Showing posts with label சுவிட்சர்லாந்து பயணக்கதை. Show all posts
Showing posts with label சுவிட்சர்லாந்து பயணக்கதை. Show all posts

Friday, July 23, 2010

சுவிஸ் தமிழ் "மேட்டுக்குடி தொழிலாளர்கள்"


[ சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை - இரண்டாம் பகுதி]

பிற ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் அகதித் தஞ்சம் கோரினால், அவர் அகதியாக அங்கீகரிக்கப்படும் வரையில் வேலைக்கு போக முடியாது. ஆனால் சுவிட்சர்லாந்தில் ரெஸ்டாரன்ட் சமையலறை, துப்பரவு பணி, வெதுப்பகம், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் அடிமட்ட தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்ய அகதிகளை பயன்படுத்தினார்கள். இதனால் சுவிஸ் அரசுக்கும் லாபம் இருந்தது. ஒரு அகதியை முகாமில் வைத்து பராமரிக்க தேவையான செலவை மிச்சம் பிடித்தது. மேலும் வேலை செய்யும் அகதி அரசுக்கு வரி கட்டுவதால், மேலதிக வருமானம் வேறு. காலப்போக்கில் அகதி உழைப்பாளர்களுக்கு பிரத்தியேகமான வரி அறவிட்டு அரசு மேலும் வருமானத்தை தேடிக் கொண்டது. ஒரே வேலைக்கு வழக்கமாக சுவிஸ் பிரஜைக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, அகதி உழைப்பாளிக்கு வழங்கும் சம்பளம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசால் சட்டரீதியாக அங்கீகரிக்கப் பட்டது.

நான் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த காலங்களில், ரெஸ்டாரன்ட் வேலைகளுக்கு தமிழர்கள் வேண்டும் என்று பகிரங்கமாக விளம்பரம் செய்வார்கள். சுவிஸ் முதலாளிகள் தமிழ் தொழிலாளிகள் மீது அளவுகடந்த அன்பு காட்டுவதாக, இதைச் சிலர் கருதலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலான தமிழ் உழைப்பாளிகளுக்கு மொழித் தேர்ச்சி கிடையாது. அதனால் சொல்லும் வேலையை தட்டாமல் செய்வார்கள். அவர்களுக்கு சுவிஸ் தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்தும் எந்த அறிவும் இல்லை. தொழிற்சங்கம் என்ற ஒன்றைப் பற்றி கேள்விபட்டிராதவர்கள். இப்படியான அருமையான தொழிலாளர்களை வேறெங்கு தேடினாலும் கிடைக்காது. பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள், வந்தவுடனே உள்ளூர் மொழியை பேசக் கற்றுக் கொள்கிறார்கள். தொழிலாளர் நலச் சட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் முதலாளி ஏய்க்க நினைத்தால், எதிர்த்துப் பேசி விட்டு கிளம்பி விடுகின்றனர்.

ரெஸ்டாரன்ட் இல்லாத சுவிஸ் கிராமத்தை காண்பது அரிது. பனிச் சிகரங்களால் சூளப்பட்ட மலைக் கிராமங்களில் வாழ்ந்த சுவிஸ் மக்கள், குளிர்காலத்தில் பட்டினியால் வாடிய காலம் மலையேறி விட்டது. உலகம் முழுவதிலும் இருந்து கறுப்புப் பணத்தை சேர்த்த சுவிஸ் வங்கிகள், தமது பிரஜைகளை நுகர்பொருள் கலாச்சாரத்திற்குள் தள்ளி விட்டு பணத்தை சுழல விட்டது. அப்போது தோன்றிய உணவுவிடுதிக் கலாச்சாரம் சுவிஸ் பட்டி,தொட்டியெங்கும் பரவியது. அவற்றிற்கான வேலையாட்களை போர்த்துக்கல், ஸ்பெயின், (முன்னாள்) யூகோஸ்லேவியா போன்ற நாடுகளில் இருந்து தருவித்தார்கள். அவர்களுக்கான தொழில் அனுமதிப் பத்திரம் வருடத்திற்கு ஒன்பது மாதம் மட்டுமே வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் வசித்திருந்தால், நிரந்தர வதிவிட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் ஒன்பது மாத விசா முறை மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிரந்தரமாக தங்குவதை தடை செய்திருந்தது.

சுவிட்சர்லாந்தில் அகதிகளைப் பதிவு செய்யும் முறை, அவர்களது சமஷ்டி அரசியலுக்குட்பட்டது. ஜெர்மன் எல்லையோர நகரமான பாசல், பிரெஞ்சு எல்லையில் உள்ள ஜெனீவா போன்ற இடங்களிலேயே, அகதிகளைப் பதியும் மையங்கள் உள்ளன. அங்கிருந்து கன்டொன் (மாநிலம்) தலைநகரங்களுக்கு மாற்றி விடுவார்கள். சமஷ்டி அதிகாரம் கொண்ட மாநிலங்கள், அகதிகளை தமது தொழிற்துறை விருத்திக்கு தேவையான உழைப்புச் சக்தியாக கருதுகின்றன. அதற்கேற்றாற்போல் அகதிகளை தொலை தூர மலைக் கிராமங்களுக்கு மாற்றி விடுகின்றன. அங்கிருக்கும் உள்ளூராட்சி சபை எப்பாடு பட்டாவது அங்கிருக்கும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலைக்கு அமர்த்தி விடுகிறது. பல அகதிகளுக்கு இந்த நடைமுறை பிடித்திருந்தது. உழைக்கிறோம், பணம் சம்பாதிக்கிறோம் என்ற திருப்தியில் தமது தஞ்ச விண்ணப்பத்தையும் மறந்தார்கள்.

சுவிட்சர்லாந்தில் நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக தங்கி தொழில் புரிந்தவர்களுக்கு, நிரந்தர தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கப் பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட பல தமிழ் அகதிகள், இலங்கைக்கு சென்று உறவினரை சந்தித்து விட்டு வந்தார்கள். தற்போது புதியதோர் பிரச்சினை கிளம்பியது. இலங்கை சென்று வந்த பலர், சுவிஸ் குடிவரவு அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளானார்கள். "அகதித் தஞ்சம் கோரும் பொழுது, இலங்கை திரும்பினால் உயிருக்கு ஆபத்து என்று கூறியவர்கள், தற்போது எப்படி தாமாகவே சென்று வந்தார்கள்?" போன்ற கேள்விகளால் குடைந்தெடுத்தார்கள். சிலர் தமது உற்றார், உறவினரைக் காண்பதற்கு ஆபத்தை துச்சமென மதித்து சென்றதாக கூறினார். வேறு சிலரோ தாம் பணம் சம்பாதிக்கவே சுவிட்சர்லாந்து வந்ததாக உண்மையை போட்டுடைத்தனர்.

தொண்ணூறுகளின் மத்தியில், அளவுக்கதிகமான அகதிகளின் வரவும், அதற்கு எதிர்வினையாக தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சியும், கூடவே பொருளாதார பிரச்சினையும், பல அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்க காரணமாகின. அதுவரை தஞ்சம் கோருவதில் அதிக அக்கறை காட்டாத அகதிகள், வக்கீல் செலவு, மேன்முறையீடு என்று அலைய வேண்டியேற்பட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப் பட்ட தமிழ் அகதி ஒருவர் சித்திரவதைக்கு உள்ளானார். சிறிது காலத்தின் பின்னர் அவர் ஜெர்மனி வந்து தஞ்சம் கோரி, அகதியாக அங்கீகரிக்கப் பட்டார். சுவிட்சர்லாந்தில் இருந்த காலத்தில், அவரது வழக்கில் சுவிஸ் அரசு மோசடி செய்த விபரம் ஊடகங்களுக்கு கசிந்தது. இந்த அவமானத்தால் நாணமுற்ற சுவிஸ் அரசு அனேகமாக எல்லா ஈழத் தமிழ் அகதிகளையும் அங்கீகரித்தது. சில காலம் போன பின்னர், பழைய குருடி கதவைத் திறடி கதை தான். புதிய அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவதும், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதும் தொடர்கின்றது.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளில் பலர் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்று விட்டனர். அதுவரையும் சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்தவர்கள், இப்போது சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்யக் கிளம்பினார்கள். தனியாக வந்தவர்கள் துணையோடு இல்லற வாழ்வில் இறங்கிய பின்னர், அவர்களது தேவைகளும் அதிகரித்தது. சொந்தமாக கார் வேண்டும், வீடு வாங்க வேண்டும், என்று குடித்தனம் நடத்த வந்த இல்லத்தரசிகளும் நச்சரித்தார்கள். இணங்கா விட்டால், "கையாலாகாத" கணவனிடம் இருந்து விவாகரத்து கோரினார்கள். இன்றைய சுவிஸ் தமிழ் சமூகம் சொந்த வீடு, வாகனம் என்று ஒரு பக்கம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் குடும்ப சச்சரவுகள், விவாகரத்துகள், இதய நோய் போன்றனவும் அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சனைகளை மறைப்பதற்கு "புகலிட தமிழ்க் கலாச்சாரம்" என்ற மேல்பூச்சு பூசப்படுகின்றது.

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாட்டுடன் ஒட்டாமல் தாமரையிலைத் தண்ணீர் போல வாழ்ந்து வருகின்றனர். புலம்பெயர் மண்ணில் காலூன்றுதல் என்பதன் அர்த்தம், ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றுதல் என தவறாக வியாக்கியானம் செய்யப்படுகின்றது. பெற்றோரைப் போலவே தவாறான புரிதலைக் கொண்ட இரண்டாம் தலைமுறையினரில் சிலர், ஐரோப்பிய பாணி நாகரீகத்தை எதிர்ப்புக் கலாச்சாராமாக்கிக் கொள்கின்றனர். இன்றைய ஐரோப்பிய சமூகம் பல வழிகளிலும் விழிப்புணர்வு பெற்று வருகின்றது, சுவிஸ் மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இங்குள்ள ஊடகங்கள் சினிமா தொழிற்துறை பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லி மக்களை மாயைக்குள் வைத்திருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்கின்றன. இதனால் இனிக்க இனிக்க பேசும் வியாபாரிகளிடம் மக்கள் ஏமாறுவது குறைவு. ஆனால் தமிழர்களின் வீடுகளைத் தேடிவரும் ஐரோப்பியத் தமிழ் ஊடகங்களின் பார்வைப்புலன் கோடம்பாக்கத்திற்கு அப்பால் விரிவடைவதில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆடம்பர வாழ்வுக்கான அவாவை, காப்புறுதி நிறுவனங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றன. சொத்துகளை சேர்த்து விட்டால் மட்டும் போதுமா? அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டாமா? அதற்காக காப்புறுதி நிறுவனங்கள் வீட்டுப் படியேறி வருகின்றன. "சுவிஸ் போன எனது பிள்ளைகள் ஒரு வருடத்தில் வீடு வாங்கி விட்டார்கள்." என்று கூறி ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய்மார் வாழும் நாட்டில் இருந்து வந்தவர்களல்லவா? சுவிஸ் வந்து தொழில் செய்து கையில் கொஞ்சம் காசும் சேர்ந்து விட்டால், வீட்டுக்கடன் எடுத்தாவது சொந்த வீடு வாங்குகிறார்கள். என்னைப் போல இருபது வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்து வந்தவர்களில் என்பது வீதமானோர் காணி வாங்கி வீடு கட்டியுள்ளனர். ஒரு புறம், இவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் இடைத் தரகர்கள் லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிக் கொள்கின்றனர். மறு புறம், கடன் வழங்கும் வங்கிகள் வாழ்க்கை பூராவும் வட்டி கட்ட வைக்கின்றன.

"தமிழர்கள் கடின உழைப்பாளிகள்." என்று புகழுரை வழங்கிய படியே, சுவிஸ் ரெஸ்டாரன்ட் முதலாளிகள் தமிழரின் உழைப்பை சுரண்டி, இன்னொரு ரெஸ்டாரன்ட் போட்டார்கள். தற்போது சுவிஸ் வங்கிகளும் தமிழரின் உழைப்பில் பங்கு கேட்கின்றன. வாங்கிய வீட்டுக்கு கடன், வேறு தேவைகளுக்கென வாங்கிய மேலதிக கடன், என்று ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. வங்கிகளும் கேட்கும் தொகையை அள்ளி வழங்குகின்றன. அவர்களுக்கென்ன? கடனைக் கொடுத்து விட்டு, அதேயளவு, அல்லது அதற்கும் மேலான பணத்தை வட்டி என்ற பெயரில் அறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். "கடன் கொடுப்பதன் மூலம் வங்கிகள் காசு உற்பத்தி செய்கின்றன." என்ற பொருளாதார பாடம் இங்கே நிரூபணமாகின்றது.

சுவிட்சர்லாந்து வெளிப் பார்வைக்கு அழகாகத் தான் தோன்றுகிறது. உலகெங்கிலும் இருந்து வருகை தரும் உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுக்கிறது. ஆனால் அது உள்ளே அழுகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சுவிட்சர்லாந்தை அதிர வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. சுவிஸ் பொருளாதாரத்தின் முதுகெலும்பான வங்கிகளே, தேசத்தின் அழிவையும் தேடித் தரவிருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் குறைந்த வரி வீதத்தை பயன்படுத்தி, ஐரோப்பிய பணக்காரர்கள் தமது கறுப்புப் பணத்தை வைப்பிலிட்டு வந்தார்கள். தற்போது பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் காரணமாக கறுப்புப் பணம் வைப்பிலிட்டோரின் விபரங்களை வெளியிட வேண்டியுள்ளது. G 20 நாடுகளின் மகாநாட்டு தீர்மானங்கள் சுவிட்சர்லாந்தின் தலை மீது இடியாக இறங்கியுள்ளது.

இது ஒரு புறமிருக்க, அமெரிக்காவில் நடந்ததைப் போல, தகுதியில்லாதவர்க்கெல்லாம் வங்கிக்கடன், வீட்டுக்கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கடன் எடுத்தவர்கள் எல்லோரும் ஒழுங்காக தவணை முறையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைப் போலவே இந்தக் கடன்களை எடுத்தவர்களில் பெரும்பான்மையானோர், அடிமட்ட தொழில்களை செய்யும் உழைக்கும் வர்க்கத்தினர். இவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பொருளாதார பிரச்சினை வரும் பொழுது, வராக் கடன்கள் அதிகரிக்கும். அந்த நெருக்கடி மாயப் பொருளாதார கண்ணாடி மாளிகையை நொறுங்கச் செய்யும். அப்படியான ஒரு கலியுகம் தோன்றினால், சுவிட்சர்லாந்தில் வாழும் புகலிடத் தமிழரின் நிலை திரிசங்கு சொர்க்கமாகி விடும். சுவிஸ் அரசியல்வாதிகள் சிலர் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு வைத்திருக்கிறார்கள். தீவிர வலதுசாரிகள் பொதுத் தேர்தலுக்கு வைக்கப்பட்ட விளம்பரத் தட்டியில், வெள்ளாடுகள் சேர்ந்து ஒரு கருப்பு ஆட்டை உதைத்து விரட்டுவது போல வரைந்திருந்தார்கள். இன்று சுவிஸ் வெள்ளாடுகளின் செல்வந்த வாழ்வுக்கு கருப்பு ஆடுகளின் உழைப்பு தேவைப்படுகின்றது. அதனால் இப்போதைக்கு யாரும் உதைத்து விரட்ட மாட்டார்கள்.

(முற்றும்)


பகுதி : ஒன்று
சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை

Thursday, July 22, 2010

சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை

(பகுதி : ஒன்று)

ஐரோப்பிய நாடுகளுக்கு ஈழத் தமிழ் அகதிகள் வரத் தொடங்கி மூன்று தசாப்தங்களாகி விட்டன. எனது புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், இருபது வருடங்களைக் கடந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் கால் பதித்த இடங்களை அண்மையில் சென்று பார்த்தேன். ஒரு சில அகதி முகாம்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் தமிழ் அகதிகள் இலங்கையில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் தப்பி வந்த அகதிகளையும் சந்தித்தேன். அவர்கள் தம்மை அணுகும் அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். யாருடனும் மனம் விட்டு பேச அஞ்சுகிறார்கள். தாயகத்தின் கசப்பான அனுபவங்களை நேசில் சுமந்த வண்ணம் பிழைப்பதற்கு வழி தேடி அலைகின்றனர். அகதிகளுக்கான வேலை வாய்ப்பு இப்போதெல்லாம் முன்னரைப் போலல்ல. அங்கீகரிக்கப்படாத வரை சட்டப்படி வேலை செய்ய முடியாது. அதனால் தமிழ் முதலாளிகளின் கடைகளில் ஆயிரம் பிராங்குகளுக்கு வேலை செய்கிறார்கள். இது அந்நாட்டின் அடிப்படை சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதி.

இருபது வருடங்களுக்கு முன்னர் வந்த பல தமிழ் அகதிகள், இன்று பிரஜாவுரிமையும் பெற்று விட்டார்கள். தனி மரமாக புலம்பெயர்ந்தவர்கள், இன்று குடும்பத் தலைவனாக பொறுப்புகளை தலையில் சுமந்த படி திரிகின்றனர். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். அல்லது அப்படிக் காட்டிக் கொள்கின்றனர். காணி வாங்கி வீடு கட்டுகின்றனர். குடும்பத்திற்கு இரண்டு கார் வைத்திருக்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயரும் போதே செல்வந்த ஐரோப்பிய கனவுலகத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என கருதிக் கொண்டார்கள். "ஐரோப்பாவில் எல்லோரும் சொந்த வீட்டில் வாழ்கிறார்கள், எல்லோரும் கார் வைத்திருக்கிறார்கள்." எல்லோரும் என்பது எந்தவொரு புள்ளிவிபரத்தினதும் அடிப்படையிலும் சொல்லப்படுவதல்ல.

தெற்காசிய நாடுகளில் பல தாழ்த்தப்பட்ட சாதியினரும் முதலாளித்துவ வளர்ச்சியினூடே வசதிகளைப் பெருக்கிக் கொண்டுள்ளனர். அதைக் காட்டியே மேலெழுந்தவாரியாக சாதியம் மறைந்து விட்டதாக கருதிக் கொள்வதைப் போன்றே, மேலை நாடுகளிலும் நிலைமை மாறியுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் மிக மோசமான இனவாதம் மறைபொருளாக உள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. பொதுப் போக்குவரத்துகளில் கருப்பனுக்குப் பக்கத்தில் உட்கார மறுக்கும் வெள்ளையர்களைக் கொண்ட நாடு இது. இளம் சமுதாயத்தினர் மத்தியில் நிறவெறி வெளிப்படையாக காணப்படாத போதிலும், பல பொது இடங்களில் நான் கண்கூடாக கண்ட அனுபவம் அது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தமக்கென சொந்த வாகனத்தில் பயணம் செய்வது இனத் தூய்மையை பாதுகாக்க உதவுகின்றது.

ஈழத் தமிழர்கள் செய்யும் தொழில்களைப் பொறுத்த வரை, இருபது வருடங்களுக்குள் பெரிய மாற்றமெதையும் நான் காணவில்லை. முதலாம் தலைமுறை தமிழ் குடியேறிகள், தற்போதும் ரெஸ்டாரன்ட் சமையலறை உதவியாளர்களாக, அல்லது வெதுப்பக (பேக்கரி) தொழிலாளிகளாக பணி புரிகின்றனர். சுவிஸ் முதலாளிகள் கறுப்புத் தமிழரை ரெஸ்டாரன்ட் உள்ளேயும், வெள்ளையின ஐரோப்பியரை வரவேற்பாளர்களாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். பல்லினத்தவரும் வருகை தரும் பெரும் நகரங்கள் விதிவிலக்காக இருக்கலாம். நான் சுவிசில் இருந்த காலங்களில் நன்றாக மொழிபேசும் சிலர், வெயிட்டர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினார்கள். அப்போது ரெஸ்டாரன்ட் முதலாளிகள் கூறியதாவது: "நான் தகுதியைப் பார்த்து உங்களை வேலைக்கு எடுக்கலாம். ஆனால் ஒரு கருப்பன் உணவு பரிமாறினால், சுவிஸ்காரர்கள் வரமாட்டார்கள்!"

இருபது வருடங்களுக்கு பின்னர் நான் பார்த்த சுவிட்சர்லாந்து நிறவாதமற்ற நாகரீகமடைந்த நாடாக மாறிவிடவில்லை. சுவிஸ் கல்வி கற்ற இரண்டாம் தலைமுறை தமிழ் இளையோர் சிலர் அரசியலில் ஈடுபட்டு மாநில அவைக்கு கூட தெரிவாகியுள்ளனர். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவான ஒரு ஆப்பிரிக்கரின் கதையைக் கேட்டால், இனவாதம் எங்கே எல்லை வகுத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆப்பிரிக்க, ஆசிய குடியேறிகளின் சமூகசேவையாளராக தன்னை வளர்த்துக் கொண்ட பின்னரே, அவர் பாராளுமன்ற உறுப்பினரானார். அவர் இன்று "கள்ள வாக்கு" போட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். சுவிட்சர்லாந்தில் வாக்குச்சீட்டு வீடு தேடி வரும். வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும். அந்த சலுகையை பயன்படுத்தி அரசியல் பிரக்ஞை அற்ற வெளிநாட்டவரின் வாக்குகளை தனக்கே போடுமாறு செய்தார், என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. கனவான்களின் நாட்டில் வெள்ளையரின் ஊழல்களை கண்டுகொள்ளாத ஊடகங்கள், பூனையை யானையாக்கிக் காட்டிக் கொண்டிருந்தன.

சுவிட்சர்லாந்தில் பணம் சேர்த்த தமிழர்கள் சிலர், தாமே உணவுவிடுதிகளை சொந்தமாக நிர்வகிக்கின்றனர். தரநிர்ணயத்திற்கு பேர் போன சுவிட்சர்லாந்தில், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சோதனைகளில் அகப்பட்ட உணவுவிடுதிகள் பல மூடப்பட்டுள்ளன. முதல் நாள் பொரித்த சமையல் எண்ணையை கொட்டாமல் வைத்திருந்தால் கூட இமாலயத் தவறாகலாம். அதே நேரம் நான் முன்பு வேலை செய்த உணவுவிடுதி ஒன்றில், ஒரு வாரத்திற்கு முன்பே இறுதிப் பாவனைத் தேதி முடிவடைந்த இறைச்சியை குளிரூட்டியில் பதப்படுத்தி வைத்திருப்பார்கள். உணவுண்ண வருபவர்களுக்கு சமையலறையில் நாட்பட்ட பதார்த்தங்கள் சமைக்கப்படுவது தெரியாது. வெள்ளையின சுவிஸ்காரரான அந்த ரெஸ்டாரன்ட் முதலாளிக்கு தெரிந்தவர்கள் உள்ளூராட்சி சபையில் இருப்பதால், எந்தவொரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியும் எட்டியும் பார்ப்பதில்லை.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு, சுவிட்சர்லாந்துக்கு நேரே வந்த ஈழத் தமிழர்கள் மிகக் குறைவு. அனேகமாக பிரான்ஸ், ஜெர்மனி போன்ற அயல்நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியவர்களே பின்னர் சுவிட்சர்லாந்து நோக்கி படையெடுத்தார்கள். சுவிசில் கொடுக்கப்படும் ஊதியம் அதிகம் என்ற செய்தியே, அவர்களை கவர்ந்திழுத்த காந்தமாகும். அன்று முதல் இன்று வரை சுவிட்சர்லாந்தில் ஐரோப்பாவிலேயே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் அதே நேரம் ஐரோப்பாவிலேயே வாழ்க்கைச் செலவு கூடிய நாடும் அது தான். குப்பை கொட்டுவதென்றாலும் அதற்கென அதிக விலையில் விற்கப்படும் பைகளை வாங்கித் தான் வீச வேண்டும். வலது கையால் கொடுப்பதை, இடது கையால் வாங்கும் கண்கட்டி வித்தை தெரிந்தவர்கள் சுவிஸ் ஆட்சியாளர்கள்.

(தொடரும்)