Showing posts with label இஸ்லாமியவாதிகள். Show all posts
Showing posts with label இஸ்லாமியவாதிகள். Show all posts

Sunday, October 12, 2014

போலி இஸ்லாமியவாதிகளும் முதலாளிகளின் கைக்கூலிகளே!

போலித் தமிழ்தேசியவாதிகள், போலி சிங்களதேசியவாதிகள், போலி இஸ்லாமியவாதிகள்... இவர்கள் தமக்குள் கொள்கை முரண்பாடு கொண்டவர்கள் போல, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள்.  ஆனால், அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரே ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும், முதலாளிகளின் கைக்கூலிகள் தான் என்பதை, கடைசியில் எப்படியோ நிரூபித்து விடுவார்கள்.



தமிழினவாதிகள் போன்று, இஸ்லாமிய மதவாதிகளும், கம்யூனிஸ்டுகள் எனப் படுவோர் "செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்து குதித்த வேற்றுக் கிரக வாசிகள்" என்பது போல நினைத்துக் கொள்கிறார்கள். ஆப்கானிஸ்தானில், ஆப்கானியர்கள் தான் கம்யூனிஸ்டுகளாக இருந்தார். ஆப்கான் கம்யூனிஸ்டுகளின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகத் தான், சோவியத் யூனியன் படைகளை அனுப்பியது.

"ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்திருந்தது" என்பது ஒரு அமெரிக்காவின் பிரச்சாரம். சோவியத் இராணுவம் வருவதற்கு முன்னரே, மத அடிப்படைவாத முஜாகிதீன் இயக்கங்கள் கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. அந்த இயக்கங்களுக்கு சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் கிடைத்து வந்தன.

அரபு நாடுகளிலும், அரபு கம்யூனிஸ்டுகள் அல்லது சோஷலிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தனர். சிரியா, தென் யேமன், எகிப்து போன்ற சில நாடுகளைக் குறிப்பிடலாம். அவ்வாறு தான், சோவியத் யூனியனுக்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளுடன் நட்புறவு ஏற்பட்டது. இன்றைக்கும், ஈராக் முதல் மொரோக்கோ வரையில், அரபு கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இங்கே சில போலி இஸ்லாமியவாதிகள் கேட்டுள்ள அபத்தமான கேள்விகளும், அவற்றிற்கான எனது பதில்களும்.

  • கேள்வி: முஸ்லிம் நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளும் இஸ்லாமியவாதிகளும் இணைந்து செயற்பட முடியாமைக்கான காரணங்களாக நீங்கள் எவற்றைக் காண்கிறீர்கள்?

பதில்: இணைந்து செயற்படவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? சில பொதுவான பிரச்சினைகள், கோரிக்கைகளின் கீழ் ஐக்கிய முன்னணி அமைத்த உதாரணங்கள் பல உண்டு. ஆயினும், கொள்கை வேறுபாடுகளும் இருப்பதை மறுக்க முடியாது. அரபு முஸ்லிம் நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், தங்களை மாதிரியே சிந்திக்க வேண்டும் என்று இஸ்லாமியவாதிகள் எதிர்பார்ப்பது ஒரு பாசிஸ மனப்பான்மை. தமிழினவாதிகளிடமும் இதே மாதிரியான போக்கு காணப் படுகின்றது. அவர்களும், எல்லாத் தமிழர்களும் தங்களை மாதிரி பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். முதலில் சமூகம் பன்முகத் தன்மை கொண்டது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

  • கேள்வி: அரபு முஸ்லிம் நாடுகளிலுள்ள இஸ்லாமியவாதிகள் (முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர்) அமெரிக்க - மேற்கு நலன் பேணுபவர்களல்லர். கம்யூனிஸ்டுகளும் ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள். எனவே, இந்தப் புள்ளியில் இணையும் இந்த இரு குழுவினரும் முரண்படும் புள்ளிகள் எவை?


பதில்: இப்படி கருப்பு-வெள்ளையாக பார்க்க முடியாது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை உருவாக்கியதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்களிப்பை மறுக்க முடியாது. பாகிஸ்தானிலும் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் பின்னால் பிரிட்டன் இருந்தது. அண்மையில் சிரியாவில் நடக்கும் போரில், இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், மேற்குலகின் உதவி பெற்றுப் போராடுவதற்கான ஆயிரக் கணக்கான ஆதாரங்கள் உள்ளன. காயப் பட்ட போராளிகளுக்கு இஸ்ரேல் மருத்துவ உதவி செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. 

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், ஆரம்பத்தில் மேற்குலக ஏகாதிபத்தியத்தின் உதவியைப் பெற்று இயங்கி வந்தன. இஸ்லாமிய நாடுகளில் தோன்றிய கம்யூனிஸ்ட் இயக்கங்களை அழிப்பதற்காக, மேற்குலகம் இஸ்லாமிய மதவாத இயக்கங்களை வளர்த்து விட்டன. அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

  • கேள்வி: கம்யூனிஸ்ட்களின் ஆக்கிரமிப்புகளை விடுதலைக்காக எனவும், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பை எண்ணெய்க்கெனவும் கூறுவது நகைமுரண் இல்லையா, கம்யூனிஸ்ட்கள் ஆக்கிரமிக்கும் பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர் இதை பயன்படுத்தி இதன் எதிர் வினையாக கடும் போக்கு கொண்ட மிதவாதிகள் மக்கள் ஆதரவை பெருகிறார்கள் அவர்களுக்கு உதவுவதுபோல் கம்யூனிச எதிர்ப்பால் மேற்குலகம் அவர்களை வளர்த்துவிடுகிறது, இவர்களது பனிப்போர்க்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தேவைப்படுகிறது?


பதில்: கம்யூனிஸ்டுகள் தங்களைத் தாங்களே ஆக்கிரமித்தார்களா? என்னய்யா அபத்தம் இது? முதலில் ஒன்றைப் பற்றி விவாதிக்கும் பொழுது சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உங்களது சகோதரர்கள், சமூகத்தினர் கூட கம்யூனிஸ்டுகளாக இருக்கலாம். 

விளக்கமாக கூறிய பிறகும்.... "விடிய விடிய இராமர் கதை, விடிந்த பிறகு இராமனுக்கு சீதை என்ன முறை" என்று கேட்டது மாதிரி இருக்கிறது உங்களது கேள்வி! "கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு" என்பதற்கு எதிர்ப் பதமாக,  "முதலாளிகளின் ஆக்கிரமிப்பு" என்று கூறாமல், அதை "மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு" என்று கூறுவதன் காரணம் என்னவோ? உங்கள் மனதில் உள்ள முதலாளித்துவ சார்புத் தன்மை இப்படியான தருணங்களில் தான் அம்பலமாகின்றது.

"முஸ்லிம் நாடுகளில்" உள்ள கம்யூனிஸ்டுகளும், மதத்தால் இஸ்லாமியர்கள் தான். கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்த நாடுகளில், "இஸ்லாமியர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக" நீங்கள் கூறுவது ஓர் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம். பிற்போக்காளர்களான மதவெறியர்கள் மட்டும் தான் அடக்கப் பட்டனர். சாதாரண இஸ்லாமிய மக்கள் அல்ல. 

அது வரை காலமும் அதிகாரத்தில் இருந்த பழமைவாதிகள், நிலப்பிரபுக்கள், "இஸ்லாமியர்" என்ற பெயரைச் சொல்லித் தான், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அனைத்து அட்டூழியங்களையும் செய்து வந்தனர். அவர்களை இஸ்லாமிய மக்கள் தான் அடித்து விரட்டினார்கள். கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அதனை "அடக்குமுறை" என்று சொல்வதில் இருந்தே, நீங்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்து விடுகின்றது. நீங்கள் உண்மையில், இஸ்லாமிய மக்களை சார்ந்து சிந்திப்பவர் என்றால், இப்படியான அபத்தமான கருத்துக்களை கூற மாட்டீர்கள்.

  • கேள்வி: சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி தான் நடக்கிறது. அங்கே ஏன் ஜின்ஜியாங் மாநிலத்திலே இஸ்லாமியர்கள் மேல் கொடூரமான தாக்குதல் நடக்கிறது? நோன்பு இருந்தால் பொலிஸ் வலுக் கட்டாயமாக பிடித்து குடிக்க வைப்பார்கள். ஹஜ்ஜுக்கு போனால் வேலை போய் விடும். இதெல்லாம் பார்த்தால் கம்யூனிஸ்டுகள் மேல் வெறுப்பு தான் வருகிறது. காட்டுமிராண்டிகள் அவர்கள்...


பதில்: சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பெயரளவில் மட்டுமே உள்ளது. அது ஒரு முதலாளித்துவ கட்சியாக மாறி இருபாதாண்டுகள் கடந்து விட்டன. சீனா இன்று முழுக்க முழுக்க ஒரு முதலாளித்துவ நாடு. இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியாமலில்லை. இருந்தாலும், மனதில் உள்ள கம்யூனிச வெறுப்பின் காரணமாக, அதை உதாரணமாகக் காட்டுகின்றீர்கள். மாவோ காலத்தில், சீனா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், உய்குர் முஸ்லிம்களின் நிலைமை எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு வார்த்தை பேசாததில் இருந்தே, உங்களது போலி இஸ்லாமிய சகோதரத்துவம் அம்பலமாகின்றது.

மேலும், சீனாவில் உய்குர் மாநிலத்தில் மட்டும் இஸ்லாமியர்கள் வாழவில்லை. பிற மாநிலங்களிலும் பெருமளவு இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். சீன மொழி பேசும் இஸ்லாமியர்களும் உண்டு. அவர்களும் மேற்குறிப்பிட்ட அடக்குமுறைகளை சந்தித்து உள்ளனரா? இல்லையே. எங்காவது அப்படி நடந்ததாக, நீங்கள் கூட சொல்லவில்லை. அண்மைக் காலமாக, உய்குர் மாநிலத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரை மறந்து விட்டுப் பேசுவது அழகல்ல. 

தீவிரவாத்தை அடக்குவதற்கான நடவடிக்கைகளில், சீனப் பொலிஸ் செய்த மனித உரிமை மீறல்களை தான் நீங்கள் பட்டியலிட்டு உள்ளீர்கள். இது போன்ற கொடுமைகள் ஒரு முஸ்லிம் நாட்டில் நடக்க மாட்டாதா? சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமியவாதிகள் பள்ளிவாசல்களை குண்டு வைத்து உடைத்த நேரம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள். சன்னி, ஷியா என்று பிழையான மதப்பிரிவில் பிறந்த காரணத்திற்காக, இஸ்லாமியவாதிகள் அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவித்த நேரம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதை எல்லாம் பார்த்தால், உங்களுக்கு இஸ்லாமியர் மேல் வெறுப்பு உண்டாகியிருக்க வேண்டுமே?

  • கேள்வி: இஸ்லாமிய நாடுகளில் சென்று பாருங்கள். அங்கே யாரும் மற்ற மதத்துக் காரர்களை துன்புறுத்துவது இல்லை.


பதில்: இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்காதீர்கள். பாகிஸ்தான், ஈராக்கில் நடக்கும் சன்னி - ஷியா கலவரங்கள், அதனால் பலியான ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் பற்றி எதுவும் கூறாத காரணம் என்ன?

எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் துன்புறுத்தப் பட்ட கதைகளை நீங்கள் கேள்விப் படவில்லையா? எத்தனை கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்கள் உடைக்கப் பட்டன என்று தெரியுமா? எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்லப் பட்டனர் என்று தெரியுமா? இஸ்லாமியவாதிகளின் ஆட்சி நடக்கும் லிபியாவில், கருப்பின மக்கள் மேல் நிறவெறித் தாக்குதல்கள் நடக்கும் காரணம் என்ன? அந்தக் காட்டுமிராண்டித்தனங்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போன மர்மம் என்ன?

நீங்கள் உண்மைகளை மறைத்து, ஒரு பக்கச் சார்பாக பேசுகின்றீர்கள். இஸ்லாமிய நாடுகளில் எந்த அடக்குமுறையும் கிடையாது என்று நினைப்பது அறியாமை. துருக்கி, ஈராக், ஈரானில் வாழும் குர்து மக்களும் இஸ்லாமியர்கள் தான். அங்கு அரசாங்கத்தில் இருப்பவர்களும் இஸ்லாமியர்கள். குர்து இஸ்லாமியர்களுக்கு எதிராக, இஸ்லாமிய அரசுகள் புரிந்த கொடுமைகள் எத்தனை? அந்தக் கொடூரங்களுடன் ஒப்பிட்டால், சீனாவில் நடந்தவை சிறு பிள்ளை விளையாட்டுப் போல தோன்றும். இஸ்லாமியருக்கு எதிரான இஸ்லாமிய அரசுக்களின் காட்டுமிராண்டித்தனத்தை மறந்து விட்டுப் பேசும் காரணம் என்ன? அவற்றை மறைப்பதன் நோக்கம் என்ன? ஏனென்றால் நீங்கள் ஒரு போலி இஸ்லாமியவாதி.



Sunday, August 18, 2013

எகிப்து : இஸ்லாமிய மதவாதிகளுடன் கணக்குத் தீர்க்கும் காலம்



எகிப்தில் நடக்கும் சம்பவங்கள் யாவும், அந்த நாடு ஒரு உள்நாட்டுப் போரை நோக்கி தள்ளப் படுவதை எடுத்துக் காட்டுகின்றன. எகிப்தின் புதிய இரும்பு மனிதரான ஜெனரல் அல் அசிசி, பதவி இறக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆதரவாளர்களின் கிளர்ச்சியை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகின்றார். அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை இராணுவம் சுடுகின்றது. மசூதி ஒன்றில் அடைக்கலம் புகுந்தவர்களைக் கூட, ஆயுத வன்முறை பிரயோகித்து வெளியேற்றி உள்ளது. ஒரு வருடம் மட்டுமே ஜனாதிபதியாக இருந்து, பதவி கவிழ்க்கப் பட்ட மொர்சி ஆதரவாளர்களுக்கு எதிரான அடக்குமுறையில் குறைந்தது 800 பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். அல்கைதா தலைவர் சவாஹிரியின் சகோதரரும் கைது செய்யப் பட்டுள்ளார். முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைவரின் மகன் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகிறார். 

இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வரும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர், அஹிம்சா வழியில் போராடுவதாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். சில இடங்களில், துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். அது இன்னும் முழுமையான அரச எதிர்ப்பு ஆயுதப் போராட்டமாக மாறவில்லை. ஆனால், சில நாட்களில் அதுவும் நடக்கலாம். முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினரை, வேறு வழியின்றி ஆயுதமேந்தப் பண்ணுவதே, இராணுவ அரசின் நோக்கமாக உள்ளது. இது அவர்களுக்கு வைக்கப் பட்டுள்ள மிகப் பெரிய பொறி. அதற்குள் மாட்டிக் கொள்ளும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை இலகுவாக அழித்தொழித்து விடலாம் என்று இராணுவ அரசு எதிர்பார்க்கின்றது. இதே மாதிரியான அரசியல் தந்திரோபாயம் தான், முப்பது வருடங்களுக்கு  முன்னர் தொடங்கிய ஈழப் போரில் பயன்படுத்தப் பட்டது. அதனை இன்றைக்கும் பலர் உணரவில்லை.  

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி, எகிப்தின் மிகவும் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். ஆங்கிலேய காலனிய காலத்திலேயே, பழமைவாதிகளையும், மதவாதிகளையும் ஒரே அரசியல் கோட்பாட்டின் கீழ் ஒன்று சேர்த்து, இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சியாக உருவானது. இந்தியாவில் உள்ள இந்து மத அடிப்படைவாதிகளின் பா.ஜ.க. வுடன் ஒப்பிடத் தக்கது. இந்தியாவில் பாஜக வினருக்கு கிடைத்த சுதந்திரமும், சந்தர்ப்பங்களும், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சினருக்கு கிடைக்கவில்லை. எகிப்திய தேசியவாதியும், சோஷலிஸ்டுமான நாசரின் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தடை செய்யப் பட்டது. பெரும்பாலான கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் சிறைகளை நிரப்பினார்கள். 

தற்போது வரலாறு திரும்புகின்றது. லிபரல் சர்வாதிகாரி முபாரக் வெளியேற்றப் பட்ட பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்தக் கட்சியில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான மொர்சி, பொருளாதார தேவைகளுக்காக சீனாவுடனும், ஈரானுடனும் உறவு கொண்டாடினார். அது அமெரிக்காவின் கோபத்தை கிளறி இருக்கலாம். ஆதாரம் இல்லாவிடினும், முக்கியமான இரண்டு சம்பவங்களை குறிப்பிடலாம். 

1. மத்திய கிழக்கில், இஸ்ரேலுக்கு அடுத்த படியாக, அமெரிக்காவின் மிக அதிகமான ஆயுத தளபாட உதவி எகிப்திற்கு செல்கின்றது. இஸ்ரேலுடன் பொது எல்லையை பகிர்ந்து கொள்வதாலும், சுயஸ் கால்வாயை கொண்டிருப்பதாலும், எகிப்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். தற்போது நடக்கும் பிரச்சினையில், எகிப்திய பாதுகாப்பு படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக நூற்றுக் கணக்கானோர் கொல்லப் பட்ட பின்னரும், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் எகிப்திற்கான விநியோகம் நிறுத்தப் படவில்லை. அமெரிக்க தூதரகம் கண்டன அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருகின்றது. அது பெரிய தாக்கத்தை உண்டாக்கப் போவதில்லை. 

2. சவூதி அரேபியா, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் மிக நீண்ட கால கொடையாளி நாடு ஆகும். முபாரக்கின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த சிறிதளவு சுதந்திரத்தை பயன்படுத்தி, அந்தக் கட்சி வளர்ச்சி அடைவதற்கு சவூதிப் பணம் பெரிதும் உதவியது. மொர்சி பதவியிழந்த பின்னர், உற்ற நண்பனான சவூதி அரேபியா கட்சி மாறி விட்டது. எதிரிகளும் நண்பர்களும் ஆச்சரியப் படுமளவிற்கு, புதிய இராணுவ ஆட்சியாளர்கள் பக்கம் சேர்ந்து கொண்டது. இன்று முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை தடை செய்யப் போவதாக இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், சவூதி அரேபியா தனது பழைய நண்பர்களை முற்று முழுதாக கை கழுவி விடும் என்று தெரிகின்றது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு.

நாலாபுறமும் நசுக்கப்படும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எகிப்திய கிறிஸ்தவர்கள் மேல் பழிபோட்டு வருகின்றனர். அந்தக் கட்சியை சேர்ந்த தீவிரவாதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏறக்குறைய பதினைந்து தேவாலயங்கள் எரிக்கப் பட்டுள்ளன அல்லது சேதப் படுத்தப் பட்டுள்ளன. முஸ்லிம் சகோதரத்துவ கட்சியானது, தனக்கு ஆதரவான இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட மக்களின் கோபாவேசத்தை, கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக திசை திருப்பி விடப் பார்க்கின்றது. இது ஒரு இயலாமையின் வெளிப்பாடு. என்ன தான் கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதவாத/இனவாத உணர்வுகளை தூண்டி விடப் பார்த்தாலும், அது அந்தக் கட்சிக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. 

சிலர் எகிப்தில் நடக்கும் மாற்றங்களை, ஏற்கனவே சிரியாவில் நடந்த மாற்றங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமைகளும், அதே நேரம் வேற்றுமைகளும் உள்ளன. சிரியாவில் நடக்கும் யுத்தம், இரண்டு வேறுபட்ட சமூகங்களில் தங்கியுள்ளது. எல்லோரும் அரபு மொழி பேசினாலும், சமூக, கலாச்சார முரண்பாடுகள் அவர்களை பிரிந்து வாழ வைத்துள்ளது. அங்குள்ள அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் அனேகமாக சுன்னி முஸ்லிம்கள். அலாவி முஸ்லிம் பிரிவினரும், கிறிஸ்தவர்களும் சிரிய அரசை ஆதரிக்கின்றனர். ஆனால், எகிப்தில் நிலைமை வேறு. அது ஓரளவு, முன்பு அல்ஜீரியாவில் நடந்த உள்நாட்டுப் போருடன் ஒப்பிடத் தக்கது. அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில், இஸ்லாமிய மதவாத கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற போதிலும் அரசமைக்க முடியவில்லை. தேர்தல் இரத்து செய்யப் பட்டு, இராணுவம் அவர்களை தற்காப்புப் போர்  ஒன்றுக்குள் இழுத்து விட்டது. 

எகிப்திய இராணுவ அடக்குமுறைக்கு பின்னணியில் கிறிஸ்தவர்கள் இருப்பதாக, முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மட்டுமே கூறி வருகின்றது. அது எந்த ஆதாரமுமற்ற பொய்ப் பிரச்சாரம். எகிப்திய முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். அவர்கள் மத்தியில் ஏராளமான லிபரல்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல நாஸ்திகர்கள் கூட இருக்கின்றனர். எகிப்திய முஸ்லிம் சமூகத்தில், மதச் சார்பற்றவர்கள் இராணுவ அரசை ஆதரிக்கின்றனர். சுருக்கமாக, இதனை மதவாத பழமைவாதிகளுக்கும், மதச்சார்பற்ற தாராளவாதிகளுக்கும் இடையிலான போராட்டமாக பார்க்கலாம். இன்றைய எகிப்து, கொள்கை அடிப்படையில் இரண்டாகப் பிளந்துள்ளது. இந்தப் போராட்டம் இந்தியாவிலும் நடக்கிறது, இலங்கையிலும் நடக்கிறது. மதவாதிகள், இனவாதிகள், தேசியவாதிகள் மட்டுமே அத்தகைய சமூக முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றனர். 

எகிப்து நாட்டில் ஒரு உள்நாட்டுப் போர் நடந்தால், அது குடும்பங்களை, உறவினர்களை, நண்பர்களைக் கூட நிரந்தரமாகப் பிரித்து விடும். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில் கூட, ஒருவர் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளராகவும், இன்னொருவர் மதச்சார்பற்ற தாராளவாதியாகவும் இருப்பது சர்வ சாதாரணம். தற்போது அவர்கள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருக்கலாம். ஒருவரோடு ஒருவர் முகம் கொடுத்து பேசாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் உயிரச்சம் காரணமாக, சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கே பயந்து ஒளிந்து வாழ வேண்டியிருக்கும். எகிப்து ஒரு இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எகிப்தியர்கள் அதிலிருந்து தப்பி மீண்டு வந்தாலும், இனிமேல் கொள்கை முரண்பாடு கொண்ட இரண்டு சமூகங்களும் பிரிந்தே வாழப் போகின்றன. இன்று எகிப்தில் நடப்பது, நாளை இந்தியாவிலும் நடக்கலாம். எதற்கும் நரேந்திர மோடி பிரதமராகும் வரையில் காத்திருங்கள். 


எகிப்து பற்றிய முன்னைய பதிவுகள் :

எகிப்தின் எதிர்காலம் என்ன?

எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை!

எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!!