Friday, July 31, 2009

அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 12

இங்கிலாந்து அரசவம்சத்தின் கவர்ச்சி நட்சத்திரமான டயானா, அங்கோலாவில் கண்ணிவெடி அகற்றும் தொண்டராக சென்ற போது, தொலைக்காட்சிக் காமெராக்களும் பின்தொடர்ந்தன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அங்கோலாவை அப்போது தான் பலர் “கண்டுபிடித்தார்கள்”. சர்வதேச அரசியல் அறிவுள்ளவர்களுக்கு, அங்கோலாவின் தசாப்தகால சூடான பனிப்போர் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அங்கோலாவின் உள்நாட்டுப் போரை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒன்று, பனிப்போர் காலகட்டம். பதினைந்து வருடங்களாக நடந்த யுத்தத்தில் இருதரப்பாலும் வெல்ல முடியவில்லை. இரண்டு, உலகமயமாக்கல் காலகட்டம். இதில் அரச படைகள் இறுதியாக வெற்றியீட்டியுள்ளன. நவீன கால போரியல் வரலாறு குறித்து அறிய விரும்புவோருக்கு, அங்கோலா போர் ஒரு நல்ல பாடம்.

16 ம் நூற்றாண்டில் போர்த்துகேயர் வரும் வரை, அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் இருந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலுமாக மூன்று இராஜ்யங்கள் இருந்துள்ளன. ஒரு இராஜ்யத்தை ஆண்ட “நுகொலா (கிளுவஞ்சே)” என்ற மன்னனின் பெயரை, போர்த்துகேயர் முழு நிலப்பரப்பிற்கும் வைத்து விட்டனர். காலனிய காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் காலனி நாடுகளுடன் இரண்டு வகையான உறவைக் கொண்டிருந்தனர். ஒன்று, வர்த்தக மையம் ஒன்றை நிறுவி வியாபாரம் செய்வது. இரண்டு, அந்தப் பிரதேசத்தை தமது நேரடியான ஆட்சியின் கீழ் கொண்டுவருவது. ஆரம்பத்தில் போர்த்துக்கேயர்கள், அங்கோலா மன்னனுடன் சமமான இராஜதந்திர உறவை பேணி வந்துள்ளனர். இந்த நல்லுறவு காரணமாக மன்னனும் கத்தோலிக்க மதத்தை தழுவி, தேவாலயம் கட்டவும் அனுமதி அளித்துள்ளான்.

பிரேசிலுக்கு தேவையான அடிமைகளை போத்துக்கேயர்கள் அங்கோலாவில் பிடித்து ஏற்றுமதி செய்து வந்தார்கள். மன்னர்களுடன் ஏற்பட்ட வியாபாரப் பிரச்சினையை தொடர்ந்து, போர்த்துக்கேய இராணுவ நடவடிக்கைகள் அரசாட்சிக்கு முடிவு கட்டின. கரையோரப் பகுதிகளை கைப்பற்றியதுடன் நில்லாது, கனிம வளங்களை தேடி நாட்டின் உள்பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று ஆக்கிரமித்தனர். இவ்வாறு போர்த்துகேய காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 19 ம் நூற்றாண்டில், பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளை அடக்கக் கூடிய அளவு பரந்த நிலப்பரப்பை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

19 ம் நூற்றாண்டில், அடிமை வியாபாரத்தின் மீது சர்வதேச தடை வந்தது. போத்துகல்லும் அதற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அங்கோலாவை முழுமையான காலனியாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அங்கோலா கறுப்பர்களை “நாகரீகப்படுத்துவதற்காக” கிறிஸ்தவ மதம் பரப்புபவர்களை அனுப்பி வைத்தார்கள். கத்தோலிக்க மிஷனரிகள் மட்டுமல்ல, புரட்டஸ்தாந்து மிஷனரிகளும் தாராளமாக ஆட்சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு மதப்பிரிவுகளுக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே இருந்தது. கத்தோலிக்க மதத்தை தழுவுபவர்கள் போர்த்துக்கேய மொழியை சரளமாக கற்று, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.

போர்த்துக்கேயர்கள் ஆப்பிரிக்கர்களை “நாகரீகப் படுத்திய” பின்னரும் அவர்களுக்கு சம உரிமை வழங்கவில்லை. சமூக மேல்தட்டில் வெள்ளையர்களும், அவர்களுக்கு கீழே கலப்பின “mestiços” உயர்ந்த அந்தஸ்தில் இருந்தனர். வெள்ளையின ஆணுக்கும், கறுப்பின பெண்ணுக்கும் பிறந்த பிள்ளைகளே கலப்பினத்தவர்கள் ( mestiços). அன்றைய காலத்தில் ஒரு வெள்ளையின பெண் கறுப்பின ஆணுடன் உறவு வைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. தடையை மீறிய உறவு கொள்ளும் வெள்ளைப் பெண்ணை அவமானப்படுத்தி ஒதுக்கி வைப்பதுடன், கறுப்பு ஆணை கொலை செய்து விடுவார்கள். போர்த்துகேய மொழி சரளமாக பேசத் தெரிந்த ஆப்பிரிக்க கறுப்பர்கள் தனது அந்தஸ்தை உயர்த்த முடிந்தாலும், அவர்கள் மூன்றாவது தட்டிலேயே வைக்கப்பட்டனர். இதனால் இந்த மூன்றாவது பிரிவை சேர்ந்தவர்கள் assimilados என அழைக்கப்பட்டனர். போர்த்துக்கேய மொழி பேசும், மேலைத்தேய கல்வி கற்ற, கத்தோலிக்க assimilados, பிற ஆப்பிரிக்கர்களை விட நாகரீகமடைந்தவர்களாக கருதப்பட்டனர்.

1910 ம் ஆண்டு, அங்கோலா போர்த்துக்கல் நாட்டின் ஒரு பகுதியாகியது. 1932 ல் போர்த்துக்கல்லில் ஆட்சியை கைப்பற்றிய பாஸிஸ சர்வாதிகாரி சலசார் காலத்தில், வெள்ளையர்கள் அங்கோலா சென்று குடியேறுமாறு ஊக்குவிக்கப்பட்டது. அதற்கு முன்பு, போர்த்துகல்லில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதாவது பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தமான் தீவைப் போல, போர்த்துகல்லுக்கு அங்கோலா பயன்பட்டது. பிற்காலத்தில் திரவியம் தேட விரும்பும் போர்த்துகேய பிரசைகள் அனைவருக்கும் அங்கோலா திறந்து விடப்பட்டது. பெருந்தோட்டங்களில் மேலாளராக, மாவட்ட வரி அறவிடுவோராக பணியாற்ற ஆயிரக்கணக்கான வெள்ளையினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி காரணமாக புதிய தொழில் வாய்ப்புகள் பெருகின. எண்ணை அகழ்வு, வைரக் கல் பட்டறைகள் என்பன தொழிற்துறை வளர்ச்சி கண்டன. இதைத் தவிர தாயகத்தில் வாய்ப்பற்ற வெள்ளையின உழவர்கள், அங்கோலாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரனாக முடிந்தது. அங்கோலாவில் குடியேறிய வெள்ளையர்கள், மொத்த சனத்தொகையில் 6 சதவீதமாக மாறிவிட்டிருந்தனர். 1974 ம் ஆண்டு, அங்கோலா சுதந்திரமடையும் வரை மூன்று லட்சம் வெள்ளையினத்தவர்கள் வாழ்ந்து வந்தனர்.

அங்கோலாவின் வரலாற்றில் அசிமிலாடோஸ்(assimilados) உருவாக்கம் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தூய வெள்ளையரோ, அல்லது கலப்பினமோ அல்ல. கருப்பினத்தவரில் இருந்து தோன்றிய மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். எமது சமூகத்தில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கருதும் “தமிங்கிலர்கள்” என்றொரு பிரிவு உண்டல்லவா? அங்கோலாவின் அசிமிலாடோக்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். போத்துக்கேய மொழியை பேசுவதில் மட்டுமல்ல, கலாச்சாரத்தை பின்பற்றுவதிலும் பெருமை கொண்டவர்கள். தாம் இருக்க வேண்டிய இடம் ஐரோப்பா என்று நினைத்துக் கொள்பவர்கள். இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை போர்த்துக்கல்லிற்கு உயர்கல்விக்காக அனுப்பி வைப்பார்கள். பெற்றோர் தமது பிள்ளை போர்த்துக்கல்லில் படிப்பதாக ஊர் முழுக்க பெருமையடித்துக் கொண்டு திரிவார்கள்.

சனத்தொகையில் அசிமிலடோக்களின் தொகை முப்பதாயிரத்தை தாண்டி விட்டிருந்தாலும், என்னதான் போர்த்துகேய பண்பாட்டை வழுவுறாது பின்பற்றி வந்தாலும், வெள்ளையர்கள் அவர்களை சமமாக மதிக்கவில்லை. சிறந்த அரச பதவிகள் எல்லாம் ஒன்றில் வெள்ளையருக்கு, அல்லது கலப்பினத்தவருக்கே ஒதுக்கப்பட்டன. அரசின் இனப் பாகுபாட்டுக் கொள்கை அசிமிலாடோக்கள் மத்தியில் விரக்தியை தோற்றுவித்தது. இளைஞர்கள் மத்தியில் தேசியவாத சிந்தனைகள் தோன்றின. அவர்களில் ஒருவர் அகொஸ்திஞோ நேட்டோ, போத்துக்கல்லில் மருத்துவப் பட்டம் பெற்ற கவிஞர். நேட்டோவும் அவரது தோழர்களும் போர்த்துக்கல் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் போது, மார்க்சிஸ அரசியலில் ஈடுபாடு காட்டினர். போத்துகேய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆப்பிரிக்கர்களை சமமாக மதித்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் ஆப்பிரிக்கர்கள், தமது தாயகத்திற்கான தேசிய விடுதலைக்காக போராடுவது நியாயமானது என்று கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம் என்ற MPLA (Movimento Popular de Libertação de Angola) ஸ்தாபிக்கப்பட்ட போது, சில வெள்ளையின கம்யூனிஸ்ட்களும் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக அங்கோலா விடுதலைப் போராட்டம், ஒரு போதும் அனைத்து வெள்ளயினத்தவர்களுக்கும் எதிராக திரும்பவில்லை. இன்றும் பல வெள்ளையினத்தவர்கள் அங்கோலா பிரசைகளாக வாழ்வதைக் காணலாம். மார்க்சிஸ-லெனினிச தத்துவத்தை வரித்துக் கொண்ட MPLA, நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தது. இன்று MPLA மார்க்சிஸ சித்தாந்தத்தை கைகழுவி விட்டாலும், பொதுத் தேர்தல்களில் மாநகர சேரிகளில் MPLA க்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன.

ஒரு சாராரால், படித்த புத்திஜீவிகளின் இயக்கமாக MPLA கருதப்பட்டது. அங்கோலாவில் மேலும் இரண்டு இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டன. அங்கோலா தேசிய விடுதலை முன்னணி (FNLA) என்றொரு கம்யூனிச விரோத, பழமைவாத கட்சியொன்று இருந்தது. இழந்த மன்னராட்சியை மீட்பது அவர்களது கொள்கை. அதாவது ஆண்ட பரம்பரைக் கனவுகளை கொண்ட வலதுசாரி தேசியவாதம் பேசியது. 1975 ம் ஆண்டு, சுதந்திரம் கிடைத்த கையோடு, MPLA க்கும், FNLA க்கும் இடையில் அதிகாரத்திற்காக சண்டை மூண்டது. FNLA க்கு அயல்நாடான காங்கோ, மற்றும் சி.ஐ.ஏ., ஆகியன உதவி செய்தன. இருப்பினும் ஒரு வருட யுத்தத்தின் இறுதியில் FNLA தோல்வி கண்டது. எஞ்சிய உறுப்பினர்கள் காங்கோவில் தஞ்சம் புகுந்தனர். மூன்றாவது இயக்கமான “அனைத்து அங்கோலா சுதந்திரத்திற்குமான தேசிய கூட்டணி” (União Nacional para a Independência Total de Angola) UNITA பல தசாப்தங்களுக்கு நின்று பிடித்து சண்டையிட்டது. இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

அங்கோலாவின் விடுதலைப் போராட்டம், 1960 ம் ஆண்டு விவசாயிகளின் எழுச்சியுடன் ஆரம்பமாகியது. காலனிய அரசு பருத்தி பயிரிடுமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தியது. விவசாயிகள் இந்த உத்தரவுக்கு அடிபணிய மறுத்து கலகம் செய்தனர். அதே நேரம் இன்னொரு பக்கத்தில் கோப்பி தோட்ட முதலாளிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருந்தனர். இந்த நெருக்கடிகள் போதாதென்று, அதிகரிக்கப்பட்ட வரி வேறு விவசாயிகளை சுரண்டிக் கொண்டிருந்தது. விவசாயிகளை கிளர்ந்தெழ வைக்க ஏதுவான காரணங்கள் அங்கே நிலவின. அங்கோலாவின் வட பகுதியெங்கும் புரட்சித்தீ பற்றியது. காலனிய அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த இரண்டாயிரம் போர்த்துக்கேயர்கள், கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர். போர்த்துக்கேய இராணுவம் பதிலடி கொடுப்பது என்ற பெயரில், கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. குறைந்தது இருபதாயிரம் கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் பேர் அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சம் கோரினர்.

விவசாயிகள் எழுச்சி அடக்கப்பட்டாலும், விடுதலை இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. MPLA, FNLA, UNITA ஆகிய இயக்கங்கள் காலனிய அரசுக்கு எதிரான கெரில்லா போராட்டம் நடத்தின. காலனிய அரசினால் கெரில்லாக்களை எதிர்த்து போரிட முடியாமல் போனதால், புதிய தந்திரம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அங்கோலா முழுவதும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் அங்கே தங்கவைக்கப்பட்டனர். மக்கள் என்ற தண்ணீரையும், கெரில்லாக்கள் என்ற மீன்களையும் பிரிக்கும் வேலையில் போர்த்துக்கேயர் ஓரளவு வெற்றிபெற்றனர் எனலாம். 1975 ம் ஆண்டு, சுமார் 75000 போர்த்துகேய படையினரும், 20000 கெரில்லாக்களும் மீள முடியாத போர்ச் சகதிக்குள் சிக்கியிருந்தனர். அவ்வருடம் போர்த்துக்கல்லில் இடம்பெற்ற அரசியல் மாற்றம், போரில் திருப்புமுனையாக அமைந்தது.

போர்த்துகல்லில் இராணுவ இயந்திரம் சர்வாதிகாரி சலசாரின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தியது. இடதுசாரி இராணுவ அதிகாரிகள் புரட்சிக்கு தலைமை தாங்கினர். இளம் போர்வீரர்களை அரசியல்மயப்படுத்தினர். முகாம்களில் இருந்த படைகளை தலைநகர் லிஸ்பனை நோக்கி வழிநடத்திச் சென்றனர். ஒரு சில மணிநேரமே நீடித்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர், சலசார் நாட்டை விட்டு ஓடினான். மிகக் குறைந்த உயிரிழப்புகளுடன், போர்த்துக்கல்லில் சோஷலிச புரட்சி வென்றது. கம்யூனிஸ்ட்களும், சோஷலிஸ்ட்களும் லிஸ்பனில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். புதிய இடதுசாரி அரசாங்கம் ஆப்பிரிக்க காலனிகளுக்கு சுதந்திரம் வழங்க முன்வந்தது. அங்கோலா விடுதலைக்காக போராடிய மூன்று இயக்கங்களும், போர்த்துகேய அரசும், 15 ஜனவரி 1975 அன்று, “அல்கார்வே” என்ற இடத்தில் வைத்து, ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. 11 நவம்பர் 1975 அன்று பூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.

சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட நேரம், MPLA, FNLA, UNITA ஆகிய மூன்றும் சேர்ந்து கூட்டு அரசாங்கம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மூன்று இயக்கங்களும் தாம் மட்டுமே ஆள வேண்டுமென விரும்பினார்கள். போர்த்துக்கேய கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுதலின் பேரில், சோவியத் யூனியன் MPLA க்கு ஆதரவளித்தது. தலைநகர் லுவான்டாவும், எண்ணை வளமுள்ள கரையோர பகுதிகளும் MPLA இன கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அமெரிக்கா FNLA, UNITA வுக்கு ஆதரவளித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் உதவியை நிறுத்திக் கொண்டது. MPLA சந்தர்ப்பத்தை பயன்படுத்தி FNLA யை ஒழித்துக் கட்டியது. ஆனால் UNITA மட்டும் நிலைத்து நின்றது. எதிர்பாராவிதமாக தென் ஆப்பிரிக்காவின் ஆதரவு கிடைத்தது அதற்கு காரணம்.

அப்போது தென் ஆப்பிரிக்காவை வெள்ளை நிறவெறி அரசாங்கம் ஆட்சி செய்தது. பாசிச தென் ஆப்பிரிக்கா தனது எல்லையில் ஒரு சோவியத் சார்பு கம்யூனிச நாடு வருவதை விரும்பவில்லை. மறுபக்கத்தில் இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை MPLA தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய கூட்டத் தொடரில் UNITA வுக்கு தென் ஆப்பிரிக்க உதவி கிடைப்பதை அம்பலப்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவை சார்ந்து நிற்பது மனித விழுமியங்களுக்கு எதிரானதாக கருதப்பட்ட காலத்தில், அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் MPLA அரசாங்கத்தை அங்கீகரித்ததில் வியப்பில்லை. இன்னொரு பக்கத்தில் UNITA விற்கு சீனாவிடம் இருந்தும் உதவி கிடைத்து வந்தது. மாவோவின் “மூன்றுலகத் தத்துவம்” நடைமுறையில் இருந்த காலம் அது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகியன இரு வேறு உலகங்களாகவும், மிகுதியுள்ள நாடுகள் எல்லாம் மூன்றாவது உலகமாகவும் பார்த்த சித்தாந்தம் பின்னர் காலாவதியாகிப் போனது. அனேகமாக MPLA க்கு சோவியத் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதால், அதற்குப் போட்டியாக சீனா UNITA வுக்கு உதவியது.

அப்போதெல்லாம் MPLA இராணுவம் பலமானதாக இருக்கவில்லை. MPLA அரசின் நிர்க்கதியான நிலைமையை பயன்படுத்தி, தென் ஆப்பிரிக்கா அங்கோலா மீது படையெடுத்தது. அங்கோலாவின் தெற்கு எல்லையில் இருக்கும் நமீபியா, அப்போது நிறவெறி தென் ஆப்பிரிக்காவினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. தென் ஆப்பிரிக்க படையெடுப்பை சமாளிக்க முடியாமல் MPLA இராணுவம் பின்வாங்கிக் கொண்டிருந்தது. தக்க தருணத்தில் பிடல் காஸ்ட்ரோ தலையிட்டு இருக்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா அங்கோலாவை ஆக்கிரமித்திருக்கும். காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் அன்றைய சோவியத் அதிபர் குருஷோவுடன் தொடர்பு கொண்டு, ஆயுதங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். MPLA அரசை தூக்கி நிறுத்துவதற்காக 250 கியூபா வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். கியூபா படையினர் சோவியத் ஆயுதங்களை கையாள்வது தொடர்பான பயிற்சி அளிப்பதிலும், இராணுவ ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

தென் ஆப்பிரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை கியூபர்கள் விரட்டியடித்த பிறகு அமெரிக்கா விழித்துக் கொண்டது. கியூபா படைகளை வெளியேற்றினால், நமீபியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வழிவகுப்பதாக இராஜதந்திர நகர்வை மேற்கொண்டது. அதே நேரம் அமெரிக்கா UNITA வுக்கு சாம்பியா ஊடாக ஆயுதங்களை வழங்கி வந்தது. பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. MPLA வும், UNITA வும் சமபலத்துடன் போரிட்டு வந்தார்கள். போரில் யாரும் வெல்லமுடியாது என்ற எண்ணம் நிலவியது. MPLA கரையோர பிரதேசங்களில் பலமாக இருந்தது. உள் நாட்டுப் பகுதிகள் பல UNITA வின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கோர்பசேவ் காலத்தில் கள நிலைமை வேகமாக மாறியது.

1991 மே முதலாம் திகதி, அமெரிக்கா, சோவியத், ஐ.நா., மேற்பார்வையின் கைச்சாத்தான சமாதான உடன்படிக்கை போரை முடிவுக்கு கொண்டுவருமென அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் இறுதியில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன. அனைத்து அந்நியத் துருப்புகளும் வெளியேற வேண்டும். UNITA போராளிகள் தேசிய இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆயுதங்கள் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றை கண்காணிக்க Unavem என்ற ஐ.நா. சமாதானப்படை நிறுத்தப்படும். அதே ஆண்டு சோவியத் யூனியனும் மறைந்து போனதால், அமெரிக்கா உலகின் ஒரேயொரு வல்லரசாக மாறி விட்டிருந்தது. ஒப்பந்தப் படி கியூப படைகளை வெளியேற்றிய MPLA அரசு, அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கியது. ஏற்கனவே அங்கோலாவின் எண்ணைக் கிணறுகளை அமெரிக்க கம்பெனிகள் நிர்வகித்து வந்தன. அங்கோலா எண்ணை முழுவதும் இனி தனக்குத்தான் என்ற மகிழ்ச்சியில், அமெரிக்கா MPLA அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. பகைவர்கள் நண்பர்களான இன்னொரு கதை இது.

இதற்கிடையே UNITA இயக்கம் சர்வதேச அரசியல் மாற்றங்களை கவனிக்காமல் தப்புக்கணக்கு போட்டது. UNITA போரை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாகவே கருதியது. தனது பலத்தில் கொண்ட அசாத்திய நம்பிக்கையினால் மட்டுமல்ல, அமெரிக்க செனட் சபையில் இருந்த நண்பர்களையும் கருத்தில் கொண்டு, அமெரிக்க ஆதரவு தொடரும் என்று கருதியது. இதற்கிடையே 1992 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் இடம்பெற்றது. சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற சர்வசன வாக்குப் பதிவு, எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடந்தேறியதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 220 ஆசனங்களில், MPLA 129 ஆசனங்களை கைப்பற்றியது. எதிர்பார்த்த படி பெரும்பான்மை கிடைக்காத UNITA, இந்தத் தேர்தல் ஒரு மோசடி என்று பிரேரித்தது. தேர்தலை கண்காணித்த ஐ.நா. உயரதிகாரி UNITA வின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த உயரதிகாரி “வைரக் கடத்தல்காரர்” என்று தூற்றப்பட்டார். உண்மையில் UNITA இயக்கத்தின் முக்கிய வருமானம் வைர விற்பனையால் கிடைத்து வந்தது. போரின் இறுதிக் காலங்கள், வைரச் சுரங்கங்களை யார் கட்டுப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது.

பனிப்போர் காலத்தில், அமெரிக்க, சோவியத் எதிர் வல்லரசுகள் தமது பதிலிப் போர்களை மூன்றாம் உலக நாடுகளில் நடத்திக் கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் பதிலிப் போர்கள் தேவையற்றுப் போயின. அங்கோலா அரசாங்கமே அமெரிக்காவின் கைகளுக்குள் வந்த பின்னர், UNITA என்ற போராளிக் குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் அங்கிருக்கவில்லை. ஆயினும் UNITA இந்த உண்மையை உணரவில்லை. அமெரிக்கா அதரவு நிலையானது என்ற இறுமாப்பில் யுத்தத்திற்கு தயார் படுத்தியது. மறு பக்கத்தில், MPLA அரசும் இறுதிப்போருக்கு தயாராகவே இருந்தது. தனக்கு சார்பான பொது மக்களுக்கும் ஆயுதங்களை வழங்கியது. தேர்தல் நடந்த அதே ஆண்டு, அக்டோபர் மாதம் மீண்டும் யுத்தம் வெடித்தது. இரகசியத் திட்டமொன்றின் படி, தலைநகர் லுவான்டாவில் UNITA ஆதரவாளர்கள் அனைவரும் ஒழித்துக் கட்டப்பட்டனர். போரினால் நாடு முழுவதும் சுடுகாடாக்கியது.

அங்கோலாவின் மத்தியில் அமைந்துள்ளது “குய்த்தோ” நகரம். பொதுத் தேர்தலில் UNITA விற்கு ஆதரவாக இந்தப் பகுதியில் பெருமளவு வாக்குகள் கிடைத்தன. பொதுத் தேர்தலில் UNITA விற்கு வாக்களித்த அத்தனை பேரும் ஆதரவாளர்கள் என்று சொல்ல முடியாது. தசாப்த கால யுத்தத்தினால் மக்கள் வெகுவாக கலைத்து போயிருந்தனர். குய்த்தோ போன்ற UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள், எப்படியாவது UNITA சமாதானமாகப் போனால் நல்லது என்ற எதிர்பார்ப்பில் வாக்களித்துள்ளனர். UNITA மக்களின் அபிலாஷைகளை மதிக்கத் தவறியதும், அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும். இறுதியாக நடந்த போரில் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த குய்த்தோ நகரை, UNITA போராளிகள் சுற்றி வளைத்தனர். 9 மாதங்களாக நான்கு சதுர மைல் நிலப்பரப்பிற்குள் முப்பதாயிரம் மக்கள் அடைபட்டுக் கிடந்தனர். கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

போர்க் காலத்தில் ஐ.நா. சமாதானப் படையின் கைகள் கட்டப்பட்டிருந்ததை உணர முடிந்தது. ஐ.நா. அதிகாரிகள் கோரிய சர்வதேச உதவி கடைசி வரை கிட்டவில்லை. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், எப்படியாவது போரில் ஒருவர் வெல்லட்டும் என்று வாளாவிருந்து விட்டனர். UNITA சமாதானமாகப் போகாமல் முரண்டு பிடிக்கின்றது என்ற ஏமாற்றத்தால் விளைந்த ஓரவஞ்சனை காரணமாக இருக்கலாம். சர்வதேச நாடுகளின் மௌனம் அரசுக்கு சார்பாக அமைந்தது. UNITA தலைவர் சாவிம்பி, அரச படைகளின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், போர் முடிவுக்கு வந்தது.

அடுத்த ஆறு மாதங்களில் எஞ்சிய போராளிகள் அனைவரும் சரணடைந்தனர். போர் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், UNITA தளபதி ஒருவரும் அவரது ஆதரவாளர்களும், அரசுடன் சேர்ந்து கொண்டார்கள். “புதிய UNITA” என்ற கட்சியை ஸ்தாபித்து, அரச இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்டனர். UNITA வின் வீழ்ச்சிக்கு முன்னாள் தளபதியின் துரோகம் மட்டும் காரணமல்ல. யுத்தம் தொடங்கிய நேரம், UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களை அரசு வெளியேற்றியிருந்தது. UNITA சில தொண்டர்களை வெளியேற விடாமல் பணயக் கைதிகளாக வைத்திருந்தும், நிலைமை அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

அங்கோலா யுத்தம் ஒரு வழியாக முடிவுற்று, சமாதானம் நிலவினாலும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அங்கோலா ஆப்பிரிக்காவின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்று. பல இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படாததால், விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதைத் தவிர பல்லாயிரம் மக்கள் அங்கவீனர்களாக எஞ்சிய காலத்தை கழிக்க வேண்டிய பரிதாப நிலை. நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் எதோ ஒரு வகையில் போரினால் பாதிக்கப் பட்டுள்ளது. போரினால் ஏற்பட்ட ஆழமான வடுக்கள் காரணமாக, மக்கள் மத்தியில் சமாதானத்திற்கான ஏக்கம் அதிகரித்து வருகின்றது. இன்று அனைவரும் அரசை ஆதரிக்கிறார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. நீண்ட கால போரின் விளைவாக, அரசிற்கெதிரான எதிர்ப்பு மழுங்கிப் போயுள்ளது. இதனால் வறுமை கூட சகித்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்றாகி விட்டது.

இன்று அங்கோலா அமெரிக்காவிற்கு எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. இதன் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையில் சிறந்த நட்புறவு நிலவுகின்றது. ஒரு காலத்தில் இருந்த சோஷலிசப் பொருளாதாரம் கைவிடப்பட்டு, முதலாளித்துவ மயமாகி விட்டது. MPLA தலைவர்கள் கூட எண்ணை விற்று கிடைத்த லாபத்தில் பணக்காரர்களாக வாழ்கின்றனர். இவையெல்லாம் அமெரிக்காவிற்கு உவப்பான செய்திகள் தான். இருப்பினும் அங்கோலாவின் அசைக்க முடியாத இராணுவ பலமும், காங்கோவில் அதன் சாகசங்களும் அமெரிக்காவின் கண்ணை உறுத்துகின்றது. இன்று உலகம் எவ்வளவோ மாறி விட்டது. மூன்றாம் உலக நாடுகள், மேற்குலகம் விதிக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு அடங்கிக் கிடந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் இன்று அங்கோலா போன்ற சில நாடுகள் தேசிய அரசியல், பொருளாதாரத்தை தாமே தீர்மானிக்க வேண்டுமென விரும்புகின்றன. அங்கோலா நிலையான ஆட்சி, பலமான இராணுவம் போன்ற அரசியல் ஸ்திரத் தன்மையும், பெற்றோலியம், வைரம் போன்ற அதிக வருவாய் ஈட்டித் தரும் பொருளாதார வளங்களையும் ஒருங்கே கொண்டது. இவையெல்லாம் அங்கோலா மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவுமா?

அங்கோலாவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. ஆரம்பத்தில் MPLA க்கும், UNITA விற்கும் இடையிலான போரில் சில இன வேற்றுமைகள் தொக்கி நின்றன. அசிமிலாடோஸ் என அழைக்கப்பட்ட போர்த்துகேய மயப்பட்ட கறுப்பர்கள், கலப்பினத்தவர்கள், வெள்ளையினத்தவர்கள் எல்லோரும் MPLA இற்கு ஆதரவளித்தனர். அதற்கு மாறாக உள்நாட்டில், பாரம்பரிய ஆப்பிரிக்க சமூக கட்டமைப்பை பேணி வரும் இனங்களின் வாழ்விடங்கள், UNITA வின் ஆதரவுத் தளமாக இருந்தது. போருக்குப் பின்னான காலத்தில், அரசுடன் ஒத்துழைக்கும் முன்னாள் UNITA பிரமுகர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய மக்களின் குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று வரை அரசாங்கம், கண்ணிவெடி இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் பிரச்சினை குறித்து மட்டுமே பேசி வருகின்றது.

இதற்கிடையே கபிண்டா மாகாணத்தின் பிரச்சினை, சர்வதேச கவனத்தைப் பெறாவிட்டாலும், அதுவும் இன்னும் தீர்க்கப்படவில்லை. அங்கோலாவின் பெரு நிலப்பரப்புடன் சேராமல், கொங்கோ எல்லையிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் தனியான மாகாணம் கபிண்டா. சுருக்கமாக அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துடன் ஒப்பிடலாம். அங்கோலாவிற்கு சொந்தமான 3000 சதுர மைல் நிலப்பரப்பு, பிராசவில்-கொங்கோவிற்கும், கின்சாசா கொங்கோவிற்கும் நடுவில் அமைந்துள்ளது. மாகாணம் சிறிதாக இருந்தாலும் அதன் மகாத்மியம் பெரிது. அங்கோலாவின் 70 வீதமான எண்ணை கபிண்டாவில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்றது. அதாவது அங்கோலாவின் பெருமளவு அந்நிய வருமானத்தை கபிண்டா வழங்குகின்றது.

FLEC என்ற ஒரு ஆயுதமேந்திய இயக்கம் கபிண்டாவின் விடுதலைக்காக போராடி வருகின்றது. 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடத்தியும், அங்கோலா அரசுக்கு தலைவலியை தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. FLEC இன்று சிறு குழுக்களாக பிரிந்துள்ளதால், அவர்களது போராட்டம் இனியும் வெல்லுமா என்பது சந்தேகமே. கபிண்டாவில் அங்கோலா படையினர் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றங்களை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கபிண்டா விடுதலை இயக்கத்தினருக்கு உள்ள ஒரேயொரு சர்வதேச ஆதரவு, ஐ.நா.சபையின் “பிரதிநிதித்துவப் படுத்தாத நாடுகளின் மன்றம்”(UNPO). எந்த வித அரசியல் அதிகாரமும் இல்லாத இந்த மன்றத்தில், திபெத், மேற்கு சஹாரா, போன்ற சுதந்திர தேசத்திற்காக போராடும் பல அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

FLEC தனது தேசியவாதத்திற்கு இன அடிப்படை இருப்பதாக கூறுகின்றது. காங்கோலிய இனத்தை சேர்ந்த “பகொங்கோ” மக்களின் தாயகமாக கபிண்டாவை வரையறுக்கின்றனர். அங்கோலா அரசு இந்த தேசிய இனக் கருத்தியலை நிராகரிக்கின்றது. வட அங்கோலா மாகாணமான ஸயரிலும் பகொங்கோ இனத்தவர்கள் வாழ்வதை சுட்டிக் காட்டி, கபிண்டர்களின் போராட்டம் வெறும் பொருளாதாரக் காரணத்தை மட்டும் கொண்டுள்ளதாக பதிலளித்து வருகின்றது. கபிண்டா விடுதலை இயக்க தலைவர்களும் பெற்றோலிய வருமானத்தை பங்கிடுவதை தமது பிரதான கோரிக்கையாக முன்வைக்கின்றனர். செல்வத்தை சமமாகப் பங்கிடாவிட்டால் அங்கோலாவின் பிற பகுதிகளும் எதிர்காலத்தில் கொந்தளிக்க வாய்ப்புண்டு.

Thursday, July 30, 2009

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

மலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சில மனித உரிமை ஸ்தாபனங்கள் மலேசிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவாரம்பித்தன. அழுத்தங்களுக்கு பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் தங்களது தண்டனை வழங்கலில் தவறு இல்லை என வாதாடியுள்ளார். கிரிமினல்கள், போதைவஸ்து கடத்துபவர்கள் ஆகியோருக்கே பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், ஒரு குற்றமும் செய்யாத வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டினுள் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்பவர்கள், விசா காலாவதியானவர்கள், அகதி தஞ்சம் கோருவோர் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. Amnesty International, Malaysia: End caning as a punishment against immigrants

பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் தாலிபான் பிரம்படி தண்டனை வழங்கும் வீடியோ ஒன்று சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவத்தைப் பெற்றது. அந்த வீடியோ உலக மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி, பாகிஸ்தான் அரச படைகளின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த உதவியது. அதே நேரம் மேற்குறிப்பிட்ட மலேசிய வீடியோ பெருமளவு சர்வதேச ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அதற்குக் காரணம், மலேசிய ஆட்சியாளர்கள் மேற்குலகின் உற்ற நண்பர்கள் என்பதாலா?

Sunday, July 26, 2009

கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்


கொழும்பு மாநகரம் வழக்கத்திற்கு மாறாக சன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஒரு சில நாட்களுக்கு முன்னர், இனக்கலவரம் நடந்து ஓய்ந்திருந்தது. அரச போக்குவரத்து துறைக்கு சொந்தமான பஸ் வண்டியில், எங்களைத் தவிர வேறு தமிழர்கள் இருப்பதாக தெரியவில்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சிங்களத்திலேயே உரையாடிக் கொண்டோம். 

கொழும்பு இந்துக் கல்லூரியில் அமைந்திருக்கும் அகதி முகாம் நோக்கி பயணம் செய்கிறோம். வழி நெடுகிலும், அரை குறையாக எரிந்து போன தமிழர்களுடைய வீடுகள். அந்த வீடுகளில் வசித்தவர்கள் என்னவானார்கள்? நெருப்பில் கருகி இறந்திருப்பார்களா? அல்லது உடுத்த உடையோடு கிளம்பிப் போய் அகதிமுகாம்களில் அடைக்கலம் புகுந்திருப்பார்களா? நினைக்கவே ஒரு கணம் மெய் சிலிர்த்தது.

அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பில் எமது வீடு இருந்ததால், கலவரத்திற்குள் அகப்படாமல் தப்பிப் பிழைத்தது. இன வெறியூட்டப்பட்ட காடையர் கூட்டத்தை அப்போது சில அரசியல்வாதிகள் தான் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிங்களக் காடையர்கள் எங்கெங்கே அப்படியெல்லாம் கொலை செய்தார்கள், கொள்ளையடித்தார்கள், பாலியல் பலாத்காரம் செய்தார்கள், போன்ற கதைகளை எமது வீடுகளில் கூடும் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள். 

வசதி படைத்தோரின் குடியிருப்புகளுக்குப் பக்கத்திலேயே சேரிகளும் இருந்தன. சேரிகளில் இருந்த சிங்களவர்கள், வசதியான தமிழரின் வீடுகளை எரிக்கவும், கொள்ளையடிக்கவும் முன் நின்றதாக கேள்விப்பட்டோம். சில பணக்காரத் தமிழரின் வீடுகளில் வேலை செய்த சிங்கள வேலைக்காரர்கள், கலவரத்தை பயன்படுத்தி தமது எஜமானர்களையே கொலை செய்தனர், அல்லது காட்டிக் கொடுத்தனர். விதி விலக்காக சில கருணையுள்ள சிங்களப் பொது மக்கள் தமிழருக்கு அடைக்கலம் கொடுத்த கதைகளையும் கேள்வியுற்றோம். இத்தகைய சம்பவங்களை அறியும் வேளை, அப்போது சிறுவனான நானும் விரும்பியோ, விரும்பாமலோ அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டேன்.
தமிழர்கள் அதிகமாக வசித்து வந்த நகர்ப்பகுதியிலேயே, தற்காலிக அகதி முகாமாக மாற்றப்பட்ட அகதி முகாம் இருந்தது. பாடசாலை நுழை வாயிலில் ஆயுதமேந்திய காவல்துறையின் பிரசன்னம். 'சப் மெஷின் கன்' என்ற இயந்திரத் துப்பாக்கி ஏந்திய போலீசாரை அப்போது தான் பார்த்தேன். இந்த ஆயுதங்களால் ஏன் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, என்பது எனக்கு அப்போது புரியவில்லை. போலிஸ் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கும். போலீஸ என்பது புனிதமான ஒரு நிறுவனமல்ல என்ற உண்மை எனக்கு அப்போதே புரிந்தது. சாதாரண சிங்கள மக்களைப் போலவே, பொலிஸ் மற்றும் பல அரச துறைகளில் கடமையாற்றிய சிங்களவர்களின் இன உணர்வும் இருந்தது. நான் வசித்த குடியிருப்பில் பல தமிழ் அரச உத்தியோகத்தர்களின் குடும்பங்களும் இருந்தன. தமிழர்கள் என்ற ரீதியில் நாம் கூடிப் பேசுவது வழமை. சக சிங்கள பணியாளர்கள் "தமிழர்களின் கொட்டத்தை அடக்கவேண்டும்" என்று திட்டுவது பற்றிய கதைகள் கலந்துரையாடலில் இடம்பெறும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கொழும்பு மாநகரில் அதிக தமிழர்கள் பெரிய பதவிகளை வகித்து வந்தனர். அரசாங்கம் மற்றும் பல நிறுவனங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் சற்று அதிகமாகவே இருந்தது. இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள் மட்டும் மிக மிகக்குறைவு. ஆங்கிலேயர் காலத்தில் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில், கலப்பின பரங்கியர்களுக்கு (Burghers) மட்டுமே இடமளித்து வந்தனர். 1961 ம் ஆண்டு, பரங்கி இராணுவ அதிகாரிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு அது தோல்வியுற்றது. அதன் பிறகு, பெருமளவு பரங்கியர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் இராணுவத்தில் அதிகளவு சிங்கள இனத்தவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கொழும்பில் வசித்த யாழ்ப்பாண தமிழர்கள் எப்போதும் பதவிகளை எதிர்பார்த்து தம்மை தயார்படுத்திக் கொள்பவர்கள். அதைக்காட்டியே இனவாதத்தை தூண்டி விட்ட சிங்கள அரசியல்வாதிகள், இனக்கலவரங்கள் மூலமும், சிங்கள மொழி மட்டும் சட்டம் மூலமும், தமிழரின் பதவிகளை பறித்துக் கொண்டனர்.

ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் மட்டும் கடமையாற்றிக் கொண்டிருந்த தமிழ் அரச உத்தியோகத்தர்கள், சிங்களம் சரளமாக தெரிந்திருந்தால் மட்டுமே அரச பதவிகளில் நிலைக்க முடியும் என்ற சட்டம் வந்த போது எதிர்த்தனர். கூடவே சிங்களமயமாக்கல் நாடெங்கும் தொடர்ந்தது. தமிழர்கள் எதிர்ப்பு காட்டிய போது, அதை அகம்பாவம் என்று சிங்களவர்கள் புரிந்து கொண்டனர். அதிலிருந்து ஒவ்வொரு தடவையும் தமிழரின் எதிர்ப்புக்கு பதிலடியாக இனக்கலவரம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது கலவரக் காலத்திற்கு மீண்டும் வருவோம்.

இந்துக் கல்லூரி அகதிமுகாமில், இரண்டு மாடிகளில் இருந்த வகுப்பறைகளில் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனேகமாக அனைவரும் உடுத்த உடையுடன் வந்திருந்தனர். அவர்களில் பலர் வசதியாக வாழ்ந்தவர்கள். டாக்டர்கள், பொறியியலாளர்கள் என்று கௌரவமான பதவிகளை வகித்தவர்கள். சேர்த்து வைத்திருந்த, நகைகள், பணம் எல்லவாற்றையும் பறி கொடுத்து விட்டு வந்திருந்தனர். முகாமில் நிலவும் வசதிக் குறைபாடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, ஓரிடத்தில் சலசலப்பு காணப்பட்டது. சனங்கள் இரண்டு பகுதியாக பிரிந்து வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு விசாலமான மண்டபம். அகதிகள் சுவர்ப்பக்கமாக இரண்டு குழுக்களாக பிரிந்து நின்று வாய்ச் சமரில் ஈடுபட்டனர்.

நடுப்பகுதி மட்டும் வெற்றிடமாக இருந்தது. அங்கே 'சாக்' கட்டியால் கோடு கீறப்பட்டிருந்தது. எனக்கு உடனே அசோகவனத்தில் சீதை கிழித்த கோடு ஞாபகம் வந்தது. கோட்டுக்கு அந்தப்பக்கமும், இந்தப்பக்கமுமாக இரண்டு பிரிவுகளாக இருந்தனர். அவர்களுக்குள் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. அங்கே என்ன நடக்கின்றது என்பது, ஒரு சில நிமிடங்களில் புரிந்தது. தம்மை உயர்சாதியாக கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், பிறரை தீண்டத்தகாதவர்களாக கோட்டிற்கு மறுபக்கம் இருத்தி இருந்தனர். சிங்களவனிடம் அடிவாங்கினாலும், அனைத்தையும் இழந்த போதும், யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதி அடையாளத்தை மட்டும் இழக்க மாட்டார்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

எமது பாடசாலையில் அகதிகள் அதிக காலம் தங்கி இருக்கவில்லை. அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு கப்பல், மட்டக்களப்பிற்கு ஒரு கப்பல் என்று ஒழுங்கு செய்து, அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பி வைத்தது. அதுவரை இலங்கை என்பது அனைத்து சமூகத்தினருக்குமான தாயகம் என்று தான் என்னைப் போன்ற பலர் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வடக்கு, கிழக்கு மட்டுமே எமது இடம் என்பதும், கொழும்பில் தமிழர்கள் "வந்தேறுகுடிகளாகவே" கணிக்கப்படுகின்றனர் என்பதும் அப்போது தெளிவாகியது.

அரசு என்ற அமைப்பு கலவரத்தின் போது தனது தமிழ் பிரசைகளை பாதுகாக்கத் தவறியது. இப்போது அதுவே தமிழருக்கு ஒரு தாயகப் பிரதேசத்தை சுட்டிக் காட்டியது. இனப்பிரச்சினையை இன்று பலர் பல்வேறு விதமாக புரிந்து கொள்கின்றனர். யானையை பார்த்த குருடர்களைப் போல, அவரவர் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமே இனப்பிரச்சினைக்கான புரிதலை உருவாக்குகின்றது. தமிழர் என்று தம்மை பகிரங்கமாக அடையாளப்படுத்த முடியாதது ஒரு சிலரின் பிரச்சினை. கலவரத்தில் உறவினர்களை, வீடுகளை இழந்தது இன்னொரு பிரிவினரின் பிரச்சினை. பிற்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், போரில் ஏற்பட்ட இழப்புகளை முன்னிலைப்படுத்தினர். இவ்வளவுக்கும் மத்தியில் சிங்கள பேரினவாத அரசு அமைதியாக தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
...............................................................................................................................
(83 கருப்பு ஜூலையின் 26 வது நினைவுதினத்தையொட்டி பதிவிடுகின்றேன்.)

Saturday, July 25, 2009

இலங்கையில் சீனப் பூச்சாண்டி

இலங்கையில் மார்க்சிச-லெனினிச பாதையில் இயங்கி வரும் "புதிய ஜனநாயகக் கட்சி" யினரால் மாதமொருமுறை வெளியிடப்படும் வெகுஜனப் பத்திரிகையான "புதிய பூமி"யில் வந்த கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகின்றது.

இலங்கையில் இந்திய அமெரிக்க மேலாதிக்கப் போட்டியை மறைக்கச் சீனப் பூச்சாண்டி
- மோகன் -


மே மாத முற்பகுதியில் "London Times" ஏட்டிலும், அதன் இணையத்தளத்திலும் இலங்கையின் போர் முயற்சிகட்கு உறுதுணையாக நிற்பதும் உலக நாடுகள் அனைத்தையும் விடப் பெருமளவில் பொருளாதார உதவி வழங்கி வருவது சீனா தான் என்று வலியுறுத்தும் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. வழமையாக முற்போக்கான ஏகாதிபத்திய விரோதத் தகவல் எதையுமே தமிழாக்குவதில் தமிழ் ஊடகவியலாளர்கட்கு அக்கறையில்லை. உலக நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் ஏதாவது இந்திய இணையத்தளத்திலிருந்தாவது அப்படியே எடுத்தாளப்பட்டு உரிய நன்றி கூறல் இல்லாமல் "நன்றி - இணையம்" என்ற சொற்களுடன் வெளிவருகின்றன. மேற்கூறிய கட்டுரை 10-05-2009 ஞாயிறு தினக்குரலில் மிகக் கவனமாகத் தமிழாக்கப் பட்டுள்ளது. இவ்வாறான அக்கறை பிற விடயங்களிலும் இனிமேற் கொண்டு காட்டப்படும் என்று எதிர்பார்ப்போமாக.

மேற்படி கட்டுரை கட்டுரையாளரான ஜெரமி பேஜின் சொந்தச் சரக்கல்ல. லண்டன் டைம்ஸ் ஒரு இடதுசாரி விரோத ஏடு. சீனாவும் ரஷ்யாவும், சோஷலிஸத்திலிருந்து விலகிய பின்பும் அவற்றைப் பற்றிய குரோதம் பாராட்டுகிற கட்டுரைகள் தொடர்ந்தும் அதில் வருவதற்கான காரணம் அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய உலக மேலாதிக்கத்திற்கு அவை சவாலாக இருப்பது தான். ஜெரமி பேஜ் என்றுமே முற்போக்கான பத்திரிகையாளராக அறியப்பட்டவரல்ல. மேற்கூறிய கட்டுரைக்கான தகவல்கள் ஒட்டு மொத்தமாக பி. ராமன் எனப்படும் முன்னாள் றோ உளவு நிறுவன ஆணையாளரின் மூலம் பெறப்பட்டவை என்று கட்டுரை மூலம் தெரிய வருகிறது. இந்திய-சீன உறவைச் சீர்குலைக்கும் விதமாகச் சீனாவைப் பற்றிய செய்தித் திரிபை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிற 'ஆய்வு நிறுவனங்கள்" மூன்றிலாவது ராமன் முக்கியப் பொறுப்பில் உள்ளார். அவற்றுக்கான இணையத் தளங்கள் உள்ளன. அவை வழங்கிய தகவல்களைப் பயன்படுத்தியே காலஞ் சென்ற டி.பி. சிவராம் உட்பட்ட தமிழ்த் தேசியவாதிகள் தங்களுடைய "ஆய்வுகளை" வழங்கினர். அவற்றின் ஆதாரத்தின் மீது அமைந்த அரட்டைகளும் அரை உண்மைகளும் மறுபடியும் மறுபடியும் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு உண்மைகளாக முன்வைக்கப் படுகின்றன.

தமிழிற் சீனா பற்றிய விமர்சனம் முன்வைக்கப்படும் போது பொதுவாகவும் ரஷ்யா பற்றியவை முன்வைக்கப்படும் போது இடையிடையிலும் அவை சோஷலிச நாடுகள், கம்யூனிஸ்ற் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதற்கு அழுத்தந் தெரிவிக்கப்படுவது வழமையாகி விட்டது. அதன் நோக்கம் விளங்கிக் கொள்ளக் கடினமானதல்ல. எவ்வாறு திரிபுவாதிகளதும் சமசமாஜிகளதும் தவறுகளைக் காட்டி நேர்மையான இடதுசாரிகளை எல்லாம் களங்கப்படுத்தி வந்துள்ளார்களோ அவ்வாறே முதலாளியம் வேரூன்றி விட்ட சீனாவையும் முற்றாகவே முதலாளிய நாடாகி அல்லற்பட்டு அதிலிருந்து மீளப் பொருளாதாரத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அந்தரித்து நிற்கும் ரஷ்யாவையும் காட்டி, அவற்றின் குறைபாடான நடத்தையைச் சோஷலிச நாடுகளது நடத்தையாக அடையாளங் காட்டுவது விஷமத்தனமன்றி வேறல்ல. அதே வேளை சீனாவும் முன்னாள் சோவியத் யூனியனும் சோஷலிஸத்திலிருந்து விலகியதை முன்னிட்டு அவற்றுடன் கண்மூடித்தனமான பகைமை பாராட்டுகிற இடதுசாரிகள் உள்ளனர். சீன-சோவியத் முரண்பாடு இருந்து வந்த காலத்தில் ஒரு தரப்பை ஆதரித்து மற்றதை விமர்சித்தவர்களுட் சிலர் அக் காலத்தில் இருந்தவாறே தமது பழைய பகைமைகளைப் பேணி வருகின்றனர். இத்தகையோர் சீனாவையோ ரஷ்யாவையோ யார் குற்றஞ் சாட்டினாலும் அதற்கான காரண காரியங்களை ஆராயாமல் அவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதையுங் காணலாம்.

நாம் உலகத்தை எந்த நிலைப்பாட்டிலிருந்து நோக்குகிறோம் என்பதைச் சார்ந்தே உலக நிகழ்வுகள் பற்றிய நமது மதிப்பீடுகள் அமைகின்றன. நமது நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் உண்மைகளை மூடி மறைக்கவும் புனைவுகளை உண்மையென்று பரப்புரை செய்யவும் நாம் முற்படுவோம் என்றால், முடிவில் நாம் நம்மையே ஏய்த்துக் கொண்டோராவோம். தமிழ்த் தேசியவாதிகள் சிலர் இலங்கைத் தமிழரின் பிரதான எதிரி சீனாவே என்று காட்டுவதற்காக ராமன் போன்றோரது தகவல்களையும் ஏகாதிபத்தியவாதிகளதும் இந்திய மேலாதிக்கவாதிகளதும் புனைவுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இப் போக்கு அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.

எனினும், அனைத்தினதும் சாராம்சம் பின்வருமாறு எனலாம்.

1. சீனா இந்தியாவுக்கு எதிரான மேலாதிக்கப் போட்டியில் இறங்கியுள்ளது.
2. சீனா இந்தியாவிற்கெதிரான கடல் முற்றுகை ஒன்றுக்கு ஆயத்தப்படுத்துகிறது.
3. சீனா இலங்கைக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கித் தமிழ் இன ஒழிப்பை மும்முரமாக ஆதரிக்கிறது.
4. சீனா இலங்கையின் சரிந்து விழும் பொருளாதாரத்தை நிலை நிறுத்த உதவி அதன் மூலம் இலங்கை மீது பூரண ஆதிக்கஞ் செலுத்த முயலுகிறது.
5. மேற்கூறிய காரணங்களாலேயே இந்தியா இலங்கை அரசாங்கத்தின் பேரினவாதப் போருக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.


மேற்கூறிய அடிப்படையிலேயே இந்தியா தனது அண்டை நாடுகளின் அமைதியைக் குலைக்கும் விதமாகக் கடந்த நாற்பதாண்டுகட்கும் மேலாக நடந்து கொண்டமையையும் சிலர் நியாயப்படுத்துகின்றனர்.

சீனா இதுவரை எந்த நாட்டின் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தவில்லை. சீனா சோஷலிச நாடாக இருந்த போது வகுக்கப்பட்ட அயற் கொள்கையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இனி மாறலாம் என்பது வேறு விடயம். சாத்தியப் பாடுகளை எல்லாம் சமகால உண்மைகளாகக் கருதுவது அறிவுடைமை அல்ல.

தன்னுடைய கடற் பகுதியிலேயே எல்லைத் தகராறுகளைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பது சீனாவின் நிலைப்பாடாகத் தொடருகிறது. இதுவரை தனது எல்லைப்புற நாடுகள் எதன் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தாத ஒரு நாடாகச் சீனா இருந்து வந்துள்ளது. எனவே இந்து சமுத்திரத் தென்னாசிய வலயத்தில் மேலாதிக்கப் போட்டி என்று சில இந்திய மேலாதிக்கவாதிகள் அலறுவது திருடனே எல்லாரையும் முந்திக் கொண்டு "திருடன்! திருடன்!!" என்று கூவுவது போன்றதே.

ஆபிரிக்கக் கரையோராம் முதலாக மியான்மார் வரையிலான பகுதிகளில் உள்ள நாடுகளில் சீனா துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவி வந்துள்ளது. அதற்கு நோக்கங்கள் உள்ளன. அதை வெறுமனே சீன மேலாதிக்கமென்று மொட்டையாக முடிவு காணாமற், சாத்தியமான காரணங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்வது அறிவுடைமையாகும்.

சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதார வளர்ச்சியால் எண்ணெய் முதலாகப் பல மூலவளங்களை இறக்குமதி செய்கிற தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் சீனாவைச் சூழப் பல இடங்களிலும் வலுப்பட்டு வருகின்றன. அண்மையிற் கூடச் சீனக் கடற் பகுதியில் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து சீனக் கடற் படையாற் தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப் பட்டது. எனினும் அமெரிக்கா பிற நாடுகளின் கடற் பிரதேசங்களை மதிப்பதாக இல்லை.

இந்தியாவை அமெரிக்காவுக்குக் கீழ்ப்பட்ட ஒரு பிராந்திய மேலாதிக்க வல்லரசாக்குகிற முயற்சிக்கு இந்திய ஆட்சியாளர்கள் மிகவும் உடந்தையாகவே நடந்து வந்துள்ளனர். இந்தியா-இஸ்ரேல்-ஈரான் என்ற அடிப்படையில் அமெரிக்கா திட்டமிட்டு வந்துள்ள ஆசிய இராணுவக் கூட்டணிக்கு ஈரான் மட்டுமே இதுவரை தடையாக இருந்து வந்துள்ளது. இப் பின்னணியில், ஏதாவது காரணங் காட்டிச், சீனாவின் கடல் வணிகம் தடைகட்கு உட்படலாம. அத் தடை இந்து சமுத்திரத்தின் எப்பகுதியிலும் நிகழலாம். அவ்வாறான நிகழ்வுகள் சென்ற நூற்றாண்டின் போர்கட்குக் காரணமாய் இருந்துள்ளன. அவ்வாறான ஒரு சூழ்நிலையை மட்டுமன்றி அமெரிக்கா சீனாவுக்கு வேண்டிய கடல் வழிப் பாதைகளிற் தடைகளை விதிக்கக் கூடிய பல்வேறு சாத்தியப்பாடுகளைச் சீனா புறக்கணிக்க இயலாது.

சீனாவின் ஒரு பகுதியான தாய்வான் 1949 முதல் இன்னமும் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ளது. திபெத்தில் அமெரிக்கா பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கிறது. வடமேற்கில் மத அடிப்படையிற் தேசியவாதிகளைத் தூண்டி விடுகிறது. இவற்றையெல்லாம் கணிப்பிற் கொள்ளுகிற போது, சீனா தன் பாதுகாப்புப் பற்றி எச்சரிக்கையின்றி இருக்க இயலாது என்றே விளங்கும்.

இதுவரை சீனா தனது பொருளாதாரச் செல்வாக்கை வலுப் படுத்துவதிலேயே முக்கிய கவனங்காட்டி வந்துள்ளது. அத்துடன் இந்து சமுத்திரம் பிராந்தியத்தில் அமெரிக்கா கடல்வழிப் பாதை எதையும் மறிக்க முற்பட்டாற் தனது கப்பல்கட்குத் துறைமுகங்களும் மற்றும் கடல்வழிகளும் பண்டங்களைக் கொண்டு செல்லத் தரை வழிகளும் தேவை என்கிற அடிப்படையிலேயே சீனா இப் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளிற் துறைமுகங்களை விருத்தி செய்ய உதவுவதன் மூலம் தனது கப்பல்கட்கான துறைமுக வசதிகட்கு ஒரு உத்தரவாதத்தைப் பெற முயலுகிறது. இவற்றில் எந்தத் துறைமுகந் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நாட்டை வற்புறுத்துகிற விதமான உடன்படிக்கை எதுவும் இல்லாததோடு சீனக் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தப் படுவதற்கான எந்தவிதமான சாடையுமே இல்லை.

சீனா இலங்கைக்கு அம்பாந்தோட்டைத் துறைமுக விருத்திக்கு வழங்குகிற கடனும் அதை நிர்மாணிக்கும் பணியும் முற்றிலும் வணிக அடிப்படையிலானவை. அந்தக் கடன் தொகை அங்கீகரிக்கப்பட்ட ஆண்டை வைத்து, இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளில் சீனா யப்பானையும் மீறி விட்டது என்று ஜெரமி பேஜ் எழுதியிருந்தார். அவருடைய செய்தித் திரிப்புகளை மறுத்துச் சீன வெளி அலுவல் அமைச்சு கடும் மறுப்புத் தெரிவித்திருந்தது. எனினும் ராமன், பேஜ் போன்றோர் பரப்புகிற வதந்திகள் போய்ச் சேரவிருக்கும் பல இடங்களிற் சீனாவின் மறுப்புப் பற்றியோ உண்மை நிலைமைகள் பற்றியோ அக்கறை இல்லை.

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்காகப் பலவேறு நிதி வழங்கல்களை மேற்குலகு நிறுத்துவதாகக் கூறிச் சில நிதி வழங்கல் வசதிகளை இடைநிறுத்தினாலும் யப்பான் தொடர்ந்தும் நிதி வழங்கி வந்துள்ளது. இது அமெரிக்க ஆசியுடன் நடக்கிறதா, அல்லது அமெரிக்காவை மீறி நடக்கிறதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

சீனா இலங்கையின் பொருளாதார விருத்திக்கு உதவுவது பற்றிப் பேசுவோர் இலங்கையிற் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்தியா மேற்கொள்ளுகிற முயற்சிகள் பற்றிப் பேசுவதில்லை. சம்பூரில் இந்தியா நிறுவவுள்ள அனல் மின் நிலையம், மோதல்கள் வலுப்பெற்று இலங்கை ராணும் சம்பூரைப் பிடித்தவுடனேயே அங்கீகரிக்கப் பட்டது. அத்துடன் அப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் இந்தியா எண்ணெய் அகழ்வுக்கு உடன்படிக்கை செய்ததை எதிர்க்காமல் சீனாவுடனான உடன்படிக்கைகளை எதிர்ப்போரது நோக்கங்கள் கவனத்துக்கு உரியன.

இலங்கையில் ராணுவ மேலாதிக்கத்திற்கான போட்டி அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையிலானதாகவே கடந்த பல தசாப்தங்களாக இருந்து வந்துள்ளது. கொலனியத்தின் இறுதிச் சுவடுகள் போன பின்பு இலங்கை மண்ணில் அடி பதித்த படைகள் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் அல்லாமல் வேறெந்த நாட்டினவையும் அல்ல. இவற்றில் இந்தியாவினது படைகள் 1971ல் நேரடியான குறுக்கீட்டுக்கு ஆயத்தமாய் இருந்தன. 1987ல் நேரடியாகக் குறுக்கிட்டன.

இந்தியா இலங்கையின் உள் அலுவல்களிற் குறுக்கிடுவதற்குச் சீன மிரட்டல் காரணமாக இருக்கவில்லை. அது இப்போது ஒரு வசதியாக்கப் பட்டுள்ளதே ஒழிய உண்மையான காரணங்கள் வேறு. இலங்கையின் அணிசேராக் கொள்கை முழுமையானதாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவின் தரப்பிலே இலங்கை நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு முரணாக 1962 வரை எதுவும் நடக்கவில்லை. எனினும் இந்திய-சீன எல்லை மோதலின் போதும் 1971இல் இந்திய-பாக்கிஸ்தான் மோதலின் போதும் இலங்கை வகித்த நடுநிலையை இந்தியா வெறுத்தது. குறிப்பாக மேற்குப் பாக்கிஸ்தானில் இருந்து கிழக்குப் பாக்கிஸ்தானுக்கு (இன்று பங்களாதேஷ்) பாக்கிஸ்தான் விமானங்கள் இலங்கையில் எரிபொருள் நிரப்ப நின்று போனதை இந்தியா வெறுத்தது.

எனினும் ஒரு நேச நாடு தனது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குத் தனது படைகளைக் கொண்டு செல்ல உதவுவது இந்திய-பாக்கிஸ்தான் முரண்பாட்டில் ஒரு பக்கம் சார்வதாகி விடாது. எனினும், இந்தியாவின் மேலாதிக்கப் பார்வையில் அந்த நியாயம் விளங்கியிராது. எவ்வாறாயினும் இந்தியா இலங்கையின் உள் அலுவல்களிற் தலையிடுவதில் எச்சரிக்கையுடனேயே இருந்து வந்தது. ஆனாலுந் தமிழ்த் தேசியவாதிகள் இந்த அதிருப்தியைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தும் நோக்கத்துடனே இருந்தனர். இந்தியா இலங்கையிற் குறுக்கிடுவதற்கான சூழ்நிலை தமிழர் மீதான அக்கறையாலன்றி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சி அமெரிக்காவின் சார்பான திசையில் அயற் கொள்கையை நகர்த்திய போது ஏற்பட்டது. இந்தியா பற்றித் தமிழர் மனதில் உருவாக்கப்பட்ட உன்னதமான படிமம் 1987ல் தான் உச்சத்தை எட்டியது. ஆனால் 1988 அளவிலேயே அது நொறுங்கி விழுந்தது.

1987இல் இந்தியா இலங்கைத் தமிழருக்குச் செய்த துரோகத்திற்கு என்ன சீனத் தலையீடு காரணமாயிருந்தது என்று யாருமே சொல்வதில்லை. ஏனென்றால் சீனா 1952 முதல் எப்போதுமே இலங்கையுடன் நட்புறவைப் பேணி வந்தது. 1957இல் ராஜதந்திர உறவுகள் ஏற்பட்ட பின்பு அது வலுப்பட்டது. 1970களில் சீனா ஏகாதிபத்திய விரோத காலனிய விரோத விடுதலைப் போராட்டங்களை வலுப்படுத்து முகமாகச் சில ஆபிரிக்க நாடுகட்குப் பெரிய பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளது. இவை எல்லாம் சீனாவின் மேலாதிக்க நோக்கிலானவை என்று யாராலுமே குற்றஞ்சாட்ட இயலவில்லை.

சீனாவின் அயற் கொள்கையிற் சர்வதேச நிகழ்வுகளும் போக்குக்களும் முக்கியமான பங்களித்துள்ளன. எப்போதுமே அமெரிக்கா பற்றிய ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்து வந்துள்ளது. 1961க்குப் பிறகு, சோவியத் யூனியனுடனான முரண்பாடு, 1967இல் சோவியத் யூனியன் செக்கோஸ்லவாக்கியவக்குப் படைகளை அனுப்பியதிலிருந்து வலுப் பெற்றது. சோவியத் யூனியனில் பிரெஷ்னெவ் ஆட்சி இருந்த காலம் முழுவதும் சீன-சோவியத் உறவில் முறுவல் நிலை இருந்து வந்தது. 1980களில் தொடங்கிய நெகிழ்வு சோவியத் யூனியனின் உடைவின் பின்பு, சீனாவின் அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் ரஷ்யாவில் அமெரிக்காவின் ஆதிக்க முனைப்பு கடும் எதிர்ப்பைக் கண்டதன் பயனாகவும், ஒரு புதிய உறவை வலுப்படுத்தி உள்ளது.

அமெரிக்கா உலகின் மிகப் பெரிய ராணுவ வல்லரசாக உள்ளது. அதன் ராணுவத் தளங்கள் அமெரிக்க எல்லைகட்கும் அப்பால் வெகு தொலைவிற் பலவேறு நாடுகளில் உள்ளன. இப்பபோது இந்திய மேலாதிக்கம் அதன் கூட்டாளியாகி விட்டதோடு அதன் அயல்நாடுகளது உள் அலுவல்களில் தீவிரமாகக் குறுக்கிடுகிறது. இக் குறுக்கீடுகள் மூலம் சார்க் அமைப்பு என்பதும் இந்திய மேலாதிக்கத்தின் ஒரு கரமாக மாற்றப்பட்டு வருகிறது. இதை எல்லாம் மூடி மறைக்கவே, சீன மிரட்டல் என்பது சிலரால் முன்னெடுக்கப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் இந்திய அரசாங்கமோ அமெரிக்காவோ குற்றஞ் சாட்டுகிற விதமாகச் சீனா இதுவரை எந்த நாட்டின் உள் அலுவல்களிலுங் குறுக்கிட்டதில்லை. சீனாவின் 'முத்துமாலை" எனப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத் துறைமுக வசதிகளின் விருத்திக்கான உதவி பற்றி இதுவரை முற்குறிப்பிட்ட விஷமிகளை விட வேறு எவரும் குறிப்பாக எந்த நாட்டின் அரசாங்கமுமே விமர்சிக்கவுமில்லை ராணுவ நோக்கங் கற்பிக்கவும் இல்லை. அதற்கான வாய்ப்பும் ஆதாரங்களும் இருந்திருந்தால் இந்தியாவும் அமெரிக்காவும் அதைப்பற்றி வெளிவெளியாகப் பேசத் தயங்கி இரா.

சீனா இலங்கைக்குப் பொருளாதார உதவி வழங்குவதாலும் ஆயுதங்களை வழங்குவதாலுமே இலங்கை அரசாங்கத்தால் தனது பேரழிவுப் போரை முன்னெடுக்க இயலுமாக உள்ளது என்பது ஜெரமி பேஜின் கட்டுரையின் சாராம்சம் எனலாம். ஆனால் இலங்கை அரசாங்கப் படைகள் பயன்படுத்தி வருகிற பேரழிவுப் போர்க்கலங்களில் ஏகப் பெரும்பான்மையானவை எங்கிருந்து வந்தன என்பதற்கான விபரங்களை டைம்ஸ் கட்டுரையாளரோ அவரது தகவல்களின் தோற்றுவாயான ராமனோ தரவில்லை. தர விரும்பவும் மாட்டார்கள். அவை மேறகுலகினதும் இந்தியாவினதும் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டும் என்பதே அதற்கான காரணமாகும்.

சீனா இலங்கைக்குக் கடற்படைக்கான விசைப்படகுகள், ராடார் கருவிகள், விமானங்கள் என்பனவற்றையும் சிறிய வகையான ஆயுதங்களையும் விற்றுள்ளது. அது சரியா பிழையா என்பது ஒரு கேள்வி. ஆனாற் சீன ராணுவ உபகரணங்கள் கொண்டே தமிழர் அழிக்கப்படுகின்றனரா என்பது இன்னொரு கேள்வி. சீனா தனது பாதுகாப்புக்காகவும் ஏகாதிபத்திய, கொலனிய, மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போராட்டச் சக்திகட்கும் பாதிக்கப்பட்ட நாடுகட்கும் ஆயுதங்களை வழங்குவதும் சரியானதே. இதையே சீனா 1970கள் வரை செய்தது. எனினும் சீனா முதலாளியப் பாதையில் போகத் தொடங்கிய பின்பு, ஆயுத உற்பத்தி, பாதுகாப்பு என்பதற்கும் அப்பால், வணிக நோக்கிலும் நடைபெறுகிறது. இது சில முன்னாள் சோஷலிஸ நாடுகளின் சீரழிவின் போது தொடங்கிய ஒரு போக்காகும். இதை மாக்ஸிய லெனினிஸவாதிகள் விமர்சித்தே வந்துள்ளனர். எனினும் இவ் விடயத்தில் சீனாவையோ ரஷ்யாவையோ தனித்து நோக்கி விமர்சிப்பது தவறானது.

இலங்கை உட்படப் பலவேறு நாடுகளின் இடையிலும் நாடுகட்குள்ளும் போரை மூட்டி அதன் மூலம் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயலுகிற நாடுகளின் வரிசையில் சீனா உள்ளடங்காது. எனினும் தனது நேச நாடு ஒன்றின் பாதுகாப்புக்கு என்று சீனா வழங்குகிற ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டுக்குப் போருக்கோ ஒரு சமூகத்திற்கு எதிரான ஒடுக்குமுறைப் போருக்கோ பயன்படாத முறையில் சீனா கட்டுப்பாடு எதையும் விதிக்க இயலாது. எனவே தான் சீனா உலக ஆயுதச் சந்தையில் முன்வரிசையில் இல்லாவிடினும் அதன் ஆயுத விற்பனை சோஷலிச, மனித விடுதலைக் கண்ணோட்டங்களில் விமர்சனத்துக்கு உரியதாகிறது.

மறுபுறம், இந்திய, அமெரிக்க மேலாதிக்கங்கள் தமது ராணுவச் செயற்பாடுகள் மூலமும் பிற குறுக்கீடுகளின் மூலமும் சீனாவுடன் உறவுடைய நாடுகளைத் தமது ஆதிக்க மண்டலங்கட்குள் கொண்டு வர முற்படுகிற போது சீனாவும் தனது தேசிய நலன்களின் பேரில் அங்கு இழுபடுகிறது. ஆதனால், அது சரியான நடத்தையாகி விடாது. எனினும் சீனா ஆயுதம் வழங்குவதாலேயே இந்தியா ஆயுதம் வழங்குகிறது என்கிற வாதம் உண்மைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவதாகும்.

அமெரிக்கா உலகளாவிய முறையில் ஒவ்வொறு மூன்றாமுலக நாடுகட்கும் எதிரான ஒரு மிரட்டலாக உள்ளது என்பதையும் அது உலகின் பலவேறு பகுதிகளிலும் தனது படைகளை நீண்ட காலத்திற்கோ குறுகிய காலத்திற்கோ தொடர்ந்தும் நிலைநிறுத்தி வருகிறதா என்பதையும் தென்னாசியாவின் சிறிய நாடுகட்கு இந்தியா ஒரு பெரிய மிரட்டலாக வளர்ந்து வந்துள்ளதா என்பதையும் நாம் முதலில் விசாரிக்க வேண்டும. அதன் அடிப்படையில் சீனாவின் நடத்தையை விளங்கிக் கொள்வதும் விமர்சிப்பதும் கூடப் பொருத்தமாயிருக்கும்.

ராமன் போன்றோரின் பொய்ப் பிரசாரங்கட்கு எளிதாக எடுபடுவோரைவிட அவ்வாறான பொய்த் தகவல்களை வலிந்து தேடிப் பரப்புரை செய்வோர் மூலம் ஏமாற்றப்படுவோர் அனேகர் என நம்புகிறேன். ஏனெனில் ராமனுடைய நோக்கங்களை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். அவை மறுவர்த்தம் பெற்று வழமையான ஊடகங்கள் மூலம் வெளிவருகிற போது அவற்றுக்கு ஒரு நடுநிலைத் தோற்றம் உருவாகிறது.

சீனாவைத் தமிழர் நம்புவதாலோ நம்பாததாலோ அவர்களது உரிமைகட்கும் விடுதலைக்குமான போராட்டங்களிற் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை. ஆனால் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் குறுக்கீடுகளின் இயல்பு வேறுபட்டது. அவற்றை நம்புவதா விடுவதா என்பதற்கு நடைமுறை முக்கியத்துவம் உள்ளது. தமிழ் மக்கள் தம்மை விட யாரையுமே அதிகம் நம்பாமல் இருப்பது பாதுகாப்பானது. அவர்கள் நம்பக்கூடிய சக்திகள் யாரென் அவர்களது போராட்ட அரசியல் எவ்வாறு விரிவடைகிறது என்பதே தீர்மானிக்கும். அவை நிச்சயமாக எந்த மேலாதிகக வல்லரசாகவும் இரா என்பது மட்டும் உறுதி.

(நன்றி: "புதிய பூமி" ஜூன்,2009)

தொடர்புகளுக்கு:
New Democratic Party
S-47, 3rd Floor
C.C.S.M.Complex
Colombo -11
SriLanka

+94714302909

+94112473757

nfo@ndpsl.org

Tuesday, July 21, 2009

பிலிப்பைன்சில் அமெரிக்காவின் பில்லி சூனியம்

பயங்கரவாதத்திற்கெதிரான போரின் ஒரு கட்டமாக பிலிப்பைன்ஸ்சிற்கு அமெரிக்க இராணுவம் போகின்றது, என அறிவித்த உடனேயே அது பல நினைவுகளைக் கிளறிவிட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா ஸ்பெயினுடன் சண்டையிட்டு பறித்த காலனிகளில் பிலிப்பைன்சும் ஒன்று. அதன் பின்னர், 1946 ல், சுதந்திரம் அடையும் வரையில் பிலிப்பைன்ஸ் அமெரிக்கக் காலனியாகவிருந்தது.

சுதந்திரம் பெற்றாலும் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தொடர்ந்து வைத்திருக்க புதிய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இராணுவத் தளங்களினால் வாடகைப்பணம் கிடைப்பதையிட்டு பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால், சாதாரண மக்களுக்குக் கிடைத்ததென்னவோ எய்ட்ஸ், சமுகச் சீரழிவு, அசுத்தமான சுற்றச்சூழல், போன்ற விரும்பத்தகாத விளைவுகள்தான். பத்து வருடங்களுக்கு முன்பு ஒபப்ந்த காலம் முடிந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியிருந்தது. ஆனால் "உலகை மாற்றிய 11 செப்டம்பர்" மீண்டும் அமெரிக்க இராணுவம் வர வழி சமைத்துக் கொடுத்து விட்டது. போன மச்சான் திரும்பி வந்த கதைதான்.

பிலிப்பைன்ஸின் தென்பகுதித்தீவுகளில் ஓடித்திரியும் ஒரு சிறிய ஆயுதபாணிக் கும்பலான "அபுசயாப்" என்ற இயக்கத்தை அடக்க வந்ததாகக் கூறிக் கொள்கிறது அமெரிக்கா. இந்த இயக்கத்திற்கும் பின் லாடனின் அல்கைதாவிற்கும் தொடர்பிருப்பதாக சர்வதேச நியாயமும் கற்பிக்கின்றது. அபுசயாப்பின் உறுப்பினர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தீவிரமான மத-அரசியல் கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பதுதான் அவர்களின் மிகத்தீவிரமான அரசியல் வேலை. இவர்களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவுகூட அப்படியொன்றும் குறிப்பிடும்படியாக இல்லை.

உண்மையில், இன்னொரு விடுதலை இயக்கத்திலிருந்து பிரிந்தவர்கள்தான் அபுசயாப் குழுவினர். பிலிப்பைன்ஸின் தென்பகுதியல் இருக்கும் பெரிய தீவான மின்டானாவோ மற்றும் சூலு, பலவான் ஆகிய தீவுகளில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். தகலொக் மொழி பேசும் பெரும்பான்மைப் பிலிப்பீனியர்களிடமிருந்து வேறுபட்ட மொழி, இன அடையாளங்களைக் கொண்டுள்ளமை வேறு விடயம். இந்தத் தீவுகள் முன்பு தனியாக ஒரு முஸ்லீம் சுல்தானால் ஆளப்பட்டன. பின்னர் அமெரிக்காவால் பிலிப்பைன்ஸ் என்ற தேசத்துடன் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் மற்றத்தீவுகளிலிருந்த கிறிஸ்த்தவர்கள் சென்று குடியேற ஊக்குவிக்கப்பட்டு முஸ்லீம்கள் சிறுபான்மையாக்கப்பட்டனர். பொருளாதார ரீதியாகவும் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பின்னர் "மோரோ தேசிய விடுதலை முன்ணணி" என்ற இயக்கம் மின்டானாவோ தீவு தனி நாடாக வேண்டுமெனக் கூறிப்போராடியது. ஆரசுக்கெதிரான கெரில்லாப் போராட்டம் தீவிரமடைந்து இறுதியில் சமாதானப் பேச்சுவார்த்தையில் முடிந்தது. ஒப்பந்தத்தின்படி, மின்டானோவை விசேட மாநிலமாக்கி அதிகாரப் பரவலாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மோரோ தேசிய விடுதலை முன்ணணி ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு அரசியல் நடாத்தப்போய்விட்டது. இந்தத் தீர்வுடன் உடன்படாதவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடரப்போவதாக கூறினர். அப்படி ஆயதங்களைக் கைவிடாத ஒருசிலரின் அமைப்புத்தான் அபுசயாப்.

மேற்கத்தைய நாடுகளின் உல்லாசப் பிரயாணிகளை கடத்தியதன் முலம் இவர்களுக்குச் சர்வதேசப் பிரபல்யம் கிடைத்தது. அதற்கு முன்னர் பல பிலிப்பைன்ஸ் நாட்டுப்பிரஜைகள் கடத்தப்பட்டிருந்தாலும், வெளியுலகில் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், ஒருசில அமெரிக்க, ஐரோப்பியப் பிரஜைகள் கடத்தப்பட்ட உடனேயே உலகத்தொலைக்காட்சிச் சேவைகளின் கமெராக்கள் அடர்ந்த காடுகளுக்குள் செய்தி சேகரிக்கப் போய்விட்டன. பின்லாடனின் ஆட்களைத் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு அமெரிக்க இராணுவமும் காடுகளுக்குள் அபுசயாப்பைத் தேடி வேட்டையாடலாமெனப் போய்விட்டது. உண்மையில், பிலிப்பைன்ஸ் இராணுவம்தான் அபுசயாப்புடன் நேரடி மோதல்களில் ஈடுபட்டது. அமெரிக்க இராணுவம் பின்னால் நின்று ஆலோசனை வழங்கியது.

இராணுவ நடவடிக்கை தொடங்கி சில மாதங்களிலேயே அபுசயாப் தலைவர் மரணமடைய, அந்த இயக்கம் அநேகமாக அழிந்துவிட்டது என்றே பலர் கருதுகின்றனர். அதற்குப் பின்னும் அமெரிக்க இராணுவம் அங்கேயிருப்பது பலரின் கண்களை உறுத்துகின்றது. இந்த ராணுவ நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்தே பல விமர்சனங்களைக் கிளறிவிட்டிருந்தது. முன்னர் குறிப்பிட்டதுபோல, தெளிவான அரசியற் கொள்ளையற்ற ஒரு கொள்ளைக் கூட்டம் போல செயற்பட்ட சில நூற்றுக்கணக்கான அபுசயாப் ஆயுதபாணிகளைப் பிடிக்க அமெரிக்க இராணுவம் வரவேண்டுமா? சர்வதேசச் செய்தி ஸ்தாபனங்களில் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், இது என்னவோ காடுகளுக்குள் எலிகளைத் தேடி வேட்டையாடுவது போலுள்ளது. இனித்தான் புலிவேட்டை நடக்கப் போவதாக பிலிப்பைன்ஸ் மக்களிடையே கதை அடிபடுகின்றது.

பிலிப்பைன்ஸில் நீண்டகால அமெரிக்க எதிர்ப்புச் சக்தியாகவிருப்பது "புதிய மக்கள் படை" . பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப்பிரிவான இது முன்பு அமெரிக்க காலனி யாதிக்கத்திற்கெதிராக போராடியது. பின்னர் அமெரிக்க சார்பு மார்க்கோசின் சர்வாதிகாரத்திற்கெதிராக கொரில்லாப் போராட்டத்தைத் தொடர்ந்தது. மார்கோஸ்சிற்கு பின்னர் வந்த ஜனநாயக அரசாங்கங்களுடன் பலமுறை சமாதானப் பேச்சுவார்தைதைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் இன்னும் பிலிப்பைன்ஸின் பல பகுதிகள் புதிய மக்கள் படை கெரில்லாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

அமெரிக்க அரசு வெளியிட்ட வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புதிய மக்கள் படையும் இடம்பெறுகின்றது. அதனால் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் பிலிப்பைன்ஸிலும் வெளிநாடுகளிலும் எடுக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தினதும், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சில உறுப்பினர்கள் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து செயற்படுவதாகவும் கூறி, இவர்களின் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை பறிமுதல் செய்யுமாறு அமெரிக்க அரசு கேட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் புதிய மக்கள் படை வெளியிட்ட அறிக்கையொன்று அமெரிக்க இராணுவம் தமக்கு எதிராகத் திரும்பினால் தாம் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும், அமெரிக்க இராணுவ நிலைகள் மட்டுமன்றி பொருளாதார இலக்குகளும் தாக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளது.

இவற்றைவிட, அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்ஸில் நிரந்தரமாகத் தங்குவதற்கு பல அரசியற் பொருளாதாரக் காரணங்களும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. முதலாவது பூகோள அமைவிடம்: சீனாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் நடுவில் பிலிப்பைன்ஸ் தீவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக இந்தோனேசியாவில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கை கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை அமெரிக்கா கண்காணிக்க விரும்புகின்றது. மேலும் இந்தோனேசியா எண்ணை உற்பத்தி செய்யும் நாடென்பதால் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதைவிட அமெரிக்கப் பாராளுமன்ற ஒப்புதலுடன் பிலிப்பைன்ஸ்க்கு ஆயுத, இராணுவ உதவிகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க இராணுவ வல்லுனர்களின் ஆலோசனையால் பிலிப்பைன்ஸ் இராணுவமயப்படுத்தப்படுகின்றது. ஒரு ஏழை நாடான பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடமிருந்து இராணுவ உபகரணங்களையும், தொலைத்தொடர்புக் கருவிகளையும் வாங்கவுள்ளது. மறுபக்கமாகப் பார்த்தால், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒரு ஆசிய சந்தை கிடைத்துள்ளது. அமெரிக்க அரசின் இராணுவ நிதி உதவிகூட இதுபோன்ற விற்பனையைக் கருதிச் செய்யப்படுவதுதான்.

முன்புகூட அமெரிக்க அரசாங்கம் பல மூன்றாம் உலக நாடுகளுக்கான இராணுவ நிதியுதவித்திட்டத்தை முன்வைத்திருந்த போதிலும் அதற்குப் பாராளுமன்ற ஒப்புதல் கிடைக்கவில்லை. செப்டம்பர் 11 ற்குப்பின் தாராளமாகவே ஒப்புதல் வழங்கப் படுகின்றது. பிலிப்பைன்சுடன் சேர்ந்து பாகிஸ்தான், கொலம்பியா போன்ற நாடுகளுக்கும் இராணுவ நிதியுதவி வழங்கப்படுகின்றது. இந்த நாடுகளில் நிலைமை எப்படிப் போகிறதென அவதானித்து வருங்காலத்தில் பிற நாடுகளுக்கும் உதவி வழங்கப்படும்.

சுருக்கமாகப் பார்த்தால், அமெரிக்க இராணுவம் தனது (வெளிநாட்டு) துணைப்படைகள் மூலம் பலத்தைக் காட்டுகின்றது. கடந்த கால அமெரிக்க இராணுவ வரலாற்றில் மனித உரிமைகளை மீறும் அரசுகளுடன் துணை நின்றதைத் திரம்பிப் பார்த்தால், எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதற்கான காரணங்கள் தென்படவில்லை.