Showing posts with label உலகமயமாக்கல். Show all posts
Showing posts with label உலகமயமாக்கல். Show all posts

Monday, April 06, 2020

கொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா?


அன்றைய கொள்ளை நோயையும், இன்றைய கொரோனா தொற்று நோயையும் ஒப்பிட்டால் ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் தெரிய வருகின்றன. அன்று இத்தாலி வர்த்தகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சர்வதேச வாணிபம் தான் பிளேக் நோய் ஐரோப்பாவில் பரவுவதற்கு காரணமாக இருந்தது. கிரீமியாவில் நடந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட இத்தாலி வணிகர்களின் கப்பல்கள், அங்கு நடந்த உயிரியல் யுத்ததின் விளைவாக பெற்ற பிளேக் நோய் கிருமிகளை காவிக் கொண்டு இத்தாலிக்கு வந்து சேர்ந்தன.

தற்போது ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடி விட்டதைப் போன்று தான், அன்றைய ஐரோப்பிய நாடுகளும் நடந்து கொண்டன. அப்போது இத்தாலி ஒரே நாடாக இருக்கவில்லை. பல்வேறு தனித் தனி இராச்சியங்களாக பிரிந்திருந்தது. வணிகக் கப்பல்களால் தான் நோய் பரவுகிறது என்பதை கண்டு கொண்ட தெற்கு இத்தாலியில் இருந்த அரசுகள் கிரீமியாவில் இருந்து வந்த கப்பல்களை தரையிறங்க விடவில்லை. இருப்பினும் தெற்கு இத்தாலியில் ஏற்கனவே நோய் தொற்றி விட்டிருந்தது. சிசிலித் தீவு சனத்தொகையில் அரைவாசிப் பேர் பிளேக் நோயால் மரணமுற்றனர்.

இத்தாலியில் தரையிறங்க மறுக்கப்பட்ட வணிகக் கப்பல்கள் பிரான்சுக்கு சென்றன. மார்செய் துறைமுகத்தில் வணிகப் பொருட்களுடன் பிளேக் நோய்க் கிருமிகளும் இறக்குமதி செய்யப்பட்டன. அங்கிருந்து நோய் பாரிஸ் நகருக்கு பரவியது. பின்னர் பிரெஞ்சு வணிகர்களால் இங்கிலாந்தில் பரவியது. அதற்குப் பிறகு ஆங்கிலேய வணிகர்களால் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு பரப்பப் பட்டது. இவ்வாறு வணிகர்கள் தான் பிளேக் நோய்க் கிருமிகளை காவிச் சென்று பரப்பி இருந்தனர்.

இருப்பினும் பிளேக் நோய் உள்நாட்டில் பெருமளவில் பரவத் தொடங்கியதும், இது ஆரம்பத்தில் வணிகர்களால் பரப்பப் பட்டது என்ற உண்மை மறந்து விட்டது. அதே போன்றதொரு நிலைமை தான் இன்றைய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவக் காரணமாக இருந்தது. அதாவது "உலகின் தொழிற்சாலை" என்று கருதப்பட்ட சீனாவில் வணிகத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்ற நேரம் கொரோனா வைரஸை பரப்பி விட்டனர்.

முதலாளித்துவ உலகமயமாக்கல் காரணமாகத் தான் கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஒன்றிரண்டு தடவைகள் குறிப்பிடப் பட்டாலும் பின்னர் மறக்கப் பட்டு விட்டது. அதற்குப் பதிலாக யார் மீதாவது பழி போடும் படலம் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் முழுப் பழியையும் சீனாவின் தலையில் போட்டன. மத்திய கால ஐரோப்பாவிலும் அது தான் நடந்தது. அன்றைய ஐரோப்பியர்கள் யூதர்கள் மீது பழி போட்டனர். யூதர்கள் கிறிஸ்தவப் பிள்ளைகளை கடத்திச் சென்று கொலை செய்வதாகவும், நீர் நிலைகளில் நஞ்சு கலப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டனர். அதாவது யூதர்களே திட்டமிட்டு இந்த தொற்று நோயை பரப்பியதாக பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நம்பினார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஒரு யூத வைத்தியர் கிணற்றில் நஞ்சு கலந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு பின்னர் தான் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதை தமது குற்றச்சாட்டுகளுக்கான நிரூபணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. ஆத்திரமுற்ற மக்கள் யூதர்களின் வீடுகளை தாக்கினார்கள். சுவிஸ் பாசல் நகரில் மட்டும் ஆறாயிரம் யூதர்களை ஒரு மரக் கட்டிடத்திற்குள் பூட்டி வைத்து எரித்துக் கொல்லப் பட்டனர். ஜெர்மனியிலும் பல நகரங்களில் யூத இனப்படுகொலை நடந்ததுள்ளது.

உலக வரலாற்றில் பரவிய பெருந்தொற்று நோய்களை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு பேரிடரின் முடிவிலும் சமூகப் புரட்சிகள் நடந்துள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொள்ளை நோய் எனும் பிளேக் தொற்று காரணமாக கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. ஆனால், தொற்று நோய்க் காலம் முடிந்த பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் ஏகபோக அதிகாரம் ஆட்டம் கண்டது. புரட்டஸ்தாந்து மத எழுச்சி ஏற்பட்டது. அதைத்தவிர இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் விவசாயிகளின், விவசாயக் கூலித்தொழிலாளர்களின் புரட்சிகள் நடந்தன. துரதிர்ஷ்டவசமாக ஆரம்பத்தில் முற்போக்கானதாக கருதப்பட்ட புரட்டஸ்தாந்து மதம், மன்னர்களுடன் ஒத்துழைத்து புரட்சியை ஒடுக்க உதவியது.

அதே போன்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பானிஷ் புளு எனும் வைரஸ் தொற்று பரவியது. அதன் பெயர் "ஸ்பானிஷ்" என்றாலும், ஸ்பெயினில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவிய வைரஸ் பல இலட்சம் மக்களை காவு கொண்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக எண்ணிக்கையில் இந்த தொற்று நோய்க்கு பலியானார்கள். இருப்பினும் அதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. ஜெர்மனியிலும், ஹங்கேரியிலும் சோஷலிச மாற்றுக்கான பாட்டாளிவர்க்க புரட்சிகள் நடந்தன.

Sunday, April 05, 2020

சர்வதேச மருந்துச் சந்தையில் சீனாவின் மேலாதிக்கம்


"சீன வைரஸ்" என்று சொல்லி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அமெரிக்காவுக்கான மருந்து ஏற்றுமதியை நிறுத்தி விடப் போவதாக எச்சரித்ததும் வாயை மூடிக் கொண்டார். அதற்குப் பிறகு ஒழுங்கு மரியாதையாக கொரோனா வைரஸ் என்று சொல்லத் தொடங்கினார். சர்வதேச மருந்து சந்தையில் சீனாவின் மேலாதிக்கம் பற்றிக் குறிப்பிட இந்த ஒரு உதாரணம் போதும்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ள மருந்துகள் மட்டுமல்ல, முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் கூட சீனாவில் இருந்து தான் இறக்குமதியாகின்றன. அந்தளவுக்கு மேற்கத்திய நாடுகள் சீனாவில் தங்கியுள்ளன. அதற்குக் காரணம் என்ன? முதலாளித்துவ உலகமயமாக்கல்.

பொதுவாக எல்லா முதலாளிகளும் உற்பத்தி செலவுகளை குறைப்பது எப்படி என்று தான் சிந்திப்பார்கள். குறிப்பாக தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம். மேற்கத்திய நாடுகளில் சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்திற்காக உற்பத்தித் தொழிற்துறை முழுவதும் சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறே மருந்துத் தொழிற்சாலைகளும் சீனாவில் இயங்கத் தொடங்கின. சீனாவில் உற்பத்தி செலவு குறைவு என்பதால் மருந்துகளின் விலைகளும் குறைவாக உள்ளன.

உலக நாடுகள் தமது மருந்துத் தேவைக்காக சீனாவில் தங்கியிருப்பதானது சிலநேரம் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருந்து உற்பத்தியும், ஏற்றுமதியும் நின்று விட்டது. இதனால் ஐரோப்பாவில் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சிலநேரம் சீனா இதனை பூகோள அரசியலுக்கு பயன்படுத்தும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. அதற்கு சிறந்த உதாரணம் டிரம்பின் சீன வைரஸ் சர்ச்சை தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா தெரிவித்த எச்சரிக்கை.

இதற்கு என்ன தீர்வு? ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் தன்னிறைவு காண வேண்டும். ஆனால் தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கை கருத்தில் கொண்டே செயற்படுகின்றன. முன்பு ஐரோப்பாவில் இயங்கி வந்த மருந்து கம்பனிகள் நட்டம் ஏற்பட்டதால் பூட்டப்பட்டன. ஆகவே இவற்றை அரசாங்கம் தேசியமயமாக்க வேண்டும். இப்படியான நடைமுறைகள் ஒரு சோஷலிச நாட்டில் தான் நடக்கும். ஆனால், மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் பட வேண்டுமானால் தேசியமயமாக்கல் அவசியம்.


Friday, April 03, 2020

முதலாளித்துவ வைரஸ் - உலகமயமாக்கப் பட்ட தொற்று நோய்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த "முதலாளித்துவ உலகமயமாக்கல்" வேண்டுமென்றே மூடி மறைக்கப் படுகின்றது. உலகமயமாக்கலின் ஆபத்தை மக்கள் அறியாமல் தடுப்பதற்காக, முதலாளித்துவ கைக்கூலிகளால் வேண்டுமென்றே சீனாவுக்கு அல்லது சீனர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் பரப்பப் படுகின்றன. "இது சீனாவின் சதி... திட்டமிட்டு கொரோனா நோயாளிகளை உலகம் முழுவதும் பரப்பியது..." என்பன போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கப் பட்டன. இதன் மூலம் முதலாளித்துவ உலகமயமாக்கலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி வருகின்றனர். 

பலர் வெகுளித்தனமாக நினைப்பது போல, சீனாவில் இருப்பவர்கள் அனைவரும் சீனர்கள் அல்ல. சீனாவின் பல நகரங்களை, நியூ யோர்க், லண்டன், பாரிஸ் போன்ற மேற்கத்திய நகரங்களுடன் ஒப்பிடலாம். அதாவது பல்லின மக்கள் குடியேறியுள்ள பன்முகக் கலாச்சாரங்களை கொண்ட நகரங்கள். 

உலகில் முதன்முதலாக கொரொனோ நோய்த் தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் வசித்து வந்தனர். அதற்குக் காரணம் அங்கு நிறைய பன்னாட்டுக் கம்பனிகள் தளம் அமைத்துள்ளன. அவற்றில் வேலை செய்ய வந்த பலர் வூஹானில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அவர்களில் பலர் தமது தாயகத்திற்கு திரும்பிச் சென்றிருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் காவிச் சென்றனர் என்பது தெரியாது. 

அமெரிக்காவின் மக்டொனால்ட்ஸ், பெப்சி, ஜெர்மனியின் சீமன்ஸ், பிரான்சின் பேஜோ, சித்ரோயன், சுவீடனின் இகேயா போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் வூஹானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமே சீனர்கள். நிர்வாக மட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பியர்கள். இந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் சீனர்களை அமர்த்துவதில்லை. அதற்குக் காரணம், அந்த நிறுவனங்களின் தொழிநுட்ப அறிவு ஒரு இராணுவ இரகசியம் போன்று பாதுகாக்கப் படுகின்றது. 




Tuesday, December 16, 2014

முதலாளிய - உலகமயமாக்கலுக்கு எதிரான ஐந்தாம் கட்ட ஈழப் போர்

உலகமயமாக்கலின் சுயரூபம். கொக்கோ கோலா நிறுவனம், கேரளா, பிளாச்சி மாடாவில் நிலத்தடி நீரை மாசு படுத்தியது. தற்போது, யாழ்ப்பாணத்தில் இன்னொரு "பிளாச்சி மாடா" உருவாகின்றது. இதுவும் ஒரு பன்னாட்டு நிறுவனம் தான்.

யாழ்ப்பாணத்தில் மின்சார விநியோகம் செய்யும், நொதேர்ன் பவர்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம், நிலத்தடி நீரை மாசு படுத்தி வருகின்றது. அந்த நிறுவனத்திற்கு எதிராக தமிழ்ப் பொது மக்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். நொதேர்ன் பவர்ஸ் அவர்களை "பயங்கரவாதிகள்" என்று குற்றஞ்சாட்டியுள்ளது. ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஒன்று நடந்தால், அது நிச்சயமாக முதலாளித்துவ உலகமயமாக்கலுக்கு எதிரானதாக இருக்கும்.

யாழ் குடாநாட்டில் ஒரு பகுதிக்கு மின்சார விநியோகம் செய்து வரும் சுன்னாகம் மின்சார நிலையத்தை வாங்கியுள்ள மலேசியா கார்ப்பரேட் நிறுவனமான MTD Capital, "நொதெர்ன் பவர்ஸ்" என்ற பெயரில் நடத்தி வருகின்றது. தரகு முதலாளிய சிறிலங்கா அரசு, இவ்வாறு தனியார்மயத்தை ஆதரிப்பவர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது.

தனியார் மயத்தின் பின்னர், புதிதாக ஒரு பிரச்சினை முளைத்துள்ளது. சுன்னாகம் மின்சார நிலையம் வெளியேற்றும் கழிவு எண்ணை, நிலத்தைடி நீரை மாசுபடுத்தியுள்ளது. அயலில் உள்ள கிணறுகளில் எண்ணைக் கசிவுகள் நீருடன் கலப்பதாக, பொது மக்கள் முறையிடுகின்றனர். இது தொடர்பாக நொதெர்ன் பவர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.


நீதிமன்றத்தில் நொதெர்ன் பவர்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் கூறிய காரணம் நகைப்புக்குரியது. "மன்னாரில் எண்ணை வளம் இருக்குமென்றால், ஏன் சுன்னாகத்தில் இருக்கக் கூடாது?" என்று சிறுபிள்ளைத் தனமாகக் கேட்டுள்ளார். அந்த வழக்கறிஞர் மட்டுமல்ல, முதலாளித்துவம், தனியார்மயத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தனி நபர்களும், இப்படித் தான் சிறுபிள்ளைத்தனமாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுற்றுச் சூழலை மாசு படுத்துவது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா, பிளாச்சிமாடாவில், கொக்கோ கோலா கம்பனி இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்தமை இங்கே நினைவுகூரத் தக்கது. தென்னிலங்கையிலும் பாதணி தயாரிக்கும் தொழிலகம் ஒன்று அகற்றிய இரசாயனக் கழிவுகள், சுற்றுச் சூழலை மாசு படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியதும், இராணுவ அடக்குமுறை பிரயோகிக்கப் பட்டதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

நான் முன்னர் எழுதிய "மாவிலாறு முதல் வெலிவாரியா வரை" எனும் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:

உலகில் எந்தத் தேசியவாதியும், தனது சொந்த தேசிய இனத்தின் வர்க்க அடிப்படையையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதில்லை. தமிழ் தேசியவாதிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. பொருளியல் துறையில் முதுமானிப் பட்டம் பெற்ற தமிழ் தேசியவாதிகளும் நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்கள் கூட, தமது சொந்த தமிழ் இன மக்களின் போராட்டத்திற்கு, பொருளாதார பிரச்சினைகளும் காரணம் என்பதை கூறுவதில்லை. குறைந்த பட்சம், அது பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் சேவகர்களா, அல்லது முதலாளித்துவ அடிமைகளா? 


 யாழ் குடாநாடு முழு இலங்கையிலும், மிகவும் வரட்சியான மாவட்டங்களில் ஒன்று. வரண்ட மண்ணைக் கொண்ட யாழ் குடாநாட்டில், மக்கள் தொகை அடர்த்தி அதிகம். குடிநீருக்கான தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி சாதிக் கலவரங்கள் நடக்கும் இடமாக இருந்தது. எழுபதுகளில் மழை வீழ்ச்சிக் குறைவு, முழு இலங்கையையும் பாதித்திருந்தது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையை, யாழ்ப்பாணத்திற்கு திருப்பி விடும் அரசின் திட்டம், இறுதியில் திருகோணமலை வரையில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த உதவியது. அத்தகைய காலகட்டத்தில் தான், தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியது என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

இது தொடர்பான முன்னைய பதிவு: 
மாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்


நிலத்தடி நீர் மாசடைவது பற்றி தாய் வீடு பத்திரிகையில் வெளியான கட்டுரை:
 

Monday, September 29, 2008

"சியாட்டில் சமர்"- அமெரிக்காவின் அந்த ஐந்து நாட்கள்

1999 ம் ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவின் சியாட்டில் நகரம் போர்கோலம் பூண்டது. ஆமாம்,Microsoft தலைமையகம் அமைந்துள்ள அதே சியாட்டில் தான். அங்கே உலக பொருளாதாரத்தை தனது கைக்குள் வைத்திருக்கும், "உலக வர்த்தக கழகத்தின்"(WTO) மேல்மட்ட மகாநாடு ஆரம்பமாகவிருக்கிறது. உலகமயமாதலுக்கு எதிரான இளைஞர்கள், பல்வேறு இடதுசாரி சிந்தனைகளால் கவரப்பட்டவர்கள், சியாட்டில் நகரை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, WTO கூட்டத்தை குழப்ப தீர்மானிக்கின்றனர். தமது எதிர்ப்பை ஜனநாயக முறையில், அஹிம்சாவழியில், ஆனால் தந்திரோபாய வியூகங்கள் மூலம் காட்ட விளைகின்றனர்.

அமைதியான முறையில் நடந்த பேரணி, போலிஸ் தலையிட்டு கலைக்க முயன்றதால், வன்முறை தலைதூக்குகின்றது. நகரில் பெருமுதலாளிகளின் வர்த்தக நிலையங்கள் உடைத்து சேதமாக்கப்படுகின்றன, பொருட்கள் சூறையாடப்படுகின்றன. அதிகாரமட்டத்தில் உள்ளவர்களை, புரட்சி என்ற கெட்டகனவு வந்து பயமுறுத்துகின்றது. நவம்பர் மாத பனிக்குளிருக்குள், அந்த ஐந்து நாட்களும் இளைஞர்கள், போலீசுடன் மூர்க்கமாக மோதுகின்றனர். முதலாளித்துவத்தை எதிர்க்கும் இளம்சமுதாயம், வர்க்கப் போராட்டத்திற்கு தயாராக உள்ள பாட்டாளிகள், அமெரிக்காவுக்குள்ளேயே தருணம் பார்த்து காத்திருக்கின்றனர், என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய அந்த ஐந்து நாட்கள்.
BATTLE IN SEATTLE MOVIE

இந்த பின்னணியில் சந்தித்துக் கொள்ளும் நான்கு பேரை மையமாக வைத்து, "Battle in Seattle" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் தத்தமது சொந்த பிரச்சினைகளின் பேரில் அந்த போராட்டத்தில் பிரசன்னமாகியிருந்தவர்கள். அரசியலைப்பற்றி அதிகம் அறியாதவர்கள். ஆனால் உலகை மாற்ற வேண்டுமென்ற அவா கொண்டவர்கள். சியாட்டில் சமர் அவர்களது வாழ்க்கையை மட்டுமல்ல, அமெரிக்காவின் அரசியலையும் எவ்வாறு மாற்றியது என்பதை விளக்கும் இந்த திரைப்படம், தற்போது தான் வெளியாகியுள்ளது. சமுதாயத்தில் அக்கறையுள்ள அனைவரும் பார்க்க வேண்டிய அரிய திரைப்படம் இது.

Anti WTO demonstration Seattle '99

________________________________________________

Saturday, April 12, 2008

உலக ( உணவுக் கலவர) வங்கி

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்." - என்று பாடினான் பாரதி. "பல கோடி மக்களுக்கு உணவில்லை எனில் தனி மனிதர்களை அழிப்பதில் தவறில்லை." - என்று பொருளாதார பாடம் சொல்லிக் கொடுக்கிறது உலக வங்கி. அந்த வங்கியின் அண்மைய அறிக்கை ஒன்று, எதிர்வரும் காலங்களில் உலகில் முப்பத்திமூன்று நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து, போது மக்கள் கலவரங்களில் ஈடுபடக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எகிப்து, ஹைத்தி, கமரூன் ஆகிய நாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கலவரத்தை அடக்க பொலிசார் சுட்டதில் ஹைத்தியில் ஐந்து பெரும், கமரூனில் நாற்பது பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா, பாகிஸ்தான், மொரோக்கோ, செனகல், மொசாம்பிக், மொரிடனியா ஆகிய நாடுகளிலும் உணவுப்பொருள் விலையேற்றத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பிலிப்பைன்சில் அரிசிக்கடைகளுக்கு பலத்த இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாராவது ஒரு பிடி அரிசி திருடினால், கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு நான்கு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று: பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள். இரண்டு : சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் பெருகிவரும் மத்தியதர வர்க்கத்தினரின் வாங்குதிறன் அதிகரித்து, முன்பை விட அதிகம் இறைச்சி தமது அன்றாட உணவில் சேர்க்கின்றனர். இறைச்சி உண்பவர்கள், அதோடு சேர்த்து பல மடங்கு தானியங்களையும் நுகர்கின்றனர். மூன்று : பணக்கார நாடுகள் தமது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய, வழக்கமான நிலத்தடி பெற்றோலிய நுகர்வை குறைத்து, சுற்று சூழல் காப்பது என்ற பெயரில், உயிரியல் எரிபொருளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளில், பெருந்தோட்டங்களில் விளைவித்து எரிபொருளாக பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அதே சோளம், அந்நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள். ஐரோப்பாவும், அமெரிக்காவும் தமது நாட்டின் 20 வீதமான வாகனங்கள் வரும் பத்தாண்டுகளில் உயிரியல் எரிபொருளை பாவிக்க வேண்டும், என்று திட்டம் போட்டு நடைமுறைபடுத்துகின்றன. இதனால் சோளத்தின் விலை உலகசந்தையில் உயர்ந்து, வறிய மக்களால் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு : பங்குச்சந்தை சூதாடிகள், தானிய வியாபாரத்தில் அதிகளவு லாபம் வரும் என்று நம்பி, தானிய விலையை செயற்கையாக அதிகரிக்க வைக்கின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், தானியங்களின் விலை உயர்வு ஏழை மக்களையே அதிகளவு பாதிக்கின்றது.

இந்த பொருளாதார தாக்கம் முரண்நகையாக ஏழை நாடுகளில் தானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளையே பாதிக்கின்றது. உலகமயமாகிய பொருளாதாரம் காரணமாக, ஏழை நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசியை விட, தாய்லாந்திலும், சீனாவிலும் இருந்து இறக்குமதியாகும் அரிசி மிக மலிவாக உள்ளது. இதனால் உள்ளூர் விவசாயம் நலிவடைந்து, விவசாயிகள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி தள்ளப்பட்டனர். கிராமங்களில் விவசாயிகளாக இருந்த போது, உணவுக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை. ஆனால் நகர்புற சேரிகளில், கூலி உழைப்பாளிகளாக வாழும் போது, கிடைக்கும் கூலியில் அரைவாசிக்கு மேல் உணவுத்தேவைக்கு செலவிட வேண்டிய நிலை. ஒரு காலத்தில், மலிவான அரிசி விற்றுக்கொண்டிருந்த தேசங்கடந்த வர்த்தக நிலையங்கள், தற்போது அதே அரிசியின் விலையை இரு மடங்காக அதிகரித்த போது, அதனை விலை கொடுத்து வாங்க சக்தியற்றவர்கள் ஏழை மக்கள் தான். அதனால் தான் ஹைத்தியிலும், எகிப்திலும் அவர்கள் கலவரங்களில் ஈடுபட்டனர்.

உணவுக் கலவரங்கள் பரவவிடாது தடுக்கும் பொருட்டு, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஹைத்தி, எகிப்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், உள்ளூர் தனிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை கேட்டது தான் தாமதம், உலக வங்கி அலறி அடித்துக் கொண்டு; "இது தேசிய பொருளாதாரத்தை பாதிக்கும், அரச வரவுசெலவுத்திட்டத்தில் செலவினத்தை அதிகரிக்கும், இது தற்காலிக தீர்வு மட்டுமே, மானியத்திற்கு பழக்கப்பட்ட மக்கள் பொருளாதார விருத்திக்கு உதவ மாட்டார்கள்..." இவ்வாறு பொருளாதார வல்லுனர்கள், அறிவுரைகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர். இதே உலக வங்கி, மக்கள் பட்டினியால் சாவதை பற்றியோ, சாமானியர்களின் செலவினம் அதிகரிப்பது பற்றியோ கவலைப்படவில்லை. உலகவங்கியின் கவலை எல்லாம், உலகம் முழுக்க தானியம் விற்கும் தேசங்கடந்த நிறுவனங்களின் லாபம் குறைந்து விடும் என்பது மட்டுமே.

அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்பு வெளிநாடுகளில் இருந்து தானியம் இறக்குமதி செய்வதை தடைசெய்து, தமது விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுத்து உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தனர். அன்று அப்படி செய்த அதே நாடுகள் தான், இன்று தமது மிதமிஞ்சிய தானியங்களை உலகசந்தையில் விற்கின்றனர். அதனையே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் செய்ய விரும்பினால், உலக வங்கி ஓடி வந்து பொருளாதார வகுப்பு எடுக்கும். மூன்றாம் உலக நாடுகளில், சீனா மட்டுமே பணக்கார நாடுகளுக்கு நிகராக தானிய ஏற்றுமதி செய்கின்றது. அதுவும் முன்பு அங்கு இடம்பெற்ற கம்யூனிச புரட்சியின் பின்னர், எல்லைகளை மூடி, ஏற்றுமதியை தடைசெய்து, உள்ளூர் உற்பத்தியை பெருக்கியதாலே தான் இன்று இந்த நிலை.

உள்நாட்டு உற்பத்தியை கூட்ட, சந்தையை பாதுகாக்க நினைக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார சீர்திருத்தம், காலம் பிந்தி வந்த மிகச்சிறிய சீர்திருத்தம் என்று அந்நாட்டு மக்கள் குறைப்படுகின்றனர். அதேநேரம் சந்தையை திறந்துவிடு, கட்டுபாடுகள் போடாதே, என்று உலகவங்கி கொடுக்கும் அழுத்தம் காரணமாக அந்த சீர்திருத்தம் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் தானியங்களின் விலையும் குறையப்போவதில்லை. இதைப்பற்றி பணக்கார நாடுகளில் உயிரியல் எரிபொருள் நிரப்பிய கார் ஓடும் மக்களுக்கு, உலக வங்கியின் பொருளாதார ஆலோசகர்களுக்கு, வறிய நாடுகளில் உள்ள வசதிபடைதோருக்கும் என்ன கவலை? அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் தாராளமாக சந்தையில் கிடைக்கின்றன. அதை வாங்க கூடிய பலமும் இருக்கிறது. அவ்வப்போது உணவுக்கலவரங்கள் வெடிக்கும் போது, ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் உலகின் மறுகோடியில் இருக்கும் மக்களுக்கு செய்தி போய்ச்சேர்வதில்லை.

__________________________________________________

கலையகம்