Showing posts with label சிலி. Show all posts
Showing posts with label சிலி. Show all posts

Wednesday, October 23, 2019

சிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0


தென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாத‌வாறு க‌ல‌வ‌ர‌ பூமியாக காட்சிய‌ளிக்கிற‌து. ஒரு மெட்ரோ ர‌யில், 16 பேருந்து வ‌ண்டிக‌ள் கொழுந்து விட்டு எரிந்த‌ன‌. ப‌த்துக்கும் குறையாத‌ சூப்ப‌ர் மார்க்கெட்க‌ள், ம‌ருந்துக் க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. க‌ல‌வ‌ர‌த்திற்குள் அக‌ப்ப‌ட்டு ப‌தினொரு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

சிலி ஜ‌னாதிப‌தி செப‌ஸ்டியான் பிஞேரா "நாம் ஒரு யுத்த‌த்தில் ஈடுப‌ட்டிருக்கிறோம்" என‌ அறிவித்துள்ளார். "ஒரு ப‌ல‌மான‌, இண‌க்க‌மாக‌ போக‌ முடியாத‌, எவ‌ரையும் மதிக்காத‌, வ‌ன்முறை பிர‌யோகிக்க‌த் த‌ய‌ங்காத‌ எதிரியுட‌ன்" இந்த‌ யுத்த‌ம் நட‌ப்ப‌தாக‌ தெரிவித்துள்ளார்.

சிலியில் ந‌ட‌ந்த இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்திற்குப் (1973 - 1990) பின்ன‌ர், முத‌ல் த‌ட‌வையாக‌ இராணுவ‌ம் வீதிக‌ளில் ரோந்து சுற்றுகிற‌து. த‌லைந‌க‌ர் சான்டியாகோ உட்ப‌ட‌ எட்டு ந‌க‌ர‌ங்க‌ளில் ஊர‌ட‌ங்கு ச‌ட்ட‌ம் பிற‌ப்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. இது வ‌ரை 1500 பேர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.

யார் இந்த‌ பிஞேரா? எழுப‌துக‌ளில், ச‌ர்வாதிகாரி பினோச்சேயின் ஆட்சிக் கால‌த்தில் சிலியில் கிரெடிட் கார்ட் முறையை அறிமுக‌ப் ப‌டுத்திய‌த‌ன் மூல‌ம் கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதித்த‌வ‌ர். அதாவ‌து, பினோச்சே கால‌த்தில் வ‌ந்த‌ ந‌வ‌- தாராள‌வாத‌ பொருளாதார‌க் கொள்கையால் ப‌ல‌ன‌டைந்த‌ கோடீஸ்வ‌ர‌ன். அப்ப‌டியான‌ ஒருவ‌ர் சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதே யுத்தப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தில் என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இருக்கிற‌து? ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும், பாசிச‌ சர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும் ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌த்தின் ந‌ல‌னுக்காக‌வே அர‌சு இய‌ங்குகிற‌து.

இந்த‌ ம‌க்க‌ள் எழுச்சிக்கு நேர‌டிக் கார‌ண‌ம், அரசு கொண்டு வ‌ந்த‌ மெட்ரோ ர‌யில் டிக்க‌ட் விலை அதிக‌ரிப்பு. பிற‌ தென் அமெரிக்க‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடும் பொழுது சிலியில் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம். ஆனால் மாத‌ வ‌ருமான‌த்தில் ஐந்தில் ஒரு ப‌ங்கு போக்குவ‌ர‌த்து செல‌வுக‌ளுக்கு சென்று விடுகிற‌து.

குறிப்பாக‌ பொதுப் போக்குவ‌ர‌த்தை ந‌ம்பியிருக்கும் மாண‌வ‌ர்க‌ள் வெகுண்டெழுந்து இல‌வ‌ச‌மாக‌ ப‌ய‌ண‌ம் செய்ய‌த் தொட‌ங்கினார்க‌ள். மெட்ரோ நிலைய‌ டிக்க‌ட் மெஷின், த‌டைக் க‌ம்ப‌ங்க‌ளை அடித்து நொறுக்கினார்க‌ள்.

மெட்ரோ டிக்க‌ட் விலை உய‌ர்வை மீள‌ப் பெறுவ‌தாக‌ ஜ‌னாதிப‌தி பிஞேரா அறிவித்தும் க‌ல‌வ‌ர‌ம் அட‌ங்க‌வில்லை. அத‌ற்குக் கார‌ண‌ம் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கும் ஏழைக‌ளுக்கும் இடையிலான‌ ஏற்ற‌த்தாழ்வு ம‌ட்டும‌ல்ல‌. மிகப் ப‌ல‌மான‌ இட‌துசாரி க‌ட்சிக‌ளால், ந‌ன்றாக‌ அர‌சிய‌ல்ம‌ய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ இள‌ம் த‌லைமுறையின‌ர் எந்த‌ வித‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாராக‌ இல்லை.

நிச்ச‌ய‌மாக‌, சிலி அர‌சுக்கு இது ஒரு இக்க‌ட்டான‌ கால‌ க‌ட்ட‌ம். அடுத்த‌ மாத‌ம் Apec நாடுக‌ளின் உச்சி ம‌காநாடு ந‌ட‌க்க‌வுள்ள‌து. அமெரிக்க‌ அதிப‌ர் டிர‌ம்ப், சீன‌ அதிப‌ர் ஸிஜின்பிங் உட்ப‌ட‌ ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் சிலிக்கு வ‌ர‌ இருக்கிறார்க‌ள். அத‌ற்குள் நிலைமையை க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ருவ‌து முடியாத காரியம். ஏனெனில் இது ஒரு தெளிவான இலட்சியத்துடன் தானாக சேர்ந்த கூட்டம். 

எத‌ற்காக‌ இழ‌ப்ப‌த‌ற்கு எதுவும‌ற்ற‌ ஏழைக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ஓர‌ள‌வு வச‌தியான‌ ம‌த்திய‌த‌ர‌வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ளும் வ‌ன்முறைப் போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌டுகிறார்க‌ள்?

1973 ல் நட‌ந்த‌ இராணுவ‌ ச‌திப்புர‌ட்சிக்குப் பின்ன‌ர் சிலி ந‌வ‌- தாராள‌வாத பொருளாதார‌க் கொள்கையின் ப‌ரிசோத‌னைச் சாலையாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌து. பொருளாதார‌ம் நூறு ச‌த‌வீத‌ம் த‌னியார்ம‌ய‌ப் படுத்த‌ப் ப‌ட்ட‌து. பொருட்க‌ளின் விலைக‌ள் மிக‌ அதிக‌ம். ஆனால் செல‌விடுவ‌த‌ற்காக‌ ம‌க்க‌ளின் கையிருப்பில் ப‌ண‌ம் இல்லை. சுருக்கமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைவு. க‌ல்வி, ம‌ருத்துவ‌ செல‌வுக‌ள் ஏழைக‌ளால் நினைத்துப் பார்க்க‌ முடியாத‌ அள‌வு அதிக‌ம். வ‌ச‌தி இல்லாத‌வ‌ர்க‌ள் க‌ட‌ன் வாங்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.

ந‌வ‌- தாராள‌வாத‌ ப‌ரிசோத‌னைச் சாலையில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் இன்று முத‌லாளித்துவ‌த்திற்கு எதிராக‌ திரும்பி உள்ள‌ன‌ர். இந்த‌ இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌வ‌- தாராள‌வாத‌ம் என்ற‌ சொல் ஒரு கெட்ட‌ வார்த்தை போன்று க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து.

முன்பு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலையில், க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உறுப்பினர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருவ‌ர் விடாம‌ல் தேடி அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். பாசிச‌ ஆட்சியாள‌ர்க‌ள் கம்யூனிச‌த்தை வேரோடு பிடுங்கி அழித்து விட்ட‌தாக‌ இறுமாப்புட‌ன் இருந்த‌ன‌ர்.

ப‌னிப்போர் முடிவில், "க‌ம்யூனிச‌ம் இற‌ந்து விட்ட‌து" என்ற‌ ந‌ம்பிக்கை ஏற்ப‌ட்ட‌ பின்ன‌ர், 1990 ம் ஆண்டு ஜ‌ன‌நாய‌க‌ம் மீட்க‌ப் ப‌ட்ட‌து. அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் இய‌ங்க‌ அனும‌திக்க‌ப் ப‌ட்ட‌து. பொதுத் தேர்த‌ல் ந‌ட‌ந்த‌ன‌. அதே நேர‌ம், சாம்ப‌லில் இருந்து உயிர்த்தெழுந்த‌ பீனிக்ஸ் ப‌ற‌வை போல‌ புதிய‌ த‌லைமுறை க‌ம்யூனிஸ்டுக‌ள் தோன்றினார்க‌ள்.

புதிய‌ சிலி க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உருவாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் பாராளும‌ன்ற‌த்தில் ஒரு ப‌ல‌மான‌ எதிர்க்க‌ட்சியாகிய‌து. அத்துட‌ன், அனார்க்கிஸ்டுக‌ள், ட்ராக்கிஸ்டுக‌ள், இன்னும் ப‌ல‌ சோஷ‌லிச‌ அமைப்புக‌ளும் உருவாகின‌. குறிப்பாக‌ அனார்க்கிஸ்டுக‌ள் முத‌லாளித்துவ‌த்தை ம‌ட்டும‌ல்லாது, அர‌சு என்ற‌ க‌ட்ட‌மைப்பையே எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்.
க‌ம்யூனிச‌, இட‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல செல்வாக்கு இருந்த‌து. ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌க் க‌ல்வி உரிமைக்காக‌ போராடிய‌ மாண‌வ‌ர்க‌ள், கூட‌வே நியோ லிப‌ர‌ல் சிஸ்ட‌த்தையும் எதிர்க்க‌க் க‌ற்றுக் கொண்டனர். த‌ற்போது முத‌லாளித்துவ‌த்தை வீழ்த்தி விட்டுத் தான் ம‌று வேலை பார்ப்ப‌து என்று கிள‌ம்பி விட்டார்க‌ள்.

க‌ம்யூனிஸ்டுக‌ள் வேறு யாரும் அல்ல‌. அவ‌ர்க‌ளும் முத‌லாளித்துவ‌ம் வ‌ள‌ர்த்து விட்ட‌ பிள்ளைக‌ள் தான். சிலியில் முத‌லாளித்துவ‌ம் த‌ன‌து ச‌வ‌க்குழியையை தானே தோண்டி விட்டுள்ள‌து. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!

Thursday, April 16, 2015

சிலி இனப்படுகொலை : வர்க்கத் துவேஷிகளும் ஆபத்தான தீய சக்திகள் தான்


வர்க்கத் துவேஷம் என்பது, இனத் துவேஷத்திற்கு சற்றிலும் குறைவில்லாத தீய குணம் தான். அதனால், வர்க்க விரோதிகளும், இனவெறியர்கள் போன்றே ஆபத்தானவர்களாக கருதப் பட வேண்டும். 

1973 ஆம் ஆண்டு, சிலியில் பினோச்சேயின் சர்வாதிகார ஆட்சி வரும் வரையில், அங்கே எந்தவொரு இடதுசாரி தீவிரவாத அமைப்பும் ஆயுதப் போராட்டம் நடத்தவில்லை. சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஜனநாயக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய அய்யேண்டே ஆட்சிக் காலத்தில், வலதுசாரிகள், முதலாளிய ஆதரவாளர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. 

ஆயினும், இராணுவ ஜெனரல் பினோச்சே தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றிய, CIA மற்றும் வலதுசாரி சதிப்புரட்சியாளர்கள், இடதுசாரி, கம்யூனிச சக்திகள் மீது கொலைவெறி கொண்டு பாய்ந்தார்கள். ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்தார்கள். சமுதாயத்தில் நிலவும் வர்க்கத் துவேஷம் கூட, இனப்படுகொலைக்கு வழிவகுக்கலாம் என்பதை சிலியில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன. 

ஜனநாயகப் பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிச ஜனாதிபதி அய்யேண்டே ஆட்சி நடத்திய காலத்திலேயே, CIA அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டி விட்டது. வெனிசுவேலாவில் நடந்ததைப் போன்று, சிலியிலும் மத்தியதர வர்க்க மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். முகாம்களில் இருந்த படையினரை உசுப்பி விடுவதற்காக, மத்தியதரவர்க்க பெண்கள் முகாம்களுக்குள் தானியங்களை வீசினார்கள். படையினர் கோழைகள், கோழிகள் போன்றவர்கள் என்று சீண்டுவதே அதன் நோக்கம். அரசுக்கு எதிராக இராணுவத்தை திருப்பி விட இது போதாதா?

இராணுவ சர்வாதிகார அரசு, அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தது. பிரஜைகளுக்கான சட்டப் பாதுகாப்பை இரத்து செய்தது. சோஷலிசம் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்கள் கூட கைது செய்யப் பட்டு துன்புறுத்தப் பட்டனர். அவர்களை அடைத்து வைப்பதற்கு நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான தடுப்பு முகாம்கள் உருவாகின.

தலைநகரில் உள்ள மிகப் பெரிய விளையாட்டு மைதானமான Estadio Nacional இல், சதிப்புரட்சிக்கு அடுத்த நாள் மட்டும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களான 600 பேர் கொண்டு வரப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் உயிரோடு திரும்பிச் செல்லவில்லை. இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த 17 வருட காலங்களில், குறைந்தது 40000 பேர் அங்கு கொண்டு வரப் பட்டுள்ளனர்.

அய்யேண்டே பதவிக்கு வருவதற்கு தேர்தலில் ஒட்டுப் போட்ட, பெருமளவு வாக்காளர்கள் வாழ்ந்த இடங்களின் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப் பட்டது. பினோச்சேயின் நேரடி உத்தரவின் பேரில், நூற்றுக்கணக்கான கைதிகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். படையினர் அங்கு அவர்களை துண்டு துண்டாக வெட்டினார்கள். சிலரை உயிரோடு கொளுத்தினார்கள். பலரது கால் எலும்புகள் முறிக்கப் பட்டன. கண்கள் தோண்டியெடுக்கப் பட்டன. உயிரற்ற உடல்கள் குப்பைக் குவியல்களுடன் வீசப் பட்டன. அன்று பலியானவர்கள் செய்த ஒரேயொரு குற்றம், சோஷலிச மாற்றத்திற்காக ஒரு ஜனநாயக அரசை ஆதரித்தது தான்.

நிச்சயமாக, எல்லா இராணுவ அதிகாரிகளும் மக்களுக்கு எதிரான அராஜகச் செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால், மறுத்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் கைது செய்யப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். இரக்கமற்று கொலை செய்யப் பட்டனர். Carlos Prats என்ற இராணுவ அதிகாரி, சதிப்புரட்சியில் ஈடுபட மறுத்து ஆர்ஜெந்தீனாவுக்கு தப்பியோடினார். அங்கு வைத்து கார்க் குண்டுவெடிப்பு மூலம் கொலை செய்யப் பட்டார்.

மக்கள் மத்தியில் பயங்கரத்தை விதைப்பதற்காகவே DINA (Dirección de Inteligencia Nacional) என்றொரு புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது. அந்தப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த Villa Grimaldi எனும் சித்திரவதை முகாமில் சொல்லொணா கொடுமைகள் நடந்துள்ளன. 

1978 ம் ஆண்டு முகாம் மூடும் வரையில், குறைந்தது 4500 இளைஞர்களும், யுவதிகளும் சித்திரவதை செய்யப் பட்டனர். வன்புணர்ச்சி, மின்சார அதிர்ச்சி கொடுத்தல், நீருக்குள் அமிழ்த்தல், போன்ற கொடுமைகள் தினந்தோறும் நடந்துள்ளன. பெண்கள் விசேடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டனர். பெண்ணுறுப்புக்குள் எலியை அல்லது சிலந்தியை பிடித்து விட்டார்கள். நாய்களுடன், ஆண் குடும்ப உறுப்பினருடன் உடலுறவு கொள்ள வேண்டுமென பலவந்தப் படுத்தப் பட்டனர்.

17 வருட கால இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், பினோச்சே இடதுசாரிகள் அனைவரையும் அழிக்க விரும்பினான். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், மற்றும் ஜனநாயக இடதுசாரிகள் எல்லோரையும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட அழித்தொழிப்பதே நோக்கமாக இருந்தது. 

சிலியில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த காலங்களில், குறைந்தது 82000 பேர் கைது செய்யப் பட்டனர். 30000 பேர் சித்திரவதை செய்யப் பட்டனர். 3000 பேர் கொல்லப் பட்டனர். சிலியில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள், Report of the Chilean National Commission for Truth and Reconcilliation இல் பதிவு செய்யப் பட்டுள்ளன.  

இராணுவ சதிப்புரட்சியின் பின்னர், அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் சிலி மறுசீரமைக்கப் பட்டது. தென் அமெரிக்காவின் நவ தாராளவாத கொள்கையின் பரிசோதனைச் சாலையாக பயன்படுத்தப் பட்டது. அதாவது, பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது. முதலாளிகளுக்கு வேண்டியளவு சுதந்திரம் வழங்கப் பட்டது. இதனை நிறைவேற்றிய நிபுணர் குழுவில், நோபல் பரிசு பெற்ற மில்ட்டன் பிறீட்மன் கூட அங்கம் வகித்திருந்தார். சிலி சதிப்புரட்சியிலும், அதற்குப் பின்னரான இனப்படுகொலையிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

வலதுசாரி இராணுவ சர்வாதிகாரி பினோச்சேயினால், இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்த முடிந்ததே தவிர, முற்றாக அழிக்க முடியவில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி கொண்டு வரப் பட்டது. அப்போது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட சிலி கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிசக் கட்சி என்பன தற்போது வளர்ந்து வருகின்றன. 2006 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு சோஷலிஸ்ட், சிலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப் பட்டார். 

2014 ம் நடந்த தேர்தலில், இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியான Michelle Bachelet, பினோச்சே சர்வாதிகாரத்தினால் பாதிக்கப் பட்டவர். அவரது தந்தை அல்பேர்ட்டோ படையினரால் கொலை செய்யப் பட்டார். அப்போது நாட்டை விட்டு வெளியேறிய Michelle Bachelet, 1979 ம் ஆண்டு திரும்பி வந்து அரசியலில் ஈடுபட்டார்.

சிலி தொடர்பான முன்னைய பதிவு:
9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்

Sunday, October 03, 2010

அந்தார்டிகாவிலும் தீராத இனப்பிரச்சினை

லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஸ்பானியா போன்ற ஐரோப்பிய மொழிகளே பேசப்படுவதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். பூர்வீக செவ்விந்திய இன மக்களின் மொழிகள் அடக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றன. அல்லாவிடின் நவீன காலத்திற்கேற்ப வளர்ச்சி அடையாத காரணத்தால், அந்த மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது. தென் அமெரிக்காவில் பொலீவியா, குவாதமாலா போன்ற நாடுகளில் செவ்விந்திய பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவர்களுக்கிடையே வேறு பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதற்கு மாறாக, சிலியில் மட்டும் ஒரே மொழி பேசும் மக்கள், தமக்குரிய தாயக பூமியைக் கொண்டுள்ளனர். அந்தார்டிகாவுக்கு அண்மையில் உள்ள தென் சிலியில் மாபுச்சே மொழி பேசும் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் பத்து வீதமான, அதாவது பத்து லட்சம் மாபுச்சே இன மக்கள் தமக்குரிய தாயக மண்ணில் வாழ்கின்றனர். இவர்களை விட மூன்று லட்சம் மாபுச்செக்கள் தலைநகர் சாந்தியாகோ டெ சிலியிலும், ஆர்ஜென்தீனாவிலும் காணப்படுகின்றனர்.

சிலியில் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய அடித்தட்டு மக்களான மாபுச்செக்களின் சொந்த மண் அந்நிய முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. சர்வாதிகாரி பினோச்செயின் தீவிர வலதுசாரி ஆட்சிக் காலத்தில், மாபுச்செக்களின் பாரம்பரிய பூமி விலை பேசி விற்கப்பட்டது. பணம் படைத்த யாரும் நிலங்களை வாங்கி தமது சொந்தமாக்கிக் கொள்ள முடிந்தது. இதற்கெதிராக மாபுச்சே மக்கள் உரிமை கேட்டு போராடிய பொழுது, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஜனநாயக தேர்தலில் தெரிவானவர்கள் ஆட்சியில் உள்ளனர். இருப்பினும் பினோச்சே கால பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழே, மாபுச்சே ஆர்வலர்கள் கைது செய்யப்படுகின்றனர். விசாரணை இன்றி தடுத்து வைக்கப்படுகின்றனர்.

மாபுச்சே ஆர்வலர்களை அரசு சிறையில் அடைத்த போதிலும், அவர்களது உரிமைக்கான போராட்டம் அடங்கவில்லை. சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களது உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக பெல்ஜியத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பெல்ஜியத்தில் உள்ள இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள், சிலி தூதுவராலயத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்வதேச தோழமை மாபுச்சே மக்களின் நியாயமான கோரிக்கைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளது.

உண்ணாவிரதம் தொடர்பாக மாபுச்சே ஆர்வலர்கள் வெளியிட்ட அறிக்கை:
"எல் மான்சானோ" சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளான நாம், இத்தால் மாபுச்சே மக்களுக்கும், சர்வதேச கவனத்திற்கும் எமது அறிவிப்புகள் பின்வருமாறு:
- நாம் 12 ஜூலை 2010 அன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறோம்.
- அநீதியான போலிஸ், நீதி மன்ற நடவடிக்கைகளை எதிர்த்தும், சிறைச்சாலைகளில் மனதளவிலும், உடலளவிலும் எமக்கு நடைபெறும் சித்திரவதைகளை எதிர்த்தும் இந்த போராட்டத்தை அறிவிக்கிறோம்.
- மாபுச்சே விடுதலை அமைப்பை அடக்குவதற்காக, சிலி அரசு எமது நியாயமான போராட்டத்தை கிரிமினல்மயப் படுத்தியுள்ளது. எம் மீது கடுமையான பாஸிச அடக்குமுறைச் சட்டங்களை அமுல்படுத்துகிறது.

எமது கோரிக்கைகளாவன:
- பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்து செய்.
- மாபுச்சே மக்களின் பிரச்சினைகளை இராணுவ நீதிமன்றங்களில் விசாரிப்பதை நிறுத்து
- அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்
- மாபுச்சே தாயகப் பூமியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை வாபஸ் வாங்கு
- மாபுச்சே மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி.

இங்ஙனம்,
மாபுச்சே அரசியல் கைதிகள்
Concepción,
12 ஜூலை 2010


Chile hunger strike puts focus on Indians' plight
Mapuche

Friday, September 11, 2009

9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்

"ஜனநாயகம் என்பது எதுவரை ? நமது எதிரிகள் ஆட்சிக்கு வரும்வரை. " - இக்கூற்று தென்னமெரிக்க நாடான சிலியில் மிக்க கொடூரமாக நிரூபிக்கப்பட்டது. மற்றைய தென்னமெரிக்க நாடுகளுக்கு முன்னமே பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு வந்த நாடு சிலி. அங்கே எப்போதுமே பாராளுமன்ற ஆட்சிக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. ஆனால், 1973 ல், இந்த சமாதானப் பூங்கா யுத்தக்காடாகியது. எதிர்கட்சியான (சோஷலிஸ) சமூக ஜனநாயகக் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததுதான் இதற்கான காரணம்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. பல தனியார் நிறுவனங்கள் தேசியமயப்படுத்தப்பட்டன. நில உச்சவரம்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. இதனைத் தொழிலதிபர்களும், பெரு நிலவுடைமையாளரும் அவர்களின் பாதுகாவலனான அமெரிக்க அரசும் பார்த்துக் கொண்டு சும்மாவிருப்பார்களா? வந்தது விபரீதம் இராணுவ வடிவில்.

அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ சில இராணுவ ஜெனரல்களை லஞ்சம் கொடுத்துக் கைக்குள் போட்டுக்கொண்டது. ஜெனரல் பினோஷே தலைமையில் இராணுவத்தின் ஒரு பிரிவு திடீரென பாராளுமன்றத்தையும், ஜனாதிபதி மாளிகையையும் தாக்கியது. 11 செப்டம்பர் 1973 ல் விமானக் குண்டுவீச்சில் ஜனாதிபதி அய்யெண்டே தியாக மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து தன்னைப் புதிய ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்த பினோஷேயின் காட்டாட்சி ஆரம்பமாகியது. இராணுவமே ஆடசியதிகாரத்தைக் கைப்பற்றியது. அமெரிக்கத் தொழிலதிபர்கள், நிலவுடைமையாளர்கள் உட்பட கத்தோலிக்கத் திருச்சபை கூட இராணுவ ஆட்சிக்கு நல்லாசிகள் வழங்கினர்.

இராணுவ ஆட்சியன் கீழ், அனைத்துப் பொருளாதார சீர்திருத்ஙகளும் ரத்துச் செய்யப்பட்டு முன்பு இருந்த நிலைக்கு வந்தது. சோஸலிச-கம்யூனிச கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். இவ்வாறு பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொகை 20,000 க்கு மேலாகும். படைகளின் கைகளில் அகப்படாமல் தப்பியோடியவர்கள் உலகின் பல நாடுகளிலும் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு சிலியில் இராணுவச் சர்வாதிகாரம் நிலைத்து நின்றது.

பத்து வருடங்களுக்கு முன்பு வயதான, நோய்வாய்ப்பட்ட ஜெனரல் பினோஷே வைத்தியம் பார்க்க இங்கிலாந்து வந்த போது பழைய ரணங்கள் கிளறப்பட்டன. சிலி இராணுவத்தினரால் சில ஸ்பானியப் பிரஜைகள் கொல்லப்பட்டதால் ஸ்பெயின் பினோஷேயை விசாரிக்க விரும்பியது. பினோஷேயை ஒப்படைக்கும்படி ஸ்பானிய நீதிபதி விடுத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து செவிசாய்க்க மறுத்தது. இது போதாதென்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் தட்சர் இருபதாயிரம் பேரைக்கொன்ற சர்வாதிகாரியை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்தார். இறுதியில், பினோஷே பாதுகாப்பாக சிலிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்படி நடந்து கொண்ட அதே இங்கிலாந்து அரசுதான் நீதிகாக்க மீலோசவிச்சையும், சதாம் ஹுசைனையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கப் பாடுபட்டது.

இப்போது சிலியில் பாராளுமன்ற ஜனநாயகம் மீட்கப்பட்டுவிட்டது. கடந்த தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றிபெற்றது. ஆனாலும் நாட்டின் பொருளாதாரம் பினோஷே வகுத்த பாதையில்தான் போய்க்கொண்டிருக்கின்றது. காணாமல் போனவர்களைப்பற்றிய விசாரணை எதுவுமில்லை அல்லது பயன் தரவில்லை. படுகொலைகளில் சம்பந்தப்பட்ட எந்தக்குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லை. தலைமைக்குற்றவாளி பினோஷே சட்டங்களுக்கு அப்பாற்பட்ட மனிதனாக ஓய்வெடுக்கிறான். இவற்றையெல்லாம் காணாமற் போனோரின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் பார்த்துக்கொண்டு வாய்மூடி மொனியாக இருக்கத் தயாரில்லை. 11 செப்டம்பர் 2002 ல் கொதித்தெழுந்தனர். 1973 ன் ஜனநாயகப் படுகொலையை நினைவு கூர்ந்தனர். வழமைக்கு மாறாக, தலைநகரில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் பொலிசாருடனான மோதலில் போய்முடிந்தது. அமெரிக்க வர்த்தக ஸ்தாபனங்கள் தாக்கப்பட்டன. இருப்பினும், சிறு கைதுகளுடன் கலவரம் அடக்கப்பட்டது. சர்வதேசச் செய்தி நிறுவனமெதுவும் நடந்ததை உலகிற்குச் சொல்லாமல் செய்தியை இருட்டடிப்புச் செய்தன. அவர்களின் கவனமெல்லாம் அமெரிக்காவில் நடந்த "செப்டம்பர் 11" ஓராண்டு நினைவுகூரலைப் பற்றிய விவரணம் செய்வதிலேயே இருந்தது. அமெரிக்காவின் செப்டம்பர் 11 ஐப்பற்றி உலக மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும், ஆனால், சிலியின் செப்டம்பர் 11 பற்றி யாருக்கும் தெரியத்தேவையில்லை.

தென்னமெரிக்கக் கணடத்தில், மேலும் பல நாடுகளுக்கும் "ஜனநாயகத்தின் எல்லைகள்" பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்தப்பட்டுள்ளது. பிறேசிலிலும், பொலிவியாவிலும் அண்மையில் நடந்த தேரதல்களில் சோஸலிசக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டதுமே, அதனை எப்படியேனும் தடுத்து நிறுத்தும்படியும் அல்லாவிட்டால் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறும், வெளிநாட்டு கடன்கள் நிறுத்தப்படும் என்றெல்லாம் மிரட்டப்பட்டது. வெனிசுலாவில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஏழை மக்களின் நாயகன் சாவேசை பதவியில் இருந்து அகற்ற நடந்த சதிப்புரட்சி தோல்வியில் முடிந்தது. இதிலும் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளூர் வர்த்கப் பெரும்புள்ளிகளும் சி.ஐ.ஏ ம்தான்.

இவையெல்லாவற்றையும் விட உண்மையான மூன்றாம் உலகப்போர் கொலம்பியாவில் தீவிரமடைந்துள்ளது. கொலம்பியாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சியெதுவும் கிடையாது. ஒழுங்காக தேர்தல் நடக்கும் ஜனநாயக நாடுதான். இருப்பினும் நாட்டுப்புறங்களில் பலமாகவிருக்கும் ஃபார்க் என்றழைக்கப்படும் கம்யூனிசக் கிளர்ச்சியாலரை அடக்குவதற்காக ஏவிவிடப்பட்ட அரச இராணுவமும், தனியார் இராணுவமும் (துணைப்படைகள்) செய்யும் கொலைகள் உலக சாதனை படைத்துள்ளன. ஒரு வருடத்திற்கு சராசரி 30000 பேர் இறக்கின்றனர். மிக மோசமான மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அப்படியிருந்தும் "போதைவஸ்து எதிர்ப்பு நடவடிக்கை" என்ற போர்வையில் அமெரிக்க இராணுவ உதவி வழங்கப்படுகின்றது. தேவையேற்படின், வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியும் பெறப்படுகின்றது.

30 வருடங்களாக நடந்துவரும் போர் தற்போது தீவிரமடையும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஃபார்க் கொரில்லாக்களும் தமது யுத்த தந்திரங்களை மாற்றி வருகின்றனர். கொலம்பியாவின் எல்லையில் உள்ள அயல் நாடுகளில் ஃபார்க் கொரில்லாக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அந்நாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஒரு யுத்தம் நீண்ட காலம் தொரடர்கிறதென்றால் அதன் அர்த்தம் அரச படைகள் தோற்கிறார்கள், கொரில்லாககள் வெல்கிறார்கள்" என்ற மாவோவின் கூற்றை நிரூபிப்பதாகவுள்ளது கொலம்பியாவின் 30 வருட உள்நாட்டுயுத்தம். "நிலைமை இப்படியே போனால் இன்னும் ஃபார்க் கொரில்லாக்கள் கொலம்பியா முழுவதையும் பிடித்து விடுவார்கள்" என அறிவித்தது அமெரிக்க செனட்சபை. இவ்வாறு நடைபெறாது தடுக்கும் வகையில், கொலம்பிய இராணுவத்தை நவீனமயப்படுத்த அமெரிக்கா கோடிகோடியாக நிதியுதவி வழங்குகின்றது.

கொரில்லாப் போராட்டத்திற்கெதிரான யுத்த தந்திரமென்பது வேறொன்றுமல்ல. அதே கொரில்லாப் போர் உத்திகளை அரசபடைகள் பயன்படுத்துவதுதான். 20 ஆண்டுகளுக்கு முன்பு, பெருவில் அரசை நிலைகுலைய வைத்த "ஒளிரும் பாதை" இயக்கக் கொரில்லாக்களை மக்கள் எனும் கடலிலிருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்ட மீன்களாக்கி அழித்தமை இதற்கு ஒரு உதாரணம். முக்கிய தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுவிட்டாலும், "ஒளிரும் பாதை" இயக்கத்தினர் இப்போது காடுகளுக்குள் மீள அணிசேருவதாக சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இயக்கத்தின் பெயர்கூட அமெரிக்காவின் வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

"கொரில்லாப் போராட்ட காலம் மலையேறிவிட்டது, இனிப் பாராளுமன்றத்தில் போராடுவோம் வாருங்கள்" என்று அறைகூவல் விடுத்தார் உருகுவே நாட்டு ஜனாதிபதி. ஆனால், ஆர்ஜன்ரீனாவில் நடந்த பொருளாதாரச் சரிவு, அதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் என்பன பாராளுமன்றப் போராட்டத்தை கேள்விக்குள்ளாக்கிவிட்டன. இந்தக் குழப்பம் இப்போது தென்னமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவி வருகின்றது.