Showing posts with label வெள்ளை நிறவெறி. Show all posts
Showing posts with label வெள்ளை நிறவெறி. Show all posts

Wednesday, April 29, 2015

அமெரிக்க இனக் கலவரங்கள் : வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகை


இது தாண்டா அமெரிக்க பொலிஸ்! பால்டிமோர் நகரில், போலீஸ்காரர்களே முதலில் மக்கள் மேல் கல்லெறிந்து தாக்கினார்கள். பதிலுக்கு மக்களும் கற்களால் தாக்கத்தொடங்கியதும், புறமுதுகிட்டு ஓடுகின்றனர்.
(கீழேயுள்ள வீடியோவை பார்க்கவும்)


இது தான் அமெரிக்கா! இந்தப் படங்களை உங்களுக்கு எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை! அமெரிக்காவில் பால்டிமோர் நகரில், மீண்டும் ஒரு கருப்பின இளைஞன் பொலிசாரால் சுடப்பட்டு மரணமடைந்தான். கொடுமை கண்டு பொங்கி எழுந்த ஆயிரக்கணக்கான மக்கள், இனவெறிப் பொலிஸின் அட்டூழியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பெரும் கலவரத்தில் முடிந்துள்ளது. பொலிஸ் வாகனங்கள் தாக்கப் பட்டன.

25 வயதான Freddie Gray என்ற கருப்பின இளைஞனை கைது செய்ய முயன்ற பொலிசார், அவனை சுட்டுக் காயப் படுத்தி இருந்தனர். சம்பவம் நடந்த அன்று முதலுதவி சிகிச்சை அளிக்காத படியால், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சில நாட்களின் பின்னர் மரணமடைந்தான். முதலுதவி சிகிச்சை அளிக்காதது தங்களது தவறு தான் என்று, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

August 9, 2014 பெர்குசன் நகரில் நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாகவே, பால்டிமோர் கலவரமும் நடந்துள்ளது. இரண்டிலும் இன அடிப்படையிலான பாகுபாடு மாத்திரமல்லாது, வர்க்க வேறுபாடும் கலவரங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. பெர்குசன் கலவரம் நடந்த போது, நான் எழுதிய குறிப்புக்கள் இவை. அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் எழுச்சிக்கான காரணங்களை புரிந்து கொள்ள அவை உதவும்.


பெர்குசன் நகர கலவரம்

அமெரிக்காவில் பெர்குசன் நகரில், காவல்துறையினர் ஒரு கருப்பினச் சிறுவனை சுட்டுக் கொன்றதன் பின்னர் ஏற்பட்ட மக்கள் எழுச்சி ஒரு புரட்சிக்கான ஆரம்பம் ஆகும். பெர்குசன் நகரில் வடக்குப் பகுதியில் கருப்பின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் ஏழைகள் அதிகம்.

தெற்குப் பகுதியில் வெள்ளையின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் பணக்காரர்கள் அதிகம். ஏழைகளின் பகுதியில் மருத்துவ வசதி இல்லை, கல்வி கற்பதற்கு பல மைல் தூரம் செல்ல வேண்டும். பணக்கார குடியிருப்புகளில் எல்லாம் கைக்கு எட்டிய தூரத்தில் உள்ளன. கருப்பு - வெள்ளை எனும் இனப் பாகுபாடு மட்டுமல்லாது, வர்க்க வேறுபாடும் அண்மைய கலவரங்களுக்கு வித்திட்டுள்ளன.

பெர்குசன் நகரில் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கலவரத்தில் ஈடுபடுவதாக பொலிஸ் குற்றஞ் சாட்டியது. அதற்குக் காரணம், அங்கு நடந்த சம்பவங்களை, வெறும் கலவரம் என்று சொல்ல முடியாது. எகிப்தில், துனீசியாவில் நடந்தது போன்ற மக்கள் எழுச்சி. இரவு நேரங்களில், பொலிசாருடன் மோதல்கள் நடந்தன. அதே இடங்கள், பகல் நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கும்.

எகிப்து, துனீசியாவில் நடந்ததைப் போன்று, சமூக வலையமைப்புகள் மக்களை ஒன்று திரட்ட பயன்பட்டன. எல்லோரும் கைத் தொலைபேசி கொண்டு திரிந்து, படம் எடுத்து தகவல்களை இணையம் ஊடாக பரப்பிக் கொண்டிருந்தார்கள். காப்பரேட் ஊடகங்கள், அங்கு நடந்த கடைகளை சூறையாடிய சம்பவங்களை பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருந்தன. மக்கள் எழுச்சி பற்றி அவை எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தன.

பெர்குசன் நகரின் மத்தியில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஆர்வலர்கள் ஒன்று கூடுவார்கள். எந்த வகையான போராட்டம் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பார்கள். போராட்டத் தலைவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல. சாமானியர்களின் பிரதிநிதிகள். மக்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப் பட்ட குழுவினர் முடிவுகளை எடுக்கின்றது.

பெர்குசன் நகரில் இன்னொரு அதிசயத்தையும் பார்க்கலாம். கிறிஸ்தவ மதகுருக்களும், தீவிர இடதுசாரிகளும் தோளோடு தோள் சேர்ந்து, போராடும் மக்களை வழிநடத்தினார்கள். சில திபெத்திய பௌத்த பிக்குகளும் சேர்ந்து கொண்டார்கள். புதிதாக நிறுவன மயப் பட்ட கருப்பின மக்களின் விடுதலைக்கான கருஞ் சிறுத்தைகள் இயக்க உறுப்பினர்கள் முன்னரங்கில் நின்றார்கள்.

பெர்குசன் கருப்பின சமூகத்தை சேர்ந்த பிரபலமான ராப் பாடகர் ஒருவர், பணம் நிறைய வந்ததும், வெள்ளையின மக்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று வசித்து வந்தார். அவர் தனது சமூக மக்களை கண்டு பேசுவதற்கு வந்த நேரம், மக்கள் அவரை கூச்சலிட்டு விரட்டி விட்டார்கள்.

கலவரத்திற்கு முன்பு, கருப்பின மக்களின் பிரதேசத்திற்கு சாதாரண வெள்ளையின மக்கள் செல்ல மாட்டார்கள். "குற்றச் செயல்கள் அதிகமாக நடப்பதாக" ஒரு காரணம் சொல்வார்கள். அண்மைய மக்கள் எழுச்சியில் நிறைய வெள்ளையின ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்டுகள், அனார்க்கிஸ்டுகளுக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.

பெர்குசன் நகரில் குவிந்திருந்த கலவரத் தடுப்பு பொலிஸ் படையினர், ஓர் இராணுவம் போன்று நடந்து கொண்டனர். அந்தப் பிரதேசம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது. எகிப்தில் நடந்தது போல, அமெரிக்கப் பொலிஸ் படையும் அளவுக்கு அதிகமான கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது.

பெர்குசனில் பொலிசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, பல உலக நாடுகளில் இருந்தும் ஆதரவாளர்கள் சமூக வலையமைப்புகள் மூலமாக ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக சில பாலஸ்தீன ஆர்வலர்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

பெர்குசனில் நடந்தது ஒரு முழுமையான அமெரிக்கப் புரட்சி அல்ல. ஆனால், அதற்கான முன்னோட்டம். வருங்காலப் புரட்சியாளர்களின் பயிற்சிக் களம்.



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, March 21, 2015

அமெரிக்காவின் வர்க்க அநீதி : வெள்ளையின மேலாண்மைக்கு பலியாகும் கருப்பின ஏழைகள்


  • அமெரிக்கா என்றதும் அது பொன் விளையும் சொர்க்க பூமியாகத் தான் பலரின் கண்களுக்குத் தெரிகின்றது. சொர்க்கத்தின் மறுபக்கமாக நரகம் இருப்பதை பலர் அறிந்திருக்கவில்லை. "பணக்கார நாடான" அமெரிக்காவில் பல இலட்சம் ஏழைகள் வாழ்கின்றனர் என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பான்மை ஏழைகள், கறுப்பினச் சிறுபான்மையினராக இருப்பதால், அது நிறவாதப் பிரச்சினையாகவும் உள்ளது.
  •  
  • தமது அன்றாட வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட முடியாத ஆயிரக் கணக்கான ஏழைகள், சிறைகளில் அடைத்து வதைக்கப் படும் உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?உதாரணத்திற்கு,போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் கட்ட முடியாத ஏழைகள், எந்தக் குற்றச்சாட்டும் இன்றி மாதக் கணக்காக சிறைகளில் வாடுகின்றனர்.
  •  
  • ஒரு "நாகரிகமடைந்த ஜனநாயக" நாடான அமெரிக்காவிலும், சட்டங்கள் எழுத்தில் மட்டுமே உள்ளன. நடைமுறையில் அவை பின்பற்றப் படுவதில்லை அல்லது அந்தச் சட்டங்கள் ஏழைகளுக்கு உதவுவதில்லை. ஒரு சராசரி ஆப்பிரிக்க நாட்டில் நடப்பதைப் போன்ற சிறைச்சாலை அவலங்களும், காவலர்களின் அத்துமீறல்களும் அமெரிக்காவிலும் நடக்கின்றன என்று சொன்னால் நம்ப முடியுமா? நீங்கள் நம்பத் தான் வேண்டும்.
  •  
  • நெதர்லாந்தில் வெளியாகும் பிரபல தினசரிப் பத்திரிகை de Volkskrant ல் பிரசுரமான ஆய்வுக் கட்டுரையை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்துத் தருகிறேன். அமெரிக்காவின் இருண்ட பக்கத்தை அறிந்து கொள்வதற்கு இது உதவும்.

Zwart, arm, dus een prooi voor de witte macht 
(கருப்பு, வறுமை, அதனால் வெள்ளை அதிகாரத்திற்கு இரை )


மனித மலமும், இரத்தக் கறைகளும் சுவர்களில் படிந்துள்ள சிறைச்சாலைகள். அங்கிருக்கும் மனநோயாளிகளுக்கும், வயோதிபர்களுக்கும் மருந்து கிடைப்பதில்லை. பேன் தொல்லையால் ஏற்படும் சொறி நோய். எந்தக் காலத்திலும் சுத்தம் செய்யப்படாத கழிப்பறை. பெண்களின் மாதவிடாய் பட்டிகள், பற்பசை, சவர்க்காரம் என்பன தடைசெய்யப் பட்ட பொருட்களுக்குள் அடங்கும். எப்போது விடுதலையாவோம் என்று தெரியாமல், நிலத்தில் படுத்துறங்கும் ஏழை கறுப்பினக் கைதிகள்.

இந்தக் காட்சிகள் ஆப்கானிஸ்தான் நிலைமையை நினைவுபடுத்தலாம். ஆனால், அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில், இன்றைய சென் லூயிஸ் நகரில் இதெல்லாம் நடக்கின்றன. "சுழல் கதவுப் பொறிமுறை" (சிறையில் இருந்து போவதும், பின்னர் திரும்பி வருவதுமான நிலைமை) என்று அழைக்கப் படும் இரக்கமற்ற அமைப்பினால் பாதிக்கப் பட்டவர்கள். பணமில்லாத காரணத்தால், அபராதம் கட்ட முடியாத அவலம், அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்க்கும். ஒரு பிரஜை ஏழையாக இருக்கும் ஒரே காரணத்தால் அவரைக் கைது செய்ய முடியாது என்று அரசமைப்பு சட்டம் தடை செய்திருக்கிறது. ஆனால், கைதுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சென் லூயிஸ் நகருக்கு அருகில் உள்ள பெர்குசன் நகரில், ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஏழைகள் கூண்டுகளுக்குள் அடைக்கப் படுகின்றனர் என்று நீதி அமைச்சின் அரச அறிக்கை தெரிவிக்கின்றது. இதெல்லாம், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கான பொலிசின் கடமையுணர்வு காரணமாக நடக்கவில்லை. ஏழைகளை அடைத்து வைப்பதன் முழு நோக்கமும் இலாபம் சம்பாதிப்பது தான். சந்தையில் மாட்டுக்கு விலை பேசுவது போன்று, கைது செய்யப் பட்டவர்களின் உறவினர்கள் விடுவிப்பதற்காக நீதித் துறையுடன் பேரம் பேசுகின்றார்கள். அதனால், நகர சபை பல கோடி பணத்தை சம்பாதித்துள்ளது. ஆனால், ஏழைகளின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியுள்ளது.

வெள்ளையின, கருப்பின மக்களுக்கு இடையிலான வருமான ஏற்றத்தாழ்வு காரணமாக, பெருமளவில் கருப்பின மக்கள் தான் பாதிக்கப் படுகின்றனர். அதை விட, நிறுவனமயப் படுத்தப் பட்ட நிறவாதமும் ஒரு காரணம். நீதிபதி, நீதிமன்ற அலுவலர், வக்கீல், பொலிஸ்காரர்கள், சிறைக் காவலர்கள் எல்லோரும் பெரும்பாலும் வெள்ளயினத்தை சேர்ந்தவர்கள். அப்படி இல்லாவிட்டாலும், வேண்டுமென்றே "கடமையுணர்வு" காரணமாக கருப்பின பிரஜைகளை குறிவைக்கிறார்கள். கடன் கட்ட முடியாதவர்களின் சிறைச்சாலைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று பாதிக்கப் பட்ட மக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவையெல்லாம் நகர சபையின் கவனத்தைக் கவரவில்லை.

இவையெல்லாம், மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் "செல்மா" (Selma) எனும் ஹாலிவூட் திரைப்படக் காட்சிகளை நினைவூட்டுகின்றன. ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் எல்லா வெள்ளையின அரச அலுவலர்களும், கருப்பின பிரஜைகளை தேவையற்ற குப்பைகள் போன்று நடத்த முடிந்தது.

ஐம்பது வருடங்களுக்கு முன்னர், செல்மா பாலத்தில் நடந்த கருப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தை நினைவுகூரும் முகமாக, ஜனாதிபதி ஒபாமா அங்கே சென்றிருந்தார். அவர் ஒரு தடவை அயலில் உள்ள பெர்குசன் நகருக்கு சென்றிருந்தால், நிலைமைகளை நேரில் கண்டறிந்திருக்கலாம். ஏனென்றால், இன்றைக்கும் அங்கேயுள்ள சிறைகளில், வெள்ளையின காவலர்கள் கருப்பின கைதிகளைப் பார்த்து, "ஊத்தை விபச்சாரிகள்", "நாற்றம் பிடித்தவர்கள்" என்றெல்லாம் தண்டனைக்கு பயமின்றி திட்ட முடிகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம், பெர்குசன், ஜென்னிங்க்ஸ் நகரங்களை சேர்ந்த இருபது சமூக ஆர்வலர்கள், "Class action complaint" என்ற பெயரில் நீதிமன்றத்தை நாடினார்கள். சட்டவிரோதமான சுழல் கதவு பொறிமுறைக்கு முடிவு கட்டுவதும், சிறைகளில் அடைக்கப்பட்ட அனைத்துக் கைதிகளுக்கும் நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதும் அந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. 

வாஷிங்டன் நகரில் உள்ள "Equal Justice unde Law" அமைப்பின் வழக்கறிஞர் Alec Karakatsanis மேற்படி அமைப்பில் பங்களித்து வருகின்றார். ஹார்வார்ட் சட்டக் கல்லூரி நிதியுதவியும், நலன்விரும்பிகள் பலரின் நன்கொடைகளும் அந்த அமைப்பிற்கு கிடைத்துள்ளன. "இங்கே சர்வசாதாரணமாகப் போய் விட்ட மிலேச்சத்தனமான அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்." என்று கூறினார் Alec Karakatsanis

அமெரிக்காவின் சனத்தொகையில் நூறில் ஒருவர் சிறையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். உலகக் கைதிகளின் சனத்தொகையில், கால்வாசிப் பங்கு அமெரிக்காவில் உள்ளது! உலகில் வேறெந்த நாட்டிலும் இந்தளவு பெருந்தொகையான கைதிகள் இல்லை! அவர்கள் பெரும்பாலும் ஏழைகள், அல்லது சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றனர்.

"கருப்பின மக்களை தூள் தூளாக அரைத்துத் தள்ளும் அமைப்பு" என்று ஒரு பொறியியல் அறிஞர் கூறினார். அது எப்படி என்பது, பெர்குசன் நகரில் நீதித்துறை நடத்திய ஆய்வில் இருந்து தெரிய வருகின்றது. 37 வயதான Keilee Fant எனும் பெண்ணின் கதையை உதாரணமாகக் காட்டலாம். அவர் தாதி உதவியாளராக வேலை செய்வதுடன், தன்னந்தனியாக பிள்ளைகளை வளர்க்கும் தாயும் ஆவார். அந்தப் பெண் வருடக் கணக்காக பத்து தடவைகளுக்கு மேல் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் செய்த குற்றம், போக்குவரத்து விதிகளை மீறிய தண்டப் பணம் கட்டாதது. 

2013 அக்டோபர், Keilee Fant தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்ற சமயம் கைது செய்யப் பட்டார். 300 டாலர் கட்டினால் விடுதலை செய்யப் படுவதாக தெரிவிக்கப் பட்டது. அவரிடம் அந்தளவு பணம் இல்லை. பணம் அறவிட முடியாத கட்டத்தில் விடுதலை செய்யப் பட்டார். ஆனால், சில தினங்களுக்கு பின்னர், அயலில் உள்ள இன்னொரு நகரில், அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இறுதியாக பெர்குசன் சிறையில் அடைக்கப் பட்டிருந்த நேரம், அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகை 1400 டாலர்களாக உயர்ந்து விட்டிருந்தது. 

அடிக்கடி கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப் பட்டிருந்த காரணத்தால், அந்த அபலைப் பெண்ணின் வேலை பறிபோனது. அரசு உதவித் தொகையில் வாழ்க்கை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு தடவை, அவரது தந்தையாரின் மரணச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாதவாறு 48 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

சமூகத்தில் எந்த ஆய்வும் நடக்காத காரணத்தால், எப்படி இந்த அநியாயங்கள் நடக்கின்றன என்ற விபரம் யாருக்கும் தெரியாது. "நான் எத்தனையோ நீதிமன்றங்களை பார்த்து விட்டேன். எல்லா இடங்களிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதாவது, எழுதப் பட்ட சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது." என்றார் ஒரு வழக்கறிஞர். 

பொலிஸ் யாரையும் எந்தக் காரணமும் இன்றி தடுத்து வைக்கவோ, சோதனையிடவோ முடியாது. ஆனால், அது ஒவ்வொரு நாளும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் நடக்கிறது. குற்றஞ்சாடப்பட்டவர் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள உரிமையுண்டு என்று அரசமைப்பு சட்டம் கூறுகின்றது. ஆனால், அது இலட்சக் கணக்கான வழக்குகளில் நடப்பதில்லை. ஏனென்றால், ஒரு குற்றம் பல மடங்காக பெருகுகின்றது. 

உதாரணத்திற்கு, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்தில் 150 டாலர் தண்டம் அறவிடப் படலாம். ஆனால், உங்களால் அதைக் கட்ட முடியா விட்டால், அந்தத் தொகை 500 டாலர், சிலநேரம் ஆயிரம் டாலர் வரை உயரும்.

பெர்குசன் நகர பொலிஸ்காரர்கள், எத்தனை பேரை தடுத்து வைத்தார்கள், எத்தனை பேருக்கு அபராதம் விதித்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்களது தகைமை மதிப்பிடப் படுகின்றது. ஆகையினால், பொலிஸ்காரர்கள் முடிந்தளவு அதிகமான அளவு தடுத்து வைக்கவும், அபராதம் விதிக்கவும் முயல்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் போட்டி மாதிரி. இதனால் பாதிக்கப் படுவோர் பெரும்பாலும் கருப்பின மக்கள் தான். 

காவலரிடம் உங்களது பெயரை சுருக்கமாக சொன்னீர்களா? பிழையான தகவல் கொடுத்தமைக்காக அபராதம். உங்கள் காரை தெருவில் ஓரிடத்தில் நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தீர்களா? பெல்ட் போடாத குற்றத்திற்காக அபராதம். அபராதத் தொகை இன்னும் கட்டவில்லையா? கைது செய்யப் படுவதுடன் மேலதிகமாக ஆயிரம் டாலர் அபரதாம் விதிக்கப் படும். வறுமை காரணமாக அபராதம் கட்டுவதற்கு பணம் இல்லையா? கைது செய்யப் படுவீர்கள். 

வீட்டு வன்முறை காரணமாக போலிசை கூப்பிட்டீர்களா? வன்முறையால் பாதிக்கப் பட்ட நீங்களும் கைது செய்யப் படலாம். காரணம்? நீங்கள் அந்த வீட்டில் பதிவு செய்யப்படாத ஒருவராக இருக்கலாம். பூங்காவில் ஒரு மறைவிடத்தில் உங்களது குழந்தையை சிறுநீர் கழிக்க விட்டீர்களா? அபராதம். குற்றம்? நிர்வாணமாக நடந்தது அல்லது பிள்ளைகளை கவனிக்காமல் திரிய விட்டது. இதெல்லாம் நீதித்துறை ஆய்வறிக்கையில் இருந்து கிடைத்த சில உதாரணங்கள்.

"இதைப் பற்றியெல்லாம் கேள்விப்படும் பொழுது, சுத்த பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறதா?"  என்று கேட்கிறார் வழக்கறிஞர் Alec Karakatsanis. " இது தான் அமெரிக்கா!ஏராளமான மனிதத் தன்மையற்ற  கொடுமைகள் , இந்த நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. உங்களது காற்சட்டை இடுப்பில் எந்தளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்பதில் இருந்து, யார் உங்கள் வீட்டில் தங்கக் கூடாது என்பது வரையில் ஏராளமான விதிகள். அநேகமாக, அர்த்தமற்ற, சட்டத்திற்கு விரோதமான விதிகள். ஆனால், இவையெல்லாம் ஏழைகள் மீது தான் நடைமுறைப் படுத்தப் படுகின்றன. அவர்களுக்கு வழக்கறிஞர்களும் கிடையாது. ஒரு சில அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும், இந்த ஊழல் மய அமைப்பிற்கு தீர்வு கண்டு விட முடியாது. நாங்கள் வறுமையை கிரிமினல்மயப் படுத்தி வைத்திருக்கிறோம்."

"செல்மா நிகழ்வுகள் நடந்த காலத்தில் கருப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப் பட்டதைப் போன்ற நிலைமை தான் தற்போதும் உள்ளது." என்கிறார் ஹார்வி என்ற வழக்கறிஞர். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், தற்போது நிறைய சட்ட வல்லுனர்கள் உதவி செய்ய முன்வருகிறார்கள். கருப்பின மக்கள், இப்போதும் வெள்ளையின பொலிஸ்காரர்களை கண்டு அஞ்சுகிறார்கள். நிறவாதத்தை இலகுவில் வேறு பிரித்து அறிய முடியாது.

1865 ம் ஆண்டு, அடிமை ஒழிப்பிற்குப் பின்னரே, கருப்பின மக்களை கிரிமினல் மயப் படுத்தும் போக்கு ஆரம்பமானது. அதற்கு முன்னர், மிக மிகக் குறைந்தளவு கருப்பின கைதிகள் தான் சிறைகளில் அடைக்கப் பட்டிருந்தனர். ஆனால், 1870 ம் ஆண்டு அலபமா மாநிலத்தில், கருப்பின கைதிகளின் எண்ணிக்கை திடீரென 74 சதவீதமாக உயர்ந்தது. அதற்கு என்ன காரணம்? 

பெருந்தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு காரணமாக, சிலர் இதனை ஒரு வியாபாரமாக செய்து வந்தனர். வெள்ளையின அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கருப்பினத்தவர்களை பிடித்து கைதிகளாக அடைத்து வைத்து, பின்னர் தொழிலாளர்களாக விற்று வந்தனர். 

இந்த வணிகத்தை விரிவு படுத்தி இலாபகரமாக்கும் நோக்கில், பல தடைச் சட்டங்கள் கொண்டு வரப் பட்டன. அரசு அதிகாரிகளும், தொழிலதிபர்களும் கைதிகளின் இலவச உழைப்பினால் பெருமளவு இலாபம் சம்பாதித்தனர். அன்று அலபமா மாநிலம் தனது வருமானத்தில் பன்னிரண்டு சதவீதத்தை, சிறைக் கைதிகள் எனும் நவீன அடிமைகளிடம் இருந்து ஈட்டி வந்தது. 

Doughlas Blackmon எனும் ஊடகவியலாளர் எழுதிய "Slavery by Another Name" என்ற நூலில் அது குறித்த பல வரலாற்றுத் தகவல்கள் எழுதப் பட்டுள்ளன.

(நன்றி: de Volkskrant, 14-3-2015, மூலப் பிரதியின் தலைப்பு : "Zwart, arm, dus een prooi voor de witte macht")

Friday, January 15, 2010

அமெரிக்காவில் அதிகரிக்கும் வெள்ளை நிற வெறி

அமெரிக்காவில் பகிரங்கமாக நாஸிஸ பிரச்சாரம் செய்யும், ஹிட்லர் துதி பாடும் வெள்ளை நிற வெறி அமைப்புகள் பெருகி வருகின்றன. அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கின்றன. அண்மைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட தீய விளைவு இது. கடந்த வருடம் மட்டும் பதிவு செய்யப்பட்ட இனவெறித் தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட அதிகம்.
வெள்ளை நிற வெறி அமைப்புகளினுள் ஊடுருவி படம் பிடித்த ஆவணப்படம். அல் ஜசீராவில் ஒளிபரப்பானது.



White Power USA

Video Report By Al Jazeera

Racially motivated threats against Obama rose to new heights in the first months of his presidency, with the US seeing nine high-profile race killings in 2009. Meanwhile white supremacist and neo-Nazi groups claim their membership is growing and that visits to their websites are increasing. Filmmakers Rick Rowley and Jacquie Soohen went inside the white nationalist movement to investigate.