Showing posts with label கம்யூனிச சமுதாயம். Show all posts
Showing posts with label கம்யூனிச சமுதாயம். Show all posts

Sunday, February 03, 2019

பிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்

அந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro), 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்கிய கிறிஸ்தவ மதகுரு.

"கம்யூனிசமும், மதமும் வேறு வேறான சித்தாந்தங்கள்" என்ற தவறான எண்ணத்தை, பிரேசில் நாட்டு முன்னாள் அடிமைகளும், ஏழை விவசாயிகளும் உடைத்தெறிந்தனர். Bahia மாநிலத்தில், Canudos எனுமிடத்தில், பிரேசிலின் முதலாவது கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கினார்கள். 

சுமார் 25000 பேரளவில், அந்தோனியோ என்ற கிறிஸ்தவ மதகுருவின் தலைமையில் அந்த புதிய நகரத்தை தாமே உருவாக்கிக் கொண்டனர். ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் ஒரே வழியாக, அந்தோனியோ "கம்யூனிச கிறிஸ்தவத்தை" போதித்து வந்தார். அவரின் போதனைகளால் கவரப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஏழை விவசாயிகளும், விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமைகளும், வெறுந் தரையில் கனுடோஸ் என்ற புதிய நகரத்தை உருவாக்கி சாதித்துக் காட்டினார்கள். 

அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள், அவரவர் வாழ்க்கைக்கு தேவையான அளவு வேலை செய்தார்கள். வருமானத்தை தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட கனுடோஸ் கம்யூன் நகரத்தை மேற்பார்வையிட பொலிஸ் இருக்கவில்லை. குற்றச் செயல்கள் எதுவும் நடப்பதில்லை. அதனால் நீதிமன்றமும் இருக்கவில்லை. 

சுமார் 25000 க்கும் அதிகமான மக்கள், பிரேசில் அரசிடம் தங்கியிராமல், தாமாகவே தமது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். மக்கள் தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்ய கற்றுக் கொண்டால், பேராசைக்கார முதலாளிகள் மூலதனத்தை திரட்ட முடியுமா? முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்யும் பிரேசில் அரசு, இராணுவத்தை அனுப்பியது. 

அரச படைகள், கனுடோஸ் நகரை சுற்றி வளைத்தன. துருப் பிடித்த துப்பாக்கிகளை வைத்திருந்த மக்களால், நவீன ஆயுதமேந்திய இராணுவத்தை எதிர்த்து போராட முடியவில்லை. அந்தப் போரில், ஆயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். கம்யூனிச மதகுரு அந்தோனியோ கொன்செஹெரோ பிடிபட்டு சிரச்சேதம் செய்யப் பட்டார். 

"மனிதர்கள் இயற்கையாகவே சுயநலவாதிகள்" என்ற பொய்யை பரப்பி வரும், ஆளும் வர்க்கமும், முதலாளித்துவ ஆதரவாளர்களும், இது போன்ற தகவல்களை மக்களுக்கு வேண்டுமென்றே மறைக்கப் பார்ப்பார்கள். 

மேலதிக விபரங்களுக்கு இந்த திரைப் படத்தை பார்க்கவும்: 
The Battle of canudos (Portuguese) 
https://www.youtube.com/watch?v=HJWn9ySyqEc

Thursday, November 06, 2014

மொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொருளாதார அதிசயம்


கம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயம், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய, தனித்துவமான இலட்சியம் அல்ல. 19 ம் நூற்றாண்டில், தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட முதலாளித்துவத்தின் தீமைகள், பலரை மாற்று வழி குறித்து சிந்திக்கத் தூண்டியது. 

 பல ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவ மத நம்பிக்கையையும், தனியுடைமை உரிமையையும் கைவிட விரும்பாத சோஷலிஸ்ட் சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த கிறிஸ்தவ - சோஷலிஸ்டுகள், கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் முதலாளித்துவத்தின் தீமைகளை வெறுத்தாலும், தனியுடைமையை ஆதரித்தார்கள். அதே நேரம், தொழிலாளர்கள், நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில், முதலாளிகள் அற்ற பொருள் உற்பத்தியை தெரிவு செய்தனர். அதுவே கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம். 

ஸ்பெயினில், பாஸ்க் மொழி பேசும் மக்கள் வாழும் மாகாணத்தில், மொன்ட்ராகொன் (Mondragon) எனும் இடத்தில், ஒரு கத்தோலிக்க பாதிரியார் உள்ளூர் மக்களின் உதவியுடன் கூட்டுறவு தொழிற்சாலைகளை அமைத்தார். அவற்றின் தொழிலாளர்கள் தான், நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தனர். மொன்ட்ராகொன் கூட்டுறவு தொழிற்சாலைகள் இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு தொழிற்சாலையாக ஆரம்பித்த மொன்ட்ராகொன் கூட்டுறவு இயக்கம், இன்று பல தொழிற்சாலைகளை கட்டி, நிர்வகித்து வருகின்றது. அவற்றில் முதலாளிகள் யாரும் கிடையாது. தொழிலாளர்களே நிர்வாகிகளாகவும் உள்ளனர். இலாபத்தை தமக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். கூட்டுறவு இயக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததுடன் நில்லாது, தொழிலாளர்களினதும் அவர்களது குடும்பத்தினரினதும் நலன்களையும் கவனித்து வருகின்றது. 

 மொன்றாகன் கூட்டுறவு இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்த ஆவணப் படத்தை பார்க்கவும்:

 

Monday, March 05, 2012

முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!

முற்குறிப்பு: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நெதர்லாந்து நாட்டில் தீவிரமான சோஷலிச அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சியர்கள் போன்று, அவர்களும் கம்யூனிச சமுதாயம் அமைப்பதை இலக்காகக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் தம்மை அராஜகவாதிகள் (அரசு எதிர்ப்பாளர்கள்) என்று அழைத்துக் கொள்வதையே பெரிதும் விரும்பினார்கள். ஹெர்மன் ஸ்ஹியூர்மன் (Herman Schuurman) என்ற சோஷலிசப் புரட்சியாளர் எழுதி வெளியிட்ட (1924), "வேலை செய்வது குற்றம்" என்ற துண்டுப்பிரசுரம் அண்மையில் சில இடதுசாரி ஆர்வலர்களால் மறுபதிப்புச் செய்யப் பட்டது. அந்தத் துண்டுப்பிரசுரத்தை நான் இங்கே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். பிரபலமான மார்க்சிய அறிஞர்கள் தவிர்ந்த, பிற இடதுசாரி புத்திஜீவிகளின் எழுத்துக்கள், தமிழில் மிகவும் அரிதாகவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சி இது. நமது அன்புக்குரிய தோழர்கள், இத்தகைய வெளிவராத ஐரோப்பிய புரட்சிகர சிந்தனைகளை, தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
_______________________________________________________________


வேலை செய்வது குற்றம்
நமது மொழியில் வழமையாக பாவிக்கும் சொற்கள், சொற்பதங்கள் சில ஒழிக்கப் பட வேண்டும். ஏனென்றால், அந்தச் சொற்களின் உள்ளடக்கம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை அடிப்படியாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, வினைச் சொல்லான "வேலை செய்தல்", மற்றும் அதனோடு தொடர்புடைய பிற சொற்கள்": வேலை ஆள், வேலை நேரம், வேலைக்கான ஊதியம், வேலை நிறுத்தம், வேலையில்லாதவர், வேலை செய்யாதவர்.

வேலை செய்வது என்பது, இதுவரை மனித குலத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய ஆபத்து, அவமானம் ஆகும். முதலாளித்துவம் என்ற சமூக அமைப்பு, வேலை செய்தலை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவம் எனப்படும் இந்த அமைப்பு, வேலை செய்வதன் மேல் கட்டப் பட்டுள்ளது. அது ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள மனிதர்களின் வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. மறு பக்கத்தில், வேலை செய்யாத மனிதர்களின் வர்க்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அல்லாவிட்டால் அவர்கள் பட்டினி கிடக்க நேரிடும். "ஏனென்றால்", (உற்பத்தி சாதனங்களின்) உரிமையாளர்கள் இவ்வாறு போதிக்கிறார்கள்: "வேலை செய்யாதவர்கள், சாப்பிட மாட்டார்கள்." மேலும், இலாபத்தை கணக்கிடுவதும், பாதுகாப்பதும் கூட "வேலை" என்று தான் அவர்கள் கூறுகின்றார்கள்.

வேலையில்லாதவர்கள், வேலையே செய்யாதவர்கள் என்று இரண்டு வகை உண்டு. அகராதியில் அவற்றிற்கு என்ன அர்த்தம் எழுதியிருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். "வேலை செய்யாதவர்": வேலை இருந்தும் செய்ய மறுப்பவர். "வேலையில்லாதவர்": அவரது முயற்சிக்கு அப்பாற்பட்ட விதத்தில் வேலை செய்யும் வாய்ப்பற்றவர். வேலை செய்யாதவர்கள், சுரண்டல் காரர்கள், உழைப்பாளிகளின் உழைப்பில் வாழ்பவர்கள். வேலையில்லாதவர்கள் எனப்படுவோர் உழைக்கும் மக்கள், வேலை செய்யும் அனுமதி மறுக்கப் பட்டவர்கள், ஏனென்றால், அவர்களை வைத்து இலாபம் சம்பாதிக்க முடியாது.

உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர்கள், உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய நேரத்தை தீர்மானித்துள்ளனர். தொழில் செய்யும் இடங்களையும் நிறுவியுள்ளனர். உழைப்பாளிகள் பட்டினி கிடந்தது சாகாமல், உயிர் பிழைப்பதற்கு போதுமான அளவு கூலியைப் பெறுகின்றனர். அது அவர்களது பிள்ளைகளின் போஷாக்கை நிவர்த்தி செய்யக் கூட போதுமானதல்ல. பாடசாலை செல்லும் பிள்ளைகள், அங்கே வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி படிக்கிறார்கள். தொழிலாளர்களை எவ்வாறு வேலை வாங்குவது என்று படிப்பதற்காக, முதலாளிகள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகிறார்கள்.

வேலை செய்வது ஒரு சாபம். அது மனிதர்களை ஆன்மாவற்றவர்களாக, ஆத்மா அற்றவர்களாக்குகின்றது. வேலை செய்வதற்காக, ஒருவர் தனது அடையாளத்தையே இழக்கிறார். தவழுவது, சுத்துமாத்துகள் செய்வது, காட்டிக் கொடுப்பது, ஏமாற்றுவது, நேர்மையற்ற செயல் எல்லாவற்றையும் வேலைக்காக செய்கின்றீர்கள். உழைப்பாளிகளின் உழைப்பு, வேலை செய்யாத பணக்காரர்களுக்கு இலகுவான வாழ்க்கையை வழங்குகின்றது. உழைப்பாளிகளுக்கு அது ஒரு அவலத்தின் சுமை, பிறப்பிலிருந்து தொடரும் கெட்ட தலைவிதி. அது உழைப்பாளிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வாழ்க்கையை தடுக்கின்றது.

வேலை செய்வது (மனித) வாழ்வுக்கு விரோதமானது. "நல்ல வேலையாள்" எனப்படுபவன், வாழ்விழந்த, களையிழந்த முகத்தைக் கொண்ட சுமை தூக்கும் விலங்கினம். எப்போது மனிதன் வாழ்வைப் புரிந்து கொள்கிறானோ, அன்றில் இருந்து வேலை செய்ய மாட்டான். நாளைக்கே ஒருவர், தான் வேலை செய்யும் முதலாளியை விட்டு விலத்திச் சென்று, வேலை இன்றி தெருவில் நிற்க வேண்டுமென்று நான் கூறவில்லை. யாராவது அவ்வாறு நிர்ப்பந்திக்கப் பட்டாலும், அது ஒரு துரதிர்ஷ்டமாகும். பல சந்தர்ப்பங்களில், வேலையின்றி இருப்பவர்கள், வேலை செய்யும் தோழர்களின் செலவில் தங்கியிருக்கின்றனர். நேர்மையான குடிமக்கள் கூறுவதைப் போல, ஒரு முதலாளியினால் சுரண்டப் படுவதை தவிர்த்து, (அவனிடமே) திருடவும், கொள்ளையிடவும் தெரிந்தால் நல்லது. அதைச் செய்யுங்கள். ஆனால், அதனால் ஒரு மிகப் பெரிய பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைத்து விடாதீர்கள்.

வேலை செய்வது ஒரு சமூக நோய். (இன்றுள்ள) சமூகம் எமது வாழ்க்கைக்கு விரோதமானது, அதனை அழிப்பதன் மூலம் மட்டுமே, அதாவது புரட்சிகளை நடத்துவதன் மூலமே, வேலை மறைந்து விடும். அப்போது மட்டுமே (நிஜமான) வாழ்க்கை உதயமாகும். முழுமையான, செழுமையான வாழ்வு கிடைக்கும். அங்கே அழைத்து வரப்படும் ஒவ்வொருவரும், தமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்வார்கள். அந்த மக்கள் இயக்கத்தில், ஒவ்வொருவரும் உற்பத்தியாளர் தான். அவர்கள் விசேடமாக, அவசியமான, அழகான, தரமான பொருட்களை உற்பத்தி செய்வார்கள். அப்பொழுது, தொழிலாளிகள் என்ற வகை மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் மனிதனாக மட்டுமே இருப்பார்கள். மனிதனது வாழ்வாதாரங்களுக்காக, சொந்த தேவைகளுக்காக, சோர்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். எல்லாவிதமான உறவுகளுக்குமான காரண காரியங்களுக்காகவும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அப்போது அங்கே வாழ்க்கை இருக்கும், அற்புதமான வாழ்க்கை, தூய்மையானதும் உலகத்தரமானதாகவும் இருக்கும்.

உற்பத்தி செய்யும் வலுவானது, மனிதர்களின் வாழ்வில் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த உழைப்பானது, நேரம், இடம், சம்பளம், பசி போன்றவற்றால் நிர்ப்பந்திக்கப் பட்ட வேலையாக இராது. ஒட்டுண்ணிகளால் அந்த உழைப்பு சுரண்டப் படாது. உற்பத்தி செய்வது, வாழ்வின் மகிழ்ச்சியான அனுபவம், வேலை செய்வது வாழ்வின் வேதனையான அனுபவம். தற்கால மாசடைந்த சமூக உறவுகளில், அத்தகைய வாழ்வை உருவாக்க முடியாது. நமது காலத்தில் எல்லா வகையான தொழில்களும் குற்றமாகும். எமக்கு வேலை வேண்டுமென்பதற்காக முதலாளிகளோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறோம். இலாபம் சம்பாதிப்பதிலும், சுரண்டுவதிலும் கூட்டுச் சேர்கின்றோம். ஏமாற்றுவதில், பொய்யுரைப்பதில், நஞ்சூட்டுவதில், மனித குலத்தை படுகொலை செய்வதில், யுத்தத்திற்கு தயார்படுத்துவதில், எல்லாவற்றிலும் (முதலாளிகளுடன்) கூட நின்று உதவுகின்றோம்.

இவற்றை எல்லாம் நாங்கள் புரிந்து கொண்டால், எமது வாழ்க்கைக்கு வேறு அர்த்தம் கிடைக்கும். நாம் எமது உற்பத்தி திறனை உணர்ந்து கொண்டால், இந்த வில்லத்தனமான, கிரிமினல் சமுதாயத்தை தகர்க்க முனைவோம். ஆனால், பசியால் சாகும் நிலை வராமல் தடுப்பதற்காக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை நிர்ப்பந்திக்குமேயானால்,இந்த வேலையின் ஊடாக, முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். நாங்கள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்காக வேலை செய்யவில்லை என்றால், மனிதநேயத்தின் வீழ்ச்சியை நோக்கி வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமாகும். அதனால், நாம் ஒவ்வொரு முதலாளித்துவ நிறுவனத்தையும் வேண்டுமென்றே நாசப் படுத்துவோம். ஒவ்வொரு முதலாளியும் எமது செயலால் எதையாவது இழக்க வேண்டும். எழுச்சியுற்ற இளைஞர்களாகிய நாம், மூலப்பொருட்கள், இயந்திரங்கள், விளைபொருட்களை பாவனைக்கு உதவாதவையாக ஆக்க வேண்டும். எந்த நிமிடமும், இயந்திரங்களின் பாகங்கள் கழன்று போகும், கத்திகளும் கத்திரிக் கோள்களும் உடைந்து விடும், மிகவும் அத்தியாவசியமான கருவிகள் மறைந்து விடும். இந்த செய்முறை விளக்கங்களை, வழிவகைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம்.

முதலாளித்துவத்தினால் அழிந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால், நாங்கள் முதலாளித்துவத்தை அழித்து விட வேண்டும். நாங்கள், அடிமைகள் போன்று வேலை செய்ய விரும்பவில்லை. நாங்கள், சுதந்திரமான மனிதர்களையே உருவாக்க விரும்புகின்றோம். உழைப்பாளிகளின் உழைப்பினால் தான் முதலாளித்துவம் உயிரோடு இருக்கின்றது. அதனால் தான் நாங்கள் வேலையாட்களாக வாழ விரும்பவில்லை, வேலை செய்வதை நாசமாக்குவோம்.

********************************************
Herman Schuurman (1897 – 1991), "வேலை செய்வது குற்றம்" (Werken is Misdaad) என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதியவர். "Mokergroep" என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர். (Moker என்ற சொல், நெதர்லாந்து பாட்டாளிகளின் மொழியில் முஷ்டியைக் குறிக்கும்.) புரட்சியில் ஈடுபாடு கொண்ட இளம் பாட்டாளிகளை அந்த அமைப்பு கவர்ந்திருந்தது. 1923 முதல் 1928 வரையில், அந்த அமைப்பு நெதர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள, De Dolle Hond என்ற பதிப்பகம், 1999 ம் ஆண்டு, அந்த துண்டுப் பிரசுரத்தை மறுபதிப்புச் செய்தது.

பதிப்பகத்தின் முகவரி:

De Dolle Hond,
p/a Koffieshop Bollox,
1ste Schinkelstraat 14 – 16
1075 Amsterdam


டச்சு மொழியில் எழுதப்பட்ட மூலப் பிரதியை இந்த இணைப்பில் வாசிக்கலாம்: Werken is misdaad