Showing posts with label கருத்துச் சுதந்திரம். Show all posts
Showing posts with label கருத்துச் சுதந்திரம். Show all posts

Thursday, July 23, 2020

"தமிழ்-பாகிஸ்தான்-நாடு" அரசின் கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை குறித்து...


கறுப்பர் கூட்டத்தின் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது எமது தார்மீகக் கடமை. கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் நடத்தியவர்களை கைது செய்தமை போன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்நாட்டின் மத நிந்தனை சட்டமானது, கறுப்பர் கூட்டம் வெளியிட்ட கந்த சஷ்டி வீடியோ போன்றவற்றை குற்றமாக கருதுகிறது. அதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியும். ஆனால் போலி "மதச்சார்பற்ற" நாடான இந்தியாவிலும் அது நடக்கும் என்பதை தமிழ் நாடு பொலிஸ் நமக்கு உணர்த்தியுள்ளது.

மதச்சார்பின்மை என்றால் கறுப்பர் கூட்டம் போன்று நாத்திக பிரச்சாரம் செய்பவர்களுக்கும் கருத்து சுதந்திர உரிமை இருக்கிறது என்று அர்த்தம். அதாவது ஒரு மதத்தை பிரச்சாரம் செய்பவருக்கும், அதே மதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்பவருக்கும் சம உரிமை உள்ளது. அரசமைப்பு சட்டமானது இவ்விரண்டையும் தனி மனித கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமாக அங்கீகரிக்கிறது. பாகிஸ்தான் போன்ற மதச்சார்பான நாடுகளில் மட்டுமே பிரஜைகளுக்கு அந்த உரிமை மறுக்கப் பட்டுள்ளது.

ஒரு தடவை டென் மார்க்கில் முகமது கார்ட்டூன் வெளியிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு மதவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்த நேரம் அவர்களுக்கு டேனிஷ் அரசு பொலிஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தது. அதைத் தான் இங்கே தமிழ் நாடு அரசு செய்திருக்க வேண்டும். கறுப்பர் கூட்ட செயற்பாட்டாளர்களுக்கு மதவாதிகள் அச்சுறுத்தல் விடுத்த நேரம், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டியது தமிழ் நாடு பொலிசின் கடமை. அதற்கு மாறாக அவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதுடன், அடாவடித்தனமாக யூடியுப் வீடியோக்களையும் அழித்துள்ளமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இது ஒரு அரச பயங்கரவாதம். இந்த நீதிக்கு புறம்பான செயலை கண்டிப்பதற்கு ஒவ்வொரு மனிதநேயவாதியும் முன்வர வேண்டும்.

இறுதியாக தமிழ் நாடு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் இது போன்ற மனித உரிமை மீறல்களை தொடர்ந்தும் செய்வீர்களானால் தயவுசெய்து மாநிலத்தின் பெயரை "தமிழ்- பாகிஸ்தான் நாடு" என்று சட்ட சபையில் தீர்மானம் போட்டு மாற்றி விடுங்கள். உங்களது மத அடிப்படைவாத அரசு பற்றி மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். இந்த விடயத்தில் தமிழ்நாடு அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான ஒற்றுமை என்ன? பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள மத நிந்தனை சட்டம் எவ்வாறு அடக்குமுறை அரசினால் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றது? சில தெளிவுபடுத்தல்களுக்காக அது குறித்தும் விரிவாக ஆராய்வது அவசியமாகிறது.

பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள மத நிந்தனை சட்டத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இஸ்லாமியரின் இறைதூதர் நபிகள் நாயகம் கூட சகிப்புத்தன்மையை மட்டுமே வலியுறுத்தி உள்ளார். மத நிந்தனை ஒரு குற்றம் என்று புனித நூலான குர்ஆனில் எங்குமே எழுதப் படவுமில்லை. இஸ்ரேல் போன்று, பாகிஸ்தானும் ஒரு மதத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட தேசியம் ஆகும். இஸ்லாம் என்ற மதம் மட்டும் இல்லையென்றால், பல்வேறு பட்ட மொழிகளைப் பேசும் மக்களையும், பழங்குடி இனத்தவரையும் ஒரே குடையின் கீழ் வைத்திருக்க முடியாது. ஆகவே மத நிந்தனைச் சட்டம் கூட மக்களை ஒடுக்குவதற்கான அரசின் கருவியாகவே பயன்படுத்தப் படுகின்றது. இது அரசியல், மதம் அல்ல.

தமிழ் பேசும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, பாகிஸ்தான் முஸ்லிம்களிலும் பெரும்பான்மையினருக்கு அரபு மொழி தெரியாது. அவர்களால் அரபு மொழியில் எழுதப்பட்ட குரான் மூல நூலை வாசிக்க முடியாது. பாகிஸ்தான் சனத்தொகையில் அரைவாசிப் பேர் சொந்த மொழியில் மொழிபெயர்க்கப் பட்ட புனித நூலை கூட வாசித்தறிய முடியாத அளவுக்கு கல்வியறிவில் குறைந்தவர்கள். இந்த நிலைமையை சில மத அடிப்படைவாத முல்லாக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தாம் விரும்பியவாறு பொழிப்புரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆனில் இல்லாததை எல்லாம் சொல்லி அப்பாவி மத நம்பிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள்.

பாகிஸ்தானில் எங்காவதொரு கிறிஸ்தவர், இந்து மத நிந்தனை சட்டத்தால் பாதிக்கப் பட்டால் மட்டுமே அது செய்தியாக வெளியுலகத்திற்கு தெரிய வருகின்றது. அங்கே பெருமளவில் பாதிக்கப்படும் முஸ்லிம்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் சிலநேரம் உயர்பதவி வகித்தால் மட்டுமே செய்தியாகிறது. சொந்த மெய்ப்பாதுகாவலரால் தெருவில் சுட்டுக்கொல்லப் பட்ட பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் தசீர் விவகாரம் ஒரு சிறந்த உதாரணம். தசீர் உடலில் இருபது துப்பாக்கி தோட்டாக்களை செலுத்திய கொலையாளி, இஸ்லாமிய மதவாதிகளால் நாயகனாக போற்றப் பட்டான். இந்த சம்பவத்தின் பின்னர் மத நிந்தனை சட்டம் அநீதியானது என்று யாரும் சொல்லத் துணியவில்லை.

சல்மான் தசீர் செய்த "குற்றம்" சர்ச்சைக்குரிய மத நிந்தனை சட்டத்தை நீக்குமாறு குரல் கொடுத்தது தான். பலர் தமது தனிப்பட்ட குரோதத்தை தீர்த்துக் கொள்வதற்கு மத நிந்தனை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதை அவர் ஊடகவியலாளர்களை கூட்டி அறிவித்தார். அந்தக் காலத்தில் உலகச் செய்தியாக வலம் வந்த ஆசியா பீபி வழக்கு தொடர்பாக அவ்வாறு பேசி இருந்தார். ஆசியா பீபி என்ற ஒரு எழுத்தறிவற்ற ஏழை கிறிஸ்தவ பெண், தாகத்தை தணிப்பதற்காக ஒரு முஸ்லிம் பெண்ணின் குவளையில் இருந்த தண்ணீரை குடித்த ஒரு அற்பக் காரணத்திற்காக அவர் மீது மத நிந்தனை குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தார்கள். அவர் மீது மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தது.

ஒரு கிறிஸ்தவப் பெண் தண்ணீரை தொட்டு விட்டதால் தீட்டுப் பட்டு விட்டது என்பது தான் அவர்களது பிரச்சினை. சமுதாயத்தில் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியினராக இருப்பதால் அவர்கள் அசுத்தமானவர்கள், எதைத் தொட்டாலும் தீட்டாகி விடும் என்பது, கிராமப் புறங்களில் உயர்த்தப்பட்ட சாதியினராக உள்ள முஸ்லிம்கள் பலரின் நம்பிக்கை. அதாவது இது இந்தியாவில் நிலவும் தீண்டாமைக் கொடுமை போன்றது. பாகிஸ்தானிலும் அதே சாதிப் பிரச்சினை தான். எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அங்கே ஆதிக்க சாதியினர் இஸ்லாமிய மதம் சார்ந்த சட்டத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்பது மட்டுமே வித்தியாசம். நண்பர்களே, இது வெறுமனே மதம் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. சாதிய, வர்க்க முரண்பாடுகளும் இதற்குள் மறைந்துள்ளன.

இந்தியாவில் பார்ப்பனர்கள் தமது சாதியை மறைத்துக் கொண்டு இந்துக்கள் என்ற பெயரில் அதிகார வர்க்கமாக வலம் வருகிறார்கள். பாகிஸ்தானிலும் அதே போன்ற உயர் சாதிய பெருமிதம் கொண்டவர்கள் தான் இஸ்லாமிய பாதுகாவலர்கள் வேடம் போடுகிறார்கள். (பாகிஸ்தானில் இன்றைக்கும் பலருக்கு பிராமண சாதிப்பெயர்கள் உள்ளன.) பெரும் நிலவுடைமையாளர்களாக, செல்வந்தர்களாக உள்ள உயர் சாதிய அதிகார வர்க்கம் மதத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்துகிறது. அது திரைமறைவில் பாகிஸ்தான் அரசை ஆட்டிப் படைக்கிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் இந்துத்துவா பாஜக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய மாதிரி, பாகிஸ்தானில் இன்றைக்கும் ஒரு "இஸ்லாமிய- பாஜக" ஆட்சிக்கு வர முடியாமல் உள்ளது. பொதுத் தேர்தலில் அத்தகைய கட்சிகள் ஐந்து சதவீத வாக்குகளை கூட பெறுவதில்லை. அவர்கள் தேர்தலில் வெல்கிறார்களோ இல்லையோ, நடைமுறை அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

மத நிந்தனை சட்டம் கிறிஸ்தவ நாடுகளில் இல்லையா என்று கேட்கலாம். ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் மத நிந்தனை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. அப்போதும் சில அடிப்படைவாத கிறிஸ்தவ மதகுருக்கள் சொல்வதெல்லாம் சட்டமாக இருந்தது. பைபிளை எழுதியது ஒரு மனிதன் என்று யாராவது சொன்னாலே அது ஒரு மத நிந்தனைக் குற்றமாக கருதப் பட்டது. அதாவது மக்களை கேள்வி கேட்க விடாமல் அடிமைகளாக வைத்திருப்பதற்கு மத நிந்தனைச் சட்டம் ஆட்சியாளர்களுக்கு உதவுகிறது. இதை நாங்கள் ஒரு கலாச்சார புரட்சி ஊடாகத் தான் மாற்றியமைக்க முடியும்.

Monday, November 09, 2015

கோவனின் கைது : அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மறுக்கப் படும் கருத்துச் சுதந்திரம்


மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் அபிமான புரட்சிகர பாடகர் கோவன் கைது செய்யப் பட்டதும், தமிழ்நாட்டில் மீண்டும் கருத்துச் சுதந்திர அடக்குமுறை பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. அரசு நடத்தும் டாஸ்மார்க் மதுக்கடை ஒழிப்புப் பாடலைப் பாடியதாலேயே கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. அதனால், அந்தப் பாடல் இணையத்தில் மிக வேகமாகப் பரவியது. 

யாருக்குமே தெரியாமல் இருந்த கோவன் என்ற பாடகரை, நாடறிய வைத்த பெருமை, ஆளும் ஜெயலிதாவின் ஆதிமுக அரசைச் சேரும். முதல்வர் ஜெயலிதாவை நையாண்டி செய்து பாட்டுப் பாடியதால் கைது செய்யப் பட்டதாக தெரிவிக்கப் பட்டாலும், கோவனின் கைதுக்கு வெளியில் சொல்லப் படாத சில காரணங்களும் இருக்கலாம்.

கோவனின் கைது தொடர்பாக தந்தி டிவியில் ஒரு விவாத அரங்கு இடம்பெற்றது. அந்த விவாதம், மீன் சந்தை ஆரவாரம் போன்று காட்சியளித்தது. ஆதிமுக சார்பில் கலந்து கொண்ட சரஸ்வதி, தனது கருத்துக்களை மட்டுமே எல்லோரும் கேட்க வேண்டுமென்பது போல, உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்களை பேச விடாமல் இடையூறு செய்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியை ஒழுங்கமைக்க வேண்டிய ரங்கராஜ் பாண்டே, இடையூறுகளை கட்டுப்படுத்தாமல், தானும் அதே தவறைச் செய்து கொண்டிருந்தார்.


விவாதத்தில் கலந்து கொண்டவர்களுடன், இந்திய அரசியல் சாசன விதிகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த ரங்கராஜ் பாண்டே, CPML (Peoples Liberation) சார்பில் கலந்து கொண்ட சதீஷிடம் மட்டும் சம்பந்தாசம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். ரஷ்யாவில் அப்படி, சீனாவில் இப்படி என்று தனது "மேதாவிலாசத்தை" காட்டினார். ஓர் இந்தியரான சதீஷுக்கும், ரஷ்யா அல்லது சீனாவுக்கும் என்ன சம்பந்தம்?

இந்திய அரசியல் சட்டங்களை கூட கரைத்துக் குடித்திருக்கும் அறிவுஜீவிகள், கம்யூனிசம் என்று வந்து விட்டால் மட்டும் படிக்காத பாமரர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள். கம்யூன் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து தான், கம்யூனிசம் வந்தது என்பதும், உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சி பாரிஸ் நகரில் நடந்தது என்பதும், இந்தப் படித்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.

ரஷ்யா, சீனாவில் மட்டும் தான் கம்யூனிசம் தோன்றியது என்று, இவர்கள் எங்கே படித்தார்கள் என்று தெரியவில்லை. கிரேக்க, ஜேர்மனிய தத்துவங்களின் தொடர்ச்சியாகத் தான் மார்க்சியம் தோன்றியது என்பதையாவது அறிந்து வைத்திருப்பது நல்லது. கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கூட, தமது கம்யூனிச சித்தாந்தத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக, ஆதி கால தமிழ் சமுதாயத்தை பற்றி சில குறிப்புகள் எழுதி இருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான், ஜனநாயகம் பற்றிய இவர்களது புரட்டும். எதிர்க் கட்சி என்பது, எதிர்த்துப் பேசும் கட்சி அல்ல. அரசுக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி என்பதை மறந்து விட்டு, ரங்கராஜ் பாண்டே இந்திய ஜனநாயகம் பற்றி பாடம் நடத்துகிறார். உண்மையான எதிர்க் கட்சிகளுக்கு (அவை தேர்தலில் போட்டியிடாதவையாக இருந்தாலும்) கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுகின்றது என்பதைத் தான், கோவனின் கைது எடுத்துக் காட்டுகிறது.

டாஸ்மார்க் எதிர்ப்புப் பாடல் மட்டும் கைதுக்கு காரணம் அல்ல. வினவு தளம் நடத்தும் கண்ணையன் ராமதாஸ் மீதும், தேசத் துரோக குற்றப்பத்திரிகை எழுதப் பட்டுள்ளது என்ற உண்மையை, அந்த நிகழ்ச்சியிலேயே ரங்கராஜ் பாண்டே அடிக்கடி சுட்டிக் காட்டினார். ஆட்சியாளர்களை கேலி செய்வது தவறு என்றால், அது என்ன வகை ஜனநாயகம்? அதற்குப் பெயர் சர்வாதிகாரம் அல்லவா?

இந்த உண்மையை புரிந்து கொள்ளாத ரங்கராஜ் பாண்டே, சதீஷ் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டுகிறார். அதற்கு "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற சொற்பதத்தை எடுத்துக் காட்டுவது நகைப்புக்குரியது. தற்போது உலக நாடுகள் முழுவதும் நடைமுறையில் உள்ள முதலாளிய வர்க்க சர்வாதிகாரம் முறியடிக்கப் பட்டு, அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர வேண்டும் என்பது ஒரு தத்துவார்த்த வாதம். அதை ஒரு தத்துவமாகப் பார்க்காமல், "சர்வாதிகாரம்" என்ற ஒரு சொல்லை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.

இந்த இலட்சணத்தில் தான், இந்திய தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடக்கின்றன. இவற்றை விட, சென்னை நகர சலூன்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள் ஆரோக்கியமானவை. தொலைக்காட்சிக் கமேராக்களை அங்கே திருப்புங்கள்.

"தோழர் கோவனின் கைதுக்கு உண்மையான காரணம், அவர் பாடிய டாஸ்மார்க் பற்றிய பாடல் அல்ல. அதை மக்களிடையே கொண்டு சென்று பரப்பிய வினவு இணையத் தளம். இந்தத் தேசத் துரோக வழக்கின் முதல் குற்றவாளி, வினவு இணையத்தள நிர்வாகி கண்ணையன் ராமதாஸ்."

இந்த உண்மையை தந்தி டிவி இல் ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, அழுத்தம் திருத்தமாக கூறினார். விவாதத்தில் கலந்து கொண்டு, கோவனின் கைதுக்கு ஆதரவாக பேசிய, ஆதிமுக பிரமுகர் சரஸ்வதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் ஆகியோரும், சமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் பரவியது என்று குற்றஞ்சாட்டினார்கள்.

"நானும் பேஸ்புக் பார்க்கிறேன். இண்டைக்கு எத்தனை பேரிடம் மொபைல் போன், வாட்ஸ் ஆப் இருக்கு. இந்தப் பாடல் எத்தனை பேரிடம் பரவி இருக்கும்?" என்று சரஸ்வதி பொரிந்து தள்ளினார். அதை ஆமோதிப்பது போல முருகனும் "பேஸ்புக்கில் அரசை விமர்சித்து எழுதுவது தேசத்துரோகம்... இப்படியே விட்டால் கழைக் கூத்தாடியும் பேஸ்புக்கில் அரசியல் செய்யத் தொடங்கி விடுவான்." என்று தனது அச்சத்தை வெளியிட்டார்.

இவர்களின் கூற்றில் இருந்து ஓர் உண்மை புலனாகும். அண்மைக் கால தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஓர் அமைதிப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதிகாரம் அதையிட்டு அஞ்சி நடுங்குகிறது. கருத்துச் சுதந்திரம் பற்றிய மாய்மாலம் எல்லாம், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்திற்கு மட்டுமே உரியது. குரலற்ற அடித்தட்டு மக்களும் கருத்துச் சுதந்திர உரிமையை பாவிப்பது அரசு அதிகாரத்திற்கு ஆபத்தானது.

எனக்கும் கூட, கோவன் யார் என்பது கைதுக்குப் பின்னரே தெரியும். ஆனால், அவர் பாடிய பாடல்களை கடந்த பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். மகஇக இயக்கத்தின் அரசியல் பிரச்சாரப் பாடல்களை பாடும், கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர், அனைவரையும் கவரும் வல்லமை பெற்றிருந்தார். ஆந்திராவில் புரட்சிகர தெலுங்குப் பாடல்களை பாடும் கத்தாரின் பாணியை, தமிழுக்கு கொண்டு வந்த பெருமை அவரைச் சாரும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர், கோவன் பாடிய பாடல்கள் ஒலிப்பேழைகளாக (ஆடியோ கேசட்) விற்பனை செய்யப் பட்டன. சென்னை கீழைக்காற்று புத்தகக் கடையில் விற்பனையான கேசட்டுக்களை, வெளிநாடுகளில் இருந்து கொண்டு தருவித்து, கேட்டு மகிழ்ந்த ஆதரவாளர்களில் நானும் ஒருவன்.

இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம், கோவன் பாடத் தொடங்கி, அவை கேசட்டுக்களாக விற்பனை செய்யப் பட்ட காலத்திலும், ஜெயலலிதா ஆட்சி நடந்து கொண்டிருந்தது! அப்போதும் ஜெயலலிதா ஆட்சியை கிண்டலடித்து பல பாடல்களைப் பாடி இருக்கிறார்.

உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியுமளவிற்கு நடந்த, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் திருமணத்தை நையாண்டி செய்யும் பாடலை, அன்றைய அதிமுக கட்சிக்காரர்கள் யாரும் கேட்கவில்லையா? "அசைந்து வருகிறது நகைக்கடை... தங்கம் வேணுமா... சொல்கிற இடத்தில வெட்டனும்..." என்றெல்லாம் பாடினார்கள். அதுவும், ஜெயலிதா ஆட்சியில் அமர்ந்து தமிழ்நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலத்தில்!

புரட்சிகர பாடகர், தோழர் கோவனை அப்போது கைது செய்யாமல், இப்போது கைது செய்யக் காரணம் என்ன? அதைத் தான் தந்தி டிவி விவாத அரங்கில் வெளிப்படையாகக் கூறினார்கள். இந்தக் காலத்தில், தமிழகம் முழுவதும் பரவி விட்ட, இணையப் பாவனை, சமூக வலைத் தளங்கள், ஸ்மார்ட் போன்கள் தான் காரணம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, இப்படி ஒரு சமூக மாற்றம் வரும் என்று ஆட்சியாளர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். வசதி படைத்த மத்தியதர வர்க்கம் மட்டுமே இணையம் பாவித்த காலம் மலையேறி விட்டது. இன்று காய்கறிக் கடைக்காரன், கிரமாப்புற விவசாயி எல்லாம், இணையப் பாவனை கொண்ட ஸ்மார்ட் போன் பாவிக்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.

சமூகவலைத்தளங்களிலும், ஒரு சில மத்தியதர வர்க்க இளைஞர்கள் மட்டும் கூடியிருந்து, அமெரிக்க சுகபோக வாழ்க்கை பற்றி அரட்டை அடித்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், கடந்த ஏழாண்டு காலத்தில், வினவு போன்ற கம்யூனிசக் கொள்கைகளை பரப்புவோரும், சமூக வலைத்தளங்களை பாவிக்கத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் வலைப்பூவாக தொடங்கிய வினவு, குறுகிய காலத்திலேயே பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்த இணையத் தளமாக மாறியது.

"பொதுக்கூட்டம் போட்டு, மேடையேறிப் பேசுங்கள்... ஆனால் பேஸ்புக்கில் எழுதாதீர்கள்..." என்று, அதிகார வர்க்கத்தின் குரலாக ஒலிக்கும் சரஸ்வதியும், முருகனும் கூறுகின்றனர். பணபலம் படைத்த பெரிய கட்சிகள் மட்டுமே, மேடை போட்டுப் பேசி ஆயிரக் கணக்கான மக்களை கவர முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக, மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) தமிழகத்தில் இயங்கி வருகிறது. அறுபதுகளில் இருந்த நக்சல்பாரி இயக்கத்தின் தொடர்ச்சி என்பதும், ஜனநாயக வழிகளைப் பயன்படுத்தி போராடும் இயக்கம் என்பதும் அரசுக்கு நன்றாகத் தெரியும். சென்னை கீழைக்காற்று புத்தகக் கடைக்கு வரும், கியூ பிராஞ்ச் புலனாய்வு அதிகாரிகள், "ஒன்றும் தெரியாத மாதிரி" நூல்களை வாங்கிச் செல்வார்கள்.

சென்னை மாநகர மின்சார ரயிலில், பஸ் வண்டிகளில், மகஇக தோழர்கள் ஏறி, தமது வெளியீடுகளான புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் சஞ்சிகைகளை, ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்வார்கள். இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும்.

அப்போதெல்லாம், மகஇக பிரச்சாரம் செய்யும் கருத்துக்கள், மிக மிகக் குறைந்தளவு மக்களிடம் மட்டுமே போய்ச் சேர்ந்தது. இப்போதும் அப்படியா? உலகமயமாக்கலின் விளைவுகளில் ஒன்றாக, இணையப் பாவனையும், ஸ்மார்ட் போன்களும் எல்லோரும் வாங்கிப் பாவிக்குமளவிற்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்க மக்கள் கூட, மிக விரைவாக நவீன தொலைத்தொடர்பு வசதிகளை தமதாக்கிக் கொண்டனர். உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இருந்து உருவான படித்த வாலிபர்கள், மிக இலகுவாக வினவு பிரச்சாரம் செய்யும் புரட்சிகர கம்யூனிசக் கருத்துக்களால் ஆகர்சிக்கப் படுகின்றனர். அதுவே வினவு இணையத் தளத்தின் வெற்றி எனலாம்.

"இதை இப்படியே விட்டு விடலாமா?" தந்தி டிவி விவாதத்தில், அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாக பேசிய, சரஸ்வதி, முருகன் மட்டுமல்ல, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரங்கராஜ் பாண்டே கூட, அந்தக் கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

அது தானே? அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் அரசியல் கருத்துகளுக்கும் சுதந்திரம் கொடுத்தால் என்னாகும்? நாளைக்கு அரசு அதிகாரத்திலும், மேட்டுக்குடியினரிடம் பங்கு கேட்டு வர மாட்டார்களா? அனைத்து மக்களுக்குமான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். அந்த உண்மையை, விவாதத்தில் பேசிய (முன்னாள்) அரசு அதிகாரி முருகன் நேரடியாகவே கூறினார்: "உனது சுதந்திரம் எனது மூக்கு நுனி வரையில் தான்!" 

நான் எழுதிய இந்தப் பதிவையும், தமிழ் நாட்டு அரசு அதிகாரிகளும், புலனாய்வுத் துறையினரும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். சிலநேரம் தங்கள் கணனியில் சேமித்தும் வைக்கலாம். ஏற்கனவே அப்படி எல்லாம் நடக்கிறது என்பதைத் தான், தந்தி டிவி விவாத அரங்கமும் எமக்குத் தெளிவு படுத்தி உள்ளது.

ஆகவே, தோழர் கோவன் கைது செய்யப் பட்ட பின்னர், வினவு ஆற்றிய எதிர்வினையை சொல்லி முடிக்கலாம் என நினைக்கிறேன். "கோவன் பாடிய அதே பாட்டை பாடு அஞ்சாமல் பாடு!" என்ற கோஷத்தை வினவு எழுப்பியது. அதே மாதிரி, "பேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர், வாட்ஸ் அப்பில், எழுது அஞ்சாமல் எழுது!"


தோழர் கோவன் பாடிய டாஸ்மார்க் ஒழிப்புப் பாடல்:


தந்தி டிவி இல் ஒளிபரப்பான விவாத அரங்கம்:

Sunday, January 18, 2015

"கருத்துச் சுதந்திரவாதிகள்" உங்களுக்கு கூறாமல் மறைத்த உண்மைகள்


இவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன?

பத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, "யூதர்களுக்கு எதிரானது" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது.

சார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது.
French cartoonist Sine on trial on charges of anti-Semitism over Sarkozy jibe 

தற்போது கருத்துச் சுதந்திரத்திற்காக வக்காலத்து வாங்கும் போராளிகள், இது போன்ற சுதந்திர மறுப்புகளை கண்டுகொள்ளாத மர்மம் என்னவோ?

மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் எவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பி, மக்களை மூளைச் சலைவை செய்கின்றன என்பது, சில அடிமை விசுவாசிகளின் கருத்துக்களை வாசிக்கும் பொழுது தெரிகின்றது.

Charlie Hebdo தாக்குதல் கருத்துச் சுதந்திரத்தை வெறுப்பவர்களின் பயங்கரவாதம் என்ற கருத்தியலே அபத்தமானது. அமெரிக்காவில் 9/11 தாக்குதலின் பின்னர், "அவர்கள் எமது சுதந்திரத்தை வெறுக்கிறார்கள்..." என்று புஷ் சொன்னதைப் பிரதிபலிக்கின்றது.

இதனை வெறுமனே மதம் சார்ந்த பிரச்சினையாக பார்ப்பது, "கலாச்சாரங்களின் மோதல்" என்ற காலாவதியான மேலைத்தேய கோட்பாட்டை மீளுருவாக்கம் செய்கின்றது. கலாச்சாரங்களின் மோதல் குறித்து கோட்பாட்டு விளக்கம் கொடுத்த அமெரிக்க பேராசிரியர் பூக்கியாமா கூட, தான் அன்று தப்புக் கணக்கு போட்டு விட்டதாக ஒப்புக் கொண்டார். அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பு தனது கண்களை திறந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்செயலாக மேற்குலகில் கிறிஸ்தவ கலாச்சாரமும், மத்திய கிழக்கில் இஸ்லாமிய கலாச்சாரமும் இருப்பதால், அது அடிப்படையில் கலாச்சாரங்களின் மோதல் ஆகாது. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பல பிரச்சினைகள், ஐரோப்பிய காலனிய கால கட்டத்தின் தொடர்ச்சியாகவே நடக்கின்றன. தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள், ஐரோப்பிய வல்லரசுகள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்பதை, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

சார்லி எப்டோ விவகாரம் தொடர்பாக எழுந்து வரும் பிரச்சினைகள் யாவும், "கிறிஸ்தவ - முஸ்லிம் பிரச்சினை" என்று தவறாக புரிந்து கொள்ளப் படுகின்றன. அந்த அபத்தமான கருத்தை பல தமிழர்களும் எதிரொலிக்கின்றனர். உண்மையில், இவற்றை மதப் பிரச்சினையாக கருதிய மதத் தலைவர்கள், இரண்டு மதங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தி இருந்தனர். போப்பாண்டவரும் அவர்களில் ஒருவர்.

ஆனால், மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தொடங்கி சில நாட்களிலேயே, தாங்கள் பிரச்சினையை தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டார்கள். உண்மையில், இங்குள்ள அடிப்படை பிரச்சினை மதம் அல்ல. நவ காலனித்துவம், வெள்ளையர்களின் நிறவெறி, ஐரோப்பிய இனத் துவேஷம், பொருளாதார மேலாண்மை, குடியேறிகளின் பிரச்சினை... இன்ன பிற ஆகும்.

தமிழீழம் கோரிப் போராட்டம் நடத்திய புலிகளும், அவர்களை ஆதரித்த மக்களும், இலங்கையின் இனப் பிரச்சினையானது சிங்கள - தமிழ் முரண்பாடு என்று தான் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு நவ காலனித்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியான தமிழ் தேசியம் ஊடாக எதிர்ப்புக் காட்டத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான், முன்னாள் காலனிய அடிமை நாடுகளில் வாழும் மக்கள் முஸ்லிம்கள் என்பதால், மதத்தின் ஊடாக தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அடிப்படைப் பிரச்சினை நவ காலனித்துவம். நைஜர் நாட்டில் நடந்த, சார்லி எப்டோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பிரெஞ்சு கலாச்சார நிலையம் எரித்து நாசமாக்கப் பட்டது. (French centre in Niger set ablaze in Charlie Hebdo protests http://www.france24.com/en/20150116-niger-zinder-french-cultural-centre-set-ablaze-charlie-hebdo-protest-prophet-mohammed-cartoon/)

நைஜர் நாட்டில் நிலை கொண்டுள்ள பிரெஞ்சு படையினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகளில், பிரெஞ்சு காலனியாதிக்கம் இன்னமும் தொடர்கின்றது. ஆனால், உள்ளூர் ஆட்சியாளர்கள், காலனியாதிக்கத்தை மறைக்கும் முகமூடியாக பயன்படுகின்றனர். (Why Charlie Hebdo attack is not about Islam http://www.aljazeera.com/indepth/opinion/2015/01/charlie-hebdo-islam-cartoon-terr-20151106726681265.html)

கருத்துச் சுதந்திர அடிப்படைவாதிகள், நிச்சயமாக இந்த உண்மைகளை உங்களுக்கு சொல்லப் போவதில்லை. பிரான்ஸ் நாட்டு பிரஜைகளில், அண்ணளவாக அரைவாசிப் பேர், "முஸ்லிம்களின் இறைதூதர் முகமதுவை கேலி செய்யும் கார்ட்டூன்கள் தவிர்க்கப் பட வேண்டியவை" என்று கருத்துக் கூறியுள்ளனர். அதாவது, அரைவாசி பிரெஞ்சு மக்கள், சீண்டிப் பார்க்கும் வக்கிரமான கேலிச் சித்திரங்கள் கருத்துச் சுதந்திரத்திற்குள் அடங்காது என்று நம்புகிறார்கள். (Caricatures de Charlie Hebdo : Plus de 4 Français sur 10 estiment qu'il faut éviter les dessins de Mahomet; http://www.huffingtonpost.fr/2015/01/18/caricatures-charlie-hebdo-francais-eviter-dessins-mahomet_n_6495204.html?ncid=fcbklnkfrhpmg00000001

மேலும், Charlie Hebdo பத்திரிகையின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் ஆசிரியர், பத்திரிகை நிர்வாகம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்ததாக குற்றஞ் சாட்டியுள்ளார். ஒரு கேலிச்சித்திரத்தை ஒரு தடவை போட்டால் அது அந்தப் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரம். ஆனால், ஒரே மாதிரியான கார்ட்டூன்களை திரும்பத் திரும்ப போடுவதும், உச்ச கட்ட வக்கிர புத்தியுடன் வரைவதும், குறிப்பட்ட சிலரை வேண்டுமென்றே ஆத்திரமுற வைக்கும் நோக்குடன் நடந்துள்ளது. இதையும் அந்த முன்னாள் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

அநேகமாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்குடன், அல்லது வர்த்தக நோக்கில் செயற்பட்ட யாரோ சிலரின் சதியாலும் இந்தத் தூண்டுதல்கள் இடம்பெற்று இருக்கலாம். அதற்கு ஊடகவியலாளர்கள் பலியாகி உள்ளனர். தாக்குதலில் கொல்லப் பட்ட, Charlie Hebdo பத்திரிகை ஆசிரியர் உட்பட சில ஊடகவியலாளர்கள், போலிக் கம்யூனிசக் கட்சியான PCF அனுதாபிகள். (l'Humanité, 14 ஜனவரி 2015) தாம் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுப்பதாக அப்பாவித்தனமாக நம்பி உள்ளனர். (படுகொலைகள் பிரெஞ்சு சமுதாயத்தை உணர்வு ரீதியாக ஒன்றிணைத்தன் காரணம் புரிந்து கொள்ளத் தக்கதே.)

இந்தத் தாக்குதலை அல்கைதா நடத்தி இருக்கிறது என்று பிரெஞ்சு அரசு கூறுகின்றது. ஆனால், அல்கைதாவுக்கும் சிஐஏ க்கும் இடையிலான தொடர்புகள் ஊர் அறிந்த இரகசியம். பொலிஸ் நடவடிக்கையில் கொல்லப் பட்ட பயங்கரவாதி, தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறான். அதில், 2009 ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய விமானத்தில், பாதணிக்குள் குண்டு வைத்துக் கொண்டு சென்ற நபருடன், யேமனில் ஒன்றாக தங்கியிருந்ததாக கூறியுள்ளான். அந்த நபர் சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

2006 ம் ஆண்டு, பிரான்ஸ் அரசாங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த வலதுசாரி UMP கட்சி, மத நிந்தனை தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர விரும்பியது. ஆனால், கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த யோசனை பின்போடப் பட்டது. (l'Humanité, 15 ஜனவரி 2015) தற்போது நடந்து முடிந்துள்ள, பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கொடுத்துள்ளது.

மத நிந்தனை தடைச் சட்டம் அமுல்படுத்தப் பட்டால், அதனால் பலனடையப் போவது முஸ்லிம்கள் அல்ல. மாறாக, கிறிஸ்தவ - வெள்ளையின கலாச்சார மேலாதிக்கத்திற்காக பாடுபடும், தீவிர வலதுசாரி சக்திகள் தான். ஆகவே, பாரிஸ் தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகள், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்து விழுத்தி உள்ளனர் என்பது தெளிவாகின்றது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்

Wednesday, October 08, 2014

பிரான்ஸ் : உலகின் முதலாவது பேரினவாத அரசு தோன்றிய நாடு

இந்தப் படத்தில் இருப்பது ISIS போன்றதொரு இஸ்லாமிய தீவிரவாதக் குழு அல்ல. "நாகரிகத்தில் சிறந்த" பிரெஞ்சுப் படையினர். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான அல்ஜீரியாவில் நடந்த போரின் பொழுது, எதிராளிகளின் தலைகளை வெட்டி மகிழும் காட்சி. பிரான்சில் இதற்குப் பெயர்: "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்."


ஒரு மேற்குலக, முதலாளிய விசுவாசியின் கேள்வி: 

//விவாதிப்பது எனது நோக்கமல்ல... மார்க்சியம் தெரியாதவனுமில்லை... என் வாழ்நாளில் நான் பொய்யனாக வாழ்ந்த காலம், புரட்சி பேசி திரிந்த காலமே. மேற்குலக நாடுகளைப் போல், அதிலும் பிரான்சை போல், "சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம்" என அரசியல் சாசனத்துடன் கூடிய ஒருநாட்டை ஒப்பீட்டு அடிப்படையில் (பிரான்சில் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இருக்கிறது) ஏன் மற்ற நாடுகளில் இல்லையா? இவற்றை விட, தலைசிறந்த முன்னுதாரணமான முதலாளித்துவ கொள்கை இல்லாத ஒரு நாடடின் பேர் உங்களால் தர முடியுமா? மனச்சாட்சியுடன் பதிலளியுங்கள்.// 

விவாதிப்பதற்கு முன்னர், ஒரு விடயத்தை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? "மார்க்சியம் தெரியாதவனல்ல..." என்று கூறும் ஒருவர், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகத் தான், மார்க்சியத்தின் தேவை உருவானது என்ற உண்மையை உணராதது ஏனோ? 

உலக வரலாற்றுப் பாதையில் பிரெஞ்சுப் புரட்சி முற்போக்கான பாத்திரம் வகித்துள்ளது என்று மார்க்சியம் கூறுவது தெரியாமல் போனது எப்படி? நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், லிபரல்வாதிகளும், முதலாளிகளும் அதிகாரத்தை கைப்பற்றினர்.

நீங்கள் கூறும் "சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்" என்பது லிபரல்வாதிகளின் அரசியல் கோட்பாடு. இன்று உலகில் உள்ள பெரும்பான்மையான அரசுகள், லிபரல் கொள்கை அடிப்படையில் தான் ஆட்சி அமைத்துள்ளன. இலங்கை, இந்தியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், பிரான்சில் தோன்றிய அதே லிபரல் கொள்கை தான் பின்பற்றப் பட்டு வருகின்றது. 

ஆனால், "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்று முழங்கிய அதே லிபரல் பிரெஞ்சு அரசு, கரீபியன் தீவுகளில் கிளர்ச்சி செய்த கருப்பின அடிமைகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுத்தது! கருப்பின அடிமைகளை சகோதரர்களாக அங்கீகரிக்கவில்லை. அவர்களை சமத்துவமாக நடத்தவில்லை. பிரான்சில், பிரெஞ்சு மொழியின் பேரினவாதம் நிலைநாட்டப் பட்ட வரலாறு தெரியாதா? உலகின் முதலாவது பேரினவாத அரசு பிரான்சில் தான் உருவானது. 

பிரான்சில் உள்ள சிறுபான்மை இனங்களான பாஸ்க், ஒக்கிட்டான், பிறேய்ட்டன், கொர்சிக்கன், பிளாம்ஸ்(டச்சு), அல்சாசியன் (ஜெர்மன்) மொழிகளை பேசிய சிறுபான்மை இனங்கள் அடக்கப்பட்ட வரலாறு தெரியாதா? பிரான்சில் வாழ்ந்த சிறுபான்மை இன மக்கள், தமது தாய்மொழியை பேசும் உரிமை இருக்கவில்லை. வீடுகளில், பொது இடங்களில் தாய்மொழி பேசினால் கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள். அவர்கள் மேல் பிரெஞ்சு மொழி பலவந்தமாக திணிக்கப் பட்டது. அதை எல்லாம் மறந்து விட்டீர்களா? 

தமிழர்களின் உரிமைகளை நசுக்கும் சிங்களப் பேரினவாத அரசும், பிரான்சின் வழியை பின்பற்றி வருகின்றது. அப்படியானால், சிங்களப் பேரினவாத அரசு உங்கள் கண்களுக்கு "சிறந்த முன்னுதாரணமாக" தெரிகின்றதா? 

"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" பேசிய பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள், எதற்காக அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்தார்கள்? அல்ஜீரியாவில் பிரெஞ்சுப் படைகள் புரிந்த இனப்படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் உங்களுக்கு "தலைசிறந்த முன்னுராதணமாக" தெரிகின்றதா? முன்னாள் காலனிகளான வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில், பிரெஞ்சுக்காரர்கள் நடத்திய பயங்கரவாத ஆட்சி காரணமாகத் தானே, அங்கே விடுதலைப் போராட்டங்கள் நடந்தன? 

அது தான் போகட்டும். பதினெட்டாம் நூற்றாண்டுப் பிரான்சில், "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற கொள்கையின் கீழ் புரட்சி நடந்தது. அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது? கொடூரமான பயங்கரவாத ஆட்சி நடந்தது. ரொபெஸ்பியர் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மைக்கு பலர் பலியானார்கள். ஒரே கொள்கையை பின்பற்றியவர்கள் கூட ஒழித்துக் கட்டப் பட்டார்கள். 

நீங்கள் அந்தக் கால பிரான்சில் வாழ்ந்திருந்தால், பொதுத் தேர்தல், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் பற்றி மூச்சுக் கூட விட்டிருக்க முடியாது. அடுத்த கணமே தலையை வெட்டி விடுவார்கள். ஈராக், சிரியாவில், ISIS தலை வெட்டும் வீடியோ பார்த்தீர்கள் தானே? அதே தான் அன்றைய பிரான்சில் நடந்தது. "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" பேசிய பிரான்சில், ஆயிரக் கணக்கான அப்பாவிகளின் தலைகள் வெட்டப் பட்டன. இது தான் நீங்கள் காட்டும் "சிறந்த முன்னுதாரணம்!"

முதலாளித்துவ ஜனநாயகத்தை, சோஷலிச ஜனநாயகத்துடன் ஒப்பிட முடியாது. முதலாளித்துவ நாடுகளில் முதலாளிகளின் சர்வாதிகாரம் இருக்கும். ஒரு சோச‌லிச புரட்சியின் பின்னர் அது ஒழிக்கப் படும். அங்கே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்படும். அது பின்னர் உழைக்கும் மக்களின் ஜன நாயகத்தை கொண்டு வரும்.

Monday, October 26, 2009

அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு

அமெரிக்காவில், சான்பிரான்சிஸ்கோவில் இஸ்ரேலிய பிரதமர் ஒல்மேர்ட் உரையாற்றிய பொதுக்கூட்டம் ஒன்றில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. காசாவில் இனவழிப்புப் போரை நடத்திய போர்க்குற்றவாளி ஒல்மேர்ட்டிற்கு பேச்சுச் சுதந்திரம் அளித்தமைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். கூட்டத்தில் ஒல்மேர்ட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த பலர் பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். அன்று மொத்தம் 22 எதிர்க்கருத்தாளர்கள் கைது செய்யப்பட்டனர். இனவழிப்பு குற்றவாளி ஒல்மேர்ட் மாத்திரம் இன்று வரை கைது செய்யப்படவில்லை. அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் மதிக்கப்படுவதாகவும், அமெரிக்க ஜனநாயகம் போர்க்குற்றவாளிகளை அனுமதிப்பதில்லை என்றும் பெருமிதம் கொள்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.