌ நெடும் போர்க‌ளுக்குள் த‌ள்ள‌ப் ப‌ட‌லாம். ம‌த்திய‌ கிழ‌க்கிலும் அமைதியாக‌ இருந்த‌ நாடுக‌ளில் திடீர் போர்க‌ள் உருவான‌ வ‌ர‌லாற்றை நாம் ஏற்க‌ன‌வே க‌ண்டுள்ளோம்.

- குண்டுவெடிப்புக‌ளுக்கு பின்ன‌ர் இல‌ங்கை மீதான‌ இஸ்ரேலின் க‌ரிச‌னை அதிக‌ரிக்க‌ கார‌ண‌ம் என்ன‌? இல‌ங்கை அர‌சுக்கு வேண்டிய‌ உத‌விக‌ள் செய்ய‌த் த‌யாராக‌ இருப்ப‌தாக‌ பிர‌த‌ம‌ர் நெத்த‌ன்யாகு அறிவித்துள்ளார். டெல் அவிவ் நகர சபைக் க‌ட்டிட‌ம் சிறில‌ங்கா தேசிய‌க் கொடியால் அல‌ங்க‌ரிக்க‌ப் பட்டது. இத‌ன் மூல‌ம் இஸ்ரேல் ஒரே நாளில் சிங்க‌ள‌ தேசிய‌வாதிக‌ளின் ம‌ன‌ங்க‌ளை வென்றுள்ள‌து.

- இலங்கை அரசுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க FBI ம‌ற்றும் இராணுவ‌ ஆய்வாள‌ர்க‌ள் இல‌ங்கையில் வ‌ந்திற‌ங்கி உள்ள‌ன‌ர். இந்த நேரத்தில் தாம் இலங்கையின் பக்கம் நிற்க வேண்டும் என்று டிரம்ப் அரசு அறிவித்திருந்தது. அதே நேரம், இவ்வளவு காலமும் பேசப்பட்டு வந்த சிறிலங்கா இராணுவம் மீதான போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப் பட்டுள்ளன.

- வடக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை எடுக்க வேண்டாம் என்று, முன்பு அதே இராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட புலிகள் இயக்கத் தளபதி ஒருவரின் மனைவியான ஆனந்தி சசிதரன் கூறியுள்ளார். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவுசெய்யப் பட்ட வட மாகாண சபை அமைச்சர். தமிழ்த் தேசியவாதிகளை, அதிலும் தமிழீழத்திற்காக போராடியவர்களையே இவ்வாறு பேச வைத்துள்ளமை ஒரு சிங்களப் பேரினவாத அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளுக்கு, ISIS இயக்கத் தகவல்களை தெரிவிக்கும் இணையத்தளத்தில் உரிமை கோரப் பட்டுள்ளது. இவ‌ர்க‌ள் தான் த‌ற்கொலைத் தாக்குத‌ல்தாரிக‌ள் என்று மூன்று பேரின் ப‌ட‌ங்க‌ளும், அவ‌ர்க‌ள‌து இயக்கப் பெய‌ர்க‌ளும் வெளியிட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. குண்டுவெடிப்புகள் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த உரிமை கோரல் வந்துள்ளது. இது வழமையான ஐ.எஸ். பாணி அல்ல. பொதுவாக சம்பவம் நடந்த அன்றே உரிமை கோரப்படும்.

நிற்க‌, சிரியாவில் ந‌ட‌ந்த‌ இறுதிப் போரில் த‌ன் வ‌ச‌ம் இருந்த‌ சிறு துண்டு நில‌ப் ப‌குதியையும் இழ‌ந்து விட்ட‌ ஐ.எஸ். இய‌க்க‌ம் இன்னும் தோற்க‌டிக்க‌ப் ப‌ட‌வில்லை என்று ப‌ய‌ங்க‌ர‌வாத‌ ஆய்வாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

அண்மையில் நெத‌ர்லாந்து தொலைக்காட்சியில் பேட்டிய‌ளித்த‌ ஒரு ட‌ச்சு ஆய்வாள‌ர், "விரைவில் இந்தியா போன்ற‌ இன்னொரு ஆசிய‌ நாட்டில் ஐ.எஸ். புதிய‌ போர் முனையை ஆர‌ம்பிக்க‌லாம்" என்று கூறியிருந்தார்.

சிரியா விட‌ய‌த்தில் கூட‌ ஐ.எஸ். இடையில் வ‌ந்து குட்டையை குழ‌ப்பிய‌து. அப்போது அந்த‌ இய‌க்க‌த்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ச‌வூதி அரேபியா, க‌ட்டார், ஆகிய‌ நாடுக‌ள் நேர‌டியாக‌வோ அல்ல‌து ம‌றைமுக‌மாக‌வோ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கி இருந்த‌ன‌.

அதே நிலைமை இல‌ங்கையில் அல்ல‌து இந்தியாவில் ஏற்ப‌டாது என்ப‌த‌ற்கு என்ன‌ நிச்ச‌ய‌ம்? பெரும்பான்மை ம‌க்க‌ள் உண‌ர்ச்சிவ‌ச‌ப் ப‌டும் முட்டாள்க‌ள். அவ‌ர்க‌ளை ம‌த‌வெறிய‌ர்க‌ளாக‌ மூளைச்ச‌ல‌வை செய்வ‌து இல‌கு. அதே நேர‌ம் எதிர்த் த‌ர‌ப்பில் உள்ள‌வ‌ர்க‌ளை அதே ம‌த‌த்தின் எதிரிக‌ளாக‌ மாற்றுவ‌தும் இல‌கு.

இல‌ங்கையில் 290 பேர் ப‌லியாக‌க் கார‌ண‌மான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ள் நாட்டு ம‌க்க‌ளை இர‌ண்டாக‌ பிள‌வுப‌டுத்துமானால், அத‌னால் ஆதாய‌ம‌டைவோர் ப‌ல‌ருண்டு. இல‌ங்கையில் இர‌த்த‌ம் குடிப்ப‌த‌ற்கு ஐ.எஸ். ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்குப் பின்னால் அமெரிக்கா, ச‌வூதி அரேபியா, இஸ்ரேல் போன்ற‌ வ‌ல்ல‌ர‌சுக‌ளும் காத்திருக்கின்ற‌ன‌.

இந்தப் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குண்டுவெடிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ எல்லோரும் ஒரு முக்கிய‌ குற்ற‌வாளியை ப‌ற்றிப் பேச‌த் த‌ய‌ங்குகிறார்க‌ள். அது தான் ச‌வூதி அரேபியா.

இல‌ங்கையில் இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் வ‌ள‌ர்வ‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் ச‌வூதி அரேபியா. பார‌ம்ப‌ரிய‌மாக‌ மித‌வாத‌த் த‌ன்மை கொண்ட‌ ஸூபி முஸ்லிம்க‌ளை, க‌டும்போக்கு வ‌ஹாபிய‌ர்க‌ளாக‌ மாற்றிய‌து ச‌வூதிப் ப‌ண‌ம் தான்.

கிழ‌க்கில‌ங்கையில் மாத்திர‌ம் ப‌ல‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ ப‌ள்ளிவாச‌ல்க‌ள், குரான் பாட‌சாலைக‌ள் ச‌வூதி நிதியில் க‌ட்ட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கெல்லாம் ச‌வூதி பாணியிலான‌ வ‌ஹாபிச‌ இஸ்லாம் போதிக்க‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் யாராலும் த‌டுக்க‌ முடிய‌வில்லை.

இல‌ங்கைக்கு ச‌வூதி க‌லாச்சார‌ம் இற‌க்கும‌தி செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் மித‌வாத‌ முஸ்லிம்க‌ள் அதை எதிர்க்காத‌ கார‌ண‌ம் என்ன‌? ஒரு கால‌த்தில் அபாயா அணிவ‌தை விசித்திர‌மாக‌க் க‌ருதிய‌, சேலை அணியும் இல‌ங்கை முஸ்லிம் பெண்க‌ள், எந்த‌ த‌ய‌க்க‌மும் இல்லாம‌ல் அபாயாவை ஏற்றுக் கொள்ளும் நிலைமை எப்ப‌டி உருவான‌து?

இந்த‌க் கேள்விக‌ளுக்கான ஒரே விடை ச‌வூதி அள்ளிக் கொடுத்த‌ ரியால்க‌ள் ப‌ல‌ர‌து வாய்க‌ளை அடைக்க‌ வைத்துள்ள‌ன‌. ச‌வூதியின் த‌லையீட்டை ச‌மூக‌ அபிவிருத்திக்கான‌ ப‌ங்க‌ளிப்பாக‌ க‌ருதிய‌ கால‌ம் ஒன்றிருந்த‌து. குறிப்பிட்ட‌ சில‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் ச‌வூதி நிதியில் தான் த‌ம‌து தொகுதிக‌ளை அபிவிருத்தி செய்த‌ன‌ர் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌ விட‌ய‌ம்.

சோழிய‌ன் குடுமி சும்மா ஆடாது என்ப‌து போல‌ ச‌வூதி நிதியுத‌வியும் தான‌மாக‌ கிடைக்க‌வில்லை. அத‌ற்குப் பின்னால் ஒரு ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ வ‌ல்ல‌ர‌சின் மேலாதிக்க‌க் க‌ன‌வு இருந்த‌து. அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் ஆசீர்வாத‌ம் இருந்த‌து.

இதைப் ப‌ற்றி எல்லாம் பேசாம‌ல் ந‌க‌ர்ந்து செல்லும் போக்கான‌து, எந்த‌க் கால‌த்திலும் பிர‌ச்சினையை தீர்க்க‌ உத‌வ‌ப் போவ‌தில்லை. மித‌வாத‌ முஸ்லிம்க‌ளுக்கும், இட‌துசாரிக‌ளுக்கும் சேர்த்து வ‌குப்பெடுக்கும் சில‌ முஸ்லிம் முற்போக்காள‌ர்க‌ள் கூட‌ இந்த‌ விட‌ய‌த்தை ப‌ற்றிப் பேசாம‌ல் க‌ட‌ந்து செல்கின்ற‌ன‌ர்.

Wednesday, February 28, 2018

சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்


ம‌ன்னிக்க‌வும், சிரியா யுத்த‌ம் ப‌ற்றிய‌ பின்வ‌ரும் தக‌வ‌ல்க‌ளை உங்க‌ளுக்கு எந்த‌ ஊட‌க‌மும் சொல்ல‌ப் போவ‌தில்லை:

- த‌ற்போது யுத்த‌ம் ந‌ட‌க்கும், த‌லைந‌க‌ர் ட‌மாஸ்க‌ஸ் ந‌க‌ருக்கு கிழ‌க்கே உள்ள‌ புற‌ந‌க‌ர்ப் ப‌குதியான‌ கூத்தா (Ghouta) க‌ட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளாக‌ இர‌ண்டு கிள‌ர்ச்சிக்குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்து வ‌ருகின்ற‌து.

- இத‌ற்கு முன்ன‌ர் இடிலிப் பிர‌தேச‌த்தை நோக்கி சிரிய‌ப் ப‌டைக‌ள் முன்னேறிய‌ நேர‌ம், அங்கிருந்த‌ கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் துருக்கி ம‌த்திய‌ஸ்த்த‌த்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்ற‌ன‌.

- ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர், கூத்தா மீது யுத்த‌ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌ சிரிய‌ அர‌சு இடிலிப் பாணி ச‌ம‌ர‌ச‌த்திற்கு முன்வ‌ந்திருந்த‌து. ஆனால், இம்முறை கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் வெளியேற‌ ம‌றுத்த‌ன‌. அத்துட‌ன் ம‌க்க‌ளையும் வெளியேற‌ விடாம‌ல் ப‌ண‌ய‌க்கைதிக‌ளாக‌ பிடித்து வைத்துக் கொண்ட‌ன‌ர்.

- கூத்தா பிர‌தேச‌த்தை மீட்ப‌த‌ற்கான‌ சிரிய‌, ஈரானிய‌ கூட்டுப்ப‌டை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்ட‌து. சிரிய‌ இராணுவ‌ப் பிரிவான‌ "புலிப் ப‌டை" தரைவ‌ழித் தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌து. ர‌ஷ்ய‌ விமான‌ங்க‌ளும் குண்டு வீசிய‌தாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

- அமெரிக்கா ம‌ற்றும் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் நெருக்குத‌லால் ஐ.நா. பாதுகாப்பு ச‌பை கூடி தீர்மான‌ம் எடுத்த‌து. அத‌ற்கு ர‌ஷ்யாவும் ஒத்துழைத்த‌து. உட‌ன‌டியாக‌ போர் நிறுத்த‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும் என‌த் தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து.

- சிரிய‌ அர‌சு ம‌ட்டுமே ஒரு த‌லைப்ப‌ட்ச‌மாக‌ போர் நிறுத்த‌ம் அறிவித்த‌து. இத‌ற்கு கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளை பொறுப்பேற்க‌ வைக்க‌ முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா. வினால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளாக‌ ஏற்றுக்கொள்ள‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. சிரிய‌ அர‌சு அந்த‌ சாட்டை ப‌ய‌ன்ப‌டுத்தி மீண்டும் போரைத் தொட‌ங்கிய‌து.

- ஐ.நா., சிரிய‌ அர‌சின் மீது போர்நிறுத்த‌ மீற‌ல் குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. ஏனெனில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு எதிரான‌ யுத்த‌த்தில் போர்நிறுத்த‌ம் க‌டைப்பிடிக்க‌ப் பட‌ வேண்டிய அவ‌சிய‌ம் இல்லை.

- கூத்தா பிர‌தேச‌ம் இர‌ண்டாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டு நான்கு பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ இய‌க்க‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌து. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய‌ நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, த‌னித் த‌னியாக‌வோ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

- இவ‌ற்றில் மிக‌ப்பெரிய‌ இய‌க்க‌மான‌ அல் நுஸ்ராவின் முந்திய‌ பெய‌ர் அல் கைதா. மிக‌த் தீவிர‌மான‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள் என்ப‌து சொல்லாம‌லே புரியும். ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளும் அப்ப‌டித் தான்.

- சிரிய‌ப் ப‌டைக‌ளின் எறிக‌ணை வீச்சுக்கும், விமான‌க் குண்டுக‌ளுக்கும் இதுவ‌ரை ஐநூறு பொதும‌க்க‌ள் ப‌லியாகியுள்ள‌ன‌ர். அதில் நூற்றுக்க‌ண‌க்கான‌ பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் அட‌ங்குவார்க‌ள்.

- அங்குள்ள‌ ம‌க்க‌ள் விருப்பத்திற்கு மாறாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தடுத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் அர‌ச‌ ஊழிய‌ர்க‌ள் ட‌மாஸ்க‌ஸ் சென்று வ‌ர‌ அனும‌தித்திருந்த‌ன‌ர். ஆனால், "பாதுகாப்புக் கார‌ண‌ங்க‌ளை முன்னிட்டு" பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் வெளியேற‌ அனும‌திக்க‌வில்லை.

- சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் ஐ.எஸ். க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீது அமெரிக்க‌ விமான‌ங்க‌ள் குண்டு போட்ட‌ன‌.ஒரு க‌ட்டிட‌ம் கூட‌ மிச்ச‌மில்லாம‌ல் த‌ரைம‌ட்ட‌மாகின‌. அன்று ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள், பெண்க‌ள், பொது ம‌க்க‌ளின் ச‌ரியான‌ எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது ப‌ற்றி உல‌கில் யாருக்கும் அக்க‌றை இருக்க‌வில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர்.

கூத்தா (Ghouta) பிரதேசம்
******

சிரியா போர் தொடங்கிய காலத்தில் இருந்து மறைக்கப் பட்டு வரும் சில உண்மைகள்: 

1. மேற்குலகம், சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது தெரிந்த விடயம். ஆனால், பெரும்பான்மை சிரிய மக்களின் ஆதரவைப் பெறாத பிழையான சக்திகளை தெரிவு செய்ததுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. " சிரியாவில் நடைபெறும் கிளர்ச்சிக்கு பெரும்பான்மையான சிரிய மக்களின் ஆதரவு கிட்டவில்லை. சிரிய அரசுக்கான மக்கள் ஆதரவை, மேற்குலகம் குறைத்து மதிப்பிட்டு விட்டது! ஊடகங்கள் அங்கு நடக்கும் சம்பவங்களை மிகைப் படுத்திக் கூறுகின்றன." - இதைக் கூறியது சிரியாவுக்கான பிரெஞ்சு தூதுவர் Eric Chevalier. (http://blog.lefigaro.fr/malbrunot/2012/03/syrie-un-diplomate-francais-me.html

2. "இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களால் வழிநடாத்தப்படும் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள், சிரிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை." அமெரிக்காவின் உளவுத் துறை ஒத்துக் கொண்டுள்ளது. (https://www.jungewelt.de/loginFailed.php?ref=/artikel/179801.im-blindflug.html)

3. சிரியாவினுள் அதிகரித்து வரும் ஜிகாத் போராளிகளின் பிரசன்னம் காரணமாக, சிரியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆயினும், சிரியாவின் ஆதரவின்றி ஹிஸ்புல்லா பலவீனமடையும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு குறையும் என்ற காரணங்களால், இஸ்ரேல் ஆட்சி மாற்றத்திற்கு சம்மதித்தது. (http://www.jpost.com/Opinion/Op-Ed-Contributors/The-case-of-Syria-could-prove-different )

4. சிரிய அரச படையினர் மனித உரிமைகளை மீறும் விடயம் ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், கிளர்ச்சிக் குழுக்களும் குற்றங்களை இழைத்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிக்கு புறம்பான கொலைகள், இவற்றோடு சிறுவர்களை கட்டாயப்படுத்தி படையணிகளில் சேர்த்தல்... இது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. (https://www.hrw.org/news/2012/03/20/syria-armed-opposition-groups-committing-abuses

*******

சிரியாவில் நடப்பது என்ன? நாம் யாருடைய அரசியலைப் பேசுகின்றோம்?

எதிரும் புதிருமாக‌ காண‌ப்ப‌டும் முத‌லாளிய‌- த‌மிழ் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளும், சுன்னி- இஸ்லாமிய‌ அடிப்படைவாதிக‌ளும், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் ஓர‌ணியில் நின்று சிரியாவுக்காக‌ அழுகிறார்க‌ள் என்றால், பின்ன‌ணியில் ஏதோ ஒரு அர‌சிய‌ல் ச‌க்தி அவ‌ர்க‌ளை ஒன்றிணைக்கிற‌து என்று அர்த்த‌ம்.

ஒரு மாத‌த்திற்கு முன்ன‌ர் வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் (Afrin) பிர‌தேச‌ம் துருக்கி ப‌டையின‌ரால் தாக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போதும் பொது ம‌க்க‌ளின் உயிரிழ‌ப்புக‌ள், சொத்த‌ழிவுக‌ள் அதிக‌மாக‌ இருந்த‌ன‌. விமான‌க் குண்டுத் தாக்குத‌லில் ப‌லியான‌ குழந்தைக‌ளின் ப‌ட‌ங்க‌ள் வெளியாகின‌. அது குறித்து ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் எந்த‌ எதிர்வினையும் எழ‌வில்லை. எங்கும் க‌ள்ள‌ மௌன‌ம் நில‌விய‌து.

அப்ரின் பிர‌தேச‌த்தில் ப‌லியான‌ ம‌க்க‌ளின் அவ‌ல‌க் குர‌ல் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளின் காதுக‌ளை எட்ட‌வில்லை. அங்கு கொல்ல‌ப் ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்காக‌ யாரும் அழ‌வில்லை. அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை யாரும் பார்க்க‌வில்லை. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் செய‌ற்ப‌டும் ஒருவ‌ர் கூட‌ கொந்த‌ளிக்க‌வில்லை. ஏன்? ஏன்? ஏன்?

குர்திய‌ர்க‌ளும் சுன்னி முஸ்லிம்க‌ள் தானே? அது த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம் ம‌த‌வாதிக‌ளின் உண‌ர்வுக‌ளை த‌ட்டி எழுப்பாத‌து ஏன்? சிரியாவில் குர்திய‌ரும் த‌னி நாடு கேட்டு போராடிய‌ தேசிய‌ விடுத‌லை இய‌க்க‌த்த‌வ‌ர் தானே? அது த‌மிழீழ‌த்தை த‌லையில் வைத்திருக்கும் த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளின் க‌ண்க‌ளை உறுத்தாது ஏனோ? அப்போது ம‌ட்டும் க‌ண்க‌ளையும், காதுக‌ளையும் மூடிக் கொண்டிருந்த‌து ஏனோ?

என‌க்கு இந்த‌ லாஜிக் என்ன‌வென்று புரிய‌வில்லை. உல‌க நாடுக‌ளை விட்டு விடுவோம். சிரியாவில் ந‌ட‌க்கும் சிக்க‌லான‌ யுத்த‌த்தில் எந்த‌ப் ப‌க்க‌த்தில் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டாலும் க‌ண்டிப்ப‌தை விட்டு விட்டு, குறிப்பிட்ட‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் தேர்ந்தெடுத்து அழுவ‌து ஏனோ?

ட‌மாஸ்க‌ஸ் ந‌கருக்கு அருகில் உள்ள‌ கூத்தா பிர‌தேச‌ம், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌து. அங்குள்ள‌ இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக‌ள் அமெரிக்கா, சவூதி அரேபிய நிதியில் இய‌ங்குவ‌தால், அவ‌ர்க‌ள் வெளியிடும் த‌க‌வ‌ல்க‌ளும் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் பெறுகின்ற‌ன‌. அத‌னால், போரில் வெல்ல முடியா விட்டாலும் பிர‌ச்சார‌ப் போரில் வெல்ல‌ வேண்டும் என்ற‌ வெறியுட‌ன் செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

க‌ட‌ந்த‌ ஐந்தாண்டு கால‌மாக‌ ந‌ட‌க்கும் சிரியா போரில் அடிக்க‌டி காணும் காட்சிக‌ள் இவை. அர‌சும், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளும் மாறி மாறி பிர‌ச்சார‌ம் செய்வ‌து வ‌ழ‌மை. ஒருவ‌ர் மாறி ஒருவ‌ர் போர்க்குற்ற‌ச்சாட்டு, இன‌ப்படுகொலைக் குற்ற‌ச்சாட்டு சும‌த்தி, த‌ம‌க்கு சார்பான‌வ‌ர்க‌ளின் அனுதாப‌த்தை பெற்றுக் கொள்ள‌ விரும்புகின்ற‌ன‌ர்.

இத‌னால் க‌ளைப்ப‌டைந்த‌ மேற்கைரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ள், த‌ற்போது ந‌ட‌க்கும் கூத்தா யுத்த‌ம் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அன்றாட‌ம் செய்தி தெரிவிக்கும் போதும், "கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் பிர‌ச்சார‌ மைய‌த்தால் வெளியிட‌ப் ப‌ட்ட‌ உறுதிப் ப‌டுத்த‌ப் ப‌டாத‌ த‌க‌வ‌ல்க‌ள்" என்று சேர்த்தே சொல்கின்ற‌ன‌.

சிரியா இராணுவ‌ம் ஒன்றும் சிற‌ந்த‌து அல்ல‌. அர‌ச‌ ப‌டைக‌ளின் க‌ண்மூடித்த‌ன‌மான‌ எறிக‌ணைத் தாக்குத‌ல்க‌ளில் ஏராள‌ம் பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அவை போர்க்குற்ற‌ங்க‌ளுக்குள் அட‌ங்கும் என்பதில் ம‌றுப்பில்லை. இருப்பினும், கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளும் புனித‌ர்க‌ள் அல்ல‌. ஐ.எஸ். வான‌த்தில் இருந்து குதிக்க‌வில்லை. FSA க்கும் ISIS க்கும் இடையில் பெரிதாக‌ வித்தியாச‌ம் இல்லை.

ஐ.எஸ்.க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீதான‌ போரின் போதும், ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். குழ‌ந்தைக‌ளும் ப‌லியாகின‌. ஐ.எஸ். அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளைக் காட்டி பிர‌ச்சார‌ம் செய்து அனுதாப‌ம் தேடிய‌து. "உல‌க‌மே பார்த்துக் கொண்டிருக்க எம்மின‌ ம‌க்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்கிறார்க‌ள்" என்று ஓல‌மிட்ட‌ன‌ர். கொத்துக் குண்டுக‌ள் வீச‌ப் ப‌ட்ட‌தாக‌வும், இது குறித்து ஜெனீவா சென்று ஐ.நா. வில் முறையிட‌ப் போவ‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

இந்த‌ விட‌ய‌த்தில் சுன்னி- முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ளுக்கும், வ‌ல‌துசாரி- த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளுக்கும் இடையில் ந‌ல்ல‌ ஒற்றுமை உள்ள‌து. ச‌ரி, அது உங்க‌ளுக்கிடையிலான‌ இர‌க‌சிய‌மான‌ கொள்கை உட‌ன்பாடு. இத‌ற்குள் எத‌ற்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை இழுக்கிறீர்க‌ள்?

சிரியாக் குழ‌ந்தைக‌ளுக்காக‌ நீலிக்க‌ண்ணீர் வ‌டிக்கும் போலி மனிதநேய‌வாதிக‌ள், யேம‌ன் குழ‌ந்தைக‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் எங்கிருந்தார்க‌ள்? அங்கு ந‌ட‌க்கும் போர் ப‌ற்றி, ப‌லியான‌ ம‌க்க‌ள் ப‌ற்றி ஒரு நாளாவ‌து பேசி இருப்பார்க‌ளா?

சிரியாவுக்கும், யேம‌னுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்? இர‌ண்டுமே அரேபிய‌ தீப‌க‌ற்ப‌த்தில் தான் உள்ள‌ன‌. இர‌ண்டு நாடுக‌ளிலும் கொல்ப‌வ‌ர்க‌ளும், கொல்ல‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளும் அரேபிய‌ர்க‌ள், அல்ல‌து முஸ்லிம்க‌ள் தான்.

யேம‌னில் குண்டு போட்டு குழ‌ந்தைக‌ளைக் கொல்வ‌து ச‌வூதி அரேபிய‌ விமான‌ங்க‌ள் என்ப‌தால், யாருக்கும் அதைப் ப‌ற்றி அக்க‌றை இல்லை. ச‌வூதி அரேபியாவுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்ப‌தால் ச‌ர்வ‌தேச‌மும் க‌ண்ணை மூடிக் கொண்டிருக்கிற‌து. அது ப‌ற்றி விவாதிக்க‌ ஐ.நா. பாதுகாப்புச் ச‌பை கூட்ட‌ப் ப‌டுவ‌தில்லை.

யேம‌னில் ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள் ஷியா முஸ்லிம்க‌ள் என்ற‌ ஒரேயொரு கார‌ணத்திற்காக‌, த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம்க‌ள் க‌ண்டுகொள்ளாம‌ல் புற‌க்க‌ணிக்கிறார்க‌ள். ஆனால், சிரியாவில் சுன்னி முஸ்லிம்க‌ள் ப‌லியாகும் போது ம‌ட்டுமே கொந்த‌ளிக்கிறார்க‌ள். இதுவா ம‌னித‌ நேய‌ம்? இதுவா ம‌த‌ உண‌ர்வு?

ம‌னிதாபிமான‌ உண‌ர்வு கூட‌ தான் சார்ந்த‌ ம‌த‌ப் பிரிவு பார்த்து தான் வ‌ருகின்ற‌து. த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும் இத‌ற்கு விதிவில‌க்க‌ல்ல‌. த‌மிழ‌ர் கொல்ல‌ப் ப‌ட்டால் ம‌ட்டுமே அவ‌ர்க‌ளுக்கும் ம‌னித‌நேய‌ உண‌ர்வு பொங்கி எழும். ம‌ற்றும் ப‌டி மேற்க‌த்திய‌ ந‌ல‌ன் சார்ந்த‌வ‌ர்க‌ள் பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌ட்டுமே தாமும் சேர்ந்து அழுவார்க‌ள்.

சிரியாப் போரின் ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் அந் நாட்டின் பெரும் ப‌குதி கிள‌ர்ச்சிப் ப‌டைக‌ளின் க‌ட்டுப்பாட்டின் கீழ் வ‌ந்திருந்த‌து. அப்போது, ஆயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ அங்கு வாழ்ந்து வ‌ந்த‌ ஷியா முஸ்லிம்க‌ளும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் இன‌ச்சுத்திக‌ரிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அந்த‌ ந‌ட‌வ‌டிக்கையின் போது ப‌ல‌ர் க‌ழுத்து வெட்டிக் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். பெண்க‌ள், குழ‌ந்தைக‌ள் என்றும் பாராம‌ல் ப‌ல‌ர் குடும்ப‌த்தோடு கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ISIS ம‌ட்டும‌ல்ல, அல் நுஸ்ரா, FSA ம‌ற்றும் சிரியாவில் போராடும் ஒரு ட‌சின் கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள், ஷியா, கிறிஸ்த‌வ‌ ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்துள்ள‌ன‌. பொதுவாக‌ எல்லா கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் போராளிக‌ளும் சுன்னி முஸ்லிம்க‌ள் தான். தீவிர‌ இஸ்லாமிய அடிப்ப‌டைவாதிக‌ள் தான்.

"சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹோம்ஸ் நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். சிரிய அரசுக்கெதிரான சிரிய சுதந்திர இராணுவம், அல்கைதா குழுக்கள் கிறிஸ்தவ மக்களை இனச்சுத்திகரிப்பு செய்கின்றனர். மேற்குலகம் இதைக் கண்டும் காணாதது போல கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது." - சிரிய ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவ திருச்சபை வத்திகானுக்கு எழுதிய கடிதத்தில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. (http://www.politique-actu.com/osons/syrie-eglises-accusent-france-vouloir-vider-syrie-chretiens/383926/

அப்போது யாரும் சிரிய‌க் குழ‌ந்தைக‌ளுக்காக‌ அழ‌வில்லை. கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ போதிலும், ஒரு "கிறிஸ்த‌வ‌ நாடு" கூட‌ க‌ண்ட‌ன‌ம் தெரிவிக்க‌வில்லை. இஸ்லாமிய‌ அடிப்ப‌டைவாத‌ ஆயுத‌பாணிக‌ள், இர‌ண்டாயிர‌ம் ஆண்டு ப‌ழ‌மை வாய்ந்த‌ கிறிஸ்த‌வ‌ கிராம‌ங்க‌ளை தாக்கி அழித்து, அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்த‌ன‌ர். எத்த‌னை கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ விப‌ர‌ம் தெரியும்? எத்த‌னை பேர் அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொண்டார்க‌ள்? பூஜ்ஜிய‌ம்.

அந்நேர‌ம் மேற்குறிப்பிட்ட‌ இன‌ப்ப‌டுகொலைக‌ளில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் சுன்னி முஸ்லிம் தீவிர‌வாதிக‌ள். அமெரிக்கா, ச‌வூதி அரேபியாவால் நிதி, ஆயுத‌ம் கொடுத்து வ‌ள‌ர்க்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள். ஆக‌வே எல்லோரும் பேசாம‌ட‌ந்தைக‌ளாக‌ வாயை மூடிக் கொண்டிருந்தார்க‌ள்.

பார‌ப‌ட்ச‌மின்றி அனைத்துக் கொலைக‌ளையும் க‌ண்டியுங்க‌ள். அது நேர்மையான‌து. ச‌ந்த‌ர்ப்ப‌ம் பார்த்து, "ந‌ண்ப‌ர்க‌ள்" பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌ட்டும் பொங்கி எழுவ‌து, குறுகிய‌ அர‌சிய‌ல் ஆதாய‌ம் க‌ருதி செய்ய‌ப் ப‌டும் பிர‌ச்சார‌ம். அத‌ற்குப் பெய‌ர் இர‌க்க‌ம் அல்ல‌, பிண‌த்தை காட்டி காசு வாங்கும் ஈன‌த்த‌ன‌ம்.

ஏனிந்த‌ பார‌ப‌ட்ச‌ம்?

அப்போது குழ‌ந்தைக‌ளை கொன்ற‌வ‌ர்க‌ள் தாம் சார்ந்த‌ சுன்னி இஸ்லாமிய‌ ம‌த‌ப் பிரிவின‌ர் என்ப‌தால், த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம்க‌ள் க‌ண்டுகொள்ள‌வில்லை. அதே மாதிரி, தாம் ஆராதிக்கும் அமெரிக்காவின் ஆசீர்வாத‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌தால், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் க‌ண்டுகொள்ள‌வில்லை. இது தான் உண்மை.

ராக்காவில் அமெரிக்க விமானங்கள் குண்டு போட்ட நேரம், "ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்று கூறி கைத‌ட்டி வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் தான் இன்று "குழ‌ந்தைக‌ளுக்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்கிறார்க‌ள். இவ‌ர்க‌ள் எப்போது யாரை ஆத‌ரிப்பார்க‌ள், யாரை எதிர்ப்பார்க‌ள், யாரின் காலை வாரி விடுவார்க‌ள் என்று தெரியாம‌ல் உள்ள‌து. ஒரு கால‌த்தில் ஐ.எஸ். விடுத‌லைப் போராளிக‌ள் என்றார்க‌ள். பிற‌கு ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று சொல்லி காலை வாரினார்க‌ள்.

ஒன்று ம‌ட்டும் நிச்சய‌ம். நாம் என்ன‌ அர‌சிய‌லைப் பேச‌ வேண்டும் என்ப‌து வாஷிங்ட‌னில் தீர்மானிக்க‌ப் ப‌டுகிற‌து. அங்கிருந்து வ‌ரும் அறிவுறுத்த‌ல்க‌ளை எல்லோரும் பின்ப‌ற்ற‌ வேண்டும். அவ‌ர்க‌ள் எதிர்க்க‌ சொன்னால் எதிர்க்க‌ வேண்டும். ஆத‌ரிக்க‌ சொன்னால் ஆத‌ரிக்க‌ வேண்டும்.


சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:
சிரியாவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்குமா?
அலெப்போவின் முள்ளிவாய்க்கால்
இறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் இருபது உலக நாடுகள்!
இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?

Thursday, August 11, 2016

கொழும்புத் தமிழர்கள், ஐரோப்பிய முஸ்லிம்கள் : இனப்பிரச்சினையின் இரண்டு பரிமாணங்கள்


அறியாமையும் ஒரு ஒடுக்குமுறை ஆயுதம் தான். இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளும், அதன் விளைவான முஸ்லிம் மக்களுக்கெதிரான அரச அடக்குமுறையும் அனைவரும் அறிந்ததே. 

ஐரோப்பிய வெள்ளையின இனவெறியர்கள், ஐரோப்பிய முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் வெறுப்புப் பிரச்சாரம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இலங்கையில் அதே மாதிரியான இனவெறியர்களினால் ஒடுக்குமுறைக்குள்ளான ஈழத் தமிழர்களில் சிலரும், அதே கருத்துக்களை எதிரொலிப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இதை அறியாமை என்பதா? முட்டாள்தனம் என்பதா?

பிரான்ஸில் நடந்த தாக்குதல் ஒன்றின் பின்னர், ஈழத் தமிழ் அரசியல் ஆர்வலர் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு எழுதினார்: "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து முஸ்லிகள் ஒருவர் விடாமல் அடித்து விரட்டி விடுவார்கள்." அதே மாதிரி, அவுஸ்திரேலியாவில் நடந்த தாக்குதலின் பின்னர், இன்னொருவர் எழுதினார்: "நிலைமை இப்படியே தொடர்ந்தால், உலகம் முழுவதும் இஸ்லாம் என்ற மதத்தையே தடைசெய்து விடுவார்கள்." இப்படி எழுதும் பலர் "தீவிர தமிழ் தேசியவாதிகள்"(?), அல்லது "தீவிர புலி ஆதரவாளர்கள்"(?)

இப்படியானவர்கள் கொழும்பு நகரில் தாக்குதல்கள் நடந்த நேரம் என்ன சொல்லி இருப்பார்கள்? "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், இலங்கையில் தமிழ் மொழியை தடை செய்து, அங்கு வாழும் தமிழர் ஒருவர் விடாமல் அடித்து விரட்டி விடுவார்கள்." என்று சொல்வார்களா? இன்றைக்கு ஐரோப்பாவில் நடக்கும் தாக்குதல்களை சாட்டாக வைத்து அங்கு வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகிறவர்கள், இலங்கையில் தமிழர்கள் விடயத்தில் மட்டும் "நடுநிலைமை" வகிக்கப் போகிறார்களா?

1998 ம் ஆண்டு, இலங்கைக்கு ஒரு சுற்றுலாப் பயணியாக சென்றிருந்த டச்சுப் பெண்மணி ஒருவர், நெதர்லாந்தில் வெளியான Sri lanka veslaggever என்ற சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன். Cornelie Quist எனும் அந்தப் பெண்மணி, தான் நேரில் கண்ட உண்மைகளை கட்டுரையில் எழுதி இருக்கிறார். அந்தத் தகவல்கள், ஏற்கனவே அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் பலருக்கு பரிச்சயமான விடயங்கள்.

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு சென்ற அவர், நகரில் செல்வந்தர்கள் வாழும் பகுதி ஒன்றில் வாழ்ந்து வந்த தமிழ் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது கொழும்பில் தமிழர்கள் வீடு வாடகைக்கு எடுப்பது எவ்வளவு சிரமமானது என்பதை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுக்காரரின் பெயர் ராஜசிங்கம். அவர்கள் வீடு தேடிய பொழுது, சிங்கள வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு சொல்லி மறுப்பார்கள்: "உங்கள் பெயர் ராஜசிங்கவா, ராஜசிங்கமா?" "மன்னிக்கவும், நாங்கள் சிங்களவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு கொடுப்போம்."

வாடகைக்கு வீடு எடுப்பது தொடர்பாக, தற்போது ஐரோப்பிய நகரங்களில் உள்ள நிலைமையும் அது தான். ஐரோப்பிய வீட்டு உரிமையாளர்கள் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். வீடு தேடும் முஸ்லிம் நபர், அந்நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, உத்தியோகம் பார்த்தாலும், வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை.

கொழும்பில் வாழும் படித்த, மத்தியதர வர்க்க நண்பர்கள் கூட, தற்போது தமிழர், சிங்களவர் என்று முரண்பாடுகளுடன் பிரிந்து வாழ்வதை காணலாம். இந்தக் கட்டுரையை எழுதிய டச்சுப் பெண்மணி, இருபது வருடங்களுக்கு முன்னர் (எழுபதுகளில்) இலங்கையில் தங்கியிருந்து வேலை செய்துள்ளார். அதனால் நிறைய சிங்கள, தமிழ் நண்பர்கள் இருந்தனர். இந்த தடவை கொழும்பில் தமிழர் வீட்டில் தங்கியிருந்து, சிங்கள நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களது உரையாடல்களில் தவிர்க்கவியலாது இன முரண்பாடு அரசியலும் இடம்பெற்றுள்ளது. இவரது சிங்கள, தமிழ் நண்பர்கள் கடந்த பல வருடங்களாக ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தளவுக்கு இன முரண்பாடு அவர்களது நட்பில் விரிசலை உண்டாக்கி இருந்தது. அந்தளவுக்கு இருதரப்பு பதற்றம், நம்பிக்கையின்மை, முரண்பட்ட கருத்து மோதல்கள். இது தொடர்பாக, தங்களது சிங்கள நண்பர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று இவருடன் பேசிய தமிழ் நண்பர்கள் விளங்கப் படுத்தினார்கள்.

பெரும்பாலான சிங்கள நண்பர்களின் எதிர்வினைகள் ஒரே மாதிரி இருந்தாலும், ஒரு சிலர் கடுமையாக நடந்து கொள்வார்கள்: "நீங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால், ஏன் அதை வெளியே காட்டிக் கொள்வதில்லை?" என்று கேட்பார்கள். அது குறித்து பதிலளித்த தமிழ் நண்பர்கள் சொன்னார்கள்: "பாருங்கள்! இது தான் பிரச்சினை. தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கு நிபந்தனையாக, தமிழர்களான நாங்கள் எல்லோரும் புலிகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது எல்லாத் தமிழர்களும் புலிகளை ஆதரிப்பதாக நினைக்கிறார்கள்."

எந்த வித்தியாசமும் இல்லாமல், அதே கதை தான் ஐரோப்பாவிலும் நடக்கிறது. கொழும்பில் நடந்த ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகும், அங்கு வாழும் தமிழர்கள் புலிகளை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று சிங்களத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப் படுகின்றது. அதே மாதிரியான அழுத்தம் தான் ஐரோப்பிய முஸ்லிம்கள் மீதும் பிரயோகிக்கப் படுகின்றது. 

ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னரும், அனைத்து முஸ்லிம்களும் ஐ.எஸ். (அல்லது அல்கைதா) தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்போது தான் முஸ்லிம்கள் தாமும் இந்நாட்டு பிரஜைகள் என்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளலாம். ஐரோப்பிய முஸ்லிம்கள் எல்லோரும் ஐ.எஸ். போன்ற தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்பதில்லை. ஐரோப்பியர்களுக்கு அதைப் பற்றி கவலையும் இல்லை.

கட்டுரையாசிரியர் கொழும்பு நகரில் தங்கியிருந்த நேரம், மருதானையில் புலிகள் வைத்த குண்டு வெடித்து நிறையப் பேர் பலியானார்கள். அப்போது அந்தத் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சில குழுக்கள் சிங்கள பேரினவாதிகளையும், வேறு சில குழுக்கள் சிங்கள முற்போக்குவாதிகளையும் கொண்டிருந்தன. ஆனால், ஆர்ப்பாட்டங்கள் முழுவதும் புலிகளுக்கு எதிராக இருந்தன. ஒரு சில தமிழர்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இருப்பினும், பெரும்பாலான தமிழர்கள் அச்சத்தில் தமது வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். இவ்வாறு அன்று கொழும்பில் நடந்த சம்பவங்களை பதிவு செய்துள்ளார். 

அதே நிலைமை தான் ஐரோப்பாவிலும். ஐரோப்பிய நகரம் ஒன்றில் குண்டு வெடித்தால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். ஒரு சில முஸ்லிம்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இருப்பினும், பெரும்பாலான முஸ்லிம்கள் அச்சத்தில் தமது வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். ஒடுக்குமுறையின் வீரியம், ஐரோப்பாவை விட இலங்கையில் அதிகமாக உள்ளதை யாரும் மறுக்கவில்லை.

இலங்கையில் நடந்தது மாதிரி, ஐரோப்பாவிலும் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் சிலநேரம் அப்பாவிகளும் கைது செய்யப் படுவதுண்டு. ஆனால், இலங்கையில் நடந்தது போன்ற சித்திரவதைகள், சட்டத்திற்கு முரணான படுகொலைகள், காணாமல்போதல்கள், ஐரோப்பாவில் நடப்பதில்லை. ஆனால் அந்த வித்தியாசத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, ஐரோப்பாவில் உள்ள பேரினவாதிகளை குறைவாக எடைபோட முடியாது. ஏற்கனவே நாஸிகளின் காலத்தில், ஐரோப்பா பெருமளவு மனித உரிமை மீறல்களையும், இனப் படுகொலைகளையும் கண்டிருந்தது. அப்படியான நிலைமை இனிமேலும் வராது என்று யாரும் உறுதியிட்டுக் கூற முடியாது.


Saturday, November 14, 2015

பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்

"இந்த தடவை, இது ஒரு யுத்தம்!" பிரெஞ்சு தினசரி Le Parisien  தலையங்கம் 

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்து.

உதைபந்தாட்ட மைதானத்தில் கிரனேட் வீசப் பட்டது. கம்போடிய ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் பலியானார்கள். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு ஒன்றில் இருந்த பார்வையாளர்கள் தான் பெருமளவில் பலியாகி உள்ளனர்.

இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்த ஆயுதபாணிகளை, நேரில் கண்ட சாட்சிகள் பல உள்ளன. முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு, கருப்பு உடையணிந்து, AK-47 தானியங்கி துப்பாக்கிகளால் பதற்றப் படாமல், ஆறுதலாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே மூன்று, நான்கு தடவைகள் ரவைக் கூடுகளை மாற்றினார்கள். நிலத்தில் படுத்திருந்த பார்வையாளர்களை, குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஆயுதபாணிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!

அதிகாலை வரையில், பிரெஞ்சு ஊடகங்கள், தாக்குதல் நடத்தியவர்களை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இனந்தெரியாத ஆயுதபாணிகள் என்றே பிற ஐரோப்பிய ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கிடையே, ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் சிலர், வழமை போல தமது இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

வழமை போலவே, சில தமிழ் வலதுசாரிகளும் ஐரோப்பிய நிறவெறியர்களின் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பென்று சொன்ன கதை இது. ஐரோப்பிய நிறவெறியர்கள் (தீவிர வலதுசாரிகள்), இஸ்லாமியருக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், அகதி முகாம்களுக்கு பலத்த பொலிஸ் காவல் போடப் பட்டுள்ளது.

பாரிஸ் தாக்குதலுக்கு முன்தினம், லெபனான், பெய்ரூட் நகரில் ISIS நடத்திய குண்டுத்தாக்குதலில், நாற்பது இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக நடக்கும் சிரியப் போரில், ISIS பயங்கரவாதிகளால் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

பாரிஸ் தாக்குதல் நடந்து பல மணி நேரமாகியும், யாரும் உரிமை கோரவில்லை. சமூக வலைத்தளத்தில் ISIS உரிமை கோரியிருப்பதாக, காலையில் யாரோ அறிவித்தார்கள். அதற்குப் பின்னர், சில நிமிடங்கள் கூடத் தாமதிக்காமல், பிரெஞ்சு அதிபர் ஹோலந்த் "இது ஒரு போர்ப் பிரகடனம்" என்று அறிவித்தார். ISIS கூட, "பாரிஸ் தாக்குதலானது பிரான்ஸ் மீதான போர்" என்று தான் அறிவித்திருந்தது. அதாவது, இரண்டு தரப்பினரும், வரிந்து கட்டிக் கொண்டு போரில் குதிக்கப் போகிறார்கள்.

சமீப காலமாக, ரஷ்யா தான் தனது பிரதான எதிரி என்று ISIS அறிவித்திருந்தது. எகிப்து, சினாய் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதற்கும், தாமே சுட்டு வீழ்த்தியதாக ISIS உரிமை கோரியது. அப்போது "விமானத்தில் குண்டு வைக்கப் பட்டிருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக...." பயமுறுத்திய மேற்குலக அரசுகள், தமது சுற்றுலா பயணிகள் எகிப்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தின.

"ரஷ்ய விமானத்தில் குண்டு இருந்தது தெரியும்" என்று அறிவித்துக் கொண்டிருந்த, அமெரிக்காவும், பிரிட்டனும், ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவில்லை! இருநூறுக்கும் அதிகமான பயணிகள் பலியான போதிலும், எந்த நாடும் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. (ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை பிரான்ஸ், அமெரிக்கா ஆதரிக்கவுமில்லை.)

இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ISIS தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறது. வாரக் கணக்காக நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய விமானக் குண்டுத் தாக்குதல்களால், ISIS நிலைகுலைந்து போயுள்ளது. ISIS நிர்வகிக்கும் நடைமுறை (de facto) "இஸ்லாமிய தேசத்தின்" மேற்குப் பகுதிகளை சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் தான், ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாக, ஈராக்- குர்திஸ்தான் படையணிகள் அறிவித்தன. சிரியா - ஈராக் எல்லையோரம் அமைந்துள்ள சிஞ்சார் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திய படைகள் அதைக் கைப்பற்றியதன் மூலம், ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நடுவில் ஊடுருவி உள்ளது. மேலும், அடுத்ததாக எண்ணை வளம் நிறைந்த மொசுல் நகரை கைப்பற்றப் போவதாக, குர்திய படைகள் அறிவித்தன.

முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ISIS பலவீனமடைந்துள்ள நிலையில், இப்போது எதற்காக ஒரு புதிய போர்?

ISIS தனது பிரதான எதிரிகளான ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளை விட்டு விட்டு, எதற்காக பிரான்ஸ் மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்? அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற மேற்குலக நாடுகளால் உருவாக்கப் பட்ட இயக்கம் தான் ISIS. இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே பலர் எடுத்துக் காட்டி விட்டார்கள். விக்கிலீக்ஸ் கூட அது சம்பந்தமான இரகசிய ஆவணங்களை பிரசுரித்திருந்தது. மேற்குலகம் ISIS என்ற பூதத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அது நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

"அரேபியர்களுக்கு உலகில் பத்துக்கும் குறையாத நாடுகள் உள்ளன... தமிழனுக்கு என்றொரு நாடில்லை...!" என்று வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த அறிவும் கிடையாது. உண்மையில், மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் யாவும், ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் படைப்புகள் ஆகும். பிரிட்டிஷ் காலனி ஈராக் என்றும், பிரெஞ்சுக் காலனி சிரியா (மற்றும் லெபனான்) என்றும் பிரிந்தன. அதை நினைவுபடுத்தும் வகையில் தான் ISIS தனது இயக்கத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.

தற்போது, சிரியாவையும், ஈராக்கையும், மீண்டும் பிரிப்பதற்கான திட்டம் மேற்குலக கொள்கை வகுப்பாளரிடம் உள்ளது. காலனிய கால பிரித்தாளும் தந்திரம் மீண்டும் அரங்கேறுகின்றது. ISIS தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரதேசம் "இஸ்லாமிய தேசம்" என்று அழைக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலர் அறியாத ஓர் உண்மை இருக்கிறது.

சிரியாவின் மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கே ஷியா அல்லது அலாவி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுடன் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினரின் பிரதேசம் உள்ளது. அதனை PKK-YPG போன்ற குர்திய இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

மத்தியில் உள்ள "இஸ்லாமிய தேசம்", சுன்னி - முஸ்லிம் சமூகத்தினரின் தாயகமாக உள்ளது. அதாவது, இஸ்லாமிய தேசத்தினுள் சுன்னி முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும். கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, ஷியா, அலாவி முஸ்லிம்களை கூட, ISIS இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டி விட்டது. ஈராக்கிலும் அதே கதை தான். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினர். தெற்கில் ஷியா முஸ்லிம்கள். மத்தியில் சுன்னி முஸ்லிம்கள்.

பாரிஸ் நகரில் நடந்த தாக்குதலின் மூலம், ISIS தனது மேற்குலக எஜமானர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது. பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு, சில தினங்களுக்கு முன்னர், CIA தலைமை நிர்வாகி John Brennan பாரிஸ் வந்திருந்தார். அவர் தன்னைப் போன்று, பிரெஞ்சு புலனாய்வுத் துறையான DGSE தலைமையில் உள்ள Bernard Bajolet உடன் சந்தித்துப் பேசி உள்ளார். மொசாட் பிரதிநிதி ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது. (இந்தத் தகவல் பெல்ஜியத்தில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளமான RTL info, 28 அக்டோபர் 2015 அன்று பிரசுரித்தது. (http://www.rtl.be/info/monde/international/-le-moyen-orient-d-avant-ne-reviendra-pas--766109.aspx#

"சிரியாவின் வரைபடம் இனி ஒருபோதும் முன்னரைப் போல இருக்கப் போவதில்லை..." என்று, புலனாய்வுத் துறை தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பின் போது Bernard Bajolet கூறினார். "தற்போது சிரியாவின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடக்கில் குர்தியர்கள் ஆட்சி செய்கிறார்கள். நாங்கள் சிரியாவின் மத்திய பகுதியை கைப்பற்ற வேண்டும்." என்று தெரிவித்தார்.

அனேகமாக, பிரான்ஸ் நடத்தப் போகும் புதிய போரானது, "இஸ்லாமிய தேசத்தை" தனி நாடாக்கும் போராக இருக்கலாம். அதற்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது அதை ISIS தான் ஆள வேண்டும் என்றோ, எந்தக் கட்டாயமும் இல்லை. மேற்கத்திய வல்லரசுகள் புதிதாக உருவாக்கப் போகும், "ஜனநாயக ISIS கட்சி" அந்தப் பிரதேசத்தை நிர்வகிக்கலாம். எது எப்படி இருப்பினும், மத்திய கிழக்கின் வரைபடம் மாற்றியமைக்கப் படவுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.


பிரான்சில் அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரம், பிரெஞ்சு தேசியக் கொடியை புரபைலில் மாற்றுவது நியாயமான செயலாகத் தெரியவில்லை. நூற்றுக் கணக்கான வருடங்களாக, ஏகாதிபத்திய வடிவில், காலனித்துவ எஜமானாக, பல உலக நாடுகளின் மக்களை ஒடுக்கிய சின்னமாக பிரெஞ்சுக் கொடி உள்ளது. முன்னாள் பிரெஞ்சுக் காலனி நாடுகள், இன்றைக்கும் பிரான்சுக்கு காலனிய வரி கட்டிக் கொண்டிருக்கின்றன.

பிரெஞ்சுக் கொடியை உயர்த்துவற்கும், உலகம் அறிந்த அமெரிக்க ஏகாதிபத்திய கொடியை உயர்த்துவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வியட்நாமிய யுத்தத்தில், பிரான்சின் இடத்தை தான் அமெரிக்கா பிடித்துக் கொண்டது. கடந்த பல தசாப்த காலமாக, பிரான்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளது.

யாராவது சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்தும் பொழுது, அது பெரும்பான்மை தமிழ் மக்களால், ஒரு அவமானச் சின்னமாக கருதப்படுகின்றது. அதே மாதிரி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொடிகளும், ஒடுக்கப் பட்ட மக்களை அவமதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாரிஸ் தாக்குதலில் கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிரெஞ்சுக் கொடியால் புரபைல் படத்தை போர்த்திக் கொள்வதை தவிர்ப்பதற்கும் அது தான் காரணம். பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசின் செயல்களை பற்றி எதுவும் அறியாமல், தமது உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களின் தியாகம் மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக தவிர்த்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவோர், பிரெஞ்சு அரச பயங்கரவாதிகளின் கொடியை உயர்த்துவதால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

இந்த இடத்தில், பிரான்சின் கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத காரணத்தால், தமது புரபைலில் பிரெஞ்சுக் கொடியை போட்டுக் கொண்ட அப்பாவி மக்களை குற்றஞ் சாட்டவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பிரான்ஸில் கொல்லப் பட்ட மக்களுக்காக மட்டுமல்லாது, பிரெஞ்சு அரசினால் கொல்லப் பட்ட ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

Monday, July 07, 2014

மேற்குலகில் ஜிகாத் ஆதரவுக்கு காரணமான பொருளாதார பிரச்சினை

இன்று சிரியா, ஈராக்கில் ஒரு பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS அமைப்பில், மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களும் சேர்ந்திருக்கின்றனர். மேற்கு ஐரோப்பாவில், சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு குடியேறிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். 

வறுமையில் வாழும் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். நாட்டில் பெருகி வரும் குற்றங்களை குறைப்பது என்ற பெயரில், குறிப்பிட்ட சமூகத்தினரை பாகுபாடு காட்டி ஒதுக்கும், அரசு அடக்குமுறை பிரயோகிக்கப் படுகின்றது. போலிஸ் அடக்குமுறை காரணமாக, ஒரு பக்கம் குற்றச் செயல்கள் குறைந்த போதிலும்,  மறு பக்கம் கடும்போக்கு மதவாதம் அதிகரிக்கின்றது. ஜிகாத் போராளிகளின் சமூக- பொருளாதாரக் காரணிகளை இந்தக் கட்டுரை அலசுகின்றது.

நெதர்லாந்தில் டெல்ப்ட் (Delft) நகரத்தில் இருந்து மட்டும், சுமார் 14 இளைஞர்கள், குறிப்பாக மொரோக்கோ சமூகத்தை சேர்ந்தவர்கள், சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நான்கு பேர் வீர மரணம் அடைந்து விட்டனர். எதற்காக டெல்ப்ட் நகரில் இருந்து இத்தனை பேர் ஜிகாத் போராளிகள் ஆனார்கள்? அதனை ஆராய்ந்து உண்மை அறிவதற்காக சென்ற டச்சு ஊடகவியலாளரின் ஆய்வுக் கட்டுரை:

*******

"நாங்கள் அங்கே ஓர் ஆசீர்வதிக்கப் பட்ட நாட்டில் இருந்தோம்"
(Andreas Kouwenhoven)

சொர்க்க வாசல் (Paradijspoort) என்ற பெயர் கொண்ட  கடைவீதி டெல்ப்ட் நகரத்தில் பிரசித்தமானது. பல பெரிய வணிக நிறுவனங்கள் அங்கே கடை போட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்னர், அந்தத் தெருவில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டு திரிந்த காவாலிகளுக்கும் "சொர்க்க வாசல் பையன்கள்" என்ற பட்டப் பெயர் சூட்டப் பட்டிருந்தது. அவர்களில் பலர், பதினாறு வயது மதிக்கத் தக்க, மொரோக்கோ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கில்லிஸ்பியூர்ட்  (Gillisbuurt) பகுதியில் வசிப்பவர்கள். கில்லிஸ்பியூர்ட், டெல்ப்ட்  நகரில் மிகவும் பின்தங்கிய பகுதி. 

அந்த விடலைப் பையன்கள், கடைத்தெருவில் பிரயோசனமான எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. அவர்கள் எந்த நேரமும் அங்கே தான் நின்று கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் அடிப்பதுடன், தெருவில் போகும் இளம் பெண்களை சீண்டிக் கொண்டிருப்பார்கள். ஸ்கூட்டர்களில் முறுக்கி சத்தம் எழுப்பிக் கொண்டிருப்பார்கள். சொர்க்கவாசல் பையன்களில் நான்கு பேர் இப்போது உயிரோடு இல்லை. சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டு விட்டனர். AIVD (நெதர்லாந்து புலனாய்வுத் துறை) அந்தத் தகவலை அறியத் தந்துள்ளது.

கில்லிஸ்பியூர்ட் பகுதி, "டெல்ப்ட்  நகரின் காசா பிரதேசம்" என்று அழைக்கப் படுகின்றது. அங்கு வசிப்பவர்களில், ஐந்தில் ஒருவருக்கு வேலை இல்லை. பாடசாலைக் கல்வியை இடை நடுவில் நிறுத்துபவர்கள் அங்கே அதிகம். அந்த இடத்தில் தான் அதிகளவு குற்றங்கள் நடைபெறுகின்றன. அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கூட, பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். ஐம்பது பேரளவிலான இளைஞர் குழுக்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. தெருப் பொறுக்கிகளில் பலர் முதலில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலர் திடீரென மனம் திருந்தி, சிரியாவுக்கு போராடச் சென்றார்கள். கில்லிஸ்பியூர்ட் எந்த இடத்தில் தவறிழைத்தது? 

சில வருடங்களுக்கு முன்னர், கலாச்சாரம் பேணும் இளைஞர் மன்றங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. எல்லா இளைஞர்களும் அங்கே சமூகம் அளித்தார்கள். மொரோக்கர்கள் மட்டுமல்ல, சுரினாமியர்கள், துருக்கியர்கள், சோமாலியர்கள், இவர்களுடன் டச்சு இளைஞர்களும் அங்கே ஒன்று கூடுவார்கள். பெரும்பாலும் 12 வயது தொடக்கம் 30 வயது வரையிலான இளைஞர்கள். எல்லோரும் ஒன்றாக கால்பந்து விளையாடுவார்கள். ஒன்றாக உணவருந்துவார்கள், வீடியோ கேம் விளையாடுவார்கள். 

அந்த இளைஞர்கள் எல்லோரும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பது கஷ்டமானது. ஆனால், பொருளாதார பிரச்சினையை காரணமாகக் காட்டி, அரசாங்கம் சமூக சேவைகளுக்கான கொடுப்பனவுகளை குறைத்து விட்டது. அதனால், பல சமூக சேவையாளர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. விளைவு? ஒரு பகுதி இளைஞர்கள் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டனர். 

"மகிழ்ச்சியான தருணங்கள்" என்று, அந்தக் கால நினைவுகளை இரைமீட்கும் 25 வயது மொரோக்கோ இளைஞர் ஒருவர், தனது நண்பர்கள் மக்களுக்கு தொந்தரவு செய்ததை ஒத்துக் கொள்கிறார். பருவ வயது இளைஞர்கள், 16 அல்லது 17 வயதை அடையும் காலத்தில், நிஜ உலகை தரிசிக்க வேண்டியுள்ளது. அதிலிருந்து தான் எல்லாத் தவறுகளும் ஆரம்பமாகின. 

அந்த வயதில் எல்லோரும் பாடசாலைக் கல்வியை முடித்து விட்டிருப்பார்கள். எங்காவது சென்று தொழில் பயிற்சி பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள். அப்போது தான், "நாங்கள் வேறு விதமானவர்கள்" என்ற உண்மை அவர்களுக்கு உறைக்கும். களியாட்ட விடுதிகளில் அனுமதி மறுக்கப்படும். பகுதி நேர வேலை கூட கிடைக்காது. "பெண்கள் முக்காடு போடக் கூடாது" என்று அறிவுரை கூறுபவர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவை எல்லாம் எங்களது ஆத்திரத்தை தூண்டி விடும். 

"அந்த இளைஞர்கள், சமூகத்தில் இருந்து அந்நியப் படுத்தப் பட்டு வாழ்கின்றனர்." சிரியா போராளிக் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கும் நகரசபை உறுப்பினர் அப்துல் மனாயுய்  கூறுகின்றார். அவரைப் பொருத்தவரையில், பல இளைஞர்கள் தாங்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் படுவதாக உணர்கின்றனர். அவர்களின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஓர் ஆதாரத்தைக் காட்டுகின்றார். பெரும்பான்மையாக (வேலை வாய்ப்பற்ற) வெளிநாட்டு குடியேறிகள் வசிக்கும் ஒரு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் பூர்வீக டச்சுக் காரர்கள். 

சிரியாவுக்கு போராடச் சென்ற இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு ஆரம்பத்தில் மதத்தின் மேல் பற்று எதுவும் இருக்கவில்லை. கொஞ்சம் வயதான சுக்ரி மட்டும் விதிவிலக்கு. அஸ்ஸுன்னா மசூதியில் நடக்கும் வகுப்புகளுக்கு ஒழுங்காக சென்று வந்தான். கில்லிஸ்பியூர்ட் பகுதியில் சமுதாயத்தை நிராகரிக்கும் போக்கு வளர்ந்து வருகின்றது. "இந்த நாடு நாசமாகப் போக... இது எனது வீடல்ல..." என்று ராப் பாடல் இசைக்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்னர், இளைஞர்கள் கூடிக் கும்மாளம் அடித்த இடம் பறிபோனது. 2008 ம் ஆண்டு, அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக, நகரசபை அந்த இடத்தை கூறு போட்டது. அதனால், இளைஞர்களின் அட்டகாசம் அந்தப் பிரதேசம் எங்கும் பரவியது. புதுவருடக் கொண்டாடத்தின் போது, அங்கிருந்த வயோதிபர் மடத்தின் ஜன்னல்கள் கல் வீசி உடைக்கப் பட்டன. ஒரு குழு பொலிஸ்காரர்களுடன் மோதியது. அவர்களை நோக்கியும் கற்கள் பறந்தன. இறுதியில், மிலிட்டரி பொலிஸ் வந்து நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.  

ஒரு வருடத்திற்குப் பிறகு, பத்துக்கும் குறையாத இளைஞர்கள் கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதாக நகரசபைக்கு தகவல்கள் கிடைத்தன. போதைவஸ்து வியாபாரம் சூடு பிடித்திருந்தது. அதே நேரம், பொலிஸ் அடக்குமுறைகளும் அதிகரித்தன. அந்தப் பகுதி இளைஞர்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும், அளவுக்கு மிஞ்சிய தண்டப்பணம் அறவிட்டு தண்டித்தார்கள். அடிக்கடி அடையாள அட்டை கேட்டு சோதனை செய்தார்கள். 

அந்த நடவடிக்கைகள் எல்லாம், இளைஞர்களின் கோபாவேசத்தை கூட்டியது. "பொலிஸ் எங்கள் எதிரி" ஓர் இளைஞன் சொன்னான். "அவர்கள் எங்களை ​---- மொரோக்கர்கள் என்று கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் இனவெறியர்கள் தான். எங்களிடம் இருந்து தண்டப் பணம் அறவிடும்  பொழுது அவர்களுக்கு போதை ஏறுகின்றது."  பொது இடத்தில் சத்தம் போட்டது, கூட்டம் கூடியது, அடையாள அட்டை வைத்திருக்காதது, இப்படியான அற்பக் காரணங்களுக்காக எல்லாம், தண்டப் பணம் செலுத்த வேண்டி இருப்பதாக, இன்னொரு இளைஞன் கூறினான். 

சிரியாவுக்கு போராடச் சென்ற இளைஞர்கள் சிலரும், அற்பத்தனமான அத்துமீறல்களுக்காக பொலிசிற்கு தண்டம் கட்டியிருக்கிறார்கள். அதிகார வர்க்கத்தினால் அவமதிக்கப் பட்டவர்கள், சிரியாவில் போராடுவதன் மூலம் தமது இழந்த கௌரவத்தை மீட்டுக் கொள்கிறார்கள். சிரியா யுத்தத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக, உள்ளூர் பள்ளிவாசலில் இறுதிச் சடங்குகள் நடந்த பொழுது, ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். 

"இந்த நாட்டில் செத்தால் எங்களை கிரிமினல்கள் என்று தூற்றுவார்கள், ஆனால் சிரியாவில் செத்தால் எங்களை போராளிகள் என்று மதிப்பார்கள்..." என்று சில இளைஞர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். பல இளைஞர்கள் கால்பந்து விளையாடுவதை நிறுத்தி விட்டு, தாடி வளர்க்கத் தொடங்கினார்கள். பலர் சுக்ரியை தமது ஆதர்ச நாயகனாக பின்பற்றத் தொடங்கினார்கள். தந்தையின் திடீர் மரணத்தினால் பாதிக்கப் பட்டிருந்த சுக்ரி, மத மார்க்கத் தேடுதலில் மனதை திசை திருப்பி இருந்தான். 

சுக்ரியின் பாதையை பின்பற்றிய சில இளைஞர்கள், ஒழுங்காக மசூதிக்கு சென்று வந்தனர். ஆனால், கடும்போக்கு மதவாதக் கருத்துக்களை நிராகரித்த பள்ளிவாசல் நிர்வாகம் அவர்களை வெளியேற்றி விட்டது. அதற்குப் பின்னர், டெல்ப் நகரில் உள்ள துருக்கி பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அங்கேயும் அதே பிரச்சினை. ஆனால், இம்முறை பள்ளிவாசல் நிர்வாகம் அந்த இளைஞர்கள் பற்றிய தகவலை பொலிசுக்கு  அறிவித்தது. பொலிஸ் அந்த விபரங்களை நகரசபைக்கு அறிவித்தது. இது நடந்தது 2012 ம் ஆண்டு. 

அந்த தகவல்களின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? "ஒன்றுமேயில்லை!" நகர சபை அதிகாரி ஒருவர் பதிலளிக்கும் பொழுது: "நாங்கள் அப்போது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. அந்த இளைஞர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுப்பதே எமது பிரதான நோக்கமாக இருந்துள்ளது. மதத் தீவிரவாதிகளாவதை நாங்கள் ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை." அன்று தாங்கள் தப்பெண்ணம் கொண்டிருந்ததை அந்த அதிகாரி ஒப்புக் கொண்டார். 

(நன்றி : NRC WEEKEND, zaterdag 5 juli & zondag 6 juli 2014)

Friday, June 20, 2014

அமெரிக்கா வரும் பின்னே, அல்கைதா வரும் முன்னே!


உங்களுக்குத் தெரியுமா? ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் பாக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்கர்களால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை, "விடுதலைப் போராளிகள்" என்று அங்கீகரித்திருந்த அமெரிக்கா, ஜோர்டானில் இராணுவப் பயிற்சி வழங்கியது.

ஈராக்கில் பல பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS எனும் கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக்கிய அல்கைதா என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்தின் தலைவர் யார்? அபு பக்கர் அல் பாக்தாதி என்பது அவரது இயக்கப் பெயர். நிஜப் பெயர் : இப்ராஹீம் அவ்வத் அலி பத்ரி அல் சமாரி. இசிஸ் போராளிகள் மத்தியில் அவர் "அல் பாக்தாதி" என்றே அழைக்கப் படுகிறார்.

அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.

2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, "உங்களை நியூ யோர்க்கில் சந்திக்கிறேன்!" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி இயக்கம் கட்டியுள்ளார்.

2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் "தேடப்படும் பயங்கரவாதி" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் சன்மானம் வைக்கப் பட்டது.  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சிரியாவில், இன்னொரு இஸ்லாமிய கடும்போக்கு இயக்கமான அல் நுஸ்ரா இயங்கிக் கொண்டிருந்தது. அல் பாக்தாதி குழுவினர், அல் நுஸ்ராவுடன் கூட்டுச் சேர்ந்து, "ஈராக், சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு" (ISIS) என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், இரண்டு இயக்கமும் ஒரு சகோதர யுத்தத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய தனி அரசுக்காக ஐக்கிய முன்னணி அமைத்தவர்கள், எதிரிகளாக தமக்குள் மோதிக் கொண்டார்கள். அது வேறு விடயம். 

அல் நுஸ்ரா, சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்ப்பதை மட்டும் நோக்கமாக கொண்டிருந்தது. ISIS, லெபனான் முதல் ஈராக் வரை, ஒரு இஸ்லாமிய அரசு அமைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. அதனால் அது ஒரு சர்வதேச அமைப்பாக பரிணமித்தது. மேற்கு ஐரோப்பாவிலும், பிற அரபு நாடுகளிலும் இருந்து, ஜிகாத் மீது பற்றுக் கொண்ட புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

அல் நுஸ்ரா, ISIS ஆகிய இயக்கங்களுக்கு தேவையான நிதியுதவி, கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தாராளமாக கிடைத்து வந்தது. அவர்களுக்கு ஆயுத விநியோகம் செய்த நாடு எது? வேறு யார், அமெரிக்கா தான்! இசிஸ் போராளிகளுக்கு, ஜோர்டானில் வைத்து அமெரிக்க இராணுவத்தினால் பயிற்சியளிக்கப் பட்டது. சண்டையில் காயமடைந்த போராளிகளுக்கு, துருக்கியிலும், இஸ்ரேலிலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது.

அல் நுஸ்ரா, இசிஸ் ஆகிய இயக்கங்கள், சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் பெற்று, பலமான இயக்கங்களாக வளர்ந்து, சிரியாவின் வடக்குப் பகுதியில் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருந்தார்கள். அந்தப் பகுதிகளில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்தினார்கள். முன்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான் நடத்தியது போன்றதொரு ஆட்சியை அமைத்தார்கள். 

இசிஸ் அமைப்பின் செயற்பாடுகள், ஒரு வணிக நிறுவனம் போன்று அமைந்திருந்தன. சிரிய அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆவணப் படுத்தினார்கள். மாவீரர்களான போராளிகளின் பெயர்களை பதிவு செய்து வைத்தனர். வெளிநாடுகளில் பரப்புரை செய்வதற்கு உதவியாக, ஊடக தொடர்புகளை விரிபு படுத்தினார்கள். இசிஸ் போராளிகள் சிலர், வீடியோ படப் பிடிப்பாளர்களாக களப் பயிற்சி பெற்றனர். அவர்கள் இணையத்தில், சமூக வலைத் தளங்களிலும் இயங்கினார்கள்.

யுத்த களங்களில், சிரிய இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் காட்சிகளை வீடியோ படமாக்கி, இணையத் தளங்களில் பரப்பினார்கள். மேற்கத்திய ஊடகங்கள் அவற்றை எடுத்து ஒளிபரப்பின. வீடியோ போராளிகள் போர்க்கள காட்சிகளை மட்டும் படம் பிடிக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் படும் துன்பங்களை, வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டார்கள். அந்த வீடியோக்கள், வெளிநாடுகளில் "விடுதலைப் போராட்டத்திற்கு" ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு பெரிதும் உதவின. அந்தக் காலங்களில், மேற்குலகில் இசிஸ் ஒரு "விடுதலை இயக்கமாக" கருதப் பட்டது.

இசிஸ் இயக்கம், திடீரென ஒரு சில நாட்களுக்குள் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமை, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. "இஸ்ரேலை யாராலும் வெல்ல முடியாது" என்பது போன்ற மாயை, இசிஸ் இயக்கத்தை சுற்றியும் பின்னப் பட்டது. உண்மையில், அமெரிக்காவின் உதவியின்றி, இசிஸ் மட்டுமல்ல இஸ்ரேல் கூட, ஒரு திடீர் யுத்தத்தில் வெற்றி மேல் வெற்றியை குவித்திருக்க முடியாது. தற்போது, ஈராக்கிய நலன்களை பாதுகாப்பதற்காக, "இசிஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" அமெரிக்கா குதித்துள்ளது. அதுவும் ஒரு கண்துடைப்பு நாடகம் தான்.

ஏற்கனவே, இசிஸ் இயக்கத்தினர் எண்ணைக் கிணறுகளை கொண்ட மொசுல் நகரை கைப்பற்றிய நாளில் இருந்து, சர்வதேச சந்தையில் எண்ணையின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சவூதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மேலதிக வருமானம் கிடைக்கின்றது. அது அவர்களது பொருளாதாரத்திற்கு நல்லது. மேலும், ஈராக்கில் பிரச்சினை இருப்பதாகவும், அமெரிக்காவை தவிர வேறு யாரும் அதனை தீர்த்து வைக்க முடியாதென்றும் "நிரூபிப்பதன்" மூலம், ஈராக்கை தொடர்ந்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும்.


மேலதிக தகவல்களுக்கு:
Americans are training Syria rebels in Jordan
The fierce ambition of ISIL's Baghdadi
ISIS Leader: ‘See You in New York’
How al-Qaeda Changed the Syrian War


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்
2. ஈராக்கில் தாலிபான் அரசாங்கம் : இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா? 

Thursday, September 23, 2010

தாஜிகிஸ்தான் தாக்குதல்கள் : ஒரு செய்தி அறிக்கை

தாஜிகிஸ்தான் படையினர் சென்ற வாகனத் தொடரணி மீது நடந்த அதிரடித் தாக்குதலில் நாற்பது சிப்பாய்கள் பலி. 19 செப்டம்பர் 2010 , இந்த சம்பவம் நடந்துள்ளது. (பார்க்க: Soldiers die in Tajikistan ambush)ராஷ்ட் பள்ளத்தாக்கில் போர் நடவடிக்கைக்காக துருப்புகளை காவிச் சென்ற வாகனம் ஒன்று, மறைந்திருந்த போராளிகளால் தாக்கப்பட்டது. கிரனேட், சிறு இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் குன்றுகள் மேலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் நிலை குலைந்த இராணுவம் சிதறி ஓடியது. வாகனத் தொடரணியில் 75 படையினர் இருந்துள்ளனர். தாஜிகிஸ்தான் மேற்கில் உள்ள தலைநகரமான டுஷான்பெயில் இருந்து அவர்கள் வந்துள்ளனர்.

நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ராஷ்ட் பள்ளத்தாக்கு பகுதி, பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் புகலிடமாக உள்ளது. அயல்நாடான உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய இயக்கம் ( Islamic Movement of Uzbekistan ) தாக்குதல் நடத்தியதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் துஷான்பே சிறைச்சாலை உடைக்கப்பட்டது. அங்கே தடுத்து வைத்திருந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 25 சந்தேகநபர்கள் சிறை உடைப்பின் போது தப்பி ஓடி விட்டனர். அவர்கள் அனைவரும் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ராஷ்ட் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று விட்டனர். தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்காகத் தான் அங்கு இராணுவம் அனுப்பப்பட்டது.

சோவியத் யூனியனில் இருந்து தனி நாடாக பிரிந்து சென்ற தாஜிகிஸ்தானில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. சோவியத் உடைவின் பின்னரும், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரமுகர்களே ஆட்சிக் கட்டிலில் அமர்திருந்தனர். எதிர்க்கட்சிகளும், இஸ்லாமியக் குழுக்களும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தன. பல வருடங்களாக நீடித்த போரின் முடிவில் யாரும் வெல்லவில்லை. இறுதியில் ரஷ்யாவின் மத்தியஸ்தத்தால் போரில் ஈடுபட்டவர்கள் சமரசத்திற்கு வந்தார்கள். 1997 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டது. போராளிக் குழுக்கள் ஆயுதங்கை களைந்து விட்டு அரசியல் அமைப்புகளாக மாறி விட்டன. Islamic Revival Party of Tajikistan (IRPT), United Tajik Opposition (UTO), என்பன அவ்வாறு ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பிய அமைப்புகள் ஆகும். (பார்க்க:Civil war in Tajikistan)

மலைவாழ் மக்களான தாஜிக்கியர்கள் பேசும் மொழி (ஈரான்) பார்சி மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. தாஜிகியர்கள் தோற்றத்தில் அயலில் வாழும் துருக்கிய இனங்களில் இருந்து மாறுபட்ட உருவத் தோற்றம் கொண்டவர்கள். தாஜிகிஸ்தான் சோவியத் காலத்தில் கம்யூனிச நாடாக இருந்தது. சோவியத் குடியரசில், இஸ்லாமிய மத நிறுவனங்கள் அடக்கப்பட்டன. தாஜிக் முஸ்லிம்கள் சூபிசம் எனப்படும் ஆன்மீகத்தை தேடும் இஸ்லாமிய மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சூபிசத்தை பின்பற்றுபவர்கள் மதக் கட்டுப்பாடுகளை கொண்டிராதவர்கள். இருப்பினும் தொன்னூறுகளில் மத நிறுவனங்கள் புதிதாக பெற்ற சுதந்திரத்தால் மீள் உயிர்த்த மொழுது, சூபி இஸ்லாம் பெரிதாக பரவவில்லை. சூபிசம் முழுக்க முழுக்க உள்நாட்டு மத நம்பிக்கையாளர்களின் நிதியில் இயங்கி வந்தது. முன்னாள் மத்திய ஆசிய சோவியத் குடியரசுகளில் மிகவும் ஏழைகளான தாஜிக்கியர்களிடம் மதம் வளர்க்க பணம் இல்லை. ஆனாலும் தாஜிகிஸ்தானில் புதிய மசூதிகள் கட்டப்பட்டன. இஸ்லாமிய பிரச்சாரகர்கள் அதிகரித்தார்கள். அவர்களிடம் தாரளமாக பணம் புழங்கியது. சவூதி அரேபியா பணக்கார இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகளில் இருந்து அந்தப் பணம் வந்தது.

சவூதிகள் தமது இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்டப்படுகிறார்களே என்று, பரிதாபப்பட்டு பணம் கொடுக்கவில்லை. கடும்போக்கு வஹாபிச இஸ்லாமிய பிரிவுக்கு ஆதரவாளர்களை திரட்டுவதே அவர்கள் நோக்கம். சவூதிகள் எதிர்பார்த்த படியே, தாஜிகிஸ்தானில் ஏராளமான முஸ்லிம்கள் வாஹபிச பிரிவை தழுவிக் கொண்டனர். இன்று இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் யாவும் வஹாபிச இஸ்லாமை பின்பற்றுகின்றன. இவற்றின் உறுப்பினர்கள் இராணுவ பயிற்சிக்காக ஆப்கானிஸ்தான் சென்று வருகின்றனர். தாலிபான், அல்கைதா போன்றவர்களுடன் நட்புறவு பூண்ட Islamic Movement of Uzbekistan (IMU), மத்திய ஆசியாவில் இஸ்லாமிய குடியரசு அமைக்க போராடி வருகின்றது. இந்த இயக்கத்தின் பூர்வீகம் உஸ்பெகிஸ்தான் என்ற போதிலும், அயலில் உள்ள குடியரசுகளிலும் கிளை பரப்பி வருகின்றது.

தாஜிகிஸ்தானில் நடந்த தாக்குதல் குறித்து உங்களில் பலர் இப்போது தான் முதன் முதலாக கேள்விப்படுகின்றீர்கள். உலக ஊடகங்களில் இந்த செய்தி வராமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதே மாதிரியான தாக்குதல், ஆப்கானிஸ்தானிலோ, அல்லது பாகிஸ்தானிலோ நடந்தால் முந்திக் கொண்டு செய்தி வெளியிடும் ஊடகங்கள், தாஜிகிஸ்தானை கண்டுகொள்ளவில்லை. தாஜிகிஸ்தான் இரு பெறும் வல்லரசுகளான ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையில் சிக்கியுள்ள பிரதேசம் ஆகும். ஒரே மொழி பேசும் சகோதர்கள் என்று கூறிக் கொண்டு, ஈரானும் அடிக்கடி மூக்கை நுளைக்கின்றது. போதாக்குறைக்கு தெற்கே ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ளன. தாஜிகிஸ்தான் பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. மேலும், எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்களை கொண்ட மத்திய ஆசியாவின் ஒரு பகுதியாகும். இவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான வல்லரசுப் போட்டி, சில நேரம் பனிப்போராகவும், சில நேரம் பதிலிப்போராகவும் நடந்து கொண்டிருக்கிறது. அல்கைதாவும், இஸ்லாமிய தீவிரவாதமும், அமெரிக்காவையும், மேற்குலகையும் இலக்கு வைத்திருப்பதாக, ஊடகங்கள் எம்மை மூளைச் சலவை செய்கின்றன. ஆனால் உண்மையான பிரச்சினை வேறெங்கோ இருக்கின்றது. இன்று ஊடகங்களால் அறிவிக்கப்படாத இரகசிய யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது.