Showing posts with label மதச்சார்பின்மை. Show all posts
Showing posts with label மதச்சார்பின்மை. Show all posts

Sunday, July 12, 2020

"நாத்திக- கம்யூனிசம்" குறித்து ஒரு "செக்யூலரிஸ்ட்" கூறிய அவதூறுகள்!

"ஆத்திகர்களை விட கம்யூனிச நாத்திகர்கள் ஆபத்தானவர்கள்" என்று Facebook இல் Sridhar Subramaniam என்பவர் எழுதிய இந்தப் பதிவை முதலில் பார்த்த நேரம் இதை ஒரு காமெடியாக எடுத்து கடந்து சென்று விட்டேன். பின்னர் அவர் ஒரு எழுத்தாளர், அதிலும் "ஒரு செக்யுலரிஸ்டின் வாக்குமூலம்" என்ற நூல் எழுதியவர் என்று கேள்விப் பட்டேன். (https://www.youtube.com/watch?v=RQex174LcXM) நம்பவே முடியவில்லை. ஒருவேளை அவர் தன்னைத்தானே கலாய்க்கும் நோக்கில் இந்தக் காமெடிப் பதிவை எழுதி இருக்கலாம்.


"நாத்திகர்கள் இடையிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர்..." என்று ஆரம்பிக்கிறார். நாத்திகம் என்பது கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தத்துவம். ஒவ்வொரு மதத்தவரும் ஏனைய மதத்தவரை நாத்திகராக கருதுகின்றனர். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த மக்கள் கிறிஸ்தவர்களை நாத்திகர்கள் என அழைத்தனர்.

பிற்காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் முன்பிருந்த மதங்களின் தெய்வச் சிலைகளை உடைத்து நொறுக்கினார்கள். ஜெர்மனியில் வாழ்ந்த மக்கள் இயற்கை வழிபாடு நடத்திய புனிதமான ஆல மரம் ஒன்றை தறித்து விழுத்தினார்கள். அப்போது கிளர்ந்தெழுந்து எதிர்த்த மக்களை "கிறிஸ்துவின் அடியாட்கள்" கொன்று குவித்தார்கள். அன்று கோடிக் கணக்கான மக்களின் சாவுக்கு காரணமாக இருந்த கிறிஸ்தவம் ஒரு நாத்திக சிந்தனை என்று நாமும் சொல்லிக் கொள்ளலாம்.

அது போகட்டும். பிரெஞ்சுப் புரட்சியை நடத்தியவர்கள் தமது நாத்திக அடிப்படைவாத கொள்கை காரணமாக பிரான்ஸ் முழுவதும் இடித்துத் தள்ளிய தேவாலயங்கள் எத்தனை? அவர்கள் உடைத்து நொறுக்கிய இயேசு, மாதா சிலைகள் எண்ணிலடங்காது. ஆயிரக்கணக்கான கத்தோலிக்க பாதிரிகள் கொல்லப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு பின்னர் ஆற்றில் வீசியெறியப் பட்டனர். இந்தக் கொடுமைகளின் விளைவாக தான் மேற்கு ஐரோப்பாவில் மதச் சார்பற்ற நாடுகள் உருவாகின. அதனால் தான் ஸ்ரீதர் சுப்பிரமணியம் என்ற நபர் ஒரு செக்யுலரிஸ்டின் வாக்குமூலம் என்ற நூல் எழுதி வெளியிட முடிந்தது.

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய நாத்திக இயக்கத்தின் 300 ஆண்டு கால வரலாறு பற்றி அறிந்திராத "secularist"(?) ஸ்ரீதர் சுப்ரமணியம், திடீரென மாவோ காலத்து சீனாவுக்குள் ஊடுருவிப் பார்க்கிறார். "சீனாவில் மாவோவின் அடியாட்கள் ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள், தாவோ கோயில்களை உடைத்தெறிந்தனர். 3,5 முதல் 4 கோடி மக்களின் சாவுக்கு காரணமாக இருந்தனர்." என்று கணக்கு காட்டுகிறார். இந்தப் புள்ளிவிபரம் எங்கே யாரால் எடுக்கப் பட்டது என்று கேட்டு விடாதீர்கள். அது அவருக்கே தெரியாது. கூகிளில் கலாச்சாரப் புரட்சி என்று தேடிய போது கிடைத்ததாம். கூகிளாண்டவருக்கு நன்றி!

முதலில் இவர் கலாச்சாரப் புரட்சி என்றால் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்? 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய ஜெர்மன் குடியரசின் அதிபர் பிஸ்மார்க் "கலாச்சார யுத்தம்" என்ற பெயரில் மத நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்னர் 18ம் நூற்றாண்டில் பிரான்ஸின் சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்ட நெப்போலியன் போரில் வென்ற இடமெல்லாம் நாத்திகத்தை பரப்பினான். ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக் கணக்கான தேவாலயங்களை உடைத்தெறிந்து கலாச்சாரப் புரட்சி நடத்தினான்.

நமது "செக்யூலரிஸ்ட்" ஸ்ரீதரின் மனதிலும் சீனா குறித்து இப்படியான எண்ணம் ஓடியுள்ளது. ஆனால் சீனாவில் நடந்தது "மதத்திற்கு எதிரான நாத்திக புரட்சி" அல்ல. இது அவரது தப்பெண்ணம். உண்மையில் அது அதிகார மையத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய வர்க்கப் புரட்சி. பழைய அதிகார வர்க்க சிந்தனை கொண்டவர்கள் குறி வைக்கப் பட்டனர். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் அதற்கு தப்பவில்லை. பலர் மாணவர்களால் வர்க்க எதிரி எனக் குற்றம் சாட்டப் பட்டு பதவி இறக்கப் பட்டனர். மக்கள் முன்னிலையில் குற்றம் சாட்டப் பட்டு தலை குனிய வைக்கப் பட்டனர். பின்னாளில் அதிபரான டெங்சியாபிங் அவர்களில் ஒருவர்.

மாணவர் எழுச்சியை மாவோ தடுக்கவில்லை. ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று கூறினார். அது தான் உண்மையான ஜனநாயகம். இன்றைக்கும் இப்படி ஒரு நிலைமையை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அத்துடன் இன்னொரு உண்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். முன்பு ஐரோப்பாவில் பிஸ்மார்க், நெப்போலியன் நடத்தியது போன்ற மத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை, சீனாவில் கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் தான் நடந்துள்ளது. ஏன் மத நிறுவனங்களை தாக்க வேண்டும்? அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளிலும் உள்ளது. பழமைவாதிகளின் கோட்டையை தகர்க்காமல் மக்கள் விடுதலை பெற்று விட முடியாது.

எழுத்தாளர் ஸ்ரீதர் "கம்யூனிசம் என்றால் நாத்திகம்" என்று மட்டும் படித்திருக்கிறார் போலிருக்கிறது. அதனால் "சென்ற நூற்றாண்டின் மாபெரும் கொலைகாரர் மாசேதுங் ஒரு புடம் போட்ட நாத்திகர்" என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார். கம்யூனிசம் என்பது பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன் அர்த்தம் மதத்தை என்ன செய்வது என்ற எந்தத் திட்டமும் அதனிடம் இல்லை. மக்கள் மத்தியில் விஞ்ஞான அறிவு வளர்ச்சி ஏற்பட்டு, பொருளாதார பலன்களை அனுபவிக்கும் காலத்தில் மதத்தின் தேவை மறைந்து விடும். இதைப் புரிந்து கொள்ள எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்கிற்கு மறுப்பு" என்ற நூலை வாசிக்கவும். 

- கலையரசன் 
11-7-2020

முகநூலில் எனது இந்தப் பதிவுக்கு எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்ரமணியம் இட்ட பின்னூட்டம் இது:

Sridhar Subramaniam: கலாச்சாரப் புரட்சி பற்றி நான் கூகுளில் படிக்கவில்லை. ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு கூகுள் செய்து பாருங்கள் என்று சொன்னேன். அவ்வளவுதான். சென்ற நூற்றாண்டின் மாபெரும் கொடூரக் கொலைகாரன் மாவோ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

Friday, January 16, 2009

பொலிவிய அரசு கடவுளை தூக்கி வீசப்போகிறதா?


பொலிவியாவில் அரசையும், மதத்தையும் பிரிக்கும் சட்டத்திருத்தம் ஜனவரி 25 ம் திகதி மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட உள்ளது. கடவுளின் பூலோக பிரதிநிதிகளாக கருதிக்கொள்ளும், கத்தோலிக்க மதகுருக்களும், வலதுசாரி கட்சிகளும் இப்போதே அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கி விட்டன. "உங்களுக்கு தெரியுமா? பொலிவியாவில் இருந்து கடவுளை தூக்கி வீசப் போகிறார்கள்." இவ்வாறு எதிர்க்கட்சி ஆதிக்கத்தில் உள்ள தொலைக்காட்சி, மதநம்பிக்கையாளர்களை பயமுறுத்துகின்றது. "கடவுளுக்கே உங்கள் வாக்கு. புதிய அரசியல்நிர்ணய சட்டத்தை நிராகரியுங்கள்." இவ்வாறு ஐக்கிய தேவாலயங்களின் கூட்டமைப்பு, விளம்பரங்கள் மூலம் பரப்புரை செய்கின்றது. வலதுசாரி எதிர்க்கட்சியான Podemos இந்த கூட்டமைப்பில் கைகோர்த்துள்ளது. நீண்டகாலமாக சோஷலிச ஜனாதிபதி ஏவோ மொராலசுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையில் நல்லுறவு இல்லை. அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும், வலதுசாரி கட்சிகளின் கோட்டையான சாந்த குரூஸ் மாநிலத்திற்கு கத்தோலிக்க மதகுருக்கள் ஆதரவு அளித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பொலிவியாவில் ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கத்தோலிக்க மதம், 19 ம் நூற்றாண்டு வரை ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக கோலோச்சியது. கடைசியாக எடுத்த மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 56% கத்தோலிக்கராகவும், 36% புரட்டஸ்தாந்து அல்லது பிற கிறிஸ்தவ சபைகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். தற்போதுள்ள அரசியல்நிர்ணய சட்டத்தின் 3 வது அலகு, கத்தோலிக்க கிறிஸ்தவத்தை அரசமதமாக அங்கீகரித்துள்ளது. அரசிற்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான உறவு, இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவரை காலமும் அனைத்து தேசிய, சமய விசேட தினங்களில், அரசியல் தலைவர்கள் மத அனுஷ்டானங்களில் பங்குபற்றி வந்தனர். ஆனால் புதிதாக வரவிருக்கும், 4 வது திருத்தச் சட்டத்தின் படி, "அரசானது மதத்தில் தங்கி இருக்கவில்லை. அதேநேரம் மத நிறுவனத்தின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றது." அனேகமாக மதச்சார்பற்ற ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் இந்த சட்டத்தை முன்மொழிந்த ஆளும் "சோஷலிசத்திற்கான இயக்கம்", நாஸ்திகத்தை முன்னிலைப்படுத்தவும் இல்லை. அதேநேரம் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கவுமில்லை.

மேலதிக விபரங்களுக்கு:
Bolivian Constitutional Referendum Analysis: An Overview

Monday, September 22, 2008

ஜெர்மனி: மசூதிக்கு வந்த சோதனை

ஜெர்மனி, கெல்ன் நகரில் பிரமாண்டமான மசூதி நிர்மாணிக்கப்படுவதை எதிர்த்து "இஸ்லாமிய எதிர்ப்பு மகாநாடு" கூட்டப்பட்டது. ஜேர்மனிய வலதுசாரிகளும், இடதுசாரிகளும் எதிரெதிர் ஆர்ப்பாட்டம் நடத்தி தெருச்சண்டையில் இறங்கியதால், அந்த மகாநாடு பின்னர் நகரசபை உத்தரவின் பேரில் தடைசெய்யப்பட்டது.

இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் மீண்டும் ஐரோப்பாவில் சூடுபிடித்து வருகின்றது. ஒரு காலத்தில் அகதிகள் எதிர்ப்பு, பின்னர் குடியேறிகள் எதிர்ப்பு என்று இனவாத கொள்கைகளை வெகுஜன அரசியாலாக்கும் தீவிரவலதுசாரி சக்திகள் தற்போது, குறிப்பாக 11 செப்டம்பர் 2001 க்கு பின்னர், இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தாமே வெள்ளை-ஐரோப்பிய பாதுகாவலர்கள் என்று காட்ட முனைகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மனி கெல்ன்(ஆங்கிலத்தில் Cologne) நகரில் பிரமாண்டமான மசூதி ஒன்றை, அந்த நகர் சனத்தொகையின் 12 வீதமான துருக்கிய முஸ்லிம்கள் கட்டுவதற்கான ஆயத்த வேலைகள் யாவும் பூர்த்தியான நிலையில், தற்போது அந்த மசூதியை சுற்றி சர்ச்சை தொடங்கியுள்ளது. கெல்ன் நகர அனுதாபிகள் என்ற பெயரில் சிலர் மசூதி வேண்டாம் என்று கோரும் கையெழுத்து வேட்டை நடத்தியதாக தெரிகின்றது. அதே நேரம் சில வெகுஜன ஊடகங்கள் சார்பாக பொதுமக்கள் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதாகவும், அதன்படி 30 வீதமானோர் மசூதி கட்டுவதை எதிர்ப்பதாகவும் தெரியவருகின்றது. அவர்களது பிரச்சினை எல்லாம் மசூதியின் பிரமாண்டம், அதன் கோபுரங்களின்(மினரெட்) உயரம் என்பவை தாம். அதை வைத்தே "இஸ்லாமிய எதிர்ப்பு மகாநாடு" கூட்டப்பட்டது. அதற்கு பிற ஐரோப்பிய நாடுகளின் தீவிர வலதுசாரிக்கட்சி பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர். சாதாரண ஜெர்மனியர்களும் ஆதரிப்பாளர்கள் என்பதால், இந்த பிரச்சினையை வைத்தே பிராந்திய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இத்தாலியில் நவபாசிச "லீகா நோர்த்" கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால், அங்கே புதிய மசூதிகள் கட்டுவதற்கு தடை போடப்படுகின்றது. சில நகரங்களில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த மசூதிகள் சில இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. இஸ்லாமியர் அதிகமாக வாழும் மிலான் நகர மசூதி மூடப்பட்டு, முஸ்லிம்கள் நகர விளையாட்டு மைதானத்தில் தொழுகை நடத்தும் காட்சி, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் செய்தியாகியது.

அனேகமாக தாராளவாத கொள்கையை தாராளமாக கடைப்பிடிக்கும் சில பணக்கார ஐரோப்பிய நாடுகள்(உதாரணத்திற்கு இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள்) தான் மதச்சுதந்திரம் என்ற பெயரில், விரும்பியபடி மசூதிகளும், கோயில்களும் கட்ட அனுமதி கொடுக்கின்றன. இவை கட்டுவதற்கு தேவையான பணம் கொடுப்பது அந்த இடங்களில் வாழும் மத நம்பிக்கையாளரும், அந்த மதத்தை சேர்ந்த வர்த்தகர்களும் மட்டும் அல்ல. அரசாங்கமும் வெளிநாட்டு தொழிலாளர் கட்டிய வரிப்பணத்தில் ஒரு பகுதியை அம்மக்களின் தேவைகளுக்காக திருப்பிக்கொடுப்பது என்று கூறி, மசூதி அல்லது கோயில் கட்டும் செலவின் ஒரு பகுதியை கொடுக்கின்றது. இந்த நாடுகளில் குறிப்பிட்ட அளவு மதச்சார்பற்ற இந்து அல்லது முஸ்லீம் சமூகங்களை சேர்ந்தவர்கள் கோயில்களுக்கோ, மசூதிகளுக்கோ போவதில்லை. இவர்களின் வரிப்பணத்தை கூட அரசாங்கம் கோயில்/மசூதி கட்ட வழங்குகின்றது.

ஐரோப்பிய அரசுகளின் இத்தகைய "சிறுபான்மையினர் கொள்கை" பல்வேறு மட்டங்களில் இருந்தும் விமர்சனங்களை ஏற்கனவே எழுப்பியிருந்தது. முதலாவதாக மதச்சார்பற்ற அரசாங்கம் என்பதை உறுதிப்படுத்தும்முகமாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. கணிசமான ஐரோப்பிய மக்கள் தேவாலயங்களுக்கு போகாததால், ஒன்றில் கைவிடப்படும் அல்லது அருங்காட்சியகமாக மாறும் தேவாலயங்கள் ஒரு புறமிருக்க, தற்போதும் பெருமளவு வழிபாட்டாளர்களை ஈர்க்கும் கத்தோலிக்க தேவாலயமோ, அல்லது புரடஸ்தாந்து சபைகளோ அரச உதவிகளை எதிர்பார்க்க முடியாது. இரண்டாவதாக வரிப்பணத்தை மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் அரசாங்க கொள்கை, சிறுபான்மையினர் (வெளிநாட்டு குடியேறிகள், அல்லது இந்துக்கள், முஸ்லிம்கள்) என்று வந்து விட்டால் மட்டும் கோயில்கள், மசூதிகள் கட்டுவதற்கென்று தாராளமாக செலவழிப்பதேன்? இங்கே தான் அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தனது பூர்வீக குடிகளான, வெள்ளை-ஐரோப்பியருக்கு மதம் தேவையில்லை. ஆனால் வெளிநாட்டு குடியேறிகள் மதம் வளர்த்து, மைய நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். இதனால் ஊரை இரண்டுபடுத்தும் காரியமும் நிறைவேறுகின்றது. ஒருபக்கம் கோயில்கள், மசூதிகள் என்று திருப்திப்படும் சிறுபான்மையினம். மறுபக்கம் தமது கிறிஸ்தவ பாரம்பரியம் நலிந்து வருகையில் அந்நிய மதங்கள் வளர்ந்து வருவதையிட்டு கவலை கொள்ளும் பெரும்பான்மையினம். இந்த முரண்பாடுகளை சில இடதுசாரிக் கட்சிகளும், சிறுபான்மையின முற்போக்காளரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உண்மையில் பிற மதங்களை சகித்துக் கொள்ளும் போக்கு அபிவிருத்தியடைந்த ஐரோப்பாவை விட அபிவிருத்தியடையும் நாடுகளில் அதிகம் எனலாம். இதற்கு காலனியாதிக்க வரலாறும் ஒரு காரணம் தான். பலருக்கு வியப்பாக இருந்தாலும், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பல மதங்களும் அனுபவிக்கும் சுதந்திரம், ஐரோப்பாவில் கடந்த ஐம்பது வருட மிதமான வளர்ச்சியாக உள்ளது. உதாரணத்திற்கு மத விடுமுறை தினங்கள். இலங்கையிலும், இந்தியாவிலும் அனைத்து மதங்களது விசேட தினங்களும், தேசிய விடுமுறை தினங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஐரோப்பா இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. தற்போதும் கிறிஸ்தவ விசேட தினங்கள் மட்டுமே தேசிய விடுமுறை தினங்களாகும். ஐரோப்பா முழுமையான மதச்சார்பற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வெகுதூரம் போகவேண்டியுள்ளது.
________________________________________________________________________ முன்னைய பதிவுகள் :
இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது
_______________________________________________________