Showing posts with label அகதிப் படை. Show all posts
Showing posts with label அகதிப் படை. Show all posts

Saturday, October 17, 2015

அகதிகளை வரவேற்கும் ஜெர்மனி, உண்மை நிலவரம் என்ன?


தற்போது, ஐரோப்பிய நாடுகளை சுற்றி புதிய "பெர்லின் மதில்கள்" எழுப்பப் பட்டு விட்டதால், அகதிகள் வருகையும் குறைந்து விட்டது. உலகத் தொலைக்காட்சிகளும் தமது கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட்டன. ஐரோப்பிய நாடுகளின் கனவான்கள் "தாராள மனப்பான்மையுடன்" அகதிகளை வரவேற்றதாக பிரச்சாரம் செய்து ஓய்ந்து விட்டார்கள்.

ஜெர்மனியில் புதிதாக திறக்கப் பட்ட அகதி முகாம்கள் பல எரிக்கப் பட்டன. ஒரு சம்பவத்தில் அகதி ஒருவர் பலியானார். நெதர்லாந்தில் புதிதாக அகதி முகாம்கள் அமைப்பதற்கு, சில இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உள்ளூராட்சி சபைகளில் அகதிகளுக்கு முகாம் அமைப்பது பற்றிய விவாதங்கள் நடந்த நேரம், உள்ளூர் மக்கள் கூட்டம் நடக்க விடாமல் தடுத்து இடையூறு செய்தார்கள். வெளிநாட்டவர்கள் பற்றிய அறியாமையால் ஏற்படும் அச்சவுணர்வை வெளிப்படுத்தினார்கள்.

மேற்படி தகவல்களை எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. (உள்நாட்டு ஊடகங்களில் மட்டுமே தெரிவிக்கப் பட்டன.) அது மட்டுமல்ல, தஞ்சம் கோரிய அகதிகளில், மிகக் குறைந்த அளவினரை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, எஞ்சிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவார்கள். மீறி இருந்தால், விசாவைப் பறித்து விடுவார்கள். தடுப்பு முகாம்களுக்குள் வைத்திருந்து திருப்பி அனுப்புவார்கள். அந்தத் தகவல்களும் எந்த ஊடகத்திலும் வரப் போவதில்லை.

"மேற்கு ஐரோப்பியர்களுக்கு எவ்வளவோ தாராள மனசு!"

ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன.
(பார்க்க:

பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

பிரிட்டனை விட ஜெர்மனி பெருமளவு அகதிகளை ஏற்றுக் கொள்கின்றது என்பது உண்மை தான். பெரும்பாலான தமிழர்கள், காலனிய அடிமைத்தனம் காரணமாக பிரிட்டனுக்கு செல்ல விரும்புவதுண்டு. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த அகதிகள், பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரிட்டனை விரும்புவார்கள். 

பிரான்சின் கலே பகுதியில், யூரோ சுரங்க ரயில் பாதைக்கு அருகில் முகாமிட்டுள்ள அகதிகள் பிரிட்டனுக்கு ஒரு தலையிடியாக இருந்தனர். சுரங்க ரயில் பாதை மூலம் நடந்து செல்ல முயன்ற சில அகதிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்தனர். அப்படி இருந்தும், பிரிட்டிஷ் அரசு, தனது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் தடுப்பதற்காக, பெருமளவு நிதியை பாதுகாப்புக்கு செலவிட்டது.

பிரிட்டனுக்கு செல்லும் அகதிகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் தான், கிரேக்க தீவுகளில் ஆயிரக் கணக்கான சிரிய அகதிகள் வந்திறங்கினார்கள். அவர்கள் கிரீசில் இருந்து, மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக ஜெர்மனிக்கு சென்றனர்.

துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் என்ற குழந்தையின் படம், உலக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த பின்னர் தான், ஜெர்மனி எல்லைகளை திறந்து விட்டது. இதன் மூலம், ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல், தன் மீதான நல்லெண்ணத்தை உயர்த்திக் கொண்டமை தனிக் கதை.

பிரிட்டனோடு ஒப்பிடுகையில், ஜெர்மனியில் அகதிகளுக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தாலியில் கூட, அகதிகளுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் கிடைப்பதில்லை. அதனால், லிபியா மூலம் இத்தாலி வந்தடைந்த ஆயிரக் கணக்கான அகதிகள், ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

ஜெர்மனி மட்டுமல்ல, நெதர்லாந்து, பெல்ஜியம், மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கின்றன. யாரையும் தெருவில் படுக்க விடுவதில்லை. படுப்பதற்கு கட்டிலும், மூன்று வேளை உணவும், கைச் செலவுக்கு பணமும் கொடுக்கின்றன.

முதலில், மேற்கு ஐரோப்பிய நாடுகள், தஞ்சம் கோருவோரை அகதிகள் என்று அழைப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெறும் "தஞ்சக் கோரிக்கையாளர்கள்" மட்டும் தான், அகதிகள் அல்ல! அதாவது, அவர் அகதியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு அகதிக்கும் தனித்தனியாக விசாரணை நடக்கும். சிலநேரம் இரண்டு, மூன்று தடவைகள் விசாரிப்பார்கள். அகதி என்பதை நிரூபிக்குமாறு ஆதாரம் கேட்பார்கள். (அரசியல் காரணங்களினால் பாதிக்கப் பட்டவராக இருக்க வேண்டும்.)

அகதிகளுக்கான விசாரணைக் காலகட்டம் மாதக் கணக்கு அல்லது வருடக் கணக்காகலாம். விசாரணைகளின் முடிவின் பின்னர், குறைந்தது பத்து சதவீதமானோரை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். (ஒன்றில் "உண்மையான" அகதியாக அங்கீகாரம், அல்லது வதிவிட அனுமதி) அவர்களை மட்டும் நாட்டில் தங்க அனுமதிப்பார்கள்.

எப்போதுமே, பெரும்பாலான அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவது வழமை. அந்த துரதிர்ஷ்டசாலிகள், தாயகம் திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தப் படுவார்கள். உத்தரவை மீறி தங்கி இருந்தால், சட்டவிரோதிகள் ஆக்கப் படுவார்கள். அதற்குப் பின்னர், திடீரென ஒரு நாள் பொலிஸ் வந்து விலங்கு மாட்டி நாடு கடத்தி விடும்.

இருபது வருடங்களுக்கு முன்னர், ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்ச மனு நிராகரிக்கப் பட்ட அகதி, இன்னொரு ஐரோப்பிய நாட்டில் மீண்டும் தஞ்சம் கோர முடிந்தது. ஆனால், டப்ளின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், அது சாத்தியமில்லாமல் போனது. அது மட்டுமல்ல, ஏற்கனவே "பாதுகாப்பான" ஐரோப்பிய நாட்டில் வந்திறங்கிய அகதியை, அந்த நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று டப்ளின் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. பல வருடங்களாக, ஜெர்மனி வந்த அகதிகளில் எத்தனையோ பேர், முதலில் வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். தற்போது வந்து சேர்ந்துள்ள சிரிய அகதிகளும் திருப்பி அனுப்பப் பட மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், அகதிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப் படும் வரையில், தற்காலிகமாக வசிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அகதிகள் தங்குவதற்கான தற்காலிக இருப்பிடங்கள், வசதிகளற்ற முகாம்கள் ஆகும். அவை பெரும்பாலும் நகரங்கள், கிராமங்களில் இருந்து தொலைவில் இருக்கும். சில இடங்களுக்கு பஸ் போக்குவரத்து கூட இருக்காது. அருகில் உள்ள கடைக்கு செல்வதற்கும், நான்கு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கலாம்.

சிலநேரம், பழைய சிறைச்சாலைகளில் கூட, அகதிகளை தங்க வைக்கிறார்கள். நகர்ப் பகுதிகளில், புதிதாக வரவிருக்கும் அகதி முகாம்களுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆங்காங்கே நடக்கிறது. ஜெர்மனியில் சில இடங்களில், அகதிகள் குடியேறுவதற்கு முன்னரே கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். நெதர்லாந்தில் ஒரு அகதி முகாமுக்கு அருகில், பெரிய சத்தம் போடும் நைட்ரேட் வெடிகுண்டு வீசினார்கள்.


மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், சில தவிர்க்கவியலாத காரணங்களினால் தான், பெருமளவு அகதிகளை நாட்டுக்குள் வர விட்டனர். அதே நேரம், எல்லைகளில் சோதனைகள் தீவிரமடைந்ததன. "பயண முகவர்கள்" என அழைக்கப்படும், அகதிகளை கடத்திக் கொண்டு வருவோர், நூற்றுக்கணக்கில் கைது செய்யப் பட்டனர். அதன் மூலம், அகதிகள் வருகையை தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

பெரும்பாலான அகதிகள் ஜெர்மனியை நோக்கி வந்தாலும், விரைவில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினாலும் பங்கிடப் படவுள்ளனர். பல வருட காலமாக, ஐரோப்பிய நாடுகளை அவ்வாறு செய்வதற்கு ஜெர்மனி வற்புறுத்தி வந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அகதிகள் பங்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், துருக்கிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இனிமேல் புதிதாக அகதிகள் வருவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. துருக்கி மூலமாக பெருமளவு அகதிகள் வந்த படியால், அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டுள்ளனர். அதன் படி, துருக்கியில் உள்ள அகதி முகாம்களில் வசதிகள் அதிகரிக்கப் படும். அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் துருக்கி மொழி கற்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப் படும். இதற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை, ஐரோப்பிய ஒன்றியம் செலவிடவுள்ளது.

அதன் அர்த்தம், துருக்கி அகதிகளுக்கான பாதுகாப்பான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது. இதன் மூலம், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருக்கும் அகதிகளின் நோக்கம் நிறைவேறப் போவதில்லை. அவர்கள் இனிமேல் துருக்கி போன்ற எல்லையோர நாடுகளிலேயே தங்க வைக்கப் படுவார்கள்.

Saturday, February 06, 2010

ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்

பெர்லின் மதில் பற்றி கேள்விப்படாதோர் இருக்க முடியாது. ஆனால் செயுத்தா, மெலியா மதில்கள் பற்றி...? தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம். மொரோக்கோ நாட்டின் வட பகுதியில், ஸ்பெயினுக்கு சொந்தமான சிறு துண்டு நிலப்பகுதிகளே செயுத்தா, மெலியா. இவை வறிய மூன்றாம் உலகமான ஆப்பிரிக்காக் கண்டத்தில் அமைந்திருகின்றன. ஐரோப்பாவினுள் நுழைய விரும்பும் அகதிகள் சுலபமாக ஊடுருவலாம் என்ற அச்சம், முதலாம் உலகைச் சேர்ந்த ஸ்பெயினுக்கு எழவே மதில் கட்டவாரம்பித்தது.

இங்கே கட்டப்பட்டுள்ள மதில்கள், பெர்லின் மதிலை விட நீளமானதும், மிகவும் பாதுகாப்பானதுமாகும். இரும்புக் கம்பிகளினால் ஆக்கப்பட்ட இந்த மதில்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதைமீறி எந்த அகதியும் ஐரோப்பிய சொர்க்கத்தினுள் நுழைய முடியாது. நுழைபவர் உயிரோடு திரும்ப முடியாது.


இந்த நுழைவாயில் மதில்களை ஊடுருவ முடியாது என்பதை அறிந்துள்ள அகதிகள் வேறு வழியை நாடுகின்றனர். மொரோக்கொவிற்கும், ஸ்பெயினுக்கும் இடையில் ஜிப்ரால்டர் நீரினை உள்ளது. இதன் தூரம் வெறும் 20 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஒரு சிறு வள்ளத்தின் உதவியோடு கடந்து விடலாம். ஆனால் கடற்படையினர் கண்ணில் எண்ணையை விட்டு ரோந்து செல்கின்றனர். சில வேளை கடற்படையினர் அகதி வள்ளங்களை வழி மறித்து தாக்கலாம். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் என்ன? தினம் தினம் இந்த நீரிணையை தாண்டி அக்கரை செல்வதற்கு, மொரோக்கோவில் ஒரு அகதிகள் பட்டாளமே காத்திருக்கிறது. ஐரோப்பாக் கண்டத்தின் மேற்கு எல்லையில் அட்லாண்டிக் சமுத்திரம் உள்ளது. இந்த வழியாக வருவதானால் கப்பல் மூலம் தான் வந்திறங்க வேண்டும்.

2001 ம் ஆண்டு, பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள், தென் பிரான்சின் கரையை வந்தடைந்த மாலுமிகளற்ற கப்பலில் 908 குர்திய அகதிகள் வந்திறங்கினர். அதிர்ச்சியடைந்த பிரான்ஸ் ஐரோப்பாவெங்கும் எச்சரிக்கை மணி அடித்தது. சில நாட்களின் பின்னர் நெதர்லாந்தை நோக்கி வந்து கொண்டிருந்த கப்பலை, அகதிக் கப்பல் என தவறாக புரிந்து கொண்டு ஹெலிகப்டர்கள் வட்டமிட்டன. சோதனையின் பின்னர் அது நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் என்று தெரிந்த பின்பும் அரசியல்வாதிகளின் மனதில் எழுந்த கிலி அகலவில்லை.

பிரித்தானியா, ஐரோப்பிய பெரு நிலத்தோடு ஒட்டாத தனித் தீவு. இதனால் அங்கு சட்டவிரோதமாக நுழைவதும் சுலபமல்ல. ஆனால் இங்கிலாந்து செல்வதை தமது வாழ்க்கையின் லட்சியமாக கருதும் மூன்றாம் உலகைச் சேர்ந்த பல அகதிகள், தடை பல கடந்து லொறிகளுக்குள் ஒளிந்திருந்து செல்வதுண்டு. அப்படியொரு முறை நெதர்லாந்தில் இருந்து சென்ற லாரி ஒன்றினுள், பொருட்களோடு பொருட்களாக மறைந்திருந்து சென்ற சீன அகதிகள், இங்கிலாந்தினுள் நுழைந்த போது உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த செய்தி ஏற்படுத்திய உணர்வலைகளின் பின்னால் உண்மை மறைந்து போனது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பது பலருக்கு தெரியாது. அந்த அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி நெதர்லாந்தில் இருந்து புறப்படும் போதே, அதனுள் சீன அகதிகள் ஒளிந்திருக்கின்றனர் என்ற விடயம் (நெதர்லாந்து) அரச அதிகாரிகளுக்கு தெரியும்! இந்தக் ஆட் கடத்தலை ஒழுங்கு செய்த நபர்களை கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்வதற்காக லாரி இங்கிலாந்து எல்லை வரை செல்ல விடப்பட்டது. இங்கிலாந்து காவல்துறை லாரியை ஒரு நாள் முழுவதும் மறித்து வைத்து, வேண்டுமென்றே தாமதப் படுத்தியதாலேயே இந்த மரணங்கள் சம்பவித்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இங்கிலாந்து அரசு அகதிகளைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை அமுல்படுத்தி, தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. இப்படியான சட்டங்களும், எல்லைகள் இறுக்கப் பட்டதுமே, மேற்படி மரணங்கள் நிகழ வழி சமைத்துள்ளன, என்ற விமர்சனம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.

ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருப்பவை, "முன்னாள் சோஷலிச முகாம்" நாடுகள். மேற்கைரோப்பிய பாணி ஜனநாயகத்தை தழுவியதில் இருந்து வறுமையில் வாடும் நாடுகளுக்கு, அகதிகள் பட்டாளம் வந்து சேர்கின்றது. இங்கிருந்தபடியே கண்ணுக்கு புலப்படாத கிழக்குப் புற மதில்களை ஊடுருவி, ஐரோப்பிய சொர்க்கத்தினுள் நுழையும் முயற்சிகள் இடையறாது இடம்பெறும். எல்லையை கண்காணிக்கும், இருட்டில் துல்லியமாகப் படம்பிடிக்கும் கமெராக்கள். அகதிகளின் படையெடுப்பு இடம்பெறுவதை எல்லைக் காவல் பணி மனைக்கு அறிவிக்கும். பிறகென்ன, "ஊடுருவல்காரர்கள்" கைது செய்யப்பட்டு வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுவர்.

சில எல்லைப்புற நுழைவாயில்கள் ஆபத்து நிறைந்த மலைப் பாதைகளாகவிருக்கும். குளிர்காலத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, பனி படர்ந்த மலையுச்சியில் ஏறி இறங்கி வர வேண்டியிருக்கும். வலையில், கூட வருவோர் செத்து மடிந்தாலும் அதைப் பார்க்காது தொடர்ந்து நடக்க வேண்டும். இது சிலவேளை சீனாவில் மாவோ தலைமையில் நடந்த நீண்ட நீண்ட அணிவகுப்பை நினைவுபடுத்தலாம். ஆனால் எமது அகதிப்படையின் லட்சியம் ஐரோப்பிய சொர்க்கத்தை அடைவது மட்டும் தான்.

இதுவரை கூறப்பட்ட விவரணங்கள் யாவும் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் எல்லைகள், பலமான கோட்டை மதில்களைப் போல பாதுகாக்கப் படுவதை தெரிவிக்கின்றன. ஐரோப்பியக் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த எல்லைப்புற மதில்களைத் தாண்டி, உள்ளே நுழைய முயன்ற சுமார் 2000 அகதிகள் உயிரிழந்துள்ளனர். காத்திருக்கும் ஆபத்துகளை அறிந்த போதிலும், ஐரோப்பாவினுள் நுழைவதற்காக எல்லைப்புற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான அகதிகள் தமது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். ஐரோப்பியர் இவர்களை, "அரசியல் அகதிகள்", "பொருளாதார அகதிகள்" என வகைப் படுத்தலாம். ஆனால் அவர்கள் எப்படி அழைத்த போதிலும், எல்லோரும் ஒரே மாதிரியான பிரச்சினையை கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்களல்ல.

சில நாடுகளில் நடைபெறும் யுத்தங்களின் பின்னால் பொருளாதாரக் காரணிகள் உள்ளன. வேறு பல நாடுகளில் அமைதி நிலவுவது போல தோன்றினாலும், அது புயலுக்கு முன்னாலான அமைதி தான். இந்த நாடுகளில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். வசதி வாய்ப்புகளற்று வாழ்வதற்கு சிரமப்படுகின்றனர். இவர்களனைவரும் வறுமை நிலையில் இருந்து மீளவும் வசதிபடைத்தோர் போல வாழவும் விரும்புகின்றனர். பண்டைக் காலத்திலிருந்தே, குறைகளைப் போக்க ஆண்டவனிடம் சென்று முறையிடுமாறு கூறப்பட்டது. இந்தக் கோட்பாடு, பின்னர் சிறிதே மாற்றப்பட்டு, பணக்கார நாடுகளுக்கு செல்லுமாறு வழிகாட்டப்பட்டது. இதுவே யதார்த்தம் என நம்பும் அப்பாவி மக்கள், தமது உறவை விட்டு, ஊரை விட்டு ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

உலகமயமாக்கல் திட்டத்தில் ஒன்று, வறிய நாடுகளில் உள்ள மனிதவளத்தை பயன்படுத்திக் கொள்வதாகும். இந்நாட்டு தொழிலாளர் பெறும் குறைந்த ஊதியம், எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்தையும் முதலீடு செய்யத் தூண்டும். குறைந்தளவு முதலீட்டில் கூடிய லாபமீட்ட எதுவாயிருக்கும். மூன்றாம் உலக நாடுகளில் வறுமை நிலை மாற எந்தவொரு வர்த்தக நிறுவனமும் விரும்பப் போவதில்லை. இந்நாடுகளில் நடக்கும் ஊழலாட்சிகள் பற்றி கூட, தமது வர்த்தகத்தை பாதிக்கும் போது மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்நாடுகளின் மீது சுமத்தப்படும் கடன் சுமை, வறுமையிலிருந்து மீள்வதை தடுக்கும் இன்னொரு காரணம்.

சில நாடுகள், ஐ.எம்.எப்., உலகவங்கிக்கு திருப்பி செலுத்தும் வட்டியே, அந்நாடுகளின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதத்தை எடுக்கின்றன. மக்களிடம் இருந்து பெறப்படும் வரியில் கணிசமான அளவு, கடனுக்கு வட்டியாக பணக்கார நாடுகளுக்கு போகின்றது. இதிலிருந்து பணக்கார நாடுகள், அந்நிய நாட்டுக் கடன்கள் மூலம் தமது நிரந்தர வருமானத்தை நிச்சயப்படுத்திக் கொண்டுள்ளமை தெளிவாகும். பணக்கார நாடுகளுக்கும், வறிய நாடுகளுக்குமான உறவை வைத்து பார்க்கும் பொழுது, பணக்கார நாடுகளை நோக்கி புலம்பெயரும் அகதிகளின் பக்கமுள்ள நியாயத்தன்மை புலனாகும்.

மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் இந்த உண்மைகளை அறிந்திரா விட்டாலும், பணக்கார நாடுகளின் அரசுகள் இது பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. செல்வத்தில் தமக்கும் பங்கு கேட்டு, வறிய நாடுகளின் மக்கள் படையெடுக்கலாம் என்ற அச்சமே கோட்டை மதில்கள் கட்டத் தூண்டியது. அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் கூட அத்தகைய மதில் கட்டப்பட்டுள்ளது. அப்படியானால், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து தமது நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளை, பணக்கார நாடுகள் எதிரிகளாக பார்க்கின்றனவா? ஆயுதந் தரிக்காத எதிரிகளின் படையெடுப்பில் இருந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் எல்லைகளைப் பலப்படுத்துகின்றனவா?

(தொடரும்)

["உயிர்நிழல்", (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]