Showing posts with label குழந்தைப் போராளிகள். Show all posts
Showing posts with label குழந்தைப் போராளிகள். Show all posts

Tuesday, July 20, 2021

ஹிஷாலினி மரணம் - சுரண்டப்படும் சிறார் தொழிலாளர்கள்

 


இலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த பதினாறு வயது சிறுமி ஹிஷாலினி கடும் சித்திரவதைகளுக்கு பின்னர் கொல்லப் பட்டிருக்கிறார். அவரது உடலில் தீக்காயங்களும், வல்லுறவு செய்ததற்கான தடயங்களும் இருந்துள்ளன. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியான நாளில் இருந்து, ஹிஷாலினுக்கு நீதி கோரும் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

வறுமை காரணமாக பணக்காரர்களின் வீடுகளில் பணிப்பெண் வேலைக்கு சேரும் மலையகத் தமிழ்ச் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும், சிலநேரம் அது கொலையில் முடிவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சம்பவத்தில் ஓர் அமைச்சர் சம்பந்தப் பட்டிருப்பதால் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. குற்றவாளிகளின் பண பலம், அதிகார பலம் காரணமாக நீதியான விசாரணை நடப்பதற்கு தடைகள் போடப்படுகின்றன. இலங்கையில் இருப்பது வர்க்க நீதி. அது எப்போதும் பணக்காரர்களுக்கு சாதகமாக செயற்படும்.

இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனவாத சக்திகள் கொல்லப்பட்ட சிறுமிக்காக நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே மீண்டும் தமது இனவாத நிகழ்ச்சிநிரலை கொண்டுவரப் பார்க்கின்றன. பலியானவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழினவாதிகளும் இதைத் தமது அரசியல் இலாபம் கருதி பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை.

பல நூறாண்டுகளாக சமூகத்தில் மாறாமல் இருந்து வரும், ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு பற்றி இனவாதிகள் பேச மாட்டார்கள். அவர்களது கண்களுக்கு தெரிவதெல்லாம் இனம், இனம், இனம் மட்டுமே. இதற்கு முன்பு இலங்கையில் நடந்த வர்க்கப் பிரச்சனைகளை எல்லாம் இனவாதப் பிரச்சினைகளாக மடைமாற்றி ஆதாயம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள். வெறும் வாய் மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தால் விடுவார்களா?

மலையக நகரங்களில் நடந்த, ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரும் போராட்டங்களில் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன: 
  • "பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்." 
  • "சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது ஒரு சிறுவர் உரிமை மீறல்." 
இந்தப் பிரச்சினை இதற்கு முன்பும் இலங்கையில் இருந்தது. இனிமேலும் இருக்கப் போகிறது. ஆகவே பதினாறு வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முற்றாக தடுக்கப் பட வேண்டும். சட்டத்தை மீறி சிறார் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் இலவசக் கல்வி கொண்டு வந்ததன் நோக்கமே வறுமையில் வாழும் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பது தான். கல்வி இலவசமாகக் கிடைத்தாலும், புத்தகங்கள் வாங்குவது சுமையாக இருக்கிறது என்பதற்காக, பிற்காலத்தில் இலவசப் பாட நூல்கள் வழங்கப் பட்டன. அப்படி இருந்தும் இன்னமும் பல்லாயிரக் கணக்கான ஏழைச் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் வேலைக்கு செல்கிறார்கள். அப்படியானால் இந்த அமைப்பில் ஏதோ ஒரு தவறிருக்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் பிரதிநிதியே, அதாவது ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு மக்கள் விரோத செயலில் ஈடுபட்டிருகிறார். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சிறுமி, ஒரு அமைச்சரின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார். அங்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, உடலும் பாலியல்ரீதியாக சுரண்டப் பட்டிருக்கிறது. இதைத்தவிர உடலை சிதைக்கும் சித்திரவதைகள் கூட நடந்துள்ளன.

இலங்கையில் ஓர் ஏழைக்கு அமைச்சர் வீட்டிலும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது இலங்கை அரசு இயந்திரம் எந்தளவு தூரம் ஊழல்மயமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அது எப்போதும் பணக்காரர்களின் பக்கம் நின்று ஏழைகளை ஒடுக்கி வந்துள்ளது. ஒரு வர்க்கப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இதற்கான தீர்வைக் காண முடியும்.

Saturday, September 06, 2014

அமெரிக்காவில் பெருகி வரும் குழந்தைப் போராளிகள்!


அமெரிக்காவில் 6 அல்லது 7 வயது குழந்தைகள் மத்தியில் கூட, துப்பாக்கி வைத்திருக்கும் கலாச்சாரம் பரவி வருகின்றது. உலகிலேயே அதிகளவு தனிநபர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா தான். கோடிக் கணக்கான ஆயுதங்கள், தனிநபர்களின் பாவனையில் உள்ளன. அந்த நாட்டில் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் பெருகி வருகின்றன. அதற்கு சட்டமும் இடம் கொடுக்கிறது.  

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு மில்லியன் குழந்தைகள், தோட்டாக்கள் நிரப்பப் பட்ட துப்பாக்கிகள் உள்ள வீடுகளில் வளர்கின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கின்றனர். "ஆயுதம் வைத்திருப்பது அமெரிக்கர்களின் பிறப்புரிமை" என்று வாதாடும் NRA எனும் அரசு சாரா நிறுவனம், தற்போது குழந்தைகளை குறிவைத்துள்ளது.  பாடசாலைகளுக்கு செல்லும் NRA, அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது.

அமெரிக்க குழந்தைகள் தமக்கென தனியான துப்பாக்கி வைத்திருப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். "இது எனது முதல் துப்பாக்கி!" என்று சொல்லிக் கொள்வது, சிறுவர்கள் மத்தியில் ஒரு கலாச்சாரமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆயுத நிறுவனங்களும், சிறுவர்களைக் குறி வைத்து விளம்பரம் செய்கின்றன. குழந்தைகள் விரும்பும் வகையில், பல வர்ணங்களில் துப்பாக்கிகளை வடிவமைக்கின்றன. அந்தக் "குழந்தைத் துப்பாக்கி" ஒன்றை, நூறு டாலருக்கு வாங்க முடியும். "எனது முதல் துப்பாக்கி" கலாச்சாரம் பரவத் தொடங்கிய 1996 ஆம் ஆண்டு முதல், 60000 "குழந்தைத் துப்பாக்கிகள்" விற்கப் பட்டுள்ளன.

ஆயிரக் கணக்கான அமெரிக்கக் குழந்தைகள், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பல இடங்களில் சிறுவர்களுக்கென  விசேடமாக பயிற்சி அளிக்கும் நிலையங்கள் உள்ளன. அது குறித்து பகிரங்கமாக விளம்பரம் செய்யப் படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், அரிசோனாவில் ஒரு ஒன்பது வயது சிறுமி Uzi துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரம், தவறுதலாக பக்கத்தில் நின்ற பயிற்சியாளரை சுட்டுக் கொன்று விட்டாள். ஆயினும் என்ன? பெற்றோரைக் கேட்டால், அது பயிற்சியாளரின் தவறு என்று காரணம் சொல்வார்கள். 

அமெரிக்காவில் பல இடங்களிலும், சிறுவர்களின் துப்பாக்கிச் சூடு காரணமாக, அயலில் இருந்த சிறுவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளன. அப்படியான துயரச் சம்பவங்கள், யாருடைய மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. ஆயிரத்தில் ஒன்று அப்படி நடக்கலாம் என்று சமாளிப்பார்கள். "துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் இறக்கும் குழந்தைகளை விட, நீச்சல்குளங்களில் அதிகளவு குழந்தைகள் பலியாகின்றன" என்று குதர்க்கமாக வாதம் செய்வார்கள்.

சிறுவர்கள் ஆயுதங்களை கையாளக் கூடாது என்று தடை செய்யும் சட்டம் எதுவும் அமெரிக்காவில் கிடையாது. ஆயுதப் பாவனை குறித்த சட்டம் இயற்றும் விடயத்தில், மத்திய அரசு மாநில அரசுக்களின் பொறுப்பில் விட்டிருக்கிறது. முப்பது மாநிலங்களில் சிறுவர்கள் சட்டப்படி ஆயுதம் வைத்திருக்கலாம்! அதற்கு வயதெல்லை கிடையாது!! 

மிச்சிக்கன் மாநிலத்தில் 18 வயதிற்குப் பிறகு தான் ஆயுதம் வைத்திருக்கலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால், அங்கே கூட வயதுவந்தோரின் மேற்பார்வையின் கீழ் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பழக முடியும். "ஆயுத உரிமைகள் நிறுவனம்" NRA, குழந்தைகளுக்கு சுடும் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு 21 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவில் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், பிள்ளைகளுக்கு ஆயுதக் கலாச்சாரத்தை திணிப்பவர்களும், பெரும்பாலும் வெள்ளையின அமெரிக்கர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. அதனால் தான் அரசாங்கமும் பாராமுகமாக இருக்கிறது. இதே அமெரிக்க அரசாங்கம், பாலஸ்தீனத்தில், ஈழத்தில், அல்லது ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில் சிறுவர்கள் ஆயுதமேந்தி இருப்பதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றது. குழந்தைகள் கொடி பிடித்தாலே சிறுவர் துஸ்பிரயோகம் என்று அலறித் துடிக்கும் அமெரிக்க அடிவருடிகள், ஆயுதம் வைத்திருக்கும் அமெரிக்க குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. அமெரிக்க அரசு மட்டுமல்ல, அமெரிக்க விசுவாசிகள் கூட இரட்டை வேடம் போடுவதில் கெட்டிக்காரர்கள் தான். 

(தகவல்களுக்கு நன்றி: NRC Handelsblad, 6 september 2014)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"
2.அமெரிக்க வெள்ளைக் கடவுளும், நானூறு குழந்தைப் போராளிகளும்

Wednesday, July 30, 2014

புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"


"குழந்தைப் போராளிகள்" என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள் அந்த சொல்லை மிகவும் விருப்பத்துடன் உபயோகித்து வருகின்றனர். புலி ஆதரவாளர்களும் அதையே திருப்பிச் சொல்ல வைப்பதன் மூலம், அகராதியில் இடம்பெற வைக்க முயற்சிக்கின்றனர்.

உண்மையில், புலிகள் இருந்த காலத்தில், "Baby Brigade" என்ற சொல்லை, சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் புலிகளை கிண்டலடிக்க பயன்படுத்தி வந்தனர். சிங்கள ஊடகவியலாளர்களும் அதை விரும்பி ஏற்றுக் கொள்ளவே, தமிழில் சிலர் குழந்தைப் போராளிகள் என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால், பிபிசி தமிழோசை பல வருட காலமாகவே "சிறார் போராளிகள்" என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றது.

பல புலி ஆதரவாளர்கள் நினைத்துக் கொள்வதைப் போல, குழந்தைப் போராளிகள் அல்லது சிறார் போராளிகள் பற்றிய பிரச்சினையை முதலில் கையில் எடுத்துக் கொண்டது புலி எதிர்ப்பாளர்கள் அல்ல. ஏனெனில், ஆரம்ப கால புலி எதிர்ப்பாளர்கள் பலர், புலிகளால் தடை செய்யப்பட்ட ஆயுதபாணி இயக்கங்களில் இருந்து வந்தவர்கள். அப்போது அவர்களும், 16 வயது சிறார் போராளிகளை சேர்த்துக் கொள்வதை தவறாகக் கருதாதவர்கள்.

உண்மையில், மேற்கத்திய மனித உரிமை நிறுவனங்களும், ஐ.நா. வும் தான், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு முக்கியமான பிரச்சினையாக மாற்றினார்கள். ஐ.நா. அதற்கென்று விசேட பிரிவை உருவாக்கியது. ராதிகா குமாரசாமி என்ற ஒரு யாழ்ப்பாணத் தமிழ் அறிவுஜீவியை அதற்குப் பொறுப்பாகப் போட்டது. தற்போதுள்ள நவநீதம் பிள்ளை, பிற்காலத்தில் ராதிகா குமாரசாமியின் இடத்திற்கு நியமிக்கப் பட்ட ஒருவர் தான்.

அமெரிக்க சி.ஐ.ஏ., தனது இலங்கை தொடர்பான வருடாந்த அறிக்கைகளில், புலிகளின் சிறார் போராளிகளைப் பற்றிக் குறிப்பிட்டு வந்தது. முரண்நகையாக, சி.ஐ.ஏ. அதற்கு ஆதாரமாகப் பயன்படுத்திய வளங்களில் பெரும்பகுதி புலிகளின் பிரச்சார சாதனங்களில் இருந்து பெறப் பட்டன.

உதாரணத்திற்கு, மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த சமாதிகளில், பிறந்த ஆண்டும், மரணமடைந்த ஆண்டும் பொறிக்கப் பட்டிருந்தன. சி.ஐ,ஏ, அதை சுட்டிக் காட்டி, மரணமடைந்த போராளிகளின் வயதைக் கணக்கிட்டு கூறி வந்தது. விழிப்புற்ற புலிகள் இயக்கம், அதற்குப் பின்னர் போராளிகளின் சமாதிகளில் பிறந்த வருடம் குறிப்பிடும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டது.

ஆயினும், ஐ.நா.வும், மனித உரிமை ஸ்தாபனங்களும், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு பூதாகரமான பிரச்சினையாக்கி, அதை சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. இறுதிப் போருக்கு முந்திய சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், புலிகளிடம் இருந்து, சிறுவர்களை படைகளில் சேர்ப்பதில்லை என்ற வாக்குறுதியை பெறுவதற்கு கடுமையாக முயற்சித்தன. புலிகளும் சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்து நடப்பதைப் போன்று காட்டிக் கொண்டனர்.

தற்போதும் சிலர், புலிகளின் சிறார் போராளிகள் விடயத்தில் அதிக கவனம் குவிப்பதை, வெறுமனே புலி எதிர்ப்புவாதமாக குறுக்கிப் பார்க்க முடியாது. இது மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜனநாயகம். ஆப்கானிஸ்தான், ஈராக்கிற்கு அமெரிக்க ஜனநாயகம் ஏற்றுமதி செய்யப் பட்டமை பலருக்குத் தெரிந்திருக்கும். அதே மாதிரியான ஒரு முயற்சி தான் இதுவும். சில புலி எதிர்ப்பாளர்களும், சில இடதுசாரிகளும், ஜனநாயக உரிமையை பாதுகாப்பது என்ற பெயரில், மேற்கத்திய நிகழ்ச்சிநிரலை செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில், புலிகள் இயக்கத்திற்கு ஆட்களை தெரிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். துடிதுடிப்பான, இராணுவ சாகசம் செய்யும் ஆர்வம் கொண்ட கட்டிளம் காளைகளை மட்டுமே தெரிந்தெடுத்தனர். ஆரம்பத்தில் பெண்களையும், சிறுவர்களையும் போராளிகளாக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அன்றிருந்த ஐந்து பெரிய இயக்கங்களில், புலிகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பதாக கருதப் பட்டது. 

PLOTE, TELO, EPRLF ஆகியன, ஒரு மரபு வழிப் படையணியை கட்டுவதற்கு தேவையான ஆள் பலம் வேண்டுமென்று கூறி, வருவோர் போவோர் எல்லோரையும் கூப்பிட்டு சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், புலிகளோ கமாண்டோ பாணி தாக்குதல்களை செய்யக் கூடிய கெரில்லாப் படையை வைத்திருப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள். திடீர் கெரில்லா தாக்குதல்களில் கிடைத்த வெற்றிகள், புலிகள் மக்கள் மத்தியில் பிரபலமடையக் காரணமாக இருந்தன.

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், ஒரு பெரிய திருப்புமுனை உருவாகியது. வட மராட்சியில் நடந்த ஒப்பெறேஷன் லிபரேஷன் போர் நடவடிக்கை மூலம், சிறிலங்கா இராணுவம் பெரியதொரு பிரதேசத்தை கைப்பற்றி இருந்தது. அந்தப் போரில், புலிகள் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாகவும், பெருமளவு போராளிகள் மரணமடைந்ததாகவும் கருதப் பட்டது. இந்தத் தகவலை, அன்றைக்கு அனுப்பப் பட்ட அமெரிக்க தூதரக கேபிள் தெரிவித்ததை, விக்கிலீக்ஸ் பகிரங்கப் படுத்தி இருந்தது. இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டின் பிற பகுதிகளை கைப்பற்றுவதற்கு முன்னர், இந்தியா தலையிட்டு ஒப்பந்தம் போட்டது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர், புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. அப்போது தான், குழந்தைப் போராளிகள் என்ற தோற்றப்பாடு வெளித் தெரிய ஆரம்பித்தது. அதற்குக் காரணம், வழமையான புலிப் போராளிகள் யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. பல சிக்கல்களுக்கு மத்தியில், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.

இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள், தேடுதல்களுக்குள் அகப்படாமல் தப்புவதற்காக, புலிப் போராளிகள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு, அடிக்கடி நகர்ந்து கொண்டிருக்க வேண்டி இருந்தது. அப்போது வழியில் படையினர் நிற்கின்றனரா என்று உளவு பார்ப்பதற்காக, சிறுவர்களை பிடித்து முன்னுக்கு அனுப்புவார்கள். இந்திய இராணுவமும், எக் காரணம் கொண்டும் சிறுவர்களை சந்தேகிக்கவில்லை. ஊர் மக்களிடையே இரகசியமாக பணம் சேர்ப்பதற்கும் அவர்கள் பயன்படுத்தப் பட்டனர். அப்போது அந்த சிறுவர்கள் வைத்திருந்த ஒரே ஆயுதம், கிரனேட் மட்டுமே. 

இந்தியப் படைகள் இலங்கையை விட்டு வெளியேறிய காலத்தில், உதவியாளர்களாக இருந்த சிறுவர்கள், போராளிகளாக மாற்றப் பட்டனர். புலிகள் தமது முந்திய கொள்கைக்கு முரணாக, சிறுவர்களை படையணியில் சேர்த்துக் கொள்வதற்கு சில சமூகக் காரணிகள் இருந்தன.

1985 - 1986 கால கட்டத்தில் நடந்த இயக்க மோதல்கள், புலிகள் பிற இயக்கங்களை தடை செய்தமை, ஆகிய காரணங்களினால் மக்களுக்கு போராட்டத்தில் ஈடுபடும் ஆர்வம் குன்றி இருந்தது. பல வருடங்களாக, இந்தியா படையனுப்பி தம்மைக் காப்பாற்றும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.  1987 ல், எதிர்பாராவிதமாக இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த போர் தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இதற்கிடையே, வெளிநாடுகளுக்கும், இந்தியாவுக்குமான புலம்பெயர்தல் அதிகரித்திருந்தது.

இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப் பட்ட பின்னர், வட மாகாணத்தில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகியது. புலிகள் வைத்திருந்த நடைமுறை (de facto) தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்ற நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பான்மையானோர், போராளியாகும் வயதில் இருந்த இளைஞர்கள். அதாவது 16 - 25 வயதிலான இளைஞர்கள் தான் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். 16 வயதுக்கு உட்பட்டோர் விசா எடுக்கத் தேவையில்லை என்ற சட்டத்தை பயன்படுத்தி, ஏராளமான இளைஞர்கள், 17 - 24 வயதானவர்கள் கூட, போலி கடவுச்சீட்டு தயாரித்து ஜெர்மனிக்கு சென்றனர். ஓரளவு வசதியானவர்கள் கூட, தம்மிடம் சொந்தமாக இருந்த நிலத்தை, நகைகளை அடைவு வைத்து விட்டு, அல்லது அவற்றை விற்று பணம் சேர்த்துக் கொண்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முடிந்தது.

மூளைசாலிகளின் வெளியேற்றம் ஒரு வளர்ந்து வரும் நாடொன்றின் பொருளாதாரத்தை பாதிப்பது போன்று, போராளிகளின் வயதையொத்த தமிழ் இளைஞர்களின் வெளியேற்றம், புலிகளின் போராட்டத்தை பாதிக்கும் என்று உணரப் பட்டது. அதனால், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து, 45 வயதுக்கு உட்பட்டோர் யாரும் வெளியேறக் கூடாது என்று, புலிகள் சட்டம் போட்டார்கள். விசா போன்று, பாஸ் நடைமுறை கொண்டு வந்தார்கள். ஏதாவது அலுவலாக கொழும்புக்கு செல்வதாக இருந்தால், நெருங்கிய உறவினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். ஆயினும், வசதி படைத்தவர்கள் பெருமளவு பணம் கொடுத்து, பாஸ் எடுத்துக் கொண்டு சென்றனர். அவ்வாறு வெளியேறிய பெரும் பகுதியினர், வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், "அன்று ஈழத்தில் வாழ்ந்த காலங்களில், போராளியாக மாறக் கூடிய அருமையான சந்தர்ப்பத்தை உதறித் தள்ளி விட்டு"  வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாக தங்கி விட்டவுடன், "புலி ஆதரவாளர்" வேஷம் போடத் தொடங்கினார்கள். வெளிநாடு செல்லும் வரையில், அவர்களுக்கும் புலிகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்கவில்லை. தமிழீழப் போராட்டம் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை. 

புலிகளின் செயல்களை எல்லாம் நியாயப் படுத்தி வாதாடிக் கொண்டிருக்கும் பலர், தமது வர்க்க நலன் சார்ந்தே அதைப் பார்க்கின்றனர்.  குழந்தைப் போராளிகள் பிரச்சினை, அவர்கள் மனதில் எந்த மாற்றத்தையும் உண்டாக்காத காரணமும் அது தான். ஏனென்றால்... இங்கே தான் அவர்களது நடுத்தர வர்க்க மனோபாவம் தலை காட்டுகின்றது. 

இறுதி யுத்தம் வரையில், புலிகளின் படையணிகளில் இருந்த பெரும்பான்மையான போராளிகள், குழந்தைப் போராளிகள் உட்பட, வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். நடுத்தர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகளை" பின்பற்றி, வெளிநாடு செல்வதற்கு பண வசதி இல்லாதவர்கள். வர்க்க முரண்பாடுகள், வர்க்க ஒற்றுமைகள், எந்த நாட்டு அரசியல் போக்கிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது.

மேற்கத்திய நாடுகளில், வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கையில், திடீரென தமிழ் தேசிய ஞானம் கைவரப் பெற்றவர்கள், விடுதலை உணர்வு பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈழத்தில் வாழும் வறிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு, விடுதலை உணர்வு, இன மான உணர்வு எல்லாம் தாராளமாகவே இருக்கின்றன. 

மார்க்சிய தத்துவம் காலங் காலமாக கூறி வருவதைப் போன்று, "இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராட முன்வருவார்கள்." தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அது தான் உண்மை.  இழப்பதற்கு நிறைய சொத்துக்களை வைத்திருப்பவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று, சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, மற்றவர்களுக்கு தமிழ் தேசியப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள். இது இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையிலான வர்க்கப் பிரிவினை.

ஈழத்தில், புலிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் கலை அலாதியானது. அதற்கென்றே பிரச்சாரப் பிரிவு சில ஆட்களை வைத்திருக்கும். குறிப்பாக பாடசாலைகளில் சென்று மாணவர்களுடன் பேச்சுக் கொடுப்பார்கள். "படித்து என்ன செய்யப் போகிறீர்கள்? சிங்களவன் வேலை கொடுப்பானா? சிங்களவன் குண்டு போட்டு கொன்று கொண்டிருக்கும் நேரத்தில் படித்து என்ன பிரயோசனம்? எப்படியும் சாகத் தானே போகிறோம்? போராடிச் சாகலாம் அல்லவா?" இப்படிப் பல கேள்விகள்.

ஆண் மாணவர்களுடன் உரையாடுவது பெண் போராளிகளாகவும், பெண் மாணவர்களுடன் உரையாடுவது ஆண் போராளிகளாகவும் இருக்கும். போராளி வாழ்க்கையின் மகத்துவம் பற்றியும், சாதாரண வாழ்க்கையின் இழி நிலை பற்றியும் எடுத்துரைப்பார்கள். ஆயுதமேந்திப் போராடாமல், வாழ்க்கையை வீணாக்குவதாக அவர்கள் எண்ணி வெட்கப் படும் அளவிற்கு அந்த உரையாடல் அமைந்திருக்கும்.

பொதுவாக புலிகளின் எந்தப் பிரச்சாரமும், தற்போது வெளிநாடுகளில் தீவிர தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும், நடுத்தர வர்க்க மாணவர்கள் மனதில் எந்த சலனத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு நன்றாகத் தெரியும், படித்தால் தமக்கு எதிர்காலம் உண்டென்று. குறைந்த பட்சம், தமது பெற்றோர் தம்மை வெளிநாட்டுக்காவது அனுப்பி வைப்பார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். 

மத்திய தர வர்க்கத்திலும் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். தாமாகவே விரும்பி போராளியாக சேர்ந்து கொள்வார்கள். அப்படியான சிலரை, பெற்றோர் தமது செல்வாக்கை பயன்படுத்தி, முகாமில் இருந்து விடுவித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகும் தமது பிள்ளை ஊரில் இருந்தால் இயக்கத்தில் சேர்ந்து விடுவான் என்று நினைத்து, வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பார்கள். 

ஏழை மக்களின் நிலைமை வேறு. அவர்களிடம் வெளிநாடு செல்லும் அளவிற்கு வசதி, வாய்ப்புகள் எதுவும் கிடையாது. ஏழை மாணவர்கள் மனதில், புலிகளின் பிரச்சாரங்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிவிடும். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்தும் பலர் போராளியாக சேர்ந்து கொள்ள முன்வருவதுண்டு. அப்படியாவது, தாம் பெற்றோருக்கு பாரமாக இருக்க மாட்டோம் என்று அந்த பிஞ்சு உள்ளங்கள் நினைத்துக் கொண்டன.

வெளிநாடுகளுக்கு செல்லும் மத்தியதர வர்க்கத்தினரை குறி வைத்தும், அவர்கள் புலம்பெயர்வதை தடுப்பதற்காகவும் புலிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். "வெளிநாடு சென்று வெள்ளையனுக்கு அடிமை வேலை செய்யப் போகிறீர்களா? அதை விட எமது தாயகத்தில் சுதந்திரமாக போராடிச் சாகலாமே?" என்று நேரடியாகவும், தமது ஊடகங்கள் மூலமும் சொல்லி வந்தனர். புலிகளின் பிரச்சாரத்திற்கு மயங்கும் நிலையிலா, எமது நடுத்தர வர்க்கம் இருக்கிறது?

மத்தியதர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகள்", சக மாணவர்கள் அரசியலில் நாட்டம் கொள்வதையே கண்டிப்பார்கள். "நமக்கு முக்கியம் படிப்பு, பல்கலைக்கழக அனுமதி, அதற்குப் பிறகு உத்தியோகம், கடைசியாக ஒரு மேற்கத்திய நாடொன்றில் நிரந்தரமாக தங்கி விடுதல்..." என்று அறிவுரை கூறுவார்கள். ஊரில் ஒரு பாடசாலை மாணவனாக வாழ்ந்த காலங்களில் அரசியலை நினைத்துப் பார்க்க மறுத்தவர்கள், பல்கலைக்கழக பட்டம், வெளிநாட்டு வாழ்க்கை கைவரப் பெற்ற பின்னர் தான், "நமக்கு தமிழீழம் வேண்டும்" என்று உணர்ந்து கொண்டார்கள்! அவர்கள் தான் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் குழந்தைப் போராளிகள் இன உணர்வு பெற்று போராடச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் அவர்களுக்கு வர்க்க உணர்வு என்ற ஒன்று இருந்துள்ளது. இழப்பதற்கு எதுவுமற்ற மக்களுக்கு, போராட்டத்தை தவிர வேறு வாழ்க்கை இல்லை. போராளியாக ஆயுதமேந்திய சிறுவனுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம், அவன் ஒரு ஏழைக் குடும்பத்தில் அவல வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் கிடைக்கவில்லை. போராளியான பின்னர் கிடைத்த சமத்துவ உணர்வு, சிறார் போராளிகளுக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்தது.

மறு பக்கத்தில், பண வசதி படைத்தவர்களுக்கு போராடமாலே ஒரு நல்வாழ்வு அமைந்து விடுகின்றது. அவர்கள் சமத்துவத்தை, சமூக அங்கீகாரத்தை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை. அதை நாம் கேள்வி கேட்டால், "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆன்மீக சொற்பொழிவாற்றத் தொடங்கி விடுவார்கள். 

அண்மையில் தமிழகத்தில் பரப்பரப்பாக பேசப்பட்ட, புலிப் பார்வை திரைப்படத்தின் இயக்குனர், பாலச்சந்திரன் என்ற சிறுவனுக்கு புலிச் சீருடை அணிவித்திருப்பது பற்றி எழுந்த சர்ச்சை தொடர்பாக கூறிய விளக்கம் இது: "அந்தப் பாலகனுக்கு சீருடை அணிவித்து அழகு பார்த்திருக்கிறோம்."  அதே போன்று, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு சீருடை அணிவித்து அழகு பார்ப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள். ஈழத்தில், போர்க் களத்தில் சீருடை அணிந்திருந்த சிறுவர்களுக்கு அது வெறும் அலங்காரப் பொருள் அல்ல. போராளி ஆகி விட்டதால், சமூக அந்தஸ்தில் உயர்ந்து விட்டதாக பெருமிதம் கொள்ளும் கனவு. அந்தக் கனவு மாவீரர் துயிலும் இல்லங்களில் மண்ணோடு மண்ணாக மறைந்து போனது.

Wednesday, March 21, 2012

அமெரிக்க வெள்ளைக் கடவுளும், நானூறு குழந்தைப் போராளிகளும்

உலக வரலாற்றில், முன்னொருபோதும் இடம்பெறாத பிரச்சாரம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. "Kony 2012" என்ற பெயரில், வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களின் ஊடாகக பரப்பப் படுகின்றது. ஓரிரு நாட்களில், இலட்சக்கணக்கான மக்கள் அதனைப் பார்வையிட்டுள்ளனர். மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, போர்ச் சூழலில் இருந்து உகண்டா நாட்டு சிறுவர்களை காப்பாற்றுவதற்கான மனிதநேய நடவடிக்கையாக தோன்றலாம். Invisible Children என்ற அமெரிக்க தொண்டு நிறுவனம், இந்த வீடியோவை தயாரித்துள்ளது. "மனிதநேயப் பணிகளில் ஈடுபடும், அரசு சாராத நிறுவனங்கள்" என்று வகைப் படுத்தப் படும் நிறுவனங்களில் அதுவும் ஒன்று. உலகம் எட்டியும் பார்க்காத ஆப்பிரிக்க நாடான உகண்டாவின் வடக்குப் பகுதியில், ஆயுதமேந்த கட்டாயப் படுத்தப்பட்ட சிறுவர்கள் குறித்து கவலைப் படுகின்றது. இன்விசிபில் சில்ட்ரன் நிறுவன ஸ்தாபகர் ரஸ்ஸல், தனது குழந்தைப் பருவ மகனின் பார்வையில் பிரச்சினையை எமக்குச் சொல்கின்றார். மிகவும் தத்ரூபமாக பின்னப்பட்ட திரைக்கதை. நேர்த்தியான படத்தொகுப்பு. பார்வையாளரை வசியப்படுத்தும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக, அதிக பணச் செலவு செய்யப்பட்டிருப்பது தெரிகின்றது.

சர்வதேச நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜோசெப் கோனி பற்றியும், அவரது LRA என்ற இயக்கத்தின் அடாவடித்தனங்கள் குறித்தும், உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை என்றொரு முத்தாய்ப்புடன் படம் தொங்குகிறது. முதலில், LRA என்றால் என்ன அர்த்தம் என்று கூறுகின்றார்களா? இல்லை. Lord 's Resistance Army , அதாவது "கர்த்தரின் புரட்சிப் படை" என்று அர்த்தம். அப்படியானால், அது ஒரு கிறிஸ்தவ மதவாத இயக்கமா? ஆமாம், அந்த இயக்கத்தின் கொள்கைப் பரப்பாளர்கள் அப்படித் தான் கூறி வருகின்றனர். விவிலிய நூலில் எழுதப்பட்ட, ஆண்டவரால் மோசசுக்கு அருளப்பட்ட, பத்துக் கட்டளைகள் என்ற மத விதிகளைக் கொண்ட தேசத்தை உருவாக்குவதற்காக போராடுவதாக சொல்லிக் கொள்கின்றனர். இந்த விபரங்கள் எல்லாம் அந்த வீடியோவில் மறைக்கப் படுகின்றன. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களின் "மனது புண் படக் கூடாது" என்ற "நல்லெண்ணம்" காரணமாக இருக்கலாம்! இதுவே ஒரு இஸ்லாமிய மதவாத அமைப்பாக இருந்திருந்தால், "அல்கைதா", "இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்" போன்ற சொற்கள், அந்த வீடியோவில் குறைந்தது பத்து தடவைகள் ஆவது வந்திருக்கும்.

உலகில் எல்லாவற்றையும் கறுப்பு, வெள்ளையாக பிரித்தறிய முடியாது. "இஸ்லாமிய மத அடிப்படைவாத" தாலிபான்களின் கொள்கையில் பெருமளவு ஆப்கானிய பழமைவாத நம்பிக்கைகள் கலந்திருந்தன. அதே போன்று, ஜோசெப் கோனியின் LRA வெறும் கிறிஸ்தவ மத அடிப்படைவாத இயக்கமல்ல. கிறிஸ்தவத்தின் வருகைக்கு முன்பிருந்த, புராதன மதப் பழக்கவழக்கங்கள் பெருமளவு காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, LRA போராளிகள் விசேட மூலிகை எண்ணெய் ஒன்றை பூசிக் கொண்டால், தோட்டாக்களில் இருந்து தப்பலாம் என்று நம்பினார்கள். ஆரம்பத்தில், உகண்டாவின் வட மாநிலத்தில் வாழும், அச்சோலி மக்களின் மரபு வழி நம்பிக்கையுடன், கிறிஸ்தவ போதனைகளை கலந்த ஆன்மீக அமைப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில், உகண்டா இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் விட்டு விலகிய படையினர் சிலரின் உதவியுடன், ஜோசெப் கோனி LRA அமைப்பை உருவாக்கினார். Kony 2012 வீடியோ தயாரித்த, தொண்டு நிறுவனத்தின் கூற்றுப் படி, "LRA எந்த வித கொள்கையுமற்ற பயங்கரவாத கிரிமினல் இயக்கம்." எமக்குப் பிடிக்காத எந்த இயக்கத்திற்கும், அவ்வாறான வியாக்கியானம் கொடுக்கலாம்.

மரபு சார்ந்த மத நம்பிக்கை, கிறிஸ்தவ இறையியல், இவை தவிர அச்சோலி தேசியவாதமும் LRA இயக்கத்தின் மையக்கருவாக உள்ளன. LRA இயக்கத்தின் ஆதரவுத் தளம், அச்சோலி தேசியவாதத்தின் மீது தான் கட்டமைக்கப் பட்டது. அதன் போராளிகள், ஆதரவாளர்கள் எல்லாம் அச்சோலி மொழி பேசும் மக்கள் தான். ஆனால், அதே நேரம், LRA இயக்கம், தனது சொந்த இனத்தில் இருந்து தான் சிறுவர்களை கடத்திச் சென்று போராளிகளாக மாற்றுகின்றது. (இதுவரை 25000 சிறுவர்களை கடத்திச் சென்றதாக நம்பப் படுகின்றது.) சில சமயம், பலவந்தமாக ஆயுதமேந்த வைக்கப்பட்ட சிறுவர்கள், தமது உறவினர்களை கொலை செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப் பட்டனர். LRA யின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள், சொந்த இனத்தை சேர்ந்தவர்களாயினும், ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப் பட்டனர். இவற்றைத் தான், Kony 2012 வீடியோ, "கிரிமினல் குற்றங்களாக" வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இதே பாணியில், உலகில் உள்ள எல்லா ஆயுதபாணி இயக்கங்களையும் கிரிமினல் மயப் படுத்தலாம். அந்த வீடியோ காட்டாத இன்னொரு பக்கமும் உண்டு. உகண்டா தேசிய இராணுவத்தின் இன ஒடுக்குமுறை குறித்து பேசவில்லை. குறிப்பாக, LRA நடமாட்டம் அதிகமாகவுள்ள கூளு (Gulu) மாவட்டத்தில் நடந்த இராணுவ வெறியாட்டத்திற்கு ஆயிரக் கணக்கானோர் பலியானார்கள். உகண்டா தேசிய இராணுவமும், தனது படையணிகளில் சிறார் போராளிகளை சேர்த்துள்ளது.

இலங்கை போன்று, உகண்டாவும் இனப்பிரச்சினையால் பிளவுண்ட நாடு. சில சமயம், அதிசயப் படத்தக்க ஒற்றுமைகள், இரு நாடுகளின் இனப்பிரச்சினையிலும் காணப் படுகின்றன. இரண்டுமே ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனிகளாக இருந்தவை தான். இன்றைய உகண்டாவில், பகண்டா மொழி பேசும் மக்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்திற்கு முன்பிருந்த, பகண்டா இராசதானியின் பெருமை, அந்த இன மக்களால் இன்றைக்கும் பேசப்படுகின்றது. (இன்றைக்கு மன்னர் பரம்பரையினர், அரசுரிமை இழந்த போதிலும் இந்திய மகாராஜாக்கள் போன்று வாழ்கின்றனர்.) பகண்டா இன மக்கள் விவசாய சமூகமாக வாழ்ந்தவர்கள். இதற்கு மாறாக, வடக்கத்திய அச்சோலி மக்கள் தனித்துவமான சரித்திரப் பின்னணியைக் கொண்டவர்கள். அச்சோலி பிரதேசம் பல சிற்றரசர்களால் ஆளப்பட்டது. ஆனால், அரபு வணிகர்களுடன் ஏற்பட்ட வர்த்தகத் தொடர்பு காரணமாக, தெற்கத்திய பகண்டா மக்களை விட மேன் நிலையில் இருப்பதாக கருதிக் கொண்டனர். அன்றைய காலத்து சர்வதேச மொழியான ஸ்வாஹிலி பேசக் கற்றுக் கொண்டனர். (நமது காலத்தில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்துடன் ஒப்பிடுக)

பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தில் நிலைமை மாறியது. பகண்டா இராசதானியின் சிறப்பு, நாகரிக வளர்ச்சி பற்றி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் புகழ்ந்து தள்ளினார்கள். அதுவே பிற்காலத்தில் கம்பாலாவை மையமாக கொண்ட ஆளும்வர்க்கத்தின் பகண்டா தேசியவாத உணர்வையும் தூண்டி விட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் , சுதந்திரமடைந்த பின்னர் ஜனாதிபதியான ஒபேட்டே சோஷலிசம் பேசியதும், அந்நிய நிறுவனங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கையும் பிரிட்டனுக்கு எரிச்சல் ஊட்டி இருக்கலாம். இஸ்ரேலின் உதவியுடன் இடி அமின் ஆட்சியைக் கைப்பற்றினார். தான்சானியாவில் தளமைத்திருந்த ஒபெட்டோவின் படைகள், பின்னர் இடி அமினை விரட்டின. கடைசியாக, முசேவெனியின் கிளர்ச்சிப் படைகள் ஆட்சியைக் கைப்பற்றின. இடி அமின், ஒபேட்டோ, முசேவெனி எல்லோரும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் தான். இந்தக் குழப்பகரமான காலகட்டத்தில், இராணுவத்தினுள் அச்சோலி இன வீரர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு போனது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில், பெருமளவு அச்சோலி போர்வீரர்கள் இராணுவத்தில் சேர்ந்து இருந்தனர். கடைசியாக நடந்த இராணுவ சதிப்புரட்சியின் தளபதி ஒகேலோ, ஒரு அச்சோலி இனத்தவர்.

இன்றைய ஜனாதிபதி முசேவெனி, ஒகேலோவின் ஆட்சிக்கு எதிராகத் தான் கிளர்ச்சி செய்தார். (இன்று ஒகேலோவின் குடும்பத்தினர் அரசோடு ஒத்துழைக்கின்றனர். LRA அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.) கடந்த பல தசாப்தங்களாக, இராணுவத்தில் மட்டுமல்லாது, அரச பதவிகளில் இருந்தும் அச்சோலி மக்கள் ஓரங்கட்டப் பட்டனர். இடி அமினின் சர்வாதிகார ஆட்சியில், இலட்சக் கணக்கான அச்சோலி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இடி அமின் பிரிட்டிஷ் மகாராணியுடன் பக்கிங்க்ஹாம் மாளிகையில் விருந்துண்டு மகிழ்ந்த அதே நேரத்தில், நூற்றுக் கணக்கான அச்சொலி படையினரின் இறந்த உடல்கள் நைல் நதியில் வீசப்பட்டன. இடி அமினின் கொடூரமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று. இன்றைய முசேவெனி அரசும், அச்சோலி மக்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து விட்டு, அவர்களது வாழிடங்களை அபகரித்து வருகின்றது. இது போன்ற அரச ஒடுக்குமுறைகளை காரணங்களாக காட்டி, அச்சோலி மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக, LRA கூறிக் கொள்கின்றது.

"ஒரு கிரிமினலான கோனி, மற்றும் LRA பற்றி உலகில் யாருக்கும் தெரியாது?" அது தான் பிரச்சினை என்பது, வீடியோவை தயாரித்தவர்களின் கண்டுபிடிப்பு. ஐயா, கனவான்களே, உலகில் நடக்கும் எத்தனையோ போர்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதில்லை. அதிலும், அமெரிக்க ஊடகங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அமெரிக்காவின் உள்நாட்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் அவரகள் கவனம் செலுத்துவதில்லை. ஓரளவு உலக நடப்புகளில் அக்கறை கொண்ட ஐரோப்பிய தினசரிகள், LRA குறித்த தகவல்களை வெளியிட்டு வந்துள்ளன. ஒரு தடவை நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் விரிவாகக் காட்டினார்கள்.

என்ன இருந்தாலும், எந்தெந்த நாடுகளில் அமெரிக்க அரசுக்கு அன்பு பெருக்கெடுக்கிறதோ, அதை தானே உலகம் முழுவதும் பேச வேண்டும்? அந்த வகையில், அமெரிக்க ஆண்டவரின் கடைக்கண் பார்வை தற்பொழுது உகண்டா பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே உகண்டாவை ஆளும் முசேவெனி அரசுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்து வருகின்றது. முசேவெனி மட்டுமல்ல, ருவாண்டாவின் ககாமே கூட அமெரிக்காவின் நம்பிக்கைக்கு உரிய ஆப்பிரிக்க கூட்டாளி தான். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், அயல்நாடான கொங்கோவினுள் படைகளை அனுப்பினார்கள். வைரம், மற்றும் கொல்த்தான் போன்ற கனிம வளங்களைக் கொள்ளையடித்தார்கள். அதற்காக ஆயிரக்கணக்கான அப்பாவி கொங்கோலியர்களை படுகொலை செய்தார்கள். இந்த விபரம் எல்லாம், ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் விரிவாக எழுதப் பட்டுள்ளது. இருந்தாலும், உகண்டா இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கும், ஆயுத விநியோகம் செய்யவும் அமெரிக்கா ஒரு போதும் பின் நின்றதில்லை.

Kony 2012 வீடியோவை விமர்சிக்கும் ஆப்பிரிக்க புத்திஜீவிகள், அது "வெள்ளையரின் காலனிய கால மனோபாவத்தை காட்டுவதாக" கூறுகின்றனர். அதாவது, "ஆப்பிரிக்காவின் பிரச்சினைகளுக்கு ஆப்பிரிக்கர்களால் தீர்வு காண முடியாது. அதற்கு மேலைத்தேய நாட்டவரின் தலையீடு அவசியம்." என்பதையே மறைமுகமாக தெரிவிக்கின்றது. "ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் சொல்லிக் கொடுப்பது வெள்ளையின கனவான்களின் கடமை." என்ற வெள்ளை இனவாதத் திமிர் இன்னமும் மறையவில்லை. இரு வருடங்களுக்கு முன்னர், உகண்டா அரசும், LRA யும் பேச்சுவார்த்தை நடத்தின. அதனால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. LRA போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டமும் குறிப்பிடத்தக்களவு பலனைக் கொடுத்துள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான அழுத்தம் கொடுப்பதைப் பற்றி, Kony 2012 வீடியோ பேசவில்லலை. மாறாக இராணுவ நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகின்றது! அதிக பட்சம் இருபதாயிரம் போராளிகளைக் (உண்மையான எண்ணிக்கை அதை விடக் குறைவாக இருக்கலாம்.) கொண்ட இயக்கத்தை பிடித்து அழிப்பதற்கு, அமெரிக்கப் படைகளை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? போரில் ஈடுபடும் மறு தரப்பான உகண்டா அரசுடன் ஒத்துழைப்பது சரியாகுமா? இவை எல்லாவற்றையும், நாம் ஏற்கனவே ஈழப் போரில் பார்த்து விட்டோம். ஏகாதிபத்தியம் தயாரித்த துன்பியல் நாடகம், இன்று வேறொரு மேடையில் அரங்கேறுகின்றது. நடிகர்கள் மட்டுமே மாறியிருக்கின்றனர். கதை ஒன்று தான்.

26 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டம், அமெரிக்க அரசின் கண்களுக்கு இப்பொழுது தான் தெரிந்ததாம்! அதுவும் "இன்விசிபில் சில்ட்ரன்" என்ற, தொண்டு நிறுவனத்தின் பிரச்சாரத்தின் விளைவாக? எமது காதில் நன்றாகத் தான் பூச் சுற்றுகிறார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் கிரிமினலான ஜோசெப் கோனி, இப்பொழுது எங்கே இருக்கிறார் என்ற விடயம் யாருக்கும் தெரியாது. ஜோசெப் கோனி உகண்டாவில் இல்லையென்றும், சில வருடங்களுக்கு முன்னர், அயல்நாடான மத்திய ஆப்பிரிக்க குடியரசில் காணப்பட்டதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இன்னும் சிலர், அவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். பின்லாடனை பிடிக்கப் போன கதை போலத்தான் இதுவும் அமையப் போகின்றது. 2011 ம் ஆண்டே, நூறுக்கும் குறையாத அமெரிக்க சிறப்புப் படையினர், உகண்டாவில் வந்திறங்கி விட்டனர். "கோனி பிடிக்கும் போரில்", உகண்டா இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கின்றனர். மேலதிக துருப்புகளை அனுப்பி அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை நியாயப் படுத்தும் நோக்குடன், Kony 2012 வீடியோ தயாரிக்கப் பட்டிருக்கலாம். ஒரு நாட்டில், அமெரிக்கப் படையினரின் பிரசன்னம் அதிகரிக்கின்றது என்றால், பின்னணியில் ஏதாவது பொருளாதாரக் காரணிகள் இருக்குமே? உகண்டாவில் எண்ணெய் விளைகின்றதா?

நான்கு வருடங்களுக்கு முன்னர், உகண்டாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டது! கிரிமினல் கோனியும், LRA யின் சிறார் போராளிகளும் உலாவும் வட-மேற்குப் பகுதியில், கொங்கோ எல்லைக்கு அருகில், எண்ணை வயல்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அகழ்வு வேலைகள் முழு மூச்சுடன் தொடங்கப் பட்டால், நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் பீப்பாய் எண்ணை உற்பத்தி செய்யலாம். எண்ணெய் கண்டுபிடித்த நாளில் இருந்து, பல வெளிநாட்டுக் கம்பனிகள் போட்டி போடுகின்றன. அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், சீனர்கள் என்று பலர் வந்து போகின்றனர். உகண்டா எண்ணையில் முதலிட பலர் முன்வந்தாலும், அதனை சுத்திகரிப்பதற்கு அதிக செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. அதனால், எண்ணை உற்பத்தி இன்னமும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. ஏற்கனவே சூடானில் நடந்ததைப் போல, சீனர்களை விரட்டி விட்டு, உகண்டா எண்ணைக்கு ஏகபோக உரிமை கொண்டாடும் எண்ணம் அமெரிக்கக் கம்பனிகளுக்கு இருக்கலாம்.

Kony 2012 வீடியோ தயாரித்த இன்விசிபில் சில்ட்ரன் என்ற தொண்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் ஒழுங்காக பராமரிக்கப் படுவதில்லை. அந்த நிறுவனம், தனக்கு நிதி கொடுக்கும் புரவலர்கள் யார், என்ற விபரங்களை மறைத்து வருகின்றது. பாடசாலை/கல்லூரி மாணவர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு மட்டுமே கணக்கு காட்டுகின்றது. உண்மையில், இந்த தொண்டு நிறுவனத்திற்கு அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகள் நிதி வழங்குவதாக எழும் சந்தேகங்களை மறுக்க முடியாது. மேலும், நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் வெறும் 31 % மட்டுமே, தொண்டு வேலைகளுக்காக செலவிடப் படுகின்றது. மிகுதித் தொகை, முகாமையாளர்களின் ஊதியத்திற்கும், பிரயாணத்திற்கும் செலவிடப் படுகின்றது. இந்த விபரம் எல்லாம், இன்விசிபில் சில்ட்ரன் நிறுவனத்தின் கடந்த வருட ஆண்டறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளவை.

கோனி பற்றியும், LRA பற்றியும், இன்விசிபில் சில்ட்ரன் தனது பிரச்சார வீடியோவில் கொடுக்கும் தகவல்களும் சர்ச்சைக்கு உரியவை. 2006 ம் ஆண்டில் இருந்து LRA தாக்குதல்கள் பெருமளவு குறைந்து விட்டன. அந்த இயக்கப் போராளிகளின் எண்ணிக்கை, சில நூறுகளாக குறைந்திருக்கலாம் எனவும், உகண்டாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் LRA நடமாட்டம் இருப்பதாக, வீடியோவில் குறிப்பிடப்படும் இடமும் சர்ச்சைக்கு உரியது. வட-மேற்கு உகண்டாவில், கொங்கோ, மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசுகளை அண்மித்த எல்லையோர மாவட்டத்தின் பெயர் குறிப்பிடப் படுகின்றது. அந்தத் தகவல் சொல்ல வரும் செய்தி என்னவெனில், உகண்டாவில் மட்டுமல்லாது, அயல் நாடுகளிலும் கோனியும், LRA யும் மறைந்திருக்கலாம். அமெரிக்க இராணுவம் அந்த நாடுகளுக்கும் செல்ல வேண்டும். குறிப்பாக, கொங்கோவின் கனிம வளங்கள் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த வழி திறந்து விடுகின்றது. "பின்லாடன் வேட்டை" போன்று, "கோனி வேட்டை" பல வருடங்கள் இழுத்துக் கொண்டே போகும். இன்னும் பத்து வருடங்கள் சென்றாலும், அமெரிக்கப் படையினர் கோனியை கண்டுபிடிக்கப் போவதில்லை. அது அவர்களது நோக்கமும் அல்ல. சர்வதேச நீதிமன்றம் ஆணையிட்ட கிரிமினலை தேடுவதாக சொல்லிக் கொண்டு காலம் கடத்தப் போகிறார்கள். அந்த கால அவகாசத்தை பயன்படுத்தி, அமெரிக்க பெரு நிறுவனங்கள் ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களை சூறையாடப் போகின்றன.



**********************************
மேலதிக தகவல்களுக்கு: