Thursday, April 21, 2022

சிங்கள ராஜபக்சேக்களும் தமிழ் முதலாளிகளும்- திருடர்களின் கூட்டணி

 
ராஜபக்சே குடும்பத்தினர் கொள்ளையடித்த சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்குவதற்கு இரண்டு தமிழ் கோடீஸ்வர தொழிலதிபர்கள் உதவி இருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சேயின் கணவர் திருக்குமரன் நடேசன். மற்றவர் புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர் வேலுப்பிள்ளை கணநாதன்.

இறுதிப்போர் முடிவில், தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் வைத்திருந்த ஏராளமான நகைகள், மில்லியன் கணக்கான இலங்கை ரூபாய்கள், மற்றும் பல்லாயிரம் டாலர்கள் அனைத்தையும் அரசுடமையாக்காமல் ராஜபக்சே குடும்பத்தினரே சொந்தமாக்கிக் கொண்டார்கள். இவற்றை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று ராஜபக்சேவிடம் ஒப்படைத்த பைலட் பின்னர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளார். 
 
அத்துடன் மகிந்த ராஜபக்சேயின் பதவிக்காலத்தில் லஞ்சமாகவும், வேறு முறைகேடான வழிகளிலும் பெற்றுக் கொண்ட பணம் ஏராளம் இருக்கும். இந்தப் பணம் யாவும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன. அங்கு பல அசையும், அசையா சொத்துக்களில் முதலிட்டுள்ளனர். போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளனர்.

இதற்கு நிருபமாவும் அவர் கணவர் திருக்குமரனும் உதவி இருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேயின் நெருங்கிய உறவினரான நிருபமா, யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தமது அரசாங்க பொறுப்புகளை துஸ்பிரயோகம் செய்து தான், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.  
 
திருக்குமரன், நிருபமா தம்பதியினர் லண்டன் நகர மத்தியில் ஆடம்பர வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.  இவர்கள் மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியாவிலும் ரியல் எஸ்டேட்டில் முதலிட்டு உள்ளனர். இவற்றின் பெறுமதி பல மில்லியன் டாலர்கள். அதை விட பல மில்லியன் டாலர்கள் பணமாக துபாய், சீஷெல்ஸ், மற்றும் பல நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்பிலிடப் பட்டுள்ளன.
 
உலகில் எந்த முதலாளிக்கும் தேசப்பற்று, இனப்பற்று அறவே கிடையாது. இலங்கையில் ஒரு பிரதி அமைச்சராக பதவி வகித்தவரே தனது தனது நாட்டு மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு சென்று பணக்கார நாடுகளில் முதலிட்டிருக்கிறார். குறைந்த பட்சம் அவற்றை தாய்நாட்டில் முதலிட்டிருந்தாலாவது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
 
நிருபமாவின் கணவர் திருக்குமரன் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். இவர் தனது வணிகத் தொடர்புகளை பயன்படுத்தில் பல்வேறு போலி நிறுவனங்கள், அறக்கட்டளைகளை உருவாக்கி மேற்கத்திய பணக்கார நாடுகளில் முதலிட்டுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு பதினெட்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கையில் ஒரு தனி மனிதனின் சராசரி வருட வருமானம் நாலாயிரம் டாலர்கள்.

திருக்குமரன் நடேசன் ஆரம்பத்தில் இருந்தே "அரசியலில் ஈடுபடாத" வணிகத்தை மட்டுமே கவனித்து வந்த தொழிலதிபராக தன்னைக் காட்டி வந்துள்ளார். அத்துடன் இலங்கையில் பல இந்துக் கோயில்களுக்கு வாரி வழங்கி தன்னை ஒரு கொடை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஈழப்போர் தீவிரமடைந்த தொண்ணூறுகளில் தான் இவரது வணிகமும் கொடிகட்டிப் பறந்துள்ளது. 
 
திருக்குமரன் நடேசன், இலங்கையில் முதலிடுவோருக்கு ஆலோசனை வழங்குவதாக சொல்லி Pacific Commodities Ltd என்ற பெயரில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார். Pacific Commodities Ltd, வரியில்லா சொர்க்கம் என்று அழைக்கப்படும் பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் மற்றும் ஜெர்சி தீவுகளில் பதிவுசெய்யப் பட்டது. அதனால் எவ்வளவு பணம் இலங்கையை விட்டு வெளியே சென்றுள்ளது என்ற விபரம் தெரிய வராது.

அத்துடன் நடேசன் அப்போதே கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹில்டன் ஹோட்டலின் உரிமையாளராகி விட்டார். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹோட்டல் நிர்வாகக் குழுவின் (board of directors, Hotel Developers Ltd) தலைவராக இருந்து வருகிறார். இவரது மாதச் சம்பளம் அப்போதே நான்கு இலட்சம் (Rs 400,000) இலங்கை ரூபாய்கள். அவரது மனைவி நிருபமா அப்போது அரசியலில் ஈடுபடவில்லை.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள யு.என்.பி. ஆட்சியில் இருந்தது. ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் இலங்கையில் ஒரு மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பதை அவர்களும் தடுக்கவில்லை. அதுவும் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு தமிழ் தொழிலதிபரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 
 
இலங்கையில் அப்போதும் இப்போதும் இன உணர்வை விட பண உணர்வே பிரதானமானது. இனப்பற்று, தேசப் பற்று எல்லாம் அப்பாவி உழைக்கும் வர்க்க மக்களை ஏமாற்றுவதற்கான வார்த்தை ஜாலங்கள். ராஜபக்சே குடும்பத்தினர் பூர்வீகத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு நிலவுடைமைப் பரம்பரையை சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் பல ஏக்கர் கணக்கிலான வயல் காணிகளும், தென்னந் தோப்புகளும் இவர்களுக்கு சொந்தமாக இருந்துள்ளன. 

*****

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அடிக்கடி திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பயணச் செலவை பொறுப்பெடுத்து, தனியார் விமானத்தில் அனுப்பி வைத்தவர் கணநாதன் என்ற ஒரு தமிழ் தொழிலதிபர். மகிந்த திருப்பதிக்கு சென்ற காரணம் சாமி கும்பிடுவதற்காக அல்ல. அனேகமாக வெளிநாடுகளில் உள்ள வணிக முதலீடுகளை மேற்பார்வை செய்வதற்கான பயணங்களாக அவை இருக்க வேண்டும்.

யார் இந்த கணநாதன்? இவரைப் பற்றிய தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. பெரும்பாலும் முன்பு புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்த பினாமியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர் முடிந்த பின்னர் பல முன்னாள் பினாமிகள் புலிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்களில் பலர் தற்போது ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகிறார்கள். கணநாதனும் அவர்களில் ஒருவராக இருந்தால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வேலுப்பிள்ளை கணநாதன் ஏற்கனவே உகண்டாவில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப் பட்டிருந்தார். கோத்தபாய ராஜபக்சேயின் ஆட்சிக் காலத்தில் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த வருடம், அதாவது 2021 ம் ஆண்டில் இருந்து தான், உகண்டாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இலங்கையை சேர்ந்த நிறுவனங்கள் உகண்டாவில் முதலிடத் தொடங்கின. இந்த நிறுவனங்கள் யாவும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்கள் என்றே கருதப் படுகின்றன. இவற்றை எல்லாம் மேற்பார்வை செய்யும் பொறுப்பு ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியான கணநாதனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பெரும்பான்மை தமிழர்களிடம் ராஜபக்சே சகோதரர்கள் பற்றிக் கருத்துக் கேட்டால் "அவர்கள் சிங்கள இனவாதிகள் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகள்" என்று பதில் கூறுவார்கள். அதே மாதிரி பெரும்பான்மை சிங்களவர்களிடம் கேட்டால் "அவர்கள் சிங்களத் தேசியவாதிகள் அல்லது இலங்கை தேசப் பற்றாளர்கள்" என்று பதில் கூறுவார்கள். (பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு முன்னரான நிலைமை.) இரண்டு பக்கமும் உள்ள "தேசியவாதிகள்" (அல்லது இனவாதிகள், ஏதோ ஒன்று) இப்படியான அரசியலை தான் கட்டமைத்துள்ளனர். இனப்பிரச்சினை நிலவும் நாட்டில், குறிப்பிட்ட ஒரு இனத்தவர் தாம் பேசுவது தேசியவாதம் என்றும், எதிரி இனத்தவர் பேசுவது இனவாதம் என்றும் பொதுவாக பேசிக் கொள்வார்கள்.

அந்தந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாமே சிறந்த தேசியவாதிகள் என்பது மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆகவே, ராஜபக்சே சகோதரர்களும் தாமே தலைசிறந்த தேசியவாதிகள், இனப்பற்றாளர்கள், தேசப் பற்றாளர்கள் என்பது மாதிரியான பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைத்து வைத்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்த விம்பத்தை உடைத்தெறிந்து விட்டது. 
 
ஒரு காலத்தில் தேசியத் தலைவர்கள் என்று போற்றிய அதே மக்கள் இன்று தேசத் திருடர்கள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்சே சகோதரர்கள், இனிமேலும் தேசியவாதம், இனவாதத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்த முடியாத நையறு நிலையில் உள்ளனர். இது தேசியவாதம் பேசும் அத்தனை பேருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்.

Thursday, April 14, 2022

Gota Go Home - ஊழல்மய அதிகாரிகளும் வீட்டுக்கு செல்லுங்கள்

 *சிங்கள மொழியில் வந்த ஓர் அருமையான பதிவு...... பொருத்தம் கருதி தமிழில் தருகின்றேன்*


சோவியத் நாட்டில் கல்வி கற்று விட்டு தற்போது இங்கிலாந்தில் வசித்து கொண்டிருக்கும் எனக்கு இங்கு சொல்லப்படும் எதுவும் புதிதானது அல்ல.


இங்கு சொல்லப்படும் ஒவ்வொன்றும் பிழையானது என நான் பார்க்கக் கற்றுக் கொண்டிருப்பதாலும், இவற்றை விடவும் பாரதூரமான விடயங்களை எதிர்த்துப் பேசியதால் நாட்டைவிட்டே  பாய்ந்து தப்பிச் செல்ல வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதால் எனக்கோ எனது குடும்பத்திற்கு இங்கு உள்ள விடயங்கள் பொருந்துவதில்லை என்பதாலும், இங்கு சொல்லப்படும் தவறான விடயங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் கொஞ்சமாகவோ அதிகமாகவோ சம்பந்தப்படுவதனால் உங்களுக்கு இதனை சொல்லலாம் என்று இருக்கின்றேன்.


*நாங்கள் விடும் தவறுகளை நாங்களே இனம் கண்டு திருந்திக் கொண்டால் நாடும் தானாக திருந்தும் என நான் நம்புகின்றேன்.*


'கோடா கோ ஹோம்' என கோஷம் எழுப்பும் அதிகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது, நாட்டின் இந்த நிலைக்குக் காரணம் கோட்டாவும் அவரது 225ம் தான் என்று.


என்றாலும் அவர்களோடு சேர்த்து இதற்கு வகை கூறவேண்டிய இன்னும் சில தரத்தவரும் இருக்கின்றனர்.


*அவர்கள்.....*


◼️இவ்வளவு காலமும் தனது வயிற்றுப் பசியை மாத்திரம் கருத்திற்கொண்டு தேர்தல் காலங்களில் வழங்கும் சாராய போத்தலுக்கும் உணவுப் பொதிக்கும் ஏமார்ந்து அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்கிய *வாக்காளர்கள்......*


◼️ பொதுமக்களது வரிப்பணத்தால் சும்மா சம்பளம் எடுத்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும் பொறுப்பு உணர்வின்றி மக்களை அலைக்கழிக்கும் *அரச ஊழியர்கள்.....*


◼️ப்ராடோ, டிஃபண்டர்களுக்கு ஒரு சட்டமும்  ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சட்டத்தையும் அமல்படுத்தும் *போலீசார்...,.*


◼️அரச வாகனத்தை, அதன் சாரதியை தனது மனைவிக்கு சொப்பிங் செல்ல பயன்படுத்தும் *ஆயுதப் படை வீரர்கள்......*


◼️பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு வழங்க தரும் கடதாசி களை அவர்களுக்கு கொடுக்காமல் கட்டுக்கட்டாக தனது வீட்டுக்கு  கடத்தும் *பரீட்சை மண்டப பொறுப்பாளர்கள்....*


◼️தொழில் பதவிகளைப் பெற தனது திறமையை, பட்டத்தை ஒரு புறம் தள்ளிவிட்டு கேவலம் கெட்ட அரசியல்வாதிகள் முன் *முழந்தாளிடும இளைஞர்கள்.....*


◼️சாதாரண பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி விமானத்தில் First Class ல் செல்லும் அரசியல்வாதியின் முன் நெளிந்து குழைந்தும், மத்திய கிழக்கில் வேர்வை சிந்தி நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும், அதே விமானத்தில் Economic Class ல் பயணிக்கும் உழைப்பாளிளோடு எரிந்து விழும் *விமான பணியாளர்கள்....*


◼️தமக்கு போதிய வருமானம் இருந்தும் களவில் சமூர்தி எடுக்கவும் கிராமசேவகர் ஐ பயன்படுத்தி கள்ள சான்றிதழ் பெற்று தன் பிள்ளைக்கு ஸ்கொலஷிப், மஹாபொல எடுக்கவும் முனையும் *பெற்றோர்கள்......*


◼️ஒவ்வொரு வீட்டிலும் Solar Panel பயன்படுத்தினால் மின்சார பிரச்சனை பெருமளவு தீரும் என அறிந்திருந்தும், தமது வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் அத்திட்டத்தை மண்ணாக்கும் *மின்சார சபை எஞ்சினியர்கள்.....*


◼️மிளகாய் தூளில் செங்கல்லையும் மஞ்சள் தூளில் மாவையும் மிளகு விதையோடு பாப்பாசி விதையையும் கலந்தும், பழங்களுக்கு காபைட் அடித்து, பலாக்காயை ஹாப்பிக் கொண்டு குளிப்பாட்டி, அப்பாவி விவசாயிகளிடம் இரண்டு துட்டுக்கு எடுக்கும் அரிசி மரக்கறி பழங்களை நெருப்பு விலைக்கு விற்று பகற் கொள்ளை அடிக்கும், *கள்ள நிறுவை செய்யும் வியாபாரிகள்......*


◼️சீருடையில் நெஞ்சுக்கு மேல் இடது புறத்தில் அரச இலட்சினை பொருத்திய நிலையிலும், தேசிய வனாந்தரங்களில் மரங்களை வெட்டி  மொரட்டுவைக்கு களவில் அனுப்புகின்ற *வன ஜீவி பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள்.....*


◼️குறைந்த விலையில் உள்ள மருந்தை நோயாளிக்கு சிபாரிசு செய்யாமல் மருந்து கம்பெனிகளின் கமிஷனுக்காக அதிக விலையுள்ள மருந்தை சிபாரிசு செய்யும், தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற பரிசோதனைகளுக்காக அனாவசிய செலவை ஏற்படுத்தும் *வைத்தியர்கள்.....*


◼️குப்பை கூளங்களை ஏற்றிச் செல்ல வரும் போது கையில் கொஞ்சம் துட்டை திணிக்காவிட்டால் அடுத்த முறை ஏற்றாமல் போட்டு விட்டுச் செல்லும் *நகரசபை ஊழியர்கள்....,*


◼️வீடுகளில் முடங்கிக் கிடந்து அரசியல்வாதிகளை தூற்றிக்கொண்டு இருக்காமல் குறைந்தது ஒரு கொச்சிக்காய்  கன்றையாவது நடத் திராணியற்ற *முதியவர்கள், பெண்கள், பிள்ளைகள்........*


*இவர்கள் மட்டுமா.....?*


அறையில் இருந்து வெளியேறும் போது மின் சுவிட்சை அணைக்காத......


 ஒழுங்காக தண்ணீர் பைப்பை மூடாத.......


கையிலிருக்கும் டொபி பேப்பரை நிலத்தில் கண்டபடி போடுகின்ற.....


உட்காரும்  கதிரைக்குக் கீழே சுவிங்கத்தை ஒட்டுகின்ற.......


கண்ட கண்ட இடங்களில் எச்சில் உமிழுகின்ற.....


தனது குழந்தையின் பம்பஸ் ஐ நீர் நிலைகளிலும் பாதைகளிலும் எறிகின்ற.....


மனிதருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வீதி சட்டங்களை மீறுகின்ற.......


 பஸ் -  புகைவண்டி சன நெரிசலில் பெண்களை தொல்லை படுத்துகின்ற......


அடுத்த பிள்ளையின் இடத்தை பறித்து தனது  பிள்ளையை வரிசையில் முன் நிறுத்துகின்ற,.....


மின்சார மீட்டரில் வயரை மாற்றி பாவித்த  மின்சாரத்தை விட குறைந்த கட்டணத்தை களவில் செலுத்துகின்ற....


 வீட்டின் அழுக்கு தண்ணீரை பாதைக்குத் திருப்பி விடுகின்ற......


பொலித்தீன் பிளாஸ்டிக் என்பவற்றை தீ வைத்து எரித்து சூழலை மாசு ஆக்குகின்ற.......


இன்னும் இவ்வாறான அசிங்கமான செயல்களை ஒவ்வொரு நாளும் செய்கின்ற நீங்களும் கோட்டாவோடு சேர்ந்து 

*கோ ஹோம்......*


_நீங்கள் சின்ன திருடர்கள் அவர்கள் பெரும் கொள்ளைக்காரர்கள் என நினைக்க வேண்டாம்...._


*மொத்தத்தில் நீங்கள் எல்லோரும் திருடர்களே....*

Wednesday, March 16, 2022

எனது பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுள்ளது!

 நண்பர்கள் அனைவருக்கும்அறியத்தருவது,

 

எனது பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுள்ளது. புதிய கணக்கையும் திறக்க முடியாது. அதை Artificial Intelligence (AI) தொழில்நுட்பம் உடனே கண்டுபிடித்து விடுகிறது. 

ஆகவே இதுவரை காலமும் என்னை பேஸ்புக்கில் பின்தொடர்ந்தவர்கள் பின்வரும் தளங்களுக்கு வர வேண்டுகிறேன்:

Twitter

@kalaiy https://twitter.com/kalaiy

vk.com (இது "ரஷ்ய பேஸ்புக்". இலவசம். ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம்.) 

VK இல் எனது ID: https://vk.com/kalaiyarasan

 You Tube

கலையகம்: https://www.youtube.com/channel/UCJHMD0ISt5Laqu8mP1U_fxA

 odysee.com (இது யூடியூப் பாணியிலான வீடியோ தளம்.)

கலையகம்: https://odysee.com/@KalaiMarx:7


உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நன்றி, 

வணக்கம்.


Thursday, March 03, 2022

உக்ரைன் போர் Special Report - காணொளிப் பதிவுகள்

 உக்ரைன் போர் Special Report 



ரஷ்யா- உக்ரைன் போர் பின்னணி | அரண் செய் நேர்காணல்



ரஷ்யாவின் புதிய உலக ஒழுங்கு: "உக்ரைன் நாஸி எதிர்ப்பு போர்"

 


உக்ரைனில் தலைதூக்கும் நிறவெறித் தாக்குதல்கள் 



Saturday, February 19, 2022

தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்!


தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்! ஆம், நீங்கள் சரியாகத் தான் வாசித்தீர்கள். வட கொரியா அல்ல,தென் கொரியா தான். இது பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் தென்கொரியர்கள் பற்றிய தகவல் அல்ல. (அதுவும் நடக்கிறது தான்.) ஆனால், கிம்மின் "சர்வாதிகார" ஆட்சி நடக்கும் வடகொரியாவில் இருந்து தப்பியோடி, சுதந்திரமாக வாழ்வதற்காக "ஜனநாயக" ஆட்சி நடக்கும் தென் கொரியாவில் தஞ்சம் கோரிய அகதிகள் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள்.

தென் கொரியாவில் தஞ்சம் கோரி வாழ்ந்து வந்த வடகொரிய அகதியான Han Sung-ok எனும்  42 வயது தாயும், அவளது ஆறு வயது மகனும் வீட்டில் சாப்பிட எதுவுமில்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். ஆமாம், முதலாளித்துவ சொர்க்கபுரியான ஒரு "செல்வந்த" நாட்டில், ஒரு குடும்பம்  சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்தது செத்த அவலம் நடந்திருக்கிறது! (ஆதாரம்: She fled North Korea for a better life. She died with her young son in an apartment in Seoul

இந்த சம்பவம் நடந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன. இருப்பினும்,  இந்தக் கொடுமை தென் கொரியாவில் நடந்த படியால்பெருமளவில் ஊடகக் கவனத்தை பெறவில்லை. இதுவே வடகொரியாவில் நடந்திருந்தால், இந்நேரம் தமிழ் ஊடகங்கள் எல்லாம் மாறி மாறி ஒப்பாரி வைத்து கதறி அழுதிருப்பார்கள். என்ன செய்வது? அவர்கள் இறந்தது முதலாளித்துவ சொர்க்கபுரியான தென் கொரியாவில் அல்லவா? அதனால் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்கிறார்கள். 

அந்தத் தாயும் மகனும் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு தண்ணீர் மீட்டர் அளக்க வந்த பரிசோதகர், ஒரு வீட்டிலிருந்து வித்தியாசமான மணம், பிண வாடை வந்த படியால், உடனடியாக பொலிசிற்கு அறிவித்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்த நேரம், அந்த வீட்டிற்குள் இரண்டு அழுகிய பிணங்களும் வெறுமையான குளிர்சாதனப் பெட்டியும் இருந்தன. அவர்கள் மாதக் கணக்காக சாப்பாடு எதுவும் இல்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். 

ஏற்கனவே அந்தக் குடும்பத்தினர் பல மாதங்களாக வீட்டு வாடகை, எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த முடியாமல் அவதிப் பட்டிருக்கிறார்கள். பில்லுக்கு மேல் பில் என, கடனுக்கு மேல் கடன் சேர்த்து வைத்திருந்திருக்கிறார்கள். வேலையுமின்றி, அரச உதவியுமின்றி, தெருவில் உணவுக்காக பிச்சை கேட்டு கையேந்த வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளே பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள். 

ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் வட கொரியாவில் இருந்திருந்தால் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்கள். வட கொரியாவில் யாரும் வீட்டு வாடகை கட்டுவதில்லை. எல்லோரும் சொந்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். எரிபொருள் கட்டணம் மிக மிகக் குறைவு. தண்ணீருக்கு செலவே இல்லை. எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதனால் வருமானம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானியத்தில் கிடைக்கின்றன. அதனால் யாரும் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால், நமது தமிழ் ஊடகங்கள் என்ன சொல்கின்றன? வட கொரியாவில் மக்கள் எல்லோரும் பட்டினி கிடப்பதாக புளுகுகின்றன. சாப்பாடு இல்லாமல் புல்லைத் திண்கிறார்கள் என்று ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவார்கள். அதையும் நம்புவதற்கு நாட்டில் ஏராளமான முட்டாள்கள் இருக்கிறார்கள். 

அது சரி, தென் கொரியாவுக்கு வருவோம். பனிப்போர் காலத்தில் தென் கொரியாவுக்கு வந்த வட கொரிய அகதிகளுக்கு, அரசு தாராளமாக நிதியுதவி செய்தது. அகதிகள் வந்தவுடன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து, வீட்டு வசதிகளையும் செய்து கொடுத்து வந்தது. உண்மையில் வடகொரியாவில் வாழ்பவர்களுக்கு வசதி, வாய்ப்புகள், பணம் மீதான ஆசை காட்டி அவர்களை தென் கொரியாவுக்கு வரவழைக்கும் வகையில் கவர்வது தான் அதன் நோக்கம். 

ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு தென் கொரிய அரசு வட கொரிய அகதிகளுக்கு நிதி ஒதுக்குவது படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பனிப்போர் முடிந்த பின்னர், உலக ஒழுங்கு மாறி விட்டது. மேலும், அந்தக் காலகட்டத்தில் வட கொரியாவில் வரட்சி, வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சம் ஏற்பட்ட படியால் பெருமளவு அகதிகள் வந்து விடுவார்கள் என்று அஞ்சி இருக்கலாம். தொண்ணூறுகளுக்கு பின்னர், வட கொரிய பொருளாதாரம் மாற்றமடைந்து, தென் கொரிய நிறுவனங்களும் முதலிடும் வகையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் வந்து விட்டது. அதனால் தற்போது எந்தவிதமான சித்தாந்த முரண்பாடுகளும் கிடையாது. 

வட கொரியாவில் வறுமை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதனால், வடகொரியாவில் இருந்து செல்லும் அகதிகள், தென் கொரியாவுக்கு பிழைப்பு தேடிச் செல்கிறார்கள் என்று சொன்னாலும் தவறில்லை. ஆனால், அவர்கள் அறியாத உண்மை ஒன்றுள்ளது. தென் கொரியாவிலும் வறுமை இருக்கிறது. அது வட கொரிய வறுமையை விட பல மடங்கு கொடுமையானது என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். 

உண்மையில் தொண்ணூறு சதவீதமான வட கொரிய அகதிகள், அவர்களது தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தென் கொரியா பற்றிய கற்பனைகளை வளர்த்து வந்ததாக தெரிவிக்கிறார்கள். பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை காட்டும் தென் கொரிய படங்கள், டிராமா சீரியல் பார்த்து விட்டு, இப்படித் தான் சாதாரண தென் கொரிய மக்கள் வாழ்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தாங்களும் அங்கே சென்றால் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என கனவு கண்டிருக்கிறார்கள். ஆனால், தென் கொரியாவுக்கு வந்த பின்னர் தான் யதார்த்தம் அவர்களது முகத்தில் அறையும். 

வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் அனைவரும் இனத்தால் கொரியர்கள் தான். ஒரே கொரிய மொழி தான் பேசுகிறார்கள். ஆனால், வட கொரியர்களின் வட்டார பேச்சு வழக்கு வித்தியாசமாக இருக்கும். அதுவே அவர்களை காட்டிக் கொடுத்து விடும். வட கொரிய பேச்சு மொழியை கேட்டால் வேலை தர மாட்டார்கள். தனியார் முதலாளிகள் வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டுவார்கள். தொழிற்துறையில் பெரும்பாலும் தனியார்மயம் கோலோச்சும் நாட்டில் அரச உதவியை எதிர்பார்க்க முடியுமா? ஏமாற்றம். மிகப் பெரிய ஏமாற்றம். 

தென் கொரிய பாடசாலைகளில் படிக்கும் வட கொரிய பிள்ளைகள் பேசும் வட்டார வழக்கு காரணமாக பிற மாணவர்களின் கேலிக்கு உள்ளாகிறார்கள். இதனால் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வேலைக்கு செல்பவர்கள் பலர். இந்தக் காலத்தில் எவனாவது டிப்ளோமா இல்லாமல் வேலை கொடுப்பானா? அதனால், அதிக உடல் உழைப்பை கோரும் அடி மட்ட வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமை. 

ஏன், வட கொரியாவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், மேல் மட்ட பதவிகளில் இருந்தவர்களுக்கும் அது தான் நிலைமை. தென் கொரியாவில் அவர்களது தகுதிக்கேற்ற வேலை கிடைக்காது. அவர்களும் சாதாரண கூலித்தொழில் செய்து பிழைக்க வேண்டிய அவல நிலை. முன்பு வட கொரிய இராணுவத்தில் நல்ல பதவியில் இருந்த ஒருவர், இன்று தென் கொரியாவில் குப்பைகள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்வதை விட வட கொரியாவில் இருந்து செத்திருக்கலாம் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். 

வட கொரிய அகதிகள் வரும் பொழுதே கடன் சுமையுடன் தான் வருகிறார்கள்.  சட்டவிரோத எல்லை கடத்தல் மூலம் சீனா ஊடாக அழைத்து வரும் "பயண முகவர்களுக்கு" ஆயிரக்கணக்கான டாலர்கள் கடன் கொடுக்க வேண்டி இருக்கும். அந்தக் கடனை அடைப்பதற்காகவே தென் கொரியாவில் வருடக் கணக்காக வேலை செய்ய வேண்டி இருக்கும். அரச உதவித் தொகையும் மிச்சம் பிடித்து கடனை அடைப்பதற்கு செலவாகி விடுகிறது. அதனால் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. தென் கொரியாவில் தஞ்சமடைந்த வட கொரிய அகதிகள் பட்டினி கிடந்தது சாவதற்கு இதுவும் ஒரு காரணம். 

பெரும்பாலும் வட கொரிய அகதிகளுக்கு இலகுவாக தென்கொரிய நண்பர்கள் கிடைப்பதில்லை. அவர்கள் இவர்களை தாழ்வாக பார்ப்பார்கள். அதைவிட தென்கொரிய தேசியவாதிகளின் துன்புறுத்தல்கள் வேறு. வடகொரியா எப்போதாவது ஏவுகணை சோதனை செய்து விட்டால், தேசியவாதிகளின் உணர்வுகள் உச்சத்திற்கு சென்று விடும். அந்நேரம் கண்ணில் அகப்படும் வடகொரியர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். 

சரி, தஞ்சம் புகுந்த நாட்டில் தான் வரவேற்பில்லை. தாயகத்தில் இருக்கும் உறவுகளோடு பேசி துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றால், அதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். அதாவது, தென்கொரியாவில் வாழும் யாரும் வடகொரியாவில் இருப்பவர்களுடன் தொடர்பு வைக்க முடியாது.  தொலைபேசி, கடிதப் போக்குவரத்து எதுவுமே இருக்கக் கூடாது. ஆமாம், தென் கொரிய அரசு தான் இந்தளவு கடுமையான தடைகளை போட்டிருக்கிறது. 

தென்கொரியாவுக்கு வந்த அகதிகளில் குறிப்பிட்ட அளவில் சிலர் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள். ஏனையோர் வாழ்க்கையை நடத்த  முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். தென் கொரியாவில் தொட்டதெற்கெல்லாம் பணம். கையில் காசு இல்லையா? யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தெருவில் படுத்தால் என்ன, செத்துத் தொலைந்தால் என்ன கண்ணை மூடிக் கொண்டு சென்று விடுவார்கள். 

இப்படியான நரகத்தில் வாழப் பிடிக்காமல், பலர் வடகொரியாவுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். அதுவும் சட்டவிரோதமாகத் தான்.  தென் கொரியாவில் வாழும் அகதிகளில் குறைந்தது சில ஆயிரம் பேராவது வடகொரியாவுக்கு திரும்பிச் சென்று விட்டார்கள். உண்மையில் தென் கொரிய அரசு அனுமதித்தால் இன்னும் பல ஆயிரம் அகதிகள் தாமாக திரும்பிச் சென்று விடுவார்கள். ஆனால், அதற்கான எல்லா வழிகளையும் தென் கொரிய அரசு அடைத்து வைத்திருக்கிறது.