Showing posts with label ஹமாஸ். Show all posts
Showing posts with label ஹமாஸ். Show all posts

Thursday, July 10, 2014

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர்


ஈழப் போராட்டம் தொடங்கிய எழுபதுகளில், பாலஸ்தீனர்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஈழ விடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்களுக்கு லெபனானில் போர்ப் பயிற்சி கொடுத்தார்கள். ஒரே ஆசியக் கண்டத்தில் உள்ள, இரண்டு நவ- காலனித்துவ நாடுகளில் நடக்கும் ஈழப் போராட்டமும், பாலஸ்தீன போராட்டமும் ஒன்று என்று உளப்பூர்வமாக நம்பினார்கள்.

அன்றைக்கு தமிழ்நாட்டில் கூட அந்தளவு ஈழ ஆதரவு இருக்கவில்லை. "இந்தியாவில் இருந்து பிழைக்கப் போனவர்கள் தனி நாடு கேட்பது நியாயமா?" என்று தமிழர்கள் கூட கேட்டார்கள். தமிழகத்தில் புகலிடம் கோரிய ஈழப் போராளிகள், தங்குவதற்கு இடம் தேடித் திரிந்த காலம் ஒன்றிருந்தது. தமிழினப் பெருமை பேசிய அரசியல்வாதிகள் கூட ஆதரிக்கவில்லை.

அந்த வரலாற்றை பலர் இன்று மறந்து விட்டதற்கு, பிற்காலத்தில் ஊடுருவிய மொசாட், ரோ உளவாளிகளின் சூழ்ச்சிகளும் ஒரு காரணம். இடை நடுவில் புகுந்து, ஈழப் போராட்டத்தை கடத்திச் சென்றுள்ள இந்துத்துவா வாதிகள், ஈழத் தமிழர்களையும், பாலஸ்தீனர்களையும் நிரந்தரமாக பிரித்து விடப் பார்க்கிறார்கள்.


இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் மத்தியில், மீண்டும் ஹமாஸ் மீதான ஆதரவு அதிகரித்து வருகின்றது. முன்பு ஈழத்தில் வன்னிப் பிரதேசத்தில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவை தெரிந்தவர்களுக்கு, இன்றைய காஸா நிலைமையை புரிந்து கொள்வது எளிது.

காஸா போரை ஹமாஸ் தான் ஆரம்பித்து வைத்தது என்று இஸ்ரேல் வழமை போல குற்றம் சாட்டியுள்ளது. முன்னர் ஈழப்போர் நடந்த காலங்களிலும், சிறிலங்கா அரசு எப்போதும் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது வழமை. ஆனால், மிகவும் சக்தி வாய்ந்த இராணுவத்தை வைத்திருக்கும் அரசுகள், போரின் போக்கை நிச்சயிக்கும் வல்லமை பெற்றிருக்கின்றன.

2009 ம் ஆண்டு, இறுதிப் போரில் புலிகள் அழிக்கப் பட்டது மாதிரி, இந்த வருடம் காஸாவில் ஹமாஸ் அழிக்கப் படா விட்டாலும், ஒரேயடியாக அங்கிருந்து விரட்டியடிக்கப் படலாம். ஏனெனில், அந்தளவுக்கு ஹமாஸ் பலவீனமாக உள்ளது. இந்தப் போரை ஹமாஸ் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், ஹமாஸ் கிளர்ச்சிப் படையினரை ஆதரித்தது. அதனால், ஆசாத் அரசு ஹமாசுக்கு வழங்கிய உதவிகளை நிறுத்திக் கொண்டது. கூடவே ஈரானும் கைவிட்டு விட்டது. அடுத்ததாக, அயல்நாடான எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் ஹமாசுக்கு நிறைய உதவிகள் கிடைத்தன. ஆனால், புதிய எகிப்திய அரசாங்கம், எந்த உதவியும் செய்யாதது மட்டுமல்ல, ஆயுதங்கள், அத்தியாவசியப் பொருட்களை கடத்துவதற்கு பயன்பட்டு வந்த இரகசிய சுரங்கப் பாதைகளையும் மூடி விட்டது. ஈழத்தில் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியா, வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு சென்ற விநியோகப் பாதைகள் தடுக்கப் பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது.

ஈழத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த சமாதான காலத்தில், வன்னியில் புலிகளின் நிர்வாகம் குறித்து, அங்கு வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தன. சமாதான காலங்களில் மக்களை தம்மோடு வைத்திருப்பதற்காக புலிகள் பெரும்பாடு பட வேண்டி இருந்தது. வழமையாக, போர் நடக்கும் காலங்களில், புலிகளுக்கான தமிழ் மக்களின் தார்மீக ஆதரவு உச்சத்தில் இருக்கும். பாலஸ்தீனத்திலும் அது தான் நிலைமை.

வன்னியில் புலிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், காஸாவில் ஹமாசுக்கு ஏற்பட்டன. 2006 ம் ஆண்டு நடந்த தேர்தலில், காஸாவில் ஹமாஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்தக் காலங்களில், ஹமாஸ் மட்டுமே தங்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று மக்கள் அவர்கள் மேல் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள்.

ஆயினும், ஹமாஸ் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், காஸாவில் பல பொருளாதாரப் பிரச்சினைகள் தலைகாட்டின. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைகள், எரிபொருள், தண்ணீர் தட்டுப்பாடுகள், இது போன்ற குறைகளை ஹமாஸ் நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், காஸா மக்களுக்கும், ஹமாசுக்கும் இடையில் விரிசல் காணப் பட்டது. ஆனால், தற்போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையானது அந்த நிலைமையை மாற்றியுள்ளது. 

ஈழப்போர் நடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தது போன்று, இன்று மீண்டும் காஸா மக்கள் பெருமளவில் ஹமாஸை ஆதரிக்கின்றனர். அவர்களுக்கும் வேறு வழியில்லை. இஸ்ரேலிய படையினரின் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக, ஏதாவது செய்யக் கூடியவர்கள் ஹமாஸ் மட்டுமே என்பது அந்த மக்களின் நம்பிக்கை. முன்பு வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்களும், அவ்வாறு தான் தங்களை பாதுகாப்பதற்காக புலிகள் மட்டுமே இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.

வன்னி மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் நடந்த காலங்களில், புலிகளை விட்டு மக்கள் விலகி இருக்க வேண்டுமென கோரும் துண்டுப் பிரசுரங்களை, சிறிலங்கா வான் படையினர் தூவினார்கள். அதே மாதிரி, இன்று காஸா பகுதியில் இஸ்ரேலிய வான் படையினர் செய்கின்றனர். ஹமாஸ் உறுப்பினர்களை விட்டு விலகி இருக்குமாறு மக்களை எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் விசிறப் படுகின்றன. ஆனால், யார் ஹமாஸ் உறுப்பினர் என்று யாருக்குத் தெரியும்? மேலும் காஸா பிராந்தியத்தில் ஹமாஸ் நிர்வாகம் தான் நடக்கின்றது. அதனால், எல்லா இடங்களிலும் ஹமாஸ் உறுப்பினர்கள் பரவலாக காணப் படுவார்கள்.

காஸா என்பது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை. இஸ்ரேலுடனான அனைத்து எல்லைகளும் மூடப் பட்டுள்ளன. கடலிலும் இஸ்ரேலிய கடற்படை ரோந்து சுற்றித் திரிகின்றது. எகிப்துடனான சிறு துண்டு எல்லைப் பிரதேசத்திலும் யாரையும் வர விடாமல், எகிப்திய இராணுவம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு பிரதேசத்தில் இருந்து, யாரும் அகதியாகக் கூட வெளியேற முடியாது.

பாலஸ்தீனத்தில் நடப்பது போரல்ல. அது ஓர் இனப்படுகொலை. ஆனால், உலக நாடுகள் அதைப் பற்றிக் கவலைப் படாமல், உலக கால்பந்தாட்டப் போட்டிகளை கண்டுகளித்துக் கொண்டிருக்கின்றன.

Monday, December 28, 2009

ஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்

("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஆறாம் பகுதி)
மறைந்த தலைவர் யாசீர் அரபாத் காலத்தில் இருந்தே பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட போராளிகளுக்கிடையே சகோதரச் சண்டை நடைபெற்று வந்துள்ளது. அரபாத்தின் ஃபதா இயக்கம் பெருந்தொகையான உறுப்பினர்களையும் நிதிவளங்களையும் கொண்டிருந்ததால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற அகிம்சாவழியில் இயங்கிய உதவி நிறுவனத்தைக் கைப்பற்றி முழு பாலஸ்தீனர்களுக்குமான பிரதிநதிகளாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். பிற விடுதலை இயக்கங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அளவில் சிறியதாக இருந்ததால் ஃபதாவின் தலைமையின் கீழ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் (PடO) உள் வாங்கப்பட்டனர். இந்த நிறுவனமயமாக்கலுக்குள் வர மறுத்தவர்கள் வேட்டையாடப்பட்டு ஒழிக்கப்பட்டனர்.

பாலஸ்தீன விடுதலையை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ஃபதா இஸ்ரேலுடன் சமரசப் போக்கையே நாடியது. அதாவது, உண்மையான இறுதி இலக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடு அல்ல. இஸ்ரேலுக்குள் சுயநிர்ணய உரிமைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசம். அரபாத்தின் சமரசப் போக்கை பல சுயாதீனப் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தி உள்ளனர்; இஸ்ரேலிய அரசுக்குத்தான் இதனைப் புரிந்துகொள்ள நீண்டகாலம் எடுத்தது
அல்லது பாலஸ்தீன தேசியவாதம் என்ற சித்தாந்தமே தனது இருப்புக்கு ஆபத்து என்று அஞ்சியதால் PடO வை பலவீனப்படுத்தும் நோக்கோடு இஸ்லாமிய மத அடிப்படைவாத HAMAS சிற்கு மறைமுக ஆதரவு அளித்தது. அதாவது விடுதலைப் போராட்டத்தினுள் மதத்தைப் புகுத்துவதன்மூலம் கிறிஸ்தவ மற்றும் மதச்சார்பற்ற பாலஸ்தீனர்களை அந்நியப்படுத்திப் பார்த்தது. அந்த நோக்கம் கணிசமானளவு வெற்றி பெற்றுள்ளதைக் கண்கூடாகக் காணலாம்.

சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் பாலஸ்தீன அதிகாரசபை அமைக்கப்பட்ட பின்னர் கூட யாசீர் அரபாத் இஸ்ரேலிடம் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கவில்லை. குறிப்பாக, அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் பாலஸ்தீன அகதிகளின் நாடு திரும்புவதற்கான உரிமையை அரபாத் வலியுறுத்தி வந்தார். இஸ்ரேலோ அந்த உரிமையை மறுத்தது. அதை ஏற்றுக்கொள்ளும் பாலஸ்தீனத் தலைமையை விரும்பியது. அதற்கு ஏற்ற ஆளாகத் தற்போது அப்பாஸ் கிடைத்துள்ளார். அரபாத் எப்போது சாவார் என்று இஸ்ரேல் மட்டுமல்லாது அப்பாஸ் போன்ற ஃபதா தலைவர்களும் எதிர்பார்த்ததை, “தனது கணவனை உயிரோடு குழியில் போட்டு மூட காத்திருப்பதாக” அரபாத்தின் மனைவி கூறுமளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. பாலஸ்தீனப் பிரதேசங்களின் ஜனாதிபதியாக அப்பாஸ் தெரிவானதும் இனித்தான் நினைத்தபடி ஆட்டுவிக்கலாம் என்று இஸ்ரேலும் பெருமூச்சு விட்டது. ஆனால், HAMAS வடிவில் வந்தது சோதனை.

பாலஸ்தீன அதிகாரசபை நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியபிறகுதான் ஃபதா எதற்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்தது என்பது மக்களுக்குப் புரிந்தது. அரசாங்கம் மட்டுமல்லாது அரசு சார்ந்த நிறுவனங்களிலெல்லாம் ஃபதா ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நண்பர்கள் வர்த்தக நிறுவனங்களை ஸ்தாபித்தனர். வர்த்தகர்கள் கொடுத்த லஞ்சத்தில் அரசு அதிகாரிகள் கொழுத்தனர். இதனால் மொத்த அதிகார சபையும் ஊழல் மயமாகி, சாதாரண பொது மக்களை வறுமைக்குள் தள்ளியது. மக்களின் உள்ளக் குமுறலை வாக்குகளாக மாற்றிக் கொண்ட HAMAS பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதில் அதிசயம் என்னவென்றால் ஃபதாவின் ஊழலாட்சி நடந்தபோது கண்ணை மூடிக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், HAMAS அமைத்த புதிய அரசாங்கம் இயங்கவிடாமல் தடுத்தது. பாலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கிக் கொண்டிருந்த நிதியுதவிகளை ரத்து செய்தது. பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து வரும் வரித்தொகையை இஸ்ரேலுக்குத் திருப்பிக் கொடுக்க மறுத்தது.

இதனால் பாலஸ்தீன அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லாமல் போக அரச நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. மாதக் கணக்காக வழங்கப்படாத சம்பளத்தைக் கேட்டு அரச ஊழியர்கள் போராடியபோது HAMAS சிடம் போய் வாங்குமாறு கூறி விரட்டியது ஃபதா. உண்மையில் தொழிலாளர்களின் கஷ்டத்தை ஃபதா தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. பாடசாலை ஆசிரியர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறும் HAMAS அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறும் தூண்டியது. ஏ.கே.47 சகிதம் சென்ற பொலிசார், HAMAS அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து நாசம் விளைவித்தனர். தெருக்களில் (ஃபதா ஆதரவு) பொலிஸ்காரர்கள் ஆயுதமேந்திய HAMAS உறுப்பினர்களை வலுச்சண்டைக்கு இழுத்தனர். இது ஃபதா - HAMAS இடையிலான சகோதர யுத்தமாகப் பரிணமித்தது.

பாலஸ்தீனத்தினுள் உண்மையில் என்ன நடக்கிறது? அங்கே ஒரு சதிப் புரட்சிக்கு ஒத்திகை பார்க்கப் படுகின்றது! அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் ஆகிய பாலஸ்தீன விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் சக்திகள் ஃபதா போன்று தம்மோடு ஒத்துழைக்கக் கூடியவர்களையே எவ்வழியிலும் ஆட்சியிலிருத்த விரும்புகின்றனர். பெரும்பான்மை மக்கள் HAMAS போன்ற எதிர்க்கட்சிகளைத் தெரிவு செய்தாலும் அந்த ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுப்பதில்லை. இருப்பினும் ஃபதா நண்பர்களுக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டால், வேறுவழியில்லாமல் சதிப்புரட்சி மூலம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான அடிப்படையை உருவாக்கும் பொருட்டு HAMAS ஆட்சி மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்களையும் கலவரங்களையும் இன்னபிற இன்னல்களையும் மட்டுமே கொடுக்க முடியும் என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

இறுதியில் தனது கையாலாகாத்தனத்தை உணர்ந்த HAMAS அரசாங்கம் மக்கள் நலன் கருதி பதவி துறக்கவும் ஃபதாவுடன் தேசிய ஐக்கிய முன்னணிக்கு உடன்பட்டதையிட்டு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். HAMAS அரசாங்கத்தை இயங்கவிடாமல் தடுக்கும் பொருட்டு ஏற்கனவே இஸ்ரேலிய படைகள் HAMAS அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பயங்கரவாதத் தொடர்பு குற்றம் சாட்டி சிறையில் அடைத்தும், அது போதாதென்று மீதமிருந்த HAMAS அரச அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் யாவும் ஃபதா குண்டர்களால் தாக்கி நாசமாக்கப்பட்டன. அவ்வதிகாரிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைவிட, ஒருமுறை பாப்பரசர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து பிரச்சினை எழுந்த காலத்தில், சில பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயங்கள் இனந்தெரியாதவர்களால் தீயிடப்பட்டன. அந்த இனந்தெரியாதவர்கள் ஃபதா குண்டர்களாக இருக்கலாம் என்றும் கிறிஸ்தவர்களை HAMAS சிற்கு எதிராகத் திருப்பிவிடும் நோக்கோடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

இதற்கிடையில் மிக இரகசியமாகப் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாலஸ்தீன அதிகாரமையம் இருக்கும் 'ரமலா' நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்படுகின்றது. அந் நகரத்தில் பாராளுமன்றம், அமைச்சுகள் ஆகியவற்றோடு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பாலஸ்தீன மத்தியதர வர்க்கத்தின் வசிப்பிடங்களும் அமைந்துள்ளன. சுருக்கமாக, வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் நகரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்கள் உள்ளன. ரமலாவிற்கு சிறிது தூரத்தில் இரகசியமான இடத்தில் ஜனாதிபதி அப்பாஸிற்கு விசுவாசமான சிறப்புப் பாதுகாப்புப்படை முகாமிட்டுள்ளது. இந்த முகாமில் அமெரிக்க, எகிப்து,ஜோர்தானிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சியளிக்கின்றனர். இந்தச் சிறப்புப் படைக்கென மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்ள இஸ்ரேலும் அனுமதியளித்துள்ளது. இன்றைய நிலையில் HAMAS பல பின்னடைவுகளைச் சந்தித்தபோதும் அதன் பலம் குறையவில்லை. பல ஆயுதங்களை HAMAS இன்னமும் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்துள்ளது. இதனைக் கவனத்தில் எடுத்துத் தான் அப்பாஸின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு புதிய ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.


பாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:
பகுதி 5: இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்
பகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்
பகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்
பகுதி 2: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனர்களும்

பகுதி 1: போர்க்களமான புனித பூமி


[உயிர்நிழல் (அக்டோபர்- டிசம்பர் 2006 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]

Monday, February 09, 2009

ஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)

ஹமாஸ் போராளிகள் எவ்வாறு ஏவுகணை தயாரிக்கிறார்கள்? அதனை எவ்வாறு இஸ்ரேலிய இலக்குகள் மீது ஏவுகிறார்கள்? ஹமாஸ் அதனை எவ்வாறு நியாயப் படுத்துகின்றது? ஹமாஸ் போராளிகளின் சமூகப் பின்னணி என்ன? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கிறது அல் ஜசீரா தொலைக்காட்சி தயாரித்த இந்த ஆவணப்படம். குறிப்பு: இந்த வீடியோ இஸ்ரேல் காசா மீது ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தயாரிக்கப்பட்டது.

People and Power - Rocket Men

Tuesday, January 13, 2009

வீடியோ சாட்சியம்: "இஸ்ரேல் முதலில் போர்நிறுத்தத்தை மீறியது"


இஸ்ரேல் காஸா மீதான தனது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு, ஹமாஸ் எறிகணைகள் ஏவியதை காரணமாக காட்டி வருகின்றது. ஹமாசின் ராக்கெட் தாக்குதல் போர்நிறுத்த மீறல் என்றும், அதற்கான பதிலடியாகவே இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை அமைந்தது என்றும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூறுவதை, சர்வதேச ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன.

ஹமாசின் ராக்கெட் தாக்குதல் தான் இஸ்ரேலை போருக்குள் வலிந்து இழுத்ததா? நவம்பரில் சில பாலஸ்தீன போராளிகளை இஸ்ரேலிய படைகள் சுட்டுக் கொன்றமையே, முதலாவது போர் நிறுத்த மீறலாகும். அதேநேரம் போர்நிறுத்தம் அமுலில் இருந்த வேளை, ஹமாஸ் எந்தவொரு எறிகணை தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த உண்மைகளை இஸ்ரேலிய அதிகாரி Mark Regev தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அதேநேரம் ஹமாஸ் (ஆயுதக் கடத்தலுக்கு) சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்ததால், "முன்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடாகவே" இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை எடுத்தது என்ற புதிய கதையையும் கூறியுள்ளார்.

ஏற்கனவே சி.என்.என். ஒளிபரப்பிய செய்தித் துணுக்கு ஒன்றும், இஸ்ரேல் தான் போர்நிறுத்தத்தை முதலில் மீறியது என்று குறிப்பிடப்பட்டது. இவ்விரண்டு வீடியோக்களையும் இந்தப் பதிவில் பார்வையிடலாம். இஸ்ரேலின் காஸா மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு, ஒரு போர்க்கால குற்றம் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.


Who Broke The Cease Fire - Hamas or Israel 2008
Israel Confirms Hamas Fired NO Rockets



CNN Confirms Israel Broke Ceasefire First



________________________________________

Thursday, January 08, 2009

"பாப்பரசர் ஹமாஸ் பிரச்சாரகர்!" - இஸ்ரேல் குற்றச்சாட்டு

WARNING
This blog contains pictures of children killed in Israel's attack on Gaza.

முற்றுகைக்குள் அல்லலுறும் பாலஸ்தீன காஸா பகுதி, நாஜிகளின் வதைமுகாம் போல காட்சிதருவதாக, வட்டிகான் கார்டினல் ஒருவர் இத்தாலிய பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்று இஸ்ரேலிய அரசை கொதிப்படைய வைத்துள்ளது. "மனித உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, இஸ்ரேலும் ஹமாசும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்." என்ற பாப்பரசரின் வேண்டுகோளை பிரதிபலித்த கார்டினல், காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி பற்றி கருத்து தெரிவிக்கும் போதே வதைமுகாமுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு பதிலாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு, "பாப்பரசரும், வட்டிக்கானும் ஹமாசிற்காக பிரச்சாரம் செய்வதாக" குற்றஞ்சாட்டியுள்ளது.(Israel Accuses Vatican of Spouting 'Hamas Propaganda')



12 நாட்களாக தொடரும், காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரில், இதுவரை 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதில் 220 பேர் சிறுவர்கள். (
Herald Sun) இராணுவரீதியாக இஸ்ரேல் மேலாண்மை வகித்தாலும், சர்வதேச பிரச்சார யுத்தத்தில் கடும் தோல்வியடைந்துள்ளது. காஸா பகுதிக்குள் சர்வதேச ஊடகவியலாளர் செல்வதற்கு இஸ்ரேலிய இராணுவம் அனுமதி கொடுக்க மறுத்து வருகின்றது. அதேநேரம் விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களால் கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்களை கைகளில் ஏந்திய பெற்றோரின் படங்கள், உலக மக்கள் மத்தியில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ஐ.நா.மன்றம் தனது பாடசாலை தாக்கப்பட்டமை குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
UN: No Hamas Fighters in Bombed Gaza School





________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Sunday, August 24, 2008

காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்

இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.

உத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த "மாபெரும் குற்றம்." ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை விட்டு விடுவோம். மனித அவலத்தை தடுக்கும் வகையில் "வெற்று தீர்மானங்களை" யாவது எடுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கு, இரண்டு வருடமாக காஸா மக்கள், இராணுவ முற்றுகைக்குள் இன்னலுருவது மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. "சர்வதேச சமூகமும்" (யார் அது?) அக்கறைப்படுவதில்லை. "நடுநிலை தவறாத" மேற்குலக ஊடகங்களுக்கு, தற்போது "சீன முற்றுகைக்குள் வாடும் திபெத்தியர்கள்" நிலை பற்றி புலனாய்வு செய்வதால், நேரம் கிடைப்பதில்லை போலும்.

இத்தகைய பின்னணியில், சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களின் கடும் முயற்சியினால், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் ஆகிய பல்வேறு தேசத்தவர்களை கொண்ட, குழுவொன்று, இரண்டு மீன்பிடி வள்ளங்களில், சைப்ரசில் இருந்து காஸா நோக்கி சென்றுள்ளனர். "Free Gaza" என்று அழைக்கப்படும் இந்த குழுவில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேரின் உறவுக்காரப் பெண்ணொருவரும், கிரீஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சில (இஸ்ரேலிய) யூதர்களும் பங்கு பற்றுவது சிறப்பம்சமாகும்.

Free Gaza Movement, தமது பயணத்தை தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, இஸ்ரேலில் இருந்து 375 கி.மி. தொலைவில் இருக்கும் சைப்ரஸ் தீவில் ஒரு பத்தரிகையாளர் மகாநாட்டை நடத்தி தமது மனிதாபிமான உதவி பற்றி தெளிவு படுத்தியிருந்தனர். மருந்து, மற்றும் பிற நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்லும் தமது பயணம், காஸா முற்றுகையை முறியடிக்கும் ஒரு அடையாள நடவடிக்கை என்றும் கூறினர்.

சைப்ரசின் லர்னகா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய, 42 நிராயுதபாணிகளான சமூக ஆர்வலர்களின் பயணத்தை தடுக்குமாறு, இஸ்ரேலிய அரசு சைப்ரஸ் அரசிடம் கேட்டும், அது கைகூடவில்லை. முன்பு ஒருமுறை, எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில், வெளிநாடுகளில் புகலிடத்தில் இருந்த பாலஸ்தீன அகதிகளின் குழுவொன்று, இது போன்றே சைப்ரசில் இருந்து கப்பலில் தமது தாயகம் திரும்ப திட்டமிட்டனர். அனால் இரவோடு இரவாக மொசாத் உளவாளிகள், சைப்ரசில் லிமசோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (அகதிகளின்) கப்பலை குண்டு வைத்து தகர்த்தால், அந்தப் பயணம் நிறைவேறவில்லை. அது போன்றே தற்போதும் எதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற அச்சம் இருந்தது.

Free Gaza குழுவினரின் வள்ளங்கள், புயல்காற்றையும், கடல் கொந்தளிப்பையும் மீறி, இஸ்ரேலிய கடல்பரப்பை அண்மித்த வேளை, இஸ்ரேலிய கடற்படை அவர்களது தொலை தொடர்புகளை அடிக்கடி இடையூறு செய்தது. முதலில் காசாவினுள் பிரவேசிக்க விடமாட்டோம் என்று அடம்பிடித்த இஸ்ரேலிய அரசு, பின்னர் அத்தகைய நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்பதால், காஸா செல்ல அனுமதித்தது. காசாவில் தரையிறங்கிய சர்வதேச சமூக ஆர்வலர்களை, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கடற்கரையில் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில், இரண்டு வருட முற்றுகைக்குள், இன்னல்களுக்குள் உயிர்வாழும் மக்கள், சர்வதேசத்தால் பாராமுகமாக விடப்படவில்லை, என்பதை காட்டுவதே தமது நோக்கம் என்று Free Gaza ஆர்வலர்கள் தெரிவித்தனர். இன்று (24-8-2008) காசாவில் அந்த ஆர்வலர்கள், பத்திரிகையாளர் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்த போதும், CNN, BBC போன்ற "நடுநிலை தவறாத" ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.



இதற்கிடையே, இரண்டு வருட பொருளாதார முற்றுகையாலும் காஸா பாராளுமன்ற தொகுதிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அரசை அசைக்க முடியவில்லை, என்பதை கண்டு கொண்ட இஸ்ரேலிய அரசு; தற்போது குறுக்குவழியில் குண்டுவெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மூலம் அதனை சாதிக்க விளைகின்றது. அதற்காக ஹமாசின் எதிராளிகளான பதா கட்சியின் உறப்பினர்கள் சிலர் இஸ்ரேலிய கூலிப்படையாக செயற்படுகின்றனர். பாலஸ்தீன பகுதிகளில் ஊழல் ஆட்சி காரணமாக தோல்வியுற்ற பதா கட்சி, எதிர்க்கட்சியான ஹமாஸை அகற்ற, இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. பதா உளவுப்பிரிவு அதிகாரி டஹ்லன் தலைமையிலான குழுவொன்றுக்கு, அமெரிக்காவும், எகிப்தும் இராணுவப்பயிற்சி வழங்குகின்றன. காஸா தெற்கு பகுதியை எல்லையாக கொண்ட (ஒரு அரபு நாடான) எகிப்து, தனது எல்லைகளையும் மூடியுள்ளது. சில கடத்தல்காரர்கள் நிலத்துக்கு கீழே சுரங்கம் தோண்டி அத்தியாவசிய பொருட்களை கடத்திவந்த போதும், எகிப்திய போலிஸ் அத்தகைய சுரங்கங்களை கண்டுபிடித்து மூடி வருகின்றது. சுரங்கம் எவ்வளவு தூரத்திற்கு போனாலும், இஸ்ரேலின் நவீன நுண்ணறி கருவிகள் கண்டுபிடிக்கின்றன.

Tell a Friend

_________________________________________________