Showing posts with label மக்கள் போராட்டம். Show all posts
Showing posts with label மக்கள் போராட்டம். Show all posts

Tuesday, March 10, 2020

நூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய "ஆக்காட்டி"


நூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய "ஆக்காட்டி". தோழர் இரா. பாரதிநாதன் ஏற்கனவே எனக்கு ஓர் அரசியல் போராளியாக அறிமுகமானவர். நான் வாசித்த அவரது முதல் நாவல் இது தான். இந்த நூலை வாசிக்கத் தொடங்கும் போதே வாசகரை தனது எழுத்தால் கவரும் ஆற்றல் அவருக்கு வாய்த்திருக்கிறது. உண்மையை சொன்னால், ஒரு எட்டு மணிநேர ரயில் பயணத்தின் போது 230 பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதையும் வாசித்து முடித்து விட்டேன்.

இந்த நாவல் அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதில் வரும் பாத்திரங்கள் கற்பனை தான். ஆனால், மக்களின் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது உண்மை. அதை ஏற்கனவே பலர் அறிந்திருப்பார்கள். உண்மைச் சம்பவங்களுக்கு பொருத்தமாக ஒரு கதையை புனைவது இலகுவான காரியம் அல்ல. அதிலும் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் அரசியல் கருத்துக்களை கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு தனித் திறமை வேண்டும். அது தோழர் பாரதிநாதனிடம் இயற்கையாகவே உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த மீத்தேன் எரிவாயு எதிர்ப்புப் போராட்டம் தான் கதைக்கரு. மீத்தேன் எரிவாயு என்றால் என்ன? எதற்காக மக்கள் அதை எதிர்த்துப் போராடினார்கள்? உண்மையில் இது போன்ற விபரங்கள் அன்றாடம் அரசியல் ஈடுபாடு கொண்ட பலருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. பாரதிநாதன் அந்த விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து எழுதி இருக்கிறார். எதற்காக அரசும், வணிக நிறுவனங்களும் மீத்தேன் வாயு எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன? அதனால் அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன? என்றெல்லாம் விளக்கிச் சொல்லி இருக்கிறார்.

ஆரம்பத்தில் அரசியல் அறிவற்று இருந்த சாதாரண நடுத்தர வர்க்க இளைஞன் தான் கதையின் நாயகன். தற்செயலாக சர்ச்சைக்குரிய மாங்குடி கிராமத்திற்கு தாத்தா, பாட்டியை பார்க்கச் செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. அது ஒரு சாதாரணமான உறவினர் வீட்டுக்கு போகும் நிகழ்வாக இருந்த போதிலும் எரிவாயு திட்டத்தை நடைமுறைப் படுத்த வரும் அரசியல்வாதிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதிலிருந்து மீத்தேன் வாயு, அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தேடி அறிந்து கொள்கிறான்.

கார்த்தியின் காதலி, ஈழத்தமிழ்ப் பெண் பிருந்தா மூலம் அரசியல் உணர்வு பெறுவதாக காட்டி இருப்பது ஒரு திருப்புமுனை. ஏற்கனவே கிராமிய மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வில் மனதை பறிகொடுத்த கார்த்தி, ஓர் அரசியல் போராளியாக திரும்பி வருகிறான். அதற்காக தாத்தாவுடன் முரண்பட்டு நகரத்து ஆடம்பர வாழ்க்கையை தேர்ந்தெடுத்த தந்தையை பகைத்துக் கொள்கிறான். இதன் மூலம் கதாசிரியர் தலைமுறை இடைவெளி என்ற விடயத்தில் அக்கறை காட்டினாலும், அது அரசியல் அடிப்படை கொண்டது என்பதையும் உணர்த்துகிறார்.

கார்த்தி என்ற பாத்திரத்தின் மூலம், நகரங்களில் வாழும் படித்த வாலிபர்கள் கிராமங்களில் வாழும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய சமூகக் கடமையை கதாசிரியர் உணர்த்துகிறார். போராடுவதற்கான மனவுறுதி இருந்தால் மட்டும் போதாது. சரியான அரசியல் நிலைப்பாடும் அவசியம். ஒருவரது போராட்ட வாழ்க்கை குடும்ப உறுப்பினர்களிடையே பிளவுகளையும் உண்டாக்கும். இந்த நாவலில் வருவது போல பெற்ற தந்தையையும் கருத்தியல் ரீதியாக எதிர்க்க வேண்டி இருக்கும். தாய்மார் ஆபத்துக்களை எதிர்பார்த்து தடுக்கப் பார்ப்பார்கள். இந்த நாவலில் கார்த்தியுடன் துணை நின்று போராடும் கலியன் தாத்தா, காதலி பிருந்தா மற்றும் அவளது தந்தை சிவராசா போன்று எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

இருப்பினும், எனக்கு இந்த நாவலுடன் உடன்பட முடியாத ஒரு குறையையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதற்கான விளக்கத்தையும் கீழே தருகிறேன்: ஓர் ஈழத்தமிழ்ப் பெண் தான் இந்த நாவலின் நாயகி. அப்படி ஒரு பாத்திரத்தை படைத்தமைக்கு முதற்கண் பாராட்டுக்கள். அந்த ஈழப் பெண்ணின் தகப்பன் இலங்கையில் சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர் என்றும் அறிமுகப் படுத்தப் படுகிறார். அவர் மூலமாகத் தான் கார்த்தி சரியான (மார்க்சிய) அரசியல் வழிகாட்டலை பெற்றுக் கொள்கிறான். அதெல்லாம் இந்த நாவலுடன் தொடர்புடைய விடயங்கள் தான். ஆனால், தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுப்பது தொடர்பாக நடக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் நில அபகரிப்பை, இலங்கையில் சிங்களவர் தமிழரின் நிலத்தை பறித்துக் கொண்ட விடயத்துடன் ஒப்பிடும் போது தான் சறுக்கி விடுகிறார்.

இந்த விடயத்தில், இலங்கையில் நடப்பது வெறும் "இனப் போராட்டம்", ஆனால் தமிழகத்தில் நடப்பது "வர்க்கப் போராட்டம்" என்பது போன்ற கருத்தை உருவாக்குவது ஏற்கத் தக்கதல்ல. (ஒருவேளை நான் தவறாக புரிந்து கொண்டால் மன்னிப்புக் கோருகிறேன்.) இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை உண்மையில் வர்க்கப் பிரச்சினையை மறைப்பதற்கான போர்வையாக செயற்படுகின்றது. பெரும் வணிக நிறுவனங்கள் மீத்தேன் எரிவாயுவுக்காக தமிழகத்து விவசாய நிலங்களை அபகரிப்பது போன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கவில்லையா? இந்த நாவலில் இந்துக்கள்- முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து போராடுவது போன்று, இலங்கையில் சிங்களவர்- தமிழர் ஒன்று சேர்ந்து போராடவில்லையா? அந்த உதாரணங்களை சுட்டிக் காட்டி இருந்தால், நாவலின் பெறுமதி கூடியிருக்கும்.

அண்மையில் புத்தளத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான பாரிய தொட்டி அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் மூவின மக்களும் கலந்து கொண்டனர். ஏன் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னர் மலையகத்தில் கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் சிங்கள- தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து நடத்தியது தான். அத்துடன் சிறிலங்கா அரசு தமிழர்களை மட்டும் ஒடுக்கவில்லை. முழுக்க முழுக்க சிங்களப் பிரதேசமான வெலிவாரியாவில் சுற்றுச் சூழல் மாசடைதலுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிலரை சுட்டுக் கொன்ற இராணுவம் "முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடத்துவோம்" என்று சிங்கள மக்களை மிரட்டியது.

ஆக்காட்டி நாவலின் நாயகியான பிருந்தா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பிறகு சிங்களக் காடையர்கள் தம்மிடம் இருந்த நிலங்களை பறித்துக் கொண்டதாக கூறுகின்றாள். அத்துடன் புலிகள் தமிழர்களுக்கு "பாதுகாப்பாக" இருக்கும் வரை சிங்களக் காடையர்கள் பயந்திருந்தார்கள் என்றும் கூறுகின்றாள். இது ஒரு தவறான தகவல். ஈழப்போர் தொடங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப் பட்டன. அன்று புலிகளோ, வேறெந்த இயக்கமோ அடாத்தான நில அபகரிப்புக்கு எதிராக ஆயுதமேந்தவில்லை. இல்லவே இல்லை! யாழ்ப்பாண நடுத்தர வர்க்க இளைஞர்களின் உத்தியோகக் கனவுகளை கலைத்த தரப்படுத்தல் சட்டம் கொண்டு வந்த பின்னர் தான் தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இதனை முள்ளிவாய்க்கால் வரை போராடிக் கொண்டிருந்த இடதுசாரியான தோழர் பாலகுமார் கூட குறிப்பிட்டு சொல்லி வந்தார்.

உண்மையில் இலங்கையில் நடந்த நில அபகரிப்புக்கு பின்னாலும் ஒரு வர்க்கக் காரணி இருந்தது. ஒரு பேரினவாத அரசு பெரும்பான்மை சமூகத்தின் ஓட்டுகளை நம்பி அரசியல் நடத்தும். இந்தியாவில் இந்துக்கள் என்றால், இலங்கையில் சிங்களவர்கள் தான் பேரினவாத அரசின் ஆதரவுத்தளம். இன்று இந்தியாவில் கொண்டு வரப்பட்ட CAA சட்டம் போன்றதொரு சட்டம் தான், முன்னர் இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமையை பறித்தது. அசாமில் குடியேற்ற பட்ட வங்காளி இந்துக்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப் பட்ட மாதிரி, கிழக்கு மாகாணத்தில் குடியேற்றப் பட்ட சிங்களவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப் பட்டது.

மேலும் சிறிலங்கா அரசு சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது. முதலாவதாக, தென்னிலங்கையில் நிலமற்ற ஏழை சிங்கள விவசாயிகளுக்கு, கிழக்கிலங்கை ஏழை விவசாயத் தமிழர்களின் நிலங்களை பறித்துக் கொடுத்தது. இதன் மூலம் ஒரு வர்க்கப் பிரச்சினை இனப்பிரச்சினையாக மடைமாற்றப் பட்டது. இரண்டாவதாக, இயற்கை வளம் நிறைந்த கிழக்கிலங்கை பிரதேசத்தில் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் அரசுக்கு விசுவாசமான ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக இன்று ஒரு பக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் வளச் சுரண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், மக்கள் இனரீதியாக பிளவு பட்டு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் ஏற்கனவே சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பேசப் பட்டவை தான். ஆனால், அதை ஆக்காட்டி நாவலில் வரும் சிவராசா பேசாமல் இருப்பது அதிசயமே! அவரது ஒரு மகன் போராளியாக இருந்து போரில் கொல்லப் பட்டதாக நாவலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. யாழ்ப்பாணத்தில் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்த பெற்றோரின் பிள்ளைகள் ஈழ விடுதலைப் போராளிகளாக இருந்திருக்கின்றனர். புலிகளில் மட்டுமல்லாது எல்லா இயக்கங்களிலும் சேர்ந்திருந்தனர். ஆனால் அவர்களது அரசியல் சிந்தனை பெற்றோரினுடையதை விட முற்றிலும் வேறானதாக இருந்தது.

பெற்றோர் இடதுசாரிகள் என்றால், பிள்ளைகள் வலதுசாரிகளாக இருந்தனர். இதுவும் தலைமுறை இடைவெளி தான். இலங்கையில் நவ தாராளவாத கொள்கைகள் அறிமுகப் படுத்தப் பட்ட பின்னர் தான் ஈழப்போராட்டம் தீவிரமடைந்தது. இரண்டுக்கும் தொடர்புள்ளது. மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட சிவராசா இலங்கையின் வர்க்க முரண்பாடுகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது.

சன்முகதானின் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக குறிப்பிடப் படும் சிவராசா, யாழ்ப்பாணத்தில், அறுபதுகளில் அவரது கட்சியினர் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்பு போராட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அன்று அதுவும் வர்க்க உணர்வு கொண்ட ஆயுதப் போராட்டமாக பரிணமித்து இருந்தது. இத்தனைக்கும் தமிழகத்தில் இரட்டைக் குவளை வைக்கும் சாதிய ஒடுக்குமுறை, அதற்கு எதிராக நடந்த இரணியன் போராட்டம் பற்றி எல்லாம் நூலாசிரியர் இந்த நாவலில் விரிவாக எழுதி உள்ளார்.

இது மட்டும் தான் நாவலில் நான் கண்ட குறைபாடு. எனது நண்பரும் நாவலாசிரியருமான இரா. பாரதிநாதன் இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் ஆக்காட்டி ஒரு சிறந்த நாவல் என்பதில் ஐயமில்லை. தமிழில் இது போன்ற எழுத்துக்கள் வருவது மிக அரிது. தோழர் இரா. பாரதிநாதன் இன்னும் பல அரசியல் நாவல்கள் எழுத வேண்டும். 

Monday, December 24, 2018

மஞ்சள் சீருடை - புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி


17 நவம்பர் 2018, மஞ்சள் மேலங்கி அணிந்த சிலர் குழுவாக திரண்டு, பிரான்ஸின் பிரதான சாலைகளை வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள். அந்நாட்டில் இது போன்ற போராட்டங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், விவசாயிகள் பால் மற்றும் விவசாய விளைபொருட்களை தெருக்களில் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அன்று உண்மையிலேயே பாலாறு ஓடியது. தம்மிடம் கொள்வனவு செய்யும் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், மிகக் குறைந்த விலை கொடுக்கின்றன என்பது விவசாயிகளின் கோபத்திற்குக் காரணம்.

இந்த தடவை, மஞ்சள் மேலங்கியுடன் வீதிகளை மறித்து போராடியவர்கள், பெரும்பாலும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட வாகன சாரதிகள். பார ஊர்திகளின் சாரதிகள் மட்டுமல்லாது, வேலைக்கு காரில் சென்று வருவோரும் எரிபொருள் செலவு குறித்து அதிருப்தி கொண்டிருந்தனர். இதைத் தவிர, நலிவடைந்த பிரிவினரான சிறு வணிகர்களும் இந்த இயக்கத்தில் இருந்தனர்.

கடலில் பெரிய மீன்கள் சின்ன மீன்களை சாப்பிடுவது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் சிறு வணிகர்களின் கடைகளை இல்லாதொழித்து விட்டது. அதைத் தவிர முன்னொரு காலத்தில் அரசு வழங்கிய சலுகைகள் குறைத்து, வேலைப்பளுவையும் கூட்டி விட்டதால் கஷ்டப்படும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் பாடு இன்று திண்டாட்டமாக உள்ளது. அதனால், அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமல்லாது, பெரும்பாலான பிரெஞ்சு கீழ் மத்திய தர வர்க்கத்தினர் கூட, இன்றைய சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக கருதப் படுகின்றனர்.

மார்க்சிய சொல்லாடலில் "குட்டி முதலாளித்துவ வர்க்கம்" என அழைக்கப்படும், கீழ் மத்தியதர வர்க்கத்தினர் தான் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை தொடக்கியவர்கள். ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசதியாக வாழ்ந்தவர்கள், இன்று ஏழ்மை நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். பிரெஞ்சு சனத்தொகையில் ஒரு சதவீதமான பணக்காரர்கள் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் படுகின்றனர். 

அதனால், பெட்ரோல் விலையேற்றம் மட்டும் தான் போராட்டத்திற்கு காரணம் என்று நினைப்பது தவறாகும். பல ஊடகங்கள் இந்தத் தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தன. கடந்த பல வருடங்களாக, பிரெஞ்சு உழைக்கும் மக்களின் வருமானம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஒருபக்கம் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கையில், மறுபக்கம் சம்பளம் குறைந்து கொண்டு செல்கிறது. நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு சம்பளம் கூடுவதில்லை. இதெல்லாம் மக்களை போராடத் தூண்டி விட்டன. இதற்கு மேலே பொறுக்க முடியாது என்ற நிலைமையில் தான் அவர்களை வீதியில் இறங்க வைத்தது.
போராட்டக்காரர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்து கொண்டமை ஒரு புத்திசாலித்தனமான தெரிவு எனலாம். பிரான்சில் வீதி வேலை செய்பவர்களும், போக்குவரத்து கண்காணிப்பாளர்களும், இரவிலும் ஒளியை பிரதிபலிக்கும் மஞ்சள் மேலங்கி அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வாகன சாரதிகளும் வைத்திருக்க வேண்டும். மஞ்சள் மேலங்கி எனும் ஒரு சாதாரண பாதுகாப்புக் கவசம், இன்று மக்கள் எழுச்சியின் குறியீடாக மாறிவிட்டது.

இந்தப் போராட்டம் பல நாட்களாக தொடர்ந்தது. ஆரம்பத்தில் அஹிம்சை முறையில் தான் போராட்டம் நடந்தது. கலவரத் தடுப்பு போலிஸ் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைக்கப் பார்த்தது. அரச வன்முறைக்கு எதிரான மக்களின் பதில் வன்முறை என்று நிலைமை மோசமடைந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர் போன்று மாறுவேடமிட்ட போலீஸ்காரர்கள் சிலரும் கலவரத்தை ஏற்படுத்துவார்கள். இது பிரான்சில் ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். ஏனெனில் அஹிம்சாவழிப் போராட்டம் வன்முறைப் பாதைக்கு மாறினால் பொது மக்கள் எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள் என்பது அரசின் எண்ணம். ஆனால், இந்தத் தடவை அந்தத் தந்திரம் பலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தடவை, வன்முறைகள் நடந்த போதிலும் பெரும்பான்மை மக்கள் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை ஆதரித்தனர். அங்கு ஓர் உள்நாட்டு யுத்தம் நடக்காத குறை. பாரிஸ் நகரில் வீதியில் நின்ற கார்கள் எரிக்கப் பட்டன. அவற்றில் போலிஸ் காரும் ஒன்று. ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள் சூறையாடப் பட்டன. சில இடங்களில் கட்டிடங்களும் எரிக்கப் பட்டன. சுற்றுலாப் பயணிகளை கவரும் Arc de Triomphe நினைவகத்தில் கூட அரசியல் கோஷங்கள் எழுதப் பட்டிருந்தன. காவல்துறையில் இருந்தவர்களின் லீவுகள் இரத்து செய்யப் பட்டு, ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டனர். மொத்தத்தில் பாரிஸ் நகரம் ஒரு யுத்த களம் போன்று காட்சியளித்தது.

இதனால் பிரான்சில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்து விட்டன. அதன் விளைவாக, பிற நாடுகளிலும் மஞ்சள் மேலங்கி அரச எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாக மாறியது. மஞ்சள் சட்டைப் போராட்டம் சர்வதேசமயமாகியது. முதலில் அயல்நாடான பெல்ஜியத்திற்கு போராட்டம் பரவியது. அங்கும் எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பது என்ற பெயரில் தான் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்று மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெல்ஜியத்திலும் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. நெதர்லாந்திலும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஈராக்கில் பஸ்ரா நகரில் போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருந்தனர். எகிப்தில் மஞ்சள் சீருடை விற்பனையை அரசு தடை செய்தது. 

மஞ்சள் சட்டைப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினதும் பின்புலம் இல்லாமல் தொடங்கியது. அதற்கென குறிப்பிட்ட அரசியல் இலக்கு இருக்கவில்லை. உண்மையில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்ட சாதாரண மக்கள் தான் போராட்டத்தில் குதித்தனர். அவர்களில் பலர் இவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபட்டிராத சாமானியர்கள். கணிசமான அளவினர், பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டவர்கள். சிலர் பிரெஞ்சு இனவாதிகளாகவும் இருந்தனர். ஓரிடத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், வாகனம் ஒன்றில் மறைந்திருந்த அகதிகளை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்திருந்தனர். அரசியல் உணர்வற்ற மக்கள் போராட வந்தால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதையும் தவிர்க்க முடியாது.

நான் முன்னர் குறிப்பிட்ட நலிவடைந்த பிரிவினரான கீழ் மத்தியதர வர்க்கத்தினர் பெரும்பாலும் FN எனும் இனவாதக் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளனர். "நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், பிரெஞ்சுக்காரரின் வேலைகளை வெளிநாட்டவர் செய்வது தான்..." என்று பொருளாதாரப் பிரச்சினையை இனவாதக் கண்ணோட்டத்துடன் குறுக்கிப் பார்ப்பதால், அது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகவும் உள்ளது..

பிரெஞ்சு இனவாதிகள், பூர்வீக வெள்ளையினத்தவர் மத்தியில் உள்ள வறுமையை மட்டுமே கவனத்தில் எடுக்கிறார்கள். குடியேறிகள் சமூகங்களில் வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும் பல மடங்கு அதிகம். ஆனால், பிரான்சில் வாழும் வெளிநாட்டுக் குடியேறிகளும், அகதிகளும் இலகுவில் போராட முன் வர மாட்டார்கள். கிடைப்பதை வைத்து திருப்திப் படுபவர்கள். அதே நேரம், அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்றும் அஞ்சுவார்கள்.

பிரெஞ்சு அரசும், நாட்டில் உள்ள இனப் பிரச்சினையை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. தீவிர வலதுசாரிக் கட்சியினர் குழப்பம் விளைவித்து அரசைக் கவிழ்க்கப் பார்க்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் அந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. மஞ்சள் அங்கிப் போராட்டத்தில் தீவிர வலதுசாரிகள் கலந்து கொண்டதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது பாதி உண்மை மட்டுமே. தீவிர இடதுசாரிகளும் போராட்டக் களத்தில் நின்றனர். மிகச் சிறிய இயக்கமான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மூடப்பட்ட கடை ஜன்னல்களில் எழுதப்பட்ட அரசியல் சுலோகங்கள் மூலம் தனது இருப்பை வெளிப்படுத்தி இருந்தது. அதன் உறுப்பினர்கள் கம்யூனிச சின்னம் பொறித்த மஞ்சள் மேலங்கியுடன் முகத்தை மூடிய படி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். ஒரு பிரெஞ்சு அரச தொலைக்காட்சியான TF1, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

இன்று வரையில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இதை ஒரு புரட்சி என்று கூற முடியாது. ஆனால், புரட்சிக்கு முந்திய ஆரம்ப காலகட்டம் என்று கூறலாம். அதற்காக அடுத்த மாதமே புரட்சி வெடிக்கும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு இன்னும் சில வருடங்கள் செல்ல வேண்டி இருக்கலாம். உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றுக்கும் "புரட்சிக்கு முந்திய காலகட்டம்" என்ற ஒன்று இருந்திருக்கும்.

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கும் குறிப்பிட்ட காலம் தேவை. அதே நேரம், பல்வேறு பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்களும் ஒரே குறிக்கோளுடன் இணைந்து கொள்வார்கள். பிரான்ஸ் நிலைமையை பொறுத்தவரையில், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் என்பது ஒரு பொதுவான குறிக்கோள். அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி என்பதே போராட்டக்காரர்களின் பொதுக் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில், முரண்பாடான அரசியல் கொள்கைகளை பின்பற்றும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் ஒரே முனைப்போடு உள்ளனர்.

ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் மக்களை புரட்சியை நோக்கி தள்ளிவிடுகின்றன. மேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் இருந்த, பொது மக்களின் வசதிகளை உயர்த்துவதற்காக பணத்தை செலவிடும் "நலன்புரி அரசுகள்" இப்போது இல்லை. தற்போது எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்களிடம் பணம் பறிக்கும் அரசுக்களாக உள்ளன. வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் வென்ற பின்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றோடு பறக்க விடுகின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. வாக்காளர்களும் ஊழல்மயக் கட்சிகளுக்கு மாறி மாறி வோட்டு போட்டு களைத்து விட்டார்கள். அதாவது, ஜனநாயக தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

ஆரம்ப நாட்களில் போராட்டம் எந்தவித அரசியலுக்கும் கட்டுப்படாமல் ஓர் இலக்கின்றி சென்று கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம், அரசுக்கு எதிராக திரும்பி இருந்தது. அரசு நினைத்தால் பிரச்சினையை தீர்க்கலாம் என நம்பினார்கள். இறுதியில் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜனாதிபதி மக்ரோன், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருள் விலை உயராது என்று வாக்குறுதி அளித்ததுடன், அடிப்படைச் சம்பளம் நூறு யூரோவால் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார்.

மக்ரோனின் அறிவிப்பானது யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரியான அற்ப சலுகைகளை மட்டுமே வழங்கியது. இதனால் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று மக்ரோன் நினைத்தால் ஏமாந்து போவார். சீசாவுக்குள் இருந்து கிளம்பிய பூதத்தை பிடித்து திரும்பவும் அடைப்பது இலகுவான விடயம் அல்ல. அரசியல் வழிகாட்டுதல் இல்லாத இயக்கமாக இருந்த படியால் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தவுடன் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

ஒரு வெகுஜன அமைப்பாக தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தின் இடையில் வந்து சேர்ந்து கொண்ட தீவிர இடதுசாரிகள் மெல்ல மெல்ல அரசியல் மயப்படுத்தி வருகின்றனர். அதன் ஆரம்பம் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம் ஆகும். அந்தப் பாடசாலைக்கு சென்ற போலீசார், மாணவர்களை தடுத்து வைத்து மோசமாக நடத்தியது. மாணவர்கள் கைகளை உயர்த்தி தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு, முழங்காலில் நிற்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். போலிஸ் அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவ விட்டது.

மாணவர்களை பயமுறுத்தி எச்சரிக்கை செய்வதற்காக, போலிஸ் அவ்வாறு நடந்து கொண்டது. ஆனால், போலிஸ் எதிர்பார்த்தமைக்கு மாறாக, அது மாணவர்களை தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபடத் தூண்டியது. அடுத்த நாளே அந்தப் பாடசாலையில் செங்கொடி ஏற்றப் பட்டது. மாணவர்கள் கம்யூனிச சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கிப் போராடினார்கள். பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் குதித்தவுடன், மிகப்பெரிய தொழிற்சங்கமான CGT ஆதரவு வழங்கத் தொடங்கியது.

ஒரு பக்கம் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மறுபக்கம் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்றனர். ஒரு சமூகத்தில் போர்க்குணாம்சம் மிக்க மாணவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்த பெருமை இடதுசாரிகளை சாரும். அதே நேரம், அரேபியர், ஆபிரிக்கர் போன்ற சிறுபான்மையின சமூகங்களையும் இடதுசாரிகளே பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தற்போது அவர்களும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

"மக்ரோன் பதவி விலகு!" என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன. புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப் பட வேண்டும். பணக்காரர்களுக்கு அதிக வரி அறவிடப் பட வேண்டும் என்பன போன்ற முற்போக்கான அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. ஏற்கனவே பல புரட்சிகளை கண்டுவிட்ட பிரான்ஸ், மீண்டும் ஒரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 


- கலையரசன் -

Saturday, August 05, 2017

சாதிக்கொரு மயானம் ஈழத்தமிழரின் சாபம்!

படத்திற்கு நன்றி: புத்தூா் கலைமதி மக்கள் ஒன்றியம் 

புத்தூரில் போராடும் மக்களுக்கு தோழமையுள்ள வணக்கம்,

யாழ்ப்பாணம், புத்தூர் மக்களின் மயானம் அகற்றக் கோரும் போராட்டம் இன்றுடன் 25 வது நாட்களாக (05.08.2017) தொடர்கின்றது. தீர்வு வரும் வரையில் போராட்டத்தை கைவிடாத புத்தூர் மக்களின் தளராத மனவுறுதிக்கு தலை வணங்குகிறேன்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எமது போராட்டம் ஒன்று தான். பாட்டாளிமக்களுக்கு தேசம் கிடையாது. சர்வதேச ஒருமைப்பாட்டுடன், ஒருமுனைப்பான போராட்டங்களின் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

யாழ்ப்பாணத்தில், இதுவரையில் பல விதமான கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவை பெரும்பாலும் மத்தியதர வர்க்க உத்தியோகஸ்தர்களின் நன்மை கருதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். ஆனால், புத்தூர் மக்களின் போராட்டம் 25 வது நாட்களாக தொடர்வது குறிப்பிடத் தக்கது.

உழைக்கும் வர்க்க மக்களுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். அதனால் தான் அவர்கள் நாட்கணக்காக அல்லாது மாதக் கணக்காக போராட முன்வருகிறார்கள். அவர்களும் வேலைப் பளு காரணமாக ஒரு நாள் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு சென்றிருக்கலாம். அத்தகைய ஒரு நாள் போராட்டம் எந்தத் தீர்வையும் தராது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.

கேப்பாபிலவு மக்களின் போராட்டம் போன்று, புத்தூர் மக்களின் போராட்டமும் உழைக்கும் மக்களின் போராட்டம் தான். அதனால் தான் வீரியத்துடன் முன்னெடுக்கப் படுகின்றது. அதனை முன்னின்று ஏற்பாடு செய்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் அர்ப்பணிப்புடன் கூடிய தலைமைத்துவமும் முக்கியமானது.

உலக வரலாறு முழுவதும், போராடுவதன் மூலமே மக்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து இருக்கிறார்கள். இங்கிலாந்து போன்ற பணக்கார நாடாக இருந்தாலும், இலங்கை போன்ற ஏழை நாடாக இருந்தாலும், உழைக்கும் மக்கள் ஒருமுனைப்பான வர்க்க உணர்வுடன் போராடி வருகின்றனர். அந்த வகையில் புத்தூர் மக்களின் போராட்டமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இது வெறும் மயானப் பிரச்சினை தானே என்று நாம் கடந்து சென்று விட முடியாது. மக்கள் விரோதிகள் பலவிதமான அவதூறுகளை பரப்பிக் கொண்டிருப்பார்கள். இது போன்ற போராட்ட அனுபவங்களில் இருந்து தான், மக்கள் தமது நண்பர்களையும், எதிரிகளையும் இனங்கண்டு கொள்கின்றனர்.

ஒரு தெற்காசிய நாடான இலங்கையில் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டம் மட்டுமே சாதிப் பாகுபாடுகளையும் ஒழித்துக் கட்டும். மயானத்தை அண்டிய குடியிருப்புகள் தாழ்த்தப் பட்ட சாதியினருடையவை என்பதால், உயர்த்தப் பட்ட சாதியினர் ஒதுங்கிக் கொள்கிறார்கள். படித்தவர்கள் கூட விதண்டாவாதம் செய்கிறார்கள்.

"இது ஒரு அரசியல் பிரமுகரின் தனிப்பட்ட பிரச்சினை" என்று அவதூறு பரப்பியவர்களையும் எமக்குத் தெரியும். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் இருப்பதை வேண்டுமென்றே மறைக்கிறார்கள். எதற்காக புத்தூர் மக்கள் மட்டுமே போராட வேண்டும்?

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாடுகள் புத்தூரை மையப் படுத்தியதாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த அமைப்பு மலையகத்திலும் நடத்திய போராட்டங்களுடன் ஒப்பிட்டால், இது இலங்கை முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் உன்னதமான போராட்டத்தின் ஓர் அங்கம் என்ற உண்மை துலக்கமாகும்.

"முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?" என்று கேட்பதைப் போன்று தான், மயானப் பிரச்சினையை மறுப்பவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. "மக்கள் குடியிருப்புகளுக்குள் மயானம் வந்ததா? மயானத்திற்குள் மக்கள் குடியிருப்புகள் வந்தனவா?" என்று கேட்கிறார்கள்.

மக்கட்தொகைப் பெருக்கம் காரணமாக இடப்பற்றாக்குறை ஏற்படுவதொன்றும் புதினம் அல்ல. அபிவிருத்தி காரணமாக பல கிராமங்கள் நகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. காணிகளின் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய காலத்தில், மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோருவதும் நியாயமானது தான்.

பிணங்கள் எரிக்கப் படும் இந்து மயானங்களில் இருந்து வரும் புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதுடன், உடல் உபாதைகளையும் உண்டாக்க வல்லது. இது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். தனது பிரஜைகளின், ஆரோக்கியமான வாழ்வை உறுதிப் படுத்துவது அரசின் கடமை. அது மத்திய அரசாக இருந்தாலும், மாகாண அரசாக இருந்தாலும் கடமையை தட்டிக் கழிக்க முடியாது.

கொழும்புக்கு அருகில் மீதொட்டமுல்லையில் குவிக்கப் பட்ட குப்பை மேடு சரிந்து விழுந்து, அருகில் குடியிருந்தவர்களை வீட்டுக்குள் சமாதியாக்கியது. இந்த துயர சம்பவம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்கு முன்னரே குப்பைகளை அங்கிருந்து அகற்றுமாறு குடியிருப்புகளில் இருந்த மக்கள் போராடி வந்திருக்கின்றனர். அதையெல்லாம் அரசும், ஊடகங்களும் புறக்கணித்து வந்தன. அதன் விளைவு தான் அந்த துயர சம்பவம்.

இலங்கை அரசியல்வாதிகள் யாரும் தவறுகளில் இருந்து எதையும் கற்றுக் கொள்வதில்லை. புத்தூர் மக்களும், மீதொட்டமுல்லை மக்களைப் போன்று சுற்றுச்சூழல் மாசடையும் காரணத்தை சுட்டிக் காட்டித் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது மயானம் அகற்றும் கோரிக்கைக்கு நியாயமான காரணங்களை குறிப்பிட்டு, எழுத்து வடிவில் மகஜர்களை அனுப்பியுள்ளனர். வட மாகாண சபை உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துள்ளனர். ஆனால், இன்று வரையில் யாரிடம் இருந்தும் பதில் இல்லை.

புத்தூர் மக்களின் போராட்டம் வெற்றி அடைவதற்கு உறுதுணையாக இருப்போம். அரசியல்வாதிகள் மக்களின் சேவகர்கள் என்ற உண்மையை உணர வைப்போம். மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை, வாக்களித்த மக்கள் திருப்பி அழைக்கும் அதிகாரம் கைவர வேண்டும். புத்தூர் மக்களின் போராட்டமும், மக்கள் ஜனநாயக கட்டமைப்பிற்கான போராட்டமும் வேறு வேறல்ல.

தோழமையுடன், 
 கலையரசன் 
 நெதர்லாந்து 
 5-8-2017


புத்தூர் மயானப் பிரச்சினை தொடர்பாக முன்னர் எழுதிய பதிவு:

சாதிக்கொரு மயானம் ஈழத்தமிழரின் சாபம்! 

விடுதலைப் புலிகளை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் தூய தமிழ்தேசியவாதிகளே!! 
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற வாருங்கள்!!!

விடுதலைப் புலிகளில் பெரும்பான்மையான போராளிகள் இந்துக்களாக இருந்த போதிலும், இறந்த பின் அவர்களது உடல்களை எரிக்காமல் புதைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், புலிகளை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்ளும் பலர், சாதியம் காப்பாற்றும் இந்து மயானங்கள் இருப்பதை அங்கீகரிக்கும் முரண்நகையை காணக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில், மக்கள் குடியிருப்புகள் மத்தியில் உள்ள இந்து மயானத்தை அகற்றுமாறு போராட்டம் நடக்கிறது. பிணங்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழல் மாசடைவைதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் காரணத்தைக் காட்டியே, மேற்கு ஐரோப்பாவில் மின் தகன முறை கொண்டு வந்தார்கள். அதை இந்துக்கள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ மத நம்பிக்கையற்ற பூர்வீக மக்களும் பயன்படுத்துகிறார்கள்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் இன்னமும் சாதிக்கொரு மயானம் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

இது ஒரு சாபக்கேடு. "தமிழ்த்தேசியத்தில் சாதி இல்லை" என்று சொல்லித் திரிவோர், சாதிக்கொரு மயானம் இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி? புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இருந்த காலத்திலேயே அகற்றி இருக்க வேண்டாமா?

அது மட்டுமல்லாது, மயானத்தை அகற்றுமாறு பொது மக்கள் நடத்தும் போராட்டங்களை கொச்சைப் படுத்தியும் வருகின்றனர். ஆதிக்க சாதிப் பத்திரிகையான யாழ் உதயன், "ஒரு கட்சி பின்னால் இருந்து வன்முறையை தூண்டி விடுகின்றது" என்று விஷமத்தனமாக எழுதியது. அத்துடன் மக்கள் போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்களப் பொலிஸ் எடுத்த வன்முறை நடவடிக்கையை பாராட்டி எழுதியது. வெளிப்படையாகவே சிங்கள அரசின் அடக்குமுறையை ஆதரித்தது. இது தானா உதயனின் தமிழ்த் தேசியம்?

"மக்கள் குடியிருப்புக்குள் மயானம் இருக்கவில்லை. மயானத்தின் அருகில் மக்கள் குடியிருக்கிறார்கள்." என்று வாதாடுவோர் பலருண்டு. உலகில் எந்த நாடாக இருந்தாலும் மக்கட்தொகைப் பெருக்கம் இயற்கையானது. அதற்கு ஈடுகொடுக்க முடியாதவாறு இடநெருக்கடி ஏற்படுவதும் வழமை. ஆனால், அதற்காக மயானத்தை அகற்றக் கூடாது என்று வாதாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

மயானம் சம்பந்தமான விடயத்தில் சாதியம் இல்லையென்றால், அதை அகற்றுவதில் ஏனிந்த தயக்கம்? அது மட்டுமல்ல, இன்றைக்கும் ஈழத் தமிழர்கள் எல்லோரும், கவனிக்கவும் "எல்லோரும்", விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களாகவும், பின்பற்றுவோராகவும் உள்ளனர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

அப்படியானால், புலிகளை பின்பற்றி இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை கொண்டு வந்தால் சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்கலாமே? புலிகளின் "மாவீரர் துயிலும் இல்லம்" மாதிரி, "மாண்டவர் துயிலும் இல்லம்" என்று சில இடங்களை ஒதுக்கி, அங்கு இறந்தவர்களை கொண்டு சென்று புதைக்கலாம். இதனால் சுற்றுச் சூழலை பாதுகாப்பதுடன், மயானத்தை சாதிப் பாகுபாடற்ற சமரசம் நிலாவும் இடமாகவும் காட்டிக் கொள்ளலாம். செய்வீர்களா தமிழ்த் தேசியவாதிகளே?
 (12-7-2017)

(பிற்குறிப்பு: இவ்விரண்டு கட்டுரைகளும் புத்தூரில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு முன்னிலையில் வாசிக்கப் பட்டன.)

Thursday, April 09, 2015

மாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன மக்களின் போராட்டம்


சீனா ஒரு முதலாளித்துவ நாடான பின்னர், அங்கு பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. இலாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், மேற்கத்திய ஊடகங்களில் வெளிவருவதில்லை.

குவாங்டோங் (Guangdong) நகரில் உள்ள பொலிஸ் நிலையமும், பொலிஸ் கார்களும் மக்களால் அடித்து சேதப் படுத்தப் பட்டன. 

"சீனாவில் சுதந்திரம் இல்லை, சர்வாதிகார ஆட்சி நடக்கிறது" என்றெல்லாம் எமக்குப் போதிக்கும் மேற்கத்திய ஊடகங்கள், இது போன்ற தகவல்களை தெரிவிக்காமல் மறைக்கும் காரணம் என்ன? தங்கள் நாட்டு மக்களும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சமா?


குவாங்டொங் நகர சபை அனுமதியுடன், அங்கு ஒரு கழிவுப் பொருட்களை எரிப்பதற்கான உலை (incinerator) கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டிருந்தது. அயலில் உள்ள லங்க்தாங் (Langtang) நகர சபை "China Resources Cement Holdings" நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

குறிப்பாக, லங்க்தாங் நகரவாசிகள், தமது குடியிருப்புகளுக்கு மிக அண்மையாக, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆலை கட்டப் படுவதை விரும்பவில்லை. ஏற்கனவே அங்குள்ள சீமெந்து தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசடைய வைத்துள்ளது. அதற்கும் மேலாக புதிய உலை சூழலை இன்னும் அதிகமாக மாசு படுத்தும் என்று நம்பினார்கள்.


அயலில் உள்ள இன்னொரு நகரமான லுவோடிங் (Luoding) வாசிகள், உள்ளூர் பாடசாலைகளோடு சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் சீமெந்து ஆலை ஏற்கனவே தமது நீர் நிலைகளையும், வளிமண்டலத்தையும் மாசு படுத்தி விட்டதாக குறைப்பட்டுள்ளனர். இதற்கு மேலும் கழிவுப் பொருட்களை எரிக்கும் உலை வந்தால், அதனால் தமது குடும்பத்தினரின் ஆரோக்கியம் பாதிக்கப் படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

ஏப்ரல் 6 ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொலிஸ் அடக்குமுறை பிரயோகித்துள்ளது. கவச உடை அணிந்த பொலிஸ் படையினர், தடியடிப் பிரயோகம் செய்து கலைத்ததுடன், இருபது பேரை கைது செய்துமுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டத்தில், பொலிசார் வன்முறை பிரயோகித்த செயலானது பொது மக்களை ஆத்திரமடைய வைத்தது. பொலிஸ் தடியடிப் பிரயோகத்தில் சிறுவர்களும் பாதிக்கப் பட்டனர்.

முதலாளிய நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள பொலிஸ் நடவடிக்கை, தமது நியாயமான போராட்டத்தை உதாசீனப் படுத்தியதை கண்டு பொறுக்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்து, பொலிஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கண்ணில் கண்ட பொருட்களை அடித்து நிர்மூலமாக்கினார்கள்.

மக்கள் எழுச்சி காரணமாக, தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கைவிடப் பட்டுள்ளது. இது மக்களின் ஒன்று திரண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப் பட வேண்டும்.

அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக, சீன சமூக வலைத் தளங்களில் பிரசுரமான படங்களை இங்கே இணைத்துள்ளேன்.




Monday, August 02, 2010

ஆப்கானில் ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான மக்கள் போராட்டம்

காபுலில் அமெரிக்க தூதுவராலய வாகனத் தொடரணி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நான்கு ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமுற்ற பொது மக்கள் தூதுவராலய வாகனத்தை அடித்து நொறுக்கி, எரித்துள்ளனர். காபுல் நகரில் இருந்து விமான நிலையம் போகும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் படி விபத்து நடந்த பின்னர் அமெரிக்கர்கள் அங்கிருந்த ஆப்கானியரை நோக்கி சுட்டுள்ளனர். இதனால் விபத்தை பார்க்க வந்த மக்கள் ஆவேசமுற்று தூதுவராலய வாகனங்களை தாக்கியுள்ளனர். திடீரென ஏற்பட்ட கலவரத்தின் பொழுது அமெரிக்காவுக்கும், கர்சாயுக்கும் எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. சம்வம் நடந்த இடத்திற்கு வந்த அமெரிக்க படையினர் வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைத்துள்ளனர்.
Afghans riot after deadly accident

ஆப்கானிஸ்தானில் அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான மக்கள் போராட்டம் பெருகி வருகின்றது. இவை குறித்து ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. ஊடகவியலாளருக்கு கொடுக்கப்படும் பண முடிப்புகள், இது போன்ற செய்திகள் வெளியுலகத்தை அடைவதை தடுக்கின்றது. கடந்த வாரம் ஹெல்மன்ட் மாகாணத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் கொல்லப்பட்ட 65 வயது முதியவரின் சடலத்தை ஏந்திய மக்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். அந்த முதியவர் நேட்டோ படையினரால் கொல்லப்பட்டதாகவும், உடனடி விசாரணை அவசியம் என்றும், அன்னியப் படைகள் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஹெல்மன்ட் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், சில வாரங்களுக்கு முன்னர் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாலிபானுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நடந்த சண்டையில் இருந்து தப்பிக்க ஒளிந்து கொண்ட பெண்களும், குழந்தைகளுமே பலியாகியுள்ளனர். நேட்டோ படையினர் ஏவிய மோட்டார் ஷெல்களே அவர்களது உயிரைக் குடித்துள்ளது. ஊர் மக்கள், படுகொலை நடந்த பின்னர் கண்டனம் தெரிவிப்பதற்காக, அண்மையில் இருந்த நேட்டோ படை முகாமை நோக்கி சென்றனர். "எம்மோடு வந்து பலியான மக்களைப் பாருங்கள். ஷெல் வந்த திசையை பாருங்கள். நீங்கள் தாலிபான்களை சுட்டீர்களா? அல்லது மக்களை நோக்கி சுட்டீர்களா? நீங்கள் எங்களை பாதுகாக்க வந்தீர்களா? அல்லது கொல்ல வந்தீர்களா?" ஊர் மக்கள் நியாயம் கேட்ட பொழுது, படையினரிடம் இருந்து துப்பாக்கி குண்டுகளே பதிலாக வந்தன.

இந்த செய்தியை வெளியிட்டது "Free Afghanistan" வானொலி. முன்பு சோஷலிச நாடுகளுக்கு எதிராக Radio Free Europe என்ற வானொலி இயங்கி வந்தது. அதே பாணியில் அமெரிக்க ஆதரவு பிரச்சாரத்திற்காக, அமெரிக்க நிதியில் ஆரம்பிக்கப் பட்டதே அந்த வானொலி.