Showing posts with label சித்தர்கள். Show all posts
Showing posts with label சித்தர்கள். Show all posts

Thursday, December 15, 2011

பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஏழாம் பாகம்)

"சித்தர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் தமிழர்களுடைய தனியுடமை. சித்த வைத்தியமும், தற்காப்புக் கலையும் தமிழகத்தில் இருந்தே சீனா சென்றன. " என்று சுய தம்பட்டம் அடிக்கும் தமிழினவாதிகள், அறிவியலில் பிற இனத்தவர்களின் பங்களிப்பை மறைக்கப் பார்க்கின்றனர்.

தமிழகத்தில் சித்தர் மரபை தோற்றுவித்த முதலாவது சித்தரான திருமூலர் ஒரு தமிழரல்ல, காஷ்மீரை சேர்ந்தவர். அதே போன்று, சீனா மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த சித்தர்கள் பலர், தமிழகம் வந்து சித்த அறிவியலை வளர்த்துள்ளனர். தமிழ்ச் சித்தர்கள் பலர், சீனா, அரேபியா சென்று தாம் அறிந்தவற்றை கற்பித்துள்ளனர். பண்டைய தமிழர்கள் நம்மைப் போல குறுகிய சிந்தை கொண்ட இனவாதிகளாக இருக்கவில்லை. இருந்திருந்தால், இன்று நாங்கள் சித்தர் அறிவியலுக்காக பெருமைப் பட்டிருக்க முடியாது. அறிவியலை ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதாக உரிமை பாராட்டுவது பேதைமை. வெளிநாட்டு அறிஞர்கள் தமிழகம் வருவதும், தமிழ் நாட்டு அறிஞர்கள் வெளிநாடு செல்வதுமாக, சர்வதேச தொடர்புகள் காரணமாகவே தமிழர் அறிவியலும் வளர்ந்தது.

சித்தர் மரபில் முக்கியமானவராக கருதப்படும் அகத்தியர், சீன தேசத்தில் இருந்து வந்தவர் என்பதை முன்னரே பார்த்தோம். இம்முறை, மேலும் இரண்டு சீனர்களின் பங்களிப்பை விரிவாகப் பார்ப்போம். இவர்களில் ஒருவராவது சீனர் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. மேலும், பதினெட்டு சித்தர்களின் பட்டியலில், பெயர் குறிப்பிடப் பட்டவர்களைப் பற்றி மட்டுமே, நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்களை விட பல சீன நாட்டு சீடர்கள், அறிவியல் கற்க வந்து தமிழகத்திலேயே தங்கி விட்டனர். அதே போன்று, பல தமிழ் சீடர்கள் அறிவுத் தேடல் காரணமாக சீனா சென்று தங்கி விட்டனர். "சீனர்களுக்கு நாம் தான் அறிவு புகட்டினோம்" என்பது தற்புகழ்ச்சி. "சீனர்களுடன் நாம் அறிவியலை பகிர்ந்து கொண்டோம்", என்பதே மெய்யான வரலாறு. எம்மிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொண்டனர். அவர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம்.

போகநாதர் என்ற சித்தரின் கதை அதனை உறுதிப் படுத்துகின்றது. தமிழகத்தில் போகர் அல்லது போகவா முனிவர் என அறியப் படுபவர், சீனாவில் போ யங் (Bo Yang ) என அழைக்கப் படுகிறார். பிறப்பால் அவர் சீனர் என்று நம்பப் படுகின்றது. அதே நேரம், போகநாதர் ஒரு இந்தியர் என்றும் சிலர் கூறுகின்றனர். இரண்டுமே இன்னும் உறுதிப் படுத்தப் படவில்லை. எந்தவொரு சித்தரும் தன்னை ஒரு இனத்தை, அல்லது தேசியத்தை சேர்ந்தவராக அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. அத்தகைய அடையாளத்தை ஏற்றுக் கொள்ள விரும்பியதுமில்லை. போகநாதர் தமிழகத்தில் மட்டுமல்லாது, சீனாவிலும் அறிவியலை போதித்தார். இரண்டு நாடுகளும், சித்தர்களின் அருஞ்செயல்களால் நன்மை அடைந்துள்ளன. உண்மையில், போகவா முனிவரை தமிழகம் மறந்து விட்டது. ஆனால், சீனர்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள். சீனாவில் டாவோயிசம் என்ற மதத்தை உருவாக்கிய லாவோசியும், போகநாத சித்தரும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர்.(பார்க்க :
Becomes known as Lao-Tzu, founder of Taoism)

வட இந்தியாவில், காசியில் பிறந்த காளிங்க நாதர் என்ற சித்தர், சீனா சென்றிருந்த சமயம், போகநாதர் அவரது சீடரானார். இந்திய ஞானிகள் சீனா சென்று போதனை செய்வது, 5000 அல்லது 3000 வருடங்களுக்கு முன்னர், வழக்கமாக நடந்து கொண்டிருந்த விடயம். பௌத்த மதமும் அவ்வாறு தான் பரவியது. அந்தளவுக்கு பண்டைய இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு காணப்பட்டது. காளிங்க நாதர், சீனாவில் தனது சீடர்களுக்கு, தத்துவ ஞானம் போதிக்கும் பள்ளிகள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் தான், போக நாதர் அவருக்கு அறிமுகமானார். அடுத்த தடவை இந்தியா செல்லும் பொழுது, போக நாதரையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். இருவரும் பழனியில், சித்தர்கள் கல்லூரியை ஸ்தாபித்தனர். காளிங்க நாதர் தனது சக்தி முழுவதையும், தலைமைச் சீடரான போக நாதருக்கு தாரை வார்த்தார். அதே போன்று, போகநாதர் சமாதி அடைவதற்கு முன்னர், புலிப்பாணி சித்தருக்கு தனது சக்திகளை தாரை வார்த்தார்.

போகநாதர் காலத்தில் தான், பழனியில் சித்தர்களின் கல்லூரி அமைக்கப் பட்டதாகத் தெரிகின்றது. நமது கால கல்வி முறையுடன் ஒப்பிட்டால், அன்றிருந்தது ஒரு கல்லூரி தான். "பழனி சித்த அறிவியல் கல்லூரி" யில் தமிழ் சித்தர்கள் மட்டுமே படித்ததாக நினைப்பது தவறு. இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், சீனா, அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பன்னாட்டுச் சித்தர்கள் வந்து படித்தார்கள். தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். போக நாதருக்கு பின்னர், கல்லூரியின் தலைமைப் பொறுப்பேற்ற புலிப் பாணிச் சித்தர், ஒரு சீனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. புலிப் பாணிச் சித்தரின் நிஜப் பெயர் "யி"(Yi). சந்தேகத்திற்கிடமின்றி, புலிப் பாணிச் சித்தர் ஒரு சீனர் என்பதை, அனைத்து தரவுகளும் நிரூபிக்கின்றன. அந்தக் காலத்தில், சீனச் சித்தர்கள் தமிழகத்தில் தங்கியிருந்த நேரம், தமிழ்ப் பெயர் ஒன்றை தெரிவு செய்வது வழக்கம். Bo Yang என்ற சீன நாட்டு போகரும், அவ்வாறே தமிழராக கருதப் பட்டிருக்க வாய்ப்புண்டு.

காளிங்க நாதர், தனது வாரிசான போகரை சீனாவில் தேர்ந்தெடுத்தார். போகநாதரும் அதே வழி முறையை பின்பற்றினார். தனக்கு அடுத்தாக, பழனி சித்தர்களை தலைமை தாங்குவதற்கு, புலிப் பாணிச் சித்தரை (யி) சீனாவில் இருந்து கூட்டி வந்தார். சீனாவில் இருந்து வந்த தலைமைச் சித்தரான யி, வசியக் கலையில் வல்லவர். புலியை வசியம் செய்து, அதன் மேல் அமர்ந்து சவாரி செய்வார். மந்திரம் சொல்லி தண்ணீரை உறைய வைப்பார். அதனால் தான் அவருக்கு "புலிப் பாணி சித்தர்" என்ற பெயர் வந்தது. சித்தர்கள் மரபில், மெஸ்மரிசம் எனப்படும் வசியக்கலை புலிப் பாணிச் சித்தர் மூலமாகத் தான் முதன் முதலாக இந்தியாவில் அறிமுகமாகியது. இன்றைய தமிழர்களின் உணவுப் பழக்கம் கூட, சீனத் தொடர்பால் பெருமளவு மாறி விட்டது. பண்டைத் தமிழர்கள் அரிசியை கண்ணால் கண்டிருக்கவில்லை. சீனாவில் இருந்து அறிமுகமான அரிசியை, நாம் இன்று நாளாந்த உணவாகப் புசிக்கின்றோம். போகநாதர் சீனாவில் இருந்து கொண்டு வந்த உப்பு, தமிழகத்தில் "சீனாக் காரம்" என்ற பெயரில் அறிமுகப் படுத்தப் பட்டது.

சீனர், தமிழர் நட்புறவின் சின்னமாக இன்றைக்கும் காட்சியளிக்கின்றது, பழனி முருகன் ஆலயம். தமிழகத்தில் பெருமளவு வருமானத்தை ஈட்டும் முருகன் கோயில். முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. சிவன், பார்வதியிடம் இருந்து ஞானப்பழத்தை பெறுவதற்காக, முருகனும், விநாயகரும் போட்டி போட்டார்கள். யார் முதலில் உலகை சுற்றி வலம் வருவது, என்பதே போட்டி. அண்ணன் விநாயகர், தாய், தந்தையை சுற்றி வந்து ஞானப் பழத்தை வாங்கிக் கொண்டார். மயில் மீதேறி உலகை சுற்றி வந்த முருகன், கோபித்துக் கொண்டு சென்று, பழனி மலையில் தங்கி விட்டார். இது புராணக் கதை. பெரும்பாலான முருக பக்தர்கள் அறியாத நிஜக்கதை ஒன்றுண்டு. அதுவே தண்டாயுதபாணி எனும் பழனி ஆண்டவரின் இரகசியம். பழனியின் சிறப்பு, கோயில் மூலவர் சிலையிலும், அதைச் செதுக்கிய சித்தர்களிலும் தங்கி உள்ளது. பழனி முருகனை பிரதிஷ்டை செய்த போகநாதரின் சமாதியும் அங்கே தானுள்ளது.

பழனியில் கூடிய சித்தர்கள் மகாநாட்டில், பழனி முருகன் சிலை அமைப்பது பற்றி முடிவெடுக்கப் பட்டது. சித்தர்களும், பொது மக்களும் வழிபடுவதற்காக மட்டுமல்லாது, புதிய வேதியியல் அற்புதமான கண்டுபிடிப்பொன்றை காட்சிப் படுத்துவதற்காகவும் அந்த சிலையை செதுக்க விரும்பினார்கள். அதாவது, பழனி முருகனின் "தெய்வ சக்தி", சித்தர்களின் விஞ்ஞான அறிவியலுக்கு எடுத்துக் காட்டாகும். பழனி முருகன் சிலையை செதுக்கும் பொறுப்பு போக நாதரிடம் விடப்பட்டது. அந்தச் சிலை கல்லில் செதுக்கப் படவில்லை. மூலிகைகளால் தயாரிக்கப் பட்டது. ஒன்பது இரசாயன கலவைகளை கொண்டு தயாரிக்கப் பட்ட முருகன் சிலை, பல ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும், இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றது.

பழனியில் அபிஷேகம் செய்யும் முறை கூட, விஞ்ஞான முறைப்படி அந்த சிலையை பராமரிக்கும் யுக்தியாகும். பழனி முருகன் சிலை செய்வதற்கு பயன்படுத்தப் பட்ட இரசாயன சூத்திரம், இன்றைக்கும் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது. நவ பாஷாணங்கள் என்று அழைக்கப் படும் வேதியல் நச்சுப் பொருட்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன, ஒன்றைத் தவிர. பாதரசம் (Mercury) என்ற பதார்த்தம் இன்றி அந்தச் சிலை முழுமை அடைந்திராது. பாதரசம் இந்தியாவில் எங்கேயும் கிடைக்கவில்லை. போகநாதர் அதனை சீனாவில் இருந்து கொண்டு வந்தார். பழனி முருகன் சிலை, சித்தர்களின் அறிவியல் சாதனையை மட்டும் பறைசாற்றவில்லை. சீனர், தமிழர் நட்புறவின் சின்னமாக, இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. (
Siddha Bhoganāthar: An Oceanic Life Story)

இரசாயனவியல் (வேதியியல்) எனும் அறிவியலை ஐரோப்பியர்களே கண்டுபிடித்தார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது ஐரோப்பியரின் கண்டுபிடிப்பு அல்ல. அந்த அறிவியலைக் குறிக்கும் பெயரான Chemistry, ஒரு ஆங்கிலச் சொல் அன்று. Al - Chemi என்ற அரபுச் சொல்லில் இருந்து உருவானது. (அரேபியர்களும் கிரேக்க மொழியில் இருந்து கடன் வாங்கியிருந்தனர்.) வேதியியல் (இரசாயனவியல்) கல்வியை, ஐரோப்பியர் அரேபியரிடம் இருந்து கற்றனர். கிரேக்கர், எகிப்தியர், (இஸ்லாமிற்கு முந்திய) அரேபியர் ஆகிய பண்டைய மேற்காசிய ஞானிகளின் குறிப்புகள், பிற்காலத்தில் அல்கெமி என்ற கற்கைநெறியாக தொகுக்கப் பட்டது. பண்டைய காலத்தில், சீனர், அரேபியர், கிரேக்கர்களுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக, தமிழர்களும் இரசாயனவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். (George Lockemann, The Story of Chemistry, Philosophical Library, U.S.A, 1959, pp.30-31.) பழனியாண்டவர் சிலையை செய்ய பயன்பட்ட சீனப் பாதரசம், தமிழகத்தில் வேதியியல் அறிவியலை தோற்றுவித்தது. பாதரசம் என்ற சொல்லில் இருந்து தான், சித்தர்கள் பயன்படுத்திய "ரசவாதம்" என்ற சொல் பிறந்திருக்க வேண்டும். தமிழகத்தில் பீங்கான் மட்பாண்டம் செய்வதற்கான தொழில்நுட்ப அறிவை, சீனாவில் இருந்து வந்த சித்தர்கள் சொல்லிக் கொடுத்தனர். அதே போன்று, பட்டுத் துணி நெசவு செய்யும் தொழில் நுட்பமும், சீனச் சித்தர்களின் தொடர்பால் பெறப் பட்டிருக்கலாம்.

பண்டைய காலத்தில் நிலவிய, சீனர், அரேபியர், தமிழர்களுக்கு இடையிலான நெருக்கமான உறவு எவ்வாறு அறுந்து போனது? "ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து வரவில்லை", என்று மறுக்கும் வரலாற்று அறிஞர்களும், தென்னிந்தியா ஆரிய மயமானதை மறைக்க முடியாது. சமஸ்கிருதம் பேசிய, பிராமண- இந்து மதத்தை பின்பற்றிய வட நாட்டு மன்னர்கள், தென்னிந்தியப் பகுதிகளை படிப்படியாக ஆக்கிரமித்தார்கள். அந்தக் காலங்களில், வட நாட்டு மன்னர்களும், தென் நாட்டு மன்னர்களும் மாபெரும் போர்க் களங்களில் மோதிக் கொண்டார்கள். அந்தப் போர்களைப் பற்றிய தகவல்கள், தமிழில் புறநானூறு என்ற பெயரில் குறித்து வைக்கப் பட்டன. அதாவது, அந்நிய "இந்து" ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்ட, தமிழர்களின் வீரஞ் செறிந்த வரலாறு தான் புறநானூறு ஆகும். அன்று ஆரிய மன்னர்களுக்கு காட்டிக் கொடுத்து, அவர்களைப் போலவே "சமஸ்கிருதம் பேசும் இந்துக்களாக" மாறியவர்களின் வாரிசுகள்,இன்று "தமிழரின் புறநானூற்று வீரம்" பற்றி பேசுவது வேடிக்கையானது. அவர்கள் தான், பண்டைய தமிழர்களின் நண்பர்களான சீனர்களையும், அரேபியர்களையும் எதிரிகளாக கருதிக் கொண்டார்கள். உண்மையான தமிழர்கள் ஒன்றில் போரில் மாண்டு விட்டனர், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகள் என்ற பெயரில் அடிமைகளாக்கப் பட்டனர்.

ஆரிய ஆக்கிரமிப்பின் கீழ் இந்துக்களாக மாறிய தமிழர்கள், சித்தர்களையும், சர்வதேச நட்புச் சக்திகளையும் மறந்தார்கள். வட நாட்டவரின் இந்து மதம், சித்தர்களின் அறிவியலை புறக்கணித்தது. போலிச் சாமியார்கள், மந்திரம், பில்லிசூனியம் போன்ற தீய நோக்கங்களுக்காக சித்த அறிவியலை பயன்படுத்தி வரலாயினர். தமிழகத்தில் ஒரு இருண்ட காலம் வரப்போகின்றது என்பதை, சித்தர்கள் அன்றே அறிந்திருப்பார்கள். அதனால், கடுமையாக உழைத்து, ஆராய்ச்சி செய்து எழுதி வைத்திருந்த அறிவியல் குறிப்புகளை எல்லாம், தாமே அழித்து விட்டுச் சென்றனர். அன்றிலிருந்து பல போலிச் சித்தர்கள் தோன்றினார்கள். பிற்காலத்தில் தமிழில் எழுதப் பட்ட, சித்தர்களின் அறிவியல் நூல்கள் பல போலியானவை என்று தெரிய வருகின்றது.

போகநாத சித்தர், ஆகாய விமானம், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றை உருவாக்கும்
தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருந்தார். (அவர் அவற்றை எல்லாம் சீனர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.) அதே போன்று, ஜெருசலேம்
சென்ற போகநாத சித்தர், புகை கக்கும் மோட்டார் வாகனத்தில் சவாரி செய்ததாகவும் ஒரு தகவல். அவர் மெக்காவில் முகமது நபிகளை சந்தித்து முஸ்லிம் ஆக மாறினார். (Bogar.3.222and 3.227). சீன, அரேபிய தரவுகளைக் கொண்டு அந்தத் தகவல்களை உறுதிப் படுத்துவதற்கு ஆய்வாளர்கள் முன்வர வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பல விஞ்ஞான அற்புதங்களை எல்லாம் ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, அவை குறித்த சாத்தியப்பாடுகளை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தார்கள். சீன, அரேபிய மூலங்களில் இருந்து மொழிபெயர்க்கப் பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பியர்கள் அவற்றை பரிசோதனை செய்து மீளக் கண்டுபிடித்தார்கள்.

(தொடரும்)

மேலதிக விபரங்களுக்கு:
1.
Arulmigu Dandayudhapani Swami Devasthanam, Palani
2.
Hindu Web site
3.The Encyclopaedia Of Indian Literature (Volume Five)
---------------------------------------------


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்

Monday, December 12, 2011

தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்


[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஆறாம் பாகம்)

கைலாய மலையில், சிவபெருமானின் திருமணத்திற்காக உலக மக்கள் எல்லாம் திரண்டிருந்தனர். அதனால், பூமியின் பாரம் அதிகமாகி, வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்தது. பூமியை மீண்டும் சமப் படுத்துவதற்காக, சிவபெருமான் அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கி அனுப்பி வைத்தார். அகத்தியர் தென் திசை பயணமாகும் வழியில் விந்திய மலை குறுக்கிட்டது. அகத்தியர், தான் தெற்கே சென்று வடக்கே திரும்பும் வரையில், விந்திய மலை தாழப் பதிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அகத்தியர் திரும்பி வராததால், அப்போது தாழ்ந்த விந்திய மலை இன்றும் உயரம் குறைந்து காணப்படுகின்றது. தெற்கே போகும் வழியில், வாதாபி, வில்வலவன் என்ற இரு அசுரர்களை சமாளிக்க வேண்டியேற்பட்டது. அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதி நீரை, காகம் வடிவில் வந்த விநாயகர் தட்டி ஊற்றி விட்டதால் தான், காவிரி ஆறு உருவானது. மேலேயுள்ள குறிப்புகள், அநேகமாக எல்லா தமிழ் இந்துக்களுக்கும் தெரிந்த புராணக் கதைகளில் இருந்து பெறப்பட்டவை.

தமிழகத்தில் பதினெண் சித்தர்களில் முக்கியமானவராகவும், "அகத்தியம்" எனப்படும் தமிழ் இலக்கண நூலை எழுதியவராகவும், அகத்தியர் போற்றப் படுகிறார். சித்தர்களின் சாதியையும் மறக்காமல் ஆராய்ந்தவர்கள், அகத்தியர் ஒரு வெள்ளாளர் என்று கூறுகின்றனர். உண்மையில், அகத்தியர் ஒரு "மர்ம ஆசாமியாக" கருதப் படுகின்றார். ஏனெனில், தமிழகத்து சித்தர்கள் பற்றி வேறு பல வரலாற்றுக் குறிப்புகள் மூலம் உறுதிப் படுத்த முடிகின்றது. ஆனால், அகத்தியர் பற்றி புராணங்கள் மட்டுமே பேசுகின்றன. இருந்த போதிலும், அகத்தியருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டிய காரணம் என்ன? மேலேயுள்ள புராணக் கதையில் இருந்தே அதனை புரிந்து கொள்ளலாம். எமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து, கனவுகள் தோன்றுவது போல, சரித்திரத்தில் நடந்த சம்பவங்கள் புராணக் கதைகளினுள் மறைந்து கிடக்கின்றன. கற்பனையை பிரித்தெடுப்பதன் மூலம், அன்று நடந்த நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளலாம்.

கலியுகம் பிறப்பதற்கு முன்னர் அகத்தியர் வாழ்ந்ததாக, அவரைப் பற்றிய புராணம் குறிப்பிடுகின்றது. அகத்தியரின் காலம், கி.மு. 6 ம், அல்லது 7 ம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்புண்டு. அந்தக் காலகட்டத்தில் தான் வட இந்தியப் பிரதேசங்கள் ஆரிய ஆதிக்கத்தின் கீழ் வந்தன. அப்போதும், தென்னிந்தியா போரில் வெல்ல முடியாத சுதந்திரப் பிரதேசமாக இருந்துள்ளது. தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலை அதற்கு தடையாக இருந்தது. தென்னிந்தியா மீதான அடுத்த கட்ட படையெடுப்பை நடத்துவதற்கு முன்னர், அந்தப் பிரதேசத்தைப் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் தேவைப் பட்டன. அதற்காக அகத்தியர் என்ற ஒரு உளவாளியை அனுப்பி வைத்தார்கள். அகத்தியர், விந்திய மலையை தாண்டும் பாதையை கண்டுபிடித்தார். இன்று கர்நாடகா மாநிலத்தின் வட பகுதியில் அமைந்திருக்கும் வாதாபி நாட்டின் மன்னனை சூழ்ச்சியால் வென்றார். அகத்தியரின் வழித் தடத்தை பின்பற்றிய ஆரிய படைகள், மெல்ல மெல்ல தென்னிந்தியா ஆக்கிரமித்திருக்கும்.

அன்னியப் படைகள் ஆக்கிரமித்த மண்ணில் வாழ்ந்த மக்களின் மனங்களை வெல்லும் நோக்குடன் சில கதைகள் பரப்பப் பட்டன. தெற்கில் ஓடும் காவிரி ஆற்றுக்கு, வடக்கே ஓடும் கங்கை நதியுடன் தொடர்புள்ளதாக கதை கட்டி விடப்பட்டது. பூகோள ரீதியாக அது சாத்தியமில்லை என்று, அன்று தென்னிதியாவை ஆக்கிரமித்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால், அகத்தியரின் கமண்டல நீரை, விநாயகர் தட்டி ஊற்றியதாக கதை இயற்றினார்கள். அதே போன்று, அகத்தியர் ஒரு வட நாட்டு ஒற்றர் என்ற உண்மை தெரியக் கூடாது என்பதற்காக, தென்னிந்தியர்களின் கடவுளான சிவபெருமான் அனுப்பி வைத்ததாக கூறினார்கள். ஆரியரின் வருகைக்கு முந்திய, சங்க கால தொல்காப்பியர் எழுதிய தமிழ் இலக்கணத்தை, அகத்தியர் சமஸ்கிருதத்திற்கு ஏற்றவாறு திருத்தி எழுதி இருப்பார். இவை எல்லாம், வடக்கே இருந்து தெற்கு வரையில் ஆரிய கலாச்சாரத்தை பரப்புவதற்காக புனையப் பட்ட கதைகள். இது போன்ற கதைகளை, இன்றைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் ஆதிக்கம் நிலைநாட்டப் பட்டது.

இந்து மத நம்பிக்கையாளர்கள், எனது கூற்றுகளை கற்பனை என்று ஒதுக்கித் தள்ளலாம். அதே நேரம், புராணக் கதைகளும் கற்பனையே என்று அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். அவை உண்மை என்றால், பூமி தட்டை என்று (வடக்கு தாழ, தெற்கு உயர்ந்தது அதனால் தான்) நம்புகிறார்களா? அது போக, சிவபெருமானின் திருமண விழாவையும், அகத்தியரின் தெற்கு நோக்கிய பயணத்தையும் தொடர்பு படுத்தும் கதை தமிழர்களுக்கு மட்டுமே சொல்லப்படுவதன் காரணம் என்ன? பெங்களூர் சித்த மருத்துவ கல்லூரியை சேர்ந்த Dr. Mandayam Kumar செய்த ஆய்வு வேறொரு கதையைக் கூறுகின்றது.
( SAGE AGASTHYA – FOREMOST OF THE SIDDHAS by Dr. Mandayam Kumar of the Siddha Medical Research Institute, Bangalore) அகத்தியர் பற்றிய தமிழ் நாட்டுக் கதைகளை மட்டுமல்லாது, வட நாட்டுக் கதைகளையும் தனது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். அகத்தியர் பற்றி வட நாட்டில் நிலவும் கதைகளில், கடற்கோள் (சுனாமி) தாக்குதல் காரணமாக காணாமற் போன குமரி கண்டம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பழந்தமிழரின் பெருமைக்கு சான்றாக விளங்கும் தரவுகளை தமிழ்ப் புராணக் கதை மறைக்க வேண்டிய காரணம் என்ன?

சித்தர்கள் எனப்படுவோர், ஆரிய-பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த திராவிட (பூர்வீக இந்தியர்கள்) புத்திஜீவிகள் ஆவர். (சைவ சமயத்தின் நெருக்கடியான நிலையும் சீர்திருத்தக் குறிப்புகளும், மறைமலை அடிகள்,& இந்து சமய வரலாறு, N.C. கந்தையா பிள்ளை) திருமூலரும், அகத்தியரும் தமிழர்கள் அல்ல. இருவரும் வட நாட்டில் இருந்து வந்தவர்கள்.(The coronation Tamil dictionary , N. Kadirvelu Pillai, Kanchi Nagalinga Mudaliar)தமிழகத்திற்கு வந்த அகத்தியர் பற்றி திருமூலர் கேள்விப் பட்டிருந்தார். ஆனால், இருவருக்கும் இடையில் சில கொள்கை முரண்பாடுகள் காணப்பட்டன. ஆகவே, வடக்கே இருந்து வந்த "ஆரிய அகத்தியர்" எவ்வாறு சித்தர் குழுமத்தில் ஒருவராகக் கருதப் படுகிறார்? அகத்தியர் தன்னை ஆரியராக இனங் காட்டியிருக்க மாட்டார். அவரது "வித்தியாசமான முகத் தோற்றம், பேசிய மொழி, கல்வி கற்ற இடம்" என்பன (இது குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்), அவரது உண்மையான அடையாளத்தை மறைக்க உதவியிருக்கலாம். வட நாட்டு புராணக் கதைகள் அவரை குஜராத்தில் பிறந்த தூய ஆரிய இனத்தை சேர்ந்தவராக குறிப்பிடுகின்றன.

தமிழர்கள், அகத்தியர் வெள்ளாள சாதியில் பிறந்ததாக கூறுகின்றனர். அகத்தியரின் வருகைக்கு பின்னர், தமிழகத்தில் ஆரிய ஆதிக்கம் நிலைநாட்டப் பட்டிருக்கும். அந்நியர்களான ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள், உள் நாட்டில் தம்மோடு ஒத்துழைத்த தமிழர்களின் ஒரு பிரிவினரின் உதவியுடன் தான் ஆட்சி நடாத்தி இருப்பார்கள். அந்தப் பிரிவினர் (ஆரியர் ஆதரவில் உயர்சாதியான வெள்ளாளர்கள்?)அகத்தியரை தமது ஆன்மீகக் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அகத்தியர் பற்றிய தமிழ்ப் புராணக் கதைகள் எல்லாம், அந்நியருடன் ஒத்துழைத்த தமிழர்களால், பிற்காலத்தில் இயற்றப் பட்டிருக்கலாம். சைவ சித்தாந்தமும், அகத்தியர் புராணமும், தமிழர்களை "இந்து மதம்" எனும் வட நாட்டு ஆரிய கலாச்சாரத்திற்குள் ஒன்று சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.

அகத்தியர், கி.மு. 7673 ம் ஆண்டு, புராதன ஆரிய இனத்தை சேர்ந்த பார்கவா முனிவருக்கும், இந்துமதிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் இன்றைய சீனாவின் மாநிலங்களான திபெத், மஞ்சூரியா ஆகிய இடங்களில் கல்வி கற்றுள்ளார். சில காலம் மலேயாவில் வசித்து விட்டு, கடல் கடந்து குமரி கண்டம் வந்துள்ளார். அன்றைய குமரி கண்டமானது, தென்னிந்தியாவில் இருந்து அந்தார்ட்டிகா வரை விரிந்திருந்தது. அதன் மையப் பகுதியாக இலங்கை இருந்துள்ளது. குமரி கண்டம் முழுவதும் இராவணனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. இராவணன், குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியை தானமாக கொடுத்துள்ளான். திருகோணமலை, கதிர்காமம் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்த அகத்தியர், அங்கு முருகனிடம் சித்த வைத்தியத்தை கற்றுக் கொண்டார். சித்த வைத்தியம் குறித்த அறிவை பெற்றுக் கொண்ட அகத்தியர், மீண்டும் சீனா சென்றுள்ளார். சீனாவின் மஞ்சூரியாவிலும், பிற பகுதிகளிலும் சித்த வைத்தியம் கற்பிக்கும் பாடசாலைகளை நிறுவினார்.

வட நாட்டாரின் புராணக் கதையிலும் இயற்கை அனர்த்தம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. தெற்கே குமரி கண்டத்தின் ஒரு பகுதியை கடல் விழுங்கியது. வடக்கே ஆர்க்டிக் பனி உருகியது போன்ற பேரழிவுகள் குறிப்பிடப் படுகின்றன. முன்பு மஞ்சூரியாவில் இருந்த இந்துக்களின் புனிதஸ்தலமான கைலாய மலை, பிற்காலத்தில் திபெத்திற்கு இடம் மாறுகிறது. ஒரு காலத்தில், சீனாவின் வட மாநிலமான மஞ்சூரியாவில் வாழ்ந்த "இந்துக்கள்" (பிராமணர்கள்), பிற்காலத்தில் தென் மாநிலமான திபெத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளனர் என்பது இத்தால் பொருள் கொள்ளப் பட வேண்டும். பிராமணர்கள் அல்லது ஆரியரின் மூதாதையர் துருக்கிய இனத்தவர்கள், வெளித் தோற்றத்தில் சீனர்கள் போன்றிருப்பார்கள். அதாவது, மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கிய இனங்களை சேர்ந்தவர்கள். மஞ்சூரியாவிற்கு அருகில் உள்ள மொங்கோலியா நாட்டில், இந்து தெய்வங்களின் படங்கள், இந்து புராணக் கதைகள் ஆகியன இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன. இது குறித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளேன்.

இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்ட பூகோள மாற்றங்கள் காரணமாக, அகத்தியர் தமிழகத்தை தெரிவு செய்கிறார். தனது இறுதிக் காலத்தில் தமிழம் வந்து, அங்கிருந்த சித்தர்களுடன் தொடர்பேற்படுத்திக் கொள்கிறார். அகத்தியர் சித்த வைத்தியத் துறையை வளர்ப்பதற்காக கல்லூரிகளை நிறுவுகிறார். தமிழகத்தில் இருந்த படியே, மலேயா, சீனா, அரேபியா, போன்ற தூர தேசங்களுக்கும் சென்று சித்த ஞானத்தை போதிக்கிறார். இறுதியாக, திருவனந்த புறத்தில் சமாதி அடைகிறார். இது வரை கூறப்பட்ட அகத்தியர் கதையில், முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். அகத்தியர் தனது ஆரம்பக் கல்வியை சீனாவில் கற்றுள்ளார். குமரி கண்டத்தில் (இலங்கையில்) சித்த வைத்தியத் துறை உன்னத வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனை கேள்விப் பட்ட அகத்தியர் இலங்கை வந்து, முருகனிடம் சித்த வைத்தியம் படித்துள்ளார். அந்த அறிவை போதிப்பதற்காக, சீனா சென்று பாடசாலைகள் அமைத்துள்ளார். தமிழகத்திற்கு வந்து சித்தர்களை நிறுவன மயப் படுத்தியுள்ளார். அதுவரை காலமும் தமிழில் எழுதப்பட்ட சித்த வைத்திய குறிப்புகளை, சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். (அதே நேரம், சித்தர்களின் குறிப்புகள் கிரேக்கம், அரபு, ஹீபுரு, மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.)

அகத்தியருக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, அகத்தியர் ஒரு சீனராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழலாம். சீனாவில் ஆரம்பக் கல்வி கற்ற அகத்தியருக்கு சீன மொழி தெரியாது என்று கூற முடியாது. மேலும், "தமிழ் பேசினார்கள்", என்பதற்காக, சித்தர்கள் எல்லாம் தமிழர்கள் என்று வாதிடலாம் என்றால், அகத்தியர் ஒரு சீனர் என்று வாதிட முடியாதா? மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், தென்னிந்தியாவில் உள்ள சித்த மருத்துவ இரகசியங்களை அறிவதற்காக சீன மன்னர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனை பல்வேறு சீன இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு, பிரித்தானியா கலைக்களஞ்சியம் பதிவு செய்துள்ளது. அகத்தியர் ஒரு சீன தேச உளவாளி என்ற சந்தேகங்களும் நிலவின. ஆனால், அன்றைய காலகட்டத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும். வட இந்தியா முழுவதும், பண்டைய திராவிட இராச்சியங்கள் ஆரியப் படைகளால் கைப்பற்றப் பட்டு ஆக்கிரமிக்கப் பட்டன. அந்நேரத்தில், விந்திய மலைக்கு தெற்கே, குறிப்பாக தமிழகத்தில் திராவிட பாரம்பரியமும், புராதன அறிவியலும் பாதுகாக்கப் பட்டது. அந்த அறிவியல் செல்வத்தை அடைவதற்காக, வட நாட்டில் இருந்து ஊடுருவல்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு.

அகத்தியர் ஒரு சீனர் என்பதற்கு வேறு என்ன ஆதாரம்? தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப் பட்ட அகத்தியரின் சிலைகளை ஒரு தடவை உற்று நோக்குங்கள். அகத்தியரின் முகம், சீனர்களின் முகம் போலத் தோன்றவில்லையா? மேலும் அகத்தியர் குள்ளமான முனிவர் என்று அனைத்து புராணங்களிலும் எழுதப் பட்டுள்ளது. பொதுவாகவே சீனர்கள் குள்ளமானவர்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை. அகத்தியர் மட்டுமே ஒரேயொரு சீன நாட்டு சித்தர் அல்ல. தமிழகத்தில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்களில், இன்னும் இருவர் சீனர்கள். இவை யாவும், பண்டைய தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையில் நிலவிய நெருங்கிய உறவை எடுத்துக் காட்டுகின்றன. நாம் உண்ணும் சோறு கூட, அறுந்து போன சீனத் தொடர்பை தினந்தோறும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றை எல்லாம் தமிழர்களான நாங்கள் மறந்து விட்டோம்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்

Saturday, December 10, 2011

காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !]
(ஐந்தாம் பாகம்)


பண்டைய இந்தியர்களின் அறிவியல், இனவாத ஆரியர்களின் கைகளில் சிக்கி விடாமல் தடுப்பதற்காக, சித்தர்கள் அவற்றை தமிழகக் காடுகளில் கொண்டு வந்து மறைத்து வைத்தார்கள். இன்று, ஆரிய மயப்பட்ட தமிழ் இனவாதிகளிடம் இருந்து சித்தர்களின் அறிவியலை காப்பாற்ற வேண்டிய கடமை நம் முன்னே விரிந்து கிடக்கிறது. மனித இனத்தின் வரலாறு முழுவதும், ஆங்காங்கே பல்வேறு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்கள் அவற்றை, இனம், மொழி, மதம் கடந்து தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஒரு இனத்தின் கண்டுபிடிப்பை இன்னொரு இனம் மெருகூட்டி வளர்த்தது. மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, இடம்பெற்று வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை, எந்த இனமும் தனது என்று உரிமை கோர முடியாது. நமது பாடசாலைகளில் போதிக்கப்படும் நவீன அறிவியல் கல்விக்கு சொந்தக்காரர்கள் ஐரோப்பியர்கள் அல்ல. சீனர்களிடமிருந்தும், அரேபியரிடம் இருந்து கற்றுக் கொண்ட நவீன அறிவியலை ஐரோப்பியர்கள் தமது என்று உரிமை கொண்டாடுவது அயோக்கியத்தனம். "வெள்ளையர்களை உலகிலேயே உன்னதமான கலாச்சாரம் கொண்ட சிறந்த இனம். வெள்ளை இனத்தில் மட்டுமே மேதாவிகள் தோன்ற முடியும்." என்பன போன்ற நிறவெறிக் கருத்துக்கள் அங்கிருந்து தான் உதயமாகின்றன.

சித்தர்கள் யார்? சித்தர்கள் தமிழர்களா? அவர்களது அறிவியலை, தமிழர்களது அறிவியலாக கருதலாமா? தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியின் பின்னர், சித்தர்கள் மீதான ஆர்வம் தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே சித்தர்கள் பற்றிய நூல்கள் வெளிவந்திருந்த போதிலும், தொலைக்காட்சி தொடர்கள் பரந்து பட்ட மக்களிடம் போய்ச் சேர வழிவகுத்தது. புனைவுகளை கலந்து தயாரிக்கப்பட்ட மர்மதேசம், மற்றும் சித்தர்கள் குறித்த தொடர் நாடகங்களும் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகளவு பார்வையாளர்களை கவர்ந்திருந்தன. இருப்பினும், அந்த தொடர்கள் தோற்றுவிக்காத அரசியல் விழிப்புணர்வை, "ஏழாம் அறிவு" எனப்படும் வணிகப் படம் ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அந்த திரைப்படம் சித்தர்களின் பற்றிய அறிவியல் தகவலை, தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றது.

வெறும் வாய் மென்று கொண்டிருந்த தமிழ் இனவாதிகளுக்கு அவல் கிடைக்கவே, "தமிழர்கள் உலகிற்கே நாகரீகத்தை சொல்லிக் கொடுத்த உன்னத மனிதர்கள்." என்று தற்பெருமை கொள்ளத் தொடங்கி விட்டனர். ("ஆசிய, ஆப்பிரிக்க மக்களுக்கு நாகரீகத்தை சொல்லிக் கொடுப்பது எமது கடமை." என்று இனவாத வெள்ளையர்களும் இறுமாப்புடன் கூறிக் கொண்டனர்.) தமிழ் இனவாதிகளின் உரிமை கோரல், சித்தர்களின் கொள்கைகளுக்கே முரணானது. தமிழகத்தின் சித்தர்கள் மரபின் மூலவராகக் கருதப்படுபவர் திருமூலர். தமிழ் மொழியிற் சிறந்த தத்துவமாக கருதப்படும் திருமந்திரத்தை எழுதியவர். திருமூலர் தன்னை ஒரு குறுகிய எண்ணம் கொண்ட தமிழ் இனவாதியாகவோ, அல்லது சைவ மத அடிப்படைவாதியாகவோ என்றுமே காட்டிக் கொள்ளவில்லை. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" போன்ற வாசகங்கள் மூலம் அவர் தன்னை ஒரு சர்வதேசவாதியாக தான் காட்டிக் கொள்கிறார்.

முதலில், சித்தர்கள் என்றால் யார்? நாலாயிரத்திற்கும் அதிகமான நோய்களைப் பற்றியும், அவற்றின் குணம் குறிகளையும், நோய் தீர்க்கும் மருந்துகளையும் சித்தர்கள் தமிழில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். நவீன மருத்துவம் பயின்றோர், இவற்றை புறக்கணிப்பது அறிவீனம். இந்த விடயம் குறித்து பிறகு பார்ப்போம். சித்தர்கள் என்றால், மருத்துவர்கள் என்பது போன்ற கருத்து தவறானது. பல்வேறு பட்ட துறைகளில் சித்தர்கள் தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

தத்துவ ஆசிரியராக, மொழியியல் அறிஞராக, சமூக ஆய்வாளராக மட்டுமல்ல, பகுத்தறிவாளர்களாக கூட சித்தர்கள் இருந்துள்ளனர். சித்தர்களை நமது காலத்தில் விஞ்ஞானி என்று அழைப்பார்கள். நமது காலத்தில் அரிய கண்டுபிடிப்புகளை செய்த விஞ்ஞானிகள் எல்லோரும் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் அல்ல. தேடல், திறமை, அறிவு, புத்திசாதுர்யம் என்பனவே அவர்களை விஞ்ஞானிகளாக்கியது. உதாரணத்திற்கு, ஒரு இலத்திரனியல் கண்டுபிடிப்பை செய்தவர் மட்டுமே விஞ்ஞானி அல்லர். சமூகத்தை ஆய்வு செய்தவரும், இயற்கையின் இரகசியங்களை தத்துவங்களாக விளக்கத் தெரிந்தவரும் விஞ்ஞானி தான்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், விஞ்ஞானிகளை சித்தர்கள் என்று அழைத்தனர். சித்தர்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தில்,அல்லது நாட்டில் மட்டும் தோன்றவில்லை. உலகம் முழுவதும் இருந்துள்ளனர். தமிழகத்தில் வாழ்ந்த பதினெண் சித்தர்களினதும் பூர்வீகம் கூட பல வகைப் பட்டது. சித்தர்கள் இன்றைக்கும் இருக்கின்றனர். நம் மத்தியிலும் வாழ்கின்றனர். நாம் அவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், அவர்களைப் புரிந்து கொள்ள முடியாததால், கிறுக்கன் என்று நினைத்திருப்போம்.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சித்தர்களையும், அன்றைய மக்கள் "புத்தி சுவாதீனமற்ற பைத்தியக்காரர்களாக" கருதினார்கள். தென்னிந்தியாவில் இருந்து சீனா சென்ற போதிதர்மன், ஷவோலின் ஆலயத்தினுள் சுவரை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாராம். யாருடனும் எதுவும் பேசாமல், நாட்கணக்கில் சுவரை வெறித்துப் பார்த்த போதிதர்மனை பார்த்தவர்கள் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள். அந்த "புத்திசுவாதீனமற்ற" நபர் தான், ஜென் பௌத்தர்களால் தெய்வ ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கப் படுகிறார். கோடம்பாக்கத்து சினிமாக்காரர்கள் அவரை, "தமிழ் தேசிய வீர புருஷனாக" வெள்ளித்திரையில் காட்டினார்கள்.

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்" என்று, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதிய சித்தர்களை, தமிழ்த் தேசியத்தின் தூண்களாக திரித்துக் கூறும் போக்கு அபாயகரமானது. அது சித்தர்களுக்கே விரோதமான போக்கு மட்டுமல்ல, அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு "பேட்டன்ட்" உரிமை கோருவது போன்றது. அமெரிக்க, ஐரோப்பிய தேசியவாதிகளும் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், தேசியவாதிகளிடம் இருந்து அறிவியலை விடுதலை செய்ய வேண்டிய மாபெரும் கடமை மக்களுக்குண்டு. அறிவியல் அனைத்துலக மக்களின் பொதுச் சொத்து.

திருமூலர் அதனை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியுள்ளார், என்பதை மறந்து விடலாகாது. சிவ பக்தனான திருமூலர், சைவ சித்தாந்தவாதிகள் போன்று "ஒரு இந்துவாக" வாழவில்லை. சிவனைத் தவிர வேறெந்த கடவுளையும் ஏற்க மறுத்தார். யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் மையமாகக் கொண்ட "ஓரிறைக் கோட்பாட்டை" திருமூலர் அன்றே போதித்தார். அது மட்டுமல்ல, ஆகம வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதவராக, ஆலயம் சென்று தொழுவது வீண்வேலை என்றும் சாடினார். "அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்..." என்று அன்பிலே இறைவனைக் கண்டார்.

"அறிவியல் மக்கள் மயப் படுத்தப் பட வேண்டும்", என்ற நல்லெண்ணத்துடன் தான், திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதினார். பண்டைய தமிழர்கள் பேசிய இலகு தமிழில், அந்த செய்யுள்கள் இயற்றப் பட்டன. திருமூலரை அடியொற்றிய சித்தர்களும், தமிழ் மொழியில் தமது குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள பாடநூல்கள், தமிழில் மொழிபெயர்க்கப் பட வேண்டும் என்பதற்காக, நாங்கள் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். "அறிவியலை கற்பதற்கு குறிப்பிட்ட மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்," என்ற மூட நம்பிக்கையை, சித்தர்கள் அன்றே தகர்த்திருந்தனர்.

உலகம் முழுவதும், சோஷலிச இயக்கம் வளர்ந்த காலத்தில் தான், தாய் மொழியில் கல்வி கற்க வேண்டுமென்ற அரசியல் மயப் பட்டது. அடித்தட்டு மக்களும் கல்வியறிவு பெறுவதற்கு, அவர்களது தாய் மொழியில் கற்பிப்பது அவசியம், என்பதை சித்தர்கள் அன்றே உணர்ந்திருந்தனர். அந்த வகையில், சித்தர்கள் சமூகப் புரட்சியாளர்களாக கருதப் பட வேண்டும். நமது சித்தர்கள் அறிவியலை மட்டும் உலகிற்கு அறிமுகப் படுத்தவில்லை, கூடவே சோஷலிச தத்துவங்களையும் கூறிச் சென்றனர்.

திருமூலர் போன்ற சித்தர்களை ஆதாரமாகக் கொண்டு, நாம் தமிழர்களை சமதர்மவாதிகளாக உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும். சமதர்மக் கொள்கை மூலம், நாம் அறிவியல் மேன்மை அடையலாம் என்பதையே சித்தர்களது வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. தூய இனத் தேசியவாதம் பேசினால், திருமூலரையும் ஒதுக்க வேண்டியேற்படும். ஏனெனில் திருமூலர் ஒரு தமிழரல்ல! அவர் ஒரு காஷ்மீர்க் காரன்!! திருமூலரின் பிறப்பிடம் கைலாச மலைக்கு தெற்கே இருந்ததாக, அவரைப் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. அநேகமாக அது இன்றைய காஷ்மீராக இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

இன்று திபெத்திற்குள் உள்ள கைலாச மலைக்கு அருகில் தான் காஷ்மீர் உள்ளது. ஒரு காலத்தில் காஷ்மீர் முழுவதும் சைவ சமயம் தழைத்திருந்தது. இன்றைக்கும், சிவனுக்கு சிறப்புச் சேர்க்கும் ஒன்பது புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று காஷ்மீரில் உள்ளது. பிற்காலத்தில், ஆரிய- பிராமண இனக்குழுக்களின் வருகையே, காஷ்மீரின் சமூகக் கட்டமைப்பை மாற்றியது. பிராமணீய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் திபெத்திய பௌத்த மதத்தில் சேர்ந்தனர். இன்றைக்கும், காஷ்மீரின் லடாக் பகுதியில் பௌத்தர்களே பெரும்பான்மையினர். ஆரிய- பிராமணர்கள், "காஷ்மீர் பண்டிதர்கள்" என்ற பெயரில் இன்றைக்கும் தமது இனத் தூய்மையை பாதுகாத்து வருகின்றனர். பிராமணீய மேலாதிக்கத்தில் இருந்து தப்புவதற்காகத் தான், காஷ்மீர் பள்ளத்தாக்கு சைவர்களும், பிற்காலத்தில் முஸ்லிம்களாக மாறினார்கள்.

திருமூலர், காஷ்மீரை ஆரியர்கள் ஆக்கிரமித்த காலத்தில் தப்பிப் பிழைத்த அரசியல் அகதியாக இருக்கலாம். தாந்திரிய சைவ சமயம் கட்டிக் காத்து வந்த, அறிவுச் செல்வத்தை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொண்டு, தெற்கு நோக்கி பயணமானார். தனது தாயகமான காஷ்மீரை ஆக்கிரமித்த அன்னியர்கள், சைவ மதத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள் என்று, அவர் ஞானதிருஷ்டியால் உணர்ந்திருப்பார். இன்னமும் ஆரியரின் கால் படாத தமிழகம், புகலிடம் கோருவதற்கு சிறந்த இடம் என்று நினைத்திருப்பார்.

காஷ்மீரத்து திருமூலர் தமிழகம் வந்து, பழனி அருகில் ஒரு ஆச்சிரமத்தை நிறுவினார். ஆரியக் கலப்பற்ற தமிழ் மொழி, இந்திய உப கண்டத்திலேயே பழமையான மொழியாகும். அதன் காரணமாகவே, தமிழை கடவுளின் மொழி என்று, பிற மாநிலத்தவர்கள் மதித்த காலமொன்று இருந்தது. சம்ஸ்கிருத மொழியானது, தமிழில் இருந்து உருவான, சித்தர்களால் பயன்படுத்தப் பட்ட இரகசிய பரிபாஷை என்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது. அதாவது, சித்தர்கள் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளை சம்ஸ்கிருத மொழியில் வைத்திருந்தனர். ஆரியர்கள் அந்த அறிவுச் செல்வத்தை கைப்பற்றி, தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்கள், சமஸ்கிருதத்துடன், கூடவே அறிவியலையும், ஆரியரிடம் பறிகொடுத்தார்கள். பல நூறாண்டுகளுக்குப் பின்னர், இந்தியா வரையில் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள், அவற்றை ஆரியரிடம் இருந்து கேட்டறிந்து கொண்டனர். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த பாக்தாத்தில், அறிவியல் குறிப்புகள் யாவும் அரபு மொழியில் எழுதி வைக்கப் பட்டன. அவற்றை பின்னர், ஐரோப்பியர்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொண்டனர். அந்த லத்தீன் மொழிபெயர்ப்புகள் தான், பிற்கால ஐரோப்பியரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக அமைந்தது.

பாக்தாத்தில் கூடிய அறிஞர்கள், தமிழ் சித்தர்களின் குறிப்புகளை மட்டுமல்ல, சீன தேசத்து சித்தர்களின் குறிப்புகளையும் அரபியில் மொழிபெயர்த்தார்கள். கூடவே அரேபிய சித்தர்கள் எழுதிய அறிவியல் நூல்களையும் மறந்து விடலாகாது. இவை எல்லாம் தான், லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டன. இவற்றை எல்லாம் தொகுத்து தான், நவீன விஞ்ஞானம் உருவானது. இந்திய, சீன, அரபு அறிஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை, ஐரோப்பியர் தமது என்று உரிமை கோரினார்கள். மோசடிக் கார ஆங்கிலேயர்கள், தமது கண்டுபிடிப்புகள் என்று சொல்லி, எமக்கு போதித்தார்கள்.

நாம் இன்று பாடசாலைகளில், கல்லூரிகளில் கற்கும் நவீன விஞ்ஞானத்தின் ஒரு பகுதி, ஏற்கனவே சித்தர்களால் தமிழில் எழுதப்பட்டுள்ளன, என்ற உண்மை எமக்குத் தெரியாது. இது எவ்வளவு பெரிய அறியாமை? ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆரியரால் சிறைப் படுத்தப் பட்டிருந்த தமிழரின் அறிவியல், அரேபியரால் விடுதலை செய்யப் பட்டது. வரலாற்றில் எதிர்பாராமல் ஏற்படும் திருப்புமுனைகளால் தான், உலகில் நாகரிக வளர்ச்சி சாத்தியமானது. இல்லாவிட்டால், இன்றைக்கு நாம் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி வாழ்ந்து கொண்டிருப்போம்.

வட இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆரியர்கள், தென்னிந்தியாவில் மறைந்திருந்த அறிவியலை தேடிக் கண்டுபிடிப்பதற்காக ஒரு உளவாளியை அனுப்பி வைத்தனர். இந்துப் புராணக் கதைகளில் அவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதே நேரம், வடக்கே உள்ள "எதிரி நாடொன்றின்" வரலாற்றுக் குறிப்புகளும் அதனை உறுதிப் படுத்துகின்றன. தமிழ்த் தேசியவாதிகள் கூட, அவரை "தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய மாமுனிவர்" என்று சிலாகித்து பேசுகின்றனர். காஷ்மீரில் இருந்து தமிழகம் வந்த திருமூலரும், அந்தப் பிரபலமான வட நாட்டு ஒற்றர் பற்றி கேள்விப் பட்டிருந்தார். யார் அந்த உளவாளி?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"