Saturday, January 22, 2022

தமிழீழத்தின் "சிங்க(கொடி)ப்" பெண்!

 தமிழ்த்தேசிய வியாதிகளின் கவனத்திற்கு!



இது தான் நீங்கள் காட்டும் கற்பனை ஈழத்திற்கும், நிஜ ஈழத்திற்கும் இடையிலான வித்தியாசம். பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்த "ஈழத்" தமிழ்ப்பெண், தனது தாயகமான இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் சிங்கக் கொடியை பிடித்திருக்கிறார். (செய்தி கீழே) 

இது தான் அங்குள்ள கள யதார்த்தம். இதைக் காணப் பொறுக்காத தமிழ்த்தேசியவாதிகள் யாராவது "ஏன் இந்தப் பெண் தமிழீழ தேசியக்கொடியை (புலிக்கொடியா?) பிடிக்கவில்லை?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு வராதீர்கள். 

இன்று வரையில் தமிழ்த்தேசியம், புலித் தேசியம், தமிழீழ தாயகம், என்று பேசும் அத்தனை ஈழத்தமிழர்களும் தமது சிறிலங்கா பிரஜாவுரிமையை விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் அவர்கள் விரும்பி இருந்தால் சிறிலங்கா பிரஜாவுரிமையை தாமாக நீக்கிக் கொள்ளலாம். சட்டத்தில் தாராளமாக அதற்கு இடமிருக்கிறது. ஆனால், அப்படி யாரும் செய்ய மாட்டார்கள். 

உண்மை நிலவரம் என்ன? புலிகள் இயக்க தலைவர் கூட அதைச் செய்யவில்லை! தலைவரின் மூன்று பிள்ளைகளுக்கும் சிறிலங்கா பிரஜாவுரிமை கிடைத்திருந்தது!! "சிங்கள பேரினவாத அரச இலச்சினை"(வாளேந்திய சிங்கம்) பொறித்த அடையாள அட்டையும் வைத்திருந்தார்கள்!!!  

குறிப்பிட்ட பிரிவினர் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று குடியேறி அந்நாட்டின் பிரஜாவுரிமை பெற்ற பின்னர் தான் சிறிலங்கா பிரஜாவுரிமையை மறுக்கிறார்கள். அது வரைக்கும் அவர்களும் இலங்கைப் பிரஜைகள் தான். சிங்கக்கொடி தான் அவர்களது தேசியக்கொடி. யாராலும் மறுக்க முடியாது.

இது தான் கள யதார்த்தம். இதை மறைத்துக் கொண்டு, "வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்" என்று கற்பனை உலகில் மிதப்பவர்கள் பலருண்டு. தமிழ்த்தேசியவாதிகளே! ஆகாயத்தில் மிதந்தது போதும். பூமிக்கு திரும்பி வாருங்கள். 


செய்தி:

//தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.//

No comments:

Post a Comment