Wednesday, March 02, 2011

ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 2)

-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-


இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட புகையிரத வண்டி பாம்பன் பாலத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. நிலக்கரியில் ஓடும் புகையிரத வண்டியை எனது வாழ்க்கையில் முதன் முதலாக அப்போது தான் பார்க்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, இலங்கையில் நீராவி எஞ்சின் பயன்படுத்தி வந்தனர். புகையிரதவண்டியின் படத்தை புத்தகத்தில் மட்டுமே பார்த்திருந்தேன். இப்போது அதிலே பயணம் செய்வதும் ஒரு சுகானுபவம். ரயிலின் வேகம் அதிகம் இல்லை என்பதால், கதவடியில் நின்றவாறே இயற்கையை இரசித்துக் கொண்டு வர முடிந்தது. ரயில் திரும்பும் போதெல்லாம், என்ஜினில் இருந்து கிளம்பும் புகை முகத்தில் வந்து அடித்தது. எனது அகதி நண்பர்கள் இருந்த பெட்டிக்குள் திரும்பி வந்து உட்கார்ந்தேன்.

அடுத்த பெட்டியில் இருந்து வந்து அரசியல் கதை பேசிச் சென்ற புதியவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். "மந்திரியாரே, மாதம் மும்மாரி பொழிகின்றதா?" என்று நாடக அரசர்கள் விசாரிப்பதைப் போல, "தமிழீழத்தின் இன்றைய நிலை என்ன?" என்று விசாரித்திருக்கிறார்கள். "இயக்கப் பெடியள் போல இருக்கு" பக்கத்தில் இருந்த நபர் காதுக்குள் கூறினார். 1986 ம் ஆண்டில் யாழ் குடாநாட்டில், புலிகள் அமைப்பினர் பிற விடுதலை இயக்கங்களை தடை செய்திருந்தனர். முதலாவதாக டெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் ஒரு குட்டி யுத்தம் நடைபெற்றது. அடுத்தடுத்து தடை செய்யப்பட்ட புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற இயக்கங்கள் சகோதர சண்டையை தவிர்த்துக் கொண்டனர். கீழ்மட்ட போராளிகளைத் தவிர முக்கிய பிரமுகர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டனர். இந்திய அரசு, பிற்காலத்தில் இவர்களை தனது நலன்களை நிலைநாட்ட பயன்படுத்திக் கொண்டது.

அன்றைய தமிழ் மக்கள் புலிகளையோ, பிற இயக்கங்களையோ வேறு வேறாகப் பார்க்கவில்லை. ஏனென்றால், ஈழத்தில் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் எல்லா இயக்கங்களிலும் இருந்தனர். அதனால் அவர்கள் பார்வையில் அனைத்தும் விடுதலை இயக்கங்கள் தான். இராமேஸ்வரம் ரயிலில் நடந்த உரையாடலையும் அந்தப் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். அகதிகள் யாரும் அவர்களை சந்தேகத்திற்குரிய நபர்களாக கருதவில்லை. ஈழப்போராட்டம் நடக்கப் போகும் காலம் முழுவதும், தமிழ் சகோதர யுத்தமும் தொடரும் என்பதை மண்டபம் முகாம் வந்த பின்னர் தான் உணர்ந்து கொண்டோம். இந்திய நடுவண் அரசும், அதனை எண்ணையூற்றி வளர்க்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தது.

இராமேஸ்வரம் தீவை இந்திய உப- கண்டத்துடன் இணைக்கும் பாம்பன் பாலத்தை ரயில் கடந்து வந்தது. மனிதன் கட்டிய உலக அதிசயமான பாம்பன் பாலத்தை பார்த்து வியந்து கொண்டிருக்கும் பொழுதே, மண்டபம் ரயில் நிலையம் வந்து சேர்ந்து விட்டோம். ரயிலை விட்டு இறங்கியவுடனேயே ஒரு மிகப்பெரிய முகாம் கண்ணுக்கு முன்னால் விரிந்தது. அந்தச் சுற்றாடலில் இந்தியக் குடியிருப்புகள் இருக்குமா என்று சந்தேகப்படும் வண்ணம், காணுமிடமெல்லாம் ஈழ அகதிகள் காணப்பட்டனர். முகாம் வாயிலில் ஒரு சில பெட்டிக் கடைகள் காணப்பட்டன. அவற்றின் வாடிக்கையாளர்களும் அகதிகள் தான். வழக்கம் போல, இங்கேயும் பதிவு செய்யும் நடைமுறை. அடுத்த நாள் தான் அதிகாரி வருவாராம். அதனால், அன்றிரவு மண்டபம் முகாமிலேயே தங்கச் சொன்னார்கள்.

புயலடித்த கடல் பயணத்தினால், எமது உடமைகள் சேதமடைந்திருந்தன. எனது முக்கிய ஆவணங்கள், மாற்றிக் கட்ட சில உடைகள், இவற்றையெல்லாம் தோளில் மாட்டும் துணிப்பைக்குள் அடைந்திருந்தேன். இராமேஸ்வரத்தில் வாங்கிய அந்த "சாமியார் பை", இன்னும் சில நாட்களுக்கு என்னை இணை பிரியாமல் தொடரவிருந்தது. மண்டபம் முகாமில் "நிரந்தரமாக வசிக்கும்" அகதிகளின் பழக்கம் கிடைத்தது பெரிய ஆறுதல். எல்லோரும் மிக அன்பாக நடந்து கொண்டார்கள். தங்கள் குறை, நிறைகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். முன்னர் ஒரு காலத்தில், புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புகலிடமாக இருந்த மண்டபம் முகாம், தற்போது நிரந்தரமாக ஈழ அகதிகளை வைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் எளிமையாக கட்டப்பட்ட காங்க்ரீட் கட்டிடங்கள். சுமார் பத்தடி சதுர அறைக்குள் ஒரு அகதிக் குடும்பம் வாழ்ந்தது. தனி நபர்கள் என்றால், நான்கைந்து பேரைப் போட்டிருந்தார்கள். அங்கேயே சமைத்து உண்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

மண்டபம் முகாமில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். இராமேஸ்வரத்தில் இருந்து இருபது மைல் தூரத்தில் உள்ள மன்னாரை சேர்ந்தவர்கள் தான், முதன்முதலாக படகேறி இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள். நாம் சென்ற பொழுது, அங்கேயே ஐந்து வருடங்களாக வாழும் அகதிகளையும் சந்தித்தோம். பலர் இடையிடையே இலங்கை சென்று வந்தவர்களாக இருந்தனர். அவர்களின் சொந்த வள்ளங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். ஒரே இரவில் இந்தியா சென்று சினிமா பார்த்து விட்டு வரும் கதையை, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் கேள்விப்பட்டிருந்தேன். அது எந்தளவு சாத்தியம் என்பது இப்போது புரிந்தது. முகாமில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகதிகளும் இருந்தனர். அகதிகளுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் சில தகராறுகள் ஏற்பட்டால், அதற்கு மன்னாரை சேர்ந்தவர்களை குற்றம் சுமத்தினார்கள். பிரதேச வேறுபாடு பார்க்கும் யாழ்ப்பாண மரபு, இந்தியாவிலும் தொடர்ந்ததை காணக் கூடியதாக இருந்தது.

புதிய அகதிகளான எமக்கு, இந்தியக் கலாச்சாரத்தை அறிமுகம் செய்து வைக்கும் பேச்சுகள் கலகலப்பூட்டின. ஈழத்தமிழர்கள் "சாரம்" என்று சொல்வதை, கடையில் "லுங்கி" என்று கேட்டு வாங்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். பெண்கள் அணியும் சட்டையை, "ஜாக்கட்" என்று உச்சரிக்க தடுமாறிய கதைகளை நகைச்சுவையாக கூறினார்கள். இந்தியத் தமிழில் பல ஆங்கிலச் சொற்கள் கலந்திருப்பதை குறித்து உரையாடல் திரும்பியது. ஒரு தடவை, இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் கடையில் சென்று அரிசி இருக்கிறதா, என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று கடைக்காரருக்கு புரியவில்லை. புரிய வைப்பதற்கு எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், சாக்குப் பையில் இருந்த அரிசியை எடுத்துக் காட்டினார்கள். "ஓ... அதுவா, சுத்தமான தமிழில் ரைஸ் என்று சொல்லுங்க தம்பி!" என்று கடைக்காரர் கூறியதைக் கேட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு வந்து விட்டனர். இந்த "ரைஸ் கதை" பின்னர் ஈழத்தமிழர் மத்தியில் பரவலாக பேசப்படும் நகைச்சுவை விருந்தாகி விட்டது.

மண்டபம் முகாம் அகதிகள் பகிர்ந்து கொண்ட வேறு சில தகவல்கள் சிந்திக்க வைத்தன. தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஈழ அகதிகளின் முகாமான மண்டபம், இந்திய புலனாய்வுத் துறையின் கண்காணிப்புக்குள் இருப்பது இரகசியமல்ல. அங்கு வசிக்கும் அகதிகளே சுட்டிக் காட்டிப் பேசுமளவிற்கு, இந்த அதிகாரிகளின் பிரசன்னம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இருப்பினும், 18 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் விடயம் மட்டும் புதிதாக இருந்தது. இராணுவப் பயிற்சி மட்டுமல்ல, சம்பளமும் கொடுப்பதாக ஆசை வார்த்தை காட்டி, பல இளைஞர்களை கூட்டிச் சென்றார்கள். அப்பாவி ஏழை இளைஞர்களும் அகதி முகாமில் கிடந்தது கஷ்டப்படுவதை விட, அது சிறந்தது என்று நினைத்து சென்றார்கள். எங்கே கூட்டிச் செல்கிறார்கள்? அவர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? ஈழப்போராட்டம் ஒரு திருப்புமுனைக்கு வந்துள்ள காலகட்டத்தில், ஒரு புதிய ஆயுதபாணி இயக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகள், அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இலங்கை அரசின் மோசமான ஒடுக்குமுறையை சந்தித்திருந்த அகதிகள், இந்திய அரசின் மேல் கண்மூடித் தனமான விசுவாசம் வைத்திருந்தனர். அதனால் இந்தியா எது செய்தாலும், அது நன்மைக்கே என்று நம்பினார்கள்.

முகாமில் இருந்தவர்களின் சமூக- அரசியல் பின்னணியும் கூர்ந்து நோக்கத் தக்கது. பெரும்பாலான மக்கள் எந்த வித அரசியல் பிரக்ஞையும் அற்ற உதிரிப் பாட்டாளிவர்க்கத்தை சேர்ந்தவர்கள். வெளிநாடு செல்ல வசதியற்ற ஏழைகள். ஈழத்தில் விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியடைவதற்கு முன்னமே, இந்தியா வந்து விட்டனர். அவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் மிக மிகக் குறைவு. ஏனெனில் அன்றைய ஈழத்தில், மற்றைய இயக்கங்கள் தடை செய்யபட்டு புலிகள் மட்டுமே செயற்பட்டு வந்தனர். (ஈரோஸ் அப்போதும் இயங்கிக் கொண்டிருந்தது இருந்தது. அது குறித்து பின்னர் விரிவாக.) இதனால் தமது ஆட்சி நடப்பதாக கருதிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் யாரும் இந்தியா செல்ல நினைக்கவில்லை. ஈழத்தில் புலிகளால் தடை செய்யப்பட்ட டெலோ, புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற இயக்கங்கள், இந்தியாவில் எந்தப் பிரச்சினையுமின்றி இயங்கிக் கொண்டிருந்தன. அந்த அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஈழத்தில் இருந்து அகதியாக வர வேண்டிய தேவை இருக்கவில்லை. அப்படியே வந்தாலும், அரசியலை விட்டொதுங்கி சாதாரண வாழ்க்கை வாழத் தான் விரும்பினார்கள். ஆகவே, மண்டபம் முகாமில் இருந்து இராணுவப் பயிற்சிக்காக சென்றவர்கள், அனேகமாக முன்னர் எந்த விடுதலை அமைப்பிலும் இருந்திராதவர்கள். முகாம் அகதிகளும் அதனை உறுதி செய்தனர்.

மண்டபம் அகதிகள் வழங்கிய தகவல்களை தொகுத்துப் பார்த்த பொழுது, ஒரு உண்மை புலனானது. இந்திய அனுசரணையில் ஒரு புதிய இயக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய மண்ணில் தோன்றும் புதிய ஈழ விடுதலை இயக்கத்தின் குறிக்கோள் என்ன? அதனால் இந்தியாவுக்கு என்ன நன்மை? அவர்கள் ஈழம் சென்று சிறிலங்கா படைகளை எதிர்த்து போராடுவார்களா? தமக்கு போட்டியாக ஒரு இயக்கம் வருவதை புலிகள் அனுமதிப்பார்களா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண, நாம் இந்திய- இலங்கை ஒப்பந்தம் வரை காத்திருக்க வேண்டும். இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்களுக்கு அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லை. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லலாமா? வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்தில் இந்தியாவிலேயே தங்கி விடலாமா? ஆதரிக்க ஆளில்லா விட்டால், முகாம் அருகில் கூலி வேலை செய்து பிழைக்கலாமா? இது போன்ற "பாமரத்தனமான" கேள்விகளே அவர்கள் மனதை குடைந்து கொண்டிருந்தன.

அடுத்த நாள் அதிகாரிகள் வந்தார்கள். அகதிகளை பிரித்து தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். தஞ்சாவூர் நோக்கிச் செல்லும் பேரூந்து வண்டியில் எம்மை ஏற்றினார்கள். நாம் ஒரே ஊர்க்காரர்கள் சிலர் ஒன்றாக பதிந்து கொண்டதால், ஒரே இடத்திற்கு அனுப்பினார்கள். வண்டியில் புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். இனிமேல் அவர்களுடன் ஒரே முகாமில் தங்க வேண்டும். அதனால் பயணத்தின் போதே எமது நட்பை பலப்படுத்திக் கொண்டோம். வண்டியில் ஒரு போலீஸ்காரர் எமது பாதுகாப்புக்காக கூடவே வந்தார். எமது வண்டி, அகலமான நெடுஞ்சாலையில் இரவைப் போர்த்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. மீண்டும் ஒரு நெடும்பயணம். பயணக் களைப்பை போக்க சிலர் சினிமாப் பாடல்களை சத்தம் போட்டு பாடிக் கொண்டுவந்தனர்.

எமது பேரூந்து வண்டி வேதாரண்யம் எனும் இடத்தை வந்தடைந்தது. வேதாரண்யம் நகரமும், அதிலிருந்து சிறிது தொலைவில் உள்ள கோடிக்கரை எனும் முனையும், ஈழப்போராட்டத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை. இராமேஸ்வரம் பகுதியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பு அதிகம் என்பதால், அங்கே வரும் படகுகள் எல்லாம் அகதிகளுடையவை. போராளிகளின் படகுகள் இராமேஸ்வரத்தை தவிர்த்து வந்தனர். அதற்குப் பதிலாக கோடிக்கரையில் வந்திறங்குவார்கள். இராமேஸ்வரத்திற்கு அடுத்ததாக மிகவும் கிட்டிய பயணப் பாதையும் அது தான். மேலும் யாழ் குடாநாட்டில் இருந்து கிளம்பும் படகுகள் மிகவும் இலகுவாக வந்தடையலாம். ஈழத்திற்கு செல்லும் ஆயுதங்களும், பெட்ரோல் போன்ற பொருட்களும் கோடிக்கரை வழியாகவே கடத்தப் பட்டு வந்தன. நாங்கள் போன காலத்தில், போராளிகளின் நடவடிக்கைகள் பெருமளவு குறைந்து விட்டன. இரகசிய போலிஸ் நடமாட்டம் அதிகமாகவிருந்தது. உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட அசௌகரியங்களும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி இருந்தன.

எமது பேரூந்து வண்டி வேதாரணியத்தில் இருந்து நாகபட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பிராதான பாதையில் இருந்து சவுக்குத் தோப்புக்களை கடந்து காடு போன்ற இடத்திற்குள் நுழைந்தது. முதல் நாள் மாலை மண்டபம் முகாமில் இருந்து கிளம்பி, அடுத்த நாள் காலை எமக்கென ஒதுக்கப்பட்ட முகாமை வந்தடைந்தோம். அப்போது தான் கட்டி முடிக்கப்பட்ட ஓலைக்குடிசைகளை கொண்ட முகாம், எமக்காக காத்திருந்தது. ஒவ்வொரு அகதிக்கும், சமைத்து சாப்பிட பாத்திரங்கள், அரிசி போன்றன வழங்கப்பட்டன. கோடை கால வெம்மையை உட்புக விடாத, ஓலைக்குடிசைக்குள் பாய் விரித்துப் படுத்தால் உலகமே மறந்து போனது. ஷெல் விழுந்து வெடிக்கும் காதை செவிடாக்கும் சத்தம் எதுவுமின்றி நிம்மதியான உறக்கம். ஆனால் இந்த அகதிவாழ்க்கை எத்தனை நாட்களுக்கு? சில நாட்களிலேயே இந்தியா வெறுத்துப் போனது.

போருக்குள் வாழ்வது சிரமமாக இருந்தாலும், எமது மண்ணில் வாழ்கிறோம் என்ற உணர்வு இருந்தது. ஆனால், அந்நிய தேசத்தில் வாழும் ஒவ்வொரு கணமும் சங்கடத்தில் நெளிய வைத்தது. இப்படியே சில வாரங்கள் ஓடியிருக்கும். அகதி முகாமில் இருந்த பலர் மீண்டும் இலங்கை திரும்பிச் செல்ல நினைத்தார்கள். ஆனால் எப்படிச் செல்வது? கையில் இருந்த பணத்தை எல்லாம் கொட்டி இந்தியா வந்து விட்டோம். மீண்டும் ஊர் திரும்ப பணம் வேண்டுமே? இலங்கை செல்லும் படகுகள் கிடைக்குமா என்று விசாரிக்கத் தொடங்கினோம். குறைந்தது 400 ரூபாய் எண்ணி வைக்காமல் கூட்டிச் செல்ல மறுத்தார்கள். தினசரி கோடிக்கரையில் இருந்து யாழ்ப்பாணம் சென்று வரும் விடுதலைப் புலிகளின் படகுகள் மட்டும் இலவசமாக ஏற்றிச் செல்ல முன் வந்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. யாழ்ப்பாணம் சென்றவுடன் அவர்கள் இயக்கத்தில் சேர வேண்டும்.

(தொடரும்)
தொடரின் முன்னைய பகுதிகள்:
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

4 comments:

மாயாவி said...

வணக்கம் கலை.

sivakumar said...

அகதி வாழ்க்கை என்ற நூலை தொடர்பதிவாக எழுதுகிறீர்களா?
// 2006 ம் ஆண்டில் யாழ் குடாநாட்டில், புலிகள் அமைப்பினர் பிற விடுதலை இயக்கங்களை தடை செய்திருந்தனர்.// 2006 ம் ஆண்டிலா ? தகவல் பிழை?

Kalaiyarasan said...

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி, தமிழ் வினை. அது 2006 அல்ல 1986. இந்தத் தொடர் அகதிவாழ்க்கை நூலின் தொடர்ச்சி அல்ல. ஈழத்தில் இந்தியாவின் தலையீடு குறித்த பதிவுகள்.

Mo said...

cant understand. Who is narrating it?
Is this your story?