Showing posts with label அமெரிக்க வறுமை. Show all posts
Showing posts with label அமெரிக்க வறுமை. Show all posts

Monday, June 26, 2017

ஒரு அமெரிக்க கனவு: "ஏழைகளின் குருதி விற்பனைக்கு"!



மேற்கு ஐரோப்பாவில் குருதிக் கொடை கொடுப்பவர்களுக்கு பொதுவாக பணம் கொடுப்பதில்லை. அதற்குக் காரணம், பணத்திற்காக குருதியை விற்பவர்கள் தமக்கிருக்கும் நோய்களை மறைக்கப் பார்க்கலாம். அதனால், தாமாக மனமுவந்து கொடுப்பவர்களிடம் இருந்து மட்டும் குருதி எடுக்கப் படுகின்றது. இருப்பினும் இரத்தவங்கியில் போதுமான அளவு குருதி சேமிப்பில் இருப்பதில்லை.

அண்மைய ஐரோப்பிய சட்டத் திருத்தமானது, வெளிநாடுகளில் இருந்து குருதி இறக்குமதி செய்வதை அனுமதிக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள், குருதி விற்று கோடிக் கணக்கான டாலர்கள் இலாபம் சம்பாதிக்கின்றன. உலகிலேயே குருதி ஏற்றுமதி செய்யும் நாடுகளில், அமெரிக்கா தான் எழுபது சதவீத பங்கைக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஓர் ஆவணப்படம் ஒளிபரப்பானது. (https://www.npo.nl/zembla/19-04-2017/VARA_101382220

தற்காலத்தில், குருதியானது பிளாஸ்மா வடிவத்தில் சேமிக்கப் படுகின்றது. சிவப்பு நிறமான குருதியில் இருந்து, முக்கியமான கலங்களை மட்டும் பிரித்தெடுத்தால் அது மஞ்சள் நிறமான திரவமாக இருக்கும். அதுவே "பிளாஸ்மா" என்று அழைக்கப் படுகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் பிளாஸ்மா போத்தில் குறைந்தது 1000 - 1500 யூரோவுக்கு சந்தையில் விற்கப் படுகின்றது. அது எங்கிருந்து வருகின்றது என்பதை ஆராய்வதற்காக, சுவிஸ் ஊடகவியலாளர் குழுவொன்று புறப்பட்டது.

சுவிஸ் அரச மருத்துவமனை மருத்துவர்கள் குருதி விற்கும் கம்பனிகள் பற்றிய விபரங்களை தந்துதவினார்கள். அதில் உள்ள விபரங்களின் படி, பெரும்பான்மையான குருதி அமெரிக்காவில் இருந்து வருகின்றது என்று தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக கிலீவ்லான்ட் பிரதேசத்தில் இருந்தே பெருமளவு குருதி-பிளாஸ்மா இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. ஆகவே, மேலதிக விபரங்களை திரட்டுவதற்காக, சுவிஸ் ஊடகவியலாளர் குழு அமெரிக்கா, கிலீவ்லான்ட்க்கு பயணமானது.

அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக, 2007ம் ஆண்டுக்குப் பின்னர் கிலீவ்லான்ட் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. அங்கு தற்போதும் பெரும்பாலானோர் வறுமையில் வாழ்கின்றனர். வருமானம் இன்றிக் கஷ்டப் படுகின்றனர். 

அமெரிக்காவில், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள், தமது குருதியை விற்றுப் பிழைக்கிறார்கள். இது ஒரு அமெரிக்கக் கனவின் மறுபக்கம். ஏழைகளை சுரண்டி பணம் சேர்ப்பது வர்த்தக உலகில் ஏற்றுக்கொள்ளப் பட்ட நியதி. அந்த வகையில், அமெரிக்க ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி விற்கும் வணிக நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. இது ஒரு வகையில் "நவீன காலத்து நரமாமிச வியாபாரம்". 

அமெரிக்காவில் இரத்தம் விற்பனை செய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அதனால் குருதி வாங்கும் நிறுவனங்கள் பகிரங்கமாகவே விளம்பரம் செய்கின்றன. நானூறு டாலர், இருநூறு டாலர் என்று விலைபேசுகின்றன. இரத்தம் விற்றால் பணம் கிடைக்கும் என்பதால், இரத்த வங்கிகளுக்கு முன்னால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழைகள் வரிசையில் நிற்கின்றனர். இரத்தவங்கி ஒரு சராசரி தொழிற்சாலை போன்று இயங்குகின்றது.

வணிக நோக்கில் இயங்கும் இரத்த வங்கிக்குள் சுவிஸ் ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. அதனால் அவர்கள், தெருவில் நின்று குருதி கொடுக்கச் செல்லும் "கொடையாளிகளை" பேட்டி எடுத்தனர். அப்போதும் அந்த நிறுவனம் பொலிசிற்கு அறிவித்து விட்டது. ஊடகவியலாளர்கள் "தெருவில் போவோருக்கு இடையூறு செய்ததாக" தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸ் தெரிவித்தது.

அதனால், மறைத்து வைக்கப் பட்ட கேமராவை கொண்டு சென்று இரத்த வங்கிக்குள் நடப்பவற்றை படமாக்கினார்கள். உள்ளே நூற்றுக்கணக்கான கொடையாளிகள் வரிசையாக படுக்க வைக்கப் பட்டு குருதி சேகரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அவர்களிடம் கேட்கப் படும் கேள்விகளும் முக்கியமில்லாதவையாக இருந்தன. தான் எல்லாவற்றிற்கும் "இல்லை" என்று சும்மா சொன்னதாக, வெளியே பேட்டி எடுக்கப் பட்ட ஒருவர் தெரிவித்தார். இன்னொரு இளைஞர் போதைவஸ்து வாங்குவதற்காக குருதி விற்றதாக கூறினார்.

அமெரிக்காவில் ஏழைகளின் அவலத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் அவர்களது குருதியை வாங்கி அதிக இலாபம் வைத்து விற்கின்றன. இதனால் பில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்காவில் படமாக்கப் பட்ட காட்சிகள் சுவிட்சர்லாந்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இருப்பினும், குருதி வாங்கி விற்கும் சுவிஸ் நிறுவனம் ஊடகவியலாளருடன் பேச மறுத்து விட்டது. தலைமையகத்திற்கு சென்ற நேரம் போலீசைக் கூப்பிட்டு வெளியேற்றியது.

இரத்தவங்கிகள் வணிக நோக்கில் செயற்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் பயங்கரமானவை. 1999 ம் ஆண்டு, பிரான்ஸில் ஒரு மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றது. குறிப்பிட்ட அளவு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட இரத்தத்தில் HIV எயிட்ஸ் வைரஸ் தொற்றி இருந்தது. முன்கூட்டியே பரிசோதிக்கப் படாத எயிட்ஸ் கிருமி கலந்த இரத்தம் பரிமாறப் பட்டதால் பலர் பாதிக்கப் பட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாரிஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஊழலுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரத்த வங்கிகள், சேமிப்பில் உள்ள இரத்தம் தரமானதா என்பதையிட்டு, ஒன்றுக்குப் பத்து தரம் பரிசோதனை செய்கின்றன.

ஆவணப் படத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு:

Friday, May 21, 2010

அமெரிக்க வறுமையில் செழிக்கும் இந்திய 'கால் சென்டர்'

இந்தியாவில் இருந்து கொண்டே, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்காக தொலைபேசியூடாக வேலை செய்யும் கால் சென்டர்கள் புற்றீசல் போல முளைத்துக் கிளம்பியுள்ளன. வெளிநாட்டு தொலைத்தொடர்பை ஒரு நொடிக்குள் தரத்துடன் வழங்கும் நவீன தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இத்தனை காலமும் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருந்த கால் சென்டர்கள் இந்தியாவுக்கு நகர்த்தப்பட்டன. இந்தியாவில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய தொழிலாளர் படை இருப்பது அதற்கு அனுகூலமாக இருந்தது.

கால் சென்டர் வேலைக்கு ஒரு அமெரிக்கனுக்கு கொடுக்கும் ஊதியத்தை விட மூன்றில் ஒரு பங்கு இந்தியனுக்கு செலவாகின்றது. இதனால் அமெரிக்க முதலாளிகளும் பெருமளவு அமெரிக்கர்களின் வேலைகளை பறித்து இந்தியர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பணியாளர்கள் இந்தியாவில் இருந்து தொடர்பு கொள்ளும் இந்தியர்கள் என்பதை மறைப்பதற்காக அவர்களுக்கு அமெரிக்க ஆங்கிலத்தில் பேச பயிற்சி கொடுத்தார்கள். கால் சென்டர் துறையால் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் புதிய நடுத்தர வர்க்கம் உருவானது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படும் கால் சென்டர்கள், அங்கே அனைவராலும் இரு கரம் நீட்டி வரவேற்கப்பட்டன. ஆனால் இந்தியா "ஒளிரக்" காரணமாக இருக்கும் கால் சென்டர்களுக்கு இருண்ட பக்கம் ஒன்றுண்டு. அமெரிக்காவில் பெருகி வரும் வறுமையால், பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள நாட்டில் ஒரு பகுதி மக்கள் நன்மை அடைகிறார்கள்!

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி. இழுத்து மூடப்படும் தொழிலகங்கள். உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக பணியில் இருந்து நீக்கப்படும் தொழிலாளர்கள். குடும்பத் தலைவன் வேலை இழந்தால், அவன் சம்பாத்தியத்தில் தங்கியிருக்கும் முழுக் குடும்பமும் வறுமையில் வாடுகின்றது. வீடு வாங்கிய கடன், மின்சாரம், தண்ணீர் பில்கள் போன்றவற்றை கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர். மாதக் கணக்காக கட்டாமல் விடுவதால் வட்டியுடன் ஏறிச் செல்லும் கடன்களை திருப்பி செலுத்த அவர்களிடம் பணம் இல்லை. ஆனாலும் இது அமெரிக்கா. தலைக்கு மேலே கடன் இருந்தாலும், அவற்றை திருப்பிச் செலுத்தும் படி வாழ்க்கை முழுவதும் வற்புறுத்திக் கொண்டிருப்பார்கள். அமெரிக்க கடன்காரர்களை விரட்டி விரட்டி கடன் அறவிடும் வேலையை, இந்திய கால் சென்டர் ஊழியர்கள் செய்கின்றனர். கிராமத்தில் இப்படியான தொழில் செய்பவர்களை "கந்து வட்டிக்காரனின் அடியாட்கள்" என அழைப்பார்கள். இன்றைய நாகரீக வளர்ச்சி காரணமாக "கால் சென்டர்" ஆக பரிணமித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர், நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "Call India" ஆவணப்படம் எதிரும் புதிருமான இரண்டு வேறு உலகங்களை ஒரு சேர காட்சிப் படுத்துகின்றது. அமெரிக்காவில் வறுமையில் வாடும் மக்களை சந்தித்து அவர்களின் மனக்குறைகளை பதிவு செய்துள்ளது. மறுபக்கம் கால் சென்டர்களின் வரவால் இந்தியாவில் எற்பட்ட செல்வச் செழிப்பை காட்டுகின்றது. "அமெரிக்க ஏழைகளை அமெரிக்க அரசு புறக்கணிக்கின்றது. அமெரிக்கா உலகம் முழுவதும் அள்ளிக் கொடுப்பதால், பிற நாட்டவர்கள் அமெரிக்கர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்று கருதுகிறார்கள்." ஏற்றத்தாழ்வை தனது குறுகிய அரசியல் அறிவுடன் புரிந்து கொள்ள முனையும் ஏழை வயோதிபரின் மனக்குமுறல்.

காசுக்கு வழியின்றி அல்லல் படும் நேரம் பார்த்து அழைக்கும் இந்திய கால் சென்டர் ஊழியர்கள் மீது சீறும் அமெரிக்க எழைகள். அவர்களது வசவுகளையும், சில நேரம் இனவாத தூற்றல்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய கால் சென்டர் பணியாளர்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த படியால் தான், நிர்வாகம் அவர்களுக்கு ஆங்கிலப் புனை பெயர்களை சூட்டுகின்றது. அமெரிக்க ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொடுக்கின்றது. கால் சென்டர் குறித்த மாயைகள் அகல இந்த ஆவணப்படம் உதவும். நெதர்லாந்து தொலைக்காட்சி தயாரிப்பு என்ற போதிலும், உரையாடல்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் அமைந்துள்ளன.