Showing posts with label தமிழினவாதிகள். Show all posts
Showing posts with label தமிழினவாதிகள். Show all posts

Friday, April 17, 2020

எச்சரிக்கை: (தமிழ்) இனவாதிகள் இந்தப் பதிவை வாசிப்பதை தவிர்ப்பது நல்லது!


எச்சரிக்கை: (தமிழ்) இனவாதிகள் இந்தப் பதிவை வாசிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது!


ஊரடங்கு, தனிமைப் படுத்தலுக்கு பின்னால் உள்ள வர்க்க முரண்பாடு:
  • அலுவலக ஊழியர்களான மத்தியதர வர்க்கம் வீடுகளில் முடங்கிக் கிடந்து ஆடிப் பாடிக் களிக்கிறது. 
  • அத்தியாவசிய வேலைகளை செய்யும் உழைக்கும் வர்க்கம் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

மேற்கத்திய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளால், எதிர்காலத்தில் ஒரு வர்க்கப் போர் வெடித்தாலும் ஆச்சரியம் எதுவுமில்லை. நிச்சயமாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் ஒரு காலத்தில் வர்க்க ஒடுக்குமுறைகளை எதிர்த்து கிளர்ந்தெழுவார்கள்.

பிரான்சில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளதால் மே மாத நடுப்பகுதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது. பாரிஸ் நகரில் வெளிநாட்டு குடியேறிகளின் சனத்தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் தான் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. அங்கு தான் தமிழர்களும் பெருமளவில் வசிக்கிறார்கள் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை.

ஸ்பெயினில் இருந்து வரும் தகவல்களும் அதே மாதிரித் தான் உள்ளன. மாட்ரிட், பார்சலோனா போன்ற பெரிய நகரங்களில் வெளிநாட்டு குடியேறிகள் நெருக்கமாக வசிக்கும் பிரதேசங்களில் தான் கொரோனா தொற்று மரணங்கள் அதிகமாக சம்பவித்துள்ளன.

பிரித்தானியாவில் லண்டன், நெதர்லாந்தில் ரொட்டர்டாம், அமெரிக்காவில் நியூயோர்க் என்று சிறுபான்மை இனத்தவர் நெருக்கமாக வாழும் நகரங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் மேற்கத்திய நாடுகளில் சிறுபான்மையின மக்கள் தான் அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக உள்ளனர்.

மேற்கத்திய நாடுகளில் இனமும், வர்க்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இங்கே பூர்வீக ஐரோப்பிய வெள்ளையர் செய்ய விரும்பாத "ஊத்தை" வேலைகளை தான் தமிழர்கள் உட்பட பெரும்பாலான வெளிநாட்டு குடியேறிகள் செய்கின்றனர். அதாவது துப்பரவுப் பணிகள், வயோதிபர் மடங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். இந்த இடங்களில் தான் கொரோனா தொற்று நோய் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இந்நாடுகளில் செய்யும் தொழிலில் மட்டுமல்லாது குடியிருக்கும் வீடுகளிலும் வர்க்க முரண்பாடு தெளிவாகத் தெரியும். ஐரோப்பிய வெள்ளையர்கள் பெரும்பாலும் நகருக்கு வெளியே வீட்டுத் தோட்டத்துடன் கூடிய பெரிய வீடுகளில் வாழ்கிறார்கள். அதற்கு மாறாக நகரங்களில் வெளிநாட்டவர்கள் வசதி குறைந்த நெருக்கமான வீடுகளில் வசிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, புதிதாக வந்த வெளிநாட்டவர்கள் வாடகை செலவை ஈடுகட்டுவதற்காக பல நண்பர்களாக ஒன்று சேர்ந்து ஒரு வீட்டில் வசிப்பார்கள். பாரிஸ் நகரில் இது சர்வ சாதாரணம். சிலநேரம் குடும்பங்கள் கூட பிள்ளைகளுடன் ஒரு சிறிய வீட்டில் குடித்தனம் நடத்துவார்கள். இப்படியான இடங்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மற்றவர்கள் எவ்வாறு தனிமைப் படுத்திக் கொள்ளலாம்? அது நடைமுறைச் சாத்தியமா?

இதுவரை நிறைய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்த காரணமும் இது தான். அதாவது அவர்களும் இங்கே அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களும் இங்கு நிலவும் வர்க்க ஒடுக்குமுறைக்கு பலியானவர்கள் தான். தயவுசெய்து அது ஒடுக்குமுறையா என்று கேட்காதீர்கள். மேலே பல உதாரணங்களை அடுக்கி இருக்கிறேன்.

இங்குள்ள நிலைமை இப்படி இருக்கையில், சில இனவாதப் பைத்தியங்கள் இதையும் இனவாதக் கண்ணாடி அணிந்து பார்க்க முனைகின்றனர். இலங்கையில் இருக்கும் ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை), கொரோனாவுக்கு பலியான ஈழத்தமிழர்களின் படங்களைப் போட்டு, "ஐயகோ, ஒரு தேசம் அழிகிறதே!" என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். அவர் கண்களுக்கு "தமிழர் எல்லாம் ஒரே இனம், ஒரே தேசம்!"

இது ஒரு வர்க்கப் பிரச்சினை. இங்கே ஈழத் தமிழர்களும் உழைக்கும் வர்க்கத்தினர் தான். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் என்பதால் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். தயவுசெய்து இனவாதப் பைத்தியங்கள் சற்று ஒதுங்கி ஓய்வெடுங்கள். உங்களை நீங்களே அரசியலில் இருந்து தனிமைப் படுத்திக் கொண்டாலே போதும். தமிழ் உழைக்கும் மக்கள் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.


Friday, April 06, 2018

"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்!" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்


"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்!"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம்

இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாருங்கள் குழந்தைகளே! அதை வைத்து இனவாதம் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்வோம். 
  • - "இவர் யார்?" 
  • - "சிங்கள - பௌத்த பேரினவாதி." 
  • - "இவர் இங்கே என்ன செய்கிறார்?" 
  • - "தமிழர்களுக்கு சிங்களம் கற்பிக்கும் சாட்டில் மொழித் திணிப்பு செய்கிறார்."
  • - "இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?"
  • - "இல்லை, சிங்கள இனவெறிப் பிக்குவே ஓடிப் போ!"

இப்படித் தான் தமிழ் மக்கள் இனவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். "பிக்கு தமிழர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும்" படத்தைக் காட்டி, பலர் சமூகவலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 
"படம் பார், பாடம் படி!"

சிங்கள மக்கள் மத்தியிலும், இதே பாணியில் தான் இனவாதத்தை பரப்புவார்கள். அதே மாதிரி, தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பரப்புவதற்கும் சில சக்திகள் தீயாக வேலை செய்கின்றன.

உலகம் முழுவதும் இனவாதிகளின் செயற்பாடுகள் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் மத்தியில் இவர்களது இனவாதப் புளுகுகள் எடுபடுவதில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

இந்தப் படம் 2017 ம் ஆண்டு முற்பகுதியில், மட்டக்களப்பில் நடந்த, வேலையற்ற பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது எடுக்கப் பட்டது. முதல் படத்தில் சிங்களம் படிப்பிக்கும் அதே பிக்கு, அடுத்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் காணலாம். போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் பட்டதாரிகள், சிங்களம் படிப்பதில் என்ன பிழையிருக்கிறது?

சிங்களப் பெரும்பான்மையின மக்களுக்கும் புரியும் வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சிங்கள மொழியறிவு இருப்பது அவசியம் அல்லவா? சர்வதேச சமூகத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காக பதாகைகளை ஆங்கிலத்தில் எழுதி வைப்பதில்லையா?

சாதாரணமான மக்கள், இவ்விடத்தில் பட்டதாரிகள், ஒரு போராட்டக் களத்தில் தான் உண்மையான அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு புரியும் மொழியில் பேசக் கற்றுக் கொள்வது அதில் ஒரு பாடம்.

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பது சிறந்தது அல்லவா? எதற்காக நாங்கள் பணம் கொடுத்து சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை பிடிக்க வேண்டும்? எமக்கு சிங்களம் தெரிந்தால் எமது பிரச்சனைகளை நாங்களே நேரடியாகப் பேசிக் கொள்வோம்.

இங்குள்ள வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சிங்களம் படிப்பதால், உங்களைப் போன்ற சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேலை பறிபோகும் என்றால், அது அவர்களது பிரச்சினை அல்ல. உங்கள் சுயநலத்திற்காக இங்கே இனவாதத்தை கொண்டு வந்து புகுத்தாதீர்கள். பிழைப்பதற்கு நூறு வழிகள் உள்ளன.

போராட்டம் என்பது பல பரிணாமங்களை கொண்டது. தமிழரின் அரசியல் கோரிக்கை நியாயமானது என்றால், அதை சிங்கள மக்களுக்கு புரியும் வகையில் சிங்களத்தில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? வெறுமனே தமிழில் கோஷம் போட்டு விட்டு கலைந்து போவதால், போராட்டம் குறுகிய வட்டத்திற்குள் ஆரம்பித்து முடிந்து விடும். அதையே அரசும் எதிர்பார்க்கின்றது.

ஒரே காலப்பகுதியில், மட்டக்களப்பில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிங்கள பௌத்த பிக்கு வட மாகாண தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார்.

இதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:
  • "இதைக் கண்டாலும் காணாத மாதிரி கடந்து செல்லுங்கள் தமிழர்களே!"
  • "இடதுசாரியம் சோறு போடாது, மக்களே! வலது பக்கம் திரும்புங்கள்."
  •  "இனவாதப் பிக்குகள் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்."
  •  "இனவாதி அல்லாத, தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கும் பிக்குகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் பார்க்கக் கூடாது! புரிந்ததா?"


இந்தப் படத்தை, உங்களில் பலர் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும், சமூகவலைத்தளத்திலும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்தப் பிக்கு தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் போடவில்லை. இனவாதம் பேசவில்லை. அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், அந்தத் தகவல் சுடச் சுட பரப்பப் பட்டிருக்கும்.

இந்தப் பிக்கு இனவாதம் பேசி இருந்தால், போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒரு புதிய வில்லன் கிடைத்திருப்பான். பேஸ்புக்கில் படத்தை போட்டு, காறித் துப்பி கழுவி ஊத்தி இருப்பார்கள். என்ன செய்வது? இந்தப் பிக்கு வேலையற்ற பட்டதாரிகளுடன் உண்ணாவிரதம் அல்லவா இருக்கிறான்? இதைக் காட்டி பிழைக்க முடியுமா? நாலு காசு சம்பாதிக்க முடியுமா? இல்லைத் தானே? கண்டாலும் காணாத மாதிரி 'கம்' முன்னு இருக்கணும்.

இந்த நாட்டில் இனவாதம் ஒரு இலாபம் தரும் வியாபாரம். சினிமாவில் வரும் கவர்ச்சிக் காட்சிகள் பல இலட்சம் பார்வையாளர்களை கவர்வது மாதிரி, இனவாதப் பேச்சுக்களும் பலரைக் கவர்ந்திழுக்கும். அதை வைத்து அரசியல் செய்வதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

புத்த‌ பிக்குக‌ள் எல்லோரும் ஒரே அர‌சிய‌லை பின்ப‌ற்றுவ‌தில்லை. முன்னிலை சோஷ‌லிச‌க் க‌ட்சி ம‌ற்றும் ப‌ல‌ சிங்க‌ள‌ இட‌துசாரி அமைப்புக‌ளில் புத்த‌ பிக்குக‌ளும் செய‌ற்ப‌டுவ‌துண்டு. அவ‌ர்க‌ள் த‌மிழ்ப் ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் போராட்ட‌ங்க‌ளில் த‌மிழ் ம‌க்க‌ளோடு க‌ல‌ந்து கொள்வ‌தில் என்ன‌ த‌ப்பு? க‌ண்ட‌தை எல்லாம் ச‌ந்தேக‌ப் ப‌டுவ‌த‌ன் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளை ஒதுக்கி வைக்கிறோம். ப‌கைவ‌ர்க‌ளை கூட்டிக் கொள்கிறோம். எம்மை நாமே த‌னிமைப்ப‌டுத்திக் கொள்கிறோம்.

படத்திற்கு நன்றி: Newton Mariya Mainthan

பிக்கு பற்றிய விபரம் : //வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளின் போராட்டக்களத்திற்கு வலுச்சேர்ககும் முகமாக இலங்கையின் ஒன்றினணந்த அனைத்து வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக வணக்கத்துக்குரிய. தெத்தே ஞானானந்ததேரர் கலந்துகொண்டுள்ளார்.// 


Monday, July 28, 2014

அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்!



"எதற்காக பாலஸ்தீனத்திற்காக அழுகிறீர்கள்?""தமிழர்கள் அழ வேண்டியது முள்ளிவாய்காலுக்காக மட்டுமே!"
தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சிலர் சமூக வலைத் தளங்களில் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதிரிகளின் சூழ்ச்சிகளில் முதன்மையானது, ஒடுக்கப் பட்ட மக்களை பிரித்து வைப்பது. அதை இப்படியான வழிகளிலும் சாதிக்கலாம்.

வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டிருந்த, ஓய்வு பெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன், வட மாகாண முதலமைச்சராக பதவி வகிக்கிறார். வன்னியில் முற்றுகைக்குள் அகப்பட்ட மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவில் சில தமிழ் தனவந்தர்கள், ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கினார்கள்.

வன்னியில் மக்கள் செறிவாக கூடுமிடங்களை செய்மதிப் படங்கள் மூலம் காட்டிக் கொடுத்து, தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்க உதவிய ஒபாமாவுக்கு ஆதரவாக, அமெரிக்காவில் ஓர் தமிழர் அமைப்பு இயங்கியது. இந்தியாவில் அதே காலகட்டத்தில், சோனியா அல்லது கருணாநிதி பெயரில் ஒரு தமிழ் இன உணர்வாளர்களின் அமைப்பு இயங்கினால், அது எந்தளவு எதிர்ப்பை சம்பாதித்திருக்கும்? ஆனால், தமிழ் இனப்படுகொலையில் பங்காளியான ஒபாமாவுக்கு ஆதரவான தமிழர் அமைப்பு, யாருடைய கண்களையும் உறுத்தவில்லை.

அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களையும், பண வசதி படைத்தவர்களையும் கேள்வி கேட்கும் அளவிற்கு முதுகெலும்பில்லாத "மாற்றுக்" கருத்தாளர்கள் சிலர், முள்ளிவாய்க்கால் - காஸா படுகொலைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைப் பார்த்து நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலையும், காஸாவையும் ஒப்பிட்டால் ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும், போலித் "தமிழ் இன உணர்வாளர்களுக்கும்" பிடிப்பதில்லை. முள்ளிவாய்க்கால் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு, தம்மிடம் மட்டுமே காப்புரிமை இருப்பது போன்று நடந்து கொள்கின்றனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் பேசினால், "எமக்கு தமிழீழம் மட்டுமே முக்கியம்" என்று விதண்டாவாதம் செய்வார்கள். ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்கள் குறுக்கே புகுந்து, "உலகில் எவனும் தமிழன் சாகும் போது கண்டு கொள்ளவில்லை. அதனால் பாலஸ்தீனர்கள் பற்றி எமக்கு அக்கறை இல்லை..." என்று ஒரு சாட்டு சொல்வார்கள். "இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை, ஒரு சர்வதேச பிரச்சினை" என்பது இந்த "மாற்றுக்" கருத்து அறிவுஜீவிகளுக்கு தெரியாமல் போனது அதிசயமல்ல. ஏனென்றால், அமெரிக்கா உதவியின்றி அவர்களது அரசியல் நடக்காது.

இஸ்ரேலில் ஒரு கொலை நடந்தால் அது உலகச் செய்தி. அதே நேரத்தில் இன்னொரு நாட்டில் ஆயிரம் பேர் இறந்தாலும், அந்தத் தகவல் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. இன்று நேற்றல்ல, கடந்த எழுபது வருடங்களாக சர்வதேச சமூகம் இஸ்ரேல் மீது அளவுக்கு அதிகமான கரிசனை காட்டி வருகின்றது. மேற்கத்திய ஊடகங்கள் எந்தத் தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அதே தான் உலகம் முழுவதும் பிரபலமாக பேசப் படும்.

காஸா போர் தொடங்கி நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், இன்னொரு அரபு நாடான லிபியாவில் ஒரு போர் நடந்து கொண்டிருந்த தகவலை எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? அதுவும் சாதாரணமான யுத்தம் அல்ல. கிளர்ச்சிக் குழுக்கள் திரிப்பொலி சர்வதேச விமான நிலையத்தை தாக்கி உள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானங்களை தகர்த்துள்ளன.

திரிபோலி விமான நிலைய தாக்குதல் 

லிபியா வான் பரப்பின் மேல் விமானங்கள் பறப்பதற்கு, சர்வதேச தடையுத்தரவு போடப் பட்டுள்ளது. அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேறி உள்ளனர். பிரெஞ்சுப் பிரஜைகளை வெளியேறுமாறு பணிக்கப் பட்டுள்ளது. இந்த தகவல் எல்லாம் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள். எதற்காக எந்த ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை? அதற்கு விடை ஒன்று தான். இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சர்வதேச கவனம் முழுவதும் அங்கே தான் குவிந்திருக்கும்.

2008 இறுதியிலும், 2009 தொடக்கத்திலும், வன்னியிலும், காஸாவிலும் ஒரே நேரத்தில் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், சர்வதேச நாடுகள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும்? இந்த உண்மைகளை மறைக்கும் போலித் தமிழ் இன உணர்வாளர்கள் சிலர், தமது இஸ்ரேலிய சார்பு அரசியலை மறைப்பதற்காக பல தகிடுதத்தங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை. ஆனால், இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்.


********


பிற்குறிப்பு:
"ஈழத் தமிழர்கள் இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" (?) என்று, இஸ்ரேல் கொடுத்த ஆயுதங்களை பாவித்து நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஓய்ந்த பின்னர், நிராஜ் டேவிட் என்ற ஊடகவியலாளர் கூறி வந்தார். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர், லங்காஸ்ரீ (தமிழ்வின்) என்ற தமிழர்கள் மத்தியில் பிரபலமான இணையத்தளத்தில், இஸ்ரேலை புகழ்ந்து தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.
ஈழத் தமிழர்கள் இஸ்ரேலுக்கு விசுவாசமானவர்களாக இருந்தால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அவரது வாதம். GTV எனும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சியில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். GTV, லங்காஸ்ரீ என்பன மிகத் தீவிரமான தமிழ்தேசிய ஊடகங்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். நிராஜ் டேவிட் கூட தன்னை தீவிரமான தமிழ் தேசியவாதியாக காட்டிக் கொள்ளும் ஒருவர் தான்.
லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் IBC வானொலியும், மிகத் தீவிரமான தமிழ் தேசிய ஊடகம் தான். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்த யூதர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது, "இஸ்ரேலில் சந்திப்போம்" என்று விடை பெறுவார்களாம். அதே மாதிரி, தமிழர்கள் எல்லோரும் "தமிழீழத்தில் சந்திப்போம்" என்று கூறிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தி வந்தது.
ஸ்ரீதரன், இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். கட்சிக்குள்ளேயே மிகவும் தீவிரமான தமிழ் தேசியவாதி என்று, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெயரெடுத்தவர். அவர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது: "உலகிலேயே மூன்று புத்திசாலித்தனமான இனங்களின் பெயர்கள் J என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறது. அவை முறையே Jews, Japanese, Jaffna Tamils!" என்று கூறினார்.
மே 17 இயக்கம், அனைத்து தமிழ் தேசியவாதிகள் சார்பாக, தமிழ்நாட்டில் பாலஸ்தீன ஆதரவுக் கூட்டம் போடுகின்றதாம். இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மே 17 இயக்கத்தினர் "அசல் தமிழ் தேசியவாதிகள்" என்றால், மேலே குறிப்பிடப் பட்டவர்கள் "போலித் தமிழ் தேசியவாதிகளா?" இவர்களில் யார் உண்மையான தமிழ் தேசியவாதி? இந்தக் குழப்பத்திற்கு காரணம், உலகில் "பொதுவான தமிழ் தேசியம்" என்ற ஒன்று கிடையாது. ஏற்கனவே, தமிழ் தேசியவாதிகள் மத்தியிலும் வலதுசாரி, இடதுசாரி பிரிவினை காலம் காலமாக இருந்து வந்துள்ளது.
பெரும்பான்மை ஆதரவாளர்களைக் கொண்ட, வலதுசாரித் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலும் ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. ஈழத்து தமிழ் தேசியத்திற்கும், தமிழகத் தமிழ் தேசியத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள், கொள்கை முரண்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் எதிரொலிக்கிறது. வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர் இஸ்ரேலை ஆதரிக்கையில், இன்னொரு பிரிவினர் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர். எது எப்படியோ, இஸ்ரேலுக்கு தலையையும், பாலஸ்தீனர்களுக்கு வாலையும் காட்டுவதற்கு விசேட திறமை வேண்டும்.

Sunday, May 26, 2013

யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்



கடலூரில் நடந்த, நாம் தமிழர் கட்சிக் கூட்டத்திற்கு, காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை அழைத்து வந்திருந்தார்கள். அந்த சம்பவம், பல எதிர்வினைகளை தோற்றுவித்திருந்தது. காங்கிரஸ், மற்றும் இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எதிர்மறையான எதிர்வினைகள் பிரிவினைவாதப் பீதியூட்டிக் கொண்டிருந்தன. அதே நேரம், மதிமுக போன்ற தமிழீழ ஆதரவு கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட பக்கப் பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். அந்த தருணத்தில், பல கொள்கை முரண்பாடுகள் இருந்த போதிலும், நான் சீமானின் செயலை ஆதரித்து எழுதி இருந்தேன். அது குறித்து நான் முகநூலில் பின்வருமாறு பதிவிட்டிருந்தேன்:

  • //தமிழ் தேசியவாதிகள் யாருடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பது, அவர்களது சொந்த அரசியல் தெரிவு. ஆனால், காஷ்மீர் தேசியவாத இயக்கமான JKLF, மற்றும் புலம்பெயர்ந்த சீக்கியரின் காலிஸ்தான் தேசியவாத இயக்கங்களுக்கும், CIA க்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு தான் நெருடலானது. இந்த அமைப்புகளுக்கு CIA நிதி கிடைப்பது, காஷ்மீரி, சீக்கிய சமூகங்களில் ஏற்கனவே தெரிந்த விடயம். ஆகவே, இந்த "CIA Connection" குறித்து தமிழர்கள் விழிப்புடன் இருப்பதும் அவசியம்.//  (Kalaiyarasan Kalai, May 19)
  • //நாம் தமிழர் கட்சி, JKLF உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டமை, தேசியவாத அரசியல் அடிப்படையின் படி சரியான நிலைப்பாடு தான். அதை நாங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், நாம் தமிழர் கட்சியின் கடந்த கால அரசியல் நடைமுறைகளை வைத்து பார்க்கும் பொழுது தான், இந்தப் புதிய கூட்டு குறித்து சந்தேகம் எழுகின்றது. எனது கணிப்பீட்டின் படி, சீமானுடைய அரசியல் பாதை மிகவும் தெளிவானது. அவர் ஒருவேளை "தமிழ் தேசியவாதியோ" என்று, மக்கள் தான் குழம்புகிறார்கள். பாசிசத்தின் குணங்குறிகள் ஆரம்பத்தில் அப்படித் தான் இருக்கும். தங்களது இனப் பெருமை பற்றி மட்டுமே பேசுவார்கள். தங்களது எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மட்டுமே தமது கொள்கைகளை நடைமுறைப் படுத்துவார்கள். ஆனால், அவர்களுக்கென்று ஒரு "அயல் விவகார கொள்கை" உண்டு. மற்ற பிரதேசங்களில், தமக்கு நெருக்கமான சக்திகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். 

  • மகாராஷ்டிரத்தில் சிவசேனா தான் சீமானின் கூட்டாளிகள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். சிவசேனாவுக்கு இரண்டு முகங்கள். ஒன்று இந்துத்துவா, மற்றது மராட்டிய இனவாதம். அவர்கள் ஒரு காலத்தில், மும்பையில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை நடத்தியவர்கள் என்ற விடயம் சீமானுக்கு மறந்து விட்டது.தற்போது நாம் தமிழருக்கும், காஷ்மீர் விடுதலை இயக்கமான JKLF உடனும் உறவு ஏற்பட்டதற்கு, முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கலாம். 

  • 1. JKLF சிஐஏ உடன் தொடர்பில் உள்ள விடயம் ஒன்றும் இரகசியமல்ல. நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் சிஐஏ க்கு மிகவும் உவப்பானது. நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள், தீவிரமான இடதுசாரி எதிர்ப்பாளர்கள் என்பதை அவர்களே பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். மேலும், அமெரிக்காவில் சிஐஏ யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும், "நாடுகடந்த தமிழீழ அரசுடன்" நெருங்கிய உறவு வைத்திருப்பதை, சீமானே பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

  • 2. இன்றைய காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில், காஷ்மீரில் JKLF இன் பங்களிப்பு பலவீனமாக உள்ளது. வன்முறையில் இறங்காத, சாத்வீக வழியில் போராடும் JKLF இன் தலைமை, இன்று பல மாற்றங்களை கண்டுள்ளது. யாசின் மாலிக் இந்தியாவுக்குள் ஒரு பிரதேச சுயாட்சி கேட்குமளவிற்கு வந்துள்ளார். அவருக்கும், இந்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அண்மையில், ஜம்முவில் இருந்து விரட்டப்பட்ட இந்து பண்டித்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதிலே வேடிக்கை என்னவென்றால், யாசின் மாலிக் அல்லது JKLF இன் இன்றுள்ள நிலைப்பாட்டுக்கும், சீமான் ஆதரிக்கும் புலிகளின் அரசியலுக்கும் இடையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இந்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் யாசின் மாலிக், ஒரு "காஷ்மீர் டக்லஸ் தேவானந்தா" போன்று வர வாய்ப்புண்டு. 

  • சுருக்கமாக, சீமான் யாசின் மாலிக்கை அழைத்து வந்த விடயம், ஒரு வரவேற்கத் தக்க திருப்பம். ஆனால், அது சிலர் பயமுறுத்துவதைப் போல, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் அல்ல.// (Kalaiyarasan Kalai, May 21)
இதற்காக சந்தோஷப் பட வேண்டிய சீமானின் "நாம் தமிழர் தம்பிகள்", முகப்புத்தகத்தில் என் மீது அவதூறுகளை வாரியிறைத்து வருகின்றனர். (https://www.facebook.com/vallavan.udayaraj/posts/661451097204493)
அப்படி எழுதியவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழனாகப் பிறந்த எல்லோரும்,  "தமிழினவாதிகளின் செயல்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும், அல்லது முற்றுமுழுதாக எதிர்க்க வேண்டும்," என்று எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையில் நின்று, பக்கச் சார்பற்ற விமர்சனம் வைப்பதை, அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.  Vallavan Udayaraj என்ற "நாம் தமிழர் அனுதாபி" (?), முகநூலில் எனக்கெதிராக எழுதிய அவதூறை முதலில் பார்ப்போம். (கவனிக்கவும்: அவர் எந்த இடத்திலும், எனது பதிவில் எழுதியதை மேற்கோள் காட்டாமல், மேம்போக்காக எழுதிச் செல்கிறார்.)

  • Vallavan Udayaraj : //முகப்புத்தகத்தில் எங்கு திரும்பினாலும் யாசின் மாலிக் மயம், யாசின் மாலிக்கின் மறுபக்கம், அடுத்த பக்கம், அக்கம் பக்கம் என்று ஆளாளுக்கு பக்கம்பக்கமாய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், இதற்கிடையில் இடது 'சிந்தனையாளர்' ஒருவர் மற்றொரு தேசிய இனத்தோடு சேருவது பிரச்சணையில்லை யாசின் மாலிக்கின் JKLF அமெரிக்காவின் சி.ஐ.ஏ வோடு தொடர்பில் இருக்கிறது அதனை அழைத்து வருவதுதான் பிரச்சணை என்று தன் பங்கிற்கு எழுதியிருந்தார். இந்த புலனாய்வு செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை, எனினும் எழுதியவரின் தருக்க திறமை குறித்து எனக்கு ஓரளவு தெரியும்.//(May 21)
JKLF க்கும், CIA க்கும் தொடர்பிருக்கும் விடயத்தை, நான் மட்டும் முகநூலில் பகிர்ந்து கொள்ளவில்லை. வேறு சிலரும் எழுதியுள்ளனர். யாசின் மாலிக் ஒரு சிஐஏ கைக்கூலி என்று நான் இங்கே கூற வரவில்லை. சிஐஏ தொடர்பில் உள்ள எல்லோரும், கைக்கூலியாக வேண்டிய அவசியம் கிடையாது.

"1991 ம் ஆண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத முகவர் கேபி, சிஐஏ யுடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த தொடர்பின் மூலம், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற நவீன ஆயுதங்கள்,  அமெரிக்காவிடம் இருந்தது கிடைக்கும் என்று, தேசியத் தலைவர் பிரபாகரன் நம்பியிருந்தார்."

இந்தத் தகவலை, அண்மையில் ராஜீவ் கொலை பற்றி புதிய தலைமுறை டிவி ஒளிபரப்பிய ஆவணப்படம் ஒன்றில் கூறியிருந்தனர். (பார்க்க: இராஜிவ்காந்தி கொலையும், விடை காணா வினாக்களும்... http://www.youtube.com/watch?v=VYvAK3q4nAw)  அதற்கு அவர்கள், ராஜிவ் சர்மா எழுதிய "Beyond the Tigers" என்ற நூலை ஆதாரமாக காட்டியிருந்தார்கள். இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், இந்த நூலை சவுக்கு பதிப்பகம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது. சவுக்கு பதிப்பக உரிமையாளர்கள், மிகத் தீவிரமான புலி ஆதரவாளர்கள் என்பது, தமிழ் இன உணர்வாளர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.    

"சிஐஏ க்கும், புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கும் தொடர்பிருந்ததாக" எழுதிய ராஜீவ் சர்மா, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட சவுக்கு பதிப்பகம், அதனை பலர் அறிய பகிரங்கப் படுத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆகியன, புலிகளை ஆதரிப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்க வேண்டும். இது குறித்து, "வல்லவன் உதயராஜ்" தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளாரா என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். ராஜீவ் சர்மா, சவுக்கு பதிப்பகம், புதிய தலைமுறை ஆகியவற்றின் "தர்க்க திறமை" குறித்தும் அவர் கேள்விக்குட்படுத்தி இருந்தால் அவரது நேர்மையை பாராட்டலாம்.  

புலிகளுக்கும், சிஐஏ க்கும் இடையில் கூட தொடர்பு ஏற்படலாமென்றால், JKLF க்கும், CIA க்கும் இடையில் தொடர்பிருக்க முடியாதா? அந்தப் பிராந்தியத்தில், சிஐஏ ஊடுருவல் அதிகமாக இருப்பதை, சம்பந்தபட்ட உளவு நிறுவனம் பல தடவைகள் உறுதிப் படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ க்கும், சிஐஏ க்கும் இடையிலான தொடர்பு உலகறிந்த இரகசியம். ஆரம்பத்தில், பாகிஸ்தானில் தளமமைத்திருந்த JKLF இயக்கம் விரும்பினால், சிஐஏ யுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் இலகுவான காரியம். சிஐஏ யுடனான உறவு குறித்து, காஷ்மீர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அது குறித்தும், நான் ஏற்கனவே முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தேன்:

  • //யாசின் மாலிக் விடயம் தொடர்பாக, இன்று எனது காஷ்மீர் நண்பருடன் நீண்ட நேரம் உரையாடினேன். அவர் ஒரு JKLF ஆதரவாளர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர், நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருந்தார். நாங்கள் இருவரும், மூன்று வருடங்களாக ஒரே அகதிமுகாமில் வசித்துள்ளோம். ஐரோப்பிய நாடொன்றில் நிரந்தரமாக தங்கி விட்ட படியால், தற்போது அரசியலில் அதிக நாட்டம் அற்றவராக வாழ்கிறார். இன்று அவரிடம், JKLF க்கும், சிஐஏ க்கும் இடையிலான தொடர்பு குறித்து மீண்டும் விசாரித்தேன். அந்த தொடர்பு குறித்து, காஷ்மீர் மக்கள் யாரும் கவலைப்படவில்லை என்பதை, அவரின் பதிலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களைப் பொறுத்தவரையில், காஷ்மீர் சுதந்திர நாடாவதற்கு அமெரிக்கா உதவினால், அதையிட்டு மகிழ்ச்சி அடையும் நிலையில் உள்ளனர்.

  • யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற நிலைமை தான், காஷ்மீர் தேசியவாதிகள் மத்தியில் உள்ளது. இதனை நாங்கள், புலி ஆதரவாளர்களின் அரசியல் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில், அமெரிக்கா எப்படிப்பட்ட ஏகாதிபத்தியமாகவும் இருந்து விட்டுப் போகட்டும். இலங்கையில் அமெரிக்கா தலையிட்டு, தமிழீழம் வாங்கிக் கொடுக்கும் என்றால், அதனை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். அதனால் தான், எமக்குத் தெரிந்த தமிழ் தேசியவாதிகள் யாரும் அமெரிக்காவை எதிர்ப்பதில்லை. அதே நிலைமை தான் காஷ்மீரிலும் காணப்படுகின்றது. பாகிஸ்தான், அமெரிக்காவின் உதவியை பெறுவதைப் போல, நாளை காஷ்மீர் சுதந்திர நாடான பிறகும், அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப நடந்து கொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இந்தியா என்ற பலமான நாட்டை எதிர்த்து நிற்பதற்கு, அமெரிக்க ஆதரவு அவசியம் என்று நினைக்கிறார்கள். அதுவே காஷ்மீர் தேசியவாதிகளின் அரசியல் நிலைப்பாடு.// (Kalaiyarasan Kalai, May 24)
"JKLF க்கும், CIA க்கும் தொடர்பிருக்கும் விடயம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது" என்பதை, அவதூறை எழுதியவரே ஒப்புக் கொள்கிறார். ஆனால், "ஒருவரின் தர்க்கத் திறமை" என்ற, பகிரப்பட்ட தகவலுடன் எந்தவித தொடர்புமற்ற சங்கதியை கொண்டு வந்து, நான் எழுதியது உண்மை இல்லை என்று நிரூபிக்க முனைகிறார். (இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதுவது தான் அவரது தர்க்கத் திறமை.) அதாவது, அவர் ஒருக்காலும் அறிந்திராத, புதிரான விடயத்தை, அவரது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால், அதிலே தோல்வியடைந்துள்ளார். எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், "வல்லவன் உதயராஜ்" என்ற நண்பரின் புரிந்து கொள்ளும் தன்மை எந்தளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்பதை, அவரே குட்டிக் கதை ஒன்றின் மூலம் தெளிவு படுத்தி விடுகிறார். அந்த நண்பர் எனக்காக எழுதிய குட்டிக் கதை, முரண்நகையாக அவரது அறியாமையை படம்பிடித்துக் காட்ட உதவியுள்ளது:
  • //ஒருநாள் பார்வையற்ற‌ வழிப்போக்கன் ஒருவன் ஒரு கிராமத்தின் வழியாக சென்றுக் கொண்டிருந்தான், தொடர்ச்சியாக நடந்து களைப்படைந்திருந்த அவன், கொஞ்சம் இளைப்பாறலாம் என்று ஒரு வீட்டின் திண்ணையில் போய் அமர்ந்தான், அமைதியாக அமர்ந்திருந்த போது தான், வீட்டின் உள்ளிருந்து அழுகைச் சத்தம் வருவதை அவன் கவனித்தான். அப்போது திண்ணையில் அருகில் இருந்தவரிடம் வீட்டுக்குள் என்ன அழுகைச் சத்தம் என்று வினவினான்.அருகிலிருந்தவன், இந்த‌ வீட்டில் குழந்தை இறந்து விட்டது, அதனால் அக்குழந்தையின் தாய் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் என்று பதிலளித்தான்."குழந்தை இறந்து விட்டதா? எப்படி இறந்தது" என்றான் பார்வையற்றவன். "அந்த பிள்ளையின் அம்மா பால் கொடுத்தாள், அப்போது இறந்து விட்டது" என்றான் இன்னொருவன். "பால் என்றால் எப்படியிருக்கும்" என்று கேட்டான் பார்வையற்றவன். எப்படி சொல்வது என்று யோசித்து "வெள்ளையாகயிருக்கும்" பதிலளித்தான் இன்னொருவன். "வெள்ளை என்றால் எப்படியிருக்கும்?" மீண்டும் கேட்டான் பார்வையற்றவன். மறுபடியும் நன்றாக யோசித்து "வெள்ளை என்றால் கொக்கு போல இருக்கும்" என்றான் இன்னொருவன். "கொக்கு என்றால் எப்படி இருக்கும்" என்று கேட்டான் குருடன். இப்போது கடுப்பாகிவிட்டது இன்னொருவனுக்கு, இருந்தாலும் கோபத்தை அடக்கிக் கொண்டு இப்படியிருக்கும் என்று கையை கொக்குபோல வளைத்துக் காண்பித்தான்.அதை தொட்டுப் பார்த்துவிட்டு அந்த குருடன் சொன்னானாம், "ஏன்யா இப்படியொரு வஸ்துவை குழந்தை வாய்க்குள் திணித்தால் குழந்தை இறக்காமல் என்ன செய்யுமாம்?"//

"வல்லவன் உதயராஜ்" என்ற நண்பரின் நிலைத் தகவலை வாசித்த நேரம், அவரது பிரச்சினை வேறு என்பது புரிந்தது. அதாவது, சிஐஏ க்கும் JKLF க்கும் இடையில் தொடர்பிருப்பது அவருக்கு நெருடலாகப் படவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பகிரங்கமாக ஆதரிக்கும் தமிழினவாதிகளுக்கு அது இனிப்பான செய்தி தான். ஆனால், அவரது கண்ணில் முள்ளாக துருத்திக் கொண்டிருந்த வேறொரு தகவலுக்கு மட்டுமே, அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கிறார். இது தான் அந்தத் தகவல்:

  • //ஏனெனில் இவரேதான் சில நாட்களுக்கு முன்பு சிங்கள பெளத்த வெறியர்களான 'பெளத்த பல சேனா'வோடு சீமானுக்கு தொடர்பிருக்கிறது என்று சொல்லி அதனை தனது தருக்க திறமையில் வாயிலாக நிறுவியிருந்தார், அதாவது சிங்கள இனவெறியர்கள் 'பெளத்த பல சேனா' மராட்டியத்தின் 'சிவசேனா'வோடு தொடர்பில் இருக்கிறது, சீமான் சிவசேனாவோடு 'நெருங்கிய' தொடர்பில் இருக்கிறார், எனவே பெளத்த பல சேனாவுக்கு சீமானுக்கும் தொடர்பு இருக்கிறது, என்று எழுதியிருந்தார்.// (Vallavan Udayaraj, May  21)

இந்த தகவல் ஒரு திரிபு படுத்தல் என்பதை, முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். நான் முகநூலில் பகிர்ந்து கொண்ட பத்திரிகைச் செய்திகளை தான் அவர் குறிப்பிடுகின்றார். "இந்தியாவில் சிவ சேனா, நரேந்திர மோடி நடைமுறைப் படுத்திய கிராமிய அபிவிருத்திக் குழு போன்ற கட்டமைப்பை, இலங்கையில் உருவாக்கப் போவதாக பொதுபல சேனா ஒரு தடவை அறிவித்திருந்தது." இது ஒரு பத்திரிகைச் செய்தி. உண்மையில், வேறு ஒரு பத்திரிகைச் செய்தி, நண்பரை அதிகளவில் பதற்றமடைய வைத்துள்ளது. ஆனால், அதனை தனது வசதிக்கேற்ப திரிபுபடுத்தி, பதற்றத்தில் முற்றிலும் தவறான தகவலாக எழுதி உள்ளார். 

இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் வலதுகரமாக திகழும் இனவாத அமைச்சரான விமல் வீரவன்ச, சிவ சேனாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக, பொதுபல சேனா செயலதிபர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த தகவலை நான் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அந்த செய்தி இது தான்:

  • //The Bodu Bala Sena (BBS) today claimed that Minister Wimal Weerawansa may have links with Shiva Sena in India. BBS general secretary the venerable Galagoda Aththe Gnanasara thero said that the Minister’s wife is working with a Buddhist monk in Padukka who is funded by the Shiva Sena.// (http://colombogazette.com/2013/05/13/bbs-suspects-wimal-shiv-sena-links/)

அந்த தகவலை பகிர்ந்து கொண்டதுடன் நில்லாது, சீமானுக்கும் சிவ சேனாவுக்கும் இடையிலான தொடர்பையும் நினைவுபடுத்தி இருந்தேன். என் மீது அவதூறு செய்யும் அவசரத்தில், "வல்லவன் உதயராஜ்" என்ற நண்பர், இவ்விரண்டு தகவல்களையும் மறுத்துரைக்க மறந்து விட்டார். அதுவே, அவர் ஆதரிக்கும் இனவாதிகளின் சுயரூபத்தை மீண்டும் உறுதிப் படுத்த உதவியுள்ளது.  ஏற்கனவே, அவருக்கு பதிலளிக்கும் வகையில், முகநூலில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தேன்:


  • //சிவ சேனாவுக்கும், இலங்கையில் சிங்கள இனவாத அமைச்சரான விமல் வீரவன்சவுக்கும் தொடர்பிருக்கும் தகவலை நான் வெளியிட்ட பின்னர், பதற்றமடைந்துள்ள "நாம் தமிழர் ஆதரவாளர்கள்", சிவசேனாவுக்கும் சீமானுக்கும் இடையிலான தொடர்பை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். மும்பையில் 13/02/2012 அன்று, சீமான் சிவ சேனாவின் தேர்தல் பிரச்சார மேடையில் தோன்றினார். தாராவியில் உள்ள 178 வார்டில், பாரதிய ஜனதா, சிவசேனா, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் உமேஷ் ஜெயவந்த் மகாலேக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக்கொண்டார். ஒரு காலத்தில் தமிழர்களை மும்பையிலிருந்து துரத்த வேண்டுமென இயக்கம் நடத்திய, சிவ சேனா இயக்கத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன் என, வெளிப்படையாக தமிழர் என்கிற பெயரில் இயக்கம் நடத்தும் சீமான் சொல்வதை என்னென்பது? சீமான் இலங்கை சென்று, சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இனம் இனத்தோடு தானே சேரும்?// (Kalaiyarasan Kalai, May 22)

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை. இதற்கு எம் கண் முன்னாலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. சிங்கள இராணுவத்தை எதிர்த்து கடுமையாக போரிட்ட புலிகளின் தலைவர்களான, கருணா, பிள்ளையான், கேபி, தயா மாஸ்டர், தமிழினி என்று ஒரு பெரிய பட்டாளமே, இன்று மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று, பத்து வருடங்களுக்கு முன்னர் யாராவது சொல்லியிருந்தால், அது அன்று காமெடியாக தெரிந்திருக்கும். 






இதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:

தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்
இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

Wednesday, September 19, 2012

சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

[தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!]
(மூன்றாம் பாகம்)

அப்பாவி  சிங்களவர்களுக்கு அடித்ததை நியாயப் படுத்தி, அதை நினைத்து பெருமைப் படுபவர்கள், உண்மையில் தாங்கள்  பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொள்ளும், தமிழ் மக்களை  தனிமைப் படுத்துகின்றனர் என்பதை உணர்வதில்லை. இந்த அறியாமையை எதிரி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கும் எமது தவறுகளை, எதிரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அபாயகரமானது. ஏற்கனவே, நாங்கள்  இதனை ஈழத்தில் பார்த்து விட்டோம். 

புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில்  கொல்லப் பட்ட சிங்கள மக்கள் பற்றி, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து தான், சிறிலங்கா அரசு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை திரட்டியது. சர்வதேச சமூகத்திற்கும் அதனை முதன்மைப் படுத்தி  பிரச்சாரம் செய்ததன்  மூலம், புலிகள் இயக்கத்தை  பயங்கரவாத இயக்கங்களில் பட்டியலில் சேர்க்க வழி வகுத்தது. புலிகளும், தமிழர்களும் எத்தனை வகையான நியாயமான காரணங்களை அடுக்கிய போதிலும், சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. சிங்கள பொது மக்கள் கொலை செய்யப்பட்ட தாக்குதல்களுக்கு, புலிகள் உரிமை கோரவில்லை. ஆனால், சர்வதேச சமூகம் அதை  நம்பத் தயாராக இருக்கவில்லை. மறுபக்கத்தில், புலி ஆதரவு தமிழ் ஊடகங்களில், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் படுவதையும், சர்வதேச சமூகம் அவதானித்து வந்தது.  இருப்பினும், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், புலிகள் தமது போக்கை மாற்றிக் கொண்டால், மன்னித்து விட தயாராக இருந்தன. அதாவது, சிங்களப் பொது மக்கள் தாக்கப் பட மாட்டார்கள் என்று உறுதிமொழி கொடுத்திருந்தால், புலிகளின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டிருக்கும். (E.U. may decide to list LTTE as ‘terrorist’ by Friday, May 17th, 2006,        http://transcurrents.com/tamiliana/archives/169)  

சர்வதேச சமூகத்திற்கு புலிகள் எந்த உறுதிமொழியையும் கொடுக்காத சந்தர்ப்பத்தை, சிறிலங்கா அரசு சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது.  தமிழகத்து தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரான சதிவலையும், அவ்வாறே பின்னப் படுகின்றது. தமிழினவாதிகளின் சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதலை சரியென்று, நியாயப் படுத்தி பேசுகிறவர்கள் யார்? தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆதரிக்கலாம். ஈழத்திலும் ஒரு சிறு தொகையினர் ஆதரிக்கலாம். சிங்களவர்களை விட்டு விடுவோம். இந்தியாவில் பிற மாநில மக்கள் ஆதரிப்பார்களா? பிற நாடுகளின் மக்கள் ஆதரிப்பார்களா? ஆக மொத்தம், குறிப்பிட்டளவு தமிழினவாத ஆதரவாளர்களைத் தவிர, வேறெங்கும் அனுதாபத்தை பெற முடியாத தாக்குதல்கள், இறுதியில் சிங்கள அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கே உதவப் போகின்றது. பூண்டி மாதா கோயிலில் சிங்கள யாத்திரீகர்கள் விரட்டப்பட்ட செய்தியானது, வட இந்தியப் பத்திரிகைகளில் மட்டுமல்லாது, வாஷிங்டன் போஸ்ட்டில் கூட பிரசுரமானது.  ஆனால், எந்தவொரு அந்நிய ஊடகமும், அந்தச் செயலை நியாயப் படுத்தி எழுதவில்லை. (Sri Lankan Tamils protest attack on pilgrims in southern Indian state of Tamil Nadu,  http://www.washingtonpost.com/world/asia_pacific/sri-lankan-tamils-protest-attack-on-pilgrims-in-southern-indian-state-of-tamil-nadu/2012/09/06/27208a8a-f813-11e1-a93b-7185e3f88849_story.html)  


"மூன்றில் இரண்டு பங்கு சிங்களவர்கள் ராஜபக்சவுக்கு ஓட்டுப் போட்டுள்ளதால், சிங்கள மக்களை தாக்குவதில் தப்பில்லை," என்பது தமிழினவாதிகளின் வாதம். இவர்களது இலங்கை அரசியல் பற்றிய சிறுபிள்ளைத் தனமான அறிவு நகைப்பிற்கிடமானது. ராஜபக்சவுக்கு தமிழ்ப் பிரதேசங்களிலும் ஓட்டுக்கள் போடப் பட்டன.  அதே நேரம், சில சிங்கள மாவட்டங்களில், ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு அதிகப் படியான ஓட்டுகள் கிடைத்துள்ளன.  ஜனாதிபதித் தேர்தலை புலிகள் பகிஷ்கரித்திருக்கா விட்டால், இன்று  ராஜபக்சவுக்கு பதிலாக ரணில் ஜனாதிபதியாகி இருப்பார். இன்றைய தமிழினவாதிகள் கூறும் நியாயம், இனக்கலவரங்களின் போது   தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களை கொல்வதற்கு,  சிங்கள இனவாதிகள் கூறிய  நியாயத்தை ஒத்திருக்கிறது. வட -கிழக்கு தமிழர்கள், தமிழீழம் கோரும் கூட்டணிக்கு வாக்களித்ததை சுட்டிக் காட்டி, தென்னிலங்கை வாழ் தமிழர்களை அடித்து விரட்டினார்கள்.  குறிப்பாக 1977 ம்  ஆண்டு  கலவரம் வெடிப்பதற்கு, சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) அமோக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. அன்று கூட்டணிக் கட்சி, தமிழீழப் பிரகடனத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டிருந்தது.

பலவீனமான இலக்குகளான, இஸ்ரேலிய பொது மக்களை தற்கொலைக் குண்டு வைத்து தாக்கும் பாலஸ்தீன இயக்கமான ஹமாஸ் என்ன கூறுகின்றது? "பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேலிய அரசு, ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தான் தெரிவு செய்யப் பட்டது. இதன் மூலம், இஸ்ரேலிய மக்களும் அரசின் குற்றத்தில் பங்குபெறுகின்றனர். ஆகையினால், இஸ்ரேலிய மக்களைக் கொல்வதும்   நியாயமானது தான்."  அமெரிக்கர்கள் மேலான தாக்குதல்களுக்கு,  அல் கைதா கூறும் நியாயமும் அது தான். அதாவது, "அமெரிக்க அரசை மக்கள் ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்கின்றனர். ஆகையினால், அரசின் செயல்களில் அவர்களுக்கும் பங்குண்டு." ஜனநாயகத் தேர்தல் ஒரு கண்துடைப்பு நாடகம் என்பதும், ஓட்டுப் போடும் மக்களிடம் அதிகாரம் இல்லை என்பதும் இனவாதிகளுக்கு புரிவதில்லை.  அதற்காக, இஸ்ரேல், அமெரிக்கா, சிறிலங்கா அரசுகள் செய்தது எல்லாம் நியாயம் என்று அர்த்தப் படுத்த முடியாது. இந்த மூன்று அரசுகளும் இனப்படுகொலை செய்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. இந்த மூன்று நாடுகளிலும், ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் அடிப்படை  ஒற்றுமை ஒன்றுண்டு.   மூன்றுமே மேற்கத்திய நலன் சார்ந்த நாடுகள். சந்தைப் பொருளாதாரத்தை கை விடாத நாடுகள். ஜனநாயக தேர்தல் விளையாட்டை, நன்றாக  ஆடத் தெரிந்த நாடுகள். சிங்களவர்கள் எல்லோரும், தமிழர்களை அழிக்கும் நோக்குடன் ராஜபக்சவுக்கு ஓட்டுப் போட்டதாக நினைப்பது, எமது அறியாமையைத் தான் காட்டுகின்றது. இனவாதம் மட்டுமே தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருந்தால், பெரும்பான்மை மக்கள் ஜாதிக  ஹெல உறுமய (JHU)  கட்சிக்கு தான் வாக்களித்திருக்க வேண்டும். இனப் பற்றை விட, நாட்டில்  வேறு பிரச்சினைகளும் மக்களுக்கு  இருக்கின்றன என்பதை, இனவாதிகள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் உழைக்கும் வர்க்கம், அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நேரம்,  தமிழினவாதிகள் யாரும் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள். சிங்கள இனவாதிகளும் அவ்வாறு தான், சிங்கள உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆதரிப்பதில்லை. 

முப்பது வருடங்களாக, இலங்கை அரசு, தேசப் பாதுகாப்பை காரணமாக காட்டி சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. போர் நடந்த காலத்தில், அத்தியாவசிய பாவனைப் பொருட்களின்  வரி உயர்த்தப் பட்டாலும், யாரும் முணுமுணுக்கவில்லை. போர் முடிந்த பின்னர், சிங்கள மக்களின் கவனம் திசை திரும்புகின்றது. மக்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை முக்கியமாகக் கருதுகின்றனர். எரிபொருள் விலையேற்றம், கல்வியை தனியார்மயமாக்கல், போன்றவற்றுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடி வருகின்றனர். இதனால், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு ஆதரவு குறைந்து வருகின்றது. முன்னரைப் போல, "புலி வரும்" என்று பூச்சாண்டி காட்டி ஏமாற்ற முடியாது. அதனால், அரசு போராடும் மக்களை அடக்குவதற்காக, பொலிஸ் அடக்குமுறைக் கருவியை ஏவி விடுகின்றது. சிங்கள மக்களுக்கும், சிங்கள காவல் துறைக்கும் இடையில் மோதல்கள் வெடிக்கின்றன. ராஜபக்சவின் சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, சாதாரண சிங்கள மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக ஏங்குகின்றனர். அரபு நாடுகளில் நடந்ததைப் போல, மக்கள் எழுச்சி ஏற்படுமோ என்று அரசே அஞ்சுகின்றது.

இப்படியான நெருக்கடியான தருணத்தில், ராஜபக்சவை தூக்கி நிறுத்துவது யார் என்று நினைக்கிறீர்கள்? உடுக்கை இழந்தவன் கை போலே, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள்) ராஜபக்சவின் கூட்டாளிகளான தமிழகத் தமிழினவாதிகள், சந்தர்ப்பம் பார்த்து, அப்பாவி சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இந்த செய்தி சிங்கள தேசமெங்கும் பரவும். ஒட்டு மொத்த தமிழர்களும், ஒட்டு மொத்த சிங்கள இனத்தின் மீது வன்மம் கொண்டிருப்பதாக, சாதாரண சிங்கள மக்கள் நம்புவார்கள். போதாக்குறைக்கு, தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் புலிகளே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக அரசு அறிவிக்கும். இதனால், சிங்கள மக்கள் தமது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக ராஜபக்சவை ஆதரிப்பார்கள். ராஜபக்சவுக்கு ஆதரவு தேடிக் கொடுப்பது தான் தமது நோக்கம் என்றால், தமிழினவாதிகள் அதனை வெளிப்படையாக கூற வேண்டும்.

ஒரு பேச்சுக்கு, ராஜபக்சவுக்கும், தமிழினவாதிகளுக்கும் இடையில் நேரடியான தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று வைத்துக் கொள்வோம். சிங்கள மக்கள் ராஜபக்ச அரசை எதிர்த்து போராடும் நேரத்தில் எல்லாம், தமிழ்நாட்டில் சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் படுகின்றனர். அது எப்படி? ஒரு தடவை நடந்தால் தற்செயல். இரண்டு, மூன்று தடவை நடந்தால் திட்டமிட்ட செயல். இலங்கையின் இன்றைய நிலவரம் என்னவென்று, இந்த தமிழின வாதிகளுக்கு தெரியுமா? சிங்கள அறிவுஜீவிகள், சிங்கள மக்களின் எழுச்சி ஏற்பட்டு, எந்த நேரமும் அரசாங்கம் கவிழலாம் என்று,  ராஜபக்ச அரசு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. (The strike of university academics is an indirect plot to engineer a regime change. It is similar to what happened in Indonesia where the Suharto’s government was ousted, State Intelligence Service reports said. http://www.dailynews.lk/2012/09/17/news02.asp) 

2011, ஜனவரி முதல் மே மாதம் வரையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் பணியாற்றும் சிங்களத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு தொழிலாளி கொல்லப் பட்டார். இதனால், சிங்கள உழைக்கும் மக்கள் ராஜபக்ச அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ள ஆரம்பித்தனர். 2011 ஜூலை மாதம், சிங்கள ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள்.   அதே நேரம், தமிழ்நாட்டில் என்ன நடந்தது? 2011, ஜனவரி, சென்னை மகாபோதி தாக்கி உடைக்கப் பட்டது. அங்கிருந்த புத்த பிக்குகளும் தாக்கப்பட்டனர். 2011, ஆகஸ்ட் மாதம், சென்னையில் சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் பட்டனர்.  இந்த வருடமும், ஒரே மாதிரியான நாடகம் மீண்டும் அரங்கேறியுள்ளது.  ஸ்ரீ லங்காவில், அரசு கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக,   மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  ஆசிரியர் , மாணவர் போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நெருக்கடியான தருணத்தில், ராஜபக்ச அரசு கவிழ விடாது  தூக்கி நிறுத்துவது, சீமான், வைகோ போன்ற தமிழக நண்பர்களின் கடமை அல்லவா? 2012, செப்டம்பர்  முதல் வாரம்,  தமிழ்நாட்டில் பூண்டி மாதாவை தரிசிக்க சென்ற சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் பட்டனர். இந்த தாக்குதல் நடந்து, ஓரிரு தினங்களில், மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை திறப்பதாக அரசு அறிவித்தது. 

The Sunday Times பத்திரிகையில் நகைச்சுவையாக எழுதப்பட்ட பத்தி ஒன்றிலிருந்து:
Do you know who else you are helping, Jayalalithaa? Now, don’t be surprised about this but the other person you are helping by indulging in your anti-Sri Lanka antics is of course Mahinda maama himself!
What you don’t realise is that Mahinda maama has found it hard to sail the ship of state smoothly in recent months. Students are protesting about exams, workers are protesting about salaries, motorists are protesting about fuel, and everyone else is protesting about power cuts. 
(Mahinda Jai Ho, Jaya hoo-hoohttp://www.sundaytimes.lk/120909/columns/mahinda-jai-ho-jaya-hoo-hoo-11678.html)

ராஜபக்சவுக்கும், சீமான், வைகோ போன்ற தமிழினவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை, இன்னமும் நம்ப மறுப்பவர்கள் மேற்கொண்டு வாசிக்கவும்.  தமிழ்நாடு வரும் "சிங்களவர்கள்", எப்போது வருகிறார்கள்? எந்த இடத்திற்கு வருகிறார்கள்?  இது போன்ற தகவல்களை யார் கொடுக்கிறார்கள்? உண்மையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான  சிங்களவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த தகவலைப் பெற, நீங்கள் அதிகம் சிரமப் படத் தேவையில்லை. சென்னையில், திருச்சியில் உள்ள சுற்றுலா முகவர்கள், வர்த்தகர்களிடம் கேட்டால் சொல்வார்கள். பூண்டிமாதா தேவாலயத்திற்கு வழிபட சென்ற யாத்திரீகர்களில் பெரும்பான்மையானோர், நீர்கொழும்பை சேர்ந்த கிறிஸ்தவ தமிழர்கள். அவர்களின் முன்னோர்கள் தமிழ் நாட்டில்  இருந்து சென்று குடியேறிவர்கள். சிலர் இப்போதும், தமிழ் நாட்டில் உள்ள உறவினருடன் தொடர்பு வைத்துள்ளனர்.  அவர்களைத் தான், அதாவது தமது தொப்புள்கொடி உறவுகளைத் தான், நமது தமிழினவாதிகள் வீராவேசமாக தாக்கி இருக்கிறார்கள். 

கிறிஸ்தவ யாத்திரீகர்கள் வருவதற்கு, சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர், 150 சிங்கள புத்த பிக்குகள், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். யாருக்காவது தெரியுமா? அந்த புத்த பிக்குகள், எந்த வித பிரச்சினையுமின்றி, சென்னையில் உள்ள மகாபோதி விகாரைக்கு சென்றனர். அவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வரையில், வழியில் ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை. இலங்கையில் புத்த பிக்குகளின், தமிழர்களுக்கு எதிரான இனவெறி உலகறிந்த விடயம் ஆயிற்றே. தமிழினக் காவலர்கள் யாரை தாக்கியிருக்க வேண்டுமோ, அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு, கிறிஸ்தவ-தமிழ்  யாத்திரீகர்களை தாக்கியதன்  உள்நோக்கத்தை  உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? 
After the ethnic Eelam war came to an end, the Trichy-Colombo sector was patronized by the Sinhala public more than ever. The entry of Christian pilgrims was only a recent phenomenon. For instance, just a week prior to the Christian pilgrims' attack, around 150 Buddhist monks landed in Trichy and proceeded to Chennai in three hired buses. Usually, these monks make it a point to visit the Sri Lanka Maha Bodhi Centre at Kenneth Lane opposite Egmore railway station before going to Buddhist shrines such as Gaya and Sarnath. These pilgrims prefer Trichy, for it offers them an opportunity to visit other pilgrim centres in the region such as Sri Rangam Sri Renganathar temple, Thanjavur Big Temple and Samayapuram Maha Mariamman temple. The immigration officer said these people would continue to visit India for there was no hurdle in the issuance of visas, but they would rather prefer Trivandrum rather than Trichy.
(Attack on Lankans proves costly for airlines, http://m.timesofindia.com/city/madurai/Attack-on-Lankans-proves-costly-for-airlines/articleshow/16377060.cms)
எதிர்கால பொருளாதார திட்டங்களை அமுல் படுத்தவும், ராஜபக்ச அரசுக்கு தமிழினவாத கூட்டாளிகளின் உதவி தேவைப் படுகின்றது. இலங்கையில் தற்பொழுது, சீனாவின் முதலீடுகள்  அதிகரித்து வருகின்றன. முன்னர் என்றுமில்லாதவாறு, சீன அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். அவர்கள் ஒன்றும் சும்மா ஊர் சுற்றிப் பார்க்க வரவில்லை. குறைந்தது பத்து பொருளாதார ஒப்பந்தங்களிலாவது கையெழுத்து போட்டு விட்டுச் செல்கின்றனர். 
(Chinese Defence Minister arrives in Sri Lanka, http://www.colombopage.com/archive_12A/Aug29_1346245150CH.php)
(Cherishing China!http://www.ft.lk/2012/09/12/cherishing-china/
இலங்கைப் பொருளாதாரத்தில் இதுவரை காலமும் நிலவி வந்த, இந்திய, சீன சமன்பாடு இதனால் மாறுபடலாம். இந்திய முதலீடுகள்  குறைந்து கொண்டே சென்றால், இந்தியாவின் பிடி தளர்ந்து கொண்டே போகும். அதனை இந்தியா ஒருக்காலும் விரும்பப் போவதில்லை. சீனாவின் முதலீட்டை நிராகரிக்க முடியாது, அதே நேரம் அயலவனான இந்தியாவையும் பகைத்துக் கொள்ள முடியாது. அதற்கு என்ன வழி? இனவாதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தமிழினவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இந்திய-இலங்கை பொருளாதார உறவை பாதிக்கும். உறவு முழுமையாக துண்டிக்கப் பட்டாலும், ராஜபக்ச அரசுக்கு கவலையில்லை.  இப்படி எல்லாம் நடக்கும் என்று, இந்திய மத்திய அரசுக்கும் தெரியும். அதனால், இந்திய அரசு  ஒரு கட்டத்திற்கு மேல் தமிழினவாதிகளுக்கு சுதந்திரம் கொடுக்க மாட்டாது. 

ராஜபக்ச அரசு, சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வது மட்டுமல்ல, தமிழ் மக்களின் உரிமைகளையும் கொடுக்கப் போவதில்லை. போர் முடிந்து மூன்றாண்டுகளாகியும், ஈழத் தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றது.  இந்திய அரசு வலியுறுத்தும், 13 ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கூட, இலங்கை அரசு மறுத்து வருகின்றது. அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் கட்சிகளும், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எதையும் செய்ய முடியவில்லை. இந்த தருணத்தில், இந்தியா மட்டுமே அழுத்தம் கொடுக்க முடியும்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு வழியில் இந்திய அனுசரணையைக் கோருகின்றது. இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு இந்தியாவை விட்டால் வேறு நாடு இல்லை. அப்படியான சந்தர்ப்பத்தில், சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தால், ஈழத் தமிழரின் தீர்வு எட்டாக்கனியாகி விடும். எந்தவொரு தீர்வையும், "சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்ற ஒரு காரணத்தை கூறி , சிறிலங்கா அரசு  நிராகரித்து விடும். (ஏற்கனவே நோர்வேயின் மத்தியஸ்தம் புலிகளுக்கு சார்பானது என்று கூறி, சிங்கள இனவாத சக்திகள் காட்டிய கடுமையான எதிர்ப்பு இங்கே நினைவு கூறத் தக்கது.) ஆகவே, ராஜபக்சவின் கரத்தை பலப்படுத்துவது மட்டுமல்ல, ஈழத் தமிழருக்கு நிரந்தர தீர்வெதுவும் கிடைக்க விடாமல் தடுப்பதும், தமிழினவாதிகளின் நோக்கமாக உள்ளது.  இதனை இந்தியாவின்  எகானமிக்  டைம்ஸ் பத்திரிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. (Minority rights in Sri Lanka aren’t helped by targeting its visiting civilians,  http://economictimes.indiatimes.com/opinion/editorial/minority-rights-in-sri-lanka-arent-helped-by-targeting-its-visiting-civilians/articleshow/16274681.cms)

இந்தியாவின் பொருளாதார பலத்துக்கு முன்னால், இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். இரு நாட்டு வர்த்தகத்தைப் பொறுத்த வரையில், இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகம். இதனால், இலங்கை வணிகர்களை விட, இந்திய வணிகர்களே அதிக இலாபம் சம்பாதிக்கின்றனர். இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாவதை விட, பத்து மடங்கு அதிகமான பொருட்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாகின்றன. இது பற்றி, தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கம் (NCCI) மிகவும் தெளிவாக கூறுகின்றது:
"இந்தியா- இலங்கை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பெருகி வருகிறது. சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்த இருவழி வர்த்தகம் தற்போது நடைபெற்று வருகின்றது. இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் மதிப்பை விட 8 மடங்கு அதிகமாக இந்தியாவில் இருந்து சரக்குகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அத்துடன் இலங்கையில் இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்து நான்காம் இடத்தில் உள்ளது.
இந்த வணிகம் முதலீட்டில் தமிழகத்தின் பங்கு அபரிமிதமானது. தமிழகத்தின் தொழில் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கையுடனான இந்த தொடர்பு மிக அவசியமானது." (இலங்கை பயணிகளின் அச்சத்தை போக்க வேண்டும்,    http://tnchamber.in/2012/09/ceylone-people/)

இந்தியாவின் முதலீட்டில் கணிசமான பங்கு தமிழகத்தில் இருந்து போகின்றது. உதாரணத்திற்கு, நல்லி சில்க்ஸ் தயாரிக்கும் உடுபிடவைகள், சாரம், சட்டைகளை சிங்களவர்களும் அணிகின்றனர். ஒரு பொருளை இரண்டு மில்லியன் மக்களுக்கு (ஈழத் தமிழர்கள்) விற்பனை செய்வதால் அதிக பணம் கிடைக்குமா? அல்லது பத்து மில்லியன் மக்களுக்கு (சிங்களவர்கள்) விற்பதால் அதிக இலாபம் கிடைக்குமா? தமிழ்நாட்டு முதலாளிகள் எதை விரும்புவார்கள்? (Jaya’s Sri Lanka moves are powerful, but shortsighted, http://www.firstpost.com/politics/jayas-sri-lanka-moves-are-powerful-but-shortsighted-442999.html)
யாத்திரீகர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த, கொழும்புத் தமிழ் வணிகர்கள் பற்றிய செய்தி தமிழ் ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் கூட, தமது வர்த்தகம் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, இலங்கை அரசுடன் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அந்தச் செய்தியை, எந்தவொரு தமிழ் ஊடகமும் (இணையத் தளம் உட்பட) வெளியிடவில்லை.

"தயவு செய்து, இலங்கையர் யாரும் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா போக வேண்டாம், என்ற அறிவித்தலை,   வாபஸ் பெற வேண்டுமென்று," தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் ராஜபக்ச அரசிடம் கெஞ்சியுள்ளனர். சிங்கள யாத்திரீகர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டாம் என்றும், இனிமேல் இந்த மாதிரியான அசம்பாவிதம்  நிகழ விடாது தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும்  வாக்குறுதி அளித்துள்ளனர். இந்தச் செய்தி எந்தவொரு தமிழ் ஊடகத்திலாவது வந்திருக்கிறதா? இதெல்லாம் வராது. அதற்குப் பிறகு, தமிழினவாதிகளின் சாயம் வெளுத்து விடும். அவர்கள் தமிழ்நாட்டு தமிழ் முதலாளிகளிடம் வாலாட்ட மாட்டார்கள். தமிழினவாதிகளின் சிங்கள எதிர்ப்புப் போராட்டம் ஒரு கட்டத்திற்கு அப்பால் நகர முடியாது. இந்திய மூலதனத்திற்கு பங்கம் விளைந்தால், தமிழினவாதிகள் தமிழ் நாட்டில் இருந்தே விரட்டப் பட்டு விடுவார்கள். அதற்குப் பிறகு, கடல்கடந்து இலங்கை சென்று, ராஜபக்சவிடம் அடைக்கலம் கோர வேண்டியிருக்கும். என்ன இருந்தாலும், ராஜபக்ச தமிழினவாதிகளிடம் நிறையவே நன்றிக் கடன் பட்டுள்ளார். தமிழினவாதக் கூட்டாளிகளின் உதவி கிட்டியிரா விட்டால், பிரமாண்டமான இந்திய மூலதனத்தை அசைக்க முடிந்திருக்குமா? 

(முற்றும்) 

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!
2.இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள் 

Monday, September 17, 2012

தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

"வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத ஓரினம், அதே வரலாற்றை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளது." 

தமிழகத்திற்கு செல்லும் சிங்களவர்கள் தாக்கப்படுவது, கடந்த மூன்று வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, 2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழ் நாட்டில் தோற்றுவித்த எதிர்வினைகளின் பலனாக, தமிழ் தேசிய எழுச்சி அலை உருவாகி இருந்தது. வழமையான தமிழ் தேசியவாத கட்சிகள், குழுக்கள் மட்டுமல்லாது, இடதுசாரிக் கட்சிகளும் அந்த எழுச்சிக்கு ஆதரவளித்தன.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை ஆரம்பித்த அமைப்பில் இருந்தது. மார்க்சிச - லெனினிச இயக்கங்களும் முன்னிலையில் கலந்து கொண்டன.  இடது, வலது பேதமற்று அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு, சிறிலங்கா அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர்,  மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய ஆளும் கட்சியான திமுக கூட போராட்டத்தில் குதிக்க வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் புலி எதிர்ப்பாளராக இருந்த ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்தால் ஈழம் வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தார். 

 ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர், தமிழகத்தில் குறைந்திருந்த புலி ஆதரவும் அப்போது சூடு பிடித்தது. பொதுவாக ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்தில் பிறந்திருக்காத புதிய தலைமுறை காலத்தில் போராடிக் கொண்டிருந்த புலிகளை, தமது ஆதர்ச நாயகர்களாக வரித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது. தமிழ் இன உணர்வு, தமிழகத்திற்குப் புதிதல்ல. ஐம்பதுகளில், அறுபதுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினால் உருவேற்றப் பட்ட அரசியல் அது. அன்றைய தமிழ் தேசியத் தலைவர் இன்று, இன்று தமிழ் தேசியத்தின் துரோகியாகியது தனிக் கதை. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது மாதிரி, திமுக தமிழ் உணர்வு ஊட்டி வளர்த்த குழந்தைகள், இன்று வளர்த்தவர்களையே எதிர்த்துக் கொண்டிருக்கிறனர். இது தமிழ் தேசிய சித்தாந்தத்தின் நச்சுச் சுழற்சியா என்பது தெரியவில்லை. 

ஏற்கனவே, ஈழத்திலும்  இதே மாதிரியான வரலாறு நிகழ்ந்துள்ளது. திமுக வின் சகோதரக் கட்சி என்று கருதப் படக் கூடிய, தமிழர் விடுதலைக் கூட்டணி ஊட்டி வளர்த்த குழந்தைகளான புலிகள், ஆயுத பலத்தில் வளர்ந்த பின்னர், கூட்டணிக்  கட்சியை தடை செய்து, அதன்  தலைவர்களையும் அழித்திருந்தார்கள். தீவிரவாதிகளான புதிய தலைமுறையினர், பழைய தலைமுறை தமிழ் தேசியவாதிகளை அரசியல் களத்தில் இருந்து அப்புறப் படுத்தி வருகின்றனர். இது ஈழத்திலும், தமிழகத்திலும் பொதுவான வரலாறாக இருக்கிறது. எதிர்காலத்தில் மூன்றாந் தலைமுறை தமிழ் தேசியவாத இளைஞர்கள், இப்போதுள்ள வைகோ, சீமான், நெடுமாறன்  போன்றோரை இனத் துரோகிகளாக முத்திரை குத்தினால், அதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை. 

வன்னியில் நடந்து கொண்டிருந்த படுகொலைகள் பற்றிய செய்திகளும், அவை ஏற்படுத்திய அதிர்வலைகளும் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது. 83 கலவரத்தின் போதும் இதே மாதிரியான எழுச்சி காணப்பட்டது. ஆனால், அன்றிருந்த உலகம் வேறு, இன்றுள்ள உலகம் வேறு. 83 கலவரச் செய்திகள் , வாய் வழித் தகவல்களாக மட்டுமே பத்திரிகைகள், வானொலிகளில் அறிவிக்கப் பட்டது. ஆனால், இன்று ஒரு தனிநபர் கூட காட்சிகளை பதிவு செய்து அனுப்பி, தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றில் காண்பிக்க முடியும். இது பல இலட்சம் மக்களை நேரடியாக சென்றடைகின்றது. உலக தகவல் தொடர்பு புரட்சியினால் விளைந்த பயன் அது.

தமிழ் ஊடகத் துறை, முழுக்க முழுக்க புலிகளின் தகவல் தொடர்பில் தங்கியிருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் செயற்பட்ட தமிழ் ஊடகங்கள், போரில் பலியாகும், காயமடையும் ஈழத் தமிழரின் அவலங்களை காட்சிப் படுத்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இன்றைய தகலவல் தொடர்பு சமுதாயத்தில் வாழும் தமிழர்களும், ஊடகங்களால் வழிநடத்தப் பட்டனர். ஊடகங்கள், மக்களை உணர்ச்சிவசப் படுத்திய அளவுக்கு, ஈழப் பிரச்சினை பற்றிய அறிவூட்டவில்லை. இதனால் யுத்தம் முடிந்த பின்னர், இனப்படுகொலைக்கு பழிவாங்கும் அரசியலாக பரிணமித்தது. 

முத்துக்குமார் தீக்குளித்த சம்பவம், தமிழக அரசியல்வாதிகளின் கையாலாகத் தனத்தை தோலுரித்துக் காட்டியது. மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் பங்கு பற்றிய எழுச்சியானது, வெகு விரைவில் தமிழக, இந்திய அரசியல் நிறுவனங்களுக்கு எதிராக திரும்பும் சூழல் தோன்றியது. சில வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் நடந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தம், உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருந்தது. சில தீவிரவாத இளைஞர்கள், மேற்கத்திய நாடுகளில் குண்டுகள்  வைக்குமளவிற்கு சென்றமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் அப்படி எல்லாம் நடக்காது என்று, யார் உறுதிமொழி கொடுத்திருந்தாலும், மத்திய அரசு நம்பியிருக்கப் போவதில்லை.

புலிகளை அழிப்பதற்கும், ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்கும், சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவி வருகிறது என்ற தகவலும் தமிழகத்தில் இந்திய அரசுக்கு எதிரான எதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. ஒரு எல்லை தாண்டியிருந்தால், ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம், இந்திய அரச நிறுவனங்களை அடித்து நொறுக்கி இருக்கும். மக்கள் எழுச்சி அடக்கப் பட்டால்,  இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திலும் குதித்திருப்பார்கள். அது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நாடுகளில் நடந்துள்ளன.

உதாரணத்திற்கு, கொசோவோ அல்பேனியர்களுக்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், மாசிடோனியா அல்பேனியர்கள் எழுச்சி அடைந்தனர். விரைவில் அங்கேயும் ஒரு ஆயுதப்போராட்டம் வெடித்தது. ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இன உணர்வு காரணமாக நெருக்கமானவர்கள். இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் தமிழர்கள், இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ மாட்டார்களா? நாங்கள் நினைக்கிறோமோ இல்லையோ, இந்திய மத்திய அரசில் உள்ளவர்கள் அப்படித் தான் சிந்தித்து இருப்பார்கள். ஆனால், நிலைமை அந்தளவு தூரம் தீவிரமடைய விடாமல் தடுத்த சக்தி எது? 

இந்த தருணத்தில் தான், இந்திய மத்திய அரசு, தமிழக  மாநில அரசு, RAW  என்பன விழித்துக் கொண்டன. தமிழ் தேசிய எழுச்சிக்குள் உளவாளிகளை ஊடுருவ வைத்து, போராட்டத்தை திசை திருப்பி, நீர்த்துப் போக வைக்க திட்டம் தீட்டின.  யாராலும் ஊடுருவ முடியாத, மிகவும் இரகசியமான, கட்டுக்கோப்பான இயக்கம்  என்று பெயரெடுத்த புலிகள் அமைப்புக்குள்ளேயே அரச உளவாளிகள் ஊடுருவி இருந்தனர். தமிழ்ச்செல்வனின் மரணத்திற்குப் பின்னர், ஊடகத் தொடர்பாளராக இருந்த இளந்திரையன் ஒரு அரச உளவாளி என்ற உண்மை, கிளிநொச்சி வீழ்ந்த பின்னர் தான் தெரிய வந்தது. அப்படியாயின், அரசாங்கம்  ஒரு வெகுஜன அமைப்பிற்குள் உளவாளிகளை அனுப்புவது மிகவும்  இலகுவான விடயம். அதற்காக, நாங்கள்  ஆதாரமின்றி யாரையும் கை காட்ட முடியாது. அதே நேரம், அப்படி நடக்காது  என்று மறுக்கவும் முடியாது.

உளவாளிகளை வெளியில் இருந்து அனுப்பத் தேவையில்லை. உள்ளிருப்பவர்களை விலைக்கு வாங்கலாம். பேச்சுவார்த்தைக் காலங்களில், புலிகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது. அப்பொழுது விடுவிக்கப் பட்டு, வன்னிக்கு அனுப்பப் பட்ட புலி உறுப்பினர்கள் பலர், அரச உளவாளிகளாக மாறியிருந்ததை யாரும் சந்தேகிக்கவில்லை. இது எல்லா நாட்டுப் போர்களிலும் நடக்க முடியும். எதிரிகளினால் சிறையில் அடைக்கப் பட்டவர்கள், அங்கு வைத்து மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பார்கள். அதனால் தான், ஸ்டாலின் காலத்தில், நாஜிகளின் சிறைகளில் இருந்து விடுவிக்கப் பட்ட முன்னாள் செம்படை வீரர்களை புதிய சிறைகளில் அடைத்து வைத்தனர். 

வைகோ சட்டவிரோதமாக இலங்கை சென்று, பிரபாகரனை சந்தித்து விட்டு திரும்பி வந்தவர். (இந்தியாவில் தடை செய்யப்பட்ட) புலிகளோடு தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலேயே, தடா சட்டத்தில் கைது செய்யப் பட்டவர். அப்படிப் பட்ட ஒருவர், "ஐந்தாம் கட்ட ஈழப் போர்" அறிவித்த பின்னரும், எந்தப் பிரச்சினையுமின்றி சுதந்திரமாக உலாவ முடிகின்றது. இந்த குறுகிய காலத்திற்குள், இந்திய அரசு திருந்தி விடவில்லை. மாவோயிஸ்ட், ஜிகாத் போராட்டங்களுடன் தொடர்பான நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களில் பலருக்கு மீள முடியாத சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. விடுதலை செய்யப் பட்டாலும் பழைய அரசியலை தொடர முடியாது. அந்தளவு தூரம் போகத் தேவையில்லை. இறுதிப்போரில் தப்பி, தமிழ்நாட்டில் அகதியாக அடைக்கலம் கோரிய புலிகளையும், அவர்களது உறவினர்களையும் தனிமைச் சிறையில் போட்டு வருத்துகின்றது.

வைகோ மட்டும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" அறிவித்து விட்டு தைரியமாக உலாவ முடிகின்றது.  பாஜக, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் போன்ற, இந்து மதவெறி பாசிச  சக்திகளுடன் வைகோ கை கோர்த்துள்ள விடயம், ஒன்றும் இரகசியமானதல்ல.  குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த, நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இதை எல்லாம், அவரே பெருமையுடன் கூறிக் கொள்கிறார். இந்துத்துவ வாதிகளுடன் கூட்டுச் சேர்வதென்றால், அவர்களது அகண்ட பாரதக் கனவுக்கும் ஒத்துழைக்க வேண்டும். இந்து பாசிஸ்டுகளின் அகண்ட இந்து பாரதம், "சீதையை சிறை வைத்திருந்த சிங்களவர்களின் சிறிலங்காவையும்" உள்ளடக்கியது.

வைகோ நடத்தப் போகும் ஈழப் போர், தமிழர்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால், அவரது இந்துக் கூட்டாளிகளை நோக்கத்திற்கு முரணானது ? அண்மையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநில அரசு, யாத்திரீகர்களுக்கு சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடம், மற்றும் பல இராமாயண ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் பயணக் கட்டணத்தில் அரைவாசியை அரசு கொடுக்கிறது. ('Hindutva behind subsidy to visit Hindu temples', http://zeenews.india.com/news/madhya-pradesh/hindutva-behind-subsidy-to-visit-hindu-temples_768557.html) ஏற்கனவே, இந்து மதம் புத்தரையும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறுகின்றது.  ஆகவே, "இந்துக்கள்" என்ற ஒரே குடையின் கீழ் சிங்களவர்களையும்  இணைத்துக் கொள்வதில், இந்து பாசிஸ்டுகளுக்கு தடையேதும் கிடையாது. இந்து பேரினவாதிகளின் எதிர்காலத் திட்டங்கள் எமக்குத் தெரிந்தளவுக்கு, வைகோ, சீமானுக்குத் தெரியுமா? எல்லாம் தெரிந்து கொண்டு தான் ஒத்துழைகிறார்களா? 

இலங்கைக்கு, இந்திய சுற்றுலாப்பயணிகள் செல்வதை ஊக்குவிக்கும் பாஜக, சிங்கள யாத்திரீகள் இந்தியா வருவதையும் ஊக்குவித்திருக்காதா? மகிந்த ராஜபக்ச பயணம் செய்யவிருக்கும் சாஞ்சியும், மத்திய பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது. வைகோ இது தொடர்பாக, பாஜக விடம் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். உண்மை தான். ஆனால், அதையும் மீறி ராஜபக்ச வந்தால், வைகோ, பாஜக வுடனான உறவை துண்டித்துக் கொள்வாரா? வைகோவின் பாஜகவுடனான உறவு, வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஈழத் தமிழருக்கு கொடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளை, சிங்கள இராணுவம் சுற்றி வளைத்திருந்தது. தமிழ் மக்களின் போராட்டம், சர்வதேச மட்டத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக, இந்திய அரசு இறங்கி வந்தது. யுத்த நிறுத்தம் ஒன்றிற்காக, சிறிலங்கா அரசுடனும் புலிகளுடனும் பேசியது.

யுத்தத்தை முடித்து விட்டு சரணடைய புலிகள் தயாராக இருந்தனர். அந்த நேரத்தில், தமது நம்பிக்கைக்கு உரிய வைகோவை தொடர்பு கொண்டார்கள். ஆனால், அன்று வைகோ கூறிய பதில், புலிகளின் அழிவுக்கு தேதி குறித்தது. "சரணடையும் முடிவெதையும் இப்போது எடுக்க வேண்டாம். இதெல்லாம் தேர்தலில் தோல்வியை சந்திக்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தந்திரம். தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். அடுத்த நாளே நிலைமை தலைகீழாக மாறிவிடும். பாஜகவினர் புலிகளை மீட்டெடுப்பார்கள்."   நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹைம் தெரிவித்த தகவல்.
“Indian Home Minister Chidambaram contacts Prabhakaran and suggests the LTTE agrees to a pre-drafted statement that they will lay down their weapons,” the report says, but without giving citations the report continues, “The document leaks to Vaiko, a radical but marginal Eelamist politician in Tamil Nadu, who rejects it as a Congress trick and assures the LTTE that BJP will win the ongoing Indian elections and come to the Tigers’ rescue.”...  I observed the change in Indian intelligence - Erik Solheim, (http://www.norwaynews.com/en/~view.php?72U7b54XOb4826z285Klk844SP3889S976HDp353P4d8)
வைகோவின் இன்றைய ஈழ ஆதரவு வாய்ச் சவடால்கள் எல்லாம், கடந்த கால துரோகத்தை மறைப்பதற்காகவே முன்னெடுக்கப் படுகின்றது. இதனை அவரது தொண்டர்களும், ஈழ ஆதரவாளர்களும் புரிந்து கொள்ளாத வரையில், வைகோவின் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கும். 

புலிகள் அழிவதற்கு காரணமான நாடுகளில் இந்தியா முக்கியமானது. உண்மை தான். அதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் பதவியில் இருந்த, காங்கிரஸ் கட்சியும், திமுக வும் மட்டுமே அதற்கு பொறுப்பு என்று, உண்மையை திரித்து திசை திருப்புகின்றனர். புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம், 2000 ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக் காலத்தில், காங்கிரசின் எதிர்க்கட்சியான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தீவிர புலி ஆதரவுக் கட்சிகளான, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் அந்த அரசாங்கத்தில் இருந்தன. இலங்கையில் நடக்கும் இனப்போருக்கு தீர்வு காணும் விடயத்தில், தான் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.  

Jaswant Singh indicated to the all-party meeting on Monday that the Clinton administration had informed New Delhi that the US would support “whatever India does”. The Hindu newspaper quoted the US official sources as saying: “Washington takes India's views on Sri Lanka very seriously and would not want to do anything that might go against India's interests.” (New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

2000 ம் ஆண்டளவில், விடுதலைப் புலிகளின் பலம் உச்சத்தில் இருந்த காலத்தில், யாழ் குடாநாடு முற்றுகையிடப் பட்டிருந்தது. போரில் தோல்வியடைந்து கொண்டிருந்த சிறிலங்கா அரசு, இந்தியாவிடம் அவசர உதவி கோரியது. யாழ் குடாநாடும், அங்கிருந்த நாற்பதாயிரம் படையினரும் புலிகளின் கையில் வீழ்ந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். வட மாகாணம் முழுவதும், புலிகள் உரிமை கோரிய தமிழீழப் பிரதேசமாக இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்கும். ஆனால், இந்திய மத்திய அரசு அதனை அனுமதிக்க தயாராக இருக்கவில்லை. கேரளாவில், குறிப்பாக திருவனந்தபுரத்தை நோக்கி இந்தியப் படைகள் நகர்த்தப் பட்டன. யாழ் குடா நாடு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தால், படையெடுப்பதற்கு தயாரான நிலையில் இந்திய இராணும் அங்கே நிறுத்தப் பட்டிருந்தது. புலிகளின் ஆதரவாளராக கருதப்பட்ட, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் உத்தரவின் பேரில் தான், இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இதிலிருந்து, தமிழீழம் என்ற  தனிநாட்டின் சாத்தியம் குறித்து,  ஓர் உண்மை தெளிவாகின்றது. ஒருவேளை, புலிகள் தமது ஆயுத பலத்தினால், முழு தமிழீழ பிரதேசத்தையும் விடுதலை செய்திருந்தாலும், இந்தியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். சர்வதேச சமூகமும் அந்த படையெடுப்பை ஆதரித்திருக்கும். சில நேரம், அது ஐ.நா. தலைமையின் கீழும் நடந்திருக்கும். 

The BJP government has committed itself only to “humanitarian assistance”. But according to Indian Defence Minister Fernandes, the country's armed forces have been prepared to meet any eventuality. Media reports indicate that substantial supplies have been moved to the Trivandrum in the southern state of Kerala. The Indian Air Force's Southern Air Command has been put on the alert to provide aid to Jaffna. Air Force helicopters and heavy transport aircraft have also been moved south. Communication links have been established with hot-line facilities to the Indian High Commission in Colombo, military headquarters in New Delhi and the air command in Trivandrum. (New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

அதே நேரம், டெல்லியில் அவசரமான கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வைகோ, ராமதாஸ் ஆகியோர் தீவிர புலி ஆதரவாளர்கள் என்பதும், அவர்களது கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தனர் என்பதும் இங்கே நினைவுகூரத் தக்கது. அந்தக் கூட்டத்தில், இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய பற்றி கலந்துரையாடப் பட்டது. பல சமரசங்களுக்குப் பின்னர், அதாவது வைகோவினதும் ஒப்புதலோடு தான், இராணுவ உதவி தவிர்ந்த, அனைத்து வகை உதவிகளையும் இலங்கை அரசுக்கு செய்வதென்ற முடிவு எடுக்கப் பட்டது.

Last Saturday Karunanidhi moderated his stance after a 90-minute meeting with Vajpayee. “Seri (OK),” he said to the national government's request to keep out of the conflict in Sri Lanka. “Our party will not tie the hands of the central government... It is the centre's prerogative to take any approach in the interest of the nation... we do not want to interfere with that”.....
The MDMK leader Kopalaswamy also toned down his position after a meeting with NDA leaders. “I am happy about the government sending humanitarian aid to Jaffna,” he said. Significantly he appeared to have gained some assurances that India would do nothing to assist the Sri Lankan military....
(New Delhi offers to mediate in Sri Lanka, By Dianne Sturgess,12 May 2000, http://www.wsws.org/articles/2000/may2000/ind-m12.shtml)

 ஒரு வேளை, தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், இராணுவ உதவி தவிர்க்கப் பட்டிருக்கலாம். அந்தப் பொறுப்பை, இந்தியாவின் எதிரி நாடுகளான, பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஒப்படைப்பதற்கு, அரை மனதுடன் சம்மதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஈழ ஆதரவுப் பேச்சுக்காக கைதான வைகோ, வேலூர் சிறையில் சிறை வைக்கப் பட்டிருந்தார். அப்போது, "புலிகளை அழிக்கும்  நோக்குடன்  இராணுவத்தை அனுப்பத் துடித்த" பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்த வைகோவை சந்தித்துப் பேசினார். (Opposition blasts govt over Fernandes, Vaiko meet, http://articles.economictimes.indiatimes.com/2002-07-31/news/27364861_1_mdmk-leader-vaiko-pota)

இதுவரை குறிப்பிடப் பட்ட எதுவும் இரகசியமாக நடக்கவில்லை. வெளிப்படையாக தன்னை அரச கைக் கூலிகளாக காட்டிக் கொள்ளும், வைகோ போன்றவர்களை, தமிழ் உணர்வாளர்கள் நம்ப முடியுமா? இந்திய தேசியக் கட்டமைப்புக்கு பல முகங்கள் உண்டு. சோனியா மாதிரி, கருணாநிதி மாதிரி, வைகோ மாதிரி, சீமான் மாதிரி, என்று பல வகையான முகங்கள். இந்த நால்வரும், இந்திய தேசியப் பிரம்மாவின் நான்கு முகங்கள். அந்த நான்கு முகங்களும் ஒன்று சேர்ந்து தான், ஈழத் தமிழரின் தலைவிதியை எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதை, நாம் இன்றைக்கும் புரிந்து கொள்ளவில்லை. 

(இன்னும் வரும்)