Saturday, December 02, 2023

தயவுசெய்து ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசாதீர்கள்!

 

தோழர் வே. பாலகுமாரின் எழுத்துக்களை தொகுத்து நூலாக வெளியிட்டமை நல்ல விடயம். ஆனால், சுமார் 15 வருடங்களாக ஈழப் புரட்சி அமைப்பு (EROS) என்ற மார்க்சிய லெனினிஸ இயக்கத்தின் தலைவராக இருந்த ஒருவரை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் "சிறப்பு உறுப்பினர்" என தரம் தாழ்த்தி அவமானப் படுத்தி இருக்கத் தேவையில்லை. இது ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவர் வகித்த பாத்திரத்தை சிறுமைப்படுத்தியதாகவே கருத இடமுண்டு. அநேகமாக விற்பனையை நோக்கமாக கொண்டு அவ்வாறு தலைப்பிட்டிருக்கலாம்.

வே. பாலகுமார் கடைசி வரையில் ஒரு புலி உறுப்பினராக இருக்கவில்லை. அவர்களும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் புலிகளுக்கு ஆதரவாக பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அது மட்டுமல்ல இறுதி வரை புலிகள் மீது விமர்சனங்களை கொண்டிருந்தார். போரின் இறுதிக் கட்டத்தில், முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த காலத்தில் பிரபாகரனை சந்தித்து பேசிய பாலகுமார் குழுவினர், பொது மக்களின் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக போர் முடிவுகளை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு 300 திரைப்பட கேசட் கொடுத்து தனது முடிவு என்னவென தெரிவித்தார். "தற்கொலைப் பாதையை நோக்கி செல்கிறார்கள்" என்று நம்பிக்கைக்குரிய சிலரிடம் வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார்.

இறுதிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாலகுமார் குடும்பத்தினர் நந்திக் கடலில் புலிகளிடம் பிடிபட்டு திருப்பி அனுப்ப பட்டனர். கடைசியில் போர் முடிந்து புலிகளின் தலைவர்களும் சரணடைந்த நேரத்தில் தான் பாலகுமாரும், மகனும் இராணுவத்தில் அகப்பட்டனர். அதனால் இராணுவம் பாலகுமாரையும் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதி இருக்க வேண்டும். அதற்குப் பிறகு எந்த தகவலும் தெரியாத படியால் இராணுவம் கொன்றிருக்கலாம் என்றே நம்பப் படுகின்றது.

பிற்குறிப்பு: 
ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசும் அயோக்கியத்தனத்தை நிறுத்திக் கொள்ளவும்.

No comments: