(இந்திய மக்கள் யுத்தம் வாழ்க!)
ஜெர்மனியில், ஹம்பூர்க் நகரில் பாட்டாளிவர்க்க கட்சிகள் பலமாக உள்ளன. வட ஐரோப்பாவில், மிகப் பெரிய துறைமுகத்தை கொண்டிருக்கும் ஹம்பூர்க் நகரம், முதலாம் உலகப்போரின் முடிவில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை சந்தித்திருந்தது. தொழிலாளர்கள் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றி, அமைக்கப்பட்ட சோவியத் அரசு, குறைந்தது ஒரு மாதமாகிலும் இயங்கிக் கொண்டிருந்தது. இன்றைய ஹம்பூர்க் நகரிலும், இந்திய மக்கள் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள், நகரின் பல இடங்களில் சுவரோவியங்களாக தீட்டப் பட்டுள்ளன. நவம்பர் 2012 நடந்த மகாநாட்டை, ஜெர்மன், மற்றும் புலம்பெயர்ந்த துருக்கி மாவோயிஸ்டுகள் ஒழுங்கு படுத்தி இருந்தனர்.
- மகாநாட்டை ஒருங்கிணைத்ததில், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றும் முக்கிய பங்காற்றி உள்ளது. இத்தாலியில் இருந்து ஒரு பெரிய குழு மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தது. இத்தாலியின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCM) பேராளர், மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இதுவரை காலமும் மக்கள் யுத்தத்தில் இறந்த போராளிகளுக்கும், மக்களுக்கும் வீர வணக்கம் செலுத்தப் பட்டது. மகாநாட்டில் கலந்து கொண்டவர்களின் உரைகள், உடனுக்குடன் மொழிபெயர்த்து வழங்கப் பட்டன. ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி, துருக்கி மொழிபெயர்ப்பாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அடுத்து உரையாற்றிய, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (TKP - M/L) உறுப்பினர், இந்தியாவில் நக்சலைட் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, களப்பலியான தலைவர்கள், இந்திய அரச அடக்குமுறைகள் ஆகிய விபரங்களை கொண்ட வரலாற்றை தொகுத்து தந்தார்.
- துருக்கி/வட-குர்திஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராளர், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒற்றுமை குறித்தும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார். "இந்தியாவில் மக்கள் யுத்தம் பல குழுக்களால் நடத்தப் படுகின்றது. மக்களின் எஜமானர்களான உழைக்கும் வர்க்கம், பெண்கள் ஆகியோரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், இந்திய மக்கள் யுத்தத்தை, தமது போராக கருத வேண்டும். நடைமுறைச் சாத்தியமான அரசியல் வேலைத்திட்டம் குறித்து ஆராய வேண்டும்." என்று கூறினார்.
- பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதியின் உரையில் இருந்து: "மக்கள் யுத்தத்தில் வீர மரணமடைந்த கிஷன்ஜியை நினைவுகூரும் அதே வேளை, ஆப்கானிஸ்தான், துருக்கி, பிரேசில் ஆகிய நாடுகளில் மக்களுக்காக போராடி மரித்த வீரர்களையும் நினைவுகூறுவோம். தியாயங்கள் இல்லாமல் போராட்டம் முன்செல்வதில்லை. இந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் ஆயிரக் கணக்கான சுவரொட்டிகளை பிரேசில் முழுவதும் ஒட்டினோம். அருந்ததிராயின் "தோழர்களுடன் நடைப்பயணம்" நூலை போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்த்து விநியோகித்தோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவது, அவர்களது உரிமை. நாடளாவிய பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிக்கவும், மக்கள் யுத்தத்தை முன்னெடுக்கவும் இருக்கிறோம். மக்கள் யுத்தம் சாத்தியமில்லை என்று மறுப்பதானது, திரிபுவாதிகள் ஒளிந்து கொள்ள இடமளிப்பதாகும்." என்று தனது உரையில் தெரிவித்தார். பேரு நாட்டில் மக்கள் யுத்தத்தை நடத்தி, தற்பொழுது சிறையிலிருக்கும் ஒளிரும்பாதை ஸ்தாபகர் கொன்சலோவை நினைவு கூர்ந்த பொழுது, மண்டபம் நிறைந்த கரகோஷம் எழுந்தது.
- பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியான, NDF சார்பில் பேசிய பேராளர், இந்தியாவின் அவல நிலை பற்றி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார். இந்தியாவில் வாழும் 90% மான மக்களுக்கு, அது ஒரு நரகமாகவே இருக்கின்றது. இரண்டு மில்லியன் குழந்தைகள் போஷாக்கின்றி இறக்கின்றன. இந்திய மக்கள், ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர், என்று அவர் தனது உரையில் தெரிவித்தார். அவரை அடுத்து பேசிய, ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், இந்திய போலிஸ், இராணுவப் படைகளுக்கு இஸ்ரேலின் மொசாட் பயிற்சி அளிக்கின்றது. அடக்குமுறையாளர்கள் சர்வதேச ரீதியாக ஒன்றிணையும் பொழுது, சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒன்று சேர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (நக்சல்பாரி) அனுப்பிய அறிக்கை ஒன்றும், மகாநாட்டில் வாசிக்கப் பட்டது.
- கனடா புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரதிநிதி உரையாற்றும் பொழுது: "மக்கள் யுத்தம் இந்திய அரசை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் செங்கொடி ஏற்றப் பட்டுள்ளது. இந்திய அரசின் கொடூரமான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தோன்றவே செய்யும். சர்வதேச நாடுகளில், தோழமை உணர்வை காட்டும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இந்திய அரசின் காட்டு வேட்டை இராணுவ நடவடிக்கையை நிறுத்தக் கோரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும்." என்று தெரிவித்தார். அவரை அடுத்து பேசிய பிரெஞ்சு மாவோயிஸ்ட் கட்சியொன்றின் பிரதிநிதி, பிரான்ஸ் நாட்டில் பல கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், ஒரு தடவை, தமிழ் நாட்டில் திறக்கவிருந்த பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தெரிவித்தார்.
- ஆஸ்திரியா நாட்டில், "புரட்சிகர கட்டுமான இயக்க" பிரதிநிதியின் உரையில் இருந்து: "இவ்வருட செப்டம்பர் மாதம் வியனாவில் எமது இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் ஓரங்கமாக, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. கையெழுத்து வேட்டை நடத்தப் பட்டது. இந்திய தூதுவராலயம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இரண்டு ஆஸ்திரிய தினசரிகளில், இந்திய மாவோயிஸ்டுகளின் பிரகடனங்கள் பிரசுரமாகின. விடுதலைக்கான போராட்டம் சர்வதேச மயமாகியுள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் பொழுது, ஆஸ்திரிய மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது."
- பிரிட்டனில் இருந்து வந்து உரையாற்றிய பேராளர், தான் மட்டுமே இந்த மகாநாட்டிற்கு பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொள்வதாகவும், அந்த நிலைமை மாற வேண்டும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக, இந்தியாவுடன் 200 வருட கால நெருங்கிய உறவைக் கொண்டுள்ள பிரிட்டனில் தான், மக்கள் யுத்தத்திற்கு ஆதரவான இயக்கம் முழுவீச்சுடன் செயற்பட்டிருக்க வேண்டும். கடந்த வருடம், லண்டனில் அருந்ததிராய் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதற்குப் பிறகு எந்த வித செயற்பாடும் இல்லை. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்திருக்கும் பிரிட்டிஷ் படையினரை, பிரிட்டனில் வீரர்கள் என்று புகழ்கிறார்கள். ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடும் ஆப்கானிய விவசாயிகளே உண்மையான வீரர்கள். (பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கைதட்டல்) ஒரு முறை, சீனா சென்று மாவோவை சந்தித்த மேற்கத்திய நாடொன்றின் உதவி நிறுவனத்தின் பிரதிநிதி கேட்டார்:"நாங்கள் உங்கள் நாட்டிற்கு என்ன உதவி செய்ய வேண்டும்?" அதற்கு பதிலளித்த மாவோ: "உங்களது தாயகத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். அங்கே ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள். அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி." என்றார். (மண்டபத்தில் எழுந்த கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் எடுத்தன.)
- ஸ்பெயின் நாட்டில் தன்னாட்சிப் பிராந்தியமான, கலீசியா வை சேர்ந்த மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட ஸ்பானிஷ் மக்களின் போராட்டத்திற்கு, இந்திய மக்கள் யுத்தம் உந்து சக்தியாக இருப்பதாக தெரிவித்தார். இந்திய ஆதரவுக் கழகத்தை சேர்ந்த சுவீடிஷ் தோழர்கள், "தண்டகாரண்யா" என்ற பாடலை சுவீடிஷ் மொழியில் பாடினார்கள். மகாநாட்டின் நடுவில் இடம்பெற்ற புரட்சிகர இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகப் படுத்தின. ஜேர்மனிய இளங்கலைஞர் ஒருவர், இந்தியப் புரட்சியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மகாநாட்டிற்கு வாழ்த்துக் கூறும் வகையிலும் ராப் இசையமைத்து பாடினார். துருக்கி இசைக் குழுவினர், துருக்கி மொழியில் அமைந்த புரட்சிகரப் பாடல்களைப் பாடினார்கள். இத்தாலியில் பாசிசத்தை எதிர்த்து போராடிய கம்யூனிசக் கெரில்லாக்களின் உலகப் புகழ் பெற்ற "பெல்லா ச்சாவ்" பாடலை, துருக்கி மொழியில் பாடினார்கள். அந்தப் பாடலை, பார்வையாளர்களும் கரவொலி எழுப்பி சேர்ந்து பாடினார்கள்.
- "புரட்சி வெல்க!", "மக்கள் யுத்தம் ஓங்குக!", "சர்வதேச மக்களின் ஒன்றிணைந்த போராட்டம்!" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன.
_______________________________________________________________________
Press release from the Conference
On the same webpage pictures from the Conference as well as information of the preparatory campaign – including the official video of mobilization, the graffiti paintings, posters and so forth – can be seen.
Victory to the People`s War!
League against Imperialist Aggression (Hamburg, Germany)
26th November 2012

