Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

Thursday, December 25, 2014

தேசிய வெறி தோற்கடிக்கப் பட்ட கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம்


இன்று (25-12-2014) கிறிஸ்துமஸ் போர்நிறுத்தத்தின் நூறாவது ஆண்டு நினைவு தினம். ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1914 ம் ஆண்டு, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று போர்நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தமிழர்களும், சிங்களவர்களும், இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் எந்தளவு தூரம் ஒருவரையொருவர் வெறுக்கும் பகைவர்கள் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. நூறு வருடங்களுக்கு முந்திய ஐரோப்பியர்களும், அப்படித் தான் வாழ்ந்தார்கள். தேசியவெறி, இனவெறி காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பிய தேசிய இனங்கள், தமிழர்-சிங்களவர், இந்தியர்-பாகிஸ்தானிகளை விட மோசமான பகைவர்களாக இருந்தனர். ஐரோப்பியர்களின் தேசியவெறி, கோடிக் கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. இனவெறியூட்டப் பட்ட ஐரோப்பிய நாடுகளின் படைகள், ஈவிரக்கமின்றி படுகொலைகளை செய்து கொண்டிருந்தன. அப்படியான ஒரு தருணத்தில் தான், கிறிஸ்துமஸ் போர் நிறுத்தம் வந்தது.

பெல்ஜியத்தில், ஒரு பக்கம் ஜெர்மன் படைகளும், மறுபக்கம் பிரிட்டிஷ் படைகளும் போர்க் களத்தில் நின்று கொண்டிருந்தன. அன்றைய ஐரோப்பாவில், ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், தமிழர், சிங்களவர் மாதிரி ஜென்மப் பகைவர்கள் ஆவர். அப்படியான தேசியவெறி/இனவெறி ஊட்டப்பட்ட படைவீரர்கள், போர் நிறுத்தம் ஏற்பட்டதும், ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக் கொண்டனர்.

காட்டுமிராண்டித் தனமான போருக்கு மத்தியில், போர்நிறுத்தம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. ஜெர்மன் படையினரும், பிரிட்டிஷ் படையினரும், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் பரிசுகளை பகிர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து கால்பந்து விளையாடினார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த எதிரிகள், போர்நிறுத்த காலம் முழுவதும் நட்புடன் பழகினார்கள்.

படையினருக்கு இடையில் இது போன்ற நட்புறவு தொடர்ந்திருக்க ஆட்சியாளர்கள் சம்மதிப்பார்களா? மீண்டும் போர் வந்தது. ஒன்றாக கால்பந்து விளையாடியவர்கள், மீண்டும் துப்பாக்கிகளை எடுத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள். இன்னும் பல இலட்சம் பேரைக் காவு கொண்ட போர், 1917 ம் ஆண்டு தான் ஓய்ந்தது.

ஈழப்போர் நடந்த காலத்திலும், இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், பிரேமதாச ஆட்சிக் காலத்தில், பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் நடந்த சம்பவம் ஒன்று, யாழ்ப்பாண தமிழ்ப் பொது மக்களால் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசப் பட்டது.

பலாலி இராணுவ முகாமுக்கு அருகில், சிறிலங்கா படையினரும், புலிகளும் எதிரெதிரே காவலரண்களை போட்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் உரிமை கோரப் படாத பிரதேசம் (No man's land) இருந்தது. அங்கே எப்போதும் சண்டை நடப்பதில்லை. சில நேரம் அமைதியாக இருக்கும். சிங்களப் படையினரும், புலிப் போராளிகளும், நட்பாகவும் பேசிக் கொள்வார்கள். அப்போது பழக்கமான புலிப் போராளியிடம், சிங்களப் படையினன் பின்வருமாறு கூறினானாம்: "என்னுடைய ஐயாவும், உன்னுடைய ஐயாவும் ஏ.சி. ரூமுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நானும், நீயும் தான் இந்த வெட்ட வெளியில் நின்று சண்டை பிடிக்கிறோம்..."

தேசியவெறி/இனவெறிக் கொள்கையால் ஆதாயம் அடையும் பிரிவினர், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று மறுக்கலாம். ஆனால், சாதாரண சிங்கள-தமிழ் மக்கள், சாதாரண சிங்களப் படையினர், தமிழ்ப் புலிப் போராளிகள் எல்லோரும், தேசியவாதிகளோ அல்லது இனவாதிகளோ அல்ல. அப்படி கருதிக் கொள்வது ஒரு கற்பனாவாதம்.

Monday, November 03, 2008

புதியதோர் போரை தொடங்குவோம்


"நிதிநெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறந்த வழியாக, அமெரிக்க அரசு விரைவில் ஒரு புதிய போரை ஆரம்பிக்க வேண்டும்!" இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை, அமெரிக்க அரசுக்கு ஆலோசனை வழங்கும் RAND ( Research ANd Development) நிறுவனத்திடமிருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் சக்திவாய்ந்த RAND நிறுவனத்தை முன்னாள் சி.ஐ.ஏ. உப தலைவரும், பிரபல ஆயுத உற்பத்தி நிறுவனமான கார்லைல் நிர்வாகியுமான கார்லூச்சி தலைமை தாங்குகின்றார். இவர் கார்லைல் நிறுவனத்தில் பதவிவகித்த காலத்தில் தான், ஆப்கானிஸ்தான், ஈராக் யுத்தங்கள் மூலம் பல கோடி டாலர்கள் லாபம் ஈட்டப்பட்டது.

வங்கிகள் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எதற்கு 700 பில்லியன் கொடுக்க வேண்டும்? அந்தப் பணத்தைக் கொண்டு புதிய போர் ஒன்றை தொடங்கினால், அதனால் வரும் விளைவுகள் அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும். இதனால் எமது நிறுவனங்கள் மீண்டும் லாபம் சம்பாதிக்கலாம். வங்கிகளும் நெருக்கடியில் இருந்து மீளும். அது பொருளாதார தேக்கத்தை கட்டுப்படுத்தி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அது எப்படி சாத்தியமாகின்றது? போர் என்று வரும் போது அமெரிக்க இராணுவத்திற்கு நிறைய ஆயுத தளபாடங்கள் தேவைப்படுவதால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் வங்கிகள் முதலீடு செய்கின்றன. அரசாங்கம் வாடிக்கையாளராக ஆயுதங்களை வாங்குகின்றது.

RAND வழங்கிய ஆலோசனைப்படி இந்த முறை அமெரிக்கா படையெடுக்கப் போவது, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற "சிறிய நாடுகளாக" (எதிர்த்து நிற்கப் பலமற்ற நோஞ்சான் நாடுகள்) இருக்கக் கூடாது என்றும், உலக பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு செலுத்தும் மிக முக்கியமான நாடாக இருக்க வேண்டும். அது எந்த நாடு என்பது இன்று வரை மர்மமாக உள்ளது. ரஷ்யாவா, சீனாவா, அல்லது ஈரானா என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே வட கொரியா தவிர்க்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அது அவர்கள் எதிர்பார்க்கும் விளைவுகளைக் கொடுக்காதாம். ஆச்சரியப்படத் தக்கதாக, ஜப்பானின் பெயர் அடிபடுகின்றது. சர்வதேச பொருளாதாரத்தில் ஜப்பான் வகிக்கும் பாத்திரம் மட்டும் இதற்கு காரணமல்ல. அமெரிக்கா ஜப்பானிடம் கடன் பத்திரங்களை அடமானம் வைத்து நிறைய கடன் வாங்கியுள்ளது. ஆகவே போர் தொடுத்து ஜப்பானையே ஆக்கிரமித்து விட்டால், கடனாவது திருப்பிக் கொடுப்பதாவது.

அமெரிக்காவில் இனி பதவியேற்கப் போகும் புதிய ஜனாதிபதி, பெரியதொதொரு சர்வதேச பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும், என்று முன்னாள், இந்நாள் அரசியல் தலைவர்களும், இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதிகாரியும் தெரிவித்துள்ள காலகட்டத்தில் RAND இன் அறிக்கை வந்துள்ளது.

இந்தத் தகவல்கள் எப்படி வெளியாகின? சில பிரெஞ்சு ஊடகங்களும், அதை தொடர்ந்து பிரபல சீன வெகுஜன ஊடகங்களும் இந்த செய்தியை மக்களுக்கு அறிவித்துள்ளன. தற்போது இது சீனாவில் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாக ஆகியுள்ளது. "அமெரிக்காவின் இலக்கு சீனாவாக இருக்குமா?" என்பது விவாதத்தின் கருப்பொருள் என்பதை சொல்லத்தேவையில்லை.
மேலதிக விபரங்களுக்கு :
_____________________
சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பார்ப்பதற்கு(சீன மொழியில்) :
Sohu.com
ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தியை பார்ப்பதற்கு:
RAND Lobbies Pentagon: Start War To Save U.S. Economy
____________________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.