Showing posts with label உக்ரைன். Show all posts
Showing posts with label உக்ரைன். Show all posts

Thursday, March 03, 2022

உக்ரைன் போர் Special Report - காணொளிப் பதிவுகள்

 உக்ரைன் போர் Special Report 



ரஷ்யா- உக்ரைன் போர் பின்னணி | அரண் செய் நேர்காணல்



ரஷ்யாவின் புதிய உலக ஒழுங்கு: "உக்ரைன் நாஸி எதிர்ப்பு போர்"

 


உக்ரைனில் தலைதூக்கும் நிறவெறித் தாக்குதல்கள் 



Saturday, June 24, 2017

பொய்கள், புனைவுகள், IBC ஒளிபரப்பிய உக்ரைன் பஞ்சம் பற்றிய ஆபாசப் படம்!

அமெரிக்க- சியோனிச கைக்கூலி நிராஜ் டேவிட், நாஸி இனப்படுகொலைகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கில், "ஸ்டாலின் இனப்படுகொலை செய்ததாக" திரிபுபடுத்தி தயாரித்த ஆவணப்படம் ஒன்று, 2009 ம் ஆண்டு மே மாதம் IBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. (http://www.nirajdavid.com/இன-அழிப்பு-என்றால்-என்ன-ப-5/) பொய்களும், புரட்டுகளும் நிறைந்த அந்த ஆவணப்படத்தில் சொல்லப் பட்டவை உண்மை என்று நம்பும் வடிகட்டிய முட்டாள்கள் இன்றைக்கும் இருக்கின்றனர். அவர்களுக்காக இந்தப் பதிவு. 

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில், "ஸ்டாலின் செய்த இனப்படுகொலைகள்" என்று நிராஜ் டேவிட் ஓர் ஆவணப்படத்தை தொகுத்து வழங்க வேண்டிய தேவை என்ன? இதற்குப் பின்னால் உள்ள, தமிழர்களை மூளைச்சலவை செய்யும் சி.ஐ.ஏ. இன்  சதித் திட்டங்களை சாதாரணமாக கடந்து சென்று விட முடியுமா? "ஈழத்தமிழர்கள் அனைவரும் (புரட்டஸ்தாந்து) கிறிஸ்தவர்களாக மதம் மாறி, இஸ்ரேலை பின்பற்ற வேண்டும்" என்று, தமிழ்வின் இணையத்தளத்தில் நிராஜ் டேவிட் வெளிப்படையாகவே எழுதி இருந்தார்.

ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உக்ரைனில் ஏற்பட்ட பஞ்சம், அதனால் பலியான மக்களைத் தான், நிராஜ் டேவிட் "இனப்படுகொலை" என்று திரிக்கிறார். பஞ்சம் காரணமாக செத்தவர்களை இனப்படுகொலை கணக்கில் சேர்க்கலாம் என்றால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு, கொல்கத்தா, அயர்லாந்து பஞ்சங்களும் இனப்படுகொலை என்றே சொல்லப் பட வேண்டும். ஆனால், நிராஜ் டேவிட் தனக்கு பணம் கொடுக்கும் எஜமானுக்கு எதிராக பேச மாட்டார்.

நிராஜ்டேவிட், உக்ரைன் பஞ்சத்தை இனப்படுகொலை என்று திரிப்பதன் நோக்கம் என்ன? நாஸிகள் நடத்திய இனப்படுகொலைகளை மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அன்றி வேறென்ன?

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பிரதேசங்கள் முழுவதும் நாஸிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டன. இன்றைய உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி, ரஷ்யாவில் உள்ள ஸ்டாலின்கிராட் வரையில் முன்னேறி இருந்தனர்.

இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலை, ஆக்கிரமிக்கப் பட்ட சோவியத் பிரதேசங்களில் நாஸி- ஜெர்மனி படைகளால் நடத்தப் பட்டது. ஆக்கிரமிக்கப் பட்ட உக்ரைன், பெலாருஸ், பால்ட்டிக் நாடுகளில் யூதர்களையும், ரஷ்யர்களையும் பெருமளவில் சுட்டுக் கொன்று மனிதப் புதைகுழிகளில் போட்டு மூடினார்கள். ஜெர்மன் படையினர் "துப்பாக்கியால் சுட்டுக் களைத்து விட்ட படியால்" தான், அவுட்ஸ்விட்ஷ் தடுப்பு முகாமில் அடைத்து வைத்து விஷவாயு அடித்துக் கொல்லும் திட்டம் கொண்டு வந்தார்கள்.

க‌ம்யூனிச‌ வெறுப்புக் கார‌ண‌மாக‌, ஹிட்ல‌ர் சோவிய‌த் யூனிய‌னை ஆக்கிர‌மித்து அந்நாட்டு ம‌க்க‌ளை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவிக்க‌ திட்ட‌மிட்டிருந்தான்! "அவுஷ்விட்ஸ்" எனும் நாஸி த‌டுப்பு முகாம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. அதிலிருந்து கிடைத்த‌ சில‌ முக்கிய‌ த‌க‌வ‌ல்க‌ள். 
  • இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ யூதர்களை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவித்த‌ ப‌டியால் தீய‌ வ‌ழியில் பிர‌ப‌ல‌ம‌டைந்த‌ முகாம் அது. யூத‌ர்க‌ளை அங்கு கொண்டு செல்வ‌த‌ற்கு முன்ன‌ரே ர‌ஷ்ய‌ர்க‌ள் மீது ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. 

  • IG farben என்ற‌ ஜேர்ம‌ன் ப‌ன்னாட்டுக் க‌ம்ப‌னிக்கு தேவையான‌ மூல‌ப் பொருட்க‌ள் அவுஷ்விட்ஸ் சுற்றாட‌லில் கிடைத்த‌ன‌. அடிமை உழைப்பாளிக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ளும் நோக்க‌ம் அந்த‌க் க‌ம்ப‌னிக்கு இருந்த‌து. அந்த‌ முத‌லாளித்துவ‌ சுர‌ண்ட‌லுக்கு உத‌வுவ‌த‌ன் மூல‌ம் நாஸிக‌ளும் ப‌ல‌ன‌டைந்த‌னர். 

  • சோவிய‌த் ப‌டையெடுப்புக்கு வ‌ச‌தியாக‌த் தான் அந்த‌ இட‌த்தில் முகாம் அமைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து சோவிய‌த் எல்லையில் இருந்து சில‌ நூறு கி.மீ. தொலைவில் போல‌ந்தில் அந்த‌ இட‌ம் இருந்த‌து. - ஹிட்ல‌ரும், நாஸிக‌ளும் யூத‌ர்க‌ளை வெறுத்த‌ அள‌விற்கு க‌ம்யூனிஸ்டுக‌ளை வெறுத்தார்க‌ள். ர‌ஷ்ய‌ யூத‌ர்க‌ள் ப‌ல‌ர் போல்ஷேவிக் க‌ட்சியில் இருந்த‌தாக‌ ந‌ம்பினார்க‌ள். 

  • பெலார‌ஸ் போன்ற‌ சோவிய‌த் யூனிய‌னின் ப‌குதிக‌ள் நாஸிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்ட‌தும், 3 மில்லிய‌ன் பேர‌ள‌வில் போர்க் கைதிக‌ளாக‌ சிறைப் பிடிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர், 2 மில்லிய‌ன் பேரள‌வில் கொன்று குவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். 

  • ஆர‌ம்ப‌த்தில் க‌ம்யூனிஸ்டுக‌ள், யூத‌ர்க‌ள் அல்ல‌து போரிடும் வ‌ய‌தில் இருந்த‌ ஆயிர‌க் க‌ண‌க்கான‌ ர‌ஷ்ய‌ர்க‌ளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற‌ன‌ர். ஆனால், பெருந்தொகையான ர‌ஷ்ய‌ர்க‌ளை இல‌குவான‌ முறையில் கொன்றொழிப்ப‌து எப்ப‌டி என்று யோசித்தார்க‌ள். அவுஷ்விட்ஸ் முகாமில் கார்ப‌ன் மொனோக்சைட் ந‌ச்சு வாயு பிர‌யோகித்து ப‌ரிசோத‌னை செய்த‌ன‌ர். அது வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் தான், ஐரோப்பிய‌ யூத‌ர்க‌ள் அங்கு கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
உக்ரைனில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரமாகத் தான் இனப்படுகொலை ஆரம்பமானது. நாஸிகளுடன் ஒத்துழைத்த உக்ரைனிய தேசியவாத- பாசிஸ்டுகள் ஆயிரக் கணக்கான யூதர்களை தெருக்களில் அடித்துக் கொன்றார்கள். அப்போது உக்ரைனில் நடந்த இனப்படுகொலை எதுவென கேட்டால், அதைத் தான் குறிப்பிடலாம்.
(பார்க்க: உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள்)

ஆனால், அதையெல்லாம் நிராஜ் டேவிட் தனது ஆவணப்படத்தில் மூடி மறைக்கிறார். உக்ரைனிய இனவாதிகள் யூதர்களை மட்டும் தாக்கவில்லை. போலிஷ், ரஷ்ய மொழி பேசும் மக்களை அடித்து விரட்டி இனச்சுத்திகரிப்பு செய்தனர். இவற்றை எல்லாம் ஜெர்மன் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த தகவல் எதுவும், நிராஜ் டேவிட் தயாரித்த ஆவணப்படத்தில் சொல்லப் படவில்லை. இருட்டடிப்பு!

பஞ்சத்தில் செத்தவர்களை "இனப்படுகொலையில் கொல்லப் பட்டவர்கள்" என்று எந்த முட்டாளும் சொல்வதில்லை. எதிரிகள் கூட சொல்லத் தயங்கும் பொய்களை நிராஜ் டேவிட் தனது ஆவணப் படத்தில் சொல்கிறார்.  அதைப் பார்க்கும் தமிழர்கள் எல்லோரும் வடிகட்டிய முட்டாள்கள் என்று அவரே முடிவு செய்துவிட்டார் போலும்.

ஸ்டாலின் காலத்தில், குலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் (நமது நாட்டில் "பண்ணையார்கள்") சமூக விரோதிகளாக செயற்பட்டனர். பொதுவுடமைக் - கூட்டுறவுப் பண்ணை அமைக்கும் திட்டம் அறிவிக்கப் பட்டதும், இந்த "கிராமிய முதலாளிகள்" அல்லது பண்ணையாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். அவர்கள் தம்மிடமிருந்த கால்நடைகளை தாமே கொன்றழித்தனர். தானியக் களஞ்சியங்களை தீவைத்துக் கொளுத்தினர். உக்ரைன் பஞ்சம் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம்.

நிராஜ் டேவிட், தனது ஆவணப்படத்திற்கான "ஆதாரங்களை" எங்கிருந்து பெற்றார்? சந்தேகத்திற்கிடமின்றி நாஸி பரப்புரையாளர்களிடம் இருந்து தான்! நாஸிகள் சோவியத் யூனியன் மீது படையெடுப்பதற்கு முன்னர், பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் தாக்கத் தொடங்கி விட்டனர். அதில் ஒன்று தான் உக்ரைனிய பஞ்சத்தில் மில்லியன் கணக்கில் இறந்தனர் என்ற தகவலும். இது பின்னர் சி.ஐ.ஏ. இனரால் பிரதியெடுக்க பட்டு உலகம் முழுவதும் பரப்பப் பட்டது.
(பார்க்க: கம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி "சரித்திர" ஆசிரியர் காலமானார்!)

இன்றைய உக்ரைனின் அரைவாசிப் பகுதி தான், அன்றைய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. மிகுதி, போலந்து அல்லது ஆஸ்திரியா (ஹங்கேரி)வின் பகுதியாக இருந்தது. அப்படியானால், உக்ரைனிய பஞ்சத்திற்கு ஸ்டாலின் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியுமா? அன்றைய காலத்தில் பஞ்சம் ஐரோப்பா முழுவதும் எல்லா இடங்களிலும் இருந்தது.

உக்ரைனில் மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான மக்கள் பஞ்சத்தால் இறந்து கொண்டிருந்தனர். ஒரு குறுகிய காலத்திற்குள் ஐரோப்பா பல போர்களை கண்டிருந்தது. நெப்போலியனின் போர்கள், கிரீமியா யுத்தம், முதலாம் உலகப்போர், இவை யாவும் அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதித்திருந்தன. அதைவிட, ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது.

இன்று ஐரோப்பாவிலேயே அதி கூடிய வருமானம் ஈட்டுவோரைக் கொண்ட, நோர்வே, சுவிட்சர்லாந்து போன்ற பணக்கார நாடுகள் கூட பட்டினிச் சாவுகளுக்கு தப்பவில்லை. அயர்லாந்து பஞ்சத்தால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் இருக்கும். இலட்சக்கணக்கான ஐரோப்பியர்கள் பஞ்சம் பிழைப்பதற்காக அமெரிக்காவில் குடியேறினார்கள். இதெல்லாம் நிராஜ்டேவிட்டின் கண்களுக்கு தெரியவில்லை! அமெரிக்க டாலர்கள் அவரது கண்களை மறைத்து விட்டன.

ஒரு நாட்டில் பஞ்சம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நீண்ட காலம் நீடிக்கும் போர், உணவுப் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி, நிர்வாகச் சீர்கேடுகள் என்று பல காரணங்கள் உள்ளன. ஸ்டாலினிச எதிர்ப்பு எழுத்தாளர்கள் கூட தமது வரலாற்று நூல்களில் அவற்றை மட்டும் தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால், பஞ்சத்தை இனப்படுகொலை என்று திரிக்கும் அளவிற்கு முட்டாள்கள் யாரும் இல்லை. நிராஜ் டேவிட், மற்றும் அவரது அடிப்பொடிகளை தவிர.



*********


உக்ரைனிய பஞ்சம் தொடர்பாக முன்னர் எழுதிய பதிவு:

உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும்

கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பொய்ப் பிரச்சாரங்களில் ஒன்று, "உக்ரைனிய பஞ்சம்." மேற்கத்திய நாடுகளினால் holodomor என்று பெயரிடப் பட்ட உக்ரைனிய பஞ்சம், "ஸ்டாலினின் சோஷலிச பொருளாதார திட்டங்களினால் ஏற்பட்ட தீய விளைவு" என்று சுட்டிக் காட்டுவார்கள். அப்படியா?

இரண்டாம் உலகப் போர் முடிவு வரையில், உக்ரைனின் மேற்குப் பகுதி, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா, ருமேனியா ஆகிய அயல் நாடுகளினால் பங்கு போடப் பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மை இன மக்கள் உக்ரைனியர்கள். ஆனால், போர் முடிந்த பின்னர் தான், அவை சோவியத் யூனியனின் பகுதிகள் ஆகின.


அந்தக் காலத்தில், உக்ரைனிய பஞ்சம் பற்றி அறிவித்த ஒரு பத்திரிகையின் பக்கத்தை இங்கே தருகிறேன். இது எந்த நாட்டின் செய்தித் தாள்? செக்கோஸ்லாவாக்கியா. தலைநகர் பிராஹாவின் பெயர் வந்துள்ளதை கவனிக்கவும். அதில் என்ன எழுதியிருக்கிறது? செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசமான சகர்பாத்தி (Zakarpatie) யில், 15 000 குழந்தைகள் பட்டினியால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கிறது.

இதன் அர்த்தம், அன்றைய சோவியத் உக்ரைனில் பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை என்பதல்ல. இரண்டாம் உலகப்போர் வரையில், பஞ்சம் ஐரோப்பாக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தது. இன்று பஞ்சம் என்று சொன்னால், பெரும்பாலானோருக்கு சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் வேறு. இன்று ஆப்பிரிக்கா இருக்கும் நிலைமையில், அன்று ஐரோப்பா இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சமும், இரண்டு மில்லியன் மக்களின் பட்டினிச் சாவுகளும் இன்றைக்கும் நினைவுகூரப் படுகின்றன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, பஞ்சத்தினால் பாதிக்கப் படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இன்றைக்கு வாழும் மக்கள், எவ்வாறு ஆப்பிரிக்க பஞ்சத்தை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறார்களோ, அதே மாதிரித் தான் அன்றைய ஐரோப்பிய மக்களும் நடந்து கொண்டார்கள்.

Saturday, November 22, 2014

சோஷலிச நாடுகள் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப் படுத்துவோம்

சர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம் 

கியூபாவில் வாழும் சேகுவேராவின் புதல்வியுடனான பேட்டி

கேள்வி : மேற்குலகம் கியூபாவை ஒரு சர்வாதிகார நாடாகப் பார்க்கின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மேற்குலகில் இருப்பவர்களுக்கு சர்வாதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாது. எந்த சர்வாதிகாரியும் தனது மக்களை படிக்க வைக்க மாட்டான். ஏனென்றால், எந்தளவுக்கு அதிகமாகப் படிக்கிறார்களோ, அந்தளவுக்கு சுதந்திரமாக சிந்திப்பார்கள்.

எந்தவொரு சர்வாதிகாரியும் அனைவருக்கும் இலவசக் கல்வியை அறிமுகப் படுத்த மாட்டான்.... எப்படிப் பட்ட சர்வாதிகாரி தனது மக்கள் ஆரோக்கியமாக வாழவும் இலவசமாக கல்வி கற்கவும் விடுவான்? எப்படிப் பட்ட சர்வாதிகாரி பிற உலக மக்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு தனது மக்களுக்கு போதிப்பான்? கியூபாவில் அது தான் நடக்கிறது. 

ஒற்றுமை, மரியாதை, பிற மக்களின் மேல் அன்பு செலுத்துதல், மற்றவர்களின் நன்மைக்கான சுய அர்ப்பணிப்பு, இந்தக் கொள்கைகள் தான் கியூப மக்களுக்கு போதிக்கப் படுகின்றன. அதை எப்படி நீங்கள் சர்வாதிகாரத்துடன் முடிச்சுப் போடலாம்?

முழுமையான பேட்டியை வாசிப்பதற்கு:
‘West has no idea what a dictatorship is’ – Che Guevara’s daughter to RT 


*********

உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும் 

கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பொய்ப் பிரச்சாரங்களில் ஒன்று, "உக்ரைனிய பஞ்சம்." மேற்கத்திய நாடுகளினால் holodomor என்று பெயரிடப் பட்ட உக்ரைனிய பஞ்சம், "ஸ்டாலினின் சோஷலிச பொருளாதார திட்டங்களினால் ஏற்பட்ட தீய விளைவு" என்று சுட்டிக் காட்டுவார்கள். அப்படியா?

இரண்டாம் உலகப் போர் முடிவு வரையில், உக்ரைனின் மேற்குப் பகுதி, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா, ருமேனியா ஆகிய அயல் நாடுகளினால் பங்கு போடப் பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மை இன மக்கள் உக்ரைனியர்கள். ஆனால், போர் முடிந்த பின்னர் தான், அவை சோவியத் யூனியனின் பகுதிகள் ஆகின.

செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசத்தில்
15 000 குழந்தைகள் பட்டினியால் மரணம் 

அந்தக் காலத்தில், உக்ரைனிய பஞ்சம் பற்றி அறிவித்த ஒரு பத்திரிகையின் பக்கத்தை இங்கே தருகிறேன். இது எந்த நாட்டின் செய்தித் தாள்? செக்கோஸ்லாவாக்கியா. தலைநகர் பிராஹாவின் பெயர் வந்துள்ளதை கவனிக்கவும். அதில் என்ன எழுதியிருக்கிறது? செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசமான சகர்பாத்தி (Zakarpatie) யில், 15 000 குழந்தைகள் பட்டினியால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கிறது.

இதன் அர்த்தம், அன்றைய சோவியத் உக்ரைனில் பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை என்பதல்ல. இரண்டாம் உலகப்போர் வரையில், பஞ்சம் ஐரோப்பாக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தது. இன்று பஞ்சம் என்று சொன்னால், பெரும்பாலானோருக்கு சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் வேறு. இன்று ஆப்பிரிக்கா இருக்கும் நிலைமையில், அன்று ஐரோப்பா இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சமும், இரண்டு மில்லியன் மக்களின் பட்டினிச் சாவுகளும் இன்றைக்கும் நினைவுகூரப் படுகின்றன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, பஞ்சத்தினால் பாதிக்கப் படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இன்றைக்கு வாழும் மக்கள், எவ்வாறு ஆப்பிரிக்க பஞ்சத்தை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறார்களோ, அதே மாதிரித் தான் அன்றைய ஐரோப்பிய மக்களும் நடந்து கொண்டார்கள்.

*********

சிறுவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பது "கம்யூனிச மூளைச் சலவை"! 

இளம் வழிகாட்டிகளின் ஒழுக்க விதிகள்
முன்பு சோஷலிச நாடுகளில், ஆரம்ப பாடசாலை மாணவர்கள் "வழிகாட்டிகள்" (Pioneer ) எனும் சாரணர் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அதில் சேருவது கட்டாயமில்லை, ஆனால் விரும்பத்தக்கது. ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய அதே சாரணர் அமைப்புத் தான். ஆயினும், சோஷலிச அரசமைப்புக்கு ஏற்றவாறு சில வேறுபாடுகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளில், அதைத் திரிபுபடுத்தி "சிறுவர்களை கம்யூனிச கொள்கைக்கு ஏற்றவாறு மூளைச் சலவை செய்கிறார்கள்..." என்று (பொய்ப்) பிரச்சாரம் செய்தார்கள்.

இங்கே, முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் (DDR) இருந்த, சாரணர் அமைப்பின் ஆவணத்தை தருகிறேன். பின்வரும் இளம் வழிகாட்டிகளின் ஒழுக்க விதிகளை (Die Gebote der Jungpioniere), ஒவ்வொரு மாணவனும் ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.


  • இளம் வழிகாட்டிகளான நாங்கள், எமது ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு மீது அன்பு செலுத்துகின்றோம். 
  • நாங்கள் எமது பெற்றோர் மேல் அன்பு செலுத்துகிறோம். 
  • நாங்கள் சமாதானத்தை விரும்புகின்றோம். 
  • நாங்கள் சோவியத் யூனியன், மற்றும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த பிள்ளைகளுடன் நட்பைப் பேணுவோம். 
  • நாங்கள் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுவோம். நாங்கள் சீரான, ஒழுக்கமானவர்கள். 
  • நாங்கள் விளையாட்டில் ஈடுபடுவோம். எமது உடலை தூய்மையாக வைத்திருப்போம். 
  • நாங்கள் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துவோம். சிறப்பாக பணியாற்ற உதவுவோம். 
  • நாங்கள் பாட்டுப் பாடவும், நடனம் ஆடவும் விளையாடவும் விரும்புகின்றோம். 
  • நாங்கள் நல்ல நண்பர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்வோம். - நாங்கள் எமது நீல நிற கழுத்துப் பட்டியை பெருமையுடன் அணிந்து கொள்வோம்.

பெரியோர்களே! தாய்மார்களே! மேற்குறிப்பிட்ட ஒழுக்க விதிகள் எல்லாம் "கம்யூனிச மூளைச்சலவை" என்றால், பிள்ளைகளை தறுதலைகளாக திரிய விடுவது தான் முதலாளித்துவ சுதந்திரமா?

******** 

கிழக்கு ஜெர்மன் மாநில அரசில், மீண்டும் ஒரு மார்க்சிஸ்ட் முதல்வர்!

பெர்லின் மதில் வீழ்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு, கிழக்கு ஜெர்மன் மாநிலமான துய்ரிங்கன் மாநிலத்திற்கு நடந்த தேர்தலில், Die Linke பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்றது. சமூக ஜனநாயகக் கட்சியான SDP இரண்டாம் இடத்திற்கு வந்திருந்தது.

மாநில அவையில் கூட்டணி அமைப்பதற்கு, இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. பசுமைக் கட்சியுடன் சேர்ந்து அமைக்கப் பட்டுள்ள கூட்டரசாங்கம் "R2G" (Red, Red, Green) என்று அழைக்கப் படுகின்றது. R2G கூட்டரசாங்கத்தின் முதல்வராக டீ லிங்கே கட்சியை சேர்ந்த Bodo Ramelow தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

Bodo Ramelow, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கார்ல் மார்க்ஸ் பொம்மையை பக்கத்தில் வைத்துக் கொண்டு உரையாற்றுவார். தீவிர இடதுசாரிக் கட்சியான PDS, டீ லிங்கே கட்சியில் பெரும்பான்மை பலத்துடன் அங்கம் வகிக்கிறது. அது முன்னர் கிழக்கு ஜெர்மனி சோஷலிச நாடாக இருந்த காலத்தில் ஆட்சி செய்த SED கட்சியின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர், கிழக்கு- மேற்கு ஜெர்மனிகளை சேர்ந்த தீவிர இடதுசாரிகள் ஒன்றிணைந்து, Die Linke எனும் புதிய கட்சி உருவானது. துய்ரிங்கன் மாநில முதல்வராக தெரிவாகி உள்ள Bodo Ramelow மேற்கு ஜெர்மனியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கிழக்கு ஜெர்மனி, துய்ரிங்கன் மாநில அரசாங்கத்தில் மார்க்சிய Die Linke கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அகதிகளுக்கு ஆதரவான கொள்கையை அறிவித்துள்ளனர். அதன் பிரகாரம், துய்ரிங்கன் மாநிலத்தில் வாழும் அகதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப் படுவார்கள். நாடு கடத்தப் படுவது இடைநிறுத்தி வைக்கப் படும். (Neues Deutschland, 20.11.2014)

விசா, வதிவிட அனுமதி எதுவுமில்லாத அகதிகளுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், அநாமதேய மருத்துவ காப்புறுதி வழங்கப் படும். ஜெர்மனி முழுவதும் வாழும் அகதிகளால் வெறுக்கப் படும், உணவு முத்திரைகள் இல்லாதொழிக்கப் படும். அதற்குப் பதிலாக, அகதிகளின் அத்தியாவசிய தேவைகளுக்கான பணம் வழங்கப் படும். (ஜெர்மனியில் உள்ள தற்போதைய விதிமுறையில் அகதிகளின் கைகளில் பணம் கொடுப்பதில்லை. அரசு தரும் உணவு முத்திரைகளை, கடையில் கொடுத்து மாற்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பாவிக்க வேண்டும்.)

துய்ரிங்கன் மாநிலத்தின் அகதிக் கொள்கை, முழு ஜெர்மனிக்கும் முன்மாதிரி திட்டமாக முன்மொழிவதற்கான முயற்சிகள் எடுக்கப் படுமென அறிவிக்கப் பட்டுள்ளது. 


Wednesday, June 11, 2014

உக்ரைனில் நடப்பது என்ன?


(உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, ஒரு அரசியல் கலந்துரையாடல். தோழர் சிந்தனின் கேள்விகளுக்கு எனது பதில்கள்.   "மாற்று" இணையத் தளத்தில் வெளியானது. http://maattru.com/ukrain-situation-kalaiyaran-sanswers/) 

“Dont hate the media, Be the media” என்ற வாசகங்களுடன் இயங்கும் வலைத்தளமான “கலையக“த்தில் இதுவரை ஏறத்தாழ 1000 கட்டுரைகள் எழுதி தொடர்ந்துகொண்டிருப்பவர் தோழர் கலையரசன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வும், மற்றனைத்துப்பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்கிற உலக அரசியலை அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பவர். சர்வதேச ஊடகங்கள் வழங்கும் செய்திகளின் திணிக்கப்பட்ட பார்வையின் முகத்திரையினை கிழித்துக்காட்டி, அதன் மறைக்கப்பட்ட உண்மைகளை கட்டுரைகளாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் என பன்மொழிப்புலமையும் கொண்டவராகையால், அந்தந்த பிரதேச நிலவரங்களை அவர்களின் மொழிகளினூடாகவே அறிந்துகொண்டு தமிழில் எழுதிவருகிறார்.
“ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா“, “அகதி வாழ்க்கை“, “ஈராக்: வரலாறும் அரசியலும்“, “ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா?“, “காசு ஒரு பிசாசு” ஆகிய அவரது நூல்கள் உலக அரசியல் குறித்த ஆர்வமுடையோர் அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டியவை. உக்ரைனில் கலகம் உருவாகத் துவங்கியதிலிருந்தே, தொடர்ந்து அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை தமிழில் கட்டுரைகளாக நமக்குத் தந்துகொண்டிருக்கிறார். உக்ரைன் குறித்து நமக்குப் பொதுவாக எழும் கேள்விகளைத் தொகுத்து, அதற்கான அவரது பதில்களை “மாற்று” வாசகர்களுக்காகத் தருகிறோம்.

  • ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேர வேண்டும் என்பதாக துவக்கத்தில் வெளியுலகிற்கு காண்பிக்கப்பட்ட இப் பிரச்சனை, அதன்பின்னர் பல கோணங்களில் செல்லத் துவங்கிவிட்டதே. உண்மையிலேயே அதுமட்டும் தான் காரணமா? அல்லது வேறு சில வரலாற்றுக் காரணங்களும் உண்டா? விரிவாகச் சொல்லமுடியுமா?


உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு முன்னர், சில வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. அன்றைய ஜனாதிபதி, ரஷ்யா ஆதரவு யனுகோவிச் கையெழுத்திட மறுத்து விட்ட பிறகே, நெருக்கடி ஆரம்பமாகியது. உக்ரைனில் மேற்குலக ஆதரவு “புரட்சி” நடப்பது இதுவே முதல் தடவை அல்ல. 

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க கோடீஸ்வரர் சோரோஸ் நிதியுதவியுடன் “ஒரேஞ்ச் புரட்சி” நடந்தது. அப்போதும், மேற்குலக நாடுகள் ஆதரித்த ஒருவர் ஜனாதிபதியானார். அப்போதெல்லாம், ரஷ்யா எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மேற்குலக ஆதரவு அரசியல்வாதிகளின் ஊழல், ஒற்றுமையின்மை காரணமாக, பெரும்பான்மையான உக்ரைனிய வாக்காளர்கள், அடுத்த பொதுத் தேர்தலில் ரஷ்ய ஆதரவு யனுகோவிச்சிற்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்தனர்.

ஆகவே, மேற்குறிப்பிட்ட அரசியல் வரலாற்றை வைத்து ஆராய்ந்தால், இன்றைய உக்ரைனிய நெருக்கடிக்கு, அரசியல் அதிகாரத்தை தவிர வேறு காரணங்கள் இருக்க வேண்டும். “சர்வதேச சமூகத்தின்” எதிர்ப்பை, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சம்பாதிக்கும் அளவிற்கு, ரஷ்யா விட்டுக் கொடாத நிலைப்பாடு எடுக்கக் காரணம் என்ன? சில நேரம், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாவது கூட ரஷ்யாவுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்வது அச்சத்தை உண்டாக்கி இருக்கலாம்.

கிழக்கு ஐரோப்பாவில், சோஷலிச நாடுகள் இருந்த காலத்தில், “கம்யூனிச அபாயத்தை” காரணமாகக் காட்டி, நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. இன்று, உலகில் எங்கேயும் “கம்யூனிச அபாயம்” இல்லை. கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள், முதலாளித்துவ நாடாகி விட்டன. ஆனாலும், நேட்டோ கலைக்கப்படவில்லை. மாறாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொண்டு வளர்ந்து வருகின்றது. முன்னாள் சோவியத் குடியரசுகளாக இருந்த பால்டிக் கடலோர நாடுகள், ஜோர்ஜியா போன்ற நாடுகள் கூட நேட்டோவில் சேர்ந்து விட்டன. அப்படியானால், ரஷ்யா எதற்காக இப்போது மட்டும், நேட்டோ விஸ்தரிப்பை கண்டு அஞ்ச வேண்டும்?

பத்து வருடங்களுக்கு முன்னர், தலைநகர் கீவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பணம் கொடுப்பவர் பக்கம் சாயும் கொள்கையற்ற கும்பலாக இருந்தது. ஆனால், இந்த தடவை நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாசிஸ சக்திகள் ஆதிக்கம் செலுத்தின. அதில் ஒரு கட்சியின் தலைவர், பல வருடங்களாக ஜெர்மனியில் வாழ்ந்தவர். உக்ரைனிய பாசிஸ்டுகள், ஐரோப்பிய ஒன்றியம் (ஜெர்மனி), அமெரிக்கா ஆகிய சக்திகள் ஒன்று சேர்வது, வரப்போகும் ஆபத்தின் அறிகுறியாக தென்பட்டது. ஏதாவதொரு இரகசியத் திட்டம் இருக்கலாம்.

இந்த தடவை, மேற்குலக ஆசீர்வாதத்துடன் சதிப்புரட்சி நடத்தி அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள், கிரீமியாவை அமெரிக்காவுக்கு தாரை வார்க்க இருந்தனர். கிரீமியா தொடர்பாக, இதற்கு முத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டு, அங்கிருக்கும் ரஷ்ய படைகள் வெளியேற வேண்டுமென கோர இருந்தனர். ரஷ்ய படைகள் வெளியேறிய பின்னர், அங்கு அமெரிக்கப் படைகள் வந்திறங்கி தளம் அமைத்திருக்கும். இந்த இரகசிய திட்டத்தை மோப்பம் பிடித்தறிந்த ரஷ்யா, கிரீமியாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டது.

கிரீமியா ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. அங்கிருந்து இலகுவாக கருங்கடலை கண்காணிக்க முடியும். கருங்கடலை சுற்றி, உக்ரைன், ரஷ்யா தவிர, ரோமானியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா போன்ற பல நாடுகள் உள்ளன. மேலும், மத்தியதரைக் கடல் நாடுகளுடன் தொடர்புபடுத்தும் பொஸ்போருஸ் (துருக்கி) நீரிணை ஊடாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் கிரீமியா முக்கியமானது.

19 ம் நூற்றாண்டில், கிரீமியாவை கைப்பற்றுவதற்காக, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவுடன் போரிட்டன. கிரீமியா போரில் பல இலட்சம் பேர் மடிந்தனர். ரஷ்யா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே, அந்தப் போர் நடந்தது. கிரீமிய யுத்தம் தான், உலக வரலாற்றில் நடந்த முதலாவது நவீன காலப் போர் ஆகும்.

உக்ரைன் நெருக்கடிக்கு, கிரீமியா தவிர, வேறு காரணங்களும் இருக்கலாம். ரஷ்யாவில் இருந்து, ஐரோப்பியக் கண்டத்திற்கு செல்லும் பெட்ரோலிய, எரிவாயுக் குழாய்கள் உக்ரைன் ஊடாகச் செல்கின்றன. அவற்றை மேற்குலகின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் ஒரு நோக்கமாக இருந்தது. உண்மையில், ஆப்கான் போரும் இது போன்ற காரணத்திற்காகவே நடந்தது. துருக்மேனிஸ்தானில் இருந்து, பாகிஸ்தான், இந்தியாவுக்கு செல்லும் எரிவாயுக் குழாய் அமைப்பதற்காக, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் மேல் படையெடுத்து இருந்தன.

உக்ரைனின் கிழக்கு மாநிலமான டானியேட்ஸ்க் பகுதியில், இன்னமும் நிலத்துக்கு கீழே தோண்டப்படாத எரிவாயுப் படிமங்கள் இருக்கலாம் என்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது. அவற்றை ரஷ்யா எடுப்பதற்கு முன்னர், மேற்குலக நாடுகள் முந்தி விட நினைத்தன. இறுதியில், நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்த உக்ரைன் அரசைக் கவிழ்த்த சதியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு எந்தளவிற்கு இருந்தது?


கீவ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கோஷம் எழுப்பியதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட, “உக்ரைனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்” என்று தான் கூறி வந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் என்றால், நாங்கள் ஜெர்மனியை புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரின் காலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை நடத்திய ஜெர்மனி, இன்று தனக்கு வேண்டியதை, இலகுவாக பணம் கொடுத்து சாதிக்கலாம் என்று நினைக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில், அமெரிக்கா கருத்து எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், நேட்டோ அமைப்பில் அமெரிக்கா தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. இராணுவத் தலையீடு நடத்தப் பட வேண்டுமானால், அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரச்சினையில், ஜெர்மனி, அமெரிக்காவுக்கு இடையில் ஒரு பலப்பரீட்சை நிலவுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இராணுவ பலம் பெறுவதை தடுப்பதும், அமெரிக்காவின் நோக்கமாக இருந்து வந்துள்ளது.

ஆகவே, முன்பு யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்ததைப் போல, உக்ரைன் விடயத்திலும், சில சில முரண்பாடுகள் இருந்த போதிலும், ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. கிரிமியா, டொனியேட்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நடத்தப்பட்ட தேர்தல்களில், தனியாகப் பிரிந்துசெல்லும் முடிவெடுக்கப்பட்டன. இத்தேர்தல்களை யார் முன்னின்று நடத்தினார்கள்? சாதாரண மக்களின் பங்களிப்பு என்ன?

கிரீமியாவில், கணிசமான அளவு ரஷ்ய அழுத்தம் இருந்தது உண்மை. டொனியேட்ஸ்க்கில் நிலைமை வேறாக இருந்தது. அங்கு பல அரசியல் சக்திகள் ஒன்று சேர்ந்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்திருந்தன. ரஷ்யாவுடன் சேர விரும்பும் ரஷ்ய தேசியவாதிகள் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் போரிட்டு திரும்பிய முன்னாள் சோவியத் படையினர், மீண்டும் சோவியத் யூனியன் வேண்டுமென விரும்புவோர், உக்ரைனிய கம்யூனிஸ்டுகள் என்று பல வேறுபட்ட அரசியல் சக்திகள், கிளர்ச்சியில் பங்குபற்றின.

ரஷ்யாவில் இருந்து ஊடுருவியவர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், பெரும்பாலான மக்கள், ரஷ்யாவுடன் சேருவதை விரும்பவில்லை. அவர்களும் ஒரு காலத்தில் உக்ரைனிய தேசியவாதிகளாக இருந்தவர்கள். சோவியத் யூனியனில் இருந்து சுதந்திர நாடான காலத்தில், டொனியேட்ஸ்க் பகுதி மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்திருந்தனர்.

ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில், ஆரம்பத்தில் இருந்தே பெரும்பான்மையான மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவளிக்க காரணம் இருந்தது. தீவிர உக்ரைனிய தேசியவாதிகளின் அரசு, ரஷ்ய மொழி உட்பட சிறுபான்மை மொழிகள் அனைத்தையும் தடை செய்து சட்டம் இயற்றியது. (ரஷ்யர்கள் தவிர, ஹங்கேரி, ரோமானியா, போலிஷ், இட்டிஷ், கிரேக்க மொழிகளை பேசும் மக்களும் உக்ரைனில் சிறுபான்மையினராக உள்ளனர்.) எல்லா நாடுகளிலும், மொழிப் பிரச்சினை, மக்களை கிளர்ந்தெழ வைக்கக் கூடியது.

  • சுதந்திர கிரிமியா என்பது வரலாற்று ரீதியான கோரிக்கையா? கிரிமியாவின் தற்போதைய நிலையென்ன?


கிரீமியாவில் வாழும் பெரும்பான்மையான ரஷ்யர்கள், நீண்ட காலமாகவே உக்ரைனின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பி இருக்கவில்லை. முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்திலும் அப்படித்தான். ஆனால், சோவியத் யூனியன் ஒரே நாடாக, எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்த படியால், அன்று யாரும் அந்த உணர்வை பெரிதாக மதிக்கவில்லை. உக்ரைன் தனியான சுதந்திர நாடான பின்னர், ரஷ்யா தங்களை சேர்த்துக் கொள்ள மாட்டாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு, தற்போதைய நெருக்கடி ஒரு வரப்பிரசாதம் ஆகும். சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தற்போது, கிரீமியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் சிறிய நிலப்பகுதி, நிலக் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளது. உக்ரைனில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து, உக்ரைன் மற்றும் ரஷிய இடதுசாரி/முற்போக்கு இயக்கங்களின் நிலைப்பாடும்/பங்களிப்பும் என்னவாக இருக்கிறது?

உக்ரைன், ரஷ்ய முற்போக்கு/இடதுசாரி இயக்கங்கள், கிரீமியா பிரிவினையையும், டொனியேட்ஸ்க் கிளர்ச்சியையும் ஆதரித்தார்கள். அவர்கள் யாரும், புட்டினை அல்லது ரஷ்ய பெருந் தேசியவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆயினும், முன்னரைப் போல சோவியத் யூனியன் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார்கள். (இன்று சோவியத் யூனியனை ஆதரிப்பவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. பெரும்பான்மையானோர் எதிர்பார்ப்பது ஒரு பலமான வல்லரசு. இன்றுள்ள சீனா போன்றது.)

புட்டின் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, அவரும் ஒரு முதலாளித்துவவாதி தான். ஆயினும், முதலாளிய வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தகப் போட்டி, இறுதியில் போருக்கு இட்டுச் செல்லும். முதலாம் உலகப் போருக்கு முன்பிருந்த ஐரோப்பா போன்று தான், இன்றுள்ள நிலைமை உள்ளது. அதனால், இடதுசாரிகள்/முற்போக்காளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், வரலாற்றுப் போக்கை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்றவாறு நடந்து கொள்கின்றனர். தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பகுதிகள் தனிநாடாக மாற விரும்புவதை, தனிநாடு கோரும் இன்னபிற சர்வதேச இயக்கங்கள் எப்படிப் பார்க்கின்றன?

அந்த இயக்கங்கள் எல்லாம் அடிப்படையில் தேசியவாதம் பேசினாலும், அவை ஒன்றில் அமெரிக்காவை ஆதரித்து, அல்லது எதிர்த்துக் கொண்டு தமது தனி நாட்டுக்காக போராடுகின்றன. பொதுவாக, பிற நாட்டு விவகாரங்களை அலட்சியப் படுத்துவதற்கு, தேசியவாதிகளுக்கே உரிய குறுகிய மனப்பான்மையும் ஒரு காரணம். ஆகவே, அந்த இயக்கங்களின் நிலைப்பாடு, பெருமளவு மாறுவதற்கு இடமில்லை.


  • உக்ரைன் குறித்துப் பேசாத தமிழ் தேசியவாதிகளின் மவுனத்திற்கு காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்? 


மேற்குறிப்பிட்ட விளக்கம் அவர்களுக்கும் பொருந்தும். தமிழ் தேசியவாத இயக்கத்தினை வழிநடத்துவோர், மேற்குலகை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர், அல்லது அந்த மனப்பான்மை கொண்டவர்கள் ஆவர். அவர்களது வர்க்க நிலைப்பாட்டில் இருந்து பார்த்து, அமெரிக்கா சொல்வதை எல்லாம் சரியென்று நம்புவார்கள். உலகில் பல விடயங்களுக்கு பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. பொதுவான தேசியவாதம் எதுவும் உலகில் இல்லை.

  • மூன்றாம் உலகப்போர்? மீண்டும் ஒரு சோவியத் யூனியன்?


இரண்டுமே இப்போதைக்கு சாத்தியமில்லை. பனிப்போர் காலத்தில் இருந்த நிலைமைக்கு உலகம் திரும்பிச் செல்லும். ஆனால், இந்தப் பனிப்போர் சித்தாந்த முரண்பாடு காரணமாக நடக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில், கிரீமியா போருக்கு முன்பிருந்த நிலைமையும் இப்படித் தான் இருந்தது. அன்று, ஒரு பக்கத்தில், ரஷ்யா தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மறு பக்கத்தில், பிரிட்டன் தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. இரண்டுமே நேரடியாக மோதிக் கொள்ளவில்லை. ஆனால், பனிப் போருக்குள் மாட்டிக் கொண்டன. பனிப்போர் என்றால், அதன் அர்த்தம், வல்லரசுகள் நேரடியாக மோதிக் கொள்ள மாட்டா. அவற்றின் பாதுகாப்பில் தங்கி இருக்கும், வேறு ஒரு சிறிய நாட்டில், பதிலிப் போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும். அது தான் தற்போது உக்ரைனில் நடக்கிறது.

ஒரு பக்கம் உக்ரைனிய மக்கள் செத்து மடிந்து கொண்டிருப்பார்கள். மறு பக்கம், அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா பொருளாதாரப் போரை நடத்திக் கொண்டிருக்கும். முந்திய யூகோஸ்லேவிய போர்கள் மாதிரி, உக்ரைன் போர் நீண்ட காலம் இழுக்குமானால், அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் பொருளாதார நலன்கள் கிடைக்கும். முன்பு போல ஆயுத உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். எண்ணை, எரிவாயுவின் விலை அதிகரிக்கும். ரஷ்யாவுக்கு வரும், அந்நிய செலாவணியில் அரைவாசிப் பகுதி எரிபொருள் விற்பனையால் கிடைக்கிறது. சர்வதேச சந்தையை கட்டுப்படுத்தும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை தனிமைப்படுத்த விரும்புகின்றன. அது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • உக்ரைனிலிருந்து நம்முடைய தமிழ் மக்களும் இயக்கங்களும் என்ன பாடம் கற்றுக்கொள்ளமுடியும்?


இந்தியாவிலும், இலங்கையிலும் மேற்கத்திய நாடுகளின் தலையீடு இருக்கவே செய்யும். அவர்கள் ஒரு பக்கம் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள், மறு பக்கம் தமிழ் இயக்கங்களையும் ஆதரிப்பது போல நடிப்பார்கள். அவ்வாறு, இரண்டு தரப்பினரின் விசுவாசத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதனை உணர்ந்து கொள்ளாமல், மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால், எந்த மாற்றமும் வரப் போவதில்லை. ஆகவே, தமிழ் இயக்கங்கள் ஒரு தலைகீழான கொள்கை மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து விடுவித்துக் கொண்டால், அது தேசிய விடுதலைக்கான கதவுகளை திறந்து விடும். அதனால் தான், 2 ம் உலகப் போருக்கு பிந்திய உலகில், காலனியாதிக்கதில் இருந்து விடுதலையடைய போராடிய இயக்கங்களை, அன்றிருந்த சோவியத் யூனியன் நிபந்தனை இன்றி ஆதரித்தது.




உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, May 12, 2014

கிழக்கு உக்ரைனில் உயிர்த்தெழும் சோவியத் பூதம்!

  • டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பினை, "சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாக" பார்க்கிறார்கள். இதைக் கேட்டு நீங்கள் சிரிக்கலாம். அப்படியானால், சோவியத் எனும் இழந்த சொர்க்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும், ஐரோப்பிய மக்கள் இயக்கத்தின் மகத்தான சக்தியை, நீங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரையில், "கிழக்கு உக்ரைன் ரஷ்யர்களும், இலங்கைத் (ஈழத்) தமிழர்களும் அவர்களுக்கு ஒன்று தான்" என்பதை பல தடவைகள் வலியுறுத்திக் கூறி வந்துள்ளேன். ஒடெஸ்ஸாவில் ரஷ்ய இனத்தவர் இனப்படுகொலை செய்யப் பட்டதாக, ரஷ்ய சிறுபான்மை இனத்தவரின் அனுதாபத்தை திரட்டிய ரஷ்ய பிரிவினைவாதிகள், அதனை பொது வாக்கெடுப்பு ஒன்றில் அறுவடை செய்துள்ளதாக, ஜெர்மனியின் வலதுசாரி- பழமைவாத பத்திரிகை ஒன்று (Die Welt) அழுது வடித்துள்ளது. "ரஷ்ய பிரிவினைவாதிகள்" வரும் இடத்தில் தமிழ் தேசியவாதிகளையும், ரஷ்யர்கள் என்று வரும் இடத்தில் ஈழத் தமிழர்கள் என்றும் போட்டு வாசித்துப் பாருங்கள். எல்லாம் கச்சிதமாகப் பொருந்துகின்றது.

கிழக்கு உக்ரைனில் நடந்து முடிந்துள்ள டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசுக்கான பொது வாக்கெடுப்பு, முழு ஐரோப்பிய கண்டத்திற்கும் அச்சுறுத்தல் என்று, கட்டுரை ஒன்றை (Die Kraft "Neurusslands" ist eine Gefahr für Europa) பிரசுரித்துள்ளது. அந்த சம்பவங்களை "சோவியத் யூனியனின் மீள் வருகையாகவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் எழுச்சியாகவும்," அந்த நாளேடு கருதுகின்றது. தற்போது ஜாடியை விட்டு வெளியே வந்துள்ள இந்தப் பூதம், விரைவில் முழு ஐரோப்பாவையும் பிடித்தாட்டும் என்று அது எச்சரித்துள்ளது.

அந்தக் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்:

கிழக்கு உக்ரைனில் நடந்துள்ள சம்பவங்களை, வரலாற்றின் பரிசோதனைக் கூடமாக கருத வேண்டும். 1917 ம் ஆண்டு, ரஷ்யாவில் நடந்ததைப் போன்ற, அல்லது முப்பதுகளில் ஜெர்மனியில் நடந்ததைப் போன்ற நிகழ்வுகள் இவை. ஒரு சிறிய தீவிரமான வன்மைவாதிகளின் குழு அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமிக்கும். பத்து நாட்களுக்கு முன்னர், ஒடெஸ்ஸா நகர தீயில் 38 பேர் பலியானது போன்ற துயரச் சம்பவங்கள், நிலைமையை தீவிரமைடைய உதவுகின்றது. ஊடகங்கள் இது போன்ற காட்சிகளை மனதில் பதிய வைக்கும்.

"ரஷ்ய மக்களின் இனப்படுகொலை" நடந்த ஒடெஸ்ஸாவில், எப்படி தீப்பிடித்தது என்பது சரியாகத் தெரியவில்லை. பலியானவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாக, தீவிர பிரிவினைவாதிகள், டொனியேட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளின் சுதந்திரத்திற்காக நடந்த பொது வாக்கெடுப்பில் பெருமளவு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர்.

கிழக்கு உக்ரைனில் நடக்கும் சம்பவங்களினால், ஐரோப்பா முழுவதும் வாழும் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். ஜெர்மன் சமஷ்டி அரசாங்கமும், உக்ரைன் விடயத்தில் குற்றம் இழைத்துள்ளதாக கீசி (ஜெர்மன் இடதுசாரி எதிர்க்கட்சித் தலைவர்) கூறுகின்றார். உண்மை தான், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பல தவறுகளை இழைத்துள்ளன. ஆனால், ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரைன் நாடக மேடையில் அரங்கேறும் வெறுக்கத்தக்க நாடகத்தை புறக்கணிப்பது வெகுளித்தனமானது.

ஐரோப்பாவை இரண்டாக பிளக்கக் கூடிய இயக்கம் ஒன்றை, ரஷ்ய அரசு வளர்த்துக் கொண்டிருக்கிறது. "இரண்டாம் உலகப் போரை வெற்றி கொண்டோம், ஆனால் பனிப் போரில் தோற்றோம்" என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து எழும் இயக்கமானது, எதிர்ப்பவர்களை எல்லாம் பாசிஸ்டுகளாக கருதிக் கொண்டே, பெருந் தேசியவாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. "நோவோ ருசியா" (புதிய ரஷ்யா) பொது வாக்கெடுப்பின் பின்னர் ஐரோப்பா விழித்தெழுகின்றது. அங்கே ஜனநாயக அல்லது லிபரல் மனப்பான்மை கொண்டவர்களுக்கு இடமில்லை.

கிழக்கு ஐரோப்பாவின் மற்றைய பகுதிகளிலும் ஆபத்து காத்திருக்கின்றது. புட்டின் எழுப்பியுள்ள ஆவிகளை மீண்டும் சீசாவுக்குள் அடைப்பது கடினமானது. உக்ரைனில் இதே பாணியிலான பிரிவினைவாத இயக்கம், தொழிற்துறை மையமான டினியேபுரோபெட்ரோவ்ஸ்க் (Dnepropetrovsk) பிராந்தியத்தையும் கையகப் படுத்தும். அதன் அர்த்தம் கலகங்கள், சமர்கள், மரணங்கள். கிழக்கு ஐரோப்பாவில், குறிப்பாக பால்கன் நாடுகளிலும், இந்த உதாரணம் பின்பற்றப் படும்.

ரஷ்ய பிரிவினைவாதிகள் தமது டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பினை, "சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாக" பார்க்கிறார்கள். இதைக் கேட்டு நீங்கள் சிரிக்கலாம். அப்படியானால், சோவியத் எனும் இழந்த சொர்க்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும், ஐரோப்பிய மக்கள் இயக்கத்தின் மகத்தான சக்தியை, நீங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.

(Die Welt, 12-05-2014) 

Die Kraft "Neurusslands" ist eine Gefahr für Europa
*******

அன்பான தமிழ் பேசும் வலதுசாரிகளே!

ரஷ்யா பற்றிய மேலைத்தேய பிரச்சாரம் எதையும் நம்பாதீர்கள். மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள், இரட்டை வேடம் போடுகின்றன. ரஷ்யாவை வில்லனாக காட்டி, உங்களை ஏமாற்றிக் கொண்டே, ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி வருகின்றன. எல்லாவற்றிற்கும் காரணம், பொருளாதாரம். உக்ரைன் பிரச்சினை தொடர்பாக, அவர்களது பிரச்சாரத்திற்கும், யதார்த்தத்திற்கும் இடையில் பெரும் வேறுபாடு நிலவுகின்றது. "புதிய பனிப்போர்" என்பது கூட ஒரு கற்பனை தான்.

உக்ரைன் பிரச்சினை தீவிரமடைந்த பின்னர் தான், முன்னாள் ஜெர்மன் அதிபர் ஷிரேடர், புத்தினை நேரில் சந்தித்துப் பேசினார். ஷெல் தொழிலதிபர், தூர கிழக்கு ரஷ்யப் பகுதிகளில் எரிவாயு எடுக்கும் ஒப்பந்தம் போட்டார். இப்படிப் பல உதாரணங்களை குறிப்பிடலாம். உண்மையில், மேற்கு ஐரோப்பா முழுவதும், எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை உள்ளது. அவை என்றைக்கும் ரஷ்யாவை பகைத்துக் கொள்ளப் போவதில்லை.

ஜெர்மனி நுகரும் எரிவாயுவில் 30% ரஷ்யாவில் இருந்து வருகின்றது. அதனை விநியோகிக்கும் ஏகபோக உரிமை பெற்ற ரஷ்ய Gazprom, ஜெர்மனியில் பெட்ரோல் நிலையங்கள் உட்பட பல தொழிற்துறைகளில் கணிசமான அளவு முதலீட்டை செய்துள்ளது. நெதர்லாந்து நிறுவனமான Gasunie, ரஷ்ய Gazprom உடன் இணைந்து, "Northern stream" குழாய் பாதை அமைத்து வருகின்றனர். ரஷ்யாவில் இருந்து நேரடியாக கடல் வழி வரும் குழாய்கள், ஜெர்மனிக்கான மேலதிக எரிவாயுவை வழங்க உள்ளன.

"புதிய பனிப்போர்" அல்லது உக்ரைன் பிரச்சினைக்கு பின்னர், அமெரிக்காவிடம் இருந்து எரிவாயு வாங்கும் திட்டத்தை சிலர் பரிந்துரைத்தனர். அது நடைமுறைச் சாத்தியமில்லாத, அதிக செலவு பிடிக்கும் திட்டம் ஆகும். அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதென்றால், அது LNG எனப்படும் திரவமாக்கப் பட்ட எரிவாயுவாக, கப்பல்களில் ஏற்றித் தான் கொண்டு வரலாம்.

LNG ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களை அமெரிக்காவிலும், இறக்குமதி செய்யும் துறைமுகங்களை ஐரோப்பாவிலும் புதிதாக கட்ட வேண்டும். அதெல்லாம் நடந்து முடிய குறைந்தது 2 வருடங்கள் ஆகும். LNG ஆக மாற்றும் செலவு, துறைமுகம் அமைக்கும் செலவு, போக்குவரத்து செலவு இவற்றை எல்லாம் கூட்டிப் பார்த்தால், அமெரிக்க எரிவாயுவின் விலை பல மடங்கு உயர்ந்து விடும். செலவைக் குறைப்பதற்கு பதிலாக, கூட்டிக் கொள்வது மடத்தனமானது.

மேற்கு ஐரோப்பாவில், உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை கண்டிக்கும் அரசியல்வாதிகள், திரைமறைவில் ரஷ்யாவுடன் தொடர்ந்தும் நட்புப் பேண விரும்புகின்றனர். ஆச்சரியப் படத் தக்கவாறு, ரஷ்யா கிரீமியாவை இணைத்த நியாயத்தை புரிந்து கொள்ளுமளவிற்கு மனப் பக்குவம் பெற்றிருக்கின்றனர்.

"கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ரஷ்யா நேட்டோ விஸ்தரிப்பு குறித்து அஞ்சுவது தெளிவாகும். கிரீமியாவில் நேட்டோ இராணுவத் தளம் அமைத்து விடும் என்ற அச்சத்தில், ரஷ்யா அதனை தன்னோடு சேர்த்துக் கொண்டது." இவ்வாறு நெதர்லாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Ben Bot தெரிவித்தார்.

********

உக்ரைன் பிரச்சினை தொடர்பாக வந்த ஒரு தமிழ் பேசும் வலதுசாரியின் எதிர்வினை :

 //அன்பான தமிழ் பேசும் இடது சாரிகளே! ரஷ்யாவும் ஒரு முதலாளித்துவ நாடு என்பதையும், கிழக்கு உக்ரேனில் இப்போது ஓங்கியிருப்பது, ரஷ்ய தேசியவாதமே என்பதையும் உணர வேண்டும்.//

அந்தக் கூற்றை, நாங்கள் ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்த்தால் எப்படி இருக்கும்? //அன்பான தமிழ் பேசும் இடது சாரிகளே! தமிழ்நாடும் (அல்லது இந்தியாவும்) ஒரு முதலாளித்துவ நாடு என்பதையும் வட-கிழக்கு இலங்கையில் இப்போது ஓங்கியிருப்பது, தமிழ் தேசியவாதமே என்பதையும் உணரவேண்டும்.//

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக, தமிழ் தேசியவாதிகளின் போராட்டத்தை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால், அதே தமிழ் தேசியவாதிகள் உக்ரைன் விடயத்தில் மட்டும் தடம்புரள்வதை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் உள்ள தேசியவாதிகள் மத்தியில், அந்தளவுக்கு பகை முரண்பாடுகள் நிலவுகின்றன. தேசியவாதிகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது. ஒரு தேசியவாதிக்கு இன்னொரு தேசியவாதியை பிடிப்பதில்லை.

நாசிஸத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த தயங்காத, உக்ரைனிய பேரினவாதத்திற்கு எதிரான, ரஷ்ய தேசியவாதிகளின் போராட்டத்தை, ஏன் இவர்கள் ஆதரிப்பதில்லை? உக்ரைனில் ரஷ்ய சிறுபான்மையினரின் மொழிப் பிரச்சினையை இவர்கள் ஏன் அங்கீகரிப்பதில்லை? இவர்களை தமிழ் தேசியவாதிகள் என்று அழைப்பதை விட, "அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஆதரவான வலதுசாரிகள்" என்று அழைப்பதே பொருத்தமானது.

ரஷ்யாவும், உக்ரைனும் முதலாளித்துவ நாடுகள் என்பதையும், இரண்டிலும் தேசியவாதிகள் பலமாக இருப்பதையும், எந்த தமிழ் பேசும் இடதுசாரியும் உணராமல் இருப்பதாக நான் கேள்விப் படவில்லை. கடந்த இருபது வருடங்களாக அதை சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் பேசும் வலதுசாரிகள் அப்படி அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில், அமெரிக்கா என்ன சொன்னாலும் அது வேத வாக்கு. அமெரிக்கா ஒரு நாட்டை ஆதரித்தால் இவர்களும் ஆதரிப்பார்கள், அதே நாட்டை அமெரிக்கா எதிர்த்தால் இவர்களும் எதிர்ப்பார்கள்.

தொண்ணூறுகளில், ரஷ்யாவில் காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவம் நிலவிய போது, ரஷ்யாவை ஆதரித்தார்கள். ஆனால், அதே ரஷ்ய முதலாளித்துவம், அசுர வளர்ச்சி அடைந்து, அமெரிக்காவை எதிர்க்கும் அளவிற்கு வல்லரசு ஆனதும், அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யாவை எதிர்க்கிறார்கள். எந்த வலதுசாரியும் சுயமாக சிந்திக்கத் தெரிந்து வைத்திருப்பதாக, நான் அறியவில்லை.

உலகில், முதலாளித்துவ நாடுகள் எல்லாம் நட்பாக இருப்பதில்லை. அவற்றிற்குள் முரண்பாடுகள் இருக்கும். அது சில நேரம் போராக வெடிக்கும். முதலாளித்துவம் எப்போதும், தனது நலன்களுக்கு பாதுகாப்பான தேசியவாதத்தை ஆதரிக்கும். முரண்பாடுகள் வளர்ந்து போர் வெடிக்கும் காலத்தில், மக்கள் ஆதரவை பெறுவதற்கு தேசியவாதம் உதவும்.

முதலாம் உலகப் போர் வெடித்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் இருந்ததெல்லாம் முதலாளித்துவ நாடுகள் தான். அது மட்டுமல்ல. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும், தேசியவாதிகளின் ஆதிக்கம் நிலவிய‌து. லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலை வாசித்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு எல்லாம் புரியும்.

********

டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு



உக்ரைனின் கிழக்கு மாநிலமான டொனியேட்ஸ்க், லுகான்ஸ்க் மாநிலங்கள், "டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள், வாக்களிக்கும் நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இலட்சக் கணக்கான மக்கள் வாக்களித்தமையை, மேற்கத்திய தொலைக்காட்சி ஊடகங்கள் கூட காட்டின.

மாரியுபோல் நகரம், உக்ரைனிய இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. வாக்கெடுப்புக்கு முதல் நாள் கூட கடுமையான யுத்தம் நடந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் பலியானார்கள். அத்தகைய மோசமான சூழ்நிலையிலும், மாரியுபோல் மக்கள் பெருமளவில் திரண்டு சென்று வாக்களிப்பில் கலந்து கொண்டார்கள். இதுவே, ஜனநாயகத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்க முடியும். மேலைத்தேய "ஜனநாயக" நாடுகள், டொனியேட்ஸ்க் பொது வாக்கெடுப்பை ஜனநாயக விரோதமாகக் கருதுவது வேடிக்கையானது.

பொது வாக்கெடுப்பு தொடர்பாக, நெதர்லாந்தில் வெளிவரும் தினசரிப் பத்திரிகையில் இருந்து ஒரு தகவல்:
"டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு விரைவில் பிரகடனப் படுத்தப் படவுள்ளது. இனிமேல், உக்ரைனிய ஹிர்வியானா நாணயத்திற்கு பதிலாக ரஷ்ய ரூபிள் பயன்படுத்தப் படும். தனியரசு உருவான பின்னர், உக்ரைனிய இராணுவம் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவமாக கருதப் படும். உக்ரைனிய இராணுவத்தை வெளியேற்றுவது, டொனியேட்ஸ்க் விடுதலைப் படையின் கடமையாக மாறும். அது சாத்தியமில்லாத பட்சத்தில் மட்டுமே, ரஷ்ய இராணுவ உதவி கோரப்படும்.
இந்த பொது வாக்கெடுப்பானது பிரிவினைவாதிகளைப் பொறுத்தவரையில், வெறுமனே மேற்குக்கு எதிரானதும், ரஷ்யாவுக்கு ஆதரவுமான கொள்கைப் போராட்டம் அல்ல. அவர்களுடைய வர்க்கப் போராட்டத்தில் அதுவும் ஒரு ஆயுதம். தொழிற்துறை நகரங்களின் கோடீஸ்வர தொழிலதிபர்கள் "நடுநிலைமை" வகிக்கின்றனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனியார்மயமாக்கப் பட்ட நிறுவனங்களை, மீண்டும் நாட்டுடைமை ஆக்கும் திட்டம் வகுக்கப் படுகின்றது. இடைத்தர, கீழ்த்தர முதலாளிகளும் கூட, பொது வாக்கெடுப்புக்கு எதிராக இருந்தமை தற்செயல் அல்ல."
(Oost-Oekraïne vereffent de rekeningen, NRC Handelsblad, 12-05-2014)

இந்த நேரத்தில், "தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு" கோரிய தமிழ் தேசியவாதிகள் கள்ளமௌனம் சாதிக்கின்றனர். சீமான், வைகோ, போன்ற தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமார் கூட, எந்தக் கருத்தும் கூறாமல் மௌனமாக இருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் தமிழீழத்திற்காக பேசிக் கொண்டிருந்த இணைய ஆர்வலர்களும், அது பற்றி வாயே திறக்கவில்லை. இவர்கள், உண்மையிலேயே தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஆதரிக்கிறார்களா? அல்லது, சும்மா பொழுதுபோக்கிற்காக, தமிழீழ ஆதரவு அரசியல் செய்கிறார்களா?


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:





Thursday, May 08, 2014

நவ- நாஸி அரசுக்கு எதிரான உக்ரைனிய மக்கள் எழுச்சி



  


இந்தச் சிறுவனின் வயது 17 மட்டுமே. உக்ரைனில், ஒடெஸ்ஸா நகரில், உக்ரைனிய- பாசிஸ்டுகளினால் தொழிற்சங்க கட்டிடத்திற்குள் நெருப்பு வைத்து படுகொலை செய்யப் பட்ட 40 அப்பாவி மக்களில், இவனும் ஒருவன். 
நவ- நாஸி கொலைகாரர்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் மேற்கத்திய நாடுகளும், அமெரிக்க விசுவாசிகளும், பாசிசத்தை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய பொது மக்களை, "பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், ரஷ்ய- ஆதரவாளர்கள்" என்று தொடர்ந்தும் கொச்சைப் படுத்தி வருகின்றனர்.


உக்ரைனில் ஏற்பட்ட பாசிஸ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, கிழக்கு உக்ரைனில் ஒரு மக்கள் எழுச்சி தோன்றியது. முதலில் டொனியேட்ஸ்க் நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து பிற நகரங்களும் சேர்ந்து கொள்ள, டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு பிரகடனப் படுத்தப் பட்டது.

உக்ரைன் தலைநகர் கீவில் இருக்கும் பாசிஸ ஆட்சியாளர்களும், அவர்களை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளும், மக்கள் எழுச்சியை கொச்சைப் படுத்தும் விதத்தில் பிரச்சாரம் செய்தன. "பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், ரஷ்ய ஆதரவாளர்கள்" என்று உண்மைக்கு மாறான கட்டுக்கதைகளை பரப்பி விட்டன. மேற்கத்திய ஊடகங்கள் பொய்யைச் சொன்னாலும், அதனை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் தமிழ் ஊடகங்களும் அப்படியே ஒப்புவித்தன.

டொனியேட்ஸ்க் நகரில் மக்கள் எழுச்சி ஏற்படக் காரணம் என்ன?

கிழக்கு உக்ரைனில் பாசிஸ அரசை எதிர்த்துப் போராடும் மக்களை, "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்" என்று கூறுவது போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. பலர் அறியாமை காரணமாக, மேற்கத்திய பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். முதல் தடவையாக மக்கள் எழுச்சி ஏற்பட்ட டொனியேட்ஸ்க் நகரம், "ஒரு ரஷ்ய நகரம்" அல்ல. அங்கு வாழும் எல்லோரும் "ரஷ்ய இனத்தவர்களும்" அல்ல!

உலகின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர்ந்து சென்றவர்களின் வம்சாவளியினர் தான் டொனியேட்ஸ்க் நகரில் செறிந்து வாழ்கின்றார்கள். பின்லாந்து, எஸ்தோனியா, கிரேக்கம், தாஜிகிஸ்தான் போன்ற பல தேசத்தவரும், யூரல் மலைத் தொடரில் இருந்து, அட்லாண்டிக் சமுத்திரம் வரையிலான ரஷ்யாவின் பல நகரங்களில் இருந்தும், தொழில் வாய்ப்பு தேடி டொனியேட்ஸ்க் நகரத்தில் வந்து குடியேறினார்கள். (NRC Handelsblad, 7-5-2014) 

உண்மையில், டொனியேட்ஸ்க் நகரம் பல்லின குடியேறிகளினால் உருவாக்கப் பட்டது. அவர்கள் எல்லோருக்கும், ரஷ்ய மொழி பிரதானமான தொடர்பாடல் மொழியாக இருந்தது.  இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினருக்கு அதுவே தாய்மொழியாகி விட்டது. இதனை லண்டன் நகரில் வாழும், பல்லின மக்களோடு ஒப்பிடலாம். லண்டனில் வசிக்கும், ஆசிய, ஆப்பிரிக்க குடியேறிகளின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிருக்கலாம். அதற்காக, அவர்களை "ஆங்கிலேயர்கள்" என்று அழைப்பது அபத்தமானது.

மேற்கத்திய பிரச்சாரகர்களுக்கும், மேலைத்தேய அடிவருடிகளுக்கும் வரலாறு தெரிவதில்லை. டொனியேட்ஸ்க் நகரத்தை வடிவமைத்து உருவாக்கியவர் ஒரு பிரிட்டிஷ்காரர்! வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த John Hughes என்ற தொழிலதிபர், 1869 ம் ஆண்டு, அந்த நகரை ஸ்தாபித்தார். சோவியத் காலத்தில், அது ஒரு முக்கியமான தொழிற்துறை நகரமாக உருவானது. அந்த நகரத்தில் தனிநபர் வருமானம் அதிகமாக இருந்தது.

டொனியேட்ஸ்க் நகரில் கல்வியறிவு பெற்றவர்களின் விகிதாசாரம் அதிகம். உக்ரைனின் பிற நகரங்களுடன் ஒப்பிட்டால், அது ஒரு "படித்தவர்களின் நகரம்" ஆகும். நாற்பது வயதிற்குட்பட்ட அனைவரும், ஏதாவது ஒரு தொழிற்கல்வியை, அல்லது உயர்கல்வியை முடித்துள்ளனர். ஓய்வூதியம் பெறும் வயோதிபர்கள் மத்தியில் கூட, கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. "படியுங்கள்... படியுங்கள்... மேலும் மேலும் படியுங்கள்..." என்பது லெனினின் மேற்கோள். சோவியத் காலத்தில், டொனியேட்ஸ்க் நகர நிர்வாகம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. 

சோவியத் யூனியன் உடையும் வரையில், டொனியேட்ஸ்க் உக்ரைனின் பணக்கார நகரமாக இருந்தது. அதற்குக் காரணம், அங்கு வளர்ந்து வந்த சுரங்கத் தொழில் மற்றும் அதனோடு சேர்ந்த பிற தொழிற்துறைகள்.  இன்று, IMF, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சுரங்கத் தொழிலுக்கு ஆப்பு வைக்க வந்துள்ளன. அவை சுரங்கங்களை மூடி விட விரும்புகின்றன. டொனியேட்ஸ்க் நகரில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு, அதுவே முக்கிய காரணம் ஆகும். (NRC Handelsblad, 7-5-2014) 

********

உலகில், பல "தேசியவாதிகள்", உண்மையான தேசியவாதிகள் அல்லர். உக்ரைனிய தேசியவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில மாதங்களுக்கு முன்னர், கீவ் நகரில் கிளர்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய உக்ரைனிய தேசியவாதிகள், குறிப்பாக தலைநகர் கீவ், மற்றும் மேற்கு உக்ரைன் நகரங்களில் இருந்த லெனின் சிலைகளை அடித்து நொறுக்கினார்கள்.

"லெனின் சிலைகள், உக்ரைனிய தேசியவாதிகளால் ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் சின்னமாக கருதி வெறுக்கப் பட்டதால், அவற்றை உடைத்தனர்..." என்று மேற்கத்திய நாடுகளிலும் காரணம் கூறப் பட்டது. உண்மையில், உக்ரைனில் முன்பிருந்த ஸ்டாலின் சிலைகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் தான் லெனின் சிலைகள் வைக்கப் பட்டன. ஸ்டாலினுக்குப் பின்னர் பதவியேற்ற, ஒரு உக்ரைனியரான குருஷேவ் காலத்தில் தான் அவை நிறுவப் பட்டன.

ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி ஏற்படும் வரையில், உலக வரைபடத்தில் உக்ரைன் என்ற ஒரு நாடு இருக்கவில்லை. வரலாற்றில் என்றுமே இருக்கவில்லை என்றும் கூறலாம். "உக்ரைன்" என்றால், அதன் அர்த்தம்: எல்லைப் புற நாடு. சார் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், இன்றைய கிழக்கு உக்ரைன் "நோவோ ருசியா"(புதிய ரஷ்யா) என்று அழைக்கப் பட்டது. இன்றைய உக்ரைனின் மேற்குப் பகுதி, முன்பு ஆஸ்திரியா- ஹங்கேரி சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது.

லெனின் தலைமையிலான, போல்ஷெவிக் கம்யூனிச புரட்சியாளர்கள், இரண்டையும் இணைத்து உக்ரைன் என்ற புதிய நாட்டை உருவாக்கினார்கள். உக்ரைனியர்கள் என்ற தனியான கலாச்சார அடையாளத்தை, அவர்களே வளர்த்து விட்டார்கள். சோவியத் ஒன்றியத்தில் தேசியங்களை வரையறுத்த ஸ்டாலின், உக்ரைனை தனியான தேசியமாக அங்கீகரித்திருந்தார்.

உண்மையில், போல்ஷெவிக் புரட்சி ஏற்பட்டிருக்கா விட்டால், உக்ரைன் என்ற தேசம் உருவாகி இருக்க மாட்டாது. அதனால் தான், தொலைக்காட்சியில் உக்ரைன் பிரச்சினை தொடர்பாக உரையாடும் பொழுது, புட்டின் போல்ஷெவிக் புரட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார். கிழக்கு உக்ரைனிய பகுதிகளை குறிப்பதற்கு, "நோவோ ருசியா" என்ற சொற்பதத்தை பாவித்தார்.

உக்ரைனிய தேசியவாதிகள் உண்மையான தேசியவாதிகளாக இருந்திருந்தால், அவர்கள் உக்ரைனிய தேசியத்தை உருவாக்கியதற்காக லெனினுக்கு மதிப்புக் கொடுத்திருப்பார்கள். அதற்கு மாறாக, லெனின் சிலைகளை உடைத்தமைக்கு "மத்திய கால ஐரோப்பிய ராஜ்ஜியங்கள் பற்றிய பிரமையும், வலதுசாரிகளின் கம்யூனிச வெறுப்பும்" பிரதான காரணங்களாக உள்ளன. அதனால் அவர்களை "உக்ரைனிய தேசியவாதிகள்" என்று அழைப்பதை விட, "உக்ரைனிய பாசிஸ்டுகள்" என்று அழைப்பதே பொருத்தமானது.




பாசிஸ கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடுவதற்காக, ஆயுதமேந்தியுள்ள வீரப் பெண்மணி. தென் கிழக்கு உக்ரைனிய மக்களின் எழுச்சி, தற்போது நவ- நாஸிகளுக்கு எதிரான மக்கள் யுத்தமாக பரிணமித்துக் கொண்டிருக்கிறது. பாசிஸ ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக, பல சாதாரண குடும்பத் தலைவிகள் கூட தற்பாதுகாப்புக்காக ஆயுதமேந்தியுள்ளனர்.


வீடியோ: 
உக்ரைனில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ள நவ- நாஸிகள். இவர்களைத் தான், மேற்குலக நாடுகள் "ஜனநாயகவாதிகள்" என்று கூறி ஆதரிக்கின்றன. 

 Ukraine Crisis Today: Democracy caught on camera 
(This will never be shown on mainstream media) 






உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:


Saturday, April 19, 2014

நொறுங்கிக் கொண்டிருக்கும் மேற்குலகத் திமிர்



மீண்டும் எழுந்து வரும் உக்ரைனிய கம்யூனிஸ்ட் கட்சி.
"விழ விழ எழுவோம், ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்"
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை" மாதிரி, உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக் கும்பலுக்கு உதவச் சென்ற மேற்குலகிற்கு, அடி மேல் அடி விழுவதால் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. உக்ரைனை வைத்து மணல் கோட்டை கட்டிய ஏகாதிபத்திய கனவுகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. தனது தோல்வி கண்டு பொறுக்க முடியாத மேற்குலகம், பொய்களையும், கட்டுக்கதைகளையும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சி காரணமாக, அந்த மாநிலம் தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு" என்ற பெயரில் தனி நாடாக இயங்கப் போவதாக அறிவித்தது. அங்குள்ள அரசாங்க கட்டிடங்கள், தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு, மக்கள் மத்தியில் அதிகரிப்பதைக் கண்டு பொறுக்க முடியாத மேற்குலகமும், கீவில் உள்ள பாசிச அரசும் சேர்ந்து ஒரு சதித் திட்டம் தீட்டின. தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசின் பெயரில், யூதர்களுக்கு எதிராக, போலியான துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப் பட்டது. "தொனியேட்ஸ்க் மக்கள் குடியரசில் வாழும் யூதர்கள் அனைவரும், உடனடியாக பதிவு செய்ய வேண்டும். பதிவுத் தொகையாக முப்பது டாலர் கட்ட வேண்டும்..." என்று அதிலே எழுதப் பட்டிருந்தது. 

ஒரு யூத ஆலயத்தில் ஒட்டப் பட்டிருந்த துண்டுப்பிரசுரம், டிவிட்டர் இணையம் மூலம் பரவலாக்கப் பட்டது. குறிப்பாக, உக்ரைனிய பாசிச அரசை ஆதரிக்கும் அரசியல் ஆர்வலர்கள், அதனை பரப்புவதில் ஆர்வமாக இருந்துள்ளனர். மேற்கத்திய ஊடகங்களிலும் அந்தத் தகவல் வெளியானது. ஜெனீவாவில் ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் லவ்ரோவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் ஜோன் கெரி, "யூத விரோத துண்டுப்பிரசுரம்" குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாள், யூதர்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரம் போலியானது என்ற உண்மை, அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. கிழக்கு உக்ரைனிய மாநிலமான தொனியேட்ஸ்க்கில் வாழும் யூதர்களின் கருத்தும் அதுவாக உள்ளது. இது அநேகமாக, உக்ரைனிய அரச கைக்கூலிகளின் வேலையாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். (பார்க்க: Antisemitic flyer 'by Donetsk People's Republic' in Ukraine a hoax)

மேற்குலக கைக்கூலிகள் தாமாகவே ஒரு போலியான துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிட்டு விட்டு, உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. அதாவது, தோல்விக்கு மேலே தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் உக்ரைனிய பாசிஸ்டுகளும், அவர்களுக்கு முண்டு கொடுக்கும் மேற்குலகமும் செய்வதறியாது நிற்கின்றனர். அவர்களது தான்தோன்றித்தனமான செயல்கள் எல்லாம், கடைசியில் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விடுகின்றன.

ஜெனீவாவில் நடந்த, ரஷ்ய, அமெரிக்க, உக்ரைனிய, ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப் பட்ட தீர்மானம், உக்ரைன் நெருக்கடியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. கிழக்கு உக்ரைனில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அவற்றைக் காலி செய்து விட்டு, ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெனீவாத் தீர்மானம் கூறுகின்றது.

ஆனால், கிழக்கு உக்ரைன் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரு அடி கூட நகரவில்லை. அவர்களைக் காரணம் கேட்டால், "ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லாவ்ரோவ், ரஷ்யாவுக்கு மட்டுமே வெளிநாட்டு அமைச்சர். நாங்கள் உக்ரைனியர்கள்." என்று சொல்கின்றனர். அதே நேரம், "உக்ரைனிய தலைநகர் கீவில், அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள Euromaidan ஆர்ப்பாட்டக் காரர்கள் முதலில் வெளியேற வேண்டும்" என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைனிய அரசாங்கத்தை, சட்டபூர்வமான அரசாக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அவர்களை சதிப்புரட்சியாளர்கள் என்று கூறி, அனைத்துத் தொடர்புகளையும் முறித்துக் கொண்டுள்ளது. உக்ரைனிய ஆட்சியாளர்களும், ஆர்ப்பாட்டங்கள் செய்து, அரச கட்டிடங்களை ஆக்கிரமித்து தான், ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

அவர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் மறுத்து வருகின்றன. அதனால், கிழக்கு உக்ரைனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் செல்வாக்குப் பிரயோகிக்கும் அளவிற்கு, ரஷ்யாவும் நடந்து கொள்ளவில்லை. அது தன்னை ஒரு சர்வதேச சமூகத்தின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது.

இதற்கிடையே, ரஷ்யா மீது மென்மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகின்றது. அதற்கு எதிர்வினையாற்றிய ரஷ்ய அரசு, "அமெரிக்கா தன்னை வீட்டு வேலை செய்யாத பள்ளிக்கூட மாணவன் போன்று நடத்துவதாகவும், அது இராஜதந்திர பொறிமுறை ஆகாது" என்று கூறியுள்ளது.

அமெரிக்கா பயமுறுத்துவது போன்று, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குறி. ஏனென்றால், அமெரிக்க கார் கம்பனிகள், ரஷ்ய சந்தையில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. டச்சு- ஆங்கிலேயே ஷெல் நிறுவனம், ரஷ்ய எரிவாயு துறையில் முதலிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது. இதற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இவர்கள் யாரும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை குறித்து கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

அண்மைக் காலமாக, ரஷ்ய பொருளாதாரம் வளர்ந்து வருகின்றமை, இங்கே கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம். மேற்கத்திய முதலீட்டாளர்கள் ரஷ்யாவை புறக்கணிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் நிறையப் பேசும் அளவிற்கு, உக்ரைனிற்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஏற்கனவே பலவீனமான உக்ரைனிய பொருளாதாரம், நெருக்கடி காரணமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது.

உக்ரைனிய நாணயமான ஹிர்வினியாவின்(hryvnya) பெறுமதி பாதியளவு குறைந்துள்ளது. கிழக்கு உக்ரைனிய தொழில்துறை, பெருமளவு ரஷ்ய சந்தையை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், அங்கு நடக்கும் "ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு" பின்னணியில், பொருளாதாரக் காரணங்களும் உள்ளன. ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு, பொருளாதாரப் பிரச்சினை உக்ரைனிய அரசின் கைகளை கட்டிப் போட்டுள்ளது.


உக்ரைனில், பாஸிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை ஜீரணிக்க மூடியாத மேற்கத்திய ஊடகங்கள், உண்மையை மறைத்து, பிரச்சார யுத்தம் ஒன்றை முடுக்கி விட்டுள்ளன. கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை நசுக்குவதற்காக, பாசிச ஆட்சியாளர்கள் அனுப்பிய படையினர், மக்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். போராடும் மக்களை நோக்கி சுட விரும்பாத படையினர், தாம் கொண்டு சென்ற ஆயுத தளபாடங்களை மக்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இது வரையில், எட்டு அல்லது ஒன்பது யுத்த தாங்கிகள், பாசிச எதிர்ப்பு புரட்சியாளர்கள் வசம் வந்துள்ளன.

உக்ரைனிய படையினர் கீவில் இருந்து புறப்பட்ட பொழுது, தாங்கிகளில் பறந்து கொண்டிருந்த உக்ரைனிய தேசியக் கொடிகளை தாமே அகற்றி விட்டு, அவற்றில் ரஷ்யக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர். அதனை பொறுக்க முடியாத மேற்கத்திய ஊடகங்கள், "ரஷ்யா படையெடுத்து வந்து விட்டதாக" தமது மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றன. உக்ரைனில், கடந்த சில வாரங்களாக, தோல்விக்கு மேல் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள், கோயபல்ஸ் பாணியிலான பொய்ப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

மேற்குலகம் ஆதரிக்கும் உக்ரைனிய அரசாங்கம் அனுப்பிய இராணுவம், "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளையும், பயங்கரவாதிகளையும்" எதிர்த்து சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சி. கிழக்கு உக்ரைனில் "உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருப்பதால்," நேட்டோ இராணுவ உதவி கோரப் படுள்ளது.


முதலாளித்துவத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பற்றிய கிரேக்க ஆவணப் படம்: 


FASCISM INC MULTILINGUAL from infowar on Vimeo.


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, April 15, 2014

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது!

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது! 

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்திருந்த, கிரமாட்டோர்ஸ்க் (Kramatorsk) விமான நிலையத்தின் மீது, உக்ரைனிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. விமான நிலையம், உக்ரைனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வலது அணி என்ற பாசிசக் கட்சி உறுப்பினர்கள் பலர், உக்ரைனிய இராணுவ சீருடை அணிந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சில வெளிநாட்டு பாசிஸ்டுகளும் தாக்குதலில் பங்குபற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. அதனை உறுதிப் படுத்த முடியவில்லை.  


டானியேஸ்க் (Donetsk) நகரில், சோவியத் ஆதரவு ஆர்ப்பாட்டக் காரர்கள், பல பொலிஸ் நிலையங்களை கைப்பற்றி உள்ளனர். கடமையில் இருந்த உக்ரைனிய பொலிஸ்காரர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். பொலிஸ் நிலையங்கள் மட்டுமல்லாது, நேற்று ஒரு சிறிய விமானத் தளமும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. அதைத் தான், தற்போது உக்ரைனிய படைகள் கைப்பற்றியுள்ளன. 

கிழக்கு உக்ரைனிய கிளர்ச்சியாளர்கள், "ரஷ்ய ஆதரவாளர்கள், பிரிவினைவாதிகள்" என்று உக்ரைனிய அரசும், மேற்கத்திய நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில், கிளர்ச்சியாளர்கள் தம்மை உக்ரைனியர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் ரஷ்ய மொழி பேசுவோர் அல்ல. ரஷ்யா மொழிக்கும், உக்ரைனிய மொழிக்கும் இடைப்பட்ட வட்டார வழக்கு மொழியை பேசும் மக்களும் அடங்குவார்கள். அவர்கள் தம்மை ரஷ்ய இனத்தவராக அடையாளம் காட்டவில்லை. உக்ரைனியர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

ரஷ்யர்களையும், உக்ரைனியர்களையும் இணைக்கும் வகையில், "சோவியத் பிரஜை" என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் சோவியத் யூனியனின் கொடிகள் பறப்பதில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம். பாசிச எதிர்ப்புணர்வு, பல்லின கிளர்ச்சியாளர்களை ஒன்றிணைக்கிறது.

முன்பு ஆப்கானிஸ்தானில் போரிட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகின்றனர். பொலிஸ் நிலையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, அவர்களே முன்னின்று தாக்கி உள்ளனர். பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைக்கும் நோக்குடன், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கின்றனர்.

கிளர்ச்சியை அடக்குவதற்காக, கீவ் அனுப்பிய இராணுவ-பொலிஸ் படையினரும், கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து விட்டனர். கீவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி உள்ள பாசிஸ்டுகள், இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமாக இருக்கின்றனர். ஆக்கிரமிக்கப் பட்ட அரசாங்க கட்டிடங்களை விட்டு, கிளர்ச்சியாளர்கள் வெளியேற வேண்டும் என்று, அவர்கள் விதித்த காலக்கெடு காலாவதியாகி விட்டது.

உக்ரைன் அரசு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றது. அதனால், ஐ.நா. சமாதானப் படை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, உக்ரைனின் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகம் செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் தேசியவாதிகள், இன்னொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவது ஒரு முரண்நகை. உலக நாடுகள் முழுவதும் உள்ள தேசியவாதிகள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். 

உக்ரைன், கீவ் நகரில் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடியவர்களின் அரசாங்கம், இன்று கிழக்கு உக்ரைனில் ஸ்லாவியான்ஸ்க் நகரில் சுயநிர்ணய உரிமை கோருவோரின் போராட்டத்தை நசுக்குவதற்காக ஹெலிகாப்டர்களையும், படையினரையும் அனுப்பியுள்ளது. 


********


உக்ரைன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுவதாக தெரிய வருகின்றது. ஐ.நா.மன்றத்தில் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்ட பொழுது, இஸ்ரேல் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்தது. அதிலிருந்தே, ஒபாமா நிர்வாகத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. 

பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் உக்ரைனில், யூதர்களின் வழிபாட்டுஸ்தலங்கள் தாக்கப் படுவது அதிகரித்துள்ளது. யூதர்களின் சமாதிகள் மீது, நாஸி சின்னம் கீறி களங்கப் படுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக்குப் பின்னர், ஆயிரக் கணக்கான யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்களுக்கு, இஸ்ரேலிய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. இஸ்ரேல், அமெரிக்காவின் "உக்ரைனிய கொள்கையை" ஆதரிக்காமைக்கான காரணம் இது தான் என்று தெரிய வருகின்றது. ஆயினும், "உக்ரைனிய நாஸிகளின் யூத வெறுப்பு ஒரு கட்டுக்கதை(?)" என்று, ஒபாமா நிர்வாகம் மறுத்து வருகின்றது.

********

ஸ்லாவியான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களையும், பொலிஸ் தலைமையகத்தையும் கைப்பற்றிய மக்கள், அவற்றை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். உள்ளூர் பொலிஸ்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். ஸ்லாவியான்ஸ்க் நகரில் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து வருகின்றனர். 


ஸ்லோவியான்ஸ்க், உக்ரைனிய படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக காத்திருக்கும் மக்கள்.

வீடியோ: ஸ்லோவியான்ஸ்க் நகருக்குள் நிலை கொண்டிருந்த உக்ரைனிய அரச படையினர், மக்களிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்த காட்சி.

 

*******


இவை, மேற்குலக ஊடகங்கள் மக்களுக்கு காட்டாமல் மறைக்கும் காட்சிகள். உக்ரைன், லுகான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள மக்கள் மத்தியில், மேற்குலக எதிர்ப்பு தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. லுகான்ஸ்க் நகர ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட சில காட்சிகள்.


உக்ரைனை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ், லுகான்ஸ்க் (Luhansk) நகரமும் வந்துள்ளது. அங்குள்ள அரசாங்க கட்டிடம் ஒன்றில், முன்னாள் சோவியத் யூனியனின் கொடி பறக்கிறது.



*********

ஒடேசா (Odessa) நகரில் (10-4-2014), செம்படை வீரர்களின் சீருடை அணிந்த இளைஞர்கள், சோவியத் கொடிகளை ஏந்தியவாறு அணிவகுத்துச் செல்கின்றனர். 2 ம் உலகப் போரில், ஜெர்மன் நாஸிப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த ஒடேசா நகரம், சோவியத் செம் படையினரால் விடுதலை செய்யப்பட்ட எழுபதாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக, இந்த அணிவகுப்பு நடந்தது. 70 வருடங்களுக்கு முன்னர், வெற்றி விழாக் கொண்டாடிய செம்படை வீரர்கள், இதே தெருக்களில், இதே மாதிரித் தான் அணிவகுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


ஒடேசா நகரில் நடந்த, பாசிச எதிர்ப்பு ஊர்வலத்தில் இருந்து ஒரு காட்சி. ஊர்வலத்தில் கலந்து கொண்ட, உக்ரைனில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இருவரை இந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தப் படமும், ஊர்வலம் பற்றிய தகவலும், "ஜனநாயகம் காக்கும்" மேலைத்தேய ஊடகம் எதிலும் வரவில்லை. அது தான் அவர்களது நடுநிலை தவறாத ஊடகத் தர்மம்.



உக்ரைன் நாட்டில், ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், தமிழர்கள் வாழ்கிறார்கள். முன்பு கீவ் நகரில் இடம்பெற்ற, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களின் Euro Maidan ஆர்ப்பாட்டத்தில், ஒரு வெளிநாட்டவர் கூட தலை காட்டவில்லை. "வெளிநாட்டவர்களை வெறுக்கும் நவ நாஸிகளை ஆதரிக்கும் அளவிற்கு," அவர்கள் யாருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழும், ஒரு சில மேட்டுக்குடித் தமிழர்கள் மட்டும், இன்னமும் உக்ரைனிய நாஸிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.



 *******


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்: