Showing posts with label இயேசு கிறிஸ்து. Show all posts
Showing posts with label இயேசு கிறிஸ்து. Show all posts

Thursday, January 09, 2020

மேசியா : "இயேசு கிறிஸ்து ஒரு ஈரானியர்!"


Messiah:
"இயேசு கிறிஸ்து ஒரு ஈரானியர்!" 
"இயேசு இன்று எம் மத்தியில் வாழ்ந்தால், அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்திருப்பார்!!"

நெட்பிலிக்ஸ் (Netflix) தளத்தில் புதியதொரு தொடர் ஒளிபரப்பாகிறது. மேசியா என்ற அந்தத் தொடர் முற்றிலும் மாறுபட்ட கதையமைப்பைக் கொண்டது. இயேசு கிறிஸ்து அல்லது அவர் போன்ற ஒரு மீட்பர் இன்று எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தால், உலகம் அவரை எப்படிப் பார்க்கும் என்ற கற்பனையை வைத்து இதைத் தயாரித்துள்ளனர். அதிலும் தற்காலத்தில் நடக்கும் உலக அரசியலை களமாகக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது.

சிரியாவில், டமாஸ்கஸ் நகரில் ISIS முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட பாலஸ்தீன அகதிகள் மத்தியில் ஒருவர் அன்பையும் சமாதானத்தையும் பற்றிப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார். அவர் சாதாரண மக்களைப் போன்று ஜீன்ஸ், டி சேர்ட் அணிந்திருக்கிறார். மக்கள் அவரது பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பாலைவன மணல் சூறாவளி வீசுகிறது. அதனால் ISIS படையினர் அழிக்கப் பட பாலஸ்தீன அகதிகள் தப்பிப் பிழைக்கிறார்கள்.

இந்த அற்புதத்தை நேரில் கண்ட மக்கள், பிரசங்கம் செய்தவரிடம் தெய்வ சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் அவரை "அல் மசீ" என்று அழைக்கிறார்கள். அரபி மொழியில் அல் மசீ என்பது ஆங்கிலத்தில் மேசியா எனப்படும். (தமிழில் மீட்பர் என்று சொன்னாலும் அது மிகச் சரியான அர்த்தம் அல்ல. இறைவனின் தூதுவர் என்ற அர்த்தமும் உள்ளது.)

அல் மசீ, பாலஸ்தீன அகதிகளை இஸ்ரேலை நோக்கி வழிநடத்திச் செல்கிறார். எல்லையை அடைந்ததும், இஸ்ரேலிய படைகள் தடுத்து நிறுத்துகின்றன. தாயகம் திரும்பும் பாலஸ்தீன அகதிகளை உள்ளே விட மறுக்கின்றனர். எல்லை தாண்டிச் சென்ற அல் மசீ கைது செய்யப் படுகிறார். அகதிகள் எல்லையில் தற்காலிக முகாம் அமைத்து பசியிலும், பிணியிலும் வாடுகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலிய தொண்டு நிறுவனங்கள் உதவுகின்றன.

இஸ்ரேலிய ஷின் பெட் புலனாய்வுத் துறையினர் அல் மசீயை சிறையில் அடைத்து வைத்து விசாரணை செய்கின்றனர். அவர் தனது சொந்தப் பெயரை சொல்ல மறுக்கிறார். அரபி, ஹீபுரு, ஆங்கிலம் பேசுகிறார். அவர் ஒரு யூதரா, இஸ்லாமியரா, அல்லது கிறிஸ்தவரா? எதுவுமே புரியவில்லை. எதற்குமே பதில் கூற மறுக்கிறார்.

இதே நேரம் ஒரு சி.ஐ.ஏ. பெண் அதிகாரி அல் மசீ என்ற இந்த ஆசாமி உண்மையில் யார் என்று ஆராய்வதற்காக அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு வருகிறார். இஸ்ரேலின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுவதாக புலனாய்வுத்துறை அதிகாரி குற்றம் சாட்டுகிறார். இதற்கிடையே திடீரென ஒரு நாள் மேசியா மறைந்து விடுகிறார். இதனால் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியின் வேலை பறிபோகிறது.

சில தினங்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் அடித்த சூறாவளியில் மேசியா தோன்றுகிறார். அங்குள்ள மக்களும் மேசியாவுக்கு தெய்வ சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். அவரை ஒரு நவீன கால இயேசு கிறிஸ்து போன்று பார்க்கிறார்கள். இதனால், ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க அரசு அவரை சட்டவிரோத குடியேறி என்று குற்றம் சுமத்தி பிற அகதிகளுடன் சிறையில் அடைத்து வைக்கிறது. அனால், அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி அகதித் தஞ்சம் கொடுத்து விடுவிக்கிறார்.

இதற்கிடையே சந்தேகக் கண்ணுடன் விசாரித்துக் கொண்டிருக்கும் சி.ஐ.ஏ. பெண் அதிகாரி, அவர் ஓர் ஈரானியர் என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார். அவரது உண்மையான பெயர், கல்வி கற்ற இடங்கள், மருத்துவக் குறிப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு, இந்த மர்ம ஆசாமி மேசியா போன்று நடித்து ஊரை ஏமாற்றும் பேர்வழி என நிறுவ முயற்சிக்கின்றனர்.

மேசியா தன்னைப் பின்தொடர்பவர்களை தலைநகர் வாஷிங்டன் நோக்கி அழைத்துச் செல்கிறார். அங்கே இயேசு கிறிஸ்து மாதிரி தண்ணீர் மேலே நடந்து அற்புதம் செய்து காட்டுகிறார். இதனால் மேசியாவின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. ஆனால் சி.ஐ.ஏ. மேற்கொண்டு விசாரிக்கிறது. "இவர் என்ன நோக்கத்திற்காக அமெரிக்கா வந்திருக்கிறார்? அமெரிக்காவில் ஒரு புரட்சி நடத்த திட்டமிடுகிறாரா? இவர் ரஷ்யாவின் ஆளா? இவர் ஒரு பயங்கரவாதியா? இவர் ஒரு மனநோயாளியா?" என்று பல கேள்விகளை எழுகின்றன.

ஒரு தடவை அமெரிக்க ஜனாதிபதியே மேசியாவை நேரில் கண்டு பேசுகிறார். அப்போது மேசியாவின் நோக்கம் என்ன என அறிய விரும்புகிறார். 
- "உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொண்டால் சமாதானம் உண்டாகும்." என மேசியா பதில் கூறுகின்றார். 
- "அமெரிக்கப் படைகள் இருப்பதால் தான் அந்தப் பிராந்தியத்தில் சமாதானம் நிலவுகிறது" என்கிறார் ஜனாதிபதி. 
- "ஐரோப்பியர்கள் தான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் எல்லைகளை பிரித்து விட்டார்கள். அந்த நாடுகளில் சர்வாதிகாரிகளை பதவியில் அமர்த்தி மக்களை ஒடுக்கினார்கள்..." மேசியாவின் பதிலைக் கேட்டு ஜனாதிபதி வாயடைத்துப் போகிறார். 
- "அமெரிக்க இராணுவத்தை திருப்பி அழைக்க மறுத்தால் என்ன நடக்கும்?" என்று கேட்கிறார். 
- "கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இயற்கைப் பேரழிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்..." 
"பயமுறுத்தலா?" 
"இல்லை, எச்சரிக்கை!" 
அடுத்து வந்த சில தினங்களில் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

அமெரிக்க அரசு தொடர்ந்தும் மேசியா ஒரு மோசடிப் பேர்வழி என்று நிரூபிக்க முயற்சிக்கிறது. அவரது பெயரைக் கெடுப்பதற்காக மனநோயாளி என்ற மருத்துவ சான்றிதழ் கொண்ட இரகசிய ஆவணங்களை ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள். அரசாங்கமே அவரைக் கடத்திச் சென்று இஸ்ரேலிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது.

இந்த தொலைக்காட்சித் தொடர் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்று வாழ்ந்த இயேசு கிறிஸ்துவும் எம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதராகத் தான் இருந்திருப்பார். அதே இயேசு இன்று எம் மத்தியில் வாழ்ந்தாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருப்போம். அன்றைய இயேசு ரோம ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மாதிரி, இன்றைய இயேசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்திருப்பார்.

இந்தத் தொடரில் மேசியா பேசும் வசனங்கள் யாவும் மிக எளிமையான தத்துவார்த்த அடிப்படை கொண்டவை. ஆன்மீகத்தின் பெயரால் மூடி மறைக்கப்படும் உண்மைகளையும் இலகுவாக புரிய வைக்கிறது.

Sunday, March 31, 2013

ஏசு கிறிஸ்துவுக்கு சம்பந்தமில்லாத ஈஸ்டர் பண்டிகை!


இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப் பட்டு மரணிக்கவில்லை! சிலுவையில் அறைந்து சில மணிநேரங்களின் பின்னர், குற்றுயிராகக் கிடந்த இயேசு இறக்கி விடப் பட்டு, உயிர் பிழைத்து எழுந்தார். அதன் பிறகு நீண்ட காலம் உயிரோடு வாழ்ந்தார். இன்றைக்கும் பலர், இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் படவில்லை என்று நம்புகின்றனர். அதற்கு, அவர்கள் நிறைய காரணங்களை கூறுகின்றனர். 

இயேசுவை ஆணியால் அறைந்த காரணத்தினால், இரத்தப் பெருக்கு ஏற்பட்டு, மூச்சடக்கி மரணமடைந்திருக்கலாம் என்று தான் பொதுவாக நம்பப் பட்டது. இன்று, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள சில கிறிஸ்தவ பக்தர்கள், ஒவ்வொரு வருடமும் பெரிய வெள்ளி அன்று, தம்மை சிலுவையில் அறைந்து கொள்கின்றனர். சில மணி நேரங்களின் பின்னர், ஆணிகள் அகற்றப்பட்டு, சிலுவையில் இருந்து இறக்கி விடப் படுகின்றனர். இன்று வரையில் யாரும் சிலுவையில் சாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அதாவது, சிலுவையில் ஆணியால் அறையப் பட்டாலும், சில மணிநேரங்களில் மரணம் சம்பவிக்க வாய்ப்பில்லை. அதற்கு நாள் கணக்காகலாம். மேலும், இந்தியாவில் சில யோகிகள், இறந்தது போல மூச்சடக்கி வைத்திருக்கும் யோகா பயிற்சியை செய்து காட்டியுள்ளனர். 

இயேசு முப்பது வயதில் பிரசங்கம் செய்யத் தொடங்குவதற்கு முந்திய காலத்தை பற்றி, விவிலிய நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், இன்றுள்ள விவிலிய நூலில் சேர்த்துக் கொள்ளப் படாத சில நூல்கள் உள்ளன. "ஞானிகள்" (கிரேக்க மொழியில் ஞோஸ்தி, http://en.wikipedia.org/wiki/Gnosticism) என்ற கிறிஸ்தவ பிரிவினர், அந்த காலகட்டத்தில் இயேசு இந்தியா சென்றிருந்தார் என்றும், அங்கு இறையியல், யோகா போன்றவற்றை பல முனிவர்களிடம் இருந்து கற்றறிந்து கொண்டதாக நம்புகின்றனர்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவானவர், மரணிப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர், " என் இறைவா, என் இறைவா, என்னை ஏன் கைவிட்டீர்?" என்று தனது இயலாமையை ஆண்டவரிடம் முறையிட்டதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. இன்றைக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள், இயேசுவின் கூற்றை மேற்கோள் காட்டி பேசுவது வழக்கம். அந்தப் பிரபலமான வாக்கியம், உண்மையில் (யூதர்களின் பைபிளான) பழைய ஏற்பாட்டில் எழுதப் பட்டுள்ளது. தாவீது மன்னன் எழுதிய, திருப்பாடல்கள் என்ற நூலில் உள்ளது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு, திருப்பாடல்களில் ஒன்றை பாடியிருக்க வேண்டும்.
" என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?"   (திருப்பாடல் 22-1, திருவிவிலியம்) 

பழைய ஏற்பாட்டில், திருப்பாடல்களில், தாவீது மன்னன் எழுதிய பாடல் வரிகள், இயேசு சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை எமக்கு நினைவு படுத்துகின்றன!  அப்படி  என்ன எழுதியிருக்கிறது என்பதை, நீங்களாகவே வாசித்து அறிந்து கொள்ளுங்கள்:

 " நானோ ஒரு புழு, மனிதனில்லை; 
மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; 
மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; 
உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 
" ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும், தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்","  என்கின்றனர். 
என்னைக் கருப்பையினின்று வெளிக் கொணர்ந்தவர் நீரே; 
என் தாயிடம் பால் குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே! 
கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே! 
என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; 
ஏனெனில், ஆபத்து நெருங்கி விட்டது; 
மேலும், உதவி செய்வார் யாருமில்லை. 
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன; 
பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. 
அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; 
இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள். 
நான் கொட்டப்பட்ட நீர் போல் ஆனேன்; 
என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின; 
என் இதயம் மெழுகு போல் ஆயிற்று; 
என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. 
என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; 
என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; 
என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். 
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; 
நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்; 
என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். 
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; 
அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள். 
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; 
என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்; 
என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 
வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; 
இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்;
இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; 
காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்."   
(திருப்பாடல் 22:6-21, திருவிவிலியம்)


இயேசு இறந்த பின்னர், அவரை சிலுவையில் இருந்து இறக்கி கீழே வைத்ததாக, பைபிளில் எழுதப் பட்டுள்ளது. ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமான பாலஸ்தீனத்தில், யூதர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்தனர்.  வெள்ளி மாலை, யூதர்களின் "சபாத்" (ஹீபுரு மொழியில்: சனிக்கிழமை) பண்டிகை நாள் ஆரம்பமாகின்றது. கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை போன்று, முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை போன்று, யூதர்களுக்கு சனிக்கிழமை (சபாத்) புனித நாளாகும். 

அன்றைய காலங்களில், பாலஸ்தீனத்தை ஆண்ட ரோமர்கள், யூத மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்ட கைதிகள் அனைவரையும் சபாத் வருவதற்கு முன்னர், சிலுவையில் இருந்து இறக்கி விடுவார்கள். ஆகவே, ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகல் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, எப்படியும் அன்று மாலைக்குள் அவிழ்த்து விட்டிருப்பார்கள். 

அப்படிப் பார்த்தால், அன்று இயேசு சில மணி நேரங்களே சிலுவையில் தொங்கியிருப்பார். அதற்குள், ஒரு சராசரி மனிதனுக்கு மரணம் சம்பவிக்க வாய்ப்பில்லை. அன்றைய காலத்தில் இருந்த ரோமர்களின் தண்டனை முறைகளை வைத்துப் பார்க்கும் பொழுது, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டிருக்க வாய்ப்பில்லை என்று, பல அறிஞர்களும் ஆய்வு செய்து கூறியுள்ளனர். (Jesus did not die on cross, says scholar, http://www.telegraph.co.uk/news/religion/7849852/Jesus-did-not-die-on-cross-says-scholar.html)  

ஆபிரஹாம் முதல் முகமது வரையிலான இறைதூதர்கள் வரிசையில், இயேசுவையும் ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்களும், இயேசு சிலுவையில் கொல்லப் படவில்லை என்றே நம்புகின்றனர். திருக்குரானிலும் அதனை உறுதிப் படுத்தும் வாசகங்கள் உள்ளன.


"மரியாளின் புதல்வனும், இறைத்தூதருமான ஈசா (கிறிஸ்து)வை, அவர்கள் கொன்றதாக சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அவரைக் கொல்லவில்லை, அவர்கள் சிலுவையில் அவரது மரணத்தை உண்டாக்கவில்லை..."  (திருக் குரான் 4:157)


குரானிலும், அரபு மொழியிலும் "ஈசா" என்ற சொல்லால், இயேசு கிறிஸ்துவை அழைக்கின்றனர். (ஈசா என்பது, ஈசன் என்ற சம்ஸ்கிருத/தமிழ்ச் சொல்லை ஒத்திருப்பதை கவனிக்கவும்.) பழைய ஹீபுரு அல்லது அராமி மொழியில், இயேசுவை யாசு (Yazu) என்று அழைப்பார்கள். (யேசுஸ் என்ற கிரேக்க சொல்லில் இருந்து தான், ஆங்கிலச் சொல்லான "ஜீசஸ்" வந்தது.) இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், காஷ்மீரில், ஸ்ரீநகர் நகரத்திற்கு அருகில், இயேசுவின் சமாதி உள்ளதாக, அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். 

ஸ்ரீநகரில் உள்ள புனிதரின் சமாதியில் Yuz Asaf என்று எழுதப் பட்டுள்ளது. "யூசப், யாசு, இயேசு, ஈசா", எல்லாம் ஒரே மாதிரியான பெயர்களாக தோன்றவில்லையா? சிலுவையில் இருந்து உயிர் தப்பிய இயேசு, காஷ்மீர் வந்து சேர்ந்தார். அங்கு தனது மதப் பிரசங்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இறுதிக் காலத்தையும் காஷ்மீரில் கழித்துள்ளார். இவ்வாறு, காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினர் இன்னமும் நம்புகின்றனர்.  

காஷ்மீர் முஸ்லிம்களில்,  "அஹ்மதியா" என்ற ஒரு பிரிவினர், இயேசு கிறிஸ்துவையும் முக்கியமான இறைதூதராக நம்புவதால், பிற முஸ்லிம்களிடம் இருந்து அந்நியப் பட்டுள்ளனர். காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகள், இன்னமும் அங்கேயுள்ள "இயேசுவின் சமாதியை" தரிசிக்கலாம். (Is the tomb of Jesus at Khanyar Rozabal in Kashmir?, http://www.youtube.com/watch?v=7aauXxuLHnQ


இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறைந்ததால் கொல்லப் படவில்லை. பெரிய வெள்ளி என்பது, இயேசு சிலுவையில் இறந்த நாளைக் குறிக்கவில்லை. ஈஸ்டர் என்பது, இயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும்  உயிர்த்த ஞாயிறும் அல்ல. அப்படியானால், நாம் எதற்காக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றோம்? 


"ஈஸ்டர்" என்பது, கிறிஸ்துவுக்கு முந்திய ஐரோப்பியரின் மத நம்பிக்கையில் வரும் தேவதை ஒன்றின் பெயர். (Ēostre, http://en.wikipedia.org/wiki/%C4%92ostre) அந்த பெண் தெய்வத்தின் பண்டிகைக்  காலம், வசந்த காலத்தின் வருகையை கொண்டாடுவதற்காக ஏற்படுத்தப் பட்டது. அன்று இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மக்கள், புல்வெளியில் முயல் துள்ளி விளையாடுவதைக் கண்டால், வசந்த காலம் வந்து விட்டது என்று புரிந்து கொண்டார்கள். அதனால் இன்றைக்கும் ஐரோப்பிய நாடுகளில், ஈஸ்டர் பண்டிகை அன்று, முயல் வடிவிலான சாக்லேட், பிஸ்கட் என்பன செய்து உண்கிறார்கள். 


ஈஸ்டர் பண்டிகையின் இன்னொரு சடங்காக முட்டை வைக்கப் படுகின்றது. வாழ்க்கையின் முடிவில்லாத சுழற்சியை, ஒரு தத்துவமாக உணர்த்தும் முட்டையும் கிறிஸ்துவுக்கு முந்திய, ஐரோப்பியரின் வேற்று மத நம்பிக்கை தான். இன்றைய மதச்சார்பற்ற ஐரோப்பிய நாடுகளில், ஈஸ்டர் ஒரு கிறிஸ்தவ மதப் பண்டிகையாக கருதப் படுவதில்லை. 

ஈஸ்டர் என்றால், முயல், முட்டை வடிவில் செய்யப்பட்ட தின்பண்டங்கள் தான் பலருக்கு நினைவுக்கு வரும். முன்னாள் ஐரோப்பிய காலனிகளில் வாழும் கிறிஸ்தவ மக்கள் மட்டுமே, பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) என்பன கிறிஸ்தவ மதப் பண்டிகைகள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.



கிறிஸ்தவ பண்டிகைகள் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!
2.கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்

கிறிஸ்தவ மதம் பற்றிய வேறு பதிவுகள்:
1.அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்
2.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
3.கிறிஸ்தவம்: .அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

Wednesday, January 16, 2013

இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்

"ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." (திரு விவிலியம், லூக்கா 6:20)

இங்கே குறிப்பிடப்படும் "ஆண்டவரின் இராஜ்ஜியம்" என்பது மனிதர்களால் பூமியில் உருவாக்கப்படும் புதிய அரசைக் குறித்தது. ஆனால், பிற்கால கிறிஸ்தவர்கள் அதனை "பரலோகத்தில் உள்ள ஆண்டவரின் ராஜ்ஜியம்" என்று வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்தார்கள்.

உலகிலேயே மிகவும் பழமையான கிறிஸ்தவர்கள் யார்? அநேகமானோர் கத்தோலிக்கர்ள் என்று பதில் சொல்வார்கள். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் என்றால், கிரேக்க ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களை கைகாட்டுவார்கள். ஆனால், அவை இரண்டும் தவறானவை. வரலாற்றில் முதன் முறையாக இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொண்டு, அதன் படி வாழ்ந்தவர்கள் "எபியோனி" (Ebionites) என்றழைக்கப் பட்ட யூதர்கள். ஹீபுரு மொழியில் எபியோனி என்றால் ஏழைகள் என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து, தன்னை பின்பற்றுபவர்கள் ஏழ்மையான வாழ்க்கை வாழ வேண்டுமென போதித்ததாக, எபியோனி கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். உண்மையில், அது வரையில் கீழானவர்களாக இழிவு படுத்தப்பட்ட ஏழைகளை, இயேசுவின் போதனைகள் மகிமைப் படுத்தின. ஏழைகள் தமது நிலைமைக்காக வெட்கப் படத் தேவையில்லை. அவர்களே ஆண்டவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று இயேசு போதித்தார். "ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." என்று அவர்களை உற்சாகப் படுத்தினார்.

எபியோனி கிறிஸ்தவர்களின், சித்தாந்தத்தை புரிந்து கொள்ள முடியாத பிற யூதர்கள், அவர்களை "ஏழைகள்" என்று நினைத்து பரிதாபப் பட்டார்கள். அதனால், அந்தப் பெயரே சரித்திரத்தில் நிலைத்து விட்டது. அந்தக் காலத்தில், "கிறிஸ்தவர்" என்ற சொல் உருவாகி இருக்கவில்லை. அதனால், கிறிஸ்தவர்கள் எல்லோரும் "எபியோனிகள்" என்று அழைக்கப் பட்டனர். உண்மையில் ஆதி கிறிஸ்தவர்கள், ஒரு பொதுவுடைமை சமுதாயமாக வாழ்ந்தனர். பொருளாதார தேவைகளுக்காக பிறரிடம் தங்கியிராமல், தமக்கு தேவையான உணவை தாமே உற்பத்தி செய்து கொண்டனர். தம்மிடம் இருந்த சொத்துக்களை துறந்து, ஏழைகள் போன்று வாழ்ந்தார்கள். அது ஒரு கம்யூனிச சமுதாயமாக இருந்தது. சோவியத் யூனியன், செஞ் சீனாவில் உருவான நவீன கம்யூன் அமைப்பை பெருமளவு ஒத்திருந்தது.

லெனின் அல்லது ஸ்டாலின் காலத்தில், கூட்டுத்துவ (collective) சமூக அமைப்பின் கட்டுமானம் பற்றி அறிந்திருப்பீர்கள். தனித் தனியாக விவசாயம் செய்து வந்த மக்கள், தம்மிடமிருந்த மாடுகளையும், விவசாய உபகரணங்களையும் கூட்டுத்துவ பண்ணைகளிடம் ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றும் படித்திருப்பீர்கள். உலகின் முதலாவது கிறிஸ்தவர்களும், அத்தகைய பொருளாதார அமைப்பை உருவாக்கினார்கள். ஒரு கிறிஸ்தவர் தன்னிடம் உள்ள சொத்துக்களை, கம்யூன் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவை பின்னர், கம்யூன் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான சொத்துக்களாக மாற்றப்படும். வயல்களும், விவசாய உபகரணங்களும் கிறிஸ்தவ கம்யூனுக்கு பொதுவானவை. கம்யூன் உறுப்பினர்கள் வயலில் கூடி வேலை செய்து, விளைச்சலை சமமாக பகிர்ந்து கொண்டார்கள். ஆதி கிறிஸ்தவர்களின் கம்யூனிச சமுதாயம் பற்றி விபரமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு போட்டியாக உருவான, அப்போஸ்தலர் புனித பவுலை பின்பற்றிய கிறிஸ்தவர்கள், எபியோனி கிறிஸ்தவர்களை வேட்டையாடி கொன்றதுடன், அவர்களது நூல்களையும் ஒன்று விடாமல் எரித்து விட்டனர்.

எபியோனி கிறிஸ்தவர்கள் உண்மையில் யூதர்கள் ஆவர். இன்றைக்கும் யூதர்களில் ஒரு சிறு பிரிவினர், இயேசு கிறிஸ்துவை 'மேசியா'வாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் தம்மை பண்டைய எபியோனிகளின் வம்சாவளியினர் என அழைத்துக் கொள்கின்றனர். அதனை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இயேசு கிறிஸ்துவை, யூதர்கள் ஹீபுரு மொழியில் "யேஷுவா" என்று அழைப்பார்கள். இயேசு, அவரது தந்தை ஜோசெப், தாய் மரியாள் எல்லோரும் யூதர்கள் தான். இயேசுவும் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு யூதராகவே வாழ்ந்தார். அதனை எபியோனிகளும் வலியுறுத்தி வந்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், யூத பண்டிகை தினங்களை கொண்டாடினார்கள். இயேசுவை பின்பற்றி, தாமும் சுன்னத்து செய்து கொண்டார்கள். வேறு மதங்களில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்களையும் அவ்வாறு வாழ நிர்ப்பந்தித்தார்கள்.

அனேகமாக, எபியோனி கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பெருமளவில் பரவாமைக்கு, அவர்களின் யூத கலாச்சாரம் ஒரு காரணமாக இருக்கலாம். யூத மதமானது, இந்து மதம் போன்று பிறப்பினால் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால், கிறிஸ்தவம் அப்படி அல்ல. எந்த மதத்தை சேர்ந்தவரும், எந்த இனத்தை சேர்ந்தவரும், எந்த மொழியை பேசுபவரும் கிறிஸ்தவராக மதம் மாற முடியும். எபியோனி கிறிஸ்தவர்கள் அந்தக் கொள்கை கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களால் அப்போஸ்தலர் பவுலின் குழுவினருடன் போட்டி போட முடியவில்லை.

அந்தக் காலத்தில், இன்றைக்கு நாங்கள் வைத்திருக்கும் விவிலிய நூல் தோன்றி இருக்கவில்லை. மார்க்கு, மாத்தேயுஸ், லூக்கா, பவுல் போன்ற பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்கள் தனித் தனியாக இருந்தன. எபியோனி கிறிஸ்தவர்கள், மாத்தேயுஸ், மார்க்கு ஆகியோரின் சுவிசேஷங்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சித்தாந்த எதிரியான பவுலின் சுவிசேஷத்தை நிராகரித்தார்கள். மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், "இயேசு கடவுளின் குமாரராக மரியாள் என்ற கன்னித் தாய்க்கு பிறந்தார்..." என்பதை எபியோனி கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு எல்லா மனிதர்களையும் போல, சாதாரண தாய், தந்தைக்கு மகனாக பிறந்தார் என்று நம்பினார்கள். அவர் வளர்ந்த பின்னர், ஆண்டவரால் தத்தெடுக்கப் பட்டார் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். "இயேசு மரியாள் என்ற கன்னித் தாய்க்கு மகனாக பிறந்த கதை", இகாரியுஸ் ஹீபுரு மொழியில் எழுதிய சுவிசேஷத்தை, கிரேக்க மொழியில் தவறாக மொழிபெயர்த்தமையினால் ஏற்பட்ட தவறு என்று கூறுகின்றனர்.

அப்போஸ்தலர் பவுல் இன்றைய துருக்கி நாட்டில் பிறந்தவர். கிரேக்க மொழியை தாய் மொழியாக கொண்டவர். அவர் கிறிஸ்துவின் போதனைகளை கிரேக்கத்திற்கு எடுத்துச் சென்றார். கிரேக்க மக்களுக்கு அதனை போதித்தார். கிறிஸ்தவராக மதம் மாறுவோர், சுன்னத்து செய்வது போன்ற யூத கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று போதித்தார். அதனால், அவர் பின்னால் பெருமளவு கிரேக்க மக்கள் சேர்ந்தனர். எபியோனி கிறிஸ்தவர்களின் கொள்கைக்கு மாறாக, பணக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்தார். இதனால், பவுலின் குழுவினருக்கு, கொரிந்தியாவில் வாழ்ந்த பெரிய வணிகர் போன்ற சில வர்த்தகர்களின் பணக் கொடை தாராளமாக கிடைத்தது.

புனித பவுல் தானாகவே பல சுவிஷேங்களை எழுதினார். அவற்றில் எபியோனிகளை சிறுமைப் படுத்தும் கருத்துக்களும், கூடவே சில பிற்போக்கான கருத்துக்களும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், உயர்வு, தாழ்வான சமுதாய அமைப்பையும், பெண் அடக்குமுறையையும் ஏற்றுக் கொள்வது தெளிவாகும். "ஆண்டவர் கிறிஸ்துவின் தலைவராகவும், கிறிஸ்து ஆண்களின் தலைவராகவும், கணவன் மனைவின் தலைவனாகவும் இருக்கின்றான்..." என்று அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இஸ்ரேலில் வாழ்ந்த எபியோனி கிறிஸ்தவர்கள், இயேசுவின் பெயரால் வர்க்க பாகுபாடுகள் அற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கினார்கள். கிரேக்க நாட்டில் வாழ்ந்த, பவுலின் செயற்பாடு அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது. கிரேக்க சமுதாயத்தில் நிலவிய வர்க்க ஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அடிமைகளின் விடுதலைக்காகவும் எதுவும் செய்யவில்லை.

உண்மையில் பிற்கால கிறிஸ்தவ சமூக-பொருளாதார கட்டமைப்பு பவுலின் காலத்திலேயே உருவாகி விட்டதெனலாம். பிஷப் என்ற பெயரைக் கொண்ட கிறிஸ்தவ மதகுருக்கள் அதிகார பலம் பெறத் தொங்கியதும் அந்தக் காலத்தில் தான். அந்தியோக்கியா நகர பிஷப் இக்னாத்தியுஸ் எழுதிய கடிதம் ஒன்றில், "கிறிஸ்தவர்களாக மாறிய அடிமைகள் எந்தவித சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது, கிறிஸ்துவின் மகிமைக்குள் வாழ்வதை பெருமையாக நினைக்க வேண்டும்...." என்றெல்லாம் எழுதி இருக்கிறார். இயேசுவின் உதாரணத்தை பின்பற்றி, கிறிஸ்தவர்கள் எல்லோரும் சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என பவுல் எதிர்பார்த்தார். ஆனால், வர்க்க வேறுபாடுகள் ஆழமாக வேரூன்றி இருந்த கிரேக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் அது எடுபடவில்லை.

நமது நாடுகளில், உயர் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினருடன் சமமாக அமர்ந்து உணவருந்த மறுப்பதைப் போல, பணக்கார கிறிஸ்தவர்கள் தனியாக உணவருந்த சென்றார்கள். அப்போஸ்தலர் பவுலும், அவரது குழுவினரும், வழக்கத்தில் இருந்த சமூகக் கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "உலகம் விரைவில் அழிந்து விடும்...கிறிஸ்துவின் வருகையினால் புதிய உலகம் தோன்றும்." நமது காலத்திலும், பல கிறிஸ்தவ மத அடிப்படைவாத சபைகள், "உலகம் அழியப் போகின்றது" என்று பயமுறுத்திக் கொண்டு திரிவது எமக்குத் தெரியும். அடிப்படையில் இது ஒரு சமூகப் புரட்சிக்கு எதிரான பிரச்சார நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. அதனால் தான், இன்றைய முதலாளித்துவ ஊடகங்களும் உலகம் அழியப் போகின்றது என்ற கட்டுக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பி வருகின்றன.

கம்யூனிசம் என்ற சொல்லைக் கேட்டவுடன், இன்று பலர் ரஷ்யாவையும், சீனாவையும் நினைக்கும் அளவுக்கு, முதலாளித்துவம் எமது மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளது. மார்க்ஸ், லெனின் அல்லது மாவோ நடைமுறைப் படுத்த எண்ணிய கம்யூனிசம், நவீன காலத்திற்கேற்ப இயங்கியல்-பொருள்முதல்வாத கோட்பாட்டின் வழியே உருவாக்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சியில், சோஷலிச சமுதாயமும், அதன் வீழ்ச்சியில் கம்யூனிச சமுதாயமும் தோன்றும் என்பது அவர்களது தத்துவார்த்த முடிவுகள். கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே, 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவஞானி François-Noël Babeuf கம்யூனிச கொள்கையை முன்மொழிந்தார். மேலும் அன்னார்கிச அமைப்புகளின் தத்துவ ஆசிரியர்களான பகுனின், புரூடொன் போன்றோரும் கம்யூனிச சமுதாயத்தை மனித குலத்தின் விடிவுக்காக தெரிவு செய்தார்கள்.

கம்யூனிச சித்தாந்தம் பற்றிய அறிவு, திடீரென வானத்தில் இருந்து விழவில்லை. பண்டைய கால சமுதாய அமைப்புகளை ஆராய்ந்து தான் அத்தகைய முடிவுக்கு வந்தனர். அந்த அறிஞர்கள் திரட்டிய தகவல்களில், ஆதி கால கிறிஸ்தவர்களான எபியோனிகள் பற்றிய ஆய்வும் அடங்குகின்றது. இந்த தகவல்கள் எமக்கு புதுசாக இருப்பதற்கு காரணம், அப்போஸ்தலர் பவுல் தோற்றுவித்த வர்க்க அடிப்படையிலான  கிறிஸ்தவ சமுதாயம். வெற்றி பெற்றவர்கள்  வரலாற்றை மாற்றி எழுதினார்கள். ரோம சாம்ராஜ்யத்தால் அடக்கியொடுக்கப் பட்ட, இஸ்ரேல் என்ற மாகாணத்தை சேர்ந்த யூத சிறுபான்மை இனத்துடனான பகை, புதிய மதத்தில் எதிரொலித்தது. கிரேக்க கிறிஸ்தவர்கள், யூதர்களுடனான தொடர்பை முற்றாக அறுத்தெறிய விரும்பினார்கள். அவர்கள் தமது இரட்சகரை யேஷுவா (இயேசு) என்ற யூதப் பெயரில் அழைப்பதை தவிர்ப்பதற்காக, "கிறிஸ்து" என்ற புதிய பெயரை அடிக்கடி உச்சரித்தார்கள். கிறிஸ்து என்பது, மேசியா என்ற யூதச் சொல்லின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். மேலும் அந்தச் சொல் ch (க்) என்ற லத்தீன் உச்சரிப்பில் எழுதப் பட்டது. ரோம சாம்ராஜ்யம், தன்னால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரின் மதத்தை தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. "வரலாறு நெடுகிலும் இருந்த அனைத்து சமுதாயங்களிலும், வர்க்கப் போராட்டம் நடந்துள்ளது," என்ற கார்ல் மார்க்சின் கூற்றை, கிறிஸ்தவ மதத்தின் வரலாறும் மெய்ப்பிக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு:
Ebionites
EBIONITES (from = "the poor")
CATHOLIC ENCYCLOPEDIA

******************

கிறிஸ்தவ மதம் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
2. மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து
3.அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்
4.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!

Friday, November 12, 2010

மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து


கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முந்திய "மாண்டிய மதம்" இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது. மாண்டிய மத போதகர்களில் ஒருவரான யோவான் (Yahya ibn Zakariyya அல்லது John the Baptist) இடமே, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. 

மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய ஈராக்கை (முன்னை நாள் பாபிலோனியா) தாயகமாக கொண்டவர்கள். இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியாக கருதப்படும் அரமிய மொழியை இன்றும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். இன்றும் மாண்டிய மத வழிபாடுகள் யாவும் அந்த மொழியில் இடம்பெறுகின்றன.

அரமிய கிளை மொழியான, "மாண்டா" என்ற மொழியில் இருந்தே மாண்டியர்கள் என்ற பெயர் வந்தது. "அறிவு" என்று அர்த்தம் கொண்ட மாண்டா மொழி, அரமிய மொழியை ஒத்தது. இன்று நடைமுறையில் உள்ள, மத்திய கிழக்கு பிராந்திய மொழிகளான ஹீபுரு, அரபு, ஆகியனவும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இதனால் மாண்டியர்கள் யூத, அல்லது கிறிஸ்தவ மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தவறாக கணிப்பிடப் படுகின்றனர். குறிப்பாக பண்டைய காலத்தில் நிலவிய "ஞோடிக்" (Gnostics) என்ற கிறிஸ்தவ பிரிவுடன் சேர்த்துப் பார்க்கப் படுகின்றனர். ஆயினும் மாண்டியிசம் ஒரு தனி மதம். கிரேக்கர்கள் பயன்படுத்திய ஞோடிக் என்ற சொல்லும், தமிழ் சொல்லான ஞானம், ஆங்கில சொல்லான know எல்லாம் ஒரே அடிப்படையை கொண்டவை.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான தீர்க்கதரிசிகள் பலரை மாண்டிய மதத்தவர்களும் கொண்டுள்ளனர். குறிப்பாக நோவாவின் நேரடி வழித்தோன்றல்களாக தம்மை கருதிக் கொள்கின்றனர். மாண்டிய மதகுருக்கள் தலைப்பாகை கட்டி, தாடி வளர்த்திருப்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கொண்ட பாபிலோனிய நாட்டில் இருந்த மதம் ஒன்றின் எச்சசொச்சம் அது என்று கருதப் படுகின்றது. 


பாபிலோனியர் காலத்தில் மதகுருக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிய வேண்டுமானால், இன்றைய மாண்டிய மதகுருவைப் பார்த்தால் போதும். அவர்களின் மதச் சடங்குகளும் பாபிலோனிய காலத்தில் இருந்து, அப்படியே மாறாமல் தொடர்கின்றன. திருக்குரானிலும் மாண்டிய மதம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இஸ்லாமியரின் புனித நூல் அவர்களை "சபியர்கள்" என்று குறிப்பிடுகின்றது. அதனால் இன்று அதற்கு "சபிய மதம்" என்று இன்னொரு பெயரும் உண்டு.

இயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்த ஜோன், மாண்டியர்களின் பிரதான ஆன்மீக ஆசான்களில் ஒருவர். இருப்பினும் அவர் அந்த மத நிறுவனர் அல்ல. மாண்டியர்களின் மத வழிபாட்டில் ஞானஸ்நானம் பெறுவது முக்கியமான சடங்கு. மாண்டிய மத குருக்கள், ஓடும் ஆற்று நீரில் நிற்க வைத்து ஞானஸ்நானம் கொடுப்பார்கள். இயேசுவும் ஜோர்டான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. அநேகமாக, மாண்டிய மதத்தவர்களை பின்பற்றியே ஞானஸ்நானம் எடுக்கும் சடங்கை கிறிஸ்தவர்களும் தமது மதத்தில் சேர்த்துக் கொண்டனர். 


இருப்பினும் மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுக்கும் நோக்கம் வேறு. அது ஒரு மனிதன் முக்தி பேறடைவதைப் போன்றது. அதாவது மாண்டிய சித்தாந்தப்படி பொருளாயுத உலகை துறந்து, மெய்யுலகை காண்பது. இந்த அடிப்படை தத்துவம் மாண்டிய மதத்தை, கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறுபடுத்துகின்றது. கிறிஸ்தவ மதமானது ஒரு மீட்பர் வரும் வரை காத்திருக்கச் சொல்கின்றது. இயேசு கிறிஸ்து ஒரு இரட்சகர் ஆவார். ஆனால் மாண்டிய மத மகான்களின் கடமை, மக்களுக்கு அறிவைப் புகட்டுவது.

Ginza Rba மாண்டிய மதத்தவர்களின் புனித நூல் ஆகும். இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில், மாண்டியரின் வரலாறு, செய்யுள்கள், நன்மையின் தோற்றம், தீமையின் தோற்றம், போன்ற விடயங்கள் உள்ளன. அந்த நூல் இன்று வரை மாண்டா-அரமிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஒரேயொரு மேற்கத்திய மொழிபெயர்ப்பு ஜெர்மன் மொழியில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. மாண்டிய மதம் உலகை இரண்டு பிரிவாக பிரிக்கின்றது. நன்மை - தீமை, பொருள் - ஆன்மா, ஒளி - இருள், போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான பிரிவுகளுக்கு இடையே சமரசம் ஏற்பட முடியாது என்று போதிக்கின்றது. 


அதே மாதிரியான அறிவியல் கோட்பாடுகள், "ஞோடிக் கிறிஸ்தவ" பிரிவினரிடையே காணப்பட்டது. ஆனால் மத அதிகாரத்திற்கான போரில் இன்றைய கிறிஸ்தவ மதம் வென்றதால், அந்தக் கோட்பாடு மறைந்து விட்டது. கிறிஸ்தவ மதம், மாண்டிய (அல்லது ஞோடிக்) கோட்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகின்றது. அது ஏழை - பணக்காரன், ஆண்டான் - அடிமை, போன்ற வர்க்க எதிரிகளும் சமரசமாக வாழ வேண்டும் எனப் போதிக்கின்றது. மேற்குலகில் பிற்காலத்தில் தோன்றிய மார்க்ஸியம் மட்டுமே அந்த வர்க்க சமரசத்தை எதிர்த்தது. 

மாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பிற மதத்தவர்களின் வன்முறைக்கு இலகுவாக ஆளாகி அழிந்து வருகின்றனர். இன்றைய துருக்கி, கிரேக்க பகுதிகளில் வாழ்ந்த ஞோடிக் பிரிவினரை கிறிஸ்தவர்கள் அழித்து விட்டார்கள். அண்மைக் காலம் வரையில், ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் மட்டுமே மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக முன்னாள் பாபிலோனிய நாடான, இன்றைய ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலம் வரையில் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர், நிலைமை மோசமடைந்தது. 

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், மாண்டிய மத உறுப்பினர்களை இலக்கு வைத்துக் கொன்றார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சாமானிய இஸ்லாமிய மக்களின் ஆதரவும் இருந்தது. அதற்கு காரணம், காலங்காலமாக இஸ்லாமியர்கள் மாண்டிய மதத்தினரை, மத நம்பிக்கையற்றவர்கள் எனக் கருதி வந்தனர். சாதாரண இஸ்லாமிய அயல் வீட்டுக்காரன் கூட, மாண்டிய மதத்தவர் மீது வெறுப்புக் காட்டுவது வழமை. உயிரச்சம் காரணமாக, மாண்டிய மதத்தவர்கள் பெருமளவில் ஈராக்கை விட்டு வெளியேறி விட்டனர். இன்று அவர்கள் மேற்குலக நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இன்று உலகில் அழிந்து வரும் புராதன மதங்களில் மாண்டிய மதமும் ஒன்று.

மேலதிக தகவல்களுக்கு:
Mandaeism
Ginza Rba


பின்னிணைப்பு: 

ஈரானில் வாழும் மாண்டிய மதத்தவர் பற்றி நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தில் பார்க்கக் கிடைத்த தகவல்கள்:

மாண்டிய மதத்தை பின்பற்றுவோர் இன்றைக்கும் உள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. ஈரானில், ஈராக் எல்லையோரம் உள்ள அரபு மொழி பேசும் பகுதியில், இன்றைக்கும் சில நூறு மாண்டியர்கள் வாழ்கிறார்கள்.

அவர்களுக்கென்று தனியான புனித நூல் உள்ளது. அவர்கள் அரபு போன்றதொரு மொழியை பேசுகின்றார்கள். மாண்டி - அரைமைக் என்று அதனை அழைக்கலாம். படித்தவர்கள் மட்டும் அரபு அல்லது பார்சி பேசுகின்றார்கள். ஆனால், மாண்டியர்கள் பேசும் மொழியை அரேபியர்கள் புரிந்து கொள்வது கடினம்.

ஈரானிய அரசு, மாண்டிய மதத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவர்கள் தமது மதச் சடங்குகளை பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக தமது மதத்தை பின்பற்றலாம். ஆனாலும், அரசு அங்கீகாரம் கிடைக்காத படியால், ஈரானில் அவர்களது எண்ணிக்கை குறைந்து வருகின்றது. பலர் அமெரிக்கா, ஐரோப்பா என்று புலம்பெயர்ந்து செல்கிறார்கள்.

ஈரானில் அரசுத் துறையில் வேலை செய்வதற்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும் தொழிற்துறையிலும் பாரபட்சம் காட்டப் படுகின்றது. மாண்டேயர்கள் எல்லா தொழில் முயற்சிகளிலும் ஈடுபட முடியாது. அவர்களை நகைக்கடைகள் வைத்திருப்பதற்கு மட்டும் அனுமதிக்கிறார்கள். இதனால் அந்தப் பிரதேசத்தில் தங்க நகைகள் விற்கும் கடைகள் எல்லாம் மாண்டியர்களுக்கு சொந்தமானவை. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான இணைப்பு:

Friday, December 05, 2008

கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்


டிசம்பர் 5 ம் திகதி நெதர்லாந்து மொழி பேசும் நாடுகளில் (நெதர்லாந்து, பெல்ஜியம்) "சின்டர் கிளாஸ்" (st. Klaas) என்ற தேசிய தினம் கொண்டாடப்படுகின்றது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் "சாந்தா கிளவுஸ்" என்று அறியப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா தான் இந்த சின்டர் கிளாஸ். 

இவரைப் பற்றிய சுவையான கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. புனித க்ளாஸ்(st.Klaas)துருக்கியை சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு.( சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் துருக்கி கிறிஸ்தவ நாடாக இருந்தது). துருக்கியில் இருந்து ஸ்பெயின் வரை கப்பலில் வந்த இந்த தாத்தா, பின்னர் வெண்புரவி ஒன்றில் ஏறி நெதர்லாந்து வந்தாராம். அவர் கூடவே ஆப்பிரிக்காவில் இருந்து சில கறுப்பின அடிமைகளையும் கூட்டி வந்தாராம். 

நெதர்லாந்து நாட்டில் சிறு பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பரிசுப் பொருட்களை, தனது கறுப்பின அடிமைகளிடம் கொடுத்து விடுவாராம். வீடுகளின் சமையலறை புகை போக்கி ஊடாக குதிக்கும் அடிமைகள், இந்த பரிசுப் பொருட்களை சிறு பிள்ளைகளின் காலுறைகளினுள் வைத்து விட்டு மறைந்து விடுவார்களாம். எல்லா வீடுகளிலும் பெற்றோர் இந்த பரிசுப் பொருட்களை தமது பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தாலும், சிறு பிள்ளைகள் இப்போதும் சின்டர் கிளாஸ் என்று ஒருவர் வாழ்வதாக நம்புகின்றனர்.

மதச் சார்பின்மை கொள்கையை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் நெதர்லாந்து நாட்டில், "சின்டர் கிளாஸ் தினம்" கிறிஸ்தவ நாளாக அல்லாமல், தேசிய தினம் போல கொண்டாடப்படுகின்றது. டிசம்பர் 5 ம் திகதி, இந்நாட்டில் விடுமுறை தினமாக இல்லாத போதிலும், சிறுவர்க்கான விசேட தினமாக, பாடசாலைகளில் கொண்டாடப்படுகின்றது. 


வயதான சின்டர் கிளாஸ் போலவும், கருப்பு அடிமைகள் போலவும் மாறுவேடம் பூண்ட வயதுவந்தோர் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி விட்டு செல்கின்றனர். சின்டர் கிளாஸ் தினத்தில் தொக்கி நிற்கும் மத வாத, நிறவாத அம்சங்களை ஏற்றுகொள்ளாத நெதர்லாந்து வெள்ளையின பெற்றோர் கூட, இந்த தினம் வர்த்தகமயப்படுத்தப் பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றனர். அண்மையில் கைத்தொலைபேசி நிறுவனங்கள் இலவச தொலைபேசிகளை வழங்கி கடும் கண்டனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

முதலாவதாக நெதர்லாந்து/பெல்ஜிய அரசாங்கங்கள் சொல்வது போல சின்டர் கிளாஸ் தினம் மதச் சார்பற்றதா? அப்படியானால் சின்டர் கிளாஸ் அணியும் தொப்பியில் சிலுவை அடையாளம் காணப்படுவதேன்? ஆங்கிலேயர்கள் எதற்காக தமிழில் "கிறிஸ்துமஸ் தாத்தா" என்று மொழிபெயர்த்தார்கள்? சின்டர் கிளாஸ் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என்று கர்ணபரம்பரைக்கதை சொல்கின்றதே? 


இரண்டாவதாக வருடந்தோறும் மாறுவேடம் பூணும் வெள்ளையின மக்கள், சின்டர் கிளாசும், அவரது சேவகர்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று நடித்துக் காட்டுகின்றனர். இங்கே தான் நிறவாதம் ஒளிந்திருக்கிறது. வெண்தாடியுடன் வரும் சின்டர் கிளாஸ், புத்திசாதுர்யம் மிக்க வயதான நபராக காட்சி தருகிறார். அதற்கு மாறாக அவரது சேவகர்களாக நடிக்கும் கறுப்பின அடிமைகள், முட்டாள்களாக குரங்குச் சேட்டைகள் செய்து குழந்தைகளை குஷிப் படுத்துபவர்களாக காட்சி தருகின்றனர்.

சின்டர் கிளாஸ் தினத்தின் வசீகரத்தால் கவரப்படும் வெள்ளையின குழந்தைகள் மனதில், கறுப்பின மக்களைப் பற்றிய தப்பபிப்பிராயம் பதிந்து விடுகின்றது. வெள்ளையினத்தவர்களை புத்திசாலிகளாகவும், கறுப்பினத்தவர்கள் விவேகமற்ற முட்டாள்களாகவும், மனிதக் குரங்குகளைப் போலவும் கற்பனை செய்கின்றனர். அந்தக் குழந்தைகள் தெருவில் கறுப்பின மக்களைப் பார்க்கும் போது, "கறுப்பு சேவகன்" அல்லது "மனிதக்குரங்கு" என்று அழைப்பதாக, பல வெள்ளையின நெதர்லாந்து பெற்றோர்கள் கூறுகின்றனர்.


இத்தகைய மறைமுகமான நிறவாத பிரச்சாரம் காரணமாக, சின்டர் கிளாஸ் தினத்தை தடை செய்ய வேண்டும் என்று நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் கறுப்பின மக்களும், இடதுசாரிகளும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.  ஆனால் பெரும்பான்மை வெள்ளையினத்தவர்கள் இதனை ஒரு "மக்கள் தினமாக" கருதுவதாலும், வர்த்தக நிறுவனங்களின் நன்மை கருதியும், இந்த தினத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.

சாந்தா கிளவுஸ் அல்லது கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கும் ஆங்கிலேயர்கள், இயேசு பிறந்த மத்திய கிழக்கு நாடொன்றுக்கு அந்நியமான வட துருவ மனிதனை அறிமுகப் படுத்துகின்றனர். பனி உறைந்த பாதையில், துருவ மான்கள் இழுத்து வரும் வண்டியில் வரும் கிறிஸ்துமஸ் தாத்தா, ஸ்கண்டிநேவிய நாடுகளின் வாழ்க்கைமுறையை கொண்டிருக்கிறார். இவருக்கும், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் கிறிஸ்துமஸ் தினத்தில் வீடுகளை அலங்கரிக்கும் "கிறிஸ்துமஸ் மரம்" கூட டென்மார்க் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில் மட்டும் தான் காணப்படுகின்றது.

இவையெல்லாம் கிறிஸ்துமஸ் தாத்தா வட ஐரோப்பிய மக்களின் கலாச்சாரம் என்பதையும், இதற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதையும் நிரூபிக்கின்றன. மேலும் டிசம்பர் 25 ம் திகதி தான் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் என்று பலர் இன்றும் நம்புகின்றனர். இது தவறு. பைபிளில் எங்கேயும் இது குறிப்பிடப்படவில்லை. 


இத்தாலியில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னர், ரோமர்கள் தமது "மித்திரா" கடவுளுக்கு, டிசம்பர் 25 ம் திகதி விழா எடுத்தனர். இது அனேகமாக சூரியக் கடவுளின் வணக்கமாக இருக்கலாம், ஏனெனில் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தில் குறைந்தளவு சூரிய ஒளி கிடைக்கின்றது. பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் அந்த தினத்தை இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக மாற்றி விட்டனர்.
>