Showing posts with label மரபணு. Show all posts
Showing posts with label மரபணு. Show all posts

Wednesday, July 19, 2017

இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பன்னிரண்டு)
"உலகில் உள்ள மற்ற எல்லா இனங்களையும் விட, யூதர்கள் புத்திசாலிகள், திறமைசாலிகள்." இந்த தவறான கருத்தை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இருக்கிறார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை, யூதர்கள் குறித்த மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர். உலகிலேயே அறிவுக்கூர்மை அதிகம் கொண்ட இனமான யூதர்கள் எதையாவது கண்டுபிடித்து மனித குலத்திற்கு வழங்கி இருக்கிறார்களா? காகிதம், வெடிமருந்து, பட்டுத் துணி, போன்றவற்றை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். யூதர்கள் கண்டுபிடித்ததாக கூறக்கூடிய ஒரே விடயம் மதம் சார்ந்தது. "பல தெய்வ வழிபாட்டை நிராகரித்து, ஒரே கடவுளை வழிபடும் மதத்தை தோற்றுவித்தார்கள்," என்று கூறலாம். ஆனால் யூதர்களுக்கு முன்னரே பாபிலோனியாவில் ஓரிறைக் கொள்கை இருந்துள்ளது. பாரோ மன்னர்கள் ஆண்ட எகிப்தில், ஆமன் என்ற ஒரே கடவுளை வழிபடும் மதம் சிறிது காலம் அரச மதமாக இருந்தது.

இதனை வாசித்துக் கொண்டிருக்கும் சில நண்பர்கள், "இதோ பாருங்கள், யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள், தத்துவ ஞானிகள்..." என்று ஒரு பெரிய பட்டியலையே கொண்டு வருவார்கள். அந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பிரஜைகள் என்பது ஒரு தற்செயல் அல்ல. சீனா, அரேபியா, இந்தியா என்று உலகம் முழுவதும் திருடிய அறிவுச் செல்வங்களை ஐரோப்பியர்கள் தமதாக்கிக் கொண்டார்கள். இந்த மாபெரும் அறிவுத்திருட்டு இடம்பெற்ற வரலாறு ஒரு பெரிய கதை. "பூமி உருண்டையானது" என்று கூறியவர்களை தூக்கில் போட்ட தேசத்தில் இருந்து, எப்படி ஒரு விஞ்ஞானி தோன்ற முடியும்? சாதாரண தலைவலிக்கு மண்டையில் ஆணி அடித்த வைத்தியர்கள் வாழ்ந்த நாட்டில், நவீன மருத்துவம் தோன்ற முடியுமா? சிலுவைப்போரினால் விளைந்த நன்மையாக, ஐரோப்பியர்களுக்கு வெளி உலகத் தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது தான் விஞ்ஞானம், அறிவியல், கணக்கியல், வான சாஸ்திரம் எல்லாம் கற்றுக் கொண்டார்கள். நிச்சயமாக, ஐரோப்பியர்கள் பின்னர் அவற்றை மேலும் சிறப்பாக வளர்த்தார்கள். அறிவியல் சார்ந்த நவீன கல்வியும் அப்போது தான் உருவானது.

எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள். இவர்கள் யாருமே யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகக் கூறினால், படித்த யூத அறிஞர்கள் பலர் தம்மை மதச் சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அன்றிருந்த யூத பழமைவாதிகள், "அவர்கள் யூதர்கள் இல்லை," என்று கூறி வந்தனர். எடுத்துக்காட்டாக, கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர் என்று மற்றவர்கள் தான் கூறுகிறார்கள். அவர் எந்தவொரு இன அடையாளத்தையும் ஏற்றுக் கொள்ளாதவராக, ஒரு நாஸ்திகராக வாழ்ந்தார். ஐன்ஸ்டீன், யூத தேசியவாதிகளான சியோனிஸ்டுகளை கடுமையாக விமர்சித்தார். நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக, என்னை "தமிழன் இல்லை" என்று சில நண்பர்கள் கூறுகின்றனர். முரண்நகையாக இதே நண்பர்கள் தான், "யூத மதச் சார்பற்ற, யூதர்களாக ஏற்றுக் கொள்ளப்படாத" விஞ்ஞானிகளின் பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள்.

யூதர்கள் மட்டும் எப்படி அறிவுக்கூர்மை மிக்கவர்களாக, திறமைசாலிகளாக இருக்க முடியும்? மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆண்டவர் யூதர்களை அப்படிப் படைத்தார், என்று கூறுகின்றனர். பைபிளின் பார்வையில், உலகில் "யூதர்கள், யூதர் அல்லாதவர்கள்," என்று இரண்டு வகைப் பிரிவுகள் உண்டு. இந்தியாவில் மனு எழுதிய சாஸ்திரமும், "பிராமணர்கள் புத்திசாலிகள், அதனால் வேதம் பயில உரித்துடையவர்கள்." என்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களால் எழுதப்படும் புனித நூல்கள், அந்த இனத்தை மட்டுமே உலகில் சிறந்ததாக மகிமைப் படுத்தும். (மனிதன் எழுதவில்லை என்றால், ஆண்டவர் இனப் பாகுபாடு காட்டுகிறார் என்று புரிந்து கொள்ளலாமா?")

நிறவெறியர்களான சில விஞ்ஞானிகளும், ஹிட்லரும், "வெள்ளையர்களே உலகில் சிறந்த அறிவுக்கூர்மை கொண்டவர்கள்." என்றனர். இப்போதெல்லாம் விஞ்ஞானத்தை காட்டி தான் மக்களை நம்ப வைக்க பார்க்கிறார்கள். "மரபணுச் சோதனையின் படி, யூதர்கள் தனியான மரபணு கொண்டவர்கள்," என்றும், "புத்தியும், திறமையும் மரபணு மூலம் கடத்தப்படுகின்றது." என்றும் கூறுவார்கள். ஹிட்லர் போன்ற இனவெறியர்களும் அதைத் தான் பரப்புரை செய்தனர். "வெள்ளையினத்தவர்கள் மூளைசாலிகள், கறுப்பினத்தவர்கள் முட்டாள்கள். இது மரபணுவில் எழுதப்பட்டுள்ளது." என்றார்கள். "மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வெள்ளை இனம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது." என்று டார்வினும் தன் பங்குக்கு உளறி விட்டுச் சென்றுள்ளார்.

1975 ல், அமெரிக்க விஞ்ஞானி வில்சன், "சமூக உயிரியல்" என்றொன்றை கண்டுபிடித்தார். இதனை விஞ்ஞானம் என்பதை விட, வலது தீவிரவாத அரசியல் கருத்துருவாக்கம் என்பதே சாலப்பொருத்தம். சமூக- உயிரியல்வாதிகள் புத்திசாலித்தனத்திற்கும், செல்வத்திற்கும் முடிச்சுப் போடுகின்றனர். "ஆப்பிரிக்கர்கள் மிகக்குறைந்த IQ கொண்டிருப்பதாலேயே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், ஐரோப்பியர்கள் அதிகூடிய IQ கொண்டிருப்பதாலேயே செல்வந்தர்களாக வாழ்கின்றனர்." இவ்வாறு வறுமைக்கும், செல்வத்திற்கும் மரபணுவே காரணம் என்கின்றனர். காலனிய சுரண்டல் பற்றி எல்லாம் அவர்கள் பேச மாட்டார்கள். பிறருடன் இனக்கலப்பு செய்யாத தூய இனமாக கருதப்படும் யூதர்கள், சமூக- உயிரியல்வாதிகளால் அடிக்கடி உதாரணம் காட்டப்படுகிறார்கள்.

யூதர்கள் கொண்டுள்ள விசேட மரபணுக்கள் காரணமாக, அவர்கள் புத்திசாலிகளாகவும், பணக்காரர்களாகவும் இருக்கின்றனர். உலகையே ஆட்டிப் படைக்கின்றனர்.(Eugenics:
A social movement in which the population of a society, country, or the world is to be improved by controlling the passing on of hereditary information through mating
.) உலகம் முழுவதையும் ஆள்வதற்கு யூதர்கள் எவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை விளக்கும் நூல் ( The Protocols of the Elders of Zion) ஒன்று 1903 ல் வெளியானது. ஹிட்லரும், நாஜிகளும் அவற்றை பிரச்சாரம் செய்து தான் ஆட்சியைப் பிடித்தார்கள். "வங்கிகள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் யூதர்களின் கைகளில் இருக்கின்றன." (ஏனென்றால் யூதர்கள் தான் புத்திசாலிகள் ஆயிற்றே) என்ற பொய்ப் பரப்புரை, யூதர்கள் மீதான வன்முறைக்கு ஜெர்மனியரின் ஆதரவை திரட்டியது. யூதர்களின் உதாரணத்தை பின்பற்றி, இனக்கலப்பற்ற தூய ஆரிய இனத்தை உருவாக்க வேண்டுமென்பது ஹிட்லரின் கனவு. யூதர்கள் பற்றிய பிரமை கொண்ட தமிழர்கள், "சாதி, மத, இனக் கலப்பு திருமணங்களுக்கு எதிராக வாதாடினால்," ஆச்சரியப்பட எதுவுமில்லை. நிறவெறி, இனவெறி, சாதிவெறி எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.

(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
11.தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

Sunday, September 16, 2012

ஏழைகளை அழிக்கும் இனவாதிகளின் மரபணுக் கோட்பாடு

1 . மரபணுவில் ஏற்பட்ட  கோளாறு  காரணமாகவே ஒருவர் ஏழையாக இருக்கிறார், என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஏழைகளை அழித்தொழிக்கும் திட்டம் எந்த நாட்டில் நடைமுறைப் படுத்தப் பட்டது? 
2 . சொந்த நாட்டு பிரஜைகள் மீது, இனவாத நோக்கில் மரபணு சோதனை நடத்தி, "பலவீனமான மனிதர்களை" அழித்தொழிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தது யார்? 
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலாக, நாங்கள் ஹிட்லரையும், நாஜி ஜெர்மனியையும் தான் நினைத்துக் கொள்வோம். அது தவறு! அமெரிக்கா என்பது தான் சரியான விடை!
20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப் பட்ட, "ஏழைகளை இனவழிப்பு செய்யும் நடவடிக்கை", அன்று பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மரணமடைந்த பின்னரும், அடுத்து வந்த மூன்று தசாப்தங்களுக்கு அந்த சட்டம் நீடித்தது. அமெரிக்க கோடீஸ்வரர் ரொக்கபெல்லர் அந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்.  அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப் பட்ட  இனவாத கோட்பாட்டைத் தான், ஹிட்லர் தனது "மைன் கம்ப்" (எனது போராட்டம்) நூலில் மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். அன்றைய உலகில், சோவியத் ஒன்றியத்தில் மட்டுமே, இனவாத மரபணு சோதனை தடை செய்யப் பட்டிருந்தது. 

அமெரிக்காவில் வெர்ஜீனியா மாநிலத்தில், ஏழை வெள்ளையர்கள், கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் கருத்தடை செய்யப் பட்டனர். அமெரிக்கா முழுவதும், கட்டாய கருத்தடை நடைமுறைப் படுத்தப் பட்டாலும், வெர்ஜீனியா மாநிலத்தில் மட்டுமே பல ஆயிரங்களை தொட்டு சாதனை படைத்திருந்தது. செவ்விந்தியர்கள், கறுப்பின மக்களை இனவழிப்பு செய்யும் நோக்கம் அமெரிக்க அரசுக்கிருந்தது. ஆனால், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்து குடியேறிய வெள்ளயினத்தை சேர்ந்த ஏழைகளும், அந்த இனவழிப்புத் திட்டத்திற்கு தப்பவில்லை. செவ்விந்தியர்கள், கறுப்பினத்தவர்கள் மட்டுமல்ல, ஏழைகளும் தரம் தாழ்ந்த மரபணுவால் உருவாக்கப் பட்டவர்கள் என்பது அமெரிக்க அரசினால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. மதுவுக்கு அடிமையாதல், குற்றச் செயலில் ஈடுபடுதல் என்பன கூட, மனிதர்களின் மரபணுவில் தங்கியுள்ளது என்று நம்பினார்கள். இவ்வாறு தரம் தாழ்ந்த மரபணுக் கொண்ட மனிதர்களை பெருக விடாமல் தடுப்பதற்கு ஒரே வழி, அவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்வது. 

தாவர மரபணு நிபுணர் Harry Hamilton Laughlin என்ற அமெரிக்கர் தான், இந்த இனவாத விஞ்ஞானத்தின் தந்தை. அவருக்கு முன்னரே, 19 ம் நூற்றாண்டில், பிரிட்டனை சேர்ந்த Francis Galton இந்த ஆலோசனையை முன்வைத்திருந்தார். ஆனால், Laughlin தான் அதனை நடைமுறைப் படுத்த அரச அங்கீகாரம் பெற்றிருந்தார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் அதிக விளைச்சலைத் தருவதைப் போன்று, மனிதர்களிலும் மேன் மக்களை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பினார். அரச நிதியுதவி கிடைத்ததும், தனது ஆராய்ச்சியாளர்களை சிறைச்சாலைகளுக்கும், மனநோயாளர் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தார். அங்கிருந்த கைதிகளையும், நோயாளிகளையும் ஆராய்ந்து,  "குற்றப் பரம்பரையை விஞ்ஞான பூர்வமாக" நிறுவ முயன்றார். இந்த இனவாத விஞ்ஞானம், செவ்வியந்தியரையும், கருப்பரையும் மட்டும் தாழ்ந்த இனங்களாகவும், குற்றப் பரம்பரையினராகவும் வரையறுக்கவில்லை. ஸ்கண்டிநேவிய ஐரோப்பியரை மேன்மையான இனமாகவும், இத்தாலியர்கள் போன்ற தென் ஐரோப்பிய மக்களை தாழ்வான இனமாகவும் கருத வைத்தது. 1911 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையானது, "தாழ்ந்த இனங்களை அழித்தொழிக்க வேண்டிய அவசியத்தை" எடுத்துரைத்தது. அதாவது, அவர்களது சந்ததி பெருகா வண்ணம், கட்டாய கருத்தடை செய்யப் பட வேண்டும். அறுபதுகளில் இந்த இனவாத சட்டம் விலக்கிக் கொள்ளப் படும் வரையில், குறைந்தது அறுபதாயிரம் பேர் பலவந்தமாக கருத்தடை செய்யப் பட்டனர். 

மரபணுவை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ விஞ்ஞானம், "Eugenics" என்று அழைக்கப் படுகின்றது.  கிரேக்க மொழியில், eu என்றால் நல்லது, genes என்றால் பிறப்பு என்று அர்த்தம். அதாவது தமிழில் "நற்பிறப்பு" என்று மொழிபெயர்க்கலாம். பண்டைய கிரேக்க நாடான ஸ்பார்ட்டாவில், இராணுவ பயிற்சிக்கு தகுதியற்ற பலவீனமானவை என்று கருதப்படும் குழந்தைகளை ஆற்றிலே வீசியெறிந்து கொல்வார்கள். அல்லது சாகும் வரை அனலாக தகிக்கும் வெயிலில் கிடத்தி விடுவார்கள். இந்தியாவிலும், "நற்குடிப் பிறப்பாளர்கள்" பற்றி மனு எழுதிய கோட்பாடுகள், சாதி ஏற்றத்தாழ்வை நியாயப் படுத்த உதவியது. இன்றைக்கும் உயர்சாதியை சேர்ந்த, மேட்டுக்குடியை சேர்ந்த தமிழர்கள் "நற்குடிப் பிறப்பு" பற்றி உபதேசிப்பதைக் காணலாம்.  இந்தியாவின் சாதி அமைப்பும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு, இந்த உதாரணம் போதும். அமெரிக்காவில் இனத் தூய்மை பேணும் வெள்ளையின தம்பதியினர் புத்திசாலிப் பிள்ளைகளைப் பெறுவதற்கு ஊக்குவிக்கப் பட்டனர்.  சந்தைகளிலும், கண்காட்சிகளிலும் இனத் தூய்மை பேணுவது பற்றிய பிரச்சாரம் நடைபெற்றது. 

இன்று அமெரிக்காவுக்கோ, அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கோ சென்று குடியேற விரும்புவோர், அந்தந்த நாட்டு மொழிப் பரீட்சைகளில் தேற வேண்டும் என்ற நிபந்தனை வந்து விட்டது. இது கூட இனவாதம் என்பதை பலர் உணர்வதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவும், கனடாவும் புதிய குடியேறிகளை தேர்ந்தெடுப்பதற்காக மொழிப் பரீட்சை வைத்தன. ஆனால், அன்றைய மொழிப் பரீட்சை, "குடியேறிகள் தமது  தாய் மொழியில் ஒரு பந்தியை வாசித்துக் காட்ட வேண்டும்" என்றிருந்தது. "இதென்ன பிரமாதம், மிக இலகு." என்று நீங்கள் நினைக்கலாம். பெரும்பான்மையான ஐரோப்பிய ஏழை மக்கள், எழுதப் படிக்க தெரியாமலிருந்த காலத்தில், அந்தப் பரீட்சை பலருக்கு கஷ்டமாக இருந்திருக்கும். அன்றும் இன்றும், மொழிப் பரீட்சை நடத்துவதன் நோக்கம் ஒன்று தான். "எமது நாடுகளுக்கு புத்திசாலியான, வசதி படைத்த மக்கள் மட்டுமே தேவை. கல்வியறிவற்ற, ஏழை மக்கள் எமது நாடுகளுக்குள் நுழைய முடியாது."  

இன்று நாங்கள் I .Q. பரீட்சையில் சித்தி பெற்றவுடன் மார் தட்டிக் கொண்டு திரிகிறோம். அன்றைய அமெரிக்காவில் ஐ.கியூ. பரீட்சை கூட, இன, வர்க்க ஒடுக்குமுறையைக் கொண்டிருந்தது. முதலாம் உலகப்போருக்கு புதிய இராணுவ வீரர்களை சேர்ப்பதற்காக, ஐ.கியூ. பரீட்சை நடத்தப் பட்டது. ஆங்கிலம் எழுத வாசிக்க தெரியாதவர்கள், வரைபடங்களை பார்த்து, தவறைக் கண்டு பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு, டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வலை இருக்காது. அந்தப் படத்தில் என்ன குறை, என்ற கேள்வி கேட்கப் பட்டிருக்கும். கிராமங்களில் வாழ்ந்த வெள்ளையின ஏழைகளும், புறநகர் சேரிகளில் வாழ்ந்த கறுப்பின மக்களும், ஒரு டென்னிஸ் மைதானத்தை வாழ்க்கையில் கண்டறியாதவர்கள். அதனால் அவர்கள் பரீட்சையில் தோற்பது நிச்சயம். இந்த ஐ.கியூ. கேள்விகள் எல்லாம், நகர்ப்புறங்களை சேர்ந்த மத்தியதர வர்க்க இளைஞர்களை தெரிவு செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது. தேர்வின் இறுதியில், 47 % வெள்ளையினத்தவரும், 89 % கருப்பினத்தவரும் சித்தியடையவில்லை என்று அறிவிக்கப் பட்டது. "கறுப்பர்களின் மூளை வளர்ச்சி அடையவில்லை" என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்கு சான்றாக அந்த தரவுகளை பயன்படுத்தினார்கள். முதலாம் உலகப்போரில், பெருமளவு மத்தியதர வர்க்க இளைஞர்கள் மடிந்த பின்னர் தான், அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது. 

மரபணு கோளாறு காரணமாக கட்டாய கருத்தடை செய்யும் சட்டம், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமுல் படுத்தப் பட்டது. ஜெர்மனியில் ஹட்லர் ஆட்சிக்கு வர முன்னரே, 1923 ம் ஆண்டில் இருந்து கட்டாயக் கருத்தடை நாள்தோறும் நடந்து கொண்டிருந்தது.  சுவீடனில் மன நிலை பிறழ்வான நபர்கள் கருத்தடை செய்யப் பட்டனர். டென்மார்க்கில் "சமூகத்தில் பலவீனமான மனிதர்களை" கருத்தடை செய்யும் சட்டம், 1912 ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. அந்த நாட்டில் ஏழைகளை இனவழிப்பு செய்யும் திட்டத்திற்கு, அமெரிக்க கோடீஸ்வரர் ரொக்கபெல்லர் பவுண்டேஷன் நிதியுதவி வழங்கியது. 1967 ம் ஆண்டு சட்டம் விலக்கிக் கொள்ளப் படும் வரையில், 6000 டேனிஷ் மக்கள் கட்டாயக் கருத்தடை செய்யப் பட்டனர். சுவிட்சர்லாந்தில், அளவுக்கு மிஞ்சிய பாலியல் நாட்டம் கொண்ட பெண்கள் கருத்தடை செய்யப் பட்டனர். அன்று வாழ்ந்த சுவிஸ்காரரைப் பொறுத்த வரையில், பெண்கள் அளவுக்கதிகமாக பாலியலில் ஈடுபடுவதும் மரபணுக் கோளாறு காரணமாகத் தான். ஜெர்மனியில் Alfred Ploetz என்ற மருத்துவர், "சமூகத்தில் ஒரு தொகுதி மக்கள் மரணத்திற்கு தகுதியானவர்கள்" என்ற கொள்கையைக் கொண்டு வந்தார். Euthanasie குறித்த அவரது கருத்துக்கள், பிற்காலத்தில் ஹிட்லரால் உள்வாங்கப் பட்டன. ஹிட்லரின் மைன் கம்ப் நூல், 1925 ம் ஆண்டு வெளியானது. அந்த நூலில், Laughlin மற்றும் பல அமெரிக்க மரபணு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளை புகழ்ந்து எழுதியுள்ளார்.  

ஹிட்லரினால் மதிக்கப் பட்டாலும், அல்பிரெட் யூதர்கள் தொடர்பான ஹிட்லரின் கொள்கையுடன் முரண்பட்டார். அவரைப் பொறுத்த வரையில், (ஜெர்மன்) யூதர்களும் தூய ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அந்தக் காலத்தில், ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் சென்று குடியேறிய யூத விஞ்ஞானிகள் சிலர் கூட, "மரபணு இனவாதக் கோட்பாட்டில்" நம்பிக்கை வைத்திருந்தனர். அன்றைய உலகில், ஒரேயொரு நாட்டில் மட்டுமே மரபணு அடிப்படையில் இனங்களை பிரிக்கும் கோட்பாடு தடை செய்யப் பட்டிருந்தது. "பிறப்பால் ஏற்றத் தாழ்வு வருவதில்லை. மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள்." என்ற கொள்கையை பின்பற்றிய சோவியத் ஒன்றியத்தின் பல்கலைக்கழகங்களில் மரபணு ஆராய்ச்சிக்கு வரவேற்பு இருக்கவில்லை. 1941 ம் ஆண்டிலிருந்து, 1945 வரையில், ஹிட்லர் கோடிக்கணக்கான மக்களை நச்சுவாயு செலுத்தி இனப்படுகொலை செய்த பின்னர் தான் உலகம் விழித்துக் கொண்டது. அந்த இனப்படுகொலையில், யூதர்கள் மட்டும் பலியாகவில்லை. ஓரினச் சேர்க்கையாளர்கள், ஜிப்சிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் ஆகியோரும், ஹிட்லரின் பார்வையில் மரபணுக் கோளாறு கொண்ட மக்களாக கருதப் பட்டு, அழித்தொழிக்கப் பட்டனர். 

மேலதிக தகவல்களுக்கு: 
1.War against the Weak, Eugenics and America's Campaign to Create a Master Race, by Edwin Black
2.The Unfit, A History of a Bad Idea, by Elof Axel Carlson
3.www.eugenicsarchive.org