Showing posts with label பிரெஞ்சுப் புரட்சி. Show all posts
Showing posts with label பிரெஞ்சுப் புரட்சி. Show all posts

Saturday, May 06, 2017

யார் இந்த இலுமினாட்டி? - ஓர் அறிவொளி இயக்க வரலாறு


இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப் படுகின்றனர்.

அது ஒன்றும் தற்செயல் அல்ல. 18 ம் நூற்றாண்டில் இருந்து தொடரும்  வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20 ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப் படுத்தப் பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப் பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக இலுமினாட்டி எனும் பூச்சாண்டி காட்டப் படுகின்றது.

யார் இந்த இலுமினாட்டிகள்? அது தொடர்பான வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போம். உண்மையில், 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஐரோப்பாவில் இலுமினாட்டி என்ற ஓர் அமைப்பு இருந்துள்ளது. ஆனால், அது வெறும் பதினோரு வருடங்கள் மட்டுமே இயங்கியது. தற்காலத்தில் அப்படி எந்த அமைப்பும் கிடையாது. அது பற்றி இன்று உலாவும் கதைகள் யாவும் ஒரு சிலரின் கற்பனை மட்டுமே.

18ம் நூற்றாண்டில் இன்றுள்ள ஜெர்மனி என்ற தேசம் இருக்கவில்லை. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா எல்லைக்கு வடக்கே உள்ள ஜெர்மன் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் பையரன் (Bayern) என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் தனிமனித சுதந்திரம் இருக்கவில்லை. மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும், தேவாலயங்களின் மதக் கட்டுப்பாடுகளும் மக்களை ஒடுக்கிய காலகட்டம் அது. படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளுக்கும் குறைவிருக்கவில்லை.

மக்களை அறியாமை இருளுக்குள் வைத்திருக்கும் மன்னர்கள், மதகுருக்களின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பையரன் பகுதியில் ஓர் அமைப்பு உருவாக்கப் பட்டது. அதற்காக, ஆடம் வைஸ்ஹவுப்ட் (Adam Weishaupt 1748 – 1830) என்பவர் 1776 ம் ஆண்டு இலுமினாட்டி என்ற அமைப்பைத் தொடங்கினார். லத்தீன் (அல்லது இத்தாலி) மொழியில் இலுமினாட்டி என்றால் ஒளி பாய்ச்சுதல் என்ற அர்த்தம் வரும். அதாவது, தமிழில் அதை அறிவொளி இயக்கம் என்று குறிப்பிடலாம்.

ஆங்கில மொழியில் பகுத்தறிவாளர்கள் பாவிக்கும் Enlightenment என்ற சொல் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. அதன் அடிப்படையும் ஒளி கொடுத்தல் என்பது தான். ஆகவே, இலுமினாட்டி ஒரு பகுத்தறிவு இயக்கம் என்றும் சொல்லலாம். அதன் குறிக்கோளும் அப்படித் தான் இருந்தது. மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். தேவாலயங்களின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். மன்னர்கள், நிலப்பிரபுக்களின் அதிகார துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்தல்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் பள்ளிக்கூடம் இருக்கவில்லை. பொதுக்கல்வி இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. ஜனநாயகம் இருக்கவில்லை. தேர்தல்கள் நடக்கவில்லை. இப்படிப் பல இல்லைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொன்னால், தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தான் மாதிரித் தான் அன்றைய ஐரோப்பா இருந்தது. அதை விட மோசமாக இருந்தது என்றும் சொல்லலாம்.

மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்ப விரும்பிய இலுமினாட்டிகள் தமக்கு ஆபத்தானவர்கள் என்பதை நிலப்பிரபுக்களும், மதகுருக்களும் உணர்ந்து கொண்டனர். ஒரு சாதாரணமான அறிவொளி இயக்கமான இலுமினாட்டி, மிக விரைவில் பலம் வாய்ந்த எதிரிகளை சம்பாதித்துக் கொண்டது. இலுமினாட்டி ஆரம்பித்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு, பையரன் நாட்டை ஆண்ட குறுநில மன்னன் கார்ல் தியோடோர் அதைத் தடை செய்ய உத்தரவு பிறப்பித்தான். அத்துடன் இலுமினாட்டி என்ற அறிவொளி இயக்கத்தின் கதை முடிந்தது.

இலுமினாட்டிகள் தடைசெய்யப்பட்டு ஓரிரு வருடங்களுக்குள், 1789 ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. பிரெஞ்சுப் புரட்சியாளர்களும் பகுத்தறிவுவாதிகளாக இருந்தனர். அவர்களும் மன்னராட்சியை, மத மேலாதிக்கத்தை வெறுப்பவர்களாக இருந்தனர். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் மதம் தடைசெய்யப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. மத நிறுவனங்களின் சொத்துக்கள் அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் அடித்து விரட்டப் பட்டனர், அல்லது சிரச்சேதம் செய்யப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். நகர மத்தியில், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், மன்னர் குடும்பத்தினரின் தலைகள் வெட்டப் பட்டன. இந்தத் தகவல்கள் ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள், மதகுருக்கள் மனதில் கிலியை உண்டாக்கியது. தடைக்குப் பின்னரும் இலுமினாட்டிகள் இரகசியமாக இயங்கியதாகவும், அவர்களே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில் இருந்ததாகவும் நம்பத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் இலுமினாட்டிகள் பற்றிய கட்டுக்கதைகள் பரவ ஆரம்பித்தன.

இந்தக் காலத்தில், இலுமினாட்டிகள் பற்றி பரவும் வதந்திகளும் மேற்படி வரலாற்றை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனெனில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் தாராளவாத சித்தாந்தம் உலகெங்கும் பரவியது. அத்துடன், கூடவே முதலாளித்துவ பொருளாதாரமும் பரவியது. உலகம் முழுவதும் சுரண்டப் படும் செல்வத்தை குவித்துக் கொண்ட கோடீஸ்வரர்களை முதலாளித்துவமே உருவாக்கியது. 

முதலாளித்துவத்தில் உருவாகும் மூலதன திரட்சி பற்றி எந்த வித அடிப்படை அறிவுமற்ற தற்குறிகளின் கண்டுபிடிப்பு தான் இலுமினாட்டி.  பன்னாட்டு நிறுவனங்களால், உலகம் முழுவதும் சுரண்டப்படும் பணம் மூலதனமாக ஓரிடத்தில் குவிகின்றது. இதனால் இலாபமடைபவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத பணக்காரர்கள், உலகில் அரைவாசி செல்வத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அதையே, "பதின்மூன்று இலுமினாட்டி குடும்பங்கள் உலகை ஆள்வதாக" திரித்துக் கூறுகிறார்கள். இது ஒரு பாமரத்தனமான புரிதல். 

இலுமினாட்டி என்ற பெயரில் யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும் பரப்பப் படுகின்றன. உலகில் மிகப் பெரிய முதலாளிகள் யூதர்களாக இருக்கலாம். அதற்காக யூதர்கள் உலகை ஆள்வதாக சொல்வதெல்லாம் சுத்த அபத்தம். உண்மையான இலுமினாட்டிகளுக்கும் யூதர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இடையில் சிலரால் இட்டுக் கட்டப் பட்ட கதை.

யூதர்களை இலுமினாட்டிகளாக சித்தரிப்பதற்கு ஒரு நூலைக் காட்டி திரிபுபடுத்துகிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட, "சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை" (The Protocols of the Elders of Zion) என்ற நூல், இன்று பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் அதற்கு "யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" என்று தலைப்பிட்டுள்ளனர். மூல நூல் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.

சுவிஸ் ஜெர்மன் பூர்வீகத்தை கொண்ட, செர்கெய் நீலுஸ் ஒரு ரஷ்ய ஒர்தொடக்ஸ் மத அடிப்படைவாதி. சார் மன்னனுக்கு விசுவாசமான நிலவுடமையாளர் குடும்பத்தை சேர்ந்தவர். அப்படியான சமூகப் பின்னணி கொண்டவர்கள் பழமைவாதிகளாக இருப்பதில் அதிசயமில்லை. அவர் வாழ்ந்த காலத்து ரஷ்யா மிகப் பெரிய சமுதாய மாற்றத்திற்கு உள்ளானது. 

ரஷ்ய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டு மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. அப்படியான சந்தர்ப்பத்தில், ரஷ்யப் பொருளாதாரத்தில் யூதர்களின் பங்களிப்பும் இருந்திருக்கும். அதே நேரம், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கும் அதிகரித்தது. ரஷ்யாவில் உரிமைகள் அற்ற, ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த யூதர்கள், சம உரிமை வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்ததில் அதிசயம் ஒன்றுமில்லை. 

அத்தகைய சூழலில் வாழ்ந்த செர்கெய் நீலுஸ் என்ற பழைமைவாதி எழுதிய சிறு நூல் தான் "சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை". இதை அவர் கிறிஸ்துவுக்கு எதிரான சக்திகள் என்ற தலைப்பின் கீழ், தீவிர கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கண்ணோட்டத்தில் எழுதி இருந்தார். முழுக்க முழுக்க யூதர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துக்களை கொண்ட நூல். அதிலே பல கற்பனையான வாதங்களை அடுக்கி உள்ளார். பெரும் முதலாளிகள், யூதர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கிறிஸ்துவுக்கு எதிரான தீய சக்திகள் என்பது அவரது நிலைப்பாடு. அதனால், இந்த நூல் நாஸிகளினாலும் வாசிக்கப் பட்டதில் வியப்பில்லை.

1917 ம் ஆண்டு ரஷ்யப் புரட்சி வெடித்தது. கம்யூனிச போல்ஷெவிக் கட்சியினர் அந்த நூலை தடை செய்திருந்தனர். அதை வாசிப்பதும், வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. பத்தாண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கப் பட்டதாக சொல்லப் படுகின்றது. நூலாசிரியர் செர்கெய் நீலுஸ் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார்.

அந்தக் காலத்தில், மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பாசிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியை யூதர்களின் சதியாகப் பார்த்தனர். ஹிட்லர் கூட தனது உரைகளில் அதைக் குறிப்பிட்டு பேசி வந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் (போல்ஷெவிக்) கட்சியில் யூதர்கள் தலைமைப் பொறுப்பில் கூட இருந்தனர். உதாரணத்திற்கு செம்படைத் தளபதி ட்ராஸ்கியை குறிப்பிடலாம். ஆனால், அன்றிருந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ரஷ்யாவில் யூதர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்ட காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியிலும் யூதர்கள் மேன்நிலைக்கு வர முடியவில்லை. ரஷ்யாவில் மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இருந்த பேரினவாதிகள், சிறுபான்மையினமான யூதர்களை வளர விடாமல் ஒடுக்கி வந்தனர்.

இலுமினாட்டி பற்றிய பொய் வதந்திகளையும், "யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" என்ற இனவெறியூட்டும் நூலையும் நம்புவோரும், பரப்புவோரும் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், மத அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகியோர் தான். இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நேரத்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன. ஏற்கனவே ஜெர்மனியில் நாஸிகளால் பரப்பப் பட்ட இனவாத விஷக்கருத்துக்கள், தமிழ் வலதுசாரிகள் மத்தியில் பரவுவது ஆரோக்கியமானதல்ல. 

இலுமினாட்டி பற்றிய முன்னைய பதிவு:

Monday, December 29, 2014

பிரான்ஸ் இனப்படுகொலை : "சுதந்திரம் - சர்வாதிகாரம் - சகோதரப் படுகொலை"

பிரெஞ்சுப் புரட்சியின்
இரத்த சரித்திரம்  (பகுதி - 2)
பிரெஞ்சுப் புரட்சியின் தலைநகரான பாரிசில் இருந்து கிளம்பிய படைகள், எதிர்ப் புரட்சியாளர்களை அடக்கச் சென்றன. புரட்சிக்கு முன்னர், மன்னருக்கு விசுவாசமாக இருந்த படையினரும், படையதிகாரிகளும், தற்போதும் மனம் மாறாமல் இருக்கலாம். ஆகையினால், புரட்சிக்கு விசுவாசமான தளபதிகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டி இருந்தது.
பாரிஸ் புரட்சிகர அரசு நியமித்த புதிய அதிகாரிகள் எல்லோரும், சித்தாந்த ரீதியாக நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான அரசியல் கொள்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிசப் புரட்சியிலும் அதே தான் நடந்தது. எந்த மாற்றமும் இல்லை. சித்தாந்தம் மட்டுமே வேறு வேறு. ஆனால், இரண்டு புரட்சிகளும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப் பட்டன.

சோவியத் ஒன்றியத்தில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், ஆயிரக் கணக்கானோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். அதைக் "களையெடுப்பு" என்று கூறினார்கள். எதற்காக அவர்கள் கொல்லப் பட்டார்கள்? வர்க்கப் புரட்சியின் எதிரிகள், அல்லது அதற்கு விசுவாசமாக இல்லாதவர்கள். மேட்டுக்குடியில் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, மேல்தட்டு வர்க்க பழக்க வழக்கங்களை பின்பற்றியவர்கள். நிலப்பிரபுத்துவ, முதலாளிய பெருமை பாராட்டியவர்கள்....

இப்படிப் பல காரணங்களுக்காக கொல்லப் பட்டனர். அன்றைய சமூகத்தில், எல்லோரும் சந்தேகத்திற்கு உள்ளானார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டில், ஆயிரக் கணக்கானோருக்கு மரண தண்டனை வழங்கிய உளவுத்துறை அதிகாரிகள் கூட, பின்னர் ஒரு நேரம் அதே குற்றச்சாட்டில் கொல்லப் பட்டனர்.

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக எழுச்சி கொள்வது தான் புரட்சி ஆகும். சாதாரண பொது மக்களே, தங்கள் மத்தியில் இருந்த வர்க்க விரோதிகளை காட்டிக் கொடுத்தார்கள். தண்டனை கொடுத்தார்கள். பிரான்சில் என்ன நடந்ததோ, அதே தான் ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது. எந்த வித்தியாசமும் கிடையாது.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த ஓர் உதாரணத்தைக் கூறுகின்றேன். ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் நீதிபதியாக வீற்றிருந்தவர், சர்வாதிகாரி ரொபெஸ்பியரின் உற்ற நண்பர். புரட்சிக்கு விசுவாசமானவர், சித்தாந்த தெளிவு பெற்றவர் என்றெல்லாம் நம்பப் பட்டவர். அந்த நகரில், அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களைக் கூட விட்டு வைக்காமல் களையெடுத்தார்கள். புரட்சியின் எதிரிகள் 30 பேருக்கு, கில்லெட்டின் எனும் கத்தியால் கழுத்து வெட்டி தண்டனை வழங்கப் பட்டது.

ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் மரண தண்டனைகளை நிறைவேற்றிய நீதிபதிக்கும், பின்னர் அதே மரண தண்டனை கிடைத்தது. அவர் செய்த குற்றம் என்ன? நகரத் தெருக்களில், ஆறு குதிரைகள் பூட்டப் பட்ட வண்டியில், படையினர் புடைசூழ பவனி வந்தார். அதிலென்ன தவறு? அந்தக் காலத்தில் அப்படிச் செல்வது, அரச வம்சத்தினரும், பிரபுக்களும் தான்!

ஆகவே தன்னை ஒரு பிரபு மாதிரி பாவனை செய்து கொண்ட நீதிபதிக்கும், புரட்சியின் எதிரி (அல்லது வர்க்க எதிரி) குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை கிடைத்தது. தண்டனைக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? வேறு யாருமல்ல, அவரது உற்ற நண்பன் ரொபெஸ்பியர் தான்.

பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில், நண்பர்கள், குடும்ப உறவுகள் எதுவுமே, அன்றைய புரட்சியாளர்களுக்கு முக்கியமாக இருக்கவில்லை. ஒருவர் புரட்சிக்கு ஆதரவானவரா அல்லது எதிரானவரா? பிரபுத்துவ வர்க்க சிந்தனை கொண்டவரா அல்லது குடி மக்கள் (பூர்ஷுவா) வர்க்க சிந்தனை கொண்டவரா? அது மட்டுமே முக்கியமாகக் கருதப் பட்டது. 

ரஷ்யப் புரட்சியிலும், சீனப் புரட்சியிலும் அதே தான் நிலைமை. அந்த நாடுகளில், பூர்ஷுவா (முதலாளிய) வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அது மட்டுமே வித்தியாசம்.

புரட்சி நடக்கும் காலத்தில், ஒரே வர்க்கத்தை சேர்ந்த எல்லோரும், வர்க்க சிந்தனை கொண்டிருப்பார்கள் என்றும்  எதிர்பார்க்க முடியாது. ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள், கொள்கை வேறுபாடு காரணமாக எதிரெதிர் அணியில் இருக்கலாம்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் நடந்த உள்நாட்டுப் போரில், சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படையில், சாதாரண போர்வீரர்களாக இருந்தவர்களும் விவசாயிகள் அல்லது பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசம், மதப் பற்று போன்றன முக்கியமாகப் பட்டன. அவர்களை ஆதரித்த மக்கள் பிரிவினரும் இருந்தார்கள். செம் படையினரும், வெண் படையினரும் கொள்கை வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும், இரண்டு தரப்பிலும் சாதாரண மக்கள் பெருமளவில் பலியானார்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த  படுகொலைகளை வெறுமனே படையினரின் மிலேச்சத் தனம் என்று ஒதுக்கி விட முடியாது. பலவற்றை திட்டமிட்ட இனப் படுகொலைக்குள் அடக்கலாம். அது தான் ஒரு பூர்ஷுவா புரட்சிக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையிலான வித்தியாசம். அதாவது, பூர்ஷுவா புரட்சி அடிப்படையில் பேரினவாத தன்மை கொண்டது. பிற இன மக்களின் சுதந்திரத்தை  மட்டுமல்ல, உயிர் வாழும் உரிமையையும் மதிப்பதில்லை. அதற்கு மாறாக, பாட்டாளி வர்க்கப் புரட்சியானது, எந்த இனமாக இருந்தாலும், குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டுமே எதிரிகளாக கருதியது. போர் முடிந்த பின்னர், எஞ்சிய வர்க்க எதிரிகளை கைது செய்து மனம் மாற்றும் முயற்சியில் இறங்கியது. 

பிரான்சின் மேற்குப் பகுதியில் வண்டே (Vendée) எனும் பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அங்கிருந்த மக்களில் பெரும்பான்மையானோர் சாதாரண விவசாயிகள் தான். உண்மையில் புரட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய வர்க்கத்தினர். ஆனால், அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசமும், மத நம்பிக்கையும் முக்கியமாகப் பட்டது. கத்தோலிக்க மதத்தின் பெயரால், மன்னரின் பெயரால் ஒரு பெரும் படையை தயார் படுத்தி வைத்திருந்தார்கள். குறைந்தது 65000 போர்வீரர்களை கொண்ட பலமான இராணுவமாக இருந்தது. அவர்கள் செய்த முதல் வேலை, வண்டே பகுதியில் புரட்சிக்கு விசுவாசமான 200 பேரைப் பிடித்துக் கொன்றது தான்.

வண்டே கிளர்ச்சியை அடக்குவதற்காக, பாரிஸ் ஒரு பெரும் படையை அனுப்பியது. புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட, போர்க்கள அனுபவம் அற்ற வீரர்கள், சென்றவுடனே தோல்வியை தழுவிக் கொண்டனர். மேலும், அந்தப் பிரதேசத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள், காடுகளில் மறைந்திருந்து போரிட்டார்கள். அதனால் குடியரசுப் படையினர் முன்னேற முடியாமல் பின்வாங்க வேண்டி இருந்தது.

நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, பாரிசில் இருந்து ஒரு புதிய தளபதி வந்தார். அவரும் ரொபெஸ்பியர் மாதிரி, தொழில்முறை வழக்கறிஞர். மன்னரின் மரண சாசனத்தில் கையொப்பம் இட்டவர். அவர் பெயர் ஜான் பாப்டிஸ்ட் கரியேர் (Jean Baptiste Carrier). காடுகளை துப்பரவாக்குவது. கால்நடைகளை கவர்ந்து செல்வது, அறுவடை செய்யப் பட்ட தானியங்களை கொள்ளையடிப்பது. இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.

கரியேரின் வழிகாட்டலினால் உற்சாகமடைந்த குடியரசு படையினர், லெ மொன் எனும் இடத்தில் நடந்த போரில் 15000 கிளர்ச்சியாளர்களை கொன்றார்கள். அந்த வெற்றிக்குப் பின்னர், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை சுற்றி வளைத்து, கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். பெண்கள், குழந்தைகள் கூட குடியரசு படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.

ஆயினும், நிலைமை அத்துடன் சீரடையவில்லை. கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லா தாக்குதல்களை நடத்தினார்கள். அதனால், வண்டே பிரதேசத்தில் இருந்த அனைவரையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என தீர்மானிக்கப் பட்டது. சொத்துக்களை கொள்ளையடிக்கவும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், படையினருக்கு அனுமதி வழங்கப் பட்டது.

போரில் அழியாமல் எஞ்சிருந்த கிராமங்களுக்குள் புகுந்து கிராமவாசிகளை படுகொலை செய்தார்கள். கால்நடைகளும் அழிக்கப் பட்டன. வீடுகளை எரித்தார்கள். வயல்கள் தீக்கிரையாக்கப் பட்டன. ஒரு கிராமத்தில் ஆண்களைப் பிடித்து வெட்டிக் கொன்று விட்டு, பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து சிதையில் நெருப்பு மூட்டி எரித்தார்கள். அந்தக் கிராமங்களில் வாழ்ந்த சிலர், புரட்சிக்கு ஆதரவானவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களும் குடியரசுப் படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.

கிளர்ச்சி நடந்த இடத்திற்கு அண்மையில் உள்ள நான்த் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில், கைது செய்யப் பட்டோர் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அங்கிருந்த கைதிகள் பலதரப் பட்டவர்கள். பிரபுக்கள், மேட்டுக்குடி மக்கள், அவர்களுக்கு வேலை செய்த பணியாளர்கள், கத்தோலிக்க மதகுருக்கள் போன்ற "வர்க்க எதிரிகள்" மட்டுமல்லாது, படையினருக்கு உணவு கொடுக்க மறுத்த சாதாரண விவசாயிகள் கூட சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர்.

இட நெருக்கடி காரணமாக சிறைச்சாலைக்குள் கைதிகள் நிரம்பி வழிந்தனர். அதனால் தொற்று நோய்களும் பரவின. சிறைச்சாலைக்கு பொறுப்பான நீதிபதியாக கரியேர் இருந்தார். ஒவ்வொரு கைதியாக கொண்டு வந்து விசாரிப்பதற்கு அவருக்கு பொறுமை இருக்கவில்லை. ஆகவே ஒரு யோசனை சொன்னார். கைதிகளை கொண்டு சென்று, அருகில் உள்ள ஆற்றில் தூக்கிப் போட்டு மூச்சுத் திணறி சாக வைக்க வேண்டும். 


பிரெஞ்சுப் புரட்சியானது மதத்திற்கு எதிராக இருந்தது. நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப் பட்டன. கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். கத்தோலிக்க மத விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நான்த் நகரில், கத்தோலிக்க மதகுருக்கள், மிக மோசமாக சித்திரவதை செய்யப் பட்டனர். பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் நிர்வாணமாக்கி, சோடி சோடியாக கட்டி, ஆற்றுக்குள் தூக்கி வீசினார்கள். படையினர் அதனை "குடியரசுத் திருமணம்" என்று கூறி பரிகசித்தார்கள்.

பிரான்சின் கிழக்கே உள்ள லியோன் நகரில் இன்னொரு கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. முன்னர் புரட்சியை ஆதரித்தவர்கள், தமது பிரதேசத்திற்கு கூடுதலான சமஷ்டி அதிகாரங்களை கோரி கிளர்ச்சி செய்தார்கள். பாரிஸ் அரசுக்கு விசுவாசமானவர்களை பிடித்துக் கொன்று விட்டு, தன்னாட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பாரிஸில் இருந்த பொதுநல கமிட்டி பழிவாங்கப் புறப்பட்டது.

ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்கு விசுவாசமான கொல்லோத் து புவா (Collot d'Herbois) "துரோகிகளின் பிணங்களை கிழங்குகள் மாதிரி அடுக்கி வைக்கப் போவதாக..." சூளுரைத்தார். "அப்பாவிகளை பாதுகாத்துக் கொண்டிருந்தால், குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்" என்று இனப் படுகொலைக்கு நியாயம் கற்பித்தார்.

கொல்லோத் து புவாவுடன் பூஷே (Fouché) எனும் இன்னொரு அதிகாரியும் சேர்ந்து கொண்டார். இருவருமாக சேர்ந்து. கிளர்ச்சியை முறியடித்தார்கள். லியோனில் அகப்பட்டவர்கள் எல்லோரையும் பிடித்துக் கொண்டு வந்து, பீரங்கியால் சுட்டுக் கொன்றார்கள்.

"அங்கே இரத்தம் ஆறாக ஓடியது. ஆனால் மனித குல விடுதலைக்காக அதைச் செய்தோம்...குற்றவாளிகளின் இரத்தம் எமது சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது." என்று பூஷே தனது செயலை நியாயப் படுத்தினார்.

பாரிஸ் நகரில் இருந்த ரொபெஸ்பியருக்கு, தனது தோழர்கள் அதிக தூரம் செல்வதாகப் பட்டது. ஆகவே, கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய அதிகாரிகளையும், மற்றவர்களையும் பாரிசுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தாங்கள் பாரிஸ் சென்றால் என்ன நடக்கும் என்று அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தது. ரொபெஸ்பியர் கருணை காட்டாமல் கொன்று விடுவான் என்று அஞ்சினார்கள். அதனால் அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்தார்கள்.

பாரிஸ் நகரில் ஒரு சதிப்புரட்சி நடந்தது. பொதுநல கமிட்டி அங்கத்தவர்களும், ரொபெஸ்பியரும் கைது செய்யப் பட்டனர். புரட்சியின் ஒப்பற்ற தலைவனாக சர்வாதிகார ஆட்சி நடத்திய ரொபெஸ்பியர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். 28 ஜூலை, பெருந்திரளான மக்கள் முன்னிலையில் ரொபெஸ்பியரின் தலை துண்டிக்கப் பட்டது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்களை புரிந்த கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய மூன்று அதிகாரிகளும், எல்லாவற்றிற்கும் ரொபெஸ்பியர் மீது பழி சுமத்தினார்கள். தாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே என்று கூறிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் நிம்மதி நீண்ட காலம் நிலைக்கவில்லை. 1794 செப்டம்பர், கரியேர் கைது செய்யப் பட்டு, சில மாதங்களுக்குப் பின்னர் சிரச்சேதம் செய்யப் பட்டார். அடுத்த வருடம், கொல்லோத் கயானாவுக்கு நாடுகடத்தப் பட்டார். பூஷே பதவியிறக்கப் பட்டு, சாமானிய மனிதனாக வாழ்ந்து மடிந்தார்.

ரொபெஸ்பியரின் மரணத்திற்குப் பின்னர், பிரான்சில் கொலைகள் பெருமளவு குறைந்து விட்டன. அடுத்து சில வருடங்களில், புரட்சிக்கு தலைமை தாங்க வந்த நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் சமாதானம் நிலவியது. ஆயினும், புரட்சியின் ஆரம்ப காலகட்டமான, 1793, 1794 ஆகிய இரு வருடங்களில் மட்டும், பிரான்சில் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர்.

(முற்றும்)

(பிற்குறிப்பு: பிரெஞ்சுப் புரட்சியில் நடந்த இனப்படுகொலை பற்றிய விபரங்கள், Historia (Nr.1/2015) சஞ்சிகையில் பிரசுரமான "Beulen van de revolutie" எனும் கட்டுரையில் இருந்து எடுக்கப் பட்டன.)

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை வாசிப்பதற்கு:

Friday, December 26, 2014

பிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம்

கம்யூனிசத்தை வெறுக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகளிடம், சில புள்ளிவிபரங்கள் எப்போதும் கைவசம் இருக்கும். ஸ்டாலின் கால ரஷ்யாவில், இறந்தவர் எத்தனை? மாவோ கால சீனாவில் இறந்தவர் எத்தனை? பொல் பொட் கால கம்போடியாவில் இறந்தவர் எத்தனை? இதற்கான விடைகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

சிலநேரம், ஸ்டாலின் கொன்ற ரஷ்யர்களின் தொகை, அன்றைய ரஷ்ய சனத்தொகையை விட அதிகமாக இருக்கலாம். அதே மாதிரி, மாவோவும் மொத்த சீன சனத்தொகையை விட அதிகமானோரை கொன்றிருக்கலாம். அப்படியான சந்தேகங்களை யாரும் எழுப்பக் கூடாது. அறிவுஜீவிகளின் மேதைமையை நாங்கள் சந்தேகப் பட முடியுமா?

அவர்களிடம், 1793 நடந்த பிரெஞ்சுப் புரட்சி கொன்ற, பிரெஞ்சு மக்களின் தொகை எவ்வளவு என்று கேட்டுப் பாருங்கள். பதில் தெரியாமல் திரு திரு என்று முழிப்பார்கள். பிரான்சில், 1793க்கும் 1794 க்கும் இடையிலான ஒரு வருடத்தில் மட்டும், மொத்தம் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டார்கள்! சிலவற்றை "இனப்படுகொலை" என்ற வரையறைக்குள் அடக்கலாம். எந்தக் குற்றமும் புரிந்திராத, இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.

பிரான்சில் நடந்த புரட்சியானது, இன்றைய முதலாளித்துவ - லிபரல் அரசுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. இன்று நாங்கள் "ஜனநாயகம்" என்று கூறிக் கொள்ளும் சிவில் சட்டம், அரசு நிர்வாகம், தேசிய இராணுவம், இன்னபிறவற்றை பிரெஞ்சுப் புரட்சி தான் தந்தது. பிரான்சில் புரட்சி நடந்திரா விட்டால், இன்று ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் மன்னராட்சி நிலைத்து நின்றிருக்கும்.

பிரான்சில் புரட்சி நடந்தது பற்றி மட்டுமே, பல வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ளது. ஆனால், புரட்சிக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரத்தை எங்கேயும் காண முடியாது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் என்ன நடந்ததோ, அதை விட மிகவும் மோசமான சம்பவங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்துள்ளன. ஏனெனில், புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்து அல்ல.

ரஷ்யாவில் நடந்த புரட்சியில், தலைநகரான சென் பீட்டர்ஸ்பேர்க் மட்டுமே, லெனின் தலைமையிலான சமூக ஜனநாயக போல்ஷெவிக் கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. ரஷ்யாவின் பிற பாகங்களில் மென்ஷெவிக் மற்றும் சார் மன்னனுக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் நிலவியது. அதனால், அங்கு ஓர் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதே மாதிரியான வரலாற்று நிகழ்வுகள், பிரான்சிலும் நடந்தன என்ற விபரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

பிரான்சில், தலைநகர் பாரிஸ் மட்டுமே புரட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தலைநகருக்கு வெளியே பல இடங்களில், மன்னருக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. வேறு சில அரசியல் சக்திகளும், பாரிஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தன.

பிரான்சின் தெற்குப் பகுதிகளில், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமான படையினரும், மேற்குப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு விசுவாசமான படையினரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். கிழக்குப் பகுதிகளில் சற்று வித்தியாசமான கிளர்ச்சி நடந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவான, ஆனால் பாரிஸ் அரசுக்கு எதிரான சமஷ்டிவாதிகளின் கை ஓங்கி இருந்தது.

பிரெஞ்சுப் புரட்சியானது, வெகு விரைவில் எதிர்ப்புரட்சியாளர்களினால் தோற்கடிக்கப் படும் அபாயம் நிலவியது. அதனால், மக்ஸ்மில்லியன் தெ ரொபெஸ்பியர் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அவர்கள் அதனை, "கொடுங்கோன்மைக்கு எதிரான சுதந்திரத்தின் சர்வாதிகாரம்" என்று நியாயப் படுத்தினார்கள்.

சோவியத் யூனியனை ஸ்தாபித்த கம்யூனிசப் புரட்சியாளர்கள், "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்" நிலைநாட்டப் பட்டதாக கூறிய பொழுது, எத்தனை பேர் அதைப் பரிகசித்தார்கள்? சர்வாதிகாரம் என்ற சொல்லை சுட்டிக் காட்டியே எம்மைப் பயமுறுத்தியவர்கள் எத்தனை? அதே நேரம், பிரான்ஸ் நிலைநாட்டிய "சுதந்திரத்தின் (பூர்ஷுவா வர்க்க) சர்வாதிகாரம்" அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எப்படி?

அது என்ன "சுதந்திரத்தின் சர்வாதிகாரம்"? இதைக் கேள்விப்படும் நீங்கள், "சர்வாதிகாரம் சுதந்திரத்திற்கு எதிரானது" என்றெண்ணி சிரிக்கலாம். உங்கள் எண்ணம் தவறானது. நாங்கள் நவீன உலகின் மனிதர்கள் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். 

அன்றைய காலகட்டம் வேறு. புரட்சிக்கு முன்னர், மன்னர் குடும்பமும், நிலப்பிரபுக்களின் குடும்பங்களும் மட்டுமே சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. குடி மக்களுக்கு உரிமைகளே இருக்கவில்லை. அதனால், குடிமக்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கு சர்வாதிகாரம் இன்றியமையாதது என்று கருதப் பட்டது.

நமது காலத்தில், இன்றைய சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் நடுத்தர வர்க்கம் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா வர்க்கம்) என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரிந்து வைத்துள்ளனர்.

புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவில், நடுத்தர வர்க்கத்தினர் வறுமையில் வாடினார்கள்.  நமது காலத்தில், நம் தாயகத்தில் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, அன்றிருந்த ஐரோப்பிய மருத்துவர்களுக்கு கிடைக்கவில்லை. வைத்தியம் பார்ப்பது ஒரு கீழ்த்தரமான, வருமானம் குறைவாகக் கிடைத்த தொழிலாகக் கருதப் பட்டது. ஏனையோரைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரெஞ்சுப் புரட்சியானது, மேற்குறிப்பிட்ட நடுத்தர வர்க்க (பூர்ஷுவா) மக்களின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது. நிலப்பிரபுக்களுக்கு எதிரான அவர்களது கோபம், அரச மட்டத்திலும் எதிரொலித்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் காலத்தில் பிரபுக்கள், முதலாளிய, மேட்டுக்குடி வர்க்கங்களை சேர்ந்த எல்லோரும் சந்தேகப் பட்டு கொல்லப் பட்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும் தெரிந்திருக்கும்.

பிரான்சிலும் அதே தான் நடந்தது. பிரபுக்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல, பிரபு குலத்தில் பிறந்த அத்தனை பேரும் சந்தேகிக்கப் பட்டனர். கத்தோலிக்க மதகுருக்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். புரட்சிப் படைகளின் கைகளில் அவர்கள் அகப்பட்டால் மரணம் நிச்சயம். யாருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. கைது செய்யப் பட்டவர்கள் ஒன்றில் விடுதலை செய்யப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.

1793 ஆம் ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சியை பாதுகாப்பதற்காக "பொதுநல கமிட்டி" ஒன்று உருவாக்கப் பட்டது. பாரிசில் அதுவே "ஆளும் கட்சியாக" இருந்தது. முன்னாள் வழக்கறிஞரான ரொபெஸ்பியர் அதன் தலைவராக இருந்தார். உண்மையில் ரொபெஸ்பியரின் கையில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. பிரபுக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் ஒடுக்குமுறையில் இருந்து, மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என்றவர், தானே ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அதனால் தான், புரட்சியாளர்களில் ஒரு பிரிவினரும் அவருக்கு எதிராக திரும்பினார்கள்.

ஸ்டாலின் காலத்தில், "மக்கள் விரோதிகள்" என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர். பிரான்சில் ரொபெஸ்பியர் காலத்திலும் அதே தான் நடந்தது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஒன்றில் "துரோகிகள்" அல்லது "மக்கள் விரோதிகள்" என்று முத்திரை குத்தப் பட்டார்கள். என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்பது ரொபெஸ்பியரின் குறிக்கோள்.

"ஒரு மக்கள் அரசு, தார்மீக ஒழுக்கத்தாலும், பயங்கரவாதத்தாலும் நிலைநிறுத்தப் படும். குறுகிய காலத்திற்குள் எழுந்து நிற்பதற்கு பயங்கரவாதம் நியாயப்படுத்தப் படலாம்..." என்பது ரொபெஸ்பியரின் வாதம். "நாங்கள் துரோகிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டுவோம். வாள் மட்டுமே மக்களையும், அவர்களின் எதிரிகளையும் பிரித்து வைக்கும்...." இது 1793, செப்டம்பர் 5 அன்று ரொபெஸ்பியர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி.

ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஜான் பால் மாராட் வெளியிட்ட "மக்களின் நண்பன்" (L' Ami du Peuple) பத்திரிகை, பின்வருமாறு தலையங்கம் தீட்டியது: "துரோகிகளின் இரத்தத்தை ஆறாக ஓட வைப்போம். எமது நாட்டை மீட்பதற்கு அதுவே ஒரேயொரு வழி!"

(தொடரும்)