Wednesday, January 26, 2011

எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!!

"ஊழல், வேலையில்லாப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, இவற்றை எதிர்த்தே போராட்டத்தில் குதித்துள்ளேன். எமது சிறிய கனவுகளைத் தான் கேட்டுப் போராடுகிறோம்." - கெய்ரோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 26 வயது இளைஞனான ரத்வா கபாணி.

எகிப்தில் முபாரக்கின் முப்பதாண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வருகின்றதா? ஜனவரி 25 ம் தேதி, எகிப்தில் "தேசிய போலிஸ் தினம்" என்பதால், அன்று விடுமுறை. ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தலைநகர் கெய்ரோவில் மட்டுமல்லாது, அலெக்சாண்ட்ரியா போன்ற பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. எகிப்தில் பல தசாப்தங்களாக, இந்தளவு மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் எதுவும் இடம்பெறவில்லை. கலவரத் தடுப்பு போலிசின் பிரசன்னத்தைக் கண்டு அஞ்சாமல், மக்கள் ஆக்ரோஷமாக போராடினார்கள். ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க தண்ணீரை பீச்சியடித்த வாகனம் ஒன்றைக் கூட கைப்பற்றினார்கள். சில இடங்களில் போராடும் மக்களுடன் மோத முடியாது போலிஸ் பின்வாங்கியது. இருப்பினும் போலிஸ் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். முப்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

துனிசியாவில் நடந்த புரட்சி, எகிப்திய மக்களையும் எழுச்சி கொள்ள வைத்தது. "துனிசிய மாதிரி", எகிப்திலும் பின்பற்றப்பட்டது. பேஸ்புக் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டது. சுமார் 90000 பேர் கலந்து கொள்வதாக தெரிவித்தனர். தற்போது எகிப்தில், டிவிட்டர் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. துனிசியாவில் முகம்மது வுவாசி என்ற வேலையற்ற இளைஞனின் தீக்குளிப்பு மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. அதே போன்று ஒரு மாதத்திற்கு முன்னர் போலிஸ் வன்முறைக்கு பலியான காலித் சைத் என்ற இளைஞனின் மரணம் எகிப்தியர்களை எழுச்சியுற வைத்தது. காலித் சைத் போலிசின் அத்துமீறல் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால், பொலிசாரால் கொல்லப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். காலித் சைத் போதைப்பொருள் உட்கொண்டதால் மரணமுற்றதாக போலிஸ் சோடித்த கதையை யாரும் நம்பவில்லை. மனித உரிமை நிறுவனங்களின் வற்புறுத்தலால், அரசே சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்து வழக்கு தொடுத்தது. மக்களை போராட்டத்திற்கு தள்ளிய காரணிகளில் போலிஸ் அராஜகமும் ஒன்று.

எகிப்தின் என்பது மில்லியன் சனத்தொகையில் அரைவாசிப் பேர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது நாளாந்த வருமானம் இரண்டு டாலர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. வேலையில்லாப் பிரச்சினை, தரமற்ற கல்வி, ஏழைகளை எட்டாத மருத்துவம் போன்ற குறைபாடுகளால் தமது அடிப்படை தேவைகள் பறிக்கப்பட்டதை எகிப்தியர்கள் உணர்கின்றனர். சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலையேற்றம் எகிப்தையும் பாதித்துள்ளது.
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடுகின்றனர். துனிசியாவில் நடந்ததைப் போல, பெரும்பான்மை மக்களின் தார்மீகக் கோபம் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. துனிசிய சர்வாதிகாரியை வீழ்த்திய மக்கள் புரட்சியின் பின்னர், உலகெங்கும் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். "எமக்கு உணவும், சுதந்திரமும், ஜனநாயகமும் வேண்டும். தேசத்திற்காக உயிரையும் கொடுப்போம்." போன்ற கோஷங்களை எழுப்பும் மக்கள், சர்வாதிகாரம் வீழும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக சூளுரைக்கின்றனர். முப்பதாண்டு காலம் தேசத்தை பாழாக்கிய சர்வாதிகாரியின் முன்னாள் ஒரேயொரு தெரிவு மட்டுமே உள்ளது. "முபாரக், உனக்காக விமானம் காத்துக் கொண்டிருக்கிறது!"
எகிப்திய மக்கள் எழுச்சியை பேஸ்புக்கில் பின்தொடர்வதற்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.
We are all Khaled Said
ஆர்ப்பாட்டங்களை காட்டும் வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன:
Chasing the Egyptian riot police

கெய்ரோ நகரின் மையப் பகுதியான Tahrir சதுக்கத்தில் போலிஸ் வாகனத்தை தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

Sunday, January 23, 2011

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

"குறிப்பாக ஒடுக்கப்பட்ட அரபு மக்களுக்கும், முழு உலகிற்கும் துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்."
- ஒரு துனிசிய பதிவர்

துனிசிய புரட்சி ஒன்றுமில்லாத இடத்தில் இருந்து எழவில்லை. வெறும் கலவரங்கள் மட்டும் புரட்சியை தோற்றுவிப்பதில்லை. காட்டுத்தீ பரவுவதற்கு காய்ந்த மரங்களும், வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கும். அத்தகைய அகவய, புறக் காரணிகள் நமது கண்களுக்கு தெரிவதில்லை. துனிசிய மக்களின் எழுச்சியையும், பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்து வந்தன. அதனால் தமிழிலும் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை. தகவல்கள் கூட குறைவாகவே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன. துனிசிய புரட்சியில் இருந்து பெற்ற படிப்பினைகளை, தமிழ் உழைக்கும் மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரலாற்றுக் கடமை எமக்குண்டு. துனிசிய புரட்சி எவ்வாறு சாத்தியமாகிற்று? எத்தகைய அரசியல் சக்திகள் வழிநடத்தின? அது ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியா? பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஏன் தலையிடவில்லை?

முதலில் துனிசிய மக்கள் எழுச்சி பற்றிய செய்திகள், ஏன் இவ்வளவு காலதாமதமாக நமக்கு வந்து சேர்ந்தன என்று பார்ப்போம். ஒரு மாதத்திற்கு முன்பு வரை, மக்கள் எழுச்சியினால் துனிசிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடுவார், என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீண்ட காலமாக, துனிசியா எந்தவிதமான உள்நாட்டுப் பிரச்சினைகளுமற்ற ஸ்திரமான ஆட்சியைக் கொண்ட நாடாக அறியப்பட்டது. அயல்நாடுகளில் நடந்த அசம்பாவிதம் எதுவும் துனிசியாவில் நடக்கவில்லை. மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போர், குண்டுவெடிப்பு, எதுவுமே இன்றி துனிசியா அமைதிப்பூங்காவாக காட்சியளித்தது. டிசம்பர் 17 , "சிடி புசிட்" என்ற சிறிய நகரத்தில், முஹமட் புவாசிசி என்ற இளைஞன் தீக்குளித்து மரணமடைந்தான். ஜனவரி 14 , ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடினார். இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் நடந்த மாற்றங்கள் தாம், அரபுலகின் முதலாவது மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது.

பென் அலியின் வெளியேற்றத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இருந்து தான் பி.பி.சி. துனிசியா பக்கம் கவனத்தை திருப்பியது. அது வரையில் அல்ஜசீரா மட்டுமே செய்தி தெரிவித்துக் கொண்டிருந்தது. துனிசியாவின் பெரு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாத காலமாக, நாட்டின் பல பாகங்களிலும், தினசரி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலிஸ் சுட்டது. குறைந்தது பத்துப் பேராவது மரணமடைந்தனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை என்பது என்று, ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த செய்திகள் எதுவுமே வெளியுலகத்தை எட்டவில்லை. சர்வதேச ஊடகங்கள் அத்தனை கரிசனையுடன் நடந்து கொண்டன.

சர்வதேச ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம், இது மேற்குலகின் நிகழ்ச்சிநிரலின் படி நடக்கவில்லை என்பது தான். ஈரானில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு, மேற்குலக ஊடகங்களில் இரட்டிப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும், அந்த மாணவியின் இரத்தம் தோய்ந்த முகம் அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிரசுரமானது. மேற்குலக தலைவர்கள், கண்டனத்திற்கு மேல் கண்டனங்களை விடுத்துக் கொண்டிருந்தார்கள். துனிசிய சம்பவங்களை யாரும் அந்தளவு கவனம் எடுத்து பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பென் அலி தப்பியோடிய விமானம் மேலெழும் வரையில், அமெரிக்க அரசு வாய் திறக்கவில்லை. மிகவும் தாமதமாகத் தான் வாஷிங்டனில் இருந்து அறிக்கை வந்தது. அதுவும் எப்படி? "துனிசிய அரசின் நடவடிக்கைகளையிட்டு கவலையடைகிறோம். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கைகளும் சமாதான வழியில் இருக்காததால் கவலையடைகிறோம்." (இது தானா நடுநிலைமை?)

துனிசிய மக்கள் தமது புரட்சியை, "மல்லிகைப்பூ புரட்சி" என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மேற்குலக ஊடகங்கள் அந்த சொற்பிரயோகத்தை புறக்கணித்துள்ளன. இதே ஊடகங்கள், லெபனானில் நடந்ததை "சிடர் புரட்சி" என்று வர்ணித்தன. (அமெரிக்கா அப்படி பெயரிட்டு அழைத்தது.) லெபனானின் சிடர் புரட்சி, சிரிய நாட்டு படைகளை வெளியேற்றுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் "ரோஸ் புரட்சி", உக்ரைனில் "ஆரஞ்சுப் புரட்சி" என்று கலர் கலரான புரட்சிகள் நடந்துள்ளன. பிற்காலத்தில் அதிகாரத்திற்கு வந்த, மேற்குலக சார்பு எதிர்க்கட்சிகளின் வர்ணத்தின் பெயரால் புரட்சிகள் நடந்தன. அந்தப் புரட்சிகளுக்கு எல்லாம், வெளிநாட்டு நிதி, மேற்குலக தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க கோடீஸ்வரரின் "சோரோஸ் நிதியம்" ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்த தேவையான செலவுகளை பொறுப்பேற்றது. துனிசிய புரட்சி இவற்றில் இருந்து பெருமளவு வேறுபடுகின்றது. எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் தூண்டுதலோ, நிதியுதவியோ இன்றி, தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் சர்வாதிகார அரசை தூக்கியெறிந்தனர்.

ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் டிவிட்டரை பயன்படுத்தியதை, மேற்குலக ஊடகங்கள் "டிவிட்டர் புரட்சி" என்று பெருமையாக குறிப்பிட்டன. துனிசியாவிலும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி புரட்சி நடந்தது. நிச்சயமாக, இணையப் பாவனையாளர்கள் மட்டுமே புரட்சி நடத்தி விட முடியாது. வேலையற்ற இளைஞர்களின் கலவரம், உழைக்கும் வர்க்க மக்களின் ஆர்ப்பாட்டம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் போன்ற பல்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கன. இணையத்தை விட, இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு புரட்சிக்கு பெரிதும் உதவியது. வீடியோ கமெரா கொண்ட செல்லிடத் தொலைபேசிகள், இன்று எல்லோர் கைகளிலும் பரவலாக புழங்குகின்றன. தெருவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் உடனுக்குடன் படமாக்கப்பட்டன. இப்போது தான் நேரடியாக தொலைபேசியில் இருந்து இணையத்திற்கு அனுப்பும் வசதி வந்து விட்டதே? கலவரங்கள், ஆர்ப்பாட்டங்களை காட்டும் வீடியோக்கள் சுடச்சுட "யூ டியூப்" பில் வெளியிடப்பட்டன. துனிசிய அரசின் அடக்குமுறையினால், பல யூடியூப் வீடியோக்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஏற்கனவே துனிசியாவில் எதிர்க்கட்சிகளின் இணையத்தளங்களை பார்வையிடத் தடை இருந்தது. ஆயினும், டிவிட்டர், பேஸ்புக் தடை வருவதற்கு முன்னர், புரட்சியாளர்கள் முந்திக் கொண்டனர். கடுமையான செய்தித் தணிகை இருந்த நாட்டில், டிவிட்டர், பேஸ்புக் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்னர் அந்தத் தகவல்கள், தெருவில் ஆர்ப்பாட்டம் செய்த பாமரர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள், பதிவர்கள், இணையப் பாவனையாளர்கள் அனைவரதும் கூட்டு முயற்சி இன்றி புரட்சி சாத்தியமாகி இருக்காது.

துனிசிய பதிவர்கள், டிவிட்டர், பேஸ்புக் பாவனையாளர்கள் மட்டுமல்ல, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த துனிசியர்களும் விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியுள்ளனர். ஆனால் எந்தவொரு மேற்குலக ஊடகமும் இவற்றை கூர்ந்து கவனித்ததாக தெரியவில்லை. (ஈரான் மாணவர்களின் டிவிட்டர் தகவல்களுக்கு அவை தமது இணையத்தளத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தன.) துனிசிய மக்களில் பெரும்பான்மையானோர், அல்ஜசீரா தொலைக்காட்சி மூலமே தமது நாட்டில் நடக்கும் மாற்றங்களை அறிந்து கொண்டனர். சம்பவங்களை உடனுக்குடன் தெரிவித்தது மட்டுமல்ல, விவாதங்கள், ஆய்வுகள் மூலம், அல்ஜசீரா மக்கள் மனதை மாற்றிக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட, துனிசிய மக்களின் மனவுறுதி இறுதி வெற்றியை தேடித் தந்தது. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தால் தண்டனைக்குள்ளாவோம் என்று தெரிந்து கொண்டும் வீதியில் இறங்கி போராடினார்கள். சனத்தொகையில் சரிபாதியான பெண்களும் தீரத்துடன் போராட்டத்தில் குதித்தனர். புரட்சியில் பலதரப்பட்ட மக்கள் பங்குபற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வேலையற்றவர்கள், உழைக்கும் வர்க்க மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

எந்த நாட்டிலும் பாட்டாளிகளின் எழுச்சி மட்டுமே புரட்சியை வெல்ல போதுமானதல்ல. நடுத்தர வர்க்கம் எந்தப் பக்கம் சாய்கின்றது என்பதும் அவசியம். பொருளாதார நெருக்கடியினால் ஒரு சிறிய மேட்டுக்குடியினர் மட்டுமே தப்பிப் பிழைக்க, பெரும்பான்மை நடுத்தர வர்க்கமும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்திற்கு ஊதியம் குறைவது பிரச்சினை. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு பிரச்சினை. வேலையற்றவர்களுக்கோ உணவு வாங்க பணமற்ற பிரச்சினை. ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் ஒன்று சேரும் போது தான் புரட்சி சாத்தியமாகின்றது. துனிசியாவில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பக்கம் சார்ந்திருந்தமை பெரிய பலமாகும். துனிசிய தொழிலாளர் கூட்டமைப்பு, வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தியது. குறிப்பாக மக்கள் எழுச்சி நகரங்களில் பரவிய பொழுது, ஒரே நாளில் நாடளாவிய வேலை நிறுத்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அரசியல் கொள்கையைப் பொறுத்தவரை, "இஸ்லாமிய- தேசியம்" அல்லது "அரபு- தேசியம்" பேசிய யாருமே ஊர்வலங்களில் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு வர்க்க அரசியல் ஒத்துக் கொள்ளாது. ஒதுங்கியே இருந்தார்கள். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பல்வேறு இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அதிகமாக காண முடிந்தது. இதே நேரம், இராணுவம் எந்தப் பக்கம் நிற்கின்றது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இராணுவம் மக்களின் பக்கம் நிற்பதாக பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். உண்மையில் பென் அலி வெளியேறுவதை இராணுவமும் விரும்பியதால், அமைதியான சதிப்புரட்சிக்கு உடந்தையாக இருந்திருக்கும் என்ற சந்தேகமும் உண்டு. இதுவரை காலமும் பாதுகாப்புப் படைகள் வசம் மட்டுமே ஆயுதங்கள் இருந்துள்ளன. தற்போது பொதுமக்கள் கைகளில் ஆயுதங்கள் சென்று விட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. இராணுவத்தில் புரட்சிக்கு ஆதரவான சிலராலேயே அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்பதால், இராணுவம் எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் கருதப்படுகின்றது.

துனிசியாவின் புரட்சி எத்தகைய குணாம்சத்தைக் கொண்டிருந்தது என்பதை ஆராய்வது அவசியம். எப்போதும் மேற்குலக நிலைப்பாட்டில் இருந்து உலகைப் பார்ப்பது பல தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. மேற்குலக ஊடகங்கள் சில இதனை "விக்கிலீக்ஸ் புரட்சி" என்று குறிப்பிட்டன. விக்கிலீக்ஸ் கசிய விட்ட இரகசியங்கள் பல ஏற்கனவே பலருக்கு தெரிந்த சங்கதி தான். அவற்றை இப்போது தான் மேலைத்தேய வெகுஜன ஊடகங்கள் கண்டுபிடித்துள்ளன. தாங்கள் சொல்லித் தான் உலக மக்களுக்கு இவை எல்லாம் தெரிய வேண்டும், என்பது போன்ற நினைப்பில் மிதக்கின்றனர். துனிசியாவில் சர்வாதிகாரி பென் அலி குடும்பத்தின் ஊழல் குறித்து, விக்கிலீக்ஸ் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது மகா அபத்தம். அந்த கேபிளை எழுதிய அமெரிக்க தூதரக அதிகாரிக்கு அப்போது தான் ஞானம் பிறந்திருக்கலாம். 23 வருடங்களாக கொடுங்கோல் சர்வாதிகாரியின் கீழ் வாழும் துனிசிய மக்களுக்கு, இவை எல்லாம் அன்றாட வாழ்வியல் அனுபவம். சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய எத்தனையோ அரசியல் ஆர்வலர்கள், இரு தசாப்தங்களாக பிரான்சில் வாழ்கின்றனர். அவர்கள் அங்கிருந்த படியே பென் அலியின் அடக்குமுறை ஆட்சி பற்றியும், ஊழல் பற்றியும் தமக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். துனிசிய சர்வாதிகாரி மேற்குலக சார்பானவர் என்ற ஒரே காரணத்திற்காக, சர்வதேச ஊடகங்கள் அரச எதிர்ப்பாளர்களை புறக்கணித்து வந்துள்ளன.

கடந்த வருடம் பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மகாநாடு நடந்தது. பிரான்சில் அரசியல் அகதியாக வாழும், துனிசிய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஒருவரும் வந்திருந்தார். அவர் உரையாற்றும் பொழுது இஸ்லாமிய- தேசியவாதிகளுடனான வெகுஜன எதிர்ப்பு முன்னணியில் தமது கட்சி பங்கெடுப்பதை குறிப்பிட்டார். குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த கம்யூனிஸ்டுகளுக்கு, "பிற்போக்கு மதவாதிகளுடனான கூட்டமைப்பு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரசாரமான விவாதத்தின் முடிவிலும், அவர்களை தனது கருத்தோடு இணங்க வைக்க துனிசிய பிரதிநிதியால் முடியவில்லை. அரபுலகில் புரட்சி என்பது, "இன்டிபதா" என்றே புரிந்து கொள்ளப்படுகின்றது. இன்டிபதா என்றால் "அநீதிக்கு எதிரான மக்கள் எழுச்சி" என்றும் அர்த்தம் கொள்ளலாம். இன்டிபாதாவில் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது, பிற பாதிக்கப்பட்ட வர்க்கங்களும் கலந்து கொள்வார்கள். அது சிறு முதலாளிகளாக இருக்கலாம், மத்தியதர வர்க்கமாக இருக்கலாம். மேற்கத்தய அரசியல் சித்தாந்தப்படி புரிந்து கொள்ள வேண்டுமானால், இதனை "ஜனநாயகப் புரட்சி" என்று அழைக்கலாம். சோஷலிசப் புரட்சிக்கு முந்திய, புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து மாவோ கூட நிறைய எழுதியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சி, பூர்ஷுவா வர்க்கத்தின் எழுச்சியாக இருந்த போதிலும், அது வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் வகித்ததை கார்ல் மார்க்ஸ் வரவேற்றுள்ளார்.

துனிசியாவில் இடம்பெற்றது பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, அன்றி சோஷலிசப் புரட்சியோ அல்ல. அத்தகைய மாயை யாருடைய மனதிலும் இல்லை. துனிசிய மக்கள் மேற்குலகில் நிலவுவதைப் போல, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடினார்கள். கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வசதி, இவை எல்லாம் மேற்கு ஐரோப்பாவில் தனி மனிதனுக்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள். மேற்கத்திய நெறிகளுக்கு உட்பட்ட தனி மனித உரிமைகள் தான், துனிசிய மக்களின் குறிக்கோளாக இருந்துள்ளது. புரட்சி அவற்றை சாத்தியமாக்கும் என்றே எல்லோரும் நம்புகின்றனர். அத்தகைய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக துனிசிய மக்களுக்கு உதவ வேண்டிய மேற்குலகம், ஒதுங்கியிருந்து மௌனம் சாதிக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதாக கூறும் மேற்குலகின் இரட்டைவேடம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

துனிசிய தொழிற்துறையில் 40 % முதலீட்டை செய்துள்ள பிரான்ஸ், சர்வாதிகாரி பென் அலிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தது. அதற்கு காரணம், பிரான்ஸ் துனிசிய மக்கள் பால் கொண்ட கரிசனை அல்ல. பிரான்சில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த துனிசியர்கள் வாழ்கிறார்கள். தனது நாட்டினுள்ளும் துனிசிய மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள பிரான்ஸ் தயாராக இல்லை. துனிசியா எண்ணெய் வளமற்ற சிறிய நாடு. அதனால் அமெரிக்காவும் தலையிடாமல் பிரச்சினையை தவிர்த்துக் கொள்கின்றது. "எண்ணெய் இல்லாத சின்னச்சிறு துனிசியாவில் வாழ்ந்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்." என்று புரட்சி வென்றதற்கான காரணமாக துனிசியர்கள் கருதுகின்றனர்.


தற்போது எழுந்துள்ள அபாயம் என்னவெனில், சர்வதேசம் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதன் மூலம் புரட்சியை தோல்வியடைய வைக்க முனையலாம். வேலையில்லாப்பிரச்சினை, உணவுப்பொருள் விலையேற்றம் போன்ற பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க, திறந்த சந்தைக் கொள்கையை முன்வைக்கலாம். "சந்தைக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்." என்று நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கையை போதிப்பார்கள். ஏற்கனவே ஐ.எம்.எப். ஆலோசனைப் படி, திறந்த சந்தை, உலகமயமாக்கல் என்று கிளம்பித் தான் பிரச்சினை இந்தளவு விஸ்வரூபம் எடுத்தது. சர்வதேச சமூகம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கும். சிறிது காலத்தின் பின்னர் துனிசியர்கள் மீண்டும் ஒரு புரட்சியை நோக்கி தள்ளப்படுவார்கள். துனிசிய புரட்சியை, உலக நாடுகளில் தோன்றும் பல புரட்சிகளின் ஓர் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.

Wednesday, January 19, 2011

"லைலா": துனிசியாவின் தனியார்மயக் கொள்ளைக்காரி

துனிசியாவின் முதல் பெண்மணியும், முன்னாள் அதிபர் பென் அலியின் இரண்டாவது தாரமுமான லைலா, அந் நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபராவார். லைலா பற்றிய மரியாதையான வார்த்தை எதுவும் சாதாரண மக்கள் வாயில் இருந்து வராது.
முதல் பெண்மணி பெயரை சொன்னால், பொது மக்கள் அவரை ஒரு "விலைமாது" என்று தூற்றுகின்றனர். டியூனிஸ் நகரில் சிகையலங்கார நிபுணராக பணியாற்றியவர், எப்படியோ பென் அலியின் மனத்தைக் கவர்ந்து விட்டார். பிடித்தாலும் புளியங் கொம்பாக பிடித்தார். வேறு யாரையாவது மணந்திருந்தால், தேசத்தின் பொருளாதாரத்தையே குடும்பச் சொத்தாக மாற்றியிருக்க முடியுமா?

லைலாவின் குடும்பப் பெயர் டிரபெல்சி (Trabelsi). (லிபிய தலைநகரமான திரிபோலியை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம்.) பென் அலி, 1992 ல் லைலாவை திருமணம் செய்து பட்டத்து ராணியாக்கியதுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. அவரது பத்துக்கும் குறையாத சகோதரர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் குறைந்தது ஒரு வர்த்தக நிறுவனமாவது பரிசாகக் கிடைத்தது. துனிசியா புரட்சிக்கு வித்திட்ட காரணிகளில் ஒன்றாக கருதப்படும் விக்கிலீக்ஸ் கேபிளிலும் அந்த தகவல் குறிப்பிடப்பட்டது. துனிசியா ஊழலினால் உள்ளுக்குள் அழுகிக் கொண்டிருப்பதை அமெரிக்க தூதுவரே எழுதியுள்ளார். பென் அலியின் மனைவி லைலாவும், அவரது டிரபல்சி இனக்குழுவும் மாபியா கிரிமினல்கள் போன்று செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மக்கள் எழுச்சியின் பொழுது, லைலாவினதும், அவரது உறவினர்களுக்கும் சொந்தமான நிறுவனங்கள் யாவும் தாக்கப்பட்டன. அவை சூப்பர் மார்க்கெட்கள் என்றால், அங்கிருந்த பொருட்களை மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஐ.எம்.எப். முன்னெடுக்கும் பொருளாதாரத்தை தனியார்மயமாக்கும் திட்டம் பல நாடுகளில் ஊழலுக்கு காரணம். முன்பெல்லாம் இதைச் சொன்னால், "இடதுசாரிகளின் வெற்றுப் பேச்சு" என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் நிராகரித்து வந்தார்கள். ஆனால் துனிசியா தொடர்பான விக்கிலீக்ஸ் கேபிள், தனியார்மயத்தினால் விளைந்த தீமைகளை விலாவாரியாக எடுத்துச் சொல்கின்றது. ஐ.எம்.எப். தனியார்மயத் திட்டத்தை செயற்படுத்த ஆலோசனை கூறிய உடனேயே, பென் அலியின் குடும்ப உறுப்பினர்கள் அரச நிறுவனங்களை வாங்கி விட்டார்கள். ஆளும் வர்க்கம் என்பதால், தனியார்மயமாக்கல் என்ற பெயரில், அவர்களே அரச நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினார்கள். பின்னர் அதே நிறுவனங்களை பிற தொழிலதிபர்களுக்கு இலாபத்துடன் விற்றுள்ளனர். விக்கிலீக்ஸ் கேபிளில் அமெரிக்க இராஜதந்திரியே அப்படியான சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்.

ஐ.எம்.எப். தனியார்மயத்தை அறிவிப்பதற்கு முன்னமே, பென் அலியின் புதல்வன் மார்வன் மப்ரூக் "Attijari வங்கி" யின் 17 % பங்குகளை வாங்கினார். தனியார்மய அமுலாக்கத்தின் போது, 35 % பங்குகளாக அதிக லாபத்திற்கு விற்கப்பட்டன. துனிசியாவில் தனியார்மயமாக்கல், அந்த "தேசத்தின் மாபெரும் பகற்கொள்ளை" என்று அழைக்கப்படுகின்றது. துனிசியாவின் பொருளாதாரத்தில் எந்தத் துறையையும் டிரபல்சி குழுவினர் விட்டு வைக்கவில்லை. வங்கி,ஹோட்டல், வீட்டு மனை, போக்குவரத்து, தொலைத்தொடர்பு எல்லாவற்றிலும் அவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. தனியார்மயமாக்கல் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்த டிரபல்சி ஆளும் வர்க்கம், மக்கள் எழுச்சியைக் கண்டு ஓடி ஒளிந்தது. விமான நிலையத்தில் தப்பியோட முயன்ற டிரபல்சி உறுப்பினர் ஒருவர், இனந்தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.

ஜனாதிபதி பென் அலி குடும்பம் நாட்டை விட்டு தப்பியோடும் பொழுதும் வெறுங்கையோடு ஓடவில்லை. மத்திய வங்கியின் சேமிப்பில் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றார்கள். 45 மில்லியன் யூரோ பெறுமதியான, ஒன்றரை தொன் தங்கப்பாளங்கள் பென் அலியின் மனைவி லைலா தன்னோடு எடுத்துச் சென்றுள்ளார். முதலில் லைலாவின் கையில் தங்கத்தை கொடுக்க மத்திய வங்கி நிர்வாகி மறுத்து விட்டாலும், பென் அலி வற்புறுத்தியதால் கொடுத்திருக்கிறார். பென் அலி குடும்பம் தற்போது சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில், கொள்ளையடித்த தங்கத்துடன் ஓய்வெடுக்கின்றனர். லைலா சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்த செய்தியை கேள்விப்பட்ட துனிசியா மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஏனென்றால், துனிசியாவில் பெண்கள் பர்தா அல்லது முக்காடு அணிவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தவர் அவர் தான். இன்று பழமைவாத சவூதி அரேபியாவில், லைலா கருப்பு ஆடையால் போர்த்து மூடிக் கொண்டு செல்லும் காட்சியை மனக்கண்ணால் கண்டு இரசிக்கின்றார்கள்.

துனிசிய புரட்சியில் இஸ்லாமிய- அரசியல்வாதிகள் பங்கெடுத்ததாக இது வரை எந்த தகவலும் இல்லை. வேலையில்லாப் பிரச்சினை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, போன்ற பொருளாதாரக் காரணிகள் தான் துனிசியாவில் மக்கள் எழுச்சியை தூண்டியது. இஸ்லாமியவாதிகளைப் பொறுத்த வரை, இவையெல்லாம் "காலாவதியான இடதுசாரிகளின் கொள்கைகள்." "மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல. உயிரை விட மத உணர்வு மேலானது." என்று நம்மூர் தமிழ் உணர்வாளர்கள் போல வாதாடுகிறவர்கள். அவர்கள் இந்த புரட்சியில் கலந்து கொள்வார்களா? அரபுலகின் முதலாவது புரட்சியில் துனிசிய கம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்டுகள் பெருமளவில் கலந்து கொண்டனர். கணிசமான அளவு பெண்களும் ஆர்ப்பாடங்களில் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

Tuesday, January 18, 2011

"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை

அமெரிக்காவின் உதவியுடன் பதவியை காப்பாற்றிக் கொள்பவர்கள். அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்கள். எல்லோருக்கும் பென் அலியின் கதை ஒரு சிறந்த பாடம். அரபுலகின் முதலாவது மக்கள் எழுச்சியின் விளைவாக, உயிருக்கு பயந்து நாட்டை விட்டோடிய துனிசியா ஜனாதிபதி பென் அலி, இன்று சவூதி அரேபியாவில் சிறைக்கைதி போல வாழ்கின்றார். அதிகார மமதையுடன், டாம்பீகமான பணக்கார வாழ்வு வாழ்ந்தவர். துனிசியாவில் பல வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர். 23 வருடங்களாக ஒரு தேசத்தின் அதிபதியாக எதிர்க்க ஆளின்றி அதிகாரம் செலுத்தியவர். இன்று உடல் தளர்ந்த வயோதிபராக, 74 வயதில் ஒதுங்க இடமின்றி பரிதாபகரமாக அலைந்தார். முதலில் மால்ட்டாவிடம் அடைக்கலம் கேட்டார். பின்னர் நெருக்கமான அயலுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள பிரான்சிடம் தஞ்சம் கோரினார். ம்ஹ்ம்.... யாருமே அந்த அரசியல் அகதியை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இத்தனை காலமும் அமெரிக்காவின் விசுவாசியாக இருந்ததால், ஒபாமாவுக்கு தொலைபேசிப் பார்த்தார். வாஷிங்டனில் பென் அலியின் அழைப்புக்கு யாரும் பதில் சொல்லவில்லை. இறுதியில் மதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அடிப்படைவாத சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.

பென் அலி காலம் பூராவும் யார் யாருக்கு சேவை செய்தாரோ, அவர்கள் யாரும் ஆபத்து நேரத்தில் உதவவில்லை. அரேபிய சகோதரர்களை பகைத்துக் கொண்டு, இஸ்ரேலுடன் நட்பு பாராட்டினார். ஒரு காலத்தில் துனிசியாவில் PLO தலைமையகத்தை இஸ்ரேல் குண்டு வைத்து தகர்த்தது. அப்படியிருந்தும் அதை எல்லாம் மன்னித்து விட்டு, முன்னாள் பிரதமர் ஆரியல் ஷரோனை கூப்பிட்டு விருந்து கொடுத்தார். ஆரியல் ஷரோன் ஒரு போர்க்குற்றவாளி என்று உலகமே குற்றஞ்சாட்டினாலும், தயக்கமின்றி கை குலுக்கினார். இருந்தும் என்ன? ஆபத்து நேரத்தில் உற்ற நண்பனுக்கு உதவ இஸ்ரேல் முன் வரவில்லை. இது தான் யதார்த்தம். சில தமிழர்கள் இப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுமாறு எங்களை அழைக்கிறார்கள். அவர்களுக்கும் பென் அலி போல அடி பட்டால் தான் ஞானம் பிறக்கும்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், தலைநகரான தியூனிசில் டாக்சியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் செல்லும் பாதை தடுக்கப் பட்டிருந்தது. வேறு வழியால் சுற்றிச் சென்றதால் 20 நிமிடம் அதிகமாக பிடித்தது. டாக்சி சாரதி வழி நெடுக, அமெரிக்கர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் தனது அரசை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலம். அயல் நாடான அல்ஜீரியாவுடன் ஒப்பிடும் போது, துனிசியாவில் தனி நபர் வருமானம் அதிகம். அதனால் பெரும்பாலான துனிசியர்கள் பென் அலியின் சர்வாதிகாரத்தை பொறுத்துக் கொண்டார்கள். ஆனால் முன்பு பிரான்ஸ் இருந்த இடத்தில் இன்று அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று நடந்து கொண்டிருந்த ஈராக் போரினால், அரபு இன உணர்வுகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம். அதனால் அரசு பகிரங்கமாக அமெரிக்கா பக்கம் நின்றதை, துனிசிய மக்கள் விரும்பவில்லை. துனிசியாவில் பயணம் செய்த நாட்களில் நான் சந்தித்த அனைவரும் அந்த விஷயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதால், அங்கே போவதற்கு முன்னம் எனது பிரெஞ்சு மொழி அறிவை சற்று மெருகூட்டிக் கொண்டேன். நான் தட்டித் தடுமாறி துனிசியர்களுடன் பிரெஞ்சில் சம்பாஷணையை தொடங்கினால், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். சுற்றுலாப்பயணிகளின் வருகை மட்டுமல்ல, அமெரிக்காவின் நெருக்கமும் ஆங்கில மொழி கற்றோரின் அதிகரிப்புக்கு காரணம். சர்வதேச வர்த்தக சமூகத்திற்காக, துனிசியாவில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகை கூட வெளி வந்து கொண்டிருந்தது. அமெரிக்கா அல்கைதாக்கு எதிரான போரில் வென்றதோ இல்லையோ. துனிசியாவில் அத்தகைய அமைப்புகளை அடியோடு அழித்து விட்டார்கள். மசூதியில் அரசியல் பேசினால் கூட, இரகசியப் போலீசார் பிடித்துச் சென்று சிறையில் போட்டார்கள். தற்போது நடந்துள்ள புரட்சியில் இஸ்லாமிய மத அரசியல் வாசகங்களைக் கொண்ட பதாகைகளை காணவில்லை என்று பலர் "வருத்தப்பட்டார்கள்." அப்படி வருத்தப் பட்டவர்கள் மேற்குலக ஊடகவியலாளர்கள். புரட்சிக்கு இஸ்லாமிய முலாம் பூச முடியாத வருத்தம் அவர்களுக்கு.

இதுவரை துனிசியாவை பார்க்காதவர்கள், அது துபாய், குவைத் போலிருக்கும் என்று நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பிரான்சில் வாழும் ஒருவரை கண்ணைக் கட்டி கூட்டி வந்து டியூனிஸ் நகரில், அல்லது வட துனிசியா பகுதியொன்றில் கொண்டு வந்து விட்டால், வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. இயற்கை, நில அமைப்பு மட்டுமல்ல, கட்டிடங்கள் தெருக்கள் எல்லாமே பிரான்சின் தெற்குப் பகுதி போன்றிருக்கும். ஒரு சராசரி "முஸ்லிம் நாட்டில்" நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் அங்கே கிடையாது. தெருவோர பெட்டிக் கடையில் சாதாரணமாக பியர், வைன் வாங்கலாம். பெண்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். நகரங்களில் நட்சத்திர ஹோட்டல் டிஸ்கோதேக்கில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நங்கைகளைக் காணலாம். துனிசிய பெண்கள் மிகவும் அழகானவர்கள். ஐரோப்பிய மகளிரைப் போல கவர்ச்சியான உடை அணிவதும் சர்வசாதாரணம். ஆனால்... ஆனால்... தலையில் முக்காடு போட்ட பெண்ணை துனிசியாவில் மிக மிக அரிதாகவே காண முடியும்.

பிரான்சில் முக்காடு தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பொழுது, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பிரான்சில் அப்படி ஒரு சட்டம் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, துனிசியா அரசு முக்காடு அணிவதை தடை செய்து விட்டது. முக்காடு அணிந்தவர்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் என்று பென் அலி நினைத்தாரோ என்னவோ? அல்லது மதச்சார்பற்ற லிபரல் கொள்கையை பின்பற்றுவதில் தான் மேற்குலகின் சிறந்த மாணவன் என்று காட்ட விரும்பினாரோ? காரணம் என்னவாக இருந்தாலும், பாடசாலை, கல்லூரி, அலுவலகம் போன்ற பொது இடங்களில் பெண்கள் முக்காடு அணிவதும், ஆண்கள் தாடி வைப்பதும் தடை செய்யப்பட்டது. தடையை மீறுபவர்களை காவல்துறை கைது செய்தது. ஒரு நாளாவது போலிஸ் நிலையத்தில் வைத்திருந்து விட்டு விட்டார்கள். எவராவது பிடிவாதமாக தொடர்ந்து செய்தால், மதத் தீவிரவாதியாக கணிக்கப்பட்டார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் எந்தளவு மகோன்னத நட்பு கொண்டிருந்தாலும், ஆபத்து நேரத்தில் உதவ வர மாட்டார்கள். அமெரிக்காவை, இஸ்ரேலை விமர்சித்து நான் எழுதும் கட்டுரைகளை கடுமையாக எதிர்க்கும் "தமிழர்கள்" இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பென் அலி அளவுக்கு அமெரிக்க/இஸ்ரேல் விசுவாசம் காட்டியிருக்க முடியாது. பென் அலியின் கதை மேற்குலக விசுவாசிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். பென் அலி மட்டுமா அவரது மேற்குலக நண்பர்களால் கைவிடப்பட்டார்? ஈரானில் ஷா, பிலிபைன்சில் மார்கோஸ்.... மக்கள் புரட்சியால் விரட்டப்பட்டு நாடு நாடாக அலைந்தார்கள். எந்தவொரு மேற்குலக நாடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. இன்னும் சில துரதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் வேண்டுமா? பனாமாவில் நொரீகா, ஈராக்கில் சதாம், ஆப்கானிஸ்தானில் பின்லாடன்... இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் சி.ஐ.ஏ. யின் சம்பளப் பட்டியலில் இருந்தவர்கள். முற்காலத்தில் ஆதரித்து அரவணைத்த அதே அமெரிக்கா, பிற்காலத்தில் அவர்களை வில்லன்களாக்கியது. இந்த முன்னாள் அமெரிக்க விசுவாசிகளின் பரிதாபகரமான நிலைமை உங்களுக்கும் வர வேண்டுமா? தாராளமாக அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஆதரியுங்கள்.

Monday, January 17, 2011

விக்கிலீக்ஸ் உள்ளே, ராஜபக்ச வெளியே!

அமெரிக்க அரசின், வெளிவிவகார பொறுப்புகளை கவனிக்கும் அதிகாரிகள் பதிவு செய்து வைத்திருந்த இரகசிய தகவல்களை, விக்கிலீக்ஸ் கசிய விட்டு வருகின்றது. விக்கிலீக்ஸ் ஆரம்பத்தில், ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் அத்துமீறல்களை வெளிக்கொணர்ந்தது. அண்மைக் காலமாக உலக நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள இராஜதந்திர உறவுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் தகவல்கள் கசிய விடப் பட்டுள்ளன. அமெரிக்க நண்பர்களான மேற்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட, சீனா, ரஷ்யா, ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் குறித்து அமெரிக்கா கொண்டிருந்த கருத்துக்கள் வெளிவருகின்றன. இவை யாவும், இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இதுவரை வெளிப்படையாக பேசப்படாதவை. கேபிள்கள் மூலம் தனிச்சுற்றுக்கு விடப்பட்ட தகவல்கள், இன்று அனைவரும் பார்க்கும் வண்ணம் தெருவிலே வீசப் படுகின்றன. அந்த வகையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அரசியல் நிலைமை குறித்து தெரிவித்த தகவல்களும் வெளிவந்துள்ளன. இந்த கேபிள்கள் கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்கு இரகசியமாக அனுப்பப்பட்டவை.

அமெரிக்க தூதரகம் இலங்கை நிலவரம் பற்றி, குறைந்தது ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் கேபிள்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இவை யாவும் பிரிட்டனின் கார்டியன் நாளேட்டின் வசம் உள்ளன. விக்கிலீக்ஸ் இவற்றை பொது மக்கள் பார்வையிடலாம் என்று பகிரங்கப் படுத்தி உள்ள போதிலும், தெரிந்தெடுக்கப் பட்ட கேபிள்கள் மட்டுமே வெளியாகின்றன. நாங்கள் யாரும் எமது வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஐயாயிரம் கேபிள்களை வாசித்து கொண்டிருக்கப் போவதில்லை. அதனால் கார்டியன் அவ்வப்போது வெளிவிடும் கேபிள் தகவல்கள் மட்டுமே, அனைத்து அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும் மறுபிரசுரமாகின்றது. விக்கிலீக்சிடம் இருந்து அவற்றைப் பெற்றுக் கொண்ட கார்டியன், தான் விரும்பும் தகவல்களை மட்டும் தேர்ந்தெடுக்கின்றது. தான் விரும்பும் நேரத்தில் அவற்றை வெளியிட்டு வருகின்றது. விக்கிலீக்ஸ் டெர் ஸ்பீகல் (ஜெர்மனி) போன்ற பிற நாட்டு ஊடகங்களுக்கும் ஒரே நேரத்தில் அனுப்பி வைத்துள்ளது. ஆயினும் காலனிய தொடர்பு காரணமாக, இங்கிலாந்து ஊடகங்களுக்கு இலங்கை மீதுள்ள அக்கறை, பிற நாட்டு ஊடகங்களுக்கு இல்லை.

இலங்கை நிலவரம் தொடர்பாக இதுவரை குறைந்தது ஐந்து கேபிள் தகவல்களை கார்டியன் வெளியிட்டுள்ளது. (இன்னும் வெளிவராதவை ஆயிரக்கணக்கில் உள்ளன.) முதலாவது கேபிள், இலங்கை அரசுத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று அறிவித்தது. போர்க்குற்ற விசாரணை குறித்து தமிழர்கள் கருத்து என்ன? என்று ஆராய்ந்தது. இரண்டாவது கேபிள், இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கிய ஈ.பி.டி.பி., கருணா குழு போன்றவர்களின் குற்றங்களை எடுத்துக் கூறியது. வர்த்தகர்களை கடத்தி கப்பம் வசூலிப்பது மட்டுமல்ல, பாலியல் தொழில் போன்ற கிரிமினல் குற்றங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றது. மூன்றாவது கேபிள், புலிகளின் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டது. வன்னியில் இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்பு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியை TRO மூலம் எடுத்துக் கொண்டமை, ஆகியவற்றை கூறியது. நான்காவது கேபிள், இந்திய அதிகாரி ஒருவரின் கருத்தைக் கூறியது. இலங்கை அரசும், புலிகளும் சர்வதேச சமூகத்தை மதிப்பதில்லை என்று அவர் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார். ஐந்தாவது கேபிள், போருக்குப் பின்னர் மனித உரிமை மீறல்கள் குறைந்து விட்டதாகவும், பெருமளவு அகதிகள் மீள்குடியேற்றப் பட்டு விட்டனர் என்றும், இலங்கை அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தது.

2007 ல் அனுப்பப்பட்ட கேபிள்கள் காலத்தால் முந்தியவை. அதாவது இறுதி யுத்தம் ஆரம்பமாகி முழு வீச்சில் நடந்தது கொண்டிருந்த காலம் அது. முதலில் இலங்கை குறித்து இந்தியா கொண்டிருந்த கருத்துக்கள் சில. மோகன் என்ற இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெற்காசிய நிபுணரான அவர் இலங்கைப் பிரச்சினை குறித்து கூறியதாவது: "இலங்கை நிலவரம் மோசமாக உள்ளது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சர்வதேச சமூகத்தை அநேகமாக மதிப்பதில்லை. தமிழ் நாட்டிலிருந்து புலிகள் ஆயுதம் கடத்துவதை தடுக்க, இலங்கை, இந்திய கடற்படைகள் பாக்கு நீரிணையில் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன." ( US embassy cables: Indian officials tell US neither Sri Lanka government nor Tamil Tigers respect international community , Friday, 27 April 2007, 12:27 C O N F I D E N T I A L SECTION 01 OF 02 NEW DELHI )

அன்று போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவு வரை, பிடிவாதமாக போரை தொடர்ந்தனர். இலங்கையில் போரை இந்தியா வழிநடத்திக் கொண்டிருந்தது. அதே நேரம், தன்னை நடுநிலைமையாளனாக காட்டுவதற்கு முயன்றது. அமெரிக்காவின் தெற்காசிய பிரதிநிதியாக இந்தியா செயல்பட்டுள்ளமையை கேபிள் தகவல் மூலம் அறிய முடிகின்றது. இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்றவாறு தான் இந்தியா நடந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆயுதக் கடத்தலை தடுப்பதற்கான, கடற்படை கூட்டு ரோந்து நடவடிக்கை பற்றியும் சுட்டிக்காட்டத் தக்கது. புலிகளுக்கான ஆயுதக் கடத்தலை தடுத்து பலவீனப்படுத்திய, இலங்கை, இந்திய கூட்டு நடவடிக்கைக்கு அமெரிக்காவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் சீனா ராஜபக்சவுடன் நெருக்கமாகி வருவதை அதே கேபிளில் குமார் தெரிவித்துள்ளார்.

2007 ல், அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஒ.பிளேக் அனுப்பிய கேபிள், இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணைப்படைகளை கடுமையாக விமர்சிக்கின்றது. "புலிகளில் இருந்து பிரிந்த கருணா குழு, ஈபிடிபி போன்ற துணைப்படைகள், புலிகளின் ஆதரவாளர்களை கடத்திச் செல்வதிலும், நீதிக்குப் புறம்பான கொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆயுதக்குழுக்களுடன் தொடர்பில்லை என்று கூறும் இலங்கை அரசு, மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக் கொள்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு தெரு மூலையிலும் ஒரு இராணுவவீரனை நிறுத்து வைக்க முடிந்தளவு, படையினர் நிலை கொண்டுள்ளனர். முகமூடி அணிந்த நபர்கள் சட்டவிரோத கொலைகளில் ஈடுபடும் தருணம் பார்த்து காவலில் உள்ள படையினர் ஓய்வெடுக்கின்றனர். கொலை நடந்த இடத்தில் போலிஸ் விசாரணை நடந்தாலும் யாரும் கைது செய்யப்படுவதில்லை. ஈபிடிபி சந்தேகநபர்கள் பின் விளைவுகளை பற்றி கவலையின்றி கொலைகளில் ஈடுபடுகின்றனர். சிறுவர்களை கடத்தி இந்தியா, மலேசியாவுக்கு அடிமைகைகளாக அனுப்புவதாகவும், பெண்களை பாலியல் தொழிலாளர்களாக இராணுவத்திற்கு அனுப்புவதாகவும், ஈபிடிபி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. (SRI LANKA: GSL COMPLICITY IN PARAMILITARY , Classified By: Ambassador Robert O. Blake, Friday, 18 May 2007, 09:22)

ஈழப்போரின் ஆரம்ப காலங்களில் அதிகளவு பொது மக்களை படுகொலைகளை புரிந்த இலங்கை இராணுவம் காலப்போக்கில் அதனை குறைத்துக் கொண்டது. அன்று சிங்கள இராணுவத்தின் கண்களுக்கு தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளாக தெரிந்தார்கள். பிற்காலத்தில் புலிகளை முதன்மை எதிரிகளாக கருதிய தமிழ் துணைப்படைகள் உருவாகின. இந்த தமிழ் துணைப்படைகளின் உதவியின்றி இராணுவம் போரை வென்றிருக்க முடியாது. புலி உறுப்பினர்களை, ஆதரவாளர்களை இனம் காண்பதற்கும், அழிப்பதற்கும் அவர்களின் உதவி அவசியமாகப் பட்டது. சட்டவிரோத ஆயுதக்குழுக்களை பயன்படுத்துவதன் மூலம், ஒரு இறைமையுள்ள தேசத்தின் அரச படைகள் பொறுப்பில் இருந்து தப்பிக் கொள்கின்றன. சிறுவர்களை கடத்தி விற்றது, பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுமாறு கட்டயப்படுத்தியது போன்றன இதற்கு முன்னர் வெளிவராத புதிய தகவல்கள். அன்றிருந்த போர்ச் சூழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு பல வாய்ப்புகளை வழங்கி இருந்தது. போர் நடந்த காலத்தில் மக்கள் ஆயுதமேந்திய நபர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டி இருந்தது. ஆயுதம் வைத்திருந்தவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தது அங்கிருந்த மக்களுக்கு தெரிந்த விடயம். கருணா குழு வர்த்தகர்களை கடத்தி சென்று கப்பப்பணம் வாங்கியதையும் மேற்படி கேபிள் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற "ஜனநாயக நாடுகள்" தாம் யாரையும் ஆதரிப்பதில்லை என்று காட்டுவதற்காக, இரு தரப்பு குற்றங்களை பட்டியல் போடுவதுண்டு. அதனை "நடுநிலை தவறாமை" என்று கூறிக் கொள்கிறார்கள். அதன் படி இன்னொரு கேபிள் புலிகள் இழைத்த குற்றங்களை அமெரிக்க அரசுக்கு அறிவிக்கின்றது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்று கட்டாய ஆட்சேர்ப்பு நடந்துள்ளது. அது மட்டுமல்ல, சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பணப்பரிமாற்றம், எவ்வாறு புலிகளின் வன்னி நிர்வாகத்திற்கு திருப்பி விடப்பட்டது என்று தெரிவிக்கின்றது. TRO என்ற புலிகள் சார்பு தொண்டு நிறுவனம், அல்லது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் கணக்கிற்கு அனுப்பப்பட வேண்டுமென கட்டாயப் படுத்தப்பட்டது. புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி பயன்படுத்தப்பட்டது. வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்த நிதி, உள்நாட்டு நிர்வாக செலவினங்களுக்கு பயன்பட்டது." (SRI LANKA: TAMIL TIGERS SIPHON OFF PART OF INTERNATIONAL RELIEF FUNDS , Classified By: Ambassador Robert O. Blake, Tuesday, 12 June 2007, 03:23)

புலிகளின் யுத்த நிறுத்த மீறல்களை, கண்காணிப்புக் குழு கண்டு கொள்ளாமல் விட்டிருந்ததாகவும், அதே கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் மீண்டும் யுத்தத்தில் குதிக்கக் கூடாது என்பதற்காக, சர்வதேச சமூகம் புலிகள் அமைப்பிற்கும் சாதகமாக நடந்து கொண்டது. இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும், என எதிர்பார்த்தன. புலிகளின் அத்துமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அப்போதே எழுப்பப்பட்ட போதிலும், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறியக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளனர். ஆயினும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு மாறாக, இலங்கை அரசும், புலிகளும் போரில் குதித்தன. அத்தகைய தருணத்தில் புலிகளுக்கு உதவுவது, பிரிவினைவாதத்தை ஆதரிப்பது போலாகும். இதனால் அமெரிக்கா, இலங்கை அரசு பக்கம் சாய்ந்தது. உண்மையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் அமெரிக்க அரசுக்கும் பங்குண்டு. அவர்களைப் பொறுத்தவரை, இனப்படுகொலை போரில் தவிர்க்கவியலாத அம்சம் என்று நம்பினார்கள். (அமெரிக்க அரசு வெளிப்படையாக பேசாத போதிலும், சில அரசியல்வாதிகளும், ஊடகவியலாளரும் அந்தக் கருத்தை தெரிவித்தனர்.) சமீபத்தில் வெளியான கேபிள், போர்க்குற்றங்களை விசாரிப்பதில் அமெரிக்கா எந்தளவு அசிரத்தையாக இருந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

"ராஜபக்ச சகோதரர்களும், சரத் பொன்சேகாவும் போற்குற்றத்திற்கு பொறுப்பாளிகள். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் வரையில் எந்தவொரு விசாரணையும் நடைபெறப் போவதில்லை. அரசுத் தலைவர்கள் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதாலே, இலங்கை அரசு போர்க்குற்றங்களை விசாரணைக்கு எடுக்கத் தயங்குவதன் காரணம். இலங்கை அரசுப் படைகள் புரிந்த போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகள், இந்த அரசு பதவியில் இருக்கும் வரை நடக்கப்போவதில்லை. போர்க்குற்ற விசாரணையை, போரில் வெற்றியீட்டிய வீர நாயகர்களுக்கு எதிரான சர்வதேச சதியாகவே, இலங்கை அரசு கருதுகின்றது. இலங்கையின் இராணுவ, அரச அதிகாரிகளும், ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச சகோதரர்களும், எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். கனிஷ்ட தரத்திலான ஆயிரக்கணக்கான புலிகள் அரச படைகளினால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு, அரசு இவர்களையும் கொண்டு வந்து நிறுத்துமா என்பது குறித்த தெளிவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிவிப்புக்கு பின்னர், "குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு" ஒன்றை இலங்கை அரசு நியமித்தது." (SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 )

இதற்கு முந்திய கேபிள்களை விட, இவ்வருடம் ஜனவரி மாதம் அனுப்பிய கேபிள் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. பாதுகாப்புப் படைகளுக்கு பொறுப்பானவர்கள் என்ற வகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்க தூதுவர் தனது மேலாளர்களுக்கு அனுப்பிய கேபிள், தர்க்கரீதியிலான நியாயத்தை முன்வைக்கும் அதே வேளை, அமெரிக்காவின் அழுத்தம் தொடர்வதையும் காட்டுகின்றது. இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான போரை, அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஓர் அங்கமாக காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவை பொறுத்த வரையில், புலிகள் அல்கைதாவின் கூட்டாளிகள் அல்ல. புலிகளின் செயற்பாடுகள், அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக இருக்கவில்லை. மறுபக்கத்தில், இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் அலட்சியப் போக்குக்கும் அதுவே காரணமாக அமைந்தது. அமெரிக்கா ராஜபக்ச சகோதரர்கள் மீது போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள போதிலும், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. இன்னொரு கேபிளின் படி, போர்க்குற்ற விசாரணை குறித்து ஐ.நா. என்ன கருத்தைக் கொண்டுள்ளது? என்று அமெரிக்கா வினவியுள்ளது. இராஜதந்திர மொழியில் இது அமெரிக்க அரசின் மெத்தனப் போக்கை குறிக்கும். ஏனெனில், உண்மையிலேயே குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த வேண்டுமென்றால், அமெரிக்காவே ஐ.நா. ஆசனத்தில் இருந்து கொண்டு அதனை செய்து முடிக்கும்.

ராஜபக்சாவை குற்றவாளி என்று அமெரிக்க தூதுவர் எழுதிய குறிப்புகளை கொண்ட கேபிள் பிரசுரமான நேரம் அவதானிக்கத் தக்கது. ராஜபக்சவின் லண்டன் விஜயத்தின் போது, சனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் சம்பந்தமான வீடியோவை ஒளிபரப்பியது. இன்னொரு பக்கத்தில் பிரிட்டன் வாழ் தமிழரின் ஆர்ப்பாட்டம், அவரது ஒக்ஸ்போர்ட் உரையை இரத்து செய்ய வைத்தது. ஜனாதிபதியினது தனிப்பட்ட விஜயம் என்ற போதிலும், இந்த நிகழ்வுகள் யாவும் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. "ஜனாதிபதி ராஜபக்சவின் அவமானகரமான இராஜதந்திர தோல்வி," என்று இலங்கை ஊடகங்களே விமர்சித்தன. சனல் 4 தொலைக்காட்சியின் போர்குற்ற வீடியோ ஒளிபரப்பும், ஜனாதிபதியின் லண்டன் விஜயமும் "தற்செயலாக நடந்த நிகழ்வுகள்" என்று அந்த தொலைக்காட்சி அறிவித்தது. அதே காலத்தில், இன்னொரு "தற்செயல் நிகழ்வாக" கார்டியன் பத்திரிகை விக்கிலீக்ஸ் கேபிளை பிரசுரித்தது. இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடிய அந்த கேபிள் தகவல் குறித்து அமெரிக்க, இலங்கை அரசுகள் கருத்தேதும் கூறவில்லை. அதே நேரம், விக்கிலீக்ஸ் கேபிள் ஏற்படுத்திய தாக்கம், சில நாட்களின் பின்னர் உணரப்பட்டது.

முதலாவதாக, பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் ஹேக் தடுத்து விட்டதாகவும், இலங்கை அரசின் போர்க்குற்ற ஆதாரங்கள் மேலே வருவதும் காரணம் என்றும் கூறப்பட்டது. இலங்கைக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், முன்னர் என்றும் இல்லாதவாறு மோசமடைந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமான போது, பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் அனுப்பிய கடிதம் ஒன்று இன்னமும் வெளியிடப் படவில்லை. ஜனாதிபதியாக பொறுபேற்கும் ராஜபக்சவுக்கு வாழ்த்துச் செய்தியை அறிவிக்கும் அதே வேளை, "எவ்வாறு ஆட்சி நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்" என்று புத்திமதிகளை கூறுவதாக அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாம். ஏற்கனவே, பிரிட்டன் காலனித்துவ மனோபாவத்துடன் நடந்து கொள்வதாக அதிருப்தி நிலவுகின்றது. இன்னொரு சம்பவத்தில், பதவி விலகிச் செல்லும் பிரிட்டிஷ் தூதுவரின் விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி மறுத்து விட்டார். (The Sunday Times, 19 December 2010) இதற்கிடையே விக்கிலீக்ஸ் கசிய விட்ட அமெரிக்க தூதரக கேபிள் ஒன்று, பிரிட்டனின் இலங்கை மீதான அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. "பிரிட்டனில் வாழும் மூன்று லட்சம் தமிழ் வாக்களர்களை குறி வைத்து நடந்து கொள்வதாக," அமெரிக்க தூதரகத்தில் கடமையாற்றிய ரிச்சார்ட் மில்ஸ் எழுதியுள்ளார். ( WikiLeaks: David Miliband 'championed aid to Sri Lanka to win votes of Tamils in UK', The Telegraaf, 20 December 2010)

இரண்டாவதாக, ஆறு மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஐ.நா. ஆலோசனைக் குழுவுக்கு இலங்கை வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக, ஐ.நா. செயலாளர் பான் கி மூன் நியமித்த குழுவை, முன்னர் இலங்கை அரசு எதிர்த்து வந்தது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு இலங்கை வர விசா தர மறுத்து வந்தது. அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா. அலுவலகத்தை முற்றுகை இட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி இருந்தார். இலங்கை அரசின் தற்போதைய மாற்றத்திற்கு காரணம் என்ன? உண்மையில் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு போர்க்குற்ற விசாரணைக்குழு அல்ல என்று, பான் கி மூனே அன்றே தெரிவித்திருந்தார். இன்று வரை, ஐ.நா. எடுத்துள்ள அதிக பட்ச நடவடிக்கை அது. போர்க்குற்றம் என்ற பெயரில் எந்தவொரு தலையீட்டையும் இலங்கை அரசு கடுமையாக எதிர்த்து வந்தது. இருப்பினும் சர்வதேச அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அண்மைய விக்கிலீக்ஸ் கேபிளின் படி, ராஜபக்ச சகோதரர்களும் சாட்சியமளிக்க அழைக்கப்படலாம்.

இதன் அர்த்தம், "இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் ஏற்றப்படுவது நிச்சயமாகி விட்டது," என்பதல்ல. ஐ.நா. ஆலோசனைக் குழுவின் வருகையானது, சில சமரசங்களுக்குப் பின்னரே எட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ராஜபக்ச மட்டுமல்ல, பான் கி மூன் கூட சில அழுத்தங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டியுள்ளது. ஐ.நா. ஆலோசனைக்குழு, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆராயவிருப்பதாக பான் கி மூன் அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் நடந்ததைப் போல, இனங்களுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும், போர்க்குற்றங்களை மூடி மறைக்கவும் நல்லிணக்க ஆணைக் குழு குழு பயன்படலாம். இதுவரை நல்லிணக்க ஆணைக் குழு முன், சாட்சியம் அளித்த மக்கள் இலங்கை இராணுவம் புரிந்த குற்றங்களைப் பற்றியும் விபரமாக எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால் அவை தலைமையில் இருப்பவர்களை சம்பந்தப் படுத்தப் போவதில்லை. மேலும் நல்லிணக்கக் குழு நடந்த குற்றங்களை பதிவு செய்து வைக்குமே தவிர, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது. போர் நடந்த காலத்தில் இராணுவம், புலிகள் என்ற இரு தரப்பினர் இழைத்த குற்றங்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் எடுத்துக் கூறினர். இருப்பினும், அவர்களின் வாக்குமூலத்தின் படி, இது வரை எவரும் தண்டிக்கப்படவில்லை. ஐ.நா. ஆலோசனைக்குழுவும் அதே பாதையில் பயணம் செய்யும் போலத் தெரிகின்றது.

அமெரிக்கா போன்ற பலம் மிக்க சர்வதேச சமூகம், ராஜபக்ச சகோதரர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கும் என்று எதிர்பார்ப்பது நிராசையாகும். ஏனெனில் போற்குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் பலர் இருக்கின்றனர். தமிழர் தரப்பில், இலங்கை அரசு, படையினரைத் தவிர, வேறு யாரும் கண்ணுக்கு புலப்படுவதில்லை. (தமிழ் ஊடகங்களும் அதிகம் ஆராய்வதில்லை.) சர்வதேச நீதிமன்றம் ஒன்று, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க தொடங்கினால், இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ள புலிகள் அமைப்பின் தலைவர்கள் மீதும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும். அதற்கான சாத்தியம் இருப்பதை விக்கிலீக்ஸ் கேபிளில் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுளார்.(SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 ) மேலும் ஐ.நா. சபை கூட, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதை தவிர்க்கவியலாது. நடேசன் தலைமையில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை ஒரு முறை நினைவுபடுத்திப் பார்க்கவும். சரணடைதலை மேற்பார்வையிடச் செல்லவிருந்த ஐ.நா. அதிகாரி விஜய் நம்பியார் சாட்சியமளிக்க அழைக்கப்படலாம். அந்த தருணத்தில் கொழும்பிலேயே தங்கி விட்ட நம்பியார் கடமை தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் யூகோஸ்லேவிய நீதிமன்ற அமர்வில், அமெரிக்கா ஒரு காலத்தில் போர்க்குற்றவாளி மிலோசொவிச்சுக்கு உதவிய தகவல்கள் அம்பலமாகின. அதனால் விழிப்புற்ற அமெரிக்கா, சதாம் ஹுசைன் மீதான விசாரணைகளை சர்வதேச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லவில்லை. ராஜபக்ச விவகாரத்திலும் அதனை எதிர்பார்க்கலாம்.

போர்க்குற்றங்களை விசாரிப்பது சம்பந்தமாக, இலங்கையில் வாழும் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் கருத்து முரண்பாடுகளை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதனையும் விக்கிலீக்ஸ் கேபிளில் விரிவாக வாசிக்கலாம். (SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 ) இலங்கையில் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர், போர்க்குற்ற விசாரணைக்கு அவர்களின் ஒத்துழைப்பு கிட்டாததை குறிப்பிட்டுள்ளார். தமிழ்க்கட்சிகள் போர்க்குற்ற விசாரணைகளை வரவேற்கும் அதே சமயம், தமது அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் பாராளுமன்றத்தில் தான் இது பற்றி விவாதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். பின்விளைவுகளையிட்டு அவர் அஞ்சுகிறார். போர்க்குற்ற விசாரணைகள் நடந்தால், அது தமிழர்களுக்கே பாதகமாக அமையும் என்று பலரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். விசாரணைக்கு சாட்சியமளிக்க செல்பவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிராபத்து ஏற்படும் என்ற அச்சம் ஒரு காரணம். அதே நேரம், பெரும்பான்மை சிங்களவர்கள் தமிழர்கள் மீது வஞ்சம் தீர்க்க முற்படலாம் என்ற எதிர்காலம் குறித்த கவலை கொண்டுள்ளனர். ராஜபக்ச மட்டுமல்ல, பெரும்பான்மை சிங்கள மக்களும் இராணுவ வீரர்களை நாயகர்களாக கருதுகின்றனர். பெரும்பான்மை தமிழர்கள் புலிகள் மீது எந்தளவு மதிப்பு வைத்துள்ளனரோ, அந்தளவு மதிப்பு இராணுவம் மீது சிங்களவர்களுக்கு உண்டு. ஆகவே, "போரில் வென்ற எமது நாயகர்களை தமிழர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள்..." என்ற ஒரு செய்தி போதும், சிங்கள பேரினவாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதன் விளைவு, அப்பாவி தமிழ் மக்களை பழிவாங்குவது வரை போனாலும் யாராலும் தடுக்க முடியாது. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அப்படி எந்த விதமான பாதிப்பும் வரப்போவதில்லை. சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கும் என்று எதிர்பார்ப்பது, ஒரு சிறந்த நகைச்சுவை. ஏற்கனவே முள்ளிவாய்க்கால் வரை நடந்த இனப்படுகொலையை தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்த சர்வதேச சமூகம், இனியும் தமிழருக்கு உதவும் என்று எதிர்பார்ப்பது மடமை.

2007 ம் ஆண்டு கேபிள்கள் வெளியான நேரம் தான் இலங்கையில் போர் தீவிரமடையத் தொடங்கியது. போர்க்காலத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும், போர்க்களத்தில் படையினரின் குற்றங்கள் அதிகரிக்கும், என்பது ராஜபக்ச நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். அதனால் முன்கூட்டியே வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. அரச ஊடகங்களைத் தவிர்ந்த பிற ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணை என்ற ஒன்று வருமானால், இவர்கள் மூலமே ஆதாரங்கள் திரட்டப்படும் என்பதை சரியாக கணித்திருந்தனர். இருப்பினும் அரசு தானே அறிவித்த, பொது மக்களுக்கான பாதுகாப்பு வலையம் மீதே கனரக ஆயுதங்களைப் பாவித்தமை, சரணைடைந்த போராளிகளை சுட்டுக் கொன்றமை, போன்ற குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்தால், அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்த அதிகாரிகளும், அமைச்சரும் பொறுப்பாளிகள் என்பது வெள்ளிடைமலை. போர் முடிந்த பின்னர், ராஜபக்ச சகோதரர்கள் மட்டுமல்ல, சரத் பொன்சேகா போன்ற இராணுவ தளபதிகளும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பயமின்றி சென்று வந்தார்கள். யாரும் கைது செய்யப்படவுமில்லை. விசாரிக்கப்படவுமில்லை. அதற்கான முயற்சிகள் கூட எடுக்கப்படவில்லை.

அண்மையில் ராஜபக்ச தனது பரிவாரங்களுடன் பிரிட்டன் வந்து போகும் வரை, பிரிட்டிஷ் அரசு எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. இவ்வளவுக்கும் அவர்கள் லண்டனில் தங்கி நின்ற நாட்களில், சனல் 4 முதல் விக்கிலீக்ஸ் வரை போர்க்குற்ற செய்திகளை வெளியிட்டு பரபரப்பூட்டின. இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே பிரிட்டனில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். ஒரு அவுஸ்திரேலியப் பிரஜையான அசாஞ்சேயை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டிருந்தது. அசாஞ்சே உலகில் மிக முக்கியமாகத் தேடப்படும் கிரிமினல் குற்றவாளியாக, அல்லாது போனால் பயங்கரவாதியாக கருதப்பட்டார். இத்தனைக்கும் அசாஞ்சே எந்தவொரு போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை. இதுவரை ஒருவரையேனும் கொலை செய்யவில்லை. அமெரிக்க அரசு அசாஞ்சே முக்கியமான குற்றவாளியாக கருதக் காரணம், அவர் ஈராக்கில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஆவணங்களை பகிரங்கப்படுத்தினார். விக்கிலீக்ஸ் "அமெரிக்கப் பிரஜைகள் (அதாவது, போர்க்குற்றவாளிகள்) உயிருக்கு ஆபத்தை உண்டாக்கி விட்டதாக" ஒபாமா குற்றஞ்சாட்டினார். "இரகசிய ஆவணங்கள்" (அதாவது, போர்க்குற்ற ஆதாரங்கள்) பகிரங்கப் படுத்தப் படுவதால், தேசத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றார்.

விக்கிலீக்ஸ் அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், ஊடக தர்மத்தை மீறி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ராஜபக்ச அமெரிக்க நலன்களை அனுசரித்து நடந்து கொள்வதால், அவரை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றது. நம்மில் பலர், ஊடகங்கள் தெரிவிப்பதைப் போலத் தான் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்காக பிற நாடுகளில் தலையிடுகிறோம் என்று, ஒரு நாளும் வெளிப்படையாக கூறுவதில்லை. "மனித உரிமைகளை மதிப்பது", "ஜனநாயகத்தை மீட்பது" போன்ற மனதை மயக்கும் சொற்தொடர்களை பாவிப்பார்கள். ஒரு கொள்கைக்காக போராடுவதாக காட்டிக் கொள்ளும் போக்கு, எப்போதும் பயனளிப்பதில்லை. இலங்கை விவகாரத்தில் மேற்குலக நாடுகள் இதனை உணர ஆரம்பித்துள்ளன. அதனாலேயே அதிக அழுத்தம், நெருக்குவாரங்களை பிரயோகிப்பதில்லை. இலங்கை அரசியல் தலைவர்கள், "மேற்குலக நாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை," என்று வீராவேசமாக மேடையில் முழங்குவார்கள். ஆனால் பொருளாதார சீர்திருத்தம் யாவும், மேற்குலகின் விருப்பப் படியே நடந்து கொண்டிருக்கிறது. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளான, இலவசக் கல்வியை, இலவச மருத்துவ வசதியை, தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு, ராஜபக்ச அரசு தயாராகத் தான் இருக்கிறது. (தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட ஆதரவளிக்கின்றது.) ஆனால் மக்கள் தான் எதிர்க்கிறார்கள்.

போர்க்குற்ற விசாரணையை நடைமுறைப்படுத்தி, ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு மேற்குலகம் தயாராக இல்லை. அமெரிக்க தூதுவர் போர்க்குற்ற விசாரணை குறித்து ஆராய்ந்து அனுப்பிய கேபிள் இதனை தெளிவாக உணர்த்துகின்றது. "புலம்பெயர்ந்த தமிழர்கள் போர்க்குற்ற விசாரணைகள் உடனடியாக ஆரம்பமாக வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்த வரை, அது நடைமுறைச் சாத்தியம் அல்லாதது மட்டுமல்ல, எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் எனக் கருதுகின்றனர். சர்வதேச சமூகம் இதனை முன்னெடுக்க வேண்டுமென சில தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் அவ்வாறான எந்த முயற்சியும் ராஜபக்சவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சாதகமாகவே முடியும். சர்வதேச சமூகம், இலங்கைக்கும், அதன் நாயகர்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வதாக தீவிர பரப்புரைகளை மேற்கொள்வார்கள்." (SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL PERSPECTIVE, Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS, Friday, 15 January 2010, 12:23 )



(ஜனவரி மாத "காலச்சுவடு" இதழில் பிரசுரமானது.)