Sunday, February 07, 2010

வெளிநாட்டு மோகம் எதுவரை?

[ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப் படைகள், கட்டுரையின் இரண்டாம் பகுதி.]

சில வேளைகளில் பணக்கார நாடுகளின் இரட்டை வேடம் பரிதாபரமாக அம்பலமாகும். துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பிய போது நிராகரிக்கப்பட்டது. அதற்கு காரணமாக துருக்கியில் குர்து மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் சுட்டிக்காட்டப் பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இரக்க மனப்பான்மையை மெச்சிய படியே, துருக்கியில் இருந்து குர்து அகதிகள் கப்பல் கப்பலாக இத்தாலி வந்திறங்கினர். இதைப் பார்த்ததுமே ஐரோப்பிய ஒன்றியம் தலையில் அடித்துக் கொண்டு குளற ஆரம்பித்து விட்டது. நேரே துருக்கி சென்று: "நான் சும்மா மனித உரிமை, அது இதென்று சொல்ல, நீ அதை சீரியஸாக எடுத்து விட்டாயே!" என சமாதானப் படுத்திய பின்னர் தான், அகதிகளின் வருகை நின்றது.

பின்னர் ஒரு நேரம், கொசோவோ அல்பேனியர் மீது திடீர் பாசம் பொங்கி வரவே, அவர்களைப் பாதுகாக்க எடுத்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது புதிய அகதிகள் படை தமது நாடுகளை நோக்கி வரலாம் என்ற கவலை வாட்டத் தொடங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தமக்கு தேவையான அளவு அகதிகளை போய் கூட்டி வந்தன. கொண்டு வந்த அகதிகளை சிறப்பு முகாம்களில் சில காலம் (யுத்தம் முடியும் வரை) வைத்திருந்து விட்டு திருப்பியனுப்பினார்கள். ஐரோப்பிய அரசுகள், வருங்காலத்தில் "யுத்த அகதிகள்" விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என தெரிகின்றது. அதாவது ஐரோப்பிய நேரடித் தலையீட்டால், யுத்தம் தீவிரமடைந்தால், அகதிகளை எப்படி சமாளிப்பது என்ற Crisis Management .

ஐரோப்பா முழுவதும் ஒரே அகதிச் சட்டத்தை உருவாக்குவதும், சுமைகளை (அகதிகளை) தமக்குள் பங்கிட்டுக் கொள்வதும் அந்த முகாமைத்துவத்துக்குள் அடங்கும். இதற்கென பின்லாந்தில் கூடிய மகாநாடு எதையும் சாதிக்கவில்லை. பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ் ஆகியன, செல்வந்த வட ஐரோப்பிய நாடுகளுடன் சமமாக பங்கு போடா தயாராக இல்லை. மேலும் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான அகதிகளை ஒடுக்கும் சட்டம் வர நீண்ட காலம் எடுக்காது. ஷெங்கண், டப்ளின் என்று புதிது புதிதாக வரும் சட்டங்கள், ஒரு நாட்டில் நிராகரிக்கப்படும் அகதிகள், மற்ற நாடுகளாலும் நிராகரிக்கப்பட வழி வகுக்கின்றது. இதனால் வாய்ப்பற்ற அகதிகள் தமது நாடுகளுக்கே திரும்ப வேண்டிய நிலை. இதனால் பணக்கார நாடுகளை நோக்கிய வறிய நாட்டு மக்களின் இடப்பெயர்வு கணிசமான அளவு குறைக்கப்படுகின்றது.

இப்படியான மாற்றங்களால், பணக்கார நாடுகளுக்கு பாதகமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. காலனித்துவ காலத்தில் இருந்து, ஐரோப்பாவை மையப்படுத்திய போதனைகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட மூன்றாம் உலக மக்கள், இனி தமது ஐரோப்பிய எஜமானர் மீது வெறுப்படையும் நிலை தோன்றும். ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கிய பயணம் நிச்சயமற்றது, ஆபத்துகள் நிறைந்தது. இதை தெரிந்து கொண்டும், மூன்றாம் உலக மக்கள், தமது நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதேன்? அரசியல், அல்லது யுத்த அகதிகளை தவிர்த்து விட்டு, பொருளாதார நோக்கங்களுக்காக இடம்பெயரும் மக்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

நாடு விட்டு நாடு போய் வேலை தேடும் போக்கு, ஐரோப்பிய காலனித்துவ காலத்திலேயே ஏற்பட்டு விட்டது. 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டது. இந்திய,சீனக் கூலிகள் காலனிகளை வளம் படுத்த ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டனர். முன்னர் ஆப்பிரிக்க அடிமைகள் செய்த அதே வேலையை, மிகக் குறைந்த ஊதியம் பெறும் கூலிகள் செய்தனர். வேலை நேரத்திற்கு கூலி, ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் நாடு திரும்பும் வசதி, மேலதிக ஊக்குவிப்புத் தொகை, என்பன இவர்களை அடிமைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. இவற்றை தவிர, வேலைப்பளு, வேலை நேரம், தங்குமிடம், கடுமையான சட்டங்கள் என்பன அடிமைகளுக்கு இருந்ததைப் போலவே தொடர்ந்தது. இவ்வாறு தான் நவீன அடிமைகள் உருவானார்கள்.

பின்-காலனித்துவ காலத்தில், காலனிப்படுத்திய ஐரோப்பிய எஜமானர்களின் நாடுகள் செல்வந்த நாடுகளாக மாறியிருந்தன. புதிதாக சுதந்திரமடைந்த அடிமை நாடுகள் வறிய நாடுகளாக காட்சியளித்தன. பழைய நிலவுடமைச் சமுதாயத்துக்குள், சந்தைப் பொருளாதாரம் நுழைந்து இடம்பிடித்தது. புதிய பொருளாதார ஒழுங்கை பராமரிக்கவென வளர்க்கப்பட்ட மத்தியதர வர்க்கம் வசதி படைத்திருந்தது. அவர்களின் கைகளில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட பணம் என்ற மந்திரக்கோல் இருந்தது. அதன் மந்திர சக்தியைக் கண்டு வியந்த மக்கள், தாமும் அதைப் பெற விரும்பினர். பெரும்பாலான மக்கள் ஏழைகள் என்ற போதிலும், அவர்களும் வாதியை தேடித் போயினர். "அவரவர்க்கு விதிப்படி தான் எல்லாம் நடக்கும். இப்பிறவியில் ஏழையாக வாழ்பவன், மறுபிறவியில் செல்வந்தனாவான்." என்று மதங்கள் கூறிய உபதேசங்களை இன்று யாரும் நம்புவதில்லை. வசதியான வாழ்வை உத்தரவாதம் செய்யும் பணம் எனும் புதுக் கடவுளின் உபதேசங்களை பின்பற்றும் பக்தர்கள் பல கோடி. இவர்கள் தமது கடவுளை தரிசிக்க, அருள் வேண்டி அவர் இருக்கும் இடம் தேடித் போவதில் வியப்பில்லை.

பணக்கடவுளும் அவ்வளவு சுலபமாக அருள் வழங்குவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் முன்பு, ஒப்பந்தக் கூலிகள் செய்த அதே "அழுக்கு வேலை" செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் இரண்டு, மூன்று பேர் செய்யும் வேலையை, தனியொருவர் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். விசா இன்றி இருப்பவர் ஆயின், அதிக நேர வேலை, மிகக் குறைந்த சம்பளம் என்று பன்னாட்டு அகதிகள் சுரண்டப்படுகின்றனர். ஒரு பக்கம் இவைகளின் இரத்ததி உறிஞ்சும் ஐரோப்பிய முதலாளிகள் மேலும் மேலும் லாபம் சம்பாதிக்கின்றனர். மறு பக்கம் உடல் நலிவடையும் நவீன அடிமைகள் நடைப்பிணமாகி வருகின்றனர். இவ்வாறு சொர்க்கத்தின் இருண்ட மூலைக்குள் தள்ளப்பட்ட இவர்களைப் பற்றி யாரும் அக்கறைப் படுவது கிடையாது. மிகுந்த சிரமத்துடன் ஏழு கடல், ஏழு மலை தாண்டி வரும் அகதிகள் இறுதியில் கண்டடைவது இதைத் தான்.

இந்த இடத்திலாவது வறிய நாட்டு மக்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ஓடிக் கொண்டிருக்கப் போகிறோம்? நவீன நாடோடி வாழ்க்கைக்கு உந்தித் தள்ளிய காரணிகள் எவை என சிந்திக்க வேண்டும். "எமது நாடுகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. படிப்புக்கேற்ற வேலை இல்லை. எவ்வளவு உழைத்தாலும் எமது கஷ்டங்கள் தீருவதில்லை." எனப் பல காரணங்களை முன் வைக்கலாம். ஆனால் அப்படி சொல்பவர்கள், இந்த நிலைக்கு யார், எது காரணம் என சிந்தித்ததுண்டா? உள்நாட்டில் வறுமையை ஒழிக்கப் போராடி இருக்கிறார்களா? மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமையை, அறுபது வருடங்களுக்கு முந்திய ஐரோப்பாவுடன் ஒப்பிடலாம். 12 மணித்தியால வேலை நேரம். கடின உழைப்புக்கு மிகக் குறைந்த ஊதியம். குழந்தைத் தொழிலாளிகள். அசுத்தமான சேரிகள். வாக்குரிமையற்ற உழைப்பாளர் வர்க்கம். இது தான் அன்றைய ஐரோப்பாவின் அவலநிலை.

அந்த அவலநிலை திடீரென் ஒரே நாளில் மாறி விடவில்லை. ஆளும் வர்க்கம் தானாகவே மனமிரங்கி விட்டுக் கொடுக்கவில்லை. மக்கள் நிறுவனமயப் படுத்தப் பட்டனர். அடித்தட்டு மக்களிடமிருந்து ஒற்றுமையாக கிளர்ந்தெழுந்த போராட்டம், ஜனநாயக மயப்படுத்தலுக்கும், இன்று நாம் காணும் நலன்புரி அரசுக்கும் வழி வகுத்தது. சுருங்கச் சொல்லின், மக்கள் தமது உரிமைகளை போராடித் தான் பெற்றுக் கொண்டனர்.

மக்களின் நியாயமான அடிப்படைத் தேவைகள் அனைத்து நாட்டு அரசியல் நிர்ணய சட்டங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் மக்களின் அறியாமை. நிறுவனமயப் படுத்தப் படாமை. அடங்கிப் போகும் குணாம்சம். இவற்றை தமக்கு சாதகமாக எடுத்தக் கொள்ளும் அரசுகள் ஊழலால் உயிர் வாழ்கின்றன. கலாச்சாரப் புரட்சியின் போது சீனா சென்று வந்த, இத்தாலிய எழுத்தாளர் அல்பேர்ட்டோ மொராவியா பின்வருமாறு கூறினார்:
"ஐரோப்பிய மக்கள், போர்க் குணாம்சத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது கலாச்சாரம் பற்றி கற்பிக்கப் படுகின்றது. ஆசிய மக்கள், இதற்கு மாறாக கலாச்சாரத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது போர்க் குணாம்சம் பற்றி கற்பிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது."

(முற்றும்)
["உயிர்நிழல்", (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]


Part 1: ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்

Saturday, February 06, 2010

ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்

பெர்லின் மதில் பற்றி கேள்விப்படாதோர் இருக்க முடியாது. ஆனால் செயுத்தா, மெலியா மதில்கள் பற்றி...? தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம். மொரோக்கோ நாட்டின் வட பகுதியில், ஸ்பெயினுக்கு சொந்தமான சிறு துண்டு நிலப்பகுதிகளே செயுத்தா, மெலியா. இவை வறிய மூன்றாம் உலகமான ஆப்பிரிக்காக் கண்டத்தில் அமைந்திருகின்றன. ஐரோப்பாவினுள் நுழைய விரும்பும் அகதிகள் சுலபமாக ஊடுருவலாம் என்ற அச்சம், முதலாம் உலகைச் சேர்ந்த ஸ்பெயினுக்கு எழவே மதில் கட்டவாரம்பித்தது.

இங்கே கட்டப்பட்டுள்ள மதில்கள், பெர்லின் மதிலை விட நீளமானதும், மிகவும் பாதுகாப்பானதுமாகும். இரும்புக் கம்பிகளினால் ஆக்கப்பட்ட இந்த மதில்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதைமீறி எந்த அகதியும் ஐரோப்பிய சொர்க்கத்தினுள் நுழைய முடியாது. நுழைபவர் உயிரோடு திரும்ப முடியாது.


இந்த நுழைவாயில் மதில்களை ஊடுருவ முடியாது என்பதை அறிந்துள்ள அகதிகள் வேறு வழியை நாடுகின்றனர். மொரோக்கொவிற்கும், ஸ்பெயினுக்கும் இடையில் ஜிப்ரால்டர் நீரினை உள்ளது. இதன் தூரம் வெறும் 20 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஒரு சிறு வள்ளத்தின் உதவியோடு கடந்து விடலாம். ஆனால் கடற்படையினர் கண்ணில் எண்ணையை விட்டு ரோந்து செல்கின்றனர். சில வேளை கடற்படையினர் அகதி வள்ளங்களை வழி மறித்து தாக்கலாம். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் என்ன? தினம் தினம் இந்த நீரிணையை தாண்டி அக்கரை செல்வதற்கு, மொரோக்கோவில் ஒரு அகதிகள் பட்டாளமே காத்திருக்கிறது. ஐரோப்பாக் கண்டத்தின் மேற்கு எல்லையில் அட்லாண்டிக் சமுத்திரம் உள்ளது. இந்த வழியாக வருவதானால் கப்பல் மூலம் தான் வந்திறங்க வேண்டும்.

2001 ம் ஆண்டு, பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள், தென் பிரான்சின் கரையை வந்தடைந்த மாலுமிகளற்ற கப்பலில் 908 குர்திய அகதிகள் வந்திறங்கினர். அதிர்ச்சியடைந்த பிரான்ஸ் ஐரோப்பாவெங்கும் எச்சரிக்கை மணி அடித்தது. சில நாட்களின் பின்னர் நெதர்லாந்தை நோக்கி வந்து கொண்டிருந்த கப்பலை, அகதிக் கப்பல் என தவறாக புரிந்து கொண்டு ஹெலிகப்டர்கள் வட்டமிட்டன. சோதனையின் பின்னர் அது நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் என்று தெரிந்த பின்பும் அரசியல்வாதிகளின் மனதில் எழுந்த கிலி அகலவில்லை.

பிரித்தானியா, ஐரோப்பிய பெரு நிலத்தோடு ஒட்டாத தனித் தீவு. இதனால் அங்கு சட்டவிரோதமாக நுழைவதும் சுலபமல்ல. ஆனால் இங்கிலாந்து செல்வதை தமது வாழ்க்கையின் லட்சியமாக கருதும் மூன்றாம் உலகைச் சேர்ந்த பல அகதிகள், தடை பல கடந்து லொறிகளுக்குள் ஒளிந்திருந்து செல்வதுண்டு. அப்படியொரு முறை நெதர்லாந்தில் இருந்து சென்ற லாரி ஒன்றினுள், பொருட்களோடு பொருட்களாக மறைந்திருந்து சென்ற சீன அகதிகள், இங்கிலாந்தினுள் நுழைந்த போது உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த செய்தி ஏற்படுத்திய உணர்வலைகளின் பின்னால் உண்மை மறைந்து போனது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பது பலருக்கு தெரியாது. அந்த அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி நெதர்லாந்தில் இருந்து புறப்படும் போதே, அதனுள் சீன அகதிகள் ஒளிந்திருக்கின்றனர் என்ற விடயம் (நெதர்லாந்து) அரச அதிகாரிகளுக்கு தெரியும்! இந்தக் ஆட் கடத்தலை ஒழுங்கு செய்த நபர்களை கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்வதற்காக லாரி இங்கிலாந்து எல்லை வரை செல்ல விடப்பட்டது. இங்கிலாந்து காவல்துறை லாரியை ஒரு நாள் முழுவதும் மறித்து வைத்து, வேண்டுமென்றே தாமதப் படுத்தியதாலேயே இந்த மரணங்கள் சம்பவித்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இங்கிலாந்து அரசு அகதிகளைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை அமுல்படுத்தி, தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. இப்படியான சட்டங்களும், எல்லைகள் இறுக்கப் பட்டதுமே, மேற்படி மரணங்கள் நிகழ வழி சமைத்துள்ளன, என்ற விமர்சனம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.

ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருப்பவை, "முன்னாள் சோஷலிச முகாம்" நாடுகள். மேற்கைரோப்பிய பாணி ஜனநாயகத்தை தழுவியதில் இருந்து வறுமையில் வாடும் நாடுகளுக்கு, அகதிகள் பட்டாளம் வந்து சேர்கின்றது. இங்கிருந்தபடியே கண்ணுக்கு புலப்படாத கிழக்குப் புற மதில்களை ஊடுருவி, ஐரோப்பிய சொர்க்கத்தினுள் நுழையும் முயற்சிகள் இடையறாது இடம்பெறும். எல்லையை கண்காணிக்கும், இருட்டில் துல்லியமாகப் படம்பிடிக்கும் கமெராக்கள். அகதிகளின் படையெடுப்பு இடம்பெறுவதை எல்லைக் காவல் பணி மனைக்கு அறிவிக்கும். பிறகென்ன, "ஊடுருவல்காரர்கள்" கைது செய்யப்பட்டு வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுவர்.

சில எல்லைப்புற நுழைவாயில்கள் ஆபத்து நிறைந்த மலைப் பாதைகளாகவிருக்கும். குளிர்காலத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, பனி படர்ந்த மலையுச்சியில் ஏறி இறங்கி வர வேண்டியிருக்கும். வலையில், கூட வருவோர் செத்து மடிந்தாலும் அதைப் பார்க்காது தொடர்ந்து நடக்க வேண்டும். இது சிலவேளை சீனாவில் மாவோ தலைமையில் நடந்த நீண்ட நீண்ட அணிவகுப்பை நினைவுபடுத்தலாம். ஆனால் எமது அகதிப்படையின் லட்சியம் ஐரோப்பிய சொர்க்கத்தை அடைவது மட்டும் தான்.

இதுவரை கூறப்பட்ட விவரணங்கள் யாவும் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் எல்லைகள், பலமான கோட்டை மதில்களைப் போல பாதுகாக்கப் படுவதை தெரிவிக்கின்றன. ஐரோப்பியக் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த எல்லைப்புற மதில்களைத் தாண்டி, உள்ளே நுழைய முயன்ற சுமார் 2000 அகதிகள் உயிரிழந்துள்ளனர். காத்திருக்கும் ஆபத்துகளை அறிந்த போதிலும், ஐரோப்பாவினுள் நுழைவதற்காக எல்லைப்புற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான அகதிகள் தமது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். ஐரோப்பியர் இவர்களை, "அரசியல் அகதிகள்", "பொருளாதார அகதிகள்" என வகைப் படுத்தலாம். ஆனால் அவர்கள் எப்படி அழைத்த போதிலும், எல்லோரும் ஒரே மாதிரியான பிரச்சினையை கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்களல்ல.

சில நாடுகளில் நடைபெறும் யுத்தங்களின் பின்னால் பொருளாதாரக் காரணிகள் உள்ளன. வேறு பல நாடுகளில் அமைதி நிலவுவது போல தோன்றினாலும், அது புயலுக்கு முன்னாலான அமைதி தான். இந்த நாடுகளில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். வசதி வாய்ப்புகளற்று வாழ்வதற்கு சிரமப்படுகின்றனர். இவர்களனைவரும் வறுமை நிலையில் இருந்து மீளவும் வசதிபடைத்தோர் போல வாழவும் விரும்புகின்றனர். பண்டைக் காலத்திலிருந்தே, குறைகளைப் போக்க ஆண்டவனிடம் சென்று முறையிடுமாறு கூறப்பட்டது. இந்தக் கோட்பாடு, பின்னர் சிறிதே மாற்றப்பட்டு, பணக்கார நாடுகளுக்கு செல்லுமாறு வழிகாட்டப்பட்டது. இதுவே யதார்த்தம் என நம்பும் அப்பாவி மக்கள், தமது உறவை விட்டு, ஊரை விட்டு ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

உலகமயமாக்கல் திட்டத்தில் ஒன்று, வறிய நாடுகளில் உள்ள மனிதவளத்தை பயன்படுத்திக் கொள்வதாகும். இந்நாட்டு தொழிலாளர் பெறும் குறைந்த ஊதியம், எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்தையும் முதலீடு செய்யத் தூண்டும். குறைந்தளவு முதலீட்டில் கூடிய லாபமீட்ட எதுவாயிருக்கும். மூன்றாம் உலக நாடுகளில் வறுமை நிலை மாற எந்தவொரு வர்த்தக நிறுவனமும் விரும்பப் போவதில்லை. இந்நாடுகளில் நடக்கும் ஊழலாட்சிகள் பற்றி கூட, தமது வர்த்தகத்தை பாதிக்கும் போது மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்நாடுகளின் மீது சுமத்தப்படும் கடன் சுமை, வறுமையிலிருந்து மீள்வதை தடுக்கும் இன்னொரு காரணம்.

சில நாடுகள், ஐ.எம்.எப்., உலகவங்கிக்கு திருப்பி செலுத்தும் வட்டியே, அந்நாடுகளின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதத்தை எடுக்கின்றன. மக்களிடம் இருந்து பெறப்படும் வரியில் கணிசமான அளவு, கடனுக்கு வட்டியாக பணக்கார நாடுகளுக்கு போகின்றது. இதிலிருந்து பணக்கார நாடுகள், அந்நிய நாட்டுக் கடன்கள் மூலம் தமது நிரந்தர வருமானத்தை நிச்சயப்படுத்திக் கொண்டுள்ளமை தெளிவாகும். பணக்கார நாடுகளுக்கும், வறிய நாடுகளுக்குமான உறவை வைத்து பார்க்கும் பொழுது, பணக்கார நாடுகளை நோக்கி புலம்பெயரும் அகதிகளின் பக்கமுள்ள நியாயத்தன்மை புலனாகும்.

மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் இந்த உண்மைகளை அறிந்திரா விட்டாலும், பணக்கார நாடுகளின் அரசுகள் இது பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. செல்வத்தில் தமக்கும் பங்கு கேட்டு, வறிய நாடுகளின் மக்கள் படையெடுக்கலாம் என்ற அச்சமே கோட்டை மதில்கள் கட்டத் தூண்டியது. அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் கூட அத்தகைய மதில் கட்டப்பட்டுள்ளது. அப்படியானால், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து தமது நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளை, பணக்கார நாடுகள் எதிரிகளாக பார்க்கின்றனவா? ஆயுதந் தரிக்காத எதிரிகளின் படையெடுப்பில் இருந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் எல்லைகளைப் பலப்படுத்துகின்றனவா?

(தொடரும்)

["உயிர்நிழல்", (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]

Friday, February 05, 2010

கடவுளின் நிறம் என்ன?

1992 ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபனை வெள்ளை போலீசார் தாக்கினார்கள். அந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி நீதிமன்றத்தில் சாட்சியமாக்கப்பட்டும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால் லொஸ் எஞ்செல்ஸ் நகரில் கலவரம் வெடித்ததை உலகம் மறந்திருக்காது. இதன் தாக்கம் டைரக்டர் ஸ்பைக் லீயை "மல்கம் எக்ஸ்" திரைப்படம் எடுக்க தூண்டியிருக்க வேண்டும். கறுப்பின இளைஞனை போலீசார் தாக்குவதும், அமெரிக்க தேசியக்கொடி தீப்பற்றி எரிவதுமாக படத்தின் ஆரம்பக் காட்சிகள் அமைந்துள்ளன.

பிற்காலத்தில் தலைவராவதற்கு உரிய எந்த அறிகுறியும், இளம் மல்கமிடம் இருக்கவில்லை. சராசரி கறுப்பின இளைஞனாக தனது நண்பர்களுடன் வீதியில் வலம் வருகிறார். வெள்ளை நிறக் காதலியுடன் உல்லாசமாக பொழுது போக்குகிறார். இதைவிட நிழல் உலகத் தொடர்புகள், போதைப் பொருள் பாவனை, இரவு விடுதிகள், திருட்டுகள் என வாழ்ந்து வந்தவர். வீடுடைப்பு திருட்டில் அகப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுகின்றார். தனிமைச் சிறையில் வாடும் போது, அங்கே ஒரு கிறிஸ்தவ மத போதகர் வருகிறார். ஆனால் அவரைப் பார்க்க மல்கம் விரும்பவில்லை. "உங்கள் இயேசு எனக்கு எதுவுமே செய்யவில்லை. வெள்ளையர் பக்கமே நிற்கிறார்." என விரக்தியின் விளிம்பில் கதறுகின்றார்.

எந்த மாற்றமும் இன்றி நகரும் சிறை வாழ்க்கையில் ஒரு கறுப்பின இஸ்லாமிய மத போதகர் குறுக்கிடுகிறார். உன்னை சிறையில் இருந்து விடுவிக்கும் வழி தெரியும், என மல்கமை கவருகின்றார். அவரோடு சமூக-அரசியல் உரையாடலை நடத்துகிறார்.
மதபோதகர்: கடவுளின் நிறம் என்ன?
மல்கம்: வெள்ளை
மத போதகர்: இல்லை கருப்பு.
மல்கம்: (சிறு அதிர்ச்சி) கடவுள் அழகானவர், வெள்ளை நிறமானவர் எனத்தான் படித்திருக்கிறேன்.
மத போதகர்: வெள்ளைக்காரன் உருவாக்கிய கடவுள் வெள்ளையாகத் தான் இருப்பார்.
இந்த உரையாடல் மல்கமின் சிந்தனையை தூண்டுகிறது. அவர் மேலும் இஸ்லாமிய தத்துவங்களை படித்து தெளிவடைகிறார்.

ஒரு முறை கிறஸ்தவ மத போதகர் ஒருவரின் பிரசங்கம் இடம்பெறுகின்றது. பைபிளை விபரித்து விட்டு யாராவது கேள்வி கேட்கலாம் என்கிறார். அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த மல்கம், "கர்த்தரின் குமாரரான இயேசு கிறிஸ்துவின் நிறம் என்ன?" என வினவுகின்றார். வெள்ளை எனப் பதில் வருகின்றது.
"பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள ஹீபுரு மொழி பேசுவோரின் நிறம் என்ன?"
"இது பற்றி சரியாகத் தெரியாது. ஆராய்ச்சியின் முடிவுகள் இன்னும் வரவில்லை."
"அவர்களின் நிறம் வெள்ளை அல்ல."
"ஆம்"
"ஆகவே யூத இனத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவும் வெள்ளையாக இருக்க முடியாது."
"இல்லை...இல்லை... அவர் வெள்ளை நிறமும் நீலக் கண்களும் கொண்டவர். அப்படித்தான் வரைபடங்கள் காட்டுகின்றன."
"அவை வெள்ளையர்களால் வரையப் பட்டவை. ஆதி கால முதல் மனிதன் வெள்ளை நிறத்தவனாக இருந்திருக்க முடியாது."

சிறையிலிருந்து விடுதலையான மல்கம், புது மனிதனாக வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். கிறிஸ்தவ மதம் வெள்ளையர் உடையது. அடிமைத்தளையை உடைக்க விரும்பும் கருப்பர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவ வேண்டும், எனப் பிரச்சாரம் செய்கிறார். இவரின் அமைப்புக்கு பல்லாயிரக்கணக்கான கருப்பர்கள் வருகின்றார்கள். மல்கமின் பேச்சாற்றல் பலரைக் கவருகின்றது. ஒரு முறை, பொலிஸ்காரர்களால் கைது செய்யப்பட்ட கறுப்பின இளைஞனை மீட்க, படை திரட்டி வருகிறார் மல்கம். அவருக்குப் பின்னால் திரளும் மக்கள் சக்தியைப் பார்த்து போலிஸ் அதிகாரிகள் பிரமித்துப் போகிறார்கள்.

அமெரிக்கா முழுவதும் பிரபலமான கறுப்பினத் தலைவரான மல்கமை, தொலைக்காட்சி பேட்டி எடுக்கின்றது. அதில் ஒரு கேள்வி: "உங்கள் பெயருடன் எக்ஸ் (X ) சேர்த்துக்கொள்ள காரணம் என்ன?"
மால்கம்: "நானூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக அமெரிக்கா கொண்டு வரப்பட்ட கறுப்பர்களுக்கு, அவர்களின் எஜமானின் பெயரே குலப் பெயராக சூட்டப்பட்டது. தமது நாட்டை, பெயரை இழந்த கறுப்பின அடிமைகள், தமது எஜமானின் பெயரால் இனங் காணப்பட்டனர். இவர்களது மூதாதையரின் பெயர் தெரியாததால் எக்ஸ் எனப் போட்டுக் கொள்ள விரும்புகின்றேன்." (தமது பிள்ளைகளுக்கு அர்த்தமற்ற பெயரை சூட்டும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம்.)

முஸ்லீமாக மதம் மாறிய மால்கம் எக்ஸ், மெக்காவுக்கு யாத்திரை போகின்றார். இதன் பின்னர் உலகின் பல்லின மக்களை இஸ்லாம் இணைப்பதை காண்கிறார். (மத மாற்றம் மட்டுமே மக்களின் விடுதலையை பெற்றுத் தராது. இருப்பினும் மால்கம் எக்ஸ் இவ்வழியை சிறந்தது எனக் கருதினார்.) கருப்பர்கள் தமக்குள்ள ஒற்றுமையாக வாழ வேண்டும். இனங்களுக்கு இடையிலான பிரிவினை நிரந்தரமாக்கப் பட வேண்டும்." என்று தனது இறுதிக் காலத்தில் மால்கம் எக்ஸ் முழங்கினார். பொதுக் கூட்ட மேடை ஒன்றில் பேச வருகையில், போட்டி இயக்கத்தை சேர்ந்த சதிகாரர்களால் சுடப்பட்டு மரணிக்கிறார்.

ஒரு தலைவனின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதது. மால்கம் எக்ஸ் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராகள் இடையே எழுச்சியை உருவாக்கினார். உலகில் நிற வேற்றுமை மறையும் வரையில் இந்த எழுச்சி நீடிக்கும்.

[சுவிட்சர்லாந்தில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த "தமிழ் எடு" (மார்ச்-ஏப்ரல் 1994 ) மாதப் பத்திரிகையில் பிரசுரமானது.]


Tuesday, February 02, 2010

பாலஸ்தீனரின் உடல் உறுப்புகளை திருடும் இஸ்ரேல்

சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன கைதிகளை கொன்று உடல் உறுப்புகளை திருடுவதாக ஸ்வீடிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது இஸ்ரேலிய அரசு, அதை "யூத விரோத பிரச்சாரம்" என மறுத்திருந்தது. தற்போது அரச மட்டத்திலேயே குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மை தான் என ஒத்துக் கொண்டுள்ளனர். மேலதிக விபரங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளையும், வீடியோவையும் பார்க்கவும்.
Israel:" We harvested organs of dead Palestinians"

SCANDAL: Did Israelis kill Palestinians for organs?


Monday, February 01, 2010

"அகதிகளின் டைட்டானிக்" கப்பலின் சோகக் கதை

(குறிப்பு: 1996 ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவம். ஐரோப்பியரின் "மனிதாபிமானத்திற்கு" ஓர் எடுத்துக்காட்டு.)

கடைசியில் அந்தக் கப்பல் ஆழ்கடலின் அடியில் கண்டெடுக்கப் பட்ட போது எஞ்சி இருந்தவை, (தெற்காசிய) அகதிகளின் எலும்புக்கூடுகளும், அவர்களின் உடமைகளும் தான். 1996 ம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று இத்தாலிக் கரையை வந்து சேர்ந்த சில அதிர்ஷ்டக்கார அகதிகளே முதன் முதலில் அந்த துயரச் சம்பவத்தை உலகுக்கு அறிவித்தனர்.

இத்தாலி நோக்கி வந்து கொண்டிருந்த அந்தக் கப்பலில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் இருந்தனர். ஐரோப்பாவில் அகதி தஞ்சம் கோரும் அல்லது அல்லது வசதியான வாழ்க்கை வாழும் கனவுகளோடு பயணித்தனர். இத்தாலிக் கரையை அண்மிக்கும் பொழுது சில மைல் தொலைவில் நடுக்கடலில் வைத்து 300 க்குமதிகமான கப்பல் பயணிகள் இன்னொரு சிறிய மரக்கப்பலுக்கு மாற்றப்பட்டனர். போக மறுத்தவர்கள் துப்பாக்கி முனையில் ஏற்றப்பட்டனர். பாரந் தாங்காத சிறிய கப்பல் தள்ளாடிய படி, பெரிய கப்பலுடன் மோதிய போது அந்த விபரீதம் நிகழ்ந்தது. உடைந்த கப்பல் 283 பேருடன் ஆழ்கடலின் அடியில் சென்று ஜலசமாதியாகியது. நீந்தத் தெரிந்த ஒரு சிலர் மட்டுமே உயிர் தப்பினர்.

ஆனால் உயிர்தப்பியோர் சொன்ன கதைகளை முதலில் யாருமே, குறிப்பாக இத்தாலிய அதிகாரிகள் நம்பவில்லை. இது திருப்பி அனுப்பப்படுவதை தவிர்க்க சொன்ன கட்டுக்கதை என்றனர். கடற்படையினர் தாம் எந்த உயிரற்ற உடலையும் கண்டுபிடிக்கவில்லை என்றனர். இதைதவிர வேறெந்த மீட்புப் பணிகளையும் அரசு முடுக்கி விடவில்லை. காணாமல் போனவர்கள் ஐரோப்பியர்களாக இருந்திருந்தால் அன்று நடந்தது வேறாக இருந்திருக்கும். பெருஞ்செலவில் தேடப் புறப்படும் மீட்புப் படை, உடைந்த கப்பலின் சிறு துண்டை ஆவது கண்டெடுக்காமல் திரும்பியிருக்காது. ஆனால் அகதிக் கப்பலில் இறந்தவர்கள் ஐரோப்பியர்கள் அல்ல. ஆசியாவை சேர்ந்த விரும்பத்தகாத "பொருளாதார அகதிகள்". ஆகவே இதையிட்டு மேற்கொண்டு யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.

அதே ஆண்டு, அட்லாண்டிக் சமுத்திரத்தின் மீது அமெரிக்க விமானம் ஒன்று வெடித்துச் சிதறியது. அமெரிக்க மீட்புப்படை வாரக்கணக்காக இறந்தவர்களின் உடல்களை தேடியது. உலக மக்கள் அனைவரும் (அமெரிக்கர்களுக்கு ஒன்றென்றால், நமக்கும் துக்கம் தானே?) இந்த துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமல்லவா? உலகத் தொலைக்காட்சி CNN மீட்புப் பணி குறித்த செய்திகளை ஒரு மாதம் முழுவதும் ஒளிபரப்பியது. மேற்கத்திய அரசுகள் மட்டுமல்ல, தொடர்பூடக சாதனங்கள் கூட வறிய நாட்டு மக்களை பாரபட்சமாகவே பார்க்கின்றன. நடந்த கப்பல் விபத்தில் தமது பிள்ளைகளை பறிகொடுத்த பாகிஸ்தானிய பெற்றோர், இத்தாலிய அரசுக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், கப்பல் உடைவு சம்பவத்தை தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டார். பொதுவாகவே தஞ்சம் கோரும் அகதிகள் சொல்பவற்றை கட்டுக் கதைகள் என நிராகரிக்கும் மேற்கைரோப்பிய அரசு அதிகாரிகளிடம் இருந்து நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

நீண்ட காலத்திற்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அகதிகளின் ஜலசமாதி பற்றி இத்தாலியில் எந்தவொரு கட்சியும் வாய் திறக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அரசு இதற்கு பொறுப்பேற்று சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியது. ஆனால் பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த வலதுசாரிக் கட்சிகள் வெளிநாட்டவர் எதிர்ப்பை தமது அரசியல் கொலகியாக கொண்டுள்ளன. இந்தக் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் "கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் அகதிக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுவோம்." எனக் குறிப்பிட்டுள்ளன.

[உயிர் நிழல் (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]