Sunday, April 05, 2020

சர்வதேச மருந்துச் சந்தையில் சீனாவின் மேலாதிக்கம்


"சீன வைரஸ்" என்று சொல்லி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அமெரிக்காவுக்கான மருந்து ஏற்றுமதியை நிறுத்தி விடப் போவதாக எச்சரித்ததும் வாயை மூடிக் கொண்டார். அதற்குப் பிறகு ஒழுங்கு மரியாதையாக கொரோனா வைரஸ் என்று சொல்லத் தொடங்கினார். சர்வதேச மருந்து சந்தையில் சீனாவின் மேலாதிக்கம் பற்றிக் குறிப்பிட இந்த ஒரு உதாரணம் போதும்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ள மருந்துகள் மட்டுமல்ல, முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் கூட சீனாவில் இருந்து தான் இறக்குமதியாகின்றன. அந்தளவுக்கு மேற்கத்திய நாடுகள் சீனாவில் தங்கியுள்ளன. அதற்குக் காரணம் என்ன? முதலாளித்துவ உலகமயமாக்கல்.

பொதுவாக எல்லா முதலாளிகளும் உற்பத்தி செலவுகளை குறைப்பது எப்படி என்று தான் சிந்திப்பார்கள். குறிப்பாக தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம். மேற்கத்திய நாடுகளில் சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்திற்காக உற்பத்தித் தொழிற்துறை முழுவதும் சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறே மருந்துத் தொழிற்சாலைகளும் சீனாவில் இயங்கத் தொடங்கின. சீனாவில் உற்பத்தி செலவு குறைவு என்பதால் மருந்துகளின் விலைகளும் குறைவாக உள்ளன.

உலக நாடுகள் தமது மருந்துத் தேவைக்காக சீனாவில் தங்கியிருப்பதானது சிலநேரம் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருந்து உற்பத்தியும், ஏற்றுமதியும் நின்று விட்டது. இதனால் ஐரோப்பாவில் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சிலநேரம் சீனா இதனை பூகோள அரசியலுக்கு பயன்படுத்தும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. அதற்கு சிறந்த உதாரணம் டிரம்பின் சீன வைரஸ் சர்ச்சை தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா தெரிவித்த எச்சரிக்கை.

இதற்கு என்ன தீர்வு? ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் தன்னிறைவு காண வேண்டும். ஆனால் தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கை கருத்தில் கொண்டே செயற்படுகின்றன. முன்பு ஐரோப்பாவில் இயங்கி வந்த மருந்து கம்பனிகள் நட்டம் ஏற்பட்டதால் பூட்டப்பட்டன. ஆகவே இவற்றை அரசாங்கம் தேசியமயமாக்க வேண்டும். இப்படியான நடைமுறைகள் ஒரு சோஷலிச நாட்டில் தான் நடக்கும். ஆனால், மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் பட வேண்டுமானால் தேசியமயமாக்கல் அவசியம்.


1 comment:

அ. வேல்முருகன் said...

இந்தியாவை மிரட்டுகிறார். சீனாவிடம் பம்முகிறார் ஏன்?